Pages

28 November 2012

பெற்றதும் இழந்ததும்





முன்பெல்லாம் தீபாவளி வந்துவிட்டால் ஒருமாதத்துக்கு முன்பே மனசு முழுக்க படபடப்பும் த்ரில்லும் நிறைந்துவிடும். பட்டாசு வாங்கணும், புது உடை எடுக்கணும், பட்சணம் செய்யணும் எனப் பரபரப்பாகிவிடுவோம். எங்கள் வீட்டில் பாட்டிக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது.

நடுவீட்டில் வாணலியை வைத்துக்கொண்டு அதிரசம்,ரவாலட்டு,முறுக்கு என பிஸியாகிவிடுவார். குடும்பமே உட்கார்ந்து வாழை இலையில் மாவுதட்டி கொடுக்கும். அருகிலேயே உட்கார்ந்து கொண்டு குழந்தைகள் ருசிபார்க்கும்.

கட்பீஸ் துணிகள் வாங்கி.. டெய்லரிடம் தைக்கக் கொடுத்து அவருடைய தீபாவளி பிகுவை சமாளிக்க வேண்டும். தீபாவளிக்கு முந்தைய நாள் தைத்த துணி கிடைக்குமா கிடைக்காதா எனக் காத்திருந்து சஸ்பென்சாக உடை வாங்கி அணிவோம். உடைக்கு மேட்சான கவரிங் நகைகள் வாங்குவதில் தங்கைகள் கடைவீதிகளின் சந்துபொந்தெல்லாம் வேட்டையாடிவிட்டு வருவார்கள். பட்டாசு கடைக்குச் சென்று லட்சுமி வெடி, நேதாஜிவெடி, குட்டீஸுக்கு குருவி வெடி, சீனிவெடி,கம்பி மத்தாப்பு என பார்த்து பார்த்து வாங்குவோம். புதிய காலணி, புதிய பெல்ட்.. புதிதாக பிறப்போம்.

நான்கு மணிக்கே எழுந்து தலைக்கு எண்ணெய்வைத்துக் குளித்து பட்டாசு வெடித்து.. பட்சணம் தின்று.. முதல்நாள் முதல்ஷோ தலைவர் படமும் பார்த்துவிட்டு நண்பர்களோடு ஊர் சுற்றினால்தான் தீபாவளி முழுமையடையும். அது ஓர் உற்சாக அனுபவம்.
இன்று தீபாவளி நிறையவே மாறிவிட்டது. தீபாவளிக்கும் பொங்கலுக்கும்தான் புத்தாடை என்பது பழைய கதையாகிவிட்டது. நினைத்த போதெல்லாம் உடைகள் வாங்குகிறோம். அதனாலேயே தீபாவளி டிரஸ்ஸுக்கு பெரிய மரியாதை கிடையாது.

ஏதாவது பிரமாண்டமான துணிக்கடையில் ரெடிமேட் உடை ஒன்றை கூட்டநெரிசலில் எடுத்துவந்து அணிகிறோம். நாலுகம்பி மத்தாப்பு, இரண்டு ஊசி வெடி, ஒரு யானைவெடி என பட்டாசுகள் கூட கிப்ட் பேக் கிடைக்கிறது. ஆர்டர் செய்தால் டோர்டெலிவரி செய்கிறார்கள்.

அடையார் ஆனந்தபவனிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸிலோ அதிரசம்,முறுக்கு,ரவா லட்டு தீபாவளி பேக்கேஜ் கிடைக்கிறது. நாள்முழுக்க தொலைக்காட்சிகளில் மூழ்கிப்போகிறோம். அதிகாலையில் அருளுரை, பின் பட்டிமன்றம், நடிகைகள் பேட்டி, பின் சினிமா, குட்டித்தூக்கம், மீண்டும் ஒரு சினிமா.. இரவில் இரண்டு கம்பி மத்தாப்பைக் கொளுத்திவிட்டு, ஒரு ராக்கெட்டையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திவிட்டால்.. தீபாவளி முடிந்தது.

இன்று நம்முடைய பண்டிகைகள் இன்னொரு விடுமுறை நாளாகவே கழிகிறது. பழைய உற்சாகமும் த்ரில்லும் நிறையவே மிஸ்ஸிங்! தீபாவளியில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் கூட நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன.

எல்லாமே விரல்நுனியில் வந்துவிட்டது. எதையும் வாங்குவதற்காக சுற்றித் திரியத் தேவையில்லை. அங்கே இங்கே அசையத் தேவையில்லை. பாக்கெட்டில் பணமும் கையில் ஒரு கணினியோ, செல்போனோ இருந்தால் எதுவும் சாத்தியம்.

பீட்சாவும் நியூஸ் பேப்பரும்தான் முன்பெல்லாம் வீடுதேடி வரும். இப்போது வீட்டிலிருந்தபடியே கார் முதல் கணினி வரை எதுவும் வாங்க முடியும். மளிகைச் சாமான்கள் வேண்டுமா? ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும். இலக்கியம் படிக்கணுமா, இந்தியச் சுற்றுப்பயணமா? சாமிதரிசனம் கூட இணையத்தில் சாத்தியமாகியிருக்கிறது. பிரசாதம் கொரியரில் வீடுதேடி வந்துவிடும்.

பஸ்,ரயில்,விமானம் எனப் பயணத்துக்காக திட்டமிட்டு ஆன்லைனில் டிக்கட் புக் பண்ணலாம். குப்பைத்தொட்டி டாட் காம் என்கிற இணையதளம் காய்லாங்கடைச் சமாச்சாரங்களைக் கூட வீட்டிற்கே வந்து எடுத்துசெல்கிறது. கோவையில் ஒரு நவீன சுடுகாடு உண்டு. பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும்போது பெற்றோர்கள் இறந்துவிட்டால் இணையம் மூலமாகவே கொள்ளியும் போட முடியும்.

பொறுமையாக நிதானமாக எழுதப்பட்ட கடிதங்கள் வழக்கொழிந்துவிட்டன. போஸ்ட் பாக்ஸுகளில் கடிதங்கள் குறைந்துவிட்டன. எங்கும் ஈமெயில்தான் எஸ்எம்எஸ்தான்! நெருங்கிய உறவுகளோடு கூட சுறுக்கென.. ஹாய் ஹவ் ஆர்யூ.. ஃபைனாக முடிந்துபோகிறது.

ஒருகாலத்தில் வீட்டில் டெலிபோன் இருக்கிறதென்பது மிகப்பெரிய கௌரவம். டெலிபோன் வைத்திருப்பவர்கள் டிவிவைத்திருப்பவர்கள் எல்லாம் நம் ஜம்பமாகச் சுற்றுவார்கள். டிரங்கால் என்பதோ, அதில் ‘’PP கால்” என்கிற ஒன்று இருந்ததோ சமகால சந்ததிகளுக்குத் தெரியாது.

SMS எல்லா மொழிகளையும் நறுக்கியிருக்கின்றன.பெயர்ச் சொல் உயிர்ச் சொல் எல்லாம் பெயரும் உயிரும் இழந்து கைபேசிக்குள் சுருங்கிக்கிடக்கின்றன. 140 கேரக்டர்களுக்குள் எழுதும் குருவி வாசகங்கள் கோர்ட்டுக்கு இழுக்கவும் சிறைக்கு அனுப்பவும் சக்தி கொண்டவையாகிவிட்டன. ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்கள் குடும்ப உறவுகளையே பாதிக்கத்தொடங்கியிருக்கின்றன.

தூர்தர்ஷன் காலத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் இரவாகிவிடும். செய்திகள் முடிந்து உறங்க சென்றுவிடுவோம். இப்போதெல்லாம் நமக்கு இரவே கிடையாது. பிரபல மியூசிக் சேனல் ஒன்றில் அர்த்தராத்தியில் கூட லைவ் ப்ரோகிராம் ஒன்று போகிறது. அதற்கும் இளைஞர்கள் போன்போட்டு எனக்கு அந்த பாட்டு போடுங்க அதை தன்னுடைய பாட்டிக்கு டெடிகேட் பண்ணுகிற கூத்துகளும் நடக்கிறது. நம் குடும்பத்தினர் டிவியோடு வாழ்கிறார்கள், டிவியைப் பற்றியே பேசுகிறார்கள்.நம் வாழ்க்கையின் பல விஷயங்களை, சேமிப்பு, முதலீடு போன்ற முக்கியமான விஷயங்களைக் கூட்த் தீர்மானிக்கின்றன எப்போது டிவியை திறந்தாலும் யாராவது ஒரு சீரியல் பிரபலம் நிலம் விற்கிறார். பிரபல நடிகர் நகை விற்கிறார்.

முன்பைவிட நம்மிடம் இப்போது நிறையவே பணம் புழங்குகிறது. சின்னச் சின்ன வேலை செய்கிறவர்களுக்கும் ஓரளவு கணிசமான ஊதியம் கிடைக்க தொடங்கியிருக்கிறது.
ஆனால் வாங்கிய சம்பளத்தை உடனடியாகச் செலவு செய்கிறோம் அல்லது செய்ய வைக்கப்படுகிறோம். சிறுசேமிப்பு என்பது இன்று வேறொரு அவதாரத்தை எடுத்திருக்கிறது. ம்யூச்சவல் பண்ட்ல போட்டிருக்கேன்.. ஷேர்மார்க்கெட்ல இறக்கிருக்கேன் என சொல்வது ஃபேஷனாகிவிட்டது.

சிக்கனமாக வாழ்ந்து மிச்சம் பிடித்துச் சேர்த்தத் தொகையைக் குருவி போல சிறுகச் சிறுக சேர்த்து வைத்துக் கல்யாணம் பண்ணி வீடுகட்டிக் குடியேறி வாழ்ந்த காலமெல்லாம் போயே போச்சு! இன்று ப்ளாட்தான் வாங்குகிறோம். அதுவும் இருபதாண்டு முப்பதாண்டு வங்கிக் கடனில்!. திருமணமா, படிப்பா, வீடு நிலம் வாங்குவதா.. வங்கிகள் கடன்கொடுக்க க்யூவில் நிற்கின்றன. சாகும் வரை கடன் கட்டிக்கொண்டேயிருக்கிறோம்.

நூறு ரூபாய்க்கு வாங்கின கைக்கடிகாரத்தை முப்பது முறை ரிப்பேர் பண்ணி அணிந்துகொண்டிருந்த கலாச்சாரம் இன்று கிடையாது. இருபதாயிரம் ரூபாய் கலர்டிவி ரிப்பேராகிவிட்டதா.. அதைச் சரிசெய்வதை விட புதிதாக எல்சிடி டிவி வாங்கலாமா எல்ஈடி டிவி வாங்கலாமா எனச் சிந்திக்கிறோம். லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டும் 3டி டிவி ஒவ்வொரு மாதமும் பல ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்கிறது. நாற்பதாயிரம் ரூபாய் ஐ போனை வாங்க க்யூ நிற்கிறது. கடைக்கார்களோ ஐநூறு பேருக்குத்தான் கொடுக்க முடியும் போய்ட்டு அடுத்த வாரம் வாங்க என்கிறார்கள்.

திருமணத்திற்கு அழைப்பவர்கள் மூணு நாள் முன்னாடியே வந்துடுங்க என அழைப்பதுதான் நம் பாரம்பரியம். நாம் கூட ஒருநாள் முன்பாகவே திருமணங்களுக்கு செல்வோம். இன்று முகூர்த்த்துக்கு வராட்டி பரவால்ல ரிசப்சனுக்கு வந்துடுங்க என்று அழைப்பவர்களை அதிகம் பார்க்க முடிகிறது நெருங்கியவர்களது திருமணங்களுக்குக் கூட ஒருநாள்தான் ஒதுக்க முடிகிறது. திருமணத்துக்கு மட்டுமல்ல நெருங்கிய உறவினர்களின் மரணத்திற்கும் கூட அரைநாள்தான் டயம்.

நமக்கு எதற்குமே நேரமில்லை. சாப்பிடக்கூட நேரமில்லாமல் உழைக்கிறோம். இதனால் உடலும் உள்ளமும் பெரிதளவில் பாதிக்கப்படுவதையும் உணர்ந்தேயிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகச் சந்தையில் அதிகம் விற்கிற புத்தகங்கள் மருத்துவம் தொடர்பானதுதான். ஆர்கானிக் உணவுகளை அதிக விலைகொடுத்து உண்கிறோம். யோகா கற்கிறோம். இருந்தும் உடல்நிலை முன்பைவிட மோசமாகத்தான் இருக்கிறது.
நாம் இழந்துவிட்ட உடல் மற்றும் மன நலத்தை புத்தகங்களிலும் டிவியிலும் தேடுகிறோம். இளைஞர்களுக்கு உடல்நலமென்பது சிக்ஸ்பேக்காக ஆகிவிட்டது!

அருகிலிருப்பவர்களோடு குறைவாகவும் எங்கோ இருப்பவர்களோடு மணிக்கணக்கிலும் பேசப்பழகிவிட்டோம்.

யோசித்துப் பார்த்தால், ஒருநாள் நம்மிடம் நிறைய பொருட்களும் பணமும் இருக்கும். ஆனால் மகிழச்சியும் கொண்டாட்டமும் இனிமையான நினைவுகளும் இல்லாமல் போய்விடலாம்.

(புதியதலைமுறை வார இதழ் தீபாவளி மலருக்காக எழுதியது. நன்றி . பு.த)




26 November 2012

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி





ஏழாம் அறிவில் நம்மையெல்லாம் தமிழன் என்று பெருமைப்பட வைத்த ஏஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தில் இந்தியன் என்று மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். விஜயகாந்தோ அர்ஜூனோ நடித்திருந்தால் துவண்டு போயிருக்கும் அவர்களுடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்த உதவியிருக்கும். விஜய் நடித்ததால் ஒன்றும் குடிமுழுகி போய்விடவில்லை. அவருடைய மார்க்கெட்டும் சரிந்துகொண்டுதானே இருந்தது.

நம்முடைய நாட்டுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் சம்பவாமி யுகே யுகே என்று நம்முடைய மல்டிபிள் ஸ்டார்ஸ்களே முன்னால் வருவார்கள். அதுபோலவே துப்பாக்கி படத்திலும் விஜய் குபீரென ராணுவ வீரனாக தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிறார்.

மலைப்பகுதியில் தனிவீட்டில் குடும்பத்தோடு வசிக்கும் வில்லன். அவனுக்கு போரடிக்கும்போதெல்லாம் காரணமேயில்லாமல் மும்பையில் குண்டு வைத்து விளையாடுகிறான். அவனுடைய விளையாட்டுக்கு மும்பையில் வசிக்கும் இஸ்லாமிய மிடில்கிளாஸ் மக்கள் உதவுகிறார்கள். காஷ்மீர் தீவிரவாதிகளை பந்தாடி போர் அடித்து லீவு போட்டுவிட்டு மும்பைக்கு வருகிறார் விஜய்.

வில்லன் வைத்த குண்டை இவர் எடுக்க.. இவர் வைத்த குண்டை அவர் எடுக்க.. இவர் அண்ணனை அவர் சுட்டுக்கொல்ல.. இவர் தங்கச்சியை அவர் கடத்த.. கடைசியில் என்னாகும்ன்னா.. இதையெல்லாம் நான் எழுதிதான் தமிழகம் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

யெஸ்.. தர்மம் வென்றது. இந்தியா தலைநிமிர்ந்தது. பாரத்மாதாக்கீ ஜே. ஜெய்ஹிந்த். (டைப்படிக்கும் போது விரலே விரைப்பாக நிற்கிறது!)

ரொம்ப பழைய கதையை எடுத்து பட்டி டிங்கரிங் பார்த்து.. புதிதாக திரைக்கதை அமைத்து ஆங்காங்கே கேட் அன் மௌஸ் மசாலா தூவி ஜாலியாக இயக்கியிருக்கிறார் ஏஆர் முருகதாஸ். சரவெடி போல கடபுடாவென பேய்வேகத்தில் பயணிக்கும் திரைக்கதையில் தலா நூற்றிநாற்பதுக்கும் மேல் ஓட்டைகள். இருப்பினும் படத்தில் ஏதோ ஒரு சுவாரஸ்யமிருப்பதாக நாம் நினைப்பதால் அந்த ஓட்டைகள் தெரியவில்லை.

முதல்பாதி அரைமணிநேரமும் இரண்டாம் பாதியில் அரைமணிநேரமும் தொய்வடைந்து கடுப்பேற்றுகிறது. ஆனால் விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸும் அலட்டலில்லாத அற்புதமான நடிப்பும் அதையெல்லாம் மறக்கசெய்கிறது.

இளையதளபதியும் வருங்கால முதல்வருமான விஜய், தன்னுடைய அடுத்த அமெரிக்க ஜனாதிபதி கனவையெல்லாம் தூக்கி பரணில் போட்டுவிட்டு நடித்திருப்பது ஆறுதல். படத்தில் ஐயாம் வெயிட்டிங் என்பது மட்டும்தான் விஜய் பேசுகிற ஒரே பஞ்ச் டயலாக். ஒருவேளை இந்தபடம் ஹிட்டானால் மறுபடியும் பஞ்ச் பேசுவேன் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறாரோ என்னவோ!

முக்கால் பேண்ட்டோடு சுவருக்கு சுவர் தாவுவதும், ஸ்டைலாக துப்பாக்கியால் டுமீலுவதாகட்டும், தென்னிந்திய ஜேம்ஸ்பாண்டாக மிளிர்கிறார் விஜய். ஒரே ஒரு துப்பாக்கியோடு உலகத்தை காப்பாற்றும் வேலையாக இருந்தாலும் அதையே ஸ்டைலாக செய்தால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை தியேட்டரில் உணர முடிந்தது.

காஜல் அகர்வாலுக்கு மேலே கீழே வலது இடது என பல பகுதிகளிலும் நடிக்க வருகிறது. குலுங்க குலுங்க நடித்திருக்கிறார். ஆனால் அவர் படத்தில் எதற்காக என்பது முருகதாஸுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருக்கலாம்.கஜினிக்கு பிறகு இந்தப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் ரொமான்டிக்காக இருக்கிறது. காமெடிதான் சுத்தமாக செல்ஃப் எடுக்கவில்லை. ஜெயராம் என்கிற நல்ல நடிகரை ஏன்தான் இப்படி நாசம் பண்றாங்களோ என்பதை தவிர அவரைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

படத்தின் ஒரே குறை மிகப்பெரிய குறை.. மகா மட்டமாக இசையமைத்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான். கூகிள் கூகிள் பாடலை தவிர மற்ற எல்லாமே கடனுக்கு போட்டு கொடுத்த மெட்டுகளை போலவே இருந்தன. மாற்றானில் போட்ட ஒரு பாட்டை அப்படியே இங்கேயும் கொடுத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ்.. ரீமிக்ஸ் ஜெயராஜாக மாறிவிட்டார்!

2007ல் வெளியான போக்கிரிக்கு பிறகு அசலான ஒரு விஜய் படம் பார்த்த திருப்தி இந்தபடத்தில் கிடைக்கிறது. விஜய் படங்கள் குடும்பத்தோடு பார்க்க ஏற்றவை. ஆனால் இப்படத்தில் வன்முறை கொஞ்சமல்ல நிறையவே தூக்கலா இருந்தது.

கிளைமாக்ஸில் டெடிகேட்டிங் டூ த மிலிட்டிரி ஆஃப் தி இந்தியா என்றெல்லாம் எதற்கு ஜல்லி அடிக்கவேண்டும் என்று புரியவில்லை. அதை பத்து நிமிடம் ஸ்லோ மோஷனில் காட்டி முடிப்பதற்குள் ஒட்டுமொத்த தியேட்டரும் காலியாகிவிட்டது.

சில படங்கள் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்த்து போய் பார்ப்போம். அது சுமாராக இருந்தாலும் கூட நம் எதிர்பார்ப்பாலேயே அது மொக்கையாக தோன்றும். விஜயின் தொடர் மொக்கை படங்களால் துப்பாக்கி சூரமொக்கையாகதான் இருக்கும் என்கிற உறுதியான எதிர்பார்ப்போடு சென்ற தமிழ் ரசிகர்களுக்கு இந்த சுமாரான படம்கூட சூப்பராக தெரிந்ததில் ஆச்சர்யமில்லைதான்.

துப்பாக்கியை பற்றி இரண்டு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் ‘’இன்ப அதிர்ச்சி!’’.

(http://cinemobita.com/ க்காக எழுதியது. அவர்களுக்கு நன்றி)

09 November 2012

அழுமூஞ்சி ஜேம்ஸ்பாண்ட் தாத்தா!






எவ்வளவோ ஹாலிவுட் படங்கள் வெளியானாலும் ஜாக்கிசான் படமும் ஜேம்ஸ்பாண்ட் படமும் வெளியானால்தான் தமிழ்ரசிகனுக்கு தீபாவளி. குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படமென்றால் முதல்நாள் முதல்ஷோவே க்யூவில் நிற்பான் தமிழன்.
ஒப்பனிங் சேசிங் சண்டைகள் முடித்து வில்லன்களிடமிருந்து தப்பியோடி கையில் துப்பக்கியோடு கன்பேரலுக்குள் நடந்து வர பபாம்....பபாம் என தீம் மியூசிக் ஆரம்பமாகும்... தலைவா..அரசியலுக்கு வா என்கிற குரல்களில் தியேட்டரே அதிரும். ஒவ்வொரு காட்சியிலும் விசில் பறக்கும்.

நம்மாட்களுக்கு படம் புரிகிறதோ இல்லையோ.. கோட்டு சூட்டு போட்ட ஜேம்ஸ்பாண்டின் ஸ்டைல், அவருடைய அசால்ட்டு பேச்சு, அதிரடி ஆக்சன், வித்தியாசமான கேட்ஜெட்ஸ், பிகினி போட்ட கவர்ச்சிகன்னிகள் என எப்போதுமே ஜேம்ஸ்பாண்ட்தான் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார். தமிழகத்தில் ஜேம்ஸ்பாண்டும் ஜாக்கிசானும் கட்சி ஆரம்பித்தால் கணிசமான வாக்குகள் பெறுவார்கள் என்பது உறுதி.

நம்மை மகிழ்விப்பதற்காகவே சமீபத்திய ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்கைஃபால்’ (SKYFALL) தமிழகத்தில் மட்டும் 300 திரையரங்குகளில் வெளியாகியது. அதில் 50ல் மட்டும்தான் ஆங்கிலத்தில்.. மீதி 250 ப்ளஸ் தியேட்டர்களிலும் தமிழ் டப்பிங்கில்தான் திரையிடப்பட்டுள்ளது. ஒரு ஆங்கிலப்படம் அதுவும் தமிழ் டப்பிங்கில் இத்தனை தியேட்டர்களில் வெளியாவது அவதாருக்கு பிறகு இப்போதுதான். விஜய்,அஜித் படங்களுக்கு இணையான ஓப்பனிங்கும் இப்படத்துக்கு கிடைத்திருக்கிறது.

தமிழ் ரசிகனுக்கு ஜேம்ஸ் பாண்ட் என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவேதான். அவரால் முடியாதது எதுவுமே இல்லை. அது ஃபிகர் மடிப்பதாக இருந்தாலும் சரி... வில்லன்களை பந்தாடுவதாக இருந்தாலும் சரி. எல்லாமே சுஜூபி. ஒரே ஒரு துப்பாக்கியோடு அதில் குண்டே இல்லாமல் உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று ஒட்டுமொத்த ராணுவத்தையே நிலைகுலைய வைப்பவர் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்.
மூர்க்கமான வில்லன் நிலவுக்கே சென்றாலும் விரட்டி பிடித்து சுளுக்கெடுக்கிற சாகசமும், எந்த ஆபத்தையும் லெப்ட் ஹேண்டில் சமாளிக்கும் திறனும் கொண்டவர் நம்ம ஜேம்சு. வில்லன்களின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து அவன் மனைவியையே உஷார் பண்ணி உல்லாசம் காண்பார்.

உலகின் எந்த விளையாட்டாக இருந்தாலும் அவரோடு போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. வாள்வீச்சு, பனிசருக்கு, சீட்டுக்கட்டு, கில்லி தாண்டு, ஒத்தையா ரெட்டையா, பல்லாங்குழி என எல்லா விளையாட்டிலும் ஜேம்ஸ்பாண்ட்தான் நம்பர் ஒன். வில்லன்களை வெறுப்பேத்த அவர் எப்போதுமே விளையாட்டுகளில்தான் முதலில் ஜெயிப்பார். க்ளைமாக்ஸில் மொத்தமாக ஜெயிப்பார்.

பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த டை அனதர் டே வரைக்கும் கூட ஜேம்ஸ் பாண்ட் ரஜினிகாந்தாகத்தான் இருந்தார். காதல், காமம், சூது என எல்லா விளையாட்டிலும் ஜெயித்தார். அவர் காதலித்த ஃபிகர் செத்துப்போனாலும் ஓ மை காட் என ஒருநிமிடம் அதிர்ச்சியாகிவிட்டு அடுத்த ஃபிகரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தார். இப்படித்தான் ஜேம்ஸ்பாண்ட் இருந்தார்.

ஒருநாள் பியர்ஸ் ப்ராஸ்னன் ரிடையர்டானார். அந்த பாத்திரத்தில் நடிக்க ஆட்கள் தேடி ஒருவழியாக டேனியல் க்ரைக் என்கிற நடிகரை தேர்ந்தெடுத்தனர். எல்லாமே மாறிப்போனது.
பாட்ஷா ரஜினிபோல ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த ஜேம்ஸை, மகாநதி கமலஹாசன் போல மூலையில் உட்காரவைத்து ஆ.....ங்.... ஆ.... ங் என கதறி கதறி அழவைத்து ரசித்தது அக்கிரமக்கார ஹாலிவுட். வில்லனோடு சண்டையிட்டு தோற்றுப்போனார். வில்லன் கும்பலிடம் சிக்கி மரண அடிவாங்கி ரத்தவழிய தப்பியோடினார்.

தன் காதலியை பறிகொடுத்துவிட்டு சோகத்தில் தாடிவளர்த்து தண்ணியடித்தார். எந்த குணங்களுக்காக நாம் ஜேம்ஸை கொண்டாடினோமோ அது அனைத்தையும் இழந்திருந்தார். என்ன எழவுடா இது என காசினோ ராயல் படம் வந்தபோதே தமிழக மக்கள் லைட்டாக முகம் சுளிக்க தொடங்கிவிட்டனர். இந்த படத்துல மட்டும்தான் இப்படிபோல என மனதை தேற்றிக்கொண்டனர். ரஜினிகூட பாபா படத்தில் நடித்து குப்புற விழவில்லையா?
இந்த அக்கிரம அழிச்சாட்டியம் குவாண்டம் ஆஃப் சோலேசில் இன்னும் அதிகமானது.

நிறையவே அடிவாங்கி, நிறையவே தோற்று.. ‘’இருக்க இருக்க இந்த ஜேம்ஸுக்கு என்னலே ஆச்சு.. ஏன் இப்பிடியாகிட்டாப்போல’’ என மக்கள் கடுப்பாக ஆரம்பித்தனர். மக்களின் கடுப்பு இதோ ஸ்கை ஃபாலில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. க்ளைமாக்ஸில் படத்தின் இயக்குனரையும் ஜேம்ஸையும் எழுதமுடியாத வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர்.
முதல் காட்சியிலேயே ஒரு மிகபிரமாதமான சேஸிங்.. டிரெயின் மேல் பைக் ஓட்டி வில்லனை துரத்துகிறார். ஆஹா நம்ம ஜேம்ஸு மறுபடியும் ஃபார்முக்கு வந்துடாப்ல.. செம ஜாலியா இருக்கும்போலருக்கே என நிமிர்ந்து உட்கார்ந்தால்.. அவரை சுட்டுவிடுகிறாள் ஒரு சுருள்மண்டை பெண். பல நூறு அடி உயரத்திலிருந்து தொப்பக்கடீர் என தலைகுப்புற விழுகிறார் ஜேம்ஸு..

‘’பாண்ட் செத்துட்டான்’’ என அறிவிக்கிறார்கள். ஙே என தமிழ்ரசிகன் அதிர்ச்சியாகிறான்.
அதற்குபிறகு உளவாளிகள் சங்கத்துக்கே ஆப்படிக்கிறான் ஒரு வில்லன். அவனை அழித்து உளவாளிகள் சங்கத்தை காப்பாற்றுகிறார் ஜேம்ஸ். அதற்குள் அவரை பாடாய்படுத்துகிறார்கள் வில்லன்கும்பலும் உளவாளி கும்பலும்.

‘’உனக்கென்ன பாம் வச்ச பேனா வேணுமாக்கும்’’ என புது க்யூ(வெப்பன் சப்ளையர்) கலாய்க்கிறான். எப்போதும் பளிச் பிளிச் என வருகிற ஜேம்ஸ் இதில் நரைவிழுந்த தாடியோடு சோகமூஞ்சியோடு காட்சியளிக்கிறார். அவரிடம் பெரிய கேட்ஜெட்டுகள் இல்லை. க்ளைமாக்ஸில் குண்டுபல்பையெல்லாம் வைத்து வில்லன்களோடு சண்டைபோட வேண்டிய துர்பாக்கிய நிலை. கடைசியில் உளவாளிகள் சங்கதலைவி எம் செத்துப்போன பிறகு அரங்கம் அதிர அழுது புலம்புகிறார்.. முடியல!

நாம் இப்படியொரு ஜேம்ஸ்பாண்டை இதுவரை பார்த்ததேயில்லை. 80களின் இறுதியில் டிமோதி டால்டன் நடித்த இரண்டு ஜேம்ஸ்பாண்ட் படங்கள் இதேமாதிரிதான் என்றாலும் அவை அந்த அளவுக்கு புகழ்பெறவில்லை. ரொம்ப சுமாரான படங்கள்தான் அவை. அதற்கு பிறகு மீண்டும் அதே பாணியில் டேனியல் க்ரேக்கை வைத்து நம்மை கடுப்பேற்றியிருக்கிறார்.

ஜேம்ஸ்பாண்டுக்கு வயதாகிவிட்டது. அதோடு அவருடைய உடல்நிலையும் முன்பு போல இல்லை. கொஞ்ச தூரம் ஓடினாலும் மூச்சு வாங்குகிறது. அவரை சுள்ளான்களெல்லாம் கேலி பேசுகிறார்கள். போனால் போகுதென்று படத்தில் ஒரே ஒரு ஹீரோயின் வைத்திருக்கிறார்கள். அந்த பெண்ணையும் இடைவேளைக்கு முன்பே கொன்று விடுகிறார்கள். படம் முழுக்க பேசி பேசி தமிழ்ரசிகனை கதறவிடுகிறார்கள்.
அதிரடியான சண்டைகாட்சிகள் இல்லை. நெஞ்சம் மகிழ்விக்கிற கில்மா காட்சிகளும் இல்லை. மொத்தத்தில் இதுவரை தமிழ்திரை கண்டிராத யதார்த்தபட ஜேம்ஸ்பாண்டாகவே இருக்கிறார் இந்த புதுபாண்ட்.

இப்படம் உலகெங்கும் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரைக்கும் வந்ததிலேயே இதுதான் தி பெஸ்ட் ஜேம்ஸ்பாண்ட் மூவி என அறிவுஜீவிகள் புகழாரம் சூட்டுகிறார்கள். பல ஆயிரம் கோடி வசூலை வாரிக்குவித்திருக்கிறது. அதில் நிச்சயம் உண்மைதான். ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருப்பதும், அதிரடி ஆக்சனை கைவிட்டு பழமைக்கும் (ஜேம்ஸ்) புதுமைக்குமான(தொழில்நுட்பம்) போட்டியாக படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருப்பதும் அருமைதான். கனிணி முன்னால் உட்கார்ந்து கொண்டு சும்மா வெட்டி பேச்சு பேசாதே.. களத்தில் இறங்கினால்தான்டா உங்களுக்கு கஷ்டம் தெரியும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார் ஜேம்ஸ்.

இயான் ஃபிளமிங் கூட தன்னுடைய நாவல்களில் இப்படிப்பட்ட ஜேம்ஸ்பாண்டைதான் உருவாக்கியிருந்தார். அவன் சாதாரண மனிதனாகவே இருந்தான். திரைப்படங்களில்தான் ஜேம்ஸ் அசகாயசூரனாக மாறினார். அந்த இமேஜை மாற்றி இயான் ஃபிளமிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் படமாக்கியிருப்பதையும் பாரட்டலாம்தான்.

அதுபோக என்றைக்கிருந்தாலும் பழசு பழசுதான் பெரிசு பெரிசுதான் என இங்கிலாந்து நாட்டின் பெருமையை ஜேம்ஸ்பாண்ட் உலகுக்கு உணர்த்துவதும் ஓக்கேதான்.
ஆனால் சாதாரண தமிழ்ரசிகன் எதிர்பார்க்கிற மசாலாவே இல்லாத ஜேம்ஸ் பாண்டை எவ்வளவு நேரம்தான் திரையில் சகித்துக்கொண்டு பார்க்க முடியும்.

பத்து நிமிடத்துக்கு ஒரு சேஸிங்கோ சண்டைகாட்சியோ படுக்கையறை கில்மாவோ இல்லையென்றால் தமிழ்ரசிகன் கடுப்பாகமாட்டானா? எந்த நேரத்தில் ‘’பேட்மேனை’’ நம்ம கிறிஸ்டோபர் நோலன் சாதாரண மனிதனாக மாற்றி யதார்த்த சூப்பர் ஹீரோவை உருவாக்கினாரோ அப்போதிருந்து எல்லா சூப்பர் ஹீரோக்களையும் சாதாவாக மாற்றுகிற ட்ரெண்ட் ஹாலிவுட்டில் உருவாகிவிட்டது. (நம்ம முகமூடிகூட அதே பாதிப்பில்தான் வந்தது)

இந்த யதார்த்த பட ஹீரோ வியாதி இப்போது ஜேம்ஸ் பாண்டையும் விட்டுவைக்கவில்லை. இனி வரும் காலங்களிலும் புதுவித கேட்ஜெட்ஸ் இல்லாத, அழுமூஞ்சி, அழுக்குபாண்டை ஜேம்ஸ்பாண்ட் தாத்தவைதான் நாம் திரையில் பார்க்க வேண்டியிருக்குமோ என்னவோ.

ஜேம்ஸை அந்த கர்த்தர்தான் காப்பாத்தணும்!


(சினிமொபிட்டா இணையதளத்திற்காக எழுதியது)