Pages

20 April 2015

8 Points - ஓ காதல் கண்மணி



1 - மணிரத்னத்தின் ‘’தாலி’’ ட்ரையாலஜியில் இது கடைசி படம் போல! அவ்வரிசையில் முதல் படம் மௌனராகம், தாலிகட்டிக்கொண்டு ஒரே வீட்டில் பிரிந்து வாழ்பவர்களின் கதை. அடுத்து அலைபாயுதே தாலிகட்டிக்கொண்டு தனித்தனி வீட்டில் வாழ்பவர்களின் கதை. ஓகா கண்மணி தாலிகட்டிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்பவர்களின் கதை! மற்ற படங்களை போலவே இதிலும் கடைசியில் இருவரும் ஹேப்பி எவர் ஆப்டராக வாழவே செய்கிறார்கள். இப்படத்திலும் கடைசியில் தாலியே வெல்கிறது.

2 - படம் ஓடும் போது யாருமே கைத்தட்டவில்லை. ஆனால் திடீர் திடீர் என்று ஊ….. ஏ…. ஓ…. என்று விதவிதமாக கத்திக்கொண்டேயிருந்தார்கள். நமக்கோ அச்சத்தில் நெஞ்சை கவ்வுகிறது. இந்த கூச்சலுக்கான காரணங்களையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் படத்தில் அப்படி கத்தி கூப்பாடு போடுகிற அளவுக்கு காட்சிகளும் இல்லை. இத்தனைக்கும் முப்பான் முருகன் வழிவந்த தமிழர்கள் கத்தி ஆர்பரிக்கிற லிப்டூலிப் முத்தக்காட்சி கூட இல்லாத சுத்தமான மயிலாப்பூர் மாமிமெஸ் படம் இது. ஆனால் வெளியே இணையத்தில் இது கலச்சாரத்திற்கு எதிரானது, ஆபாசம் அது இது என்று ஏதோ செக்ஸு பட ரேஞ்சில் பில்டப் மட்டும் ஓவராக இருக்கிறது. நவநாகரீக இளைஞிகள் படத்தில் ஒன்றுமே இல்லையென்றாலும் விடாமல் ‘’உற்சாகமாக’’ கத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

3 - படத்தில் பிரகாஷ்ராஜ் கதையை மட்டுமே தனியாக படமாக எடுத்து ஹாலிவுட்டுக்கு அனுப்பியிருந்தால் ஆஸ்கார் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆஸ்கருக்கும் அல்சைமர் மாதிரியான வினோத வியாதியஸ்தர்களின் காதல்,உறவு தொடர்பான படங்கள் என்றால் விருதை அப்படியே தூக்கி கொடுத்துவிடுகிற வழக்கமுண்டு. லீலாதாம்சனின் வசனங்களும் அவருடைய நடிப்பும் சிறப்பாக இருந்தது. அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் இதுமாதிரியான ஒரு பாத்திரம் வரும் (நாயகி ஜமுனாவின் அம்மா) அது எந்நேரமும் இப்படி அடிக்கடி மறந்து மறந்து போய் எதேதோ நடுநடுவே பேசிக்கொண்டிருக்கும்.

4 - கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு கட்டிப்பிடித்த படி பேசுவது, பழைய பாணி கட்டடங்களில் மரகட்டிலில் மேற்படி சமாச்சாரங்கள் பண்ணுவது, பைக்கில் கூலர்ஸ் போட்டுக்கொண்டு காதலியோடு வளைந்து வளைந்து வண்டி ஓட்டுவது, கடற்கரையையொட்டி கத்திக்கொண்டே ஜீப்பில் செல்வது என மணிரத்னம் தன் முந்தைய படங்களிலிருந்தே நிறைய ரொமான்டிக் ஐடியாக்களை பிடித்திருக்கிறார். அட நாயகனும் நாயகியும் ஒரு லாட்ஜில் தங்கினாலும் அங்கேயும் மரக்கட்டில்தான் போட்டிருக்கிறார்கள் என்பதும், நாயகியின் ஹாஸ்டலிலும் மரகட்டில்தான் என்பதும் வாட் ஏ கோ இன்ஸிடன்ஸ்!! படத்தின் இறுதியில் நாயகனும் நாயகியும் பத்துநாட்கள் ஜாலியாக சந்தோஷமாக இருக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள், அடுத்த பத்து நிமிடங்களுக்கு ய்யய்யா யிய்யய்யா உய்யயா கொய்யா என ரோடுகளில் கத்திக்கொண்டே அலைகிறார்கள். சந்தோஷமா இருக்காய்ங்களாம்!

5 - திரையரங்கில் எங்கெங்கு காணினும் இளம்பெண்கள். கூட்டம் கூட்டமாக கும்பல் கும்பலாக குவிந்திருந்தார்கள், எங்கு பார்த்தாலும் லட்டுலட்டாக குமரிகள் கூட்டம். எல்லோருமே பள்ளி-கல்லூரி மாணவிகள்தான். தாராளமாக படத்தின் போஸ்டர்களில் ‘’தாய்மார்களின் பேராதரவுடன்’’ என்று போட்டுக்கொள்ளலாம்! துல்கர் சல்மான் பெயர் போடும் போதும் அவரை காட்டும்போதும் பெண்கள் அலறி குலுங்கி துடியாய் துடிக்கிறார்கள். அவரும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் சட்டையில்லாமல் வருகிறார், பேண்ட் இல்லாமல் வருகிறார், ஜட்டியோடு வருகிறார்… அதையெல்லாம் காண சகிக்காமல் கண்ணை பொத்தின்ட்டேன்! ஆபாசம். அலைபாயுதே காலத்தில் மாதவனுக்குதான் கடைசியாக இப்படி பிள்ளைகள் துடித்தது. அதற்குபிறகு மீண்டும் துடிதுடிக்கவைக்க மணிசார்தான் இன்னொரு படமெடுக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் காலத்தின் கோலம். துல்கருக்கு அப்படியே மலையாள நடிகர் ப்ருதிவிராஜ் குரல்.

6 - ஒரு இளம் மங்கையோடு லிவிங்டுகெதரில் இருக்கப்போகிறேன் என்று ஹவுஸ் ஓனரிடம் வந்து சொல்கிறான் நாயகன். ஹவுஸ்ஓனர் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள், கெடுபிடி பேர்வழி, ஆச்சாரமான அனுஷ்டாங்கமானவர். அப்படிப்பட்டவர் லிவிங்டுகெதர் என்றால் எப்படி ஒப்புக்கொள்வார்? ஹவுஸ்ஓனர் அதெல்லாம் முடியாது இடத்தை காலிபண்ணுங்கோ என்று திட்டுகிறார், அந்த நேரத்தில் நாயகி பாட ஆரம்பிக்கிறார், ஒரே கர்நாடிக் சங்கீதம்… சசரிரீகமபத நிஸ சரிக சரிக ரிகம ரிகம என்று அவர் பாட ஹவுஸ்ஓனர் அப்படியே மெர்சலாகி லிவிங்டூகெதருக்கு ஒப்புக்கொள்கிறார்! கர்நாடிக் சங்கீதம்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அக்காட்சி நமக்கு விளக்குகிறது. அந்த நொடியில் ''நீங்க வெறும் கணபதியா இல்ல, வடிவேலு அக்காவை பிக்கப் பண்ணின பேக்கரி ஓனர் கணபதி ஐயரா என்கிற கேள்வி படம் பார்க்கிற சராசரி ரசிகனின் மனதில் எழுவதை தவிர்க்க முடியாது.

7 - படத்தின் தொடக்கத்தில், பெயர் கூட சரியாக தெரியாத ஒருவனுடன் லாட்ஜில் ஒரே அறையில் தங்குகிற அளவுக்கு, தன்னந்தனியாக குடும்பத்தை விட்டு வாழ்கிற தைரியமான பெண்ணாக காட்டப்படுகிறார் நாயகி. ஆனால் படம் செல்ல செல்ல அப்படியே மொக்கையாகி க்ளைமாக்ஸ் நெருங்கும் போது காதலனின் காலில் விழுந்து ‘’ப்ராணநாதா என்னை கைவிடாதீரும்’’ என்று கலங்கி கண்ணீர் வடிக்கிறார். என்னை நல்லா பாத்துப்பீயா பாத்துப்பீயா என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். கடைசியில் நாயகனும் நாயகியும் ‘’வயசான காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்று கண்டுபிடிக்கிறார்கள். அந்த கருமத்தை ‘’ஏன் லிவிங் டூ கெதரிலேயே செய்ய முடியாதா’’ என்கிற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை!

8 - லிவிங் டூ கெதர் என்பது கமிட்மென்ட் இல்லாமல் நேரம்காலம் பார்க்காமல் காசு கொடுக்காமல் செய்யக்கூடிய கஜகஜா என்று ஒரு விஷயத்தையும் முன்வைக்கிறார் மணிசார். அதில் இருக்கிற எந்தவித உட்குழப்பங்களையும், பாசநேசங்களையும், உறவுச்சிக்கல்களையும் பற்றி ஒன்னாரூபா அளவுக்கும்கூட படத்தில் பேசவில்லை. கமிட்மென்ட் இல்லாமல் மேட்டர் பண்ணிக்கொண்டே இருக்கிற இருவருக்கும் எப்போது காதல் வந்தது எப்படி வந்தது என்பதுவும் அது எப்போது தங்களுடைய கொள்கைகளை கைவிட்டு கல்யாணம்வரைக்கும் சிந்திக்க வைத்தது என்பதையும் வலுவாக காட்டியிருக்கலாம். ஆனால் இயக்குனருக்கு க்ளைமாக்ஸில் ஞானதோயம் வந்து இந்துதர்மத்தையும் இந்திய பண்பாட்டையும் காக்கும் வகையில் எந்த கஜகஜாவாக இருந்தாலும் தாலி கட்டிட்டு பண்ணட்டும் என்று மேரேஜ் செய்வித்து நமக்கு நன்னெறியையும் போதிக்கிறார்!