Pages

22 August 2014

உல்லாச கப்பல் பயணம்




உல்லாசம் என்கிற சொல்லுக்கான பொருளையே தினத்தந்திகாரர்கள் மாற்றிவைத்திருக்கிறார்கள். அதனால் உல்லாசம் என்கிற சொல்லை வாசித்ததுமே உள்ளுக்கு ஒரு கள்ளக்காதல்கதை இயல்பாகவே ஓட ஆரம்பிக்கிறது இல்லையா? ஆனால் அது குழந்தைகளுக்கான சொல், அச்சொல்லை குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூல்களிலும் பூந்தளிர் மாதிரியான இடங்களிலும் அடிக்கடி வாசிக்க முடியும். காமிக்ஸ் ரசிகரான கிங்விஸ்வா தான் பதிப்பித்திருக்கிற முதல் நூலுக்கு ‘’உல்லாச கப்பல் பயணம்’’ என்று வைக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யம்.

சிங்கப்பூரை சேர்ந்த கிருத்திகா எழுதியிருக்கிற ‘பயண நாவல்’ இது. பயண அனுபவ கட்டுரையாகவே எழுதியிருக்கலாம். ஆனால் ஏனோ அதை நாவலாக எழுதியிருக்கிறார் கிருத்திகா. தமிழில் பயணக்கட்டுரைகள் மிகவும் குறைவு. ஆனாலும் படிக்கும் போது நமக்கு நாவல் படிக்கிற உணர்வே இல்லை பயணக்கட்டுரை படிப்பதுபோலவேதான் இருந்தது இந்த நாவலின் சிறப்பு.

மன்மதன் அம்பு படத்தில் வருமே உல்லாச கப்பல் என்கிற CRUISE.. அதுதான் இந்த நூலின் பின்னணி. சிங்கப்பூரிலிருந்து கிளம்பும் ஒரு பயணக்கப்பலில் பயணிக்கும் சிலருடைய நேரடி அனுபவஙளின் தொகுப்பு இது. மையமாக ஒரு கதையும் போகிறது. உண்மையில் கதையில் இல்லாத சுவாரஸ்யம் நூல் முழுக்க தொகுக்கப்படும் கப்பல் குறித்த தகவல்களில் கிடைக்கிறது. நிறைய படங்களும் உண்டு. கப்பலுக்குள்ளேயே தியேட்டர் ,நீச்சல் குளம், மால், விளையாட்டு அரங்கம், மைதானம் என ஐந்துநாட்களும் அவர் அனுபவித்த கண்ட கேட்ட விஷயங்களை ஒன்று விடாமல்… ஐ ரீபிட் ஒன்றுவிடாமல் நேரடியாக தொகுத்திருக்கிறார். (எதையுமே விட்டுவிடக்கூடாது என்கிற வேட்கையோடு உழைத்திருப்பதை இந்நூலை வாசிக்கும்போதே உணர முடியும்)

ஒருவேளை உங்களிடம் நிறைய பணமிருந்து (எப்படியும் ஒரு குடும்பத்திற்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ஆகுமாம்!) நீங்களும் இதுபோல போகவிரும்பினால் கையில் இந்த நூலை வைத்துக்கொள்வது நல்லது. ஒரு கைடு போல உபயோகப்படும். இதுபோன்ற ஒரு காஸ்ட்லி பயணத்திற்கு தேவையான முன்னேற்பாடுகள், அங்கே செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை ஜாக்கிரதையாக இருக்க வேண்டியவை என நிறைய தகவல்கள் உண்டு. அல்லது வாழ்க்கையில் எப்போதும் போகவே வாய்ப்பில்லையென்றாலும் படித்து மகிழலாம். நிறைய கலர் படங்கள் உண்டு.

இந்நூலை எழுதியிருக்கும் கிருத்திகாவுக்கு மொழி மிகவும் எளிமையாக கைகூடி வந்திருக்கிறது. இந்த மொழி குழந்தைகளுக்கானது. நூல் முழுக்கவே ஆங்கிலக்கலப்பின்றி தமிழிலேயே எல்லா விஷயங்களை எழுதியிருக்கிறார் என்பது முக்கியமானது. தமிழில் எழுதிய சில ஆங்கில சொற்களுக்கான பட்டியலையும் இறுதியில் இணைத்திருக்கிறார்கள்.

இதுவே படிக்க ஜாலியாக இருந்தாலும் இந்த பின்னணியில் ஒரு அற்புதமான க்ரைம் த்ரில்லர் எழுதியிருந்தால் அப்படியே காமிக்ஸ் நூலாகவே மாற்றியிருக்கலாம். அல்லது வளர்ந்த சிறார்களுக்கான (TEENS) கதையாகக்கூட எழுதியிருக்கலாம்.

நூல் – உல்லாச கப்பல் பயணம்
கிருத்திகா
தமிழ்காமிக்ஸ் உலகம் பதிப்பகம்
விலை – 200

21 August 2014

கதை திரைக்கதை வ....சனம் இயக்கம்




எப்படிப்பட்ட இயக்குனரின் படத்திலும் வெண்ணிற ஆடை மூர்த்தி தனித்து நிற்பார். ஆனால் டீஆர் படத்தில் அவராலும் கூட தப்பமுடியாது. டீஆர் படத்தில் எல்லோருமே டீஆரைப்போலவே விரலை காற்றில் ஆட்டி ஆட்டி முகத்தை அப்படி இப்படி திருப்பி அடித்தொண்டையில் வசனம் பேசிதான் நடிக்க வேண்டியிருக்கும். அவர்கள் சீரியஸாக நடித்தாலும் பார்க்கிற நமக்கு காமெடிக்கும் ஜாலிக்கும் குறைவிருக்காது. டிஆர் இப்போதெல்லாம் படமெடுப்பதில்லை.

அந்தக்குறையை போக்கும் வகையில் சமீபத்தில் ஒரு படம் திரைக்கு வந்திருக்கிறது. நியூவேவோ எதோ அந்த வகையில் வந்திருக்கும் அதிநவீன மெட்டா சினிமா இது என்று ஆளாளுக்கு அலப்பறையை கொடுக்க நானும் ஆவலுடன் வாயை ஆவென்று வைத்துக்கொண்டு படத்தை பார்த்தேன். அஞ்சானால் இது அலுப்பு மருந்தாகியிருக்கிறது போல!

படத்தின் நடித்திருக்கிற சகலரும் நடிகர் பார்த்திபனைப்போலவே நடிக்கிறார்கள். அவரைப்போலவே கஷ்டப்பட்டு பொழுதன்னைக்கும் ‘’வித்தியாசமாக’’ பேசுகிறார்கள். (டீ கேட்கும் போது கூட) பேசுகிறார்கள். பேசு…………….கிறார்கள். பே……சுகிறார்கள். பேசுகி…..றார்கள். படத்தின் பெயரை வசனம்,வசனம்,வசனம்,இயக்கம் என்று வைத்திருக்கலாம். அவ்வளவு வசனம். அதிலும் ‘’கொய்யா பழமில்ல இது கொய்த பழம்தான்’’ , வடையை கீழே போட்டு இந்தா உளுந்த வடை என்று சிரிக்கிறார்கள், அவர் பாணியிலேயே சொல்வதென்றால் காதில் ரத்தம் வர (பா)வ(ம்)சனங்கள்.

படத்தின் முதல்பாதி முழுக்க தமிழ்சினிமாவின் க்ளீஷே பற்றியே பேசிபேசிபேசி… இரண்டாம்பாதியில் அத்தனை க்ளிஷே விஷயங்களையும் வைத்து ஒரு கதை பண்ணுகிறார் படத்தில் வருகிற இயக்குநர். அந்த ரொம்ப சுமாரான கதையை…

விட்டா பேசிட்டே போறீங்க… படத்தில் ப்ளஸ்பாய்ண்டே இல்லையா?

இருக்கிறது. நிறையவே. கச்சிதமான பாத்திரங்கள், சுருளியாக வருகிற அந்த பையன், கண்களில் பிராந்தியும் குரலில் போதையுமாக ஹீரோயின்கள், ஆங்காங்கே பளிச்சிடும் ப்ரைட்டான ஐடியாக்கள், தமிழ்சினிமாவின் மீது வைக்கிற தைரியமான விமர்சனங்கள், கொரியன் ஜாப்பனீஸிலிருந்து சுடாத ஒரிஜினல் கதை, காற்றில் கதை இருக்கு என அதிரும் இசை என இருக்கு… பாஸிட்டிவ் நிறைய இருக்கு. ஆனால் 120 ரூப்பீஸ் கொடுத்து படம் பார்ப்பது என்பது எப்படி சிறப்பா படம் எடுக்கணும்னு அட்வைஸ் கேட்கறதுக்கு இல்லைதானுங்களேஜி?

படம் பார்த்துக்கொண்டிருந்த போது தியேட்டரின் ஒரு மூலையில் இருந்த குறிப்பிட்ட சிலர் மட்டும் ஜோக்குகளுக்கு சிரிக்கிறார்கள். வசனங்களுக்கு கை தட்டுகிறார்கள். மற்றவர்கள் அதை திரும்பி திரும்பி காரணம் புரியாமல் முழிக்கிறார்கள். இது சினிமாகாரர்களுக்கும் விமர்சகர்களுக்குமான படம் என்பது மட்டும் புரிந்தது. அவ்வகையில் இப்படம் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் கலாம்.. பிடிக்.

(எழுதியதை திருப்பி வாசிக்க ஆரம்பித்தால் அய்யோ படம் பார்த்த எனக்கே அந்த வித்யாச வசன வியாதி தொத்திக்கிச்சிபோல… டீஆரின் வீராசாமியை பார்த்து பழைய நிலைக்கு பம்ருதி ம்டுண்வே)

19 August 2014

கருவாட்டு நாற்றம்




கோயம்பேடு காய்கனி சந்தையில் விதவிதமான கருவாடுகள் மிக அதிக அளவில் விற்கப்படுவதாகவும் இதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் அஷௌகர்யம் உண்டாவதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தின பத்திரிகை குமட்டிக்கொண்டே செய்தி வெளியிட்டது.

1996ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஷட்டப்படி காய்கறி சந்தையில் காய்கறி மட்டும்தான் விற்கப்படவேண்டும் என்கிற சட்டத்தை மீறி இப்படி ஷைவ உணவு ஷாப்பிடுபவர்களுக்கு ஷங்கடம் வரும்படி கருவாடு விற்பது முறையா என்று அந்த செய்தி நீண்டிருந்தது. இதையடுத்து நேற்று மாநகராட்சியினர் கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்து பல லட்சரூபாய்.. மன்னிக்கவும் ரூபாய் இருபதாயிரம் மதிப்புள்ள பல ஆயிரம் டன் கருவாடுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து ஷைவ உணவு ஷாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து வருங்காலத்தில் இங்கே கருவாடு விற்றால் கடை உரிமத்தையே ரத்து செய்துவிடுவோம் என்கிற மிரட்டலும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக கருவாடு விற்ற 18 கடைகளில் முதலாளிகளுக்கும் விடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இருப்பத்தெட்டு ஆண்டுகளாக நானும் என்னுடைய குடும்பத்தினரும் கருவாட்டினை விரும்பி உண்டு வருகிறோம். எனக்கெல்லாம் கருவாடு என்பது என்னோடே வளர்ந்து ஒரு தம்பி மாதிரி. தினமும் என்னோடு இருந்திருக்கிறான். ஒரு சட்டி பழைய சோற்றை கூட ஒரு துண்டு கருவாடிருந்தால் உற்சாகமாக சாப்பிட்டுவிட முடியும். காலை ப்ரேக்ஃபாஸ்ட் அப்படித்தான் நமக்கெல்லாம் இருந்திருக்கிறது. கறிசோறுதராத ருசியை கருவாட்டுக்குழம்பு தந்துவிடும்.

கோவையில் உக்கடம் பகுதியில் கருவாடுக்கென்றே பிரத்யேகமான சந்தை உண்டு. அங்கு போனால் உலகின் எவ்வகை கருவாடும் சல்லிசு ரேட்டில் கிடைக்கும். அம்மாவுக்கு நங்கு கருவாடு, எனக்கு நெத்திலி, தங்கைக்கு துண்டுகருவாடு , வவ்வா, கொடுவா அவா இவா என கருவாடுகளில் நிறைய வெரைட்டி உண்டு.

சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்ட பின் இந்த கருவாடு சந்தையை ரொம்பவே இழந்திருந்தோம். அண்ணாச்சி கடையில் கூட பாக்கெட் கருவாடு கிடைக்கும். தக்னியூண்டு துண்டு வெரி சுமால் கருவாடு இரண்டு பீஸ் ஐந்து ரூபாய் என்று அநியாய விலைக்கு விற்றார்கள். அதைவாங்கி குழம்பு வைக்கவும் முடியாது. சுட்டுதிங்கவும் முடியாது. நல்ல ஃப்ரஷ்ஷான நெத்திலி கருவாடு கிடைக்காது. நங்கு கருவாடு கிடைக்காது. அம்மாவுக்கு தினமும் சாப்பாட்டோடு ஒரு சின்ன துண்டு கருவாடு இல்லையென்றால் ஒருவாய் கூட உருப்படியாக இறங்காது. அம்மாவின் வருத்தம் அதிகமான ஒருநாளில் பக்கத்துவிட்டு ஆன்ட்டி ஒருவரது தகவலின்பேரில் கி.பி.2007 தொடங்கி கோயம்பேடு சந்தையில் கருவாடு வாங்கத்தொடங்கினோம். (வடசென்னையில் நிறைய கருவாட்டு சந்தைகள் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் முகப்பேரிலிருந்து அம்மாவை அழைத்துப்போய் போய்வருவதற்குள் தாவூ தாராந்துடும். வானகரம் மீன் சந்தையில் விற்கிற கருவாடுகளில் சுவை குறைவு விலை அதிகம். பேரம் பேசி மாளாது.)

கோயம்பேடு காய்கனி சந்தையில் இருக்கிற நூற்றுக்கணக்கான கடைகளில் வெறும் பத்து பதினைஞ்சு கடைகளில்தான் கருவாடு விற்கப்படும். மிக குறைந்த அளவிலேயே விற்கப்படும். அதுவும் மளிகை கடைகாரர்களுக்கு விற்க பாக்கெட்டில் அடைத்துவைத்த கருவாடுகளே கிடைக்கும். ஊரில் விற்பதுபோல நன்றாக குவித்து வைத்து பரப்பியெல்லாம் மணக்க மணக்க விற்கமாட்டார்கள். கருவாடுக்கென்று இருக்கிற கொஞ்ச நஞ்சமரியாதையையும் உறிஞ்சிவிட்டுத்தான் இங்கே விற்கிறார்கள். கருவாட்டின் மணம் பார்க்காமல் எப்படி வாங்கவது. இருந்தாலும் கோயம்பேடுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அங்குதான் மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வது நம்முடைய வழக்கம்.

இந்த கருவாட்டு கடைகளில் வாசனை சுத்தமாக இருக்காது. இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இருந்து நான் கண்டதில்லை. அதே பகுதியில் அழுகின காய்கனிகளின் நாற்றம்தான் குடலை கிழித்துக்கொண்டு குமட்டும்! அந்த உச்சபட்ச துர்நாற்றத்தை பொருத்துக்கொள்கிற ஒருவரால் உலகின் எந்த நாற்றத்தையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் என்னமோ இந்த நாலுபாக்கெட் கருவாட்டினால்தான் நாட்டுக்கு தீங்கு விளைந்துவிட்டது போல… அதைதான் இப்போது துப்பறிந்து கண்டறிந்து செய்தி வெளியிட்டு ஷூத்தப்படுத்தியிருக்கிறார்கள். கருவாட்டை விற்று விதிமுறைகளை மீறிவிட்டார்களாம்?

என்னிடம் இப்போது தொக்கி நிற்கிற முதற்கேள்வி ‘இனி நானும் என் தாயும் கருவாட்டுக்கு என்ன செய்வோம்? எங்க போவோம்...?’ என்பதுதான். நாளை முதல் மீண்டும் அந்த அண்ணாச்சி கருவாடு விற்றால் (அவரும் கோயம்பேட்டில் கொள்முதல் பண்றவர்தான்) வாங்கி ஒரு துண்டோ இரண்டுதுண்டோ வாங்கி நக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

ஒருவேளை இனி ஷூத்த பத்தமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி சாப்பிடப்போகிற ஷைவ பட்சிணிகள் ஒன்று சேர்ந்து முகப்பேர் பக்கம் என்னை போன்ற ஏழை கருவாட்டு ப்ரியர்களுக்காக ப்ரத்யேக சந்தை கட்டிக்கொடுப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது.

தேனிமுருகன்




தேனிமுருகன் தமிழ்சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளாத மிகநல்ல குணசித்திர நடிகர். முகத்தில் அப்பாவித்தனமும் குரலில் லேசாக் க்ரீச்சிடும் தெனாவெட்டுமாக அசலான மதுரை மனிதராக நிறைய திரைப்படங்களில் வடிவேலுவோடு சின்னச்சின்ன நகைச்சுவை வேடங்களில் வலம்வருவார். ஆனால் சீரியஸ் நடிப்பிலும் அசத்தக்கூடியவர்.

பண்ணையாரும் பத்மினியும் ‘குறும்படம்’ பார்த்ததுண்டா? அதில் பண்ணையாராக இவர்தான் நடித்திருப்பார். அக்குறும்படம் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது இவருடைய பாத்திரத்தில் நடித்த ஜெயபிரகாஷ் நன்றாகவே நடித்திருந்தார், ஆனால் குறும்படத்தில் நாயகனாக நடித்த தேனிமுருகனின் முகத்தில் நிரம்பியிருந்த கருணையும் அன்பும் கிராமத்து பெரிசுகளுக்கே உரிய வெள்ளந்தித்தனமும் நிச்சயமாக இல்லைவே இல்லை.

ப.பத்மினி திரைப்படம் சுமாராக போனதற்கு அதுவும் ஒருகாரணம், ஜெபியிடம் இயல்பாகவே இருக்கிற ஒரு கம்பீரம் அவர் என்னதான் வெள்ளந்தியாக நடித்தாலும் முந்தித்தெரிவது பெரிய சறுக்கலாக இருந்தது. தேனி முருகனை ஏனோ பண்ணையார் பத்மினியும் படத்தில் சின்ன பாத்திரத்திலும் கூட உபயோகிக்கவில்லையே என படம் வந்த போதே வருத்தமாக இருந்தது. படக்குழுவினருக்கு என்ன காரணமோ என்ன பிரச்சனையோ. போகட்டும்.

அதற்கு பிறகு தேனி முருகனை எந்த திரைப்படத்திலும் பார்த்த நினைவில்லை. சென்ற வார நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில்தான் அவருடைய குறும்படம் ஒன்றை பார்க்க வாய்த்தது. நல்ல கலைஞன் தனக்கு எப்போது வாய்ப்புக்கிடைத்தாலும் அதில் நிச்சயமாக தனித்து பிரகாசிப்பான் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் தேனிமுருகன்தான். அதை நிரூபிப்பதாக இருந்தது ‘’குலசாமி உத்தரவு’’ என்கிற அவர் நடித்த அந்த 10நிமிட குறும்படம்.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கடந்த வாரங்களில் சிறுகதை ரவுண்ட் நடந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் மாஞ்சு மாஞ்சு நம்ம மக்கள் சுஜாதா கதையே படமாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது பெரிய வருத்தமிருந்தது… ஆனால் சிறுகதை ரவுண்ட் முடிந்து கிராமத்து ரவுண்டில் இமையத்தின் அருமையான சிறுகதைகளில் ஒன்றோடு வந்திருந்தார் அந்த (பெயர் நினைவில்லை) இயக்குனர் ஆச்சர்யமாக!.

அந்த கதையை முன்பே வாசித்ததுண்டு. திருடுவதற்கு செல்கிற கிராமத்து ஏழை திருடன் , அவனுடைய குலவழக்கப்பட்டி திருடுவதற்கு குலசாமியிடம் உத்தரவு வாங்க காத்திருப்பான் ஏனோ அன்று உத்தரவு (பல்லி கத்துவது) கிடைக்காது. அவனுடைய புலம்பல்களும் அதன்வழியே அவன் சொல்கிற அவனுடைய வாழ்க்கையும் சமூக விமர்சனமுமாக கதை நகரும். இதை ஒரே ஷாட்டில்.. ஒரே ஒரு லொகஷேனில் மிக அருமையாக படமாக்கியிருந்தனர் இக்குறும்பட குழுவினர். (இன்னும் யூடியூபில் ஏற்றவில்லை போல.. ஏற்றியதும் நிச்சயமாக இணைப்பு தருவோம்). (இயக்குனரை தனியாக ஒரு கட்டுரை எழுதி பாராட்டலாம்)

ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிற இப்படத்தில் தேனிமுருகன் மட்டுமே பத்து நிமிடத்திற்கு புலம்பவேண்டும். அதிலும் பல்வேறு விதமான பாவனைகளை ஆல்மோஸ்ட் நவரசங்களையும் வெளிக்காட்டவேண்டும். வசனங்கள் இயல்பாக எங்கும் தடுமாறாமல் அடுத்தடுத்து வந்து விழ வேண்டும். உடல்மொழியில் லேசான அடர் நகைச்சுவை ஊடுபாவாக இருக்க வேண்டும். இத்தனையையும் சாத்தியமாக்கியிருந்தார் தேனி முருகன். குறும்படத்தை பார்த்து முடிக்கும்போது நிச்சயமாக நம்மையும் மீறி இயல்பாக அவருக்காக கைகள் தட்ட ஆரம்பிக்கும்.

சரியான வாய்ப்பு கிடைத்தால் அல்லது கொடுத்தால் இன்னொரு சிம்ஹாவாக இன்னொரு விஜயசேதுபதியாக நிச்சயம் பெரிய நடிகராக வரக்கூடிய சாத்தியமுள்ளவர். எல்லாத்துக்கும் நேரமும் காலமும் கூடிவரனுமில்ல.. அதுவுமில்லாம சினிமாவில் திறமையைவிட அதிர்ஷ்டமும் கொஞ்சம் அதிகமாவே வேணும். நிச்சயமாக தேனிமுருகனுக்கும் அந்த குலசாமி உத்தரவு சீக்கிரமே கிடைக்கணும்.

09 August 2014

சிவாஜிகணேசனின் முத்தங்கள்





நீங்கள் கவிதையை ரசிப்பவராக இருக்கலாம்? அல்லது உங்களுக்கு கவிதை என்கிற சொல்லை படித்ததும் வாமிட்டிங் சென்சேசனோடு தலைசுற்றலும் வரலாம்? கவிஞர்களை கொல்லும் வெறியோடு திரியலாம்?

நீங்க எப்படிப்பட்டவராக இருந்தாலும் உங்களால் கவிஞர் ‘’இசை’’யின் கவிதைகளை ரசிக்காமல் இருக்கவே முடியாது. அவரை பற்றி அவருடைய இந்த கவிதையே சொல்லிவிடும்.

***

நைஸ்

எதேச்சையாகப் பட்டுவிட்டது
உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன
இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா
முனிகள் பிறழ்ந்தனரா

இதற்காகத்தான் இப்படி
தேம்பித் தேம்பி அழுகிறார்களா
இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா
இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை
எதிர்க்கிறார்களா
செங்குருதியில் மடலிடுகிறார்களா

இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டைப்
போட்டு மூடுகிறார்களா

இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்துப் பிறன்மனைக்குள்
குதிக்கிறார்களா
இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா
கைவளை நெகிழ்கிறதா

இந்த நைஸிற்காகத்தான் “வைகறை வாளாகிறதா”
இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை
அன்பு செய்கிறார்களா
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை
எழுதி வைக்கிறார்களா
இதற்காகத்தான் தூங்கும்போது தலையில் கல்லைத்
தூக்கிப் போடுகிறார்களா
இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா

அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம், அதே நைஸ்தான் வேண்டுமோ.

****




உண்மைதானே? ஈஸியாக இருக்கிறதல்லா? படிக்க சுவாரஸ்யமாகவும் ஆழமாகவும் அதே சமயம் திருப்தியாகவும் இருக்கிறதுதானே? சமீபத்தில்தான் அவருடைய ‘’சிவாஜி கணேசனின் முத்தங்கள்’’ என்கிற தொகுப்பை வாசித்தேன். "சிவாஜிகணேசனின் முத்தங்கள்'' என்கிற தலைப்புதான் அதை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. முதலில் தேடி வாசித்ததும் அதைதான். உண்மையில் அது ஒரு அற்புதமான கவிதை. சிறுகதையாக கூட எழுதியிருக்கலாம். (நடிகர் சிவாஜிகணேசனுக்கும் அக்கவிதைக்கும் என்ன தொடர்பு என்பதை அச்சடித்தகாகிதத்தில் காண்க). ஆல்மோஸ்ட் ஐம்பது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எல்லா கவிதைகளுமே தனித்துவமானவை. அவருடைய மற்ற தொகுப்புகளையும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுபவை.

இசையின் கவிதைகள் எந்த அலங்காரமும் இல்லாமல் நிர்வாணமாக நிற்கிற அம்மணகுண்டி குட்டிப்பாப்பாவின் க்யூட்தனத்தோடு இருக்கின்றன. எழுதபடிக்க தெரிந்த எவருக்கும் பிடிக்கும் படியான கவிதைகளை எழுதுகிறார். மிகமுக்கியமாக அதை படித்ததும் புரிந்துவிடுகிறது. மறுபடியும் படிக்கும்போது வேறு மாதிரி புரிகிறது. ஒவ்வொரு முறையும் சேட்டன் கடை ‘அதே’ டீ விதவிதமான ருசியைத்தருவது போல.

எளிமையும் சுயஎள்ளலும் பகடியும் வாழ்க்கையை எப்போதும் ஒரு எகத்தாளத்தோடு அணுகுகிற எளிய கவிதைகள் இசையுனுடையவை. ஒருவேளை எம்ஆர் ராதா கவிதை எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பாரோ என்னவோ? இந்த கவிதை அவருடைய அந்த குணத்திற்கு நல்ல எவிடென்சாக இருக்கும்.

ஒரு ப்ரவுன் கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா?

“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில்
அவரது தொந்தி நிலத்தில் தேய்ந்து மோசமாக
மூச்சு முட்டியது

ஏழாவது முறையாக

குளியலறைக்குச் சென்று சல்லடை போட்டார்
தன் சக எழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில்
“பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு
அவரது பையையும் பரிசோதித்துவிட்டார்

ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு

காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்து
அதைக் கீழே தள்ளி விட்டிருக்கலாம்
கண்களைப் பிடுங்கிக் கீழே
வீசிப் பொறுமையாகத் துழாவினார்
பிறகு கண்களை நம்பாமல்
அவரே இறங்கிப் போனார்

அவர் ஒன்றும் தரித்திரக் கலைஞர் அல்ல
அவரிடம் இப்போதுகூட சுளையாக
500 ரூபாய் இருக்கிறது

ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும்
இடதுபுற எலாஸ்டிக் பட்டையில்
அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக
அவருக்குத் தெரியாது

நாம் அசட்டை செய்வது போலவோ
கிண்டலடிப்பது போலவோ
அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை

அவரது இல்லத்து அரசி
அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு
பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி
அனுப்பியிருக்கிறார்.

****

இப்போது புரிந்திருக்குமே இசையின் கவிதைகளில் இருக்கிற சேட்டைத்தனம். வாழ்க்கையின் அத்தனை புனிதமான விஷயங்களை நையாண்டியோடும் நக்கலோடும் அணுகுகிறது இவருடைய கவிதைகள். மிகச்சாதாரண விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை மிகப்பெரிய விஷயங்களோடு எள்ளலோடு முடிச்சுப்போடுகிற வித்தை இசைக்கு எளிதாக வாய்த்திருக்கிறது. ஆனால் வெறும் நக்கலும் நையாண்டியும் மட்டுமேயில்லை ஆழமான சினேகமும் நினைவுகளின் தீராத வலியும் ரசனையும் கூட நிறைந்திருக்கிறது இசையின் கவிதைகளில். ஒரு சில கவிதைகள் ஒரு முழுநாவலையும் சிறுகதைகளையும் கேப்சூயுலாக்கி வைத்திருப்பவை.

அவருடைய சிவாஜிகணேசனின் முத்தங்கள் தொகுப்பில் எனக்கு ‘’விகடகவி மட்டையை உயர்த்துகிறார்’’ , ‘’குத்துப்பாட்டின் அனுபூதி நிலை’’ "அறவுவுணர்ச்சி எனும் ஞாயிற்றுக்கிழமை ஆடு'' ஆகிய மூன்றும் மிகவும் பிடித்த கவிதைகளாக இருந்தன. ''விகடகவி மட்டை… கவிதை அவற்றில் டாப் அன் அல்டிமேட். அதுபோலொரு கவிதையை இதற்குமுன் நீங்கள் எங்குமே படித்திருக்க முடியாது. இந்த ப்ளாக் ஹ்யூமர் எனப்படுகிற அவலநகைச்சுவையில் அடங்குகிற கவிதையாக இதை பார்க்கிறேன். இக்கவிதைகள் டைப் செய்ய அதிக நேரமடுக்கும் என்பதால் அதை நீங்களே நூலை காசு கொடுத்து வாங்கி (70ரூப்பீஸ்தான்) படித்து… இன்புற்று.. (காலச்சுவடு பதிப்பகம்).
இருந்தாலும் இசையின் இந்தக்கவிதையை பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

மகா ரப்பர்

பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக்கொண்டிருக்கிறான் சிறுவன்.
அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்
தம்பி, இதுபோல
14.3.2001ஐ அழிக்கமுடியுமா
என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்

***

கவிஞர் இசை குறித்த விக்கிபீடியா பக்கம் இப்படி சொல்கிறது….

இசை (பி. 1977): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஆ. சத்தியமூர்த்தி. கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் வசித்து வருகிறார். அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றுகின்றார். 2000க்குப் பிறகு கவிதைகள் எழுதித் தொடங்கியவர். சமீபகாலத்தில் மிகவும் கவனம் பெற்ற கவிதைகளை எழுதியுள்ளார். தீம்தரிகிட, கருக்கல், உயிர்மை, காலச்சுவடு, தீராநதி உள்ளிட்ட இலக்கிய இதழ்கள் பலவற்றில் இவர் கவிதைகள் வெளியாகி உள்ளன. இவரது நூல்கள்:

கவிதைத் தொகுதிகள்

1. காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி 2002
2. உறுமீன்களற்ற நதி 2008
3. சிவாஜி கணேசனின் முத்தங்கள் 2012

***

எனக்கு கவிஞர் இசையை முன்னபின்ன பரிச்சயமில்லை. ஃபேஸ்புக்கில் நிறைய லைக் போட்டதாலேயே அவரை நண்பர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. ஒருவேளை அவர் சென்னைவாசியாக இருந்திருந்தால் ஒன்றிரண்டு நூல்வெளியீட்டுக்கூட்டங்களிலாவது சந்தித்திருக்கலாம் ‘’உங்க கவிதைனா உயிர்ஜி’’ என உதார்விட்டிருக்கலாம்.

ஆனால் அவருடைய கவிதை தொகுப்பை வாசித்து முடித்த பின் அவரோடு பலநாட்கள் பழகிய ஒரு உள்ளுணர்வு. ஒரு நல்ல மழைபேய்ந்து ஓய்ந்த மாலையில் நாலு டீயும் இரண்டு மிளகாய் பஜ்ஜியும் தின்றுகொண்டே மனதிற்கினிய நண்பனோடு சிரிக்க சிரிக்க உரையாடி முடித்த திருப்தி. எப்போதாவது இசையை நேரில் சந்திக்க வேண்டும்.