Pages

27 December 2013

பாலுமகேந்திராவின் தலைமுறைகள்




சமீபத்தில் இவ்வளவு எளிமையான ஒரு தமிழ் படத்தை பார்த்த நினைவில்லை. தமிழ்சினிமாவில் எப்போதாவது அரிதாக மேற்கொள்ளப்படும் ‘’மாற்று சினிமா’’ முயற்சிகளில் ஒன்றாகவே ‘தலைமுறைகள்’ திரைப்படத்தையும் குறிப்பிடலாம். நிறையவே சின்னதும் பெரியதுமாக ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் மாற்றுசினிமா முயற்சி என்கிற அளவில் இப்படம் நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான்.

உதயம் காம்ப்ளக்ஸின் மிகச்சிறிய திரையரங்கமான மினி உதயத்தில்தான் படம் பார்த்தேன். ஒருநாளைக்கு ஒரு காட்சிதான் அதுவும் காலைகாட்சி மட்டும்தான்! நான் சென்றபோது தியேட்டர் ஆல்மோஸ்ட் காலியாகத்தான் இருந்தது. நேரம் செல்ல செல்ல நிறையபேர் நிறைந்தனர். அது ஒரு விடுமுறை நாள் என்பதால் பிரியாணிக்கும் என்றென்றும் புன்னகைக்கும் டிக்கட் கிடைக்காமல் திட்டிக்கொண்டே சீட்டுகளில் அமர்ந்தனர். நிறைய காதலர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்று நினைத்து வந்து ஏமாந்து போனதை பார்க்க முடிந்தது.

யாருக்கும் படம் பார்க்கிற ஆர்வமேயில்லை. இவ்ளோ தூரம் வந்துட்டோம் எதையாவது கருமாந்திரத்தை பார்த்துட்டு போவோம் என்கிற மனநிலையோடுதான் அமர்ந்திருந்தனர். சிலர் அதை உரக்கவே தங்களுடைய மனைவிகளிடமும் நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டிருந்தனர். டைட்டில் ஓடத்துவங்க பின்னணியில் ஒரு பாட்டு ஓலிக்க.. அப்போதே அடங்கோ என திட்டத்துவங்கிவிட்டிருந்தது பார்வையாளர் படை. ஆனால் படம் செல்ல செல்ல எல்லோருமே ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டது ஆச்சர்யம்தான்! உதயம் தியேட்டர் பார்வையாளர்கள் மோசமானவர்கள்.. படம் கொஞ்சம் போர் அடித்தாலும் ஓத்தா ஒம்மா என்று வசை பாடிவிடுபவர்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

இயல்பான அலட்டலில்லாத நகைச்சுவை காட்சிகள் படம் முழுக்க. எந்த இடத்திலும் ‘’இது காமெடி சீன் எல்லாரும் சிரிங்க’’ என்கிற கோணங்கித்தனங்களெல்லாம் இல்லவே இல்லை. போலவே சீரியஸ் காட்சிகளும் இது சோக சீன் என்பதை அறிவிக்கிற அச்சுபிச்சு டொட்டொடொட்டடோய்ங் இசை கூட இல்லை. அதுவும் இயல்பாக கடந்து போகிறது.

மூன்று முறையும் ஆண்குழந்தையே பெற்று நான்காவது அட்டெம்ப்ட் கர்ப்பமாகி பிள்ளை பெற்று வீடுதிரும்புகிற மகளை ஆசிர்வதிக்கிறார் தந்தை. ‘’என்னம்மா இந்த முறையும் ஆம்பளை பிள்ளையா’’ என்று கேட்க.. அந்த பெண் ‘’இல்லைப்பா பொண்ணு’’ என்று சொன்னதும் பெருமிதமாக அவளை தூக்கி ‘’நீ ஜெயிச்சுட்ட’’ என்று அந்த பெரியவர் சொல்லும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது! தன் அம்மாவிடம் போய் ‘’அம்மா இதுல பால் வருமாமா’’ என்று மார்பை காட்டிக் கேட்கிற சிறுவனிடம் ஆமாப்பா வந்துட்டுருந்துச்சு என்கிறாள் அம்மா. ‘’ஏன் இப்போ வரலை’’ என்று ஏக்கமாக கேட்பவனிடம்.. ‘’நீ எல்லாத்தையும் குடிச்சிட்ட’’ என்று சொன்னதும் அப்படியே ஓடிப்போய் அவளை கட்டி அணைத்து முத்தமிட்டுவிட்டு ஓடுகிறான். அந்த அம்மா அப்படியே சலனமின்றி அமர்ந்திருக்க காட்சி முடிகிறது!

கிளைமாக்ஸில் தாத்தா இன்றி அந்த பையன் மட்டும் நடந்துபோகிற அந்த ஒரே ஒரு ஷாட் போதும்.. பாலுமகேந்திராவின் திறமையை சொல்ல! (ஆனால் அதற்கு பிறகு வருகிற மொக்கை காட்சிகள் படத்தை கிமு காலத்துக்கே இழுத்துச்செல்கிற முட்டாள்த்தனம்.. தயாரிப்பாளர் சசிகுமாருக்காக செய்துகொண்ட சமரசமாக கூட இருக்கலாம்.. எரிச்சல்)
படத்தில் கதையெல்லாம் இல்லை. சில நல்ல காட்சிகள் அல்லது தருணங்களின் தொகுப்பாக இப்படம் இருக்கிறது என்று சொல்லலாம்.

மூன்று வெவ்வேறு தலைமுறை மனிதர்களின் சமகால சிக்கல்களின் தொகுப்பு என்று இப்படத்தை பற்றிச் சொல்லலாம்.
ஆங்கிலமும் அந்நிய நாகரீகமும் வலிந்து திணிக்கப்பட்ட அல்லது ஊட்டப்பட்ட இன்றைய தலைமுறை சிறுவன், சாதி மத வெறி அல்லது பற்றுமிக்க எப்போதும் எதிலும் தூய்மை பேணுவதாக காட்டிக்கொள்கிற தாத்தா, கிராமமா நகரமா, பணமா பாசமா.. என்கிற ஊடாட்ட மனநிலையில் தவிக்கும் சிறுவனின் தந்தை… என இந்த மூன்று பாத்திரங்களும் ஒரு கிராமத்தில் சந்தித்து தங்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களை மட்டும் மற்றவருக்கு கடத்துகின்றன. அங்கே இயல்பாக உண்டாகிற மகிழ்ச்சி நமக்குள்ளும் உருவாகிறது. அவ்ளோதான் தலைமுறைகள்!

பாலுமகேந்திரா தன் இளமையிலேயே நடிக்க ஆரம்பித்திருக்கலாம். அவருடைய அந்த நடையும், வாய்ஸும், கண்களும்.. சிம்ப்ளி வாவ்! அதுபோலவே வினோதினியின் பாத்திரமும் அவருடைய இயல்பான நடிப்பும் அருமை. ஆரம்ப காட்சிகளில் WWF யூக்காசூனா மாதிரி இருக்கிற அந்த சிறுவன் எரிச்சலூட்டினாலும் போகப்போக பிடித்துப்போகிறது. படத்திற்கு இசை இளையராஜா என்பதே தமிழ்ஸ்டூடியோ அருண் சொல்லித்தான் தெரிந்தது. பையன் முதன்முதலாக வீட்டுக்குள் நுழைந்து தாத்தாவை தேடும் காட்சியில் மட்டும் லேசாக ராஜாசார் எட்டிப்பார்க்கிறார். மற்றபடி நடுவுல நிறையவே அவரை காணோம்!

இதே படம் கொரிய மொழியிலோ ஈரானிய மொழியிலோ பிரெஞ்சிலோ வெளியாகியிருந்தால் சப்டைட்டிலோடு பார்த்துவிட்டு உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்களோ என்னவோ… தங்கமீன்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களுக்கு இருந்த பரபரப்பில் பத்து சதவீதம் கூட இப்படத்துக்கு இணையத்தில் பார்க்க முடியவில்லை. அனேகமாக இந்த விமர்சனத்தை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது இப்படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்காது. திருட்டு டிவிடி கிடைத்தால் வாங்கிப்பாருங்கள். இந்த எளிய படம் என்னைப்போலவே உங்களுக்கும் பிடிக்கலாம்.