Pages

30 August 2011

அபூ பக்கீர் சிக்கந்தர்






‘’என்னடா பேர் இது இவ்ளோ நீளமா இருக்கு.. ஏதாச்சும் ஜாஃபர்கான், ஜாகீர்கான்,சித்திக் ஃபைசல்னு சின்ன பேரா வச்சுக்கிட்டாதான் என்ன? என்னடா நீயி!’’

‘’இல்ல மச்சான் சிக்கினா வெட்டுதான்.. என்பேரு ஃபரூக் அப்துல்லா,உன் பேரு அபூ ஃபக்கீர் சிக்கந்தர்.. எங்கே சொல்லு’’ ராஜேஷை மிரட்டினான் சிவா.

ராஜேஷுக்கு அந்த பெயர் வாயிலேயே நுழையவில்லை. இவன் மட்டும் நல்ல ஈஸியா பரூக் அப்துல்லானு வச்சுகிட்டான்.. எனக்கு மட்டும் எவ்ளோ நீளமான பேரு.. வேணும்ணே நம்மள மாட்டிவிட சதி பண்றானோ என தோன்றியது. மவனே நான் மாட்டினா உன்னையும் போட்டுகுடுத்துட்டுதான்டா மறுவேலை பாப்பேன்! என மனதிற்குள் கொதித்துக்கொண்டான்.

‘’டே சிவா.. நீ வேணா அந்த பேரை வச்சுக்கோயேன் நான் பரூக் அப்துல்லானு வச்சுகிறேன்.. டக்குனு நினைவுக்கு வருது பாரு இப்போகூட சொன்னேன்பாரு.. ப்ளீஸ் ப்ளீஸ்...’’

முகமெல்லாம் சிவக்க அவனையே ஒரு நிமிடம் முப்பத்திரண்டு விநாடிகள் முறைத்துப்பார்த்தான் சிவா.. என்னதான் வாடாபோடாவாக இருந்தாலும் ராஜேஷை விடவும் சற்றே பெரியவன் சிவா! அவனுடைய ஒற்றை முறைப்புக்கே அடிபணிந்தான் ராஜேஷ்.

‘’கடைசியா கேக்கறேன் அந்த அஃபூ பக்கர் சிக்கன் பேரை நீயே வச்சிக்கடா.. மச்சான்.. ப்ளீஸ் மச்சான்.. பேர்னால அவங்ககிட்ட மாட்டிக்கணுமானு யோச்சிப்பாரு’’ , ஏனோ கடுமையாக விடாப்பிடியாகவே இருந்தான் சிவா.

‘’நாளைக்கு சாயங்காலம் அஞ்சுமணிக்கு மசூதியாண்ட வந்திடு...’’ என்று சொல்லிவிட்டு சென்றான். ராஜேஷ் தனியாக அமர்ந்து கொண்டு அன்றைக்கெல்லாம் அந்த பெயரை சொல்லி சொல்லி மனப்பாடம் செய்தான்.. ம்ஹூம் அந்தப்பெயரில் ஏதோ பிரச்சனை இருக்கிறது மறந்துபோய்விடுகிறது. இந்த பெயரால்தான் எவ்வளவு பிரச்சனை.. மாற்றித்தொலைத்தால்தான் என்ன?

தண்ணி ஊற்றி முகங்கழுவி.. சாமி கும்பிட்டு நெற்றியில் செவ்வகமாக விபூதி போட்டுக்கொண்டு தன் குடிசையிலிருந்து மசூதியை நோக்கி கிளம்பினான் ராஜேஷ்.. அங்கே சிவா ஏற்கனவே இவனுக்கு முன்பாகவே காத்திருந்தான்.

‘’என்னடா பேர் நினைவிருக்கா இருக்கா? கரெக்டா சொல்லிருவல்ல?‘’

‘சொல்லிருவேன்’’

‘’எங்கே சொல்லு’’

‘’அபூ பக்கிர் சி...சி... சிகந்தர்’’ உஃப் என கடைசியில் மூச்சுவிட்டுக்கொண்டான்.

மசூதிக்கு அருகிலிருந்த மைதானத்தில் நின்றுகொண்டிருந்த நீண்ட வரிசையில் நின்றுகொண்டனர். ராஜேஷுக்கு திக்திக் என்றிருந்தது. தலையில் குல்லாப்போட்டுக்கொண்டும் கர்சீப் கட்டிக்கொண்டும் அங்கிமிங்கும் அலைகிறவர்கள் ஒரு விநாடி நின்று அவனை கவனித்துவிட்டு செல்வது வேறு கிலியை உண்டாக்கியது. அவனுடைய பரம்பரையில் யாருமே கர்சீப் உபயோகித்த்தில்லை. தலையில் கர்சீப்பாச்சும் கட்டிருக்கலாம். அந்த பேர் வேறு.. என்ன பேர் அது.. அபூ.. பக்கீர்.. சிக்கந்தர்.. மந்திரம் போல மனதுக்குள் ஜெபித்துக்கொண்டே வந்தான்.

‘’சிவா திரும்பி போயிரலாம்டா.. பயமாறுக்குடா, பேர் மறந்திடும் போலருக்கு, கர்சீப்கூட இல்ல’’

‘’பேசாம நில்லுடா..’’ என்று தலையை திருப்பினான் சிவா.

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து க்யூ முன்னுக்குச்செல்ல.. அவனுடைய முறை..
ராஜேஷ் தன் தூக்குப்போசியை எடுத்து ரமலான் கஞ்சி ஊற்றிக்கொண்டிருந்த பெரியவருக்கு முன்னால் நீட்டினான். அவர் அவனை புன்னகையோடு சில விநாடிகள் பார்த்தார். பேர் கேப்பாரோ? அது என்ன பேரு.. அபூ பக்கீர்.. அப்புறம் மறந்துடுச்சே.. இதயம் படபடவென அடித்தது. அடிவயிற்றில் ஏதோ செய்வதுபோல இருந்தது. அவன் தன் ஓட்டை டவுசரிலேயே மூத்திரமே போய்விடுவான் போல இருந்தது. தூக்குபோசி நிறைய கஞ்சி ஊற்றிக்கொடுத்தார் பெரியவர். ஒரு பாக்கெட் பிரியாணியும் பூசணி அல்வாவும் கொடுத்தார். ஏனோ கடைசிவரை பெயரை கேட்கவேயில்லை. மனதுக்குள் சிரித்துக்கொண்டான் ராஜேஷ்.


(28-08-2011 தினகரன் வசந்தம் இதழில் வெளியான ஒருபக்க கதை)


24 August 2011

மணி ஐயரும் சுசிலா மாமியும்!


மாம்பலம் மாமி மெஸ்ஸில் தயிர் சாதம் சாப்பிடுவதை விடவும் பேரின்பம் வேறெதிலும் கிடைத்திடாது. தோழருக்கு மாமிமெஸ் தயிர்சாதமும் வடுமாங்காவும் போதும் வெறெதுவும் வேண்டாம். அப்படியாகப்பட்ட ஒரு மதியவேளை தயிர்சாதம் முடித்து திநகர் முப்பாத்தம்மன் கோயில் பக்கமாக பைக்கில் போய்க்கொண்டிருந்த போது அந்த போஸ்டர் கண்ணில் அகப்பட்டது!


(படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)

சகோ.இரா.மணி ஐயர் – மனந்திருந்திய பூசாரி என்கிற அந்த மஞ்சள் வண்ண போஸ்டரை கண்டதுமே.. வண்டி பிரேக் அடித்து நின்றது. அருகில் போய் பார்த்தால் ஏதோ சுவிஷேச அழைப்பு போஸ்டரை போல இருந்தது. அதேதான்! ஆஞ்சநேயருக்கும் அல்லேலுயாவுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பது புரியாமல் அதை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். மாம்பலம் மாமிகளை கவர் பண்ணி மதமாற்றம் பண்ண புது டெக்னிக் யூஸ்பண்றாய்ங்க போலருக்கே பாஸு என பேசிக்கொண்டோம்.

ஆனால் சில நாட்களுக்கு முன் பம்மலில் ஒரு வேலையாக பயணம் செய்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இன்னொரு போஸ்டர். இதிலும் பார்ப்பன பெண்மணி (சுசிலா மாமி!) ஒருவர் கிறிஸ்தவராக மதம் மாறியும் விடாப்பிடியாக தன்னுடைய சாதிப்பெருமையை கைவிடாமல் உடும்புபிடியாக பிடித்துக்கொண்டிருந்தார். மணி ஐயரை விடவும் இவர் ஒருபடிமேலே போய் கிறிஸ்தவ பிராமண சேவா சமிதி என்று அமைப்பு வேறு வைத்திருக்கிறார்கள்.


(படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)

அமாவசை நாளில் சிறப்பு பூஜை வேறு உண்டு. பில்லிசூனியங்களை எடுக்கிறார்களாம். பிசாசுகளை விரட்டுகிறார்களாம்! எண்ணெய்போட்டு ஸ்பெசல் பூஜை வேறு. உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் – யாத் 39:10 பைபிளில் இல்லாத வாசகங்களை போட்டு பயமுறுத்துகிறார்கள். பைபிளில் அப்படியெல்லாம் வாசகங்கள் கூட இல்லை!

**********


இந்த மொக்கை கிறிஸ்தவ பிராமண கோஷ்டிகளின் காமெடிக்கு நடுவில் பொள்ளாச்சி நசனின் தமிழம் தளத்தில் பழைய சிற்றிதழ்களை புரட்டிக்கொண்டிருந்த போது செய்தி துணுக்கு ஒன்று கண்ணில் பட்டது. யாரோ ஒரு பிராமணர் வேறு சாதி ஆள் ஒருவரிடம் பணம் வாங்குகிறார். கடன் கொடுத்தவன் திருப்பி கேட்க போன இடத்தில் நடக்கும் பிரச்சனையில் மாடுமுட்டி இறந்தார் என்னும் செய்தி எவ்வளவு நேர்த்தியாக திரித்து எழுதியிருக்கிறார்கள் என்பதை படித்து பாருங்களேன். (கல்பதரு இதழ் 1917ல் வெளியான செய்தி இது). இதை படிக்கும் போது எழுத்தாளர் மாமல்லன் அண்மையில் எழுதிய நிறம் கதையின் சாயல் அச்சு அசலாக தெரிவதை தவிர்க்க முடியவில்லை.





17 August 2011

கள்ளி





பத்தாண்டு சென்னை வாழ்க்கையில் பெற்றதைவிடவும் இழந்தது அதிகம். அதில் குறிப்பிடத்தக்கது கொங்குதமிழ் பேச்சு. ஏனோ நாட்பட நாட்பட என் கொங்குதமிழும் நீர்த்துப்போய் இன்னாமச்சி கோட்டர்தமிழாக மாறிவிட்டது. பேச்சுவழக்கெல்லாம் மறந்துபோகுமா என்ன? என என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டிருந்தாலும்..மறந்துவிட்டது விட்டதுதான்.

மறந்துபோன கொங்குத்தமிழை அதன் சுவையை மீட்டெடுக்கிற சீரிய முயற்சியை அண்மைக்காலங்களில் மேற்கொண்டு வருகிறேன். அதைப்பற்றி எப்போதோ நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில் வாமுகோமுவின் கள்ளி குறித்து குறிப்பிட்டார். கொங்குத்தமிழை அட்டகாசமாக கையாளுகிற சமகால எழுத்தாளர்களில் வாமுகோமு முக்கியமானவர் என்பதை அவருடைய சில சிறுகதைகளின் வாயிலாக அறிந்திருந்தேன்.

உயிர்மையில் அவருடைய சில சிறுகதைகள் படித்திருந்தாலும் நாவல் என்கிற வகையில் சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் குறித்த பல்வேறுபட்ட எதிர்மறை விமர்சனங்களின் அடிப்படையில் அதை படிக்கவேண்டும் என்கிற ஆவல் நிறையவேயிருந்தது. அதுவும் போக சரோஜா தேவி காலந்தொட்டே படிக்கும்போது கிடைக்கிற பாலியல் இன்பம் அண்மைக்காலங்களில் குறைந்துபோனதும், அது வாமுகோமுவின் எழுத்துகளில் ஏகத்திற்கும் கிடைப்பதாக நண்பர்கள் சொன்னதும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது.

அஜால்குஜால் கதை படிக்க போகிறோம் என்கிற ஆர்வத்தோடு புத்தகத்தை விரித்து வைத்து படிக்க ஆரம்பித்தேன். எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது நாவல். புத்தகத்தின் எந்தப்பக்கத்தை திறந்தாலும் சாராய போதையும் புணர்ச்சியும் மலிந்து காணப்பட்டது. ஆனால் அதற்காக இந்த நாவலை வெறும் பாலியல் கதையென்கிற என்கிற ஒற்றை பரிமாணத்தின் அடிப்படையில் சுருக்கிவிட இயலாது. வட்டார வழக்கு, தலித் அரசியல், பாசங்கில்லாத அப்பட்டமான கிராமத்து மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறை.. கொஞ்சமாய் ஆங்காங்கே தொட்டுக்கொள்ள ஊறுகாயாட்டம் செக்ஸ்!

இதை கிட்டத்தட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு என்றும் கொள்ளலாம். ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு விதமான கிராமத்து சூழல்,மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுகின்றன. அதையே தன் முன்னுரையில் நாவலாசிரியராகப்பட்டவரான வாமுகோமுவும் தெரிவிக்கிறார். வாய்ப்பாடி என்னும் ஊரைச்சேர்ந்த மல்லி என்னும் தலித் கூலியாளின் ஒரு மாலைப்பொழுதிலிருந்து கதை துவங்குகிறது. பின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக உள்ளே நுழைய தலித்துகளுக்கும் ஆதிக்கசாதி இந்துகளுக்குமான ஒரு போட்டி தொடங்குகிறது.

போக்கிடமில்லாமல் பிழைப்புக்கு வழியில்லாமல் கவுண்டர் சாதி முதலாளிகளிடம் கைகட்டி வாய்பொத்தி அவர்களிம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலம் வாழ்ந்த ஒரு சமூகம் , அருகாமை நகரத்தில் உருவாகும் தொழிற்புரட்சியால் கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் முதல்முறையாக ஆதிக்கசாதிக்காரர்களிடம் எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறது. அது அந்த ஊரிலும் வாழ்க்கை முறைகளிலும் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுகிறது.

வீடுவீடாக போய் சவரம் செய்துகொண்டிருந்த நாசுவன் தனியாக கடைபோடுகிறான். ஏன்டா உன்ரா எடத்துக்கு நாங்க வந்து முடிவெட்டிக்கோணுமா என கவுண்டர்கள் கொதிக்கிறார்கள். தலித் பையன் சின்ன கவுண்டச்சியை காதலித்து ஊரைவிட்டே ஓடுகிறான். பத்தாவது வரை படித்த தலித் பையன் வெள்ளையும் சொள்ளையுமாக சேரில் உட்கார்ந்து கணக்கெழுதுவதை கண்டு சகிக்க முடியாமல் வயிறெரிகிறது ஆதிக்கசாதிக்கு! இறுதியில் தன் வீட்டு வேலைக்கு தலித்திடம் கெஞ்சி கூத்தாடுவதாக கவுண்டனின் கதை முடிகிறது! ஆதிக்கசாதியின் அடுத்த தலைமுறை தலித்துகளை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு தன் அப்பன் பிணத்தை புதைக்க அதுவே குழிதோண்டுகிறது. கல்வியும் வேலைவாய்ப்பும் தலித்திய சமூகத்தில் பெரிய மாற்றங்களை உண்டுபண்ணுகிறது. அது அவர்களை எதிர்த்து கேள்விகேட்கவும் தூண்டுகிறது.முதல்முறையாக திருப்பூர் பனியன் பாக்டரிகள் வாய்பாடியில் தலித்துகளின் புரட்சிக்கு வித்திடுகிறது.

ஆதிக்க சாதியின் பாலியல் வாழ்க்கையும் தலித்துகளின் பாலியல் வாழ்க்கையும் ஒரு ஊரில் எப்படி இருவேறாக கூர்நோக்கப்படுகிறது என்கிற பார்வையும் இக்கதையினூடாக சொல்லப்பட்டிருக்கிறது. கதையில் முதலில் ஒரு விஷயம் மிகவும் நெருடலாக இருந்தது. கதையின் பாத்திரமான பழனிச்சாமியோடு உறவு வைத்துக்கொள்ள கதையில் வருகிற மற்ற எல்லா பெண்களும் துடிக்கின்றனர். அவனோடு எல்லா கிட்டத்தட்ட எல்லா பெண்களும் படுத்துக்கொள்கின்றனர். அவன் காடு மேடு கரடு வீடு என எங்கும் யாரையாவது புணர்ந்தபடியே அலைகிறான். (கதைக்குள் பழனிச்சாமி வரும்போதெல்லாம் படிக்கும் நமக்கு மனம் குதூகலிக்கிறது! ஷகிலா படங்களில் ஷகிலா வருவார் முன்னே பிட்டு வரும் பின்னே என்பதற்கிணங்க). ஆனால் ஒவ்வொரு பெண்ணும் பழனிச்சாமியோடு உறவுக்கு ஒப்புக்கொள்வதற்கு பின்னாலிருக்கிற உளவியல் பிரச்சனைகளையும் சமூக காரணங்களையும் போகிற போக்கில் வசனங்களினூடாகவும் நிகழ்வுகளினூடகவும் தந்துவிடுகிறார்.

அறுப்புக்கு வந்த ரெகார்ட் டேன்ஸ் பெண்ணை கவரும் முத்தா கவுண்டர். அவளை உறவுக்கு அழைத்து உறவின் உச்சநிலையில் கைமேல காசுவெச்சாதான் அடுத்து என சொல்வதிலாகட்டும், இருட்டுக்குள் மாதாரி பெண்ணை புணர்ந்தபடியிருக்கும்போது மாதாரிகளிடம் மாட்டிக்கொள்ளும் ஆதிக்கசாதி சுரேந்திரன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவெட்டாக இருப்பதாகட்டும், அறுப்பு கூலியை ஏமாற்ற முனையும் கவுண்டனை மிரட்டி பணியவைக்கும் வெளியூர் கூலிகளால் தெம்பாகி தானும் முரண்டு பிடிக்கும் மல்லியின் பாத்திரமாகட்டும் முகத்தில் அறைகின்றன.

குழந்தைகள் இருவர் செக்ஸ் என்பது என்னவென்று தெரியாத காலத்தில் எடக்கு மடக்காக ஏதோ செய்து பார்க்கின்றனர். அதை பார்க்கிற பெண்குழந்தையின் தாய் பையனை அடிக்க.. பையனின் அம்மாவும் பெண்ணின் அம்மாவும் போட்டுக்கொள்கிற சண்டை பிரமாதமானது. அதுமாதிரி ஊர்பக்கம் நிறைய பார்த்திருக்கிறேன். அப்படியே அச்சு அசல் வார்த்தைகளின் கோர்வையாக அந்த அத்தியாயம் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு மனநிலையில் சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
பழனிச்சாமியும்,மல்லியும்,சுரேந்திரனும்,முத்தா கவுண்டரும்,சுந்தரியும்,வெள்ளைசீலைக்காரியும் நாவலை மூடிவைக்கும்போது மனசெல்லாம் நிறைந்துவிடுகின்றனர்.

கொங்கு மண்ணின் அசல்மனிதர்களையும் வட்டார வழக்கின் சுவையையும் கடந்த ஆண்டுகளில் அங்கே நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் எந்த வித பாசாங்குமில்லாமல் அச்சு அசலாக பதிவு செய்திருக்கிறார் வாமுகோமு.

(உயிர்மை பதிப்பகம் வெளியீடு)
(புத்தகம் தந்து உதவிய ரோமியோவிற்கு நன்றி)

12 August 2011

சறுக்குமரம்




அவனுடைய குட்டிப்பாப்பா தன் புன்னகையை தொலைத்து மூன்றுநாட்களாகிவிட்டது. சாப்பிடுவதுமில்லை, தூங்குவதுமில்லை. யாருடைய கேள்விக்கும் பதிலும் கிடையாது. எப்போதும் சோகமான முகத்துடன் சிந்தனை மட்டும்தான். அதற்கான காரணம் மாலை ஆறுமணிக்கு திறந்து ஏழரை மணிக்கே அவசரமாக விசிலடித்து மூடப்படுகிற அந்த சிறிய பூங்காவின் ஒற்றை சறுக்குமரம்.

அவனுடைய சிறிய வீடு, நகரத்தின் கடைக்கோடியிலிருந்த புதிய குடியிருப்பு பகுதியில் இருந்தது. மிருக காட்சி சாலையில் குரங்குங்களின் கூண்டுகள் போல அடுக்கடுக்காக இருக்கிற குடியிருப்பு பகுதியது. அப்பகுதி குழந்தைகள் விளையாட இருக்கிற ஒரே இடம் அந்த சிறிய பூங்கா மட்டும்தான்.

பாப்பா தவழ்ந்து கொண்டிருந்தவரை அவளுக்கு சிறகுகள் இல்லை. கால்களில் சிறகுகள் முளைத்தபோது பறக்க இடமில்லை. கொஞ்சம் வேகமாக பறந்தாலும் சுவர்கள் முட்டும். வெளியே எங்கும் ஓடிவிளையாட முடியாது வாகனங்கள் தொல்லை. இரவுகளில் அவளுக்கு நிறைய தேவதைகதைகள் சொல்வான். அவளுக்கு அதில் திருப்தியில்லை.!

புதிய சிறகுகள் முளைத்த எந்தப் பறவைக்கும் இருக்கிற அதே உணர்வு அவளுக்கும் இருந்தது. சுதந்திரமாக பறக்க வேண்டும். என்ன செய்வதென்று அதிகம் யோசிக்காமல் அவளை அப்படியே வாரி அணைத்து தூக்கிக்கொண்டு போய் பூங்காவில் விட்டு விடுவான். அவள் அங்கே பறந்து பறந்து சோர்வடையும் வரை திரிவாள். தினமும் ஆறரை மணிக்கு அலுவலகம் முடிந்து வீடு வந்ததும். காஃபி கூட குடிக்காமல் பாப்பாவோடு பூங்காவிற்கு ஓடுவான்.

அவர்கள் செல்லும் நேரத்தில் எப்படியும் அவர்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பெற்றொர்களும் குவிந்திருப்பார்கள். ஆய்ய்ய்ய்.. ஓய்ய்ய்ய்... டேய்ய்... என பலவிதமான ஸ்வரங்கள் அப்பகுதி முழுக்க சங்கீதமாய் ஒலிக்கும். இருவரும் அந்த இசையில் இரண்டற கலந்துவிடுவார்கள். என்றாலும் பாப்பாவுக்கு அங்கிருக்கும் சீசாவிலோ ஏணியிலோ ஊஞ்சலிலோ விளையாடுவதில்லை. பூங்காவின் மத்தியிலே வீற்றிருக்கும் சறுக்கு மரம் மட்டும்தான் அவளது இலக்கு. அங்கு மட்டும்தான் ஒரு மணிநேரமும் விளையாடுவாள்.

ஆனால், அது அவ்வளவு சுலபமாக அவளுக்கு கிடைத்துவிடாது. சறுக்குமரத்திற்கு பின்னால் நீளும் நீ...ண்ட வரிசையில் நிற்க வேண்டும். அனைவருமே அவளைப்போல அழகழகான குழந்தைகள்தான். எல்லோர் முகத்திலும் ‘’எப்போ நம்ம முறை வரும்’’ என்கிற ஆர்வம் நிறைந்திருக்கும்

இந்த காத்திருத்தலுக்கு பாப்பா நன்றாக பழகியிருந்தாள். முன்னாலும் பின்னாலும் குழந்தைகள் முட்டித்தள்ளிய போதும் தடுமாறி விழ நேரும் போதும் வேர்த்துக்கொட்டினாலும் முட்டி சிராய்த்தாலும் க்யூவில் நிற்பாள். எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றாள்.

அவளது முறை வரும்போது வெகு ஜாக்கிரதையாக, அதேநேரம் வேகமாக ஏணியில் ஏறுவாள். கீழிருந்து பார்க்கும் அவனுக்குத்தான் கால்கள் நடுங்கும். உச்சியை அடைந்ததும் சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பாள். அப்போது அவளது கண்களில் வழியும் சந்தோஷத்தை அப்படியே சிந்தாமல் வாங்கிக்கொள்வான். அந்த மகிழ்ச்சி ஒன்று போதும் அவனுக்கு. ஒரு நொடிதான். அதன் பின், சொய்ய்ய்ங்ங்க் என சறுக்கி கீழே விழுவாள்.'அடி பட்டிருக்குமோ' என பதற்றத்துடன் அவளை நெருங்குவான். ஆனால், அதற்குள் தன் மீது படிந்த மண்ணை தடதடவென தட்டிவிட்டு குடுகுடுவென ஓடிப்போய் மீண்டும் வரிசையில் நிற்பாள்.
மீண்டும் காத்திருப்பு. மீண்டும் ஏணி. மீண்டும் உச்சி. மீண்டும் சுற்றிலும் ஒரு பார்வை. மீண்டும் சொய்ய்ய்ங்ங்ங்க். மீண்டும்...

தொடர்கதையானது சறுக்குமர விளையாட்டு. எல்லா நாளுமே திருவிழாவானது.
ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வீடு வந்து சேர, பூங்காவிற்கு போக முடியாமல் போனது. பாப்பா ஒரே அழுகை, அவனோடு முகம் சிவக்க மூக்கு வெடைக்க கடுமையான சண்டை. காய்ச்சலே வந்துவிட்டது. இரண்டு மாத்திரை ஒரு ஊசிக்கு பிறகுதான் சகஜமானாள். ஆனால், அவள் கண்களில் தெறித்த ஏக்கம், அவனை பொசுக்கி விட்டது. அதன் பிறகு எந்த வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு மாலையே வீடு திரும்ப ஆரம்பித்தான்.

தினமும் தொடர்கிற இந்த சறுக்குமர விளையாட்டு, ஒரு நல்ல நாளில் முடிவுக்கு வருமென அவனோ பாப்பாவோ நினைக்கவேயில்லை. எப்போதும் போல அன்றைக்கும் பாப்பா ஏணியில் நான்காவது முறை ஏறினாள். விழுந்து எழுந்து க்யூவில் நிற்க ஓடினாள். எப்போதும் ஒழுங்காக க்யூவில் நிற்பவள் அன்றைக்கு ஏனோ வரிசைக்கு நடுவில் போய் நின்றாள்.

அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு குண்டுபையன் பின்னால போ என பயங்கரமாக சப்தமிட... பயந்து போய் வரிசையிலிருந்து வெளியே வந்தாள். இதைப் பார்த்த ஒரு அம்மா, ‘’ஒழுக்கமில்ல.. க்யூல நிக்கமாட்டே.. டிசிப்ளின் இல்லே... உங்க அம்மா எங்கே.. ‘’ என ஏதேதோ சொல்லி அதட்ட.. குட்டிப் பாப்பா ஓஓவென அழுதபடி ஓடி வந்து கண்களை கசக்கியபடி அவனுடைய கால்களை கட்டிக்கொண்டது

‘’’ஏன்ங்க சின்னக்குழந்தைக்கு என்ன தெரியும், பாவம், ஏதோ தெரியாம..’’ என அந்த அம்மாவிடம் கோபமாய் பேசினான். ‘’கொழந்தய ஒழுக்கமா வளக்க தெரியல, டிசிப்ளின் இல்ல.. க்யூல நிக்கறதுகூடவா சொல்லித்தரமாட்டீங்க, நீங்க ஒழுக்கமா இருந்தா உங்க குழந்தை ஏன் சார் இப்படி இருக்க போவுது..’’ என அவனையும் பயங்கர சப்தத்தோடு அதட்ட.. சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவமானமாக உணர்ந்தவன் குனிந்த தலையோடு அருகிலிருந்த பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டான். பாப்பா க்யூவில் நிற்காமல் அவன் அருகில் வந்து உட்கார்ந்தது. ‘’பாப்பா போய் விளையாடு’’ என்றான். பாப்பாவோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு அப்பாவின் கைகளை இறுக பற்றிக்கொண்டது. அவன் தோளில் சாய்ந்து கொண்டது. சட்டை ஈரமாவதாக உணர்ந்தான்.

‘’டாடி நான் மட்டும் தனியா சறுக்கு மரத்துல விளையாடணும், அவங்களாம் வேண்டாம்.. நான் மட்டும்.. அப்புறம் நீ.. ‘’ என வார்த்தைகளை கோர்த்து கோர்த்து பத்து வயது குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழுதபடி பேசினாள். அவன் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தான். மீண்டும் மீண்டும் பாப்பா.. ‘’ஒரே ஒருவாட்டி டாடி.. ப்ளீஸ் டாடி’’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தது. எரிச்சலும் கோபமும் கலந்திருந்த அவனுடைய மனநிலையில் ‘’கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டியா... பேசாம உக்காரு’’ என உரக்க அதட்டினான். ஓய்ந்த மழை மீண்டும் தொடங்கியதுபோல அமைதியாகத்தொடங்கிய பாப்பா மீண்டும் அழத்தொடங்கியது. அவனுடைய கைகளை கட்டிக்கொண்டிருந்தவள் கையை விடுவித்துக்கொண்டு பெஞ்சின் மறுமுனையில் தள்ளிப்போய் அமர்ந்துகொண்டாள். அழுதபடியே இருந்தாள்.

அதற்கு பிறகு மூன்று நாட்களாகிவிட்டது. யாருமேயில்லாத சறுக்குமரத்தை தேடாத இடமில்லை. அந்த நகரத்தின் எல்லா பூங்காக்களிலும் எப்போதும் நிறைய குழந்தைகள் நிரம்பியேயிருந்தனர். இதைப்பற்றியே இரவெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்தான். பாப்பா இப்படி இருப்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அலுவலகத்தில் சிலரோடு பேசினான். ம்ஹூம் இது யாருக்கும் பெரிய பிரச்சனையாக இல்லை. அடம்பிடிச்சா முதுகுல நாலு வச்சி உஷ்னு சொல்லுங்க பாப்பா அதுக்கப்பறம் சரியாகிடும் என சொன்னார் வாட்ச்மேன் அண்ணா!

நீங்க நல்லதா பெரிசா ஒரு டெடிபேர் பொம்மை , பவர் ரேஞ்சர் டுப்பாக்கி இல்லாட்டி ஸ்பைடர்மேன் மாஸ்க் இதுமாதிரி ஏதும் வாங்கி குடுங்களேன் என்றார் டீ தருகிற பையன்.
காத்து கருப்பு அடிச்சிருக்குங்க எதுக்கும் தர்காவுக்கு போய் ஒருவாட்டி மந்திரிச்சுட்டு வந்துடுங்க.. என்றார் இன்னொருவர்.

கூல் பாஸ்! இது குழந்தைங்க மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை நல்ல மருத்துவரை பாருங்களேன்.. எனக்குத்தெரிஞ்ச டாக்டர் இருக்காரு.. பிரண்டுதான் அப்பாயின்மென்ட் வேணா வாங்கிதரேன் என்றார் மேனேஜர். அவனுக்கு எந்த யோசனையும் பிடிக்கவில்லை. இனி இதைப்பற்றி யாரிடமும் பேசவும் தயங்கினான். இருந்தும் மனைவியிடம் பேசினான்.

‘’பேசாம ஒரு பெரிய சறுக்குமரம் வாங்கிட்டா என்ன?’’

‘’வாங்கி முதுகுல வச்சுப்பீங்களா.. உக்காரவே இடமில்ல.. இதுல நடக்கற காரியமா பேசுங்க’’

‘’எங்கயாச்சும் கூட்டிட்டு போயிட்டு வந்தா’’

‘’எங்க கூட்டிட்டு போய்ட்டு வருவீங்க.. போக்கத்த பொழப்புக்கு போக இடம்வேற இருக்காக்கும்’’

‘’வாட்டர் தீம் பார்க் அந்தமாதிரி’’

‘’இந்த மாசம் இன்னும் வாடகை கொடுக்கல, வண்டி வேற பிராப்ளம்னு சொன்னீங்களே நினைவிருக்கா’’

‘’என்ன செய்யலாம்’’

‘’எனக்கு காலைல நாலு மணிக்கு எழுந்து உங்களுக்கு சமைச்சு கொட்டணும் இப்போதைக்கு தூங்கலாம்’’ என லைட்டை அணைத்துவிட்டு அவனருகில் படுத்துக்கொண்டாள். இரவெல்லாம் அவனுக்கு உறக்கமேயில்லை. சறுக்குமரத்துக்கு என்ன செய்றது? அலுவலகத்திற்கு போகும் போதும் வரும் போதும் சறுக்குமரம் தனியாக நின்றுகொண்டு அவனை பார்த்து சிரிப்பதைப்போலவே உணர்ந்தான்.

மூன்று நாட்களுக்கு பிறகு பூங்காவிற்கு சென்று அங்கிருக்கிற செக்யூரிட்டியிடம் பேசினான். ‘’ எக்ஸ்யூஸ்மீ சார்! ஏழரை மணிக்கு மேல அந்த சறுக்குமரம் சும்மாதானே இருக்கும்.. அப்ப வந்து கொஞ்ச நேரம் எங்குழந்தைய கூட்டிட்டுவந்து விளையாடலாம்னு.. ரூவா ஏதும் வேணுமான கேளுங்க குடுத்துறேன், சரக்கு சாப்டூவீங்களா’’ என்றான்.

தன் மூக்கு கண்ணாடியை கழட்டி துடைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்து.. அலட்சியமாக ‘’அதெல்லாம் முடியாது சார், என் வேலையே போய்டும்.. அசோசியேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டா அவ்ளோதான்’’ என காரணங்களை அடுக்கினார், கடமை தவறாத அந்த செக்யூரிட்டி. என்ன செய்வதென்றே புரியாமல் அங்கிருந்து கிளம்பினான். பூங்காவிற்கு பின்னாலிருந்த கடையில் சிகரட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு யோசித்தான். பூங்காவின் மதில் சுவர் பெரிய உயரமில்லை.

‘’பாப்பா இன்னைக்கு நைட்டு நாம சறுக்குமரத்துல ஜா.....லியா விளையாடப் போறோம்.. தனியா!’’ என்று பாப்பாவை தூக்கி ஒரு சுற்று சுற்றினான். பாப்பாவுக்கு மட்டுமல்ல அவன் மனைவிக்கும் ஆச்சர்யம். மூன்று நாட்களுக்கு பிறகு பாப்பா புன்னகைத்தது. அவனுக்கு கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்ததை போல உணர்ந்தான். கொஞ்சமாய்தான் புன்னகைத்தாள்.

‘’என்னங்க என்ன பண்ணப்போறீங்க’’ புருவம் உயர்த்தி கேட்டாள் மனைவி.
‘’நைட்டோட நைட்டா சுவர் ஏறி குதிச்சி.. உள்ளே போயி கொஞ்ச நேரம் விளையாடிட்டு வந்துட வேண்டியதுதான்’’ என்று சாகசம் செய்யப்போகிறவன் போல பேசினான்.

இருவரும் பேசுவதை பாப்பா பார்த்துக்கொண்டிருந்தது. ‘’டாடி நைட்ல போனா பூச்சாண்டி புடிச்சிராது, ஒனக்கு பயமாறுக்காது’’ என்று அதன் பங்குக்கு ஒரு கேள்வியை கேட்டது.
தலையில் முண்டாசும் மடித்து கட்டின லுங்கியுமாக பாப்பாவின் விரல்பிடித்தபடி டார்ச் லைட்டோடு கிளம்பினான். ஹாலஜன் விளக்கு ஒளியில் பூங்காவே கறுப்பும் மஞ்சளுமாக இருந்தது. அதிக இருட்டில்லை. தூரத்தில் கேட்டுக்கு வெளியே செக்யூரிட்டி சேர்போட்டு உட்கார்ந்தபடி கையிலிருந்த லத்தியில் முட்டுக்கொடுத்தபடி தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தான். மதில் மேல் பாப்பாவை உட்கார வைத்தான். அவனும் ஏறினான். மதில்மேல் ஏறி அதிலிருந்து இறங்கி பாப்பாவையும் இறக்கினான்.

சின்ன புதர்களை கடந்து ஒன்றிரண்டு மரங்கள் கடந்து, சீசா கடந்து, ஏணிகள் கடந்து
உள்ளே நுழைந்தான். தன்னந்தனியாக இருட்டிலும் யாருமேயில்லாமல் புத்தர் போல நின்றுகொண்டிருந்தது அந்த துருப்பிடித்த பழைய சறுக்குமரம். பாப்பா அதை தூரத்தில் பார்த்ததுமே ஓடிப்போய் அதன் அருகில் நின்று சிரித்துக்கொண்டாள்.. மனசுக்குள்ளே ஐஸ்கட்டியை வைத்து இறுக்கக்கட்டிக்கொண்டது போல ஜில்லென உணர்ந்தான்.

பாப்பா ஏணியில் ஏறாமல் ஏனோ அந்த சறுக்குமரத்தையே சுற்றிசுற்றி ஓடி வந்தாள். கொஞ்ச நேரம் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அருகிலிருந்த அந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டான். பாப்பா ஏணியில் தன் சின்ன காலில் அழகிய பொம்மைப்போட்ட செறுப்போடு முகமெல்லாம் சிரிப்போடு காலை வைத்து ஏறினாள். பொறுமையாக ஏறி முடித்து மேலிருந்து கீழே சொய்ங்ங்ங்க் என பாய்ந்து வரும்போது.. ஹேய்ய்ய்ய் என உற்சாகமாய் சப்தமிட.. அவனோ உஷ்உஷ் என செய்கை காட்ட..

‘’எவன்டா அது.. பார்க்குக்குள்ள.. என கேட்டிலிருந்து ஒரு சப்தம்.. செக்யூரிட்டியின் டார்ச் ஒளி ஒளிக்கற்றையாக மரங்களில் பட்டுத்தெறித்து அங்குமிங்கும் அலைந்தது.
அய்ய்யோ என பதறிப்போய், பாப்பாவை தூக்கி மார்பில் போட்டுக்கொண்டு ஓடத்துவங்கினான். ‘’டாடி.. சீக்கிரம் போங்க.. அந்தாளு ஓடி வரான்’’ என அப்பாவின் முதுகில் குத்தியது பாப்பா!. பின்னாலே செக்யூரிட்டி ஓடிவருதைப்போல இருந்ததால் தடதடவென வேக வேகமாய் ஓடினான். பாப்பாவை மதில் மேல் ஏற்றிவிட்டு அவனும் ஏறினான்.. தூரத்தில் ஏய் யார்ரா அவன்.. நில்லுடா ஓடாதே என கத்திக்கொண்டு கையில் லத்தியோடு விசுக்கி விசுக்கி ஓடிவந்தார் செக்யூரிட்டி. ‘’டாடி பயமாறுக்கு..!’’ என்றது பாப்பா. குரலில் பதட்டம்.

அவன் சுவரிலிருந்து குதிக்க.. கீழே எதற்கோ வெட்டிவைத்திருந்த ஏதோ ஒரு குழியில் தடுமாறி விழுந்தான். இருட்டு பகுதியென்பதால் ஆஆஆ என்கிற அலறல் சப்தம் மட்டுமே கேட்டது. பாப்பா மட்டும் மதிலில் தனியாக அமர்ந்திருந்தாள். மூச்சிரைக்க தலையில் மப்ளரும் கையில் டார்ச்சோடும் ஓடி வந்து நின்றார் செக்யூரிட்டி. அழுதபடி அமர்ந்திருந்த பாப்பா அவருக்கு கீழே விரலை காட்டியது பாப்பா!. ‘’டா....டி’’

அவன் விழித்துப்பார்த்தபோது மருத்துமனையின் ஒரு சிறிய அறையில் கைகளில் மிகப்பெரிய கட்டுடன் படுத்திருந்தான். அருகில் பாப்பாவும் அவனுடைய மனைவியும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின்னால் மாமனார்.

‘’கொஞ்சம் மிஸ்ஸாகிருந்தா, குழில நீட்டிட்டு இருந்த கம்பி நெஞ்சுல பாய்ஞ்சிருக்கும், நல்ல வேளை கையோட போச்சு’’ மாமனார் சொன்னார். பாப்பா பேசாமல் அமர்ந்திருந்தாள். அழுதிருக்க வேண்டும். கண்கள் ஈரமாய் இருந்து அழுக்குப் படிந்து காய்ந்திருந்தது.

‘’நான் கும்பிடற அம்மன்தான் உங்களை காப்பாத்திருக்கணும்.. ஒருமாசம் ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாருங்க..’’

‘’பணத்துக்கு?’’

‘’அக்கவுண்ட்ல இருந்த முப்பதாயிரத்தை எடுத்துகிட்டேன், இவளுக்காக சேத்து வச்சதுதானே.. விடுங்க சேர்த்துக்கலாம்.. ’’

‘’ஏன் குழந்தை அழுதிருக்கா திட்டினீயா’’

‘’திட்னேனா..இவ செஞ்ச காரியத்துக்கு அடிச்சே கொன்னுருப்பேன்.. சனியன், எப்படி உட்கார்ந்திருக்கு பாருங்க.. அடங்காபிடாரி, அப்படியென்ன இந்த வயசுலயே சொல்பேச்சு கேக்காததனம், இவளாலதான இவ்வளவும்.’’ என்று முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு கண்கள் விரிய பாப்பாவின் தலையில் சப் என அடித்தாள். அடித்துவிட்டு தன் புடவை தலைப்பை கண்களுக்குள் அருகில் வைத்துக்கொண்டு அழுதாள். பாப்பா அழத்தொடங்கியது. ‘’ஏன்மா..கொழந்தயப்போயி, பாவம்.. இங்கவாடா குட்டி, அவ என்ன செய்வா’’ என பாப்பாவை அருகில் அழைத்து கைகளை தன் உடையாத கைகளில் பிடித்துக்கொண்டான்.

‘’இல்லைங்க.. இந்த மாசமே அடிச்சிபிடிச்சிதான் செலவு பண்ணிட்டிருந்தேன்.. நாற்பதாயிரம் ஆகிருக்கு.. அப்பா சேவிங்ஸ் இருக்கபோயி ஆச்சு... இந்த மாசம் உங்க சம்பளமும் இருக்காது, நான் என்னதான் பண்ணுவேன்’’ கண்கள் கலங்க பேசினாள் அவள். பாப்பா அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது அழவில்லை.

நான்கு நாட்களாக மதியமும் இரவும் உறங்கினான். பல நாட்களுக்கு பிறகு நல்ல ஓய்வு. பள்ளி முடிந்து மதியவேளைகளில் பாப்பா வந்துவிடுவாள். அவளுக்கு கதைகள் சொல்வான். அவளிடம் நிறைய பேசுவான். அமைதியாகவே கேட்பாள். ஆம் இல்லை என்பது மாதிரியான பதில் மட்டுமே சொல்வாள். ஏனோ பாப்பாவின் முகத்தில் சிரிப்பேயில்லை என வருந்தினான். பாப்பாவின் சிரிப்புக்காக ஏங்கினான்.

பாப்பா இல்லாத நேரங்களில் ஜன்னல் வழியாக பரந்துவிரிந்து கிடந்த மிகப்பெரிய நகரத்தினை பார்த்துக்கொண்டிருப்பான். எங்கும் வீடுகள், வீடுகள்,வீடுகள்,கட்டிடங்கள். மரங்கள் கூட இல்லை. எங்கேதான் போய் விளையாடும் இந்நகரத்தின் குழந்தைகள்?. இது நிச்சயமாக குழந்தைகளுக்கான நகரமேயில்லை என நினைத்தான்.

மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு சிறிய பூங்காவொன்றிருந்தது. அதில் ஒரு சிறிய சறுக்குமரமும் இருந்தது. அது பெரும்பணக்காரர்களின் பகுதியென்பதால் அந்த பூங்காவில் நடைபயிற்சிக்காக சிலர் வருவதையே பார்த்திருக்கிறான். பணக்கார குழந்தைகளுக்கு சறுக்குமரம் தேவைப்படுவதில்லை போல என நினைத்தான். இது எப்போதும் அநாதையாக விளையாட யாருமின்றி குழந்தைகளுக்காக காத்திருப்பதைப்போல மிக மிக அமைதியாடும் ஏக்கத்தோடும் சோகமாக தனியாக இருந்தது. துருப்பிடிக்காமல் புத்தம் புதிதாக!

தலைகுனிந்து சாத்துக்குடியை கைகளில் வைத்து உருட்டிக்கொண்டிருந்த பாப்பாவை அழைத்தான். ‘’பாப்பா இங்கவாயேன்..’’ ஜன்னலுக்கு அருகே அழைத்துச்சென்றான். ‘’அங்க பாரு அங்க ஒரு பூங்கா இருக்கில்ல.. அதுல சறுக்குமரம் தெரியுதா.. யாருமேயில்ல.. தனியா.. சாயங்காலம் போய் விளையாடலாமா?’’ என பாப்பாவின் தோள்பிடித்து ஆறுதலாக கேட்டான். பாப்பா கண்களில் அத்தனை பயம். உடல்நடுங்க ‘’வேண்டாம் டாடி, எனக்கு சறுக்குமரம் தனியா வேண்டாம், ப்ளீஸ் டாடி’’ என்று அப்பாவின் கைகளை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.



06 August 2011

சீமானும் முட்டாள்சீடர்களும்




நாம்தமிழர் இயக்கத்தின் தொண்டர்களுக்கு மூளை என்கிற வஸ்துவே இருக்காதோ என்கிற எண்ணம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதை நிரூபிக்கும் வகையில் சில்லறைத்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் முதன்மையானவர்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் புத்தகயாவுக்கு பாதயாத்திரை செல்வதற்காக சென்னை வந்திருந்த சிங்களவர்கள் சிலரை அடித்து உதைத்து கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். புத்த பிட்சுகளிடம் தங்களுடைய வீரத்தை வெளிக்காட்டுவது இது இரண்டாவது முறை! சினிமாவில் காட்டுவதைப்போல புத்தபிட்சுகளுக்கு குங்ஃபூவெல்லாம் தெரியாதுபோல!

சென்ற மாதத்தில் ஒருநாள் தொலைபேசிக்கான கட்டணம் செலுத்த ஏர்டெல் மையம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். நீண்ட வரிசையில் காத்திருந்தோம். எங்களுக்கு முன்னால் இருந்தவர் நாம்தமிழர் டிஷர்ட் போட்டுக்கொண்டு பரட்டை தலையும் முரட்டு பார்வையுமாக காட்சியளித்தார். க்யூ நகர அந்த நபர் கட்டணம் வசூலிக்கிற இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். அன்றைய தினம் ஏதோ இணைய பிரச்சனையால் டெபிட் கார்டில் கட்டணம் செலுத்த முடியாத நிலை. அதை அந்தப்பெண் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் முரட்டு நபரோ விடாப்பிடியாக அந்த பெண்ணை திட்டத்தொடங்கினார். பேச்சு இன்னும் நீண்டு.. ஏய் நீ ராஜபக்சேவோட கைக்கூலிதானே.. அந்தநாதாரி நாயோட பினாமிதானே.. என்றுதொடங்கி.. தமிழினத்தை இலங்கைல அழிச்சது பத்தாதுனு இங்கேயும் வந்துட்டீங்களா.. அது இது.. என அந்த பெண்ணிடம் பேச.. அப்பாவியான அந்தப்பெண்.. அழத்தொடங்கிவிட்டார். அந்தபெண்ணுக்கு ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு?

ஆனாலும் நம் வீரர் விடவில்லையே.. ஏர்டெல்லுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை பட்டியிலிட தொடங்கிவிட்டார். இதெல்லாம் சீமானுக்கே தெரியுமாவென்று தெரியவில்லை. கிட்டதட்ட ஒரு ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரைப்போலவே நடந்துகொண்டார். அந்த சென்டரின் மேலாளர் நேரடியாக வந்து அவரை சமாதானப்படுத்தி.. அனுப்பி வைப்பதற்குள் இடமே போர்க்கோலமாகிவிட்டது. நல்ல வேளை அந்த நபர் மட்டும் தனியாக வந்ததால் அடிதடி வெட்டுகுத்து கலவரம் ஏதும் நடக்கவில்லை. கூட்டமாக வந்திருந்தால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் போட்டு அடித்திருக்கலாம்.

தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பொறிபறக்க பேசும்போது உன் அக்கா தங்கைகளை நான் கற்பழிக்கட்டுமா என சவால் விடுகிறார். என்ன பேச்சு இது.. சிங்களர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டால் நாமும் அதையே செய்யவேண்டும் என சொல்வதெல்லாம் என்ன அரசியல் பார்வை என்பதை புரிந்துகொள்ளமுடிவதில்லை.

புத்தகயாவிற்கு பாதயாத்திரை வந்த சில சிங்களவர்கள் தங்களுடைய டிஷர்ட்டில் சிங்கள வாசகங்கள் எழுதப்படிருந்த காரணத்தினால் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களொன்றும் சிங்கள ராணுவத்தினரோ ராஜபக்சேவின் கைக்கூலிகளோ அல்ல , நம்மை போல சாதாரண மனிதர்கள்தான். தமிழ்நாட்டில் பாதயாத்திரை போகிறவர்கள் டீஷர்ட்டில் ஓம்முருகா என்று எழுதப்பட்டிருக்கும் இல்லையா அதுபோல அவர்களுக்கு தெரிந்த சிங்கள மொழியில் ஏதாவது வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். சிங்கள மொழி டிஷர்ட் அணிந்துகொண்டு தமிழகத்திற்குள் நுழைந்துவிட்டார்கள் என அவர்களை தாக்குவது எவ்வளவு முட்டாள்த்தனமான செயல்!

அப்பாவிகளை தாக்குவதில் சிங்கள ராணுவத்திற்கு நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை என்பதை காட்டுகிற செயலா இது!

ராஜபக்சேவும் அவருடைய இன்னபிற அடிபொடிகளும் இந்தியா முழுக்க சுற்றும்போதும் திருப்பதியில் தரிசனம் செய்யும்போதும் கருப்பு கொடி மட்டுமே காட்டுகிற இவர்களால் அடித்தால் திருப்பி அடிக்க முடியாத புத்தபிட்சுகளை தாக்குவதும் அப்பாவிகளிடம் எகனை மொகனையாக பேசுவதும்தான் என்ன கருமாந்திர வீரம்!

நாம்தமிழர் இயக்கத்தினரின் இந்த கண்மூடித்தனமான கொலைவெறிப்பாசம்.. தமிழகத்திற்கு வருகிற சிங்களர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்கிற வெறி , எவ்வளவு பெரிய ஆபத்தினை விளைவிக்கும் என்பதை ஏனோ இயக்கத்தலைமையோ தொண்டர்களோ உணர்வதில்லை. மீனவனை அடித்தால் உன் மாணவனை அடிப்போம் என சவால் விடுவதால் பாதிக்கபடப்போவது யார்? இங்கே நீ சிங்களவனை அடித்தால்.. தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழனுக்கு பிரச்சனையொன்று வரப்போவதில்லை. இலங்கையில் வாழ்கிற அப்பாவி தமிழர்களுக்குத்தான் அடிவிழும். ஏற்கனவே பேரினவாத வெறிபிடித்த சிங்கள இராணுவத்தினர் இதுமாதிரியான செய்திகளை அறிந்துகொள்ளும்போதெல்லாம் நம் மீனவனிடமும் இலங்கையில் வாழும் அப்பாவிதமிழர்களிடமும் நம் சகோதரிகளிடமும்தான் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது தெரிந்திருந்தும், இவர்களுடைய இச்செய்கைகளுக்கு பின்னால் இருக்கிற உளவியலை புரிந்துகொள்ள முடியவில்லை.

தற்போதைய சூழலில் நம்முடைய கவனமும் ஆற்றலும் இலங்கையில் உண்ண உணவின்றி உறைவிடமின்றி தவிக்கிற எண்ணற்ற தமிழர்களில் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்வதில் அல்லவா இருக்க வேண்டும். வீரப்பேச்சும் வெட்டிநாயமும் கொலைவெறி தாக்குதல்களும் அவர்களுக்கு எந்த நன்மையையும் விளைவித்துவிடாது என்பதை உணரவேண்டாமா? அப்பாவி தமிழர்களுக்கு நாம் உதவி செய்யவேண்டாம் குறைந்தபட்சம் இதுமாதிரியான பைத்தியக்காரத்தனமான செயல்களால் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே நல்லது.