ஆயிரம் மரங்களின் நகரம்

>> 23 April 2010







"கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் "


-ஒரு செவ்விந்தியப்பாடல்




சார் உங்களுக்கு எந்த ஊரு என யார் கேட்டாலும் கோவை என்று பெருமையாக சொல்வேன். அட கோயம்புத்தூரா! சூப்பர் கிளைமேட்டா இருக்குமே சார், நீங்கள்ல்லாம் குடுத்து வச்சவங்க, நானும் வந்திருக்கேன் அப்படியே குளுகுளுனு இருக்கும் என்கிற பதிலையும் இதுவரை ஆயிரக்கணக்கான முறையாவது கேட்டிருப்பேன். உண்மையிலேயே கோவையில் பிறக்க நான் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். எத்தனை வெயிலடித்தாலும் ஏசி அறைக்குள் இருப்பது போன்ற உணர்வை அது ஒரு நாளும் வழங்காமல் இருந்ததில்லை. மொட்டை வெயிலில் கிரிக்கெட் ஆடிய நாட்களிலெல்லாம் தண்ணீர் கூட தேவைப்படாது.. எவ்வளவு நேரம் விளையாடினாலும். அதிகம் வியர்க்காது..


அப்படிப்பட்ட கோவையில் இந்த முறை கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வீட்டிற்குள் உட்கார முடியவில்லை , வீட்டை விட்டு வெளியே வந்தால் மொட்டை வெயில் மூஞ்சை கருக்குகிறது. சென்னையை விட மோசமான வெயில். குளோபல் வார்மிங்கும் இன்னபிற வானிலை மாற்ற காரண சப்பைக்கட்டுகள் ஒரு புறம் இருந்தாலும் , கோவையை குளிர்வித்த மரங்கள் தற்போது அதிக அளவில் மிஸ்ஸிங்! அதை கோவையை பல ஆண்டுகள் வலம் வந்த யாரும் உடனடியாக ஒப்புக்கொள்வார்கள். கோவைக்காரர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இந்த ஆண்டு வெப்பத்தின் அளவு. இது அவர்களுக்கு மிகமிக புதுசு. சென்னை வாசிகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட மண்டைக்குள் துளைபோடும் வெயில் அது.


கோவையின் முக்கிய சாலையான அவினாசி ரோட்டில் பல கிலோ மீட்டர்கள் நடந்தே கடந்திருக்கிறேன். சென்ற முறை ஊருக்கு சென்ற போது அரை கிலோமீட்டர் கூட பைக்கில் போக முடியவில்லை. வெயில் வாட்டுகிறது. அதற்கு 233 காரணங்கள் உண்டு. கடந்த வருடம் அவினாசி ரோட்டினை அகலமாக்கும் பணிகளில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 233. அத்தனையும் 60 வயதை கடந்தவை. அவினாசி ரோட்டில் எத்தனை தூரம் சென்றாலும் உணராத வெப்பத்தை அரை கிலோமீட்டரில் இப்போதெல்லாம் உணர முடிகிறது.


இதோ வந்துவிட்டது.. யார் பெருமைக்கோ யார் திருப்திக்கோ யாருடைய மகிழ்ச்சிக்கோ கோவைக்கும் அதன் மக்களுக்கும் துளியும் மகிழ்ச்சியளிக்காத தமிழ் செம்மொழி மாநாடு. அதற்காக கோவையில் நடைபெறும் கூத்துகள் ஆயிரமாயிரம். வளர்ச்சிப்பணிகள் என்கிற பெயரில் அவசரகதியில் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் மண்ணுக்கு நாளொரு பில்டிங் பொழுதொரு ஃப்ளோர் என புதைந்து கொண்டிருக்கிறது. இது மாதிரி சில்வண்டித்தனமான வளர்ச்சிப்பணிகளின் அதிமுக்கியமான ஒன்று மரம் வெட்டும் வைபங்கள். இது வரை இந்த மாநாட்டுக்காக வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? அதிகம் யோசிக்க வேண்டாம்.. ஆயிரம்தான். திருச்சி ரோடு ஹைவேஸுடன் இணையும் பகுதி வரையுமான 6.2 கி.மீ தூர சாலையை அகலமாக்க வெட்டப்பட்ட மரங்கள் 220. அவை முழுமையாக வளர்ந்த 50 வயதுக்கும் மேற்பட்ட மரங்கள்.


அடுத்து ஊட்டிக்கு செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மிக மிக அதிக எண்ணிக்கையில் வெட்டப்பட்டுள்ளன. எண்ணிக்கை 636. விமான நிலையத்திற்கு வெளியே 20 மரங்கள். என அடுத்த ஜூனுக்குள் கோவை முழுமையாக மொட்டையடிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டு தங்கத்தில் இரண்டு கடுக்கன்களும் குத்தப்படும் என்றே நம்புகிறோம்.


இது குறித்து கோவை கலெக்டர் பி.உமாநாத் என்ன சொல்கிறார் ‘’சாலை அலைன்மென்ட்டுக்கு ஒத்து வந்தா ஒருபக்கத்துல இருக்கற மரத்தை மட்டும் வெட்டுங்கனு சொல்லிருக்கோம்.. இன்னொரு பக்கத்து மரத்தை விட்டுடவும் சொல்லிருக்கோம்’’ . அவரைப்பற்றியோ அவரது அறிக்கைகப்பற்றியோ அதிகமாக பேசமுடியாது.
அரசு அதிகாரி ஒருவரோ ‘’நாங்க வெட்டும் இடத்திலெல்லாம் புதிய மரங்கள் நட உத்தரவிட்டிருக்கிறோம், சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருக்குங்க நகர்ப்புற வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுறது தப்பில்லைனு’’ என்கிறார். ஆனால் புதிதாக இதுவரை ஒரு மரம் கூடநடப்பட வில்லை என்பதே நிதர்சமான உண்மை. வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் ஒன்றும் அவசர கதியில் வளர்க்கப்படும் வெளிநாட்டு மரங்கள் (பெயர்கள் தெரியவில்லை , ஆனால் வைத்து ஒன்றிரண்டு ஆண்டுகளில் பெரிதாகிவிடக்கூடியவை) எந்த வகையில் ஈடுசெய்யமுடியும் என்பதும் தெரியவில்லை..


மக்கள் தொகைப்பெருக்கத்தையும் , நகரத்தின் வளர்ச்சியாலும்தான் இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நீங்க நினைத்தால் , நிச்சயமாக இல்லை. செம்மொழி மாநாட்டுக்காகத்தான் இந்த மரங்கள் வெட்டப்படுகின்றன. அதைதான் அரசும் அரசு நிறுவனங்களும் சொல்கின்றன. செம்மொழியாம் தமிழுக்காக மட்டுமே!


ஊருக்கு சென்றிருந்த போது நண்பன் வீட்டருகிலிருக்கும் பெரிய வளர்ந்த ஆலமரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள். அதில் எப்போதோ நண்பர்களோடு விளையாடியதெல்லாம் நினைவு வந்தது. ஒரு சில இளைஞர்கள் அந்த மரத்தை வெட்டுவதை எதிர்த்து மரத்தின் மீதேறி நின்று (அவ்வளவு பெரிய மரம்! ) தர்ணா போராட்டம் செய்து கொண்டிருந்தனர். காவல்துறையின் அனுமதியோடு அந்த ஆலமரம் முழுமையாக வெட்டப்பட்டு அகற்றப்பட்டது. பாவம் தனியார் கான்டிராக்டர்கள் அந்த இளைஞர்களோடு எவ்வளவு நேரம்தான் மல்லுக்கட்டுவார்கள்.


இனி கோவை குளிர்ந்திருக்குமாவென்று தெரியவில்லை. இனி கோவையை குளிர்ச்சி நகரம் என மக்களால் அழைக்கப்படுமா தெரியவில்லை. மக்கள் வயிறெரிந்து கிடக்கிறார்கள். செம்மொழி மாநாடு சில நாட்களில் முடிந்து விடும். அந்த சில நாள் கூத்துகளுக்காக மழிக்கப்பட்ட கோவை பல வருடங்கள் வெயிலில் வாடும்.

22 கருத்துக்கள்:

Uma April 23, 2010 2:35 PM  

//அந்த சில நாள் கூத்துகளுக்காக மழிக்கப்பட்ட கோவை பல வருடங்கள் வெயிலில் வாடும்.//:(

செந்தழல் ரவி April 23, 2010 2:48 PM  

மங்கை அக்கா அடிக்கடி பெருமைப்படுவார். கோவை போல வராது என்று...

கோவையில் செட்டில் ஆகலாம்னு இருந்தேன். என் ஆசையில மண்ணை போட்டுட்டியேப்பா!!!

☼ வெயிலான் April 23, 2010 2:52 PM  

திருப்பூரிலும்...... :(

அகல்விளக்கு April 23, 2010 3:45 PM  

கலங்கச்செய்யும் நிகழ்வு...

:(

எல்லாத்தையும் வெட்டி மொட்டையடிச்சுட்டு தமிழாம்... செம்மொழியாம்...

போங்கடாங்... #@#$%^&^%$#!@##$*^%@

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ April 23, 2010 4:04 PM  

மிகவும் சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

~~Romeo~~ April 23, 2010 4:26 PM  

கேட்பதற்கே கஷ்டமா இருக்கு .. 4 வருஷம் ஆச்சு அங்க இருந்து காலி பண்ணி..

VISA April 23, 2010 5:02 PM  

எப்படியா இந்த மாதிரி எழுதுற. நல்ல நின்னு அடிக்கிற மாதிரியான ஸ்டைல். பதட்டப்படாம எழுதுறது!!!

பத்திரிகையாளர் ஸ்டைல்.

குட் ஆர்ட்டிக்கல்.
மரங்கள வெட்டுறத பத்தி என்ன சொல்ல. மனுஷங்கள வெட்டாம இருந்த சரி.

வழிப்போக்கன்,  April 23, 2010 7:12 PM  

--------
"கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் "
--------

உண்மை..இருக்கும்போது எதன் அருமையும் நம் மரமண்டைக்கு தெரியாது...வழிப்போக்கன்

பட்டாபட்டி.. April 24, 2010 10:04 AM  

விடுங்க சார்.. வெட்டட்டும்..
அடுட்த்த எலெக்‌ஷன்ல, கூட காசு கொடுத்தா, பிரச்சனை முடிந்தது..
ம்..

:-(

ராம்மோகன் April 24, 2010 11:07 AM  

சிறந்த பதிவு...இன்றைய நிலைமையை சொல்லி உள்ளீர்கள்....
நன்று...என்ன செய்தாக வேண்டும் என்றும் ஒரு பதிவோ..புதிய தலைமுறையில் ஒரு கட்டுரையோ எழுதி விழிப்புணச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் அடித்தளமாய் இருந்தால் நல்லது...ஏனெனில் இப்போதெல்லாம் பேனாவின் முனைகளை விட இணையத்தின் முனைகள் கூர்மையானவை...
இது தொடர்பான எனது இடுகைகள்:
கோவையில் 10 வருடங்களுக்கு முன் 125 முதல் 150 அடியில் தண்ணீர் கிடைத்தது.ஆனால் தற்போது 1400 அடி வரை செல்ல வேண்டி இருக்கிறது. 1400 அடியிலிருந்து தண்ணீரை மரம் உறிஞ்சுமா என்று வினாவை முன் வைக்கிறார் ஜக்கி வாசுதேவ்....http://rammohan1985.wordpress.com/2009/08/15/project-green-hands/

Mr. Tree Natesan is senior member of Nizhal and Exnora organization. (For the past 40 years, he has been promoting planting of trees. He has planted more than one lakh trees) provided some useful tips to Saaral Social Service Society’s Go Green Project.....http://rammohan1985.wordpress.com/2009/03/12/tree-planting-tips/

கிரி April 24, 2010 11:37 AM  

அதிஷா ரொம்ப வருத்தமா இருக்கு! கோவையில் உள்ள நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் புலம்பும் ஒரு விசயமாக இது மாறி விட்டது.

மரத்தை வெட்டுவதில் காட்டும் வேகத்தை அதை நடுவதிலும் வளர்ப்பதிலும் காட்டாமல் இருப்பது தான் கடுப்பை கிளப்புகிறது. சிறுதுளி அமைப்பு போன்றவர்கள் இதில் ஓரளவு முயற்சி எடுத்தால் தான் கொஞ்சமாவது தீர்வு கிடைக்கும். தமிழை வளர்க்கிறேன்!! என்று மரங்களை அழித்துக்கொண்டுள்ளார்கள் :-(

கோவையின் அழகையே கெடுத்து விட்டார்கள் பாவிகள்!

SurveySan April 24, 2010 12:12 PM  

:( இவ்வளவு அவசரமா எங்காதான் ஓடிக்கிட்டு இருக்கோமோ. அதான் புரியல்ல. ஓடர வேகத்துல நச்சுனு சொவத்துல முட்டி கோமாக்குதான் போகப் போறோம்.
கொஞ்சம் கூட யோசிக்காம ஒரு மரத்தை வெட்ட் எப்படிதான் மனசு வருதோ. கெரகம் புடிச்சவனுங்க.

யுவகிருஷ்ணா April 24, 2010 12:14 PM  

ஆ ஊன்னா அல்லாத்தையும் மெட்ராசுக்கே தூக்கி கொடுக்குறானுங்கோன்னு புலம்பும் மற்ற ஊர் தோழர்களே!

இப்ப புரியுதா மெட்ராஸ் என்னாவாகியிருக்குனு?

இங்க ஒரு கோயமுத்தூர்காரரு ஆயிரம் மரங்களை வெட்டிட்டாங்கன்னோ ஒப்பாரி வெச்சதுமே ஆளாளுக்கு வந்து துக்கம் விசாரிக்கிறீங்களே?

எங்க ஊரு மெட்ராசுலே நான் பொறந்ததுக்கு அப்புறமே குறைஞ்சது லட்சம் மரங்களை வெட்டிட்டாங்கய்யா. ஒரு காலத்துலே ஆசியாவிலேயே நகருக்குள் இருக்கும் காடுகளில் பெரிய காடு சென்னை காடு என்பார்கள். இன்னைக்கு சென்னையில் சுடுகாடு தான் பெருசா இருக்கு. கிண்டி காட்டுலே மான்களுக்கு குடிக்க தண்ணி கூட இல்லை :-(

நகரமயமாக்கலுக்கும், அது கொடுக்கும் நவீன சொகுசுகளுக்கும் இதுதான் விலை. இனிமேலாவது மெட்ராஸை பார்த்து சூடு போட்டுக்காதீங்க மத்த ஊரு ஆளுங்களே!

கார்க்கி April 24, 2010 1:21 PM  

ம்ம்ம்..

கோவையும் மதிமுக பக்கம் சாய்ஞ்சிடுச்சா?

ஐ மீன் கோவை தலைமீழா மாறிடுச்சுன்னு சொல்ல வந்தேன்

Dr.சிவராமன் April 25, 2010 12:29 PM  

”இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்”-என தமிழுக்கு அர்த்தம் சொல்லி எங்கேயோ படிச்ச ஞாபகம். அது தான் செம்மொழி ”தழைக்க” இரண்டையும் கிடைக்காதபடி மரத்தைவெட்டி தள்ளுறாங்களா?
என்ன கொடுமை சார் இது?

butterfly Surya April 26, 2010 3:17 PM  

அடப்பாவிகளா..

SanjaiGandhi™ April 27, 2010 3:01 PM  

கோவை இப்போது சபிக்கப் பட்ட நகரம்.. நானும் இது பத்தி எழுதலாம்னு இருந்தேன்.. அதனாலென்ன.. நீங்க சொல்லாம மறைச்ச ஏகப்பட்ட மேட்டர்ஸ் இருக்கே.. தினம் தினம் கோவையில் பயணிப்பவருக்கே இருக்கும் சிரமங்கள்.. செம்மொழி மாநாடு ஒழிக...

லக்கி, நீங்க சலிச்சிக்கிற மாதிரி இதெல்லாம் கோவை நகர வளர்ச்சிக்காக செய்யப் பட்டதல்ல.. செம்மொழி மாநாட்டுக்காக செய்யப் படுவது.. தினம் 5 மணி நேரம் மின்வெட்டை சமாளிக்க எதுவும் செய்யாமல் செம்மொழி மாநாட்டுக்காம நகர் முழுதும் கொத்தி பொத்தல் பொத்தலாக விட்டிருக்கிறார்கள்.. போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை முழுதும் பாலங்கள். கோவையில்?

எம்.எம்.அப்துல்லா April 28, 2010 2:57 PM  

//எங்க ஊரு மெட்ராசுலே நான் பொறந்ததுக்கு அப்புறமே குறைஞ்சது லட்சம் மரங்களை வெட்டிட்டாங்கய்யா

//


அண்ணாத்த, நான் சென்னையில வந்து சேர்ந்த இந்த 16 வருஷத்துலயே லட்சம் மரம் காலி. நீயி பொறந்ததுக்கு அப்புறம் கணக்கு பண்ணீணா பல லட்சம் மரம் போயிருக்கும். பனகல் பார்க்கிலேந்து வண்டிய ஜி.என்.செட்டி ரோடுக்கா சாவாரிவுட்டா சன் தியேட்டர் வரைக்கும் ரோடுபூரா கொடை புட்சாமேரி இன்னமா சோக்காகீகும் மரமெல்லாம். இப்போ :(



//லக்கி, நீங்க சலிச்சிக்கிற மாதிரி இதெல்லாம் கோவை நகர வளர்ச்சிக்காக செய்யப் பட்டதல்ல.. செம்மொழி மாநாட்டுக்காக செய்யப் படுவது //

அய்ய...தோடா..கண்டுபுட்ச்டாரு கலிக்ட்டரு.

அங்கயாவது உலக தமிழ்மாநாடுக்கு மரம்தான் காலியாவுது. இங்க நடந்த ஒரு தமிழ்மாநாடுக்கு ஒரு காடே காலியாச்சு. அத்த அல்ச்ச இடத்தைதான் இப்போ அண்ணாநகருன்னு சொல்றாங்கோ. அப்பாலிக்காதான் வள்ர்ச்சி மேட்டரெல்லாம் வந்தது சென்னையில.

எம்.எம்.அப்துல்லா April 28, 2010 3:05 PM  

//கோவையில் செட்டில் ஆகலாம்னு இருந்தேன். என் ஆசையில மண்ணை போட்டுட்டியேப்பா!!!

//


ரவி அண்ணா, ஒரு ஊரு நல்லாருக்குன்னு எல்லா பயபுள்ளைகளும் அங்கயே போக நெனச்சா அந்த ஊரு எந்த கதியாகும்ங்குறதுக்கு பெங்களூரே உதாரணம்.

இளமுருகன் April 28, 2010 4:11 PM  

//படித்தேன், மிக வருத்தமாக இருக்கிறது
அவசியமான பதிவு நண்பரே
வெட்டுவது எளிது வளர்ப்பது மிக மிக கடினம் என்பதை வேட்டுபவர்கள் உணரவேண்டும்//

இளமுருகன்
நைஜீரியா

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP