Pages

17 December 2013

மாமிகள் இருவர்





பொதிகை தொலைகாட்சியில் ஏதோ நிகழ்ச்சி. இரண்டு மாமிகள் ஒரு டேபிளுக்கு முன்னால், விலையுயர்ந்த பட்டுப்புடவை கழுத்து நிறைய நகைகளோடு பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு முன்னால் மிக்ஸி, வடைசட்டி, அடுப்பு, காய்கறிகள் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு மாமி சமைப்பவர் என்பதை அவர் கையிலிருந்த நீண்ட கரண்டியே உணர்த்துவதாக இருந்தது. இன்னொரு மாமி நிறைய மேக்அப் போட்டுக்கொண்டு பக்கத்தில் நின்றபடி அடுப்பு சட்டியை எட்டிபார்த்தபடி பேசிக்கொண்டேயிருப்பதை வைத்து அவர்தான் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதை புரிந்துகொள்ளவும் முடிந்தது. பொதிகை தொலைகாட்சியும் ஏர்இந்தியா போலவே வயதான தாத்தா பாட்டிகளின் சொர்க்கமாக திகழ்வது ஆச்சர்யமானதுதான்.

பொதிகை தொலைகாட்சியில் இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தால் யார் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது!

இரண்டு மாமிகளும் நிறைய பழங்களை அடுக்கி வைத்து ஏதோ செய்துகொண்டிருந்ததை பார்க்கவும் எனக்கு ஆர்வமாகி தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். வீட்டிலேயே ஃப்ரூட் சாலட் செய்து சாப்பிட எனக்கு எப்போதும் பிடிக்கும். இணையத்தில் விதவிதமான ஃப்ரூட் சாலட் ரெசிப்பிகள் பார்த்து அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது செய்து பார்ப்பதுண்டு.

பெரிய மாமி ஒரு அன்னாசி பழத்தை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு கப்பில் எடுத்து வைத்துக்கொண்டார். அருகிலிருந்து டிவிமாமி ஓ இதை அரைச்சு இப்படி வச்சிக்கணுமா என்றார்.

பிறகு ஒருவாழைபழத்தை எடுத்து அதையும் துண்டுதுண்டுகளாக நறுக்கி அதையும் ஒரு கப்பில் வைத்துக்கொண்டார்.மீண்டும் அதே மாமி அதே வசனம். ஓ இதை அரைச்சு இப்படி வச்சிக்கணுமா?

ஏதோ ஃப்ரூட் சாலட் அல்வா மாதிரி ஏதோ செய்யப்போகிறார் என்று யூகித்தேன். ஆனால் அடுத்து ஒரு வெள்ளரிக்காயை எடுத்து அதையும்... துண்டுதுண்டாக நறுக்கி.. அதற்கு பிறகு தக்காளி... அதற்கு பிறகு பப்பாளி.. மாம்பழம்... இப்படியே பத்துக்கும் அதிகமான பழங்கள்.. பிறகு பீட்ருட்,கேரட்,வெள்ளரி என காய்கறிகள். பிறகு ஊறவைத்த பாசிப்பயறு அதையும் அரைத்து ஒருகப். நடுநடுவே...ஓ இதை அரைச்சுட்டு இப்படி வச்சிக்கணுமாக்களும் தொடர்ந்தது.

அந்த மாமி பழங்களை தருவதும் இந்த மாமி வெட்டிப்போடுவதுமாக கப்புகள் ஒருபக்கம் நிறைந்து கொண்டிருந்தன... அடுப்பில் ரொம்ப நேரமாக கொதித்துக்கொண்டிருந்த என்னமோவை எடுத்து கீழே வைத்தனர். அதில் என்ன இருக்கும்.. ஒருவேளை அதுதான் இந்த சமையலில் சீக்ரெட் வெப்பனோ என்றெல்லாம் நினைத்தேன்.

''இப்ப பாருங்க தண்ணீ நல்லா சூடாகிடுச்சு'' என்றார் மாமி! அதற்கு ஆமாம் என்று எட்டிப்பார்த்து பதில் சொன்னார் டிவிமாமி.

அந்த தண்ணீரில் நன்னாரி வேர்களை தூக்கிப்போட்டு அந்த நீரை ஊறவைத்து வடிக்கட்டி வைத்துக்கொண்டு, அதை எல்லா கப்பிலும் கொஞ்சகொஞ்சம் ஊற்றினார் மாமி. வாசனைக்காக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

இப்போது தக்காளி ஜூஸை எடுத்து வெள்ளரியில் கலக்க ஆரம்பித்தார். அதுபோல வாழைப்பழ கலவையை பப்பாளியிலும், இப்படியாக ஒவ்வொரு ஜூஸையும் இன்னொன்றோடு கலக்கவும் தொடங்கினார்.

எல்லா கலவைகளையும் கலக்கி முடித்தபிறகு,... பத்துப்ளஸ் கப்புகள் இப்போது பாதியாக குறைந்திருந்தன. உப்பு இல்லை... சக்கரை இல்லை.. ஏதோ இயற்கை உணவு போல.. என்று நினைத்தேன்.

''இந்த கலவைகளை அடுத்து என்ன பண்ணனும்'' என்று நம் மனதில் எழுந்த அதே கேள்வியையே அந்த டிவிமாமியும் கேட்டார்.

''இதோ இந்த வாழைப்பழ பேக்கை திங்கள் கிழமை, பப்பாளிபேக்கை செவ்வாய்க்கிழமை.. இந்த பீட்ரூட் பேக்கை புதன்கிழமைனு ஏழு நாள் ஏழு பேக் யூஸ் பண்ணினா முகம் நல்லா ஜம்முனு ஜொலிக்கும்.. முகத்துல இருக்கிற பிம்பிள்ஸ், கறும்புள்ளிகள், முகசுறுக்கம் எல்லாம் மறைஞ்சி பளிச்னு ஆகிடுவீங்க'' என்றார் பெரிய மாமி. ஓ... இதை எப்படி பயன்படுத்தணும் என்று தொடர்ந்து டிவிமாமி கேட்க..

''ரொம்ப சுலபம் நம்ம நன்னாரி தண்ணியை முகத்தில் தேய்த்து கழுவிட்டு.. இந்த பழக்கலவைகளை ஃபேஸ்ல அப்ளை பண்ணிட்டு கழுவினா ரொம்ப அழகா ஆகிடுவீங்க'' என்றார் பெரிய மாமி.

இதுவரைக்கும் எனக்கு கோபம் கொஞ்சமாகத்தான் வந்திருந்தது. ஆனால் டிவிமாமி அதற்கு பிறகு கேட்டதுதான் ''ஓ இதுதான் உங்க அழகின் ரகசியமா?'' என்றார்.

அந்த அடக்கமான மாமியோ.. ''ஆமா.. எங்க ஆத்துக்காரர் எப்பயும் அப்படிதான் ஷோல்வார். ஆனா மனசை எப்பவும் சந்தோஷமா வச்சுண்டா இதெல்லாம் எதுமே தேவயில்லை'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

என்ன அவசரமோ என்னமோ திடீரென வேறெதோ ஒளிபரப்பு மாறுவதாக அறிவிப்பு வந்தது. ரொம்ப வயசான ஆனால் நிறைய மேக்கப்போடு சில மலையாள மாமிகள் அந்தக்கால அட்டைபெட்டி ஸ்டுடீயோவில் நின்று ஏதோ பாரம்பரிய நடனம் ஆட ஆரம்பித்துவிட்டிருந்தனர். பொதிகை சேனல் மாறவேயில்லை.