Pages

31 July 2012

ஒலிம்பிக் - இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்?






கோலாகலமாக தொடங்கிவிட்டது 2012 ஒலிம்பிக் போட்டிகள். உலகத்தின் அனைத்துக் கண்களும் லண்டன் நகர் ,மீதுதான்! 205நாடுகள், பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள், லட்சக்கணக்கான விளையாட்டு ரசிகர்கள் என லண்டன் மாநகரமே திருவிழா மூடில்
இந்தியாவிலிருந்து 81 துடிப்பான இளம்வீரர்கள் பதக்க கனவுடன் லண்டனில் முகாமிட்டுள்ளனர். 13 வெவ்வேறு விளையாட்டுகளில் உலகின் முன்ணனி வீரர்களோடு போட்டிபோட அனைவரும் ரெடி! இந்த முறை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக போட்டிகளில் மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக 250 கோடி செலவில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் அதிநவீன பயிற்சிக்கருவிகள், வெளிநாட்டிலேயே பயிற்சி எனப் பார்த்து பார்த்து பயிற்சி கொடுத்து ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் தயார் செய்திருக்கிறோம்!.

எப்போதும் போல ஒன்றிரண்டு பதக்கங்களோடு ஊர் திரும்ப போகிறோமா? அல்லது கைநிறைய பதக்கங்களைச் சுமந்து திரும்புவோமா?

இதுதான் இன்றைய மில்லியன் பவுண்ட் கேள்வி!

பத்து தங்கம்,இருபது வெள்ளி என அள்ளி வருவோம் எனக் கனவு காணவேண்டாம்.. ஆனால் சென்றமுறை ஒருதங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்றோம். இம்முறை அந்த எண்ணிக்கை நிச்சயம் ஏழு அல்லது எட்டு என்ற அளவிற்கு உயரும் என உறுதியாக நம்பலாம்.

சுட்டுத்தள்ளு!

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் 81பேரில் 11 பேர் துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். 2004ல் ரதோரின் வெள்ளி, 2008ல் அபினவ் பிந்த்ராவின் தங்கம் என இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் கடந்த பத்தாண்டுகளில் ஏறுமுகம்தான். பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ரா செய்த சாதனையை இந்தமுறை ககன் நாரங் நிகழ்த்துவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த், ஆசியபோட்டிகள் எனச் சென்ற இடமெல்லாம் கலக்கினார் ககன். அவரிடமிருந்து ஒரு தங்கம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ரஞ்சன் சோதிதான் 2012 ஒலிம்பிக்கிற்கு இந்தியா சார்பாக முதன்முதலில் தேர்வானவர். தேர்வானதுமே உடனடியாக பயிற்சியை தொடங்கி, ஒரே ஆண்டில் 25கிலோ எடை குறைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் பனிரெண்டு மணிநேர கடும் பயிற்சி! ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்ற ரஞ்சன் சோதி இம்முறை போட்டியிடப்போகிற வீரர்கள் பலரையும் உலகசாம்பியன்ஷிப்பிலேயே ஓட ஓட விரட்டியவர்.

இவர்கள் தவிர்த்து சாகன் சௌத்ரி, அன்னுராஜ் சிங் என பெண்கள் அணியும் செம ஸ்ட்ராங். எப்படியும் இரண்டு அல்லது மூன்று பதக்கங்களை நிச்சயமாக இப்பிரிவில் எதிர்பார்க்கலாம்.

வச்ச குறி தப்பாது!

20 ஆண்டுகளுக்கு முன்பு பார்சிலோனா ஒலிம்பிக்கின் வில்வித்தைப்போட்டியில் நூலிழையில் வெண்கல பதக்கத்தினை தவறவிட்டவர் லிம்பா ராம். இந்திய வில்வித்தை அணியின் தற்போதைய பயிற்சியாளர். ‘’இப்போது எல்லாமே மாறிவிட்டது, பயிற்சியில் தொடங்கி நம் நம்பிக்கைகள் வரை.. எல்லாமே, இம்முறை வரலாறு மாற்றி எழுதப்படும்’’ என நம்பிக்கையோடு பேசுகிறார்.

தீபிகா குமாரி,லைஸ்ராம் பாம்பாய்ல தேவி,சுக்ரோவோலு ஸ்வ்ரோ என மூன்றுபேர் கொண்ட பெண்கள் அணி அவ்வளவு எளிதில் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுவிடவில்லை. சென்ற ஆண்டு ஜூலையில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கங்களை வென்று முழுபலத்துடன் ஒலிம்பிக்கில் நுழைந்துள்ளனர்.

உலக அளவில் வில்வித்தையில் இந்தியாவின் 18வயது தீபிகா குமாரிதான் நம்பர் ஒன்! கிராமத்தில் குறிவைத்து மாங்காய் அடித்துக்கொண்டிருந்த ஏழைச் சிறுமி இன்று ஒலிம்பிக் வரை உயர்ந்து நிற்கிறார். தீபிகா பதக்கம் வெல்லுவார் என இப்போதே சொல்லிவிடலாம்.
ஆண்கள் அணியில் ஜெயந்தா தலுத்கர் தவிர மற்ற இருவரும் நல்ல ஃபார்மில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய குறை. வில்வித்தைப்போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஆறுபேரில் நான்குபேருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக். ‘சர்வதேச போட்டிகளில் அனுபவமின்மை’தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. ஆண்கள் அணியைவிட பெண்கள் அணியின் சூப்பர் ஃபார்ம் நிச்சயம் இந்தியாவுக்கு இந்த முறை வில்வித்தையில் இரண்டு பதக்கங்களாவது உறுதியாக கிடைக்கும்!

ஒவ்வொரு குத்தும் பதக்கம்!

ஒரு ஒலிம்பிக் பதக்கம் என்ன செய்துவிடும்? இந்திய குத்துச்சண்டை விளையாட்டின் முகத்தையே மாற்றிக்காட்டியிருக்கிறது ஒரு வெண்கலப்பதக்கம். கடந்த ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர் சிங் பீஜிங்கில் ஜெயித்த ஒற்றை வெண்கலப்பதக்கம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. நான்கே ஆண்டுகளில் இந்தியா ஏகப்பட்ட சாம்பியன்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இவர்களெல்லாம் சும்மா ஏனோதானோ லோக்கல் சாம்பியன்கள் கிடையாது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தகுதிகள் கொண்ட ரியல் சாம்பியன்ஸ்.

இந்த ஒலிம்பிக்கில் எட்டு இந்திய வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் விஜேந்தர் தவிர்த்து மற்ற அனைவரும் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வது இதுதான் முதல்முறை! பெண்களுக்கான போட்டியில் (51கிலோ எடைப்பிரிவு) போட்டியிடும் மேரிகோம் பற்றி சொல்லவே வேண்டாம். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை. தொடர்ந்து வெற்றிகளை குவித்துவருபவர்.

விகாஸ் கிருஷ்ணன் தொடர்ந்து சர்வேதசபோட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் திறமை கொண்டவராக இருக்கிறார். உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றது சமீபத்தியசாதனை. இந்த ஹரியானா பையன் நிச்சயம் இந்தியாவுக்கு பெருமைசேர்ப்பான் என்று நம்பலாம்!

கடந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் இந்தியாவின் முதல் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் தகுதிசுற்றுப்போட்டிகளில் சொதப்பினாலும் அதை சரிசெய்ய கடும் பயிற்சியில் ஈடுபடுவதாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

இவர்களைத்தவிர தேவேந்த்ரோ சிங்,ஜெய்பக்வான்,மனோஜ்குமார்,சுமித் சங்வான் என ஒரு பயமறியாத இளமைபட்டாளமே தங்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறது, எட்டில் இரண்டு பேர் நன்றாக ஆடினாலும் கூட இரண்டு பதக்கமாகவது கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்!

இறகுபந்து தேவதைகள்!


கடந்த பீய்ஜிங் ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறியவர் சாய்னா நெக்வால். அதற்கு பிறகு 15 சாம்பியன் பட்டங்களை வென்று அசுர ஃபார்மில் இருக்கிறார். சென்ற மாதம் மட்டுமே இரண்டு சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார். இந்த இரண்டு வெற்றிகள் ஒலிம்பிக் நேரத்தில் கிடைத்திருப்பது பதக்க வாய்ப்பினை பலமடங்கு அதிகமாக்கியுள்ளது. இதே ஃபார்மில் ஆடினால் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் நிச்சயம். அதே நேரம் சீனாவின் யிகான் மட்டும்தான் சாய்னாவுக்கு இருக்கிற ஒரே கண்டம். இதுவரை அவரோடு பலமுறை மோதியும் எந்த போட்டியிலும் சாய்னாவால் தோற்கடிக்கவே முடிந்ததில்லை. அவருடனான போட்டியில் கூடுதல்கவனம் செலுத்தி ஆடவேண்டியதாயிருக்கும்.

சாய்னா ஒற்றையரில் கில்லியென்றால் ஜ்வாலா குட்டாவும் அஸ்வினி பொன்னப்பாவும் இரட்டையரில் புலிகள். கடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்த இரட்டையர் ஜோடி அதே மேஜிக்கை லண்டனிலும் நிகழ்த்த்தினால் பாட்மின்டனில் நமக்கு முதல்தங்கமாக அமையலாம். இப்போதிருக்கும் ஃபார்மோடு நம் வீரர்கள் ஆடினால் பேட்மின்டனில் மட்டுமே இரண்டு பதக்கங்கள் இந்தியாவின் பதக்க கணக்கில் சேரும்.

நம்பிக்கையின் கிடுக்குபிடி!

மல்யுத்த விளையாட்டில் இதுவரை இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. 1952 கே.டி.ஜாதவ் ஒரு வெண்கலமும் அதற்கு பிறகு காத்திருந்து காத்திருந்து 56 ஆண்டுகளுக்கு பிறகு பீய்ஜிங்கில் சுஷில்குமார் வென்றதும்தான் தற்போதைய நிலை! 2008க்கு பிறகு இந்தியாவில் மல்யுத்த விளையாட்டின் போக்கில் மிகப்பெரிய மாற்றத்தினை காணமுடிந்தது. அதன் பலனை 2010 காமன்வெல்த் போட்டிகளில் தெரிந்தது. காமன்வெல்த் போட்டிகளில் 19 பதக்கங்களை வென்றது நம் இந்திய அணி அதில் பத்து தங்கம்.

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சாம்பியன்களில் நான்குபேர் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவுள்ளனர். 2010ஆம் ஆண்டு சுஷில் குமார் மாஸ்கோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். உலக மல்யுத்த அரங்கில் இந்தியர்களின் பலத்தினை உணர்த்துவதாக இருந்தது. ஒலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்ற வீரர்கள் அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் அதிநவீன வசதிகளுடன் மிகச்சிறந்த பயிற்சியாளர்களின் உதவியோடு பயிற்சி பெற்றுள்ளனர்.

பதக்கம் வெல்லும் வாய்ப்பிருக்கிற வீரர்களில் சுஷில்குமார் நிச்சயம் இடம்பெறுவார். இவர்தவிர யோகேஸ்வர் தத் மற்றும் நர்சிங் யாதவும் வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகம். இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இருக்கும் மல்யுத்த வீராங்கனை கீதாபோகத்தான். ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதே இந்திய அளவில் பெரியசாதனைதான். சுஷில்குமார் அல்லது யோகேஸ்வர் தத் இருவரில் ஒருவரிடமிருந்து ஒரு பதக்கமாவது நிச்சயம் கிடைக்கும். மற்றவீரர்களின் மேல் நம்பிக்கையிருந்தாலும் பதக்கவாய்ப்பு குறைவே.

தடகள அனுபவம்!

தடகளப்போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு ஒலிம்பிக்கிற்கு செல்வதும் வெறுங்கையோடு திரும்புவதும்தான் வாடிக்கை. மில்கா சிங் தொடங்கி பிடி உஷா,ஸ்ரீராம்சிங் என நீளும் பட்டியிலில் பலரும் கடைசிவரை போராடி பதக்கமின்றி திரும்பியவர்களே! நம்முடைய ஆற்றலை பதக்கமாக மாற்றும் ரகசியம் நம்மவர்களுக்கு இன்னும் பிடிபடவே இல்லை. அதனாலேயே இந்தமுறையும் நம்மிடம் இப்பிரிவில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை.

நம்முடைய இளம் வீரர்களான டின்ட்டு லூகா,ஓம்பிரகாஷ்,குர்மீத் சிங்,தமிழக வீரர் ரெஞ்சித் மகேஸ்வரி மாதிரியான இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய அனுபவமாகவும், வெளிநாட்டு வீரர்களோடு போட்டி போடும்போது தங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இப்போட்டிகள் அமையலாம். அது அடுத்த ஒலிம்பிக்கில் உதவும்.

வட்டு எறிதல் வீரர்களான விகாஸ் கௌடாவும் கிருஷ்ணபூனியாவும் ஒரளவு நம்பிக்கை தருகின்றனர். விகாஸ் கௌடா அமெரிக்கவாசி.. அண்மையில் உலகசாம்பியன்ஷிப்பில் ஏழாமிடம் பிடித்தவர். அமெரிக்காவிலேயே தங்கி முன்னாள் உலக சாம்பியன் ஜான் காடினோவிடம் பயிற்சி பெற்றுவருகிறார். கிருஷ்ணபூனியா தொடர்ந்து இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டிகளில் தொடங்கி பதக்கங்களை குவித்து வருபவர். இவருடைய பயிற்சியாளரும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான மேக் வில்கின்ஸ். அண்மையில் அமெரிக்காவில் நடந்த போட்டியொன்றில் தேசிய சாதனை ஒன்றை முறியடித்தார். ஒலிம்பிக் நேரத்தில் இது அவருக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும். இவர்கள் இருவரில் ஒருவராவது ஒரே ஒரு வெண்கலம் வென்றால் கூட நாம் நிறையவே பெருமை பட்டுக்கொள்ளலாம்.

கிடைத்தால் லாபம்!

கர்ணம் மல்லேஸ்வரி பளுதூக்குதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்று 12 வருடமாகிவிட்டது. சிட்னியில் வெண்கலபதக்கம் வென்றபோது நாடே மகிழ்ச்சியில் கொண்டாடியது. அதற்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எத்தனை எத்தனை பளுதூக்கும் வீரர்கள் புதிது புதிதாக உருவானார்கள். குஞ்சராணி தேவி, மோனிகா என சாம்பியன்கள் உருவாகி.. பின் எல்லாமே மாறியது. மோசமான பயிற்சியாளர்களால் ஊக்கமருந்து பிரச்சனையில் இந்தியாவின் பளுதூக்கும் விளையாட்டு சரியத்தொடங்கியது. எத்தனை சாம்பியன்கள் எவ்வளவு சாதனையாளர்கள் தொடர்ந்து தடைபெற்று.. இன்று பளுதூக்குதலில் நம்மிடம் சாம்பியன்களே இல்லை! இதோ இந்த ஒலிம்பிக்கில் இரண்டே பேர்தான் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த இருவர் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ரவிக்குமார் இளம் வீரர், சோனியா சானு அனுபவசாலி, ஆனால் இருவரும் உலக சாம்பியன்களின் சாதனைகளின் அருகில் கூட இல்லை!

ஊரே வேடிக்கை பார்த்த பெயஸ்-பூபதி குடுமிப்பிடி சண்டைகள் ஓய்ந்து தீர்ந்து, ஒருவழியாக யார்யார் யாரோடு விளையாடுவது என்பது கடைசியில்தான் முடிவானது என்பதால் போட்டியில் ஆடவுள்ள சானியா மிர்சாவே வே பதக்கம் கிடைப்பதுலாம் கொஞ்சம் கஷ்டம்தாங்க என ஒப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துவிட்டார். போபண்ணா-பூபதி ஜோடி இன்ப அதிர்ச்சிதரலாம்.

இன்னொரு பக்கம் ஹாக்கியில் கடந்த சிலவருடங்களாக ஏற்ற இறக்கங்களோடு ஆடிவருகிறது நம் இந்திய அணி. வெளிநாட்டு பயிற்சியாளர் நாப்ஸின் வருகைக்குப்பின் ஓரளவு வெற்றிகள் கிடைத்தாலும் முக்கிய போட்டிகளில் சொதப்பலோ சொதப்பலாக ஆடுகின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின் வென்ற முதல் ஒலிம்பிக் பதக்கம் ஹாக்கியில்தான்.. அதுவும் இங்கிலாந்தில்தான்! மீண்டும் அதேஇங்கிலாந்தில் 2008 சோகத்திற்கு (தகுதியேபெறவில்லை) இம்முறை விளையாடவுள்ளது. இந்தியா விளையாடும் குரூப்பில் கொரியா,ஜெர்மனி,நியூஸிலாந்து மாதிரியான பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குரூப் லெவல் தாண்டுவதே கஷ்டம்தான். வெண்கலம் வென்றாலே கொண்டாடலாம்!

இவர்கள் தவிர்த்து நீச்சலில் சிங்கிளாக இடம்பிடித்திருக்கிறார் ககன் உலால்மத், இவர் உலகின் முண்ணனி வீரர்களோடு போட்டி போட்டு முதல் பத்து இடங்களுக்குள் வந்தாலே பாராட்டலாம். ஜூடோவில் சண்டையிட காத்திருக்கும் வீராங்கனை கரிமா சவ்த்ரி உலக ரேங்கிங்கில் 88வது இடத்தில் இருக்கிறார். டேபிள் டென்னிஸில் விளையாடவுள்ள சோமய்ஜித் கோஸ் மற்றும் அங்கிதா தாஸ் இருவருமே மிக இளம் வீரர்கள் பதக்கம் வெல்லுவார்கள் என்று எதிர்பார்ப்பது குருவிதலையில் பனங்காயை வைப்பது போலதான்! படகுவிடும் போட்டிக்காக ஆந்திராவை சேர்ந்த மூன்று பேர் தேர்வாகியுள்ளனர், போட்டியில் 16வது இடம் பிடித்தாலே மகிழ்ச்சிதான் என்று பேட்டியளித்துள்ளனர்.

பதக்க வாய்ப்புகள் இல்லை என்றபோதும் ஒலிம்பிக்கில் விளையாட அதுவும் பல்வேறு விதமான போட்டிகளுக்கு இந்திய வீரர்கள் தேர்வாகியிருப்பதும், உலக சாம்பியன்களோடு போட்டி போட வாய்ப்புக்கிடைத்திருப்பதுமே நல்ல துவக்கம்தான்.

நாம் பதக்கம் வெல்கிறோமோ இல்லையோ இந்தியா உலக விளையாட்டரங்கில் தன்னை நிரூபிக்க தயாராகிவிட்டது என்பதையே இந்த ஒலிம்பிக் உணர்த்துகிறது. அதிக எண்ணிக்கையில் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களை தயார் செய்ய கோடிகளை கொட்டவும் தயாராகிவிட்டது நம் நாடு!

இந்தியா இப்போதே 2020 ஒலிம்பிக்கிற்காக திட்டமிட தொடங்கி இருக்கிறது.. ஆயிரம் கோடிரூபாய் செலவில் சீனா ஐரோப்பாவைப்போல குழந்தைகளாக இருக்கும்போதே ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்தும் விஷன் 2020 திட்டத்தினை செயல்படுத்த இந்திய விளையாட்டுத்துறை திட்டமிட்டுவருகிறது. பேசத்தொடங்கிவிட்டோம்.. செயலிலும் காட்டினால் வருங்காலத்தில் ஒற்றை இலக்க பதக்க எண்ணிக்கை மூன்றிலக்கத்திணை எட்டும் என்பது நிச்சயம்!


(சென்றவாரம் வெள்ளியன்று புதியதலைமுறை வார இதழில் வெளியான என் கட்டுரை. புதியதலைமுறைக்கு நன்றி)

25 July 2012

கொஞ்சநேரம் குழந்தையாகலாம்





தம்பி தம்பி
என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்ன பலா?
வேர்ப்பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மர விறகு
என்ன மரம்
மா மரம்
என்ன மா?
அம்மா
என்ன அம்மா
டீச்சரம்மா
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டு கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்ட மாடி
என்ன மொட்டை
பழனி மொட்டை
என்ன பழனி
வட பழனி
என்ன வட
ஆமை வட
என்ன ஆமை
கொளத்து ஆமை
என்ன கொளம்
திரி கொளம்
என்ன திரி
வெளக்குத் திரி
என்ன வெளக்கு
குத்து வெளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து

இப்படியே போகும் பாட்டு கடைசியில் என்னா குத்து , கும்மாங்குத்து என்று முடியும். அல்லது மத்தியிலேயே வேறு ட்ராக் பிடித்து புதுப்பாடல் உருவாகும். இந்த சிறுவர் விளையாட்டு பாடல் நம்மில் பலருக்கும் நினைவிருக்கலாம். இதை யார் நமக்கு கற்றுக்கொடுத்திருப்பார்கள்? எப்படி இந்த விளையாட்டு நமக்கு பரிச்சயமானது? என்பதெல்லாம் நினைவில் நிச்சயமாக இருக்காது.. ஆனால் நம்மில் பலரும் இந்த விளையாட்டினை கடந்துதான் வந்திருப்போம். இந்தப்பாடலை படிக்கும் போது சிறுவயதில் பாட்டுப்பாடி விளையாடிய குழந்தைப்பருவ நாட்களின் மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.

ஒவ்வொரு முறை விளையாடும்போதும் எங்கேயோ தொடங்கி எதிலோ முடியும் இந்த விளையாட்டு. நான்கைந்து பேர் வட்டமாக அமர்ந்து ஒவ்வொருவரும் மாறி மாறி பாடிக்கொண்டே வர.. வார்த்தையில்லாதவர் அவுட் ஆகி வெளியேற்றப்படுவார்! அவுட் ஆகிவிடக்கூடாது என்பதற்காக இன்னைக்கு இதுல என்ன புது புது வார்த்தைகளை போட்டு பாடலாம் என்று பள்ளியில் அமர்ந்துகொண்டு நிறையவே யோசித்திருக்கிறேன். என்ன உருண்டை கோலா உருண்டை என்ன கோலா கோக்க கோலா என்றெல்லாம் பாடியது நினைவில் இருக்கிறது.

அண்மையில் இந்தப்பாடலை தோழர் பொட்டீகடை சத்யா ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என இங்கேயும் பகிர்ந்துவிட்டேன்.

நம் குழந்தைகளுக்கு இதுமாதிரி பாட்டெல்லாம் பரிச்சயமா என்பது சந்தேகம்தான். தெரிந்திருந்தாலும் ட்யூசனுக்கும் டிவிக்கும் நடுவே மற்ற குழந்தைகளோடு இதெல்லாம் விளையாட நேரமிருக்குமா தெரியாது. உங்கள் குழந்தைக்கு இந்தப்பாடலை சொல்லிக்கொடுத்து நீங்களும் அவர்களோடு விளையாடுங்க.. குழந்தைகள் நிறைய தமிழ் சொற்களை கற்றுக்கொள்ளவும் புதிய பாடல்களை உருவாக்கவும் வாய்ப்பாக அமையும். அதோடு நாமும் கொஞ்ச நேரம் முழுமையாக குழந்தையாகலாம்.

16 July 2012

பில்லாலங்கடி!






அஜித்குமார் மிகச்சிறந்த மனிதர். கடினமான உழைப்பாளி. நிறைய ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருபவர். பிரியாணியை தன் கையால் சமைத்து லெக்பீஸோடு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கும் தயாள குணங்கொண்டவர். சொந்தக்காலில் சுயமாக நின்று கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர். விபத்தில் அடிபட்டு உடல்நலங்குன்றி தேறிவந்து நடித்தவர். தோல்விகள் அவரை ஒன்றுமே செய்யாது. ப்பீனிக்ஸ் பறவைபோல தோல்விகளிலிருந்து குபுக் என குதித்து வந்தவர். உண்மை உலகில் நல்ல நல்லவராக வாழ்வதற்காகவே சினிமாவில் கெட்ட கெட்டவராக நடிப்பவர். இன்றைக்கு தமிழகத்தில் அப்துல்கலாமுக்கு பிறகு அஜித்குமார்தான் மிக மிக நல்ல நல்ல நல்லவர். அவரைவிட்டால் தமிழ்நாட்டிலேயே ஏன் இந்த இந்தியாவிலேயே வேறு நல்ல நல்லவர்கள் இருப்பதாக தெரியவில்லை. இப்படி தமிழகமே போற்றும் ஃபீல்குட் புராஃபைல் கொண்டவர் அஜித்குமார். அவரை மதிக்கலாம். பாராட்டலாம். விழா எடுக்கலாம். பீச்சாண்டை சிலைகூட வைக்கலாம்.

ஆனால் அதற்கொசரம் அவருடைய படம் கொடூர குப்பையாய் இருந்தாலும் அதை கொண்டாடும் அளவுக்கெல்லாம் எனக்கு பெரிய மனசு கிடையாது. அஜித் படங்களை முதல்நாளே பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கிற கோடானுகோடி உண்மையான உத்தம தமிழர்களுக்கு மத்தியில் உலகமயமாக்கலால் உண்டான பங்குசந்தை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் அடியேன் இரண்டாம்நாள்தான் இத்திருக்காவியத்தை காணும் பாக்யம் வாய்த்தது.

தியேட்டரின் அருகினில் கூடிய கூட்டங்கள் கடலா கடல் அலையா..ஆஆஆஆஆஆஆ... என்று பிரமிக்கும் அளவுக்கு இளசுகள் எல்லாம் தலவெறி தலைக்கேறி கையில் டிக்கட்டோடு சுற்றிக்கொண்டிருந்தனர். சில தியேட்டர்களில் டிக்கட் விலை 750ஐ தாண்டியதாம். அதிகாலை நான்குமணிக்கே நகரின் முக்கிய சாலைகள் முடங்கும் அளவுக்கு தியேட்டர் வாசல்களில் கூட்டமாம். எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் காசு கொடுத்து டிக்கட் வாங்க ரசிகர்கள் காத்திருந்தது தெரிகிறது. ப.சிதம்பரத்துக்கு இதெல்லாம் தெரிந்தால் விலைவாசியை இன்னும் கூட பத்துபர்சென்ட் ஏற்றிக்கொள்ளுவார் என்பதில் ஐயமில்லை! இந்த தியேட்டர் ப்ரீக்வல் புராணங்களை புறந்தள்ளிவிட்டு படத்தைப்பற்றி மட்டும் பார்ப்போமா?

முதல்காட்சியிலே அஜித்தை நான்குபேர் பிடித்துவைத்து துப்பாக்கி முனையில் அடித்து உதைத்து ரத்தம் வழியும் வாயோடு பஞ்ச் டயலாக் சொல்லவைக்கிறார்கள். அஜித்தும் வேறு வழியில்லாமல்.. ‘’டேய்ய்ய்ய்ய்ய்... என் வாழ்க்கைலெஏஏஏஏஏஏஏ.. ஒவ்வொரு நாளும்.ம்ம்ம்ம்ம்..’’ என்று இழுத்து இழுத்து டிரைலரில் பேசிய அதே பஞ்ச் டயலாக்கை பேசுகிறார். பேசிமுடித்ததும் பிக்காலி பயலுக டூமீல்னு சுடாம தல இன்னொரு பஞ்ச் பேசுவாரோ என காத்திருக்கிறார்கள்.. அந்த கேப்பில் அஜித்தின் மகத்தான இடுப்பு பிரதேசத்தில் யாரோ பத்திரமாக இருக்கட்டுமே என குத்தி வைத்திருந்த கூரான கத்தியை உருவி நான்குக்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு.. கீழே கிடக்கிற துப்பாக்கியை எடுத்து நம்மை நோக்கி சுடுகிறார்! அப்போதே நாம் உஷாராகி வெளியே ஓடிவந்திருக்க வேண்டும். இந்த விதிதான் விடாதே!

இலங்கையில் போர் நடக்கிறது. குடும்பம் கொல்லப்படுகிறது. அஜித் அநாதையாகி திருடனாகிறார்.(இதெல்லாம் பெயர் போடும்போதே போட்டோவில் காட்டிவிடுகிறார்கள்). அடுத்த காட்சியில் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் செல்லுகிற டெய்லி சர்வீஸ் (இரவு கிளம்பினால் காலையில் வந்துசேரும் போல) அகதிகள் எக்ஸ்பிரஸ் படகில் ஒரு பெட்டியோடு தொந்தியும் தொப்பையுமாக ஆந்திரா மெஸ்ஸில் இரண்டு ஃபுல்மீல் சாப்பிட்ட தெம்போடு இரண்டு மண்ணெண்ணெய் கேன் லூயி பிலிப்பி சட்டை சகிதம் நேராக ராமேஸ்வரம் கடற்கரையிலேயே வந்திருங்குகிறார்.

ஒவ்வொரு அகதியாக கூப்பிட்டு அழைத்து உட்காரவைத்து அரசு ஊழியர் ஒருவர் பெயர் ஊர் விபரமெல்லாம் கேட்கிறார். அதுபோல அஜித்தும் அழைக்கப்படுகிறார். விசாரிக்கப்படுகிறார். அவரும் தனக்கேயுரிய பாணியில் ‘’ப்பில்லா... ட்டேவிட் ப்பில்லா’’ என்கிறார். அந்த அலுவலரும் அஜித்தை மிரட்டி பஞ்ச் டயலாக் சொல்லவைக்கிறார் அஜித்தும் அந்த சிச்சுவேசனில் ஏதாவது சொல்லியாக வேண்டுமே என தீவிரவாதிக்கும் போராளிக்கும் இருக்கிற வித்தியாசத்தினை ஒருவரியில் சொல்லிவிடுகிறார்! உடனே அஜித் அகதிகள் முகாமில் நண்பர்களோடு டீ சாப்பிடுகிறார். போலீஸ்காரரை புரட்டி எடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அஜித்தை கட்டிவைத்து அடிக்கிறார்கள். கடத்தலில் ஈடுபடுத்துகிறார்கள். அஜித் கொலைசெய்யதொடங்குகிறார்!

ஆயிரம் பேர கொன்னாதான் அரைவைத்தியனாக முடியும் என்பது மாதிரி நூறு பேரையாவது கொன்றால்தான் முக்கால் கேங்ஸ்டர் ஆகமுடியும் என்று குவான்டீன் டாரன்டீனோவும் மார்ட்டீன் ஸ்கார்சீயும் மரியா புஜோவும் எழுதிவைத்திருக்கிறார்கள். டேவிட் பில்லா தனக்காக இல்லாவிட்டாலும் மேற்சொன்ன உத்தமமான மனிதர்களுக்காக நல்லவனோ கெட்டவனோ யாராக இருந்தாலும் அவர் வாழ்வதற்காக ரத்தம் கொட்ட கொட்ட கொன்று குவிக்கிறார்.

இலங்கை அகதியான அஜித்துக்கு சென்னையில் பிரவுன் சுகர் விற்கும் இடம் தொடங்கி ‘’டேன்ஸ் வித் மீ’’ மாதிரியான ஆங்கிலப்பாடல்கள் கூட தெரிந்திருக்கிறது. இங்கிலீஸில் பொழந்துகட்டுகிறார். அன்பார்சுனேட்லி அவர் இலங்கைத்தமிழர் என்பதால் புறத்தால என்கிற தமிழ்வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் போகிறது. அந்த க்ஷணத்தில்தான் அஜித் இலங்கையிலிருந்து வந்த அகதியா அல்லது இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்று நாடுதிரும்பியவரா என்கிற சந்தேகமே உருவாகியது! அதைவிடுங்க.. இப்படியாக ஒருவழியாக டாக்டர் அஜித் பல ஆபரேஷன்கள் செய்து சின்ன டானாக மாறுகிறார். கொதிக்கும் வெயிலில் குளுகுளு கோட்டும், கடுமையான இருட்டு நேரத்திலும் டார்க் கூலர்ஸும் போட்டுக்கொள்கிறார். (எனக்கென்னவோ அஜித் டான் ஆவதே இந்த கோட்டு போடவும் கூலிங் கிளாஸ் மாட்டவும்தானோ என்றுகூட தோன்றுகிறது).

பிட்வீன் தன்னுடைய அக்காவை சர்ச்சில் சந்திக்கிறார். சில காட்சிகளுக்கு பிறகு அக்கா செத்துப்போகிறார் (படத்தில் இயற்கையாக செத்துப்போகும் ஒரே ஆள் அவர்தான்). நெட்டையாக இருப்பவரும் சர்ச்சில் பாட்டு பாடும் அடக்க ஒடுக்கமான அக்கா பெண்ணை அழைத்துக்கொண்டு கோவா போய் தங்கவைக்கிறார். அஜித்தை ஆசையாக மாமா மாமா என்று அழைக்கும் அந்தபெண்ணுக்கு குடிப்பழக்கம் உண்டாகி அது வேறு யாரோடோ பார்ட்டியில் டேன்ஸ் ஆடும் அளவுக்கு எல்லைமீற கடுப்பாகும் அஜித் பத்துபேரின் மண்டையில் பாட்டில் உடைக்கிறார்.. சூப்பர் ஃபைட். (க்ளைமாக்ஸில் அந்தபெண்ணை கொன்றுவிடுகிறார்கள்) இதற்கு நடுவில் இன்டர்வெல் விட்டாக வேண்டும் என டைரக்டருக்கு திடீரென தோன்றிவிட்டது போல ஓடிப்போய் வில்லன்களை பிடித்து கூட்டிவந்து நிற்க வைக்கிறார் அஜித் பஞ்ச்டயலாக் பேசுகிறார்! நடக்கிறார் இன்டர்வெல்!

முதல் பாதியில் நாம் நிறைய எழுதுகிற அளவுக்கு மேட்டர் இருந்ததில்லையா? இரண்டாம் பாதியில் அதுமிகவும் குறைவு. ரஷ்யாவில் இருக்கிற ரஷ்ய டானோடு அஜித் மோதுகிறார். அஜித் அவனிடமும் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு முதலமைச்சரை கொன்று நீதிபதியை மிரட்டி சிறையிலிருந்து திரும்பி புராவியோவோ என்னவோ உலகமேப்பில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய நாட்டுக்கு இரட்டை ஆளாக (அஸிஸ்டென்ட்டோடு) போய் அட்ரஸ் தேடி கண்டுபிடித்து மாபெரும் டானின் ஆயுதகிடங்கில் அவர்களுக்கே தெரியாத இடங்களில் குண்டுவைத்து அழித்து, ஒரே ஒரு துப்பாக்கியின் உதவியோடு பல நூறுபேரை கொன்றுகுவித்து தர்மத்தை காக்கிறார். அதோடு இயக்குனர் வேறு வாடகைக்கு ஒரு ஹெலிகாப்டரையும் எடுத்துவிட்டதால், அஜித்தை டூப்பில்லாமல் தொங்கவிடுகிறார். ஹெலிகாப்டரில் தொங்கும்போது கூட ‘’டேய்ய்ய்ய்ய் நான்...’’ என்று தொடங்கும் ஏதாவது ஒரு பஞ்ச் டயலாக்கை பேசிவிடுவாரே என்கிற அச்சத்தோடே படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை வேறு பயமுறுத்தியது. அந்த இடத்தில் பஞ்ச் வைக்காத வசனகர்த்தாவின் திசைபார்த்து கும்பிடுகிறேன்.. நன்றி தலைவரே!

இப்படியாக பலபேரை கொன்று டான் ஆகிறார் அஜித் (இதுதான் படத்தின் ஒன்லைன்). நல்லவேளையாக இரண்டுமணிநேரத்திலேயே அவர் டான் ஆகிவிட்டது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியமாக இருக்கலாம்.

அஜித் பில்லா முதல் பாகத்தில் இருந்ததை விடவும் இதில் நிறையவே வயதானவராக தெரிகிறார். மேக்கப் கொஞ்சம் ஏற்றியிருக்கலாம். இது ஏதோ பின்னவீனத்துவ ப்ரீக்வல் போல! டெக்னிக்கலாக அப்படி! மேக்கிங் இப்படி! கேமராவ பார்த்தியா.. இசைய நீயும் கேட்டியா.. என்றெல்லாம் எதை சொன்னாலும் படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. அஜித்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் போல! அஜித் ரசிகர்கள் அவர் நடந்தாலே கைதட்டுவார்கள். இதில் நிறைய நடக்கிறார், பஞ்ச் டயலாக் பேசுகிறார். கைத்தட்டி மகிழலாம்.

வெறும் தொழில்நுட்பமும் ஸ்டைலும் மட்டுமே முழுமையான திரைப்படமாகாது. உணர்வு என்கிற ஜந்துவே இல்லாத ஒரு திரைப்படத்தை பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். என்னதான் மொக்கை மசாலா படமாக இருந்தாலும் அதன் பலம் திரைக்கதையின் சுவாரஸ்யத்தில்தான் இருக்கிறது. புளித்துப்போன தீ,ரங்கா காலத்து காட்சிகள். கொஞ்சமும் புத்திசாலித்தனமில்லாத ட்விஸ்ட்டுகள். அதிலும் வில்லனை காட்டும்போதெல்லாம் அவர் இடுப்பில் துண்டோடு முதுகில் மிதிக்கும் மசாஜ் பெண் என்கிற ஐடியாவை எங்கிருந்து பிடித்தார்களோ கொடுமை. ஓவர் வன்முறை, மொக்கையான செக்ஸ் அடங்கிய ஒரு ஹைபட்ஜெட் ஸ்டைலிஷ் 'சுறா!தான் இந்த பில்லா 2.

எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வேன்.. ஒரு விஷயம்தான் கடைசிவரை உறுத்தியது. எப்படித்தான் இரண்டு ஆண்களுக்கு பிகினியெல்லாம் மாட்டிவிட்டு ஹீரோயின்கள் என்று சொல்ல முடிந்ததோ இந்த மனசாட்சியே இல்லாத இயக்குனருக்கு!

14 July 2012

நஞ்சாகும் எதிர்காலம்!







எப்போதும் இல்லாத அளவுக்கு மின்னணு கழிவுகள் தமிழகம் முழுக்க மலைபோல் குவியத்தொடங்கியுள்ளன. இந்திய அளவில் மின் கழிவு உற்பத்தியில் தமிழகத்திற்கு இரண்டாமிடம்!

நம் வருங்காலம் நம் கண்முன்னே நஞ்சுவைத்து கொல்லப்படுகிறது. நம்முடைய நிலத்தடி நீரும்,மண்வளமும் விஷமாகின்றன. இந்த நாசகார வேலைகளை செய்கிற வில்லன் வேறு யாருமல்ல.. நாமேதான்! எது குப்பை, எது விஷம் என்கிற அக்கறையேயில்லாமல் மலைபோல் மின்-கழிவுகளை (E-WASTE) குவித்துக்கொண்டேயிருக்கிறோம். சென்ற ஆண்டு மட்டுமே 28,789 மெட்ரிக் டன் அளவுக்கு சென்னையில் மட்டுமே மின்கழிவுகள் குவிந்துள்ளன. இந்த ஆண்டு இதன் அளவு இரட்டிப்பாகலாம் என எச்சரிக்கின்றனர் வல்லுனர்கள். இது அடுத்த இருபது ஆண்டுகளில் இரண்டு லட்சம் டன் என்னும் அளவுக்கு உயரும் என பயமுறுத்துகின்றனர். சென்னை நகரத்தில் மட்டுமே ஒவ்வொருநாளும் 4500டன் மின்கழிவுகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது! இந்திய அளவில் மின்கழிவு உற்பத்தியில் சென்னைக்கு நான்காமிடம்.

புதியன புகுதலும் பழையன கழிதலும் பாட்டுக்கு ஒக்கேதான்! ஆனால் புதியன அளவுக்கதிகமாக வீட்டுக்குள் நுழைய ஆரம்பித்துவிட்ட காலத்தில் வாழ்கிறோம். போன மாதம் வாங்கின செல்ஃபோன் இந்தமாதம் அவுட்டேட் ஆகிவிடுகிறது. சென்ற ஆண்டு வாங்கின எல்சிடி டிவிக்கு போட்டியாக 3டி டிவி மார்க்கெட்டில் சக்கைபோடு போடுகிறது. நாளொரு புதிய தொழில்நுட்பம் பழைய கணினிகளை பரணுக்கு அனுப்புகின்றன. மார்க்கெட்டுக்கு எது புதிதாக வந்தாலும் வாங்கி வாங்கி குவிக்கிறோம்.

இவற்றை வாங்க பணம் கூட தேவையில்லை.. கடன் கொடுக்க பன்னாட்டு வங்கிகள் போட்டி போடுகின்றன. நமக்கு தேவையோ இல்லையோ பெருமைக்காச்சும் வாங்கிப்போடு! என்கிற எண்ணம் ஆழமாக வேர் ஊன்ற தொடங்கியுள்ளது. உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் குவியும் மின்கழிவுகள் பற்றி அக்கறையேயில்லாமல் புதிய பொருட்களை விற்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன.

சின்ன ரிமோட் கன்ட்ரோல் பழுதடைந்துவிட்டதா.. அதை சரிசெய்வதெல்லாம் ஃபேஷன் கிடையாது. தூக்கி குப்பையில் போடு! புதிதுவாங்கிக்கொள்வோம். கம்ப்யூட்டர் மானிட்டர் தொடங்கி மிக்ஸி,எம்பி3 பிளேயர்,கேமரா,லேப்டாப்,செல்ஃபோன்,டீவி,டிவிடி பிளேயர்,டிவிடி,விசிடிகள் என இன்னும் ஏகப்பட்ட மின் மற்றும் மின்னணு சமாச்சராங்கள் அப்டேட் ஆக ஆக பழையவை குப்பைக்கு செல்கின்றன. அல்லது காய்லாங்கடையில் எடைக்கு போடப்படுகின்றன. அல்லது துணி சுற்றப்பட்டு நம் பரண்களில் எதிர்காலத்தை பாழாக்க காத்திருக்கின்றன.

இந்த மின்னணு கழிவுகளால் என்ன பிரச்சனை? அவற்றினால் நாம் வாழும் சுற்றுசூழல் எப்படி பாதிக்கப்படுகிறது? இவற்றால் நமக்கு என்ன பாதிப்புகள் உண்டாகும்? அணுக்கழிவுகளை விட இந்த மின்கழிவுகள் ஆபத்தானவை என்பது யாருக்கும் தெரியாது. நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. நாமும் போட்டிக்கு போட்டியாக வாங்கிக்குவிக்கிறோம். இதுதான் தற்போதைய நிலைமை!

மின்கழிவு (E-WASTE)


மின்கழிவு என்பது ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து நம் பூமியை பாழாக்க பாய்ந்துவந்த விண்கல் கிடையாது. நாம் பயன்படுத்தபடுத்தி குப்பையில் போடும் காப்பர் வயர்களில் தொடங்கி பழைய மிக்ஸி,டிவி,கணினி,மொபைல் ஃபோன்,டிவிடிபிளேயர்,ட்யூப்லைட்,தொலைபேசி என மின்சாரத்தால் இயங்கிக்கொண்டிருக்கிற எல்லாமேதான்! தமிழகத்தில் குவியும் இருபத்தியெட்டாயிரம் டன் மின்கழிவில் 60 சதவீதம் பழைய கணினிகள் மட்டுமே என்கிற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

‘’வேகமாக வளரும் பொருளாதாரம் , அது சார்ந்த புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகள், அதிகரித்துவரும் நுகர்வு கலாச்சாரம், இவைதான் கடந்த பத்தாண்டுகளில் மின்கழிவுகள் மலைபோல் குவிய காரணம்’’ என்கிறார் டாக்ஸிக் லிங்க்ஸ் அமைப்பின் அருண்செந்தில்ராம்.
இவையெல்லாம் மக்காத குப்பைகளாக குவிவது ஒருபக்கம். இன்னொரு பக்கம் இதை என்ன செய்வதென்று தெரியாமல் அரசு விழிபிதுங்கிப்போய் அலைகிறது. பழைய கணினிகளால் உண்டாகும் மின்கழிவின் அளவு மட்டுமே அடுத்த பத்தாண்டுகளில் 500 மடங்கு அதிகரிக்கும் என்கிறது ஐ.நா சுற்றுசூழல் திட்ட அமைப்பின் அறிக்கை.

விஷம்தான் விஷயம்

உங்கள் வீட்டில் ஒரு பழைய மானிட்டரும் கீபோர்டும் மவுசும் பலநாளாய் கிடக்கிறது. கொண்டுபோய் காய்லாங்கடையில் எடைக்கு போட்டுவிடுகிறீர்கள். அதற்கு பிறகு அவை என்னாகும் என்று தெரியுமா? நம்முடைய பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் காய்லாங்கடையில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. அதிலிருக்கிற நல்ல விலைகிடைக்கிற இரும்பு,பிளாஸ்டிக்,அலுமினியம் மாதிரியான பொருட்கள் பிரித்தெடுக்க படுகின்றன.. இதனால் பெரிய பாதிப்பில்லை. இதற்கு பிறகு இவர்கள் கையாளுகிற முறைகள்தான் சுற்றுசூழலை காலி பண்ணும் அஸ்திரங்கள்.


பிவிசி ஒயர்களை எரித்து காப்பரை பிரித்தெடுப்பது. வெறும் கைகளால் கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையாள்வது, அவற்றில் இருக்கிற விலை உயர்ந்த உலோகங்களை அமிலத்தை பயன்படுத்தி பிரிப்பது போன்ற ஆபத்தான பணிகளில் இவை கையாளப்படுகின்றன. பயன்படுத்தக்கூடிய விலைகிடைக்கக்கூடிய பொருட்களை பிரித்தெடுத்தவுடன் மீதியை குப்பையில் கொட்டப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த சர்க்யூட் போர்டுகளை போட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கின்றனர். இதுதான் தமிழகம் முழுக்கவே தற்போதைய காய்லாங்கடைகளின் மறுசுழற்சி முறை! இவைதான் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்க கூடியதாகவும் உள்ளன. இந்த மின்கழிவுகளை கையாள்பவர்களுக்கும் மட்டுமல்லாது நமக்கும் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.

பாதிப்பு என்ன?

நம் உடல்நலத்தையும் இவை விட்டுவைப்பதில்லை. ட்யூப்லைட்டுகளில் இருக்கிற பாதரசம் நம் கல்லீரலையே பாதிக்கும் வலிமை கொண்டவை. பிரிண்டர் இங்குகளிலும் டோனர்களிலும் பயன்படுத்தப்படும் கேட்மியம் நம்முடைய கிட்னியை நேரடியாக பாதிக்கும் சக்தி கொண்டவை. மின்கழிவுகளில் பரவலாக காணப்படும் நஞ்சான பெரிலியம் நம்முடைய நுழையீரலை பாதிக்கச்செய்து புற்றுநோயை உண்டாக்குமாம்! இவையெல்லாம் உதாரணங்கள்தான்.

இந்த நச்சுப்பொருட்கள் நம்முடைய டிஎன்ஏவை கூட பாதிப்படைய செய்யும் வலிமை கொண்டவை என எச்சரிக்கின்றனர் மருத்துவநிபுணர்கள். நம் அண்டைநாடான சீனாதான் மிகமோசமான முறைகளில் (இந்தியாவை விடவும் மோசம்!) கையாளுகிறது. திறந்த வெளியில் சர்க்யூட் போர்டுகளை எரிப்பது தொடங்கி ஆபத்தான பாதரசத்தினை மண்ணில் கலப்பது மாதிரியான வேலைகளை சிரத்தையாக செய்துவருகின்றனர்.

சீனாவின் ஜேஜியங் பல்கலைகழகம் நடத்திய ஆய்வறிக்கையின் படி தவறான முறைகளில் கையாளப்படும் மின்கழிவுகளால் காற்று மாசடைகிறது, அதனை சுவாசிக்கும் மக்களுக்கு டிஎன்ஏ பாதிப்பும், கேன்சரும் உண்டாவதை கண்டறிந்துள்ளனர்.

மின்கழிவினை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. அவற்றினை குழிதோண்டி புதைத்தால் மழைகாலங்களில் நீரோடு கலந்து நிலத்தடி நீரை நாசமாக்கி நஞ்சாக்குகிறது. எரிக்கவும் முடியாது.. புதைக்கவும் இயலாது.. இந்த நச்சினை என்னதான் செய்வது?

மறுசுழற்சி

இப்பிரச்சனைக்கு தற்போது முன்வைக்கப்படும் மிகமுக்கியமான தீர்வு ரீசைக்கிளிங் எனப்படும் மறுசுழற்சி முறை. நாம் பயன்படுத்தும் கணினியில் இருக்கிற மைக்ரோ பிராசசர் தொடங்கி மொபைல் போன் வரைக்கும் எல்லா பொருட்களும் மறுசுழற்சிக்கு ஏற்றவைதான். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும் அதோடு, நம் கனிம வளங்களும் காக்கப்படும்.

நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்களில் 90சதவீதம் முழுமையாக மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகிக்க கூடியவைதான். ஆனால் இந்தியாவில் கொட்டப்படும் நான்கு லட்சம் டன் மின்கழிவில் வெறும் நான்கு சதவீதம்தான் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களிடம் செல்கிறது. மீதமுள்ள அனைத்தும் தவறானவர்களின் கைகளில் சிக்கி நிலத்தையும்,நீரையும்,நம்மையும் மாசடையசெய்கின்றன! அல்லது மக்காத குப்பையாக மண்ணில் கொட்டப்படுகின்றன.

சென்னையில் மட்டுமே 18 மறுசுழற்சி மையங்கள் இயங்கிவருகின்றன. ஆனால் அவை போதிய மின்கழிவுகள் கிடைக்காமல் ஏனோதானோ என்றுதான் இயங்குகின்றன. ‘’மறுசுழற்சிக்கு ஒரளவு செலவாகும்... ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியிருக்கும்.. அதனால் நாம் பழைய மின்கழிவுகளை பெற அதிக பணம் தர இயலாது. ஆனால் அங்கீகாரம் பெறாத ஆட்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதால் அதிக விலை கொடுத்து இதை பெறுகின்றனர்! பெரிய ஐடி நிறுவனங்களும் அதிகமாக விலைகொடுப்பவருக்கே தங்களுடைய பொருட்களை கொடுப்பதால்.. எங்களால் திறம்பட எதையும் செய்ய முடிவதில்லை. இது கட்டுபடுத்தப்படவேண்டும்’’ என வருத்தத்தோடு கூறுகிறார் குளோபல் ரீசைக்கிளிங் நிறுவனத்தின் மலர்மன்னன்.

என்னதான் தீர்வு?


மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களிடம் நம்முடைய மின்கழிவுகள் சேரவேண்டும். இந்த மின்கழிவுகள் மிகச்சரியாக சுற்றுசூழலுக்கு ஆபத்தில்லாத வகையில் மறுசுழற்சி செய்யப்படவேண்டும். அதோடு அந்த விபரங்கள் அனைத்தும் ஆண்டுதோறும் அரசால் ஆடிட் செய்யபடவேண்டியதும் அவசியம்.

‘’எங்களிடம் கிடைக்கிற இந்த மின்கழிவுகளை ஆறு கட்டங்களாக மறுசுழற்சி செய்கிறோம். முதலில் வகைபடுத்துதல், அவற்றில் பயன்தரும் பொருட்களை பிரித்தெடுத்தல், நச்சுதன்மை உள்ளவற்றை இனங்காணுதல், பாகங்களை பிரிப்பது, அவற்றை விதிமுறைகளின் படி மறுசுழற்சிசெய்வது என இவை நடக்கிறது,’’ என்கிறார் மலர்மன்னன்.

2005ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் கூட ஈவேஸ்ட் குறித்த போதிய அக்கறையில்லாமல்தான் இருந்துள்ளனர். ஆனால் பல சுற்றுசூழல் அமைப்புகளின் முயற்சியால்தான் இப்படியொரு மாபெரும் ஆபத்து இருப்பதை உலகம் உணரத்தொடங்கியது. அப்போதிருந்து தொடர்ச்சியாக உலக நாடுகள் இதற்கென பிரத்யேக வழிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. இந்தியாவும் தன் பங்குக்கு சட்டமியற்றி மின்கழிவுகளையும் அது தவறான கைகளில் சிக்குவதையும் கட்டுப்படுத்துகின்றன. உற்பத்தியாளர்கள், நுகர்வோர், மறுசுழற்சியாளர்கள் என ஒவ்வொருவருக்குமான பொறுப்புகளை 2011ல் சட்டங்களாக இந்தியா அறிவித்தது. இவை கடந்த மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

உற்பத்தியாளர்களுக்கு கிடுக்கிபிடி!


மின்னணு கழிவுகளை கையாளுதல் சட்டம் 2011ன் படி எக்ஸ்டென்டன்ட் புரொடியூசர் ரெஸ்பான்சிபிலிட்டி என்னும் வழிமுறையை அறிவுறுத்துகிறது. அதாவது உற்பத்தியாளரே அவர்களால் சுற்றுசூழலில் உருவாகும் மின்கழிவுக்கான பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கென மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தில் பல்வேறு மறுசுழற்சியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்கியுள்ளது. அவர்களிடம் மட்டுமே உற்பத்தியாளர்கள் தங்களுடைய மின்கழிவுகளை அளித்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது.

ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் தங்களுடைய பொருட்களுக்கான குப்பைகளை பெற கலெக்சன் சென்டர்களை உருவாக்கவும் அது வலியுறுத்துகிறது. இதையடுத்து டெல்,சாம்சங்,எச்பி மாதிரியான பெரிய நிறுவனங்கள் இதனை செயல்படுத்த தொடங்கியுள்ளது நல்ல தொடக்கமாக உள்ளது. டெல் நிறுவனம் தங்களுடைய லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் ஐயான் பேட்டரிகளை பெற்றுக்கொண்டு புதியபேட்டரிகள் வாங்கும்போது ரூ.500வரை டிஸ்கவ்ன்ட் வழங்குகிறது.

நோக்கியா நிறுவனம் நாடுமுழுக்க 1500 இடங்களில் தங்களுடைய பழைய செல்போன்களை பெறும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. எச்பி நிறுவனம் உபயோகித்த கேட்ரிஜ்களை வாங்கி மறுசுழற்சி செய்து புதிய கேட்ரிஜ்களை விற்கிறது.

‘’பெரிய நிறுவனங்கள் இவற்றையெல்லாம் செய்தாலும், திரும்பப்பெறப்படும் மின்கழிவுகள் முறையான வழிகளில் மறுசுழற்சிக்கு செல்கிறதா என்பதையும் அரசு கண்காணிக்க முன்வரவேண்டும்’’ என்கிறார் சுற்றுசூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன்.

தேவை விழிப்புணர்வு


‘’சென்னையில் மட்டுமே பல ஆயிரம் டன் அளவுக்கு மின்கழிவுகளை குவிக்கிறோம். மின்கழிவுகளில் உள்ள நச்சுப்பொருட்கள், அதானல் நமக்கும் சுற்றுசூழலுக்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்து நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை குழந்தைகளிடம் இதுகுறித்து பேசவேண்டும்.மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இதைப்பற்றி போதிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்’’ என்கிறார் டாக்ஸிக் லின்க் அமைப்பின் அருண் செந்தில்ராம்.

அவர் மேலும் பேசும்போது ‘’இன்று உங்களுக்கு ஈவேஸ்ட் குறித்து தெரிந்தாலும் கூட உங்களால் மறுசுழற்சியாளர்களை கண்டுபிடிக்க இயலாது, இந்த விஷயத்தை அரசினால் மட்டுமே சரிசெய்ய முடியும். மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு உள்ளூர் நிர்வாகத்தின் உதவியோடு திரட்டு மையங்களை அமைத்தல் வேண்டும். அப்போதுதான் சரியான மறுசுழற்சியாளர்களிடம் நம்முடைய ஈவேஸ்ட் போய்ச்சேரும்’’ என்கிறார்.

உற்பத்தியாளர்களை மட்டுமே குற்றம் சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது, அரசு மற்றும் நுகர்வோரின் பங்கும் இதில் உண்டு. அதை உணர்ந்து பொதுவான புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த விஷயத்தை அணுக வேண்டும்.

கர்நாடகா ஏற்கனவே விழித்துக்கொண்டுவிட்டது. மங்களூருவில் வீட்டுக்கு வீடு மின்கழிவுகளை பெறும் வசதியை அரசே ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் தொடர்ந்து இதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. பெறப்பட்ட குப்பைகள் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு மறுசுழற்சிக்கு செல்கின்றன. அரசு இதுமாதிரி முன்மாதிரி திட்டங்களை நாடுமுழுக்க செயல்படுத்த முன்வரவேண்டும். அதோடு வாங்கும் பழைய பொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம்செய்தால் நிச்சயமாக மின்கழிவுகளை மக்கள் தாங்களாக முன்வந்து தருவார்கள் என்பது உறுதி. அதோடு நாமும் காசிருக்குதே என்கிற அலட்சியத்தோடு எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக்குவிப்பதையும் குறைத்துக்கொண்டால் இனி எல்லாம் மாறும்!

*****************************


துணுக்குகள்

ஈகோ ஏடிஎம்!




சென்ற மாதம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கண்காட்சியில் ஈகோ ஏடிஎம் (ECO ATM) என்னும் இயந்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த இயந்திரம் பழைய எலக்ட்ரானிக் பொருட்களை பெற்றுக்கொண்டு பணம் தரும் ஏடிஎம் மெஷின் போல இயங்கும். தேவையற்ற செல்போன்கள், ஐபாட், ஐபேட், எம்பி3 பிளேயர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இதில் போடவேண்டும். அதற்கான டிரேயில் முதலில் பொருளை வைக்க வேண்டும். சில வினாடிகளில் அதை கருவி உள்ளிழுத்துக் கொள்கிறது. அதை பல கோணங்களில் ஸ்கேன் செய்து தரத்தை மதிப்பிடுகிறது. அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தகவல் திரையில் மின்னுகிறது. தொகை நமக்கு ஓகே என்றால் அதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனே பணம் வெளியே வரும். தொகை கட்டுபடி ஆகாவிட்டால் கேன்சல் என அழுத்த வேண்டும். பொருள் வெளியே வந்துவிடும். பில் போவெல் என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்துள்ளார். கணிசமான பழைய பொருட்கள் சேர்ந்த பிறகு, அவை அகற்றப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அந்த பொருட்களில் இருந்து பிளாஸ்டிக், உலோகங்கள் என தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும். ரொம்ப நல்ல ஐடியா இல்லையா?



105நாடுகளின் குப்பைத்தொட்டி!

நம்மூர் குப்பைகளையே சமாளிக்க திணறும் அதே வேளையில் வளர்ந்த நாடுகளின் மெகாசைஸ் குப்பைத்தொட்டியாகவும் இந்தியா இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமாக இருந்தாலும் உண்மை! கிட்டத்தட்ட 105 நாடுகளின் குப்பைத்தொட்டியாக இந்தியா விளங்குகிறது. குஜாராத் அருகே உள்ள புரோபோ கோலா என்ற துறைமுகத்தில் தான் அதிகளவில் உலக நாடுகளின் விஷத்தன்மை கொண்ட கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன . 380,000 டன் எலக்ட்ரானிக் கழிவுப் பொருட்கள் 2007-ல் இந்தியாவில் கொட்டப்பட்டுள்ளன, இது 2012-ல் 800,000 டன்னாக அதிகரிக்கும் என கிரீன்பீஸ் இந்தியா என்ற அமைப்பு தெரிவிக்கிறது. ஏன் வெளிநாடுகள் இந்தியாவுக்குப் குப்பையை அனுப்ப வேண்டும்? ஒரு டன் குப்பையைச் சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய 12 ஆயிரம் ரூபாய் செலவாகும். கப்பலில் ஏற்றி இங்கே அனுப்பிவிட ஆகும் செலவு வெறும் 2800 ரூபாய்தான்!



நாம் செய்ய வேண்டியதென்ன?

*எப்பேர்ப்பட்ட அதிநவீன தொழில்நுட்பமே வந்தாலும் எந்த புதிய பொருளையும் வாங்குவதற்கு முன் அது நிச்சயமாக நமக்கு உபயோகம்தானா என்பதை நிறையவே யோசிக்கலாம்.
*முன்னெல்லாம் செகன்ட் ஹேன்ட் பொருட்கள் வாங்குவதும் விற்பதும் நடைமுறையில் இருந்தது, இன்று அதுமாதிரியான பழக்கம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. முடிந்தவரை உங்களிடமுள்ள பொருட்களை செகன்ட் ஹேன்டாக விற்க முயற்சிசெய்யலாம்.(விலை குறைவாக கிடைத்தாலும் அந்தப்பொருளின் ஆயுளை அது அதிகரிக்கும்)
*உங்களிடம் லேப்டாப்போ செல்ஃபோனோ பழைய டிவியோ இருக்கிறதென்றால் அதை யாருக்கும் விற்க மனமில்லையென்றால் அதை வாங்க வசதியில்லாத ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கலாம்.
*பழுதடைந்த பொருட்களை சரிசெய்ய முனையலாம். சரிசெய்யவே முடியாது என்னும் நிலையில் புதியவற்றைவாங்கலாம்.
*பழைய பொருட்களை எக்ஸ்சேஞ்ச் மாதிரியான திட்டங்களில் உற்பத்தியாளரிடமே கொடுத்து புதிய பொருட்களை வாங்கலாம்.
*மின்சாதனங்களை தவறியும் காய்லாங்கடைகளில் போடுவதை தவிர்க்கவும். அது தவறான ஆட்களின் கைகளில் சென்றடையும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.


நன்றி - புதியதலைமுறை

11 July 2012

ஈரோயிசம்!






சூப்பர் ஸ்டார் நடித்த வேலைக்காரன் படத்தில் ஈயும் ரஜினியும் வருகிற அந்தக்காட்சி தவிர்த்து அப்படத்தின் வேறெந்த காட்சியும் இப்போது நினைவில் இல்லை. அந்தப் படத்தை செல்வபுரம் சிவாலயா தியேட்டரில் பார்த்த நினைவு. அப்போது நான் ரொம்ப ரொம்ப குட்டிப்பையன். கிளாசிக்கான காட்சி அது.

ரஜினி ஒரு மாட்டு ஈ யை வைத்துக்கொண்டு விளையாடியிருப்பார். ஒரு கான்ப்ரன்ஸ் ஹாலில் ஒரு ஈயை விரட்டி விரட்டி சரத்பாபுவையும் பிற வில்லன்களையும் புரட்டி எடுப்பார். அதிலும் மொட்டை மண்டையனின் தலையில் மாட்டு ஈ அமர்ந்துவிட அதை அடிப்பதற்கு ரஜினி பாயும் காட்சியை மறக்கவே முடியாது. கடைசி வரைக்கும் ரஜினி கையில் அந்த ஈ சிக்கவே சிக்காது! ஒரு சூப்பர் ஸ்டார் ஈயிடம் தோற்றுப்போவார். அந்த ஈ ரஜினியின் மூக்கில் போய் அமர்ந்துகொள்ளும் அதை அடிக்க சரத்பாபு பாய்ந்து ரஜினி முகத்தில் குத்துவிடுவார். மறக்கவே முடியாத காட்சி அது.

அப்போது நீங்களும் குழந்தையாய் இருந்திருக்கலாம். அக்காட்சியை ரொம்பவே ரசித்திருக்கலாம். உங்களுக்கும் அது மறக்கமுடியாத காட்சியாக இருந்திருக்கும். நானெல்லாம் சீட்டிலிருந்து துள்ளிக்குதித்து சிரித்து மகிழ்ந்து ரசித்திருக்கிறேன். ரஜினி ஈயிடம் தோற்றாலும் பாம்பிடம் தோற்றாலும் கரப்பான் பூச்சியிடம் தோற்றாலும் ரசிக்க கூடியதாகவே இருக்கும்! ஒருவேளை அதே காட்சியில் ரஜினிக்கு பதிலாக வேறொரு நடிகர் இருந்திருந்தால் நம்மால் ரசித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

அதே காட்சிதான், அதே கான்ப்ரன்ஸ் ஹாலில் அதே ஈ! அதே மொட்டை மண்டையன். அவனை அடிக்கப்பாய்வது மட்டும் ரஜினி கிடையாது. வேறொரு நடிகர். ஆனால் அதே மகிழ்ச்சி. அதே கொண்டாட்டம். சேம் ஆராவாரம். அண்மையில் வெளியான நான் ஈ படத்தில் இதே காட்சி இடம்பெறுகிறது. ஒரே ஒரு வித்தியாசம்தான்.. அந்த படத்தில் ரஜினி ஹீரோ, இந்த படத்தில் ஈதான் ஹீரோ!

நம்முடைய ஹீரோக்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறார்கள். தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே அதி உத்தமனமாக இருந்த ஹீரோ, சுதந்திரத்துக்கு பிறகு லட்சிய வீரர்களாகி எம்ஜிஆர் காலத்தில் நாலு பேருக்கு நல்லது செய்கிற, நாட்டுக்காக போராடுகிற, தீயவர்களை புத்திமதி சொல்லி திருத்துகிறவனாக, மக்களை காக்கிற நீதிகாவலனாக இருந்திருக்கிறான்.

அதற்கு பிறகு ரஜினி கமல் காலத்தில் (எமர்ஜென்ஸி!) அவன் கோபக்கார இளைஞனாகவும், பழிவாங்குபவனாகவும் புரட்சியாளனாகவும் குடும்பத்தை நேசிக்கிறவனாக இருக்கிறான். உலகமயமாக்கல் உள்ளே நுழையத்தொடங்கிய தொன்னூறுகளின் ஹீரோ நேர்மையாக போராடி வெற்றிபெற தொடங்கினான்.

இது மங்காத்தா காலம். நாம வாழணும்னா எத்தனை பேர வேணாலும் கொல்லலாம், கொள்ளையடிக்கலாம், பித்தலாட்டம் பண்ணலாம், காதலித்த பெண்ணை ஏமாற்றலாம், குடித்துவிட்டு கற்பழிப்பதுகூட ஹீரோயிசம்தான்.. எல்லாமே ஹீரோயிசமாக மாறத்தொடங்கிவிட்டது. இந்த ஆன்ட்டி ஹீரோயிசம்தான் இப்போதைய டிரென்ட்! மக்களும் அதைத்தான் ரசிக்கிறார்கள். விசிலடிக்கிறார்கள் ரசிக்கிறார்கள். சுறா வேட்டைக்காரன் ராஜபாட்டை மாதிரியான எம்ஜிஆர் காலத்து ஹீரோயிசத்தை பின்னால் தட்டி பரணில் போட்டாகிவிட்டது!

அவர்களுக்கு தேவை எப்படியாவது வெற்றிபெறுகிற ஹீரோயிசம். அவன் நல்லவனாகவோ நாட்டை காப்பவனாகவோ புரட்சி வீரனாகவோ இருக்கத்தேவையில்லை, யாருக்கும் எந்த அறிவுரையும் சொல்லத்தேவையில்லை. அவனுக்கு அடையாளமோ குடும்பமோ கூட அவசியமில்லை. நூறு பேரை அடிக்க வேண்டும், கதறகதற கவர்ச்சி கன்னிகளோடு குத்தாட்டம் போடவேண்டும். அதன் பரிணாம வளர்ச்சியாகவே நான் ஈ படத்தினை பார்க்கிறேன். எனக்கு மனுஷனே வேணாம் ஒரு ஈ போதும் என நினைத்தாரோ என்னவோ ஒரு ஈயை ஈரோவாக்கியிருக்கிறார் தெலுங்கு பட இயக்குனர்லு எஸ்.எஸ்.ராஜமௌலிகாரு!

நான் ஈ படத்தில் ‘’ஒரு சுமால் ஈ’ படுபயங்கரமான திட்டம் போட்டு மாபெரும் பணக்கார ஹீரோவை கொல்லுகிறது. கோபம் கொண்டு சீறுகிறது. காதலியோடு ரொமான்ஸ் பண்ணுகிறது. விஜய் போல சிம்புவைப்போல வளைந்து வளைந்து நடனமாடுகிறது. ஒரு காட்சியில் ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்று காதலியோடு காப்பூசினோ குடிக்கிறது. காரில் சேஸிங் பண்ணி வில்லனை மிரட்டுகிறது. ஊசி முனையில் அதிரடி ஆக்சன் பண்ணுகிறது. காதலியை பிடித்து வைத்திருக்கும் வில்லனின் கால்களில் சரண் அடைந்து கொடுமைகளுக்கு ஆளாகிறது. தன்னையே இழந்து தியாகம் செய்கிறது. பஞ்ச் டயலாக் மட்டும்தான் கிடையாது.

இங்கே இருக்கிற தலதளபதி சிங்கிள்ஸ்டார் டவர் ஸ்டார்களின் அத்தனை சேஷ்டைகளையும் அச்சுபிசகாமல் செய்கிறது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தென்னாட்டு ஹீரோயிசங்களையும் ஒரு சுமால் ஈ காலி பண்ணுகிறது.

நாம் அடிக்கடி பார்த்து சலித்த பழைய கதையையே குட்டி குட்டி விலங்குகளை வைத்து அனிமேஷன் படங்களாக களமிறக்கும் வேலைகளை ஹாலிவுட்டில் பிக்சாரும் டிஸ்னியும் ஏற்கனவே வெற்றிகரமாக தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு முன்பாகவே எலியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட மௌஸ் ஹன்ட் மாதிரியான ஹிட்டுகளும் வெளியாகியுள்ளன. இதுமாதிரி படங்களில் ஹீரோ மிகப்பொடியனாக அன்டர்டாகாக (UNDERDOG) இருப்பான். பலமில்லாத ஹீரோ அழிக்க இயலாத பலம் கொண்ட வில்லனை தன்னுடைய பிரச்சனைகளை கனவினை போராடி வெல்கிறான் என்பதை ஆக்சன் காமெடி சென்டிமென்ட் கலந்து திரைக்கதை அமைத்து ஹேப்பி எவர் ஆஃப்டராக படம் முடியும்.

இந்த வகை அன்டர்டாக் அனிமேஷன் படங்களில் ராட்டடூயில் திரைப்படத்தினை நல்ல உதாரணமாக கூறலாம். சாக்கடையில் பிறந்துவளரும் ஒரு சிறிய எலி எப்படி பாரிஸ் நகரே போற்றும் ஒரு சமையல்காரனாக மாறுகிறது என்கிற கதையை செம ஜாலியாக படமாக்கியிருப்பார்கள். ரியோ என்னும் படத்தில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கூண்டுக்குள் வாழும் பறவை வெளியுலகிற்கு வந்து தன் எஜமானர்களையும் கடத்தப்படும் பறவைகளையும் வில்லன்களிடமிருந்து காப்பாற்றும்! அழிந்து போன உலகில் சின்ன ரோபோவின் தனிமையை சொன்ன வால்ஈ, ஆஸ்கார் விருது வாங்கிய ராங்கோ என்னும் அனிமேஷன் படத்தில் பச்சோந்திதான் ஹீரோ! கடைசியாக வெளியான பூனையார் புஸ் இன் பூட்ஸ் வரைக்கும் இதே பாணி படங்கள் வெளியாகி அதன் வெற்றிகளும் தொடர்கின்றன. இவையெல்லாம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன என்பதோடு பெரியவர்களையும் தியேட்டருக்கு இழுத்துவந்தன என்பதே மிக முக்கியம்.

இப்படிப்பட்ட படங்களுக்கான முயற்சிகள் இந்தியாவில் ஒன்றிரண்டு இருக்கலாம். இல்லாமலும் போகலாம். அண்மையில் தொலைகாட்சிகளில் குழந்தைகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘’சோட்டோ பீம்’’ தொடரை திரைப்படமாக வெளியிட்டது ஒரு நிறுவனம். டிவி அளவுக்கு வெள்ளத்திரையில் வரவேற்பில்லை. காரணம் படத்தினை பெரியவர்களால் ரசிக்கமுடியவில்லை என்பதே. தமிழில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே குழந்தைகளுக்கான படங்கள் குறைந்து போக இரண்டு காரணங்களை சொல்ல்லாம். ஒன்று குழந்தைகளுக்கு படம் பிடிக்காது, அல்லது பெரியவர்களால் அதை சகிக்க முடியாது!

இந்த இருவரையும் திருப்தி படுத்தும் வகையில் தமிழில் வெளியான படங்கள் மிககுறைவு. மைடியர் குட்டிச்சாத்தான் அந்தவகையில் முழுமையான படமாக கொள்ளலாம். எப்போது வெளியிடப்பட்டாலும் எத்தனை முறை வெளியிட்டாலும் சூப்பர் ஹிட் அடிக்கிற குழந்தைகள் படம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.

மிகச்சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான லிட்டில் ஜான் தமிழில் வெளியான இந்த வகை படங்களில் ஒரு சுமாரான முயற்சி. படத்தில் ஹீரோ ஜான் மந்திரவாதியின் சாபத்தினால் மிகமிக குட்டியாக மாறிவிடுவார். அவருக்காக சின்ன சைஸ் சட்டை, பேன்ட்,வீடுகளெல்லாம் செய்வார் படத்தின் நாயகி ஜோதிகா. அப்போதிருந்த மிக குறைந்தபட்ச கிராபிக்ஸ் உதவியோடு ஒரளவு நன்றாகவே செய்திருந்தாலும், சில காட்சிகள் க்யூட்டாக இருந்தாலும் ஏனோ குழந்தைகளுக்கான படமாக அது வரவில்லை என்றே நினைக்கிறேன். போலவே அது குழந்தைகளுக்கும் பிடிக்கவில்லை. படம் பார்த்த பெரியவர்களும் நிராகரித்தனர். பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டே ஓரளவு நன்றாக படமாக்கியிருப்பார்கள். ஆனால் அதற்கு பிறகு அதுமாதிரியான படங்கள் எதுவும் வரவேயில்லை. குழந்தைகளை பற்றி சிந்திக்கவும் ஆளில்லை. ராம நாரயணன் குட்டிப்பிசாசு என்கிற மகா மொக்கை படத்தை எடுத்ததே கடைசி.

இன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நன்றாகவே புஷ்டியாக வளர்ந்துவிட்டது. இல்லாத ஒன்றை உருவாக்கும் வல்லமை நமக்கு கைவந்திருக்கிறது. ஆனால் வெறும் தொழில்நுட்பம் மட்டுமே சினிமாவாகிவிடாது. அதற்கும் மேல் அது உங்களை காரணத்தோடு பிரமிக்க சிரிக்க அழ ஏதோ ஒரு உணர்வை கொடுக்க வேண்டும். சுவாரஸ்யமான கதை இருக்க வேண்டும். பிட்டு படத்தில் கூட நல்ல திரைக்கதை இருந்தால்தான் பார்க்கும் போது ஏதோ ஒரு உணர்வு உண்டாகும்! மொட்டை கெழவன் குட்டையில் விழுந்தது போல படமெடுத்தால்..!

அந்த வகையில் இந்த நான் ஈ, மைடியர் குட்டிச்சாத்தான் செய்த மேஜிக்கினை மீண்டும் செய்திருப்பதாகவே நினைக்கிறேன். ராஜாசின்னரோஜா,அபூர்வ சகோதரர்கள் படங்கள் போல சில காட்சி அனிமேஷன், சில காட்சி பபூன் வேஷங்களை காட்டி குழந்தைகளை ஈர்க்கவில்லை. படத்தின் 20வது நிமிடத்திலிருந்தே இப்படம் குழந்தைகளுக்கான படமாக மாறிவிடுகிறது. இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம்.. நமக்குள் இன்னமும் மிச்சமிருக்கிற குழந்தையை உசுப்பிவிடுகிற படம். ராஜமௌலி நம் வீட்டு குழந்தைகளை மகிழ்விக்க புதிய கதைகளை பெரிய திரையில் சொல்லும் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். இது தொடர வேண்டும்.