Pages

17 October 2012

மாற்றான் : சூர்யாவுக்கு சிலைவைங்க!






வயிறார சாப்பிட்டு முடித்த பிறகு அடிவயிற்றிலிருந்து உருண்டு திரண்டு நெஞ்சை விரித்து மூக்கை அடைத்துக்கொண்டு வாய் வழியாக வெளிவருமே ஒரு உற்சாக வாயு.. ஏப்பம் என்பார்கள். அது தருகிற சுகமே அலாதி. அது திருப்தியின் வெளிப்பாடு. நம் வயிற்றின் வசந்தகீதம். அப்படி ஒரு திருப்தி மாற்றான் படம் பார்க்கும்போது நமக்கு உண்டாகிறது. யேஏவ்வ்வ்வ்வ்...

அர்ஜூனும் விஜயகாந்தும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மேற்கிஸ்தான் கிழக்கிஸ்தான் செங்கிஸ்தான் என எல்லா இஸ்லாமிய நாட்டு தீவிரவாதிகளையும் அழித்தொழித்து புதைத்து அந்த இடத்தில் புல்லு பூண்டு வெங்காயமெல்லாம் முளைத்துவிட்டது.

நம்ம கேப்டன் .. முதல்வர் ரேஸிலும், அர்ஜுன் செகன்ட்ஹீரோ மாஸிலும் பிஸியாகி விட்டதால்.. வெரைட்டியான வெளிநாட்டு தீவிரவாதிகளால் அழிவை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்தியாவை காப்பாற்ற நாதியே இல்லாமல் இருந்தது. முகமூடி ஜீவா, தாண்டவம் விக்ரமெல்லாம் முயன்றும் முடியாத காரியத்தை கனகச்சிதமாக முடித்திருக்கிறார் சூர்யா!

ஏற்கனவே ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மரை உசுப்பிவிட்டு டோங்லீயின் சீனாவிடமிருந்து இந்திய நாட்டை காப்பாற்றி ஜனாதிபதி கையால் விருதுவாங்கிய அனுபவம் இந்தப்படத்திலும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

இதோ இப்போது ரஷ்யாவிலிருந்து ஆபத்து வந்திருக்கிறது. யெஸ் ஏ ஆபத்து ஃபரம் ரஷ்யா கம்மிங் டூ இந்தியா இன் தி ஃபார்ம் ஆஃப் தி பேபி பவுடர் வித் டேஞ்சரஸ் பாய்சன் என்கிறார் மேஜர் சுந்தர்ராஜன்!

சும்மா இருப்பாரா சூர்யா! உடனே வீட்டிலிருந்து தயிர்சாதம் புளிசாதம் சகிதம் ப்ளைட்டை பிடித்து கிளம்பிபோய் ஒரு குத்துப்பாட்டுக்கு பாலே டேன்ஸ் ஆடி, தொப்புள் காட்டும் காஜல் அகர்வால் மற்றும் ரஷ்ய ஃபிகர்களோடு ரொமான்ஸ் பண்ணி, ஊக்கமருந்து பயன்படுத்திய விளையாட்டு வீரர்களின் அவலநிலையை பார்த்து கண்ணீர்வடித்து.. அப்பா சென்டிமென்ட் அம்மா சென்டிமென்ட் தம்பி சென்டிமென்ட் என எல்லாவற்றையும் முறியடித்து துப்பாக்கி குண்டுகளுக்கு தப்பி.. வெடிகுண்டுகளுக்கு தப்பி.. ராக்கெட் லாஞ்சருக்கு தப்பி.. ஒரு ஒட்டுமொத்த ராணுவத்துக்கே தண்ணிகாட்டி.. உஃப் எழுதுவதற்கே கஷ்டமாக இருக்கிறது.. மிக கடினமான இந்த அசைன்மென்ட்டை கண்ணிமைக்கு நேரத்தில் செய்துமுடித்து இந்தியாவை காப்பாற்றுகிறார் சூப்பர் சூர்யா. நமக்கு அப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.

படத்தின் முடிவில் ரஷ்யாவின் சதியிலிருந்து இந்தியாவை காப்பாற்றிய சூர்யாவின் வீரதீர சாகசத்துக்காக ஜனாதிபதி கையால் விருது வாங்குவதை பாக்கும் போது கண்ணில் தண்ணீர் தளுதளுக்கிறது! தியேட்டரே கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கிறது.

சூர்யா சார் தன்னுடைய அடுத்தப்படத்தில் எந்த நாட்டிடமிருந்து இந்தியாவை காப்பாற்றி ஜனாதிபதி கையால் விருதுவாங்குவார் என்கிற கேள்வியும் நமக்கு முன்னால் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பாய் படபடக்கிறது! யெஸ் ஏ பட்டர்ஃபிளை விங்ஸ் ஷேக்கிங் இன் தி கேஎஃப்சி சிக்கன் என்கிறார் மேஜர்.

ஏழாம் அறவில் போதிதர்மர் சைனாவுக்கு போனதுபோல.. இந்தப்படத்தில் சூர்யாவுங்கப்பா ரஷ்யா போகிறார் என்பது தற்செயலானதாக தெரியவில்லை. அருமை.

ஆமா ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றிய படம்னுல சொன்னாங்க.. என்கிற கேள்வி உங்கள் மனதில் எழலாம். படத்தில் விவேக் வடிவேலு மாதிரி காமெடியன்கள் இல்லையென்பதால் சூர்யாவே காமெடியனாகவும் நடித்திருக்கிறார். சமகால படங்களில் காமெடியன்கள் ஹீரோவோடு ஒட்டிக்கொண்டே அலைவதுபோல இதில் காமெடி கம்யூனிச சூர்யா ஒட்டிக்கொண்டே அலைந்து திரிந்து இடைவேளைக்கு முன்னால் ரசிகர்கள் எமோஷனாகி கண்ணீர் சிந்தவேண்டும் என்பதற்காகவே செத்தும் போகிறார். யாரோ அஜித் விஜய் ரசிகர்கள் அந்த சோக காட்சியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.. நான் கேட்கிறேன் ஏனய்யா உங்கள் நெஞ்சுகளில் ஈரமே இல்லையா?

அதிலும் க்ளைமாக்ஸில் சூர்யாவின் அப்பா ’’டேய் நீ ஒரு அப்பனுக்கு பொறந்தவன் இல்லடா.. பத்து பேருக்கு பொறந்தவன்.. ‘’ என்று பேசும்போது என்னமோ ஷகிலா ஷவரில் குளிப்பதை பாத்தாமாதிரி சிரியோசிரியென்று சிரிக்கிறார்கள். டேமிட்.. அதே விஜய் அஜித் ரசிகர்கள்தான்.

இந்தக் காட்சியை தியேட்டரில் நான்மட்டும் கைதட்டி ரசித்தேன். அதோடு ஜனாதிபதி கையால் விருது வாங்கும்போது கண்கள் கலங்க விசிலடித்து சிலிர்த்தேன். இதோடு சேர்த்து இரண்டுமுறையாச்சு!

தமிழ்நாட்டில் அப்துல்கலாமுக்கு அடுத்ததாக நிறைய முறை விஞ்ஞான ரீதியாக நடித்திருக்கும் சூர்யா கூட ஒருவகையில் அணுகுண்டு விஞ்ஞானிதான். அதனால்தான் அவருக்கு உடனடியாக எங்காவது தெருமுனையில் சிலைவைக்க தமிழ்க அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

படத்தின் மிகப்பெரிய பலம் சூர்யாதான். மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். விக்கு வைத்த சூர்யாவுக்கும் விக்கு வைக்காத சூர்யாவுக்கும் எவ்வளவு வேறுபாடு. கண்டே பிடிக்க முடியவில்லை.

தாடிவைத்துக்கொண்டு மாரில் அடித்துக்கொண்டே யோ டூட் வாட்ஸ் அப் என்று பேசும் கேரக்டாகட்டும்... கம்யூனிசம்தெரியுமா பாரதியார் தெரியுமா என மெல்லியகுரலில் பேசும்போதாகட்டும் அடடா!

என்ன.. ஒன்னு.. மெல்லிய குரலில் எதாவது பஞ்ச் டயலாக் பேசும்போதுகூட.. வாங்குங்கள் மலபார் கோல்ட்.. சன்ரைஸ் காஃபிதூள்.. ஏர்செல்.. சரவணாஸ்டோர் சங்குமார்க் ஜட்டிகள் என்று விளம்பர வாசகம் சொல்லிவிடுவாரோ என்கிற அச்சத்தோடேயே படம் பார்க்க வேண்டியதாயிருந்தது. மத்தபடி நடிப்பில் ஹாலிவுட் நடிகர்களான கவுண்டமணி,பால்முனி,டாம்குரூஸ் முதலானவர்களை ஒரே எட்டில் தாண்டிவிடுகிறார்.

படத்தின் இசையமைப்பாளர் படத்துக்கு இன்னொரு மிகப்பெரிய பலம். மற்ற இசையமைப்பாளர்களை போல வெளிதேசத்து இசையை காப்பியடித்து மாட்டிக்கொள்ளாமல் தன்னுடைய பாடல்களையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு மாதிரி இசையமைத்துள்ளார். அதோடு பெண்கள் தியேட்டருக்கு வருவதில்லை என புலம்புவர்களின் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சோக காட்சிகளில் தென்றல் சீரியலில் நம்ம துளசி அழும்போதெல்லாம் ஒலிக்குமே ஒரு சோக கீதம்.. அதே இசையை உபயோகித்திருக்கிறார் என்பது பாரட்டப்படவேண்டியதில்லையா... இந்த இசைக்காகவே பெண்கள் தியேட்டருக்கு படையெடுப்பார்கள் என்பதுறுதி!

படத்தின் இயக்குனரான கேவிஆனந்தும் சுபாவும் இருக்கிற திசைபார்த்து வணங்குகிறேன். இருவருமே மாபெரும் மேதைகளாக இருக்க வேண்டும். அடேங்கப்பா எவ்வளவு தகவல்கள்.. எவ்வளவு சுவாரஸ்யமான திருப்பங்கள். கோ படத்தை மொக்கையென்று ஒருகாட்சியில் சூர்யா திட்டுகிறார். என்ன ஒரு சுய எள்ளல்.. இதுதான் கேவிஆனந்தை ஒரு ஆஸ்கர் இயக்குனராக உயர்த்தியிருக்கிறது.

ஆஸ்கர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. பர்ஃபி படத்துக்கு பதிலாக மாற்றானை உடனடியாக ஆஸ்கருக்கு அனுப்பவேண்டும். படத்தில் நம் வாழ்க்கைக்கு தேவையான ஏகப்பட்ட கருத்துகளும் சிந்தனைகளும் நிறைந்துகிடக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப்படத்தை பார்த்தால் நிச்சயம் திருந்திவிடுவார்கள்.

இப்படத்தில் சூர்யா சொல்கிற ஒவ்வொரு கருத்தினையும் தஞ்சாவூர் கல்வெட்டில்.... இல்லை அங்கே முடியாது ஏழாம் அறிவில் சூர்யா சொன்ன கருத்துகளை ஏற்கனவே தஞ்சாவூர் முழுக்க கல்வெட்டாக வெட்டிவைத்துவிட்டதால்.. வேறு இடங்களில் கல்வெட்டாக வெட்டிவைத்துவிட்டு சூர்யாவை அருகிலேயே அமரவைத்துவிட்டால்.. வருங்கால சந்ததிகள் வாழும் என்பது மட்டும் நிச்சயம்!

இப்படி புகழ்ந்து தள்ளுகிறாயே படத்தில் குறையே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது ஒரே ஒரு குறைதான். இது தமிழ்படமேயில்லை முழுக்க முழுக்க ரஷ்யர்களுக்காகவே எடுக்கப்பட்ட ரஷ்யமொழிப்படம். படம் முழுக்க சின்மயிதான் எல்லோருக்கும் டப்பிங் கொடுத்திருக்கிறார். லோ பட்ஜெட் படமோ என்னவோ.. நாலு ஆட்களை பிடித்து விதவிதமாக டப்பிங் கொடுத்திருக்கலாம். ரஷ்யாவில் இப்படத்தை ஏன் ரிலீஸ் செய்யவில்லை என்று தெரியவில்லை. செய்திருந்தால் கோர்பசேவ் விருது சூர்யாவுக்கும் கேவிஆனந்துக்கும் கிடைத்திருக்கும்.

மற்றபடி ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு ரஷ்யனும் பார்த்து பெருமைப்படவேண்டிய காவியம் இந்த மாற்றான். படம் பார்த்து முடிக்கும்போது உங்களுக்குள் இந்தியன் அல்லது ரஷ்யன் என்கிற கர்வம் உண்டாகி அருகில் இருப்பவர்களை கடித்துவைத்துவிடுகிற அளவுக்கு உணர்ச்சி பொங்கும்... அதை மட்டும் கட்டுபடுத்திக்கொண்டால்.. இந்த படம் மட்டுமல்ல சூர்யா நடித்த எந்தபடமும் இனியபடமாக அமையும்.