Pages

08 August 2012

தமிழகத்திற்கு தலைகுனிவு!






ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் 81 இந்திய வீரர்களில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரர் கூட கிடையாது.

தமிழக விளையாட்டுத்துறை தலைகுனிந்து முகத்தை மூடிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்கிறது. நம்மிடம் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பயிற்சியாளர்களுக்கும் குறைவில்லை. இருந்தும் விளையாட்டில் எப்போதும் நமக்கு கடைசி ரேங்க்தான்! மிகச்சிறிய மாநிலமான மணிப்பூர் கூட தன் பங்குக்கு 6 பேரை ஒலிம்பிக்கிற்கு அனுப்பியிருக்கிறது. நம் அருகாமை மாநிலமான கர்நாடகவிலிருந்து 9பேர் ஆந்திராவிலிருந்து 8பேர் என அசத்துகின்றனர். ஆனால் நாமோ ஒரே ஒரு வீரரை கூட இந்தியா சார்பாக அனுப்பவில்லை.

ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து ரெஞ்சித் மகேஸ்வரி,ருஷ்மி சக்ரவர்த்தி,ஸ்ரீஜேஸ் என மூன்று பேர் சென்று இருக்கிறார்களே என சிலர் கேட்கலாம்? அவர்களுக்கும் தமிழக விளையாட்டுத்துறைக்கும் தொடர்பே கிடையாது. ருஷ்மி சக்ரவர்த்தி ஆந்திராவை சேர்ந்தவர். ரெஞ்சித் மகேஸ்வரியும், ஹாக்கிவீரர் ஸ்ரீஜேஸும் கேரளாவை சேர்ந்தவர்கள். தற்போது ஐஓபி அணிக்காகவும் தென்னக ரயில்வேவுக்காகவும்தான் விளையாடுகிறார்கள். இதில் நாம் பெருமைப்பட்டு கொள்ளவும் காலரை உயர்த்திக்கொள்ளவும் என்ன இருக்கிறது.

தமிழ்நாடு எத்தனை சிறந்த ஹாக்கி வீரர்களை உருவாக்கியிருக்கிறது. மிகவும் பின்தங்கிய சூழலிலிருந்து வந்து நமக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று கொடுத்த பாஸ்கரனை யாரும் மறந்துவிட முடியுமா? ஆனால் இன்று நம்முடைய தமிழக ஹாக்கி சங்கம் பிளவு பட்டு அதிகார அரசியலில் பல இளம் வீரர்களின் திறமைகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சென்னையை ஐஎச்எஃப்பும் (IHF), மெஜாரிட்டி மாவட்டங்களை ஹாக்கி இந்தியாவும் கட்டுப்படுத்த, மாநில அளவில் போட்டிகள் குறைந்துவிட்டன. திறமையிருந்து விளையாடமுடியாமல் திண்டாடுகின்றனர் நம் இளம் வீரர்கள்.

சந்தோஷ்டிராபி கால்பந்து போட்டியில் தமிழக அணி இம்முறை பல வருடங்களுக்கு பிறகு ஃபைனல் வரை முன்னேறியுள்ளது. அந்த அணிக்கு பாராட்டுவிழா வேண்டாம்.. அட்லீஸ்ட் ஏதாவது பரிசுகள் கொடுக்கப்பட்டதா? ம்ஹூம்.. ஒன்றுமே கிடையாது. சென்னைக்கு ஒரு சங்கம், மாவட்டங்களுக்கு ஒரு சங்கம் என கால்பந்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள்.

வில்வித்தை சங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறதென்பதே யாருக்குமே தெரியாது. வில்வித்தைப்போட்டியில் காமன்வெல்த்தில் வெள்ளிவென்ற தமிழக வீரர் ஸ்ரீதர் போதிய ஆதரவு கிடைக்காமல் ராணுவ அணிக்காக விளையாடுகிறார். அவர் ஜெயித்தபின்தான் லட்சரூபாய் வழங்கியது வில்வித்தை சங்கம். துப்பாக்கி சுடுதலில் மற்ற மாநிலங்களெல்லாம் சிறந்த வீரர்களை உருவாக்கியும் அதற்கேற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியும் வருகிறது. ஆனால் நம்மிடமோ வளர்ச்சிக்கான சின்ன அசைவுகூட கிடையாது.

திறமையான குத்துச்சண்டை வீரர்கள் பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்திலிருந்து தேசிய அளவிலும், முருகன் மாதிரியான இளம் வீரர்கள் சர்வதேச அளவிலும் பதக்கங்களை குவித்தனர். நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த ஷிவ்தாபாவை காட்டிலும் தமிழகத்தின் முருகன் மிகச்சிறந்த வீரர். ஆனால் தமிழக பாக்ஸிங் சங்கத்தின் அரசியலில் அவருக்கு கிடைத்த பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. சென்ற வருடம் திறமையான பாக்ஸிங் வீராங்கனையான துளசியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானார் அப்போதைய பாக்ஸிங் சங்கதலைவர் கருணாகரன். அதைத்தொடர்ந்து இன்றுவரை அந்த சங்கத்தின் தலைவர் யார் என்பதே யாருக்கும் தெரியாது. தேசிய அளவில் சாதிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் நம் பாக்ஸிங் சாம்பியன்கள்.

தமிழக தடகள வீரர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. தமிழகத்தில் தடகள வீரனாக இருப்பதைகாட்டிலும் கொடுமையான விஷயம் எதுவுமே இருக்க முடியாது. என்ன சாதித்தாலும் உங்களுக்கு ஒரு இன்ச் அங்கீகாரம் கூட கிடைக்காது. 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் தற்போது செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். ஒரு ப்யூன் வேலையாவது கொடுங்க என்று கலெக்டர் அலுவலகத்தில் போய் மன்றாடியும் வேலை கிடைக்காமல் இறுதியில் இப்படி ஒரு முடிவு அவருக்கு நேர்ந்திருக்கிறது. மீடியா இதனை தேசிய அளவில் எடுத்துச்செல்ல இப்போதுதான் அவருக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது!

சில மாதங்களுக்கு முன் நீளம் தாண்டுதலில் ஆசிய இன்டோர் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்று திரும்பினார் தமிழகத்தின் இளம் வீரர் பிரேம்குமார். இவரும்கூட மிகவும் வறுமையான சூழலை வென்றே இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு சிறிய பாராட்டுவிழாவையோ பணமுடிப்போ கூட ஏற்பாடு செய்யவில்லை தமிழக தடகள சங்கம். அவருக்கு எந்தவொரு பரிசையும் தர முன்வரவில்லை தமிழக அரசு. சர்வதேச லெவலில் சாதிக்கிற தடகள வீரர்களை தட்டிக்கொடுத்து வளர்க்காமல் எங்கிருந்து நம்மால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர் வீராங்கனைகளை உருவாக்க இயலும்.
இப்படி ஒவ்வொரு வீரரும் வீராங்கனையும் சங்கங்களின் அரசியல், வறுமையான சூழல், பயிற்சிக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள பணத்துக்கும் போராடிதான் தேசிய அளவிலேயே
சாதிக்கும் நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது.

நிலைமை இப்படி இருக்க நம்முடைய விளையாட்டு மேம்பாட்டு கழகமான எஸ்டிஏடியும் பல நேரங்களில் அக்கறையின்மையோடு செயல்படுவதையே பார்க்க முடிகிறது. இதுவரை எந்த வீரருக்கும் அரசு அறிவிக்கிற பரிசு சரியான நேரத்திற்கு சென்று சேர்ந்த சரித்திரமே இல்லை.

விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைக்களுக்காகவும் பயணபடிக்காகவும் கடுமையாக போராடியே பெறவேண்டியிருக்கிறது. பிரேம்குமார் மாதிரியான ஒரு இளம் வீரர் சர்வதேச அளவில் பதக்கம் வென்று திரும்பும்போது முதலமைச்சரிடம் இவ்விஷயத்தை எடுத்து சென்று அவ்வீரனுக்கு வேண்டிய உதவிகளை பெற்றுத்தரவேண்டியதும் அவனுடைய பயிற்சிக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயார் செய்ய வேண்டிய கடமையும் சங்கத்திற்கு இருக்கிறதா இல்லையா?

நம் தமிழக பள்ளிகளில் விளையாட்டு என்பதே ஏதோ சிகரட் பிடித்தல், குடிப்பழக்கம் போல ஆகிவருகிறது. மதிப்பெண் பெறுவது மட்டுமே ஒரே குறிக்கோள் என மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர். இதையும் மீறி விளையாட்டில் சாதிக்க விரும்புகிற மாணவர்களுக்கு கூட கல்லூரியில் சீட்டு, ரயில்வேயில் வேலை, காவல்துறையில் வேலை என்கிற லட்சியத்தை மட்டுமே போதிக்கின்றனர். தேசிய அளவில் ஒரு பதக்கம் வாங்கினால் போதுமென விளையாடவும் பழக்கப்படுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு விளையாட்டு குறித்த ஆர்வத்தை உண்டாக்க வேண்டும், இதில் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகம். ஆனால் தமிழகத்தில் பல பள்ளிகளிலும் விளையாட்டுக்கென உரிய ஆசிரியர்கள் கிடையாது. பல பணியிடங்கள் காலியாய் கிடக்கின்றன.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதிருக்கட்டும், முதலில் தகுதி பெறுவதென்பதே லேசுபட்ட காரியமா? ஒரு வீரரின் திறமையும் அர்பணிப்பும் உழைப்பும் விடாமுயற்சியும் மட்டும் இதற்கு போதாது. அரசின் கவனமும் உதவியும் மிக மிக அவசியம். அதுதான் தமிழகத்தில் குதிரை கொம்பாக இருக்கிறது. நல்ல வேளை தீபிகா குமாரியும் சாய்னா நெக்வாலும் தமிழகத்தில் பிறக்கவில்லை..பிறந்திருந்தால் நிச்சயம் ஒலிம்பிக் வரைக்கும் சென்றிருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்!

சென்னையில் ஒரளவு நல்ல மைதானங்கள், பயிற்சியாளர்கள் என பல வசதிகளும் இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் விளையாட்டென்பது இன்னமும் எட்டாக்கனிதான். மாவட்டம் தோறும் மைதானங்கள் தேவை. குறைந்தபட்சம் இன்டோர் மைதானங்களாவது உரிய வசதிகளோடு போதிய உபகரணங்களோடு உடற்பயிற்சி கூடங்களுடன் ஏழைகளுக்கும் எட்டும்படி இருந்தால்தான், டேபிள் டென்னிஸ்,பேட்மின்டன்,வாலிபால்,ஹேன்ட்பால் மாதிரியான விளையாட்டுகளிலாவது சிறந்த வீர்ர்களை கண்டறியவும் ஊக்கம் கொடுத்து வளர்க்கவும் உதவும்.

உடனடியாக ஒவ்வொரு விளையாட்டுக்கும் இருக்கிற நம் சங்கங்களின் சங்கடங்களை சரிசெய்ய அரசு முன்வரவேண்டும். சில சங்கங்களோ ஆர்வமிருந்தும் போதிய நிதி உதவியின்றி கவலைக்கிடமாக கிடக்கின்றன. அவற்றை கண்டறிந்து உடனடியாக உதவ வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளை தொடர்ந்து நடத்தி ஜூனியர் லெவலிலேயே சிறந்த வீரர்களை கண்டறிந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கென இப்போதே பயிற்சியை தொடங்க வேண்டும்.

பயிற்சி சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும். அதற்கு தேவையான உபகரணங்களை வாங்கவும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தவும் இப்போதே திட்டமிட வேண்டும். வெளிநாட்டு பயிற்சியாளர்களை பயன்படுத்த வேண்டும். இதையெல்லாம் உடனடியாக செய்யவேண்டும். இல்லையென்றால் அடுத்த ஒலிம்பிக்கிற்கு மட்டுமல்ல அதற்கடுத்த ஒலிம்பிக்கிற்கும் தமிழகத்திலிருந்து ஒரு வீரர் கூட தேர்ந்தெடுக்கப்படாமல் போகலாம்!


(நன்றி - புதியதலைமுறை)

04 August 2012

சமரசம் உலாவும் இடம்...




தமிழ்சினிமாவில் குடிப்பழக்கமும் குடிகாரர்களும் எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. எம்ஜிஆர் சிவாஜி காலம் தொடங்கி சிம்பு தனுஷ் வரைக்கும் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு புதிய கதைகளை நமக்கு சொல்லியிருக்கிறது.

ஆரம்பகால திரைப்படங்களில் குடிகாரன் எப்போதுமே வில்லன்தான். அவன் போதையில் கொலை,கற்பழிப்பு,கொள்ளை முதலான தவறுகளை செய்கிறவனாக இருப்பான். பணக்கார குடிகாரன் VAT 69 குடிப்பான்.. சேரி வில்லன் சாராயம் குடிப்பான். ஒழுக்கம் என்பதன் அளவுகோல் குடிதான். குடிப்பவன் வில்லன், குடிக்காதவன் நாயகன். (எம்ஜிஆர் படங்களை விட இதற்கு நல்ல உதாரணம் தேவையில்லை)

இது காலப்போக்கில் மாறி ஒரு கட்டத்தில் நாயகனும் குடிக்கத்தொடங்குகிறான். அவன் மகிழ்ச்சிக்காக குடிப்பதில்லை.. தோல்வியால் குடிக்கிறான். குடித்தாலும் வில்லன் செய்கிற மாபாதகங்களை செய்வதில்லை.

நாயகன் குடிப்பழக்கத்தினால் சீரழிவான். அதோடு போதையினால் வில்லன் செய்த கொலைகளுக்காக மாட்டிக்கொள்வான். அவனுடைய குடும்பம் அழிந்துபோகும்.. இதுபோல கதற கதற கதை சொல்லும் கண்ணீர் காவியங்கள் தமிழில் அதிகம். சிவாஜிகணேசன் நடித்த சொர்க்கம், ஜெய்ஷங்கரின் குழந்தையும் தெயவமும் மாதிரியான பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். காதலில் அல்லது வாழ்க்கையில் தோல்வியடையும் நாயகர்கள் குடித்து குடித்து குடல் வெந்து செத்துப்போவதாகவும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன (உதா – தேவதாஸ்,வசந்தமாளிகை,வாழ்வேமாயம்). அல்லது கிளைமாக்ஸில் குடிகார ஹீரோ திருந்தி உத்தமனாக குடிக்காதவனாக மாறிவிடுவான்.. சுபம்.

90களின் இறுதிவரைக்கும் கூட நிலைமை இப்படித்தான். குடிப்பழக்கம் என்பது வில்லன்களுக்கு பூஸ்டாகவும், நாயகர்களுக்கு தோல்விகால மருந்தாகவும் மட்டுமே இருந்திருக்கிறது.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். மதுர,சிவா மனசுல சக்தி,பருத்திவீரன்,பாபா தொடங்கி சகுனி வரைக்கும் டாஸ்மாக் பார்களில்தான் நாயகனின் பெரும்பாலான காட்சிகள் அரங்கேறுகின்றன. விவேக் தொடங்கி சந்தானம் வரைக்கும் குடியின்றி காமெடி செய்வதில்லை. நாயகன் குடித்துவிட்டு குத்தாட்டம் போடாத திரைப்படங்களே வெளியாவதில்லை. குடிப்பழக்கம் நாயக அந்தஸ்தை வழங்குகிற ஒரு விஷயமாகவும் மாறிவிட்டது. சிகரட் எப்படி ஆண்மையின் அடையாளமாக ஒரு காலத்தில் கருதப்பட்டதோ இன்று தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதே அந்தஸ்தை பெற்றுள்ளது. போதையிலிருப்பவனே பிஸ்தா!

இன்றைய திரைப்பட குடியர்களில் நல்லவன் கெட்டவன் என்கிற பாகுபாடு கிடையாது. வில்லனும் குடிப்பான், நாயகனும் குடிப்பான், காமெடியனும் குடிப்பான். டாஸ்மாக்கில் காதலை சொல்லி, அதிநவீன பாரில் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சினிமாவில் குடிப்பழக்கம் முன்னேறி வந்திருக்கிறது. ஏழை பணக்காரன் என்கிற வர்க்க பேதங்களற்ற மெய்யான சமரசம் உலவும் இடங்களாகவும் அவை மாறிவிட்டன. நம் திரைப்படங்களும் தொடர்ந்து குடியை ஒரு கொண்டாட்டமாக முன்னிறுத்துகின்றன. குடித்துவிட்டு போதையில் ஆடுவதை தொடர்ந்து காட்சிப்படுத்துகின்றன. ‘’மச்சி கைல கிளாஸ் எட்த்துக்கோ இன்னொரு கைல ஸ்நாக்ஸ் எட்த்துக்கோ’’ என்று நம் வீட்டு குழந்தைகள் பாடுவதை ரசிக்கிறோம். பெருமையோடு உச்சிகுளிர்கிறோம்!

கடந்த பத்தாண்டுகளில்தான் இத்தகைய மாற்றத்தை நம்மால் சினிமாவில் மட்டுமல்ல சமூகத்திலும் அவதானிக்க இயலும். இதற்கு பல அரசியல் காரணங்களும் சமூக பொருளாதார வியாக்யானங்களும் தரப்படுகின்றன. அரசுகூட பின்விளைவுகளை பற்றி கவலையின்றி மகிழ்ச்சியோடு உற்சாகமாக சாராயம் விற்கிறது. நாமும் டாஸ்மாக் லீவு விட்டாலும் கள்ளச்சந்தையில் அதிக விலைகொடுத்தாவது வாங்கி வாங்கி வயிறுமுட்ட குடிக்கவும் தொடங்கியுள்ளோம்.

****



தமிழில் சமகால அரசியலை கட்சி பாகுபாடின்றி விமர்சிக்கிற அல்லது அவற்றை பட்டவர்த்தனமாக பிரதிபலிக்கிற படங்கள் மிகமிக குறைவு. அப்படி எதுவும் வந்திருப்பதாகவும் தெரியவில்லை. (ஒன்றிரண்டு இருக்கலாம். நான் பார்த்ததில்லை) அவ்வகையில் மதுபானக்கடை திரைப்படம் மிக முக்கியமானதாக இருக்கிறது. இது தமிழில் இதுவரை காட்சிப்படுத்திய ஒட்டுமொத்த குடியர்களையும் அக்கலாச்சாரத்தையும் புரட்டிப்போடுகிறது. இப்படத்தில் குடியர்கள் வில்லனுமில்லை ஹீரோவுமில்லை..

ஆவணப்படம் போல நிச்சயம் இப்படம் ‘ரா’ வாக இல்லை. குடிகார சமூகத்தின் கொடுமைகளை தோலுரிக்கிறேன் பேர்வழி என ‘காட்’ ஆன அட்வைஸ் மழைகளும் கிடையாது. குடியால் குடும்பங்கள் பெண்கள் படும் வேதனை என மெகாசீரியல்களை போல கண்ணீரும் விடவில்லை. கம்பிமேல் நடப்பதை போன்றது இதுமாதிரி படமெடுப்பது. கொஞ்சம் தவறினாலும் படம் குடிப்பழக்கத்தை கொண்டாடுகிற படமாகவோ அல்லது குடிப்பழக்கம் கொடிய விஷம்.. என்னும் நியூஸ் ரீல் படமாகவும் ஆகிவிடும்! ஆனால் மிக சாமர்த்தியமாக மைல்டாக அதை கடந்துசென்றிருக்கிறார் படத்தின் இயக்குனர் கமலகண்ணன்.

டாஸ்மாக் கடையின் 24மணிநேரம்.. அவ்வளவுதான். ஒட்டுமொத்த படமும். டாஸ்மாக் பார் ஒன்றிலிருந்தே தொடங்கி அங்கேயே முடிகிறது. நம் காதுகளில் தினமும் வந்துவிழுகிற வாக்கியங்களே வசனங்கள்! நாம் அன்றாடம் சந்திக்கிற விதவிதமான குடிகாரர்களே பாத்திரங்கள். இவ்வளவுதான் மதுபானக்கடை திரைப்படம்!

நாள் முடிந்து, பொட்டியை கட்டும் ஒரு டாஸ்மாக் பாரின் இறுதி நிமிடங்களிலிருந்து படம் தொடங்குகிறது. கடைய மூடணும் வெளியே போங்க என பாரில் தண்ணி அடிப்பவர்களிடம் கெஞ்சுகிறார் பார் ஓனர்.. மறுக்கிறார்கள்... மிரட்டுகிறார்... மறுக்கிறார்கள்... ஒருகட்டத்தில் எங்களுக்கு குடிக்க உரிமையில்லையா.. என்று கேட்டு ஓவரான போதையிலேயே பாட்டு பாடி போராடி ஓய்ந்து போரடித்து கிளம்புகிறார்கள். மாபெரும் குப்பைத்தொட்டியை போல் காட்சியளிக்கும் டாஸ்மாக் பாரினை சுத்தப்படுத்துவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. (கதை என்று ஏதாவதிருந்தால் அது உங்கள் கற்பனையே என டைட்டில் கார்டு வேறு போடுகிறார்கள்! அது உண்மைதான்)

டாஸ்மாக் பார்கள் திறப்பதற்கு முன்பாகவே கைநடுக்கத்தோடு காத்திருக்கும் பிரபல குடிகாரர். வேலைக்கு போகும் முன் குடித்துவிட்டு செல்லும் கூலிக்காரர்கள்,துப்புரவு தொழிலாளர்கள். பிச்சை எடுத்தாவது குடிக்கும் படித்த இளைஞன். பாருக்கு வருகிறவர்களிடம் ஓசியில் வாங்கி குடிக்கும் பாட்டுக்காரன். தன் நிலத்தை விற்று அந்தகாசிலேயே குடித்து பைத்தியமாகி குப்பை பொறுக்கும் பைத்தியக்காரன். பார் நடத்தும் முதலாளி, பாரில் வேலை பார்க்கும் பையன்கள், டாஸ்மாக்கில் வேலைபார்க்கும் ஆள், மாமூல் வசூலிக்கும் போலீஸ்காரர், காதல் தோல்வியில் முதல் முறை குடிக்கும் இளைஞன், முதல் முறை பீர் குடிக்கும் பள்ளிசிறுவர்கள், அதே பள்ளியின் குடிகார ஆசிரியர், ராமர் அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுத்து குடிக்கும் இளைஞர்கள், பார் பையன்களிடம் வீரம் காட்டும் சாதிசங்கத்தின் முரட்டு ஆள், ஆலை தொழிலாளர்கள் என ஏகப்பட்ட கேரக்டர்கள் படம் நெடுக..

இவர்கள் அத்தனை பேருக்கும் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அவர்கள் மதுபானக்கடைக்கு வருவதற்கும் குடிப்பதற்கும் ஒரு காரணமிருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக போகாமால் மதுபானக்கடையின் உள்ளே மட்டுமே கதை நகர்கிறது. பாத்திரங்கள் வருகின்றன.. குடிக்கின்றன.. வெளியேறுகின்றன. இத்தனை பாத்திரங்களும் குடிப்பதற்கு முன்பும் பின்பும்.. இந்த இடைப்பட்ட காலத்தின் சுவாரஸ்ய மணித்துளிகள்தான் மதுபானக்கடை! சரியாக 24மணிநேரம் முடிந்ததும் படமும் முடிந்துவிடுகிறது.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாதியங்கள், உடல்மொழி, பேச்சு என பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர். படம் முடிந்த பிறகு இந்தாளு நிச்சயம் மொடாக்குடிகாரனாத்தான்யா இருக்கணும் என்கிற எண்ணம் தோன்றிது. ஆனால் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு குடிப்பழக்கமே கிடையாதாம்!

தமிழ்சினிமாவில் இதுமாதிரியான படங்களில் இது முதல் முயற்சி என்றே சொல்லலாம். நான்லீனியர் தன்மையோடு படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பறவைப்பார்வையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிக்கலாச்சாரத்தையும் , அதன் பின்னிருக்கும் அரசியலையும், ஒவ்வொரு குடிகாரனின் ஏக்கத்தினையும், அவனுடைய வேதனை, மகிழ்ச்சி, இன்ப துன்பங்களையும் சொல்லிவிடுகிற முயற்சியாக இப்படத்தினை அணுகலாம். இப்படத்தில் வருகிற பலரையும் நாம் தினமும் சந்தித்திருப்போம்.. அல்லது அது நாமாகவே கூட இருப்போம். அதுதான் இப்படத்தின் வெற்றி! இப்படம் எந்த பிரச்சனையையும் முன்வைக்கவில்லை. எந்த தீர்வையும் நமக்கு சுட்டிக்காட்டவில்லை. இன்றைய தமிழகத்தை உள்ளது உள்ளபடி குறுக்குவெட்டாக நமக்கு காட்டுகிறது! தட்ஸ் ஆல்!

ஒரு திரைப்படம் கோருகிற எந்த அடிப்படை சமாச்சாரங்களும் இப்படத்தில் கிடையாது. தான் செய்ய நினைத்த அனைத்தையும் முழுமையான சுதந்திரத்தோடு எந்த சமரசமும் இல்லாமல் செய்துபார்த்திருக்கிறார் இயக்குனர். படம் நெடுக செல்லும் ஒரு பதட்டம் கிளைமாக்ஸில் மாபெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்க வேண்டும். ஆனால் எதுவுமேயில்லாமல் எல்லா நாளினைப்போலவும் கிளைமாக்ஸும் பரபரப்பின்றி அமைதியாக முடிகிறது. அதுதான் இப்படத்திற்கு ஒருவித கல்ட் தன்மையை கொடுப்பதாக உணர்கிறேன்.

படத்தில் நடித்திருக்கும் அத்தனை புதுமுகங்களும் தங்களுக்கு தரப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருப்பதாகவே உணர்கிறேன். அதிலும் பெட்டிஷன் மணியாக வருகிற நடிகர்.. பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தின் நவரச நாயகன் அவர்தான். கவர்ந்தவர்களில் இன்னொரு ஆள் பாட்டு பாடி ஓசியில் குடிக்கும் வெள்ளைத்தலை தாத்தா.. படம் 7டி கேமராவில் படமாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அந்த உணர்வேயில்லை. கேமரா ஆங்கிள்களில் தொடங்கி, ஆர்ட் டைரக்சன், எடிட்டிங், இசை என எல்லாமே தரமாகவே இருக்கிறது. இத்திரைப்படம் ஒரு பாராட்டப்பட வேண்டிய அல்லது கொண்டாடப்பட வேண்டிய முயற்சி என்பதில் மாற்றுகருத்தில்லை.

ஆனால் எனக்கும் என்னோடு படம் பார்த்த இன்னும் சில நண்பர்களுக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்த இப்படம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. பெரும்பாலானோருக்கு பிடிக்காமல் போகவே வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக பெண்களால் இப்படத்தை எள் அளவும் ரசிக்க இயலாது. குழந்தைகளுக்கு இப்படத்தை காட்டவே கூடாது.

நம் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் நாம் எப்போதும் மதுவுக்கு எதிரானவர்களாக இருந்ததேயில்லை. மது தமிழர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்திருக்கிறது. மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை. இன்று அதையெல்லாம் செய்கிறது நம் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடைகள்.. மதுபானக்கடை திரைப்படம் பேசுகிற உணர்த்த விரும்புகிற விஷயமும் இதுதான்!

02 August 2012

குடிபொலி!





நம் நண்பர்களில் சிலர் ‘’பாஸ் நான்லாம் எப்பயாச்சும்தான் குடிப்பேன்.. அதுவும் ஃப்ரண்ட்சோட மட்டும்தான்.. அப்பகூட லைட்டாதான் சாப்பிடுவேன்’’ என பீத்திக்கொள்வதை பார்த்திருக்கலாம். அதை சொல்லி முடித்த அடுத்த நிமிடம் குவாட்டர் ஆஃப் ஃபுல் என பாட்டில் பாட்டிலாக உள்ளே தள்ளுவதையும் ஓசி குடி குடிப்பத்தையும் பார்த்திருப்போம். நொந்திருப்போம். இன்னும் சிலர் வேறுமாதிரி ‘’ஐ ஒன்லி டேக் பீர்டா, ஆக்சுவலி பீர் ஈஸ் நத்திங் பட் கூல்ட்ரிங்ஸ்னா' ‘ என்று ஷேக்ஸ்பியர் போல பீட்டர் விட்டு, ஓசியிலேயே பீர் வுட்டு அடுத்த நொடி மட்டையாவதையும் பார்த்திருக்கலாம்.

குடிப்பழக்கத்தை விடவும் குடிப்பதற்கு காரணம் சொல்லும் பழக்கம் நம் தாய்த்தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. இது ஒரு கொடிய நோயைப்போலவும் மாறிவருகிறது. இந்த காரணகர்த்தாக்கள் அவர்களுடைய காசில் குடிப்பதற்கு ஆயிரம் காரணங்களையும் ஓசிகுடி குடிக்க ஒராயிரம் காரணங்களையும் எப்போதும் மனபாட்டிலுக்குள் மிக்ஸிங் போட்டுக்கொண்டே அலைகின்றனர். இதுமாதிரி காரணங்கள் யாரை திருப்திப்படுத்த சொல்லபடுகிறது என்பதில் எனக்கு அநேக சந்தேகங்களுண்டு.

''தினமும் ஒரு பெக் ஓட்கா குடிக்கறது உடம்புக்கு நல்லது'' , ‘’விஸ்கி குடிக்கறது விரலுக்கு நல்லது’’ என்று அறிவியல் பூர்வமாக குடிப்பதற்கான விளக்கத்தினை தருபவர்களும் உண்டு. இந்த விஞ்ஞானிகளுக்கு மாலை ஆறுமணியாகிவிட்டால் குடித்தே ஆகவேண்டும் இல்லையென்றால் நடுக்கம் நரம்பு தளர்ச்சியெல்லாம் வந்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கும். இருந்தும் ஊருக்குள் பெரியமனுஷனாக உலாவருவதால் அந்த கெத்தை மெயின்டெயின் பண்ண உடல்நலத்துக்காக குடிக்கிறேன் என சொல்லிக்கொண்டு திரிவதை பார்க்கலாம்.

அண்மையில் மதுரையின் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வகுப்பறையிலிருந்து பெஞ்சை திருடிக்கொண்டு போய் விற்று அந்தக்காசில் குடித்து மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த செய்தி உங்களுக்கு சிரிப்பை வரவழைத்தால் நிச்சயம் உங்களுக்குள் வெட்டி பெருமைக்கு குடிக்கிற குடிகாரன் ஒருவன் மறைந்திருப்பான். இதே செய்தி கோபத்தை உண்டாக்கினால் உங்களுக்கு உள்ளேயும் ஒரு காந்தி தாத்தா குடியிருக்கலாம். அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்! ஜெய் ஹிந்த்.

இந்த பையன்களிடம் போய் ஏன் குடிக்கிறாய் என்று கேட்டால் அவனுடைய பதில் என்னவாய் இருக்கும்! போடங்.. என்று ஏதாவது பலான கெட்டவார்த்தையில் திட்டுவான். அதை வாங்கிக்கொண்டாலும் அவனிடமும் ஒரு காரணம் இருக்கும் என்பதை உணரவேண்டும். அது அவனுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அது தெரியாமலிருக்கும். ஆனால் நமக்கு தேவையில்லை. ஏற்கனவே இரண்டு பத்தி எழுதியாகிவிட்டது.

ஒரு குடிகாரனாகப்பட்டவன் எதற்காக குடிக்கிறோம் என்கிற தெளிவோடு குடிக்க வேண்டாமா! கைநடுக்கத்தினால் குடிப்பது, நண்பர்களுக்காக குடிப்பது, கொலை செய்வதற்காக குடிப்பது, கற்பழிப்பதற்காக குடிப்பது, கவிதை எழுதுவற்தகாக குடிப்பது, காதல் தோல்வியில் குடிப்பது, வெற்றியில் குடிப்பது, பொண்டாட்டி தொல்லையால் குடிப்பது, சம்பளம் வந்த்தெற்கெல்லாம் குடிப்பது என எத்தனை காரணங்கள். இப்படி குடிப்பவர்களிலரும் போதையில்லாத அதிக வாடையில்லாத பீர்,ஜின்,வோட்கா மாதிரி சமாச்சாரங்களை குடிப்பது என.. இதெல்லாம் குடிப்பழக்கத்திற்கே இழுக்கில்லையா? இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை பற்றி எழுதும்போதே கொலைவெறி வருகிறது. சைட் டிஷ் சாப்பிடுவதற்காகவெல்லாமா குடிப்பார்கள்.. என்ன கோராமை! கொடுமையிலும் கொடுமை. இதையெல்லாம் கேப்டனாவது தட்டிகேட்டிருக்கவேண்டும். ஏனோ கேட்கவில்லை. முதல்வரானபிறகாவது நீங்கள் கேட்க வேண்டும் கேப்டன்.

நாம் எதற்காக குடித்தாலும் என்ட் ஆஃப் தி டே போதை ஈஸ் த வின்னர் என்பார் கவிசாஸ்திரி என்கிற கவிஆர்டி ஷரண் சுந்தர்! அது உண்மைதானே..

சிலரோ நான்கு ஃபுல் அடித்தும் போதையே ஏறவில்லை என பெருமைபீத்தி கொள்வதை பார்க்கலாம். காரண குடிகாரர்களை விடவும் மோசமானவர்கள் இந்த பார்ட்டிகள். போதை ஏறவில்லையென்றால் அந்த நபர் குடிக்காமலேயே இருந்துவிடலாமே. அல்லது கஞ்சா அபின் மாதிரியான நார்காடிக்ஸ்களை முயற்சித்து சாகலாமே! (போலீஸ் பிடித்தால் நசுக்கிவிடுவார்கள் சட்டையை.. ஆமாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான்). கஞ்சா அபினிலும் போதை கிடைக்கவில்லையென்றால் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவுகள் நாலைந்தையாவது தினமும் படித்துவரலாமே. அதைவிட்டுவிட்டு ஏன் தொடர்ந்து போதை தராத சப்பையான ஒன்றை கட்டிக்கொண்டு மாறடிக்க வேண்டும் என்கிற தத்துவார்த்தமான கேள்வி ஏன் எந்த ஒரு குடிகாரரின் மனதிலும் எழுவதில்லை.

இதற்கு குடிக்காமயே இருந்துவிடலாமே? ஏன் குடிக்க வேண்டும். நான் கேட்கிறேன், உண்மையான குடிகாரன் யாரென்று தெரியுமா உங்களுக்கு.. நல்லா குட்ஸ்ட்டு நடுரோட்ல வாந்தியெடுத்துட்டு வாந்திமேலயே மட்டையாகுறானே அவன்தான் உண்மையான குடிகாரன். ஒரு குவாட்டரை வாங்கி சைட் டிஷ், வாட்டர் பாக்கெட், மிக்ஸிங் கூல் ட்ரிங் ஏன் பிளாஸ்டிக் கப்பு கூட இல்லாமல் ராவாக ஒரே கல்ப்பில் குடிக்கிறானே அவன்தான் உண்மையான குடிகாரன். காரணமேயில்லாமல் கடன்வாங்கியாவது காலங்காத்தால டாஸ்மாக் வாசல்ல நின்னு கோட்டர் வாங்கி குடிக்கறானே அவன்தான் உண்மையான குடிகாரன்.

சிக்கன் பீஸில்லாமல் குடிக்க மாட்டேன் என சீன் போடுகிறானே அவனா குடிகாரன்... ஆயா செத்துப்போச்சு அதனால் குடிக்கிறேன் என்கிறானே அவனா குடிகாரான்.. அல்லது ஏதாவது காரணம் சொல்லி ராயலாக பெருமைக்காக குடிப்பவனும் குடிகாரனா?

இவர்களால் உண்மைகுடிகாரர்களுக்கே இழுக்கு! ராணுவத்துல சேர்ந்தவன் பார்டர்ல எதிரியால சுடப்பட்டு செத்தாதான் மரியாதை.. குடிகாரன்னா குட்ச்சு குட்ச்சு குடல்வெந்து செத்தாதான் மரியாதை. கொடலு வேக குடிப்போம். குடும்பத்தை அழிப்போம். மீண்டும் ஜெய்ஹிந்த்.

****

உண்மையான குடிகாரர்களுக்காக மட்டும் இப்பாடல் சமர்ப்பணம். கோவை படைப்பாளிகள் எப்போதும் சோடை போவதில்லை. அவர்களுக்கென்றே ஒரு ஸ்டைலும் தனித்தன்மையும் இருக்கும். அது இப்பாடலில் நன்றாகவே தெரிகிறது. இன்று இப்பாடல் இடம்பெறும் மதுபானக்கடை திரைப்படம் ரிலீஸாகிறது. பார்த்துவிட்டு விமர்சனம் எழுதிகிறேன்.




****

பின்குறிப்பு – மாண்புமிகு புரட்சிதலைவி அவர்கள் விரைவில் மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாக வதந்தி உலவிவருவதால் அதற்கு முன் ஒரு முறையாவது இந்த பீர் என்று சொல்லபடுகிற உற்சாக பானத்தை குடித்துப்பார்த்துவிட நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.