Pages

24 June 2015

கன்னட சினிமா கண்டன்டே...



தமிழ்நாட்டில் கன்னடப்படங்கள் பார்க்கிற தமிழர்கள் எண்ணிக்கை என்னோடு சேர்ந்து இருநூற்றி ஒன்றாக இருக்கலாம். அதிகம் போனால் இருநூற்றி இருபத்தி ஒன்றாக இருக்கலாம். எப்போதாவது ரீசசன் காலத்தில் சென்னையில் சில திரையரங்குங்களில் கன்னடப்படங்கள் திரையிடப்படுவதுண்டு. டோலிவுட்டும் மல்லுவுட்டும் இங்கே கோலோச்சுகிற அளவிற்கு சான்டல்வுட்டிற்கு வரவேற்பில்லை. கன்னட ஹீரோயின்களோ அதன் மொழியோ இதற்கு காரணமாக இருக்கலாம். அது எளிதில் காணக்கிடைப்பதில்லை என்பதும் காரணமாயிருக்கலாம்.

கடைசியாக மாயாஜாலிலும் சத்யத்திலும் தியேட்டரில் கன்னடபடங்கள் எப்போதாவது வெளியாகும். பார்க்க நினைத்து பார்க்க முடியாமல் போகும். முன்பு சாய்குமார் நடித்த சில கன்னடப்படங்கள் தமிழ் டப்பிங்கில் வெளியாகும். எல்லா படங்களிலும் அவர் போலீஸாக நடித்திருப்பார். கெட்டவார்த்தைகளை மானாவாரியாக வாரியிரைப்பார். கன்னட பக்திப்படங்கள் கூட அடிக்கடி டப்பிங் ஆவதுண்டு. ஆனால் அவை தெலுங்கா கன்னடமா என்று குழப்பத்தோடுதான் காட்சி தரும். எஸ்பிபி, நெப்போலியன் நடித்த சாய்பாபா படம் கூட உண்டு. அதுவும் நேரடி கன்னடம்தான்.

சில வாரங்களுக்கு முன்பு கூட முரட்டுக்கைதி என்கிற படம் வெளியாகி சக்கைப்போடு போட்டதாக தினத்தந்தியில் போட்டிருந்தார்கள். அதற்கு முன்பு தண்டுபால்யா என்கிற படத்தை கரிமேடு என்கிற பெயரில் தேனான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டார்கள். முன்பு ராஜிவ் கொலைவழக்கு பின்னணியில் ஒற்றைக்கண் சிவராசன், தாணுவின் கதையை சயனைட் என்று எடுத்த போதும் அது தமிழில் வெளியான நினைவு. அவ்வளவுதான் நமக்கும் சான்டல்வுட்டுக்குமான நெருக்கம். மணிரத்னம், பாலுமகேந்திரா, கமலஹாசன் என சிலர் முன்னொரு காலத்திலே அங்கே போய்வந்தாலும், இப்போதைக்கு நமக்கு 'சுதீப்' வில்லன் நடிகர்தான்.

இவை தவிர்த்து திரைப்படவிழாக்களில் திரையிடப்படும், தூர்தர்ஷனில் சப்டைட்டிலோடு போடப்படும் கறுப்புவெள்ளை கிரிஷ் கர்னாட், காசரவல்லி வகையறா படங்கள் அறிவார்ந்த சமூகத்திற்கு நெருக்கம். உபேந்திரா, சுதீப், வீரப்பன் கடத்தியதால் ராஜ்குமார், அவருடைய மகன் சிவராஜ்குமார், விஷ்ணுவர்தன் என நமக்குத்தெரிந்த கன்னட உலகம் ரொம்பவே சின்னது. அங்கே என்ன நடக்கிறது என்ன படம் எடுக்கிறார்கள் என்பதெல்லாம் ஏதோ நீலமலை ரகசியம் போலவேதான் இப்போதும் இன்டர்நெட் எராவிலும் இருக்கிறது. தமிழில் வெளியான பலபடங்களும் அங்கே கன்னாபின்னாவென்று ரீமேக் செய்யப்படுகிறது.

கன்னட லேடி சூப்பர்ஸ்டார் மாலாஸ்ரீ சென்னையை சேர்ந்தவர்தான் ஆனால் அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டோம். விஜயசாந்தியைவிடவும் அதிக புகழ்மிக்க அதிரடி நடிகை. காமெடிடைம் பண்ணிக்கொண்டிருந்த கணேஷ் ''முங்காரு மலே'' என்கிற திரைப்படத்தின் வெற்றியால் இன்று உச்சம் நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் கதைகூட நமக்கு தெரியாது. எப்போதாவது தினகரன் வெள்ளிமலரில் இரண்டுபக்கத்தில் கன்னட சினிமா பற்றி கட்டுரைகள் எழுதுவதுண்டு. அதைத்தாண்டி தமிழ் ஊடகங்களில் கன்னட சினிமா உலகம் குறித்த கட்டுரைகளை வாசித்த நினைவில்லை. ஆனால் அங்கே புதிய அலை இயக்குனர்களின் வரவும் புதிய முயற்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. லூசியாவைப்போ நிறைய புதுமுக இயக்குனர்களின் கதையம்சமுள்ள கமர்ஷியல் படங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.

வெவ்வேறுவிதமான மாற்றுமுயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. புதிய இளைஞர்கள், வித்தியாசமான களங்கள், இதுவரை எடுத்துக்கொள்ளாத பின்னணி, படமாக்கலில் தரம் என்று இளைஞர்கள்தான் அங்கே டாப் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். 2014ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கன்னடப்படங்களில் பாதி பெரிய நடிகர்கள் இல்லாத புதிய இயக்குனர்கள் இயக்கிய புதுமுகங்களின் படங்களே.

‘’உளிடவரு கண்டன்டே!’’ (ULIDAVARU KANTANTE). சென்ற ஆண்டு துவக்கத்தில் வெளியான கன்னடப்படம். 2014ன் எல்லா டாப்டென் கன்னடப்பட பட்டியல்களிலும் இடம்பிடித்திருந்த ஹிட் இது!

இப்படத்தின் இயக்குனர் ரக்சித் ஷெட்டியை கர்நாடகாவில் கொண்டாடி கொலுவைத்திருக்கிறார்கள். தமிழில் வெளியான ஆரண்யகாண்டம் மாதிரியான வித்தியாசமான கலாபூர்வமான கமர்ஷியல் படம் இது. அதனாலேயே சான்டல்வுட்டில் தோல்வியடைந்தாலும் விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவை பெற்றது. ட்ரைலரை பார்த்துவிட்டு படம் வெளியான சமயத்தில் இப்படத்தினைக் காண பெங்களூருவுக்கு பஸ் ஏறிவிடவும் முடிவெடுத்திருந்தேன். ஆனால் பெங்களூருவில் இப்படம் சப்டைட்டிலோடு திரையிடப்படவில்லை என்பதால் திட்டம் கைவிடப்பட்டது. தெலுங்கும் மலையாளமும் காட்டுகிற ஸ்னேகத்தில் பத்துசதவீதம் கூட கன்னடம் காட்டுவதில்லை.

படத்தின் திருட்டு விசிடி கிடைக்குமா என சல்லடைபோட்டு தேடினேன். சகல எழுத்தாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் திரைப்பட ஆளுமைகளுக்கும் சிடி விற்கிற பார்சன் மேனர் பஷிரிடமும் இப்படத்தின் குறுந்தகடு கிடைக்கவில்லை. பஷிரிடம் கிடைக்காத குறுந்தகடு தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இன்டுஇடுக்கிலும் கிடைக்காது. இப்படி எங்குமே அப்படம் காணக்கிடைக்காத நாளில் அப்படத்தை நண்பர் ஒருவர் எங்கோ இணையத்தில் தரவிறக்கி கொண்டு வந்து தந்தார், வித் சப்டைட்டில். ஆர்வத்தோடு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். நிச்சயமாக கன்னட ‘’ஆரண்யகாண்டம்’’தான் இது.

ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தவர் யார் என்கிற விசாரணையில் வெவ்வேறு நபர்களால் சொல்லப்படும் ஐந்து கதைகள், ரஷமோன் பாணியில் கதை வெவ்வேறு பார்வைகளில் அந்தந்த கதாபாத்திரங்களால் சொல்லப்படுகிறது. ‘’உளிடவரு கண்டன்டே’’ என்றால் AS SEEN BY THE REST என்று அர்த்தம். ஐந்து கதைகளும் வெவ்வேறு விதமான குணங்களில் நிறங்களில் திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தப்பட்டு படைக்கப்பட்டிருக்கின்றன. மால்பே என்கிற எழில்மிகு கடற்கரை கிராமம்தான் பின்னணி. அங்குள்ள எளிய மனிதர்களையும் அதன் சடங்குகளையும் இசையையும் வாசனை மாறாமல் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாத்திரத்தேர்வும் என எல்லாவகையிலும் சர்வதேசத்தரம்.

இன்னும்கூட நிறைய ஜிலேபி சுற்றி படத்தை புகழலாம். போதும். மீதியை இணையத்தில் தரவிறக்கி காண்க. நல்ல அச்சு உபதலைப்புகளுடன் கிடைக்கிறது. எண்ணற்ற உலகப்படங்களினால் உந்தப்பட்டு அதே பாணியில் இப்படத்தை எடுத்திருப்பார் போல இயக்குனர். ஏகப்பட்ட உலகப்பட முன்மாதிரிகளை பார்க்க முடிந்தது. ஒரு பகுதி மொத்தமும் ‘’சின்சிட்டி’’ படத்தின் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் வசனங்களும் பல காட்சிகளும் க்வான்டின் டாரன்டினோவின் பாதிப்பில் உருவாக்கப்பட்டிருப்பதை டாரன்டினோ ரசிகர்களால் எளிதில் உணரமுடியும். படத்தின் க்ளைமாக்ஸ் மொத்தமும் ஒரு பாடலில் வைத்திருந்ததும் பிடித்திருந்தது.

இப்படத்தின் திரைக்கதை பெரிய அளவில் பேசப்பட்டது. காரணம் படத்தின் கதை அத்தனை சிக்கலானது. இதற்கு திரைக்கதை பண்ணுவது எளிதான காரியம் இல்லை. நேர்கோட்டில் அமையாத கதை சொல்லல் வேறு! இந்த முறுக்குப்புழிகிற திரைக்கதையை எவ்வித குழப்பங்களும் இல்லாமல் கொடுத்ததற்காகவே படம் நிறைய விருதுகளையும் வென்றிருக்கிறது. படத்தின் திரைக்கதையை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அப்படத்தின் அலுவல் இணையதளத்திலேயே வெளியிட்டிருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கி வாசித்துப்பார்க்கலாம். காட்சிகளை இன்னும் நன்றாக உள்வாங்கிக்கொள்ள உதவும். முடிந்தால் யுடீயுபில் படத்தின் ட்ரைலரை ஒருமுறை பார்க்கவும். அதற்குபிறகு எப்படியாவது தேடிப்பிடித்து இப்படத்தை பார்த்துவிடுவீர்கள்.

இவ்வளவு நல்ல படத்தில் நாயகன் மட்டும் திருஷ்டிபோல இருந்தார். ஓவர் ஆக்டிங் என்றும் கூட சொல்லலாம். அலட்டிக்கொள்ளாமல் நடிக்க முயற்சி செய்து ரொம்பவே அலட்டியிருப்பார். இந்த நல்ல படத்திற்கு ஏன் இப்படி ஒரு மொக்கை நடிகரை நாயகனாக பயன்படுத்தினார்கள் என்று விக்கிப்பீடியாவில் போய்த்தேடினால் அந்தாள்தான் படத்தின் இயக்குனர்! ரக்சித் செட்டி. அதனால்தான் கொஞ்சம் ஓவராக பண்ணியிருக்கிறார். அந்த இயக்குனரின் முந்தைய படங்கள் ஏதாவது தேறுமா என்று இணையத்தை துலாவினால் இதுதான் அவர் இயக்கிய முதல்படம்.

இதற்குமுன்பு அவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த ‘’சிம்பிள் ஆகி ஒந்த் லவ்ஸ்டோரி’’ சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. ‘’லூசியா’’ படம் வெளியான அதே சமயத்தில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட ரொமான்டிக் திரைப்படம் இது. இதில் ரக்சித் ஷெட்டிதான் ஹீரோ. இயக்குனர் வேறு ஆள்.

‘’சிம்பிள் ஆகி ஒந்த் லவ்ஸ்டோரி’’ குறித்து தேடிப்படிக்க ஆரம்பித்தால் அப்படம் உளிடவரு கண்டன்டேவை போலவே இன்னும் சுவராஸ்யமான படமாக இருந்தது. மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், முழுக்க புதுமுகங்கள் மட்டுமே கொண்டது.
பாக்ஸ் ஆபீஸில் பல ரெகார்டுகளை தகர்த்திருக்கிறது. இப்படத்தையும் தேடத்துவங்கினேன். கடைசியில் அந்த ‘’நண்பர் ஒருவர்’’தான் அதையும் தன்னுடைய ரகசிய இணையதளத்தின் வழி தரவிறக்கிக் கொடுத்தார். இப்படத்திற்கு சரியான சப்டைட்டில் கிடைக்கவில்லை. கிடைத்த சப்டைட்டிலில் ஆங்காங்கே மொழிபெயர்ப்பு மோசமாக இருந்தது. யாரோ ஆங்கிலம் தெரியாதவர் பண்ணின வேலைபோல. இருந்தும் படத்தை பார்த்தேன். அழகழகான வசனங்கள்தான் படத்தின் பலமே. கூர்ந்து கவனித்தால், அல்லது ரீவைன்ட் பண்ணி மீண்டும் மீண்டும் கேட்டால் வசனம் நன்றாகவே புரிந்தது.

மிகச்சில இடங்கள் தவிர்த்து. ஒரு நிமிடம் கூட அலுப்புதட்டாமல் செல்லுகிற மென்மையான காதல்கதை. இப்படியெல்லாம் தமிழில் காதல்கதைகள் எடுக்கப்படுவதேயில்லை. ROMCOM வகையறா படங்களை தமிழ்சினிமாவில் வழக்கொழிந்துவிட்டன. குட்டி குட்டியாக க்யூட்டான விஷயங்களின் கோர்வையாக புன்னகைக்க வைக்கும் காட்சிகள். எல்லாவற்றையுமே கேலியுடன் சித்தரிக்கும் ஒரு சிறுபிள்ளைத்தனம். வசனங்களில் யதார்த்தமாக தொனிக்கும் கவித்துவம். மௌனராகம் ரேவதி-கார்த்திக் மாதிரியான நாயக-நாயகியின் பாத்திரப்படைப்பு! என எல்லாமே ஈர்த்தது. இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட சோர்வடைய வைக்காத இரண்டு மணிநேர சுவாரஸ்யம் இத்திரைப்படம். படத்தின் இயக்குனர் சுனி ரீமேக் உரிமையை தமிழில் யாருக்கும் தந்துவிடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.

இப்படி வரிசையாக லூசியா, உளிடவரு கண்டன்டே, சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி என மூன்று கன்னடப்படங்கள் அடுத்தடுத்து பார்த்ததுமே மனதுக்குள் இயல்பாகவே தோன்றுமில்லையா? அடடா கன்னட சினிமாலயும் நிறைய நல்லபடங்கள் இருக்குதான் போலய்யா நாமதான் பாக்குறதில்ல என்று நினைத்து மேலும் தேடியதில் சென்ற ஆண்டு வெளியான கன்னடப்படங்களில் மெகாஹிட் ‘’உக்ரம்’’ தான் என்பது தெரிந்தது.

படம் குறித்து இணையத்தில் எல்லோருமே பாராட்டி தள்ளியிருந்தனர். படத்தின் ட்ரைலர் பார்த்தால் அதுவும் பேருக்கேற்றபடி உக்கிரமாகவே இருந்தது. இசையும் அந்த கலரும் மிரட்டியது. படத்திற்கு கேமரா மேன் ‘’பர்ஃபீ, ராசலீலா மாதிரி பெரிய பாலிவுட் படங்களுக்கு பண்ணின ரவி வர்மன்!

இப்படம் கன்னட சினிமாவின் பெருமை. ஹாலிவுட்டுக்கு கன்னடசினிமாவின் சவால் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் படிக்க கிடைத்தது. படத்திற்கான ரீமேக் உரிமைக்காக தமிழின் முன்னணி நாயகர்கள் போட்டிபோடுகிறார்கள். விஜய்கூட ரேஸில் இருக்கிறார். தெலுங்கில் பிரபாஸும், இந்தியில் சல்மானும் கூட ரீமேக் பண்ணப்போகிறார்கள் என்கிற தகவல்களும் எதிர்பார்ப்பை கூட்டின. இத்தனைக்கு இந்த படத்தில் நடித்த ஸ்ரீமுரளி ஒரு சாதாரண நடிகர்தான். ஆனால் ஒரேபடத்தில் அவர் மாஸ் ஹீரோவாகியிருக்கிறார். ஒரு கடத்தில் கைகள் நடுங்க எச்சில் விழுங்க... இதயம் படபடக்க இதுக்கு மேல தாங்கமுடியாதுடா பாத்தே ஆகணும்டா என்று உடனே இணையத்தில் தேடி அதை தரவிரக்கினேன். உபதலைப்புகளுடன் நல்ல எச்டி அச்சு கிடைத்தது.

பார்க்க ஆரம்பித்தால் காட்சி ஒன்றிலிருந்தே படம் பரபரவென பற்றி எரிகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிவருகிறாள் நாயகி. அவள் இந்தியாவில் காலை வைத்ததும் போட்டுத்தள்ள காத்திருக்கும் நாயகியின் அப்பாவின் எதிரிகள். அப்பாவுக்கு தெரியாமல் நாயகி வந்துவிட அவளை காப்பாற்ற சாதாரண மெக்கானிக்கான நாயகனின் உதவியை நாடுகிறார்கள். வில்லன்களிடமிருந்து நாயகியை காப்பாற்றி தந்திரமாக தப்பிச்செல்ல, ட்ரான்ஸ்போட்டர் மாதிரி காட்டுத்தீ போல் கிளம்பியது படம். நிமிர்ந்து உட்கார்ந்தால் அப்படியே போய்கிட்டிருந்த படம்... ஹீரோ ஒரு சாதாரண மெக்கானிக்காக தன் சொந்த ஊரை விட்டு வேறு ஊரில் தன் அம்மாவோடு வாழ்கிறான் என்பது தெரியவர... ஆனால் அவனுக்கு ‘’இன்னொரு பேர் இருக்கு, அவன் கோலார்ல யார் தெரியுமா’’ என்று ஃப்ளாஷ்பேக் போகும்போது அட நன்னாரிகளா பாட்ஷாடா இது என்று தோன்றி.. பிறகு அது மதுர, வேட்டைக்காரன், பகவதி என்று பயணித்து கஜேந்திராவின் சாயல்களுடன் கடைசியில் ஹீரோ ஜெயித்து… முடியல!

உக்ரம் பார்த்து இப்போது நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. அதற்கு பிறகு கன்னடப்படங்கள் எதுவுமே பார்க்கவில்லை. பார்க்கும் ஆவலுமில்லை. லூசியா இயக்குனரின் அடுத்த படம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான் போல. அடுத்தபடத்திற்கு C10H14N2 என்று தலைப்பு வைத்திருக்கிறார், இது நிகோடினின் கெமிக்கல் நேம்! ஆர்வம் மேலோங்க காத்திருக்கிறேன்.

(தமிழ் இணைய இதழுக்காக எழுதிய கட்டுரை)

17 June 2015

சிக்னலில் ஒரு போராளி



நேற்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த சீசனின் முதல் மழை. அதற்குள்ளாகவே வெள்ளத்தில் சிக்கியதுபோல போக்குவரத்து நெரிசல். சாலையெங்கும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நடுரோட்டில் ஆறுபோல் ஓடுகிறது. இதுமாதிரி டிராபிக்கில் மாட்டிக்கொள்வதில் இருக்கிற பெரிய சிக்கல் ரொம்ப போர் அடிக்கும். அந்த நேரத்தில் சைட் அடிப்பதுதான் வழக்கம். நேற்று மழை என்பதாலோ என்னவோ அதற்கு வாய்ப்பேயில்லாத வகையில் ஒரே ஜென்ட்ஸ் மயம். அதனால் வருத்தப்பட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தேன்.

கொஞ்சம் தள்ளி ஒரு பளபள ஸ்கார்ப்பியோ நின்றுகொண்டிருந்தது. இவ்வளவு வெள்ளையான ஒரு ஸ்கார்ப்பியோவை இதுவரை கண்டதேயில்லை. இந்திரலோகத்து புரவிகளின் நவீன வடிவம்போலிருந்தது என்றும் எழுதலாம். கார் ட்ரைவர்களின் முதலாளி விசுவாசமும் நேசமும் காரின் சுத்தத்தில் வெளிப்படுவதுண்டு. இந்தக்கார் ஓனர் நிச்சயம் பாக்கியசாலிதான் என்று நினைத்தபடி பைக் ஆஃப் ஆகிவிடுமோ என்று குறுங்ங்ங் குறுங்ங்ங் என்று முறுக்கிக்கொண்டிருந்தேன். வண்டிகள் பொறுமையாக நகர்ந்துகொண்டிருந்தன.

அந்த பளிச் பளிச் ஸ்கார்ப்பியோ எனக்கு முன்னால் நகர அதன் பின் பக்க கண்ணாடியில் எழுதியிருந்த வாசகங்கள் ஆச்சர்யத்தை அளித்தன. ப்ரஸ், அட்வகேட், டாக்டர், போலீஸ், கவர்மென்ட், ஈபி, ரேசன் என்றெல்லாம் எழுதிய எத்தனையோ வாகனங்களை பார்த்திருந்தாலும் இது புதுசு! ‘’தமிழினப்போராளி’’ என்று ஷோலே பட ஃபான்டில் அதிரடியாக சினிமா டைட்டில் போல் எழுதியிருந்தது. இப்படி ஒரு டைட்டிலோடு ஒரு மனிதர் சென்னைக்குள் சுற்றுகிறார் இது தெரியாமல் நானெல்லாம் இத்தனை காலமாக வண்டி ஓட்டுகிறேன் என்று நொந்துகொண்டேன்.

ஆனால் இப்படி போட்டுக்கொள்வதால் என்ன லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட படி ‘’ப்ரஸ் அட்வகேட் போலீஸ்’’ என்றெல்லாம் போட்டிருந்தால் ட்ராபிக் போலீஸ்காரர்கள் பிடித்தால் கூட கட்டிங் கொடுக்காமல் தப்பிக்கலாம். ஆனால் இந்த போராளிபட்டத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்களாயிருக்கும் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னென்னவோ சிந்தனைகள். ஃபேஸ்புக்கில் டிராபிக் ராமசாமி படத்தைப்போட்டு ‘’ஒரு போராளியை அரசியல்வாதியாக்கிட்டீங்களேடா’’ என்று நண்பர் எழுதியிருந்தார். அதெல்லாம் நினைவுக்கு வந்தது.

ஸ்கார்ப்பியோ நகர்ந்துகொண்டிருந்தது. நான் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தேன். அந்த தமிழினப்போராளி என்கிற வார்த்தையை சுற்றி தன்னுடைய குடும்பத்தினர் பெயர்களை எழுதி வைத்திருந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் போல, இரண்டு பேர்களிலும் தலா ஒரு ஸ்ரீ இருந்தது (திவ்யாஸ்ரீ ராஜஸ்ரீ.. அதுமாதிரி. ஏதோ , பெயர் நினைவில்லை) அவருடைய பெயரும் அதே ரகமாகவே சமஸ்கிருதமாகவே இருந்தது. தமிழினிப்போராளிகள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்ப்பா என்று நினைத்துக்கொண்டே அந்த வண்டிக்கு பின்னால் சென்றுகொண்டிருந்தேன். கோடம்பாக்கம் டூ எம்எம்டிஏ சாலை (பெரியார் பாதைதானா?) மிகவும் குறுகலானது. மனதுக்குள் இந்த வெண்புரவி போராளி எந்த கட்சியாருப்பாரு என்கிற கேள்வி உதித்தது. வண்டி முன்னே செல்ல அது வளரத்தொடங்கியது.

முதலில் மனதில் வந்தது நாம் தமிழர்தான். இதுமாதிரி காமெடிகளுக்கு பேர் போன தொண்டர்கள் கூட்டம் நிறைந்த கட்சி உலகிலேயே அதுமட்டும்தான். ஒருவேளை இது அண்ணன் சீமானுடைய வண்டிதானாவென உள்ளே எட்டிப் பார்க்க முயன்றேன் இருட்டாக இருந்ததால் தெரியவில்லை. அடுத்து விடுதலை சிறுத்தைகள் , அவர்களும் கூட இதுமாதிரியெல்லாம் போஸ்டர்களில் போட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன். ஒருவேளை தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியாக இருக்குமோ என்கிற எண்ணம்வேறு.

இரண்டுநாட்களாக அவர்தான் ஃபுல்பார்மில் இருப்பது.நெல்சன்மாணிக்கம் ரோட்டில் இருக்கிற ஷோபன்பாபு சிலையை அகற்றவேண்டும் என்று இரண்டுநாட்களுக்கு முன் போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்! ஷோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் முன்பு காதல் இருந்ததால்தான் அந்த சிலை அனுமதிக்கப்பட்டிருக்கிறது அதனால் அதை நீக்கவேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களோ ஆதரவாளர்களோ ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததை சமீபத்தில் பார்க்கமுடிந்தது. மிகவும் மோசமான வார்த்தைகளை கொட்டி திட்டியிருந்தனர். (நெல்.மாணிக். சாலையில் இருக்கிற ஷோபன்பாபுவின் சிலை அவருடைய சொந்தநிலத்தில் வைக்கப்பட்ட பர்சனல் சிலை. ) இணையத்தில் இதுமாதிரியான வசைகள் கலைஞருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கட்சிக்கும்தான் எந்நேரமும் கிடைப்பதுண்டு! முதன்முதலாக…

அடுத்து பால்கனகராஜின் தமிழ்மாநிலகட்சி! கட்சிபெயரே அப்படி இருப்பதால் அதுவும் தோன்றியது. இப்படி அடுத்தடுத்து பல குழப்பங்கள். காருக்குள் இருப்பவர் எந்த கட்சி என்று எப்படி கண்டுபிடிப்பது என்று மூளையை போட்டு திருகினேன். காருக்கு முன்னால் நிச்சயம் கட்சிக்கொடி இருக்குமில்ல.. என்று ஓவர் டேக் செய்ய முயன்றேன். குறுகலான சாலையின் டிராபிக்கில் முடியவேயில்லை. அதற்குள் எம்எம்டிஏ சிக்னலில் கார் வேறு பாதையில் திரும்பி சென்றுவிட்டது. திரும்பும்போது கொடி லேசாக தெரிந்தது கொடியில் மஞ்சளும் சிகப்பும் இருப்பது குத்துமதிப்பாக தெரிந்தது. ஆனால் நிச்சயமாக தேமுதிக கிடையாது.

யாராயிருந்தால் என்ன தமிழை வாழவைக்கும் இப்போராளிகளால்தான் நாமெல்லாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் அதனால் அவர்களுக்கு நன்றி.

12 June 2015

8 points - காக்கா முட்டை




#குழந்தைகளை பற்றிய உலகப்படங்களுக்கு ஒர் அடிப்படையான இலக்கணம் இருக்கிறது. அடையமுடியாத ஒன்றுக்காக ஏங்கும் பரம ஏழைக் குழந்தைகள் இருக்க வேண்டும். சகோதர சகோதரிகளாக இருப்பது உத்தமம். அவர்களுக்கு கட்டாயம் க்யூட்டான பாட்டியோ தாத்தாவோ இருக்கவேண்டும். அப்பாவும் அம்மாவும் எந்நேரமும் தங்களுடைய வருமானக்கவலைகளில் இருக்கவேண்டும். அவர்கள் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட குடும்பமாக இருந்தாலும் அங்கே மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் ஆசைப்பட்டதை அடைய காசு சேர்ப்பதும், அந்த காசு ஏதோ ஒருவகையில் காணாமல் தொலைந்து திருடு போவதும் நடக்கும். பணக்காரர்கள் தங்களுடைய பேராசைக்காக குழந்தைகளை ஏமாற்றுவார்கள். சில சிக்கல்களுக்கு பிறகு கடைசியில் அந்த குழந்தைகளுக்கு ஆசைப்பட்டது கிடைக்கும்போது த்தூ இவ்ளோதானா பிச்சாத்து என்று அதை புறக்கணிக்க வேண்டும். இதற்கு சில்ரன் ஆஃப் ஹெவன், வே ஹோம், சார்லி அன் சாக்லேட் ஃபேக்டரி, ஸ்லம்டாக் மில்லியனர், அபயம் தொடங்கி எண்ணற்ற உதாரணங்களை காட்டலாம்! தமிழிலேயே நிறைய குறும்படங்களும் எடுக்கப்பட்டிருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் இயக்குனர் அருண்குமாரின் ‘’5ரூப்பீஸ்’’ நல்ல உதாரணம். காக்கா முட்டை அந்த இலக்கணத்தில் கச்சிதமாக அமர்கிறது. ஆனால் இது அப்படங்களின் காப்பியல்ல, தாக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

#சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான மெரீனா படத்தோடு காக்காமுட்டையை ஒப்பிடலாம். இரண்டுமே விளிம்பு நிலை குழந்தைகளின் வாழ்வை ஆவணமாக்கும் திரைப்படங்கள். இரண்டு படங்களுமே தமிழ்சினிமாவின் மிகச்சில வணிக சமரசங்களுக்கும் உட்பட்டு எடுக்கப்பட்டவை. ஆனால் காக்காமுட்டையை மெரீனாவை விடவும் பலவிஷயங்களில் மிகச்சிறந்த படமாக கருதலாம். குறிப்பாக படத்தின் திரைக்கதையும் அதன் நோக்கமும்! மெரீனாவின் திரைக்கதை எந்த நோக்கங்களும் இல்லாமல் ஆவணப்படம் போல இஷ்டம்போல் அலைபாயும். கடைசியில் அய்யயோ கருத்து சொல்ல வேண்டுமே என்கிற மெனக்கெடல் அப்பட்டமாக தெரியும். இப்படத்தில் அப்படிப்பட்ட மெனக்கெடல்களில்லை இயல்பாகவே படம் சொல்ல விரும்புகிற கருத்து அல்லது கருத்துகள் தானாகவே மலர்ந்தபடியிருக்கிறது! படம்பார்ப்பவர் அவரவர் பொதுஅறிவுக்கேற்ற படி கருத்துகளை புரிந்துகொள்கின்றனர்.

#காக்காமுட்டையின் இந்த வெற்றி தமிழ்சினிமாவில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். மாற்று முயற்சிகள் மங்கிவிட்ட தமிழ்ச்சூழலில் மலையாளத்தின் மாற்றுபாவனைப்படங்களை ரீமேக் செய்துகொண்டு திருப்தியடைந்துகொண்டிருக்கிற காலகட்டத்தில் காக்கா முட்டை புதிய வாசல்களை திறந்துவைத்திருக்கிறது. பெரிய ஹீரோ இல்லாமல், காதல் இல்லாமல் கொஞ்சமாக கமர்ஷியல் அம்சங்களுக்காக வளைந்துகொடுத்தால் நிச்சயமாக வசூலை வாரிக்குவிக்கலாம் என்று இப்படம் தயாரிப்பாளர்களுக்கு நிரூபித்திருக்கிறது. இந்த ட்ரெண்டில் இன்னும் பத்து அல்லது இருபது படங்கள் வரலாம் அதில் இன்னும் இரண்டு இதே அளவில் ஜெயித்தாலும் இந்த ட்ரெண்ட் சூடுபிடிக்கும்! படம் கோடை விடுமுறையில் வெளியாகியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இப்படி ஒருமுயற்சிக்கு பணம் போட்ட நட்சத்திர தயாரிப்பாளர்கள் தொடர்ந்து இதுபோல நிறையபடங்களெடுக்க வேண்டும்.

#படத்தில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது உணவு அரசியல், உலகமயமாக்கலுக்கு எதிரான அரசியல்,கம்யூனிசம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் லொட்டு லொசுக்கு என்று நிறையபேர் சொன்னாலும் படத்தில் என் கண்களுக்கு எந்த அரசியலும் தெரியவில்லை. இதுமாதிரியான ஃபீல் குட் படங்களுக்கு அது தேவையுமில்லை. குழந்தைகளின் ஆசையும் அகவுலகமும் சிறப்பாக வந்திருக்கிறது. அப்பையன்களுடைய வயதுக்கேற்ற காட்சிகள் அமைந்திருக்கிறது. அதை நன்றாக காட்சி படுத்தியிருக்கிறார் இயக்குனர். சமூகத்தின் மீதான விமர்சனங்களாக சில வசனங்கள் வருகிறது. அவ்வளவுதான். நண்பர் ஒருவர் இப்படத்தின் ப்ரிவியூ பார்த்துவிட்டு மிகுந்த உற்சாகமாகி சார் படத்துல தோசைய காட்டும்போது ஈ மொய்க்குது, குடிசைல ஈ மொய்க்குது, பீட்சாவ காட்டும்போதும் ஈ மொய்க்குது இது என்ன குறியீடு சார் என்று ஏதோ கேட்டிருப்பார் போல இயக்குனர் அதெல்லாம் ஒன்னுமில்லைங்க நிஜமாவே ஈ மொச்சிருக்கு போல என்றிருக்கிறார்.

#சிம்பு சிம்புவாகவே இப்படத்தில் வருகிறார். அதுவும் தப்பான முன்னுதாரணமாக. அவரால்தான் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள். இறுதியில் அவர் சிம்பிளாக ‘’ஓ அப்படியா சாரி’’ என்கிறார். இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க சிம்பு எப்படி அதற்கு சம்மதித்தார் என்பது தெரியவில்லை. ரஜினி கூட ரஜினியாகவே திரையில் தோன்றினாலும் நல்லவராக ஏழைகளுக்கு உதவுபவராக இரக்க குணம் கொண்டவராகத்தான் தோன்றுவார் (அன்புள்ள ர.கா, குசேலன்). தனுஷ் தயாரித்த படம்தானே இது. இதில் தனுஷே கூட அந்த பாத்திரத்தில் நடித்திருக்கலாம். ஏனோ சிம்புவை நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க முன்வந்த சிம்பு நிச்சயம் பாராட்டுகளுக்குரியவர்.

#சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோமல்லூரியை புத்தக கண்காட்சியில் கவிதை தொகுப்புகளுடன் பார்த்திருக்கிறேன். இரண்டு ஸ்டால் எடுத்து அவருடைய புகைப்படத்தை பெரிதாக வைத்து பேனர் வைத்து அவர் எழுதிய கவித்துவ நூல்களை மட்டும் அடுக்கி வைத்து விற்றுக்கொண்டிருப்பார். ஆனால் கும்கிக்கு பிறகு மனிதருக்கு நல்ல ஏறுமுகம். காக்கா முட்டை படத்தில் மிகவும் கவர்ந்த பாத்திரங்களில் பழரசத்திற்கு முதல் ரேங்க் கொடுக்கலாம்! அவருடைய அந்த வெள்ளந்தியான புன்னகை மிகவும் பிடித்திருந்தது. மல்லூரி மட்டுமல்ல படத்தில் வருகிற ஒவ்வொரு பாத்திரமும் மிகுந்த சிரத்தையோடு உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பின்னணி நன்றாக தயாரிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. பாட்டி, காய்லாங்கடை பெண், எம்எல்ஏ, திருடர்கள் என எல்லாருமே அவ்வளவு யதார்த்தம். அதே சமயம் படம் முழுக்க காட்டப்படும் அந்த சேரியும் அதன் மனிதர்களும் ஒரு செட் ப்ராபர்ட்டி போலவேதான் இயங்குகிறார்கள். வடசென்னை பின்னணியை காட்சிப்படுத்திய மெட்ராஸ் திரைப்படம் இந்த விஷயத்தில் அவ்வளவு டீடெயிலிங் பண்ணியிருப்பார்கள். படம் முழுக்க அந்த ஊரும் மக்களும் ஒட்டுமொத்த வடசென்னையும் இயங்கிக்கொண்டிருக்கும்.

#தமிழ்நாட்டில் இன்று இருபது வயதை தாண்டியவர்களில் முக்கால்வாசி பேர் தங்களுடைய பால்யத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் காக்காமுட்டை பையன்களாக ஒருமுறையாவது இருந்திருப்பார்கள். ஏதாவது ஒன்றுக்காக ஏங்கி ஏங்கி செத்திருப்பார்கள். அதை ஆல்மோஸ்ட் நெருங்கின நாளில் அவர்களுக்கான அக்கதவுகள் திறக்கபடாமலிருந்திருக்கும்! படம் குறித்து நெகிழ்ச்சியோடு பேசுகிற பலரிடமும் அதை உணரமுடிந்தது. உலக மயமாக்கலுக்கு பிறகு மிடில் கிளாஸ் ஆனவர்கள்தானே தமிழ்நாட்டில் ஒன்தேர்ட்.

#காக்காமுட்டை படம் பார்த்தவர்களில் 90சதவீதம் பேர் காக்கா முட்டையை ருசித்திருக்கமாட்டார்கள் காக்கா முட்டையை மரம் ஏறி எடுப்பது அவ்வளவு சுலபமும் இல்லை. ரிஸ்க் எடுத்து சாப்பிடுகிற அளவுக்கு அது அத்தனை சுவையாகவும் இருக்காது. கொஞ்சம் சன்னமான கசப்பும் கொழகொழப்புமாக மோசமான வாசனையோடு இருக்கும். ஒரே ஒருமுறை சிறுவனாக இருக்கும்போது பச்சையாக குடித்திருக்கிறேன். காக்காமுட்டையை சாப்பிட்டுவிட்டு அந்த ஓட்டை கொண்டுபோய் புதைத்துவிட்டால் தாய்காக்கா நம்மை பழிவாங்க துரத்தாது என்று மூடநம்பிக்கையும் உண்டு.

09 June 2015

பீட்சா




அலுவலகத்திற்கு அருகில் ஒரு பீட்சா கடை உண்டு. அடிக்கடி செல்கிற இடம்தான். வெயில் தாளமுடியாத நேரங்களில் அங்கே ஒதுங்கலாம். நண்பர்களை சந்திக்க ஏற்ற இடம். மணிக்கணக்கில் எதையும் சாப்பிடாமலும் கூட நாள்முழுக்க ஏசியை அருந்தியபடி அமர்ந்திருக்கலாம். கடைக்காரர்கள் யாருமே என்னிடம் எப்போதும் எதையும் ஆர்டரென்று கேட்டதில்லை. காபீடே,பீட்சா,கேஎஃப்சி மாதிரி கடைகள் நம்முடைய மனசாட்சியை முதலீடாகக் கொண்டு இயங்குவதாக எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. பல நேரங்களில் மனசாட்சிக்கு அஞ்சியே ஒரு சாதாரண மலிவு விலை பீட்சாவையாவது வாங்கிதின்ன நேரிடும்.

தமிழ்நாட்டின் மிக காஸ்ட்லியான ஏரியாக்களில் ஒன்று ஜிஎன் செட்டி ரோடு. அங்குதான் என் அலுவலகமும் இருக்கிறது. அதன் கடைக்கோடியில் அதாவது அண்ணா மேம்பாலத்திற்கு சற்றுமுன்பு ஒரு சேரி இருக்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கிற சேரி இது. இந்தமுனையிலிருந்து நீளும் அவ்வீடுகள் அண்ணா அறிவாலயம் வரைக்கும் தொடர்ந்திருக்கும். பெரிய பணக்காரர்கள் வசிக்கிற எல்லா பகுதிகளிலும் இதுமாதிரியான சேரிகள் அமைந்திருப்பது என்ன மாதிரியான புவியியல் அரசியல் என்பது ஆராயப்படவேண்டியது. மைலாப்பூரிலும், அடையாறிலும், மாம்பலத்திலும் கூட இதுமாதிரியான சேரிகளை பார்த்திருக்கிறேன். பணக்காரர்களின் பங்களாக்களுக்கு மிக அண்மையில் இக்குடிசைகள் அமைந்திருக்கும்.

ஜிஎன் செட்டிரோடு குடிசைவாசிகள் மிகவும் மகிழ்ச்சிகரமானவர்கள். எந்நேரமும் குடியும் கும்மாளமும்தான். அவர்ளுடைய அழுக்குச்சட்டை குட்டிப்பையன்களுக்கும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பள்ளிக்கு சென்றாலும் பல நேரங்களில் சாலையில்தான் சுதந்திரமாக திரிந்துகொண்டிருப்பார்கள். எதையாவது வாங்கித்தின்பதும், நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போடுவதும் வாடிக்கையாக கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அல்லது கையில் பெரிய பையோடு குப்பை பொறுக்கிக்கொண்டிருப்பார்கள். ஏன்டா ஸ்கூல் போகாம குப்பை பொறுக்கறீங்க என்று கேட்டால், முறைத்துவிட்டு உனக்கின்னா என்றுவிட்டு போய்விடுவார்கள்.

அந்தப்பையன்களை அடிக்கடி பீட்சா கடையில் பார்ப்பதுண்டு. வாசலிலேயே தயங்கி தயங்கி நிற்பார்கள். அவர்களுடைய தலைவன் வந்ததும் உள்ளே கம்பீரமாக நுழைவார்கள். அவர்களை கண்டால் அங்கேவேலைபார்க்கிற சிகப்புசட்டை தம்பிகளுக்கு உற்சாகமாகிவிடும். என்னங்கடா என்ன வோணும் என்று அந்த பையன்களும் அவர்களுடைய மொழிக்கு மாறிவிடுவான். அந்தப்பையன்கள் அண்ணா போனவாட்டி குடுத்தியே அது வேஸ்ட்டுனா வேற எதுனா காரமா குடுன்னா என்று கேட்பார்கள். அந்த தம்பிகளும் மேலே படங்களை காட்டி இது வாங்கிரீயா என்று படங்களை காட்டி இது மூன்னூறு ரூவாடா என்று விலை சொல்வார். பையன்கள் டே உன்ட்ட எவ்ளோ டே அவன்ட்ட வாங்குடா டே இவன் காசே கொண்டாரமாட்ரான்டா என்கிற குரல்களுக்கு மத்தியில் கசங்கிய தாள்களும் சில சில்லரைகாசுகளுமாக டேபிளில் விழும்.

அடுத்த சில நிமிடங்களில் ஆவிபறக்க சுடச்சுட பீட்சாவை கொண்டுவந்து கொடுப்பான் கடைக்காரத்தம்பி. கூடவே பாதி குடித்துபோட்ட பெப்ஸி கோக் பாட்டில்களும், கூடுதலாக ரொட்டித்துண்டுகளும் ஏதாவது தீனியும் சிக்கன் பீஸ் என இலவசமாகவே தருவான். பையன்கள் தாங்க்ஸ்னா என்று சலாம் வைத்துவிட்டு வெளியேற சிகப்பு சட்டை பையன்கள் பெருமிதமாக புன்னகைப்பதை காணக்கண்கோடி வேண்டும். பையன்கள் அதை வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியேறும்போது கடைக்குள் அமர்ந்திருக்கும் நம்மை பார்க்கும்போதுதான் கம்பீரம் என்கிற வார்த்தைக்கான அர்த்தம் தெரியவரும்.

ஆனால் அந்தப்பையன்கள் இதை எங்கே கொண்டுபோய் வைத்து சாப்பிடுவார்கள் என்கிற கேள்வி எப்போதும் எனக்கு தோன்றும். அந்தப்பையன்கள் கடைக்குள் உட்கார்ந்து பார்த்ததேயில்லை. காசுகொடுத்துதான் அவர்களும் பீட்சா வாங்குகிறார்கள். காத்திருப்பதாக இருந்தாலும் கூட கேட்டுக்கு வெளியேதான் காத்திருப்பார்கள். சிகப்பு சட்டை தம்பி கூப்பிட்டதும்தான் உள்ளே நுழையவேண்டும். அவன் அதை கொடுத்ததும் வெளியேறிவிட வேண்டும்.

சிகப்பு சட்டை தம்பியிடம் ஒருநாள் இதைப்பற்றி கேட்டேன். ‘’அவங்களும் காசுகுடுத்துதானப்பா சாப்பிடறாங்க உள்ளயே உட்கார வைக்கறதுதானே’’ என்றேன். அய்யோ பசங்க செம்ம சேட்டைங்க எதையாவது எடுத்து உடைச்சிருவாங்க டாப்பிங்ஸ்லாம் காலி பண்ணிடறாங்க க்ளீன் இல்ல என்றார். ‘’உங்க கடைக்கு வர முக்கால் வாசி சேட்டை பண்ற பையன்கள்தான் இவங்களுக்கு மட்டும் என்ன’’ என்றேன்.
‘’மேனேஜ்மென்ட்ல ஒப்புக்க மாட்டாங்க சார்’’ என்றான். அவனோடு இன்னும் கூட வாக்குவாதம் பண்ணினதில் கடைசியில் ‘’சார் மேனேஜர் ஒத்துகிட்டாலும் கஸ்டமர்ஸ் ஒத்துக்கமாட்டாங்க சார், ஹைஜீனிக் அது இதும்பாங்க’’ என்றார்.

அந்தப்பையன்களுக்கு வெளியில் நிற்கவைப்பதிலோ குடித்து வீசிய பாதி பெப்ஸி பாட்டில்களை வாங்கிக்கொள்வதிலோ எவ்வித தயக்கமோ அவமானமோ இருந்ததில்லை. அவர்களுக்கு அது பழக்கமானதாக இருக்கலாம். அந்தப்பையன்கள் திரும்ப திரும்ப அக்கடை வாசலில் தங்களுடைய பீட்சாவுக்காக காத்திருப்பதை பார்த்திருக்கிறேன். கல்வி அவர்களிடம் மாற்றத்தை உருவாக்கலாம். சுயமரியாதையை கற்றுத்தரலாம்.ஆனால் அவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்த ஒவ்வொருமுறையும் நான் அவர்களை உள்ளேயிருந்துதான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நிறைய சௌகர்யங்கள் உண்டு.