Pages

07 December 2011

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் டீ சமோசாவும்!




தமிழ் இலக்கிய வரலாற்றில் இப்படியொரு கூட்டத்தை யாருமே கண்டிருக்க முடியாது. ஜெயகாந்தனுக்கு வராத கூட்டம்.. சுஜாதாவுக்கு கூடாத கூட்டம்.. காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்தது. வந்தவர்கள் வாய் பிழந்தனர். இலக்கியவாதிகள் வயிறெரிந்தனர். வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் வாய்வலிக்க வாழ்த்தி மகிழ்ந்தனர். குடும்பத்தோடு ஏதோ திருமணவிழாவிற்கு வந்ததுபோல வாசகர்கள் கூடியிருந்தனர். வாசகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். வெளியீடு முடிந்ததும் குடித்துத்தீர்த்தனர். வெளியிடப்பட்ட புத்தகம் அரங்கிலேயே 500க்கும் மேல் விற்றுத்தீர்ந்தன. பதிப்பத்தினரோ ‘’புத்தக கண்காட்சிக்குள் பிரிண்ட் பண்ணின புத்தகங்கள் தீர்ந்துவிடும் என்றே நினைக்கிறோம்.. புக்ஃபேருக்கு புதிதாகத்தான் அச்சிடவேண்டும் போலிருக்கிறது’’ என உற்சாகமூட்டினர். இவையெல்லாம் நடந்தது சாருவின் எக்ஸைல் நாவல் வெளியீட்டில். கனவு போலத்தான் இருக்கிறது.

ஆயிரங்கோடி ரூபாயில் அவதார் ரிலீஸ் பண்ணினவன் கூட இந்த அளவுக்கு விளம்பரம் செய்திருப்பானா தெரியாது.. கடந்த மூன்று மாதங்களாகவே வெறித்தனமாக எக்ஸைல் நாவல் வெளியீடு குறித்து விளம்பரப்படுத்திவந்தார் சாரு. அவரோடு அவருடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த துடிப்பான இளைஞர்களும் இணைய துண்டுபிரசுரம் தொடங்கி போஸ்டர்,பத்திரிகை விளம்பரம் என அசத்தினர். தமிழில் முதன்முறையாக நாவலுக்கு டிரைலரெல்லாம் வெளியிடப்பட்டது. சென்னையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆண்டுதோறும் உயிர்மை என்னும் குடையின் கீழ் நடைபெறுகிற சாருவின் புத்தகவெளியீட்டு விழா இம்முறை அவருடைய வாசகர்களால் அவருடைய வாசகர்களுக்காகவே நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த செலவும் சாருவின் வாசகர்களுடையது என்றே அவதானிக்கிறேன்.

இதெல்லாம் சிலருக்கு காமெடியாக இருந்தாலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்த நாவலும் இதுவரை கண்டிராதது. இத்தனை விளம்பரம் எதற்கு? வேறு வழியில்லை செய்துதான் ஆகவேண்டும். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரான சுஜாதாவின் புத்தகமே பத்தாயிரம்தான் விற்கிறதென்றால் காரணம் என்ன? அந்த கேள்விக்கான விடையை தன்னுடைய இந்த நாவல் வெளியீட்டின் மூலம் அடிகோடிட்டு காட்டுகிறார் அல்டிமேட் ரைட்டர் என்று அவருடைய வாசகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சாரு!

ஆறு மணி நிகழ்ச்சிக்கு ஆறேகாலுக்குத்தான் செல்ல முடிந்தது. கோட் சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு ரிசப்ஷனில் மணமகளோடு கெக்கேபிக்கே என்று அசட்டு சிரிப்பை உதிர்க்கிற மணமகனைப்போல அழகாக காட்சியளித்தார் சாரு! இப்போதெல்லாம் தலைக்கு டை அடிப்பதில்லை போல.. வெள்ளைத்தலையும் குறுந்தாடியுமாக வெளிநாட்டு எழுத்தாளரைப்போல இருந்தார். அவருடைய பிரமாண்டமான புகைப்பட பேனர் வைக்கப்பட்டு மேடையில் மூன்றே மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இந்திரா பார்த்தசாரதி, வாலிப கவிஞர் வாலி, சாரு மூவர்மட்டும்தான் பேசப்போவதாக சாரு அறிவித்தார். அதற்கு முன்னால் இருபது வாசகர்களுக்கு தன்னுடைய புத்தக பிரதியை மேடையில் வழங்கினார்.

முதலில் பேசிய வாலி சாருவின் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட்டேன்.. அற்புதம் சூப்பர் ஆஹா ஓஹா.. என்றவர் எந்த குறிப்பிட்ட புத்தகம் குறித்தும் பேசவில்லை , விமர்சிக்கப்படுபவன்தான் அறிவாளி என்று இன்னும் பேச, சுவாரஸ்யக்குறைவினால் தூக்கம் கண்களை தழுவியது. அவர் சொன்னதில் எனக்கு நினைவில் இருப்பது இதுதான்.. இந்த எக்ஸைல் நாவல் சாஃப்ட் போர்னாகிராபி கிடையாது ஹார்ட் போர்னாகிராபி என்றார். விழித்துப்பார்க்கும் போது இந்திரா பார்த்தசாரதி இப்படி ஒரு கூட்டத்தை வாழ்க்கைல பார்த்ததில்லை என்றார். நான் டெல்லியில் இருக்கச்சே அவாள்லாம் சேந்துண்டு.. என்று அவர் சின்ன வயசாக இருக்கச்சே ஆதாம் ஏவாளோடு இலக்கியம் வளர்த்த கதையை சொல்லிக்கொண்டிருக்க நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.

சென்ற ஆண்டு தேகம் நாவல் குறித்து பேசிய மிஷ்கின் , இது சரோஜா தேவி என்று குறிப்பிட்டதையே நாசூக்கான மொழியில் இபாவும் வாலியும் குறிப்பிட்டு பேசியதாகவே கருதுகிறேன். ஆனால் சாரு மிஷ்கினை திட்டியது போல இவாளை திட்டமாட்டார் என்றே நினைக்கிறேன்.

மதன் கம்பீரமாக கர்ஜிக்கும் சிங்கத்தினை போல நிகழ்ச்சியின் பாதியில் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவரை பேச சாரு அழைத்தார். அரை மணிநேரம் பேசினார்.. சாரு ஒரு உலக எழுத்தாளர்.. அவரை நாம கொண்டாடனும்.. அவருதான் மாஸ்.. மத்ததெல்லாம் தூஸ், இது உலகத்தரம் வாய்ந்த நாவல் என்பது கணக்காக நிறைய பாராட்டி பேசினார். நான் சாருவின் ரசிகனாகிட்டேன் என பெருந்தன்மையோடு அறிவித்தார்.

அதற்கு பிறகு இந்த தமிழ் இலக்கிய சமூகத்தில் தான் சந்திக்கிற பெருந்துன்பங்களை பட்டியலிட்டு பேசினார் சாரு. இனிமேல் நான் தமிழில் எழுதப்போவதில்லை என அறிவித்தார். அதாவது தமிழில் எழுதி ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துதான் வெளியிடலாம் என்ற யோசனையில் இருக்கிறேன் என்றார். பிறகு மூலிகை வளம்,சித்தமருத்துவம்,பழம்பெருமை பற்றியெல்லாம் பேசினார். வாசகர்வட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். சாரு பேசிமுடித்த அடுத்த நொடி பலரும் அவரை சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். பதிப்பகத்தார் பத்ரி நிகழ்ச்சி முழுவதையும் வீடியோவாக பதிவு செய்துகொண்டார். ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சி படு போர்! சாருவின் நிகழ்ச்சிகளில் நாம் எதிர்பார்க்கிற அந்த ஜோர் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் சாரு ரொம்பவே அடக்கிவாசித்ததால் என்பதாலோ அல்லது கூட்டத்தில் உரையாற்றிவர்களின் பேச்சாலோ இருக்கலாம். ஆனால் இந்தமுறை ஏமாற்றமே!

சாருவின் குசேலரான ஷோபாசக்தியும் நெருங்கிய நண்பர் எஸ்ராவும் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. எழுத்தாளர் மாமல்லன் ஜிகஜிகாவென வெளிர்பச்சை நிற டிஷர்ட்டில் வந்து பயமுறுத்தினார். நிகழ்ச்சி முழுக்க ரொம்பவே அவதியுற்றார். மனுஷ்யபுத்திரன் வருவார் என கிசுகிசுக்கப்பட்டது. அவரும் வரவில்லை. சாருநிவேதிதா உயிர்மையை திட்டுவார் என எதிர்பார்த்து வந்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம். உயிர்மையில் பத்தாண்டுகளாக சினிமாவிமர்சனம் எழுதினேன் எனக்கு பத்துகாசு கூட கொடுக்கவில்லை என பழைய பாட்டையேதான் சாரு பாடினார். அதோடு அந்த நேரத்தில் என்னுடைய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு வேலைகளை பார்த்திருந்தால்.. என்றெல்லாம் பேசினார்.

புத்தகம் அரங்கிலேயே விற்கப்பட்டது. அரங்கத்திற்கு வந்திருந்த பலரும் எக்ஸைலும் கையுமாக அலைந்தனர். சாருவுக்கு ஆகாதவர்கள் பலரும் புத்தகம் வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் திரிந்தனர். நானும் வாங்கலாம் என கடைக்கு போனால் விலை 200,.. 250ரூபாய் மதிப்புள்ள புத்தகம் 200க்கு கொடுக்கப்பட்டது.

ஏற்கனவே பலமுறை எழுதியதுதான் சாருவைப்போலவே அடியேனும் பரம ஏழை. 200ரூபாய்க்கு புத்தகம் வாங்கி படிக்கிற வசதி சமகாலத்தில் அடியேனுக்கு இல்லை. அதனால் புத்தகம் வாங்கியவர்களை ஏக்க பெருமூச்சோடு வேடிக்கை பார்த்தேன். தோழர் ஒருவர் வாங்கிய புத்தகத்தை ஒன்மினிட் ப்ளீஸ் என கேட்டு வாங்கி புரட்டினேன். காசுகொடுத்து வாங்க முடியவில்லையே என்கிற சோகம் மனதை கவ்வியது! கண்களில் நீர் கசிந்தது. துடைத்துப்போட்டுவிட்டு.. அதைவிடுங்க எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்.

ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்தது. என்னை பொருத்தவரையில் இந்த நிகழ்வை அவருடைய வாசகர்கள் எந்தகுறையும் வைக்காமல் சிறப்பாக நடத்தி காட்டியிருக்கின்றனர். பதிப்பத்தின் பெரிய உதவியோ இலக்கியவாதிகளின் அரவணைப்போ எதுவுமேயில்லாமல் வெறித்தனமாக வேலை பார்த்து இவ்வளவு பிரமாண்டமான விழாவை நடத்திய சாருவின் வாசகர்களுக்கு பாரட்டும் வாழ்த்துகளும். இதுபோல வாசகர்கள் தமிழில் எந்த எழுத்தாளருக்கும் இதுவரை கிடைத்ததில்லை என்பது நிச்சயம். நாகேஸ்வரராவ் பார்க்கில் போய் துண்டுபிரசுரம் கொடுக்கிற அளவு அர்ப்பணிப்பை தமிழ் இலக்கயவாசகர்களிடையே மைக்ரோஸ்கோப்பில் தேடினாலும் அகப்படுமா தெரியவில்லை. இது இலக்கியத்திற்கு நல்லதா என்பதையும் தாண்டி என்னை வெகுவாக கவர்ந்தது.

என்னதான் பிரமாண்டமான இலக்கிய கொண்டாட்டமாக இருந்தாலும் என்னளவில் பெரிய ஏமாற்றம்தான். காரணம் டீ காஃபி சமோசா எதுவுமே கொடுக்கவில்லை. ஸ்பான்சர் கிடைக்கவில்லையோ என்னவோ? சமோசா இல்லாமல் என்னத்த இலக்கியம் வளர்த்து.. அடப்போங்கப்பா!