நாடோடிகள் - தந்தைகளின் காவியம்!

>> 02 July 2009




''டேய் நீ அப்பா மாதிரி.... தான்! ஆனா..! என் பொண்ணுக்கு கஷ்டம்னு வந்தா உங்கிட்டயா வந்தா அப்பானு எங்கிட்டதானடா வந்தா! என்னடா பிரண்டு..! பெத்து வளத்த பொண்ணுக்கு என்ன வேணும்னு பெத்து வளத்தவன விட உங்களுக்கு என்னடா தெரியும்.. ''

நடுமண்டையில் 'நறுக்' என கொட்டியது போலிருந்தது அந்த வசனம். பெண்ணைப் பெற்ற பெரியவர்களுக்கு தெரியும் அதன் வலிமை.

அது காதல் படமா? இல்லை. நட்பு படமா? இல்லை. தந்தை சென்டிமென்ட் ? இல்லை. பின்ன?

சுப்ரமணியபுரம் சென்றவருடம் வெளியாகி பல மூத்த திரைப்பட ஆட்களின் மூக்கில் விரல் விட்டு ஆட்டிய திரைப்படம். சாரு தனது விமர்சனத்தில் அது ஒரு துரோகத்தின் காவியம் என குறிப்பிட்டிருந்தார். ஏனோ சசிக்குமார் நடித்த அடுத்தப் படமே நம்பிக்கைகளின் காவியமாய் ஆகிப்போனது தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா தெரியவில்லை.

அது நம்பிக்கைகளின் திரைப்படம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடிருக்கும் நால்வரின் வாழ்வில் துவங்கும் படம். அடுத்த நிகழ்வில் நம்பி வந்த நண்பனின் காதல் பிரச்சனையில் , ஒருவன் காலை இழக்கிறான் , ஒருவன் காதை இழக்கிறான் . ஒருவன் காதலை இழக்கிறான். ( காது+கால்=காதல்! கவிதையோ!). வாழ்க்கையை தொலைக்கின்றனர். கிடைக்க வேண்டிய வேலை,லோன்,பாஸ்போர்ட் என எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனர். மீண்டும் பீனிக்ஸாய் எழுகின்றனர். அச்சமயத்தில் சேர்த்து வைத்த காதல் ஜோடிகள் பிரிந்து விட... மீதி திரையில் காணலாம்.

கொஞ்சம் பிசகினாலும் விக்ரமன் டைப் படமாக ஆகியிருக்கக்கூடிய ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற தேர்ந்த நடிகர்களையும் , திரைக்கு பின்னால் உழைக்கும் ஒரு அசாத்திய அணியையும் உருவாக்கிக்கொண்டு காவியம் படைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.


இது ஏன் தந்தைகளின் காவியம்?


எத்தனை விதத்தந்தைகள். ஏதோ பிரச்சனையில் வீட்டில் இழவு விழுந்து கிடக்கையிலும் ஊரார் தூற்ற ''என் பையன் எது பண்ணிருந்தாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்யா '' என்று மார்த்தட்டும் ஒரு தந்தை.

இரண்டாம் மனைவிமுன் அதட்டினாலும் உள்ளுக்குள் பாசத்தை விதைத்துவிட்டு ஊமையாய்ப் போனவர். மகன் தன் காது செவிடாகிவிட்டது இனி நீ சொல்றது எனக்கு கேட்காது என அத்தந்தையை பார்த்து கேட்க உடைந்துபோய் அழும் ஒரு தந்தை.

பிரச்சனையில் தன் காலிழந்து வீட்டிற்குள் முடங்கிப்போனவனிடம்.. ''தம்பீ நம்ம பரம்பரைக்கே கால்லதாம்யா ஏதோ பிரச்சனை '' என நம்பிக்கையாய் ஒரு தந்தை.

காதலுக்கு தூது போய்.. ஏய் அவ போறா இப்ப (சைக்கிள்) பெல் அடி , ரிசல்ட் தெரியும் என ஐடியா தருவதாகட்டும் .. சரி நீங்க பேசிட்டு இருங்க என புறவாசலில் போய் அமர்ந்து கொண்டு வலியையும் வேதனையையும் அடக்கி கொள்வதாகட்டும் அடடே போட வைத்த ஒரு தந்தை!

தூக்கில் தொங்கிருவேன்.. செத்துப் போயிருவேன்.. அவனை மறந்துட்டேனு சொல்லு என அடம்பிடிக்கும் ஒரு சராசரி தந்தை. ஐய்யோ என் மானம் போச்சே என் பொண்ணே எனக்கு துரோகம் பண்ணிட்டா என வீதியெல்லாம் கத்தி ஓடி வரும் ஒரு தந்தை!.

மூன்று பெண்கள் மூவருமே காதலிக்கின்றனர். மூன்று காதலுமே வேறு வேறு மாதிரியானவை. ஒன்றில் முறைமாமன் . மற்றொன்றில் அண்ணனின் நண்பன் . இன்னுமொன்றில் பணக்கார யாரோவைக்காதலிக்கும் மகள். இந்த மூன்று காதலையும் மூன்று விதமாய் அணுகும் மூன்று தந்தைகள். பளீர்.

இப்படி தந்தைகளின் பல பரிமாணங்கள். நம் தமிழ்சினிமா அம்மாக்களின் ஆயிரம் விதங்களை காட்டியிருக்கிறது. ஏனோ தந்தைகள் எப்போதும் ஒன்று தன் பிள்ளைக்கு நம்பிக்கையூட்டபவனாகவோ அல்லது டம்மி பீசாகவோதான் காட்டப்பட்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தின் தந்தைகள் தமிழ்சினிமாவிற்கு மிகப் புதியவர்கள். அது போக இப்படத்தில் அம்மாக்களுக்கு அதிகமாய் வேலை இல்லை முறைப்பதும் சிரிப்பதுமாய் வந்து போகின்றனர் பெரும்பாலும். அதனால் முழுக்க தந்தைகளின் ராஜ்ஜியம்.

இப்படத்தின் நாயகர்கள் அந்த தந்தைகள்தாம். தந்தைகளின் பலவித உணர்வுகளை சில காட்சிகளில் ( வசனம் கூட இல்லாமல் )செவுட்டில் அறைந்தது போல் சொல்லிய சமுத்திரக்கனி கட்டாயம் 'அப்பாப்பிள்ளை'யாகத்தான் இருக்க வேண்டும்.

நட்புதான் இப்படத்தின் அச்சாணி என்றாலும் , மொத்த வண்டியே தந்தைகளாய் ஆகிப்போகின்றனர். நண்பர்களை விடவும் அவர்களது தந்தைகள் ஏனோ மனதில் ஆழமாய் அதிகமான பாதிப்பை உண்டாக்கிச்செல்கின்றனர்.

பொதுவில் எல்லா தந்தைகளுமே இப்படித்தான். எல்லா தந்தைகளுக்குள்ளும் மேற்ச்சொன்ன அனைத்துமே அடக்கம். சூழலும் நிகழ்வுகளும் விதவிதமான தந்தைகளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

படத்தின் அடுத்த நாயகன் இசை - சுந்தர்.சி.பாபு. கில்லி திரைப்படத்தில் சரியான இடத்தில் அர்ஜூனரு வில்லு என்றொரு பாட்டு இடம்பெற்றிருக்கும். அதே பாணியில் இப்படத்திலும் ஒரு சேஸிங் காட்சி . கில்லியை காட்டிலும் நூறு மடங்கு வலிமையான பாடல் அது. வெகு நாட்களுக்குப் சங்கர் மகாதேவன் சம்போ சிவசம்போ என மந்திரம் போட்டு மந்திரித்து விடுகிறார். இடைவேளை முடிந்து வெளியில் வரும் பலரது முகங்களும் அதற்கான சாட்சியாய் மந்திரித்து விட்ட கோழிகள் போல சிகரெட்டை திருப்பி பற்றவைத்துக்கொண்டு அலைகின்றனர். பிண்ணனியில் பிழந்திருக்கிறார் சுந்தர்.சி.பாபு.

****************

கல்லூரி திரைப்படத்தில் வந்த அந்த பையன். அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு. பார்க்கும் பெண்களையெல்லாம் டாவடிப்பதாகட்டும். குடித்துவிட்டு பேசிபேசி உதைவாங்குவதாகட்டும். கிளைமாக்ஸில் டேய் கர்ணா அவங்க போட்டுருவோம்டா.. என் வீறு கொண்டு கதறுவதாகட்டும் . அதிலும் காது கேட்காமல் போன பின் ( திடீரென காது கேட்காமல் போனவராய் நடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் ) அசத்தலப்பா!

வசந்த் அன் கோ புகழ் வசந்த் விஜய் , பார்க்க சென்னை 28 ல் பார்த்த அந்த மெக்கானிக் பையன் போல் இல்லாமல் அந்த பையனின் அண்ணன் போல மிடுக்காய் ஒரு மாதிரி அவரை வேறுமாதிரி இயக்குனர் செதுக்கியிருப்பது தெரிகிறது. ஒரு காட்சியில் ( காலிலழந்த நிலையில் கட்டிலில் கிடக்கையில் காதலிக்கு ஆறுதல் கூறும் போது ) மட்டும் சொதப்பல். மற்றபடி நிறைவு.

சசிக்குமார். ஆடுகிறார். மிரட்டுகிறார். ரொமான்ஸ் பண்ணுகிறார். காமெடிக்கிறார் . பாடல் ஒன்று பாடியதாய் கேள்வி. மிகையில்லா நடிப்பு. தேவையில்லாத பில்டப் இல்லை. ஆனால் மிரட்டலான பாடி லேங்வேஜ் மற்றும் வாய்ஸ் மாடுலேசன். என்ன குரல் இவருக்கு. படத்தில் காட்சிக்கேற்ப அவரது குரல் மாறுவது சிறப்பு. ஆனாலும் சசிக்குமார் நடிக்கப்போய்விடக்கூடாது என இறைவனை வேண்டுவோம். இன்னொரு சுப்ரமணியபுரம் வேண்டுமே! சசிக்குமாரை நடிகராக்கி அழகு பார்த்து அவரை முழுநேர நடிகராக்க முயற்சித்த ச.கனிக்கு ஒரு குட்டு!. மற்றபடி சசிக்குமார் இளம்ஹீரோக்களுக்கு போட்டியாக இருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது.

இவர்களுக்கெல்லாம் நடுவில் தேவையில்லாமல் மாட்டிக்கொண்டு உதைவாங்கும் கஞ்சாகருப்பு. வரும் காட்சிகளிலெல்லாம் மொத்தமாய் திரையை முழுங்கி விடுகிறார். தூள்!

இவர்கள் தவிர சசிக்குமாரின் பாட்டியாக நடித்த அந்த 'அழகு' பாட்டி ( நாயகிகளை விட அழகாய் இருக்கிறார் அந்த பாட்டி ) முதல் வசனமே இல்லாமல் வந்து போகும் பைக் நண்பன் வரை அனைவருமே அட போட வைத்திருக்கின்றனர்.

**********

கேமரா = ராக்கெட் வேகம்
வசனங்கள் = ஷார்ப்

**********

ரொம்ப நாளைக்குப் பின் ஹரிஹரன் குரலில் ஒரு மெலோடி. கேட்க கேட்க பிடிக்கும் போலிருந்தது.

**********

இன்டெர்வெல்லிற்கு பின் வரும் காட்சிகளில் காமெடி கலந்த சோகம் . வக்கிரம்? அல்லது PATHOS வகையோ?

**********

மொத்தமாய் படத்தின் மிகப்பெரிய பலம் இயக்கம். சமுத்திரக்கனியின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிவது அழகு. ஒரு காட்சியில் ஒருவன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல்கிறான். அவனை வெளியே எடுத்து காப்பற்ற முயல்கின்றனர். தலைகீழாய் போட்டு உலுக்கும் போது அவன் கைகளில் பாதி கழண்ட ஈரமான ஒரு வாட்ச்சு..எத்தனை நுணுக்கம். அட!

நெறஞ்ச மனசு சமுத்திரக்கனியா இது? அடப்போங்கடா இத்தன நாளா அந்தாள சீரியல் எடுக்கவிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.

குறையெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும்.


**********

நாடோடிகள் - இன்னொருவாட்டி பாக்கணும்.

34 கருத்துக்கள்:

கார்த்திகைப் பாண்டியன் July 2, 2009 12:57 PM  

உங்களோட ஸ்டைல்ல விமர்சனம்.. வித்தியாசமா தந்தைகளைப் பத்தின அப்ரோச்.. நல்லா இருக்கு..

வந்தியத்தேவன் July 2, 2009 12:58 PM  

அபினயா அனன்யா என்ற இரண்டு அழகு தேவைதகள் பற்றி எழுதாத அதிஷாவுக்கு கண்டனங்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) July 2, 2009 1:19 PM  

சூப்பர் படம்

நான் இந்த படத்தை இன்னும் பாக்கல

உங்க விமெர்சன‌த்தை படித்தாலே போதும்போல‌

Suresh July 2, 2009 1:28 PM  

வித்தியாசமாக யாரும் சொல்லாதை சொல்லி இருக்கிங்க நண்பா இது ஒரு தகப்பனின் நேர்மையை சொல்லும் படமும் கூட

நட்பு ஓங்கி நின்றாலும்..

அவரு பேசும் வசனம் யாரும் தப்பு என்று சொல்ல முடியாது

நல்ல விமர்சனம் குறிப்பா நீங்க இடைவெளி அப்போ விவரிச்சது ;)

/நெறஞ்ச மனசு சமுத்திரக்கனியா இது? அடப்போங்கடா இத்தன நாளா அந்தாள சீரியல் எடுக்கவிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்./

ஹ்ஹா உண்மை

/குறையெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும்/

100/100 சரி நண்பா

இன்னொரு வாட்டி இல்லை ரொம்ப வாட்டி பார்க்கனும் ;)

சூப்பர் விமர்சனம்

நர்சிம் July 2, 2009 1:29 PM  

நல்லா எழுதி இருக்கீங்க அதிஷா.. மிக நல்ல நுட்பம் தந்தைகளைப் பற்றிய பார்வை.

Joe July 2, 2009 1:29 PM  

நல்லதொரு விமர்சனம், சற்றே நீளம் அதிகம் என்றாலும்.

என்னைக் கேட்டால், சசிகுமார் அந்த பெண்ணின் சித்தப்பா மாதிரி இருக்கிறார் என்று தான் சொல்லுவேன். அவர் அழகானவர் தான் ஆனால் நடிப்பில் ஆர்வம் செலுத்தாமல், திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தினால் உங்களைப் போலவே நானும் மகிழ்ச்சியடைவேன்.

Anbu July 2, 2009 1:33 PM  

அதிஷாவின் நடையில் விமர்சனம்-அருமை அண்ணா..
மேலும் உங்கள் கதை இரண்டாம் முறையாய் குங்குமத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

சென்ஷி July 2, 2009 2:05 PM  

விமர்சன எழுத்துக்கள் அட போட வைக்கிறது :)

☼ வெயிலான் July 2, 2009 3:02 PM  

ரொம்ப நாள் கழிச்சு அதிஷாவின் பதிவு.

நாடோடி இலக்கியன் July 2, 2009 3:30 PM  

படத்தைப் பார்க்காமல் இதைப் படிக்கிறவர்களுக்கு எப்படி இருக்கிறதோத் தெரியவில்லை.
நான் படம் பார்த்துவிட்டேன்.உங்கள் ஒவ்வொரு வரியையும் படத்தின் காட்சியோடு ஒப்பிட்டு ரசிக்க முடிந்தது.
இப்போ நீங்க சொல்லியிருக்கும் தந்தைகளின் படமாக இன்னொரு தடவைப் பார்க்க வேண்டும்.

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

Rajeswari July 2, 2009 3:33 PM  

விமர்சனம் படத்தை போலவே......

நொந்தகுமாரன் July 2, 2009 3:39 PM  

Critics Ok. good.

But, In film, main point is Love marriage failure. You didn't say anything?

suresh kannan July 2, 2009 6:42 PM  

நல்லா எழுதி இருக்கீங்க.......
நல்லதொரு விமர்சனம்

Niyaz July 2, 2009 8:04 PM  

puthu maathiriyaana oru vimarsanam intha konathilum padam paarkalaamo

லவ்டேல் மேடி July 2, 2009 8:28 PM  

இந்த படத்த எத்தன பேரு சேந்துதான் கும்முவீங்க....!! போதும் .... முடியலையாம்....!!!!!

Sruthi July 2, 2009 8:48 PM  

http://kusumbuonly.blogspot.com/2009/07/blog-post.html

Sruthi July 2, 2009 8:50 PM  

http://kusumbuonly.blogspot.com/2009/07/blog-post.html

sridhar July 2, 2009 8:51 PM  

the criticism of "NADODIGAL" by Adhisha is very nice. Keep it up.

sridhar July 2, 2009 9:07 PM  

நாடோடிகள் படத்தின் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது. மிலிட்டரிகார தந்தை நன்றாக நடித்து இருக்கிறார். கஞ்ஜா கருப்புவின் நடிப்பு பிரமாதம்.

pappu July 2, 2009 11:28 PM  

நான் பாத்த விமர்சனங்களிலேயே வேறு கோணத்திலிருப்பது உங்களுடையதுதான்.

அதுவும் தந்தை செண்டிமெண்டு பத்தி சொல்லிருக்கீங்க. பிடிச்சிருக்கு!

கதியால் July 3, 2009 8:42 AM  

ம்ம்ம் உங்களோட விமரிசனத்திற்கு பின் நாடோடிகள் பார்க்க வேண்டும் என்ற உந்தல் மேலோங்கியிருக்கிறது. தொடரட்டும். வாழ்த்துக்கள்..!

DURAI.N.U 9443337783 July 3, 2009 9:02 AM  

படத்தைப்போலவே தங்களின் விமர்சனமும்
கவனிக்கப்பட வேண்டிய ஒன்று !

வாழ்த்துக்கள் !!

DURAI.N.U 9443337783 July 3, 2009 9:04 AM  

வாழ்த்துக்கள்
உங்களின் வசீகரிக்கும் எழுத்து நடைக்கும் :)

பைத்தியக்காரன் July 3, 2009 7:31 PM  

படத்தை இன்னும் பார்க்கலை அதிஷா. ஆனா, நண்பர்கள் எழுதின விமர்சனங்கள்ல, நீங்க வித்தியாசமா எழுதியிருக்கீங்க. யாரும் யோசிக்காத 'தந்தைகளின் காவியம்' அப்ரோச் பிடிச்சிருக்கு :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சுண்ணாம்பு July 3, 2009 9:37 PM  

//ஏனோ சசிக்குமார் நடித்த அடுத்தப் படமே நம்பிக்கைகளின் காவியமாய் ஆகிப்போனது தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா தெரியவில்லை.
//

ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்காவுல மைக்கல் ஜாக்சன் ஆவி கூபிட்டுச்சி.... இந்தமாதறி எழுதுங்க அப்பத்தான் படிக்குறப்ப சிப்பு சிப்பா இருக்கும்

வடகரை வேலன் July 3, 2009 11:51 PM  

நிறைவான விமர்சனம்.

படம் பார்க்கத் தூண்டியது.

ஊர்சுற்றி July 5, 2009 9:45 AM  

நாடோடிகள் பத்தி வித்தியாசமான பார்வையில்.... நல்லா இருக்கு.

நான் நேத்துதான் படத்தைப் பார்த்தேன். ஆனால் மொத்தமாக எனக்கு வேற ஆங்கிள்ல படம் தெரிஞ்சுது.

ராம் July 5, 2009 11:24 AM  

படத்தை பற்றிய உங்களது விமர்சனம் முற்றிலும் புதிய கோணத்தில் இருந்தது...படத்தோடு சேர்த்து இந்த விமர்சனத்தை பார்க்கையில் நல்ல வலைப்பதிவராக என்ன வேண்டும் என்பதும் புரிந்தது...நன்றி.

சாம்ராஜ்ய ப்ரியன் July 6, 2009 12:36 PM  

வள்ளுவர் காட்டிய பாதையில் பகை வென்ற அண்ணன் "சின்ன மணி"யைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை கூடவா சொல்லக் கூடாது?

Shan July 6, 2009 1:10 PM  

சசி குமாரின் காதலியாக வரும் நடிகையின் நடிப்பு மிக அருமை, அதனை பற்றி உங்களது விமர்சனத்தில் இல்லாதது சற்று வருத்தமாக உள்ளது. மற்ற படி உங்களது விமர்சனம் அருமை.

மொக்கை மோகன் July 6, 2009 5:38 PM  

உண்மை.
இனி சசிக்குமார் இயக்குனராகும் எண்ணங்களை தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு.. முழுநேர நடிகராகி விடலாம். :)

Anonymous,  July 6, 2009 6:15 PM  

\\நாடோடிகள் - தந்தைகளின் காவியம்//


என்ன சார்,

சாரு சுப்பிரமணியபுரத்துக்கு துரோகத்தின் காவியம்னு விமர்சனம் எழுதினார், நீங்க நாடோடிகளுக்ககு தந்தைகள் காவியம்னு எழுதுறீங்க. என்ன சார் நடக்குது?

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP