Pages

30 December 2010

அபஸ்வரங்களின் ஆலாபனை




மார்கழி மாதம் வந்துவிட்டாலே சென்னை சபாக்களில் நெய்மணம் கமழத் தொடங்கிவிடும். ஒவ்வொரு சபாவிலும் கச்சேரிகளைவிட ஞானானந்தா மாதிரியான மெஸ்ஸின் உணவுகள் உலகப் புகழ்பெற்றது. பல மாவட்டங்களிலிருந்தும் சபாவிற்கு பாட்டு கேட்க வருகிறார்களோ இல்லையோ , அக்மார்க் நெய்யால் செய்யப்பட்ட சுத்த சைவ பட்சண பதார்த்தங்களை சுவைக்க வந்துவிடுகின்றனர். அதற்கெல்லாம் காரணம் இந்நெய்மணமே. நான் அந்நெய்மண காரியங்கள் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்போவதில்லை. இது இசை பற்றியது.

முதலில் ஒன்றை சொல்லிவிட வேண்டும். எனக்கு இசை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. சினிமா பாடல்கள் மட்டும்தான் கேட்டிருக்கிறேன். அதிகாலையில் எழுந்து சாமி கும்பிட்டு சன்மியூசிக்கில் மாலா ரேணு மாதிரியான சுமாரான ஃபிகர்களிடம் கேட்டால் பாட்டை மரணப்படுக்கையில் இருக்கும் தாத்தாவுக்கு அந்த இசையை டெடிகேட் செய்து பாட்டும் போட்டுவிடுகின்றனர்.

ஆனால் அவையெல்லாம் இசையில்லை வெறும் குப்பைகள் என்பார் தோழர். என்னய்யா கொடுமை புளியந்தோப்பு பழனியின் கானாப்பாடல்களும் பரவைமுனியம்மாவின் நாட்டுப்புற பாடல்களும் கூடவா குப்பை என்று கோபமாகி திருப்பி கேட்டால்.. காரி துப்புவார். அதற்கு மேல் நான் விவாதித்தால் .. வாயிலே நுழையாத கொழகொழ பெயர்கள் சொல்லி அவருடைய இசை கேட்டுப்பாருங்கள்.. இவருடைய சங்கீதத்தை சுவைத்து பாருங்களென்பார். சங்கீதத்தை எப்படி சுவைக்க வேண்டுமென்பதையும் சில பேராகிராப்கள் தள்ளி அவரே விவரிப்பார் பாருங்கள்.

தோழர் சொல்கிற இசையமைப்பாளர்களின் பெயர்கள் மோசார்ட், பத்தே அலிகான், மன்சூர் அலிகான் மாதிரி ஏதோ அது வேண்டாம் நினைவில் இல்லை.. பிச்சை எடுப்பவனுக்கு எதற்கய்யா பீதோவன் என்று பீனாவுக்கு பீனாப்போட்டு எதுகைமொகைனையோடு கூறுவார் எங்கள் கம்யூனிசகுரு. ஓசியில் கிடைப்பதே மிகச்சிறந்தது என்றெண்ணுகிற நான் உன்னிகிருஷ்ணனின் பஜனை கச்சேரிக்கு போயிருக்க கூடாது. அதுவும் தத்தரீனா கச்சேரிக்கு... அதுவும் காசு செலவு செய்து சென்றது எவ்வளவு பெரிய குற்றம்.

பனிபெய்துகொண்டிருந்த மாலை நான் அலுவலகத்தில் வெட்டியாகத்தானிருந்தேன். தோழர் வந்தார்.

‘’இன்னைக்கு ராஜா அண்ணாமலை மன்றத்துல தமிழ் இசை விழா, அதுல உன்னிகிருஷ்ணன் கச்சேரி ஏழுமணிக்கு தோழர்.. போலாம் வாங்க’’ என்று ஆட்டினை பலிபீடத்திற்கு அழைக்கிற கசாப்புகடைக்காரனை போல என்னை அன்போடு அழைத்தார். தண்ணீர் தெளித்த ஆடுபோல் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி அய்ய்யோ நான் வரலை ஆள விடுங்க என்று சிலுப்பினேன். விடுமா வில்லங்கம்.

‘’பாஸ் நமக்கெதுக்கு பாஸ் இந்த மாதிரி விபரீத விளையாட்டெல்லாம். அங்க பக்கத்துலயே பர்மா பஜார் பக்கம் போனா தமிழ்ல நாலு, இங்கிலிஷ்ல நாலுனு செமத்தியான சீன் பட டிவிடி வாங்கிட்டு வந்து குஜாலா பார்க்கலாம்.. இல்லாட்டி போனா செம்மொழி பூங்கா போய் நாலு ஃபிகர சைட் அடிக்கலாம்.. அதவுட்டுட்டு.. பஜனை கச்சேரிக்குலாம்...’’ என்று சடைந்து கொண்டேன்.

‘’சரியான ஞான சூனியமா இருக்கீங்களே தோழர். நீங்க எப்பதான் வளர்ரது.. இசை பத்தி நிறைய தெரிஞ்சிக்க வோணாமா.நீங்க! உங்களுக்கு இலக்கிய வாதியாகணும்னு ஆசையே இல்லையா’’ என்று தொடர் அணுகுண்டுகளால் என் மீது தாக்குதல் நடத்த...

‘’நான் எதுக்கு பாஸ் இசை பத்தி தெரிஞ்சிக்கணும். நான் எப்பய்யா இலக்கியவாதி ஆகணும்னு சொன்னேன் , பாஸ் ப்ளீஸ் பாஸ்... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. ‘’ என்று இரு கைகளையும் முகத்துக்கு முன்னால் கூப்பி கற்பழிக்க வந்த கயவனிடம் மன்றாடும் அபலையை போல் கெஞ்சினேன். என் கண்களில் அவர் நிச்சயம் என்னுடைய இசை பயத்தினை பார்த்திருக்க முடியும்.

‘’தோழர் , தீராத விளையாட்டு பிள்ளை பாட்ட ஒரே ஒருவாட்டி உன்னி கிருஷ்ணன் பாடி நீங்க கேட்கணுமே.. அப்படியே அசோக்கா அல்வாவ பசும்நெய்ல முக்கி வாய்ல போட்டாப்ல அப்படியே நாக்குல கரைஞ்சு தொண்டைல இறங்கும் பாருங்க.. அது மாதிரி அனுபவிச்சாதான் பாஸ் தெரியும்’’ என்று தூண்டிலை மீண்டும் போட..

‘’ஹலோ நான் என்னைக்கு அசோகா அல்வாவ நெய்ல முக்கி தின்னிருக்கேன்.. என்னை விட்ருங்க நான் அவ்ளோ வொர்த் கிடையாது.. எனக்கு இதெல்லாம் புரியாது’’ என்று மேலும் கெஞ்சினேன். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்

‘’தோழர்.. இங்க பாருங்க, நீங்க கழுதை கிடையாது...’’

‘’பாஸ்..என்னா பாஸ் கழுதைனுலாம்..என்னை பார்த்து’’ என்று நான் அழ ஆரம்பிக்க..

‘’பாஸ் ஏன் இப்ப அழறீங்க.. நீங்க கழுதை கிடையாது உங்களுக்கும் கற்பூர வாசனை தெரியும்னு சொல்லவந்தேன்.. நாமெல்லாம் எப்பதான் சங்கீதம் கேக்கறது.அதுவுமில்லாம இது தமிழ்இசைவிழா அதனால நோ தெலுங்கு கீர்த்தனை ஒன்லி தமிழ்பாட்டுதான், அதுவுமில்லாம முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டேன், இது முழுக்க முழுக்க இலவசம் பாஸ்!’’ என்று சொன்னனார்.

என்னது ஃப்ரீயா பாஸ் இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. என்ன பாஸ் உங்களுக்கு பொறுப்பே இல்ல.. கிளம்புங்க என்று கிளம்பினேன்.
ஓவர் டூ ராஜா அண்ணமலை மன்றம் , பாரிமுனை (பர்மாபஜார் மலேசியா மணி திருட்டு டிவிடி கடைக்கு மிக மிக அருகில்).

செல்லும் வழியெல்லாம் தோழரிடம் கெஞ்சினேன்.. தோழர் இப்பவும் ஒன்னுங்கெட்டுப்போகலே ஃப்ரீன்னாலும் பயமாவே இருக்கு.. இப்படியே இறங்கி ஆளுக்கொரு தம்மப்போட்டுட்டு அப்படியே போய்ருவோம்.. உங்களுக்கு ஒரு குவாட்டர் கூட ஸ்பான்சர் பண்றேன் வுட்ருங்கோவ்.. என்றேன்.. அப்போதும் கேட்கவில்லை.

வண்டி உள்ளே நுழைய.. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நெய்வாசனை அறவே இல்லை. அட! ஆரம்பமே அசத்தலா இருக்கேடா... அப்படீனா இசையும் நெய்வாசனை இல்லாமதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ‘’எச்சூஸ்மீ சார் இன்னைக்கு ஃப்ரீ கிடையாது, டிக்கட் வாங்கினுதான் வரணும்’’ என்றார் அரங்க வாசலில் நின்றுகொண்டிருந்த டீசன்டாக பேசிய லோக்கலான ஆள்.

என்னது டிக்கட்டா.. பாஸ் காசுலாம் குடுத்து இந்த கண்றாவிய பாக்க முடியாது, தயவு பண்ணி வீட்டுக்கே போய்ரலாம் பாஸ்.. ஆனாலும் தோழர் விடவில்லை. அவரே ஸ்பான்சர் செய்தார். ஒரு டிக்கட் 50ரூபாய். ம்ம்.. மூனு பிட்டு சிடி வாங்கிருக்கலாம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

உள்ளே மேடையின் இருபுறமும் எலக்ட்ரானிக் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. நடுவில் உன்னிகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் விதவிதமான வாத்தியங்கள், ஒன்று கையில் நெட்டுகுத்தலாக வைத்து வாசிக்கும் வீணை மாதிரி.. இன்னொன்று சின்னதாக டமக்குடப்பா போலிருந்தது. இன்னொன்று தவில் போல இருந்தது, தோழர் அதை மிருதங்கம் என்றார். பானை போலிருப்பது கடம் என்று கூடவா எனக்கு தெரியாது. உன்னி கிருஷ்ணன் பக்கத்தில் ஏதோ ஒரு சிடிபிளேயர் போலிருந்தது.. அது எலக்ட்ரானிக் ஸ்ருதி பெட்டியாம். கொய்ங்ங்ங்ங் என்று ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்குமாம். போலவே வயலின் இருந்தது. ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து சுபமாக தொடங்கியது கச்சேரி.

த...த.....ரீ...னா... என்று தொடங்கினார் உன்னிகிருஷ்ணன்.. அருகிலிருந்து தோழருக்கோ உற்சாகம் தாங்கவில்லை. ஒரே கைத்தட்டல். இதுக்கு ஏன் இவரு கைதட்றாரு என்று நான் யோசிக்க மொத்த அரங்கமும் கைதட்டி வைக்க நானும் கைதட்டித்தொலைத்தேன். தொடர்ந்து ததரீனா..வையே வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி பாடினார்.. தவுக்கும் ரீக்கும் நடுவே சீரிய இடைவெளி விட்டு பாடினால் ஒரு ராகம்.. த்தரீ....னா என்று பாடினால் இன்னொரு ராகம்.. அரங்கத்தை அடைத்திருந்த பெருசுகள் அஹ்கா.. ஆஹா.. என்று பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மட்டும் மடக்கி வைத்துக்கொண்டு ரசிக்க.. நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ததரீனாவே தொடர்ந்தது. இம்முறை மூன்று நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் ததரீனார் உன்னி கிருஷ்ணன்.. அரங்கம் அதிர்ந்தது. எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. எல்லோரும் கைதட்ட நானும் கைத்தட்டி வைத்தேன்.

‘’தோழர் தமிழிசைனீங்க.. வார்த்தையே இல்லையே.. இதென்னங்க ஒரே ததரீனாவா இருக்கே.. தமிழ் இசை விழானு ஏமாத்தறாங்க பாஸ்’’ என்று அவருடைய காதில் கிசுகிசுத்தேன்.

‘’யோவ் இது ஆலாபனைய்யா.. ராகத்தோட அழகை அப்படியே எடுத்து காட்டுறதுக்காக பாடறது.. இப்போ பாடறது என்ன ராகம்னா.. என்று தன் கையை கொஞ்சமாக மேலே உயர்த்தி கட்டை விரலால் ஒவ்வொரு விரலாக தடவி பிடித்து யோசிக்கத் தொடங்கினார்.

இப்போதும் உன்னி கிருஷ்ணன் விடாமல் ததரீனாவையே வளைத்து வளைத்து பாடிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ நாராசமாக இருந்தது... என்ன கருமம்டா இது ஒன்னுமே புரியல என்று தோழரை பார்த்தால் அவரோ விரலை மடக்கி மடக்கி உன்னியோடு அஹ்கா ஆஹஹா போட்டுக்கொண்டிருந்தார்.

ஒருவழியாக ஆலாபனை முடிய.. அடுத்து ஒரு பாடல் தொடங்கியது.. இப்பயாச்சும் புரியற பாட்டா பாடுவார் என ஆர்வத்துடன் காத்திருந்தால்...

தா...க...ரா...மா...சோ...க.. நீ.. ள.. கா.. ம.. என்று பாடத்தொடங்க.. ‘’பாஸ் தப்பா நினைக்காதீங்க தமிழ் பாட்டுனுல சொன்னீங்க.. தெலுங்கு பாட்டு மாதிரி இருக்கே’’ என்றேன்.. ‘’ஹய்யோ பாஸ் என்னை பாட்டு கேக்க விடுங்க.. இது தமிழ்பாட்டுதான்.. ராகமா பாடும்போது வார்த்தையெல்லாம் பிச்சுக்கும்’’ என்று என்னை முறைத்தபடி மீண்டும் ஆஹா ஆஹஹா என இசையில் மூழ்கினார். எனக்கு பஞ்சு வேண்டும் போல் இருந்தது.

மீண்டும் உன்னியின் தா..கா..சோ..க...மீ.... மு.. கா..மு என ஏதேதோ உடைத்து போட்ட தமிழ்ப்பாடலை கேட்க முயற்சி செய்தேன். ம்ஹும்.. ஒரு வேளை நான் கழுதைதானே என்று எனக்குள்ளாக ஒரு கேள்வி. என்னுள் எழுந்த அச்சந்தேகத்தினை கேள்வி என்ற ஒற்றயடுக்கிலே குறுக்கி விட முடியாது. அது ஒருவேள்வி.

உன்னி அடுத்ததாக மீண்டும் தன் ஆலாபனையை தொடங்க.. தோழரை இசையோடு விட்டுவிட்டு வெளியே தம்மடிக்க இறங்கினேன். ராஜா அண்ணமலை மன்றத்தில் வாசலிலேயே சில குடும்பங்கள் ரோட்டிலே போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தனர். அந்த குடும்பத்தின் இரண்டு பேர் போதையில் எம்ஜிஆர் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ‘’அன்பே வா படத்துல அந்த குண்டன் வர்வான் பார்ரு , நூறு கிலோ இர்ப்பான்.. அப்டியே தல்லீவரு அவ்னே இரண்டு கையால் தூக்கினு த்தா அப்டீயே ரெண்டு நிமிஷம் வச்சினு இருப்பார் பாரு.. அந்தகால்த்திலயே டூப்புகீப்பு எதும் கெடியாது.. பின்னிருப்பாரு..’’ என்று பீடியை வழித்தபடி பேசிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமாக இருக்கவே நானும் சிகரட்டை இழுத்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிகரட் தீர்ந்து போக மீண்டும் அரங்கம் திரும்பினேன். உன்னி இன்னமும் மூச்சு விடாமல் ஆலாபனையே தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். என்னால் உட்காரவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஆயை மிதித்துவிட்டு கழுவாமல் வந்தது போன்ற உணர்வு. இருந்தாலும் இசையின் மறுவடிவான தோழருக்காக அமர்ந்திருந்தேன். ஆலாபனை முடிந்து மீண்டும் பாடல்.. தா....ண்...ட...வாஆஆஆஆஆ என உன்னி கிருஷ்ணன் மீண்டும் உடைக்க...

‘’பாஸ் என்ன பாஸ் தமிழை இப்படி கொல்றாங்களே.. எப்படி பாஸ் சகிச்சிகிட்டு பாக்கறீங்க , நாம தமிழ்ர்கள் இல்லையா நமக்கு தமிழ் உணர்வில்லையா‘’ என்றேன். தோழருக்கு வந்தது பாருங்க கோவம் ‘’அட அறிவுகெட்ட ஞானசூனியமே.. உன்னையெல்லாம் கச்சேரிக்கு கூட்டிட்டு வந்ததே தப்பு.. த்தூ.. கொஞ்சங்கூட ரசனைகெட்ட ஜென்மமா இருக்கீரே.. ச்சே அப்பவே நினைச்சேன் நீங்க ஒரு கழுதைதானு இப்படி வந்து நிரூபிக்கிறீங்களே..உங்களை கூட்டிட்டு வந்ததே தப்பு , ஒரு பாட்டு உருப்படியா கேட்கறீங்களா.. போய் உங்களுக்குலாம் அந்த சாவு மோளம்தான் கரெக்ட்டு , வெளிய எவனாச்சும் தார தப்பட்ட அடிச்சிட்டு இருப்பான் போய் கேளுய்யா’’

உன்னி கிருஷ்ணனே பாட்டை நிருத்திவிட்டார் இவரிட்ட கூச்சலில்.. எனக்கு அவமானமாக போய்விட்டது.. சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான இசை ரசிகர்களும் என்னை எழுந்து நின்று திரும்பி பார்த்து காரித்துப்புவது போல் இருந்தது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் இங்கே வந்திருக்க கூடாது. என்று அங்கிருந்து எழுந்து வெளியே நடக்க மீண்டும் உன்னி விட்ட இடத்திலிருந்து தத்தரீனார். என் தோளை வேகவேகமாக யாரோ உலுக்குவது போலிருந்தது. நான் அதிர்ந்து போக..

ஸ்ஸ்ப்பா உன்னிகிருஷ்ணன் பாட்டை கேட்டு தூங்கிட்டேன் போல.. பக்கத்தில் இன்னும் தோழர் விரலாட்டிக்கொண்டு பாட்டை ரசித்துக்கொண்டிருந்தார். தோளை உலுக்கியது இடது பக்கத்து சீட்டு பெரிசு.. தூங்கிவழிந்து சாய்ந்திருக்கிறேன்.. எதவும் நடக்கலே.. கச்சேரி முடிந்து வரும் வழியில் அருகிலிருந்து குப்பத்தில் தாரைதப்பட்டைகள் முழங்க ஏதோ சாவு போல,. செம அடி... இன்னா குத்து..

24 December 2010

மன்மதன் அம்பு



கடந்த இருபது ஆண்டுகளில் கமல் நடித்த மிகச்சிறந்த குப்பைகளில் ஆகச்சிறந்த குப்பை மன்மதன் அம்பு. பெரிய கப்பலை காட்டுகிறார்கள்.. பிறகு கமலை காட்டுகிறார்கள்.. கப்பல்... கமல்.. இதற்கு நடுநடுவே காமெடி மாதிரி கமலே எழுதிய வசனங்களை பேச சில நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கமலே எழுதிய தத்துவார்த்தமான வசனங்கள், ஒருவரிகூட புரியாத கமலின் கவிதைபாடல் கமலுக்கு மட்டுமே புரிந்து சிரிப்பு மூட்டக்கூடிய காமெடி வசனகாட்சிகள்.. கமலே கரகர குரலில் பாடி ஆடும் பாடல்கள்... ஆவ்வ் தூக்கம் வரவைக்கும் கமலின் திரைக்கதை.. வேறென்ன வேண்டும் ஒரு ஆகச்சிறந்த மொக்கைப்படத்திற்கு! எல்லாமே ஒருங்கிணைந்து மன்மதன் அம்பாய் நம் கண்களையும் காதுகளையும் பதம்பார்க்கிறது. எங்கேயும் கமல் எதிலும் கமல்.. படம் தொடங்கி சில நிமிடங்களில் நாம் பார்ப்பது கமல்படமா டிஆர் படமா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது.

இந்துமுண்ணனி, இந்துமத விரோத பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டதால் கமல்-த்ரிஷா டூயட் கவிதை பாட்டை கட் செய்துவிட்டனர். ஆனாலும் நம்மூர் அறிவுஜீவிகளின் வாய்க்கு மசால் பொரிகடலை கிடைத்தது மாதிரி படத்தில் சூப்பர் சர்ச்சைகள் நிறைய உண்டு. அதில் இரண்டுமட்டும்.. எக்ஸ்ளூசிவ்லி ஃபார் சர்ச்சை விரும்பிகள்.

* ஈழத்தமிழர் ஒருவரை முழுமையான காமெடி பீஸாக.. ‘’த்ரிஷாவின் காலடி செருப்பாக கூட இருக்க தயாராக இருக்கிறேன்’’ என்று கூறுவதாக வசனங்கள் வருகிறது..

* தசாவதாரம்,உன்னைபோல் ஒருவன் படங்களை தொடர்ந்து இப்படத்திலும் கமல், லஷ்கர் ஈ தொய்பா குறித்து பேசுகிறார். தலையில் குல்லாப்போட்ட தீவிரவாதியை சுட்டு வீழ்த்துகிறார்.

படத்தின் கதைதான் மிகப்பெரிய லெட்டவுன்!. உயிருக்குயிராய் காதலிக்கும் காதலியை வேவு பார்க்க காதலனே ஒரு கனவானை ஏற்பாடுசெய்ய அந்த கனவானை காதலி காதலித்துவிட காதலியோடு காதலன் சேர்கிறானா கனவான் சேர்கிறாரா என்பதே கதை. ரொம்ப ஈஸியா சொல்லனும்னா.. மின்சாரகனவு படம் மாதிரி! கிளைமாக்ஸும் அதே மாதிரி! அதிலும் படத்தின் முதல் ஒரு மணிநேரம் உங்கள் பொறுமையை சோதித்து பைத்தியம் பிடிக்க செய்துவிடும்.

த்ரிஷாவுக்கு வயசாகிவிட்டது. பல இடங்களில் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வருகிறார்.. பார்க்க பையன் போலிருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு ரிடையர்ட் ஆகி தொழிலதிபரை மணந்து செட்டில் ஆகிவிட நேரிடலாம். சங்கீதா அவரைவிட அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார். மாதவன்தான் படத்தின் உண்மையான ஹீரோ.. படம் முழுக்க கமல் கமலாகவே வந்து போவதால்.. அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை.. ஓரிரு இடங்களில் நடிக்கிறார், மற்றபடி பல நேரங்களில் நடப்பதே நடிப்பு.

வசனங்கள் அனைத்தும் லைவ் ரெக்கார்டிங். கமல் இந்த லைவ் ரெக்கார்டிங் தண்டத்தை விட்டுத்தொலைப்பது நல்லது. பாதி வசனங்கள் புரிவதில்லை. வசனங்கள் புரியாமல் போனதற்கு இன்னொரு காரணம் 50%க்கும் மேற்பட்ட வசனங்கள் ஆங்கிலத்தில்.. ஆங்கிலப்பட பாணியில் வாட் இஸ் திஸ்.. ஏ ஃபார் ஆப்பிள் என ஏதேதோ பேச நமக்கென்ன எப்போதும் போல ஙே! கே.எஸ்.ரவிக்குமார், கே.எஸ்.ரவிக்குமார் என்று டிக்கெட் கிழிக்குமிடத்தில் பேசிக்கொண்டனர். அவருக்கும் இந்தபடத்திற்கும் என்ன சம்பந்தம்!

இந்த படத்தினை மேடையில் நான்கே நான்கு திரைச்சீலைகளை வைத்துக்கொண்டு ஏழு கதாபாத்திரங்களோடு மேடை நாடகமாகவே போட்டுவிடலாம். இதற்கு ஏன் குரூஸ் கப்பல்,ரோம்,வெனிஸ்...?

அண்மையில் பார்த்த விருதகிரி கொடுத்த கொண்டாட்ட மனநிலையை குலைத்துவிட்டது இந்த மன்மதன் அம்பு.

14 December 2010

லத்தீன் அமெரிக்க சமோசா!




சில மாதங்களாக காமராஜர் அரங்கத்தில் என் புத்தக வெளியீடு.. என் புத்தக வெளியீடு.. என போகுமிடமெல்லாம் அறைகூவல் விடுத்து.. எதை எழுதினாலும் அதில் இரண்டு வரி அறிவிப்பை சேர்த்துவிட்டு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார் எழுத்தாளர் சாரு என்கிற சாருநிவேதிதா! விருதகிரியை வெளியிட விஜயகாந்த் எப்படியெல்லாம் உழைத்தாரோ அதற்கு இணையான உழைப்பை கொட்டித்தான் இவ்விழாவையும் ஒருங்கிணைத்திருக்கிறார் சாரு.

சாருவின் புத்தகவெளியீடு வெற்றிபெற நானும் தோழரும் மொட்டையடித்து ஒரு மண்டல விரதமிருந்து நாக்கில் அலகு குத்தி, பால்காவடி எடுத்து காமராஜர் அரங்கம் நோக்கி பாதயாத்திரை செல்ல முடிவெடுத்திருந்தோம். அந்த பால்காவடி பாலினை வாசலில் வைத்திருந்த கட்அவுட்டிற்கு அபிஷேகம் செய்யவும் திட்டமிட்டிருந்தோம். அவருடைய புத்தகத்தினை யானை மீது வைத்து பேண்டு வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்து வெளியிடவும் நினைத்திருந்தோம்.

போதிய ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால் அதையெல்லாம் சாதிக்க இயலவில்லை. அதனால் எப்போதும் போல அந்திப்பொழுதில் அலுவலகத்தை மட்டமடித்துவிட்டு எப்போதும் போல பைக்கிலேயே ஆராவாரமின்றி அரங்கத்தை நோக்கி செல்ல வேண்டியதாயிருந்தது. அரங்க வாயிலிலேயே சாருவின் நான்கடி கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்டவுட்டின் அருகிலேயே எங்கோ கல்லடிபட்ட சொறிநாய் ஒன்றும் படுத்திருந்தது. பாவம்! யார் அடிச்சாரோ ஆரடிச்சாரோ என பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தோம். வாசலிலேயே அவந்திகா அம்மாவும் இன்னொரு யுவதியும் எங்களை வரவேற்றனர். அரங்கத்திற்கு வலதுபுறமிறந்த முட்டுசந்தில் டீயும் சிற்றுண்டியும் வழங்குவதாக தெரிவித்தனர்.

லத்தீன் அமெரிக்காவின் சந்துபொந்துகளை கரைத்து குடித்தவரான சாருவின் நிகழ்ச்சி என்பதால் லத்தீன் அமெரிக்க சிற்றுண்டிகளும் சிலே அல்லது கூபா வொயினும் கிடைக்குமென ஆவலோடு போய்ப்பார்த்தால்.. சூடான சமோசாவும் வட்ட கப்பில் டீயும் வழங்கப்பட்டது. ச்சே.. அடுத்த ஆண்டாவது சமோசா கொடுத்தாலும் அதற்கு லவோசா , லே பிராசா என லத்தீன் அமெரிக்க பெயர் சூட்டி வழங்குங்கள் சாரு. என்னைப்போல் லத்தீன் அமெரிக்க பீட்சாபட்சினிகளின் ஏமாற்றத்தினை தடுக்கவியலும்.

சாருவின் ரசிகர் வட்டம் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல இன்னும் சமோசா டீயோடு முடித்துக்கொள்ளும் பூட்டகேசுகள் அல்ல.. காப்பூசீனோவோடு வொயினைக்கலந்து பீட்சாவை ஒரு கடி கடித்துண்ணும் சூப்பர்மாடர்ன் இளைஞர்கள் என்பதை சாரு உணரவேண்டும். மற்றபடி யார் அந்த சமோசாவிற்கு ஸ்பான்சர் செய்திருந்தாலும் அவருக்கு நன்றி. சூடான சமோசாவும் அதிசூடான தேநீரும் குளிர்ந்த ஏசி அரங்கத்தில் நல்ல சுவை.

இணைய எழுத்தாளர் சமூகம் அங்கே குவிந்திருந்தது. யாரையும் குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியாத அளவிற்கு அத்தனை பேர் வந்திருந்தனர். அத்தனை பேர் வந்திருந்தனர் என்றால் அத்தனை பேர் வந்திருந்தனர். அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து ரசித்துவிட்டே நகர்ந்தனர். அரங்கத்தில் சாருவிற்கு மிகப்பெரிய பேனரெல்லாம் வைத்திருந்தனர். மிகமிகப் பெரிய பிரமாண்ட பேனர் அது.

நிகழ்ச்சிக்கு குஷ்பூ வருகிறார், அவரை தரிசிக்கவேண்டும் என்பதற்காகவே திண்டுக்கல்லிலிருந்து உடன்பிறப்பு ஒருவர் மஞ்சள்பையை ஆட்டிக்கொண்டு வந்திருந்தார். அவருக்கு சாரு என்றால் யாரென்றே தெரியாது. என்ன கொடுமையான சமகால தமிழ்ச்சூழலில் வாழ்கிறோம் பாருங்கள். குஷ்பூவை தெரிகிறது சாருவை தெரியவில்லை. 90களின் இளைஞர்களான இன்றைய பெரிசுகள் சிலதும் ஜோள்ளோடு குஷ்பூவை காண கூடியிருந்தனர். இந்த விழாவிற்கு குஷ்பூ எதற்கு என அரைபக்க கட்டுரை வாசித்தார். ஏதேதோ சொல்லி சமாளித்தாலும் குஷ்பூ கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்ட பிற்சேர்க்கை என்பது இலக்கிய உலக பிதாமகன்கள் தொடங்கி நந்தா,சேது வரை அனைவருக்கும் தெரியும். சாருவுக்கும் ம.புவுக்கும் மட்டும் தெரியவில்லை. சாரு செய்த புண்ணியமோ என்னவோ குஷ்பூ சிலபல காரணங்களால் கடைசிவரைக்கும் வரவேயில்லை. பல குஷ்பூ ரசிகர்களும் 10.30வரைக்கும் காத்திருந்துவிட்டு வாடியமுகத்துடன் வீடுதிரும்பினர் என்கிற சோகத்தை சொல்லும்போதே என்கண்களிலும் கண்ணீர் கசிகிறதே!

ஆயிரத்திற்கும் மேல் வாசகர்கள் அமர வசதியிருந்தாலும் அதில் 75 சதவீத இருக்கைகள் நிரம்பியிருந்ததை காண முடிந்தது. சாருவின் ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்த அழகான இளம்வாசகிகள் பலரும் ‘’யெஸ்,நோ,வாட்,ஓகே,ஓ மை காட்’’ என ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கு அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தமிழ்தெரிந்த பெண்களை தேடினேன்.. தமிழச்சி தங்கபாண்டியனும் கனிமொழியும் அமர்ந்திருந்தனர், நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே கை ஆட்டி டாட்டா காட்டினேன்.. அவர்களும் புன்னகைத்தனர். பாலகுமாரன் முன்வரிசையில் உட்கார்ந்திருக்கிறார் என்றனர் எட்டி எட்டி பார்த்தேன் அவருடைய வெள்ளை மண்டைதான் தெரிந்தது அதற்கும் ஒரு முறை ஆட்டிவைத்தேன்.

மிஷ்கின் இரவிலும் கண்ணாடி அணிந்தே மேடையில் காட்சியளித்தார். அவரை பார்க்க பார்வை குறைபாடுள்ளவர் போலவே தோன்றினாலும் அவருடைய நந்தலாலா தமிழ்சினிமாவின் மைல்கல் என்பது கிட்டானோவுக்கே தெரியும். நல்லிகுப்புசாமி செட்டியார் பட்டுமாதிரி தகதகவென மின்னினார். மதன் வாயில் வெத்தலையோ சீவலோ எதையோ அதக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். எஸ்ராமகிருஷ்ணன் மேடையேற நல்குணமும் பெருந்தன்மையுங்கொண்ட சாருவின் ரசிகர்கள் அவருக்கும் விசிலடித்து ஹோவென கத்தி வரவேற்பு நல்கினர். இதுமாதிரி ஒரு வரவேற்பை அவர் வாழ்நாளில் பார்த்திருக்கவியலாது. அவருக்கே ஒருமாதிரி ஆகியிருக்க வேண்டும். முகத்தில் ஒன்றரை டின் டால்டா வழிந்தது. சாரு மட்டும் ஒருபக்கம் தமிழச்சி இன்னொரு பக்கம் கனிமொழி என செட்டில் ஆகிவிட ரவிக்குமார் எம்எல்ஏ தான் பாவம், ஒருபக்கம் நல்லிகுப்புசாமி செட்டி இன்னொரு பக்கம் நடராஜன் என பாவமாய் அமர்ந்திருந்தார்.

தன்னுடைய புத்தகங்களை தனக்கு மிகநெருக்கமான நண்பர்களை கொண்டே வெளியிட்டு நண்பர்களை கௌரவித்தார் சாரு. அதில் நம்முடைய கவிஞர் நர்சிம் சாருவின் சரசம் சல்லாபம் சாமியார் புத்தகத்தை வெளியிட்டபோது பதிவர்கள் வெறியோடு விசிலடித்து அவரை கௌரவித்தனர். மற்றபடி கனிமொழி சாருவுடனான நட்புகுறித்தும் தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை என்றும் பேசினார். ஸ்பெக்ட்ரம் ராடியா என்று கத்திவிட தோன்றினாலும் அதிமுரட்டு சாரு ரசிகர்களிடம் உதைவாங்குமளவுக்கு எனக்கு தெம்பில்லை என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

தமிழச்சி தங்கபாண்டியன் காலாவதியான சார்த்தரின் தத்துவங்கள் குறித்து பேசினார். எஸ்ரா அவருடைய கட்டுரைகளை போல புரிந்தும் புரியாமலும் நிறைய பேசினார். மதன் சிரிப்பூட்டும் வகையில் ஏதேதோ பேசினார். மிஷ்கின் நந்தலாலா திரைப்படம் உருவாக அவருடைய உழைப்பு குறித்து சுயசிலாகித்து பேசினார். ரவிக்குமார் பேசும்போது நான் தம்மடிக்க வெளியே சென்றுவிட்டேன்.

சாரு நிறைவாக பேசும்போது நிறைய பேசினார். ஏழு புத்தகங்களையும் வாங்க ஆவலோடு சென்று அந்த கடையை பார்த்தேன். இப்படியாக இரவு பத்து முப்பதுக்கு மேல் இந்த விழா இனிதே முடிவடைந்தது. அதற்கு மேல் நான் வீட்டிற்கு சென்று சேரும் போது மணி 12க்கு மேல் ஆகிவிட்டதால் மனைவியிடம் செம்ம அடிவாங்கியதோடு இரவு உணவும் கட்!

இதுதான் நடந்தது.

13 December 2010

எங்கள காப்பத்த யாருமே இல்லையா... – விருதகிரி விமர்சனம்!



‘’எங்கள காப்பாத்த யாருமே இல்லையா’’ என ஒட்டு மொத்த தமிழகமும் கூக்குரலிட அங்கே மக்களை காக்க நீதியை காக்க நியாயத்தை காக்க தர்மத்தை காக்க புயலென தோன்றினார் தேமுதிக தலைவரும் டாக்டரும் கேப்டருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த். கலைஞரை எதிர்த்து அரசியல் செய்யும் ஒப்பற்ற எழில் சூரன் நம் விஜயகாந்த். அவரால் மட்டும்தான் இனி இந்தியா வல்லரசாக முடியும். அவரால் மட்டும்தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும். அமெரிக்காவால் கூட அடக்கமுடியாத தீவிரவாதிகளை ஒற்றை ஆளாய் சிங்கம் போல் பின்னாங்காலால் உதைத்து தாக்கி அழித்துவிடும் ஆற்றல் பெற்றவர் நம்முடைய கேப்டர் விஜயகாந்த். தண்ணீர் பிரச்சனையா , மின்சாரம் இல்லையா, லஞ்சமா, ஊழலா, அநியாய வட்டி வாங்குகிறார்களா, பஞ்சாத்து பிரச்சனையா எதையும் எதிர்கொண்டு போரிட்டு நமக்கான சமநீதியை பெற்றுதர தெற்கே மதுரையில் பிறந்த செம்மல் நம் விஜயகாந்தால் மட்டும்தான் இயலும்.

இதுவரை தமிழகத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் விஜயகாந்த் மேற்கொண்ட போராட்டங்களும் புரட்சிகளும் எண்ணிலடங்கா.. அதற்காக அவர் இழந்தவை சொல்லி மாளாது. தன் உயிரையும் துச்சமென நினைத்து மக்களுக்காக போராடும் ஓரே பச்சைத்தமிழன் விஜயகாந்த் மட்டும்தான். இன்னொருவர் எல்.கே.சுதீஷ். இன்னொருவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் விஜயகாந்தின் புரட்சி வரலாற்றை.. ஏழைகளின் கலங்கரை விளக்கம்.. பாதிக்கப்பட்டோரின் விடிவெள்ளி.. மக்களின் எழுச்சி.. தமிழகத்தின் புதுப்புரட்சி அவர்தான் டாக்டர்.. கேப்டர்.. என்றெல்லாம் மக்களால் அன்போடு அழைக்கப்படும் நம் தமிழின போராளி விஜயகாந்த்.

மேலே இருக்கும் வாசகங்கள் எல்லாமே உண்மை என நம்புகிற ஆளாக இருந்தால் உங்களுக்கான படம்தான் விருதகிரி. தயவு செய்து இந்த படத்தை பார்த்துவிட்டு தேமுதிகவில் உறுப்பினராக சேர்ந்து விடவும். தேமுதிக பிரச்சார டாகுமென்ட்ரியையே வாய்பிழந்து பார்க்கிறவர்களின் வாழ்வில் மிகமுக்கியமான காவியம் விருதகிரி.

மேலே உள்ளவற்றை படித்து புன்னகைத்திருந்தாலோ அல்லது சிரித்திருந்தாலோ உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு சிரிப்பான படத்தை பார்த்திருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு மகா காமெடியான திராபை இந்த விருதகிரி. இதற்கு முன் நரசிம்மா என்கிற மகா காவியத்திற்கு இப்படிப்பட்ட ஒரு காமெடி வரலாறுண்டு. அதையும் விஞ்சுகிறது இவ்விருதகிரி. காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்து வயிறுவலிக்க செய்கிறார் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான விஜயகாந்த். (இப்படிப்பட்ட வித்யாசமான முயற்சிகளை டி.ராஜேந்தர் (எஸ்.டி.ஆரின் அப்பா) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது வழக்கம்)

பாட்டி வடை சுட்ட கதையிலிருந்தே விஜயகாந்த் நடித்த பல கதைகளும் தோன்றின. விருதகிரியின் கதையும் அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும். பாட்டியாக விஜயகாந்த்.. வடையாக ஒரு இளம்நடிகை... காக்காவாக அல்பேனிய பாஷை பேசும் ஆஸ்திரேலிய தீவிரவாதிகள். விஜயகாந்த் பொத்தி பொத்தி வளர்க்கும் நாயகியை கொத்திக்கொண்டு போகின்றனர் தீவிரவாதிகள். தீவிரவாதிகளை பந்தாடுவதென்றால் நம் நாயகருக்குத்தான் ஆந்திராமீல்ஸ் மாதிரியாச்சே! விடுவாரா.. விரட்டி விரட்டி பின்னங்காலால் உதைத்து உதைத்து , சுவர் மேல் ஏறி உதைத்து கடைசியில் இந்தியா,ஆஸ்திரேலியா,பர்மா,இலங்கை,சிங்கப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை தீவிரவாதிகளிடமிருந்து மிகக்கடுமையான போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றுகிறார். தியேட்டரில் படம் பார்க்கும் நம்மை காப்பாற்றத்தான் ஆள் இல்லை. இதே கதையை அண்மையில் ஜக்குபாய் என்கிற பெயரில் இன்னொரு அரசியல் தலைவரும் பிரபல நடிகை ராதிகாவின் கணவரும் சமக கட்சியின் நிறுவனருமான சரத்குமார் ஜக்குபாய் என்கிற படத்தில் உபயோகித்திருந்தார்.

இந்த மொக்கை கதை ஹாலிவுட்டிலேயே கழுவி ஊற்றப்பட்டதென்பது நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. டேக்கன் படம் ஹாலிவுட்டிலேயே சுமாராக ஓடியபடம். அதை ஆளாளுக்கு காப்பியடித்து படமெடுக்கத் தொடங்கினால் நாடு தாங்குமா.. அதுவும் பிரபல அரசியல் தலைவர்கள்!

மற்ற பிரபல அரசியல்வாதிகளான கார்த்திக்,விவேக்,கருணாஸ்,குண்டுமணி,வாகை சந்திரசேகர்,உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இதே கதையின் இன்னொருமுறை ஹீரோவாக நடித்து நம்மை ஹிம்சிக்காமலிருக்க வேண்டும். இதற்காகவாவது அம்மா ஆட்சிக்கு வந்து இவர்களது கொட்டத்தை அடக்க வேண்டும்.

படம் முழுக்க யாருமே சாதாரண வசனங்கள் பேசுவதில்லை. வில்லன் தொடங்கி அடிபொடிகள் வரை அனைவருமே பஞ்ச் பேசுகிறார்கள். எல்லாமே ஆளுங்கட்சி எதிர்ப்பு பஞ்சுகள். நம் காது பஞ்சராகும் வரை பஞ்ச் தொடர்கிறது. சில ஒரு காட்சியில் திருட்டு டிவிடியில் படம் பார்க்கும் போலீஸான மன்சூர் அலிகான் சொல்கிறார் ‘’அதெப்படிய்யா வாரிசுகள் படம் மட்டும் டிவிடி வரமாட்டேங்குது.. மத்தபடம்லாம் டிவிடி பக்காவா வந்துடுது’’ , இன்னொரு காட்சியில் விஜயகாந்த் சந்தையில் நடந்து வர ஒருவர் ‘’அய்யா உங்கள பார்த்தா ரொம்ப நல்லவரா இருக்கீங்க.. எங்க ஏரியால பைப் போட்டாங்க தண்ணியே வரலைங்கய்யா.. ‘’ அருகில் இருப்பவர் ‘’அய்யா கிட்ட சொல்லீட்டீங்கல்ல.. நிச்சயம் நல்லது நடக்கும்.. அவர் அரசாங்கத்துல வேலை செய்யும்போதே மக்களுக்கு இவ்ளோ நல்லது பண்றாரு.. அரசாங்கமே அவருகிட்ட வந்துடுச்சின்னா தமிழ்நாடுஎப்படி ஆய்டும்’’. இப்படி படம் முழுக்க ஆளாளுக்கு நீங்க இப்பவே இவ்ளோ பண்றீங்க ஆட்சிக்கு வந்தா என்னலாம் பண்ணுவீங்க என வாசித்துக்கொண்டேயிருப்பது படத்தின் சிறப்பு.

படம் முழுக்க ஆங்கிலேயர்களும் ஆஸ்திரேலியர்களும் அல்பேனியர்களும் பேசும்போது பிண்ணனியில் தமிழ் டப்பிங் கொடுத்திருப்பது நல்ல யுக்தி. அதிலும் விஜயகாந்த் சிலகாட்சிகளில் பேசும் ஆங்கில வசனங்கள் தியேட்டரில் சிரிப்பலைகளை கிளப்புகின்றன. குறிப்பாக நாயகியை கடத்திவிடும் வில்லன் விஜயகாந்திடம் போனில் பேச.. விஜயகாந்தோ..’’யார்ரா நீ. தீவிரவாதியா.. உன் டிமான்ட் என்ன , இந்திய ராணுவ ரகசியங்கள் வேணுமா.. குண்டு வைக்கணுமா.. யார்ரா நீ..நேர்ல வந்தேன் அவ்ளோதான்’’ என்றெல்லாம் பேசும் காட்சி தமிழ்திரையுலகம் காணாதது.

படத்தில் தேவையேயில்லாமல் நான்கு பாடல்கள் வந்துபோகின்றன. இசை சுந்தர் சி பாபுவாம். அய்யகோ இவர்தான் மிஷ்கினின் அஞ்சாதேவிற்கும் இசையென்று சொன்னால் அடிக்க வந்துவிடுவார்கள்.. கர்ணகொடூரமான இசை. படத்தின் காமெடியில் இசையும் கடந்து போகிறது.

மற்றபடி ஊழலுக்கு எதிராக வீதிக்கு வீதி மேடைபோட்டு தலையில் குல்லா போட்டு கொட்டுமழையிலும் கேப்டர் ரீவியில் முழங்கும் விஜயகாந்த் , ஹாலிவுட் படத்தின் கதையை மட்டுமல்லாமால் வசனம் உட்பட காப்பியடித்து படமெடுத்திருப்பது , வருங்காலத்தில் கலைஞர் கருணாநிதிபோல புரட்சிதலைவி ஜெயலலிதா போல மிகப்பெரிய அரசியல்வாதியாக வரப்போவதற்கான பிரகாசமான எதிர்காலத்தின் அறிகுறியாகத் தெரிகிறது.
இதற்குமேலும் தொடர்ந்து இந்தக்கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது தேமுதிக! உடனே உறுப்பினராகிவிடுங்கள்!
விருதகிரி – உட்டாலக்கடி கிரிகிரி தேமுதிக வடைகறி!

27 November 2010

நந்தலாலா - மிஷ்கின் ஐ லவ் யூ


அவனை எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். ஒன்னரை வயதாய் இருந்த போதே அம்ம்ம்மா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டாள் அவனுடைய அம்மா. பதினெட்டு வயது வரை அங்கேதான் வளர்ந்தான். கிட்டத்தட்ட ஒரு அநாதையைப் போல! அவனுடைய அம்மாவின் மேல் எப்போதும் அவனுக்கு தீராத வெறுப்பும் ஆத்திரமும் இருந்தது. அவளை எப்போதும் அவன் அம்மா என்றழைத்ததே இல்லை. எப்போதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாய் அம்மா வசித்த அவளுடைய குடிசைக்கு போவதுண்டு. அம்மா வாரி அணைத்து முத்தமிடுவாள். இவன் கன்னத்தை துடைத்து கொள்வான். எரிச்சலும் கோபமுமாக பேசுவான். எரிந்து விழுவான். அம்மா சில சமயம் அவனை கட்டிப்பிடித்த படி அழுவாள். பிரியாணி வாங்கித்தருவாள். அவனுக்கு அம்மாவை விடவும் பிரியாணி பிடித்திருந்தது. பிரியாணிக்காகவே அக்குடிசைக்கு அடிக்கடி செல்வான். பிரியாணி கிடைக்கும். அம்மா புன்னகைப்பாள். இவன் பிரியாணியை தின்று விட்டு வாசலில் விளையாடுவான். சித்தாள் வேலை செய்யும் அம்மாவின் நாற்றம் அவனுக்கு எப்போதும் பிடித்ததே இல்லை. அம்மாவை வெறுத்தான்.

பல நாள் இரவுகளில் பாட்டியை இறுக அணைத்துக்கொண்டு ஏன் பாட்டி எனக்கு மட்டும் நல்ல அம்மா இல்ல..! ராகுலோட அம்மா எவ்ளோ நல்லவங்க தெரியுமா. என் அம்மா ரொம்ப அழுக்கு அவங்களுக்கு என்ன பிடிக்கல..அதான் நான் பிறந்ததும் என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க.. நாத்தம் என்று தேம்பி தேம்பி அழுவான். பாட்டி தலைவருடி தேற்றுவாள். இது பல காலம் தொடர்ந்தது. பதின்ம வயதில் அவனுக்கு பிரியாணியின் மீதான விருப்பம் குறைய அம்மாவை பார்க்கவுங்கூட போவதில்லை. பாட்டி வீட்டின் வாசலில் வந்து அமர்ந்து கொண்டு.. அழுக்குபிடித்த நகங்களிலிருந்து அழுக்கை பிதுக்கி எடுத்தபடி கண்ணா கண்ணா என்று அழைப்பாள். அவன் அவளை கண்டுங்காணாமால் விலகி செல்லுவான். அவள் பேச முற்படும் முன்னமே என்ன வேணும் அதான் மயிரா போச்சுனு இங்க வந்து விட்டுட்டு போய்ட்டல்ல அப்படியே போய்த் தொலைய வேண்டியதுதானே என்று எரிந்து விழுவான். அம்மா இருமுவாள்.

சில நாட்களில் அம்மா இறந்துவிட்டாள். அவள் ஏதோ மர்ம் நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள். அதனால்தான் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்ததாக அவன் என்னிடம் கூறினான். சாவதற்கு முதல் நாள் கூட பிரியாணியோடு பாட்டி வீட்டிற்கு வந்ததாகவும் , இவன் எப்போதும் போல திட்டியனுப்பியதாகவும் கூறினான். நோயால் பாதிக்கப்பட்டதால்தான் அப்பாவும் ஓடிவிட்டதாக கூறினான். சாகும் வரை அவன் அவளை எப்போதும் அம்மா என்றழைத்ததே இல்லை என்று கூறி முதல் முதலாக அம்மாவிற்காக வருத்தப்பட்டு பேசினான். இத்தனைகாலமும் பாட்டி வீட்டில் அவன் வளரவும் படிக்கவும் பணம் அம்மாதான் சித்தாள் வேலை பார்த்து பணம் கொடுத்தாள் என்று கூறி அவன் கதறி அழுததும் , கடைசிவரைக்கும் அவங்கள நான் எவ்ளோ சித்ரவதை பண்ணிருக்கேன் என்று கூறி பித்துபிடித்தவன் போல உளறியதும் இப்போதும் நினைவிருக்கு.

பூந்தமல்லி சாலையிலிருக்கும் அந்த அநாதை இல்லத்தில் வாரந்தோறும் ஒருநாள் முழுக்க குழந்தைகளுக்காக செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த நாட்கள் அவை. அங்கிருந்த ஆண்பிள்ளைகளுக்கு அம்மாக்கள் மீது அளவுகடந்த கோபமிருந்தது. சில பையன்கள் என் காதோரம் வந்து கெட்டவார்த்தையில் திட்டியதை கேட்டிருக்கிறேன். தாய்மை மறுக்கப்பட்ட குழந்தைகள் ஏனோ வன்முறை மிக்கவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் மிகச்சில குழந்தைகள் நம்பிக்கையோடிருந்தன. மாமா என்னைக்காவது அம்மா நிச்சயம் வருவாங்க என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கும் குழந்தைகளும் உண்டு. அவர்களுக்கு யாருடைய அன்பும் தேவையில்லை. அம்மா போதும். அம்மாவின் நினைவுகளோடே வாழ்கிற அக்குழந்தைகளின் உலகம் வலியும் வேதனையும் நிரம்பியது.

மிஷ்கினின் நந்தலாலாவும் அப்படித் தாய்மையை தேடியலைகிற இரண்டு குழந்தைகளின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. ஒருவன் தாய்மையின் மீதான நம்பிக்கையோடும் மற்றொருவன் அவநம்பிக்கையோடும் புறப்பட படம் தொடங்குகிறது. மூட்டை நிறைய அன்பை சுமந்தபடி செல்லும் அக்குழந்தைகள் செல்லும் வழியெங்கும் அன்பை சிந்தியபடி செல்ல வழியில் தென்படும் வழிப்போக்கர்களின் வாழ்க்கையையே அவ்வன்பு வழிமாற்றிவிடுகிறது. ஒவ்வொரு நொடியும் வாழு எனக் கற்றுத்தருகிற ஜென்குருக்களை போல பலரும் ஏதோ ஒன்றை அக்குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுகின்றனர். நம்பிக்கையோடு தாயை தேடுகிறவனுக்கு அவநம்பிக்கையும், அவநம்பிக்கையோடும் வெறுப்போடும் தாயை அடைகிறவனுக்கு நம்பிக்கை ஒளியும் பளிச்சிட படம் முடிகிறது. அன்பு மட்டுமே அநாதையாக அவர்களிடமே தஞ்சமடைகிறது.

படத்தின் நாயகன் இளையராஜா. அவர் இசையமைத்த படங்களின் உச்சம் இது என்று நிச்சயம் கருதலாம். இளையராஜா இல்லாமல் இப்படத்தை ரசிக்க முடியுமா தெரியவில்லை. அம்மா என்றால் இளையராஜாவுக்கு கசக்குமா என்ன.. வெறியாட்டம் ஆடியிருக்கிறார் ராஜா. முழுக்க முழுக்க இளையராஜாவை நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார் மிஷ்கின். ஒவ்வொரு முறையும் பிண்ணனியில் ராஜாவின் குரலோ இசையோ வரும்போதெல்லாம் கண்களில் நீர்கசிவதை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாது. கதறி அழவைக்கிற உங்களை உருக்கி வார்க்கிற இசை.

படத்தின் இரண்டு குழந்தைகளாக வருகிற மிஷ்கினும் அஸ்வத்தும் இயல்பான நடிப்பில் கரையவைக்கின்றனர். மிஷ்கின் நடிகராகவும் சென்டம் வாங்குகிறார். மனநோயாளியாக தொடங்கும் அவருடைய பாத்திரம் மிகமிக பொறுமையாக காட்சிகளினால் சகஜநிலைக்கு திரும்புவதாக காட்டியிருப்பது தமிழுக்கு புதுசு. படத்தின் கேமிரா நேர்த்தியும் எங்குமே சிதறாத எடிட்டிங்கும் கொஞ்சமே கொஞ்சம் வசனங்களும் நிறைய காட்சிகளுமாக நகரும் திரைக்கதையும் தமிழுக்கு மிகமிக புதிது. எப்போதாவது வருகிற ஒன்றிரண்டு வசனங்கள் எல்லாமே மனதில் பதியக்கூடியவை. படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியானால் நிச்சயம் ஒன்று வாங்க வேண்டும்.

படத்தில் பெரிய நடிகர் பட்டாளங்கள் கிடையாது. அனைவருமே புதிய முகங்கள். அன்பும் வெறுப்பும் கோபமுமாக நம்மிடையே திரிகிற முகங்கள். படத்தின் பிண்ணனி நாம் பார்த்த கடந்து போகிற இடங்கள். சில விநாடிகளே வருகிற நாசரும்.. வசனமே பேசாமல் வருகிற ரோகிணியும் , தவறை உணர்ந்து உடைந்து போகிற அந்த லாரி டிரைவர் என இன்னும் இன்னும் எத்தனை பாத்திரங்கள். ஒரு முழுமையா நாவலை வாசித்த திருப்தி கிடைக்காமலில்லை. பல காட்சிகளில் குறியீடுகளால் நிறைய சொல்ல முற்பட்டிருப்பதாக சொன்னாலும் உருக வைக்கிற திரைக்கதையில் எதையுமே கவனிக்க முடியவில்லை. சில காட்சிகளில் கண்களில் கண்ணீர் கசிவதையும்... ஒவ்வொரு காட்யிலும் யாருமற்ற ஒரு இடம் காட்டப்பட்டு அங்கே கதாபாத்திரங்கள் வந்து எதையாவது செய்வதும் காட்சி முடிந்ததும் அவ்விடம் வெற்றிடமாக மறைவதும்.. அழகு. சினிமா ஒரு காட்சி ஊடகம்.. ஏனோ தமிழ்சினிமா வசனங்களினால் நிரம்பியது. ஆனால் நந்தலாலாவின் வசனங்களை இரண்டு ஏ4 பேப்பர்களில் எழுதிவிடலாம். எல்லாமே காட்சிகள்.. வெறும் காட்சிகள்.

படம் முடிந்த பின் என் அம்மாவோடு இன்னொரு முறை பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். என் அம்மாவுக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும். (அம்மா அழுவாரோ என்கிற பயமும் இருக்கிறது)

படம் பார்க்கும் போது ஏனோ பலமுறை கதறி அழுதுகொண்டிருந்தேன். இத்தனைக்கும் அண்மையில் பார்த்த அங்காடித்தெரு போல இதில் வலிந்து திணிக்கப்பட்ட சோக காட்சிகள் ஏதுமில்லை. படத்தில் கிளைமாக்ஸ் தவிர்த்து மற்ற காட்சிகளில் யாருமே அழுவதில்லை. இயல்பான காட்சிகள்தான். சாதாரண வசனங்கள்தான்.. ஏனோ என்னையும் மீறி ஏதோ ஒன்று அழவைத்துவிடுகிறது. நான் மட்டும்தான் அழுகிறேனோ என்று நினைத்தேன். படம் பார்க்க வந்திருந்த பலரது கண்களும் சிவந்திருந்ததை காண முடிந்தது. மிஷ்கின் கிட்டத்தட்ட படம் பார்த்தவர்கள் அனைவரையுமே தோற்கடித்துவிடுகிறார்.

அவனை இப்போதும் நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. என்னை பார்க்கும் போதெல்லாம் பேச்சு எங்கெங்கோ சுற்றி அவன் அம்மாவிடமே வந்து நிற்கும். அவனுடைய அம்மா ஏன் அவனை பாட்டி வீட்டில் விட்டாள் என்று தொடங்கி அவளுடைய ஒவ்வொரு நொடி வேதனையையும் இப்போது உணர்வதாக சொல்லுவான். இதுவரை பலமுறை இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மீண்டும் மீண்டும் அது தொடர்கிறது. இனியும் சொல்லுவான். உயிரோடிருந்த போது ஒரு முறை கூட அம்மா என்றழைக்காதவன் இப்போதெல்லாம் மூச்சுக்கு மூன்னூறு முறை அம்மா என்றுதான் அழைக்கிறான்.

மந்திரப்புன்னகை



சில படங்களை பிட்டு பிட்டாக பார்த்தால் அட! போட தூண்டும். “ச்சே என்ன மாதிரி சீன்ப்பா என்னமா யோசிச்சிருக்கான்பா!” என்று சொல்ல வைக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக படத்தை பார்க்கும் போது ரீலருந்த பாணா காத்தாடி போல எதை நோக்கியும் நோக்காமலும் கண்டமேனிக்கு படம் காற்றில் பறக்கும். அந்த வகை படங்களில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களின் படங்கள் பல உண்டு. அதில் இன்னொன்று கரு.பழனியப்பன் நடித்து இயக்கி வெளிவந்திருக்கும் மந்திர புன்னகை.

ஏற்கனவே நாம் பார்த்துக் கடாசிய ஆளவந்தான்,குடைக்குள்மழை,குணா,காதலில் விழுந்தேன் வகையறா சைக்கோ பாணி கதைக்களம். எப்போதும் உர்ர்ரென உர்ராங்குட்டான் போல முகத்தை வைத்துக்கொண்டு திரிகிற ஹீரோ, கலகல ஹீரோயின், கொஞ்சம் காமெடி நிறைய தத்துவம் என ஒரு கதை தயார் செய்து அதில் பல நாள் தாடியோடு தானே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கரு.பழனியப்பன்.

முதலில் ஒன்றை சொல்லிவிடவேண்டும். கரு.பழனியப்பன் மிகச்சிறந்த இயக்குனர். அவருடைய பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தினை அண்மையில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த போது அட இவ்ளோ நல்ல படத்தை எப்படி மிஸ் பண்ணினோம் என நினைக்க வைத்தவர். அவருடைய முந்தைய படமான பார்த்திபன் கனவும் இதே மாதிரியான அடடே போடவைத்த படம்தான். குடும்ப உறவுகளின் நுணுக்கமான சிக்கல்களையும் உளவியல் பிரச்சனைகளையும் மிக மென்மையாகவும் யதார்த்தமாகவும் சுவையாகவும் பந்திபோட்டு பரிமாறுவதில் கில்லாடி. ஏனோ இப்படத்தில் உலகபட காய்ச்சலோ என்னவோ சுத்தமாக கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல் உணர்வுபூர்வமான ஒரு சைக்கோவின் கதையை சொல்ல முனைந்திருக்கிறார்.

ஹீரோவின் பாத்திரத்தை விஸ்தரிப்பதிலேயே படத்தின் முதல்பாதி முழுக்க கடந்துவிடுகிறது. அதை டிங்கரிங் செய்ய சந்தானாத்தின் காமெடி அஸ்திரத்தை பயன்படுத்தினாலும் அது முழுமையாக எடுபடவில்லை. சந்தானம் படம் முழுக்க காமெடி என்கிற பெயரில் ஆபாச ஜோக்குகளை அள்ளி குவிக்கிறார். குறிப்பிட்ட ஆடியன்ஸிடமிருந்து கைத்தட்டுகளும் விசில் சத்தமும் பறந்தாலும் ஒட்டுமொத்தமாக அருவருப்பை உணரமுடியாமலில்லை. உலகப்படங்களில் நாம் காணும் டீடெயிலிங் காட்சிப்பூர்வமானவது. அவை காட்சிகளால் நிரம்பி வழியும். கரு.பழனியப்பனும் காட்சிகளால் நிறைய சொல்ல முனைகிறார். ஏனோ படம் முழுக்க ரொம்பி வழியும் வசனங்கள் அதை முழுவதுமாக முழுங்கி விடுகின்றன.

படத்தின் தொடக்கமே விலைமாதோடு விழித்தெழும் நாயகனோடு துவங்குகிறது. சாம்பலான சிகரெட் துண்டுகளும் பாதி குடித்த மதுகோப்பையும் அருகில் எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகமுமாக காட்சி துவங்க அடடா! கவிதை மாதிரி எடுத்துருகான்டா காட்சியனு நிமிர்ந்து உட்கார்ந்தால் நாயகன் பேச ஆரம்பிக்கிறார். பேசுகிறார். பேசுகிறார். படத்தின் கடைசி வரை நாயகன் பேசிக்கொண்டேயிருக்கிறார். சரிப்பா அவர்தான் மனநோயாளி நிறைய பேசுகிறார் தப்பில்லே! என்று நினைத்தால் படத்தின் நாயகி மீனாட்சி பேசுகிறார். சந்தானம் பேசுகிறார். தம்பி ராமையா.. பேசுகிறார்.. படத்தில் யாராவது ஒருவர் எதற்காவது வியாக்கியானம் பேச இன்னொருவர் அதற்கு கவ்ன்டர் கொடுப்பது தொடர்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் நாயகி காதலுக்கு கொடுக்கும் விளக்கம் விக்ரமன் ஏற்கனவே பல திரைப்படங்களின் கிளைமாக்ஸில் பேசி சலித்தவை. (காதல்ன்றது காம்ப்ளான் கிடையாது அப்படியே சாப்பிட.. ப்ளா ப்ளா டைப் வசனங்கள்)

படத்தின் ஒரே பிளஸ்.. ஆங்காங்கே தென்படும் சின்ன சின்ன சிறுகதைகள். மனைவி இப்போ எந்த வீட்டில் இருக்கிறாள் என்று தேடும் குடிகாரனின் கதை.. நாயகனின் ஃபிளாஷ்பேக்கில் வரும் அம்மாவின் தாலி... என ஆங்காங்கே கரு.பழனியப்பனின் உணர்வூப்பூர்வமான நல்ல முகம் பளிச்சிடுகிறது. அதிலும் அந்த ஃபிளாஷ் பேக் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதமும் அந்த கதையும் குறும்பட இயக்குனர்களுக்கு அரிச்சுவடி. வெறும் காட்சிகளால் மட்டுமே அது நகர்வது இன்னும் கூட அழகு.

படத்தின் நாயகி மீனாட்சிக்கு நல்ல தொப்புள், பெரிய மார்புகள் அருமையான இடை!. கிளைமாக்ஸில் நிறைய வசனம் பேசுகிறார். வாயாலேயே பீர்பாட்டில் திறப்பது புரட்சி! அவரை விடவும் விலைமாதாக வருகிற அந்த புதுமுக நாயகியின் நடிப்பு அதி அற்புதம். சில காட்சிகளே வந்தாலும் அசத்துகிறார். கருபழனியப்பன் இயக்குவதை மட்டுமே முழுமூச்சாக செய்யலாம். படம் முழுக்கவே அவருடைய முகத்தில் மட்டும் சுத்தமாக உணர்ச்சியே இல்லாமல் நடைபிணமாக நடித்திருக்கிறார். தமிழ்சினிமா உலகில் ஒரே ஒரு வாய்ப்புக்கிடைக்காத என்று ஏங்குகிற எண்ணிலடங்கா திறமைசாலி நடிகர்கள் இருக்க ஏனோ இவருக்கும் நடிப்பு ஆசை. இனியும் நடித்தால் தமிழ்சினிமா நிறைய இலக்கியம் படிக்கிற உலகசினிமா அறிவுள்ள திறமைசாலி இயக்குனரை இழந்துவிடுகிற அபாயமுண்டு.
மற்றபடி படத்தின் பாடல்களும், பாடல்காட்சிகளுக்கான யுக்திகளும், சமூகத்தின் மீது கோபத்துடன் சொல்லப்படுகிற கூர்மையான வசன விமர்சனங்களும் படத்தின் பிளஸ். மற்ற அனைத்துமே படத்தின் மைனஸ்தான்.

இயக்குனருக்கு இலக்கிய படமெடுக்க ஆசையிருந்திருக்கலாம். மிஷ்கின்,சேரன்,வசந்தபாலன் முதலான இயக்குனர்களுக்கு வந்திருக்கிற இலக்கிய காய்ச்சல் இவரையும் தொற்றியிருக்கக் கூடும். அதன் பாதிப்பு கரு.பழனியப்பனின் சுயத்தினை பாதித்துதிருக்கலாம். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

23 November 2010

நகரம் - விமர்சனம்




கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்! இந்த பழமொழிய கண்டுபிடிச்சவன் மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணுவார். ஒன்னா ரெண்டா? எத்தினி படம்.. எண்ணவே முடியாத அளவுக்கு எச்சகச்ச படங்கள் வெளியாகியுள்ளன. அதில் இன்னொன்று நகரம்-மறுபக்கம். சுந்தர் சி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனாரவதாரம் எடுத்துள்ளார். அவருடைய நடிகராவதாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேலைக்கு ஆகவில்லை என்பது எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட தெரியும். சி சென்டர் நாயகனாகவே வலம் வந்தவர் தன்னுடைய மார்க்கெட்டை பரவலாக்க மற்றும் தக்கவைக்க நகரத்துடன் வந்துள்ளார். ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே கிட்டத்தட்ட கருதலாம்.

வாழணும்ங்கற ஆசைதான் நம்மை உயிரோட வச்சிருக்கு! சுமால் பாக்டீரியால தொடங்கி மிகப்பெரிய டைனோசர் வரைக்கும் எல்லா உயிரினத்துக்கும் தன்னோட வாரிசுதான் லட்சியம். அதே மாதிரி ஒரு லட்சியத்தோட நம்ம ஹீரோ. எந்த நேரத்துலயும் யாராவது கொன்னுருவாங்களோன்ற பயத்தோட வாழற ஒரு ரவுடி , குடும்பம் குட்டினு செட்டில் ஆக ஆசைப்படறான்! இதுதான் படத்தோட ஒன்லைன். இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு நட்பு,காதல்,துரோகம்லாம் கொஞ்சம் சேர்த்து புதுமாதிரி முடிச்சுகளால் திரைக்கதை தோரணம் கட்டியிருக்கிறார் சுந்தர்.சி. இனிப்புக்கு வடிவேலு, காரத்துக்கு போஸ்வெங்கட் போதைக்கு அனுயா என கலக்கலான காக்டெயில் மசாலாவாக வந்திருக்கிறது நகரம். படம் முழுக்க தலைநகரம் படத்தின் சாயல் தெரிந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். சூப்பர் மசாலாவுக்கு தேவையான எல்லாமே இருந்தும் படம் பார்க்கும் போது சலிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் முதல் பாதி முழுக்க வடிவேலுவே ஆக்கிரமித்திருக்கிறார். சில காமெடிகள் சிரிக்க வைத்தாலும், அவர் தினுசு தினுசாக அடிவாங்குவது பல இடங்களில் எரிச்சலூட்டுகிறாது. சுந்தர்சி காம்பினேஷனில் கிரி,வின்னர்,தலைநகரம் படங்களின் அளவுக்கு காமெடி எடுபடவில்லை என்று உறுதியாக சொல்லலாம். சமயங்களில் போர் அடிப்பதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் இடைவேளை வரைக்கும் வடிவேலுவை வைத்தே கதையை நகர்த்தியுள்ளனர். ஆனால் இடைவேளைக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் படம் வேகம் பிடிக்கிறது.. மெதுமெதுவாக முதல் கியர் இரண்டாம் கியர் என மாற்றி மாற்றி.. இடைவேளையின் போது படம் டாப்கியரில் பறக்கிறது. இரண்டாவது பாதி கொஞ்சமே நீளம்தான் என்றாலும் படத்தின் வேகத்திற்கு கச்சிதமாகவே இருக்கிறது.

படத்தின் நாயகன் சுந்தர்சிதான் என்றாலும்.. அவரைவிடவும் அவருடைய நண்பராக வரும் ‘மெட்டிஒலி’ போஸ் வெங்கட் அருமையாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் மொத்தமாக ஸ்கோர் செய்வது அவருடைய நடிப்புதான். கதையின் பிரதான பாத்திரமாக போனதால் முகபாவனைகளிலும் உடல்மொழியிலும் நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் பெரிய நடிகராகும் வாய்ப்புண்டு. ‘அனுயா’ = அழகு, புடவையில் பளிச் என இருக்கிறார். அதற்கு மேலும் சொல்லணுமா.. வெள்ளித்திரையில் பெரிசாக காண்க!

அந்தகாலத்து புதியவார்ப்புகள் வில்லன் (ஸ்ரீனிவாசன்?) வில்லனாக நடித்திருக்கிறார். படம் முழுக்க செம்பட்டையான நீளமுடி ஸ்டன்ட் நடிகர்கள் கண்ணை உருட்டிகிட்டு அலைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அதிக சண்டைகள் இல்லை. ஆனால் படம் முழுக்க பத்து நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவர் சர்வசாதரணமாக செத்துப்போய்க்கொண்டே இருக்கின்றனர். காமெடி காட்சியிலும் கூட இந்த சாவுகள் தொடர்கின்றன.

படத்தின் இசை தமன். பிண்ணனியில் பின்னியிருந்தாலும்.. பாடல்கள் ஒன்றும் ரசிக்கும்படியில்லை. சுந்தர்சி எதையாவது நினைத்து பார்க்கும் போதெல்லாம் படத்தின் நிறம் அழுக்குப்பச்சைக்கு மாறுவதும் மீண்டும் சகஜநிலைக்கு திரும்புவதுமாக ஏதோ ஆங்கிலப்படத்தில் பார்த்த நினைவு.. அதை இதிலும் பயன்படுத்தியுள்ளனர். மற்றபடி தலைநகரம் படத்தின் சாயல் இல்லாமல், இன்னும் கொஞ்சம் சுருக்கி கிரிஸ்பாக கொடுத்திருந்தால் ரசிக்க முடிந்திருக்கலாம். ஏனோ படத்தின் நீ....ளம்.. கொட்டாவி விடவைக்கிறது.

09 November 2010

கொலைகளை கொண்டாடுவோம்

தீபாவளிக்காக கோவை சென்றிருந்தேன். கோவை முழுக்கவே எங்கு திரும்பினாலும் இரண்டு குழந்தைகளின் படம் போட்ட பிளக்ஸ் பேனர்களும் போஸ்டர்களும் தென்பட்டன. கண்ணீர் அஞ்சலி.. பிஞ்சுகளே.. கண்ணீர் சிந்துகிறோம், உங்களுக்காக வாடும்... என்பது மாதிரியான அஞ்சலி வாசகங்களும் காணக்கிடைத்தன. இந்துமக்கள் கட்சி தொடங்கி ஆட்டோ ஒட்டுனர் சங்கம், கவுண்டர் சங்கம்,நாம்தமிழர் என அனைவருமே போட்டிப்போட்டுக்கொண்டு போஸ்டர் ஓட்டியிருந்தனர். அய்ய்யோ நாம போஸ்டர் ஒட்டாட்டி நல்லாருக்காதோ என்று நினைத்து அவசர கதியில் சில போஸ்டர்களையும் காண முடிந்தது.

அண்மையில் ஒரு கால்டாக்ஸி டிரைவரால் கடத்தி கொடூரமாக கொல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் குறித்த செய்தி நாம் அறிந்ததே. கோவை முழுக்கவே இந்த இரட்டைக்கொலை பலரையும் உலுக்கி எடுத்துருக்கிறது. சென்னையில் இது மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நிகழுவதால் இங்குள்ளவர்களுக்கு அது பெரிய பாதிப்பை உருவாக்குவதில்லை. சென்னை மக்களின் இருதயம் இரும்பால் செய்யப்பட்டது. ஆனால் கோவை மாதிரியான மிடில்கிளாஸ் மக்களின் அமைதி நகரத்தில் இந்தக்கொலை பெரிய தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பது சிலரிடம் பேசியபோதே உணர முடிந்தது.உண்மையில் தமிழகத்தில் இதுமாதிரியான கொலைகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறதென்பதை ஜுவி,நக்கீரன் படிப்பவர்கள் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்தக்கொலைக்கு அதீத விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது வியப்பளித்தது.

காண்பவரெல்லாம் நலம் விசாரிப்பதைப்போல் அந்த குழந்தைகள் மேட்டர் தெரியுமா? பாவம்! உச்! ச்சே இப்படி பண்ணிட்டாங்களே பாவிப்பசங்க! அவனுங்களையெல்லாம் நிக்க வச்சு சுடனும்.. நடுரோட்டுல கல்லால அடிச்சு கொல்லணும்.. இவனுங்களையெல்லாம் இன்னுமா உயிரோட விட்டுவச்சிருக்காங்க.. ! மிகச்சாதரணமாக பேருந்துகளிலும் சாலையிலும் காதில் வந்துவிழுகிற வார்த்தைகள் உக்கிரமாய் இருந்தன. இதற்கு முன் கோவை குண்டுவெடிப்பு சமயத்தில் இப்படிப்பட்ட பதற்றத்தை கண்டிருக்கிறேன். எங்கு பார்த்தாலும் துலுக்கனுங்கள தூக்குல போடணும்.. அவனுங்கள வீடு பூந்து வெட்டணும்.. குத்தணும் என வெறிகொண்டு வன்முறையாய் அலைந்தவர்களை கண்டிருக்கிறேன்.

கொலையாளிகள் இருவரும் பிடிபட்டதாக போலீஸ் அறிவித்திருந்தது. விசாரணைக்கு அழைத்து செல்கையில் தப்பியோட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார் கொலையாளிகளில் ஒருவர். கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் அருகிலிருந்த காவலரின் துப்பாக்கியை எடுத்து இருவரை சுட்டும் இருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. இன்னும் அவர்மீதான குற்றங்கூட நிரூபிக்கப்படவில்லை.

நீதி கிடைத்துவிட்டதாக கோவை நண்பர் ஒருவர் காலையிலேயே போனில் அழைத்து மகிழ்ச்சியோடு பேசினார். இன்னும் சிலரிடம் பேசியபோதும் மகிழ்ச்சியாய் உணர்வதாகவும் , இப்போதுதான் திருப்தி என்றும் கூறினர். அந்தக்குழந்தைகளின் ஆன்மா இப்போதுதான் சாந்தியடைந்திருக்கும்.. அக்குழந்தைகளின் பெற்றொருக்கு இப்போதுதான் நிம்மதியாய் இருக்கும்.. என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார் நண்பர். ஆஹா கொலையாளி அழிந்தான்.. திருப்திதான். ஆனால் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகுமா? ஒரு தவறுக்கு தண்டனையாக இன்னொரு தவறு சரியாகுமா? என அடுக்கடுக்காக கேள்விகள். கொலை திருப்தி தருமா?

நிச்சயமாக காவல்துறையின் இந்த என்கவுன்ட்டர் 'கொலை' தமிழகத்தில் பெரும்பாலோனோருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. தினமலரின் இணையதளத்தில் வெளியாகியுள்ள இச்செய்திக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை படித்தாலே இது புரியும். ஒரு சோறு பதம். 500க்கும் மேல் பின்னூட்டங்கள். மக்களுக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி. கோவையில் பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பத்திரிகை ஒன்றோ மனிதமிருகம் சுட்டுக்கொலை என செய்தி வெளியிடுகிறது.

 குற்றம் நிரூபிக்கப்படாமலேயே ஒருவனை போலீஸ் என்கவுன்ட்டர் என்ற பெயரில் கொலை செய்திருக்கிறது. அவன் மனிதமிருகமாம்! பத்திரிகை செய்தி ஒன்று சான்று கொடுக்கிறது. அவன் அந்தக்குழந்தைகளை கொல்லாதவனாக இருந்தால்? யாரோ ஒரு அப்பாவியாக இருந்தால்?

குழந்தைகளை கொன்றது மிகப்பெரிய தவறுதான். மாபாதகம்தான். மோகன்ராஜ் செய்திருப்பது படுபாதகசெயல்தான். அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டணை கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்தவர் யார் என்பதை கண்டறியவும், கண்டறிந்து தீர்ப்பு வழங்கவும் நீதிமன்றம் இருக்கையில் , எந்த விசாரணையுமின்றி இப்படி சுட்டுக்கொல்வது காட்டுமிராண்டித்தனமின்றி வேறேது. தமிழ்சினிமாவின் கிளைமாக்ஸ் பழிவாங்கல்களை ரசித்து கைதட்டி கொண்டாடும் அதே மனநிலையோடு வாழும் நமக்கு இது மகிழ்ச்சியை அளிக்கலாம். இதனை கைதட்டி வரவேற்கலாம். ஆனால் நாளைக்கே நீங்களும் நானுங்கூட தனிப்பட்ட விவகாரங்களுக்காக விசாரணையின்றி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்படலாம். என்கவுன்ட்டருக்கு மக்கள் ஆதரவளிப்பது எவ்வளவு ஆபத்தை அவர்களுக்கே விளைவிக்கும் என்பதை இங்கே யாரும் உணர்வதில்லை.

சமூக குற்றங்களுக்கு மரணதண்டனைகள் எப்போதும் தீர்வாகாது. அதற்கான வேரை கண்டறிந்து அதை களைவதே சிறந்தது. உண்மையில் மோகன்ராஜிற்கு தேவை நல்ல மனநல மருத்துவர். அவனை இந்த குற்றத்திற்கு தூண்டியது எது என்பதை கண்டறிந்து இன்னொரு முறை இப்படி ஒரு வக்கிரம் நடக்காமலிருக்க வேரிலேயே பிரச்சனைகளை தீர்க்க முனையவேண்டும். ஆனால் மக்களுடைய மனதில் ஒரு இன்ஸ்டன்ட் மகிழ்ச்சியை அளிப்பதன் மூலம் எதை மறைக்க முயல்கிறது தமிழக அரசு. இங்கே ஒவ்வொரு நாளும் இதுமாதிரியான ஆட்கடத்தல்களும் கொலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் மாட்டிக்கொண்ட ஒருவனை கொன்றாகிவிட்டது. மற்றவர்கள்?

மோகன்ராஜ் அந்தக்குழந்தைகளை கடத்தி கொன்றது அக்கிரமம், வன்முறை என்றால்,  அவனை உயிரோடு பிடித்து என்கவுன்ட்டரில் கொன்றது மட்டும் என்ன சூரசம்ஹாரமா? இப்படி குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து விசாரிக்காமல் கொல்வதென்றால் நீதிமன்றம் எதற்கு? வக்கீல்களுக்கு ஷேவிங் செய்துவிடுவதற்கா?

சமூக குற்றங்கள் அனைத்திற்குமே என்கவுன்ட்டர்கள்தான் தீர்வென்றால் இங்கே யாருமே உயிரோடிருக்க முடியாது. மாட்டிக்கொண்ட ஒரு மோகன்ராஜினை என்கவுன்ட்டரில் தீர்த்துக்கட்டியாகிவிட்டது. இன்னும் விஐபிகளாகவும் மந்திரிகளாகவும் ஏன் காவல்துறையிலேயே பணியாற்றுகிற மோகன்ராஜினைவிடவும் மோசமான குற்றவாளிகளை சுதந்திரமாகத்தானே உலவ விட்டிருக்கிறோம். அவர்களை என்ன செய்துவிட்டோம்.

உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி ஊழல் செய்தது என்று தெரிந்தும் அடுத்தடுத்த தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கே ஓட்டுப்போடுகிற மக்களின் கைகளை வெட்டி விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

இங்கே சமூக குற்றங்களுக்கான காரணிகள் ஆராயப்படவேண்டும். பணமும் பலமும் இருப்பவன் இங்கே எக்குற்றம் செய்தாலும் தப்பித்துவிட முடியும் என்கிற நிலையை மக்கள்தான் மாற்ற முனையவேண்டும். ஆனால் இங்கே இப்படி ஒரு இன்ஸ்டன்ட் கொலையை ஆதரித்து கொண்டாடும் மனநிலையில் அல்லவா நாம் இருக்கிறோம்! எங்கே போகிறோம் நாம்?

27 October 2010

கரைந்த நிழல்கள்




இலக்கே இல்லாமல் எப்போதாவது கடுமையாக வேலை பார்த்ததுண்டா? தொழில் கற்றுக்கொள்கிறேன் பேர்வழிகள் கூட ஓரளவாவது வேலைக்குண்டான கூலியை பெற்றுக்கொண்டு கற்றுக்கொள்வதை கவனித்திருக்கிறேன். ஆனால் தன்னிச்சையாக எந்த ஒரு இலக்குமில்லாமல் நேரத்தை யாரோ ஒரு சிலருடையா அதிவளர்ச்சிக்காக உழைக்கிறவர்களை சினிமா உலகில் மட்டுமே காணலாம். இப்படி உழைப்பவர்களினுடைய எண்ணிக்கை ஒன்றோ இரண்டோ அல்ல.. நிச்சயம் பல ஆயிரங்கள் இருக்கும்.


வடபழனியிலும் சாலிகிராமத்திலும் அசோக்நகரிலும் இன்னும் கோடாம்பாக்கத்தினை சுற்றிக் கிடக்கிற எண்ணிலடங்காதவர்களினுடைய வாழ்க்கை இப்படிப்பட்டதுதாகாத்தான் இருக்கிறது. காரணமேயில்லாமல் எந்த லாபநோக்குமின்றி தன்னைத்தானோ சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றுகிற கிரகங்களைப்போல இந்த மக்கள் எப்போதும் ஆர்காட் ரோடு சாலைகளில் சுற்றிக் கொண்டிருப்பதை காணலாம்.


சிறுவயதில் சென்னை என்பதே எனக்கெல்லாம் கனவு. கோடம்பாக்கம் டீ ஸ்டாலில் ரஜினியும் கமலும் டீ சாப்பிடுவார்கள். ஏவிஎம் சரவணன் தன் வெள்ளை சட்டையை ரோட்டோர டிரைகீளினிங்கில் ஐயர்ன் செய்து வாங்குவார். கோடம்பாக்கம் சாலைகளில் உசிலமணியும் பாண்டியராஜனும் ஜனகராஜும் கைகோர்த்து செல்வதாக கனவு கண்டிருக்கிறேன். அமலாவும் ரேவதியும் தெரு பைப்பில் தண்ணீர் பிடிக்க நிற்பாகக்கூட கற்பனை செய்திருக்கிறேன். உண்மையில் சினிமா என்பதே இவர்கள் என்கிற எண்ணம் நான் வளர வேறாக மாறியது. கோடாம்பாக்கத்தில் வலம் வருகிற போது நிறைய சினிமா காரர்களை சந்திக்க முடிந்தது.. ஆனால் அவர்களை யாருக்குமே தெரியாது. அவர்கள் சினிமா கலைஞர்கள்.


சில ஆண்டுகளுக்குப் பின் சாலிகிராமத்தில் சில ஆண்டுகள் வசிக்க நேர்ந்தது. அப்போது நிறைய சினிமாக்காரர்களோடு டீக்கடைகளிலும் பக்கத்து அறைகளிலும் பார்க்க நேரும். அவர்களெல்லாம் சினிமாவில் வேலை பார்க்கிறவர்கள். தினமும் அலுவலகத்திற்கு செல்வதை போல செல்கிறவர்கள். அவர்களுடைய பெயர் டைட்டிலில் எங்கோ ஒரு மூலையில் போட்டால் போடலாம். ஆனால் அதிகம் உழைக்கிறவர்கள்.


உதவி இயக்குனர்கள்,ஸ்டன்ட் மேன்கள், துணை நடிகர்கள்,புரொடக்சன் மேனேஜர்கள்,டப்பிங் கலைஞர்கள், லைட்மேன்கள்,வாகன ஓட்டுனர்கள்,கோரஸ் பாடகர்கள்,வாத்திய கலைஞர்கள் ம்ம் மூச்சு முட்டுகிறது. இனி இன்னும் என்னென்னவோ ஆட்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்தது. பெரும்பாலான கதைகள் எல்லாமே அந்தக்காலத்து சிவாஜி படங்களைப்போல ஒரே சோகம் பிழியும். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எங்கு சென்றாலும் விரித்தபடிதான் செல்லவேண்டும் பாயை என்று கேலியாய் சிரிப்பதை கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் குழந்தைகள் இருந்தனர். அவர்களை சினிமா தொடர்புள்ளவர்கள் யாருமே மதிப்பதில்லை. சினிமா அல்லாதவர்களுங்கூட. இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு காலத்தில் எங்கிருந்தோ சென்னையை நோக்கி ஓடிவந்து சினிமாவில் மூழ்கி முத்தெடுக்க முயற்சித்து முடியாமல் அதிலேயே கிடந்து சாகிறவர்கள்.


என்னோடு தங்கியிருந்த உதவி இயக்குனர் அவன். பிரபல இயக்குனரிடம் உதவியாளராக இருந்தான். இயக்குனரின் படம் தொடங்கிவிட்டால் கையில் செல்போனும் பைக்கும் இரவெல்லாம் குடியென மாறிவிடுவான். படம் முடிந்து அடுத்த படம் தொடங்குவதற்கு எல்லாவற்றையும் விற்று அழித்துவிட்டு.. மச்சி ஒரு பீடி கட்டு வாங்கி குடேன் என்கிற அளவுக்கு வறுமையில் வாடுவான். ஒரு கட்டத்தில் தனியாக படமெடுக்க முடிவெடுத்தான். எப்போது சந்தித்தாலும் மச்சி இதோ நாமக்கல் புரொடியூசர் மாட்டிகிட்டாரு.. அடுத்த மாசம் பூஜை கட்டாயம் வரணும் என்பான். போகும் போது சில நூறுகளை கடனாக வாங்கிக்கொள்வான். எப்போதும் பித்துபிடித்தவன் போல மணிக்கணக்கில் அவனுடைய திரைக்கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன். மச்சி விஜய பார்த்து கதை சொல்லிட்டேன்.. ஓகே பண்ணிட்டா உடனே பூஜை.. இளையராஜா கால்ஷீட் எப்போ கேட்டாலும் தரேன்னுட்டாரு.. விஜய்ஆன்டனிகிட்டயும் பேசி வச்சிருக்கேன்.. என்று பலதும் சொல்லிக்கொண்டேயிருப்பான்.


வறுமையில் அலைந்து கஞ்சா அடித்து பைத்தியமாகி ஊருக்கே அழைத்து சென்றாலும் , அங்கேயிருக்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து இப்போதும் தனியாக படமெடுக்கிறேன் என்று புரொடியூசர் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். ஒரு பைசா கூட வருமானமில்லை. ஆனால் மாதம் முழுக்க சுற்றிக்கொண்டேயிருக்கிறான். யாராவது பெரிய இயக்குனருக்கு எல்லா வேலையுமே ஐந்து பைசா கூட வாங்காமல் செய்து கொடுப்பதை பார்த்திருக்கிறேன். உனக்கு நல்ல புரொடியுசர் அமைய மாட்டேங்கிறாங்கடா.. நீ அந்த கமலாவோ விமலாவோ அவள என்னை வந்து பாக்க சொல்றீயா.. என்று பல வேலைகளையும் இலவசமாக செய்ய வேண்டியதாயிருப்பதாக சொல்லுவான்.


இங்கே லைட்பாய் தொடங்கி தயாரிப்பாளர் வரைக்கும் எல்லோருக்குமே நிலை இதுதான். எத்தனையோ வெற்றிபடங்களில் நடித்த நடிகர்களும் நடிகைகளுமே சில ஆண்டுகளில் வறுமையில் வாடி செத்த கதைகளை தமிழ்நாடு அறியும். இங்கே, இந்த சினிமாவில் வெற்றி பெறுகிறவனும் தோல்வியடைகிறவனும் சேர்ந்தே மரணிக்கின்றனர். அவர்களுடைய மரணம் ஏதேச்சையானதல்ல முன்தீர்மானிக்கப்பட்டது. இங்கே பத்தாண்டுகளுக்கு இரண்டு நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதும், நான்கு பேர் விவாகரத்து செய்து கொள்வதும், வறுமையில் வாடி செத்து போகிற தினத்தந்தியின் ஆறாவது பக்க துணை நடிகைகளின் கதையும் நாம் அறிந்ததே. அது தடுக்க முடியாத அளவுக்கு விஷம் சினிமாவின நாடிநரம்பெல்லாம் ஊறியிருக்கிறது. இங்கே ஒழுக்கம் என்பதே கெட்டவார்த்தை.


எழுபதுகளின் கடைசியில் சுஜாதா எழுதிய கனவுதொழிற்சாலையும், அறுபதுகளில் அசோகமித்திரனால் எழுதப்பட்ட கரைந்த நிழல்களும் சினிமாவின் அகோர பக்கங்களை நமக்கு காட்டுகின்றன. சுஜாதா சினிமாவில் வெற்றி பெற்ற ஒருவனை பிரதானமாக்கி அவன் சந்திக்கிற உளவியல் சிக்கல்களையும், அடிமட்டத்திலிருந்து முன்னேறுகிற ஒருவன் சந்திக்கிற சவால்களையும் காட்சிப்படுத்தியிருப்பார். நிறைய மசாலாவும் கலந்து கட்டியிருப்பார். ஆனால் கரைந்த நிழல்கள் நாம் திரையில் காணும் சினிமாவிற்கு பின்னால் இருட்டில் இயங்குகிறவர்களினுடைய வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கிற பிரச்சனைகளையும் முன்வைத்து எழுதியிருக்கிறார். பத்து அத்தியாங்களிலும் பத்து வித்தியாசமான கதைகள், அவை ஒன்றோடொன்று சினிமாவால் பிணைக்கப்பட்டிருக்கிறது. அவற்றினை மிக லாவகமாக கோர்த்து கதை பண்ணியிருக்கிறார் அசோகமித்திரன்.


வறுமையில் வாழும் ஒரு புரொடக்ஷன் மேனேஜர், தோல்யிடைந்து மீண்டெழ படமெடுக்கும் தயாரிப்பாளர்,புரொடக்ஷன் அசிஸ்டென்ட்,ஒரு நடிகை, வெற்றி பெற போராடும் ஒரு உதவி இயக்குனர் , வெற்றிகளை குவிக்கும் தயாரிப்பாளர், அவருடைய மகன் என கதை முழுக்க சினிமாவோடு தொடர்புடைய ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்கல்கள், வெற்றிக்காக செய்கிற தில்லுமுல்லுகள், அது தோல்வியடைகையில் உண்டாகிற கோபம். சினிமா என்னும் கருவியின் உதவியோடு மனிதமனங்களின் சிக்கல்களையும் பேசியிருக்கிறார் அசோகமித்திரன். இங்கே ஒவ்வொருவனும் வெற்றிக்காக போராடுவதும் அனைத்தையும் இழந்து அதை அடைந்தபின் வீழ்ந்துமடிவதுமாக கதை பின்னப்பட்டுள்ளது. இதற்கிடையே வெற்றியோ தோல்வியோ மொத்தத்தில் சினிமாக்காரனின் குடும்பம்.. சினிமாவால் எதை இழந்து எதை பெறுகிறது என்பதான தேடலாக கதை நகர்கிறது.


இன்றும் கமலாதியேட்டரின் வலது பக்கம் அழிந்து போன விக்ரம் ஸ்டூடியோவின் மிச்சங்களை காணமுடியும். ஸ்டூடியோக்கள் கோலோச்சிய அறுபதுகளின் சினிமாவும் அக்காலகட்டத்தில் நிலவிய சினிமாக்களின் தொடர்தோல்விகளும் அதானல் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்கள் தொடங்கி உதவி இயக்குனர் வரையிலுமான போராட்டமே கரைந்த நிழல்கள்.


வெளியே பார்க்க நீர்த்தாவரங்கள் வளர்ந்த அடர்ந்த அழகான பச்சை பசேல் ஏரியினை போல் இருந்தாலும், உள்ளே குதித்தால் ஒவ்வொரு அணுவும் சாக்கடைதான் என்பதை மிக அழகாக விவரித்திருப்பார். இங்கே எவனோ ஒருவனுடைய வளர்ச்சிக்கு பலிகடா ஆக்கப்படும் பல ஆயிரம் கனவுகளின் கதையாக இதை கருதலாம்.


சினிமாத்துறையிலேயே சில காலம் அசோகமித்திரன் பணியாற்றியதால் அந்தக்கால சினிமா உலக இயக்கம் குறித்து ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. சில உண்மை சம்பவங்களும் கோர்க்கப்பட்டதாக நண்பர்கள் சொல்லக்கேட்டேன். எனக்கு அப்படி ஏதும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். அறுபதுகளின் சென்னை சில இடங்களில் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக கோடம்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை செல்பவர்கள் கூட மெட்ராஸ்க்கு போறேன் என்று பேசுவது..


திரையில் நாம் காணும் சில விநாடி காட்சிகளுக்காக எத்தனை இழப்புகள் என்று நாவல் முழுக்க வருகிற சூட்டிங் காட்சிகளும் அதற்கான ஆயத்த முயற்சிகளாகவும் விவரித்துள்ளார்.


தொடக்க அத்தியாயங்கள் படிக்க சிரமமாக இருந்தாலும் மூன்றுக்கு மேல் எளிமை. பல இடங்களில் காட்சியை ஓரளவு மட்டுமே ஆசிரியர் விவரிக்கிறார்.. மீதியை நாமாக யூகித்துக்கொள்ள விட்டிருப்பது நன்றாக இருந்தாலும்.. அந்தக்கால வாழ்க்கையை யூகிப்பதென்பது என்னை போன்ற சிறார்களுக்கு சிரமம்.

நாவலை படித்த பிறகு பழைய படங்கள் சிலதை பார்க்க நேர்ந்தது. ஏனோ டைட்டில் போடும்போது உதவி இயக்குனர்கள் , எடிட்டிங் உதவி, கேமரா உதவி , நடனம் உதவி, இயக்கம் உதவி என உதவிகளின் பட்டியலில் உள்ளவர்களில் ஏதாவது இன்றைய பிரபலங்கள் இருக்கிறார்களா என்று தேடுகிற வினோதமான பழக்கம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேல் படங்கள் பார்த்துவிட்டேன்.. ஒரு உதவி கூட பின்னாளில் சொல்லிக்கொள்கிற வெற்றியாளர்கள் யாருமே இல்லை.. அவர்களுக்கு என்ன ஆகியிருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அவர்களுடைய குடும்பம்...? அவர்களுடைய உருவங்கள் நிழல்களாக மனக்கண்ணில் வந்து அச்சமூட்டுகின்றன. உண்மையிலேயே திகிலானதுதான் சினிமா!

 


18 October 2010

சொந்த செலவில் சூனியம் - ஏ சாரு ஸ்டோரி




இவ்வளவு சீக்கிரமே அவன் எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. அன்றைய தினம் விஜயதசமியாகையால் அலுவலகம் விடுமுறை. குமாஸ்தாயிய மனநிலையின் படி விடுமுறை நாளில் வெளியே சுற்றி நேரத்தை வீணடிக்காமல் மனைவி மக்களோடு செலவில்லாமல் டிவி புதுப்படம் மானாட மயிலாட பார்த்து சுகிப்பவன். இருந்தாலும் இது அதிகம் சந்தித்திராத இணைய நட்புக்காக..இலக்கியத்திற்காக சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டியதாயிருக்கிறது. ஐந்து மணி நிகழ்ச்சிக்கு நான்கு மணிக்கே தயாராகிவிட்டிருந்தான். பெட்ரோல் போட்டு காற்றுப்பிடித்து போகும் வழியில் புகைவிட்டு டிஸ்கவரிபுக் பேலஸை அடைகையிலே நேரம் 4.55.

கொடுமை என்னவென்றால் அவனுக்கு முன்பாகவே , பார்வையாளர்கள் வருகைக்கு முன்பாகவே இலக்கிய சூறாவளிகள் வருவதற்கு முன்பாகவே விழாவின் சிறப்பு விருந்தினரான சாருநிவேதிதா வந்துவிட்டிருந்தார். சமகால இலக்கிய பரப்பில் இப்படிப்பட்ட எழுத்தாளர்களும் இருப்பது எண்ணவொண்ணா ஆச்சர்யமே.. அண்மையில் ஒரு இசை இலக்கிய விமர்சகரின் (இலக்கிய இசை விமர்சகர்?) புத்தக விமர்சன கூட்டம் ஆறு மணிக்கு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆடி அசைந்து வந்த இலக்கிய பிதாமகர்களாலும் சினிமா ஜிலாக்குகளாலும் உத்தமதமிழ் எழுத்தாளர்களாலும் ஏழுமணிக்குத்தான் தொடங்கினர். இதனால் பிரபல இலக்கிய விமர்சகர் ராம்ஜி யாகூ உள்ளிட்ட பலரும் கோபித்துக்கொண்டு அரங்கைவிட்டு வெளியேறியதெல்லாம் பழைய கதை.

அவன் கண்களுக்கு சாரு எப்போதும் இல்லாத அளவிற்கு மொட்டைதலையாய் இருந்தாலும் கவர்ச்சிக்கன்னணாக தெரிந்திருக்க வேண்டும். பார்த்ததுமே குப்புற விழுந்து வணக்கம் தல என்றான். அவர் எப்போதும் போல அகல திறந்த கண்களுடன் அடடே நீயா? என்கிற ஆச்சர்யத்தோடு அவனை பார்த்தார். சாருவிடம் அவனுக்கு பிடித்ததே அவன் எதை சொன்னாலும் ஓஓஓ என்று ஒரு ஆச்சர்ய பார்வை பார்ப்பார். அப்படியே பதிப்பாளர் அகநாழிகை பொன்வாசுதேவனுடன் எங்கோ டீக்கடை பக்கம் சாரு மறைய , தூரத்தில் தெரிந்த புனைவு எழுத்தாளர்கள் மணிஜி நர்சிம்ஜிகளோடு தன் பேச்சை தொடங்கினான். பேச்சு பேச்சாக இருக்கும் போதே வாங்க பாஸ் புக்க வெளியிட்டுற போறாய்ங்க என்று நர்சிம்ஜி சொல்ல அவனும் அவர்களோடு மேலேறினான். விழா 5.30க்கு ஷார்பாக தொடங்கியது.

டிஸ்கவரி புக் பேலஸில் இதுவரை பல புத்தக வெளியீடுகள் நடந்திருக்கின்றன. ஆனாலும் இம்முறை அங்கே அனல் பறந்தது. மக்களெல்லாம் நனைந்து போய் அமர்ந்திருந்தனர். நானும் நர்சிம்ஜியும் சாருவுக்கு அருகில் அமர்ந்துகொண்டோம். பீப்லி லைவ் குறித்து நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் சாரு என்றான். ''அட இதையேதான்ப்பா அந்த கலாகௌமுதி எடிட்டரும் சொன்னாரு'' என்றார் சாரு. அவன் புன்னகைத்தான். என்ன சாரு இருக்க இருக்க இளமை கொப்பளிக்க அழகாகிட்டே போறீங்களே என்றான் அவன்.. சாரு புன்னகைத்தார். கேரளாவுக்கு நாவல் எழுதப்போனீங்களா இல்ல ஃபுல் சர்வீஸா? ரெண்டும்தான்பா என்று கூறியவர் மீண்டும் புன்னகைத்தார். அடுத்த நாவல் என்ன ஒரு க்ளுவும் இல்லையே? அதைப்பத்தி இன்னைக்கு பேசிரலாம்னு இருக்கேன்ப்பா! ஆர்வம் மேலிட முதல் வரிசையில் அவன் அமர்ந்திருக்க மேடையேறினார் சாரு.

அது எழுத்தாளர்சரவணகார்த்திகேயன் என்னும் இளம் எழுத்தாளரின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா. சாருவுக்கும் கவிதைக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம். பாவம் அந்த எழுத்தாளர் சாருவை வைத்துதானா தன் புத்தகத்தை வெளியிட வேண்டும்? சொந்த செலவில் சூனியம். வெளியிட்டார். சாரு பேச்சை தொடங்கினார். அவருடைய பேச்சு..

'' இன்றைக்கு அரசியல்,ஜனரஞ்சக பத்திரிகைகள் மட்டுமல்ல சிறுபத்திரிகை இலக்கிய உலகமும் ஊழல் நிறைந்த ஒன்றாகிவிட்டது. பொது மேடையில் இரண்டு எழுத்தாளர்கள் பிரபல இயக்குனருக்கு சோப்புப்போட்டு காலில் விழாத குறையாக வாய்ப்பு கேட்கும் இழிநிலைதான் இன்றைக்கு இருக்கிறது.'' என்று பேசத்தொடங்கியவர் அப்படியே எந்திரன் பக்கம் தாவினார். படத்தை கொஞ்ச நேரம் கிழித்து தொங்கவிட்டார். அப்படியே சுற்றியவர் ஆப்பிரிக்காவின் சர்வாதிகார மன்னன் (பெயர் குறிப்பிடவில்லை) ஒருவனுடைய அராஜகங்கள் குறித்தும், அவன் எப்படி புணர்வதற்காக பெண்களை தேர்ந்தெடுப்பான் என்பதையும் குறிப்பிட்டார். அதே போல தமிழ்நாட்டிலும் ஒரு பேரரசர் இருப்பதாகவும், மதுரையில் ஒரு இளவரசரும் சென்னையில் ஒருவரும் இருப்பதாகவும் சொன்னார். அடுத்து அரசியின் ஆட்சி வரும்போல் தெரிகிறது என்று தொடர்ந்தார்.

சிலே என்கிற தேசத்தில் அனைவருமே கவிஞர்களாம்.. 'போலவே' தமிழ்நாட்டிலும்.

வெளியிடப்பட்ட புத்தகத்தினை வைரமுத்துவுக்கு சமர்ப்பிருந்திருந்தார் எழுத்தாளர். ஆனால் புத்தகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து என குறிப்பிடப்பட்டிருந்தது.. அதென்னய்யா கவிப்பேரரசு என்று அடைமொழிகள் குறித்து அரைமணிநேரம் பேசினார். இளையராஜாதான் இசை ஞானி என்றால் மற்றவர்களெல்லாம் என்ன இசை முட்டாள்களா என்று அந்த பேச்சு கொஞ்ச நேரம் தொடர்ந்தது.

பின் கமலஹாசனை மகாநதியில் பாரட்டியதையும் குறுதிப்புனலில் விமர்சித்ததையும் , குறிப்பிட்டு சொன்னார். அசோகமித்திரனின்
இதற்கு நடுவே தன்னுடை நாவல் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். சாரு சில காலம் ஆண் விபச்சாரியாக இருந்த அனுபவங்களே இந்நாவல், இதில் அவர்களுடைய உடல் மீதான வன்முறையும், அதன் வலியும் வேதனையையும் பதிவு செய்யப்போவதாகவும் கோடிட்டு காட்டினார். இதே போல லத்தீன் அமெரிக்காவில் ஒரு எழுத்தாளர் ஆண் விபச்சாரியாக இருந்து அந்த அனுபவங்களை நாவலாக எழுதியுள்ளாராம். சாருவின் நாவல் டிசம்பர் மாதம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் காமராஜர் அரங்கில் வெளியிடப்படவுள்ளதாக ஒரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். கிம்கிடுக்கின் திரைப்படங்களில் உடல்மீதான வன்முறை எப்படியெல்லாம் காட்டப்பட்டது என்பது குறித்துப்பேசினார். 3

கடைசியாக சில சமகால உலக கவிதைகளை வாசித்துக்காட்டினார். பின் பாவப்பட்ட அந்த எழுத்தாளரின் கவிதைகள் குறித்து பேசினார். இந்த கவிதை தொகுப்பை சுஜாதா உயிரோடிருந்தால் தலை தூக்கிவைத்து கொண்டாடியிருப்பார்.. வைரமுத்து பாராட்டுவார்.. ஆனால் இந்த தொகுப்பில் வெறும் வார்த்தைகள்தான் இருக்கின்றன.. பரத்தையர்களில் குரல் இக்கவிதைகளில் ஒலிக்கவில்லை.. அவர்களுடைய வலியும் வேதனையும் இல்லவே இல்லை.. இந்த தொகுப்பில் சில கவிதைகளில் நல்ல வார்த்தை விளையாட்டு உண்டு. என்று குறிப்பிட்டார். அருகில் அமர்ந்திருந்த அந்த எழுத்தாளர்சரவணகார்த்திகேயன் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார். கவிதை நன்றாக இல்லை என்று இறுதியாக சொன்னவர்.. இப்படி சொல்வதற்காக சரவணகார்த்திகேயன் சந்தோசப்படவேண்டும்.. என்று உரையை பேசிய சில மணி நேரங்களில் சில நிமிடங்கள் புத்தகத்தைப்பற்றியும் பேசி முடித்துக்கொண்டார். சரவணகார்த்திகேயனை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.. இதை எதிர்பார்த்துதான் அவர் சாருவையே அழைத்தாராம்.

இதற்கே வெக்கை தாங்க முடியவில்லை.. உடலெல்லாம் வேர்த்துக்கொட்டி எப்படா சாரு பேசி முடிப்பாரு வெளிய காத்தோட்டமா போய் நிற்கலாம் ஆக்ஸிஜனும் கார்பன் மோனாக்ஸைடும் கொஞ்சம் நிக்கோடினும் புடிக்கலாம் என்று இருந்தது அவனுக்கு. சாரு பேசிமுடிக்கவும் வெளியேறினான். சாருவை தொடர்ந்து ச.கா ஒரு கத்தை பேப்பர்களுடன் ஏற்புரை வழங்க.. அவனும் அவனுடைய சமகால வலைப்பதிவர்களோடும் இலக்கியவாதிகளோடும் வெளியே புகைவிடத்தொடங்கினர். மழைபெய்ய தொடங்கியது.

14 October 2010

...ண்ணா பார்ண்ணா சிரிக்கறான்!


கோமாளி!


நம்ம சிஷ்யன் சரியான சிடுமூஞ்சி. எப்போதும் மூஞ்சியில் எருமைசாணியை அப்பியது போலவே திரிபவன். ''மவனே நான்கண்டி செவப்பா காசோட பொர்ந்திருந்தேனு வை.. அப்படியே திரிஷா நயான்தாரானு செட்டில் ஆய்ருப்பேன்... என் நேரம் கர்ப்பா பொர்ந்து தொல்ச்சிட்டேன்..'' என்று சலித்துக்கொள்வான்.


நரசிம்மராவ் , முரசொலி மாறன் முகங்களில் கூட நீங்கள் எப்போதாவது சிரிப்பை பார்த்திருக்கலாம் ஆனால் இவன் முகத்தில் சிரிப்பை பார்க்க தலைகீழாக நின்று பரதநாட்டியம் ஆடினாலும் முடியாது. வாயில் நான்கு வார்த்தை பேசினால் நான்கில் மூன்று ''த்தா''வாகத்தான் இருக்கும். எப்போதும் சலிப்பு.. எப்போதும் வெறுப்பு.. ஒருகட்டத்தில் அவனாலேயே இன்னாடா வாழ்க்க இது , ரோதனையா பூச்சு என்று சலித்துக்கொண்டன் சாமியாரிடமே சரணடைந்தான்!


கையில் பிளாஸ்டிக் கப்பில் ஒரு கட்டிங்கை ராவாக அடித்துக்கொண்டிருந்தார் சாமியார். ஊறுகாய் கூட இல்லை.. இப்படிப்பட்ட வித்தைகளில் அசகாயசூரர் நம்ம சாமியார்.


''சாமி இன்னானே தெர்லே.. யாராப்பாத்தாலும் செரி காண்டாவுது.. யார்னா என்ன பாத்து சிர்ச்சா.. அப்டீயே செவ்னியே சேத்து நாலு அப் அப்லாம் போலக்து..'' என்றான்


சாமியார் அவனை தீர்க்கமாக பார்த்தார். எழுந்து நின்று தன் இடுப்பு லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டார். என்ன நினைத்தாரோ? கெக்கே பிக்கே கெக்கே பிக்கே என்று விலா நோக விழுந்து விழுந்து சிரித்தார். சிரித்தபடியே கட்டிங் கப்பை பிடித்தபடி தன் அறைக்கு திரும்பி கதவை பூட்டிக்கொண்டார். சிஷ்யனுக்கு எதுவுமே புரியல... கொஞ்ச நேரம் அவர் சென்ற பாதையை தீர்க்கமாக பார்த்துவிட்டு.. கடுப்பாகி அங்கிருந்து நகர்ந்தான்.

சாமியாரின் அந்த விநோத சிரிப்பு அவனை ஏதோ செய்தது. எரிச்சலூட்டியது. கடுப்பாக்கியது. சரக்கடிச்சாலும் போதையில்லே.. தம்மடித்தாலும் திருப்தியில்லே. சோறும் இறங்கலே... பீரும இறங்கலே! என்ன செய்வதென்றே புரியலே. நாலு நாள் பைத்தியம் பிடித்தவனாய் அந்த சிரிப்பை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான்.


ஒரு வாரம் கழித்து மீண்டும் சாமியாரைப் போய் பார்த்தான். ''சாமி என்னா சாமீ.. என் மனசு கஷ்டத்த உங்களான்டை சொன்னா நீங்க இன்னாடானா கக்கபிக்கனு விக்கிவிக்கி சிர்ச்சினு பூட்டீங்களே'' என்றான்.


சாமி மீண்டும் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு.. முன்னால் செய்ததையே மீண்டும் செய்தார். யெஸ்! விழுந்துவிழுந்து சிரித்தார். இந்த முறை கடுப்பாகி.. ''யோவ் லூசாயா நீ! இப்ப இன்னாத்துக்கு இப்படி சிரிக்கற என்ன பாத்தா கோமாளி மாத்ரி இக்குதா'' என்றான் கோபக்கார சிஷ்யன்.


''டேய் பிலாக்கா பையா! நீ கோமாளியவுட கொறஞ்சவன்டா...'' என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிப்பை கன்டினியூவினார்.


''சாரி.. சாமீ டென்சானாகிச்சு.. என்ன ஏன் கோமாளியவுட கொறஞ்சவன்னு சொன்னே'' என்றான் சிஷ்யன்.


''கோமாளியாச்சும் அட்த்தவன் சிரிக்கர்த பாத்து அவன் ஹேப்பியாவான்.. நீ சுத்த வேஸ்ட்டு மச்சி, அட்த்தவன் சிர்ச்சாதான் ஒனக்கு காண்டாவுமே'' என்று கூறிய குரு.. மீண்டும் தன் அடைமழை சிரிப்பை தொடர்ந்தார்..


 

நாய்படாத பாடு!


நான்குவருட கடும் பயிற்சிகளுக்கு பிறகு சுயமாக ஒரு ஆசிரமம் அமைக்க முடிவெடுத்தான் சிஷ்யன். ஒரு நாள் சாமியாரிடம் போய் அதை நேரடியாகவே கேட்டான் ''சாமீ நான் தனியா ஒரு ஆஸ்ரமம் வச்சி.. டிவில உங்களாட்டம் வெளம்பரம் குட்து பெர்ய ஆளாவ்லாம்னுருக்கேன், உங்க பர்மிஷனும் ஆசீர்வாதமும் வோணும்'' என்றான்.


சாமியாருக்கு கிலியாகத்தான் இருந்தது. ஏற்கனவே நம்மகிட்ட டிரெயினிங் எட்த்துட்டு அவன்அவன் பிரான்ச் ஓப்பன் பண்ணி யுனிவர்சிட்டி, ஹாஸ்பிடல்,டிவி சேனல், பாரின் மனினு செட்டில் ஆகிட்டானுங்க.. இதுல இவன் வேற என்று நினைத்தவர்..


'' அடடே! ரொம்ப சந்தோசம் ராஜா! ஆமா தனியா ஆஸ்ரமம் வச்சி இன்னா பண்ணப்போற.. நம்ம ஆஸ்ரமத்துலயே மூனுவேளை சோறு போட்டு முப்பது ரூவா தரோமே பத்தாதா ஒனக்கு'' என்றார்.


''இன்னா சாமீ.. நேத்து வந்த சாமியாருங்கள்லாம், நடிகைங்க வீடியோ ஆடியோ, நியூஸ் சேனல்னு பெரிய ஆளாகிட்டானுங்க.. நான் நாலுவருஷம் உங்களான்ட குப்பை கொட்டிகினுக்றேன்.. அட்லீஸ்ட் நம்ம ரேஞ்சுக்கு ஒரு எஃப் எம் ரேடியாவாவது ஆரம்பிச்சி... ரம்பாவோ மேனகாவோனு செட்டில் ஆக வேணாமா, அதான் ராயபுரத்துல ஒரு எடம் பாத்துருக்கேன்.. செம எடம் சாமி'' என்றான் சிஷ்யன். சாமிக்கு பயம் கூடியது.


''செரி நீ முடிவு பண்ணிட்டு பேசற.. இன்னா பண்றது.. என்னமோ பண்ணு.. ஆனா நான் மூணு கேள்வி கேப்பேன் அதுக்கு நீ செரியா பதில் சொல்லிட்டா , உனக்கு பர்மிஷன் பிளஸ் ஆசீர்வாதம் எல்லாம் குடுக்கறேன்'' என்றார். சொல்லுங்கோ என்று முறைத்தபடி கைகட்டி நின்றான் சிஷ்யன். மவனே இப்போ மடக்கறேன் பாரு என்று நினைத்தவர்.. யோசித்துவிட்டு


''நீ போற எடம் ராயபுரம்.. மக்கள்லாம் செரி டெரரு , அங்க போனா உன்னை எல்லாரும் சேத்து காரித்துப்பி விரட்டி வுட்டா இன்னா பண்ணுவ''


''அதுக்கின்னா சாமி.. காரித்துப்பதான செய்றாங்கோ, தொட்ச்சு போட்னு போய்கினே இருக்க வேண்டியத்தான்.. அட்ச்சு கைய கால காவு வாங்காம வுட்டாலே போதும்'' என்றான் சிஷ்யன்


''ஒருவேளை அட்ச்சா? கைய காலல்லாம் ஒட்ச்சிட்டா இன்னா பண்ணுவ'' என்றார் சாமியார்.


''இன்னா சாமி.. அதுக்குலாம் பயந்தா ஆவுமா.. சாவடிக்காம வுட்டாலே போதும் , நான்லாம் பொழ்ச்சிப்பேன் உங்க டிரெயினிங்ல'' என்றான் சிஷ்யன்


''ம்ம்.. ஒருவேளை அட்ச்சே கொன்னுட்டா?''


''உங்களாட்டம் நாய்படாத பாடுபட்டுகினு அஞ்சுக்கும் பத்துக்கும் ஊர ஏமாத்திகினு அலையவேணாம் பாருங்க, நிம்மதியா போய் சேர்ந்துருவேன்'' என்று புன்னகைத்தபடியே சொன்னான் சிஷ்யன்!

 

 

(நன்றி ஜென்கதைகள்)

13 October 2010

இப்படியும் ஒரு வாரிசு

மீனாட்சி விஜயகுமார். வயது 47. தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் துடிப்பான வீராங்கனை. தென்கொரியாவில் நடைபெற்ற உலக தீயணைப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்று திரும்பியிருக்கிறார்.

1988லிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தாலும் இந்தியர்கள் யாருமே இதுவரை பதக்கம் பெற்றதில்லை. இந்தியாவிலிருந்து பதக்கம் பெறுகிற முதல் வீராங்கனை நம்மூர் மீனாட்சிதான்..

தீயணைப்புத்துறையில் பணியாற்றுவதென்பது சாகசமும் சேவையும் இணைந்த சவாலான வேலை. இந்தியாவில் முதன்முதலாக தீயணைப்புத்துறையில் இணைந்த பெண் அதிகாரி தமிழ்நாட்டை சேர்ந்த மீனாட்சி விஜயகுமார் என்கிற செய்தியே யாருக்கும் அதிகமாய் தெரிந்திருக்காது.

டெல்லியில் உள்ள கல்லூரியில் ஆசிரியர் வேலை. மாதாமாதம் நல்ல சம்பளம். அழகான குழந்தை. அருமையான கணவர். வேறென்ன வேண்டும்! ஆனால் மீனாட்சிக்கு ஒரு தேடல் இருந்தது. கிரண் பேடியைப்போல , அன்னை தெரசாவைப்போல மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்கிற தீராத ஆர்வம் இருந்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது! அது கட்டுரையின் கடைசி வரியில்...

காக்கி உடை அணிந்து கொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்யவேண்டும் என்பது படிக்கும் காலத்திலிருந்தே பசுமரத்தாணிபோல பதிந்து போன லட்சியம். அவருடைய தேடல் எப்போதும் அதை நோக்கியே இருந்தது.

2000ஆம் ஆண்டு வரைக்கும் இந்தியதீயணைப்புத்துறையில் பெண்களே கிடையாது. அந்த ஆண்டில்தான் இந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையாக மீனாட்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். ''ஆண்கள் மட்டுமே சவால்கள் நிறைந்த வேலைகளை செய்யமுடியும் பெண்களால் முடியாது என்கிற எண்ணத்தை மாற்ற நினைத்தேன் , மாற்றியும் காட்டினேன்'' என்று பெருமிதத்தோடு அந்த நாட்கள் குறித்து நினைவு கூர்கிறார். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது முதல் ஆளாக களத்தில் இறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டாராம். தீயணைப்புத்துறையில் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு வயது 38!

தீயணைப்புத்துறையில் பணியாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. 24 மணிநேரமும், 365 நாளும் பணியாற்ற வேண்டும். எப்போது அழைத்தாலும் உடனடியாக கிளம்பிப்போய் மக்களை காப்பாற்ற வேண்டும். உடல் உழைப்பு மிக மிக அதிகம். அதிக பயிற்சி தேவை. இதற்கெல்லாம் மேல் உயிருக்கு உத்திரவாதமே கிடையாது. விபத்துகளிலிருந்து மக்களை மீட்க களமிறங்கி தங்களுடைய இன்னுயிரை நீத்த எத்தனையோ தீயணைப்புத்துறை வீரர்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட ஆபத்தான ஒரு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மீனாட்சியால் எப்படி முடிந்தது?

 13 வயதிலேயே இவருடைய தந்தை காலமாகிவிட , இவருடைய தாயார்தான் இவரையும் தங்கையையும் மிகுந்த சிரமங்களுக்கிடையே படிக்க வைத்துள்ளார். தினம் தினம் ஏதாவது பிரச்சனைகளுடனேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால் , அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , எப்படி அதை எதிர்கொள்வது என்கிற அந்த உத்வேகம்தான் தன்னை இப்போதும் துடிப்புடன் செயல்பட வைப்பதாகவும் கூறுகிறார்.

 ''நம்மால் முடியும், முடியாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும், அதை நம்முடைய வயதோ , உடலோ தீர்மானிக்கக்கூடாது, எல்லாவற்றையும் நம்முடைய மனம்தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் உடல் அளவில் வலிமை குறைந்தவர்கள் என்று அறிவியல் கூறினாலும் மனதளவில் ஆண்களைவிடவும் வலிமையானவர்கள் , ஆண்களால் முடியாதவற்றையும் பெண்களால் சாதிக்க முடியும். பெண்கள் அதை உணர வேண்டும் '' என்று நம்பிக்கையூட்டுகிறார்.

குடிசைகள், சேரிகள் மற்றும் கடலோர பகுதிகள் தீயணைப்புத்துறைக்கு 24மணிநேரமும் வேலை காத்திருக்கும் வட சென்னை பகுதியில் நான்கு ஆண்டுகள் தீயணைப்புத்துறை அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 200க்கும் மேற்பட்ட பேரிடர்களில் பங்கு கொண்டு மக்களை காத்துள்ளார். இதுவரை அவருக்கு கால்களில் மூன்று முறை விபத்து நேர்ந்து சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கார்ப்ப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து தீயணைப்புத்துறையில் இயங்கி வருகிறார். இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் விடாமுயற்சியும் போராட்டகுணமும்தான் தன்னை இயங்க வைப்பதாக தெரிவிக்கிறார்.

இப்படி நான்கு திசையிலும் பம்பரமாக , ஒருபக்கம் விளையாட்டு இன்னொரு பக்கமோ தீயணைப்பு பணிகள் என்று சுழலும் இவருடைய குடும்பத்தினர் இவரை எப்படி பார்க்கின்றனர்?

 ''கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் எங்கள் வீட்டில் தீபாவளி கிடையாது, பொங்கல் கிடையாது, பண்டிகளைகள் எதுவுமே கிடையாது, மகன் பிறந்தநாளில் கூட அவனோடு இருக்க முடியாது.. ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளும் அன்பான கணவரும், என்னுடைய வேலையை புரிந்துகொண்டு அன்புகாட்டும் மகனுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஆணோ பெண்ணோ வீட்டில் முழு ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் யாராலும் சாதிக்கவே முடியாது. குடும்பத்தை கஷ்டப்படுத்தி நாம் சாதித்து என்ன ஆக போகுது சொல்லுங்க! வீட்டில் சமைத்துக்கொண்டிருப்பேன்... அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் போட்டது போட்டபடி அப்படியே கிளம்பிவிடுவேன்.. என் கணவர் முகம் சுளிக்காமல் மீதி உணவை சமைப்பார், மகனை பார்த்துக்கொள்வார்'' என்று பெருமையாய் பேசினார். மீனாட்சியின் கணவர் விஜயகுமார் தற்போது விமான நிறுவனம் ஒன்றில் மனிதவளமேம்பாட்டு துறையில் பணியாற்றி வருகிறார்.

தென்கொரியா போட்டிகளுக்கு முன்பு விபத்தில் கால்களில் அடிபட! தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை.. அதையும் எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வலியை பொறுத்துக்கொண்டு பயிற்சியை தொடர்ந்துள்ளார். தென்கொரியாவில் இவரோடு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கெல்லாம் வயது 30க்கும் கீழே!

அதைப்பற்றி கூறும்போது '' அங்கே போட்டிக்கு வந்திருந்தவர்கள் அனைவருமே இளம் வீரர்கள் , ஆனால் அதைக்கண்டு நான் மலைத்துவிடவில்லை, பதற்றப்படவில்லை. சவால்கள் நம்முன் வரும்போது அதை கண்டு பயப்படாமல் எதிர்கொள்ள வேண்டும்.. சவால்கள் சமாளிப்பதற்கு அல்ல , அவை நாம் சாதிப்பதற்கான வாய்ப்பு!

அந்தப்போட்டியிலும் எப்போதும் போலவே விளையாடினேன்.. வெற்றிபெற்றேன். சிறுவயதிலிருந்தே எந்த சவாலாக இருந்தாலும் அது வெற்றியோ தோல்வியோ அதை எதிர்கொண்டு போராடிபார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் குறையவே இல்லை! ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறுகிறோமா என்பதைவிட கலந்துகொண்டு முழுமையாக ஓடவேண்டும் என்பதே முக்கியம்.. அதிலும் பெண்கள் நிச்சயம் எதையும் முடியாதென்று விலகிவிடக்கூடாது.. எந்த சவாலாக இருந்தாலும் ஒரு கைபார்த்துவிடவேண்டும்'' என்று புன்னகைக்கிறார் , எளிமைக்கும் நேர்மைக்கும் பேர் போன அரசியல் தலைவர் கக்கனின் பேத்தி மீனாட்சி விஜயகுமார். நாட்டுக்காக அர்ப்பணிப்போடு உழைக்கிற இப்படிப்பட்ட வாரிசுகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர்!

-அதிஷா

நன்றி - புதியதலைமுறை

 

02 October 2010

எந்திரன் - பூம்... பூம்... ரோபோக்யா..



விஞ்ஞானி ஒருவர் உருவாக்கும் ரோபோவிற்கு அறிவு முத்திப்போய் , அது அந்த விஞ்ஞானிக்கே உலைவைத்தால் என்னாகும் என்பதே எந்திரன். அது என்ன எப்படி யாரு எங்கே இத்யாதிகளை வெள்ளிதிரையிலோ 20 ரூபாய் டிவிடியிலோ காணலாம்..

தமிழுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு இப்படி ஒரு கதை மிகமிக புதியது. கதையின் துவக்கம் உலகம் சுற்றும் வாலிபனை நினைவூட்டினாலும் எடுத்துக்கொண்ட கருவும் அதை அழகாக செதுக்கித்தந்திருக்கும் திரைக்கதையும் ரொம்ப ரொம்ப புதுசு. அதற்காகவே ஷங்கருக்கு ஷல்யூட் அடிக்கலாம். இந்தியாவின் அவதார் என்று அவர்களாகவே படம் வெளிவரும் முன்பு சொல்லிக்கொண்டனர். படம் பார்க்கும் போது அது உண்மைதான் என தோன்றாமல் இல்லை. தமிழ்சினிமா அடுத்தகட்டமல்ல புலிப்பாய்ச்சலில் பல கட்டங்கள் தாண்டியிருக்கிறது. எந்திரன் அதை இந்திய சினிமாவிற்கு சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட கதைகள் தோற்றுப்போகும் என்கிற அரதப்பழைய சென்டிமென்டை ஓங்கி அடித்து உடைத்தெறிந்துள்ளது எந்திரன் தி ரோபோட் திரைப்படம்.

படம் முழுக்க எங்கும் ரஜினி எதிலும் ரஜினிதான். அதிலும் ஆயிரக்கணக்கான ரஜினிகள்.. ரஜினிக்கு 60 வயதா! அடப்போங்கைய்யா! ச்சும்மா ச்சிக்குனு சிட்டுமாதிரி பறந்து பறந்து சண்டை போடுவதும் , காதல் அணுக்கள் பாடலில் பத்துவிநாடி ஸ்டைல் நடை போடுவதுமாய் இன்னும் கூட இளம் நாயகர்களுக்கு இணையாக ஆடிப்பாடுகிறார். அவருடைய சுருக்கங்களை மறைக்கும் மேக்கப் மற்றும் உடையலங்காரம் செய்தவர்களுக்கு ரஜினி சம்பளத்தில் பாதி கொடுத்தாலும் பத்தாது , கடின உழைப்பென்றால் என்னவென்று அவர்களிடம் டியூசன் எடுக்கலாம். முதல் பாதி ரஜினி - ஐஸ்க்ரீம் என்றால் இரண்டாம்பாதியில் மிளகாய் சட்னி!

மூன்றுமுகம் ரஜினியையும் உத்தம்புத்திரன் சிவாஜியையும் மிக்ஸியில் விட்டு அடித்தால் எப்படி இருக்கும் வில்லத்தனம்.. வாயை சுழித்த படி ரோபோவ் என்று ரஜினி சொல்ல தியேட்டரே அலறுகிறது. இந்த பாத்திரத்தில் ரஜினியைத்தவிர வேறு யாரையுமே நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கமலால் இப்படி ஒரு வில்லத்தனத்தை உடலிலும் நடைஉடைபாவனையிலும் காட்டமுடியுமா என்பது சந்தேகம்தான். முதல்பாதியில் மென்மையோ மென்மையாய் பார்ப்பதும் பேசுவதும், இரண்டாம் பாதி முழுக்க... ரஜினி ராஜ்யம்தான்.

ஷங்கரின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. தற்போதைய தமிழ்சினிமாவில் ஸ்டோரிபோர்டெல்லாம் உபயோகித்து படமெடுக்கும் இயக்குனர் இவர்மட்டுமே என்பது என் அனுமானம். அனிமட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். திரைக்கதையையும் வசனத்தையும் வரிவரியாய் ரூம்போட்டு யோசித்து செதுக்கியிருப்பார் போல ஏதோ ஒரு கதாபாத்திரம் ‘ம்’ என சொல்வதாக இருந்தாலும் ஏதாவது புதுமை படைக்கலாமா என்று அஸிஸ்டென்ட்களை கூப்பிட்டு வைத்து யோசிப்பாராயிருக்கும். படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியமென்றால் பிண்ணனியில் ஷங்கரின் உழைப்பு பளிச்சிடுகிறது.

அதிலும் அந்த வில்லன் ரோபோட்டின் குணங்களை நிஜமாகவே உட்கார்ந்து யோசித்திருக்க வேண்டும். முதல்பாதியில் நல்லவனாக இருக்கும் ஒருவன் ஓவர் நைட்டில் கெட்டவனாக மாறுவதாக காட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாக காரணங்களோடு வில்லனாய் மாறுவதாக காட்சிகளை ஒன்றுகூட்டி காட்டியிருப்பது அருமை. ஸ்டேன்லி குப்ரிக்கின் படங்களில் (புல் மெட்டல் ஜாக்கட்,ஷைனிங்) இது போன்ற மாற்றத்தை சம்பவங்களின் ஊடாக அழகாக சொல்லியிருப்பார்.

ஐஸ்வர்யாராய்.. புஷ்வர்யாராய். ஒன்றும் பெரிதாய் சொல்வதற்கு எப்போதுமே இருந்ததில்லை. இந்தப்படத்திலும் அதுவே! கிளிமஞ்சாரோ பாடலில் மட்டும் பளிச்வர்யாராய். இந்த பாத்திரத்திற்கு ஏன் ஐஸ்வர்யாராய் என்பது குறித்து அண்ணாப்பல்கலைக்கழகத்தில் யாராவது ஆராய்ச்சி நடத்தலாம்!

சந்தானம்,கருணாஸ்,கலாபவன்மணி,ஹனீபா என நல்ல நடிகர்கள் கொடுத்த காசுக்கு மேலேயே நடித்திருகின்றனர். அந்த ஹிந்தி வில்லன் அருமையாக நடித்திருக்கிறார். அவருக்கு பிண்ணனி பேசியவருக்கு நல்ல குரல், மாடுலேஷன்.

படத்தின் கிராபிக்ஸ் கிளைமாக்ஸ் தவிர்த்து எங்குமே பெரிதாய் உருத்தவில்லை. கிளைமாக்ஸ் காட்சி படு சொதப்பலாக இருந்தது. அதிலும் ரோபோக்கள் இணைந்து ராட்சசனாக நடந்து வருகிற காட்சியை ராமநாராயணன் குட்டிபிசாசு படத்தில் ஒருமுறையும், ஜகன்மோகினி படத்தில் தண்ணீராய் நமீதா நடந்துவருவதாகவும் காட்டிவிட்டார்கள். அது போக தினமும் போகோவில் ஒளிபரப்பாகும் பவர்ரேஞ்சர்ஸ் தொடரின் எல்லா எபிசோட் கிளைமாக்ஸும் அதுதானே!

படத்தின் முதல் பாக பிரமிப்பை , இடைவேளைக்கு பிறகு வரும் முதல் ஒருமணிநேர காட்சிகள் மொத்தமாய் அடித்து உடைக்கின்றன. அவ்வளவு மொக்கை. அதிலும் கொசுவைத்தேடி ரஜினி அலைவதாக காட்டப்படும் காமெடி.. கொட்டாவி அன் கம்பெனி. அதற்கு பின் வரும் கிண்டி கத்திப்பாரா சேஸிங்கும் அதே அதே! ஆனால் கடைசி 45நிமிடம் பரபரவென பறக்கிறது. ஆனாலும் படம் கொஞ்சம் நீளம்தான்.. மூன்று மணிநேரம் ஓஓஓஓஓஓடுகிறது. படத்தின் வசனங்கள் பலவும் கம்ப்யூட்டரோடு தொடர்பு படுத்தியே..ஜிகா ஹெர்ட்ஸ் டெராபைட்ஸெல்லாம் தெரியாத என்னைப்போன்ற கணினி அறியா அறிவிழிகளுக்கு.. ஙே!

படத்தின் கலை இயக்குனர் சாபுசிரிலின் மட்டையை பிதுக்கி வேலை வாங்கியிருப்பார்கள் போல! படம் முழுக்க செடி கொடி மரம் மட்டை குடி குட்டை எல்லாமே அழகு. ஒரு காட்சியில் நடித்தும் காட்டியுள்ளார். ரோபோ சப்தங்களை உருவாக்கியது யாரென்று தெரியவில்லை..ரசூலா? ரஹ்மானா? யாராக இருந்தாலும் சவ்ண்ட் அபாரம். அவருக்கு ஒரு சபாஷு. ரஹ்மானின் பாடல்களில் கிளிமஞ்சாரோ மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.. அவ்வளவு இனிமை.. காதல் அணுக்கள் அதற்கு அடுத்த ரேங்க். மற்றபடி கிளைமாக்ஸில் பிண்ணனியாக வரும் அரிமா அரிமா தீம்.. பச்சக் என ஒட்டிக்கொள்கிறது.

பைசென்டெனியல் மேன் திரைப்படத்தின் சாயல் இருப்பதாக சொன்னாலும்.. அப்படி ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. (ரோபோ மனிதனை காதலிப்பது , அந்த தோலில்லாத ரோபோவின் உருவம் தவிர). குடும்பம் குட்டிகளோடு குதூகலமாய் பார்க்கவும்.. குழுவாய் போய் குஜாலாக பார்க்கவும் சிறந்தபடம். மற்றபடி உங்களுக்கு இதுவரை ரஜினியை பிடிக்கவில்லையென்றாலும் கூட இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் ரசிகராகிவிடும் வாய்ப்பு மிகமிக அதிகம்!

ரன்னோ ரன்னென்று ரன்னுவான் இந்த எந்திரன்! DOT