![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpFY96HUt7X0Iqs4Cr45jO7qD5S9ZjuY7CpabQ673z9SKKVu6CDbbwG5lGKYLUdnyd8KO-vV-T3rIjRKhNUYE1KaPCarjeBajjkwjQ8ePL439XGVlvrFp4OMFcnKxy4LL1_oym_93YqM8/s320/Bus_man_stares_out_window_by_Iquey.jpg)
சமகால தமிழ்சினிமாவின் அத்தனை ஓவர் ஆக்டிங் நடிகர்களையும் ஒன்றாக திரட்டி ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும். சமீபத்தில் பார்த்த ஒரு படத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தது. பத்து ரூபாய் கொடுத்தால் பத்து கோடி ரூபாய்க்கு நடிப்பவர்ள் சங்கதலைவரான ராஜேஷ் கூட இப்படத்தில் நடித்திருக்கிறார்.
படத்தில் எப்போதும் யாராவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கேப்பே கிடையாது. அதிலும் பிரதான பாத்திரம் ஒன்று குஞ்சு,பிஞ்சு என இரட்டை அர்த்த வசனங்களை வேறு போகிற போக்கில் உதிர்த்தபடி அலைகிறார். இந்த லட்சணத்தில் இது குடும்பப்படமாம்! படத்தின் இயக்குனர் இயல்பிலேயே நிறையவே பேசக்கூடியவர், அதனால் படத்தின் நூத்திசொச்சம் பேரும் அவரைப்போலவே பேசிப்பேசி...
படத்தில் நடித்த ஒவ்வொருவரும் எப்படியாவது தன்னோடு நடிக்கும் நடிகரை விட அதிகமாக நடித்துவிட வேண்டும் என்கிற வெறியோ என்னவோ? ஒவ்வொரு பாத்திரமும் முந்தைய பாத்திரம் வசனம் பேசி முடிப்பதற்கு முன்பே பறக்காவெட்டிபோல வசனம் பேசுவதை சகிக்க முடியவில்லை. இரண்டுபேர் உரையாடும் போது இருக்கிற இயல்பான அந்த இரண்டு நொடி கேப் கூட இல்லாமல் இரண்டேகால் மணிநேரம் வளவளவளவென.. காதுக்குள் கொய்ங்ங்ங்..
படத்தில் ஒரு டீக்கடை காட்சி வருகிறது. அதில் மொத்தமாகவே நான்கு பேர்தான் இருக்கிறார்கள். ஆனால் படம் பார்க்கும் நம்முடைய காதில் நாலாயிரம் பேர் பேசுவதன் கொடூரத்தை உணரமுடிகிறது.
படம் தொடங்கி ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் தலா ஒரு பாத்திரம் புதிதாக அறிமுகமாகிறது. அது இன்டர்வெல் முடியும் வரைக்கும் கூட நீள்வது... செம கடுப்பாக்குகிறது. முதல்பாதியில் அறிமுகமான எல்லா ஓவர் ஆக்டிங் நடிகர்களுக்கும் இரண்டாம்பாதியில் தலா ஐந்து நிமிடங்கள் வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குனர். அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸூக்கும் சேர்த்து செம நடிப்பு நடிக்கிறார்கள்!
படத்தின் நாயகனிடம் நடிப்பும், நாயகிக்கு இடுப்பும்.. இருக்கு ஆனா இல்லை. படத்தில் மனோபாலா மட்டும் ஏனோ நடிக்காமல் போனது வருத்தம் தந்தது. ஏன் என்றால் அவர் மட்டும்தான் படத்தில் மிஸ்ஸிங். பஸ்ஸை தவறவிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்,
படம் முழுக்க ஏகப்பட்ட ரிப்பீடட் ஷாட்டுகள், ஏனோதானா என்று போட்டு தாளித்திருக்கிற பிண்ணனி இசை. படத்தின் ஒரு இடத்தில் 'AMELIE' படத்தின் இசையைக்கூட சுட்டுப்போட்டிருக்கிறார் வித்தியாசமான அந்த இசையமைப்பாளர். சில இடங்களில் ஷகிலா பட இசையைக்கூட உபயோகித்திருந்ததை பார்க்கும் போது... பசுமையான இடங்களைக்கூட காஞ்சுபோன கட்டாந்தரையாக காட்டுகிற உத்தியெல்லாம்.. அடப்போங்கப்பா.
கஷ்டபட்டு ஒரு பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் சீட்டு பிடித்து ஓர் உற்சாக பயணத்துக்கு தயாராகி குஷியாக இருக்கும்போது... பத்துமீட்டர் வண்டி நகர்ந்த பின் நமக்கு பக்கத்து சீட்டு நண்பர் அப்படியே உவ்வேக் என வாந்தியெடுக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.. அப்படி இருந்தது.