Pages

26 March 2011

சட்டப்படி குற்றம்



முன்னதாகவே சொல்லிவிடுகிறேன் இத்திரைப்படத்தை இளைஞர்கள் பார்த்தால் அவர்களுக்கு புரட்சிவெறி மேலோங்கி வெறிபிடித்து ரோடெங்கும் சட்டையை கிழித்துக்கொண்டு அலைய நேரிடுகிற அபாயமுண்டு. அந்த அளவுக்கு படம் முழுக்க புரட்சி புரட்சி புரட்சிதான். சாதா புரட்சியல்ல.. மசாலா போட்ட காரமான புரட்சி! படத்தின் பெயர் சட்டப்படிக்குற்றம்! விஜய் ரசிகர்களால் அன்போடு அப்பா என்றழைக்கப்படும் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படியும் அதிமுகவை வெற்றி பெற வைத்தே தீரவேண்டும் என்கிற ஆர்வவெறியோடு மிகமிக சீரியஸாக மூஞ்சை வைத்துக்கொண்டு ரத்தம் சூடேறி நரம்புகள் புடைக்க பல்லையெல்லாம் கடித்துக்கொண்டு இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் மேன்மையை விளக்க படத்திலிருந்து சில உதாரணங்கள். செந்தமிழரான சீமான இந்தப்படத்தில் ஒரு வக்கீல். சாதா வக்கீல் கிடையாது நேர்மையான நியாயமான நல்ல வக்கீல். (சீமான் பெயரை படித்ததும் உங்களுக்கு விசிலடித்து கைத்தட்ட வேண்டும் என்கிற உணர்வு எழுகிறதா? உடனே ஓடிப்போய் இந்தப்படத்தை பார்த்துவிடுங்கள்)

சீமானின் பெயர் பிரபாகர் (ஆஹா என்ன ஒரு குறியீடு!). கோர்ட்டில் ஒருலட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் திருடிய ராசாராமன் என்வரின் குற்றத்தை நிரூபிக்க வாதாடுகிறார். ‘’அய்யா நாம் உபயோகிக்கிற மிளகாய்த்தூளுக்கு வரிகட்டுகிறோம்.. சோப்புக்கு வரிகட்டுகிறோம்.. ஏன் நாம் சாப்பிடுகிற உப்புக்கு கூட வரி கட்டுகிறோம், அந்த பணத்தைத்தான்யா இவரு கொள்ளையடிச்சிட்டாரு’’ என்று சொல்ல... கோர்ட்டில் ஜ்ட்ஜாக அமர்ந்திருக்கும் ராதாரவி தன் தாடையில் கைவைத்து புருவம் உயர்த்தி ‘’அடேங்கப்பா ஆச்சர்யமாக இருக்கிறதே.. ஓஓ இப்படியெல்லாம் கூட நடக்குதா!’’ என்கிறார். தியேட்டரே கைத்தட்டல்களாலும் விசிலாலும் அதிர்கிறது. நாம் தமிழர் இயக்கமே சில விநாடிகள் தலைநிமிர்கிறது.

இன்னொரு காட்சியில் தினத்தந்தி படித்துக்கொண்டிருக்கும் அசிஸ்டென்ட் கமிஷனர் , ‘’என்னது சத்தியமங்கலத்துல பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றிட்டாங்களா...’’ என செய்தியை படித்து அதிர்ந்து போய் உடனே லுங்கி கட்டிக்கொண்டு மாறுவேடத்தில் கிளம்பிவிடுகிறார். அங்கே காட்டுக்குள் திரிகிறவர் , ஒரு கோயிலில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் ‘’ஏம்மா இங்க தீவிரவாதிகள் யாராவது இருக்காங்களா?’’ என்று கேட்கிறார். தமிழ்சினிமா இதுவரை கண்டிராத புதுமையான காட்சி!

மூன்று காமெடி நடிகர்கள் எதையோ தேடி காட்டுக்குள் அலைகிறார்கள். அவர்களை சந்திக்கும் புரட்சிகர இளைஞர்கள் கேட்கும் முதல் கேள்வியே.. ''நீங்க உளவுத்துறையா'' , இல்லைங்க என்று சொல்கிறவர்கள் அடுத்த காட்சியில் புரட்சியில் இறங்கிவிடுகிறார்கள். ஆஹா!

இதுபோல படம் முழுக்க மிரட்டும் வசனங்கள். நெஞ்சம் பதைபதைக்கவைக்கும் இதுபோன்ற காட்சிகள் அடங்கிய படம்தான் சட்டப்படிகுற்றம்.

படத்தின் இயக்குனர் இந்த கதையை தன் இளம்பிராயத்தில் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். அதாவது எழுபதுகளின் கடைசியில் அல்லது எண்பதுகளின் துவக்கத்தில்! இவ்வளவு பழைய கதையை அண்மையில் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை. அதிலும் ஒரே நேரத்தில் பத்து கலெக்டர்களை கடத்துவது, பத்து கமிஷனர்களை கடத்துவது... தமிழ்சினிமாவுக்கு மிக மிக புதுசு. படத்தில் கதையெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. சத்யராஜ் சேகுவாரா கெட்டப்பில் படம் முழுக்க சுருட்டு பிடிக்கிறார். சேகுவாரா குளிருக்கு சுருட்டு பிடித்து.. அவர்காலத்திற்கு புல்லட்டில் போனா.. இவனுங்க எதுக்கு போறானுங்க , என்கிற சுய எழுச்சியால் உண்டாகிற கேள்விகளை தவிர்த்துவிடுவோம்.

படத்தின் இயக்குனர் லாஜிக் என்றால் என்ன அது எந்த கடையில் கிடைக்கும் என்கிற கேள்வியை படம் முழுக்க வித்யாசமான காட்சிகளால் தொடர்ந்து எழுப்புகிறார். புதுமுக நடிகர்களும் நடிகைகளும் கையில் துப்பாக்கியோடு படம் முழுக்க காட்டுக்குள் கேரம் போர்ட் விளையாடுகின்றனர். மரத்தில் வெட்டியாக அமர்ந்திருக்கின்றனர். வேலை வெட்டியில்லாமல் பொழுதுபோக்குக்கு சத்யராஜோடு காட்டுக்குள் நடக்கின்றனர்.
போராளிகளிடம் இவ்வளவு ஜனநாயகமாக நடந்துகொள்கிற உன்னதமான தலைவனை உலகில் எங்குமே பார்க்க முடியாது. அதிலும் என் உச்சி மண்டைல சுர்ர்ருங்குது பாடலுக்கு போராளிகள் நடனமாட அதை சுருட்டுபிடித்தபடி ரசிக்கும் தலைவனும் உண்டா? இதுபோல ஏதும் இயக்கங்கள் இருந்தால் நாளைக்கே போய் அனைவரும் சேர்ந்துவிடலாம்.. உண்ண உணவு, உடுக்க நல்ல மிடுக்கான உடை, அவ்வப்போது குழுவாக தமிழ்பாடலுக்கு குத்துப்பாட்டு, போரடித்தால் கடலை போட அழகழகான ஃபிகர்கள்.. இப்படியெல்லாம் படம் எடுத்தால் ஏன்தான் தமிழ் இளைஞர்களுக்கு புரட்சிவெறி வராது.

படத்தில் உடன்பிறப்பே உடன்பிறப்பே என்று யாரோ பேசுகிற வசனத்தை சென்சார் செய்திருக்கிறார்கள். இதுதான் எஸ்ஏசிக்கு கிடைத்த முதல்வெற்றி. இனி அடுத்தடுத்து படங்களை தொடர்ந்து எடுத்தால் தமிழகத்தில் திராவிடம் என்கிற ஒரு பாரம்பரியம் இருந்த தடயமே இல்லாமல் அழித்துவிடலாம். எஸ்ஏ சந்திரசேகர் இதுபோன்ற படங்களை எடுக்காமல் இருப்பதற்காகவாவது திராவிடக்கட்சிகள் ஊழலை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம்.

படம் முழுக்க பஞ்ச் மழை! படத்தின் இறுதி பஞ்ச் தமிழக அரசியல் வரலாற்றில் மிகமுக்கியமானது என்பதால் அதை ஆவணப்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கிருப்பதாக எண்ணுகிறேன்.. ‘’இனிவரும் காலம் இளையதளபதிகளின் காலம்’’

இதற்குமுன் லதிமுக வின் தலைவரும் சகலகலாசமர்த்தருமான டி.ராஜேந்தரின் திரைப்படங்களில் இதேவகையான இன்பத்தை மகிழ்ச்சியை பேரானந்த்த்தை அனுபவத்திருக்கிறேன். இப்படமும் எனக்கு அதேவித திருப்தியை மகிழ்ச்சியை உள்ளொளி தரிசனத்தையும் தருகிறது. படத்தின் ஒவ்வொரு விநாடியிலும் ஒவ்வொரு ஃபிரேமிலும் கிடைக்கிறது. அதிமுகவினர் இப்படத்தை பார்த்தால் திமுகவில் இணைந்துவிடுகிற வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

ஜெயாபிளஸ் தொலைகாட்சியை இரண்டரை மணிநேரம் தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ அதே மகிழ்ச்சியை இப்படமும் தருகிறது.சிரித்து மகிழ சிறந்தபடம் இந்த சட்டப்படிக்குற்றம்!

பாவம் விஜய்!

15 March 2011

மரம்,செடி,மலை




எனக்கு ரயில்னா ரொம்ப புடிக்கும். அதோட சத்தம் ரொம்ப பிடிக்கும். பெட்டி பெட்டியா போறது ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்பாவையும் ரொம்ப புடிக்கும். அப்பாதான் எனக்கு எல்லாமே. அப்பா மட்டும்தான்.

‘நாளைக்கு நாம ரயில்ல போப்போறோம்டா அம்மு’னு அப்பா சொன்னப்பா நான் தூங்கிட்டிருந்தேன். ஆஃப்யேர்லி லீவு, வீட்டுல தனியாதான் இருந்தேன். அப்பா என்னை எழுப்பி சொன்னாரு. நான் மறுபடியும் தூங்கிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி முழிச்சிப்பார்த்து ‘நெசமாலுமே டிரெயின்ல போறமாப்பா’ன்னு கேட்டேன். அப்பா என் தலைய தடவிவிட்டு ஆமா குட்டிமானு சொன்னாரு. அப்பா என் தலைய தடவிக்குடுக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்பன்னா ரொம்ப ரொம்ப.. அப்பறம் என்னை எங்க கூட்டிட்டு போனாலும் கை விரலோட நுனில அழுத்தாம புடிச்சிட்டுதான் நடப்பாரு அது இன்னும் புடிக்கும்.

நான் இதுவரைக்கும் ரயில்லயே போனதில்ல... ஆனா தூரத்துல பார்த்திருக்கேன். அப்பறம் ரயில் விளையாட்டு விளையாடிருக்கேன். ஒரு நாள் ஸ்கூல்ல சைன்ஸ் மிஸ் பாடம் நடத்திகிட்டு இருந்தாங்க. அப்ப எர்த்துதான் சன்னை சுத்துதுனு சொல்லிகுடுத்தாங்க, திடீர்னு யாரெல்லாம் டிரெயின்ல போயிருக்கீங்கனு கேட்டாங்க, க்ளாஸ்ல எல்லாரும் கைய தூக்கினாங்க , நான் கைய தூக்கல.. ஏன்னா நான் டிரெயின்ல போனதில்லை , சுத்தி சுத்தி பார்த்தேன், ரம்யா மட்டும்தான் க்ளாஸ்லயே கைய தூக்காம இருந்தா, எனக்கு அழுகையே வந்திருச்சு.

மிஸ் சொன்னாங்க, டிரெயின்ல போம்போது ஜன்னல்வழியா பார்த்தா மரம் மலை செடிலாம் ஆப்போசிட்டா போகும்னு, நான் எழுந்து மிஸ் ஸ்கூல் பஸ்ல போம்போதும் அப்படிதான் போகுது நான் பார்த்திருக்கேனு சொன்னேன் , அதுக்கு நீதான் டிரெயின்ல போனதில்லைல ச்சும்மா உக்காருனுட்டாங்க கொங்கானி மிஸ், எல்லா பாய்ஸும் என்னைப்பார்த்து சிரிச்சிட்டாங்க ,அப்பருந்து எனக்கு டிரெயின்ல போணும்னு ரொம்ப ஆசை. யாராவது என்னை பெரியவளாகி என்ன ஆகப்போறேனு கேட்டா டிரெயின் ஓட்டுவேனு சொல்லுவேன். அவங்க சிரிப்பாங்க. நானும் சிரிப்பேன். அதுவும் டிரெயின்ல ஜன்னல் வழியா மரம் செடி மலைலாம் நகருதானு பார்க்கணும்னு ரொம்ப ஆசை.

அப்பா டிரெயின்ல போறோம்னு சொன்னதும் என்னால நம்பவே முடியல, போர்வையை போர்த்திகிட்டு சிரிச்சிகிட்டேன். எனக்கு போர்வைக்குள்ள சிரிக்க ரொம்ப பிடிக்கும்.

போர்வை விலக்கிட்டு நேரா வாசலுக்கு வந்து ரம்யா,ரதிபிரியா,ஹரிணிய தேடினேன். இருட்டிருச்சுனு அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க போல.. வாசல்ல என் செல்லகுட்டி சுப்ரமணி மட்டும்தான் இருந்துச்சு. சுப்ரமணி என்னைய பார்த்ததும் எம்பி எம்பி குதிச்சு வால ஆட்டிச்சி. நான் அதுபக்கத்துல போயி முட்டில கையவச்சி குனிஞ்சு சுப்ரமணி நாளைக்கு நான் டிரெயின்ல போப்போறேன்.. நீயும் வரீயானு கேட்டேன். அது கீக் கீக்னு கத்திகிட்டு இரண்டு கால்ல குதிச்சிச்சி.. அப்பாகிட்ட போய்கேட்டேன், அப்பா சுப்ரமணியையும் கூட்டிட்டு போலாம்ப்பானு, அப்பா வேணானு சொல்லிட்டார். சுப்ரமணிகிட்ட நான் சொல்லல, சொன்னா அது அழும். அப்புறம் நான் போர்வையை போர்த்திட்டு சிரிச்சிட்டே தூங்கிட்டேன்.

விடிஞ்சதும் அப்பாதான் என்னை எழுப்பினாரு. இருட்டாதான் இருந்திச்சு. அப்பா என்னப்பா இன்னும் கொஞ்சநேரம்னு சொல்லிட்டு நான் போர்வை இழுத்துவிட்டுக்கிட்டு தூங்கினேன்.. அப்பா முதுகுல தட்டி டிரெயின்ல போணுமா வேண்டாமான்னாரு.. டபால்னு எழுந்திட்டேன். எனக்கு முகம் கழுவி விட்டாரு.. நான் குளிக்கணும்னு அடம்பிடிச்சேன். ம்ஹும் முகங்கழுவினாலே போதும்னாரு. அவரும் குளிக்கல..

எனக்கு ரெட்டை ஜூன்டியே பிடிக்காது.. ஆனா அதையே போட்டுவிட்டாரு. நான் அப்பா சடைபோட்டுவிடுப்பான்னேன். உனக்கு இதுதாண்டா அழகாருக்கும்னாரு. நான் சுடிதார் போட்டுக்கறேன்னேன். இல்லை கவுன் போட்டுக்கோண்ணாரு. அதையே போட்டுவிட்டாரு. அது யூகேஜில எடுத்த கவுன். இப்போ நான்வளர்ந்துட்டேன்ப்பான்னேன். நீ சரியாவே சாப்டமாட்டேன்ற அப்புறம் எப்படி வளருவனு சொல்லி , நீ குட்டை பாப்பான்னு கிண்டல் பண்ணாரு, இல்லப்பா நான் பாரு இவ்ளோச்சோடு இருக்கேனு அப்பாவோட கை அளவு எம்பி எம்பி காட்டினேன். அப்பயும் நீ குட்டைப்பாப்பாதான்னு சிரிச்சாரு.. எனக்கு கோபமா வந்திச்சி , டிரெயினுக்காக பொறுத்துக்கிட்டேன். கூட்டிட்டு போகாட்டி என்ன பண்றது.
ரெண்டுபேரும் கிளம்பினோம். அப்பா ஒரு பாட்டில்ல தண்ணியும், காலைல இட்லி சுட்டு அதை ஒரு டிபன்பாக்ஸ்லயும் போட்டு எடுத்துக்கிட்டாரு. நான் என் வாட்டர்கேன்ல தண்ணி பிடிச்சிகிட்டேன். அப்பா எங்கப்பா போறோம்னு கேட்டேன்.

நம்ம ஊருக்குப்பா..

நம்ம ஊருன்னா எதுப்பா

பன்னிமடை , அங்கதான் உன் தாத்தா பாட்டிலாம் இருக்காங்கன்னாரு
பன்னிமடையா உவ்வே பேரே ஷேம்.. பேரே நல்லா இல்ல. அங்க பன்னிலாம் இருக்குமாப்பான்னேன் மூக்க பொத்திக்கிட்டு. அப்பா என் தலைய தடவி சிரிச்சாரு. அப்பா என் தலைய தடவி சிரிக்கும்போது அழகா இருப்பாரு. எனக்கு ரொம்ப பிடிக்கும். பன்னிமடைல பன்னி இருந்தா என்ன, மூக்க பொத்திக்கலாம் , வாமிட் வந்தா என்ன பண்றது.. அதுக்காக டிரெயின்ல போகாம இருக்க முடியுமா?

பஸ்ல போனோம். ரயில்வே ஸ்டேஷன் ரொம்ப பெரிசா இருந்துச்சு. அப்பா என் விரல மெதுவா பிடிச்சிகிட்டு நடந்தாரு. எனக்கு ரொம்ப சர்ப்ரைஸிங்கா இருந்துச்சு. அப்பா க்யூல போய் நின்னாரு. அது பெரிய க்யூ , நிறையபேர் பேப்பர் படிச்சிட்டு க்யூல நின்னாங்க , எல்லாருமே பேக் பெட்டிலாம் வச்சிருந்தாங்க! என்னோட வாட்டர்கேன பார்த்துக்கிட்டேன். அடுத்தவாட்டி பெட்டி எடுத்துவரணும்னு நினைச்சிகிட்டேன். பெட்டினா நல்ல பெரிய பெட்டி கறுப்பு பெட்டி.

அப்பா க்யூல நின்னுட்டு போன்ல ஏதோ மெசேஜ் அனுப்பிட்டுருந்தாரு. நான் அங்கே ஸ்டேஷன்ல எழுதிருந்ததையெல்லாம் எழுத்துக்கூட்டி படிச்சிட்டே வந்தேன்.. அங்கே போட்டிருந்துச்சு ஆறு வயசுக்கு மேல் டிக்கட் எடுக்க வேண்டும். அப்பாகிட்ட டிக்கட் எடுக்காட்டி என்ன பண்ணுவாங்கனு கேட்டேன். ஜெயில்ல போட்டுருவாங்க, இருட்டு ரூம்ல போட்டுருவாங்கன்னு கை ரெண்டையும் பூச்சாண்டி மாதிரி வச்சுகிட்டு என்னை பயமுறுத்தினாரு எனக்கு பயமே வரல. பேட் அப்பா!

டிக்கட் எடுக்காம யாராச்சும் போவாங்களாப்பான்னு கேட்டேன். அப்பா பதிலே சொல்லல. அப்பா டிக்கட் வாங்கிட்டுருந்தாரு. ஒரு கோயம்புத்தூர்ன்னு வாங்கினாரு. அப்பா எனக்கு டிக்கட்னு கத்தினேன். அப்பா விரல வாய்கிட்ட வச்சு ச்சூ ன்னார். அப்பா எனக்கு டிக்கட் எடுக்கலையா?

‘நீ குட்டிப்பாப்பா உனக்கு டிக்கட் எடுக்க வேண்டாம்மா’’

‘’அப்பா எனக்கு ஏழு வயசாச்சு டிக்கட் எடுங்கப்பா’’

‘’பேசாம வாடா குட்டி, அதுலாம் ஒன்னும் வேண்டாம், அப்பாவ பார்த்தா போலீஸ்காரங்களே பயப்படுவாங்க’’

நான் பேசாம நடந்தேன். ரயில் நின்னுட்டுருந்துச்சு. ஒரே கூட்டம். அழகா ப்ளூ கலர்ல நீளமா இருந்துச்சு. அப்பாப்பா நாம இதுல போலாம்ப்பானு ஒரு பெட்டிய காட்டினேன். அது ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்ம்மா ன்னாரு. அப்படினா என்னானு கேக்கலாம்னு தோணிச்சி கேக்கல.

ஒரு பெட்டில ஏறினாரு. ஓரே நாத்தம். மூக்கை பொத்திகிட்டேன். எல்லா சீட்டுலயும் ஆளுங்க உக்கார்ந்திருந்தாங்க. அப்பா கொஞ்சநேரம் நின்னாரு. ஒருத்தர்கிட்ட சார் குழந்தைய கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உக்காத்தி வச்சிக்கோங்கன்னார். அந்த அங்கிள் எனக்கு கொஞ்சம் இடங்கொடுத்தார். டிரெயின்ல ஃபேன் இருந்துச்சு, நாத்தம் அடிச்சிச்சு,கூட்டமா இருந்துச்சு, கம்பியை இழுனு எழுதிருந்துச்சு.. அவ்ளோதானா டிரெயின்னு இருந்துச்சி.

வண்டி கெளம்புச்சு. ஜன்னல் பக்கத்துல உக்காத்திருந்தா நல்லாருந்துருக்கும். எட்டிப்பார்த்துட்டே வந்தேன். மலை மரம் செடிலாம் ஒன்னையும் காணோம், நிறைய ஹவுஸஸ்தான் நகர்ந்துட்டே இருந்துச்சு.

அப்பா என் பக்கத்துலயே நின்னுட்டே வந்தாரு. அப்பா கோயம்புத்தூர் போக எவ்ளோ நேரம்ப்பா ஆகும்னு கேட்டேன். ரொம்ப நேரம் ஆகும்ன்னாரு. தலைய தடவிவிட்டாரு.பக்கத்து சீட்டு அங்கிள் பிஸ்கட் கொடுத்தாரு. நான் வேண்டானு சொல்லிட்டேன். அப்பா வாங்கிக்கோனு சொன்னாரு. அப்புறமாதான் வாங்கிக்கிட்டேன். ரொம்ப நல்லாருந்துச்சு. இன்னொன்னு கேக்கலாமானு நினைச்சேன். அப்பா திட்டுவாருனு விட்டுட்டேன். அப்பா என்னையே பார்த்துட்டுருந்தாரு. நான் ஜன்னலையே பார்த்துட்டுருந்தேன். எங்களுக்கு எதிர்லதான் அந்த பையன் உக்காந்திருந்தான். அவன் என்னை பார்த்து மொறைச்சிட்டே வந்தான். அவன் பக்கத்துல அவனோட டேடி உக்காந்திருந்தாரு. நான் என்னோட வாட்டர் பாட்டில் எடுத்து தண்ணி குடிச்சேன். அவன் பெப்சி எடுத்து குடிச்சான். நான் அவனை பார்க்காத மாதிரி திரும்பிகிட்டேன். அவனும் ம்க்கும் னு திரும்பிகிட்டான்.

தூரத்துல மரம்லாம் தெரிய ஆரம்பிச்சிது. அப்புறம் ஒரே மரம்.. ஒரே செடி.. மிஸ் சொன்னமாதிரி நிஜமாவே அது ஸ்பீடா ஆப்போசிட்டா போயிட்டிருந்துச்சு. கன்னத்துல கைவச்சுகிட்டேன். அப்பா நின்னுட்டேருந்தாரு. பக்கத்து சீட்டு அங்கிள் சார், குழந்தைய மடில வச்சிட்டு உக்காருங்கன்னாரு. அப்பாவும் என்னை மடில வச்சுகிட்டாரு. அப்பா மடில உக்காந்துக்கறது எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமா! அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச டிரெயின்ல. என்னப்பார்த்து அந்த பையனும் அவங்கப்பாகிட்ட சொல்லி அவரு மடில உக்காந்துகிட்டான். நான் அவனை கண்டுக்காம ஜன்னலை பார்த்து சிரிச்சிட்டே வந்தேன்.

அவன் வேணும்னே சாக்லேட் எடுத்து காட்டி காட்டி சாப்ட்டான். நான் அப்பாகிட்ட அப்பா எனக்கு சாக்லேட்னு சொன்னேன். ஊருக்கு போய் வாங்கித்தரேன்னாரு. அவன் என்னை பார்த்து கேவலமா சிரிச்சான். போடா லூசுனு திட்டனும் போல இருந்துச்சு. வேணும்னே அவன் அம்மாவ போய் கட்டிபுடிச்சு முத்தா குடுத்தான். என்னோட அம்மாவ நான் பார்த்ததே இல்ல. அதனால அப்பாவோட கைய இறுக பிடிச்சிகிட்டேன். ஏதோ ஸ்டேஷன்ல வண்டி நின்னப்ப அப்பா எனக்கு சாக்லேட் வாங்கித்தந்தாரு.. அதை அவன்கிட்ட காட்டிட்டே சாப்டேன். அவன் முறைச்சான். நான் சிரிச்சேன்.

பிளாக் கோட் போட்டவர் ஒருத்தர் ஒவ்வொருத்தர்ட்டயா டிக்கட் கேட்டுட்டே வந்தாரு. டிக்கட் டிக்கட் னு கேட்டாரு. அந்த பையனோட அப்பா டிக்கட் குடுத்தாங்க அதுல பேனாவால ஏதோ பண்ணிட்டு குடுத்துட்டாரு. அந்த பையனுக்கு கோட் பாக்கெட்லருந்து ஒரு சாக்லேட் எடுத்து குடுத்தாரு. அப்பாகிட்டயும் டிக்கட் கேட்டாரு. அப்பா பாக்கெட்லருந்து டிக்கட் எடுத்து குடுத்தாரு. அந்த பிளாக் கோட் அங்கிள் என் தலைய தடவி, அப்பாகிட்ட பாப்பா யாரு நம்ம பாப்பாங்களான்னாரு, ஆமாங்கன்னார் அப்பா.
பாப்பாவுக்கு டிக்கட் எடுக்கலையா

சின்ன குழந்தைங்க அஞ்சு வயசுதான் ஆச்சு, அதான் டிக்கட் எடுக்கலை

ஹாய் பாப்பா வாட் இஸ் யுவர் நேம்

மை நேம் இஸ் அம்மு

குட் அம்மு, என்ன ஸ்டான்டர் படிக்கறீங்க னு கேட்டார் பிளாக் கோட் அங்கிள். அப்பா என் கைய அழுத்தி பிடிச்சார். நான் அப்பா வலிக்குதுப்பான்னேன். ஏதோ மாதிரி பிளாக் கோட் அங்கிள பார்த்து அப்பா சிரிச்சாரு. எனக்கு புரியல.

செக்ன்ட் ஸ்டான்டர்ட் பி செக்சன் பார்தி மெட்ரிக்லேசன் ஸ்கூல்,மடிப்பாக்கம் னு சொன்னேன். வெரிகுட் , நல்ல உயரமா இருக்கியேன்னார் பிளாக்கோட அங்கிள். எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, அப்பாவை பெருமையா பார்த்துகிட்டேன். அப்பா ஏன்னே தெரியல ஒருமாதிரி இருந்தாரு.

பிளாக் கோட் அங்கிள் அப்பாவை பார்த்து முறைத்தார். என்ன சார் இப்படி இருக்கீங்க, குழந்தைக்கு பொய் சொல்லத்தெரியாது, அவங்களை கெடுக்கறதே நீங்கதான்.. என்ன ஆளுங்க சார், நூறுரூபாய் டிக்கட் எடுத்துட்டா குடுமுழுகியா போய்டும், சட்டையெல்லாம் அயன் பண்ணி போட்டிருக்கீங்க.. படிச்சவங்கதான் சார் எல்லா தப்பும் பண்றது... இன்னும் ஏதேதோ சொல்லி திட்டிட்டேயிருந்தார். அப்பா கண்ணெல்லாம் கலங்கிருந்துச்சு. நான் அப்பாவையே பார்த்துட்டுருந்தேன். அப்பா கறுப்பு கோட் அங்கிளுக்கு காசு குடுத்தார். அந்த அங்கிள் போகும்போது பாக்கெட்லருந்து ஒரு டைரிமில்க் குடுத்துட்டு போனார். எனக்கு டைரிமில்க் ரொம்ப பிடிக்கும். எதிர்ல உக்காந்திருந்த பையன் என்னை பார்த்து சிரிச்சிட்டே இருந்தான். அவங்க அம்மாகிட்ட காதுல ஏதோ சொல்லி சிரிச்சான்.

அப்பா பாவம், கண்ணுகலங்கிப்போய் உக்காந்திருந்தாரு. எனக்கு பாவமா இருந்துச்சு. அப்பா அப்பா..ன்னு கூப்டேன். அப்பா ம்ம் ன்னார். ‘’ஏன்ப்பா இப்படி இருக்க, போலீஸ்லாம் உன்னபார்த்து பயப்படும்னு சொன்ன’’ னு கேட்டேன். அப்பா அமைதியா உக்காத்திருந்தார். கொஞ்ச நேரத்துல ‘வாயமூடிட்டு வரப்போறியா இல்லையா’’னு பயங்கர சத்தமா கத்தினாரு. எனக்கு அழுகை வந்து அழுதுட்டேன். பக்கத்து சீட்டு அங்கிள் , ‘’என்னசார் சின்ன குழந்தைய போயினு’’ என்னை அவர் மடில உக்காத்தி வச்சுகிட்டார். எதிர்ல அந்த பையன் என்ன பார்த்து சிரிச்சிட்டே இருந்தான். எனக்கு அழுகை அழுகையா வந்திச்சி!

ஏதேதோ சொல்லி சமாதானம் பண்ணினாரு. என்னை ஜன்னலோரமா உக்காத்தி வச்சாரு. ஜன்னல்ல மரம் செடி மலைகூட எதிர்பக்கமா நகர்த்து போய்ட்டே இருந்துச்சு. எனக்கு அத பார்க்கவே பிடிக்கல.. எதிர்ல அந்த பையன் ரொம்ப ரொம்ப சிரிச்சிட்டே இருந்தான்!
அப்பா அப்படியே கோவமாவே உக்கார்ந்திருந்தாரு. எனக்கு ஜன்னலை பார்க்க பிடிக்கல. ஜன்னலே பிடிக்கல.. கருப்பு கோட் அங்கிள் குடுத்த சாக்லேட் கூட பிடிக்கல. அப்பாவோட அந்த முகமும் பிடிக்கல. அப்பா அமைதியா உட்கார்ந்திருந்தாரு.

நான் ஜன்னல்ட்டருந்து எறங்கி அப்பாகிட்ட போனேன். அப்பா ஏன்ப்பா இப்படி இருக்கனு கேட்டேன். அப்பா என்னை மடில உக்காத்தி வச்சுகிட்டு , தலைய தடவிக்குடுத்தாரு. அப்பா இனிமே நாம டிரெயின்ல போவேணாப்பா..ன்னு சொன்னேன் , அப்பா அப்படியே இருக்கமா கட்டிப்பிடிச்சுகிட்டாரு. அவர் என் தலைல முத்தம் குடுத்தாரு.. ஏன்னே தெரியல எனக்கு அழணும் போல இருந்துச்சு. ஜன்னல் பக்கமா மரம் செடி மலைலாம் எதிர்பக்கமா போய்ட்டே இருந்துச்சு... நிறைய நிறைய... எனக்கு அதை பார்க்கவே பிடிக்கல.. எனக்கு இந்த ரயில் நாத்தமும் பிடிக்கல.. இந்த பையன பிடிக்கல... இந்த ரயில கொஞ்சங்கூட பிடிக்கல...

02 March 2011

அழகிரி சிரித்தார்


மதுரையில் கால்வைத்ததுமே பூமி அதிர்ந்து பொறிகலங்கியது. வேகமாக என்னை நோக்கி ஜில்லென்று காற்றடித்தது. யாருமேயில்லாத ரயில்நிலையத்தில், எதிர்காற்றில் தலைமுடி பறக்க கையில் பெட்டியோடு காற்றை கிழித்து நான் நடந்து செல்ல.. எதிரில் கையில் அரிவாளோடு யாரையோ வெட்டுவதற்காக மதுரை முத்துப்பாண்டி (ஆமாம் அவர் ரைஸ்மில்தான் வைத்திருக்கிறார்) ஓடிவர.. இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளாமல் எதிர்பக்கம் விலகிச்செல்ல.. அவர் யாரையோ போய் குத்த, நான் ஹீரோயினை அவரிடமிருந்து காப்பாற்றி.. ஜின்ஜினாக்கு ஜனக்கு நான் சொல்லித்தரேன் கணக்கு என பாடிக்கொண்டிருக்க பாதி பாடலில் விடிந்தது. மதுரை ஜங்ஷன் உங்களை அன்புடன் வரவேற்கிறது என எந்திரக்குரல் என்னை வரவேற்றது. கசமுசாவென கூட்டம் அம்மியது. முத்துப்பாண்டியையும் காணோம்..

அடியேன் (அடியேன் என்றால் அடியேன்தான் சாருவல்ல) மதுரைக்கு வருவது இது எத்தனையாவதோ முறை. இம்முறை அலுவலக காரியமாக... மதுரை இன்னமும் மெகா கிராமமாகத்தான் இருக்கிறது. அதை நீருபிப்பதைப்போல மீசையில்லாத என்னிடம் தப்பு தப்பான ஹிந்தியில் பேசினர் ஆட்டோக்காரர்கள். அடப்பாவிகளா மீசையில்லாட்டி ஹிந்திக்காரனா..? க்யா பாய்சாப் கிதர் ஹை, ஆட்டோ சாஹியே.. பாய் பாய்... என அளந்து கொட்ட, ஞான் செம்மொழி தமிழில் பேசினேன். நல்ல லாட்ஜா போப்பா என்றேன். ஆட்டோகாரனோ என்னை ஏடாகூடாமாக பார்த்து , சார் அந்த மாதிரினா எனக்கு தெரியாது நல்ல மாதிரினா கேளுங்க சொல்றேன் என்றான். சார் நான் அந்த மாதிரி ஆளும் இல்ல நல்ல மாதிரிதான் கேட்டேன். தயவு பண்ணி கொஞ்சம் மீடியமான லாட்ஜூக்கு போங்க என்றேன் எரிச்சலுடன்.

மதுரையில் டாஸ்மாக்குகள் நன்றாக சுத்தமாக மெயின்டெயின் செய்யப்படுவதாக நண்பர் சொல்லியனுப்பியிருந்தார். அதை சோதிக்க ரவுண்டு ரவுண்டாக டாஸ்மாக்குகளை சோதனை செய்தேன். அப்படியொன்றும் பிரமாதமில்லை. எல்லா டாஸ்மாக்களிலும் அழகு தமிழில் ‘அரசு பார்’ என்று எழுதப்பட்டிருந்தது. சென்னை கோவை மாதிரியான பெருநகரங்களை ஓப்பிடும்போது அங்கே நல்ல சுத்தமான மற்றும் சுவையான சைட்டிஷ்கள் கிடைப்பதை அறிந்து வியந்தேன். அதிலும் மீன் மற்றும் மட்டன் நன்றாக இருக்கின்றன. முட்டைப்பொறியல் சுமார்தான். பிரேம் நிவாஸ் என்று ஒரு பார் இருக்கிறது. நல்ல பார். 140ரூபாய்க்கு நிறைய சைடிஷுடன் சுவையான குளிர்ந்த பீர் கிடைக்கிறது.

ஊர் முழுக்க பல இடங்களில் கீஸ்டு கானம் என்கிற கடையை கண்டேன். இசைத்தட்டுகள் விற்குமிடமாம். இன்னுமா பாட்டெல்லாம் சிடிவாங்கி கேக்கறாங்க.. நிறைய பழைய படங்களின் டிவிடிகள் கிடைத்தன. ஒரு கூடை அள்ளிக்கொண்டேன். (அதில் ஒன்று பாக்யராஜின் விடியும்வரை காத்திரு). ரயில்நிலையத்திற்கு மிக அருகில் பாண்டிபஜார் என்று ஒரு புது இடம் உருவாகியிருந்ததை கண்டேன். சென்னை பர்மாபாஜாரின் சின்னத்தம்பியை போல செல்போன் , உலக சினிமா டிவிடி மட்டுமே விற்றுக்கொண்டிருந்தனர். பாண்டிபஜாரில் நிறைய பள்ளிமாணவர்கள் நின்றுகொண்டு பிட்டுப்பட டிவிடி வாங்கிக்கொண்டிருந்தனர். சிலர் மொபைலில் பிட்டுகள் ஏற்றிக்கொண்டிருந்தனர். மதுரை ஒளிர்கிறது.

எங்கு பார்த்தாலும் அழகிரியோ அல்லது தயாநிதி அழகிரியோ சிரித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியிலோ மேலோ கீழோ ஜெ போஸ்டரில் எம்ஜியாரைப்போல கலைஞர் சிரிக்கிறார். பிளக்ஸ் பேனர்கள் கண்டுபிடிக்கப்பட்டதே அழகிரிக்காகத்தானோ என்று நினைக்கும் அளவுக்கு ஊர் முழுக்க அழகிரி. மதுரையை சுற்றினால் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அழகிரி படம் போட்ட அருமையான பிளக்ஸ் பேனர் கண்ணில் படுகிறது. இதனால் இரவில் தூங்கும்போது கூட அழகிரி சிரித்து பயமுறுத்துகிறார். ரொம்ப பயமாருக்கு யுவர் ஆனர்!

பிளக்ஸ் பேனர்கள் குறித்து திட்டினாலும், மதுரைக்காரர்களின் கிரியேட்டிவிட்டியை அடித்துக்கொள்ள தமிழ்நாட்டிலேயே ஆள்கிடையாது. எந்த பேனரும் ஒன்றைப்போல இன்னொன்று இருப்பதில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி ஒரு பேனரில் சச்சனின் முகத்தை மட்டும் வெட்டி அழகிரி படத்தை ஒட்டி இந்தியாவுக்கு அஞ்சாநெஞ்சனின் வாழ்த்துகள் என பிளக்ஸ் அடித்து பயமுறுத்தினர். பாசக்கார பயல்களின் சேட்டைக்கு எல்லையே இல்லை. அழகிரியின் அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்கு இந்த ஆண்டே பேனர் வைத்துவிடுவார்களாம்!

ரயில்நிலையத்திற்கு மிக அருகில் குமார் மெஸ் என்னும் சின்ன உணவு விடுதி உள்ளது. அங்கே தோசையிலேயே வித்தியாசமாக கறிதோசை கிடைக்கிறது. பீஸாவில் சிக்கன் டாப்பிங்ஸ் வைத்ததுபோல மட்டன் டாப்பிங்ஸ் போட்டு மொருகலான தோசை கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம் 90ரூபாய். ஆனால் 90ரூபாய் அந்த அற்புதமான பதார்த்த்திற்கு மிக குறைவு. இன்னும் ஐம்பதுரூபாயே கூட வைத்து விற்றாலும் தகும். அப்படி ஒரு சுவை. ஐ லவ்வ்விட். எத்தனையோ விதமான பீசா தின்றிருக்கிறேன். இந்த தோசாவிற்கு ஈடுஇணையான ஒன்று இந்தியாவில் மட்டுமல்ல சாருநிவேதிதாவைப்போல பல நூறு எழுத்தாளர்களை கொண்ட லத்தீன் அமெரிக்காவிலும் கிடையாது. இரண்டு சாப்பிட்டேன. இன்னும் ஒன்று பார்சல் வாங்கிக்கொண்டேன்.

மீனாட்சி அம்மன் கோவில் வெகுவாக மாற்றமடைந்துவிட்டிருக்கிறது. தெப்பக்குளத்தை சுற்றி பூங்காவெல்லாம் வைத்து சினிமா செட்டுபோல மாற்றியிருக்கின்றனர். தெப்பக்குளம் போன்ற உணர்வே இல்லை. அது தெப்பகுளம் மாதிரியும் இல்லை. குட்டையைப்போல் மொக்கையாக மாற்றி வைத்திருக்கின்றனர். சுற்றிசுற்றி நிறைய காதலர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவ்வளவுதான் தெப்பக்குளம். முன்னெப்போதோ மீனாட்சி அம்மன் கோவிலில் உளவாரப்பணிகள் மேற்கொண்டிருக்கிறேன். அப்போது பார்த்த தெப்பக்குளம் எளிமையாக தெய்வீகம் என்கிற வார்த்தைக்கு ஏற்றதாக இருந்தது. இது ஏதோ சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கிற உணர்வையே அளிக்கிறது. கோபுரங்கள் புதிய பெயிண்டில் பக்காவாக பளபளவென பளிச் பளிச்! கோயிலின் உள்ளேயும் எல்லா சிலைகளும் மெழுகுபூசி மொழுமொழுவென அழகாகவே இருந்தன. பிடித்திருந்தது.

கோயில் உஜாலாவிற்கு மாறிவிட்டதைப்போல் உணர்ந்தேன். கோயிலை சுற்றி வெளியே பளபளகற்கள் பதித்த ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அதில் குட்டிகார் சில சுற்றிக்கொண்டேயிருக்கின்றன. பத்துரூபாயில் மொத்த கோயிலையும் சுற்றிவிடலாம். பாதுகாப்பும் பலமாக இருந்தது. என்னுடைய பையை கால்மணிநேரம் சோதித்து மறைத்து வைத்திருந்த சிகரட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து வைத்துக்கொண்டனர். போகும்போது கேட்க மனமின்றி வந்துவிட்டேன். கோயிலில் நிறைய வெளிநாட்டினரும் வடநாட்டினரும் நிறைந்திருந்தனர். அம்மன் சந்நிதியை நெருங்குமிடத்தில் ஒருவர் மிகப்பெரிய மயிலிறகு சாமரத்தால் அடித்து அடித்து ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார். அவரைப்பற்றி ஆனந்த விகடனில் செய்தி வந்திருப்பதாக க்யூவில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். நான் இன்னும் படிக்கவில்லை. பிரசாத ஸ்டாலில் வாங்கிய லட்டு அவ்வளவு சுவையில்லை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சுவைகூட்டி விற்கலாம்.

கோபுரங்களை ஒவ்வொன்றாக பொறுமையாக கண்டு ரசித்தேன். இப்போது புதிய பெயின்ட் என்பதால் எல்லா சிலைகளும் பளிச்சென தெரிகின்றன. அதில் பல அஜால்குஜாலாகவும் இருந்தது. என்னிடம் நல்ல லென்ஸ் கொண்ட கேமரா இல்லையே என்று வருந்தினேன்.

தங்கையின் குழந்தைகளுக்காக தொட்டில் கட்டை தேடிக்கொண்டிருந்தேன். பல கடைகளில் தொட்டில்கட்டையென்றால் என்னவென்றே தெரியாதது போல் விழித்தனர். கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. எல்லா கடைகளிலும் தாழம்பூ குங்குமம் பத்துரூபாய்க்கு கிடைத்தது. கடைகடையாக தேடிக்கண்டுபிடித்து இரண்டு கட்டைகள் வாங்கினேன். ஒன்று நூறு ரூபாயாம்.. மணியெல்லாம் வைத்து பெயின்ட் அடித்து கிளி வைத்து அழகாகவே இருந்தது. எனக்கு மரப்பாச்சி பொம்மைகளின் மேல் அதீத பிரியமுண்டு. தமிழகத்தின் பார்பீ அது. இரண்டு பொம்மை வாங்கிக்கொண்டேன். பனைஓலை பைகள்,தொப்பிகள் கிடைத்தன.

மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளேயே இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் பார்க்க ஐந்து ரூபாய் கட்டணம். உள்ளே நுழைந்தால் நிறைய தூண்கள் இருந்தன. முன்னர் வைத்திருந்த ஓவியங்கள்,சிலைகள்,சங்கதிகள் அடங்கிய பலகைகள் என பல விஷயங்களை காணவில்லை. எல்லாமே அல்ட்ரா மாடர்னாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர். புதிதாக காதிகிராப்டில் வாங்கிய சிலைகளை சுற்றி அலங்கார விளக்குகளுடன் வைத்திருந்தனர்.
அங்கே கைட் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அண்மைக்காலங்களில் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும், இங்கே சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் ஊரில் தோட்டவேலை,வீட்டுவேலை பார்க்கிற ஏழைகள் என்றார். வெள்ளையாய் இருக்கறவன் பொய்சொல்லமாட்டான் என்பதைப்போல வெள்ளையாய் இருப்பவன் பணக்காரனாய் இருப்பான் என்கிற என்னுடைய பல வருட எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். சிலர் இங்கே வந்து வேலைபார்த்து சம்பாதிப்பதும் உண்டாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரையில் புத்தக கடைகளுக்கு விடுமுறை போல ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் புத்தக கடைகள் மூடப்பட்டிருந்தன. பிரபல எழுத்தாளரின் புத்தகம் வாங்க ஆசையோடு கடை தேடினேன். குரு தியேட்டரில் இப்போதும் படம் ஓடுகிறதா தெரியவில்லை. எனக்கு பிடித்த தியேட்டர். நான்கைந்து பிட்டுப்படங்கள் பார்த்ததாய் நினைவு.

மதுரை எழுத்தாளர் ஒருவர் யாளி என்று ஒருவர் நாவல் எழுதியிருக்கிறாராம். மதுரை முழுக்க பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தமிழகத்தில் நாவல்களுக்கு கூட போஸ்டர் அடித்து விளம்பரம் செய்கிற கலச்சாராம் உண்டு என்பதை தெரிந்துகொண்டேன். யாளி என்பது டைனோசர் காலத்திற்கு முந்தைய விலங்கு என்கிற அடிப்படையில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாய் அந்த போஸ்டரில் விளம்பரத்திருந்தார்கள். வாங்கிப்படித்துப்பார்க்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோவில் முழுக்கவே எங்கு திரும்பினாலும் இந்த யாளியின் பிரமாண்ட சிலைகளை காணலாம். எனக்கு பல நாளாய் அது தன் வாயில் வைத்திருப்பது என்னவென்கிற ‘ஏ’டாகூடமான சந்தேகம் உண்டு. நண்பர்கள் விளக்கலாம்.

மதுரையில் தாவணிப்போட்ட பெண்களை காணமுடியாதது வருத்தமாக இருந்தாலும்.. அக்கலாச்சாரம் இன்னும் அழியாமல் இருக்கும் என்றே நம்புகிறேன். மீனாட்சி காலேஜ் பக்கமாக போக நினைத்து நேரமின்மையால் ஊர் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. ஜீன்ஸ் அணிந்த பெண்கள் சிலரை கண்டேன். இன்னமும் ஆதிகாலத்து பெல்பாட்டம் ஜீன்ஸ்தான்!

மதுரையில் ஒரு மின்னல் பயணத்தை முடித்துக்கொண்டு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தேன். ரயிலில் டிக்கட் பரிசோதகர் வந்தார். என் டிக்கட்டை வாங்கி பார்த்துவிட்டு ஒரிஜினில் ஐடி கேட்டார். என்னுடைய ஆதிகாலத்து பான்கார்டை நீட்டினேன். அது பல ஆண்டுகளுக்கு முன் வாங்கியதென்பதால் அதில் அரசு முத்திரை அழிந்துபோயிருந்தது. டிடிஆர் இதெல்லாம் வேண்டாங்க.. வேற ஐடி குடுங்க என்று கடுப்படிக்க.. என்னிடம் வேறு எந்த ஐடியும் இல்லை.. இதோ இந்த ஆபீஸ் ஐடிகார்டுதான் இருக்கிறது என காட்டினேன். ஒரு நிமிடம் ஐடி கார்டை பார்த்தவர்.. சார் நீங்க அதிஷாதானே என்றார்!

மதுரை இனித்தது. இதயம் பனித்தது. பயணம் முடிந்தது.