Pages

07 August 2008

படிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு

அவன்,இவன் மற்றும் ரோணி




இந்த முறை அவனை கொன்று விடுவோமா , ஒடிக்கொண்டே யோசித்து கொண்டிருந்தான். அவன் தன்னை கொல்ல வேண்டுமென வேண்டிக்கொண்டு இவன் ஓடிக்கொண்டிருந்தான் ,

அவனை எப்படி கொல்வது , கத்தியால் குத்தியா , கத்தியால் குத்தினால் அவன் கத்தி விட்டால் , கயிறால் கழுத்தை நெறித்து விட்டால் , வேண்டாம் அவனை ரயில்வே தண்டவாளத்தில் போட்டுவிடலாம் , தப்பிக்கவே இயலாது .

ஆனால் இந்த முறை அவனை கொன்றேயாக வேண்டும்

மேலும் ஓடினான் , மூச்சு வாங்கியது ,

அவனை கொன்றே தீர வேண்டுமா , இல்லை இல்லை கட்டாயம் கொன்றாக வேண்டும் , இல்லையென்றால் அவன் என்னை கொன்று விடுவான் ,

அவனொன்றும் அவ்வளவு கெட்டவினில்லை ஆனால் அவனால் இவனுக்கு பல துன்பங்கள் , இவன் செய்யும் கொலைக்கு அவன் மாட்டி கொண்டு விட அவன் என்ன செய்வான் , யோசித்து கொண்டே ஓடினான் ,

இவனுக்கு தினமும் கட்டாயம் ஒரு கொலை செய்தே ஆக வேண்டும் , இல்லையென்றால் கை நடுக்கமும் , மன உளைச்சலும் சமீப காலமாய் வருகிறது , கொன்றாக வேண்டும் கொன்றாக வேண்டும் , இல்லையென்றால் அவன் என்னை கொன்று விடுவான் ,

அவனால் இவனுக்கு சமூகத்தில் கெட்ட பெயர் , இதோ அவன் விட்டு சென்ற தழும்புகள் இவன் மார்பிலும் விலாவிலும் , அவன் ஒவ்வோர் கொலையையும் அனுபவித்து ரசித்து ருசித்து செய்யும் போதெல்லாம் இவனுக்கு குலை நடுங்கும் , மாட்டி கொள்ள போவது இவனல்லாவா , யோசித்து கொண்டே ஓடினான் .

தினமும் விடியற்காலையில் தூங்கும் காப்பாளர்களை தலையில் அடித்து கொல்ல துவங்கி அது ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி நான்கு இப்போது நாற்பதாகி விட்டது , அவன் செய்த கொலைக்கு போலிஸ் இவனை தேடுகிறது , அடையாளமும் தெரிந்து விட்டது , நிம்மதியெல்லாம் போய் வீடு நாடு சுற்றம் பந்தம் பாசம் என எதுவுமின்று , இனியும் தாமதித்தால் இவன் கொட்டத்தை அடக்க முடியாது அவன் சாவுதான் இதற்கு ஒரே முடிவு .

இதோ தெரிகிறது தண்டவாளம் , ரயில் வராவிட்டால் , கொஞ்சம் பொருத்து பார்ப்போம் , கண்ணுக்கெட்டும் தூரத்தில் ரயில் வருகையில் தண்டவாளங்களின் இரு பக்கங்களில் தலை ஒரு பக்கமும் கால் ஒரு பக்கமுமாய் வைத்து விடுவோம் , நசுங்கி சாகட்டும் நாசமாய் போனவன் ,

அவன் சாவு தான் இவனுக்கு வெற்றி என்பது அவனுக்கு இன்னும் புரியவில்லை , அவன் லட்சியம் தினம் ஒரு கொலை . இன்று ஆளில்லாமல் வெறி பிடித்து அலைகையில் யாரும் சிக்கவில்லை , மாட்டியது அவன் மட்டுமே , அதனால் அவன் இவனை கொல்ல தூண்டிவிட்டான் , இப்போது அவனும் கொலையாளி ஆகிவிட்டான் , கடைசியில் ஒரு கொலை சுபமாய் முடிந்ததும் தான் அவனுக்கு மகிழ்ச்சி .

இவர்களிருவரின் பிரச்சனையில் சம்பந்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ரோனி தண்டவாளத்தின் பக்கவாட்டில் தலைவைத்தபடி தன்னைப்பற்றிய நினைவின்றி ரயிலில் அடிபட்டு பிணமாய் கிடந்தான் .

ரோனியின் கொலையை கொண்டாட அவனும் இல்லை இவனுமில்லை .

___________________________________________________________________
மெர்க்குரி பால் :


'' குழந்தைக்கு இன்னும் பால் குடுக்காம அப்படி என்ன உனக்கு புடுங்கற வேலை , அதான் பால் பார்சல்ல வந்திருச்சுல்ல ,'' அதட்டலாய் ரே .
'' குழந்தைக்கு பால் குடுக்க மாட்டேன்ங்க '' கெஞ்சலாய் மோ .
'' உன்ன கட்டிகிட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் , முதல்ல நீ உங்கம்மா வீட்டுக்கு கிளம்பு ''

'' ஏன்ங்க இப்படிலாம் பேசறீங்க , நாங்க இல்லைனா இந்த சந்ததி அழிஞ்சிடாதா !! குழந்தைக்கு இப்ப மெர்க்குரிப்பால் குடுத்து கொல்லுணும் அவ்ளோதான? '' கண்களில் நீருடன் மோ .

'' ஆமா இதோட மூணாச்சு , இதுக்கு மேல தாங்காது , இதுங்கள வளக்கரதுக்கே நான் படற கஷ்டம் எனக்குதான் தெரியும் '' மேலும் அதட்டலாய் ரே .

'' நீங்களும் இதுக்கு காரணம்தான , கொஞ்சம் யோசிங்க ''

''அதெல்லாம் உக்காந்து யோசிச்சாச்சு , உன்னால முடியுமா முடியாதா '' சண்டை வழுத்தது ,

இதற்கு மேல் பேசி பயனில்லாததை உணர்ந்த மோ ,

''உங்கள கட்டிகிட்ட பாவத்துக்கு , செய்றேன் எனக்கொண்ணும் இது புதுசில்லையே , நான் ஆம்பளையா பொறந்த பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் '' அழுதபடி தன் நான்காவது ஆண் குழந்தைக்கு மெர்க்குரிப்பால் கொடுத்தான் மோ என்கிற மோகன் .

பெண் வாரிசுக்காக குழந்தையை கொன்ற மகிழ்ச்சியில் புன்முருவலோடு நின்று பார்த்து கொண்டிருந்தாள் ரே என்கிற ரேவதி .

கி.பி 2208 ஆம் ஆண்டின் டிவியில் ஓடிக்கொண்டிருந்த ''சித்தப்பா'' அல்ட்ரா மெகா சீரியலில் ஹீரோ கதறி அழுது கொண்டிருந்தான் .
____________________________________________________________________

படிக்கக்கூடாதத படிச்சிட்டீங்க , பாக்கக்கூடாதத பார்த்திருந்தீங்கன்னா , பக்கத்ததுல குசேலன் படம் எப்படினு உங்க வாக்க பதிஞ்சுட்டு போங்கோ