Pages

31 May 2014

ஈ-சிகரட் பலனளிக்குமா?




இன்று அதிகாலை ஒன்பதுமணிக்கே ஒரு நண்பர் போன் செய்தார். நல்ல நாளிலேயே நாம் போன்செய்தாலும் எடுக்காதவர் அதிசயமாக நமக்கு திடீரென போன் பண்ணும்போது மைல்ட் ஹார்ட் அட்டாக்குகள் வருவதுண்டு. இன்றும் அப்படித்தான் இருந்தது.

''பாஸ் நானும் உங்களை மாதிரியே சிகரட் பழக்கத்தை விட்டுடப்போறேன், இன்னைக்கு புகையிலை எதிர்ப்பு தினம் அதனால இன்னைக்குலருந்து விட்டுடப்போறேன்! அதான் உங்கள்ட்ட சொல்லணும்னு தோணுச்சு'' என்றார்.

அந்த நண்பரை எனக்கு பல வருட பழக்கம். ஒருநாளைக்கு நாற்பது சிகரட்டுகளை தாண்டும் புகசாய சூரர்! திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உண்டு. பொறுப்பான ஆசாமிதான் என்றாலும் அவரால் இப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல் பல ஆண்டுகளாக தவித்துவந்தார். அவர் இப்பழக்கத்தை விடப்போகிறேன் என்று சொன்னதும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அடடா சூப்பர்ஜி சூப்பர்ஜி சூப்பர்ஜி என்று வாழ்த்தினேன். நம்மை பார்த்து நாலுபேர் திருந்தி நல்வழிக்கு சென்றால் மனதுக்கு மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் இருக்கும்தானே.

''உங்களுக்கு என்ன உதவி வேணுமோ என்கிட்ட சொல்லுங்கஜி கட்டாயம் பண்ணிடுவோம், முதல் பதினைஞ்சு நாள்தான் மரண வேதனையா இருக்கும் அப்புறம் ஈஸியா தப்பிச்சிடலாம், சமீபத்துல விட்ட நிறைய நண்பர்கள் இருக்காங்க அவங்களோட கோர்த்துவிடறேன் குழுவா பண்ணும்போது ரொம்ப ஈஸி'' என்று உற்சாகமூட்டும் வகையில் கூறினேன்.

''பாஸ் உங்க உதவிலாம் கட்டாயம் வேணும், போன ஏப்ரல்லயே விட்டுடலாம்னு முடிவு பண்ணிருந்தேன், இப்போதான் நாள் வந்திருக்கு பாருங்க, இதுக்காக ஈசிகரெட் ஆர்டர் பண்ணிருந்தேன் இரண்டுமூணு நாளா அப்பப்பப அதைதான் நாலு இழு இழுத்துப்பேன். முப்பதுலாம் போய்கிட்டிருந்த எண்ணிக்கை இப்போ வெறும் பத்துக்கிட்ட கொண்டுவந்துட்டேன்.. பாதிநேரம் ஈசிகரட்தான். இன்னைக்கிலருந்து ஃபுல்லாவே சிகரட்டை விட்டுட்டு ஈசிகரட்டுக்கு மாறிடப்போறேன்'' என்று தன்னுடைய திட்டங்களை சொல்ல ஆரம்பித்தார். எனக்கு பகீரென்று இருந்தது. காரணம் சிகரட் பழக்கத்தை விட நினைப்பவர்களுக்கு ஈ சிகரட் சரியான மாற்றுவழி கிடையவே கிடையாது.

''அய்யோ தயவு செஞ்சு அந்த கண்றாவியை தூக்கி தூரப்போடுங்க, சிகரட்டை விட்டுட்டா அப்படியே விட்டுடணும் , வேற எந்த வகைல நிக்கோடினை எடுத்துகிட்டாலும் விடாது கறுப்பு மாதிரி அது உங்களை விரட்டிகிட்டே இருக்கும், அதுவும் இந்த ஈசிகரெட் இருக்கே சரியான ஃபோர்ஜரி! பத்துநாள் கூட உங்களால தாக்குபிடிக்க முடியாம பண்ணிடும்.. அதனால சிகரட்டை விட்டுட்டு அதுக்கு பதிலா இதுமாதிரி மோசமான மாற்று வழிகள் தேடாம, தியானம் பண்ணுங்க, க்ரீன் டீ குடிங்க, நண்பர்களோட நேரம் செலவழிங்க நிறைய வாசிங்க... அதையெல்லாம் பண்ணுங்க ப்ரோ'' என்று அறிவுரை சொன்னேன். சரிங்க என்று சொன்னவர் உடனே ஃபோனை கட் செய்துவிட்டார். அனேகமாக நேராக கடைக்கு போய் ஒரு தம் போட்டுவிட்டு என்னை திட்டிக்கொண்டிருக்கலாம்!

சிகரட் பழக்கத்தை கைவிட ஈசிகரட் என்பது சரியான மாற்றுவழியே கிடையாது. அதை பயன்படுத்தி இப்பழக்கத்திலிருந்து மீள முயற்சி செய்து தோற்றுப்போன எத்தனையோ நண்பர்களை நான் அறிவேன். நூறில் இரண்டு பேர்தான் ஈசிகரட்டை பயன்படுத்தி புகைப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இதனை முயற்சித்தால் அதிகபட்சம் ஒருமாதம் வரை உங்களால் கட்டுப்பாடாக இருக்கமுடியும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் உங்கள் கைகளில் பழையபடி சிகரட் புகைய ஆரம்பித்துவிடும்.

காரணம் உங்கள் உடலில் மூளையில் நிகோடின் படிமங்கள் இருக்கும் வரை உங்களால் ஒருநாளும் அதிலிருந்து ஒரு இன்ச் கூட மீளவே முடியாது. இந்த ஈசிகரட்கள் பொதுவாக புகைவழி உடலுக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிகோடினை லிக்விடாக்கி புகையின்றி கொடுக்கிறது. அவ்வளவுதான். ஆனால் உடலிலிருக்கிற நிகோடின் அளவு அதே அளவில் தொடர்ந்து நீடித்திருக்கும். சொல்லப்போனால் ஈசிகரட்டை அலுவலகத்திலே, தியேட்டரில், சாப்பிடும் இடத்தில் என எங்கும் பயன்படுத்தமுடியும் என்பதால் முன்பைவிட கிடைக்கிற சந்தர்ப்பத்தில் எல்லாம் நாலு இழுப்பு இழுத்துக்கொள்ளத்தான் ஆவல் வரும். அது ஏற்கனவே இருக்கிற நிகோடின் தேவையை இன்னும் அதிகமாக்கிவிடும்.

அதனாலேயே புகைபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் மிக அதிகமாகும். அதிகமாக அதிகமாக ஈசிகரட் கேட்ரிஜ்களை அதிகமாக வாங்குவீர்கள். அது இல்லாமல் ஈசிகரட்டில் காற்றுதான் வரும். நிறைய கேட்ரிஜ் வாங்கினால் கம்பெனிகாரனுக்கு கொள்ளை லாபம்தானே. கடைசியில் இதற்கு ஆகிற செலவு கட்டுபடியாகாமல் அல்லது உடலின் நிகோடின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பழையபடி பத்துரூபாய்க்கு எப்போதும் அடிக்கிற சிகரட்டுக்கே திரும்புவீர்கள்.

புகைப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அப்படியே முற்றிலுமாக விட்டுவிடுவதுதான் சிறந்தது. இதை கோல்ட் டர்க்கி (COLD TURKEY) பாணி என்கிறார்கள். பழக்கத்தை கைவிட்ட பிறகு ஒரு சிகரட் கூட ஆபத்துதான். ஒரு பஃப் கூட...

இதுதான் இருப்பதிலேயே கடினமான முறை என்றாலும் முழுமையான பலனை அளிக்க கூடியது. சிகரட்டுக்கு பதிலாக எந்த மாற்று போதை வஸ்துகளையும் அணுகாமல் அதற்கு பதிலாக ஆரோக்கியமான பழக்கங்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ளலாம். அது மிகச்சிறந்த பலனை அளிக்கும். புகைப்பழக்கத்தை கைவிட்ட எத்தனையோ நண்பர்கள் அப்படித்தான் இப்பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார்கள்.

சிகரட் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தேவை ஈசிகரட் அல்ல, மன வலிமையும் தன்னம்பிக்கையும்தான்! இதிலிருந்து மீள மருத்துவ உதவிகளை கூட நாடலாம் ஆனால் ஈசிகரட் மாதிரியான ஷார்ட்கட்ஸ் நிகோடினிடம்வேலைக்கே ஆகாது!






24 May 2014

கோச்சடையான்




படம் முடிந்தபின் ''இன்னும் கொஞ்சம் மெனெக்கட்டிருக்கலாமோ'' என்கிற எண்ணம் மட்டும்தான் மிச்சமாக இருந்தது. நல்ல வேகமாக கட்டுக்கடங்காமல் ஓடும் கேஎஸ்ரவிகுமாரின் திரைக்கதை. ஹீரோயிசத்தை தூக்கி நிறுத்த ஏற்ற அருமையான வசனங்கள். ரஹ்மானின் எரிச்சலூட்டாத நல்ல இசை. காட்சியமைப்புகள் எல்லாமே இருந்தும் ஏதோ குறைகிறது.

நிச்சயமாக இது ரஜினி படம்தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஷாட்டுக்கு ஷாட் ரஜினியே நிறைந்திருக்கிறார். இவர்கள் என் மக்கள், அன்பால் சேர்ந்த கூட்டம் என்பது மாதிரி நிறைய நல்ல பஞ்ச் டயலாக்குகள் பேசுகிறார். ஸ்டைலாக நடக்கிறார். சடாமுடியோடு ருத்ரதாண்டவம் கூட ஆடுகிறார். கோச்சடையானில் வருகிற அந்த உருவத்திற்கு ரஜினியின் முகமிருக்கிறது. அது கிட்டத்தட்ட ரஜினிகாந்தைப்போலவே நடக்கிறது அசைகிறது திரும்புகிறது, அவருடைய குரலிலேயே பேசுகிறது. எல்லாமே ஓக்கே. ஆனால் அது ரஜினி இல்லை என்பதை மோசமான அனிமேஷன் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

பல காட்சிகளில் ரஜினியின் காந்தப்பார்வை கொண்ட கண்கள், தாறுமாறாக சுழன்று மாறுகண் உள்ள மனிதரைப்போலவே இருக்கிறது, ரஜினியின் பலமே அவருடைய வேகமான நடையும் கையசைப்பும் மின்னல்வேக ரியாக்ஷன்களும்தான். ஆனால் இந்த ரஜினியோ எதையும் மிக பொறுமையாகத்தான் செய்கிறார். ‘’என்… ஆன்பு.. மன்னா…’’ என்று மெதுவாகத்தான பேசுகிறார். அது சமயத்தில் ரொம்பவும் கோபப்படுத்துகிறது.

கைதட்டவும் விசிலடிக்கவும் அற்புதமான தருணங்கள் படம் முழுக்க ஏகப்பட்டது உண்டு. ஆனால் அக்காட்சிகள் வரும்போதும் மாறுகண்ணோடு உடலை வளைத்துக்கொண்டு டிக்கியை பின்னால் தள்ளிக்கொண்டு கைகளை ஒருதினுசாக வைத்துக்கொண்டு 'பார்த்தாயா..'' என்று பேசுகிற ரஜினியை பார்த்து அப்படியே நம்முடைய ஆவேசம் அடங்கிப்போகிறது. கைதட்டவும் விசிலடிக்கவும் தயாராயிருக்கிற நம் விரல்கள் மீண்டும் நாற்காலிகளின் கைகளையே பிடித்துக்கொள்கின்றன. இது அடுத்தடுத்து நிகழும்போது கடைசியில் அடச்சே இது ரஜினி இல்லப்பா என்றாகிவிடுகிறது. ஒருவேளை அது ரஜினியாக இல்லாமல் ஏதோ ஒரு ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா கேமில் வரும் கேரக்டர் போலிருந்திருந்தால் இந்த சிக்கலே இருந்திருக்காது!

ஒருவேளை இது அனிமேஷன் படமாக இல்லாமல், ரஜினியே நேரடியாக நடித்திருந்தால் இது இன்னொரு ‘’மகதீரா’’வாக வந்திருக்கும். அவருடைய ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள். ஏனென்றால் ஒரு ரஜினி படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் அச்சுபிசகாமல் மிகச்சிரியான இன்க்ரீடியட்ன்ஸுடன் சேர்க்கப்பட்ட டிபிகல் கேஎஸ் ரவிகுமார் பாணி திரைப்படம். விசுவாசமான வேலைக்காரன், முரட்டுத்தனமான முதலாளி, நண்பனின் துரோகம் மாதிரி எல்லாமே இருந்தும். அனிமேஷன் அவ்வளவு சிறக்கவில்லை என்பதுதான் கொஞ்சமாக சொதப்பிவிட்டது.

ஆனால் பல குறைகள் இருந்தாலும் எல்லாமே அனிமேஷன் சார்ந்தே! குறிப்பாக ரஜினிக்கு மட்டுமல்ல மற்ற எல்லா பாத்திரங்களின் முகங்கள் அச்சு அசலாக வரவேண்டும் என நிறையவே மெனக்கெட்டிருந்தாலும், அனைவரது கண்களுமே சரியாக கையாளப்படவில்லை. அதுபோலவே அவர்களுடைய அசைவுகளும் கொஞ்சமும் சிறப்பாக இல்லை.

காட்சிகளின் பின்னணிகளுக்காக ஆக்சன் மற்றும் நடன காட்சிகளில் காட்டியிருக்கிற அக்கறையை எல்லா காட்சிகளிலும் காட்டியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஷோபானா,அவர் கையிலிருக்கிற குழந்தை என எதுவுமே உருப்படியாக இல்லை. சரத்குமாரை பார்க்க சரத்பாபு போலிருக்கிறார்! ஆனால் நாகேஷை மீண்டும் திரையில் சாத்தியப்படுத்தியது ஒன்றுதான் படத்தின் மிகப்பெரிய சாதனை. அவருக்கு குரல் கொடுத்தவரும் அவருக்கு உடல் அசைவு கொடுத்தவரும் வாழ்க!

படத்தில் பர்ஃபார்மென்ஸ் காப்பச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இப்படத்தில் பெரும்பாலான இடங்களில் மோசன் கேப்சரிங் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. இரண்டுக்கும் அடிப்படையிலேயே நிறைய வேறுபாடுகள் உண்டு. (பார்க்க WIKI)

இப்படி ஏகப்பட்ட குறைகளையும் தாண்டி ரஜினியின் குரல் நமக்குள் ஒரு மாயவித்தையை நிகழ்த்துகிறது. அது எரிச்சலூட்டுகிற அனிமேஷனையும் தாண்டி இப்படத்தை ரசிக்க வைக்கிறது. அதற்கு முதல் காரணம் நமக்கு ரஜினிமேலிருக்கிற அன்பு அல்லது மரியாதை நிமித்தமாக கூட இருக்கலாம்.

அனிமேஷன் படங்களின் ரசிகர்களுக்கு இப்படம் ரசிக்கும் என்றே கருதுகிறேன். காரணம் டாய் ஸ்டோரியில் தொடங்கி சமீபத்தில் வெளியான ஃப்ரோசன், ரியோ2 வரைக்குமான அத்தனை பிக்சார் மற்றும் டிஸ்னியின் படங்களையும் மிஸ்பண்ணாமல் பார்த்தவர்கள் எல்லாருக்குமே தமிழில் இப்படி ஒரு படம் சாத்தியமாகாதா என்கிற குறை எப்போதுமே இருந்தது. அந்த வகையில் இந்த கன்னிமுயற்சியே என்கிற அளவில் இதை அதன் குறைகளோடே ஏற்றுக்கொள்ளலாம். ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட பியோவூல்ஃப், அவதார் அளவுக்கு இல்லையென்றாலும் இது 2004ல் வெளியான 3டி அனிமேஷன் திரைப்படமான டாம்ஹேங்க்ஸ் நடித்த போலார் எக்ஸ்பிரஸ் அளவையாவது எட்டியிருக்கிறது என்றவகையில் பாராட்டத்தக்கதே. எப்போதுமே தமிழ்சினிமா ஹாலிவுட்டை விட பத்தாண்டுகள் பின்னால்தான் இருக்கும் என்று கணக்கு இருக்கிறது.

இப்படத்தை திரையரங்கில் எல்லோராலும் ரசிக்க முடியுமா என்பதை உறுதியாக கூற முடியாது. நிச்சயமாக பென்டென் சோட்டாபீம் குழந்தைகள் இடதுகையால் உவ்வேக் என்று நிராகரிப்பார்கள் என்பதைமட்டும் உறுதியாக சொல்வேன். அவர்களை இப்படம் ஒரு இடத்திலும் கூட குஷிபடுத்தாது. குழந்தைகளை அழைத்துச்செல்வது வீண்! அடிப்படையில் எனக்கு அனிமேஷன் படங்களின் மீது தீராக்காதல் உண்டென்பதால் இப்படத்தை ரொம்பவும் இன்ச் பை இன்ச் ரசித்தேன்.

12 May 2014

சுருள்குழல் அழகி!




வாழ்க்கையில் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஏடாகூடமாக ஏதாவது நடந்து விடுவது இயல்புதானே! அப்படிதான் நேற்று, வரலாற்று சிறப்புமிக்க திரைப்படமான மான்கராத்தேவை பார்த்தேன். இனிமேல் நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? என்கிற தலைவன் கவுண்டமணி வசனத்திற்கேற்ப இனிமேல் அந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதினால் என்ன.. எழுதாட்டி என்ன? என்றுதான் முதலில் தோன்றியது. எனவே இது இப்படத்தின் விமர்சனம் அல்ல.

குத்து சண்டை குறித்தும் அதற்காக உயிரை கொடுத்து பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிற எண்ணிலடங்கா இளைஞர்களைபற்றியும் ஒன்னும் தெரியாமல் ஏனோதானோ என்று எடுக்கப்பட்ட மொக்கை படம் என்கிற அளவில்தான் இப்படத்தை அணுக வேண்டியிருக்கிறது. படத்தில் சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமே இல்லை. அந்த முதல் இருபது நிமிட இந்திரா சௌந்தர்ராஜன் பாணி பில்ட்அப்புகள் மட்டும் பிடித்திருந்தது!

தினத்தந்தி பேப்பரும் நாலு இளைஞர்களும் என வேறு ஏதாவது கதை சிந்தித்திருக்கலாம். சிவகார்த்திகேயனை வைத்து என்னமோ பண்ணியிருக்கிறார்கள். அவசரத்திற்கு கிண்டிய உப்பில்லாத உப்புமா மாதிரி! ‘’சிவகார்த்திகேயனின் சுள்ளான்’’ என்று இரண்டுவார்த்தையில் இப்படம் குறித்து சொல்லிவிடலாம். ஓவர் டூ தி மெயின் மேட்டர்.

இப்படிப்பட்ட மரண மொக்கைப் படங்களிலும் ஏதாவதொரு அம்சம் நம்மை வெகுவாக கவர்ந்து மென்னியை பிடித்து கவ்வி இழுத்துவிடும். அப்படி கவர்ந்திழுத்த அம்சம் இப்படத்தில் வருகிற அந்த சுருள் முடி பெண்! ‘’அடியே ரத்தீ அக்கினி கோத்ரி’’ என்று புகழுவாரே சிகா! அந்தபெண்தான். படத்தில் அவருடைய பெயர் வைஷ்ணவி. உண்மையான பெயர் ப்ரீத்தியாம். கூகிளில் போட்டிருக்கிறது. கஷ்டப்பட்டு கண்விழித்து தேடித்தேடி கண்டுபிடித்தேன்.

ஒருபக்கம் ஹன்சிகாவின் ஓவர் மேக்கப் முகமும், உதட்டை பிதுக்கி பிதுக்கி ஙே என பார்க்கிற எல்லா சீனுக்குமான ஒரே குஷ்பு ரியாக்சனையும் பார்த்து பார்த்து சோர்ந்துபோன கண்ணுக்கு அவ்வப்போது காட்டப்படுகிற அதிக மேக் அப் இல்லாத இந்தப் பெண்ணை பார்த்துதான் குஷிவருகிறது. இவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாம்ங்க!

இந்த சுருள்குழல் அழகியை முதல் காட்சியில் பார்த்ததுமே ரொம்ப பிடித்துவிட்டது. என்ன ஒரு தளுக்கு என்ன ஒரு மினுக்கு! அய்யுய்யய்யோ.. அந்த கண்ணில்தான் அவ்வளவு மயக்கம்! ‘’இப்பல்லாம் பீர் கூலிங்காவே கிடைக்கிறதில்ல’’ என்று சொல்லும்போது ஓடிப்போய் டாஸ்மாக்கில் அடித்து பிடித்தாவுத் ஒரு கூலிங் பீர் வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட தோன்றியது.

மைக்கேல் ஜாக்சன் பாணியில் தலைவிரிகோலமாக அலைகிற சுருள்குழல் பெண்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சுருள்முடியோடு கொஞ்சம் பெரிய கண்களும் கொண்ட பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம். பார்த்ததுமே காதலில் விழுந்துவிடுவேன். அதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது அவர்களுடைய கூந்தலை என்னதான் எண்ணை போட்டு அமுக்கினாலும் அது அடங்கவே அடங்காது! அது அப்படியே நெற்றியில் விழுந்து காற்றில் அலைந்தபடியேதான் கிடக்கும். மீறி படிய வாறினால் அவர்களுடைய முகம் நன்றாகவே இருக்காது. கூகிளில் தேடியபோது படியவாறி சீவிய ப்ரீத்தியின் முகம் கூட சுமாராகத்தான் தோன்றியது!

ஒரு முக்கியமான விஷயம், சுருள்முடி ப்ரீத்திக்கும் தலைவி சிம்ரன் மாதிரியே உதட்டுக்கு மேல் ஒரு அழகான மச்சம் வேறு இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதுவும் வலதுபக்கம்! ஒரிஜினல்தான். (அடியேன் ஒரு காட்டுத்தனமான சிம்ரன் உபாசகன் என்பதை சொல்லவேண்டியதில்லை)

முன்பு 22ஃபீமேல்கோட்டயமில் ரீமா கல்லிங்கலை ரொம்பவே பிடித்து இப்படித்தான் பித்துபிடித்து திரிந்தேன். அதற்கு பிறகு அவருக்கும் மணமாகிவிட்டபடியால், கங்கனா ரனாவத்திற்கு மாறினேன். அவர் நடித்த ரிவால்வர் ராணியை இனிமேல்தான் பார்க்கவேண்டும். சப்டைட்டிலோடு நல்ல ப்ரிண்ட் டிவிடிக்காக வெயிட்டிங்! இந்த சந்துகேப்பில்தான் இந்த ‘’மான்’’ சிந்துபாடியிருக்கிறது! சிம்ரனுக்கு பிறகு அடியேனின் இரும்பு இதயத்தையே அசைத்துப்பார்க்கிறது இப்பெண்ணின் அழகு. ம்ம் சீக்கிரமே இந்த பெண்ணை வெள்ளித்திரையில் நாயகியாக படம் முழுக்க பார்க்கவேண்டும். யாராவது இயக்குனர்கள் மனது வைக்கவேண்டும். நிச்சயம் நன்றாக நடிப்பார் படம் ஹிட்டாகும்.. ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

09 May 2014

2 ஸ்டேட்ஸ்



2ஸ்டேட்ஸ் படம் பார்க்க பஜன்லால் சேட்டுகளும் அவருடைய சந்ததிகளும்தான் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். ஒரே ஆயா காயா போயா வாயா என இந்தி வாசனை.

பஞ்சாபி நாயகனுக்கும் தமிழ் நாயகிக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி காதல்கனிய இரண்டு குடும்பங்களும் அடித்துக்கொண்டு பின் கொஞ்சி குலாவி கடைசியில் கல்யாணமாகி சுபம் போட… ஒரே நாட்டில் வாழ்கிறோம் என்பதை தவிர்த்து இந்த பழம்பெரும் கலாச்சாரங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஆட்கள் இப்படத்தை குதூகலித்து கொண்டாடுகிறார்கள்.

சேதன் பகத்தின் 2ஸ்டேட்ஸ் நாவலை வாசித்ததில்லை. ஜாலியான ரொமான்றிக் நாவல் என்று மட்டும் நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நாவலை படித்த யாருக்கும் படம் அவ்வளவு ப்ரியப்படவில்லை. நல்ல வேளையாக அதனாலேயே படம் எனக்கு ஒரளவு பிடித்தேயிருந்தது. நாவல் சேவல் தாவலையெல்லாம் விடுங்கள். அலியாபட்டின் அழகுக்கும் க்யூட்னஸ்க்குமே இப்படத்தை இன்னொரு முறை பாரக்கலாம்! அப்படி ஒரு முகம் அந்த பெண்ணுக்கு.. பார்த்தவுடன் ஓடிப்போய் ஒரு லவ்லெட்டரை நீட்டி அம்மையாரே ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை லவ்பண்ணிடுங்க இல்லாட்டி உயிர உட்ருவேன் என கெஞ்சவைக்கிற க்யூட் முகம்!

படம் முழுக்க ஃப்ரேமுக்கு ஃபேரம் அவ்வளவு மெலோட்ராமா. ஆனால் அதுகூட பார்க்க நன்றாக சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ரொம்பநாள் ஆகிடுச்சு இப்படியெல்லாம் படம்பார்த்து. சமீபத்தில் இத்தனை அன்பும் பரிவும் சினேகமும் பாசமும் சோகமும் நிறைந்த படத்தை பார்த்த நினைவில்லை.

படம் முழுக்க பிரதான பாத்திரங்கள் எல்லோருக்கும் ஏதாவது வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கிறது. அது தன்னுடைய திறமையை வளர்த்து கொள்ள துடிக்கிற ரேவதியில் தொடங்கி தன் குடும்பத்தோடு ஒன்றாக இருந்தும் தனித்திருக்கிற நாயகனின் தந்தைவரைக்குமாக நீள்கிறது. அவர்கள் எல்லோருக்கும் ஒரு அழகான மனசாட்சி இருக்கிறது. எதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுகொடுத்துவிடக்கூடாது என்கிற தாறுமாறான ஈகோவும் இருக்கிறது. ஆனால் அதே மனிதர்களிடம் அன்பும் இருக்கிறது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவ ஈகோ,கோபம்,ஆணவம் எல்லாமே கரைந்து இயல்பான அன்பு பூக்கிறது. உண்மையில் மனிதர்கள் எல்லோருமே இதையெல்லாம் கலந்து ஒரு மாதிரி காக்டெயிலாகத்தானே இருக்கிறோம். அப்படிப்பட்ட மனிதர்களையே திரையில் சந்திக்கும்போது இயல்பாகவே ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது. அதனால்தானோ என்னவோ பாலிவுட்டில் படம் கோடைவிடுமுறையில் சூப்பர்ஹிட்டாகி சக்கைபோடுபோடுகிறது. நூறுகோடியை தாண்டிடுச்சா? அதுதானே பெஞ்ச்மார்க்?

ஆங்காங்கே புன்னகைக்க வைக்கிற சுஜாதா பாணி ஜாலி ஒன்லைனர்களும் அந்த குடும்பமும் அவர்களுக்குள் இருக்கிற அன்னியோன்யமும் ரசிக்க வைத்தன. அதிலும் நாயகனுக்கும் அவனுடைய அப்பாவுக்குமான அந்த உறவு… முரட்டுதனமான அப்பாவை கொண்ட யாருமே டீன்ஏஜ்ஜில் கடந்திருக்க வாய்ப்புகளுண்டு. முதல் பாதியில் அர்ஜூன் கபூரின் கண்களில் துள்ளுகிற அந்தக்காதலும், அலியாபட்டின் இளமைதுடிப்பும் உற்சாகமூட்டுபவை.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். அதுமட்டுமல்ல பஞ்சாபிகளையும் தமிழர்களையும் ‘’இவர்கள் இப்படித்தான்’’ என்று ஒரு சிறிய சட்டகத்துக்குள் அடைத்து நிறையவே அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். என்னமோ பஞ்சாபிகள் பொழுதன்னைக்கும் குடித்துக்கொண்டும் சிக்கனை கடித்துக்கொண்டும் திரிவதாகவும், தமிழர்கள் ஆர்தடக்ஸுகள் எந்நேரமும் வெள்ளை வேட்டி சகிதம் திரிவதாகவும்... இதுபோல. ஆனால் நாளுக்கு நாள் தமிழர்களை காட்சிபடுத்துவதில் கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக பாலிவுட் முன்னேறிக்கொண்டிருக்கிறது.

அமிதாப் நடித்த அக்னீபாத் படத்தில் அவருடைய நண்பரா வருகிற மிதுன்சக்ரபோர்த்தி ஒரு தமிழராக நடித்திருப்பார். அவருடைய பெயர் கிருஷ்ணன் ஐயர் எம்.ஏ! அவ்வளவு படித்தும் எழனி விற்கிற அந்த தமிழர் ஒரு ஐயர் என்பது மிகவும் அதிர்ச்சிகரமான நகைமுரணாக இருக்கும். இன்னும் பல படங்களில் தமிழர்கள் கறுப்பாக இருப்பார்கள், பட்டை போட்டு வெள்ளை வேட்டி வெள்ளைசட்டை சகிதம் ''அய்யோ..அய்யோ.. அடே முர்கா'' என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள்.

மலையாளிகளுக்கும் தமிழனுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல்தான் பாலிவுட்டில் படங்களெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சமகாலத்தில் இந்த "பாலிவுட்டின் முட்டாள் தமிழர்கள்'' இப்போது கொஞ்சம் முன்னேறி அவ்வப்போது பேன்ட் சட்டை அணிந்து தமிழ் பாட்டெல்லாம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். நிறைய படித்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் முழுவதுமாக நம்மை புரிந்துகொண்டு தமிழர்களை யதார்த்தமாக காட்சி படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்று நம்பலாம். அதற்கான எல்லா சாத்தியகூறுகளும் இப்படத்தில் தெரிகிறது. (இதற்கு முன் காட்டியதைவிட இதில் தேவலாம் என்பதைதான் மேலே நீட்டி மொழக்கி.. ரொம்ப நீண்டுவிட்டதோ?)

இந்த கலாச்சார அசிங்கப்படுத்துதல் குறைகளையெல்லாம் கவனிக்காமல் இப்படத்தை அணுக வேண்டுமென்றால், நீங்கள் பஞ்சாபியாகவும் இல்லாமல் தமிழராகவும் இல்லாமல் பொதுவில் நடுநிலையான இந்திகாரனாக அல்லது டெசிஇந்தியனாக மாறி படம் பார்க்க வேண்டும்! அதாவது தனிப்பட்ட எந்த கலாச்சார அடையாளங்களின்றி பொது அடையாளத்தோடு படம் பார்க்க வேண்டும். உலக மயமாக்கல் அதைதானே நமக்கு சொல்லிக்கொடுக்கிறது. எந்த கலச்சார வரலாற்று பின்புலமுமற்ற அமெரிக்கா பர்கரை அதே சுவையோடு அமைந்தகரை ஸ்கைவாக்கிலும் சாப்பிட முடிகிற.. ஒரே கூரையின் கீழ் உலகம் கான்செப்ட்!

படத்தின் மய்ய பகுதியில் வருகிற குடும்ப கன்வீன்சிங் காட்சிகளின் நீளம் அதிகம்தான் என்றாலும்.. நீள நீளமான படங்கள் பார்த்து ரசிக்கிற இந்திகாரர்களுக்கு அதுதான் பிடித்திருக்கிறது! இதுமாதிரி படங்களுக்கு இசை ரொம்ப முக்கியம். அது சொதப்பினால் டவுசர் கழண்டுடும். சங்கர் எங்சான் லாய் கலக்கியிருக்கிறார்.

வித்தியாச வெறிபிடித்து அலைகிற கோலிவுட்டில் இப்போதெல்லாம் சாதாரண எளிய படங்களே வருவதில்லையோ என்று தோன்றுகிறது. குடும்பத்தோடு போய் நிறைய காமெடி, நிறைய சென்டிமென்ட், அவ்வப்போது முகம் பூக்க வைக்கிற ஜாலியான ரொமான்ஸ் அப்பா அம்மா சென்டிமென்ட் தூக்கலாகி நாலு ட்ராப்ஸ் கண்ணீர் என குடும்பப்பாங்கான படங்களை பார்த்தே பலவருஷமாகிறது. வித்தியாசமானவர்களின் காலத்தில் கடைசியாக ராஜாராணிதான் அந்த வகையில் ஆல்மோஸ்ட் குடும்ப படமாக வந்த நினைவு. அதுகூட கிட்டத்தட்டதான்… ஆனால் அதையே குடும்ப படமாக நினைத்து மக்கள் கொண்டாடினார்கள். ராஜாராணிக்கு முன்பு… மந்திரி சுந்தரி… ஒன்றும் நினைவில்லை.

வில்லன்களே இல்லாமல் கடைசியாக இதுபோல பார்த்த படம் கேப்டன் நடித்த வானத்தைபோலதான்! அதற்கு முன்பு குஷி இந்த பாணியில் மிகவும் பிடித்திருந்தது. 2ஸ்டேடஸ் கூட குஷி,பூவெல்லாம் கேட்டுப்பார்,ஜோடி வகையறா படம்தான். ஆனால் இதில் இப்படங்களின் க்ளைமாக்ஸ் தாண்டிய ஒரு கதை இருக்கிறது. அதுதான் இதை ஸ்பெஷலாக்குகிறது. குடும்பத்தோடு பார்க்க ஏற்ற சித்திரம் அவ்வளவுதான்.

படம் முடிந்து படத்தில் பங்காற்றியவர்கள் பெயர்கள் இடம்பெற்றுக்கொண்டே வந்தது. நண்பர் அதில் ஒன்றை கவனித்துவிட்டு விசாரித்தார். ‘’தமிழ்ப்பாடல்கள் – நிரஞ்சன் ஐயங்கார’னு போட்டிருக்கே யாருங்க அது!’’ என்றார். நிரஞ்சன்... நிரஞ்சன்... நிரஞ்ச்… ஒகே எனக்கு தெரிஞ்சு தமிழில் நிரஞ்சன்ற பேர்ல பாடல்கள் எழுதுபவர் பாரதியாரின் எள்ளுப்பேரன் ‘’நிரஞ்சன் பாரதி’’ ஒருத்தர்தான். அவர் தன்னுடைய பெயரை நிரஞ்சன் பாரதி என்றுதான் போட்டுக்கொண்டு பாடல்கள் எழுதுகிறார். இது அவராக இருக்கக்கூடாது.. இது வேறு யாரோ என்று மட்டும் சொன்னேன். பிறகு விசாரித்தபோது அவர் இல்லை என்றார்கள். நிம்மதியாக இருந்தது.

08 May 2014

லேன்ட்மார்க்





சென்னை நுங்கம்பாக்கம் லேன்ட்மார்க் புத்தக கடை மூடப்படவுள்ளது. அனேகமாக இந்த மாத கடைசியில் மொத்தமாக மூடிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.ஏன் எதற்கு என்று விசாரிக்கவில்லை. விசாரிக்கவும் பிடிக்கவில்லை.

விற்காத புத்தகங்களையும், பதிப்பாளருக்கு திருப்பி அனுப்ப முடியாத பழைய ஸ்டாக்குகளையும் 70சதவீத கழிவில் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி நேற்று அந்தப்பக்கமாக தலைகாட்டினேன். நாம் கொண்டாடிய ஒரு இடத்தை மூடுகிறார்களே என்று வருந்துவதா நிறைய நல்ல நூல்களெல்லாம் 70சதவீத டிஸ்கவுன்டில் கிடைக்கிறதே என்று மகிழ்வதா என்று குழப்பமான மனநிலையில்தான் கடைக்குள் நுழைந்தேன்.

அவ்வளவு பெரிய கடையை அப்படியே உள்ளங்கையில் சுருட்டி உருட்டி பில்லுபோடுகிற அந்த நீண்ட ஸ்டேன்டுகள் கொண்ட அறைக்குள் அடக்கி வைத்திருந்தனர். இரண்டு வாரங்களாகவே இந்த கழிவு விற்பனை நடப்பதால் சொல்லிக்கொள்ளும்படி நல்லபொருட்கள் எதுவும் தட்டுப்படவில்லை. நூல்களும் ஒன்றுகூட தேறல. நிறைய டிவிடி கலெக்சன்ஸ் இருந்தது. அதிலும் நல்லதையெல்லாம் முன்பே பலரும் அள்ளி சென்றுவிட்டதை உணரவைக்கிற வகையிலேதான் இருந்தது. உபயோகித்து தேய்ந்த பழைய மாடல் மொபைல் போன் மாதிரி அழுக்கேறி தேய்ந்து போய் கிடக்கிறது கடை.

ஒருநாளும் லேன்ட் மார்க் கடைக்குள் நுழைந்து இப்படி உணர்ந்ததேயில்லை. பல ஆண்டுகள் பார்க்காத ஒரு பால்யகால சினேகிதன், தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து உருக்குலைந்து போய் இருக்கிற போது அவனை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வு. எத்தனை நாட்கள் அக்கடையின் குட்டி பெஞ்சுகளில் நாட்கள் கடந்திருக்கிறது. எத்தனை நாட்கள் டிவிடிகளை தேடி தேடி விரல்கள் தேய்ந்திருக்கிறது. அழகழகான எத்தனையோ பெண்களை சைட் அடித்த நினைவுகளெல்லாம் வந்து போயின. அக்கடையின் ஒவ்வொரு அலமாரியும் எனக்கு பரிச்சயமானது.

மார்க்கெட்டிங் வேலையில் பகலில் அலுவலகத்திற்கு போக முடியாது, போனால் திட்டுவிழும். வாடிக்கையாளர்களையே எப்போதும் பார்த்துக்கொண்டேயும் இருக்க முடியாது. அந்த நேரங்களையெல்லாம் லேன்ட்மார்க்கின் அலமாரிகளிடையேயான சந்துகளில் பல நாட்கள் தலைமறைவு வாழ்க்கையில் கழித்திருக்கிறேன். நாள்முழுக்க ஒரே ஒரு முழு நூலையும் குட்டிபெஞ்சில் உட்கார்ந்து படித்துக்கொண்டேயிருக்கலாம் யாருமே ஒருவார்த்தை கூட யார் என்ன என்று கேட்க மாட்டார்கள். தண்ணீர் இலவசமாக கிடைக்கும், டீ கொடுக்கமாட்டார்கள். நாமேதான் வெளியே போய் பெட்ரோல் பங்க் முக்கில் இருக்கிற கடையில் ஒரு டீயும் தம்மும் அடித்துவிட்டு வந்து மீண்டுமே கூட படிக்க ஆரம்பிக்கலாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் சைட் அடிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக லேன்ட்மார்க்தான் இருந்தது. புத்தகங்களை புரட்டுகிற மாதிரி நோட்டம் விட்டால் சுற்றிலும் ''ஏ சென்டர் இளைஞிகளை'' கண்டும் ரூட்டு கொடுக்கவும் ஏற்ற இடமும் அதுதான். இதுமாதிரியான நவீனரக பிள்ளைகளை சைட் அடிக்க லேன்ட்மார்க்கை விட்டால் ஸ்பென்சர்தான். ஸ்பென்சரிலும் ஒரு லேன்ட்மார்க் இருந்தது. இப்போதும் இருக்கிறதா? ஸ்பென்சரே இப்போது பண்டையகாலத்து அருங்காட்சியகம் மாதிரிதான் கிடக்கிறது.

லேண்ட்மார்க்கில் ஏதாவது ஏடாகூட நூல்களுக்கென்றே தனியாக ஒரு அலமாரி ஒதுக்கியிருப்பார்கள். அனேகமாக அது ஈசானிய மூலையாக இருக்கலாம். ஆனால் அங்கிருந்த நூல்களை வைத்து நானாகவே அதற்கு கன்னிமூலை என பெயரிட்டிருந்தேன். அங்கேதான் எல்லாவிதமான கஜகஜா நூல்களும் கிடைக்கும். அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு அப்படியே எங்காவது மூலையில் ஒன்றரையடி ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு படங்கள் மட்டும் பார்த்து சிலிர்த்த நாட்களை மறக்கவே முடியாது. பெரிய பெரிய சைஸில் கில்மா நூல்களை மறைவான மூலையில் அடிக்கி வைத்திருப்பார்கள்.

காதலிகளின் பிறந்தநாளுக்கு வேலன்டைன்ஸ்டேவில் மற்றும் பல சிறப்பு தருணங்களிலும் லேன்ட்மார்க் கிப்டுகள்தான் முத்தங்களை வாங்கித்தந்திருக்கிறது. கிப்ட் பொருட்கள் விலைகூடதான் என்றாலும் லேண்ட்மார்க்கில் வாங்கியது என்று பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு அதில் பெருமையோ இல்லையோ எனக்கு பெருமையாக இருந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஸ்கைவாக் மாலில் இருக்கிற லேன்ட்மார்க்கிற்கு சென்றிருந்தேன். நூல்களுக்காக ஒரே ஒரு அலமாரியைத்தான் ஒதுக்கியிருந்தார்கள். வீடியோகேம், பொம்மைகள், பரிசுபொருட்கள் விற்கும் கடையாகத்தான் அதை மாற்றிவைத்திருக்கிறார்கள். சிட்டிசென்டர் லேண்ட்மார்க் தேவலாம். ஒரளவு நூல்களை மிச்சம் வைத்திருக்கிறார்கள். 2 For 3 ஆஃபரில்தான் எல்லா நூல்களையும் விற்கிறார்கள். (சுந்தரராமசாமியும் சாருநிவேதிதாவையும் ஒன்றாக வாங்கினால் ஜெயமோகன் ஃப்ரீ! )

மின்னூல்கள் கோலோச்ச தொடங்கிவிட்ட காலத்தில் புத்தக கடைகள் உயிர்த்திருப்பதும் மூச்சுவிடுவதுமே ரொம்பவும் சிரமம்தான். அமேசான் கிண்டிலும் ஃப்ளிப்கார்ட்டும் வாசிப்பை விரல்நுனிக்கு கொண்டுவந்துவிட்டன. என்னதான் ஒரு டேப்லெட் முழுக்க ஆயிரம் நூல்கள் இருந்தாலும், ஒரு புத்தக கடைக்கு சென்று ஆயிரம் நூல்களில் ஒன்றை தேர்ந்துஎடுத்து படிப்பதை எங்குமே அனுபவிக்க முடியாது. புத்தகக்கடையில் நிறைந்திருக்கிற அந்த வாசனையும் அங்கே கழிக்கிற அந்த சொற்பமான நேரமும் நம்மை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க வல்லவை. வெறும் நூல்களின் அட்டைகளை மட்டுமே படிப்பதும் அவற்றை ஒரு புரட்டு புரட்டுவதும் அளவில்லா மகிழ்ச்சியை தரக்கூடியவை. வருங்காலத்தில் இதற்க்கெல்லாம் சாத்தியமே இல்லாமல் போய்விடும் என்பது கண்முன்னே தெரிகிறது. அதை தடுக்கவும் முடியாது. எல்லா லேன்ட்மார்க்குகளும் காலவோட்டத்தில் கரையக்கூடியவைதானே!

05 May 2014

கஹானியும் கமூலாவும்



மாஞ்சு மாஞ்சு கொண்டாடிய ஒரு படத்தை ரீமேக் என்கிற பெயரில் கொத்துக்கறி போட்டு கொதறி வைத்திருந்தால் கோபம் மட்டுமா வரும், அடேய் பாவிப்பயலே இது நியாயமா என்று படத்தை எடுத்தவனை கொலையாய்க் கொல்லவேண்டும் என்கிற கொந்தளிப்பும் கூடவே வரும்தானே. ‘’நீ எங்கே’’ படம் பார்க்கும் போதும் அதுதான் நிறையவே வந்தது. படத்திற்கு பெயர் நீஎங்கே என் அன்பேவா.. இல்லை வெறும் நீ எங்கேவா? டைட்டிலிலேயே குழப்பம்தான்.

வித்யாபாலனின் நடிப்பில் 2012ல் வெளியான இந்தி திரைப்படம் கஹானி. வெளிநாட்டிலிருந்து கொல்கத்தாவிற்கு தன் தொலைந்துபோன கணவனைத்தேடி வருகிற ஒரு பெண்ணின் கதையை பதைபதைக்க வைக்கிற வகையில் படமாக்கியிருப்பார் இயக்குனர் கோஷ். மொழி தெரியாத ஊரில் வயிற்றில் குழந்தையோடு அவள் தேடி அலைவதும், அவளுடைய தேடலை ஒட்டி அடுத்தடுத்து நடக்கிற கொலையுமாக சில்லிட வைக்கிற பரபர த்ரில்லர்.

பெரிய ஸ்டார்கள் இல்லாமலேயே நூறுகோடிக்கும் மேல் வசூலித்த இந்தப்படத்தை தமிழில் ரீமேக் பண்ண நினைத்த அந்த எண்ணம் பாரட்டப்படவேண்டியது. ஆனால் அதை அப்படியே அட்டை டூ அட்டை எடுத்திருக்கலாம்.. தன்னுடைய சொந்த சரக்கை நுழைக்கிறேன் என்று இப்படி கொயகொயவென்றாக்கியிருக்கத் தேவையில்லை!

தெலுங்கில் ‘’ஹேப்பி டேஸ்’’ ‘’லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல்’’ மாதிரி அருமையான ஃபீல்குட் படங்கள் எடுத்து பேர் பெற்ற இயக்குனர் சேகர் கம்மூலா ஏன் கஹானி மாதிரி ஒரு முரட்டுத்தனமான படத்தை ரீமேக் செய்ய ஒப்புக்கொண்டார்? வித்யாபாலனுக்கு பதிலாக ஏன் நயன்தாரா.. WHY WHY?? இந்தக் கேள்விகள் ‘’நீ எங்கே என் அன்பே’’ அல்லது ‘’அனாமிகா’’ படத்திற்கு பூஜை போட்ட அன்றிலிருந்தே மனதை குடாய்ந்துகொண்டிருந்தது.

எந்த பாத்திரத்தையும் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் செய்கிற வித்யாபாலனுக்கு மாற்றாக வேறொரு நடிகையை நினைத்தும் கூட பார்க்க முடியவில்லை. ஒருவேளை சிம்ரனை நடிக்க வைத்திருந்தால் மனம் ஒப்பியிருக்குமோ என்னமோ?

நயன்தாரா நல்ல நடிகைதான், ஆனால் இப்படத்தின் கதைப்படி நயன்தாராவை பார்க்கும்போது நமக்கு இயல்பாக எழவேண்டிய பரிதாப உணர்ச்சிக்கு பதிலாக வேறு சில உணர்ச்சிகள்தான் மேலோங்குகிறது. அதற்கொப்ப படம் முழுக்க நயன்தாராவும் நன்றாக டிசைன் டிசைனாக கலர் கலர் காஸ்ட்யூம்களில் வலம் வருகிறார். இயக்குனர்கதையை விட நயன்தாராவின் கவர்ச்சியின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தாரோ என்னவோ?

இதை தனிப்படமாக பார்த்தாலாவது பிடித்து தொலைக்கிறதா என முயற்சி செய்தும் பார்த்தேன். கஹானியோடு ஒப்பிடாமல் பார்த்தாலுமே கூட ம்ஹூம் நிச்சயமாக சத்தியமாக முடியலைதான். அதிலும் டெம்ப்ளேட் வசனங்கள், டெம்ப்ளேட் நடிப்புகள்...

கஹானி படத்தின் உயிர்நாடியே வித்யாபாலன் நிறைமாத கர்ப்பிணியாகவும், அந்த அவஸ்தையோடு தொலைந்து போன தன் கணவனை தேடுவதும்தான். அது அப்படி இருந்தால்தான் க்ளைமாக்ஸில் படம் முழுக்க நாம் பார்த்ததெல்லாவற்றையும் புரட்டிப்போடுகிற அந்த ட்விஸ்ட்டு நறுக்கென நம் மண்டையில் உரைக்கும். ஆனால் இப்படத்தில் நயன்தாரா மறுத்திருப்பாரோ என்னவோ நாயகி கர்ப்பமாவதை இயக்குனர் விரும்பவில்லை. முதல் பாலிலேயே விக்கெட் விழுந்துவிட்டதா..

இரண்டாவது கஹானியில் வருகிற அந்த இன்சூரன் ஏஜன்ட் வேலை பார்க்கிற அம்மாஞ்சி கொலைகாரன். அவன் தொடர்பான காட்சிகள் எல்லாமே அவ்வளவு பயமுறுத்தக்கூடியதாக இருக்கும். அதற்கு காரணம் அவன் தொடர்பான ஆரம்ப காட்சிகள். இயக்குனர் அதையும் தூக்கிவிட்டார்.

மூன்றாவது படத்தினுடைய CASTING. நவாசூதீன் சித்திக் மாதிரி தேர்ந்த நடிகர் நடித்த பாத்திரத்தில் பசுபதியை போட்டது சரிதான். பசுபதி தமிழின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்,. ஆனால் ஏனோ இந்தப்படத்தில் என்னதான் கண்ணை உருட்டி உருட்டி மிரட்டினாலும் அவரை பார்க்கும் போது பயமே வரவில்லை. சில இடங்களில் சிரிப்புதான் வந்தது. சில பார்வைகளில் அசைவுகளில் பார்வையாளர்களை போட்டு அப்படி பயமுறுத்தியிருப்பார் நவாசுதீன்! அதற்கு நாயகி கர்ப்பிணியாக இல்லாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கஹானியில் வருகிற கொல்கத்தா நகரம் அவ்வளவு உயிர்ப்போடிருக்கும். அவ்வூரின் அசலான நிறமும் மக்களும் அதன் மணமும் கூட ஒவ்வொரு சட்டகத்திலும் நிறைந்திருக்கும். ஏனோ சேகர் கம்மூலா சொல்லும் கஹானியில் ஹைதரபாத் நகரம் என்பது நாலுதெருவுக்குள் சுருங்கிப்போய்விடுகிறது. அதைப்பற்றிய பரந்துபட்ட பார்வையை வழங்கமறுக்கிறது.

படம் முழுக்க காரணமே இல்லாமல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் காட்டப்படும் காளியும், நல்லவர்களோடு எங்கும் நிறைந்திருக்கும் காவியும், குண்டுவைத்தவரைத்தேடி இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் மட்டுமே தேடுவதுமாக சேகர் கமூலா தன்னுடைய சார்ரசியலையும் கொஞ்சம் தூவி விட்டிருக்கிறார்.

கஹானியின் வெற்றிக்கு காரணமான எல்லா அம்சங்களையும் அதன் ஆன்மாவையும்உருவிப்போட்டுவிட்டு , லேடீஸ் சென்டிமென்ட்டை தூக்கலாக்கி வெறும் சக்கையில் இனிப்புத் தண்ணீரை தெளித்து கொடுத்தது போலிருந்தது நீ அன்பே. இதைத் தவிர்க்கலாம். சப்டைட்டிலோடு ஒரிஜினல் டிவிடியில் கஹானி கிடைக்கிறது. தவறவிட்டவர்கள் கட்டாயம் பார்க்கலாம்.




கவிதையின் கால்தடங்கள்



காட்டுத்தனமாக நிறைய வாசிப்பதைவிட நாம் வாசித்த ஒரு நூல் குறித்து நாலுபேரோடு உற்சாகமாக பகிர்ந்துகொள்ளும்போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.... ஒரு நல்ல வாசகனுக்கு வாசிப்பின் முழு சந்தோஷமும் அந்த கணத்தில்தான் கிடைக்க ஆரம்பிக்கிறது. அப்படி பகிர்ந்துகொள்கிற ஆட்கள் நம்மூரில் ரொம்பவும் குறைவுதான்.

பகிர்ந்துகொள்பவையும் பெரும்பாலான நேரங்களில் ''ஓ இவுரு ஏதோ பெரிய உயர் இலக்கியம் படிச்சிருப்பாரு போல நமக்கெதுக்கு வம்பு'' என்று பயந்து ஓடும்படிதான் இருக்கும். இப்படிப்பட்ட கொடூரமான சமகால இலக்கிய சூழலில் ஒரு வாசகனின் பார்வையில் விரிகிற செல்வராஜ் ஜெகதீசனின் கவிதையின் கால்த்தடங்கள் என்கிற நூல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்கியே தீரவேண்டும் என்று நான் விரும்பிய சில நூல்களில் ஒன்று ‘’கவிதையின் கால்த்தடங்கள்’’. கண்காட்சியில் முதலில் வாங்கிய நூலும் இதுதான். கொஞ்சம் தாட்டியான கவிதைத்தொகுப்பு. கவிதைகள் என்றாலே கரண்டுகம்பத்தில் கைவைத்தது போல உணர்கிற (கரண்ட் இருக்கும்போது) என்னைப்போன்றவர்களுக்கு இந்நூல் அத்தியாவசியமானது. தமிழின் 50 கவிஞர்களின் சிறந்த கவிதைகளில் 400ஐ தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார்.

கொஞ்சம் படிங்க பாஸ் என ஏகப்பட்ட நூல்கள் க்யூவில் காத்திருக்க, , இந்த நூலை இதுவரை முழுவதுமாக மூன்று முறை திரும்ப திரும்ப வாசித்துவிட்டேன். நான்காவது முறையாகவும் வாசித்துக்கொண்டேயிருக்கிறேன். நேரங்கிடைக்கும்போதெல்லாம் ஒரு புரட்டு புரட்டிவிடுவேன். இந்நூலில் இருக்கிற இரண்டு அல்லது மூன்று கவிதைகளை படித்துவிட்டு அதைப்பற்றி மனதிற்குள் அப்படியே அசைபோட ஆரம்பித்துவிடுவேன்! சில நேரங்களில் ஒரே ஒரு கவிதை கூட தடுத்து நிறுத்திவிடும். அதற்குமேல் தாண்டமுடியாது. அவ்வளவு சிறந்த கவிதைகளாக அமுக்கி பார்த்து தேடித்தேடி பொறுக்கி போட்டு கொடுத்திருக்கிறார்.

கவிஞர் முகுந்த் நாகராஜனைப்பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சில கவிதைகள் கூட அங்கிமிங்குமாக வாசித்திருக்கிறேன். ஆனால் இந்தத்தொகுப்பில் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிற கவிதைகளை வாசித்த பிறகு இவ்வளவு நாளாக இவரை முழுமையாக தேடி வாசிக்காமல் விட்டுட்டோமோ என்று வருத்தப்பட்டு உடனே அவருடைய தொகுப்பை ஓடிப்போய் வாங்கி உடனே அவசரமாக படித்தேன். படித்ததும் அவ்வளவு பிடித்துவிட்டது. ஒன்றிரண்டை வாசிக்கும்போதே அவ்வளவு பரவசமாக உணர்ந்தேன். சாம்பிளுக்கு முகுந்தின் கவிதை ஒன்று…

தலைப்பு – ஜன்னல் சீட்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச்சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்
இதெல்லாம் ஒரு காரணமா?

இப்படி ஒரு கவிதையை படித்துவிட்டு அந்த கவிஞனின் கவிதைகளை தேடிப்போய் வாசிக்காவிட்டால் அந்தபாவத்தை கழுவ வாரணாசியில் போய் தேர்தலில் போட்டியிடவேண்டியிருக்கும்! ஒரு கவிஞனின் ஆகச்சிறந்த கவிதைகளை தொகுப்பதென்பது எத்திராஜ் கல்லூரி வாசலில் இருக்கிற டீக்கடையில் நின்று ஒரே ஒரு அழகியை மட்டும் தேர்ந்தெடுத்து சைட் அடிப்பதற்கொப்பானது! அதை ரொம்பவே பொறுப்போடு செய்திருக்கிறார் செல்வராஜ் ஜெகதீசன்.

இத்தொகுப்பு முழுக்க எல்லாவிதமான கவிதைகளும் உண்டு. காதல் கவிதைகளில் தொடங்கி, பெண்ணியம், நகைச்சுவை, சோகம், கோபம், ஆத்திரம், கம்யூனிசம், தலித்தியம், நகைச்சுவை என எல்லா துறைகளிலுமான கவிதைகள் காணக்கிடைக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் எத்தனைவிதமான கருப்பொருள்கள். உலகம் சுற்றும் வாலிபனில் புரட்சிதலைவர் கண்டுபிடித்த ‘’கேப்சூயுலில் அடக்கி வைக்கப்பட்ட மின்னல் சக்தி’’யைப்போன்றவை இத்தொகுப்பிலிருக்கிற கவிதைகள். எல்லாமே படித்து முடிக்கும்போது டமால் டமால் என உள்ளுக்குள் வெடிக்கின்றன.

மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதையை படித்துவிட்டு ஒருநாள்முழுக்க அதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு அற்புதமான கணத்தை நாலுவரியில் அடக்கி கொடுத்திருக்கிறார்.

அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்கள் முன்னால்
அழக்கூடாது

சில கவிதைகள் நாலைந்து வரிதான். ஆனால் படித்துவிட்டு அதை கடக்கமுடியாமல் திணறிப்போக நேர்ந்தது. அதனாலேயே அடுத்த முறை படிக்கும்போது அவற்றை அப்படியே கண்டும்காணாமல் கடந்து ஓடிவிடுவேன். குறிப்பாக இந்தக்கவிதை.

கிறுக்கு பிடித்த பெண்ணை
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி
அதற்கு முன் இவளை
புஷ்பவதியாக்க
இறை மணம் துணிந்ததே எப்படி?

கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் கவிதை இது.

ஞானகூத்தனின் தமிழ்தான் மூச்சு, பிரமிளின் சிறகிலிருந்து பிரிந்து இறகு, வண்ணதாசனின் மனசு குப்பையாச்சு மாதிரி புகழ்பெற்ற கவிதைகளும் தொகுப்பில் உள்ளன. சமகால நவீன கவிதைகளுக்குள் நுழைய விரும்புகிற யாரும் இந்நூலை ஆளுக்கு ஒன்று வாங்கி பத்திரப்படுத்தலாம். நேரங்கிடைக்கும்போது பொறுமையாகவே வாசிக்கலாம். நம்மை ரொம்பவும் கவர்ந்த கவிஞரின் கவிதை உலகத்திற்கு நுழைவதற்கான டிக்கட் இத்தொகுப்பில் நமக்கு கிடைக்காலாம். ஒவ்வொரு கவிஞரும் எழுதிய தொகுப்புகளின் விபரங்களும் இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் கொடுத்திருப்பதால் தேடவேண்டிய அவசியமிருக்காது.

இந்நூல் கவிதைகளை எப்படி வாசிக்கவேண்டும், எப்படி அணுக வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக்கொடுப்பதில்லை. அப்படி கற்றுக்கொடுக்கவும் யாராலும் முடியாது. இந்நூல் சிறந்த கவிதைகளில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து இந்த டேஸ்ட் பண்ணிப்பாரு என்று நீட்டுகிறது. அது பிடித்திருந்தால் அடுத்தடுத்து நகரலாம். நூல் முழுக்க ஒவ்வொரு கவிஞரைப்பற்றியும் அவருடைய கவிதைகள் குறித்த அறிமுகமும், கவிதை கவித்துவம் மாதிரி விஷயங்களைப்பற்றி பல்வேறு கவிஞர்களின் விளக்கங்களும் கூட இந்நூல் முழுக்க இடம்பிடித்துள்ளது.

நூலில் தமிழில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிற சில முக்கியமான கவிஞர்கள் விடுபட்டிருப்பதாக தோன்றியது. உதாரணத்திற்கு கதிர்பாரதி (நிறைய விருதுகள் வென்ற இளம் கவிஞர்) இளைஞர்களுக்கும் இட ஓதுக்கீடு கொடுத்திருக்கலாம். நூல் முழுக்க எல்லாமே எபவ் 40 கவிஞர்களாக இருந்தது போலொரு… அதைவிடுங்கள் அட்டையில் 50 கவிஞர்களின் 400 கவிதைகள் என்று போட்டிருந்தாலும் நூலில் 44கவிஞர்களின் கவிதைகள்தான் இருந்தன. 400 கவிதைகள் இருந்ததா என்றெல்லாம் எண்ணிப்பார்க்கவில்லை.

இருந்தும் இதை செய்வதற்கே மிகப்பெரிய உழைப்பும் மேம்பட்ட ரசனையும் தேவை அந்தவகையில் செல்வராஜ் ஜெகதீசனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அவருடைய வாசகமனம் வாழ்க!

03 May 2014

பன்றியும் ஃபன்ட்ரியும்




மகாராஷ்டிராவில் நடந்த ஒரு கொலை அம்மாநிலத்தையே அதிரவைத்திருக்கிறது. பதினோறாம் வகுப்பு படிக்கும் 17 வயது தலித் இளைஞன் ஒருவன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறான். அகமத்நகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் கடந்த 2014 ஏப்ரல் 27ம் தேதி அன்று அவனோடு பள்ளியில் படிக்கிற சக மாணவியோடு பேசிக்கொண்டிருந்திருந்த போது அவ்வழியாக போய்க்கொண்டிருந்த அப்பெண்ணின் அண்ணன், தன்னுடைய இரண்டு நண்பர்களோடு சேர்ந்து அந்த இளைஞனை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அடித்தது போதவில்லை என்று தலித் மக்கள் அதிகம் வசிக்கிற காடா என்கிற கிராமத்திற்குள் அந்த இளைஞனை தரதரவென இழுத்துச்சென்று ஊருக்கு மத்தியில் இருக்கிற மரத்தில் உயிரோடு ரத்தவெள்ளத்தில் தூக்கில் தொங்கவிட்டு கொன்றிருக்கிறார்கள். அவனுடைய கொலைக்கு காரணம் வெறும் காதல் மட்டுமல்ல, அதற்கு பின்னால் இருப்பது அப்பட்டமான ஆதிக்கசாதிவெறி! இக்கொலையை அடுத்து அந்த மூவரும் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் தர்மபுரியை சேர்ந்த இளைஞன் ஒருவனும் காதல் விவகாரத்தில் இறந்துபோனதும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களும் கூடவே நினைவுக்கு வந்துபோயின. இதுமாதிரி சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ''இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா?'' என்று எப்போதும் சொல்லிக்கொண்டு அலைகிற ANTI-இட ஒதுக்கீடு பேசுகிற ஆட்களும் கூடவே நினைவுக்கு வருவார்கள். அவர்களுடைய சரிநிகர் சமான உலகத்தில் சாதி கிடையாது மதம் கிடையாது, அடக்குமுறைகள் கிடையாது. எங்கும் அன்பு வியாபித்திருக்குமோ என்னமோ! ஆனால் உண்மை வேறு மாதிரி இருக்கிறதில்லையா. இதுமாதிரியான தொடர் சம்பவங்கள் நம்முடைய சமூகத்தை பீடித்திருக்கிற சாதிய அடக்குமுறையின் கோர முகத்தை அவ்வப்போது வெளிகாட்டிக்கொண்டேதான் இருக்கின்றன.

தமிழகத்தைப்போலவே தலித்துகள் மீதான அடக்குமுறையில் முன்னிலை வகிக்கிற இன்னொரு மாநிலம் மஹாராஷ்டிரா. நம்மை விடவும் அங்கே நிலைமை மோசம் என்கிறார்கள். அப்படிப்பட்ட மாநிலத்திலிருந்து தலித்துகளின் வாழ்க்கை குறித்து மிக தைரியமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ''பன்ட்ரி''(FANDRY). நம்முடைய கிராமங்களில் மலம் அள்ளுவதைப்போல் மிகமோசமான வேலைகளை செய்து ஜீவிக்கிற ஏழை தலித்துகள் இன்னமும் என்னமாதிரியான அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதைப்பற்றி சிறப்பாக பேசியிருந்த படம் இது. குறிப்பாக கல்விகற்க பள்ளிக்கு செல்கிற தலித் குழந்தைகளின் நிலையை அசலான காட்சிகளாக இத்திரைப்படம் முன்வைக்கிறது.

பதின்பருவத்து தலித் சிறுவனான ஜாப்யாவின் வாழ்க்கை தான் இந்த ஃபன்ட்ரி. சிறிய கிராமத்தில் வசிக்கிற ஏழை தலித் குடும்பம் ஜாப்யாவினுடையது. ஊரில் இருக்கிற சாக்கடைகளை சுத்தமாக்குவதில் தொடங்கி சகல சில்லரை வேலைகளையும் செய்து ஜீவிக்கிறவர் ஜாப்யாவின் அப்பா. வறுமையோடு போராடிக்கொண்டே பள்ளியில் படிக்கிற சிறுவனான ஜாப்யா ஊருக்குள் தலித் என்கிற ஒற்றை அடையாளத்தினால் தினம் தினம் அவமானங்களை சந்திக்கிறான். சிறுவனாக இருந்து இளைஞனாக மாறுகிற பதின்பருவத்தில் அவனை சுற்றி நடப்பது ஒரளவு புரிய ஆரம்பிக்கிறது. தலித் என்பதால் அவன் மீது திணிக்கப்படுகிற அவமானங்கள் தரும் வலியை உணரத்துவங்குகிறான். அந்த உணர்வு அவனை வாட்டியெடுக்க... அதைத்தொடர்ந்து அவன் எடுக்கிற முடிவும்தான் இப்படத்தின் கதையாக விரிகிறது.

ஃபன்ட்ரி என்ற சொல்லுக்கு தமிழிலும் பன்றி என்றுதான் பொருள். அந்த பெயரில்தான் படம் முழுக்க தன்னுடைய பள்ளி தோழர்களால் ஜாப்யா அழைக்கப்படுகிறான். அவனுடைய குடும்பத்தையும் அந்த ஊரில் சாக்கடைகளில் புரளும் பன்றிகளையும் ஒரே மாதிரியாகத்தான் ஆதிக்கசாதியினர் நடத்துகிறார்கள். படம் முழுக்கவே அவமானங்களாலும் அதனால் உருவாகிற அடர்த்தியான மௌனங்களாலும் நிறைந்திருக்கிறது.

தீண்டாமை பள்ளி மாணவர்களுக்கு மத்தியிலும் செயல்படுவதை ரொம்பவும் நாசூக்காக படமாக்கியிருப்பார் இயக்குனர். அதை பிரச்சாரமாக திணிக்காமல் மைக் போட்டு கதறாமல் பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் மனதை உறையவைக்கிற காட்சிகளாக சொல்லிச்செல்வதே இப்படத்தை உன்னதமான படைப்பாக மாற்றுகிறது. நாயகனின் கனவுகள் அத்தனையும் இறுதிக்காட்சியில் உடைந்து நொறுங்குவதும், தன்னுடைய அடையாளத்தின் மீதான அவனுடைய கோபமும் யாரையும் கலங்கடிக்கக்கூடியது.

க்ளைமாக்ஸில் ஜாப்யாவின் குடும்பம் பன்றிவேட்டை ஆடுவதும், அதை ஜாப்யாவின் சக பள்ளிதோழர்களும் அந்த ஊரும் சிரித்துக்கொண்டே ரசிப்பதும் அதைத்தொடர்ந்து வருகிற ஜாப்யாவின் கோபமும் முகத்திலறையும்படி படமாக்கப்பட்டிருக்கும். ஒரு பன்றியை ஜாப்யாவும் அவனுடைய அப்பாவும் வழிமறித்து நிற்கையில் அருகிலிருக்கிற பள்ளியிலிருந்து தேசியகீதம் இசைப்பது கேட்க இருவரும் அசையாமல் அப்படியே அங்கேயே நின்றுவிடுகிற காட்சியில் எவ்வளவு தீர்க்கமான அரசியல் இருக்கிறது. சமூகநீதி இட ஒதுக்கீடு குறித்தெல்லாம் தப்புதப்பாக புரிந்துவைத்திருக்கிற இளம் தலைமுறை கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று. ஃபன்ட்ரி படத்தின் இயக்குனர் மராத்தி இலக்கியம் படித்தவராம். அவரும் ஒரு தலித்துதான் என்பதால் தன்னுடைய பால்யத்தில் தன்னுடைய ஊரில் தனக்கு நிகழ்ந்ததைதான் படமாக்கியதாக குறிப்பிடுகிறார்.

எழுத்தாளர் மலர்வதி எழுதி சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘’தூப்புக்காரி’’ நாவல் கிட்டத்தட்ட இதே பிரச்சனையை இதே பாணியில் பேசியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தலித் பெண் ஒருத்தியின் பார்வையில் அவளுடைய பால்யமும் முதல் காதலும் அதன் தோல்வியும் பேசப்பட்டிருக்கும். ஃபான்ட்ரியை கூட அப்படியே வசனம் கூட மாற்றாமல் தமிழில் எடுக்க சாத்தியங்களுண்டு. ஆனால் இப்படத்தை நிச்சயமாக தமிழில் யாரும் ரீமேக் செய்யமாட்டார்கள். எடுத்தால் நிச்சயம் வெளியாகாது என்கிற பிரச்சனையும் உண்டு. ஆனால் இப்படிப்பட்ட படங்களுக்கான தேவை நமக்கு முன்பைவிடவும் அதிகமாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

தமிழில் தலித்துகளின் மீதான அடக்குமுறை குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உண்டு. மிகவும் குறைவுதான். ''ஒண்ணா இருக்க கத்துக்கணும்'' ''வரவு எட்டணா செலவு பத்தணா'' மாதிரி படங்களில் இயக்குனர் வி.சேகர் தலித்துகளின் வாழ்க்கையை கதாபாத்திரங்களாக ஒரளவு சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார். கவனித்துப்பார்த்தால் இவ்வேடங்களில் வடிவேலுவும் கவுண்டமணியும்தான் அதிகமாக நடித்திருப்பார்கள். ‘’பச்சை என்கிற காத்து’’ என்ற திரைப்படம் தமிழில் வெளியான தலித்துகள் குறித்த படங்களில் மிகமுக்கியமானது. அதில் தலித்துகளுக்குள் இயங்குகிற அரசியல் செயல்பாடுகள் குறித்து விரிவாக விமர்சிக்கப்பட்டிருக்கும். அரசியல்வாதிகள் எப்படி தலித்துகளை பயன்படுத்துகிறார்கள் என்பது பதிவுசெய்யப்பட்டிருக்கும்.

பாலாஜிசக்திவேலின் ‘’காதல்’’ திரைப்படத்தில் வருகிற பரத் பாத்திரம் ஒரு தலித் என்பதற்கான அடையாளங்களோடிருந்தாலும் ஒருசில காட்சிகள் தவிர்த்து அந்த அடையாளம் தவிர்க்கப்பட்டேயிருக்கும். அப்படத்தின் இறுதிகாட்சியில் வருகிற வசனங்கள் தீண்டாமையை நாசூக்காக தொட்டுச்செல்லும். தேசிய விருதுபெற்ற சீனுராமசாமியின் முதல் படமான ‘’கூடல்நகரில்‘ நாயகன் தலித்துதான் என்றாலும் தீண்டாமை இருக்காது. பெரும்பாலான நேரங்களில் தலித்துகள் விசுவாசமான வேலைக்காரனாகவும் நாயகன் ஹீரோயிசம் காட்டுவதற்காக அடிவாங்குகிறவராகவுமே இருந்திருக்கிறார்கள். அசலான தலித்தும் அவனுடைய வாழ்க்கையும் முழுமையாக பதிவுசெய்யப்படாமலே இருப்பது சோகம்தான்.


*****