Pages

20 December 2013

புக்கு பூச்சி




ஒரு ஊர்ல ஒரு புக்கு பூச்சி இருந்துச்சு. அந்த புக்கு பூச்சிக்கு ஒரே ஒரு கண்ணுதான், ஆனா வாய் மட்டும் நாலு இருக்கும். அப்புறம் அதுக்கு ஆறு காலு, எட்டு கை… பெரிய தொந்தியும் இருக்கும்.

அது நிறைய புக்கு படிக்கும். அது நிறைய படிச்சிதுன்னா அதுக்கு நிறைய பசிக்கும். அப்போ அது அந்த புக்கையே சாப்ட்ரும். அதனாலதான் அதுக்கு பேர் புக்கு பூச்சினு வந்துச்சு.

முதல்ல அந்த புக்கு பூச்சி ரொம்ப குட்டியாதான் இருந்துச்சு. அது நிறைய புக்குங்களை சாப்ட்டு சாப்ட்டு வயிறு நல்லா பெரிசா வளர்ந்துடுச்சு. அதனால தொந்தியை வச்சுகிட்டு டிங்கு டிங்குனு ஆட்டிகிட்டே நடக்கும்.

யாருமே இல்லாத வீட்டுக்குள்ள போயி முதல்ல புக்கு இருக்கானு தேடி பாக்கும். அப்புறம் கிடைச்ச புக்கையெல்லாம் எடுத்து படிக்கும். படிக்க படிக்க பசிக்கும்ல பூச்சிக்கு.. உடனே அது அந்த புக்கை அப்படியே பிச்சு பிச்சு மெதுவா சாப்ட்ரும்.

இப்படியே வூர்ல இருக்குற எல்லா வீட்டுலயும் நைட்டான போயி எல்லா புக்கையும் சாப்ட்டு முடிச்சிடுச்சு. ஸ்கூல் பாப்பாங்களோட ஏபிசிடி புக்குலாம் கூட சாப்ட்ருச்சு.

பாப்பாவையெல்லாம் அவங்க மிஸ் ஏன் புக்கு எடுத்துட்டு வரலனு நல்லா திட்னாங்க. அதனால அவங்க பேரன்ட்ஸ்லாம் சேர்ந்து புக்கு பூச்சிய குச்சி வச்சி அடிச்சு தொரத்தி விட்டுட்டாங்க.. பாவம் புக்கு பூச்சி அழுதுகிட்டே ரொம்ப தூரம் போய்டுச்சு..

அப்போ அதுக்கு திடீர்னு பசிச்சிச்சு. ஆனா அங்கே புக்கே இல்ல. அப்போ அங்கே ஒரு வீடு இருந்துச்சு. அந்த வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருந்துச்சு. அந்த குட்டிப்பாப்பா வாசல்ல உக்காந்து அவளோட புக்ல ஏ ஃபார் ஆப்பிள்னு படிச்சிட்டிருந்தா.. அப்போ அந்த பக்கமா புக்கு பூச்சி பசியோட வந்துச்சு.

அது பாப்பாகிட்ட வந்து பாப்பா பாப்பா எனக்கு ரொம்ப பசிக்குது உன் புக்கு குடேனு கேட்டுச்சு. அப்போ பாப்பா சொல்லுச்சு நான் குடுக்க மாட்டேன் நீ தின்னுடுவே அப்புறம் மிஸ் என்னை அடிப்பாங்கனு. அப்போ அந்த புக்கு பூச்சி அழுதுச்சு. எனக்கு ரொம்ப பசிக்குதே எனக்கு யாருமே புக்கு குடுக்க மாட்டேங்குறாங்களேனுச்சு.

பாப்பாவுக்கு பாவமா இருந்துச்சு. சரி இருனு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயி பாப்பாவோட அம்மாகிட்ட இரண்டு இட்லி கேட்டுச்சு. அம்மாவுக்கு குடுத்தா. அதை வாங்கிட்டு வந்து புக்கு பூச்சிகிட்ட ‘’இந்த இதை சாப்டுனு’’ சொல்லுச்சு பாப்பா.

அதுக்கு புக்கு பூச்சி சொல்லுச்சாம் எனக்கு இட்லிலாம் வேண்டாம் எனக்கு புக்குதான் வேணும்னு.

அதுக்கு பாப்பா சொல்லுச்சு ‘’நான்கூட இட்லி வேணானுதான் சொல்லுவேன்.. ஆனா அம்மா என்னை மடில உக்காத்தி வச்சி கொஞ்சி கொஞ்சி ஊட்டி விடுவா நான் ஷாப்ட்ருவேன், நீயும் இந்த இட்லிய உங்க அம்மாகிட்ட குடு அவங்க ஊட்டி விடுவாங்கனு பாப்பா சொன்னா..
அப்போ புக்கு பூச்சி அழுதுச்சாம். எனக்கு அம்மாவே இல்லைனு சொல்லுச்சாம். உடனே பாப்பாவும் அழுதுட்டாளாம். பாப்பா யோசிச்சாளாம். என்ன பண்ணலாம்…?

புக்கு பூச்சிய தூக்கி அவ மடிலயே வச்சுகிட்டு இட்லிய பிச்சு பிச்சு புக்கு சக்கர தொட்டு பூச்சிக்கு ஊட்டிவிட ஆரம்பிச்சாளாம்.. அது வேண்டாம் வேண்டாம்னுச்சாம்.. ஆனாலும் பாப்பா ‘’ஏய் புக்கு பூச்சி அடம்புடிக்காத உன்னை பூச்சாண்டிக்கு புடிச்சு குடுத்துடுவேனு’’ மிரட்டி மிரட்டி ஊட்டி விட்டாளாம்.

புக்கு பூச்சி மொத மொத இட்லி சாப்டுச்சாம். அது ரொம்ப டேஸ்டா இருந்துச்சாம். புக்கு பூச்சி ம்ம் நல்லாருக்குனு சிர்ச்சிச்சாம். அதுக்கு இட்லினா ரொம்ப பிடிச்சிடுச்சாம். இப்போ பசியெல்லாம் போய்டுச்சாம்.

அது பாப்பாவுக்கு ‘’ரொம்ப நன்றி பாப்பா’’னு சொல்லிட்டு கிளம்பிடுச்சாம்.. அதுக்கப்பறம் புக்கு பூச்சி நிறைய புக்கெல்லாம் படிக்கும் ஆனா சாப்டாது. ஏபிசிடிலாம் ஆஆஈஈலாம் படிக்கும். அப்போ அதுக்கு பசிக்கும்ல .. ஆனா புக்கு சாப்டாது. நேரா பாப்பாகிட்ட வரும், பாப்பா இட்லி குடுப்பா சாப்டும்.

புக்கு சாப்டறத விட்டுட்டு இட்லி சாப்ட ஆரம்பிச்சதால அதை எல்லாரும் இட்லிபூச்சினு இட்லிபூச்சினு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாரும் அதுக்கு தினமும் இட்லி குடுத்தாங்க. அது நிறைய இட்லி சாப்ட்டுட்டு புக்கெல்லாம் படிச்சிட்டு ஜாலியா இருந்துச்சு.

**

எழுத்தாளர் பாஸ்கர்சக்தியின் இரண்டுவயது குட்டிப்பாப்பா கயல்விழிக்காக சொன்ன குட்டிக்கதை. அவளுக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது என்பதில் அடியேனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதைவிட என்ன வேணும்! இந்த ஆண்டு ஒரு குழந்தைகள் கதையாவது எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.. அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த கயல் பாப்பாவுக்கு நன்றி.