Pages

27 December 2013

இலக்கிய மேடையில் ஒரு குட்டி எலி!




நக்கீரன் கோபால், திருமாவளவன், எழுத்தாளர் இமையம், எஸ்ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், பாரதிகிருஷ்ணகுமார், புதியதலைமுறை டிவியின் குணசேகரன், லவ்குரு என எல்லோருமே அவரவர் துறைகளில் ஸ்பெஷல் ஆளுமைகள். அடியேனோ சாதா ஆளுமையாகக்கூட ஆகிடாத சாதா ஆள். சொல்லப்போனால் இன்னும் முழுசாக ஒரே ஒரு நூல் கூட எழுதியதில்லை. அந்த மேடையில் ஒரு குட்டி எலியைப்போலவே பப்பிஷேம் மேலிட அமர்ந்திருந்தேன்.

கனவுபோலத்தான் இருக்கிறது. இவர்களில் சிலரை இவ்வளவு அருகில் பார்க்கும் வாய்ப்பாவது கிடைக்குமா என்று அவ்வப்போது நினைப்பதுண்டு! அதனால் முதல் பத்தியிலேயே மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு நன்றியை சொல்லிவிடுவோம். இடம் – சென்னை புக் பாய்ண்ட், நிகழ்வு – மனுஷ்யபுத்திரனின் மூன்று நூல் வெளியீட்டரங்கு.

‘’இந்த புக் ஃபேருக்கு உங்க கவிதை தொகுப்பு ஒன்னுகூட வரலையா.. மனசுக்கு கஷ்டமாருக்கு சார்’’ என சாட்டிங்கில் நான் கேட்ட ஒரே ஒரு கேள்விக்காக மனுஷ்யபுத்திரன் என்னையும் அந்த மேடையில் அமரவைத்து பேசவைப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதுமாதிரி சமயங்களில்தான் மனுஷ்யபுத்திரன் நல்லவரா கெட்டவரா என்கிற சந்தேகம் மைல்டாக மனதுக்குள் பூக்கும்! ஏன் என்றால் அந்த மேடையில் அமர்ந்திருந்தது பரிசா? தண்டனையா? என்றே இன்னும் விளங்கவில்லை!

மேடையில் அமர்ந்திருந்த அந்த மூன்று மணிநேரமும் நரகவேதனையாக இருந்தது. தலைக்கு மேலிருந்த ஏசி வேறு மொட்டைத்தலையில் குளிர் தெளிக்க… ஏற்கனவே பதட்டத்திலும் பயத்திலும் நடுங்கிக்கொண்டிருந்த உடல், குளிரில் ரொம்பவும் விரைத்து உச்சா வேறு முட்டிகொண்டிருக்க.. எழுந்து செல்லவும் தயக்கம் அதிகரிக்க… கஷ்டப்பட்டு அனைத்தையும் அடக்கிக்கொண்டு... நானும் எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது!

நல்ல வேளையாக மனுஷ்யபுத்திரன் அருகில் இருந்ததால் அவரிடம் ஏதாவது பேசிக்கொண்டேயிருந்தபடியும் மேடைக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த அழகான காந்தக்கண்ணழகியை சைட் அடித்தபடியும் நேரத்தை கடத்திக்கொண்டிருந்தேன்.

மேடையில் பேசுவதில் உள்ள தயக்கமும் அச்சமும் படபடப்பும் பயமும் இன்னமும் என்னைவிட்டு விலகிவிடவில்லை. முன்பு சில மேடைகளில் மிகுந்த மெனக்கெடலுடன் நிறைய தயாரித்துக்கொண்டு போய் வதவதவென்று நிறைய உளறிக்கொட்டியிருக்கிறேன் என்பதால் இம்முறை எதையும் தயாரிக்காமல் மனதுக்குள்ளாகவே இரண்டுநாட்கள் என்ன பேசுவதென்பதை உருப்போட்டபடியிருந்தேன்.

என்ன பேசலாம் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றிலிருந்து பேச்சை துவங்கினால் கைத்தட்டை அள்ளிடலாமே.. வேண்டாம்.. நமக்கு கவிதையும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது.. அவருடைய கட்டுரைகளிலிருந்து மேற்கோள்களை… அதுவும் வேண்டாம். கடைசியாக ஒரு சம்பவத்தை முன்வைத்து பேசலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை டூ பாண்டிச்சேரி போகும் வழியில் இருக்கிற கடலூர் என்கிற கிராமம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். சாதிவெறி தாண்டவமாடும் சிறிய கிராமம் அது. தொடர்ந்து தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிற இடம். நான் போயிருந்த போது கூட யாரோ தலித்பையன் வன்னியர் பெண் ஒருத்தியிடம் பேசிவிட்டான் என்று பெரிய பிரச்சனை. தலித் மக்கள் வாழும் பகுதியில் இருந்த டீக்கடை ஒன்றில் அமர்ந்து சில இளைஞர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பேச்சு எங்கெங்கோ சுற்றி இளவரசன் மரணம் குறித்து போனபோது.. அந்த பையன்கள் மிகவும் வருத்தமாக பேசினார்கள்.

ஊடகங்கள் எப்படி இப்பிரச்சனையை அணுகின என்றும் தங்களுக்கு ஆதரவாக ஒரு குரல்கூட ஒலிக்கவில்லை என்றும் மிகுந்த மனவேதனையோடு பேசினர்.

அந்த சமயத்தில் ஒரு இளைஞர் அந்த பையனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயதுதான் இருக்கும்.. ‘’மனுஷ்யபுத்திரன் ஒருத்தர்தான்ங்க.. இந்த பிரச்சனைல எங்களுக்காக பேசினார்.. நக்கீரன்ல அவரோட கட்டுரையை படிச்சப்ப ரொம்ப ஆறுதலா இருந்தது’’ என்றும் சொன்னான்,. ‘’தம்பி அவரு ஒரு கவிஞர் உங்களுக்கு தெரியுமா’’ என்றேன். ‘’அதெல்லாம் தெரியலைங்க அவரோட கட்டுரை படிக்கும்போது அவ்ளோ ஆறுதலா அனுசரணையா இருக்கும்ங்க’’ என்றான். எனக்கு நிஜமாகவே ஆச்சர்யமாக இருந்தது.

மனுஷ்யபுத்திரனை ஃபேஸ்புக்கில் நிறையவே கிண்டல் செய்தாலும் அவருடைய இந்த ரீச் மறுக்க முடியாதது. அவருடைய குரல் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட எளிய மக்களுக்காக ஒலிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட தருணம் அது. அதையே மேடையில் பேச தீர்மனித்தேன். அதை எப்படியெல்லாம் பேசலாம் என மனதுக்குள் ஒத்திகை பார்த்தும் கொண்டேன். அதோடு இன்னும் சில விஷயங்களையும் பேச யோசித்து வைத்திருந்தேன்.

மேலே எழுதியதைப்போல என்னால் பேச முடியவில்லை என்றாலும் எழுத்தில் சொல்ல நினைத்ததை ஒரளவேனும் பேச்சில் கடத்தியிருப்பேன் என்றே நினைக்கிறேன். சிலர் கைதட்டினார்கள். மிகுந்த பதட்டத்தோடு பேசியதில் நிறைய சொல்லாமல் விட்டுட்டோமோ என்றும்கூட பேசிமுடித்து அமர்ந்தபின் தோன்றியது. போகட்டும். நண்பர்கள் சிலர் ‘’முந்தைய மேடைகளோடு ஒப்பிடும்போது நல்ல இம்ப்ரூவ்மென்ட்’’ என்றனர். அதுவே மகிழ்ச்சியாக இருந்தது. நக்கீரன் கோபால் அண்ணாச்சியும், புதியதலைமுறை குணசேகரனும் நல்லா பேசினப்பா இயல்பா இருந்தது என்று வாழ்த்தினார்கள். மகிழ்ச்சி இரட்டிப்பானது.

மனுஷ்யபுத்திரன் மாதிரி மகத்தான இலக்கிய ஆளுமையின் புத்தக வெளியீட்டிலேயே கலந்துகொண்டுவிட்டபடியால் நமக்கு இப்போது எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்துவிட்டது என்பதால், ‘’இங்கு நல்ல முறையில் அனைத்துவகை புத்தகங்களும் குறைந்தசெலவில் வெளியிட்டுத்தரப்படும்’’ என்று போர்டு வைத்துவிட தீர்மானித்திருக்கிறேன்.

யாரோ அராத்தாம் அவர் புத்தகத்தை வெளியிடணுமாம்…. சிஎம் ஆலயே முடிலயாம் என்னை முடிச்சி தர சொல்றாரு.. நான் ரொம்ப்ப்ப பிஸி…