Pages

19 September 2011

எங்கேயும் எப்போதும்!



விபத்து! அதனை நேருக்கு நேர் சந்திக்காத வரை நமக்கு அதன் மீதான பயம் கொஞ்சம் கூட இருப்பதில்லை. செல்போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டுவதில் தொடங்கி, பிரேக் கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட அலட்சியமாக கார் ஓட்டுவது, தம்மடித்த படி சரக்கடித்துவிட்டு பஸ் ஓட்டும் டிரைவர்கள் என பட்டியல் ரொம்ப பெரிசு. ஆனால் நேருக்கு நேர் நாம் விபத்தை எதிர்கொள்ள நேரிடும் போதோ அல்லது நமக்கு நெருக்கமானவருக்கு ஏற்பட்டாலோ அதுகுறித்த அச்சமும் கொஞ்சம் கவனமும் நம்மை தொற்றிக்கொள்ளுவது இயல்பு. எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து பைக்கை எடுத்து வண்டி ஓட்டுகையில் அதை உணர முடிந்தது, சாலையில் என்னையும் மீறி அதிக கவனமும் பயமும் எங்கிருந்துதான் வந்ததோ!

சில படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்ததும்.. பதட்டமும் பயமும் அப்பிக்கொள்ளுவதை உணர்ந்திருக்கிறேன். ஃபைனல் டெஸ்டினேஷன் வகையறா படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். தலைக்கு மேலே சுழலும் ஃபேன் தொடங்கி சாதாரண அழுக்குப்பிடித்த மிதியடி கூட பூச்சாண்டி காட்டி பயமுறுத்தும். இதுமாதிரி படங்களை இன்னொரு முறை பார்க்கவே கூடாது என முடிவெடுத்து விடுவேன். அதன் வேதனையிலிருந்து மீளவே பல நாட்களாகும். சனிக்கிழமை பார்த்த எங்கேயும் எப்போதும் இன்னமும் என் நினைவடுக்குகளில் எஞ்சி நிற்கிறது. சாலையில் எந்த பேருந்தை கண்டாலும் அச்சமூட்டுகிறது. இனி அச்சமின்றி என்னால் மஃப்சல் பேருந்துகளில் பயணிக்கமுடியுமா என்பதே சந்தேகம்தான்.

பேருந்து மோதல்களும், தடம் புரளும் ரயில்களும் அன்றாட செய்தியாகி பல காலம் ஆகிறது. சென்றவாரம் நடந்த ரயில்விபத்து கூட பெரிதாக என்னை ஒன்றுமே செய்யவில்லை. மீடியாவும் தொடர்ந்து நிகழும் விபத்துகளும் இதுமாதிரி விபத்துகளை சகஜமாக எடுத்துக்கொள்ளுகிற நிலைக்கு நம்மை பழக்கப்படுத்திவிட்டதோ என அஞ்சுகிறேன். எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானவர்களுக்கும் இதே நிலைதான். ஆனால் அதே விபத்து நமக்கோ நம்மை சேர்ந்தவர்களுக்கோ ஏற்படும்போதுதான் அதன் மீதான ஒரு அச்ச உணர்வு எழுகிறது. அப்படி ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது எங்கேயும் எப்போதும். காரணம் படத்தின் பாத்திரங்கள் நமக்கு மிக மிக நெருக்கமானவர்களாகவும் நண்பர்களாகவும் இருப்பதே!

நேர்த்தியாக பின்னப்பட்ட இரண்டு காதல் கதைகள். அரசூரை விட திருச்சி பெரிய சிட்டி! திருச்சியை விட சென்னை பெரிய சிட்டி! இரண்டு காதல் ஜோடிகளுக்கான முரண் இதுதான். அரசூர் பையன் திருச்சி பெண்ணின் சாமர்த்தியத்தில் திணறுகிறான். திருச்சி பெண் சென்னை பையனின் அலட்டலில் அலறுகிறாள். ஒரு விபத்தில் ஒரு காதல் அஸ்தமிக்க இன்னொரு காதல் பூக்கிறது. நண்பனுக்கு விபத்து நேர்ந்ததை போலவே மனம் துடித்து அடங்க மறுக்கிறது.

படத்தின் கதை திரைக்கதை,நடிப்பு,இசை,எடிட்டிங்,கிராபிக்ஸ் என எல்லாமே நன்றாகவே இருந்தாலும் என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியது ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு முறையும் பாய்ந்து செல்லும் பஸ்ஸினை காட்டும்போதும் நாமும் அந்த பேருந்தில் பயணிக்கிற உணர்வினை கொடுத்துவிடுகிறது. அதிலும் அதன் வேகம், அவை மற்ற வண்டிகளை தாண்டிச்செல்லும்போது உண்டாகிற படபடப்பு.. கேமரா மேனுக்கு ஒரு பெரிய சபாஷ்! படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவின் பெரிய ரசிகராக இருக்கவேண்டும். படம் முழுக்க எங்கேயும் எப்போதும் ராஜாசார் வாசனை!

ஜெய் தன் பாத்திரத்திற்கேற்ப நன்றாகவே நடித்திருக்கிறார். அஞ்சலியின் நடிப்பு அற்புதம். சிம்ரனுக்கு பிறகு அஞ்சலிக்கு ரசிகனாகிவிடுவேனோ என அஞ்சுகிறேன். அவ்வளவு அழகு.. நிச்சயம் இப்படத்தினை குடும்பத்தோடு பார்க்கலாம். ஒவ்வொருவரும் கட்டாயம் பாக்க வேண்டியபடமும் கூட...

ஆனால் அவ்வளவு அழகான காதல்களை சொல்லிவிட்டு இறுதி 20 நிமிடங்கள் நம்மை கதறவிட்டிருக்க வேண்டாம் என்கிற எண்ணமும் எழாமல் இல்லை. இருந்தும் அந்த 20 நிமிடங்கள் நிச்சயம் விபத்தின் மீதான மக்களின் பார்வையை மாற்றும் என்பது நிச்சயம். இந்த படத்தினை பேருந்து ஓட்டுனர்களுக்கு இலவசமாக காட்ட ஏற்பாடு செய்யலாம்! அது தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கிற பெருமளவு விபத்தினை குறைக்கும் என்றே நம்புகிறேன். மற்றபடி அழகான படம் தந்த இயக்குனருக்கு பாராட்டுகள்.

08 September 2011

எழுத்தாளர் ஜெயலலிதா





முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும். பின்னாளில் அவர் புரட்சிதலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்!

ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது புத்தக வடிவத்தில் இதுவரை பதிப்பிக்கப்படவேயில்லை. பழைய புத்தக கடைகளில் தேடியும் கிடைக்காத அந்த நாவல்களில் ஒன்று நண்பர் கிங்விஷ்வாவிடமிருந்தது (காமிக்ஸ் புகழ் கிங்விஸ்வா).
கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து வாங்கிவைத்திருந்தார் விஸ்வா.

நமக்கு தெரிந்த ஜெயலலிதா சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர், எதற்கும் அஞ்சாதவர்,கொஞ்சம் முரட்டுத்தனமான அதே சமயம் வீரமான பெண் என்பதாக இருக்க.. நாவலை வாசிக்க தொடங்கியதுமே நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்! நமக்குத்தெரிந்த முரட்டு முதல்வர் அல்ல இதை எழுதியது! மனது முழுக்க காதலும் அன்பும் நிறைந்த ஒரு இளம்பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்டிருந்தது. காதலின் ஏக்கமும் தவிப்பும் காதலனுடனான அந்த நொடிகளின் உக்கிரமும் நாவலெங்கும் நிறைந்திருந்தது.

பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில் விழுகிறான். அவளும் அவனை காதலிக்கிறாள்.. கர்ப்பமாகிறாள்.. பிறகுதான் இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவரை அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்! எண்பதுகளின் ஜெயகாந்தன் கதைகளினுடைய பாதிப்பில் எழுதப்பட்ட கதையாகவே இது இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.
முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுக காட்சியில் தொடங்கி இறுதிஅத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். அவ்வளவு வேகமான எழுத்து நடை. படிக்கும் போது ஒருவேளை இதை அசோகமித்திரன் எழுதியிருப்பாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல இடங்களில் கரைந்த நிழல்கள் சாயல்!

ஒரு அத்தியாயத்தில் நடிகன் மாணவியிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வர.. அவள் அழைக்க.. அந்த அத்தியாயம் முழுக்க இருவருக்குமான தொலைபேசி உரையாடல் மட்டும்தான். உரையாடல் என்றால் வசனங்கள் இல்லாமல் இருவருக்குமான மௌனமே நிறைந்திருப்பது அருமை. எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம் என்பார்கள். அதே போல காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட நன்றாகவே எழுதியிருக்கிறார்.

இந்நாவல் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்டத்தாக சிலர் கூறினாலும் அப்படி எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அழகான புனைவாகவே இது இருக்கிறது.

தொடர்கதை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவின் தொடர்கதைகளைப் போல ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தேவையில்லாத டுவிஸ்ட்டோ அதிர்ச்சியோ இல்லாமல் மென்மையாக தொடர்ந்திருப்பது பிடித்திருந்தது. வாய்ப்புகிடைத்தால் அனைவருமே படிக்க வேண்டிய நாவல் இது. அம்மாவின் புகழ்பாடும் அதிமுகவினர் இதை புத்தகமாக கொண்டுவர முயற்சி செய்யலாம். கலைஞர் மட்டும்தான் எழுதுவாரா எங்க தலைவியும் இலக்கியம் படைச்சிருக்காங்க பாருங்க என மார்தட்டிக்கொள்ள உதவும். ஜெ குமுதத்தில் எழுதிய இன்னொரு நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடமிருந்தால் கொடுத்து உதவலாம்.