Pages

05 December 2013

நூல்கள் நூறு - எழுத்தாளர் பாராவின் பட்டியல்





இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது 7ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் பா.ராகவன் தொகுத்த இந்த சிறிய பட்டியலை யாரோ முன்னாள் வலைப்பதிவர் ஒருவர் தன் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஒவ்வொருவரும் இப்புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும் என்கிற ஒரு குட்டி அறிமுகத்தோடு இப்பட்டியலை மிக மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார் பாரா. இது டாப்டென் பட்டியலாக இல்லாமல் முன்னும்பின்னுமாக தொகுக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சி சமயத்தில் பலருக்கும் பயன்படும்.

(அடுத்த ஆண்டு முழுக்க வேறெதையும் படிக்காமல் இந்த பட்டியலில் இருக்கிற புத்தகங்களில் பாதியை மட்டுமாவது முழுமையாக படித்துவிட நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.)

வாசிப்பதை சுவாசமாக கொண்ட எழுத்தாளர் பாரா 2006க்கு பிறகு வாசித்த நூல்களில் டாப் 100ஐயும் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் இல்லையா? இந்த எளிய வாசகனின் கோரிக்கையை ஏற்று.. மனதுவைக்கவேண்டுகிறோம்.


***

1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.