Pages

31 March 2012

ஐஸ்வர்யா தனுஷின் கொலைவெறி!




தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்கிற வாசகங்களோடு படம் முடிகிறது. ஐஸ்வர்யா தனுஷின் கருணையே கருணை. அவர் எடுத்திருக்கிற கொடூரமான மொக்கைப் படத்தை பார்த்து யாரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்கிற அன்பை நாம் பாராட்டியே தீரவேண்டும். ரஜினியின் மகள் அல்லவா? அவருடைய அன்பில் கருணையுள்ளத்தில் பாதியாவது இருக்காதா பின்னே!

தனுஷ் இதுவரை நடித்து ஓரளவு பேரும் துட்டும் சம்பாதித்த எல்லா படங்களிலிருந்து தலா நான்கு காட்சிகளை உபயோகித்து இந்த படத்தினை எடுத்திருக்கிறார்கள். தனுஷூக்கான TRIBUTE ஆக மூன்று படத்தினை கருதலாம். துள்ளுவதோ இளமையிலிருந்து நாலு சீன், புதுப்பேட்டையிலிருந்து இரண்டு சீன், மயக்கம் என்ன, காதல்கொண்டேனிலிருந்து சில காட்சிகள்! பொல்லாதவன் படிக்காதவனிலிருந்து மேலும்.. அதுபோக தனுஷின் பெரும்பாலான படங்களில் வருவதைப்போலவே இந்தபடத்திலும் அவருக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது! தண்ணீர் தெளித்த கோழியை போல வெடுக் வெடுக் என இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி பயமுறுத்துகிறார்! நமக்கு சிரிப்பு வருகிறது. கோழி சண்டையும் கேபி கருப்பையும் சேர்த்திருந்தால் TRIBUTE முழுமையடைந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

தம்த்தூண்டு ஸ்கூல் பசங்க அதவிட டாமாங்கோலி ஸ்கூல் புள்ளைங்கள காதலிப்பதைப்போல படம் எடுக்கிற புண்ணியவான்களுக்கு இபிகோவில் ஏதாவது செக்சனில் ஏதாவது கொடூரமான கட்டிங் வெட்டிங் தண்டனை வழங்கித்தொலையலாம். அதிலும் இந்தப்படம் சொல்லுகிற செய்தி இன்னும் மோசமானது. ‘’ஸ்கூல் படிக்க சொல்லவே நல்ல பணக்கார பக்கி பையனா பார்த்து லவ் பண்ணிட்டு செட்டிலாகிடுங்க கேர்ள்ஸ்’’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா!.

அதோடு குடிவெறி பாரில் தாலிக்கட்டி திருமணம், நண்பனை பக்கத்தில் வைத்துக்கொண்டே சரச சல்லாப விளையாட்டு, குடும்பத்தோடு குடிக்கும் குதூகலம்.. அடேங்கப்பா படம் முழுக்க கலாச்சார அதிர்ச்சிகள் ரொம்பி வழிந்து வழித்து வழித்து ஊற்றியிருக்கிறார்கள்! ஆனால்
எதற்குமே காரணமே இல்லை. அட மண்ணாங்கட்டி லாஜிக்கும் இல்லை. ஹவுஸிங் யூனிட்டில் வளரும் ஸ்ருதிஹாசன் திடீரென பப்பில் தனுஷோடு சரக்கடிக்கிறார்! வாவ் வாட் ஏ லாஜிக் ஐசே!

சிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் சூப்பர் டான்ஸர் ப்ரோகிராம்களுக்கு நடுவில் புரோடியூசர் கிட்ட உச்சா போயிட்டு வரேனு சொல்லிட்டுவந்து நடிச்சிருப்பார் போல! திடீரென வந்து காணாமல் பூடுகிறார். பிரபு,பானுசந்தர்,பானுப்ரியா என பலரும் நட்புக்காக நடிச்சி கொடுத்திருக்க வேண்டும். ரோஹினியை கதறி கதறி கத்த விட்டிருக்கிறார்கள். ஸ்ருதிஹாசனும் அதைவிட அதிக டெசிபலில் ஆவ்வ்வ் என கத்திக்கொண்டேயிருக்கிறார்.. காதுக்கு புடிச்ச கேடு! (ரசூல்பூக்குட்டிலாம் வேலை பார்த்துருக்காரு போல)

முதல்பாதியின் முதல் முக்கால் மணிநேரம் மட்டும் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியேறிவிடுவது உத்தமம். மீதி படத்தையும் நான் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடித்தால் முக்கால் படத்தில் வெறியேறி பக்கத்து சீட்டில் இருப்பவர்களையெல்லாம் கடித்துவைத்துவிடுவீர்கள் ஜாக்கிரதை!

நன்றாக நினைவிருக்கிறது. சக்கரகட்டி என்று ஒரு படம். டாக்ஸி டாக்ஸி என்கிற பாடலுக்காகவே போய் முதல் நாளே பார்த்து நொந்துபோன நினைவுகள் மனதில் அப்படியே இருக்கிறது. கதறகதற சுரணையே இல்லாமல் படமெடுத்திருப்பார் படத்தின் இயக்குனர். அதற்கு இணையான படமென்று மூன்று படத்தினை சொல்லலாம். படத்தின் இசையமைப்பாளரும், கேமராமேனும் நிறைவாக செய்திருப்பதுதான் இரண்டே பிளஸ்!

ஐஸ்வர்யாவுக்கு செல்வராகவன் ஆகிவிடவேண்டும் என்றும் ஆசை வந்திருக்கலாம். அதற்காக செல்வராகவன் படங்களையே காக்டெயிலாக கலக்கி ரீமிக்ஸ் செய்திருப்பது அடடே!! பைபோலார் டிசார்டர் என்று சொல்லிவிட்டு அருந்ததி,காஞ்சனா ரேஞ்சில் பூச்சாண்டி காட்டி சிரிப்பூட்டியிருக்கிறார். ஸ்ருதிஹாசன் சில இடங்களில் பிரமாதமாகவும் பல இடங்களில் கொடூரமாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்பட்டாலும் ஒரேமாதிரி நடிப்பு கொஞ்சமாக போர் அடிக்க ஆரம்பிக்கிறது. அதன் பலன் எமோசனலான கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டர் முழுக்க டேய் சீக்கிரம் சாவுடா படம் முடியட்டும் என்கிற சத்தம் காதை ரொப்புகிறது.

படம் பார்க்கும்போதுதான் தோணிச்சி.. படத்துல வர தனுஷ் பைத்தியமா? இல்ல படம் எடுத்த அவிங்க பைத்தியமா? ஒரே ஒரு பாட்டால காசு குடுத்து இந்த திராபைய பார்க்குற நாம பைத்தியமானு! சும்மா தோணிச்சி.

29 March 2012

சச்சினும் சதங்களும்!



மார்ச் 12 2011, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி! 111 ரன்களை அதிரடியாக ஆடிக் குவித்தார் சச்சின்.

சச்சின் அடித்த 99வது சதம். நாடே கொண்டாடியது. இன்னும் ஒரே ஒரு சதம்தான் உலக கிரிக்கெட் அரங்கில் யாருமே தொட்டிடாத நூறு செஞ்சுரிகள் என்னும் சிகரத்தை அடைந்துவிடுவார். ஒரே வருடத்தில் (2001) ஏழு சதங்களை அடித்தவர் சச்சின்! இதென்ன ஒன்னே ஒன்னு.. ச்சும்மா சொடுக்கு போடும் நேரத்தில் அடித்துவிடுவார் ஜூஜூபி என பலரும் நினைத்தனர்.

ஆனைக்கும் அடிசறுக்கும் என சொல்வதுண்டு! ‘ஆண்டவர்’(GOD) என செல்லமாக அழைக்கப்படுகிற சச்சினுக்கும் அடி சறுக்கியது. அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் அந்த நூறாவது சதம் இந்த அளவுக்கு அவரை பாடாய் படுத்துமென்று!
கடந்த ஒரு ஆண்டில் ஒவ்வொரு முறையும் இந்தியா ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும் ‘’இந்தமுறை சச்சின் சதமடிப்பாரா.. இந்தமுறை சாதிப்பாரா.’’. என மீடியாக்கள் அலறின! சதமடிக்க தவறியபோதெல்லாம் சச்சின் அவ்ளோதாம்பா ரிடையர்டாகிட வேண்டியதுதான்.. என இகழ்ந்தன. அடுத்த போட்டியில் மீண்டும் சச்சின் சதம்.. சதம் சதம்.. என அலறின..

99 சதமடித்து முடித்து ஒருவருடம் நான்கு நாட்களுக்கு பிறகு தன்னுடைய நூறாவது சதத்தை அடித்தே விட்டார் சச்சின். சச்சின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அதைவிடவும் அதிகமாக சச்சின் நிம்மதியாகியிருக்கிறார்.

ஆனால் நூறாவது சதமடித்த போட்டியில் இந்தியா கத்துக்குட்டி பங்களாதேஷிடம் தோல்வியடைந்தது. சச்சின் 99சதமடித்த போட்டியிலும் தென்னப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றது.. கிரிக்கெட் விமர்சகர்கள் உடனே பழைய பல்லவியை பாடத்தொடங்கிவிட்டனர்.
சச்சின் தன் சுய பெருமைக்காகவும் சாதனைகளுக்காகவும் விளையாடுகிறார், நாட்டிற்காக விளையாடுவதில்லை, வங்காளதேசத்துடனான போட்டியில் அதிக பந்துகளை வீணடித்துவிட்டார், சச்சின் சதமடிக்கும்போதெல்லாம் இந்தியா தோற்றது என சேம் ஒல்டு சாங்ஸ்!

நிஜமாகவே சச்சின் செஞ்சுரி அடித்து எத்தனை முறை இந்தியா தோற்றுப்போயிருக்கிறது என கிரிக்கெட் புத்தகங்களை புரட்டிப்பார்த்தால்.. கதை வேறு மாதிரியிருக்கிறது. சச்சின் செஞ்சுரி அடித்த நூறு ஆட்டங்களில் 23 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோல்வியை தழுவியுள்ளது! 67 போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்காகத்தான் விளையாடியுள்ளார் சச்சின்!

1989ஆம் ஆண்டு சச்சின் புதுமுகமாக 16வயதில் களமிறங்கி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடர். அதன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்துகொண்டிருக்க களமிறங்கினார் சச்சின்.

தன் விக்கெட்டை மட்டும் இழந்துவிடக்கூடாது என்கிற மன உறுதி மட்டுமே நிறைந்திருக்கிறது. எப்படி பந்துவீசினாலும் தடுத்து ஆடுகிறார். எதிரணியில் இரண்டு புதுமுகங்கள்.. ஒருவர் வாசிம் அக்ரம், இன்னொருவர் வக்கார் யூனிஸ்.. பவுன்ஸர்களாக போட்டு தாளிக்கின்றனர். வக்கார் யூனிஸின் ஒரு பவுன்ஸர் எதிர்பாராத விதமாக சச்சின் மூக்கில் பட்டு ரத்தம் கொடகொடவென கொட்டுகிறது!

மறுமுனையிலிருந்த சித்து பதறிப்போய் ஓடிவருகிறார். பவுண்டரியிலிருந்து மருத்துவர்கள் வருகிறார்கள். ‘’தம்பி நீ பெவிலியன் திரும்பிடு..’’ என அறிவுருத்துகிறார் சித்து. மருத்துவர்களும் அதையே கூறுகின்றனர். ஆனால் ‘’பரவால்ல நான் விளையாடுவேன்.. நான்விளையாடுவேன்’’ என்று ரத்தத்தினை துடைத்துக்கொண்டு சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார் சச்சின். அந்த பிடிவாதமும் ஆர்வமும் இந்தியாவை வெற்றிபெற வைக்கவேண்டும் என்கிற வெறியும்தான் 23வருடங்கள் சச்சினை விளையாட வைத்திருக்கிறது.

எந்த விளையாட்டு வீரரும் சச்சின் அளவுக்கு காயமடைந்து விளையாடமுடியாமல் போயிருக்க முடியாது. கிட்டத்தட்ட 13 முறைகள் வெவ்வேறு விதமான காயங்களால் விளையாடமுடியாமல் ஓய்வெடுக்க நேர்ந்திருக்கிறது. முதுகு வலி, தோள்பட்டை காயம், கணுக்கால் வலி, டென்னிஸ் எல்போ என 23 ஆண்டுகளில் அவரது உடல் சந்திக்காத சோதனைகளே கிடையாது. ஆனால் அத்தனையையும் எதிர்த்து போராடித்தான் இன்று இந்த மகத்தான சாதனையை செய்து முடித்திருக்கிறார் சச்சின்.

1999 உலக கோப்பையின் போது இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்று கிட்டத்தட்ட தொடரிலிருந்தே வெளியேறும் நிலை! அந்த நேரத்தில் சச்சினுடைய தந்தை இறந்த செய்தி இடியாக வருகிறது. சச்சின் தோல்விகளால் துவண்டுபோயிருந்த தன் அணியை விட்டுவிட்டு ஊருக்கு கிளம்ப வேண்டும். சச்சின் இந்திய அணிக்கே முக்கியத்துவம் கொடுத்தார். உடனடியாக மும்பை போய் காரியங்களை முடித்துவிட்டு உலக கோப்பைவிளையாட திரும்பிவிட்டார்.

அப்பா இறந்த துக்கத்தோடு கென்யாவுக்கு எதிராக விளையாடி சதமடித்தார். சாதனைக்காகவே விளையாடுகிற ஒருவரால் செய்யவே முடியாத காரியம். அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதுபெற்ற சச்சின் என் தந்தை உயிரோடிருந்தால் இதைதான் விரும்பியிருப்பார் என கண்ணீரோடு பேசியதை யாருமே மறந்திருக்கவும் முடியாது!
சச்சினுடைய ரத்தமும் சதையும் நாடி நரம்புகளும் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் மட்டும்தான். அப்படி இல்லாத ஒருவரால் இத்தனை சாதனைகளை செய்திருக்கவே முடியாது. சச்சினுக்கு எல்லாமே கிரிக்கெட்தான்.

‘’உங்கள் விளையாட்டை நேசியுங்கள், உங்கள் கனவுகளை துரத்துங்கள்!’’ இதுதான் சச்சினின் வெற்றி ரகசியம். தன் வாழ்நாள் முழுக்க தனக்கு பிடித்த வேலையை தன்னுடைய கனவினை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கிறார் சச்சின். மூன்று தலைமுறை கிரிக்கெட் வீரர்களோடு விளையாடி முடித்துவிட்டார்!

யாருமே முறியடிக்க முடியாத சாதனைகளை செய்து காட்டியிருக்கிறார். ஆனால் எதுவந்தபோதும் அவரிடம் வராதது நான் என்கிற அகம்பாவமும் சாதனைகளால் உருவான கர்வமும்தான்!

வணங்குகிறோம் சச்சின்!


(நன்றி - புதியதலைமுறை)

16 March 2012

வெறும் சுவர் அல்ல... இரும்புக்கோட்டை!



உள்ளூர் போட்டியொன்றில் எதிரணி பந்துவீச்சாளரின் அபாரமான பந்தில் போல்ட் முறையில் அவுட்டாகிவிட்டார் டிராவிட். அது அவ்வளவு முக்கியமான போட்டி இல்லை. டிராவிட் சரியாக விளையாடாத போதும் அவருடைய அணி வெற்றிபெறவே செய்தது. யாருமே ராகுல் டிராவிடை எந்தக்குறையும் சொல்லவில்லை.

மற்றவர்களைப்போல டிராவிட் இதை சாதாரண விஷயமாக நினைக்கவில்லை. அதற்காக ரூம்போட்டு அவுட்டாகிவிட்டோமே என்று கதறி அழவில்லை. மேட்ச் முடிந்த அன்று மாலைநேரத்தில் உத்தரத்தில் ஒரு பந்தினை கட்டித்தொங்கவிட்டு எந்த தவறான ஷாட்டினால் அவுட்டாக நேர்ந்ததோ அதே ஷாட்டினை பல ஆயிரம் முறை கைகள் வலித்தாலும் இரவெல்லாம் அடித்து அடித்து கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார்! அப்போது டிராவிட்டுக்கு வயது பதினைந்து.

விளையாட்டுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டு அதையே தன் உயிர்மூச்சாக நினைத்து விளையாடுகிறவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த சொற்ப மனிதர்களில் டிராவிட்டும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இடத்தை நிரப்ப போவது யார் என்கிற கேள்விகள் எழுந்தவண்ணமுள்ளன.. ‘’டிராவிட் இடத்தை டிராவிட்டால் மட்டும்தான் நிரப்பமுடியும்’’ என்கிறார் சச்சின்! அதுதான் நிதர்சனம்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 95ரன்களில் தொடங்கியது. அப்போதிருந்தே எந்தவித பவுலருக்குமே டிராவிட் என்றால் கொஞ்சம் கிலிதான்.

1996க்கு முன்பு அந்நிய மண்ணில் டெஸ்ட் வெற்றியென்பதெல்லாம் எட்டாக்கனியாகவே இருந்த நிலையை மாற்றி ஆஸ்திரேலியாவிலும்,இங்கிலாந்திலும்,மேற்கிந்திய தீவுகளிலும்,தென்னாப்பிரிக்காவிலும் இந்திய அணி வெற்றிகளை குவிதத்தில் முக்கிய பங்கு டிராவிடுக்கு உண்டு!

டிராவிட் ரொம்ப கட்டை வைப்பாருப்பா? ரன்னே அடிக்க மாட்டாரு! செமபோரு என்று அவர் மீது பொதுவான விமர்சனங்கள் உண்டு. அதற்கெல்லாம் பதில் அவருடைய சாதனைபுத்தகங்களில் கொட்டிக்கிடக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 13288 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 10889ரன்கள்! கிரிக்கெட் ஆடுகிற எல்லா நாடுகளுக்கு எதிராகவும் இரண்டுக்கும் மேல் சதங்கள் அடித்தவர். அவர் ஆடிய 164டெஸ்ட் போட்டிகளில் 56போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 56போட்டிகளில் 15சதமும் 23அரை சதமும் அடித்திருக்கிறார். இந்த தகவல்களே சொல்லும் இந்திய அணியின் வெற்றிகளில் டிராவிடின் பங்கினை! தோற்கும் நிலையிலிருக்கிற ஆட்டங்களை டிராவாகவும் மாற்றிக்காட்டியிருக்கிறார் டிராவிட்.தடுப்பாட்டத்தில் மட்டுமல்ல அதிரடியாகவும் ஆடுகிற திறமையை கொண்டிருந்தவர். ஆனால் அதை அரிய தருணங்களில் மட்டுமே வெளிப்படுத்தினார்.

இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஒரே வேலை இந்திய அணியின் பேட்டிங் வரிசை தடுமாறும்போதெல்லாம் மைதானத்தில் தோன்றி ஆபத்பாந்தவனாக காப்பாற்ற வேண்டும்!. இந்திய அணியின் மிடில் ஆர்டர் டிராவிடை சுற்றியே இயங்கியது. அதனாலேயே அவரால் பல நேரங்களில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியாமல் போனதற்கான காரணமாக இருக்கலாம். டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் குவிப்பதை காட்டிலும் எத்தனை மணிநேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்கிறோம் என்பதுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். அது டிராவிடுக்கு கைவந்தகலையாக இருந்தது. அவருடைய விக்கெட்டை வீழ்த்துவது அத்தனை எளிதாக இருந்திருக்கவில்லை.

‘’அவரை நான் இந்திய கிரிக்கெட்டின் இரும்பு மனிதர் என்றுதான் அழைப்பேன்! ஆடுகளத்தில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்பேர்ப்பட்ட சிக்கலான நிலையையும் இந்திய அணிக்கு சாதகமாக மாற்றிக்காட்டியவர்’’ என புகழாரம் சூட்டுகிறார் கவாஸ்கர்.

உலகில் எந்த இடத்திற்கு சுற்றுப்பயணம் செய்யப்போவதாக இருந்தாலும் அதற்கு ஒருமாதம் முன்பே தன்னை தயாரிக்கத்தொடங்கிவிடுவார் டிராவிட். இங்கிலாந்துக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதல் வேலையாக இங்கிலாந்தின் எந்தெந்த பகுதிகளில் விளையாட இருக்கிறோம் என்கிற தகவல்களை தேடி எடுப்பார். அந்தப்பகுதியின் சீதோஸ்ன நிலை, மைதானங்களில் உள்ள ஆடுகளங்களின் தன்மை, எதிரணி பந்துவீச்சாளர்கள் யார் யார்? அவர்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்று சகலவிஷயங்களையும் தெரிந்துவைத்துக்கொள்வார். அதற்கு பிறகு தன் பயிற்சியை தொடங்குவார். பங்களாதேஷ் போனாலும் சரி கடினமான ஆடுகளங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி ஒரே அணுகுமுறைதான். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்யவேண்டும் என்கிற நோக்கம்தான் ராகுல் டிராவிட்.

1999ல் நியூஸிலாந்திலும், 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலும், 2002ல் இங்கிலாந்திலும், 2003ல் பாகிஸ்தானிலும், 2006ல் வெஸ்ட் இன்டீஸிலும் அவர் வெளிப்படுத்திய அபாரமான பேட்டிங் திறனை கொண்டாடாத கிரிக்கெட் ஆர்வலர்கள் இருக்கவே முடியாது. உள்ளூரில் மட்டும்தான் இந்தியாவின் பருப்பு வேகும்.. வெளிநாடுகளில் எப்போதும் இந்தியா சோப்ளாங்கிதான் என்கிற கம்பராமாயணகாலத்து பாட்டினை தவிடுபொடியாக்கியவர் டிராவிட். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல மிஸ்டர்.இந்தியன் கிரிக்கெட் சென்ற இடமெல்லாம் ரன்களை குவிக்கத் தவறியதேயில்லை.

உள்ளூர் போட்டிகளைவிட வெளிநாடுகளில்தான் டிராவிட் அதிக ரன்களை குவித்தார். சென்ற ஆண்டு இங்கிலாந்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரண்டர் ஆன டெஸ்ட் தொடரில் மூன்று செஞ்சுரிகள் அடித்து இளம்வீரர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தார் டிராவிட்.

‘’பாரின் டூர் போகும்போது அவருடைய சீருடைகள் தவிர்த்து இரண்டே இரண்டு செட் பேண்ட் ஷர்ட்டுகள்தான் அவருடைய பையில் இடம்பெறும். அதையேதான் மாற்றிமாற்றிப்போட்டுக்கொள்வார். என்னங்க ஒருமாசம் வெளியூர்ல இருக்கப்போறீங்க இரண்டுசெட் டிரஸ் போதுமா என்று கேட்டால்.. நான் என்ன ஊர் சுற்றிப்பார்க்கவா போறேன்.. விளையாடத்தானே.. இதுபோதும் என்பார். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறபோதெல்லாம் பயிற்சிக்கு மட்டும்தான் முழு நேரத்தையும் ஒதுக்குவாரே தவிர்த்து ஊர் சுற்றுவதை தவிர்க்கவே செய்வார்’’ என்று கூறுகிறார் டிராவிடின் மனைவி விஜிதா டிராவிட்.

அணியின் மிகமுக்கிய மூத்த வீரராக இருந்தாலும் இளம் வீரர்களோடு சகஜமாக உரையாடும் அவர்களுக்கு கற்றுத்தர நினைக்கிற வீரராக டிராவிட் அறியப்படுகிறார். இந்திய டெஸ்ட் அணியின் புதுவரவான அஜிங்க்ய ராஹானே ஒரு பேட்டியில் ‘’நான் பேட்டிங் செய்து முடித்ததும்.. டிராவிடிடம் என்ன எப்படி பேட்டிங் செய்தேன் என கேட்க நினைப்பேன்.. சங்கோஜமாக இருக்கும். அதனால் கேட்க மாட்டேன். ஆனால் டிராவிட் அவராகவே வந்து நான் எப்படி விளையாடினேன் எங்கே சரிசெய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிச்சொல்வார் எனக்கு புல்லரிப்பாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார்.

டிராவிட் தோல்விகளை சந்திக்காமல் இல்லை. பல நேரங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் தன் பேட்டிங்கால் மட்டுமே பதில் சொன்னவர் டிராவிட். ‘’நான் பல நேரங்களில் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ஒருநாளும் என் முயற்சிகளை கைவிட்டதில்லை’’ என்று தன்னுடைய ஓய்வு அறிவிப்பின்போது பேசினார் டிராவிட். பதினாறு ஆண்டுகள் நாம் பார்த்த டிராவிட் அப்படித்தான் விளையாடினார்.

தன் வாழ்நாள் முழுக்க அதீத விளம்பர வெளிச்சங்கள் இல்லாமல், பாராட்டு மழையில் நனையாமல் தன்க்கு பிடித்த வேலையை சமயங்களில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும் முழு ஈடுபாட்டுடன் செய்தே வந்திருக்கிறார் டிராவிட். சின்ன சின்ன சாதனைகளை செய்துவிட்டு உடனடி அங்கீகாரத்துக்கு ஏங்குகிற இளைஞர்கள் டிராவிடிடம் கற்றுக்கொள்ள அநேக விஷயங்களுண்டு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெற்றுவிட்டார் டிராவிட். அவருடைய சாதனைகளுக்கு முன்னால் நம்முடைய வார்த்தைகள் வலுவிழந்துபோகின்றன. எத்தனை பாராட்டினாலும் புகழ்ந்தாலும் ராகுல் டிராவிட்டின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் முன்னால் எல்லாமே தூசுதான்! சல்யூட் ஜாம்மீ!

(நன்றி- புதியதலைமுறை)

10 March 2012

உன்னால் முடியும் தங்கச்சி!




'பாஸ் பேசாம நாமகூட ஒரு சுடிதாரை மாட்டிக்கிட்டு ஆபீஸ் வந்தா, ரொம்ப சீக்கிரமா முன்னேறிடலாம்!’ - இப்படி அலுவலகங்களில் அங்கலாய்க்கிற ஆண்களை அடிக்கடி சந்திக்க நேர்கிறது. என்னவோ பெண்கள் என்றால் மேனேஜர் முதல் பியூன்வரை பல்லைக் காட்டிக்கொண்டு அவர்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வாரி வழங்குவதைப் போலவும் பெண்ணாக இருப்பது ஏதோ வேலை பார்க்கும் இடத்தில் மிகப்பெரிய அட்வான்டேஜ் போலவும் தொடர்ந்து சித்திரிக்கப்படுகிறது.

அழகுதான் முன்னேற்றத்துக்கான முதலீடு என்பதாக ஃபேர்னஸ் க்ரீம்கள் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரிதான் இருக்கிறது. பெண்கள் ஒவ்வொரு நொடியும் நம் சமூகத்தில் போராடித்தான் எதை யும் பெறவேண்டி இருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடங்கி, வீட்டு வேலை செய்கிற பெண் வரை தினம் தினம் போராட்டம், திக்கெட்டும் தடைகள்.

இங்கே ஒவ்வொரு பெண்ணும் தன் துறையில் சாதிக்க ஏகப்பட்ட பிரச்னைகளைத் தாண்டியே வரவேண்டி உள்ளது. பெண்ணாக இருப்பதாலேயே சில தனிப்பட்ட சிக்கல்களையும் அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது.

சாலை ஓரம் என்சைக்ளோபீடியா விற்கும் பெண்களின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். அவர்கள் அனைவருமே வறுமையின் பிடியில் இருக்கிறவர்கள். அதிகாலை 6 மணிக்கே அலுவலகம் வந்து தேவையான அளவு புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பி, பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், மெகா மால்கள் என, மக்கள் கூடும் பகுதிகளுக்கு வந்து நின்றுகொண்டு ஒவ்வொருவரிடமும் புத்தகத்தைப் பற்றி விளக்கிக் கூறி விற்க வேண்டும். இந்தப் புத்தக ஸ்டாக்குகளை அருகில் உள்ள டீக்கடை முதலாளிகளிடம் அன்பாகப் பேசி வைத்துவிட்டு, காலை தொடங்கி இரவு 10 மணிவரை ஒரு புத்தகத்தையாவது விற்றுவிட்டுத்தான் வீடு திரும்பவேண்டிய சூழல்.

தனியாக நின்றாலே 'அதற்குத்தான்’ என்கிற மாதிரி ஆபாசமாகப் பேசும் ஆண்களையும் சமாளிக்க வேண்டும். மதிய உணவைச் சாப்பிட இடமின்றி பஸ் ஸ்டாண்டிலும் சாலையோரப் பூங்காவிலும் சாப்பிட வேண்டும். இயற்கை உபாதைகளை எப்படிச் சமாளிப்பது? பக்கத்தில் உள்ள வீடுகளில் போய்த் தலை சொறிந்தபடி நிற்கவேண்டும். ஆனாலும் இவர்கள் போராடுகிறார்கள். ஒவ்வொரு விநாடியும் வெறித்தனமாக வேலை பார்க்கிறார்கள். தங்களுடைய வறுமையை வெல்ல எதிர்நீச்சல் போடுகிறார்கள்.

பிரபலம் இல்லாத விளையாட்டு வீராங்கனை அவர். திறமைக்குப் பஞ்சமே கிடையாது. 'ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்’ என சபதம்போட்டவர். ஆனால், அவரால் தேசிய அணியில்கூட இடம்பிடிக்க முடியவில்லை. காரணம், மேலிடத்துக்குத் தோதாக நடக்கவில்லையாம். கடைசிவரை மாநில அணிக்காகவே விளையாடி இப்போது வேறு வழியின்றி பயிற்சியாளராகிச் சம்பாதிக்கிறார். இருந்தும் நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கிறது. விளையாட்டை அவர் கைவிடவில்லை.

ஒவ்வொரு நாளும் நம் செல்போனுக்கு வரும் கிரெடிட் கார்டு, பெர்சனல் லோன் அழைப்புப் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். 'அட கிரெடிட் கார்டு இருக்கட்டும்மா.. உன் குரல் சூப்பரா இருக்கே’ என வழியும் கஸ்டமர்கள் ஒருபக்கம். இருந்தும் போராடித்தான் ஆக வேண்டி இருக்கிறது.

துறை எதுவாக இருந்தாலும் ஆண்களுடைய உலகில் பெண்கள் எப்போதும் 'பெண்கள்’தான். சுமாராக... அழகாக... என, எப்படி இருந்தாலும் பிரச்னைதான். அழகு இருக்கும் வரை கொண்டாடப்பட்டு அந்திமக் காலத்தில் அழிந்துபோன எண்ணற்ற நடிகைகளின் கண்ணீர்க் கதைகளை நாம் அறிவோம்.

பணி இடத்தில்தான் தடைகள் என்றால், வீட்டுக்குள்ளேயும் நிலைமை படுமோசம். சிலர் பாடினால் மனசுக்குள் பூப் பூக்கும். அந்தப் பெண்ணும் அப்படித்தான். அவளின் கனவுஎல்லாம் பி.சுசீலா, ஜானகி ஆவதுதான். அவளுடைய குரலுக்காகத் திருமணம் செய்துகொண்ட காதலன், கணவனாக மாறிய பின் குரல்வளையை நசுக்கிப் பாடலுக்குத் தடைபோட்டான்! இன்றைக்கு வீட்டுக்குள் மட்டுமே ஒலிக்கிறது அந்தக் குயிலின் பாட்டு. எதிர்த்துப் போராட மனம் இல்லை. மூன்றுவேளையும் சமைத்துப்போட்டுவிட்டு, துணி துவைத்து, வீட்டைச் சுத்தம்செய்து ஓய்வு நேரத்தில் சீரியல் பார்த்து அழுதபடி 'சராசரி’யாக ஓடுகிறது அவளுடைய வாழ்க்கை. போராடாமல் எதுவுமே கிடைக்காது. ஒருவேளை அவள் கொஞ்சமே கொஞ்சமாக எதிர்ப்பைக் காட்டி இருந்தாலும் இன்னொரு லதா மங்கேஷ்கர் நமக்குக் கிடைத்து இருக்கலாம்.

அன்ஜூம் சோப்ரா,மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி என்கிற பெயர்களை நமக்கு நிச்சயமாக தெரிந்திருக்காது. கிரிக்கெட்டில் சச்சினை தோனியை தெரிந்திருக்கிற அளவுக்கு பெண்கள் கிரிக்கெட்டில் சச்சின் தோனிக்கு இணையாக விளையாடுகிற சாதனைகள் செய்த ஜூலன் கோஸ்வாமியை யாருக்குமே தெரியாது. இருந்தும் தனக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு தொடர்ந்து விளையாடிக்கொண்டுதானே இருக்கின்றனர். எனக்கு அங்கீகாரம் கிடைக்கலையே.. என்னை யாரும் புகழலையே என துவண்டு விடவில்லையே!

எரித்தாலும் மறைத்தாலும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழும் எத்தனையோ பெண்கள், வரலாற்று நாயகிகளாக நம் முன்னே உலாவருகின்றனர். ஒரே ஒரு விஷயம்தான். பெண்ணாகப் பிறந்துவிட்டோம் இனி, இப்படித்தான் எனக் கன்னத்தில் கைவைத்தபடி தேம்பித் தேம்பி அழுதபடி தென்றல் சீரியல் துளசியை பார்த்து நம்மை நாமே தேற்றிக்கொள்ளாமல் பிடித்த துறையைத் தேர்ந்தெடுங்கள். உங்களுடைய இலக்கை நோக்கிப் பயணியுங்கள். அதற்கு இடையூறாக கணவன், தந்தை என யார் வந்தாலும் எதிர்த்து நில்லுங்கள்.

சவால்கள் சமாளிப்பதற்கே! அன்னை தெரசாவைப் போல், அருந்ததிராயினைப் போல், இரோம் ஷர்மிளாவைப் போல் உங்கள் பெயரும் சரித்திரத்தின் பக்கங்களில் ஒருநாள் இடம்பெறும்!

வாழ்த்துக்கள்!


(சென்னை என் விகடன் மகளிர் தின சிறப்பிதழுக்காக அடியேன் எழுதிய கட்டுரை,
நன்றி- என் விகடன்)

05 March 2012

அரவான் - உலக மகா காவியம்





இதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும்தான் சாத்தியம். சென்னை உதயம் தியேட்டரில் பத்து ரூபாய்க்கு தரைடிக்கட் வாங்கினால் சுளையாய் இருபது ரூபாய் வண்டி நிறுத்த பார்க்கிங்கிற்கு நொட்டவேண்டும். மொத்தம் முப்பது ரூபாய்! இடைவேளையில் தம் அடிக்கும் சுதந்திரம் கூட இல்லை! இருந்தாலும் தொடர்ந்து வெளியாகிற எல்லா மொக்கை படங்களையும் பார்த்து தமிழ்சினிமாவை ஆதரித்து வளர்த்தே வருகிறான் அறிவேயில்லாத தமிழ்சினிமா ரசிகன். அட இவனுக்கு அறிவுதான் பூஜ்யம் என்றால் ரசனை கூடவா மங்கிப்போயிருக்க வேண்டும்.

அண்மையில் அரவான் என்றொரு காவியமான படம் பார்க்க சென்றிருந்தேன். எப்பேர்ப்பட்ட படம்! படம் முழுக்க இலக்கியம்னா இலக்கியம் உங்க வீட்டு இலக்கியம் கிடையாது எங்கூட்டு இலக்கியம் கிடையாது… இலக்கியத்தை ஆத்து ஆத்தென்று நாயர்கடை பாய்போல நீட்டி நீட்டி ஆத்தியிருக்கிறார்கள். அதோடு படத்தில் குத்துப்பாட்டு கிடையாது, கவர்ச்சி நடனம் கிடையாது பஞ்ச் டயலாக் கிடையாது.. அப்படி இருக்கும் பட்சத்தில் அது ஆகச்சிறந்த கலைப்படைப்பாகத்தானே இருக்க முடியும்.

மயிர்கூச்செரியவைக்கும் அதிதீவிர படுபயங்கர இலக்கியப்பிரதிதான் அரவான்!. ஏற்கனவே ஏழாம்அறிவு படம் பார்த்து நட்டுக்கொண்டிருந்த தமிழன் என்கிற பெருமை இந்தப்படம் பார்த்ததும் மேலும் புடைத்து வீங்கி வெடிக்கும் அளவுக்கு ஆகி பிதுங்கிவிட்டது!
ஆனால் பாருங்கள் தியேட்டரில் என்னோடு படம் பார்த்துக்கொண்டிருந்த சராசரி சாதாரண இலக்கியம் தெரியாத முட்டாள்களுக்கு இந்தப்படம் பிடிக்கவில்லை. சிலர் என்ன எழவுடா இது என்று சொல்லிக்கொண்டே இடைவேளைக்கு முன்பாகவும் மீதிபேர் இடைவேளை முடிந்ததும் அரக்க பரக்க தியேட்டரைவிட்டே ஓடத்தொடங்கினர்.

( அந்த அரூபமான காட்சி எனக்கு ஜூராசிக் பார்க் என்கிற அமெரிக்க வல்லாதிக்க ஏகாதிபத்திய ஹாலிவுட் காட்சிப்பட பிரதியில் ஒரு காட்சியை நினைவூட்டியது. கொடிய மிருகமான டைனோசர் மனிதர்களை கொன்றுபுசிக்கிற ஆவேசத்தோடு கதாபாத்திரங்களை துரத்துவதை நியாபக அடுக்குகளிலிருந்து மீட்டெடுக்கிறேன்.. டைனோசருக்கு முன்னால் ஓடுகிற ஒருவர் சொல்லுவார் ‘’ஓடுங்க அந்த மிருகம் நம்மை நோக்கிதான் வருது’’ என்று! )

புதுமையான கதைக்களம், புத்தம் புதிய காட்சிகள், ‘இலக்கிய நாவலை படமாக்கியிருக்கிறார்கள்!’ ஒவ்வொரு தமிழனும் (பெருமைப்படவேண்டிய) தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு.. என ஏகப்பட்ட காரணங்கள் இந்த படத்தைப்பற்றி பாராட்ட இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பற்றி எவனுக்குமே கவலை இல்லை.. சரியான மொக்கை படம் பாஸ் என்று போகிற போக்கில் ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டு கிளம்புகிறார்கள்.

‘’அடேய் முட்டாள்களா இது எப்படிப்பட்ட படம் தெரியுமா.. இதை எடுத்தவர் எழுதியவர் யார் தெரியுமா.. இந்தப்படத்தில் இருக்கிற நுண் அரசியல் குறியீடெல்லாம் தெரியுமா? கள்ளர்கள் வரலாறு தெரியுமா? எவ்ளோ கஷ்டப்பட்டு ஆர்ட் டைரக்சன் பண்ணிருக்காங்க..அந்தக்காலத்துக்கே நம்மளை கூட்டிகினு போகலையா? தமிழன்தான் தமிழுக்கே எதிரி..’’ என்று படத்தை திட்டிய நண்பர் ஒருவரின் சட்டையை பிடித்து .நாக்கை பிடுங்கிக்கொள்வதைப்போல கேட்டேன்.

‘’எது இருந்து என்ன பிரயோஜனம் பாஸ்.. படத்துலதான் சுத்தமா சுவாரஸ்யமும் இல்ல ஒன்னும் இல்லையே! மகா மட்டமான இசை, கேவலமான எடிட்டிங், ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத காட்சிகள், தியேட்டர்காரன் எடிட் பண்ணினதா இல்ல டைரக்டர் ஓவரா படமெடுத்து எதை வெட்டறதுனு தெரியாம வெட்டினாரானு தெரியல..

படத்தின் முதல் பாதியில ஹீரோயின் மாதிரி ஒருபொண்ணு வருதே.. அந்த பொண்ணும் படத்தோட ஹீரோ ஆதியும் சேர்ந்து வர காட்சிகள் மொத்தமா இரண்டுதானு நினைக்கிறேன்.. திடீர் ஒருநாள் கட்டிக்கின்னா ஒன்னதான் கட்டிப்பேன் இல்லாட்டி செத்துடுவேனு சொல்லுது.. காரணம் வேணாமா பாஸு.. படம் பாக்கும்போது ஒருத்தர் யாரு சார் அந்தப்பொண்ணுனு வேற கேக்கறாரு.. அதை விடுங்க கடைசில எதுக்கு மரணதண்டனை பில்டப்பு.. பலி குடுக்கறதுக்கும் மரணதண்டனைக்கும் என்ன பாஸ் சம்பந்தம்..

திரைக்கதைக்கு வருவோம்.. இது ஆதியோட கதையா? இல்ல பசுபதியோட கதையா? இல்ல இரண்டுபேத்தோட கதையா? இல்ல வரலாற்றோட ஒருபகுதியா? எந்தக்கதைய முழுசா சொல்றதுனு ஒரே குழப்பத்தோடயே படமெடுத்திருப்பார் போல வசந்தபாலன்! அதனால எதையும் முழுசாவும் சொல்லாம , எல்லா கதையையும் மென்னு முழுங்கிருக்காப்ல.. இரண்டாம் பகுதில வர துப்பறியற சீன்லாம் எதுக்குனே தெரியல.. அதுவும் காவலில் சிறந்த ஊருக்குள்ள ராஜாவே புகுந்து கொலையெல்லாம் செஞ்சிட்டு போயிடறாராம் யாருக்குமே தெரியலையாம்? என்னங்க லாஜிக்கு! பத்து வருஷம் மறைஞ்சி வாழறவன் கொள்ளையடிச்சி வாழ்வானாம் அதுவும் ராஜாகொள்ளையாம்ல..

அட ஆர்ட் டைரக்சன் பிரமாதம்னு சொல்றாங்களே.. நாலு குடிசையும் இரண்டு செட்டிநாட்டு வீடும்தான் ஆர்ட் டைரக்சனா? ஏன்ங்க் இப்படிலாம் கடுப்பேத்தறீங்க.. பில்லா படத்துல அஜித்து நடந்துகிட்டே இருப்பாரே அதே மாதிரி இந்தப்படத்துல ஏன் எல்லாரும் காரணமேயில்லாம ஓடிகிட்டே இருக்காங்க..

அப்போகலிப்டோ படம் மாதிரி ஒரு படம் எடுக்கணும்ங்கற ஆசை புரியுது.. அதுக்காக சில நூற்றாண்டுகளுக்கு முன்னால வரைக்கும் கூட தமிழர்கள் அப்போகலிப்டோல வர ஆதிவாசிங்க மாதிரி இருந்தாங்கன்னு காட்றதெல்லாம் அநியாயம். படத்தோட பல காட்சிகள் அபோகலிப்டோலயும் வருது.. கிளைமாக்ஸும் மெல்ஜிப்சனோட பேஷன் ஆப்தி கிரைஸ்ட் மாதிரியே.. நம்ம ஹீரோவும் சிலுவையெல்லாம் சொமக்குறாரு.. எதுக்குன்னே தெரியல.. இதுமாதிரி ஓட்டைகள் இன்னும் நிறைய இருக்கு.. கதைக்கு சம்பந்தமேயில்லாத இரண்டு மூணு காதல்கள், ஆதிக்கும் பசுபதிக்குமான நட்பு ஆழமேயில்லாம மொன்னையாக இருப்பதுனு நிறைய இருக்கு பேச..

இதெல்லாம் பார்த்து யாரும் படத்தை ரசிக்கறதில்லைதான். ஆனா இதையெல்லாம் பாக்கதவன் எதிர்பார்க்கிற அடிப்படையான விஷயம்.. சுவாரஸ்யம். அதுதான் இல்லையே! அதுக்கு பிறகுதான பாஸ் மத்த எல்லாமே..’’ என்று என்னிடமே சவடால் பேசினார் நண்பர்..

எனக்கு கோபம் வந்துவிட்டது. ‘’உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இலக்கிய ரசனை கிடையாது.. அறிவும் கிடையாது. எவனாவது இங்கிலீஸில் பாம்பு பறக்குதுனு படமெடுத்தா பல்லை இளிச்சிகிட்டு கேள்வியே கேக்காம பார்ப்பீங்க ஆனா தமிழன் ஒருத்தன் படமெடுத்தா எல்லா நொட்டையும் சொல்வீங்களே’’ என வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டேன்.

பின்னே.. கஷ்டபட்டு எடுத்தப்படம் நன்றாக இருந்தால் என்ன.. இல்லாட்டி என்ன? அந்த கஷ்டத்தை தாங்கிக்கொண்டு படம் அருமை என்று சொல்வது கஷ்டமான காரியமா என்ன? அந்த பேஸிக் மேனர்ஸ் கூட இல்லாத தமிழனை எப்படிதான் திருத்துவது. பத்துரூபாய் டிக்கட்டு வாங்கி படம் பார்த்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் விமர்சிப்பதா? நாக்கில் நரம்பேயில்லாமல் பேசுவதா? உங்களையெல்லாம் திருத்தவே முடியாது என்றுதான் சொல்லவேண்டும்.


(பின்குறிப்பு - இந்த விமர்சனத்தை படிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட அதே குழப்ப மனநிலையில் இதே துன்பத்தை தியேட்டரில் அடியேனும் அடைந்ததன் விளைவே இதுமாதிரியான விமர்சனம்! கூல்! படம் மரண மொக்கை)