Pages

27 November 2010

நந்தலாலா - மிஷ்கின் ஐ லவ் யூ


அவனை எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். ஒன்னரை வயதாய் இருந்த போதே அம்ம்ம்மா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டாள் அவனுடைய அம்மா. பதினெட்டு வயது வரை அங்கேதான் வளர்ந்தான். கிட்டத்தட்ட ஒரு அநாதையைப் போல! அவனுடைய அம்மாவின் மேல் எப்போதும் அவனுக்கு தீராத வெறுப்பும் ஆத்திரமும் இருந்தது. அவளை எப்போதும் அவன் அம்மா என்றழைத்ததே இல்லை. எப்போதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாய் அம்மா வசித்த அவளுடைய குடிசைக்கு போவதுண்டு. அம்மா வாரி அணைத்து முத்தமிடுவாள். இவன் கன்னத்தை துடைத்து கொள்வான். எரிச்சலும் கோபமுமாக பேசுவான். எரிந்து விழுவான். அம்மா சில சமயம் அவனை கட்டிப்பிடித்த படி அழுவாள். பிரியாணி வாங்கித்தருவாள். அவனுக்கு அம்மாவை விடவும் பிரியாணி பிடித்திருந்தது. பிரியாணிக்காகவே அக்குடிசைக்கு அடிக்கடி செல்வான். பிரியாணி கிடைக்கும். அம்மா புன்னகைப்பாள். இவன் பிரியாணியை தின்று விட்டு வாசலில் விளையாடுவான். சித்தாள் வேலை செய்யும் அம்மாவின் நாற்றம் அவனுக்கு எப்போதும் பிடித்ததே இல்லை. அம்மாவை வெறுத்தான்.

பல நாள் இரவுகளில் பாட்டியை இறுக அணைத்துக்கொண்டு ஏன் பாட்டி எனக்கு மட்டும் நல்ல அம்மா இல்ல..! ராகுலோட அம்மா எவ்ளோ நல்லவங்க தெரியுமா. என் அம்மா ரொம்ப அழுக்கு அவங்களுக்கு என்ன பிடிக்கல..அதான் நான் பிறந்ததும் என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க.. நாத்தம் என்று தேம்பி தேம்பி அழுவான். பாட்டி தலைவருடி தேற்றுவாள். இது பல காலம் தொடர்ந்தது. பதின்ம வயதில் அவனுக்கு பிரியாணியின் மீதான விருப்பம் குறைய அம்மாவை பார்க்கவுங்கூட போவதில்லை. பாட்டி வீட்டின் வாசலில் வந்து அமர்ந்து கொண்டு.. அழுக்குபிடித்த நகங்களிலிருந்து அழுக்கை பிதுக்கி எடுத்தபடி கண்ணா கண்ணா என்று அழைப்பாள். அவன் அவளை கண்டுங்காணாமால் விலகி செல்லுவான். அவள் பேச முற்படும் முன்னமே என்ன வேணும் அதான் மயிரா போச்சுனு இங்க வந்து விட்டுட்டு போய்ட்டல்ல அப்படியே போய்த் தொலைய வேண்டியதுதானே என்று எரிந்து விழுவான். அம்மா இருமுவாள்.

சில நாட்களில் அம்மா இறந்துவிட்டாள். அவள் ஏதோ மர்ம் நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள். அதனால்தான் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்ததாக அவன் என்னிடம் கூறினான். சாவதற்கு முதல் நாள் கூட பிரியாணியோடு பாட்டி வீட்டிற்கு வந்ததாகவும் , இவன் எப்போதும் போல திட்டியனுப்பியதாகவும் கூறினான். நோயால் பாதிக்கப்பட்டதால்தான் அப்பாவும் ஓடிவிட்டதாக கூறினான். சாகும் வரை அவன் அவளை எப்போதும் அம்மா என்றழைத்ததே இல்லை என்று கூறி முதல் முதலாக அம்மாவிற்காக வருத்தப்பட்டு பேசினான். இத்தனைகாலமும் பாட்டி வீட்டில் அவன் வளரவும் படிக்கவும் பணம் அம்மாதான் சித்தாள் வேலை பார்த்து பணம் கொடுத்தாள் என்று கூறி அவன் கதறி அழுததும் , கடைசிவரைக்கும் அவங்கள நான் எவ்ளோ சித்ரவதை பண்ணிருக்கேன் என்று கூறி பித்துபிடித்தவன் போல உளறியதும் இப்போதும் நினைவிருக்கு.

பூந்தமல்லி சாலையிலிருக்கும் அந்த அநாதை இல்லத்தில் வாரந்தோறும் ஒருநாள் முழுக்க குழந்தைகளுக்காக செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த நாட்கள் அவை. அங்கிருந்த ஆண்பிள்ளைகளுக்கு அம்மாக்கள் மீது அளவுகடந்த கோபமிருந்தது. சில பையன்கள் என் காதோரம் வந்து கெட்டவார்த்தையில் திட்டியதை கேட்டிருக்கிறேன். தாய்மை மறுக்கப்பட்ட குழந்தைகள் ஏனோ வன்முறை மிக்கவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் மிகச்சில குழந்தைகள் நம்பிக்கையோடிருந்தன. மாமா என்னைக்காவது அம்மா நிச்சயம் வருவாங்க என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கும் குழந்தைகளும் உண்டு. அவர்களுக்கு யாருடைய அன்பும் தேவையில்லை. அம்மா போதும். அம்மாவின் நினைவுகளோடே வாழ்கிற அக்குழந்தைகளின் உலகம் வலியும் வேதனையும் நிரம்பியது.

மிஷ்கினின் நந்தலாலாவும் அப்படித் தாய்மையை தேடியலைகிற இரண்டு குழந்தைகளின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. ஒருவன் தாய்மையின் மீதான நம்பிக்கையோடும் மற்றொருவன் அவநம்பிக்கையோடும் புறப்பட படம் தொடங்குகிறது. மூட்டை நிறைய அன்பை சுமந்தபடி செல்லும் அக்குழந்தைகள் செல்லும் வழியெங்கும் அன்பை சிந்தியபடி செல்ல வழியில் தென்படும் வழிப்போக்கர்களின் வாழ்க்கையையே அவ்வன்பு வழிமாற்றிவிடுகிறது. ஒவ்வொரு நொடியும் வாழு எனக் கற்றுத்தருகிற ஜென்குருக்களை போல பலரும் ஏதோ ஒன்றை அக்குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுகின்றனர். நம்பிக்கையோடு தாயை தேடுகிறவனுக்கு அவநம்பிக்கையும், அவநம்பிக்கையோடும் வெறுப்போடும் தாயை அடைகிறவனுக்கு நம்பிக்கை ஒளியும் பளிச்சிட படம் முடிகிறது. அன்பு மட்டுமே அநாதையாக அவர்களிடமே தஞ்சமடைகிறது.

படத்தின் நாயகன் இளையராஜா. அவர் இசையமைத்த படங்களின் உச்சம் இது என்று நிச்சயம் கருதலாம். இளையராஜா இல்லாமல் இப்படத்தை ரசிக்க முடியுமா தெரியவில்லை. அம்மா என்றால் இளையராஜாவுக்கு கசக்குமா என்ன.. வெறியாட்டம் ஆடியிருக்கிறார் ராஜா. முழுக்க முழுக்க இளையராஜாவை நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார் மிஷ்கின். ஒவ்வொரு முறையும் பிண்ணனியில் ராஜாவின் குரலோ இசையோ வரும்போதெல்லாம் கண்களில் நீர்கசிவதை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாது. கதறி அழவைக்கிற உங்களை உருக்கி வார்க்கிற இசை.

படத்தின் இரண்டு குழந்தைகளாக வருகிற மிஷ்கினும் அஸ்வத்தும் இயல்பான நடிப்பில் கரையவைக்கின்றனர். மிஷ்கின் நடிகராகவும் சென்டம் வாங்குகிறார். மனநோயாளியாக தொடங்கும் அவருடைய பாத்திரம் மிகமிக பொறுமையாக காட்சிகளினால் சகஜநிலைக்கு திரும்புவதாக காட்டியிருப்பது தமிழுக்கு புதுசு. படத்தின் கேமிரா நேர்த்தியும் எங்குமே சிதறாத எடிட்டிங்கும் கொஞ்சமே கொஞ்சம் வசனங்களும் நிறைய காட்சிகளுமாக நகரும் திரைக்கதையும் தமிழுக்கு மிகமிக புதிது. எப்போதாவது வருகிற ஒன்றிரண்டு வசனங்கள் எல்லாமே மனதில் பதியக்கூடியவை. படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியானால் நிச்சயம் ஒன்று வாங்க வேண்டும்.

படத்தில் பெரிய நடிகர் பட்டாளங்கள் கிடையாது. அனைவருமே புதிய முகங்கள். அன்பும் வெறுப்பும் கோபமுமாக நம்மிடையே திரிகிற முகங்கள். படத்தின் பிண்ணனி நாம் பார்த்த கடந்து போகிற இடங்கள். சில விநாடிகளே வருகிற நாசரும்.. வசனமே பேசாமல் வருகிற ரோகிணியும் , தவறை உணர்ந்து உடைந்து போகிற அந்த லாரி டிரைவர் என இன்னும் இன்னும் எத்தனை பாத்திரங்கள். ஒரு முழுமையா நாவலை வாசித்த திருப்தி கிடைக்காமலில்லை. பல காட்சிகளில் குறியீடுகளால் நிறைய சொல்ல முற்பட்டிருப்பதாக சொன்னாலும் உருக வைக்கிற திரைக்கதையில் எதையுமே கவனிக்க முடியவில்லை. சில காட்சிகளில் கண்களில் கண்ணீர் கசிவதையும்... ஒவ்வொரு காட்யிலும் யாருமற்ற ஒரு இடம் காட்டப்பட்டு அங்கே கதாபாத்திரங்கள் வந்து எதையாவது செய்வதும் காட்சி முடிந்ததும் அவ்விடம் வெற்றிடமாக மறைவதும்.. அழகு. சினிமா ஒரு காட்சி ஊடகம்.. ஏனோ தமிழ்சினிமா வசனங்களினால் நிரம்பியது. ஆனால் நந்தலாலாவின் வசனங்களை இரண்டு ஏ4 பேப்பர்களில் எழுதிவிடலாம். எல்லாமே காட்சிகள்.. வெறும் காட்சிகள்.

படம் முடிந்த பின் என் அம்மாவோடு இன்னொரு முறை பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். என் அம்மாவுக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும். (அம்மா அழுவாரோ என்கிற பயமும் இருக்கிறது)

படம் பார்க்கும் போது ஏனோ பலமுறை கதறி அழுதுகொண்டிருந்தேன். இத்தனைக்கும் அண்மையில் பார்த்த அங்காடித்தெரு போல இதில் வலிந்து திணிக்கப்பட்ட சோக காட்சிகள் ஏதுமில்லை. படத்தில் கிளைமாக்ஸ் தவிர்த்து மற்ற காட்சிகளில் யாருமே அழுவதில்லை. இயல்பான காட்சிகள்தான். சாதாரண வசனங்கள்தான்.. ஏனோ என்னையும் மீறி ஏதோ ஒன்று அழவைத்துவிடுகிறது. நான் மட்டும்தான் அழுகிறேனோ என்று நினைத்தேன். படம் பார்க்க வந்திருந்த பலரது கண்களும் சிவந்திருந்ததை காண முடிந்தது. மிஷ்கின் கிட்டத்தட்ட படம் பார்த்தவர்கள் அனைவரையுமே தோற்கடித்துவிடுகிறார்.

அவனை இப்போதும் நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. என்னை பார்க்கும் போதெல்லாம் பேச்சு எங்கெங்கோ சுற்றி அவன் அம்மாவிடமே வந்து நிற்கும். அவனுடைய அம்மா ஏன் அவனை பாட்டி வீட்டில் விட்டாள் என்று தொடங்கி அவளுடைய ஒவ்வொரு நொடி வேதனையையும் இப்போது உணர்வதாக சொல்லுவான். இதுவரை பலமுறை இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மீண்டும் மீண்டும் அது தொடர்கிறது. இனியும் சொல்லுவான். உயிரோடிருந்த போது ஒரு முறை கூட அம்மா என்றழைக்காதவன் இப்போதெல்லாம் மூச்சுக்கு மூன்னூறு முறை அம்மா என்றுதான் அழைக்கிறான்.

மந்திரப்புன்னகை



சில படங்களை பிட்டு பிட்டாக பார்த்தால் அட! போட தூண்டும். “ச்சே என்ன மாதிரி சீன்ப்பா என்னமா யோசிச்சிருக்கான்பா!” என்று சொல்ல வைக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக படத்தை பார்க்கும் போது ரீலருந்த பாணா காத்தாடி போல எதை நோக்கியும் நோக்காமலும் கண்டமேனிக்கு படம் காற்றில் பறக்கும். அந்த வகை படங்களில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களின் படங்கள் பல உண்டு. அதில் இன்னொன்று கரு.பழனியப்பன் நடித்து இயக்கி வெளிவந்திருக்கும் மந்திர புன்னகை.

ஏற்கனவே நாம் பார்த்துக் கடாசிய ஆளவந்தான்,குடைக்குள்மழை,குணா,காதலில் விழுந்தேன் வகையறா சைக்கோ பாணி கதைக்களம். எப்போதும் உர்ர்ரென உர்ராங்குட்டான் போல முகத்தை வைத்துக்கொண்டு திரிகிற ஹீரோ, கலகல ஹீரோயின், கொஞ்சம் காமெடி நிறைய தத்துவம் என ஒரு கதை தயார் செய்து அதில் பல நாள் தாடியோடு தானே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கரு.பழனியப்பன்.

முதலில் ஒன்றை சொல்லிவிடவேண்டும். கரு.பழனியப்பன் மிகச்சிறந்த இயக்குனர். அவருடைய பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தினை அண்மையில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த போது அட இவ்ளோ நல்ல படத்தை எப்படி மிஸ் பண்ணினோம் என நினைக்க வைத்தவர். அவருடைய முந்தைய படமான பார்த்திபன் கனவும் இதே மாதிரியான அடடே போடவைத்த படம்தான். குடும்ப உறவுகளின் நுணுக்கமான சிக்கல்களையும் உளவியல் பிரச்சனைகளையும் மிக மென்மையாகவும் யதார்த்தமாகவும் சுவையாகவும் பந்திபோட்டு பரிமாறுவதில் கில்லாடி. ஏனோ இப்படத்தில் உலகபட காய்ச்சலோ என்னவோ சுத்தமாக கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல் உணர்வுபூர்வமான ஒரு சைக்கோவின் கதையை சொல்ல முனைந்திருக்கிறார்.

ஹீரோவின் பாத்திரத்தை விஸ்தரிப்பதிலேயே படத்தின் முதல்பாதி முழுக்க கடந்துவிடுகிறது. அதை டிங்கரிங் செய்ய சந்தானாத்தின் காமெடி அஸ்திரத்தை பயன்படுத்தினாலும் அது முழுமையாக எடுபடவில்லை. சந்தானம் படம் முழுக்க காமெடி என்கிற பெயரில் ஆபாச ஜோக்குகளை அள்ளி குவிக்கிறார். குறிப்பிட்ட ஆடியன்ஸிடமிருந்து கைத்தட்டுகளும் விசில் சத்தமும் பறந்தாலும் ஒட்டுமொத்தமாக அருவருப்பை உணரமுடியாமலில்லை. உலகப்படங்களில் நாம் காணும் டீடெயிலிங் காட்சிப்பூர்வமானவது. அவை காட்சிகளால் நிரம்பி வழியும். கரு.பழனியப்பனும் காட்சிகளால் நிறைய சொல்ல முனைகிறார். ஏனோ படம் முழுக்க ரொம்பி வழியும் வசனங்கள் அதை முழுவதுமாக முழுங்கி விடுகின்றன.

படத்தின் தொடக்கமே விலைமாதோடு விழித்தெழும் நாயகனோடு துவங்குகிறது. சாம்பலான சிகரெட் துண்டுகளும் பாதி குடித்த மதுகோப்பையும் அருகில் எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகமுமாக காட்சி துவங்க அடடா! கவிதை மாதிரி எடுத்துருகான்டா காட்சியனு நிமிர்ந்து உட்கார்ந்தால் நாயகன் பேச ஆரம்பிக்கிறார். பேசுகிறார். பேசுகிறார். படத்தின் கடைசி வரை நாயகன் பேசிக்கொண்டேயிருக்கிறார். சரிப்பா அவர்தான் மனநோயாளி நிறைய பேசுகிறார் தப்பில்லே! என்று நினைத்தால் படத்தின் நாயகி மீனாட்சி பேசுகிறார். சந்தானம் பேசுகிறார். தம்பி ராமையா.. பேசுகிறார்.. படத்தில் யாராவது ஒருவர் எதற்காவது வியாக்கியானம் பேச இன்னொருவர் அதற்கு கவ்ன்டர் கொடுப்பது தொடர்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் நாயகி காதலுக்கு கொடுக்கும் விளக்கம் விக்ரமன் ஏற்கனவே பல திரைப்படங்களின் கிளைமாக்ஸில் பேசி சலித்தவை. (காதல்ன்றது காம்ப்ளான் கிடையாது அப்படியே சாப்பிட.. ப்ளா ப்ளா டைப் வசனங்கள்)

படத்தின் ஒரே பிளஸ்.. ஆங்காங்கே தென்படும் சின்ன சின்ன சிறுகதைகள். மனைவி இப்போ எந்த வீட்டில் இருக்கிறாள் என்று தேடும் குடிகாரனின் கதை.. நாயகனின் ஃபிளாஷ்பேக்கில் வரும் அம்மாவின் தாலி... என ஆங்காங்கே கரு.பழனியப்பனின் உணர்வூப்பூர்வமான நல்ல முகம் பளிச்சிடுகிறது. அதிலும் அந்த ஃபிளாஷ் பேக் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதமும் அந்த கதையும் குறும்பட இயக்குனர்களுக்கு அரிச்சுவடி. வெறும் காட்சிகளால் மட்டுமே அது நகர்வது இன்னும் கூட அழகு.

படத்தின் நாயகி மீனாட்சிக்கு நல்ல தொப்புள், பெரிய மார்புகள் அருமையான இடை!. கிளைமாக்ஸில் நிறைய வசனம் பேசுகிறார். வாயாலேயே பீர்பாட்டில் திறப்பது புரட்சி! அவரை விடவும் விலைமாதாக வருகிற அந்த புதுமுக நாயகியின் நடிப்பு அதி அற்புதம். சில காட்சிகளே வந்தாலும் அசத்துகிறார். கருபழனியப்பன் இயக்குவதை மட்டுமே முழுமூச்சாக செய்யலாம். படம் முழுக்கவே அவருடைய முகத்தில் மட்டும் சுத்தமாக உணர்ச்சியே இல்லாமல் நடைபிணமாக நடித்திருக்கிறார். தமிழ்சினிமா உலகில் ஒரே ஒரு வாய்ப்புக்கிடைக்காத என்று ஏங்குகிற எண்ணிலடங்கா திறமைசாலி நடிகர்கள் இருக்க ஏனோ இவருக்கும் நடிப்பு ஆசை. இனியும் நடித்தால் தமிழ்சினிமா நிறைய இலக்கியம் படிக்கிற உலகசினிமா அறிவுள்ள திறமைசாலி இயக்குனரை இழந்துவிடுகிற அபாயமுண்டு.
மற்றபடி படத்தின் பாடல்களும், பாடல்காட்சிகளுக்கான யுக்திகளும், சமூகத்தின் மீது கோபத்துடன் சொல்லப்படுகிற கூர்மையான வசன விமர்சனங்களும் படத்தின் பிளஸ். மற்ற அனைத்துமே படத்தின் மைனஸ்தான்.

இயக்குனருக்கு இலக்கிய படமெடுக்க ஆசையிருந்திருக்கலாம். மிஷ்கின்,சேரன்,வசந்தபாலன் முதலான இயக்குனர்களுக்கு வந்திருக்கிற இலக்கிய காய்ச்சல் இவரையும் தொற்றியிருக்கக் கூடும். அதன் பாதிப்பு கரு.பழனியப்பனின் சுயத்தினை பாதித்துதிருக்கலாம். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

23 November 2010

நகரம் - விமர்சனம்




கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்! இந்த பழமொழிய கண்டுபிடிச்சவன் மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணுவார். ஒன்னா ரெண்டா? எத்தினி படம்.. எண்ணவே முடியாத அளவுக்கு எச்சகச்ச படங்கள் வெளியாகியுள்ளன. அதில் இன்னொன்று நகரம்-மறுபக்கம். சுந்தர் சி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனாரவதாரம் எடுத்துள்ளார். அவருடைய நடிகராவதாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேலைக்கு ஆகவில்லை என்பது எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட தெரியும். சி சென்டர் நாயகனாகவே வலம் வந்தவர் தன்னுடைய மார்க்கெட்டை பரவலாக்க மற்றும் தக்கவைக்க நகரத்துடன் வந்துள்ளார். ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே கிட்டத்தட்ட கருதலாம்.

வாழணும்ங்கற ஆசைதான் நம்மை உயிரோட வச்சிருக்கு! சுமால் பாக்டீரியால தொடங்கி மிகப்பெரிய டைனோசர் வரைக்கும் எல்லா உயிரினத்துக்கும் தன்னோட வாரிசுதான் லட்சியம். அதே மாதிரி ஒரு லட்சியத்தோட நம்ம ஹீரோ. எந்த நேரத்துலயும் யாராவது கொன்னுருவாங்களோன்ற பயத்தோட வாழற ஒரு ரவுடி , குடும்பம் குட்டினு செட்டில் ஆக ஆசைப்படறான்! இதுதான் படத்தோட ஒன்லைன். இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு நட்பு,காதல்,துரோகம்லாம் கொஞ்சம் சேர்த்து புதுமாதிரி முடிச்சுகளால் திரைக்கதை தோரணம் கட்டியிருக்கிறார் சுந்தர்.சி. இனிப்புக்கு வடிவேலு, காரத்துக்கு போஸ்வெங்கட் போதைக்கு அனுயா என கலக்கலான காக்டெயில் மசாலாவாக வந்திருக்கிறது நகரம். படம் முழுக்க தலைநகரம் படத்தின் சாயல் தெரிந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். சூப்பர் மசாலாவுக்கு தேவையான எல்லாமே இருந்தும் படம் பார்க்கும் போது சலிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் முதல் பாதி முழுக்க வடிவேலுவே ஆக்கிரமித்திருக்கிறார். சில காமெடிகள் சிரிக்க வைத்தாலும், அவர் தினுசு தினுசாக அடிவாங்குவது பல இடங்களில் எரிச்சலூட்டுகிறாது. சுந்தர்சி காம்பினேஷனில் கிரி,வின்னர்,தலைநகரம் படங்களின் அளவுக்கு காமெடி எடுபடவில்லை என்று உறுதியாக சொல்லலாம். சமயங்களில் போர் அடிப்பதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் இடைவேளை வரைக்கும் வடிவேலுவை வைத்தே கதையை நகர்த்தியுள்ளனர். ஆனால் இடைவேளைக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் படம் வேகம் பிடிக்கிறது.. மெதுமெதுவாக முதல் கியர் இரண்டாம் கியர் என மாற்றி மாற்றி.. இடைவேளையின் போது படம் டாப்கியரில் பறக்கிறது. இரண்டாவது பாதி கொஞ்சமே நீளம்தான் என்றாலும் படத்தின் வேகத்திற்கு கச்சிதமாகவே இருக்கிறது.

படத்தின் நாயகன் சுந்தர்சிதான் என்றாலும்.. அவரைவிடவும் அவருடைய நண்பராக வரும் ‘மெட்டிஒலி’ போஸ் வெங்கட் அருமையாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் மொத்தமாக ஸ்கோர் செய்வது அவருடைய நடிப்புதான். கதையின் பிரதான பாத்திரமாக போனதால் முகபாவனைகளிலும் உடல்மொழியிலும் நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் பெரிய நடிகராகும் வாய்ப்புண்டு. ‘அனுயா’ = அழகு, புடவையில் பளிச் என இருக்கிறார். அதற்கு மேலும் சொல்லணுமா.. வெள்ளித்திரையில் பெரிசாக காண்க!

அந்தகாலத்து புதியவார்ப்புகள் வில்லன் (ஸ்ரீனிவாசன்?) வில்லனாக நடித்திருக்கிறார். படம் முழுக்க செம்பட்டையான நீளமுடி ஸ்டன்ட் நடிகர்கள் கண்ணை உருட்டிகிட்டு அலைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அதிக சண்டைகள் இல்லை. ஆனால் படம் முழுக்க பத்து நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவர் சர்வசாதரணமாக செத்துப்போய்க்கொண்டே இருக்கின்றனர். காமெடி காட்சியிலும் கூட இந்த சாவுகள் தொடர்கின்றன.

படத்தின் இசை தமன். பிண்ணனியில் பின்னியிருந்தாலும்.. பாடல்கள் ஒன்றும் ரசிக்கும்படியில்லை. சுந்தர்சி எதையாவது நினைத்து பார்க்கும் போதெல்லாம் படத்தின் நிறம் அழுக்குப்பச்சைக்கு மாறுவதும் மீண்டும் சகஜநிலைக்கு திரும்புவதுமாக ஏதோ ஆங்கிலப்படத்தில் பார்த்த நினைவு.. அதை இதிலும் பயன்படுத்தியுள்ளனர். மற்றபடி தலைநகரம் படத்தின் சாயல் இல்லாமல், இன்னும் கொஞ்சம் சுருக்கி கிரிஸ்பாக கொடுத்திருந்தால் ரசிக்க முடிந்திருக்கலாம். ஏனோ படத்தின் நீ....ளம்.. கொட்டாவி விடவைக்கிறது.

09 November 2010

கொலைகளை கொண்டாடுவோம்

தீபாவளிக்காக கோவை சென்றிருந்தேன். கோவை முழுக்கவே எங்கு திரும்பினாலும் இரண்டு குழந்தைகளின் படம் போட்ட பிளக்ஸ் பேனர்களும் போஸ்டர்களும் தென்பட்டன. கண்ணீர் அஞ்சலி.. பிஞ்சுகளே.. கண்ணீர் சிந்துகிறோம், உங்களுக்காக வாடும்... என்பது மாதிரியான அஞ்சலி வாசகங்களும் காணக்கிடைத்தன. இந்துமக்கள் கட்சி தொடங்கி ஆட்டோ ஒட்டுனர் சங்கம், கவுண்டர் சங்கம்,நாம்தமிழர் என அனைவருமே போட்டிப்போட்டுக்கொண்டு போஸ்டர் ஓட்டியிருந்தனர். அய்ய்யோ நாம போஸ்டர் ஒட்டாட்டி நல்லாருக்காதோ என்று நினைத்து அவசர கதியில் சில போஸ்டர்களையும் காண முடிந்தது.

அண்மையில் ஒரு கால்டாக்ஸி டிரைவரால் கடத்தி கொடூரமாக கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் குறித்த செய்தி நாம் அறிந்ததே. கோவை முழுக்கவே இந்த இரட்டைக்கொலை பலரையும் உலுக்கி எடுத்துருக்கிறது. சென்னையில் இது மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நிகழுவதால் இங்குள்ளவர்களுக்கு அது பெரிய பாதிப்பை உருவாக்குவதில்லை. சென்னை மக்களின் இருதயம் இரும்பால் செய்யப்பட்டது. ஆனால் கோவை மாதிரியான மிடில்கிளாஸ் மக்களின் அமைதி நகரத்தில் இந்தக்கொலை பெரிய தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பது சிலரிடம் பேசியபோதே உணர முடிந்தது.உண்மையில் தமிழகத்தில் இதுமாதிரியான கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறதென்பதை ஜுவி,நக்கீரன் படிப்பவர்கள் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்தக்கொலைக்கு அதீத விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது வியப்பளித்தது.

காண்பவரெல்லாம் நலம் விசாரிப்பதைப்போல் அந்த குழந்தைகள் மேட்டர் தெரியுமா? பாவம்! உச்! ச்சே இப்படி பண்ணிட்டாங்களே பாவிப்பசங்க! அவனுங்களையெல்லாம் நிக்க வச்சு சுடனும்.. நடுரோட்டுல கல்லால அடிச்சு கொல்லணும்.. இவனுங்களையெல்லாம் இன்னுமா உயிரோட விட்டுவச்சிருக்காங்க.. ! மிகச்சாதரணமாக பேருந்துகளிலும் சாலையிலும் காதில் வந்துவிழுகிற வார்த்தைகள் உக்கிரமாய் இருந்தன. இதற்கு முன் கோவை குண்டுவெடிப்பு சமயத்தில் இப்படிப்பட்ட பதற்றத்தை கண்டிருக்கிறேன். எங்கு பார்த்தாலும் துலுக்கனுங்கள தூக்குல போடணும்.. அவனுங்கள வீடு பூந்து வெட்டணும்.. குத்தணும் என வெறிகொண்டு வன்முறையாய் அலைந்தவர்களை கண்டிருக்கிறேன்.

கொலையாளிகள் இருவரும் பிடிபட்டதாக போலீஸ் அறிவித்திருந்தது. விசாரணைக்கு அழைத்து செல்கையில் தப்பியோட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார் கொலையாளிகளில் ஒருவர். கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் அருகிலிருந்த காவலரின் துப்பாக்கியை எடுத்து இருவரை சுட்டும் இருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. இன்னும் அவர்மீதான குற்றங்கூட நிரூபிக்கப்படவில்லை.

நீதி கிடைத்துவிட்டதாக கோவை நண்பர் ஒருவர் காலையிலேயே போனில் அழைத்து மகிழ்ச்சியோடு பேசினார். இன்னும் சிலரிடம் பேசியபோதும் மகிழ்ச்சியாய் உணர்வதாகவும் , இப்போதுதான் திருப்தி என்றும் கூறினர். அந்தக்குழந்தைகளின் ஆன்மா இப்போதுதான் சாந்தியடைந்திருக்கும்.. அக்குழந்தைகளின் பெற்றொருக்கு இப்போதுதான் நிம்மதியாய் இருக்கும்.. என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார் நண்பர். ஆஹா கொலையாளி அழிந்தான்.. திருப்திதான். ஆனால் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகுமா? ஒரு தவறுக்கு தண்டனையாக இன்னொரு தவறு சரியாகுமா? என அடுக்கடுக்காக கேள்விகள். கொலை திருப்தி தருமா?

நிச்சயமாக காவல்துறையின் இந்த என்கவுன்ட்டர் 'கொலை' தமிழகத்தில் பெரும்பாலோனோருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. தினமலரின் இணையதளத்தில் வெளியாகியுள்ள இச்செய்திக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை படித்தாலே இது புரியும். ஒரு சோறு பதம். 500க்கும் மேல் பின்னூட்டங்கள். மக்களுக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி. கோவையில் பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பத்திரிகை ஒன்றோ மனிதமிருகம் சுட்டுக்கொலை என செய்தி வெளியிடுகிறது.

 குற்றம் நிரூபிக்கப்படாமலேயே ஒருவனை போலீஸ் என்கவுன்ட்டர் என்ற பெயரில் கொலை செய்திருக்கிறது. அவன் மனிதமிருகமாம்! பத்திரிகை செய்தி ஒன்று சான்று கொடுக்கிறது. அவன் அந்தக்குழந்தைகளை கொல்லாதவனாக இருந்தால்? யாரோ ஒரு அப்பாவியாக இருந்தால்?

குழந்தைகளை கொன்றது மிகப்பெரிய தவறுதான். மாபாதகம்தான். மோகன்ராஜ் செய்திருப்பது படுபாதகசெயல்தான். அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டணை கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்தவர் யார் என்பதை கண்டறியவும், கண்டறிந்து தீர்ப்பு வழங்கவும் நீதிமன்றம் இருக்கையில் , எந்த விசாரணையுமின்றி இப்படி சுட்டுக்கொல்வது காட்டுமிராண்டித்தனமின்றி வேறேது. தமிழ்சினிமாவின் கிளைமாக்ஸ் பழிவாங்கல்களை ரசித்து கைதட்டி கொண்டாடும் அதே மனநிலையோடு வாழும் நமக்கு இது மகிழ்ச்சியை அளிக்கலாம். இதனை கைதட்டி வரவேற்கலாம். ஆனால் நாளைக்கே நீங்களும் நானுங்கூட தனிப்பட்ட விவகாரங்களுக்காக விசாரணையின்றி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்படலாம். என்கவுன்ட்டருக்கு மக்கள் ஆதரவளிப்பது எவ்வளவு ஆபத்தை அவர்களுக்கே விளைவிக்கும் என்பதை இங்கே யாரும் உணர்வதில்லை.

சமூக குற்றங்களுக்கு மரணதண்டனைகள் எப்போதும் தீர்வாகாது. அதற்கான வேரை கண்டறிந்து அதை களைவதே சிறந்தது. உண்மையில் மோகன்ராஜிற்கு தேவை நல்ல மனநல மருத்துவர். அவனை இந்த குற்றத்திற்கு தூண்டியது எது என்பதை கண்டறிந்து இன்னொரு முறை இப்படி ஒரு வக்கிரம் நடக்காமலிருக்க வேரிலேயே பிரச்சனைகளை தீர்க்க முனையவேண்டும். ஆனால் மக்களுடைய மனதில் ஒரு இன்ஸ்டன்ட் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் எதை மறைக்க முயல்கிறது தமிழக அரசு. இங்கே ஒவ்வொரு நாளும் இதுமாதிரியான ஆட்கடத்தல்களும் கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் மாட்டிக்கொண்ட ஒருவனை கொன்றாகிவிட்டது. மற்றவர்கள்?

மோகன்ராஜ் அந்தக்குழந்தைகளை கடத்தி கொன்றது அக்கிரமம், வன்முறை என்றால்,  அவனை உயிரோடு பிடித்து என்கவுன்ட்டரில் கொன்றது மட்டும் என்ன சூரசம்ஹாரமா? இப்படி குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து விசாரிக்காமல் கொல்வதென்றால் நீதிமன்றம் எதற்கு? வக்கீல்களுக்கு ஷேவிங் செய்துவிடுவதற்கா?

சமூக குற்றங்கள் அனைத்திற்குமே என்கவுன்ட்டர்கள்தான் தீர்வென்றால் இங்கே யாருமே உயிரோடிருக்க முடியாது. மாட்டிக்கொண்ட ஒரு மோகன்ராஜினை என்கவுன்ட்டரில் தீர்த்துக்கட்டியாகிவிட்டது. இன்னும் விஐபிகளாகவும் மந்திரிகளாகவும் ஏன் காவல்துறையிலேயே பணியாற்றுகிற மோகன்ராஜினைவிடவும் மோசமான குற்றவாளிகளை சுதந்திரமாகத்தானே உலவ விட்டிருக்கிறோம். அவர்களை என்ன செய்துவிட்டோம்.

உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி ஊழல் செய்தது என்று தெரிந்தும் அடுத்தடுத்த தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கே ஓட்டுப்போடுகிற மக்களின் கைகளை வெட்டி விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

இங்கே சமூக குற்றங்களுக்கான காரணிகள் ஆராயப்படவேண்டும். பணமும் பலமும் இருப்பவன் இங்கே எக்குற்றம் செய்தாலும் தப்பித்துவிட முடியும் என்கிற நிலையை மக்கள்தான் மாற்ற முனையவேண்டும். ஆனால் இங்கே இப்படி ஒரு இன்ஸ்டன்ட் கொலையை ஆதரித்து கொண்டாடும் மனநிலையில் அல்லவா நாம் இருக்கிறோம்! எங்கே போகிறோம் நாம்?