நான் கடவுள் - குரங்குத்தவம்!

>> 07 February 2009



சில வருடங்களுக்கு முன்னால் கோவையிலிருந்து சென்னைக்கு ஒரு இன்டர்வியூவிற்காக ஸ்பென்சர் பிளாசாவிற்கு வர நேர்ந்தது. மதியவேளையில் எங்கே சாப்பிடுவது எனத்தெரியாமல் ஸ்பென்சருக்கு எதிர்புறமிருக்கும் கையேந்திபவனில் சாப்பிட முடிவெடுத்தேன். இரண்டு பரோட்டாக்களை வாங்கிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க , ஒரு முடமான பிச்சைக்கார முதியவர் தனது மூன்று சக்கர சைக்கிளில் என் அருகில் வந்து பார்த்துக்கொண்டே இருந்தார். எனக்கு ஒரு மாதிரி பரிதாபமாக இருந்ததால் அண்ணே ஏதாவது சாப்பிடறீங்களா என்று கேட்டேன். அத்தனை நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென உத்தஸ்தாயியில் கத்த ஆரம்பித்தார் '' தேவிடியா பசங்களா , ங்கோத்தா பாடுங்களா , உங்களாலதாண்டா எங்களுக்கு கஷ்டம் , உன்ன மாதிரி நாதாரிங்கலாம் இங்க சாப்புடறதாலதாண்டா இந்த பு.!@!#@ பரோட்டோ வெலைய ஏத்திட்டான் .. @#%&@$&@% &*&$$*$#* '' என்று வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்துவிட்டார். அப்பொதுதான் புரிந்தது அங்கிருந்த பலரும் பெரிய கம்பேனிகளில் சிறிய வேலையில் இருப்பவர்கள் என்று. அதற்கு மேல் சாப்பிட முடியாமல் அரைபரோட்டாவோடு அங்கிருந்து நகர்ந்தேன். ஆனால் அந்த பிச்சைகார முதியவரின் கதறல் மட்டும் ஒரு வாரத்திற்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த நபரின் ஆற்றாமையை புரிந்து கொள்ள பல இரவுகளின் தூக்கத்தை விலையாய் தரநேர்ந்தது.


பிச்சைக்காரர்களின் வாழ்க்கை ரகசியமானது , அவர்களைப் பற்றி யாருக்குமே அதிகமாய் தெரிந்திருக்காது. உங்கள் வீடிருக்கும் தெருமுனை பிச்சைக்காரன் எந்த ஊர் , அவனது இருப்பிடம் எது அவனுக்கு பிச்சையாய் வரும் பணம் எங்கே போகிறது யாருக்கும் தெரியாது. அவர்களது வாழ்க்கையிலும் சுவாரஸ்யம் , மகிழ்ச்சி கண்ணீர் புனைவு , நகைச்சுவை எல்லாமும் இருக்கும் . ஆனால் அவர்களை புரிந்து கொள்வது மிகக்கடினமான ஒன்று. கடைநிலைமனிதர்களின் உலகம் நாம் அறிந்திராதது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது அது அன்னியமாக தெரிந்தாலும் அவர்களோடு அருகில் இருந்து பழகினால்தான் தெரியும் அவன் தெருவில் பிச்சை எடுப்பதும் நாம் தெருவைத்தவிர மற்ற எல்லா இடங்களிலும் பிச்சை எடுப்பதும். அவன் காசுக்கு மட்டும்தான் பிச்சை எடுப்பவன்.


உங்கள் வீட்டுக்கதவையோ கேட்டையோ தட்டும் கண்ணில்லா பிச்சைகாரரை உங்களுக்கு பிடிக்குமா ? , உக்கிரமான வெயிலில் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் போது கையில் தட்டோடு உங்களை நோண்டி நோண்டி பிச்சை எடுக்கும் காலில்லா முதியவருக்கு போட கையில் 2 ரூபாய் சில்லரை இல்லாமலிருந்தால் அவரை எப்படி அணுகுவீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யும் கடையில் வியாபாரமில்லாமல் இருக்கையில் தெருத்தெருவாய் கடைகேட்கும் திருநங்கைகள் வாசலில் நின்று காசு கேட்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நான் கடவுள் திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது அப்படி ஒரு மனநிலைதான் இருந்தது.

ஸ்ஸ்ப்பாடா ஒரு வழியாக வெளிவந்துவிட்டது நான்கடவுள் திரைப்படம். பாலாவும் பல வருடங்களாக ஆர்யாவைப்போல ஊடகங்களில் பெயர்வராத ஆயிரமாயிரம் பேரின் நொங்கை பிதுக்கி வேலை வாங்கி ஒரு தவம் போல ஒரு சிற்பியைப்போல செதுக்கி செதுக்கி படமெடுத்திருக்கிறார். பாலாவின் பல வருடத்தவம் நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. திரைப்படம் திரையரங்குகளில்.


பாலா படங்கள் பொதுவாகவே விளிம்புநிலை மனிதர்களையும் , சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் வாழ்வியலையும் சார்ந்து அதைக்குறித்த சமூகத்தினை சுற்றி நிகழுபவையாக இருக்கும். அவரது எல்லா திரைப்படங்களிலும் இருவேறு பரிமாணங்களில் இயங்கும் இரண்டு கதைகளை ஒன்றிணைத்து ஒரு திரைக்கதையாக்கி தந்திருப்பார். இந்த படத்திலும் இரண்டு கதைகள் , ஒன்று காசியில் அநாதையாக்கப்பட்ட சிறுவன் அகோரி( சாமியார்கள் பலவிதம் அதில் இதுவும் ஒருவிதம்) மாறியிருக்க அவனை மீட்க முயலும் தந்தையும் , தன்னூருக்கே திரும்பி வரும் அவன் சமுதாயத்தை எதிர்கொள்ளுதலும் , இன்னொன்று குருட்டு பிச்சைக்காரியும் அவளுக்கு பின்னால் இயங்கும் ஒரு பிள்ளை பிடிக்கும் கும்பல் அல்லது பிச்சை எடுக்கவைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் மற்றும் அங்கே பிச்சை எடுக்க பயன்படுத்தப்படும் பிச்சைக்காரர்களில் ஒரு சாரரின் (டீம்?) வாழ்க்கை முறை .


ஆயிரம் பக்கங்களில் எழுதவேண்டிய ஒரு புதினத்தை இரண்டைரை மணிநேரத்தில் அடைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் 500 பக்கங்கள் அல்லது அரைக்கிணறுதான் தாண்ட முடிந்திருப்பது வேதனை. இரண்டு கதைகளையும் அதற்கான தளத்தையும் முடிவு செய்துவிட்டு எதற்கு முக்கியத்துவம் தருவது என குழம்பிப்போய் இரண்டையும் சொதப்பியிருக்கிறார் பாலா. காசியில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் படமாக்கியதாய் பேட்டிகளில் அறிய முடிந்திருந்தது. ஆனால் படத்தில் அரைமணிநேரம் கூட அந்த காட்சிகள் வராமல் போனது ஏமாற்றம். காசிக்காட்சிகள் தமிழ்சினிமாவிற்கு மிகவும் புதியது அதை இன்னும் கொஞ்ச நேரம் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ அக்காட்சிகள் முடிந்து தேனீ காட்சிகள் தொடங்கும் போது ஏனோ தோன்றியது. அதேபோல வன்முறைக்காட்சிகள் இதுவரை வெளியான பாலாவின் படங்களில் இது உச்சம். வசன வன்முறை , காட்சி வன்முறை என விதவிதமாய் காட்டுகிறார்.


படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா, ஓம் சிவோவோம் என துவங்கும் அந்த ஆரம்ப பாடலை முன்னால் ஆடியோவாக மட்டும் கேட்ட போது திருவண்ணாமலை கிரிவலப் பாடலைப்போல இருந்தது , ஆனால் காட்சியாய் விரிகையில் அதன் பலம் அடேங்கப்பா!. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் ஏற்கனவே பலரது மனதையும் உடைத்து நொறுக்கிக் கொண்டு இருந்தாலும் காட்சியாக பார்க்க முடியவில்லை . என்னால் இன்னொரு முறை அந்த பாடல் காட்சியை டிவியில் கூட பார்க்க இயலுமா தெரியவில்லை. மற்ற பாடல்கள் எதுவும் திரைப்படத்தில் வரவில்லை. நீளம் கருதி வெட்டியிருக்கலாம். பிண்ணனி இசை - மிரட்டல் , அசத்தல் இத்யாதி இத்யாதி . ஆனாலும் இளையராஜா இன்னும் சோகக்காட்சிகளில் ஆதிகாலத்து வயலின் பீஜியத்தையே வாசிப்பது நெருடல் . மற்றபடி பல இடங்களில் நம் உடல் நடுங்கும் அளவுக்கு இசை நம்மை ஆட்கொள்ளுகிறது. இது இளையராஜா இசையமைத்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.


அதுவும் உடுக்கையின் ஒலியும் அதன் நாதமும் படம் முடிந்தும் காதிற்குள் குய் குய் என ரீங்காரமிடுகிறது.


ஆர்யாவின் இரண்டு வருட உழைப்பு , அவரது ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது. படம் முழுக்க நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறார் , கட்டைக்குரலில் ஜெய் போலேநாத் என்று கத்துகிறார், கஞ்சா அடிக்கிறார் , விரைப்பாகவே வலம் வருகிறார் , எல்லோரையும் வாய்க்கு வந்த படி திட்டுகிறார் , நான் கடவுள் அகம் பிரம்மாஸ்மி என்று கூவுகிறார் , திடீரென தலைகீழாய் நின்று யோகாசனம் செய்கிறார், சமஸ்கிருதத்தில் பத்தி பத்தியாக (ஜெமோ வலைப்பதிவு போல) யாருக்குமே புரியாதது போல பேசுகிறார். இதெல்லாம் போதாதென்று படம் நெடுக கோவணத்தைக் கட்டிக்கொண்டு விசுக்கு விசுக்கு என்று யாரையோ அடிக்கச் செல்வது போலவே நடக்கிறார். ஆர்யாவை பார்த்தால் பயம் வரவேண்டும் என பாலா நிறைய மெனக்கெட்டிருக்கிறார் . பாவம் ஆர்யா அவரால் முடிந்தவரை முயன்றிருக்கிறார் ... படத்திலும் ஆர்யாவின் காட்சிகளுக்கு அத்தனை முக்கியத்துவம் இருப்பதாய் தெரியவில்லை , ஆங்காங்கே தென்படுகிறார் , இடைஇடையே வந்து மேற்ச்சொன்ன சில உட்டாலக்கடி வேலைகள் செய்கிறார். ஆனால் எதுவும் உபயோகமில்லை ..கடைசியில் மீண்டும் காசிக்கே செல்கிறார்.. தல அஜித்தின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் .


பூஜா பெண்ணே ரோசாப்பூவே என்று கவிதை எழுதலாம் , மிக நேர்த்தியான இயல்பான நடிப்பு . பாலாவிடம் ஒரு பிடி மணலை அள்ளிக்கொடுத்து இதை எப்படியாவது நடிகனாக்குங்கள் என்று சொன்னால் கூட அதையும் நடிக்க வைத்துவிடுவார் போல... பலே ஆள்.

ஏனோ பூஜா பிச்சை எடுக்கும் போது பாடும் காட்சிகளில் பழைய பாடல்களை ஓடாத ரேடியோவில் போட்டது போல பிண்ணனி அமைத்தது மகா கேவலாமாக இருந்தது (இளையராஜாவின் மற்றுமொரு சொதப்பல் ) . ஒரு இயல்பான கதைசொல்லலில் சினிமாத்தனத்தை நுழைத்தது போன்ற உணர்வு. இதற்கு பூஜாவின் குரலிலேயே (படு மோசமான குரலாக இருந்தாலும்!) அப்படியே பதிந்திருக்கலாம் .


இதுதவிர பிச்சைக்கார கம்பெனி நடத்தும் தாண்டவன் என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுகம். இத்தனை மோசமான ஒரு வில்லனை தமிழ்சினிமா இதுவரை பார்த்திருக்குமா தெரியவில்லை. அவரது வசன உச்சரிப்பும் உடலசைவு மொழியும் இயல்பின் உச்சம். வில்லன்களுக்கான எல்லா அம்சமும் நிரம்பி வழிகிறது அந்த ஓல்லிக்குச்சி உடம்பில். மறைந்து போன நம்பியார் பி.எஸ்.வீரப்பாவுக்கு பின் குழந்தைகள் பார்த்தால் பயந்து ஓட இன்னொரு பூச்சாண்டி புள்ளபுடிக்கறவன் கிடைத்து விட்டார்.


அதே போல பிச்சைக்கார குழு ஒன்றை சித்திரித்திருக்கிறார் இயக்குனர். அதில் ஒரு சிவன் வேடமிட்ட குள்ளக்கிழவன் , அம்மனாய் ஒரு கூனி , அகோரமான முகம் கொண்ட காளி , எழுந்து நிற்கக்கூட இயலாத துடுக்கு பேச்சு சிறுவன் , இவர்களை கண்கானிக்கும் முருகன் என்னும் அடியாள் , முருகனை காதலிக்கும் இடுப்பொடிக்கப்பட்ட இளம்பெண் , இவர்களுக்கு எடுபிடியாய் ஒரு திருநங்கை , இன்னும் பல பல பாத்திரங்கள் படம் முடிந்தும் மனதிற்குள் நிலைகொள்கின்றன. இவர்களில் பலரும் நடிகர்கள் அல்ல என்றும் பலரும் நிஜபிச்சைக்காரர்கள் என்றும் அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது. பிச்சைக்காரர்கள் என்றாலே பரிதாபம் என்னும் வழியிலிருந்து விலகி அவர்களது மகிழ்ச்சியையும் காட்ட முயன்றது பாராட்டுக்குரியது.


பகடிக்கு பெயர் போனவர் ஜெயமோகன் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படத்திற்கு அவர்தான் வசனம். தொப்பி எனும் கட்டுரையால் சினிமாக்காரர்களால் டவுசர் கிழிக்கப்பட்டவர் . அந்த வன்மமோ என்னவோ அதை மனதில் வைத்துக்கொண்டு பல இடங்களிலும் சினிமாவை சகட்டுமேனிக்கு நையாண்டி செய்திருக்கிறார் தன் வசனங்களால். எம்.ஜி.ஆர் வேடமிட்ட ஒருவர் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்னும் பாடலுக்கு நடனமாடுகிறார் . அது முடிந்தது இப்படி வருகிறது வசனம் எம்.ஜி.ஆரே சொல்வதாய்.. '' வெறும் பாட்ட மட்டும் கேட்டுட்டு அத புரிஞ்சுக்காம எனக்கு ஓட்ட மட்டும் போட்டுட்டீங்க '' என்று. அதேபோல தனது ஹிந்துத்துவா கொள்கையிலிருந்தும் விலகாமல் பாலாவின் படமென்பதால் அடக்கி வாசித்து மிக நுணுக்கமாக தான் கொண்ட கொள்கையை பரப்ப முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படத்தில் சில இடங்களில் எல்லா புகழும் இறைவனுக்கேவும் , ரட்சிப்பும் உபயோகமில்லாதது என்பதனை உணர்த்தியிருக்கிறார் ( படம் பார்த்து புரிந்து கொள்ளுங்க ) . ஜெமோ நாமம் வாழ்க.. அவர் புகழ் வளர்க..

படத்தின் கேமரா , அத்தனை சிறப்பாய் இருக்கிறது , கலர் ஃபுல் ஆனால் இந்த கதைக்கு இத்தனை நிறப்பிரிகைகள் அவசியம்தானா? ( சேதுவில் மனநிலைபாதிப்பு குறித்த காட்சிகளில் ஒரு அழுக்கு பச்சை நிறத்தை உபயோகித்திருப்பார் ) இதற்கு முன் இத்தனை கலர்புல்லாய் சந்திரமுகி பார்த்தது. எடிட்டிங் யாருப்பா? ஜிக் ஜிக் ஜிக் என்று காட்சி மாற்றத்தை கலக்கலாக செய்திருக்கிறார். அதுவும் சண்டை காட்சிகளில் மிதமிஞ்சிய எடிட்டிங்.சபாஷ் ஆர்தர் வில்சன்.


படம் முடிந்ததும் எனக்கு முதலில் தோன்றியது '' ஏன்டா ங்கோத்தா இப்படி படம் எடுக்கறீங்க .. தே... @%@#%$&%@$&$@ '' என்பதே '' அத்தனை பாதிப்பை இந்தப் படம் நம்முள் ஏற்படுத்தித் தொலைக்கிறது. ஆனால் அந்த பாதிப்பு மிக கொடுமையான வன்முறையால் நிகழ்ந்தது என்பது மறக்கவும் மறைக்கவும் முடியாதது. பாலாவின் படங்கள் எல்லாமே உங்களில் இருக்கும் பைத்தியத்தை தட்டி எழுப்பி அதற்க்கு சில மணிநேரங்கள் தீனி போட உதவும் வகைப் படங்கள். இப்படம் அந்த பைத்தியத்தை அழவைத்து ரசிக்கிறது. அவரது முந்தைய படங்கள் அதிகம் பேசப்பட இதுவே காரணமாக இருக்கலாம்.

இந்த படத்தின் பிளஸ் - காசிக்காட்சிகள் , மிகச்சிறந்த கதை , ஜெமோவின் ரேசர் ஷார்ப் வசனங்கள் , எடிட்டிங் , பூஜாவின் நடிப்பு , ஆர்யாவின் உழைப்பு , இளையராஜா , பாலாவின் இயக்கம்

இப்படி பல பிளஸ்கள் இருந்தும் படத்தின் மிகப்பெரிய மைனஸ் திரைக்கதை , மற்ற எல்லா விடயத்திலும் கவனம் செலுத்திய இயக்குனர் இதில்தான் அதிகமாய் கவனம் செலுத்தவேண்டும் என்பதை மறந்து போனதேன் என்று புரியவில்லை.. திரைக்கதையில் அத்தனை ஓட்டைகள் , ஓட்டைகளின் அளவு அதிகமாகி வெறும் சல்லடையாய்தான் போனது திரைக்கதை அமைப்பு. பாலாவின் முந்தைய படங்களில் இருந்த நேர்த்தியான பேலன்ஸ்டு திரைக்கதை வடிவமைப்பு இந்த படத்தில் மிஸஸிங். ரியாலிட்டியோடு ஒரு படம் எடுப்பது என்றுமுடிவான பின் ஏன் பல சினிமாத்தனமான காட்சியமைப்புகள் என்றும் புரியவில்லை.

அடுத்து விளிம்பு நிலை மனிதர்களை இதைவிட கொடுமையாய் யாருமே காட்டியிருக்க முடியாது , அதில் கொஞ்சூண்டு கருணை காட்டியிருக்கலாம். காட்சி வன்முறை கண்ணை மறைக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் , கர்ப்பிணிகள் , பலவீனமான இதயம் கொண்டோர் இந்த படத்தை பார்க்காமல் இருந்துவிடுவது உத்தமம் .

பாலாவின் படங்களில் பொதுவாக படம் முடிந்து வெளியே வரும்போது பேய் பிடித்தது போலிருக்கும். இந்த படத்தில் கடவுள் பிடித்தது போலிருந்தது.

இது தமிழ்சினிமாவின் மைல்கல் பாறாங்கல் கருங்கல் என்றெல்லாம் சொல்ல இயலாது , தமிழ்சினிமாவில் விளம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை படமாக்க முயலும் ஒரு புதிய முயற்சி அவ்வளவே. இதற்குமுன் இதைப்போல பசி,சோறு போன்ற படங்களில் இதே போன்ற மக்களை காட்டியிருந்தாலும் நான் கடவுள் கான்செப்ட் மட்டும் புதுசு.

நீங்கள் கடவுளை ஒரு வேளை காண நேர்ந்தால் உண்டாகும் மிரட்சியும் அதிர்ச்சியும் இந்த படமும் உங்கள் மனதில் உண்டாக்கும் , அதற்கான காரணங்கள் வன்முறையாய் திணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும்.

62 கருத்துக்கள்:

Amal February 7, 2009 10:59 AM  

//
பாலாவின் படங்கள் எல்லாமே உங்களில் இருக்கும் பைத்தியத்தை தட்டி எழுப்பி அதற்க்கு சில மணிநேரங்கள் தீனி போட உதவும் வகைப் படங்கள்
//
இதைத் தான், என் நண்பர்களிடத்தில் பைத்தியமாய் எவ்வளவு முறை எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்கு விளங்கவில்லை:-)
அருமையான அவதானிப்பு மற்றும் விமர்சனம்.

Rajaraman February 7, 2009 11:10 AM  

இதைவிட ஒரு நடுநிலையான அதே சமயம் படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசும் விமர்சனத்தை ஆனந்த விகடனில் கூட எதிர்பார்க்க முடியாது.

விமர்சனம் எழுதுவதில் ஒரு புதிய மைல் கல்.

வடிவேலன் .ஆர் February 7, 2009 11:17 AM  

சிறப்பான விமர்சனம் அதிஷா இந்த படத்தின் பிளஸ் - காசிக்காட்சிகள் , மிகச்சிறந்த கதை , ஜெமோவின் ரேசர் ஷார்ப் வசனங்கள் , எடிட்டிங் , பூஜாவின் நடிப்பு , ஆர்யாவின் உழைப்பு , இளையராஜா , பாலாவின் இயக்கம்

இதற்காகவே படம் பார்க்கலாம் நான் கடவுள் பாதிப்பு யாரையும் நானும் கடவுள் ஆக்கலாம்

Valaipookkal February 7, 2009 11:25 AM  

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

ramachandranusha(உஷா) February 7, 2009 11:28 AM  

நீங்கள் கடவுளை ஒரு வேளை காண நேர்ந்தால் உண்டாகும் மிரட்சியும் அதிர்ச்சியும் இந்த படமும் உங்கள் மனதில் உண்டாக்கும் , அதற்கான காரணங்கள் வன்முறையாய் திணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும். //

அடி தூள் :-)

அருமையான விமர்சனம். எப்படியும் ஆறேழு மாதங்களுக்கு தமிழ் படம் பார்க்க முடியாது. அதனால்
அனைத்து விமர்சனத்தையும் படித்துக் கொண்டு இருக்கிறேன். ஏழாவது உலகம் நாவலையே
படமாக்கியிருக்கலாம். ஆனால் அதில் ஹிரோ, ஹீரோயினி யாரும் இல்லையே ?

குசும்பன் February 7, 2009 11:38 AM  

அருமையான விமர்சனம் அதிஷா!

விமர்சனத்தில் பட்டைய கிளப்ப இன்னொரு லக்கியா! வலையுலகம் தாங்காது சாமி!

Anbuaran,  February 7, 2009 12:16 PM  

"நாம் தெருவைத்தவிர மற்ற எல்லா இடங்களிலும் பிச்சை எடுப்பதும்"
True words

SanJaiGan:-Dhi February 7, 2009 12:26 PM  

சமீக காலங்களில் படித்ததிலேயே இது மிகச் சிறந்த விமர்சனம். பாராட்டுக்கள் அதிஷா. விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழி என்று தன் புத்திசாலித் தங்களை புகுத்தி எல்லை தாண்டாமல் எல்லா அம்சங்களையும் அலசி இருபப்து அழகு. படம் பார்த்தது போன்ர உணர்வு. பாலா, தங்கர்பச்சான் வகையறாக்களின் சினிமாக்களை எல்லாம் ரசிக்க முடிந்ததில்லை என்பதால் நிச்சயம் நான் பார்க்கப் போவதில்லை. ஆனால் விமர்சனம் நன்ராக இருந்தது. பெரிசா இருந்தாலும் மெய்யாலுமே முழுசா படிச்சேன்.

விமர்சனத்துக்கு முந்தய உங்கள் அனுபவம் சார்ந்த வரிகள் கலக்கல். ரொம்பவே பக்குவம் வந்துடுத்து அதிஷாவாள்.. சீக்கிறமே பொஸ்தகம் போடுங்கோ.. வாழ்த்துக்கள்.. :))

KaveriGanesh February 7, 2009 12:34 PM  

மிகவும் நேர்தியான, படம் பார்த்த excitment இல்லாமல், நிதானமான பதிவு, வாழ்த்துக்கள் அதி.


ஏற்கனவே பைத்தியம் புடிச்ச மாதிரி வாழ்ந்து கொண்டிருப்பதால், பெரும்பாலும் பாலாவின் ப‌டங்களை த‌விர்த்துவிடுவேன்.

T.V.Radhakrishnan February 7, 2009 12:36 PM  

அருமையான நடை..அழகான விமரிசனம்...பாராட்டுகள் அதிஷா

இராகவன் நைஜிரியா February 7, 2009 1:06 PM  

பாராட்டுக்கள் அதிஷா...

அருமையான, நடுநிலமையான விமர்சனம்...

வாழ்த்துக்கள்

narsim February 7, 2009 1:08 PM  

சமீப காலங்களில் நான் படித்த மிக நல்ல விமர்சனம்.. நல்லா எழுதியிருக்கீங்க தல‌

வெயிலான் February 7, 2009 1:30 PM  

படம் பார்த்து விட்ட நானும், எல்லா விமர்சன பதிவுகளையும் படித்ததில் உங்களது விமர்சனம் நிதர்சனம்!

நீ வளர்கிறாயே அதிஷா! வாழ்த்துகள்.

Anonymous,  February 7, 2009 2:00 PM  

Nice review sir.....

Baraka February 7, 2009 2:03 PM  

'குரங்குத்தவம்' என்ற வார்த்தையை கூடிய விரைவில் copyright பண்ண வேண்டி வரும் போலிருக்கு :-)

mano February 7, 2009 2:07 PM  

athisha

crystal clear review. kudos

manoj

VIKNESHWARAN February 7, 2009 2:07 PM  

நல்லா எழுதி இருக்கிங்க... அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. படம் பார்த்துட்டுதான் முடிவு செய்யனும்.

மணிகண்டன் February 7, 2009 2:12 PM  

அதிஷா, ரொம்ப அருமையான விமர்சனம். நிச்சயமா இந்த படத்த பாக்கணும்ன்னு தோனுது !

************** விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழி என்று தன் புத்திசாலித் தங்களை புகுத்தி எல்லை தாண்டாமல் எல்லா அம்சங்களையும் அலசி இருபப்து அழகு **********

சஞ்சய் காந்தி :- இளையராஜாவோட வயலின் BGM பத்தி இப்படி சொல்றாரு அதிஷா. இதுல அவரோட அளவுக்கு அதிகமான புத்திசாலித்தனம் உங்களுக்கு தெரியலையா !

*****
இளையராஜா இன்னும் சோகக்காட்சிகளில் ஆதிகாலத்து வயலின் பீஜியத்தையே வாசிப்பது நெருடல்
*****

அதிஷா February 7, 2009 2:19 PM  

@baraka

அண்ணே உங்க வார்த்தைய யூஸ் பண்ணதுக்கு அனுமதி வாங்கணுமா..

நீங்க ஒரு வாழும் வள்ளலாச்சே

SanJaiGan:-Dhi February 7, 2009 2:31 PM  

மணிகண்டன், நான் சொன்ன புத்திசாலித்தனம் என்பது படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் குறை கண்டுபிடிப்பது அல்லது திட்டுவது மட்டுமே இருக்கும் விமர்சனங்களை. பேரரசு படத்திற்கு மனிரத்ணம் படம் ரேஞ்ச்க்கு செய்யும் விமர்சங்களை நான் சொன்னேன்.

பாலா படத்துக்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அதிஷா விமர்சனம் பண்ணி இருக்கார். அத தான் எல்லை தாண்டாத விமர்சனம்னு சொன்னேன்..

அதிஷா ராஜாவின் வயலின் பத்தி சொல்லி இருப்பதை போன்றவைகளைத் தான் “ சரியான அலசல்” என்று சொல்வது.

குழப்பிக் கொள்ளவேண்டாம்.ஸ்ஸ்ஸ்ஸபாஆஅ.. :(

வெண்பூ February 7, 2009 2:41 PM  

சரளமான வார்த்தைப் பிரயோகம், சொல்ல வந்த கருத்தை எதைப் பற்றியும் கவலைப்படாமல் நச்சென்று சொல்வது, இடையிடையே உங்கள் அனுபவங்களின் செருகல்.... ஒரு தேர்ந்த எழுத்தாளர் ஆகிட்டீங்க அதிஷா.. உங்கள் பதிவுகளை படிக்கிறபோது சந்தோஷமாக உணர்கிறேன். பாராட்டுகள்..

அதே போல் இவ்வளவு எழுதியும் கதையின் எந்த ஒரு சஸ்பென்ஸையும் உடைக்காமல் க்ளைமாக்ஸை விவரிக்காமல் ... சான்ஸே இல்லை அதிஷா.. எப்படி பாராட்டுறதுன்னு தெரியல..

ரமேஷ் வைத்யா February 7, 2009 3:02 PM  

கச்சிதம் அதிஷா.
தல அஜித்தின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது
தல தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றே இருக்கலாம்தானே...

புருனோ Bruno February 7, 2009 4:06 PM  

தப்பா நினைச்சுக்காதீங்க

இது (இந்த விமர்சணம்) நீங்க எழுதியதா

--

ஆம் என்றால் நீங்கள் (உங்கள் எழுத்து) ஒரு கட்டம் முன்னேறி இருக்கிறது

வாழ்த்துக்கள்

புருனோ Bruno February 7, 2009 4:08 PM  

//..கச்சிதம் அதிஷா.
தல அஜித்தின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது
தல தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றே இருக்கலாம்தானே....//

அப்படி இருந்தால் என்னைப்போன்ற விபரம் அறியாதவர்களுக்கு புரியாது அண்ணே

சுப்புடு,  February 7, 2009 4:38 PM  

எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ் - என்று பார்த்ததாக நியாபகம்.

மணிகண்டன் February 7, 2009 5:17 PM  

****
புத்திசாலித்தனம் என்பது படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் குறை கண்டுபிடிப்பது அல்லது திட்டுவது மட்டுமே இருக்கும் விமர்சனங்களை. பேரரசு படத்திற்கு மனிரத்ணம் படம் ரேஞ்ச்க்கு செய்யும் விமர்சங்களை நான் சொன்னேன்.
*****
ஓஹோ. இந்த மாதிரி புத்திசாலிதனத்த சொன்னீங்களா !
*******
அதிஷா ராஜாவின் வயலின் பத்தி சொல்லி இருப்பதை போன்றவைகளைத் தான் “ சரியான அலசல்” என்று சொல்வது
*******
சரி . ஓகே.

நான் தான் ஒரு generation முன்னாடி பிறந்துட்டேன் போல ! அதுனால எனக்கு இது அலசலா தெரியல !

மணிகண்டன் February 7, 2009 5:39 PM  

*********** ஆம் என்றால் நீங்கள் (உங்கள் எழுத்து) ஒரு கட்டம் முன்னேறி இருக்கிறது *************

ப்ருனோ சார், கொஞ்ச நாளா அதிஷா எழுதறத நீங்க படிக்கறது இல்ல போல இருக்கு ! slumdog millionaire விமர்சனம் முதல் எல்லாமே கலக்கல் தான்.

என்ன இன்னும் கொஞ்சநாள் ஆச்சுன்னா அறிவு ஜீவி ஆயிடுவாரு ! நமக்கு புரியாம போய்டும்.

Vivek February 7, 2009 6:33 PM  

விமர்சனம் அருமை. உங்கள் விமர்சனத்தின் ஆரம்பமே பாலா படத்தை பார்த்த உணர்வு.

இனிமேல் சென்னை Spencer அருகே வந்தால் கையெந்தி பவன் செல்லாமல் Hotel Saravana Bhavan செல்லவும் :)

அன்புடன் விவேக்!

ஜீவா,  February 7, 2009 7:33 PM  

ஒவ்வொரு வரியும் செம ஷார்ப்.

MARATHAMIZHAN,  February 7, 2009 7:41 PM  

test

சென்ஷி February 7, 2009 8:43 PM  

கலக்கிட்டீங்க அதிஷா.. இதுக்கு மேல என்னால எப்படி பாராட்டறதுன்னே தெரியல.. அருமையான விமர்சன பதிவு..

சூர்யா February 7, 2009 9:35 PM  

//இப்படி பல பிளஸ்கள் இருந்தும் படத்தின் மிகப்பெரிய மைனஸ் திரைக்கதை , மற்ற எல்லா விடயத்திலும் கவனம் செலுத்திய இயக்குனர் இதில்தான் அதிகமாய் கவனம் செலுத்தவேண்டும் என்பதை மறந்து போனதேன் என்று புரியவில்லை.. திரைக்கதையில் அத்தனை ஓட்டைகள் , ஓட்டைகளின் அளவு அதிகமாகி வெறும் சல்லடையாய்தான் போனது திரைக்கதை அமைப்பு. பாலாவின் முந்தைய படங்களில் இருந்த நேர்த்தியான பேலன்ஸ்டு திரைக்கதை வடிவமைப்பு இந்த படத்தில் மிஸஸிங். ரியாலிட்டியோடு ஒரு படம் எடுப்பது என்றுமுடிவான பின் ஏன் பல சினிமாத்தனமான காட்சியமைப்புகள் என்றும் புரியவில்லை//

100% சரியான வார்த்தை...

படம் இன்னும் பார்க்கல.. ஆனா நீங்க என்ன சொல்லறீங்கன்னு நல்லாப் புரியுது..

நல்ல படம் எடுத்தா எவன் பார்க்கிறான்ன்னு நம்ம ஆட்களெல்லாம் புலம்புபோது இதுதான் தோனும்..

நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.. ‘தவமாய் தவமிருந்து', மாயக்கண்ணாடி, கற்றது தமிழ், பூ, இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..

படம் பார்க்கிற நமக்கே திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பது தெரியும் போது.. இவ்வளவு மெனக்கெட்டு எடுக்கறானுங்க.. ஆனா இதப் புரிஞ்சுக்கவே மாட்டேன்றானுங்க..

அங்கலாப்பா இருக்கு...

படத்தப் பத்தி அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு மேஞ்சுட்டீங்க..

அருமை!!!

கோவி.கண்ணன் February 7, 2009 10:26 PM  

//இது தமிழ்சினிமாவின் மைல்கல் பாறாங்கல் கருங்கல் என்றெல்லாம் சொல்ல இயலாது , தமிழ்சினிமாவில் விளம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை படமாக்க முயலும் ஒரு புதிய முயற்சி அவ்வளவே//

நாங்களும் இப்படித்தான் உணர்ந்தோம். நல்லா சொல்லி இருக்கிங்க தம்பி !

Baraka February 7, 2009 10:30 PM  

ச்சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன்..

மு.மயூரன் February 7, 2009 10:54 PM  

//பெண்கள் மற்றும் குழந்தைகள் , கர்ப்பிணிகள் , பலவீனமான இதயம் கொண்டோர் இந்த படத்தை பார்க்காமல் இருந்துவிடுவது உத்தமம் .//

மற்றெல்லாம் சரி, பெண்கள் இதில் ஏன் அடங்குகிறார்கள்?

சரவணகுமரன் February 7, 2009 10:56 PM  

எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ்

சரவணகுமரன் February 7, 2009 10:59 PM  

//காசிக்காட்சிகள் தமிழ்சினிமாவிற்கு மிகவும் புதியது //

சாமிடான்னு கொஞ்சம் நாள் முன்னாடி ஒரு பிரபல படம் வந்திச்சே :-)

ஜோ / Joe February 8, 2009 12:17 AM  

// எம்.ஜி.ஆர் வேடமிட்ட ஒருவர் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்னும் பாடலுக்கு நடனமாடுகிறார் . அது முடிந்தது இப்படி வருகிறது வசனம் எம்.ஜி.ஆரே சொல்வதாய்.. '' வெறும் பாட்ட மட்டும் கேட்டுட்டு அத புரிஞ்சுக்காம எனக்கு ஓட்ட மட்டும் போட்டுட்டீங்க '' என்று. //

ஓகோ..நல்லா பார்த்தீங்கய்யா படம்

எம்.ஜி.ஆர் பாடி முடிந்ததும் சிவாஜி அவரைப் பார்த்து "அண்ணே! நல்ல கருத்தெல்லாம் சொன்னீங்க..எல்லோரும் உங்களுக்கு ஓட்டு போட்டாங்களே தவிர கருத்தை கேட்டு ஒரு பயலும் திருந்தல்லியே" என்பதாக வரும் .

Dr Md Irfan February 8, 2009 12:26 AM  

I've seen the film, hats off to bala! done an excellent job! Nice Review but many things not acceptable! This is new chapter or new kind of film for tamil cinema! Pupil will find mistakes even if there's no mistake in the film! Tell me is there any director having guts to make this kind of movie in tamil cinema! Bala has won and i'll give full marks to Bala for that!

Anonymous,  February 8, 2009 1:47 AM  

excellent. fantastic review. kudos

Rahul

RAHAWAJ February 8, 2009 8:06 AM  

சூப்பர் அதிஷா

ஜோ / Joe February 8, 2009 10:34 AM  

//இது தமிழ்சினிமாவின் மைல்கல் பாறாங்கல் கருங்கல் என்றெல்லாம் சொல்ல இயலாது , தமிழ்சினிமாவில் விளம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை படமாக்க முயலும் ஒரு புதிய முயற்சி அவ்வளவே//

அடேங்கப்பா..எங்க ரேஞ்சே வேற-ன்னு சொல்லுறீங்க போல .

ஷண்முகப்ரியன் February 8, 2009 11:26 AM  

படத்தைக் காட்டிலும் உங்கள் விமர்சனம் சுவாரசியமாக இருந்தது.good writing.

Anonymous,  February 8, 2009 11:54 AM  

PANNADAI REVIEW VA DA ELUTHARA

NATHARI

Jal,  February 9, 2009 2:48 PM  

Naan enna sollanumnu nenachano adhai mela oruthan sollitan.. :))))))))))
- Jal

புலிகேசி February 9, 2009 6:43 PM  

உங்கள் முன்இடுகையான 'slumdog millionaire' விமர்சனம் படித்தேன், அதை வைத்து அலசும் பொழுது நான் கடவுளுக்கு நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனம் எந்த வர்க்க பார்வையில் இருந்து எழுதுகிறிர்கள் என புரிகிறது. நடு நிலைமை என்று எதுவும் இல்லை தோழா. நாம் நினைத்து கொள்ளலாம் நாம் நடுவாந்தரமாக யோசிக்கிறோம் என்று. அப்படி யோசிப்பவர்கள் 'SM' இன் இந்திய சேரிகளுக்கு சற்றும் சொந்தமில்லாத 'ராப்' பாடலை புகுத்தியதை புகழ்ந்து விட்டு, ராசாவின் வயலினுக்கு குட்டு வைக்க மாட்டார்கள்.

//எனக்கு உலகசினிமாவாக இருந்தால் அது நிச்சயம் உலக முழுக்க ஏற்றுக்கொள்ள உகந்த திரைப்படமாகவே இருக்க இயலும் என்பதில் நம்பிக்கையுண்டு . இப்படத்தில் எடுத்துக்கொண்ட ஏழ்மையும் , காதலின் தேடலும் , கடைநிலை மனிதனின் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானவை. இது நிச்சயம் உலக சினிமாதான்.// X //இது தமிழ்சினிமாவின் மைல்கல் பாறாங்கல் கருங்கல் என்றெல்லாம் சொல்ல இயலாது , தமிழ்சினிமாவில் விளம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை படமாக்க முயலும் ஒரு புதிய முயற்சி அவ்வளவே. இதற்குமுன் இதைப்போல பசி,சோறு போன்ற படங்களில் இதே போன்ற மக்களை காட்டியிருந்தாலும் நான் கடவுள் கான்செப்ட் மட்டும் புதுசு//

ஹ்ம்ம்... இந்த உலக சினிமாவும் உள்ளூர் சினிமாவும் படும் பாடு இருக்கிறதே! ஏழை ஒருவன் பணக்காரனாக ஆகும் அரத பழசான...மன்னிக்கவும் புத்தம் புதிய உலக சினிமாவும் - பசி, சோறு, போன்ற ஏற்கனவே ஒன்றிண்டு படங்களில் தலை காட்டிய விளிம்பு நிலை மக்களை பற்றிய ரொம்ப புதிதாய் அல்லாத உள்ளூர் சினிமாவும். பாலா X பாயல், ராஜா X ரகுமான் - இதில் எந்த பக்கம் நாம்?

suresh maniyan,  February 9, 2009 7:53 PM  

புலிகேசி said...
உங்கள் முன்இடுகையான 'slumdog millionaire' விமர்சனம் படித்தேன், அதை வைத்து அலசும் பொழுது நான் கடவுளுக்கு நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனம் எந்த வர்க்க பார்வையில் இருந்து எழுதுகிறிர்கள் என புரிகிறது. நடு நிலைமை என்று எதுவும் இல்லை தோழா. நாம் நினைத்து கொள்ளலாம் நாம் நடுவாந்தரமாக யோசிக்கிறோம் என்று. அப்படி யோசிப்பவர்கள் 'SM' இன் இந்திய சேரிகளுக்கு சற்றும் சொந்தமில்லாத 'ராப்' பாடலை புகுத்தியதை புகழ்ந்து விட்டு, ராசாவின் வயலினுக்கு குட்டு வைக்க மாட்டார்கள்.

//எனக்கு உலகசினிமாவாக இருந்தால் அது நிச்சயம் உலக முழுக்க ஏற்றுக்கொள்ள உகந்த திரைப்படமாகவே இருக்க இயலும் என்பதில் நம்பிக்கையுண்டு . இப்படத்தில் எடுத்துக்கொண்ட ஏழ்மையும் , காதலின் தேடலும் , கடைநிலை மனிதனின் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானவை. இது நிச்சயம் உலக சினிமாதான்.// X //இது தமிழ்சினிமாவின் மைல்கல் பாறாங்கல் கருங்கல் என்றெல்லாம் சொல்ல இயலாது , தமிழ்சினிமாவில் விளம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை படமாக்க முயலும் ஒரு புதிய முயற்சி அவ்வளவே. இதற்குமுன் இதைப்போல பசி,சோறு போன்ற படங்களில் இதே போன்ற மக்களை காட்டியிருந்தாலும் நான் கடவுள் கான்செப்ட் மட்டும் புதுசு//

ஹ்ம்ம்... இந்த உலக சினிமாவும் உள்ளூர் சினிமாவும் படும் பாடு இருக்கிறதே! ஏழை ஒருவன் பணக்காரனாக ஆகும் அரத பழசான...மன்னிக்கவும் புத்தம் புதிய உலக சினிமாவும் - பசி, சோறு, போன்ற ஏற்கனவே ஒன்றிண்டு படங்களில் தலை காட்டிய விளிம்பு நிலை மக்களை பற்றிய ரொம்ப புதிதாய் அல்லாத உள்ளூர் சினிமாவும். பாலா X பாயல், ராஜா X ரகுமான் - இதில் எந்த பக்கம் நாம்?

February 9, 2009 6:43 PM///



supper......!

can you have any answer for this athisha??

மணிகண்டன் February 9, 2009 8:28 PM  

*************
பாலா X பாயல், ராஜா X ரகுமான் - இதில் எந்த பக்கம் நாம்?
*************

பாத்தீங்களா புலிகேசி ! பா க்கு பா ! ரா க்கு ர ! எல்லாம் ஒரே மாதிரியே இருக்கு !

Anonymous,  February 10, 2009 5:09 AM  

I agree with Dr Md Irfan

Anonymous,  February 10, 2009 5:10 AM  

I agree with Dr Md Irfan.

கவிதா | Kavitha February 10, 2009 11:38 AM  

ஆதிஷா

அருமையான விமர்சனம்.. :) நல்லா சொல்லியிருக்கீங்க.. :))

ssk February 11, 2009 11:03 AM  

totally agree with u...
http://ssklogs.blogspot.com/2009/02/naan-kadavul-review.html

vijayasankar_r February 14, 2009 4:56 PM  

padaththa vida intha vimarsanam romba perisa irkke.konjam korajirukkalam.ithila irunthe neenga evlo thooram pathikkapattu irukkenga nu theriyathu.


anyway good .

by vijaysankar.

shyam February 16, 2009 12:22 PM  

ஆர்யாவிடம்
நீதிபதி " அவரு இப்போ எங்க இருக்கார் ? என்று கேக்கும் போது அதற்கு ஆர்யா என்ன சொல்கிறார் ?

பொதுவாக அகோர எல்லாம் நர மாமிசும் சாப்பிடுவார்கள் தானே அதை பாலா படத்தில் சொல்லவில்லியே

shyam February 16, 2009 12:23 PM  

ஆர்யாவிடம்
நீதிபதி " அவரு இப்போ எங்க இருக்கார் ? என்று கேக்கும் போது அதற்கு ஆர்யா என்ன சொல்கிறார் ?

பொதுவாக அகோர எல்லாம் நர மாமிசும் சாப்பிடுவார்கள் தானே அதை பாலா படத்தில் சொல்லவில்லியே

SurveySan February 17, 2009 10:00 AM  

அம்மாடியோவ்! சூப்பர் விமர்சனம்.

பெரும்பான்மையான கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

யாழினி சுந்த‌ர் February 22, 2009 2:17 PM  

ஒருவ‌ரின் விம‌ர்ச‌ன‌ம் அவ‌ருடைய‌ ர‌ச‌னை சார்ந்த‌தாக‌வே இருக்க‌ முடியும். அந்த‌ ர‌ச‌னை அவ‌ரின் விருப்ப‌ம் சார்ந்த‌தாக‌வும் , அந்த‌ விஷ‌ய‌ம் குறித்து அவ‌ரின் ஆளுமையின் ஆழ‌த்தின் அள‌வை பொறுத்த‌து என‌வே இதில் ந‌டு நில‌மை , விருப்பு வெறுப்புக‌ள‌ற்ற‌து என்ப‌து ந‌டைமுறையில் சாத்திய‌மில்லை என்ப‌து என் க‌ருத்து.

எப்ப‌டி க‌ட‌வுளுக்குப் ப‌ல‌ முக‌ங்க‌ள் உள்ள‌தாக‌ க‌ற்பிக்க‌ப்ப‌ட்டும் அறிய‌ப்ப‌ட்டும் உள்ள‌தோ அதே போல் பாலாவின் ’ நான் க‌ட‌வுள் ’ ப‌ற்றிய‌ ஒவ்வொருவ‌ரின் விம‌ர்ச‌ன‌த்திலும் அவ‌ரின் விருப்ப‌ம் சார்ந்த‌ ஒரு க‌ருத்து முக‌ம் காட்ட‌ப்ப‌டுகின்ற‌து.

இந்த‌ க‌ருத்தைதான் நான் சாருவுக்கு எழுதியிருந்தேன்.... என் கருத்து ச‌ரி என்று என்னை ந‌ம்ப‌வைத்து விட்ட‌து 'slumdog millionair' ம‌ற்றும் "நான் க‌ட‌வுள்" இவைக‌ளின் உங்கள் விம‌ர்ச‌ன‌ பார்வை.

யாழினி சுந்த‌ர்

gani March 4, 2009 1:42 PM  

தல அஜித்தின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்............

Anonymous,  March 16, 2009 5:32 PM  

ஸ்கிரிப்ட்ல ப்ளானிங் இல்லாம ஷூட் பண்ணிட்டு எடிட்டிங் டேபிள்ல உக்காந்து ஒப்பேத்துனமாதிரி ...
இதுக்கு மூணு வருஷம் தேவையில்லையே ..

மூணாவது ரீல்லையே நம்ம ஜனம் டயர்டாயிடுது.


படம்பூரா ஒரே கேமெராமேன் வொர்க் பண்ணமாதிரி தெரியலியே ..நல்லா விசாரிங்க .

வேணும்.. வேணாம் ன்ற சாய்ஸ் டைரக்டர்கிட்ட இருக்கும்போது ஏன் இளையராஜா மேல இந்த கொலைவெறி ?

நிறைய சீன்ல டயலாக்லாம்.. டிடி ல வர்ற டிராமா மாதிரி ....முடியல .
கேரக்டருங்க அடிக்கற கமேண்ட்லாம் யூனிட்ல ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர்கூட சொல்லியிருக்கலாம் ..
ஜெயமோகன் .... கசக்கி எழுதுனமாறி.. பாராட்லாம் ரொம்ப ஓவருங்க .
கவுண்டமணி நிறைய படத்துல போறபோக்குல சொல்றதவிடவா?

அப்புறம் .. அந்த போலிஸ் ஸ்டேஷன் சீன்..
நீங்க கவனிச்ச இத்தனை விஷயத்தையும் பாலா யோசிச்சு எடுதார்ன்னு காமெடி பண்ணாதீங்க ..
கமர்ஷியல்னு ஒன்ற ரீல வீணாக்கிட்டு .. நீங்க வேற .. ஒரே கலீஜ் ..

balavin April 28, 2009 11:08 PM  

//பாலாவின் படங்களில் பொதுவாக படம் முடிந்து வெளியே வரும்போது பேய் பிடித்தது போலிருக்கும். இந்த படத்தில் கடவுள் பிடித்தது போலிருந்தது.//

Arputham...Just reflected/mirrored my thoughts in the review...

Athisa,
I saw you in Micheals school community....which batch are you from...I am 1996 10th passed out

Anonymous,  February 16, 2010 1:14 PM  

this s very good

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP