Pages

14 January 2017

சுண்டோக்கு சுப்பாண்டியா சார் நீங்க?



சுண்டோக்கு (tsundoku) என்று ஜப்பானிய மொழியில் ஆட்களை குறிக்கிற ஒரு சொல் உண்டு. இந்த சுண்டோக்குகள் உலகில் எங்கே எந்த படிக்கக்கூடிய பொருள் கிடைத்தாலும் அதை வாங்கி வாங்கி குவித்துவிடுவார்களாம். ஆனால் எதையுமே ஒருவரிகூட வாசிக்க மாட்டார்களாம். ஆனால் நூல்களை வாங்கி வாங்கி வீட்டு அலமாரியில் மட்டும் அடுக்கி வைத்துவிடுவார்களாம். அந்த களாம்களில் அடியேனும் ஒருவன். எனக்குள் விழித்துக்கொண்டிருக்கிற அதே சுண்டோக்கு மிருகம் உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கலாம். அல்லது அப்படி ஒன்று இருப்பதை அறியாமல் இருக்கலாம். இப்படி நானும் நீங்களும் மகத்தான சுண்டோக்கு சுப்பாண்டிகளாக ஆனதற்கு முக்கியகாரணம் புத்தக கண்காட்சிகள்தான் என்பது நம்மில் எத்தினி பேருக்கு தெரியும்.

ஒவ்வொரு ஆண்டு புத்தகக்காட்சியின் போதும் முதன்முறையாக முதலிரவுக்கு தயாராகிற மணமகனின் உற்சாக மனநிலைக்கு மாறிவிடுவேன். அதிலும் ஃபேஸ்புக் வந்தபின் அந்த உணர்வு வேறு எல்லைகளை கடந்து தாராளமாக இந்த நபரை மருத்துவமனையில் அட்மிட் செய்யலாம் என்கிற அளவை எட்டிவிட்டது. இந்த விநோத வியாதியால் ஒவ்வொரு ஆண்டும் உள்ளங்கையில் இருக்கிற கடைசி ஐம்பது காசையும் ரத்தம் வர சுரண்டி புத்தகங்கள் வாங்குவதை இலக்கிய களமாடல் சேவையாக செய்து வந்திருக்கிறேன்.

அப்படி புத்தகசந்தையில் வேட்டையாடி சேர்த்த நூல்களில் சென்ற ஆண்டு வரைக்குமே படித்த நூல்களின் எண்ணிக்கை வெறும் பதினைந்து சதவீதம்தான் இருக்கும். மீதியெல்லாம் சென்னை மழைக்கும், வர்தா புயலுக்கும், பசிகொண்ட எலிகளுக்கும் தப்பி என்றாவது ஒருநாள் வந்து கரம்பற்றுவேன் கண்திறக்கலாம் என முதல்மரியாதை மலைச்சாமி போல காத்திருக்கின்றன.

ஆனால் சுண்டோக்கு சுள்ளான்களாகிய நாமோ இத்துப்போய் காத்திருக்கும் பழைய புத்தகங்களை அப்படியே போட்டுவிட்டு, புது நூல்களை வாங்க புயலென பு.கவுக்கு புறப்படுவோம்.

நாம் ஏன் இப்படி லூசு மாதிரி ஏராளமான நூல்களை காசுகொடுத்து வாங்கி வாங்கி குவிக்கிறோம்? ஆனால் ஏன் எதையுமே வாசிப்பதில்லை? வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நூலுக்கும் ரூபாய் மதிப்பு மட்டுமில்லை. அதற்கு மரியாதையும் இருக்கிறதுதானே? அது தெரிஞ்சா நான் ஏஞ்சாமி படிக்காம இருக்கப்போறேன் என்கிற என்னுடைய உங்களுடைய நம்முடைய மைன்ட்வாய்சே எனக்கு கேட்கிறது.
இனி காரணங்கள்.

- ''புத்தக சந்தையில் நான் வாங்கிய நூல்கள்'' எனப் பட்டியல் போட்டு ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்லாங்கரில் பகிர்கிற வெட்டிப் பீத்தலுக்காக...

இது ஒரு கொடிய நோய்... மிகவும் கொடிய நோய். இதிலிருந்து மீள்வது மிக எளிது. ஆனால் இதை செய்ய புத்தகங்களை வாங்கியே தீரவேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. ஒரு சிகரட் அட்டையில் நாலுகடை ஏறி இறங்கி எந்த புத்தகம் அதிகம் விற்கிறது என விசாரித்து அந்த நூல்களின் பெயர், பதிப்பக விபரம், விலை எழுதி அதை பட்டியலாக வெளியிட்டும் கூட பெருமைப்பட்டுக்கலாம். செலவும் மிச்சமாகும்.

- நமக்கு வேண்டப்பட்டவர், ஃபேஸ்புக் பிரண்ட், லைக் போடுபவர், சாட்டில் ஹார்ட்டின் போடுகிற சாட்டையடி தோழி எழுதிய நூல்கள் என்பதாலேயே வாங்கிவிடுவது.

ஃபேஸ்புக்கில் எல்லோருமே எழுத்தாளர்கள் ஆகிவிட்டபிறகு லைக் போடுவது போல மக்கள் புக் போட ஆரம்பித்துவிட்டார்கள். இணையத்தில் எழுதியதையே தொகுத்து புத்தகமாக்கி இணையத்தில் இருப்பவர்களிடமே விற்பதெல்லாம் சதுரங்கவேட்டை மோசடிகளில் வருமா தெரியவில்லை. பழகின பாவத்திற்காக நட்பூஸ்களின் நூல்களை வாங்கித்தொலைக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஒவ்வொருவரும் ஆளாக வேண்டியதாகிவிடும். அதிலும் செந்தேள் செங்காயிரம், டேபிள் பங்கர், பிதிஷா, கராத்து ஃப்ரீனிவாஸ், கவபிஸ்னா மாதிரி எங்கோ கேட்ட பெயர்களை பார்த்தாலே புத்தகத்தை வாங்கியே தீரவேண்டும் என கை குறுகுறுக்கும்.

கடை வாசலிலேயே சம்பந்தப்பட்ட சம்பவக்காரர்கள் வேறு கையில் பேனாவுடன் எல்லையில் நிற்கிற ராணுவ வீரர்கள் போலவே காத்திருப்பார்கள். நாம் அவர்களை கடக்கும்போது நம்மை பார்த்து மையமாக சிரித்து தொலைப்பார்கள். இவன் புக்கை வாங்காம விடமாட்டான் போலருக்கே பெரியப்பா என வேறு வழியில் தப்ப முயலுவோம். ஆனால் புத்தக சந்தைகளின் ராஜதந்திரமே பெரும்பாலான கடைகளுக்கு ஒருவழிப்பாதைதான். உயிர்மை மாதிரியான சில கடைகளுக்கு இரண்டு வழிப்பாதை இருந்தாலும் இன்னொரு பாதையில் மனுஷ்யபுத்திரன் அய்யனார் சிலை கணக்காக காவல் இருப்பார். இந்த இம்சையிலிருந்து தப்பிக்க ஒரு மகத்தான வழி வைத்திருக்கிறேன். அதை நேரில் சந்திக்கும்போது தெரிவிக்கிறேன்- கட்டணத்திற்கு உட்பட்டது.
புத்தக வெளியீட்டு விழாக்கள் நமக்கு வைக்கப்படும் எலிப்பொறிகள் என்கிற தெளிவு அவசியம் வேண்டும். அவ்ளோ பெரிய பிரபல பதிவர் நம்மளை மதிச்சி அழைக்கிறாரே என்று போனால்... அங்கே வந்திருக்கிற சிறப்பு விருந்தினர்கள், மேடையேற்றிய நன்றிக்கடனுக்காக மொக்கை புக்காக இருந்தாலும் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இது போற்றபடும் என்று ஏத்திவிட்டு எம்எல்எம் ஏகாம்பரமாக நம்மை மூளைச்சலவை செய்ய முயலுவர்... இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் பிரண்ட்ஸ்.

- பிரபல எழுத்தாளர்களின் பதிவர்களின் பிரபலங்களின் பரிந்துரைகளை உண்மையான மெய்யான தீர்க்கமான பரிந்துரைகள் என நம்பி புத்தகங்கள் வாங்குவது.

பெரும்பாலான பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைப்பது எல்லாமே அவர்களுக்கு வேண்டப்பட்ட, அவர்களுடைய சொந்தக்கார, சிஷ்ய பையன்கள், கேர்ள்பிரண்டுகள் எழுதிய நூல்களைத்தான். பிரபல எழுத்தாளர்கள் என்பவர்கள் எல்லா நூல்களையும் படிக்க மாட்டார்கள். அவர்கள் வாசிப்பதெல்லாம் வெளிநாட்டு இங்கிலீஸ் லத்தீன் அமெரிக்க ஐரோப்பிய யூரோப்பிய நூல்களையோ அல்லது நூல் பெயர்களையோ மட்டும்தான். எனவே புத்தக பரிந்துரை பட்டியல்களை விட, ஆழமான விமர்சனம் இல்லாவிட்டாலும் அடிப்படையான ஒரு பக்க அறிமுகமாவது இருந்தால் மட்டுமே அதை வாசித்து படித்து புரிந்து நூல்களை தேர்வு செய்யலாம். லிஸ்ட்டுகள் என்பது வெற்று லிஸ்ட்டுகளே..

- புத்தக சந்தைக்கு வருகிற இளம் வாசகிகள் முன்னால் சீன் போடுவதற்காக புத்தகங்களை வாங்குவது.

'என்னது உங்களுக்கும் நிழல்கள் ரவி பிடிக்குமா... ஐயாம் ஆல்சோ பிக்ஃபேன்'என்று உரையாடிய பெண்களைக்கூட அறிவேன். என் வாழ்நாளில் எந்தப்பெண்ணும் ஒரே ஒருமுறை கூட...'வாஆஆஆஆஆஆவ் ... ஓமைகாஆஆஆஆஆட் நீங்க ஜெயமோகன் ஃபேனா' என்று மயிர்கூச்செரிந்ததே இல்லை. இது ஆணாதிக்க கருத்தாகவே பெண்ணிய தோழிகள் அடித்தாலும், பெண்கள் ஒரு ஆண்மகனுடைய வாசிப்பு பழக்கத்தை வைத்தெல்லாம் இம்ப்ரஸ் ஆகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு வயது ஐம்பத்தி எட்டோ ஒன்பதோ இருக்கலாம்.

- ஆஃபர் போட்டிருக்கிறார்கள் என்று புத்தகங்கள் வாங்குவது

உலகத்திலேயே மரண மொக்கையான விஷயம் இதுதான். உள்ளதிலேயே மிகக்குறைவான டிஸ்கவுண்ட் கொடுக்கிற இடம் என்றால் அது புத்தக சந்தைதான். வெறும் பத்து பர்சென்ட்தான் கொடுப்பார்கள். அதற்கு மேல் ஒரு புத்தகத்துக்கு அதிகமான டிஸ்கவுண்ட் கொடுத்தால் அது சீக்குக்கோழி என்பதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடிவிடவும். அம்பது பர்சென்ட் என ஆசையை தூண்டினாலும் சிக்கிவிடாதீர்கள். கிளாசிக்குகளை தவிர்த்து வேறெதையும் ஆபரில் வாங்குவது நல்லதில்லை. சாகித்ய அகாடமியில் சல்லிசு விலையில் குண்டுகுண்டாக நிறைய கிடைக்கும். ஆனால் அதில் ஒருசிலவற்றை தவிர மற்றதையெல்லாம் வாசிக்க நீங்கள் வேற்றுகிரகவாசியாக இருக்கவேண்டியது அவசியம். அந்த அளவுக்கு மொழியை பெயர்த்து இருப்பார்கள். இது உதாரணம்தான் இதுபோல பல கடைகள் உண்டு...

- புரட்சி போராட்டம்... என்றால் வாங்கிவிடுவது

புரட்சியான புத்தகம் அதுவும் சிகப்பு அட்டைபோட்டு நல்ல கனமாக இருந்தால் உடனே வாங்கிவிடுவதை வழக்கமாக வைத்திருபோம். உதாரணத்துக்கு இந்த ஆண்டு பரவலாக பேசப்படும் இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - வெண்டி டோனிகர் எழுதிய நூலை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். உடனே நூலை கடக்கும்போது அதைவாங்கியே தீரவேண்டும் என மனது துடியாய் துடிக்கும். இப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு என்கிற மொழிபெயர்ப்பு நூலை வாங்கினேன்... படிக்கிறேன் படிக்கிறேன்... முடியல்லல... நல்ல நூல்தான். நம்ம மண்டைக்கு ஏறவில்லை. அப்படி மண்டைக்குள் ஏறாத கடுமையான புரட்சி மொழிபெயர்ப்புகளை வாங்குவதற்கு முன் நிறைய யோசிக்கவும்.

- பெரிய சைஸ் புத்தகம் என்பதால் வாங்குவது

அசோகமித்திரன் எழுதிய மொத்த கதைகளையும் ஆயிரம் பக்கத்துக்கு காலச்சுவடில் போட்டிருகிறார்கள். அதை வாங்கினால் மொத்தமாக படித்து முடிக்க பலமாதங்கள் ஆகும். ஃபேஸ்புக் காலத்தில் அதையெல்லாம் படிக்க நமக்கு பொறுமை கிடையாது. அதுவே தேர்ந்தெடுத்த கதைகள் தொகுப்பு சின்ன சின்ன பூந்திகணக்காக நிறைய கிடைக்கும். பொன்னியின் செல்வனை பார்த்தால் வாங்கவேண்டும் என தோன்றும். வாங்கினாலும் படிக்கமாட்டோம். அஞ்ஞாடி என்று ஒரு மிகப்பெரிய நூல் உண்டு. பெருமைக்கு வாங்கிக்கொள்ளலாம். அதை படிக்க மிகப்பெரிய பொறுமையும் உழைப்பும் தேவைப்படும். அவ்வளவு இருந்தால் மட்டும் வாங்கவும். ஆனால் இப்படி வாங்கிச்சேர்க்கிற படா புக்ஸ் வீட்டில் அழகாக அடுக்கிவைத்து சீன்காட்ட உதவும். அதற்கு இவ்வளவு கஷ்டப்படாமல் பழைய புக்ஸ்டால் போனால் ஆங்கிலத்திலேயே பெரிய சைஸ் நூல்கள் நிறைய கிடைக்கும். அதை வாங்கி அடுக்கிவைத்தால் இன்னும் கெத்துகாட்டலாமே பிரண்ட்ஸ்!

******

# எந்த நூலை வாங்குவதாக இருந்தாலும் அதில் பத்து பக்கங்களாவது வாசித்து பார்த்துவிட்டு முடிவுக்கு வரவும்.
# மற்றவர்களுடைய பரிந்துரைகள் என்பது அவரவர் ரசனை சார்ந்தது என்பதை உணருங்கள்
# தினமும் வாசிக்க நேரம் ஒதுக்குங்கள்
# ஒருநாளைக்கு குறைந்தது 30பக்கங்களாவது படிக்கிற பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள்
# ஏற்கனவே வாங்கின நூல்களை பட்டியிலிடுங்கள். எக்ஸல் ஃபைல் என்றால் சிறப்பு. அதில் படித்தது படிக்காதை பட்டியலிடுங்கள். புத்தகசந்தைக்கு செல்வதற்கு முன்னால் இதை செய்தால் மோடியின் டிமானிட்டைஸ்ட் புதிய இந்தியாவில் நம் பர்ஸுக்கு நல்லது.
# புத்தக சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது நோட்டமிட மட்டுமே செய்வது நல்லது. புத்தகங்கள் வாங்குவதாக இருந்தால் கூட்டமில்லாத பகல் நேரத்தில் வேலைநாளில் சென்றால் படித்துபார்த்து வாங்கமுடியும்.

கடைசியாக - ''ஒரு நூலை வாங்குவதை விட அதை திருடியாவது படித்துமுடிப்பதுதான் அந்நூலுக்கும் அதை இயற்றிய புலவருக்கும் நாம் செய்கிற ஆகப்பெரிய மரியாதை ஒரவுகளே...''

பொது நலன் கருதி வெளியிடுவோர்... சக சுண்டோக்கு சுப்பாண்டி!