விடுமுறை தினத்தை முன்னிட்டு....
>> 08 October 2008
இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் எதாவது சிறப்பு நிகழ்ச்சியானு மட்டும் கேட்டுவிடாதீர்கள் , இது அதை பற்றியதல்ல , பெரிய விழா, தீபாவளி,பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் உங்களில் எத்தனை பேர் கொலைப்பட்டினி கிடந்திருக்கிறீர்கள் . இது அப்படி பட்டவர்களின் வாழ்க்கைபற்றியது . இது உணவிற்கும் உணர்விற்குமான ஒரு ஆராய்ச்சி .
பேச்சிலர் வாழ்க்கை இனிமையானது , இயல்பானது , சுதந்திரமானது தான் , அதனடி ஆழத்தில் இறைந்து கிடக்கும் வலியும் வேதனையும் அவனால் மட்டுமே உணரமுடிந்தது . பேச்சிலர்னா வாரம் ஒரு முறை பீரும் கண்ட நேரத்தில் தம்மும் , நினைத்த நேரத்தில் ஊர் சுற்றி திரும்பி வருவதும் , என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற இத்துனை சுதந்திரங்களையும் தாண்டி அவனது வாழ்க்கையின் மனதின் அடிஆழத்தில் இறைந்து கிடக்கும் தனிமையை அவனால் மட்டுமே உணர இயலும் .
பொதுவாகவே பேச்சிலர்கள் பலரும் விடுமுறைதினங்களில் எப்பாடுபட்டாவது தங்கள் சொந்த ஊருக்கு போய் விடுவர் . ஆனால் சில பாவப்பட்ட ஜீவன்கள் அலுவலகத்தில் , தொழிற்சாலையில் , மற்றும் பிற இடங்களில் விடுமுறை கிடைக்காமலோ ஊருக்கு ஒரு நாளில் செல்ல வழியில்லாமலோ தங்களது அறைகளில் அடைந்து கிடக்கும் கொடுமையை பார்க்கலாம் . துபாயில் மட்டுமல்ல நம்மூரின் சென்னையிலும் திருப்பூரிலும் கோவையிலும் கூட இதை கண்கூடாக காணலாம் . அதுவும் சென்னை போன்ற இடங்களில் மேன்சன்களில் வாழும் இந்த ஜீவன்கள் இத்தினங்களில் உணவங்களின் விடுமுறையால் அவதியுறும் காட்சிகள் மிக சகஜம் . இந்த கடைநிலை பிராணிகள், மேன்சன்களின் பத்துபத்து அளவில் பத்து பேருடன் பகிர்ந்து கொள்ளும் அறையில் நிச்சயம் சமைக்க இயலாது . (மென் பொருள் துறையில் பணிபுரியும் பேச்சிலர் நண்பர்களைப்பற்றி எனக்கு தெரியாது. இது முழுக்க முழுக்க திருவல்லிக்கேணி பல துறைகளிலும் கடைநிலையில் பணியாற்றும் நாலிலக்க சம்பள நண்பர்களை பற்றியதே )
பேச்சிலர்களில் பலரும் இந்நாட்களில் தங்களது பைக்கில் ஊரெல்லாம் சுற்றி எங்காவது பேருந்து நிலையங்கள் அருகிலேயோ அல்லது ரயில்நிலையத்திலோ சென்று உணவு வாங்கி வந்து உண்ணுவதையும் காணலாம் . மாதக்கடைசியில் வரும் பண்டிகை தினங்களில் இது இன்னும் மோசமாகும் , பெரும்பாலான மேன்சன் வாசிகள் மாதக்கடைசிகளில் மெஸ்களை மட்டுமே நம்பி கையில் காசின்றி அந்த மெஸ்களின் விடுமுறைதினத்தில் சோற்றுக்கும் வழியின்றி கையிலும் காசின்றி மிக கொடுமையாய் பத்துக்குபத்து அறையில் காலையிலிருந்து மாலைவரை முடங்கிக்கிடக்கும் பேச்சிலர்களை எல்லா விடுமுறைதினத்திலும் காணலாம் .
இவர்களில் பலரும் இத்தினங்களில் கையில் பணமின்றி பெட்டிக்கடைகளில் அக்கௌண்ட் இருந்தால் ஒரு சில வாழைப்பழமும் தண்ணீர் பாக்கெட்டும் ஒரு சிகரெட் என மதிய உணவை முடித்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன் . இதை படிக்கும் குடும்பஸ்தர்களுக்கு இது ஒரு விந்தையான விடயமாக இருக்கலாம் . ஆனால் இது காலம்காலமாக நடக்கும் ஒரு நிகழ்வே . இதை பற்றி படித்தால் இதன் வலியும் வேதனையும் நிச்சயம் மத்ய வயதினருக்கோ அல்லது குடும்பஸ்தர்களுக்கோ , வாழ்க்கையில் ஒரு நாள் கூட பேச்சிலராக வாழாதவருக்கோ நிச்சயம் வேடிக்கையும் நகைப்புக்கும் உரிய ஒரு விடயம்தான் இது .
இந்த பேச்சிலர்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கும் , இது போன்ற விழா நாட்களில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களோ அல்லது சக குடும்ப நண்பர்களோ தங்கள் வீடுகளுக்கு அழைத்து ஒரு வேளையாவது சோறு போடமாட்டார்களா என்று , ஆனால் பெரும்பாலான மக்கள் ஒரு ஆடவன் தங்கள் வீட்டிற்கு வருவதையோ இது போன்ற பண்டிகைதினங்களில் வீட்டினை ஆக்கிரமிப்பதையோ விரும்புவதில்லை போலும். அதிலும் குறிப்பாக மனைவிகளுக்கு தனது கணவனின் பேச்சிலர் நண்பர்களை கண்டாலே ராவணனை கண்ட சீதை போல ஒரு உணர்வு, அதற்கும் காரணம் உண்டு பொதுவாகவே கணவன்கள் தண்ணி அடிப்பதையோ அல்லது சிகரெட் பிடிப்பதையோ மனைவிகளுக்கு பிடிப்பதில்லை , அதை பேச்சிலர் நண்பர்கள்தான் தனது கணவன்மார்க்கு கற்று தருவது போல ஒரு எண்ணம் . உண்மை என்னவென்றால் இந்த கல்யாணம் பண்ணிய ரங்கமணிகள்தான் வீட்டிற்கு பயந்து, நண்பர் அறைகளில் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவுமே பேச்சிலர்களிடம் மிகுந்த அக்கறையுடன் பழகுவது தெரியாது போலும் . இது எல்லா குடும்பஸ்தர்களையும் குறிக்காது சிலரை மட்டும் .
பேச்சிலர்கள் என்றுமே பேச்சிலர்களாகவே இருந்து விடுவதில்லை . ஒரு நாள் அவர்களுக்கும் திருமணமாகிறது , அவர்களும் தான் வாழ்ந்த அதே ஊரில் தன் மனைவியுடன்தான் பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலமாய் பொழுதை கழிப்பர் . ஆனால் தான் இது போன்றதொரு நாளில் இன்று நம்மோடு இருந்த அந்த பேச்சிலர் அனுபவிப்பானே என்கிற எண்ணம் யாருக்குமே வராததன் மர்மம் மட்டும் ஏனோ புரிவதில்லை . அதுவும் பலர் தான் பேச்சிலராய் பட்ட அந்த நாட்களை மறந்திருப்பது வியப்பே.
நான் பொதுவாகவே இது போன்ற குடும்பஸ்த நண்பர்களிடம் பொங்கல் அன்று உங்கள் வீட்டற்கு வரலாமா என்று வாயைவிட்டு கேட்டாலும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லும் நண்பர்களும் நிறைய இருக்கின்றனர் .
நீங்கள் நினைக்கலாம் என்னங்கடா ஒரு நாள் சோறு இல்லைனா என்ன செத்தா போயிடுவீங்க என்று , இது ஒரு நாள் சாப்பாடு குறித்த பிரச்சனை அல்ல , இது ஒரு பண்டிகை தினத்தில் இது போல பல வருடங்கள் தன் குடும்பத்தோடும் நண்பர்களோடும் கழித்த ஒரு பண்டிகைதினத்தில் ஒரு வேளை சோறு கூட இன்றி ( அறையில் இருக்கும் பிற நண்பர்கள் ஊருக்கு போயிருந்தால் இது இன்னும் மோசம் ) யாரும் சாப்பிட்டாயா என்று கேட்க கூட ஆளில்லாமல் , வெளியில் சுற்ற பணமுமில்லாமல் பேசயாருமின்றி ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடப்பது கொடுமைதானே . இனிப்பை சுவைத்த ஒருவன் ஊரே இனிப்பின் மகிழ்ச்சியில் திளைக்கையில் தனக்கு மட்டும் கசப்பு மருந்து கிடைத்தால் இருக்கும் அந்த மனநிலையே இது .
இதை தாழ்வு மனப்பான்மையாக கூட நீங்கள் கருதலாம் . இது நிச்சயம் தாழ்வுமனப்பான்மையே , எந்த கஷ்டப்படும் பேச்சிலரும் !! ஜாலியாக ஊரை சுற்ற வெளியூருக்கு வந்து வேலை செய்வதில்லை , தனது குடும்ப சுமையும் வறுமையுமே அவனை அங்கே அழைத்து வந்திருக்கிறது , ஏப்பேர்பட்ட வறுமையிலிருப்பவனும் பண்டிகை தினங்களில் மகிழ்ச்சியாய் குடும்பத்தோடு பொழுதை கழிக்கவே விரும்புவான் , ஆனால் அது கூட கிடைக்காத வெறுமையே இதற்கு காரணாமாக இருக்கலாம் .
இது உணவையும் தாண்டி உணர்வு சார்ந்த ஒரு விடயம் , இது பண்டிகை நாட்களில் மட்டுமல்ல மற்ற நாட்களிலும் தொடர்வதை பார்க்கலாம் . பேச்சிலர்கள் ஊருக்கு போய் திரும்பும் போதெல்லாம் ஒரு வித புத்துணர்ச்சியுடனும் கொஞ்சம் உடல் சதையுடன் முகமலர்ச்சியோடும் வரும் அவன் அதன் பின் அடுத்த முறை ஊருக்கு போவதற்குள் அது குறைவதையும் அந்த புத்துணர்ச்சியின்றி உடல் மெலிந்து இருப்பதை கண்கூடாகக் காணலாம் .
பல நாள் கழித்து ஊருக்கு செல்லும் போதெல்லாம் எல்லா பெற்றோரும் முதலில் சொல்லும் வாக்கியம் என்ன தெரியுமா என்னாடா இப்படி இளச்சிட்டே என்பதுதான் ( அவன்/ள் எத்துனை குண்டாக இருந்தாலும் ) , எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சொற்றொடர் அது , நம் சமூகத்தில் உணவுக்கும் உணர்வுக்கும் இருக்கும் உறவு அது . அதனால்தான் ஊரிலிருந்து வந்த மகனை/ளை நாம் திரும்பும் வரை இன்னும் கொஞ்சம் சாப்பிடு இன்னும் இன்னும் என சொல்லி சொல்லி சோறூட்டும் தாயின் உணர்வு அது யோசித்து பாருங்கள் அது வெறும் வெந்த அரிசியா என்ன அது நிச்சயம் உணவல்ல ஒவ்வொரு தாயின் அன்பு அது (அதை நாம் எப்போதுமே உணர்வதில்லை அது வேறு விடயம் அதை விடுங்கள் ).
இது போன்ற தருணங்களில் சிகரெட்டு மிகுந்த ஆறுதல் தரக்கூடியவன் , மனதை இது போன்ற தருணங்களுக்கு தயாராக்குவான் . ம்ம் இதானால்தானோ என்னவோ பெரும்பாலான பேச்சிலர்களுக்கு சிகரெட் பழக்கம் வந்து விடுகிறது . தனிமையின் வெறுமையை எப்போதும் போக்குபவது இந்த சிகரெட்டின் சக்தி . அது கூட ஒரு தற்காலிக நண்பன்தான் அணையும்வரை . அதறகும் நம் உயிரென்னும் விலைதரவேண்டியிருக்கிறதே . காதல் கூட இந்த நோய்க்கு மருந்தாகாது , அதுவும் தற்காலிக மருந்துதான், போதை மருந்து . பிறகக இந்நோய்க்கு என்னதான் மருந்து , அது நிச்சயம் நோயில்லை . இது நிகழ்வு , இதன் சாரம் ஒவ்வொரு பேச்சிலருக்கும் மாறுபடும் .
பேச்சிலராய் வாழும் ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் இது போன்றதொரு தருணத்தை நிச்சயம் கடந்திருப்பான் . மிகசுவாரசியமான அந்நாட்களை பிற்காலத்தில் அசைபோடுகையில் அது நேற்றைய பேச்சிலருக்கு என்றுமே நகைச்சுவைதான் .
____________________________________________________________________
அவ்ளோதான்பா........ ;-)
____________________________________________________________________


35 கருத்துக்கள்:
சுவரஸ்யமான பதிவு.
பாலகுமாரன் சேவல் பண்ணை என்ற நாவலில் இது பற்றி மிக அழஅகாக எழுதி இருப்பார், முடிந்தால் படித்து பாருங்கள்.
இப்போது சென்னை பேச்சிலர்ஸ் பரவா இல்லை , போரூர், வேளச்சேரி, துரைப்பாக்கம் என்று விரிந்து உள்ளனர்.
திருவலிக்கேணி மான்சென் கள் இன்னமும் மாறவே இல்லை. திருவல்லிகேணி சென்னையின் திருஸ்டி பரிகாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நானும் ௨ மாதங்கள் திருவல்லிகேணி பகுதயில் பேச்சிலராக வாழ்ந்தேன். அப்பொழுது சனி ஞாயிறுகளில் செங்கல்பட்டு, விழுப்புரம் சுற்று வட்டார சிறு நகரம்,. கிராமம் சென்று விடுவேன்.
புது ஊரை பார்த்தல் புது விதமான அனுபவம், எண்ணங்கள் கிடைக்கும். தாங்களும் பேச்சிலர் காலத்தில் அதிகம் பயணம் மேற்கொள்ளவும். புத்தகங்களை விட பயணங்கள் கற்று தரும் பாடங்கள் மிக அதிகம்.
இப்போதும் சொவ்டோஜி மெஸ், விநாயக மெஸ், மஞ்சள் டோக்கேன், வெள்ளை டோக்கன் எல்லாம் இருக்கிறதா. கொடுமையான நாட்கள் அவை..
அன்புடன்
குப்பன்_யாஹூ
:(
:(
:(
......என்னத்த சொல்றது ...அது பெரிய கொடுமைங்க ... :(
என்னத்த சொல்றது ...அது பெரிய கொடுமைங்க ... :( :(
என்னத்த சொல்றது ...அது பெரிய கொடுமைங்க ... :( :(
அதிஷா... இந்த பதிவினை படித்துப்பாருங்க..
http://www.sensiblesen.com/2008/01/in-search-of-good-f.html
இன்னும் முழுதாக படிக்கவில்லை.. முழுதும் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்..
கெட்ட பழக்கம் !
ஏற்கனவே ஒருத்தர் இதுபற்றி அவர் பாணியில் பதிவு போட்டுவிட்டார், நீங்களும் அதே சப்ஜெக்டில்
கெட்டப் பழக்கம் !
:)
அருமையான பதிவு அதிஷா.. ரொம்ப சாதாரணமா சொல்லிட்டுப் போயிட்டீங்க.. படித்து முடித்த பிறகும், மனதினுள் ஏதோ ஒரு பாரம்.
twitter ல் தொடுப்பு கொடுத்த சொக்கன் அவர்களுக்கு நன்றி...
உங்க அனுபவத்துக்காக உச்சு கொட்டுவதா,. நல்லா எழுதியிருக்கீங்கன்னு பாராட்டறதான்னே புரியலை (:
பழைய அனுபவங்கள் கண்முன்னே விரிகின்றன. கூட்டங்கள் நிறைந்த ஒவ்வொரு மேன்ஷன்களின் அறையிலும் கண்ணுக்குத் தெரியாமல் ஓர் வெறுமை இருந்துக் கொண்டே இருக்கும்.
உங்களது எழுத்துக்களை படிக்கையில் அந்த வெறுமை மெல்ல புலப்படுகின்றது. குப்பன் சொன்னது போல பாலகுமாரனும் இந்த விஷயத்தை அழகாய்ச் சொல்லி இருப்பார்.
நாளுக்கு நாள் உங்கள் எழுத்து மேருகேரிகொண்டே போகிறது . வாழ்த்துக்கள் . திருவல்லிகேணி மேன்ஷன் வாழ்க்கை மறக்க முடியாதது. புதிது புதிதாக வரும் சர்வர்களின் சோககதைகளை கேட்பது எங்கள் வழக்கம்.(ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்.ஹி ஹி )
நானும் சென்னையில சேப்பாக்கம் மேன்சன்ல 2 மாதம் தங்கியிருந்தேனுங்க. அப்றம் வீடு எடுத்தாச்சு. விநாயகா மெஸ்ல மஞ்ச டோக்கன், வெள்ள டோக்கன் மாத்தி மாத்தி வாங்கி சாப்பிட்டுருக்கேன். முத தடவ அங்க சாப்புட போனது ஒரு சுவாரசியமான அனுபவம் நான் போனப்ப மஞ்ச டோக்கன் குடுத்தாங்க. அப்ப வெள்ள டோக்கன் ஆளுங்க உள்ள சாப்புட உக்காந்தாங்க. நானும் அவங்களோட உள்ள போயிட்டேன், அப்றம் அங்க ஒருத்தர், தம்பி நீ வைச்சுருக்கது மஞ்ச டோக்கன், வெளில காத்திருங்க கூப்பிடுவாங்கன்னு சொன்னாரு. வெளில வந்தா ஒரு பெரிய கூட்டமே மஞ்ச டோக்கன் வைச்சுக்கிட்டு நிக்குறாங்க. அப்றம் காத்திருந்து சாப்பிட்டுட்டு வந்தேன்.
அதிஷா சொல்ற மாதிரி ஒரு தடவ பொங்கல் விடுமுறையப்ப சாப்பாடே கிடைக்காம அலைஞ்சோம். கூட இருந்த நண்பண் ஒருவன் அவங்க சித்தி வீட்டுக்கு போயிட்டு 3.30 மணிக்கு பொங்கல் பார்சல் எடுத்துக்கிட்டு வந்தான் அதச் சாப்பிட்டு மதியானம் ஓட்டியாச்சு. ராத்திரி சாலிகிராமம் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டர் பக்கத்துல ஒரு தள்ளுவண்டி பிரியாணிக்கடையத் தவிர வேறெதுவும் இல்ல. எங்க கூட இருந்த நண்பண் ஒருவன் சுத்த சைவம். இருந்த பசில என்ன செய்யிறதுன்னு தெரியாம அந்த கடையிலத்தான் சாப்பிட்டோம். பிரியாணியில இருந்த கறிய எடுத்து எங்ககிட்ட குடுத்துட்டு சைவ நண்பர் வெறும் பிரியாணி சாப்பிட்டாரு. பொட்டிக்கடை கூட எல்லா இடத்துலயும் திறந்துருக்காது. பெரிய பிரச்சனைங்க அது.
முற்றிலும் உன்மை. விடுமுறை தினங்கள் பரவாயில்லை அரசு நடத்தும் பந்த் தினங்களில் நிலமை இன்னும் மோசம்.சிகரெட் விற்கும் பெட்டிகடை முதற்கொண்டு அனைத்தும் அடைத்திருக்கும் கொடுமை அனுபவித்து பார்த்தவர்களுக்குதான் தெரியும். ஏதோ ஒரு காரணத்துகாக பந்த் அறிவிக்கும் பொழுது சோத்துக்கு அலைந்த வேதனை அவ்வாறு அலைந்தவர்களால் மட்டுமே உணர முடியும். அதிகபட்சமாய் விடுமுறை தினங்களில் தினங்களில் தப்பிவிடும் பேட்சுலர்கள் கூட பந்த் நடத்தும் தினம் மாட்டி விடுவதுன்டு.ஒரு முறை நடிகர் விசு பந்த் தினத்தில் இறந்த தனது அண்ணணை அடக்கம் செய்ய சிரமபட்ட கதையை கேட்கும் பொழுது மிகுந்த வேதனையை அளிக்கும்.பெரிய தொழிற்சாலைகளில் பணி புரியும் நைட் ஷிஃப்ட் பேட்சுலர்களின் நிலமை இன்னும் மோசம்.பகல் முழுதும் உணவின்றி பாதி ஷிஃப்ட் முடிந்து வரும் உணவு இடைவேளைக்குள் மயக்கமே வந்து விடும். விழா காலங்களில் ஊரே மகிழ்சியாய் இருக்க சோகத்தை மட்டுமே தனக்குள் புதைத்து கொண்டு வாழும் ஒரு சிறு கூட்டம் எல்லா ஊர்களிலும் இருக்கும். அதில் இந்த பேட்சுலர்களும் ஒரு பகுதி
பேச்சிலர்கள் என்றுமே பேச்சிலர்களாகவே இருந்து விடுவதில்லை . ஒரு நாள் அவர்களுக்கும் திருமணமாகிறது , அவர்களும் தான் வாழ்ந்த அதே ஊரில் தன் மனைவியுடன்தான் பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலமாய் பொழுதை கழிப்பர் . ஆனால் தான் இது போன்றதொரு நாளில் இன்று நம்மோடு இருந்த அந்த பேச்சிலர் அனுபவிப்பானே என்கிற எண்ணம் யாருக்குமே வராததன் மர்மம் மட்டும் ஏனோ புரிவதில்லை . அதுவும் பலர் தான் பேச்சிலராய் பட்ட அந்த நாட்களை மறந்திருப்பது வியப்பே.
Ayya nanum bachilar aha irunthirukkiraen. Ungal pathivu mihavum arumai.
Ini pandigai kalangalil Namathu nanparkalai azhaithu Sappadu poda pohirean.
Nandri.
Hari hara krishnan
உணர்ச்சிகளை சரியான வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள் அதிஷா..
ஆம்.. பண்டிகை தினத்தில் தனித்து விடப்படுவது சோகமே..
கையில் பணம் இருந்தும் வேலை நிமித்தம் சாப்பிடாம் இருந்தால் ஒன்றும் தெரியாது.. அதுவே.. பணம் இல்லாததால் சாப்பிடமுடியாமல் போனால் மனம் தாங்காது..
மிக எதார்த்தமாக ஒரு சோகத்தை சொல்லியிருக்கிறீர்கள்..
நர்சிம்
நான் பொதுவாகவே இது போன்ற குடும்பஸ்த நண்பர்களிடம் பொங்கல் அன்று உங்கள் வீட்டற்கு வரலாமா என்று வாயைவிட்டு கேட்டாலும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லும் நண்பர்களும் நிறைய இருக்கின்றனர் .//
ye...yes
எந்த கஷ்டப்படும் பேச்சிலரும் !! ஜாலியாக ஊரை சுற்ற வெளியூருக்கு வந்து வேலை செய்வதில்லை , தனது குடும்ப சுமையும் வறுமையுமே அவனை அங்கே அழைத்து வந்திருக்கிறது ..
nitharsana unmai
மிகவும் கொடுமையான ஒரு விடயம் இது...
பேச்சிலர்க்கு எதிராக இன்னும் நிறைய அடுக்குமுறைகள் இருக்கு..
வீடு வாடகைக்கு கேட்டால்.. முதல் கேள்வி.. "நீங்க பேச்சிலரா? பாச்சிலர்க்கு வீடு தருவது இல்லை" தெரியாம தான் கெட்கறேன், உங்க வீட்டு பிள்ளைகள் வெளியூரில் வேலைக்கு செல்வதில்லையா?? இல்லை உங்க பிள்ளைகள் பேச்சிலரா செய்யும் அட்டூளியங்களைப் பார்த்து பேச்சிலர் மேலேயெ ஒரு வெறுப்பா??
உங்க பெண்ணை பேச்சிலருக்கு தருவீங்களா இல்ல ஒரு திருமணமானவருக்கு தருவீங்களா??
உங்க வீடு, உங்க அப்பாவோ தாத்தாவோ ஒரு காலத்துல வாங்கினது, இல்ல உங்க மானமார் கிட்ட பிடிங்கினதோ.. அந்த தம்மாந்துண்டு இடத்த வச்சிகிட்டு நீங்க செய்யும் அட்டூளியம் தாங்கல..
அம்பத்தூர் வாழ்வில் பெரும்பாலும் ஊருக்குப்போய்விடுவேன் எனினும் ஒன்றிரண்டு முறை இதுபோல சில பண்டிகைகள் கடந்திருக்கின்றன. இதை எழுத ஆரம்பிக்குமுன் ஜவ்வு மிட்டாய் சாப்பிட்டீங்களா.?
வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் அதிஷா.. பேச்சிலர்கள் மனதில் உள்ளதை அப்படியே வடித்திருக்கிறீர்கள். சமீபத்தில் படித்ததிலேயே மிக அருமையான பதிவு.. ஒரு வேளை எனக்கும் இது பொருந்தும் என்ற சுயநலத்தினாலோ என்னவோ..
அருமை.. அருமை.. அருமை..
குறிப்பாக எதாவது பன்னாடை பரதேசிகள் பந்த் நடத்தும் நாட்கள் இருக்கு பாருங்க.. வாழைப்பழம் , டீக்கு கூட வழி இருககாது.. அப்போவும் நம்ம நண்பர்கள் யாரும் நம்மள கண்டுக்க மாட்டாங்க.. அவ்ளோ கொடுமை..
ஒரு பேச்சிலரின் மனதை உரித்து வைத்திருக்கிறீர்கள்.
சென்னையில் இருந்த போது எனக்கும் இந்த அனுபவமுண்டு.
தாஜ் ஹோட்டலில் வேலை செய்தாலும் விடுமுறை தினங்களில் கையில் காசில்லாமல் பட்டினியாகவே கடத்தியிருக்கிறேன். பத்து வருடங்கள் என்னை பின்னோக்கி பார்க்க வைத்த பதிவு
போன பொங்கலுக்கு ஊருக்கு போகாம ரோடு ரோடா அலைஞ்சு பொறை பிஸ்கட் கூட கெடைக்காம போச்சு .. கடைசியா வெறும் கரும்பும் , பக்கத்து வீட்ல கொஞ்சம் பொங்கலும் ஊசி வாங்கி சாப்பிட்டு ஒப்பேத்தினேன் .
இனிவரும் விடுமுறை தினங்களில் ஒரு பேச்சிலர் நண்பனுடன் கழிப்பதே அவனுக்கு காட்டும் நன்றி
முற்றிலும் உண்மை.. நானும் மாம்பலம் பகுதி மேன்சனில் 2 ஆண்டுகளுக்கு மேல் தங்கியுள்ளேன், அடிக்க அடிக்க தான் இரும்பு வளைந்து கொடுக்கும்.. அது போல் தான்.. மேன்சன் வாழ்க்கை ஒரு பேச்சிலர்க்கு வளர்ச்சிப்பாடம்.. அவன் வாழ்வின் அஸ்திவாரம் அது தான்.. மேன்சனில் இன்னும் பல கொடுமைய பார்க்கலாம்.. மாதத்தின் முதல் 10 நாள் வாடகை வாங்க நம்ம மேன்சன் ஓனர் வருவாரு பாருங்க.. அன்னைக்கு தான் நம்ம பயன் எல்லாம்... மாமூல் வசூல் பண்ணுற ரவுடிக்கு பயப்படுற மாதிரி திரியுவாங்க.. அது ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கை.. திரும்ப வாழ்க்கையில் நினைச்சாலும் வராது..
ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி தான் சொல்லமுடியும்... நன்றி நண்பா!!!!!
:-((
யோசிக்க வச்சுடீங்க.
அதிஷா,
கோவையில அவ்வளவு பிரச்சினை இல்லை. நான் பேச்சிலராக இருந்த சமயம், பண்டிகைக் காலங்களில் பக்கத்து வீட்டினருடந்தான் கழித்த ஞாபகம். மேலும் எம்ஜியார் இறந்த பொழுது 3 நாட்கள் முறை வைத்து எங்களுக்கு உணவு அளித்தனர்.
மனது கனக்க வைக்கிறது அதிஷா.. வேறென்ன சொல்ல?? :(((
மிக நல்ல பதிவு , பேட்சுலர்களின் வாழ்க்கை குறித்து அருமையாய் பதிவு செய்துள்ளீர்கள்
நான் சென்னைல இருந்திருந்தேன்னா ‘டேய்.. வாடா வீட்டுக்கு'ன்னு கூட்டீட்டுப் போயிருப்பேன்.
ஆனா.. இன்னொரு விஷயம் என்னான்னா, லீவன்னைக்கு மனைவிகிட்டேர்ந்து தப்பிச்சு உங்களை மாதிரி ஃப்ரெண்ட்ஸ் கூட சுத்தலாம்ன்னு அந்த குடும்பஸ்தன் நினைப்பானே..!
அதிஷா
அற்புதமான பதிவு...
கிட்ட தட்ட 10 ஆண்டுகளாக தனியா வாழ்பவன் என்ற வகையில் இந்த வாழ்வில் நீங்கள் சொல்பவற்றையெல்லம் அணுஅணுவாக அனுபவித்தவன் நான். அதிலும் சில விசேட தினங்களில் சைவ உணவு உண்பது மரபு. அது எவ்வளாவு கடினமானது என்பது அனுபவித்தால் மட்டுமே புரியும்( கனடாவில்)
இதனால்தான் தனித்து இருப்பவர்கள் அனேகமாக காதலில் விழுகிறார்களோ என்று நான் நினைப்பதும் உண்டு
:-))
ரெண்டு நாளா சாபாடுக்கில்லாம அலைஞ்சிருக்கீங்க போலருக்கு. அதிஷா..
பெரும்பாலான மேன்சன் வாசிகள் மாதக்கடைசிகளில் மெஸ்களை மட்டுமே நம்பி கையில் காசின்றி அந்த மெஸ்களின் விடுமுறைதினத்தில் சோற்றுக்கும் வழியின்றி கையிலும் காசின்றி மிக கொடுமையாய் பத்துக்குபத்து அறையில் காலையிலிருந்து மாலைவரை முடங்கிக்கிடக்கும் பேச்சிலர்களை எல்லா விடுமுறைதினத்திலும் காணலாம் .
//
சத்தியமா உண்மைண்ணே. ஓரு தீபாவளி விடுமுறையின் போது 32 அறைகள் உள்ள எங்க எம்.எஸ் மேன்ஷனில் நானும் அங்க உள்ள ரூம் பாயும் மட்டும் இரண்டு நாட்கள் வெறும் வாழைப்பழத்தோடு கழித்த தனிமை..... ஆனா இப்போ நினைத்தால் அது ஓரு மகிழ்ச்சியா இருக்குன்ணே :)
பந்த் நாட்கள் தான் மிக கொடுமை.....
ஒரு டீ கூட குடிக்க முடியாது :(((((
நாய் படுற பாடு படனும்.....எப்பவாது ஊருக்கு போனா திரும்பி வர மனசே இருக்காது...
ஆனாலும் நண்பர்களோட வாழற வாழ்க்கை ஒரு சுகம் தான் :)))
அருமை.. அருமை.. அருமை..
அதிஷா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ................
என்ன சொல்றதுனே தெரியல .......... கண்ணீர் முட்டுது ..........
நெறைய பேர் ஏற்கனவ நெறய சொல்லீடாங்க
இந்த ஒரு பதிவுக்காகவே உங்களுக்கு எதாவது விருது வழங்க ஆசை
"வலைபூ செம்மல்" அதிஷா ............
Post a Comment