Pages

18 May 2015

8 Points - புறம்போக்கு



#தமிழில் PRISON ESCAPE படங்களை தேடினால் மோகன்லால் நடித்த "சிறைச்சாலை" மட்டும்தான் கிடைக்கிறது. அதுகூட மலையாள வாசனை நிறைந்த படம். ஹாலிவுட்டில் ஜெயில் ஜானரில் நூற்றுக்கணக்கில் படங்கள் உண்டு. மரணதண்டனைக்கு எதிரான திரைப்படங்கள் ஏதாவது தமிழில் வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ப்ச்…! நண்பர் ஒருவர் ‘’அரவாண்’’ என்றார். அது மக்களுக்கு தரப்பட்ட மரணதண்டனை இல்லையா... அதனால் நெக்ஸ்ட்டு தேடினேன். கமலஹாசனின் விருமாண்டி மட்டும்தான்! தமிழ்சினிமாவில் மரணதண்டனைக்கெதிரான நடவடிக்கை என்றால் கிளைமாக்ஸில் முக்கிய பாத்திரத்தைத் தூக்கில் போடப்போகும்போது சாட்சியோடு வந்து நிறுத்துங்க என்று தடுத்து நிறுத்துவதுதான்! (உதாரணம் – குருசிஷ்யன், ராஜாதிராஜா). அந்த வகையில் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை அது எடுத்துக்கொண்ட பின்னணியின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது. .

#தியேட்டரில் ஒரளவு கூட்டம்தான். சில வசனங்களுக்கு கைத்தட்டுகள் அள்ளுகிறது! படம் முடிந்து வெளியே வந்தபோது எனக்கு பின்னால் ஒரு அம்மையார் ‘’படம் ஒகேதான், சில வசனங்கள்தான் புரியல, ஆனா கிளைமாக்ஸ்தான் மொக்கையாருக்கு’’ என்றுவிட்டு சென்றார். படத்தின் பாராட்டத்தக்க அம்சமே அந்த கிளைமாக்ஸ்தான் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

#இப்படத்தை பாரக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த தூக்கிலிடுபவரின் நாட்குறிப்புகள் நூல் நினைவுக்கு வந்தது. உன்னதம் பதிப்பகம் வெளியீடு. மலையாளத்திலிருந்து தமிழில் இரா.முருகவேள். மரண தண்டனை குறித்த மிகமுக்கியமான ஒரு ஆவணம் இது. இந்நூலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தூக்குதண்டனை நிறைவேற்றுகிற ஜனார்த்தனன் பிள்ளையின் வாழ்க்கை முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கும். 117பேருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றியவர் இவர்! தூக்கிலிடுபவனின் வலி, வேதனை, அன்றாட கடமைகள், சடங்குகள் என்று நூல்முழுக்க பல விஷயங்கள் நிரம்பியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த அந்த நூல் பொறம்போக்கு படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது. நிறைய வாசிக்கிற ஜனநாதன் நிச்சயம் இந்த நூலை வாசித்திருப்பார் என்று நினைக்கிறேன். படத்தில் வருகிற எமலிங்கம் (விஜயசேதுபதி) பாத்திரம் ஜனார்த்தனன் பிள்ளையைப் போலவேதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்படமே அந்நூல் தந்த பாதிப்பில் உருவாகியிருக்கலாம்!

#படத்தின் ஆரம்பக்காட்சிகளில் எமலிங்கம் என்கிற அப்பாவியை கொல்ல நக்சல்பாரி கம்யூனிச இயக்கத்தினர் சிலர் தீர்மானிக்கிறார்கள். கையில் கூரான ஆயுதங்களுடன் எமலிங்கத்தை பின்தொடர்கிறார்கள். ஸ்கெட்ச்சு போடுகிறார்கள். அவனை கொன்றுவிட்டால் நக்சல் தலைவரை தூக்கில் போடமுடியாமல் போகுமாம! என்ன லாஜிக்கோ வெங்காயமோ. அந்த எமலிங்கத்தை கொல்ல கிடைக்கிற சந்தர்ப்பத்தில் கூட அம்மா சென்டிமென்ட் பார்த்து அவனை வேற இடத்துல வச்சு முடிச்சிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். உலகிலேயே அம்மா சென்டிமென்ட் உள்ள போராளிகள் தமிழ்சினிமா போராளிகளாகதான் இருக்கவேண்டும். இப்படி எந்த பாவமும் பண்ணாத தூக்கிடுகிற ஒரு அப்பாவியை கொல்ல துடிக்கிற இந்த கோஷ்டி கானம் குழுவினரின் தலைவர் ஆர்யா படம் முழுக்க மரண தண்டணை ஏன் தவறானது என்று பக்கம் பக்கமாக கிளாஸ் எடுப்பது படத்தின் ஆகப்பெரிய முரண் நகைச்சுவை. ஆச்சர்யமூட்டும் வகையில் தமிழ்நாட்டில் இருக்கிற பெரும்பாலான மரண தண்டனை எதிர்ப்பு போராளிகளுக்கும் இப்படி ஒரு நிலைப்பாடு உண்டு. முருகன்,சாந்தனை தூக்கிலிடக்கூடாது என்று ஒருபக்கம் போராட்டம் நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் ராஜபக்சேவை தூக்கிலிட துடிப்பார்கள். அஜ்மல் கசாபை தூக்கில் போடும்போது அமைதியாகிவிடுவார்கள்!

#ஒரு பெண் போராளி காட்டப்படுகிறார். இளம் போராளி. மனிதவெடிகுண்டாக மாற தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் இயக்கத்திற்கே ஒப்புக்கொடுத்தவர். விரைவிலேயே வீரமரணம் அடைந்து தியாகியாகப்போகிறவர். அப்படிப்பட்டவரோ எந்நேரமும் வாய்நிறைய லிப்ஸ்டிக்கும், மார்புகள் பிதுங்கும் டிஷர்ட்டும் டைட்டான ஜீன்ஸும் வாயெல்லாம் லிப்ஸ்டிக்குமாக வாழ்வாங்கு வாழ்கிறார். அவருக்கு குயிலி என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தற்கொலை போராளி இந்த குயிலி. அப்படிப்பட்ட பெயரை வக்கனையாக வைத்தவர் அந்த பாத்திரத்தையும் கொஞ்சம் வலிமையாக வடிவமைத்திருக்கலாம். ஆனால் அவரை எல்லாவிதமான சினிமாத்தனங்களோடுதான் அது காட்சிப்படுத்தப்படவேண்டுமா? அதிலும் போராளித்தலைவரோடு பனிமலையில் டான்ஸ் வேறு ஆடுகிறார்! தன்னுடைய முந்தைய படமான ஈயில் ஜனநாதன் ஒரு போராளியை காட்சிப்படுத்தியிருப்பார். பசுபதி நடித்த அந்த பாத்திரம் அச்சு அசலான நக்சல்பாரி போராளியாக வெளிப்பட்டிருக்கும், அப்படி இருந்த ஜனநாதன் பெரிய பட்ஜெட் என்பதால் ரிச்சான போராளிகளாக காட்டிவிட்டார் போல!

#விஜயசேதுபதியை ‘’இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ ஷூட்டிங்கிலிருந்து அப்படியே மேக்கப் கூட கலைக்காமல் அழைத்து வந்து நடிக்கவைத்திருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற இரண்டு நாயகர்களும் சாக்லேட் பையன்களாக இருந்தாலும் ஷாம் பல தெலுங்கு படங்களில் போலீஸாக நடித்து நடித்து நிஜபோலீஸைப்போலவே ஆகிவிட்டார். கடையியாக அவரை ''ரேஸ் குர்ரமில்'' ஐபிஎல் ஆபீசராக பார்த்த நினைவு. ஆர்யாவை பார்த்தால் போராளி போலவே இல்லை. அண்ணன் சீமானையாவது அந்த பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம்! புரட்சிகரமாக இருந்திருக்கும்.

#தேவையில்லாத காட்சிகள், அலுப்பூட்டும் திரைகதை, லாஜிக் ஓட்டைகள் என்று படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும் நிறைய நல்ல தருணங்களும் உண்டுதான். குழந்தையை கற்பழித்தத்ற்காக ஆயுள்தண்டனை பெற்றவருக்கு பதினெட்டு ஆண்டுகள் கழித்து நிரபராதி என்று விடுதலை கொடுக்கிற அந்த காட்சியும் அவர் நான் வெளியே போகல என்று துடிக்கிற அந்தக்காட்சியும் சிறப்பானது. ஜெயிலில் ஷாம் செய்கிற சீர்திருத்தங்களும் அவர் சிறைத்துறை மீது வைக்கிற விமர்சனங்களும் அபாரமானவை.

#தமிழ் சினிமா இயக்குனர்கள் எல்லோருக்குமே பழிவாங்குவது அல்லது பலிகொடுப்பதுதான் பிடித்தமானது. அவ்வளவு அரசியல் ஆழ்ந்த அரசியல் அறிவுள்ள ‘’ரமணா விஜயகாந்த்’’ கூட கடைசியில் தன்னைத்தானே தூக்கிலிட்டுக்கொள்வதுதான் தமிழ்சினிமா பாணி! அப்படியொருசூழலில் இப்படம் ஒரு நல்வரவு. தைரியமாக மரண தண்டனை எதிர்ப்பை பேசியதற்காகவே ஜனநாதனின் இந்தப்படத்தை அதன் எல்லா குறைகளுடனும் சகித்துக்கொள்ளலாம். அக்குறைகளை தவிர்த்திருந்தால் காலத்திற்கும் மனதில் நிற்கவல்ல ஒரு நல்ல ஆக்கமாக வந்திருக்கும்.