Pages

30 March 2010

அங்காடித்தெரு - யதார்த்தமான அபத்தம்



சோகம் தாங்கமுடியவில்லை. கதறி அழவேண்டும் போல் இருக்கிறது. அய்யகோ! என்ன கொடுமை இது. இதற்கு மேல் தாங்காது! தமிழில் இதுவரை வெளியானதிலேயே இதுதாண்டா சூப்பர் படம். உலக சினிமாவே இங்கே பார் என் தமிழன் எப்படிப்பட்ட படம் எடுத்திருக்கிறான். இப்படி ஒரு படம் இதுவரை தமிழில் வந்ததே இல்லை. அடேங்கப்பா என்ன ஒரு உழைப்பு. என்ன நடிப்பு. இப்படி ஒரு கதைக்களம் எந்த இயக்குனராலாவது கையாள முடியுமா? கண்களில் நீர் தாரைதாரையாக வழிகிறது. உணர்வுகள் , பிம்பங்கள் , காட்சிப்படிமங்கள் . தடிமங்கள் , மற்றும் பல மண்ணாங்கட்டிகள் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பலே பலே! அங்காடித்தெரு! – ஒரு உணர்ச்சிகுவியலில் கண்டெடுத்த வைரம்.. ஓவ் ஓவ் ஓவ்...  (கதறி அழுகிறேன்... ஸாரி என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. தயவு செய்து தியேட்டரில் பார்த்து நீங்களும் அழவும் )



____________________________________________________________________________________

மன்னிக்கவும். அ.தெரு படம் உங்களுக்கு பிடித்திருந்தால் , அதை நீங்கள் உளமாற நேசிப்பவராக இருந்தால் , உங்களுக்கான விமர்சனம் மேலே.. இதற்கு மேல் படிக்க வேண்டாம். மேலே இருக்கும் கோட்டைத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரவேண்டாம். இல்லை மேலும் படித்து உங்கள் மனதை புண்ணாக்கிக் கொள்ள விருப்பமிருப்பவர்களும் மற்றவர்களும் தொடரலாம்.

மேலே கண்ட விமர்சனம் உங்கள் கண்களால் படம் பார்த்து எழுதியதாக இருக்கலாம். இனி என் கண்ணால் நான் கண்ட அங்காடித்தெரு அனுபவம்.

விஜய.டீ.ராஜேந்தரை தெரியாதவர்கள் யாராவது தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? அவருடைய படத்திலிருந்து ஒருகாட்சி. அண்ணனைவிட்டு ஓடிப்போன தங்கை. வறுமை தாளாமல் ரோட்டில் சோப்பு விற்பாள். ரிக்சா ஓட்டிக்கொண்டு வரும் அண்ணன் அவளை பார்க்கிறான். அவளோ கடுமையான வறுமையில் வாடி வதங்கி வயிறு ஒட்டி ஒல்லியாய் கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்தும் தலைகுனிந்து கடந்து செல்கிறாள். அவனால் அவளிடம் பேசமுடியவில்லை. கோபம் தடுக்கிறது. தன் ரிக்சாவின் கைப்பிடியை இறுகப்பற்றிக்கொள்கிறான். கேமரா அவளது தலையிலிருந்து மெல்ல கீழிறங்கி கால்களை காட்டுகிறது , கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன் நடந்து செல்கிறாள். அண்ணன் ஓவென்று கதறி அழுகிறான். அதைப்பார்த்துக் கொண்டிருந்த தியேட்டரே கதறி அழுகிறது. அம்மா அழுகிறார் என்று சின்ன பையனான நானும் காரணம் தெரியாமல் கதறி அழுகிறேன். துலாபாரம் என்று ஒருபடம் பலருக்கும் நினைவிருக்கலாம். சமீபத்தில் வெளியான நான்கடவுள் கூட அதே ரகம்தான். அட அந்த காலத்து அரிசந்திரா நாடகங்கள் கூட இதே வகைதான். அதே அழுகாச்சி மசாலாவை ரங்கநாதன் தெருவின் ஜனசந்தடிகளுக்கு நடுவில் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளோடும் பாத்திரங்களோடும் படமாக்கியிருக்கிறார் வசந்தபாலன்.

இதை விட மோசமான அழுகாச்சிப்படங்களும் தமிழில் உண்டு. அங்காடித்தெரு அந்த ஆயிரத்தில் ஒன்று. கிளிசேக்கள் நிரம்பி வழியும் ஒரு திரைப்படம். முதல் காட்சியிலேயே சாவு. அடுத்த அரைமணிநேரத்தில் இன்னொரு சாவு. மீண்டும் கால் மணிநேரத்தில் இன்னொரு சாவு. இப்படி படம் நெடுக ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை யாராவது சாகின்றனர். சினிமா தியேட்டரில் படம் பார்க்கிறோமா அல்லது ஆபரேஷன் தியேட்டரிலா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அத்தனை மரணங்கள். விதவிதமாய். கால் நாறி அழுகிப் போய் ஒருவர் சாகிறார், தற்கொலை செய்துகொண்டு ஒருவர் , விபத்து, விபத்துகள்... தொடர்ச்சியாக. அதிலும் ஒவ்வொரும் இறந்து போனதும் கடுமையான ஓலம். மண்டை காய்கிறது. சாவு வீட்டுக்குள் நுழைந்தது போல விடாமல் துரத்தும் மன உளைச்சல்... அடப்போங்கப்பா இதைவிட கடுமையான மரணங்களையும் அதற்கு பிறகான பிற்சேர்க்கைகளையும் சங்கதிகளையும் தமிழ்சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம்? இதுக்குத்தான் 80 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோமா?

முக்கால்ப் படம் துணிக்கடையின் உள்ளேயே நடக்கிறது. எப்போதும் முறைத்துக் கொண்டே அலையும் சூப்பர்வைசர். கொஞ்சி குலாவித்திரியும் அப்பாவி ஏழைத் தொழிலாளர்கள். பொழுதன்னைக்கும் அவர்களை தூக்கிப்போட்டு தூர்வாரும் முதலாளி வர்க்கம். எந்த நேரத்தில் எவனை போட்டு அடித்து ரத்தம் காட்டுவார்களோ என்ற பயத்தோடே படத்தை அணுக வேண்டியிருக்கிறது. எனக்கு சத்தியமாக ரத்தம் என்றாலே அலர்ஜி. அதுவும் பெண்களை முடியை பிடித்து இழுத்துப்போட்டு மிதிமிதி என்று மிதிக்கும் வன்முறையெல்லாம்... தேர்ந்த சைக்கோக்களால் மட்டுமே ரசிக்க முடியும். என்னால் அதை பார்க்க முடியாமல் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டேன்.

யதார்த்தம் அதுவாகவே இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும். அதிலும் அந்த சூப்பர்வைஸர் காட்சிகள். டிபிகல் தமிழ்சினிமா வில்லன். பெண்களை போட்டு அடித்து துவைத்து பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுபவர். படத்தில் இப்படி பல வில்லன்கள் முதலாளி வில்லன், போலீஸ் வில்லன் . சாமி கும்பிட்டுவிட்டு ஏழைகளை கட்டிவைத்து உதைக்கும் வில்லன்களை எம்.ஜி.ஆர் படங்களிலேயே நிறைய பார்த்தாகிவிட்டது. சேம் கிளிசே! மைகாட்! சேம் பிளட்.
துவக்கக் காட்சிகளில் சோற்றுக்கும் இருப்பிடத்துக்கும் முண்டியடித்துக் கொள்வதாய் காட்டப்படும் ஹாஸ்டல்கள் பாதி படத்திலேயே அடிதடி இல்லாமல் நெருக்கடி இல்லாமல் நார்மலாகிவிடுகிறது. படத்தின் கதைக்களத்தைவிட அதில் சொல்லப்பட்ட காதல் பிரதானமாக இருந்தாலும் அதுவும் சரியில்லை. மனதில் ஒட்டவில்லை.

படத்திற்கோ கதைக்கோ டைரக்டருக்கோ படம் எடுத்தவருக்கோ பார்ப்பவனுக்கோ வெளியே டிக்கட் கிளிப்பவருக்கோ , சமோசா விற்பவருக்கோ சம்பந்தமேயில்லாத காட்சிகள் ஒரு மணிநேரம் படத்தை நிறைத்திருக்கிறது. பாலகுமாரன் நாவல்களில் கதை போய்க்கொண்டிருக்க திடீரென மைக்கைப்பிடித்து எழுத்தாளர் அறிவுரை சொல்லுவாரே அதே பாணியில் திடீரென ஈசாப் கதைகளுக்கு இணையான கட்டணமுறை கழிப்பிட கதை வருகிறது. கழிப்பிடத்தை கழுவியன் அடர் கறுப்பாகத்தான் இருந்தான். குள்ளமான ஒருவனுடைய கல்யாணக்கதை வருகிறது. இஸ்லாமிய பெரியவர் ஒருவருடைய கதை வருகிறது. நடுவில் வயசுக்கு வந்த ஏழைத் தங்கையின் கதை வருகிறது. யூஸ்ட் டிஷர்ட் விற்பவனின் கதை எதற்கு வருகிறதென்று யாருக்குமே தெரியாது. மெகாசீரியல்களில் 52 எபிசோட்களில் மையப்பாத்திரத்தின் கதை பத்து எபிசோட்களில்தான் வரும். அதைப்போல மையக்கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அனுமானிப்பதற்குள் படத்தின் கிளைமாக்ஸ் வந்து கதறி கதறி அனைவரும் அழுகின்றனர். நமக்கு திருமதி செல்வம் சீரியலின் நாற்பது எபிசோட்களை ஒட்டுமொத்தமாக பார்த்த எஃபக்ட். ஸ்ஸ்ப்பா..

கிளைமாக்ஸ் என்று எதையாவது வைக்கவேண்டுமே.. அதற்காக கதாநாயகி காலைவெட்டி , அவரை ஏற்பாரா நாயகன் என்று கேள்வியெழுப்பும் காட்சிகளை வைத்து எல்லா படத்திலும் வரும் அதே மொக்கை கிளைமாக்ஸ். அந்த கிளைமாக்ஸுக்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத அதிர்ச்சி மதிப்பீட்டைத் தவிர வேறேதும் தராத கிளைமாக்ஸ். படத்தில் பல இடங்களில் அதிர்ச்சிக்காக சில பின்னல்களை செருகியிருக்கிறார் இயக்குனர். ஒரு சிலதைத் தவிர வேறேதும் படத்தின் இறுதிக்காட்சியைப்போலவே ஒட்டவில்லை.

படத்தின் பிண்ணனி இசை சகிக்கவில்லை. விஜய் ஆண்டனி வார் ஆப் தி வேர்ல்ட் கிளாஸ் ஆப்தி டைட்டன்ஸ் மாதிரியான படங்களுக்கு அடிக்கும் கும்மாங்குத்தை இந்த படத்திற்கு அடித்திருக்கிறார். எரிச்சல்தான் மிச்சம். அவள் அப்படியொன்று அழகில்லை பாடலைத்தவிர மற்றது எதுவும் நினைவில்லை. ஜி.வி.பிரகாஷ் நான்கு பாட்டாம்.ம்ஹும்.
படத்தின் நாயகன், அவருடைய நண்பன், கிராமத்து குடும்பம் என பல புதிய நடிகர்கள் நன்றாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் அவர் எடுக்கும் படத்தில் வரும் வில்லனைப்போலவே கண்களை உருட்டி உருட்டி நடித்திருக்கிறார். ரங்கநாதன் தெருவை அருமையாக படம் பிடித்த காமரா மேனுக்கு வாழ்த்துக்கள். அஞ்சலி கிளைமாக்ஸில் அழுகிறார். மற்றபடி ஜோதிகா லெவலுக்கு இல்லை. கற்றது தமிழ்தான் அவருடைய ஆகச்சிறந்த படம்.

படத்தின் துவக்கத்தில் நன்றி சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் என்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பிரமாண்டமாய் சரவணா தொடங்குவதற்கு சற்று முன் தொடங்கி சூப்பர் ஹிட்டாகி , பிரமாண்டமாயால் வியாபரம் சரிந்த துணிக்கடை. படம் முழுக்க சரவணாவை குறிவைத்து அடித்திருக்கிறார் இயக்குனர். அதற்கேற்ற படி கிளைமாக்ஸுக்கு முன்னால் தேவையே இல்லாமல் சிநேகா ஆட்டம் போடுகிறார். என்னைப்போன்ற அறிவுஜீவிக்கு சங்கரபாண்டியனுக்கும் சரவணாவுக்கும் முடிச்சுப்போட்டு பார்க்கத் தெரியவில்லை.

படத்தின் பிளஸ்கள் , சோபியாவாக வரும் அந்த கறுப்புப் பெண்ணும் ஜெமோவும். நறுக் வசனங்களால் கவர்கிறார் ஜெமோ. தெனாவெட்டு பார்வைகளாலும் உடல்மொழியாலும் சோபியா. மற்றபடி படத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்ட கவித்துவமான குறியீடுகள் அடங்கிய காட்சியமைப்புகள் உலக சினிமாவுக்கே சவால் விடக்கூடியவை. ஏனோ அந்த கருமாந்திரங்களெல்லாம் என்னைப்போன்ற உலக சினிமாவை பர்மாபஜாரில் எட்டிப்பார்க்கும் ஏகலைவன்களுக்கு தெரிவதில்லை.

படத்தின் திரைக்கதையும் இயக்கமும் காட்சியமைப்புகளும் ஜெமோவின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இணையானதாக இருக்கலாம். அல்லது சு.ராவின் புளியமரத்தின் கதையைப்போல உன்னதமான அனுபவத்தை தரலாம். என்னைப் போல் முன் வரிசையில் விசிலடிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ரமணிச்சந்திரனையும் சுஜாதவையுமே தாண்டவில்லை என்பதே யதார்த்தம். உலக சினிமா என்று சிலாகிக்கும் அளவுக்கு இந்த படத்தில் ஏதுமிருப்பதாய் தெரியவில்லை. நான் பார்த்த உலக சினிமாக்கள் வேறு மாதிரியானவை. அவை எமக்கு மன உளைச்சலை அளித்ததில்லை...

வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அம்மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்த முற்பட்ட வசந்த பாலனுக்கு பாராட்டுக்கள். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். ஆனால் ஆவணப்படத்தை எடுத்து அதில் ஆயிரத்தெட்டு கிளிசேக்களை நுழைத்து ஸ்கிரீனிலிருந்து கைகளை விட்டு கண்களை கசக்கி அழவைக்கும் படத்தை என்னவென்று சொல்வது. தமிழ்சினிமாவுக்கு இந்தக் கதைக்களம் புதிதாக இருந்தாலும் மற்றதெல்லாமே பழசுதான். இலவசமாக திரையிடப்படும் ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்.. 80 ரூபாய் டிக்கட் வாங்கிப்பார்க்கும் அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும். மன உளைச்சலை அல்ல..! காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை.
படத்தில் காட்டப்படும் மனிதர்களின் உண்மை நிலை தெரியாத மேல்தட்டு மேதாவிகள் , கதைமாந்தர்களின் வாழ்க்கையாக காட்டப்படும் கோரமான காட்சிகளைக் கண்டு மனம் குமுரலாம். சராசரி ஏழைத் தமிழ் ரசிகன் அதை பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ள மாட்டான். அவனுக்கு வாழ்க்கையின் உண்மைநிலை தெரிந்திருக்கிறது. அவன் எதற்காக சினிமா பார்க்கிறான் என்பதுஉம் அவனுக்கு தெரிந்திருக்கிறது.

இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம். எதுவுமே இல்லாட்டியும் படம் எடுத்தவன் பக்கிரினா யதார்த்த சினிமானு தலைல தூக்கிவச்சுதான் கொண்டாடனுமோ?

வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.

26 March 2010

டப்பா


சிந்துபாத் லைலாவைத் தேடி பல ஆண்டுகளாக பேய்த்தனமாக சுற்றிக்கொண்டிருக்கிறான். சரோஜா தேவி காலத்திலிருந்து லைலாவைத் தேடினாலும் அவனுக்கு இதுவரை லைலா மட்டும் அகப்படவேயில்லை. லைலாவே ஃபீல்டை விட்டு போய்விட்டார். அதைப்போலவே தோழர்கள் இருவருக்கும், நல்ல உணவு இதுவரை தட்டுப்படவில்லை. அனுதினமும் மதியம் வந்துவிட்டால் தோழர்களின் வேட்டை துவங்கிவிடும். ஏழுமலை,ஏழுகடல் தாண்டி டீக்கடை வைத்திருக்கும் சேட்டன் கடையில் நல்ல குழாப்புட்டு , கடலையுன் யாராவது சேச்சியிடம் கிடைக்கிறதென்று யாராவது ஆகாவழி எழுத்தாளர் எழுதினால் கூட அதையும் முயன்று பார்த்துவிடுவது தோழர்கள் பாணி. அதை தின்று பேதி வந்தால் அதையும் அந்த எழுத்தாளருக்கே வாசகர் கடிதம் எழுதும் அந்த இரண்டு தோழர்களில் அடியேனும் ஒருவன்.
இது நான் பங்கு பெறும் , எழுதும் கதை என்றாலும் நாயகன் தோழர்தான். திநகரின் வீதிகளுக்குள் புகுந்து சுற்றிக்கொண்டிருந்த மொக்கையான சுபதினம். காய் கனி கல் எதுகிடைத்தாலும் தின்னுகிற அகோரப் பசி. பசி எடுத்துவிட்டாலே மண்டைக்குள் குயில் கூவ ஆரம்பித்துவிடுமே.

அன்னாடம் காய்ச்சிகளுக்கு கையில் வைத்திருக்கும் பணத்தை பொறுத்து உண்ணுமிடம் , இடம் மாறும். சம்பளம் வாங்கி மூன்று நாள் முழுதாக முடியாத நாளில் கேட்கவும் வேண்டுமா? தோழருக்கு யோசனை தோன்றியது ‘’வொய் நாட் பஞ்சாபி தாபா?’’
‘’நோ பிராப்ளம் பாஸ் வீ வில் கோ , பட் வேர் பாஸ்! ’’ ( ஆங்கிலம் உதவி – சூப்பர் இங்கிலிஷ் கோச்சிங் சென்டர், தண்டையார் பேட்டை– ஆங்கிலம் பேச எழுத அவங்க கிட்ட போங்க , பிரபலங்கள் பரிந்துரைக்கும் ஆங்கில கோச்சிங் சென்டர் )

பஞ்சாபி தாபா என்றதும்..... வண்டி ச்சும்மா... விர்ர்ர்ர்ரூம்..... என்று சீறிப் பாய்ந்தது. என்று எழுதவேண்டும் என்கிற ஆசை என்னைப்போலவே படிக்கும் உங்களுக்கும் இருக்கலாம். ஏனோ அப்படியெல்லாம் தோழருடைய வண்டி போகாது. அப்படிப் போவதாக இருந்தால் முதலில் என்னுடைய நட்பை துண்டித்து விட்டு நல்ல நாட்டுக்கட்டைகளுடன் சுற்றிக்கொண்டிருப்பார்.

கடகுடமடகுட என்று பொறுமையாக எஸ்.ஐ.ஈ.டியின் இளஞ்சிட்டுகளை ஒரப்பார்வை பார்த்தபடி ( அதில் ஒரு பெண் அடியேனை உற்று உத்து பார்த்த கதை பிறிதொரு சந்தர்ப்பத்தில்) மெதுவாக கடந்து , தேனாம்பேட்டை புதுப்பாலத்திற்கு (உபயம் , நன்றி , வாழ்க – தளபதி ஸ்டாலின் , திமுக இளைஞரணி சைதாப்பேட்டை கிளை) கீழேயிருந்த புகழ் பெற்ற பஞ்சாபி டாப்பாவை அடைந்தோம்.

அது மிகப்பெரிய உணவு விடுதி. பெரும் பணக்காரர்கள் வந்து போகும் இடமாக இருக்க வேண்டும். நிறைய குடிசைகள் இருந்தன.

குடிசைகள் சிகப்பு நிற வண்ணப்பூச்சுடன் , பூச்சி கூண்டுகள் போல் இருந்தன. அதனுள்ளே சில வெளிநாட்டுக்காரர்கள் கையில் முள் கரண்டியில் கோழியை சொருகி கடித்துக்கொண்டிருந்தனர். பாஸ் இப்படியே ஓடிப்போயிரலாம் ரொம்ப துட்டு செலவாகும் போலருக்கு என்றேன். அட வாங்க பாஸ் நான் பாத்துக்கறேன். என்று தன் பாக்கட்டை தட்டி உள்ளே நுழைந்தவருக்கு, ரிசப்ஷன் எது பில் போடும் இடம் எது என்பதே முதலில் விளங்கவில்லை.

சார் பில் என்று சப்பை மூக்கு ஹிந்தி கார பையனிடம் விசாரித்தார். அவனை அந்த ஹோட்டலில் சார் என்று அழைத்த முதல் குடிமகன் நானாகத்தான் இருக்கவேண்டும். புன்னகைத்தான். திஸ் பிளேஸ் என்றான். அவனுக்கு எங்கள் அளவிற்கு ஆங்கிலம் தெரியாது போலிருக்கிறது. அவனிடமும் சூப்பர் இங்கிலிஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் விளம்பரம் போட்டுவிட்டு , தோழர் ஆர்டரை தொடங்கினார் , டூ பப்பே என்றார். என்னது என்றேன். பாஸ் பப்பே பாஸ் பப்பே என்றார் தோழர். நான் பெப்பே என்று விழித்தேன்.

பொதுவாக சோற்றை பார்த்தாலே ரஞ்சிதாவைக் கண்ட நித்தியைப்போல மனம் குதூகலமடைந்து ஸ்தூலம் நட்டுக்கும். ஆனால் அங்கே அடிக்க வைக்கப்பட்டிருந்த உணவுகளை பார்த்தால் திருட்டு வீடியோவில் சிக்கிக்கொண்ட தேவநாதன் போல திருதிருவென விழிக்க வேண்டியிருந்தது. மஞ்சள் நிறத்தில் மண்புழு போல குவித்து வைக்கப்பட்ட நூடுல்ஸ் , ரத்தக் கலரில் ஏதோ சிவப்பு நிற கூட்டு , அருகிலேயே சப்பாத்தி, அதற்கு பக்கத்தில் மஞ்சள் நிற குழம்பு , கொட்டி வைக்கப்பட்ட ஜிலேபிகள் என பார்க்கவே கந்திரகோலமாய் பணக்கார ஹோட்டல் போல இருந்தது. சோற்றைத் தேடினேன்! இல்லை. குழம்பு இல்லை. என்னைப் போன்ற மனிதர்கள் உண்ணுகிற எந்த சமாச்சாரமும் கண்ணில் தென்படவில்லை. என்ன பாஸ் இது.. யோவ் இதென்ன சரவணபவனா திஸ் இஸ் பஞ்சாபி டபா! என்ன கருமம் புடிச்ச டப்பாவோ என்று நொந்தபடி கையில் சிக்கியதிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி வைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய மொக்கையான தட்டு பிச்சகாரன் பாத்திரம் போல் ஆகி இருந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த பலருடைய தட்டும் அதே கோலத்தில். நூடுல்ஸை வாயில் தள்ளினேன் லேசாக குமட்டியது. அடக்கிக்கொண்டு தின்ன ஆரம்பித்தேன். எதிரில் ஒரு போர்டு இருந்தது. அதில் உணவை வீணாக்காதீர்கள். உணவை வீணாக்கினால் அதற்கான காரணம் கேட்கும் உரிமை மேனேஜ்மென்ட்டுக்கு உண்டு என ஆங்கிலத்தில் எழுதிருந்தது.

அந்த போர்டை பார்த்துவிட்டு என் தட்டைப்பார்த்தேன் மேனேஜ்மென்ட் கேள்வி எழுப்பும் அளவிற்கு உணவுகள் இல்லை. இதே நேரத்தில் தோழர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது முக்கியம். பார்க்கும் உணவிலெல்லாம் பாய்ந்து கொண்டிருந்தார். எதை எடுத்தாலும் ஒரு கிலோவுக்கு குறையாமல் அள்ளி தட்டில் ரொப்பிக் கொண்டிருந்தார். அவருடைய தட்டு குறைந்தது நான்கு கிலோ இருக்கும். தோழர் எதிரிலிருந்த போர்டை பார்க்கவில்லை போலிருக்கிறது.

உண்ண ஆரம்பித்தோம். அவர் மானை வேட்டையாடும் புலிபோல எல்லா ஐட்டங்களையும் மேய்ந்து கொண்டிருந்தார். நான் புல் மேயும் மான் போல பிச்சு பிச்சு..
தோழரால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை. தட்டில் பாதி உணவு அப்படியே இருந்தது. என் தட்டு காலி. பாஸ் முடியல என்றார். ஹலோ மரியாதையா தின்னுருங்க இல்லாட்டி திட்டுவாங்களாம் என்றேன். யார் சொன்னா?

அதோ அங்க பாருங்க. போர்டை பார்த்தார். பாஸ் அது சும்மா பேருக்கு எழுதிருப்பாங்க என்றார். யோ அங்க பாருயா அவன நம்ம தட்டையே பாத்துட்டுருக்கான் என்று அந்த ஹோட்டல் தொழிலாளி ஒருவனை சுட்டிக்காட்டினேன். அர்னால்ட் போல பெரிய சைஸ் கைகளுடன் வீங்கி வெடிப்பது போன்ற ஆஜானு பாகுவான உருவம் , ரெண்டு புல் மீஸ் சாப்பிடுவான் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். தோழருக்கு அதுக்கே லேசாக வயிற்றை கலக்கியிருக்க வேண்டும். இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் லேசான பயம் அவருடைய கண்களில் தெரிந்தது. யெஸ் ஐ சீ இன் ஹிஸ் ஐஸ். பார்த்தேன் அந்த பயத்த நான் பார்த்தேன்.

கஷ்டப்பட்டு அந்த தட்டை காலி செய்யும் முயற்சியிலிருந்தார் தோழர். ஆனாலும் தட்டு காலியான பாடில்லை. ஜிலேபிகள் வேறு ஐந்தாறு எடுத்து வந்திந்தார். பாஸ் நீங்க இரண்டு சாப்பிடுங்களேன் என்றார். தோழர் வாமிட் வரமாதிரி இருக்கு என்னால முடியாது என்ன மன்னிச்சிருங்க என்றேன். வேறு வழியே இல்லை இதுக்கு மேல் முடியாது என நினைத்தவர் ஒரு சப்பாத்தியை மீதமிருந்த உணவுகளின் மேல் மூடியது போல் வைத்தார். தூரத்தில் நின்று கொண்டிருந்த காட்டெருமை நண்பர் அதை பார்த்துவிட்டார்.
தோழர் நித்தியானந்தர் போல திருதிருவென விழித்தபடி புன்னகைத்தபடியே அந்த சப்பாத்தியை பிய்த்து வாயில் போட்டார். அந்த காட்டெருமை திரும்பிக்கொண்டது. பாஸ் வாங்க போயிரலாம் என்றார். ஹலோ மரியாதையா எல்லாத்தையும் சாப்பிடுங்க இல்லாட்டி அவங்க திட்டுவாங்க..

முடியாது பாஸ்..

அந்த காட்டெருமை தோழரை உற்றுப்பார்ப்பதை கவனித்தவர் என்ன நினைத்தாரோ மெதுவாக எழுந்து அங்கிருந்து கொஞ்ச கொஞ்சமாக நடக்க ஆரம்பித்தார். ஹலோ எங்க போறீங்க பாஸ் நில்லுங்க நில்லுங்க என்று நானும் பின்னாலேயே செல்ல , அந்த காட்டெருமை எங்களை நோக்கி வருவதைப்போல் இருந்தது. இப்போது எனக்கும் குலைநடுங்கவது போல் இருந்தது.

தோழர் அவசர அவசரமாக தன்னுடைய வண்டி சாவியை பாக்கெட்டிலிருந்து எடுத்து பைக்கை ஸ்டார்ட் செய்து , பாஸ் ஏறி உக்காருங்க என்றார். நான் அமர்ந்தேன். இந்த முறை நிஜமாகவே முதல்முறையாக அவருடைய பைக் விர்ர்ர்ரூம் என்று கிளம்பியது, திரும்பி பார்த்தேன். அந்த காட்டெருமை எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது தெரிந்தது. ஆஹா அடிப்பாய்ங்க போலருக்கே பாஸ் என்றேன்.. வண்டி ஒரு பெட்டிக்கடையில் நின்றது.

எப்போதும் போல் அதே சிகரட்டும் தீப்பெட்டியும். அந்த ஹோட்டலிலிருந்து வெகு தூரம் வந்திருந்தோம். பாஸ் கையே கழுவலையா என்றேன். பெரிய ஹோட்டல்ல டிஷ்யூதான் பாஸ் என்றார். ஓஹோ என்று மண்டையை ஆட்டிவைத்தேன்.

‘’ஆமா உங்க பேக் எங்கே’’ என்றேன். தோழருக்கு அப்போதுதான் நினைவு வந்தது அதை ஹோட்டலில் வைத்தது. வேறென்ன செய்ய காட்டெருமையை மீண்டும் சந்திக்க இருவருமாக கிளம்பினோம்.. விர்ர்ர்ரூம்.

**
Short Story by Athisha

13 March 2010

மஞ்சள் கேக் மகிமை



ஜாதுகுடா. ஜாது என்ற சொல்லுக்கு இந்தியில் மாயம் என்று பொருள். குடா என்றால் மலையாகத்தான் இருக்க வேண்டும். ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜாதுகுடா என்னும் அந்த மலை கிராமமும் உண்மையிலேயே மாயமலைதான். பசுமை மலைகள் அழகான வயல்கள். அருகே சின்னதும் பெரிதுமாக குடிசைகள். இயற்கையோடு இயற்கையாய் வாழுகிற மக்கள். தத்தி தத்தி மலை காடுகளினுடே ஓடி விளையாடும் பிள்ளைகள். வருடத்திற்கு நான்கு திருவிழா. அவர்களுக்கென பிரத்யேக கலைகள். உரிமையாளர்கள் இல்லாத நிலப்பரப்பு. மலையும் மலை சார்ந்தும் மகிழ்ச்சியான வாழ்க்கை. எல்லாமே பாஸிட்டிவ், இதுதான் ஜாதுகுடா. இப்போதல்ல. எப்போதோ..


‘’ஒரிடத்தில் நிலையாய் இருக்க விடாமல் அனுதினமும் விரட்டி அடிக்கிறாயே இறைவா இந்த அலைச்சலின் முடிவெப்போது’’ ஜார்கண்டின் பூர்வ குடிகளான ஆதிவாசிகளின் நாட்டுப்புற பாடல் இது. அதன் பின் ஒலிக்கும் சோகமான வரலாறு யாருக்கும் தெரியாது. இவர்களுக்கென தனியாக எந்த வரலாறும் எழுதப்பட்டிருக்கவில்லை. அவர்களுடைய வரலாறெல்லாம் வழிவழியாய் பாடுகிற இந்த தெம்மாங்கு பாடல்களில்தான். எப்போதும் அதிகார வர்க்கத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட வரலாறு. ஒவ்வொரு முறை அகதிகளாக இடம்பெயரும் போதும் விசும்பி அழும் குழந்தைகளின் கண்ணீரால் எழுதப்பட்ட வரலாறு.


தோல் நோய்கள்,டிபி,மலட்டுத்தன்மை,புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கு கால் கைவிரல்கள் அதிகமாகவும் குறைவாகவும் இருப்பது , உடலின் ஒருபக்கம் மட்டும் வளர்ச்சி, குழந்தைகளுக்கு மூளை குறைபாடு, கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு , குழந்தைகள் இறந்து பிறப்பது, புற்றுநோய்,காச நோய், வாதம், தோல் நோய்கள், புற்றுநோய் இன்னும் இன்னும் ஏராளமான அறியப்படாத நோய்கள். இத்தனை நோய்களும் ஹிரோசிமா-நாகசாகியில் அணுகுண்டு வெடித்த பின் அதில் தப்பிப் பிழைத்த மக்களுக்கு ஏற்பட்ட பின்விளைவுகள். ஜப்பானுக்கு ஹிரோசிமா இந்தியாவுக்கு ஜாதுகுடா. ஆனால் அங்கு யாரும் இதுவரை அணுகுண்டு வீசியிருக்கவில்லை.


‘அட நீங்க வேறங்க , அந்த ஊர்க்காரங்க கிட்ட குடிப்பழக்கம் ஜாஸ்தியாகிருச்சு , அப்புறம் ரொம்ப அசுத்தமான இடங்கள்ல வாழ்றாங்க, அப்புறம் வியாதி வராம என்ன பண்ணும் , ஆ ஊனா எங்களையே குத்தம் சொல்றதே இந்த மக்களுக்கு பொழப்பா போச்சுங்க’’ அரசு தரப்பிலிருந்து வந்த பதில் இது. அரசுக்கு உண்மையான காரணம் தெரிந்திருந்தது. ஆனால் அதை ஒப்புக்கொள்கிற தைரியம் இல்லை.


யுரேனியம் என்றால் என்னவென்று தெரியுமா? அணுசக்திக்கு ஆதாரமான மிக முக்கிய எரிபொருள். மிகமிக விலை உயர்ந்த கனிமம். அதன் மூலக்கனிமம் மஞ்சள் கேக் என்று அறியப்படுகிறது. அது ஜாதுகுடாவின் மலைபகுதிகளுக்குள் நிரம்பி இருந்தது. யுரேனியம் மட்டுமல்ல இன்னும் பல அரிய கனிமங்கள் கொட்டிக்கிடந்தது. பழங்களும் காய்கறிகளும் உண்டு வாழும் ஆதிவாசிகளுக்கு அது எவ்விதத்திலும் உதவவில்லை. உண்மையில் அது அம்மக்களுக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகளைத்தான் கொண்டு வந்து சேர்த்தது. முதலில் பிரிட்டிஷ் காரர்கள் வந்து இடம்பெயர சொன்னார்கள். இடம்பெயர்ந்தனர். அவர்களுடைய நிலத்திலிருந்து தாமிரம் எடுக்கப்பட்டது. தாமிரத்தோடு வெளியேறிய யுரேனியத்தினை பிரிட்டிஷார் அறிந்திருக்கவில்லை. அந்த மக்களும்!. அந்த மஞ்சள் கேக் வெளியாக தொடங்கியபோதே அந்த இனத்தின் அழிவும் தொடங்கிவிட்டது. தாமிர சுரங்கத்தின் வழியாக செல்லும் கர்ப்பிணி பெண்களுடைய கருக்கலைந்தது. குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். அந்த மலையில் ஏதோ சாத்தான் அமர்ந்திருப்பதாய் எண்ணினர். அந்த சுரங்கம் மலைக்கு செல்லும் முக்கிய சாலையில் இருந்தது. மலையில்தான் அவர்களுடைய பிழைப்பு.
பிரிட்டிஷ் காரர்கள் அங்கிருந்து போன பின் தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாய் எண்ணினர் ஆதிவாசிகள். ஆனால் வல்லாதிக்கம் மீண்டும் இந்தியா என்கிற பெயரில் மீண்டு உள் நுழைந்தது. இந்த முறை யுரேனியத்தையே குறிவைத்தனர். யுரேனிய சுரங்கங்களில் போதிய பாதுகாப்பின்றி ஆதிவாசி இளைஞர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். யுரேனிய கதிரியக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஊருக்குள் சென்றனர். சென்ற இடமெல்லாம் பாதிப்பு.


யுரேனியத்தை அப்படியே நிலத்தினடியிலிருந்து வெட்டி எடுத்து விட முடியாது. சில நூறு டன் மண்ணைத்தோண்டினால் சில நூறு கிலோ யுரேனியம் கிடைக்கும். கிடைக்கும் மண்ணை கழுவி சுத்தம் செய்து இன்னபிற தொழில்நுட்ப வேதியியல் வேலைகள் பார்த்தால் மட்டுமே யுரேனியம் மஞ்சள் கேக்காய் மாறும்.


வேதியியல் வேலைகள் பார்க்கும் போது வெளியேறும் கழிவு நீரை அகற்ற இடம் வேண்டுமே!. ஆதிவாசிகளே வேறெங்காவது போய் குடியேறுங்கள். விவசாய நிலங்களில் ஒரு அணை உருவாக்கப்பட்டது. அந்த அணையில் கதிரியக்க கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. மழைக்காலங்களில் அந்த நீர் மழைநீரோடு ஊருக்குள் புகுந்து விடும். மக்களுக்கு அப்போதும் தெரியாது யுரேனியம் கொல்லும் என்பது. கொன்றது. மேலே சொன்ன உடல்நலக்குறைபாடுகள் அதிகரித்தன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசிடம் முறையிட்டன.


பாபா அணுமின் ஆராய்ச்சி நிறுவனத்தின் அப்போதைய தலைவரோ ‘’உங்கள் மனைவியோடு கட்டியணைத்து படுத்திருக்கும் போது உங்கள் மனைவியின் உடலிலிருந்து உங்கள் உடலுக்கு பாயும் கதிரியக்கத்தைவிடவும் ஜாதுகுடா கழிவுநீர் குட்டையில் குறைவு, அதனால் அது மக்களுக்கு எந்த பாதிப்பையும் உண்டாக்காது’’ என்றார். அலட்சியம் கொடியது.


யுரேனிய சுரங்கங்களில் வேலை பார்ப்பவருக்கு பாதுகாப்பில்லை. கழிவுநீர் குட்டைக்குள் கால்நடைகளும் குழந்தைகளும் விளையாடினர். நிலத்தடி நீரும் , ஆற்று நீரும் பாதிக்கப்பட்டது. மீன்கள் இறந்து மிதந்தன. அதை தடுக்க போதிய பாதுகாப்பில்லை. மழைநீரோடு கலந்து வரும் கதிரியக்க கழிவுகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. இது போதாது என்று அந்த கழிவு நீர் குட்டையில் மைசூரிலிருந்தும் ஹைதராபத்திலிருந்து அணு உலைக்கழிவுகள் கொட்டப்பட்டன. யுரேனிய மஞ்சள் கேக்குகள் போதிய பாதுகாப்பின்றி சாலைகளில் உடைந்த பேரல்களில் கையாளப்பட்டன. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டது. பெண்களுக்கு கருக்கலைந்து போவது சகஜமாகவிட்டது. கிராமத்திலிருக்கும் ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கு ஏழு முறை எட்டு முறை கருக்கலைந்து போக தொடங்கிவிட்டது. குழந்தைகள் அங்கஹீனத்துடன் பிறந்தனர். இளமையிலேயே பலருக்கும் மரணம் சம்பவித்தது. அரசு அறிக்கைகாளால் ஆறுதல் கொடுத்தது. எல்லாமே மாறிவிட்டது.


மக்கள் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. மக்கள் யுரேனிய சுரங்கத்தை மூடுமாறு அரசை வற்புறுத்தினர். ஆனால் அரசு வேறு திட்டம் வைத்திருந்தது. அது மற்றுமொரு கழிவுநீர் அணைக்கட்டை கிராமத்தின் இன்னொரு பகுதியில் கட்டத்துவங்கியது. நிலைமை மேலும் மோசமானது இப்போது அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் பலர் போராடினர். வல்லாதிக்கம் சிரித்தது. 1998ல் புத்தர் மீண்டும்  சிரித்தார். ஜாதுகுடா யுரேனியத்தில் அணுகுண்டு வெடித்தார். இந்திய தேசியம் தலைநிமிர்ந்தது. புத்தரின் தேசமான ஜாதுகுடாவிலோ புத்தரின் ஆன்மா கதறி அழுதது. போக்கிடமில்லாத அந்த மக்கள் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டேதான் போனது. அரசும் மக்களை காப்பாற்றுகிறேன் , அவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டித்தருகிறேன் , சாலை அமைக்கிறேன் என்று ஏதேதோ செய்து பார்க்கிறது. அங்கே நிகழும் மரணங்களை யாராலும் மூடி மறைக்க இயலாது. இப்போதும் ஜாதுகுடாவின் யுரேனிய சுரங்கங்களுக்கு அருகில் குழந்தைகள் சுள்ளி பொறுக்கிக்கொண்டும் , சுற்றிக்கொண்டிருக்கின்றனர். அன்றாடம் யாராவது ஒருவர் காரணமின்றி இறந்தபடி இருக்கின்றனர்.
 


விஞ்ஞானிகள் இது குறித்து அணுசக்திக்கு சாதகமான புள்ளிவிபரங்களை அடுக்கலாம். புரட்சியாளர்கள் எதிரானவற்றை கொடுக்கலாம். பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவி கடைநிலை மக்களே. என்ன செய்யப்போகிறோம் நாம் என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் இது இந்தியாவில் அன்றாடம் நிகழும் சக பிரச்சனைகளின் ஒரு துளி. இதைப்போல இன்னும் எத்தனையோ அறியப்படாத நிகழ்வுகள். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு மக்கள் கூட்டம் தன் வாழ்விடத்தினை இழந்து அகதியாகவோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டோ கண்ணீரால் நனைந்து கொண்டிருக்கும். நமக்கு மிக அருகிலிருக்கும் கொடைக்கானலில் சமகாலத்தில் நிகழ்ந்த மெர்க்குரி தொழிற்சாலை பிரச்சனை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்.


மேலே குறிப்பிட்ட ஜாதுகுடா பிரச்சனையை கூட புத்தர் அழுதுகொண்டிருக்கிறார் என்னும் டாகுமென்டரி பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அணுகுண்டு வெடித்ததால் உண்டாகும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் ஊடகங்கள் ஏனோ இது போன்ற நிகழ்வுகளில் வாய் மூடி மௌனமே சாதிக்கின்றன. நாமும் கூட அணுசக்தி முதலான நாட்டின் மிகமுக்கிய பிரச்சனைகளில் இதே கள்ள மௌனத்தையே தொடர்கிறோம்.


ஜாதுகுடா குறித்த டாகுமென்டரி பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் கடுமையான மன உளைச்சல். மனமெங்கும் குற்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. உருத்தலாய் உணர்கிறேன். அந்த மக்களின் கவலைகளுக்கு பிரதானமான காரணகர்த்தா வேறு யாருமல்ல நான் மட்டுமே என்பதாய் உணர்கிறேன்.


இன்று நம்மால் மின்சாரமின்றி ஒரு விநாடி கூட இருக்க முடியாது. தினமும் இரண்டு மணிநேர கட்டாய மின்தடை குறித்து பெரிதாய் கவலைப்படுகிறோம். ஆனால் இங்கே நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதிக்கு பின்னாலிருக்கும் சோகமும் நாம் அறியாதவை அல்ல. அதை கண்டும் காணதவர் போல கிடைத்த்தையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கிறோம். வேறு வழியில்லை. வசதிகளுக்கு அடிமையாக்கப்பட்டிருக்கிறோம். கணினிக்கு கூட கடமைப்பட்டிருக்கிறோம். அந்த வசதி எத்தனை உயிர்களை பலிகேட்டாலும் அதை வழங்கிவிட தயாராயிருக்கிறோம். இதையெல்லாம் மாற்றிவிட முடியாதா என எப்போதாவது ஏங்குகிறோம். ஆனால் பிரதனாமாக நம் குடும்பமும் வாழ்வியலும் அது சார்ந்த சமூகமும் இன்னபிறவும் இன்றியாமையாததாய் இருக்கிறது. இதன் மத்தியில் அப்பாவிகளின் மரண ஓலம் சாலையில் கடந்து செல்லும் வாகனத்தின் ஹாரன் ஒலிக்கு ஒப்பானவையாக கடந்து செல்கிறது.


போபால் விஷவாயு கசிவு குறித்து நம் அனைவருக்குமே தெரியும். யுனைடெட் கார்பைட் நிறுவனம் இதுவரைக்கும் கூட இந்தியாவை ஏமாற்றி சுதந்திரமாய் அலைவதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்று வரை அந்த மக்களுக்கு உரிய நஷ்ட ஈடோ , அந்த நிறுவனத்திற்கு தண்டனையோ கிடைத்த பாடில்லை. இதோ இப்போதும் கூட மீண்டும் இந்தியாவில் தன் பெயரை டவ் கெமிக்கல் என்று மாற்றம் செய்து கொண்டு மீண்டும் தொழிற்சாலை அமைக்கும் வேலையில் மும்முரமாய் இருக்கின்றனர் போபால் அரக்கர்கள். நம்மால் என்ன செய்து விட முடியும். ஜனவரியில் சென்னையில் நடந்த மார்கழி இசை கச்சேரிகளுக்கு முக்கிய ஸ்பான்சர் யார் தெரியுமா டவ் கெமிக்கல்ஸ். சரிகமபதநி என்று தொடை தட்டி பாட்டு கேட்பதை தவிர!


இடது சாரிகளாக அறியப்படும் புரட்சிக்காரர்கள் உட்பட பலரும் சமூகத்தில் நிகழும் இது மாதிரியான பிரச்சனைகளை மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அவர்களிடம் அதற்கான தீர்வுகள் இல்லை. மீண்டும் பூஜ்யத்திற்கே நம்மை திருப்பி அனுப்புவதை தவிர நம்மிடம் வேறு வழிகள் இல்லை. பிடி கத்திரி தொடங்கி அணு சக்தி பிரச்சனை வரைக்குமான தொடரும் சோகங்களை மௌனத்தோடு ஏற்று கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. நாளைக்கே கூடங்குளம் அணுமின் நிலையத்தால் நேரடியாக நாமும் பாதிக்கப்படலாம். அப்போதும் அதே மௌனத்துடன் அதையும் ஏற்றக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை நமக்கு நமது வசதிகள் பிரதானமாக்கப்பட்டுவிட்டன.


****************



அந்த டாகுமென்டரி திரைப்படம் - நன்றி - யூடியுப்

பாகம் - 1



பாகம் - 2



பாகம் - 3



பாகம் - 4



பாகம் - 5



பாகம் - 6

03 March 2010

சாமியார் சாமான் நிக்காலோ!!!




''தல தல வெளிய வா தல '' என்றழைத்தபடியே ஓடிவந்தான் சிஷ்யன். சின்னக்குடிசையிலிருந்து தலையை குனிந்தபடி வந்தார் குரு.


''என்னால தியானமே பண்ண முடில , ரொம்ப நேரம் உக்காந்தா பின்னால வலிக்குது , முதுகு குடாயுது, மூச்சு முட்டுது, தலை அரிக்குது,தூக்கம் தூக்கமா வருது, செத்து போன ஆயாலருந்து பக்கத்துவீட்டு ஜெயாவரைக்கும் எல்லாரும் மனசுக்குள்ள வந்து ஓரே டார்ச்சராருக்கு, இதுக்கு ஒரு வழி சொல்லுங்க''


''ஓ............ம்ம் இன்னா செய்றது அல்லாம் பூடும்பா'' என்றார்.


ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தான் சிஷ்யன்.


''தல சூப்பாராகீது தல, நேத்து நல்லா சூப்பரா தியானம் பண்ணேன். திவ்யமாந்துச்சு, இன்னா அமைதி... இன்னா மேரி இந்துச்சு தெர்யுமா! தாங்க்ஸ் தல'' என்றான்


''ஓ............ம்ம் இன்னா செய்றது அல்லாம் பூடும்பா'' என்றார்..குருநாதர்


*********************************************


கொஞ்ச நாள் கழிச்சு குருவும் சிஷ்யனும் ஆத்தோரமா சாமான்கள் கழுவிக்கொண்டு இருந்தனர். தீடீர்னு ஒரு பாம்பு ஆத்துக்குள்ள விழுந்துருச்சு . உடனே குரு ஆத்துல குதிச்சு காப்பாத்தினாரு. காப்பாத்தும் போது அந்த பாம்பு அவரு கைய கடிச்சிருச்சு. ஆனாலும் அவரு மறுபடியும் வந்து சாமான் கழுவறதில மும்முரமா இருந்தாரு.


மறுபடியும் அந்த பாம்பு ஆத்துக்குள்ள விழுந்துருச்சு. மறுபடியும் குரு ஆத்துல குதிச்சு காப்பாத்தினாரு , மறுபடியும் பாம்பு அவரு கைய கொத்திருச்சு. இந்த வாட்டி இன்னும் ஷார்ப்பா கொத்திருச்சு.இதையெல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்த சிஷ்யன் காண்டாகி


'' குருவே அந்த பாம்புதான் கொத்தும் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறீர்கள்'' ன்னான்

குரு , குறுகுறுனு பாத்துகிட்டே சொன்னாரு '' பாம்புக்கு கடிப்பது குணம், எனக்கு பிடிப்பது குணம்''


******************************************


குருவிற்கு சிஷ்யர்களுக்கு கற்று கொடுத்து கொடுத்து சலிப்பு வந்துவிட்டது. அதனால் ஒரு நாள் அனைவரையும் அழைத்து ''பாய்ஸ் டுடே இஸ் தி லாஸ்ட் டே, நீங்க எங்கயாவது போய் ஏதாச்சும் பண்ணி உயிர்வாழ்ந்துக்கோங்கோ!! என்னால இதுக்கு மேல முடியாது '' என்றார்,


சிஷ்யர்கள் அனைவரும் வேறு வேறு ஊர்களுக்கும் சென்று பிரான்ச் ஆஸ்ரமம் அமைத்து பிழைத்து வந்தனர்.


முன்று வருடங்கள் கழிந்தது. நம்ம சிஷ்யனுக்கு திடீரென குருவின் ஞாபகம் வந்தது, அவனது ஆஸ்ரமத்தில் சரியாக கல்லா கட்டவில்லை. அவரிடம் இன்னும் சில வித்தைகள் கற்றுக்கொள்ள பிரியப்பட்டான். குருவைத்தேடி கோயில் குளமாய் அலைந்தான். ஒரு வழியாய் பழனிமலை அடிவாரத்தில் கண்டுபிடித்தான். அவர் ஒரு பிச்சைக்காரனோடு உக்கார்ந்து கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.


''இன்னா சாமி, இங்க பிச்ச எடுத்துனுக்கிறீங்கோ.. உங்களாண்ட இன்னும் கொஞ்ச வித்த பயகலாம்னு வந்தேன்''


''அதுக்கின்னா கத்து குடுத்துட்டா போச்சு'' என்றார் குரு.


''ஆனா மூணு நாளு நான் எப்படி இக்கீறனோ அதே மேரி நீயும் இர்ந்தா கத்து குடுக்கறேன் ஓகேவா!''


அதற்கு சம்மதித்தான் சிஷ்யன்.


அன்றைய தினமே குருவின் நண்பனான பிச்சைக்காரன் இறந்து போனான்.


குருவும் சிஷ்யனும் சேர்ந்து அவனை அடக்கம் செய்தனர்.


அடக்கம் செய்த களைப்பில் குரு உறங்கிப்போனார். சிஷ்யனோ இரவெல்லாம் விழித்தபடி நாளையைப்பற்றி சிந்தித்தபடி இருந்தான்.


''இன்னிக்கி நாம பிச்ச எடுக்க வேண்டியதே இல்லபா! , பாரு செத்துப்போனவன் முந்தாநாள் கொண்டாந்த பழைய சோத்த வச்சுகினு போயிருக்கான், அத துன்னு இன்னிக்கி பொழுத போக்கிக்கலாம்', நாளைக்கு பிச்ச எத்துக்கலாம் ஓகேவா'' என்றார்.


சிஷ்யனால் அதை முகர்ந்து கூட பார்க்க முடியவில்லை. குமட்டியது. ஒரு பருக்கை கூட தின்ன முடியவில்லை.


''இன்னாடா நீ.. நான்தான் சொன்னேன்ல உன்னால என்னாட்டம் வாயவே முடியாதுனு..'' என்று எரிச்சலுடன் கத்தினார் குரு.


''தயவு பண்ணி இன்னொருதபா வந்து வித்த சொத்தனு தொந்தர்வு பண்ணாத இன்னா, சாமியாரே சாமான் நிக்காலோ'' என்றார் குரு.




02 March 2010

இலங்கை இறுதி யுத்தம்



இலங்கையில் நடந்த நான்காவது ஈழப்போர் சென்ற ஆண்டின் மத்தியில் முடிவுக்கு வந்தது அரதப் பழைய செய்தி . போரின்  இறுதியில் நிகழ்ந்தவை ஒரு சாரருக்கு பேரதிர்ச்சியையும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியையும் அளித்தது. அந்த இறுதி நிகழ்வுகளையும் , 25 ஆண்டுகால நீண்ட போரின் முடிவையும் இலங்கை ராணுவம் எப்படி தன் வசமாக்கி வெற்றிகொண்டது,  பல லட்சம் மக்கள் அகதியானதன் பிண்ணனி  என்ன என்பது மாதிரியான விஷயங்களை விளக்க முனைகிறது இலங்கை இறுதி யுத்தம் நூல்.
 என்டிடிவியின் பாதுகாப்பு மற்றும் ராணுவ விஷயங்கள் தொடர்பான ஆசிரியர் நிதின் கோகலே. அவர் எழுதிய ‘SRILANKA : FROM WAR TO PEACE “ என்னும் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்து கிழக்குப் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளனர். (மொழிபெயர்ப்பாளர் பெயர் இல்லை)
இந்த நூலின் விமர்சனத்தினை அதன் முன்னுரையிலிருந்தே துவங்கலாம். முதலில் அதிலிருந்து இரண்டு சாம்பிள் பத்திகள்.
1 . ‘உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை ராணுவம் ஒழித்துக் கட்டியது என்கிற கதை எழுதப்பட்டே ஆக வேண்டும் என்று எனக்கு தோன்றியது’’
2. ‘ இந்த புத்தகத்தின் உருவாக்கத்தில் சிலரது பெயர்களை நிச்சயமாக சொல்லமுடியும் , மூத்த பத்திரிக்கையாளர் இலங்கை விவகாரத்தை கூர்ந்து கவனிக்கும் நோக்கர் பி.கே.பாலசந்திரன் , இலங்கை பாதுகாப்பு துறைச் செயலர் கோதபாய ராஜபக்சே , ஜெனரல் சரத் பொன்சேகா , ஹை கமிஷனர் ரொமேஷ் ஜெயசிங்கே , இலங்கை வெளியுறவுத் துறை செயலர் பலித கோஹனே... ‘
என்று அந்த பட்டியல் அந்தக்கால கோயபல்ஸுக்கு இணையாக மேற்கத்திய நாடுகள் சித்தரித்த இன்னும் பலரது பெயர்களுடன் நீள்கிறது.
இந்த புத்தகம் எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கும் என்பதை முதலிலேயே விளக்கிவிடுவதும் , ஈழப்போராட்டம் குறித்தான ஆசிரியரது பார்வையையும் தெளிவாக்கிவிட்டு புத்தகம் குறித்து பேசுவதுமே சரியாக இருக்கும். அதை மேலுள்ள இரண்டு பத்திகள் முழுமையாக விளக்கியிருக்கும். இது ராஜபக்சேவுக்கு நன்றி விசுவாசத்துடன் எழுதப்பட்ட உண்மையான வரலாறு.
19 மே 2009லிருந்து புத்தகம் துவங்குகிறது. அன்றைக்கு பிரபாகரனின் இறந்த சடலத்தினை ஆய்வு செய்யும் கருணா , அது அவர்தான் என்று சான்றளிக்கிறார். அதைத்தொடர்ந்து சரத் பொன்சேகா , பிரபாகரனை கொன்றது எப்படி என்று விளக்குகிறார். அதைத்தொடர்ந்து அந்த கடைசிக்கட்ட போரில் இலங்கை இராணுவத்தின் வீரதீர சாகசங்கள் அல்லது அவர்களுடைய திட்டமிடலும் போர்த்தந்திரங்களும்.
அதற்குடுத்தடுத்த அத்தியாங்களில் பிரபாகரன் என்னும் ஒற்றை ஆள் , எப்படி இலங்கையின் 65000 கி.மீ சதுர கி.மீ பரப்பளவில் 16000ஐ தன்னுடைய முழுமையான நிர்வாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதனையும் , அந்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் ஆராய்கிறார். செப்டம்பர் 11க்கு பிறகான உலக அரசியலை சரியாக கணிக்காமல் விட்டது. கருணாவை துரத்தியது. ரணிலுக்கு மாற்றாக ராஜபக்சேவை ஆதரித்து தேர்தலை புறக்கணித்தது, இலங்கை இராணுவத்தின் பலத்தை தவறாக கணித்தது. முழு அமைப்பையும் பிரபாகரன் என்னும் ஒருவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ராஜிவ் காந்தி படுகொலையை நிகழ்த்தியதால் உருவான பிரச்சனைகள் என்று பல காரணங்களை முன்வைக்கிறார்.
நான்காவது ஈழப்போர் கிழக்கில் மாவிலாறு அணைக்கட்டில் துவங்குகிறது. அங்கிருந்து கிழக்கை முழுமையாக இலங்கை இராணுவம் கைப்பற்றுதல். அதைத்தொடர்ந்த ராஜபக்சேவின் வெற்றியுரை வடக்கில் நிகழ்ந்த போர் போர் போர் ஒயாத போர்தான்.
இதற்கெல்லாம் மத்தியில் ராஜபக்சேவின் நேர்த்தியான நுணுக்கமான ராஜதந்திரமான திட்டமிடல் (புத்தகத்தில் பல இடங்களில் அதை அப்படித்தான் விவரிக்கிறார்) , வீரம் சொறிந்த கொத்தபாய மற்றும் ஃபொன்செகா இணைந்த வரலாறு , இந்த மூவரது கூட்டணி இலங்கை இராணுவத்தில் செய்த புரட்சிகரமான மாற்றங்கள். அவர்கள் இந்தியாவிற்கு அல்வா கொடுத்து சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஆயுத பேரங்கள் என்று செல்கிறது.
ஆசிரியர் ஒரு தீவிர இந்தியனாதலால் ஈழப்போரில் இந்தியாவின் பங்கைப்பற்றி எழுதும் போது அடக்கி முடக்கி வாசிக்கிறார். ஐபிகேஎப் இலங்கையில் எதையுமே செய்யவில்லை , புலிகள்தான் போலியான செய்திகளை அது சார்ந்த ஊடகங்களின் மூலம் பரப்பின என்றெல்லாம் எழுதுகிறார்.
புலிகள் தமிழ்நெட் மூலம் பொய் பிரச்சாரம் செய்வதை தடுக்க இலங்கை பல கோடி செலவில் டிபன்ஸ்.எல்கே இணையதளத்தை துவக்கி உண்மை பிரச்சாரம் செய்து இந்த போரில் வெற்றிபெற்றதாம். இலங்கை இராணும் செய்தியாளர்களை மதித்து அவர்களுக்கு தேவையான ‘உதவிகளை செய்தார்களாம். நிதின் கோகுலே நன்றாக “COVER”age செய்திருக்கிறார்.
போகிற போக்கில் இலங்கை அரசு யாரோ 14 பத்திரிக்கையாளர்களை கொன்றார்களாமாப்பா என்று சர்வசாதரணமாக சொல்லிவிட்டு செல்கிறார். ராஜபக்சேவைப்பற்றி எழுதும் போது நரம்புகள் புடைக்க பூரிப்போடு எழுதும் பேனா இறந்து போன சக பத்திரிக்கையாளன் குறித்து எழுதும் போது மண்டையை சொறிகிறது.
புத்தகம் முழுக்க ஒரு பிரச்சனையை நேர்த்தியாக சொல்லிச் செல்கிறார். இலங்கை ராணுவம் எப்போதும் போர்க்காலங்களில் சிவிலியன்களின் உயிரை மதித்து அவர்களுக்காகவே போர்களில் தோற்றது. புலிகள் எப்போதும் சிவிலியன்களின் உயிரை மதிக்கவில்லை. மாவிலாறு பிரச்சனையில் துவங்கி இறுதியுத்தம் முல்லைத்தீவின் 300 கிலோமீட்டர் பரப்பளவில் சுருங்கிய போதும் சிவிலியன்களை கொல்வதும் அவர்களை அகதிகளாக்குவதும் புலிகள் , அவர்களை விடுவிப்பதும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் இலங்கை இராணுவம் என்கிற தொனியோடு எழுதப்பட்டிருக்கிறது.
அது தவிர ஈழப்போர் துவங்க 1980களில் உருவான சிறிய போராளி குழுக்களே காரணம் , அதற்கு முன் என்ன நடந்தது , போராளிக்குழுக்கள் ஏன் உருவாயிற்று , அவை எதற்காக வங்கிகளை சூறையாடின , தகவல்கள் இல்லை.. பாவம் இலங்கை அமைதியாக இருந்தது , இந்த போராளிகள்தான் அதை கெடுத்துவிட்டார்கள், என்பதே ஆசிரியரின் முனைப்பாக இருக்கிறது.
இறுதியுத்தம் நடைபெறும் போது செத்து மடியும் அப்பாவிகளுக்காக போரை நிறுத்த வலியுறுத்திய மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடுகிறார். அவை பிரபாகரனை சாவிலிருந்து காக்கவே முயன்றன என்றும் மக்கள் குறித்து அந்த நாடுகளுக்கு அக்கறையில்லை என்றும் குற்றஞ்சாட்டுகிறார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக அதே நாடுகள் இலங்கையின் மீதும் ராஜபக்சேவின் மீதும் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு , கொத்தபாய ராஜபக்சேவின் குரலில் தன் பார்வையை வைக்கிறார் அது ’’அமெரிக்காவும் பிரிட்டனும் முதலில் தங்கள் செயற்பாடுகளை கவனிக்கட்டும்’’ என்று ஆணவத்துடன் அலறுகிறார். தொடர்ந்து ஒரு சின்ன நாடு மிகப்பெரிய தீவிரவாத அமைப்பை அழித்துவிட்டதே என்னும் பொறாமையில் மேற்கத்திய நாடுகள் இலங்கையின் மீது குற்றஞ்சாட்டுகிறது என்கிறார். அடப்போங்கடா! என்றிருக்கிறது படிக்கும் நமக்கு.
புத்தகம் முழுக்கவே இலங்கை இராணுவத்தின் வீரதீர சாகசங்களும் , போர்த்தந்திரங்களும் , நுணக்கங்களும் என முழுக்க முழுக்க சரத் பொன்சேகாய நமக.. ராஜபக்ஷாய நமஹ என்று ஆசிரியரின் பஜனை புத்தகம் முழுக்கவே ஒலிக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று
ஆஜானு பாகுவான உருவம் கொண்ட ஃபொன்சேகா , அதற்கு ஏற்றார்போல  வலுவான இதயமும் கூர்மையான ராணுவ சாதுர்யமும் கொண்டவர்’’
புலிகள் தங்களுடைய போர்முறைகளையும் ஆயுதங்களையும் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவில்லை. செப்டம்பர்11 தாக்குதலுக்கு பின் தங்களுடைய அயல்நாட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்திருக்க வேண்டும். உலக அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் குணத்தை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் , இலங்கை ராணுவத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட்டது என்பது மாதிரியான தவறுகள் யோசனைகள் நமக்கே தெரியும். அந்த மாவை நைய ஆட்டி புலிகள் மேல் மேலும் குற்றப்பத்திரிக்கை வாசித்திருக்கிறார் ஆசிரியர்.
இப்படி புத்தகம் முழுக்கவே பஜனையாக இருக்கையில் நூலின் ஆசிரியர் சில இடங்களிலாவது உண்மையை சொல்லியிருந்தாலும் அதன் நம்பகத்தன்மையையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. புலி ஆதரவாக எழுதவேண்டும் என்பதல்ல நமது நோக்கம் , ஆனால் மக்கள் ஆதரவாகவாவது எழுதியிருக்கலாம். அது பக்கசார்பற்ற உண்மையான வரலாறாக இருந்திருக்கலாம.
பிரபாகரனுக்கு இறுதியில் நிகழ்ந்தது என்ன? விடைகள் இல்லை. புலிகள் மக்களை தடுப்பு அரண்கள் மூலம் ஓரிடத்தில் முடக்கி வைத்திருந்தனர். தப்பிச் சென்றவர்களை சுட்டுக்கொன்றனர் என்பது மாதிரியான வசதியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
வரலாறு வெற்றிப்பெற்றவனின் பார்வையிலேயே பதிவாகிறது என்று எங்கேயோ படித்திருக்கிறேன். நிதின் கோகலே அப்படிப்பட்ட ஒற்றை சார்புடைய பார்வையை இந்த புத்தகத்தில் முன்வைக்கிறார். ஒருவேளை இந்த நூல் இலங்கையில் வாழும் சிங்களவர்களையும் , இந்தியாவில் வாழும் என்டிடிவி பார்க்கும் அறிவுஜீவி வடநாட்டினரையும் குறிவைத்து எழுதப்பட்டிருக்கலாம். எது எப்படியோ இரண்டு டைனோசர்களின் சண்டையில் பல லட்சம் மக்களின் வாழ்வியல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமாவது இறுதியில் சொல்கிறார். அதற்கு நன்றி.
புத்தகத்தில் பல இடங்களில் உண்மையை சொல்வது போல் தெரிந்தாலும் , அதற்கு அடுத்த சீனிலேயே பல்டி அடித்து மீண்டும் ராஜபக்சாய நமக.. என்று பழைய பஜனையையே நூலாசிரியர் ஆரம்பிப்பததால் ஆவ்வ்வ்...
இது மாதிரியான புத்தகங்களை படிக்காமலிருப்பதே நல்லது.