Pages

30 May 2011

செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்!





அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்தால்தான் நான்கு மணிக்கு சமையலை முடிக்க முடியும். அம்மாவும் அப்பாவும் கூலி வேலைக்கு பழனியிலிருந்து தாராபுரம் வரை செல்பவர்கள். அவர்களுக்கான மதிய உணவை தயார் செய்து தூக்குபோசியில் கட்டிக்கொடுக்கும் பொறுப்பு இருளாயியுடையது. நான்கு மணிக்குள் வேலைகளை முடித்துவிட்டு , ஆறு மணி வரை உறக்கம். அதற்கு பிறகு தம்பி தங்கையை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும். அது முடித்த பின் அவர்களுக்கான உணவை தயாரிக்க வேண்டும். வீட்டில் கேஸ் அடுப்பெல்லாம் கிடையாது. விறகு அடுப்புதான். ஊதாங்குழலால் ஊதி ஊதி சமையலை முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். இத்தனையையும் முடித்து விட்டு பள்ளிக்கு பல மைல் தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும்.

பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து மீண்டும் சமையல், துணி துவைத்தல், பாத்திரங்கழுவுதல் என வீட்டு வேலைகள் மொத்தமும் முடித்துவிட்டு, தம்பிக்கு பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு ஆயாசம் அடைவதற்குள் மணி பத்தாகிவிடும். அதற்கு மேல்தான் படிக்க முடியும். வீட்டிலிருக்கும் ஒரே ஒரு குண்டு பல்பு பத்து மணிக்கு மேல் எரிந்துகொண்டிருந்தால் தம்பி தங்கையும் பெற்றோரும் தூங்க முடியாது. விளக்கை அணைத்துவிட்டு தெருவிளக்கிருக்கும் இடத்திற்கு வருவார். அர்த்தராத்திரியில் படிக்கத்தொடங்குவார். இரண்டு மணி வரை படிப்பு தொடரும்!

ஒரு நாளில் இரண்டு மணிநேரம் தூங்கி, வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு, தெருவிளக்கில் படித்த இருளாயி இன்று நர்சிங் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி. ஆனால் அவருடைய வறுமை அவரை மேற்படிப்பை தொடரவிடாமல் செங்கல் சுமக்க வைத்திருக்கிறது.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் நர்சிங் பாடத்தில் 200க்கு 181 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார் இருளாயி. இவர் பழனிக்கு அருகிலிருக்கும் கோதைமங்கலம் என்னும் மிகச்சிறிய கிராமத்தை சேர்ந்தவர். விவசாய கூலி வேலை பார்க்கும் பெற்றொர். பத்து ரூபாய் கூட பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டிய வறுமையான சூழல். இவரை படிக்கவைக்கவோ பெற்றோருக்கு விருப்பமில்லை. வீட்டில் போராடி சண்டைப்போட்டு படிக்க வேண்டிய சூழ்நிலை. தனக்கு வேண்டிய பாட புத்தகங்களுக்காக பகுதிநேரமாக செங்கல் சூளையில் செங்கல் சுமக்கிறார்.

பனிரென்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தினம். அவர் பணியாற்றி வந்த நூற்பாலையில் விடுமுறை கேட்டிருகிகறார். முதலாளியோ அதெல்லாம் தேவையில்ல நீ எடுக்கபோற நாலு மார்க்குக்கு லீவுதான் முக்கியம் என திட்டி அனுப்பிவிட்டாராம். அதனால் மனமுடைந்து எப்போதும் போல வேலைக்கு சென்றிருந்தார்.

தேர்ச்சி பெற்றோமா, எத்தனை மதிப்பெண் பெற்றோம் என தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாணவரும் பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருக்க, இவரோ நூற்பாலையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். தேர்ச்சி முடிவுகளும் மார்க் விபரங்களும் வெளியாக, நர்சிங் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர் என்பதை கேள்விப்பட்டு பத்திரிகைகளின் வழக்கப்படி பேட்டியெடுப்பதற்காக நிருபர்கள் சிலர் கோதை மங்கலத்திலிருக்கும் அவருடைய சிறிய குடிசைக்கு படையெடுக்க, இருளாயி வீட்டில் இல்லை. பக்கத்து வீடுகளில் விசாரிக்க , வேலை சென்றிருப்பது தெரிந்தது. அங்கிருந்து நேராக அவர் பணியாற்றும் நூற்பாலைக்கே சென்றனர்.

எப்படியோ பத்திரிகையாளர்கள் நூற்பாலைக்குள் நுழைந்து இருளாயியிடம் பேட்டியும் போட்டோவும் மாறி மாறி எடுத்துக்கொண்டிருக்க நூற்பாலை முதலாளி கடுப்பாகிவிட்டார். அன்றைய தினமே இருளாயியை வேலையை விட்டு நீக்கினார். பள்ளி விடுமுறையில் கிடைத்துக்கொண்டிருந்த சொற்ப வருமானமும் போனது. முதல் முதலாக ஏன்தான் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தோமோ என்று அன்றைக்கு இரவெல்லாம் அழுதிருக்கிறார்.

‘’இனி இதற்கு மேல் படிக்க முடியாது. வேறு ஏதாவது வேலை தேட வேண்டும். உதவிகள் ஏதாவது கிடைக்குமென எதிர்பார்த்து காத்திருந்ததுதான் மிச்சம். அதனால் நல்ல வேலை கிடைக்கும் வரை வீட்டிற்கு அருகிலுள்ள செங்கல்சூளையில் வேலைக்கு சேர்ந்தேன். தினக்கூலிதான்.. பரவாயில்லை’’ என அதைப்பற்றி சொல்லும்போதே கண்கலங்குகிறார். சோகமிருந்தாலும் எதையும் எதிர்த்து போராடுகிற மனநிலையும் போராட்ட குணமும் அவருடைய பேச்சில் தெறிக்கின்றன.

‘’நிச்சயமா மேலே படிப்பேன்ங்க இப்ப இல்லாட்டியும், நானே சம்பாதிச்சாவது படிப்பேன். நர்சிங் படிக்கணுங்கறதுதான் என்னோட ஒரே லட்சியம் , டிப்ளமோ இன் நர்சிங் படிச்சா கூட போதும். ஏன்னா நான் சீக்கிரம் படிச்சி முடிச்சாதான், சீக்கிரமா ஒரு நல்ல வேலைக்கு போய் என் தம்பி தங்கைகளை படிக்க வைக்க முடியும், அப்புறம் பாருங்க இந்த வீடு , சின்ன மழை பெஞ்சாலும் வீட்டுக்குள்ள மேலே கீழே எல்லா பக்கமும் தண்ணி வந்திடும், நைட்டெல்லாம் தூங்க முடியாது, அப்புறம் வீட்டுல குண்டுபல்புதான் இருக்கு , ஒரு டியூப்லைட் வாங்கி மாட்டணும்’’ என தன்னுடைய சின்ன சின்ன லட்சியங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்.

எங்களோடு பேசிக்கொண்டிருந்தவர், சட்டென்று ‘’சார் வேலைக்கு டைம் ஆச்சு.. கிளம்பணும்’’ என அவசரமாக தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு செங்கல் சூளையை நோக்கி தன் கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்தபடி படுவேகமாக கிளம்புகிறார் செங்கல் சுமக்க!


(நன்றி புதியதலைமுறை)

(இந்த பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் - feedback@puthiyathalaimurai.com என்கிற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்)

21 May 2011

ரஜினி என்னும் அசுரன்



எந்த ஒரு மனிதனுடைய உயிரும் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு உயிருக்கும் இங்கே உகந்த மரியாதை அளிக்க வேண்டும்தான். ஆனால் ரஜினிக்கு ஏன் இவ்வளவு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர் உடல்நிலைசரியில்லாமல் போனது குறித்து ஏன் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன? அவர் உயிரோடிருந்தால் என்ன செத்தால் என்ன? அவர் என்ன பெரிய மகானா புரட்சியாளரா புண்ணாக்கா? எனக் கேள்வியெழுப்புகிறவர்களை பார்க்கும் போது கோபமும் எரிச்சலும் உச்சத்தை எட்டுகின்றது.

என்னசார் ரஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும்தானே.. அவருக்கும் மரணம் வரும்தானே.. அவர் உடல்நிலை குன்றியிருந்தால் உங்களுக்கென்ன, அதனால் இங்கே என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என்று கேட்கிற இன்னொரு கும்பல் அதைவிடவும் அதிக எரிச்சலூட்டுகின்றன. ரஜினியின் குடும்பத்தினர் படவேண்டிய கவலையை ஏன் இவர்கள் படுகிறார்கள்?

நான் ரஜினி ரசிகன் கிடையாது. எனக்கு ரஜினியை பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் ரஜினி என்னும் ஆளுமை தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நான் பத்திரிகையாளனாக இருப்பதால் கடந்த ஒருவாரமாக எனக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நண்பர்களும் உறவினர்களும் ரஜினியின் ரசிகர்களும் எத்தனை போன்கால்கள், தம்பி ரஜினியபத்தி ஏதேதோ சொல்றாங்க என்னப்பா நிலைமை... ரஜினிக்கு இப்போ எப்படியிருக்கு.. ஒன்னும் ஆகாதில்ல.. என பதட்டமும் அழுகையுமாக நான் கேட்கிற குரல்களில் இருப்பது , வெறும் நடிகனுக்கும் ரசிகனுக்குமான சினிமா உறவல்ல.. அளவிடமுடியாத அன்பு மட்டுமே.

ரஜினி என்னும் தனிமனிதனுக்காக இங்கே தன் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தயாராயிருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை எனக்குத்தெரியும். ரஜினி என்னும் அந்த நடிகரை வெறும் நடிகராக மட்டுமே பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக மதிக்கிற குடும்பங்களும் உண்டு. அவருக்காக எதையும் செய்யத்தயங்காத ரசிகர்களையும் பார்த்திருக்கிறேன்.

போயும் போயும் ஒரு நடிகன் பின்னாலதான் போகணுமா? நடிகன்தான் ஆதர்ஷனமாக இருக்கணுமா? என்கிற கேள்விகள் எழலாம். யாருக்குத்தான் இங்கே ஆதர்ஷண நாயகர்கள் இல்லை. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு நாயகன் தேவைப்படுகிறான். நாயக வழிபாடு இல்லாத ஆளே இருக்க முடியாது. அது பெரியாராகவும் அண்ணாவாகவும் கருணாநிதியாகவும் பிராபகரனாகவும் ஜெயல்லிதாவாகவும் சோராமாசாமியாகவும் ஒசாமாவாகவும் ஒபாமாவாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது ரஜினியாக இருப்பதால் யாருக்கும் எந்த கேடும் ஏற்படப்போவதில்லை.

அவர் நடிக்கிறார் சம்பளம் வாங்குகிறார் என்பதெல்லாம் வெற்று கூச்சலே தவிர வேறொன்றுமில்லை. இப்படி கூப்பாடு போடுபவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு அதுகூடவா தெரியாது. இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் ரஜிக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியுமா?

ரஜினியை பார்த்து வாழ்க்கையில் அவரைப்போல முன்னேற வேண்டுமென துடிக்கிற எத்தனையோ பேரே அறிவேன். இந்த இளைஞர்களிடம் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் இது தனக்கான ஆதர்ஷ நாயகனை தேர்ந்தெடுக்கிற உரிமை தொடர்பானது. ஒருவன் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் , யாரை பூஜிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டுதானே! ரஜினியை பின்பற்றுவதால் அவன் நன்றாயிருந்தாலும் நாசமாய் போனாலும் அது அவன் பாடு!

ஒருவரை நமக்கு பிடித்துப்போகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவரை நம் ஆதர்ஷ நாயகனாக ஏற்றுக்கொள்ளவும் அவர் போராளியாகவும் புரட்சியாளராகவும்தான் இருக்க வேண்டும் என்றால் மனைவியிடம் கூட அன்பு பாராட்ட முடியாது.
சாகட்டுமே அதனால் யாருக்கு நஷ்டம் என கேட்பவர்களை பார்க்கும் போது பயம்தான் வருகிறது. ஒரு மனிதனின் உயிர் என்ன அவ்வளவு இளக்காராமா போயிடுச்சா? உலகில் யாருடைய உயிராக இருந்தாலும் அது போனால் என்ன என்கிற அலட்சியம் ஆபத்தானது என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோம்.

பத்திரிகைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன.. பீதியை கிளப்புகின்றன என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒருபதில்தான். ரஜினியொன்றும் அதிஷாவோ யுவகிருஷ்ணாவோ கிடையாது. முப்பதாண்டுகாலமாக போராடி தென்னிந்திய திரைப்படங்களின் அடையாளமாக இருக்கிற ஒரு ஆளுமை என்பதை யாராவது இங்கே மறுக்க முடியுமா? இந்தியா முழுக்கவே தென்னிந்த சினிமாவின் முகமாக ரஜினிதானே இன்னமும் இருக்கிறார். இதென்ன ஓவர்நைட்டில் நடந்ததா? ரஜினியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கிறவர்களும் அவருடைய புகழை , ரசிகர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையை மறுக்கவும் முடியுமா? பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லாத குப்பையோ மண்ணோ கிடையாது ரஜினி!

அதிலும் ரஜினிகுறித்து பரவலாக பரப்பப்படுகிற வதந்திகளை முறியடிக்க பத்திரிகைகளின் பங்கு மிக முக்கியமானது. ரஜினிமீதான அதீத அன்பின் வெளிப்பாட்டில் தற்கொலை செய்துகொள்ள நேரிடுகிற சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெறலாம். குறைந்தபட்சம் இச்செய்திகள் சிலருக்காவது ஆறுதல் அளிக்கலாம்.

அரசியில் ரீதியில் ரஜினி மீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான உறவில் விமர்சனங்களை வைக்கவே முடியாது. ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள். ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

11 May 2011

அழகர்சாமியின் குதிரை




மிருதுவான ஐஸ்கிரீமை முரட்டுத்தனமாக சாப்பிட்டதுண்டா? ஊர் பக்கம் திருவிழா தொடங்கிவிட்டால் இதுமாதிரி ஐஸ்கீரிம்கள் கிடைக்கும். உண்மையில் இதுவெறும் ஐஸ்தான் கிரீமெல்லாம் இருக்காது. இந்த வகை ஐஸை நாங்களெல்லாம் பஞ்சவர்ண ஐஸ்கீரிம் என அழைப்பதுண்டு. மரம் இழைக்கும் கருவியில் ஐஸ்கட்டியை மழுங்க தேய்த்து தேய்த்து அதை பொடிப்பொடியாக உதிரியாக்கி , டீ குடிக்கும் கண்ணாடி கிளாஸில் போட்டு அடைத்தால் , எப்படியோ தானாகவே ஓன்றோடொன்று ஒட்டிக்கொண்டு குச்சி ஐஸ் போல மாறிவிடும், அதில் ஒரு குச்சி சொறுகி , அதன்மீது ஐந்துவண்ண கலர் தண்ணியை ஊற்றி ஆவிபறக்க கொடுப்பார் ஐஸ்வண்டிக்காரர்.

அதை அப்படியே தின்ன முடியாது... முதலில் அதை மெதுவாக உறிஞ்சி நாக்கை சுழற்றி தின்ன வேண்டும். அந்த ஐஸோடு சேர்ந்த கலர் தண்ணி மட்டும் முதலில் கரையும். அது வெவ்வேறு ஃபிளேவர்கள் கலந்து இருமல் மருந்து போல சுவையாக இருக்கும். ஒரு கட்டத்தில் வெறும் வெள்ளை ஐஸ்கட்டி மட்டும் எஞ்சி இருக்கும். காசு குடுத்து வாங்கிட்டோமே கீழே போடமுடியுமா வெறும் வெள்ளை ஐஸ்கட்டியை நக்கிக்கொண்டே திருவிழா முழுக்க சட்டையெல்லாம் புறங்கையெல்லாம் கலர்கலராய் வடவடவென ஐஸ்வழிய காந்துபோய் சுற்றித்திரிந்திருக்கிறோம்.

அப்படி ஒரு ஐஸை தின்றபடி முரட்டுத்தனமான கிராமத்து திருவிழா காலத்தில் ஊருக்குள் வலம் வந்த உணர்வை கொடுக்கிறது ‘அழகர்சாமியின் குதிரை’. கிராமத்துப்பெரிசுகளின் அலப்பறை, இளந்தாரிகளின் லந்து, சிறுசுகளின் சேட்டை, பெண்களின் முரட்டுத்தனம், மைனர்களின் வாழ்க்கை என கிராமத்து மனிதர்களின் இயல்பான உணர்வுகளை எந்தவித சினிமாபூச்சுமில்லாமல் அச்சு அசலாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. அண்மைக்கால கிராமத்துப்படங்கள் எல்லாமே வெட்டுக்குத்து வீச்சரிவாள் வேல்கம்பு என ரத்தமும் சதையுமாக சுற்றித்திரியும்போது இந்தபடத்தின் கதையோ அதிலிருந்து விலகி கிராமங்களின் மென்மையான பக்கங்களை அதன் பகடிகளை கிண்டல்கேலிகளை நகைச்சுவையை முன்வைப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

பாஸ்கர் சக்தியின் கொஞ்சமே பெரிய சிறுகதையை அல்லது குட்டிநாவலை படமாக்க முடிவு செய்த இயக்குனர் சுசீந்தரனுக்கு வாழ்த்துகள். மூலகதையை கொஞ்சமும் சிதைக்காமல் திரைக்கதை அமைத்து படமாக்கியமைக்கு பாராட்டுகள். பீச்சில் பொறுமையாக ஆற அமற நடைபோடும் குதிரையை போல கொட்டாவி விட்டபடி தொடங்கும் கதை இடைவேளைக்கு கொஞ்சம் முன்னால் தேசிங்குராஜா குதிரைபோல மின்னல் வேகத்தில் பாய்கிறது. இதற்கு நடுவே அழகான இரண்டு காதல், கிராமத்து கிண்டல்கள், கொஞ்சம் சென்டிமென்ட் என ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான மசாலாக்களையும் ஆங்காங்கே தூவியிருப்பது அழகு!

படத்தின் ஹீரோ அப்புகுட்டி அசத்துகிறார். அவர் வந்தபிறகுதான் படம் ஜெட்வேகத்தில் பாய்கிறது. அவருடைய போர்ஷன் மிக குறைவாக இருப்பது ஒரு குறை. குதிரை இழந்து துக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிற விதம், சில இடங்களில் அழவைத்து, சிரிக்க வைத்து இன்னும் என்னவெல்லாமோ செய்யவைக்கிறது. இன்னொரு ஹீரோவாக வருகிற அந்த நாத்திக இளைஞன் பாத்திரமும் மிக அருமையாக நடித்திருக்கிறார். பெயர் தெரியவில்லை. படத்தில் என்னை கவர்ந்தது கிராமத்து சிறுவனாக வருகிற அந்த எகத்தாளமான குட்டிப்பையனின் பாத்திரம்தான். அதுவே தனி சிறுகதையாக தெரிகிறது.

பிரசிடென்ட் சண்டையில் திருவிழாவை நிறுத்த முயலும் எக்ஸ்பிரசிடென்ட், விவசாயம் செத்துபோய் பிள்ளைகளை திருப்பூருக்கு வேலைக்கு அனுப்பு விதவைத்தாய், வேவு பார்க்க வந்த இடத்தில் சாமியாராக டெவலப் ஆகும் போலீஸ்காரர், ஊர் கோடாங்கியின் வயித்தெரிச்சல் என ஆங்காங்கே சின்னச்சின்னதாய் அழகான கதைகள். குதிரையை தொலைத்தவனுக்கும் குதிரைய பறிகொடுத்த கிராமத்திற்குமான மெயின் கதையில் மற்ற கதைகள் கைகால் மூக்கு வாய் போல ஆங்காங்கே சரியான இடத்தில் பொறுத்தமாக அமர்ந்து கொள்ளுகின்றன.

இளையராஜாவுக்கு கிராமத்து படங்கள் என்றாலே அல்வா சாப்பிடுவது மாதிரி! இதிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர். நாயகனின் அறிமுக காட்சியில் வருகிற ஒரே ஒரு பிஜிஎம்மே போதும், அற்புதம்! (வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை). அது மட்டுமே தனியாக கிடைத்தால் மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும். கொடுமை, படத்தில் அந்த குறிப்பிட்ட அற்புதமான பிஜிஎம் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது. அது போக குதிக்கிற குதிக்கிற குதிர குட்டி பாடலில் , மனுஷன் அப்புகுட்டியின் பாத்திரமாகவே மாறிவிட்டார் போல.. குரலில் காதலை காட்டுகிறார்!

படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் தேனீ ஈஸ்வருக்கு முதல்படமாம்.. யாருகாதுல பூ சுத்தறீங்க.. என்னமா படம் பிடிச்சிருக்காரு! அதிலும் அந்த மலைப்பகுதிகளுக்குள் புகுந்து வெளியே வருகிற கேமரா.. ஏலேய் கேமராவ எங்கிட்டு வச்சுய்யா படமெடுத்தீங்க! படத்தின் வசனங்கள் பலதும் கதையில் வருகிற அதே வசனங்கள்தான் திரையில் பார்க்கும் போது அதன் வீர்யம் இன்னும் அதிகமாகவே உணர்ந்தேன்.

படத்தில் எல்லாமே நன்றாக இருந்தாலும், இரண்டு இடத்தில் குதிரை பின்னாங்காலில் உதைத்தது போல இருந்தது. ஒன்று இரண்டாம் நாயகனுக்கான மொக்கை டூயட் பாடல். அது இல்லாமலேயே அவனுடைய காதலின் வீர்யத்தை பல காட்சிகளில் இயக்குனர் உணர்த்தியிருந்தார். இன்னொன்று குதிரை கெட்டவர்களை விரட்டி விரட்டி அடிப்பது.. ராமநாராயணனுக்கு அந்த காட்சியை சமர்ப்பிக்கலாம். படத்திற்கு திருஷ்டிபோல இருக்கும் இந்த காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், மற்ற எல்லாமே அற்புதம்தான். பாஸ்கர்சக்தியின் எழுத்துக்கு மாலை மரியாதை செய்து குதிரையிலேற்றி ஊரோடு ஊர்வலம் வந்து திருவிழா எடுத்திருக்கிறார் சுசீந்திரன்.

படத்தின் இயக்குனர் திருவிழா ஐஸ்வண்டிக்காரரைப் போல கிராமத்து மனிதர்களை ஒன்றுதிரட்டி யதார்த்த ஐஸ்கிரீமில் ஆயிரம் வர்ணங்களை ஊற்றி கொஞ்சமும் சுவை குறையாமல் கொடுத்திருக்கிறார். இந்த வகை முரட்டு ஐஸ் எப்போதும் திகட்டியதே இல்லை. இந்தப்படமும்! சுசீந்திரன் மற்றும் அவருடைய டீமினுடைய இந்த முயற்சி நிச்சயம் வெற்றியடையவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே படம் முடிந்தபின் மனது முழுக்க நிரம்பியிருந்தது. இந்தபடத்தின் வெற்றி இதைப்போல இன்னும் பல படங்களுக்கான துவக்கமாக நம்பிக்கையாக இருக்கும். உலக சினிமா என்றெல்லாம் சொல்லத்தேவையில்லை. 'ஏலேய் இது நம்மூர் படம்யா' என மார்த்தட்டிக்கொள்ளலாம்.

பாஸ்கர் சக்தியின் இந்தக் குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டிக்கு குறையொன்றுமில்லை.. கொஞ்சம் தட்டினாலும் குதித்தோடும் ஜெயிக்கிற குதிரை இது!

09 May 2011

அதிரடி ஆட்டம் ஆரம்பம்!




பள்ளி நாட்களில் வெயிலிலும் மழையிலும் மாங்கு மாங்கென்று விளையாடிய கிரிக்கெட், வெறும் நினைவுகளாக மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன. சாலைகளில் தெருமுனைகளில் சின்ன சின்ன கிரவுண்டுகளில் கொத்து பால் போட்டு விளையாடிய காலங்கள் சொர்க்கம். ஒரு பந்தும் ஒரு பேட்டும் சிறிய கரிக்கட்டை போதும்.. சுவரில் ஸ்டம்புவரைந்து விளையாடிய நாட்களை திரும்ப பெறவே முடியாது. காலயந்திரம் இருந்தால் அதில் ஏறி நான் என்னுடைய கிரிக்கெட் காலங்களுக்கே முதலில் செல்லுவேன். நம்மில் பலருக்கும் அதைவிட மகிழ்ச்சியும் துடிப்பும் ஒன்றாய்க் கலந்த உன்னதமான அனுபவங்கள் எப்போதும் கிடைக்காது. அதை மீட்டெடுக்க மீண்டும் நண்பர்களை திரட்டி கிரிக்கெட் ஆடுவதை தவிர வேறு வழியேயில்லை என நினைத்தேன்.

அப்படிப்பட்ட ஒரு முயற்சியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நானும் நண்பன் கார்க்கியும் இணைய நண்பர்களை திரட்டி ஒரு கிரிக்கெட் டீமை உருவாக்க முயற்சி செய்து வந்தோம். அது இந்த வாரம்தான் டுவிட்டரின் உதவியோடு பலித்தது. ஏற்கனவே கடந்த செப்டம்பரில் வலைப்பதிவர்களை திரட்டி ஒரு அணியை உருவாக்கியிருந்தோம். விளையாடப்போகிற நாளில் அதிகாலை பெய்த பேய்மழையில் எங்களுடைய அணியும் அதன் கனவுகளும் கனத்த இதயத்தோடு கரைந்தது.

கிரிக்கெட் ஆடிய பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி மட்டும் ஒயவேயில்லை. சில வாரங்களுக்கு முன்பு நண்பர் உருப்படாதது நாராயணனோடு பேசிக்கொண்டிருக்கும்போது இந்த யோசனை மீண்டும் துளிர்த்தது. இம்முறை டுவிட்டர்களை ஒன்றுதிரட்ட முடிவு செய்தோம். கார்க்கியிடம் பேசினோம். யுவகிருஷ்ணா,கார்க்கி,நான் மற்றும் நாராயணன் என நால்வர் அணி உதயமானது. மழைபெய்தாலும் வெயிலடித்தாலும் ஆட்கள் வந்தாலும் வராவிட்டாலும் நான்கு பேர் போதும் கிரிக்கெட் ஆடியே தீருவோம் என சபதமேற்றோம். ஒரு பவுலர் ஒரு பேட்ஸ்மென் கீப்பர் மற்றும் ஒரு பீல்டர் போதாதா கிரிக்கெட் ஆட!

இந்த நால்வர் அணி டுவிட்டரில் இதுகுறித்து விவாதிக்கத் தொடங்க மேலும் சிலர் ஆர்வத்துடன் எங்களோடு இணைவதாக சொன்னது இன்னும் உற்சாகமாக இருந்தது. ஒருமாதிரி ஐந்து ஆறாகி ஆறு ஏழானது. பந்து பேட் ஸ்டம்ப் என எதுவுமேயில்லை. கார்க்கி பேட் மற்றும் ஸ்டம்ப் ஏற்பாடு செய்வதாக சொல்லியிருந்தார். ராஜேஷ் பத்மன் தன் பையன்களுடைய ஸ்டம்புகள் இருப்பதாக சொன்னார். பேட் பால் ஸ்டம்பை விட பெரிய பிரச்சனையாக மைதானம்தான் இருந்தது. சென்னையில் கிரிக்கெட் ஆட அழகான பீச் ஒன்று இருந்தது. அதில் இப்போதெல்லாம் கிரிக்கெட்டுக்கு தடை. மைதானங்களே இல்லை.

எங்கே கிரிக்கெட் ஆடுவது. நாராயணனும் நானும் மைதானத்தை தேடுகிற பொறுப்பை ஏற்றோம். ஈக்காட்டுத்தாங்கலில் பல காலியிடங்கள் இருந்தாலும் எங்கும் புதர்மண்டிப்போய் விளையாட முடியாத சூழலில் இருந்தன. இன்னும் கொஞ்சம் போய் கிண்டி ஐடிஐயின் விடுதி ஒன்றிலிருந்து சிறிய மைதானத்தை தேர்வு செய்து அறிவித்தோம். அங்கே பலரும் வாக்கிங் செல்வதை பார்த்துவிட்டு அனுமதியெல்லாம் தேவையில்லை என கருதினோம். அப்படி அங்கே விளையாட விடாவிட்டால் ரோட்டிலாவது விளையாடிவிடுவோம் என தீர்மானித்தோம். டுவிட்டரில் இடம் மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டது.

சனக்கிழமை இரவெல்லாம் உறக்கமேயில்லை. ஓடி ஓடி பந்துவீசி விக்கெட் எடுத்தும் ஒவ்வொரு ரன்னையும் ஓடி எடுத்த உன்னதமான நாட்கள் கண்களுக்குள் வந்து வந்து போனது. அதிகாலை ஐந்து மணிக்கே என்னைவிட உற்சாகமாக யுவகிருஷ்ணா போனில் அழைத்து பாஸ் இன்னுமா எழுந்திருக்கல என்று அதட்டி எழுப்பினார். கிழக்குபதிப்பகம் நாகராஜன் இன்னைக்கு வரமுடியாது பாஸ்.. ஆனாலும் போய் ஜாலியா விளையாடுங்க நான் அப்புறம் ஜாய்ன் பண்ணிக்கறேன் என போனில் அழைத்து வாழ்த்தினார்.

அப்படி இப்படியென மைதானத்திற்கு கிளம்ப ஆறுமணிக்கு மேல் ஆகிவிட்டது. நான் போய்ச்சேர எனக்கு முன்னரே வந்திருந்த டுவிட்டர் நண்பர்கள் கூட்டம் மைதானத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். சோகமான முகத்தோடு அங்கிருந்து திரும்பிவந்துகொண்டிருந்தனர். பாஸ் அங்க ஏதோ லோக்கல் பசங்க பிரச்சனையாம் அதனால கிரவுண்ட்ல யாரையுமே விளையாட அனுமதிக்கறதில்லையாம் என கார்க்கி அழும் தொணியில் சொன்னார். மற்றவர்களும் அதே நிலையில்தான் இருந்தனர். அனைவரும் பேட் ஸ்டம்புகளோடு இன்று கிரிக்கெட் ஆடப்போகிறோம் என்கிற உற்சாக கனவோடு வந்திருந்தனர். ரோட்டில் விளையாடவும் மனமொப்பவில்லை.

நான் வீட்டிலிருந்து கிளம்பும்போதே வழியெங்கும் பல இளைஞர்களும் கையில் பேட்டோடு பைக்கில் படையெடுத்து சென்றதை பார்த்துக்கொண்டேதான் வந்தேன். அதில் சிலர் கல்கி வார இதழ் அலுவலகத்திற்கு பக்கத்து சந்தில் செல்வதை பார்த்ததால் அந்த பக்கம் ஏதோ மைதானம் இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. விஜயகுமார் மஞ்சுளா , தனுஷ் வீடெல்லாம் அந்தப்பக்கம்தான் இருக்கிறது. நம்ம டீம் நண்பர்களிடம் அதை சொன்னதும்.. கிளம்புங்க அங்க கிரவுண்ட் இருக்கானு பார்த்துருவோம் என்று புறப்பட்டோம்.

கல்கி அலுவலகத்திற்கு பின்புறமுள்ள சாலைகளில் புகுந்து நந்தம்பாக்கம் அடைந்தோம்.. தூரத்தில் ஒரு மைதானம் தெரிய.. நண்பர்கள் திடீரென குழந்தைகளை போல ஓஓஓ வென கத்தி உற்சாக குரல் கொடுத்தது ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் வளர்ந்தாலும் நமக்குள்ளேயிருக்கும் குழந்தை எப்போதும் மரணிப்பதேயில்லை. எங்களுடைய பைக்குகளை பார்க் செய்துவிட்டு, பெரிய கிரவுண்டிற்கு பக்கத்திலிருந்த சிறிய கிரவுண்டில் ஸ்டம்பை நட்டு விளையாடத்தொடங்கினோம். என்னுடைய அபார பந்துவீச்சு குறித்து நண்பர்களுக்கு ஏற்கனவே தெரியும்போல.. கொத்து பால் போட்டு விளையாடலாம் என்றனர். எனக்கும் அதுதான் நல்லதென்று தோன்றியது.

நான்,நாராயணன்,யுவகிருஷ்ணா,கார்க்கி,பச்சைதமிழன்,முரளீதரன்,ராஜேஷ்,விக்கிதமிழ் என எட்டு பேரை பாதி பாதியாக்கி அணிக்கு நால்வர் என டீம் பிரித்தோம். இரண்டு பக்கமும் ரன் வைத்து ஆல் ஃபீல்டிங் முறையில் விளையாடினோம். ஜாலியாக இருந்தாலும் கீப்பருக்கு பின்னாலிருந்து காவாக்கரை சாக்கடைதான் பிரச்சனையாக இருந்தது. பந்து அடிக்கடி அதில் விழ அதை கை விட்டு எடுத்து கழுவாமல் மண்ணி தேய்த்து விளையாடியது நிஜமாகவே பால்யகாலத்திற்கே அழைத்து சென்றது. டுவிட்டர் நண்பர் மதன் கார்க்கி தன் ஜூனியரோடு திடீரென கிரவுண்டிற்கே விசிட் அடித்து எங்களை உற்சாகப்படுத்தினார்.

கார்க்கியும் நாராயணனும் பேட்டிங்கில் பின்னி எடுத்தனர். சிக்ஸர் மழைதான். பந்து அருகிலிருந்து அரசு பம்ப் ஹவுஸில் விழுந்து விட ராஜேஷ் எட்டடி சுவரில் அநாயாசமாக ஏறி எடுத்து கொடுத்தது மறக்கமுடியாதது. விருதுபெற்ற பதிவர் யுவகிருஷ்ணாவும் டுவிட்டர் புகழ் முரளீதரனும் தன் சூழ்ச்சி பவுலிங்கில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். விளையாடும்போதே மைதானத்திலேயே ஒருவர் சைக்கிளில் வைத்து லெமன் ஜூஸும் மோரும் விற்றார். வேண்டிய அளவு குடித்து மகிழ்ந்தோம். கார்க்கி என்னுடைய பந்தில் சிக்ஸர்களை அடித்து கடுப்பேற்றினார். அடுத்த வாரம் அவரை பழிவாங்க வேண்டும்.

நான்கு மேட்ச்கள் விளையாடினோம். இரண்டு ஆட்டங்கள் எட்டெட்டு ஓவர்களும் இரண்டு ஆட்டங்கள் ஆறு ஓவர்களுமாக! ஏழு மணிக்கு தொடங்கிய ஆட்டம் ஓய மணி பத்தானது. களைப்போடு கரையேறி மீண்டும் மோரோடு லெமன்ஜூஸை மிக்ஸ் பண்ணி குடித்தோம்.

அடுத்த வாரங்களில் மீண்டும் தொடர்ந்து விளையாட திட்டமிட்டிருக்கிறோம். ஞாயிறு காலை ஆறுமணி, இடம் நந்தம்பாக்கம் ஆத்தோர அய்யனார் கோயில் கிரவுன்ட் அல்லது டிபன்ஸ் காலனி கிரவுண்ட் (மிலிட்டரி ஆஸ்பிட்டல் பின்புறம்). கிரிக்கெட் விளையாடும் ஆர்வமுள்ள யாரும் எங்களோடு இணைந்து கொள்ளலாம். விளையாட விருப்பமில்லாதவர்கள் முடியாதவர்கள் பணமோ பொருளோ டிஷர்ட்டோ எதுவேண்டுமானாலும் ஸ்பான்ஸர் செய்யலாம். இப்போதைக்கு எங்கள் அணியின் இலக்கு இரண்டு பேட்டுகள் வாங்க வேண்டும், நான்கு ஸ்டம்புகள் அவ்வளவுதான்!

07 May 2011

பரளிக்காடு




பரளிக்காடு என்கிற இடம் கோவைக்கு அருகிலிருந்தாலும் கோயம்த்தூர்காரவீங்களுக்கே அதிகமாக தெரியாது. இது பில்லூர் டேமுக்கு கொஞ்சம் முன்னால் ஊட்டிமலைக்கு கொஞ்சம் பின்னால இருக்கிற சின்ன கிராமம். புத்தம்புதிய சுற்றுலா தளம். யாருக்கும் அதிகமாக தெரியாது என்பதே இதன் சிறப்பு. கூட்டம் மிக குறைவாகவே இருக்கிறது. நண்பனோடு பைக்கில் போவதாக முடிவானது. பெட்ரோலை நிரப்பிக்கொண்டு நண்பனின் பைக்கில் அதிகாலை ஐந்து முப்பதுக்கே , கோவையிலிருந்து கிளம்பினோம். காலை பத்து மணிக்குள்ளாக பரளிக்காடு சென்றடைந்தால்தான் பரிசல் பயணம் போக முடியும்.

பரளிக்காடு செல்வதாக இருந்தால் ஒருவாரம் முன்பாகவே அந்த பகுதி வன அலுவலரை தொடர்பு கொண்டு அனுமதி வாங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

பரளிக்காடு கோவையிலிருந்து எழுபது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அழகான பிக்னிக் ஸ்பாட். ஒரு நாள் சுற்றுலா போய் வர ஏற்ற இடம், பரிசலில் பயணிக்கலாம்,ஜாலியாய் சுற்றலாம் என்றெல்லாம் நண்பர் சஞ்சய்காந்தியின் இணையதள கட்டுரை படித்து தெரிந்துகொண்டிருந்தேன். அதையே பின்பற்றி கோவையிலிருந்து துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் காரமடையை நோக்கி பயணித்தோம். மூன்றாண்டுகள் கல்லூரிக்கு அந்த சாலையில்தான் சென்று வந்திருக்கிறேன். சாலை முழுக்க என் கல்லூரி நினைவுகள் எங்கும் காய்ந்த சருகுகளைப்போல பரவிக்கிடப்பதை உணர முடிந்தது. ஆனால் அச்சாலையோ அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டு.. மரங்களில்லாமல் என் தற்கால மண்டையை போல வறட்சியாக மாறிப்போயிருந்தது.

மேட்டுப்பாளையம் சாலையில் சூரிய ஒளியே படாமல் பயணித்த காலமெல்லாம் போய் நிழலுக்கு ஒதுங்க ஒரு மரம் கூட இல்லாமல் மொத்தமாக வெட்டிசாய்த்திருக்கிறார்கள். சில மரங்கள் வேறோடு பிடுங்கப்பட்டுள்ளது. மரங்களில் காம்பஸ்ஸால் ஹார்ட்டின் போட்டு பேரெழுதி.. ம்ம் கொஞ்சம் வருத்தத்தோடு கோவையிலிருந்து 35 கி.மீட்டர்கள் பயணித்து காரமடையை அடைந்தோம். காரமடையிலிருந்து மேலும் 35 கி.மீட்டர்கள் கடந்தால் பரளிக்காடு.

காரமடையிலிருந்து பரளிக்காடு செல்ல புகழ்பெற்ற காரமடை கோயில் தாண்டி முதல் இடது பக்க சாலையில் பயணிக்க வேண்டும். அந்த சாலையில் பயணிக்க பரிணாம வளர்ச்சி போல நகரம் தேய்ந்து தேய்ந்து முழுக்கிராமங்களை காண முடிகிறது. புஜங்கனூர் என்னும் ஊரைத்தாண்டினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை இரண்டு பக்கமாக பிரிகிறது. ஒருபக்க சாலை தோலம்பாளையம் போகிறது இன்னொரு பக்கம் போனால்தான் பரளிக்காடு போக முடியும். அந்த சாலையில் ஒருகிலோ மீட்டருக்கு ஒரு வீடுதான் இருக்கிறது.

வழிமாறி போய்விட்டால் வழிகேட்க கூட ஈ காக்கா இல்லை. அதனால் கவனம் முக்கியம். போகும் வழியெங்கும் தோப்புகள், தூரத்தில் மலைகள், பசுமைகள்.. ஆஹா.. நம் தோழர்கள் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி இயற்கையை ரசித்தபடி பயணித்தால் சாலை குறுக்கும் நெடுக்குமாக வளைந்து வளைந்து திரும்புகிறது. ஆச்சர்யம் சாலைகளில் ஒரு சின்ன குழி கூட கிடையாதென்பதுதான். வெள்ளியங்காடு என்னும் ஊர்தான் மலையடிவாரத்தில் இருக்கும் கடைசி கிராமம். டீ குடிப்பது, கட்டிங் அடிப்பது, திண்பன்டம் வாங்குவது என அனைத்தையும் அங்கேயே முடித்துக்கொள்வது நல்லது.

வெள்ளியங்காடு தாண்டி பயணித்தால் இருப்பக்கமும் கொஞ்சமாய் மரங்கள் வரவேற்க குண்டுங்குழியுமான சிறிய சாலை காட்டுக்குள் நுழைகிறது. அதில் நாமும் நுழைந்து வெளியே வந்தால் முதல் செக்போஸ்ட் வரவேற்கிறது. பரளிக்காடு போகிறோம், போட்டிங் புக் பண்ணிருக்கோம் என்பதை மட்டும் சொன்னாலே போதும் , ராஜமரியாதையோடு செக்போஸ்ட்டை திறந்துவிடுவார் அத்துவானக்காட்டில் தனிமையில் அமர்ந்திருக்கும் மீசைக்கார காவலர். உள்ளே நுழைந்தோம். நான்கு பக்கமும் மலைகள். நடுவே பாதை. ஆங்காங்கே வித்தியாசமான பறவைகள்.

வெள்ளையுடலும் கறுப்பு சிறகுகளும் கொண்ட குட்டிப் பறவையொன்றை படம் பிடிக்க துரத்தினோம். கடைசிவரை சிக்கவேயில்லை. ஹேர்பின் பெண்டுகளெங்கும் வண்டியை நிறுத்தி மலைகளை பார்த்தால் அச்சமும் மகிழ்ச்சியுமாக உணர முடிகிறது. அவ்வளவு ரம்மியமான இடம். காரில் சென்றால் இதையெல்லாம் பொறுமையாக நின்று ரசிக்க முடியுமா தெரியவில்லை. பைக்கில் போவதே சிறந்தது.

சில மலைகளையும், வளைவுகளையும் பொறுமையான வேகத்தில் கடந்து சென்றோம். செல்லும் வழியெங்கும் சின்ன சின்ன மலைகிராமங்கள். வாழைத்தோப்புகள். வாழைத்தோப்புகளுக்கு மத்தியிலே இருக்கிற மெகா சைஸ் மரங்களின் மேல் அழகான சிறிய குடில் அமைத்திருந்தனர். யானை விரட்டுவதற்காக இரவில் அங்கேயே அந்த தோப்பின் ஓனர் தங்குமிடமாம். ஒரு தோப்பில் நுழைந்தால்.. நாயொன்று துரத்த ஆரம்பித்துவிட்டது. காட்டுக்குள்ளே எப்படி இவ்ளோ பெரிய நாய் என்கிற கேள்வியோடே ஓடினோம். நல்ல வேளையாக தோப்பின் முதலாளி வந்து எங்கள் தொடைச்சதையை காப்பாற்றினார்.

யானைகளிடமிருந்து வாழைத்தோப்பினை காப்பதற்காக மின்வேலிகள் அமைத்துள்ளனர். அதில் மின்சாரம் பாயும்போது அடையாளம் தெரிய கம்பிகளில் ஒரு கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் டியுப்லைட் மாட்டியிருக்கின்றனர். லைட்டெரியும்போது தொட்டால் ஷாக்கு நிச்சயம். சுற்றுலா வரும் பயணிகள் அந்த டியூப் லைட்டை உடைத்துவிடுவதாக வருத்ததோடு கூறினார். மரக்குடிலில் ஏறிப்போய் பார்த்தோம். ரேடியோ லைட்டு இரவு படிக்க ஆனந்தவிகடன் குமுதம் என பல ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார். கரண்ட்டுக்கு சோலார் பேனல்கள் குடிலின் மேலேயே பொறுத்தப்பட்டிருக்கின்றன. இரவு அதிலேயே தங்கிவிட ஆசையாய் இருந்தது.

கொஞ்ச நேரம் குடிலுக்குள் அமர்ந்து சுற்றிப்பார்த்தால்.. நான்கு பக்கமும் பிரமாண்ட மலைகள், தூரத்தில் பறக்கும் பெயர்தெரியாத பறவைகள், வாழைத்தோப்பு என அழகு! மனசேயில்லாமல் குடிலிருந்து இறங்கினோம். காலை நேரமென்பதால் லேசான குளிருக்கு இதமாக ஒரு தம்மைப்போட்டுவிட்டு புறப்பட்டோம்.

இன்னும் கொஞ்சம் தொலைவு செல்ல செல்ல கிராமங்கள் குறைந்து அடர்த்தியான காடுகள் தெரிகின்றன. இங்கே மைனாக்களும்,நீளமான நீலமான தோகை கொண்ட பெரிய சைஸ் மயில்கள், பேன் பார்க்கும் குரங்குகள் என ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே சென்றோம். காட்டையும் விலங்கு பறவைகளையும் பார்த்து ரசித்தபடியே சென்றால் அத்திக்கடவு பாலம் வரவேற்கும். மிகவும் பழைய பாலம் போல (பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம்) அத்திக்கடவு ஆறு கோடைகாலத்திலும் சிகப்பு நிறத்தில் செம்மண் கலந்து ரத்த ஆறு போல ஓடிக்கொண்டிருந்தது. பாலத்தின் கீழே ஆற்றங்கரையோரம் சில ஆதிவாசி இளைஞர்கள் பாறையின் மேல் எதையோ வைத்து அரைத்துக்கொண்டிருந்தனர்.

ஆவலோடு பாலத்திற்கு கீழே கஷ்டப்பட்டு இறங்கிப்போய் பார்த்தோம்.. என்ன பாஸ் அரைக்கறீங்க.. மூலிகையா. திருதிருவென விழித்தனர். ஏதோ சொன்னார்கள் புரியவில்லை. தமிழ்தான், ஆனாலும் புரியவில்லை. இருளர்கள். இருளா பாஷை கலந்த தமிழில் பேசினர். அருகில் சில நகரத்து இளைஞர்கள் காத்திருப்பதை பார்த்து அவர்களிடம் கேட்டபோது.. ஒரிஜினல் கஞ்சா பாஸ்! கோயம்த்தூர்ல கிடைக்காது.. என்று கீக்கீ என்று சிரித்தனர். தெறித்து ஓடிப்போய் பைக்கில் ஏறிக்கொண்டோம். பாலத்திற்கு மேலே ஏதோ ஒரு அப்பிராணி குடும்பம் நிறைய பெண்பிள்ளைகளோடு காலை உணவை முடித்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் திகிலாக இருந்தாலும் அவர்களிடம் இடத்தை சீக்கிரம் காலி பண்ணுங்க காலிப்பசங்க வந்து போற இடம் என எச்சரித்துவிட்டு கிளம்பினோம்.

அத்திக்கடவு பாலத்திலிருந்து சில கி.மீட்டர்கள் தூரத்தில் காத்திருக்கிறது இரண்டாவது செக்போஸ்ட். நாம் ஒருவாரம் முன்பு போனில் அழைத்து பேசிய வனக்காவலர் இங்கேதான் இருப்பார். அவரிடம் நம்மைப்பற்றிய விபரங்களை அளித்தால் ஒரு லெட்ஜரில் கையெழுத்து வாங்கிவிட்டு, பரளிக்காடு செல்லும் வழியை சொல்வார், வேலை வெட்டியில்லாமல் இருந்தால் அவரே நம்மோடு வந்து வழிகாட்டுவார். செக்போஸ்ட் தாண்டியதுமே காட்டாற்று பாலம் ஒன்றை தாண்டி செல்ல வேண்டும். காட்டாற்று பாலத்தில் சில பெரிய மரங்கள் அடித்துக்கொண்டு வந்து அவை பாறைகளுக்கு நடுவே சிக்கியிருந்ததை பார்த்தோம்.

அங்கிருந்து இரண்டாவது செக்போஸ்ட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் பரளிக்காடு கிராமத்திற்கு, செல்லும் வழியெல்லாம் லட்சக்கணக்கில் பட்டாம்பூச்சிகள். பைக் டயரில் ஏற்றி கொன்றுவிட அஞ்சி சில மீட்டர்கள் வண்டியை மெதுவாக தள்ளிக்கொண்டே செல்ல நேரிட்டது. சாலைகளை அடைத்துக்கொண்டு அவை பறப்பது அழகு. கார்கள் சில அவற்றை மிதித்து அழித்துச்சென்றதை பார்க்க சங்கடமாக இருந்தது. எட்டாவது கிலோ மீட்டரில் கையில் சுக்கு காபியோடு வரவேற்கிறார் இன்னொரு வனக்காவலர்.

மிதமான குளிருக்கும், நீண்ட பயணத்துக்கும் சுக்கு காபியின் சுவை சுகமாக இருந்தது. வெல்கம் ட்ரிங்க் போல! கிராமத்திற்குள் நுழைந்ததும் சுக்கு காபியை சுவைத்தபடி நோட்டம் விட்டோம். கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் சன்டிடிஎச் இருந்தது , அனைவரது வீட்டிலும் டிவி இருக்கிறது என்பதை உணர்த்தியது. ஒரு வீட்டில் வாசலில் இலவச டிவி தந்த கலைஞருக்கே உங்கள் ஓட்டு என்கிற போஸ்டர் அதை உறுதி செய்தது. ஒரு வீட்டின் சுவற்றில் ஒருபக்கம் கலைஞரும் இன்னொருபக்கம் ஜெயாவும் வீற்றிருந்தனர். தெருவில் பையன்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர். எல்லோர் வீட்டிலும் சோலார் பேனல்கள் இருக்கின்றன. நைட்டி அணிந்த பெண்களை பார்க்க முடிந்தது. ஊருக்குள் மொத்தமாக 35 குடும்பங்கள்தானாம்.

கிராமத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் பெரிய ஏரி. பில்லூர் அணைக்கட்டுக்கு நேர் பின்புறமாக இருக்கிறது. இதில் பரிசல் பயணம் போகவும், மதிய உணவுக்கும், அதற்குபிறகு ட்ரெக்கிங் போகவுமாக மூலிகை குளியலுக்குமாக ஒரு நபருக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பரிசல்கள் என்றதும் ஏதோ மூங்கிலில் செய்யப்பட்டவையாக இருக்குமென நினைத்திருந்தேன். பாதுகாப்பு கருதி (பரிசல் பாதுகாப்புக்காக பாறைகளில் மோதி உடையாமல் இருக்க) ஃபைபர் கிளாஸால் உருவாக்கியுள்ளனர். அதற்கு நீலம் பச்சை என விதவிதமான நிறங்களும் பூசப்பட்டு நமக்காக காத்திருக்கின்றன. நமக்கு ஆரஞ்சு நிறத்தில் பாதுகாப்பு ஜாக்கெட்டு போட்டுவிடுகின்றனர்.

பரிசல் ஓட்டுபவர்கள் உள்ளூர் இளைஞர்கள்தான். அவர்களுக்கு வேலைவாய்ப்பு. பேச்சுக்கொடுத்தோம். எல்லாருமே இருளர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள். தூரத்தில் ஒரு மலையை காட்டி.. அதுக்கு அந்தல்ல ஊட்டிங்க.. நடந்தே போனா ரண்டுமண்ணேரத்துல போய்ர்லாங் என்கின்றனர். அங்கிருந்து ஊட்டி செல்ல பேருந்துகள் கூட உண்டாம் (மலை மேலிருந்து). பில்லூர் டேம் குறித்தும், இங்கிருந்து தண்ணீர் எப்படி செல்கிறது என்பது குறித்தெல்லாம் பேசுகின்றனர். ஏரியில் சில அரிய பறவைகளையும் பார்க்க முடிகிறது. ஏரியின் ஒரு கரையில் இறங்கி காட்டுக்குள் ஒரு ரவுண்டு போய் சொல்கின்றனர். கொளுத்தும் வெயிலில் எங்கேங்க சுத்தறது என்று நினைத்து வேண்டாம் என மறுத்துவிட்டோம். காட்டை சுற்றிப்பார்க்கிறவர்கள் சுற்றலாம்.

அரைமணிநேரம் குலுங்க குலுங்க படகு சவாரி முடித்து கரையொதுங்கினால் புன்னை மரங்களின் நிழலில் ஒரு குட்டித்தூக்கம் போடலாம். அல்லது அங்கிருந்து நடந்தே சென்றால் அருகிலேயே காத்திருக்கிறது ஒரு அழகிய சோலை. இரண்டு பிருமாண்ட ஆலமரங்களின் நிழலில் கயிற்று கட்டில் போட்டிருக்கின்றனர். அதில் சிலமணிநேரங்கள் இளைப்பாறலாம். அல்லது ஆலமரங்களில் ஊஞ்சலாடலாம். அல்லது ஃபிகர்களை சைட் அடிக்கலாம். பெண்கள் இயற்கை உபாதைகளை தணிக்க மூடப்பட்ட சுத்தமான டாய்லெட் வைத்திருக்கின்றனர். வன அலுவலரிடம் பேசியபோது.. காட்டுக்குள்ள வரவீங்க ஆம்பளைங்களா இருந்தா பிரச்சனையில்ல பாவம் பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க அதான் இந்த ஏற்பாடு என்றார். இதற்கான யோசனையை கூட அந்த மலைகிராமத்து மகளிர் சுய உதவிக்குழுவிலிருக்கும் சில பெண்கள்தான் கொடுத்தார்களாம்.

மதிய உணவு ரெடி! மலைகிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் மதிய உணவை செய்து கொடுக்கிறார்கள். நம்மிடம் முன்னரே வசூலிக்கும் பணத்தில் இவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கொடுக்கப்படுகிறது. களியும் சிக்கன் குழம்பும் கீரைக்குழம்பும் பரிமாறப்படுகிறது. குழந்தைகள் ஆர்வத்தோடு களி தின்பதை பார்க்க முடிந்தது. களிவேண்டாம் என்கிறவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி,தயிர்சாதம்,சப்பாத்தி என மகத்தான ஒரு மதிய உணவு படைக்கப்படுகிறது. அதிலும் அந்த சிக்கன் கிரேவி அற்புதமாக சமைக்கப்பட்டிருந்தது. ஒரு பிடிபிடித்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் தூக்கம் போட்டால் சொர்க்கம்!

இரண்டு மணிக்கு எழுந்து வன அலுவலரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். அப்போ ட்ரெக்கிங்? அது அத்திக்கடவு பாலத்தை கடந்து வந்தோமில்லையா அங்கேதான். பைக்கில் மதிய வேளையில் மெதுவாக ஓட்டிச்செல்ல எங்கும் விலங்குகளின் விநோத சப்தங்கள். வண்டியை நிறுத்தி காட்டுக்குள் புகுந்து ஒரு ரவுண்டு விட்டு.. ஏதாவது மான் புலி கரடிகள் கண்ணுக்கு தெரியுதா என தேடிப்பார்த்தோம். ஒன்றும் அகப்படவேயில்லை. அத்திக்கடவு பாலத்திற்கு அருகில் செல்லுகிற சிறிய சாலையில் கொஞ்சதூரம் பயணித்தால் ஆற்றின் ஓசை கேட்கும் அடர்த்தியான காடுகள் தெரிகின்றன.

அதில் இறங்கி நடக்கத்தொடங்கினால், லேசான மழைத்தூறலுக்கே பாதைகள் வழுக்கத்தொடங்கிவிடுகின்றன. கெட்டியான செம்மண் பாதை. ஆங்காங்கே சின்ன சின்ன பாறைகள். மெதுமெதுவாக நடந்து காட்டை கடந்து சென்றால் அழகான சிகப்பு ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த இடத்திற்கு பெயர் சிறுகிணறாம். ஆதிவாசிகளின் குட்டி கோயில் ஒன்றும் இருந்தது. முழுக்க கூழாங்கற்களால் உருவாக்கியிருக்கிறார்கள். ஆற்றில் இறங்கினால் வெயில் காலத்திலும் ஐஸ்கட்டி போல இருக்கிறது. தம் கட்டி உள்ளே இறங்கி ஒரு உற்சாக நீச்சல் போட நேரம் நான்காகி விட்டது. அது மூலிகை நீராம். குளித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்குமென்றார் எங்களோடு துணைக்கு வந்த வன அலுவலர். நிஜமாகவே லிரில் புத்துணர்ச்சிதான். புரண்டு புரண்டு குளித்தோம். நீந்தினோம். உற்சாகத்தில் குதித்தோம். திடீரென போதும் போதும்.. கிளம்புங்க என்னும் குரல்வந்தது.

ஐந்து மணிக்கு மேல் காட்டுக்குள் இருப்பது ஆபத்து, யானைகள் தண்ணீருக்காக மலையிலிருந்து இறங்குகிற சமயம் என எச்சரித்து ஓடுங்க வூட்டுக்கு என அனுப்பிவைத்தனர். அங்கிருந்து கிளம்ப மழை பெய்யத்தொடங்கியது. மழையில் நனைந்தபடி பைக்கில் மலைப்பாதையில் பயணிப்பது கொஞ்சம் ஆபத்தானதாக இருந்தாலும் த்ரில்லிங்கான அனுபவமாக இருக்குமே என்கிற எண்ணத்தோடு பயணித்தோம். செல்லும் வழியில் எங்கோ யானைகளின் பிளிறலையும் மயில்களின் கொடூரமான சப்தங்களையும் கேட்டபடி மறக்க இயலாத ஒரு பயணத்தின் அற்புதமான நினைவுகளை மூட்டைகட்டிக்கொண்டு உற்சாகமாக கோவையை நோக்கி திரும்பினோம்!


சில தகவல்கள்

கட்டணம் - பெரியவர்களுக்கு 300 ரூபாய். பத்துவயதுக்கு குறைவானவர்களுக்கு – 200 ரூபாய்.

(படகில் செல்ல, மதிய உணவு, டிரக்கிங், மூலிகை குளியல் அனைத்தும் சேர்த்து)

இந்த சுற்றுலாவிற்கு சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் மட்டும்தான் அனுமதி , 40பேர் கொண்ட குழுவாக கேட்டால் மட்டுமே மற்ற தினங்களில் அனுமதி தரப்படும். அதுவும் ஒரு வாரம் முன்பாகவே வன அலுவலரை தொடர்புகொண்டு புக்கிங் செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு - வன அலுவலர் –ஆண்டவர் - +91 9047051011

04 May 2011

வானம்




தெலுங்கில் வெளியான வேதம் படத்தை பார்த்துவிட்டு சில இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன். அற்புதமான திரைப்படம் அது. உங்களுக்குள் பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணிவிடக்கூடிய அருமையான திரைக்கதை! சிரிப்பு,துக்கம்,கோபம்,ஆர்வம் என படம் முழுக்க வெவ்வேறு உணர்வுகளை நம்மையும் அறியாமல் ஏற்படுத்தும்.

வெவ்வேறு தளங்களில் இயங்கும் ஐந்து கதைகள். ஒரு குறிப்பிட்ட சம்பவம்(கிளைமாக்ஸில்) ஐந்துகதைகளுக்குமான முடிவாக இருக்கும். இதைப்போல அந்தக்காலத்திலேயே முருகன் அருள்,பெருமாள் மகிமை,தேவியின் திருவிளையாடல் மாதிரியான படங்கள் வெளியாகியிருக்கின்றன.

ஷகிலா நடித்த பெரும்பாலான பிட்டுப்படங்களும் இப்படித்தான். உதாரணத்திற்கு நவகன்னிகள் என்னும் படத்தில் ஒன்பது இளம் கன்னிகளின் தனித்தனிக்கதைகள் இறுதியில் ஷகிலாவின் திருவிளையாடலோடு முடிவதாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஆன்மிகமல்லாத பிட்டுகள் இல்லாத இதுமாதிரி படங்களில் இதுவே நான் பார்க்கும் முதல் படம். மலையாளத்தில் வெளியான கேரள கஃபே திரைப்படமும் கிட்டத்தட்ட இதே போல்தான் என்றாலும் அந்த படத்தில் எல்லா கதைகளும் தனித்து இயங்கும். வேதம் படத்தில் ஐந்து கதைகளும் தனித்தனியாக இயங்கினாலும் இறுதியில் ஆறுகள் அடையும் கடல் போல கிளைமாக்ஸ். இந்தப் படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக பிரித்தோமானால் அற்புதமான சிறுகதைகள். உயிரை உலுக்கும் சக்திமிக்க வசனங்கள் என பட்டையை கிளப்பும்.

ஒரு படத்தில் ஆயிரம் பேரை அடிக்கிற ஹீரோ அடுத்தபடத்தில் அதைவிட அதிகமாக பத்தாயிரம் பேரையாவது அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மசாலா மணம் மாறாத தெலுகு திரைப்பட உலகிலிருந்து இப்படியொரு அற்புதமான படமா என பிரமித்து போனதுண்டு! நடிக்கவே தெரியாத மஞ்சு மனோஜ், பரபர அல்லு அர்ஜூன் என இருவர் கூட்டணியில் இத்திரைப்படம் தெலுங்கில் சக்கைபோடு போட்டது.

இவ்வளவு நல்ல படம் தமிழில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொண்ட போது மிகவும் மகிழ்ந்தேன். தமிழில் சிம்பு நடிக்கப்போகிறார் என்பதை அறிந்ததுமே அந்த மகிழ்ச்சி புஸ்ஸாகி புஸ்வானமாகியது. எப்பேர்ப்பட்ட நல்ல படத்தினையும் தன் அபார திறமையால் மொக்கையாக்குகிற திறமை சிம்புவிற்கு மட்டுமே வாய்த்துள்ளது. அதிலும் இப்படத்தில் அவர் சிம்பு கிடையாது.. யங் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர். டைட்டிலிலேயே அலப்பறை பண்ணுகிறவர் படத்திலும் பண்ணாமாலா இருக்கப்போகிறார்!




வானம் படம் முழுக்க சிம்புவின் அட்டகாசம்தான். முகம் மட்டும் அளவுக்கதிகமாக உப்பலாகி.. உதடுகள் வீங்கி பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார். முகத்திலிருந்த மென்மையான குழந்தைத்தனம் சுத்தமாக மிஸ்ஸிங். அதுவுமில்லாமல் , தன் இயல்பிலேயே துடிப்பான துருதுரு இளைஞரான அல்லு அர்ஜூனுக்கு (தெலுங்கு பதிப்பில் நாயகன்) கட்டைக்குரல் , அல்ட்ரா மாடர்ன் பாடி லாங்குவேஜ் சிம்பு நிச்சயம் மாற்று கிடையாது. அதிலும் சிம்பு அழும் காட்சிகளில் குழந்தைகள் கூட சிரிக்கத்தொடங்கிவிடுகின்றன. அழும்போது பயபுள்ள அப்படியே அவிங்கப்பா சாடை!

படம் முழுக்க சில பாடல்களை பாடுகிறார். ஓடுகிறார். ஏனோதானோவென நடித்திருக்கிறார்! விண்ணைத்தாண்டிவருவாயாவே பரவாவல்ல பாஸ்! (சென்னை முழுக்க சிம்பு தனக்குத்தானே எஸ்டிஆர் யங் சூப்பர் ஸ்டார் என போஸ்டர் அடித்து அலும்பு வேறு செய்திருக்கிறார்! அவருக்கு போட்டியாக பரத்தும் தன் சொந்தகாசில் போஸ்டர் அடித்திருப்பது வரலாற்றில் ஆவணப்படுத்தபடவேண்டிய செய்தி)

அனுஷ்கா ஒருவாரம்தான் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல! தெலுங்குபடத்தின் காட்சிகளையே டப் செய்து உபயோகித்துள்ளனர். கொஞ்சமும் தமிழுக்கு ஒட்டவேயில்லை. தமிழுக்கேற்றபடி கொஞ்சம் மாற்றியிருக்கலாம். அதிலும் அந்த விபச்சார விடுதி பாடலுக்கான பாடல்வரிகள் சகிக்கவில்லை ரகம்.

சின்னதளபதி என்று தன்னை அடைமொழியிட்டு அழைத்துக்கொள்ளுகிற பரத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பாவம் அவர் கேரக்டரை வேண்டுமென்றே திட்டமிட்டு டம்மி பண்ணிருக்கிறார்கள். அவரும் அதற்கேற்ப முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஜடம் போல நடித்திருப்பது பெருமைக்கு பெருமை சேர்க்கிறது. இவர்கள் மூவரும் படம் முழுக்க
நம்மை பாடாய் படுத்த படத்தில் பிரகாஷ் ராஜும் சரண்யாவும் ஆறுதல் அளிக்கின்றனர்.

இசை யுவன்ஷங்கர் ராஜாவாம்.. எவன்டி உன்னை பெத்தான் மற்றும் ஒப்பனிங் பாடல் (என்ன எழவு பாடறாய்ங்கன்னே புரியல்ல) இரண்டுமே இரைச்சல். காது வலி. அந்த பாடல்களை காட்சிப்படுத்திய விதம் கண்வலி. படத்தில் டைட்டில் போடும் போது ஒரு பாடல் ஒலிக்கிறது. டைட்டில் முடிந்த மறுவிநாடி இன்னொரு பாடல் தொடங்குகிறது. தமிழ்சினிமாவின் கடைக்கோடி தொழிலாளிகூட இப்படி ஒரு தவறை செய்யமாட்டான்! சிம்புவின் யோசனையாக இருக்கலாம்!

இப்படம் பேசுகிற அரசியலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். அதிலும் இஸ்லாமியர்களை இவ்வளவு இணக்கமாகம் மனிதநேயத்துடனும் அண்மைக்கால தமிழ்சினிமா காட்டியதில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டு. தீவிரவாதிகள் என்கிறவர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்திய படி சுற்றிக்கொண்டிருப்பதில்லை, அது நமக்குள்ளே இருப்பது.. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது. அரசாக இருந்தாலும் அப்பாவி மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தினால் அதுவும் தீவிரவாத அரசுதான் என்று ஆணித்தரமாக ஒரு செய்தியை சொல்லுகிறது இப்படம்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, அரவாணிகள், கொத்தடிமைகள்,விபச்சாரிகள்,சேரி பையன்கள் என இப்படத்தின் இயக்குனர் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதாபாத்திரமுமே மிக முக்கியமானவை. சில வசனங்கள் மிக மிக வலிமையானவை. விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக பேசக்கூடியவை.

அவ்வளவு அருமையான கவித்துவமான வேதம் ஏன் வானமாக மாறியபோது பிடிக்காமல் போனது என்பதை யோசிக்கிறேன். சிம்புவின் ஹீரோயிசம், தப்புந்தவறுமான நடிகர் தேர்வு! கொஞ்சமும் எடுபடாத இசை. ஒற்றை ஹீரோவுக்காக திரைக்கதையில் செய்த மாற்றங்கள். இதற்கெல்லாம் மேல் தெலுங்கில் படமெடுத்த இயக்குனருக்கு தமிழ் தெரியாதென நினைக்கிறேன்! மற்றபடி வானம் பார்த்து கடுப்பாவதை விட வேதம் பார்த்து சிலிர்க்கலாம்.