Pages

16 October 2008

வாசகர்கடிதம் - 16-10-08 ( FROM கூறு கெட்ட குப்பன் )




அடே தம்பி அதிஷா..


எப்படிக்கீறே?


ஓக்கே! எனக்கு உங்களை மாதிரி சென்னைத் தமிழ்ல தேர்ச்சி இல்லை. சாதாரணமாவே எழுதறேன்.


உங்க வலைப்பூ டிசைன் சூப்பர்! அப்பப மாத்தி அதை மெருகேத்தற உங்க பாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு கூட வேற டெம்ப்லேட் ரெடி பண்ணித்தரேன்னு உரிமையோட கேட்டு வாங்கி, பண்ணிக் குடுத்தீங்க. நானொரு சோம்பேறி.. இன்னும் அதை அப்லோடு பண்ணல.


சமீபமா உங்க வலைப்பூவை திறக்கும் போது நல்ல கூலிங் வாட்டரைப் பக்கத்துல வெச்சுட்டுதான் திறக்கறேன். ஏன்னா, உங்களுக்கு ஒரு நாளைக்கு 1000க்கு மேல ஹிட் வர்றதையும், எப்பப் பார்த்தாலும் 35 பேர் ஆன்லைன், 58 பேர் ஆன்லைன்.. புதுப் பதிவு போடாதப்பகூட 10பேர், 11பேர் ஆன்லைன்ல இருக்கறத பார்க்கறப்ப வயிறெரியுதுய்யா..! அதுனால் கூலிங் பண்ணிக்கத்தான் வாட்டர். (வேற மேட்டருக்கு ஆஃபீஸ்ல அனுமதி இல்லை!!)


ஆனா அந்தக் கூட்டம் சும்மா சேர்ந்ததில்லை. உங்க பாணில சொல்லணும்ன்னா 'இந்தப் பையனுக்குள்ளயும் என்னமோ இருக்கு பாரேன்'ன்னு வியந்துபோய் வர்ற கூட்டம்! அதுனால் பொறாமை இருந்தாலும், பெருமையாவும் இருக்கு! உங்க இறுதிமுத்தம் கதை படித்து நெகிழ்ந்திருக்கிறேன். தோசாவதாரத்திலும், பாரு நிவேதிதாவும் லகுட பாண்டிகளிலும் உங்கள் கற்பனா சக்தியையும், அதை நகைச்சுவை கலந்து எழுதும் பாணியிலும் வியந்திருக்கிறேன்.


கலைஞருக்கும், மன்மோகன்சிங்-க்கும் நீங்கள் எழுதிய கடிதம் சாதாரணமானதா? என்னதான் கிண்டல் தொனியோடு எழுதப்பட்டாலும் எத்தனை சீரியஸான மேட்டர் அது! கொஞ்சம் தவறி வேறு மாதிரி எழுதப்பட்டிருந்தாலும் பயங்கர சீரியஸாகி பலரது விமர்சனத்துக்கு ஆளாக வேண்டியதை சிறப்பாகக் கையாண்டிருந்தீர்கள்! சபாஷ்! சரி.. விடுங்க. அதையெல்லாம் சொல்றதுக்காக இப்போ கூப்பிடலை. ரெண்டு மூணு நாளா உங்க கிட்ட பேசறப்ப, 'நான் எழுதறதை நிறுத்திடப் போறேன்'ன்னு உளறிகிட்டிருக்கீங்க. என்கிட்ட பேசும்போதுதான் இப்ப்டிச் சொல்றீங்கன்னு பாத்தா, பாஸ் நர்சிம்கிட்டயும் இதையேதான் சொல்லி புலம்பியிருக்கீங்க.


அதுக்காக நீங்க சொன்ன காரணம் அருமை! உங்களைப் பாராட்டாம இருக்க முடியல. 'எனக்கு புத்தகம் படிக்கற பழக்கமே இல்லை. அதனால படிக்க ஆரம்பிக்கப் போறேன். அதுனால ப்ளாக்கை நிறுத்திட்டு, படிக்க பழக்கத்தை அதிகப்படுத்தப் போறேன்'ன்னு

சொல்லியிருக்கீங்க.


ஆச்சர்யமா இருந்தது. புத்தக வாசிப்பனுபவமே இல்லாம, ஒரு மனுஷன் இப்படி வகை வகையா எழுதமுடியுமா? அப்படீன்னா, இன்னும் ஆழமா படிச்சா எப்பேர்ப்பட்ட தளத்துக்கும் உங்களால போகமுடியும்ன்னு நினைக்கறேன். ஆனா, அதுக்காக எழுதறதை நிறுத்தணுமா-ன்னு யோசிச்சுப் பாருங்க அதிஷா.


எனக்குத் தெரிஞ்சு ஒரு நாளைக்கு வெறும் 2 மணி நேரம் மட்டும் இணையத்தை உபயோகப்படுத்தி, மத்த வலைப்பதிவுகளை படிச்சு, தேவையானதுக்கு கமெண்ட் போட்டு, நாமும் ஏதாவது பதிவு போட்டுட்டு வேற வேலைகளைப் பார்க்கமுடியும். அதுனால புத்தக வாசிப்புக்காக வலைப்பூ எழுதறத நிறுத்தணும்கறது அவசியமில்லாத ஒண்ணு!


நான் பத்திரிகைகளுக்கு எழுதத்துவங்கிய ஆரம்பக்கட்டத்துல எனக்கு எழுத்தாளர்(கள்) சுபா சொன்ன ஒரு விஷயம் 'எந்தக் காரணத்தைக் கொண்டும் தினமும் எழுதறதை நிறுத்திடாதீங்க. தினமும் ஏதாவது எழுதிட்டிருங்க. கதை, கவிதை, பார்த்தது, நடந்தது என்ன தோணினாலும் குறைஞ்சது ஒரு பக்கத்துக்கு எழுதுங்க. நாளாக நாளாக உங்களுக்கு, நீங்க முதல்ல எழுதறதுல பண்ற தப்புகளும், அதை மேம்படுத்தற லாவகமும் கைவரும்'ன்னாங்க.


அதையேதான் உங்களுக்கு நானும் சொல்லிக்கறேன். உங்க எழுத்து உங்களுடையது. அது அவனை மாதிரி இல்லையே, இவனை மாதிரி இல்லையே-ன்னு வருத்தப்படுறது....... வேணாம், சொல்லல. அசிங்கமா போய்டும்! முக்கியமா நீ பண்றது இது சரியில்லை, அது சரியில்லை அப்படி டிஸ்கரேஜா பேசறவங்களை அண்டவிடாதீங்க. அவங்க சொல்றதுல இருக்கற நல்லதை எடுத்துட்டு, அவங்க மட்டம் தட்டினா மாதிரி பேசறதை மறந்துடுங்க. அதுதான் உங்களை மெண்டலாக்குது!


எந்தக்காரணத்தைக் கொண்டும் படிக்கணும்ங்கற ஆர்வத்தை நீர்த்துப் போகச் செய்துடாதீங்க. எது கிடைச்சாலும் படிங்க. தப்பேயில்லை. (என்னது... சரோஜாதேவியா... அடிங்...) உங்களுக்கு நெருக்கமான பலர்கிட்ட, அவங்க ஆரம்ப கட்டத்துல படிச்ச புத்தகங்கள் லிஸ்ட் கேளுங்க. (இப்போ அவங்க படிக்கறது-ன்னு கேட்காதீங்க HEAVYயா இருக்க வாய்ப்புண்டு!!!) அதிலிருந்து ஆரம்பிங்க!


எனக்கு உங்களை நெனைச்சா பொறாமையா இருக்குய்யா. இப்போ நான் மறுபடி பழசை எல்லாம் மறந்து புத்தகங்களை புதுசா படிக்கணும்ன்னா, மறுபடி சாப்பிடாம, தூங்காம எல்லாத்தையும் பயங்கர சுவாரஸ்யமா படிப்பேன்!


ஒண்ணு பண்ணுங்க. இப்பவும் 'துக்ளக்' மகேஷ் அவனோட ராவுகள் – ங்கற தலைப்புல அவர் படிக்கற புத்தகங்களை நம்மகிட்ட பகிர்ந்துக்கறாரே.. அதேபோல நீங்க படிக்கற புத்தகங்களை உங்க வாசகர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.


அதுல 'ஐய.. இப்பதான் இதப் படிக்கறயா'ன்னு உங்களை மட்டம் தட்டறவங்களை விட்டுத்தள்ளுங்க. ஆரோக்யமா அந்தப் புத்தகத்துல இருக்கற விஷயங்களை உங்ககூட விவாதம் பண்ண நிறையபேர் இருப்பாங்க! கலக்குங்க அதிஷா!


கூடிய சீக்கிரம் 100வது பதிவுன்னு நெனைக்கறேன்.


ஆல் தி பெஸ்ட்.


அளவில்லா அன்போடு-


கூறு கெட்ட குப்பன்!