Pages

28 March 2013

அப்புறம் என்னாச்சு?




அவர் பிரபலமான மர்மக்கதைகள் எழுதுகிற எழுத்தாளர். எனக்கு அவருடைய கதைகள் மிகவும் பிடிக்கும். அவரிடம் அடிக்கடி போனில் உரையாடுவேன். நிறைய விஷயங்கள் பகிர்ந்துகொள்வார். திடீரென ஒருநாள் என்னை வீட்டுக்கு அவசரமாக அழைத்தார். என்னசார் என்றேன். இல்லநேர்லவா பேசுவோம் என்றார். முகவரியை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

ஒரு ஹவுஸ்யூனிட் போன்ற அரசு ஊழியர்களுக்கான குவாட்டர்ஸில் எழுத்தாளரின் வீடு இருந்தது. இரண்டு படுக்கை அறை வசதிகொண்ட சிறிய வீடுதான். பெர்முடாஸ் போட்டுக்கொண்டு எனக்காகவே காத்திருந்தார். வீட்டுக்குள் நுழைந்தவனை வாய்யா வா என வரவேற்ற கையோடு அவசரமாக 'வாப்பா முதல்ல உள்ளே போய்டுவோம்' என்று தனியறைக்கு அழைத்துச்சென்றார். வீட்டிலும் வேறுயாருமேயில்லை. அவர் தனியாகத்தான் அந்த வீட்டில் வசிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

லைப்ரரி மாதிரி ஏதோ வைத்திருப்பார் போல.. ஆர்வமாக காட்டப்போகிறார் என்று நினைத்தபடி பின்னாலேயே நடந்தேன். நல்ல தடிமனான கதவுகள் கொண்ட ஒரு இருட்டு அறையை திறந்தார். உள்ளே அதிக வெளிச்சமில்லை.. ஒரு சிறிய அஞ்சுவாட்ஸ் பல்பு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அது பார்க்க கள்ளக்கடத்தல் ஆசாமிகளின் ரகசிய அறைகளைப்போலவோ அல்லது சினிமாவில் சிபிஐ அதிகாரிகள் தீவிரவாதிகளை விசாரிப்பதற்காகவே ஒற்றை பல்பு இருட்டறை தயார் செய்துவைத்திருப்பார்களே அதுபோலவோ இருந்தது. லேசாக குளிர்ந்தது.

அப்படியே அறை முழுக்க உற்றுப்பார்த்து நோட்டம்விட்டேன். ஒன்றுமேயில்லை. காலியாய் இருப்பதைப்போல உணர்ந்தேன். ஒரே ஒரு பெரிய ஷோபா மட்டும் மத்தியில் இருப்பதை கவனித்தேன். அதிலும் ஒருவர்தான் உட்கார முடியும். உள்ளே போய் சில விநாடிகளில் புரிந்துவிட்டது. வெளியிலிருந்து எந்த வித ஒலியோ ஒளியோ அறைக்குள் புகவே முடியாதவகையில் அந்த அறை அமைக்கப்பட்டிருந்தது. சுவர்களில் எதையோ பதித்து அதன்மேல் தொன்னூறுகளில் பிரபலமான பூப்போட்ட வால்பேப்பர்கள் ஒட்டப்பட்டிருப்பது தெரிந்தது.
''இந்த ரூமுக்குள்ள வச்சு கொலை பண்ணினாலும் யாருக்கும் கேட்காது தெரியுமா? வேணும்னா காட்டுக்கத்தல் கத்திப்பாரேன்.. சும்மா கத்துப்பா.. சும்மா கத்து.. '' என்றார் எழுத்தாளர். எனக்கு உச்சி மண்டையில் சுர்ரென்றிருந்தது. யாரோ ஆணியினால் என் காதுகளை குடைவதைப்போலவே இருந்தது. நெஞ்சுக்குள் நமைச்சலாகவும் அடிவயிற்றில் ஏதோ கரைவதைப்போலவும் உணர்ந்தேன். ‘’அதெல்லாம் வேணாம்சார்’’

அவருடைய எழுத்துகளை தொடர்ந்து படிப்பவன் என்பதால் அவருடைய குணாதியங்கள் குறித்து என் மண்டைக்குள் ஒரு ஸ்கெட்ச் போட்டுவைத்திருந்தேன். தான் எழுதுவது எதுவாக இருந்தாலும் அதை அனுபவித்துப்பார்த்து எழுதவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். அவருடைய எழுத்துகளும் அவருடைய வாழ்க்கை சம்பவங்களை ஒட்டியே இருப்பதையும் அவதானித்திருக்கிறேன். அதற்காக பல்வேறு வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றி உதாரணங்களையும் சொல்லுவார். ஆனால் கொலைபண்ணுவதாக கதை எழுத கொலையே செய்துபார்த்திருப்பாரா? என்று நினைக்கவே அச்சமாக இருந்தது.

தமிழ்சினிமா வில்லன்களின் மர்ம மாளிகைகளில்தான் இதுபோன்ற ரகசிய அறைகள் இருக்கும் என்பதே என்னுடைய அவதானிப்பாக இருந்தது. ஆனால் ஒரு சாதாரண எழுத்தாளர் வீட்டுக்குள் இப்படி ஒரு மர்மமா என்று அச்சத்தோடேயே வெளியே செல்லும் கதவையே பார்த்தபடி நின்றேன். அவரோ மிக சகஜமாக இருந்தார்.

நிறைய மர்மநாவல்களும் சைக்கோ கொலைகார படங்களும் பார்த்த அனுபவத்தால் பொதுவாக கொலைகாரர்கள் என்பவர்கள் அதிலும் சைக்கோ கொலைகாரர்கள் மிகவும் பொறுமையாகவும் திட்டமிட்டும் பதட்டமில்லாமலும்தான் கொலை செய்வார்கள் என்று நானாகவே கணக்குப்போட்டு வைத்திருந்தேன். அந்த கணக்குகள் வேறு பயத்தை அதிகமாக்கியது.

‘’ஏதாச்சும் சாப்பிடறீயா.. டீ சாப்பிடலாமா?’’ என்றார். ‘’அதெல்லாம் வேணாம் சார்..’’
‘’ஒரு ஆப்பிளாவது சாப்பிடறீயா.. நறுக்கிதரேன்’’ என்று பெர்முடாஸின் நுனிப்பகுதியிலிருந்த ஒருபாக்கெட்டிலிருந்து ஆப்பிளும் இன்னொன்றிலிருந்து ஒரு நல்ல பளபளக்கும் கத்தியையும் வெளியே எடுத்தார். நான் வேண்டாம் என்பதைப்போல மறுத்தபடி சுற்றுமுற்றும் நோட்டம்விட்டேன்.

‘உட்காருப்பா.. உனக்கு இன்னொன்னு காட்றேன்’ என்றார் எழுத்தாளர். ஏதோ சூனியத்துக்கு கட்டுப்பட்டவனைப்போல அப்படியே அமர்ந்தேன். நிமிர்ந்து அவர் முகத்தையே பார்த்தேன். அந்த நீளநிற ஒளியில் அவருடைய வழுக்கைத்தலையும் கறுத்தசட்டையும் குறுந்தாடியும் கண்களில் தெரிந்த சிறிய ஒளியும் ரொம்பவே பயமுறுத்தின... அதோடு அவர் முகத்திலும் கண்களிலும் தெரிந்த ஒருவிதமான மர்மமான புன்னகைவேறு பயத்தினை அதிகமாக்கியது. கையில் வைத்திருந்த ஆப்பிள் பாக்கெட்டில் இருந்தது. கத்தி இன்னமும் கைகளில்தான் இருந்தது.

என்னை உட்கார வைத்து கட்டிவைத்து ஷாக்ட்ரீட்மென்ட் கொடுத்து நகங்களை பிய்த்து உருட்டுகட்டையால் விளாசுவாரோ என்றெல்லாம் கற்பனை ஓடுகிறது. உள்ளே வந்து மாட்டிகிட்டோம்.. இந்தாளு வேற ஏடாகூடமான எழுத்தாளர்.. ஆளும் திடகாத்திரமா இருக்காரு.. வேறவழியில்லை என்று நினைத்தபடி அப்படியே அமர்ந்திருந்தேன்.

‘’ஒருநிமிஷம் இங்கதான் வச்சிருந்தேன்..’’ என்று எதையோ தரையில் தேடத்தொடங்கினார். படபடப்பாக இருந்தது. ‘’சார் நான் இன்னொரு நாள் வரேனே..’’ என்றேன். ‘’ஏன்ப்பா அஞ்சுநிமிஷம்ப்பா.. முடிஞ்சிடும்’’ என்றார். தரையில் கிடைத்த அந்தப்பொருளை எடுத்தார்... என்னை பார்த்தார்.. புன்னகைத்தார். கதை முடிந்தது.

19 March 2013

பரதேசி





இப்படியொரு பின்னணியில் ஒரு படம் எடுக்க முடிவெடுத்தமைக்காக... நாம் பேசமறந்த நம்முடைய அடிமை வரலாற்றை, ஆவணப்படுத்த நினைத்தமைக்காக... இயக்குனர் பாலாவுக்கு முதலில் நன்றிகள்.

அதோடு, அவருடைய ஆவலை நிறைவேற்றுவதற்காக, காடுமேடெல்லாம் சுற்றி மொட்டையடித்து தாடி வளர்த்து, பட்டினி கிடந்து, படாதபாடுபட்டு, இயக்குனரின் நாயடி பேயடிகளை வாங்கிக்கொண்டு, நடித்தவர்களுக்கும் நன்றிகளும் அனுதாபங்களும். படத்தினை சிறப்பாகக் கொண்டுவர கஷ்டபட்டு பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞருக்கும் உளமார்ந்த நன்றிகள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இதுமாதிரியான முயற்சிகளுக்கான தேவையை இப்படம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. இதுபோன்ற கதைக்களங்களை தொடர்ந்து கோலிவுட்டில் திரைபடமாக்க முன்வரவேண்டும் என்கிற அவாவும் கூடவே உண்டாகிறது. அதேசமயம் இப்படிப்பட்ட திரைப்படங்கள் அதற்குண்டான முனைப்புடனும் பொறுப்புணர்ச்சியோடும் எடுக்கபட வேண்டுமே என்கிற அச்சமும் கூடவே எழுகிறது!

காரணம் பரதேசி நல்ல முயற்சி என்கிற வகையில் பாராட்டத்தக்கதே. என்றாலும் இப்படம் அது பேசுகிற வரலாற்றுக்கு நேர்மையின்றி போதிய ஆராய்ச்சிகளின்றி மேம்போக்காக சொல்லப்பட்டிருப்பதும், திரைக்கதையமைப்பிலும் மேக்கிங்கிலும் இதுவும் இன்னொரு படம் என்கிற அளவிலேயே வந்திருப்பதும்தான் வேதனை தருவதாக இருக்கிறது. ஒரு நல்ல முயற்சியை பாராட்டுகிற வேளையில், ஒரு சினிமாவாக அதன் குறைகளை சுட்டிக்காட்டாமல் மௌனித்திருப்பதை காட்டிலும் கொடுங்குற்றம் எதுவுமே இருக்க முடியாது.

அதோடு இது ஒன்பதுல குருவோ, கண்ணா லட்டு தின்ன ஆசையாவோ இல்லை! இது தமிழ்சினிமாவின் சமகால ரட்சகரும் வருங்கால பிதாமகரும் கோடம்பாக்கத்தை உய்விக்க வந்த புண்ணியாத்மாவுமான பாலாவின் பரதேசி. கோலிவுட் கொத்தடிமைகள் அவருடைய சாட்டையடிக்காக முதுகு காட்டி தவமிருக்கிறார்கள் என்பதை யாராவது மறுக்கவும் முடியுமா.

1939 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் காலத்து தமிழ்நாட்டில், படம் தொடங்குகிறது. சாலூர் என்கிற கிராமம். அங்கே வாழும் சாதாரண மக்கள். பத்து பதினைந்து குடிசைகள் காட்டப்படுகிறது. மொத்த ஊருமே அவ்வளவுதானா? அந்த மக்கள் என்ன தொழில் செய்கிறார்கள்? அது தலித்துகளின் சேரியா? அல்லது சமத்துவபுரம் மாதிரியா? தலித்துகளாக இருந்தால் உயர்ஜாதியினர் எங்கே வாழ்கிறார்கள்? என்பது மாதிரியான அடுத்தடுத்த கேள்விகளும் எழுகின்றன. ஆனால் அவை எதற்கும் பதில் இல்லை. அது சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு செட்டுபோட்ட கிராமம்! அந்த கிராமத்தில் நிறைய மக்கள் வாழ்கின்றனர். தட்ஸ் ஆல்.

இந்த ஊர் மக்கள், திடீரென ஒருநாள், தேயிலை தோட்டங்களுக்கு கொத்தடிமைகளாக, மூட்டை முடிச்சோடு, கிளம்பிவிடுகின்றனர். ஆனால் அதற்கான காரணம் படத்தில் முதல் பாதி முழுக்கவே இல்லை. படத்தின் ஜீவனே அந்த ஒற்றை ‘காரண’த்தில்தான் இருக்கிறது. ஆனால் படத்தில் அது எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.

ஆரம்ப காட்சிகளில், அந்த ஊரில் ஒரு திருமணம் நடக்கிறது. அந்த மக்களில் பாதிபேர் கள்ளு குடித்து, குத்தாட்டம் போடுகிறார்கள். நன்றாக விருந்து சாப்பிடுகிறார்கள். அதுவும் போதாதென்று மனநலம் குன்றியும் குன்றாமலும் இருக்கிற (முந்தைய பாலா பட நாயகர்களை போன்ற) ஒரு நாயகனை பந்தியில் சோறுபோடாமல் அவமதிக்கிறார்கள். அவன் அழும்போது, கைகொட்டி, சிரித்து மகிழ்கிறார்கள்.

கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போதும் ஊர் பெண்களுக்கு ஜாலிக்கு குறைச்சலில்லை. தண்ணீர் பஞ்சமும் இல்லை. தவிர ஆங்காங்கே, ஆடு மாடுகளோடு, ஜூனியர் ஆர்டிஸ்டுகள் நடந்துபோகிறார்கள். டூயட் பாடல் மூலமாகத்தான் அந்த ஏரியாவில் விவசாயம் கிடையாதென்பதை புரிந்துகொள்ள முடிகிறது!

ஆனாலும், மகிழ்ச்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத கிராமமாகவே சாலூர் இருக்கிறது! அங்கே, யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் படம் பார்க்கும் நாமே கூட அந்த கிராமத்துக்கே சென்றுவிடலாமா என்கிற அளவுக்கு நல்ல ரசமான, ரசனையான கிராமம் அது!

அங்கே, பணத்துக்கான தேவையோ, பரதேசி பிழைப்புக்கான வறுமையோ, பஞ்சமோ, பட்டியினியோ, எதுவுமே இல்லை என்பதை காட்சிகளால் நாமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கிராமத்து மக்களோ யாரோ ஒரு கங்காணி வந்து தேயிலை தோட்டத்தில் வேலை, நல்ல கூலி, விடுப்பு,கறிசோறு என்று சொன்னதும் மூட்டை முடிச்சோடு அடுத்த நாளே பரதேசம் கிளம்புவதுதான் உலக நெருடல்.

சரி, ஒருவேளை அதிக கூலி கிடைக்கிறது, சொகுசான வாழ்க்கை கிடைக்கிறது என்கிற காரணங்களுக்காக பேராசைப்பட்டு, கங்காணியோடு, அந்த மக்கள் சென்றனர் என்று வைத்துக்கொள்வோம், ஏற்கனவே இருந்த நல்ல அல்லது மகிழ்ச்சியான வாழ்க்கையை விட்டுவிட்டு, பணத்துக்கு ஆசைப்பட்டு பேராசையால் இந்த கங்காணியிடம் வீழ்ந்தனர் என்று புரிந்துகொள்ளலாம், அப்படி புரிந்துகொண்டால் இத்திரைப்படம் அந்த நொடியிலேயே முடிந்துபோய்விடுகிறதில்லையா? பேராசை பெருநஷ்டம்! இதான் நீதி... என்பதாகப் போயிருக்கும்!

அதற்கு பிறகு அந்த மக்கள் தொடர்ந்து 48 நாட்கள், தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ராப்பகலாக நடந்து கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி சென்னக்கு நடைபயணம் தொடங்கினால் எத்தனை நாள் பிடிக்கும் என்பதை இங்கே கருத்தில்கொள்வது முக்கியம், போகட்டும்.

படம் நடப்பது 1939தானே.. அக்காலகட்டத்தில், 48 நாட்களாக நடக்கிற, அந்த மக்களின் பாதையில் ஒரு கோயிலோ, ஒரு வீடோ, ஒரு நகரமோ, வேறு மனிதர்களோ இல்லாமல் போனது ஆச்சர்யம்தான். எங்கு பார்த்தாலும் காய்ந்த பொட்டல்காடுகள் மட்டுமேதான் அந்தகாலத்தில் இருந்திருக்கும் போல...!

ஆனாலும் 48 நாட்களும் ஒரே மாதிரியான காய்ந்து போன நிலத்திலேயே நடப்பதெல்லாம் பாலா படத்தில்தான் நடக்கும். ஒளிப்பதிவாளரும், வைட் ஆங்கிளில், வெவ்வேறு மாதிரியான லொக்கேஷன்களாவது காட்டியிருக்கலாம். ஒரே ஷாட் நாலைந்து முறை ரிப்பீட் அடிப்பதைப்போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதோடு அடிமைகளாக நடக்கிற ஆண்களுக்கு தாடி மட்டும் நீளமாக வளர தலைமுடி மட்டும் வளராமல் போயிருப்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவது சரியாக இருக்காது. போகட்டும்.

ஒரே ஊரில் ஒன்னுமண்ணாய் பழகியவர்கள், (முந்தைய காட்சிகளின் வழி அந்த மக்களெல்லாம் ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்பதையும் நாமாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது) பஞ்சம் பொழைக்கும் பயணத்தில், ஒருவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று தெரிந்தும், அவரை அப்படியே போட்டுவிட்டு திரும்பிகூட பார்க்காமல் பயணத்தைத் தொடர்கிறார்களாம்! கிராமத்து ஏழை மனிதர்கள்! (பணத்தாசை பிடித்த மனிதாபிமானமற்ற ஜனங்களாக, இருப்பார்கள் போல! இதைத்தான் எரியும் பனிக்காடு சொன்னதா?)

கங்காணி மிரட்டினானாம். ஒரு சிறிய குரலைக் கூடவா வெளிக்காட்டாமாட்டார்கள்! அந்த மக்கள்! இவ்வளவுக்கும் இது நடப்பது பாதி பயணத்தில்தான். தாங்கள் கொடூரமான ஒரு வில்லனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதும் கூட தெரியாது! இருந்தும் இயக்குனர் பாலாசார் சொல்லிவிட்டதாலேயே அந்த துணை நடிகர்களும் சிறிய எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள். வேறு வழியில்லை இடைவேளை விட்டாக வேண்டுமே! ஆக்சன் படமாக இருந்தால் இன்டர்வெல்லில் பதற வைக்கவேண்டும்! அழுவாச்சி படம் என்று முடிவெடுத்துவிட்டதால், கதற வைக்கவேண்டிய, கட்டாயமாக இருக்க கூடும்!

இடைவேளை வரைக்கும், என்ன கதை, என்பதை நிச்சயமாக யாராலும் சொல்ல முடியாது. நாஞ்சில் நாடனின் இடாலக்குடி ராசா கதையை முதல் முக்கால் மணிநேரக்கதைக்காக பயன்படுத்தியிருக்கிறார் பாலா. (ஆனால் படத்தின் கதை திரைக்கதையெல்லாம் அவரே எழுதியதாம்.. டைட்டிலில் போட்டாங்க!). நாஞ்சில் நாடனின் மிக முக்கியமான சிறுகதை அது. எப்போது படித்தாலும் கண்கள் கலங்கிவிடும். பந்தியிலிருந்து விரட்டப்படுகிறவனின் வலியை வேதனையை உணர வைக்கிற கதை அது. அதை, எந்த அளவுக்கு மகா மட்டமாக படமாக்க முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக படமாக்கியிருக்கிறார் பாலா.

முதல் இரண்டு முறை, ராசாவின் காதலியான அங்கம்மா, ஹீரோவை விளையாட்டுத்தனமாக பந்தியிலிருந்து விரட்டுகிறாள். மூன்றாவது முறை கிராமத்து ஜனங்களால் விரட்டப்படுகிறான். அவன் அழுதபடி ராசா வண்டிய வுட்டுடுவான்.. என்று சொல்லிக்கொண்டே நடக்கிறான். ஜனங்கள் சிரித்து மகிழ்கிறார்கள். அட என்னங்கடா? கதையாக படிக்கும் போது அனுபவித்த வேதனையை காட்சியில் ஒரு சதவீதம் கூட உணர முடியவில்லையே. சரி, இதுவும் போகட்டும்.

முதல் பாதி, முழுக்க, இப்படி போகிறதா? இரண்டாம் பாதியில், தேயிலை தோட்டத்துக்கு வருகிறது படம். அங்கே இங்கிலீஸ் துரைக்கு ஹாய் டார்லிங் சொல்லுகிற அளவுக்கு ஜாலியான பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அடடே!

கதைப்படி, படத்தின் நாயகனையும், தேயிலைத்தோட்டத்து இன்னொரு நாயகியையும் நாயகனின் நண்பனும், அவனுடைய மனைவியையும், தவிர்த்து வேறுயாருக்கும் அந்த தேயிலைத் தோட்டத்தில் ஏதும் பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொண்டு குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். தப்பியோடுகிறவர்களுக்கு மட்டும்தான் கால் நரம்பை வெட்டி விடுகிறார்கள்.

மற்றபடி, கூலியை ஏமாற்றி, அங்கேயே கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வதும், அட்டைக் கடியில் கஷ்டப்பட்ட தொழிலாளர்கள் நிலையும், தொற்றுநோயால் மொத்தமாக அம்மக்கள் மாண்டுபோவதும், கால்நரம்புகள் வெட்டப்பட்ட நிலையிலும் தொடர்ந்து உழைக்கிற மக்கள், குழந்தை தொழிலாளர்கள், மருத்துவ வசதிகளின்றி இருப்பது மாதிரியான விஷயங்களும் நல்ல முறையில் படம் பார்க்கிற யாரையும் அசைத்துப்பார்க்கிற வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படம் இப்படி அங்கிட்டும் இங்கிட்டுமாக போய்க்கொண்டிருக்க, பாலா என்ன நினைத்தாரோ, திடீரென தன்னுடைய ஹிந்துத்வா முகத்தை வெளிக்காட்டுகிறார். தேயிலை தோட்டத் தொழிலாளர்களிடையே மதமாற்றம் எப்படி செய்யப்பட்டது என்பதை காமெடியாகச் சொல்கிறேன் என அருவருக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்துகிறார். தன்ஷிகா மரணப்படுக்கையில் மருத்துவரை நாடி வருகிறார். அந்த நேரத்தில் அவரை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக காட்சி வைக்கப்படுகிறது.

நிச்சயமாக, பிரிட்டிஷ் காலத்தில், மருத்துவம் மற்றும் கல்வியின் பெயரால், மதமாற்றங்கள் நடைபெற்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எங்குமே மதம் மாற மறுத்தவர்கள் யாருக்கும் கல்வியோ, மருத்துவமோ, மறுக்கப்பட்டதில்லை. தலித் மக்களுக்கான கல்வியையும், மருத்துவத்தையும் கொடுத்தது கிறிஸ்தவ மிஷனரிகள்தானே! அதை மறுக்கமுடியுமா? அவர்கள் கொடுத்த கல்வி, அம்மக்களில் எத்தனை பேரின், வாழ்க்கைச் சூழலை மாற்றியிருக்கிறது! அதைமறுக்கமுடியுமா.

தன்னுடைய கதை, என்று டைட்டில் கார்டில் போட்டுக்கொண்டாலும் இது மருத்துவர் பி.எச்.டேனியல் எழுதிய ரெட் டீ நாவலின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம்தான் என்பதை இயக்குனர் நிச்சயமாக மறுக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். அந்த பி.எச்.டேனியல் யார் என்று பாலாவுக்கு தெரிந்திருக்காது போல.. மலைக்காடுகளில் தேயிலைதோட்டங்களில் வேலைபார்க்கிற ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்த்து அவர்களுடைய உரிமைகளுக்காக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சங்கம் அமைத்து போராடியவர் என்பதும் பாலாவுக்கு தெரிந்திருக்காதோ என்னவோ! அவரும் கிறித்தவர்தான். அவரும் மருத்துவர்தான். அவருடைய நாவலை திரைப்படமாக்கும்போது அவருக்கு மிக நன்றாகவே மரியாதை செய்திருக்கிறார் இயக்குனர் பாலா. அவருடைய பரிசுத்த ஆவி பாலாவை மன்னிக்கட்டும்.

படத்தில், காரணமேயில்லாமல் ஆஜராகும் அந்த கிறிஸ்தவ மருத்துவரும், அவருடைய மனைவியும் ஒரு பாடலும் பாடி, குத்தாட்டமும் போடுவதெல்லாம், என்ன வகையான (ஏ) மாற்றுசினிமா இது என்கிற கேள்வியை எழுப்புகிறது. இப்படி படத்தில் ஏகப்பட்ட சிக்கலும் குழப்பங்களும் பதிலில்லாத கேள்விகளும் நிறைந்திருக்க, இதெப்படி ஒரு முழுமையான நல்ல படமாக இருக்க முடியும்? இதை எப்படி உலகத்தரம் என்று கொண்டாட இயலும்?

படத்தின், மிகமுக்கியமான குறை ஜிவி பிரகாஷின் மிகமிக மோசமான இசை. பாடல்கள் மிகமிகசுமார் என்றால். பின்னணி இசை குப்பை. படத்தில் பல காட்சிகளுக்கும் தேவை நிறையவே மௌனமும் அமைதியும்தான். ஆனால் அந்த இடத்தில் ஜஜாங் ஜஜாங் என இரைச்சலை கொட்டி கடுப்பேற்றுகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இதுவே!

படத்தின் இன்னொரு பிரச்சனை, நாயகியாக நடித்திருக்கும் வேதிகாவின் கேவலமான நடிப்பும், அவருடைய மேக்கப்பும். தமிழ்நாட்டில் கருப்பான பெண்கள் யாருமே கிடைக்கவில்லையா? சரி வேதிகாவையேதான் போடவேண்டும் என்றால் அவருக்கு நல்ல மேக்கப்மேனை பயன்படுத்தி கறுத்தபெண்ணாக காட்டியிருக்க வேண்டாமா.. எர்வாமேட்டினை முகத்தில் தடவியதுபோலவே வருகிறார் அம்மையார். அதோடு அவர் செய்கிற அஷ்டகோண சேஷ்டைகள் சகிக்கவில்லை ரகம். பாலா படமென்றாலே நாயகன் அரைலூசாகவும் நாயகி முழு லூசாகவும் இருந்தே ஆகவேண்டுமா என்ன? படத்தின் நாயகனுக்கும் நாயகிக்கும் அக்காலத்தமிழ் உச்சரிப்பு சுத்தமாக வரவில்லை. அதோடு இருவருக்குமான குரல் அதைவிட மோசம்.

படத்தின் மூன்று ஆறுதல்கள் அதர்வாமுரளியின் நடிப்பும், செழியனின் கேமராவும் ராசாவின் பாட்டியாக வருகிற அந்த கூன்விழுந்த மூதாட்டியும்தான்! மூவரும் நிறைவாக செய்திருக்கிறார்கள். அதர்வா முரளி உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள். அந்த பாட்டியின் துடிப்பான நடிப்பும் உடல்மொழியும் பாட்டிம்மா ஐ லவ்யூ என்று சொல்லவைக்கிறது. நாஞ்சில் நாடனின் வசனங்கள் சிறப்பு.

பரதேசி, நிச்சயமாக மோசமான, மட்டமான, படமில்லை. குப்பையுமில்லை. ஆனால் மிகமிக சுமாராக, இயக்கப்பட்ட, ஒரு சாதாரண திரைப்படமே. ஒரு எம்ஜிஆர் திரைப்படத்தில் இருக்கிற எல்லா கமர்ஷியல் அம்சங்களும் இப்படத்திலும் உண்டு. மனிதாபிமானமே இல்லாத வில்லன்கள், குடித்துவிட்டு பெண்களை கற்பழிக்கும் கொடூரன்கள், விரட்டி விரட்டி நாயகனை காதலிக்கு காதலி, துரோகமிழைக்கும் வஞ்சக நரிகள் என எல்லாமே உண்டு. எம்ஜிஆர் மட்டும்தான் இல்லை. அவர் இருந்திருந்தால் அந்த மக்களை காப்பாற்றியிருப்பார். நல்ல வேளை அவர் இறந்துவிட்டதால் தமிழ்சினிமாவில் முதன்முறையாக நாயகன் தன் நிலையை அதே யதார்த்ததுடன் ஏற்றுக்கொள்வதாக படம் முடிவது நமக்கு புத்தம் புதிது. அதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

எந்த வித ஆராய்ச்சியுமில்லை. எடுத்துக்கொண்ட கதைக்கு கொஞ்சமும் நேர்மையில்லை. திரைக்கதையெங்கும் ஏகப்பட்ட ஓட்டைகள். மிகமிக தவறான முறையில் நம்முடைய ரத்தந்தோய்ந்த வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியிலும் சறுக்கலே. இவைதான் இப்படத்தின் பிரச்சனை. படத்தில் சில முகத்திலறையும் காட்சிகளும் துடுக்குத்தனமான வசனங்களும் மட்டுமே போதுமென்று பாலா நினைத்திருப்பார் போல.. மன்னிக்கனும்

பாலாசார்… உங்கள் பரதேசியிடம் உண்மையில்லை. அவன் போலித்தனங்களால் கட்டமைக்கப்பட்டவன். தப்பானவன்

(www.cinemobita.com இணையதளத்துக்காக எழுதியது.)

16 March 2013

பொம்மை எப்படி சாகும்?





அந்த பொம்மைக்கு எல்லாமே பாப்பாதான். பாப்பா எப்பவும் பொம்மையை கட்டிபிடிச்சிகிட்டு தூங்குவா ஸ்கூல் முடிஞ்சி வந்ததும் அலங்காரம் பண்ணிவிடுவா... பூவைப்பா... பொட்டுவைப்பா... அழகான உடையெல்லாம் ரசிச்சி ரசிச்சி மாட்டிவிடுவா பகலெல்லாம் பாப்பாவுக்காக பொம்மை காத்திருக்கும்.

நைட்டு பாப்பாவோட தான் தூங்கும். பாப்பா எங்கே போனாலும் பொம்மையும் கூடவே போகும். பொம்மையில்லாம பாப்பாவ பாக்கவே முடியாது. யாராச்சும் அந்த பொம்மைய கேட்டா இது என்னோடது குதுக்கமாத்தேனு சொல்லுவா.. தனக்கு எப்படி பாப்பாதான் எல்லாமோ அதுபோலவேதான் பாப்பாவுக்கும் நாமதான் எல்லாமேனு அந்த பொம்மையே நினைச்சி பெருமை பட்டுக்கும்.

ஒரு நாள் பொம்மை உடைஞ்சிடுச்சு. உடைஞ்ச பொம்மை உனக்கு வேண்டாம்னு தாத்தா திட்டினாரு. அழுதுகிட்டே பொம்மைய தூக்கி போட்டுடுச்சு பாப்பா. குப்பை தொட்டியில கிடந்துதாம் பொம்மை. பாப்பாவ பாக்க முடியாம பாப்பவோட முத்தமில்லாம செத்துபோக நினைச்சுது பொம்மை.

எப்படி சாகறது? பொம்மைக்கெல்லாம் சாவே கிடையாதுனு குப்பைமேட்டு புள்ளையார் கத்தி சொன்னாரு. போடா யானை மண்டையானு திட்டுச்சாம் பொம்மை பாப்பாவுக்கு எல்லாமே நான்தான் ஒருநாள் பாப்பா என்னை தேடிகிட்டு வருவா பாருனுச்சு.

யானை மண்டை தும்பிக்கைய ஆட்டி ஆட்டி சிரிச்சுது.

ஆனா பாப்பா வருவானு பொம்மை அழுதுகிட்டே பல நாளா குப்பைகளுக்கு நடுவுலயே காத்திருந்துச்சு. ஒருநாள் பாப்பா வேற ஒரு பொம்மையோட அந்த வழியா போச்சுது. தூரத்துல பாப்பா வரதை பாத்து ரொம்ப குஷியாகிடுச்சு பொம்மை. நம்மள தேடிதான் பாப்பா வருதுனு நினைச்சுது.

டே யானை மண்டை இப்ப பாரு பாப்பா என்னை பார்த்து ஓடிவந்து தூக்கிக்கும்.. இனிமே உன் தொல்லை இல்லாம சந்தோஷமா இருக்கப்போறேனுச்சு பொம்மை. யானை மண்டை ம்க்கும்னு நமட்டு சிரிப்பு சிரிச்சிட்டு பாக்கறேன் பாக்கறேனுச்சு.

பாப்பா பக்கத்துல வந்துச்சு.. பொம்மைய பாத்துச்சு.. கைலருந்த புது பொம்மைய தூக்கி போட்டுட்டு.. ஓடிவந்து குப்பைல கிடந்த பொம்மைய எடுத்துகிச்சு.. அள்ளி அள்ளி முத்தம் கொடுத்துச்சு.. உடம்போட கட்டிபுடிச்சிகிச்சு.. பொம்மைக்கு ஆனந்தம் தாங்கல..

யானை மண்டைய பாத்து தெனாவெட்டா சிரிச்சிது அழுக்கு பொம்மை! ஆனா யானை மண்டை இப்பயும் நமட்டுத்தனமாதான் சிரிக்கிது. அழுக்கு பொம்மைக்கு ஒன்னுமே புரியல. யானைமண்டை ஏன் சிரிக்குது?

டக்குனு ஒரு கை.. பொம்மைய பாப்பாகிட்டருந்து பிடுங்கி மறுபடியும் குப்பைல வீசிச்சி.. தாத்தாவோட கை அது. பொம்மைக்கு பிடிக்காத கை.

வாட் ஈஸ் திஸ் பாப்பா.. டர்ட்டி ஃபெலோ மாதிரி நடந்துக்கற.. அழுக்குபுடிச்சி கிடக்கு பாருன்னாராம் தாத்தா. ஆனாலும் பாப்பா அழுதுச்சாம். ச்சே பாப்பாக்கு நம்ம மேல எவ்ளோ பாசம்னு நெகிழ்ந்துபோச்சாம் பொம்மை. பாப்பா அழ அழ பொம்மைக்கும் அழுக வந்துடுச்சாம். தாத்தா பாப்பாகிட்ட பேசி பேசி அழுகைய நிறுத்துனாரு.

இந்த பொம்ம வேணாம்.. இது அழுக்கு, உடைஞ்சது, உன் கைய கிழிச்சிடும் டர்ட்டின்னாராம் தாத்தா.

''ஆமா நாம டர்ட்டிதான்... அழுக்கு புடிச்சி கிடக்கோம்.. உடைஞ்சிருக்கோம் இனிமே நாம பாப்பாவுக்கு வேணாம்''னு பொம்மையும் நினைச்சுதாம். அதேநேரத்துல பாப்பா அழுகைய நிறுத்திடுச்சாம்.

பொம்மைக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துதாம். இனிமே பாப்பாவ பாக்காட்டியும் இதுபோதும்னு நினைச்சுதாம். இப்படியே இந்த குப்பைதொட்டிலயே கிடக்கலாம்னு நினைச்சிகிச்சு. ஆனா அழுகைய நிறுத்தின பாப்பா போகும் போது சொல்லுச்சு.. ''ஆமா தாத்தா இந்த பொம்ம ரொம்ப டர்ட்டி உடைஞ்சது இது நமக்கு வேணாம்''

இத கேட்டுகிட்டிருந்த பொம்ம அப்படியே செத்துபோச்சு. யானைமண்டைக்கு பொம்மை எப்படி செத்துதுனு கடைசிவரைக்கும் புரியாமயே போச்சு!

(நன்றி-டாய்ஸ்டோரி)

12 March 2013

தற்கொலை செய்து கொள்வது எப்படி?




குளித்துமுடித்து ‘’கடவுளே இந்தப்படமாச்சும் நல்லாருக்கணும்.. இந்தவருஷம் பூரா அலெக்ஸ்பாண்டியன் தொடங்கி ஆதிபகவன் வரைக்கும் நமக்கு ஏழரை சனி புடிச்சு ஆட்டுது.. இப்படியே போச்சுன்னா படம் பார்த்து பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சிடும் போலருக்கு.. இந்தபடமாச்சும் நெஞ்சுக்கு நிறைவா இருக்கணுமே?’’ என்று வேண்டிக்கொண்டு திரையரங்குக்கு செல்கிறீர்கள்.

பார்க்கிங் 45, டிக்கட் 120, பாப்கார்ன் 50 என கொண்டுபோன 200ஐ பிடுங்கிக்கொண்டு பெரிய மனதோடு மீதி 5ரூபாயை கொடுக்கிறார் தியேட்டர்காரர். அந்த ஐந்துரூபாயை பொக்கிஷமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு அவருடைய பெருந்தன்மையை நினைத்து வியந்து பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறீர்கள். படம் தொடங்க பத்து நிமிடம் முன்பே உள்ளே போய் ஜபர்தஸ்தாக அமர்ந்தும் விடுகிறீர்கள்.
உங்கள் பக்கத்தில் ஏதோ ஒரு கெட்ட வாடை வருகிறது. சகிக்க முடியாத துர்நாற்றம். இடதுபக்கம் திரும்பி பார்த்தால் அருகில் ஒரு கடுங்குடிகாரர். அவர் உங்களையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு பேஜாராக இருக்கிறது. கண்களாலேயே கற்பழிப்பதுபோல உணருகிறீர்கள்.

‘’டேய் யார்ரா நீ என்னை ஏன்டா இப்படி பாக்குற.. அவனா நீயி? நான் ஆம்பளைடா! ஐயாம் ஏ பாய்? என்னை ஏன்டா நமீதாவ பாக்குறாப்ல பாக்குற?’’ போன்ற விநோத எண்ணங்கள் உங்கள் ஆள்மனத்திலே உண்டாகிறது. அது அவனுடைய போதைக்கு பயந்து வெளிமனதில் அடங்கிவிடுகிறது. வாயை மூடிக்கொண்டு திரையில் ஓடுகிற விளம்பரங்களை ரசிக்கிறீர்கள். நுரையீரலை பிழிந்து தார் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். ‘’பிற்றுநோய் கொடியது’’ என்று கீச்சுக்குரலில் யாரோ விபரீதமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

வாயில் சாந்தி சூப்பரும் மானிக்சந்தும் போட்டு குதப்பிக்கொண்டேயிருக்கிறார் குடிகாரர். அதை புளிச் புளிச் என உங்கள் மேல் சாரல் அடிக்கிற வகையில் முன்சீட்டின் பின்புறம் துப்புகிறார். துர்நாற்றம் வேறு! போதாக்குறைக்கு வண்டை வண்டையாக கமென்ட் அடித்துக்கொண்டேயிருக்கிறார். உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வேறு ஒரு காலி இடத்தில் சென்று அமர்ந்துகொள்கிறீர்கள்.

அந்த சைத்தான் கீ பச்சே விடாமல் துரத்திக்கொண்டு வந்து உங்கள் பக்கத்தில் மீண்டும் அமர்ந்துகொள்கிறது. நீங்கள் அவரை பார்க்காதது போல அமர்ந்து படத்தில் கவனத்தை செலுத்துகிறீர்கள். ஆனால் அந்த நபர் உங்களுடைய தோளை தட்டி கூப்பிடுகிறார். ‘’சா........ர்... சார்.. உங்களைதான் சா....ர்’’

‘’திரும்பி மட்டும் பார்த்துடாதடா கோவாலு’’ என்று நினைத்தபடி திரையையே பார்க்கிறீர்கள்.

‘’த்தா..தே..$%#%% பசங்க என்னசார் சரக்கு விக்குறானுங்க.. போதையே இல்ல.. நீங்களாச்சும் கேக்க கூடாதா’’ என்கிறார். பேசாமல் இருக்கிறீர்கள்.

மீண்டும் உங்களுடைய பின்மண்டை அல்லது பொடனியில் தட்டி.. ‘’நீங்களாச்சும் கேக்க கூடாதா சார்’’ என்கிறார்.

‘’நான் யாருங்க இதையெல்லாம் கேக்க..’’ .

‘’கேக்கணும்சார்.. ஒவ்வொருகுடிமகனும் கேக்கணும்..’’ என்கிறார்.

‘’சார் எதுக்கு என்கிட்ட வம்புபண்றீங்க..’’

‘’இல்ல சார் உங்களை பார்த்தா ரொம்ப டீசன்டா இருக்கு.... அதனாலதான்..’’

‘’சார் படம் பார்க்க வந்திருக்கேன் ப்ளீஸ் தொந்தரவு பண்ணாதீங்க..’’

‘’நாங்க என்ன வட சுடவா வந்திருக்கோம்.. இல்ல சார் நீங்க கேக்கணும்சார்..இதையெல்லாம் தட்டிக்கேக்கணும்சார்..’’

‘’என்னங்க நீங்க.. நான் மேனேஜர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்’’

‘’அத தாண்டா நானும் சொல்றேன்.. டே நீ கேக்கலனே வேற யாருடா.. கேப்பா.. கேளுடா.. இப்ப கேளு..போடா போயி அந்த டாஸ்மாக் மேனேஜர்கிட்ட கேளு’’

‘ஹல்ல்ல்லோ.. டா போட்டுலாம் பேசாதீங்க.... அவ்ளோதான்’’

‘’என்னடா.. வேணும்னா டி போட்டு பேசட்டுமா.. நீ கேளுடி.. செல்லம்.. நீ கேளுடி’’

அவரை அடிக்க கையை ஓங்கும் முன்பே உங்கள் முகத்தில் பளார் என யாரோ அறைந்தது போல பிரமை. எழுந்த கை இறங்கிவிடுகிறது. ஆனாலும் உங்களுக்கோ கோபம் உச்சத்தை அடைகிறது. போய் தியேட்டர் மேனேஜரிடம் புகார் பண்ண எத்தனிக்கிறீர்கள். அதற்குள்ளாகவே டிக்கட் கிழிப்பவர் வந்துவிடுகிறார். அவரிடம் நீங்கள் புகார் செய்ய.. ‘’சார் கம்முனு படம் பாருங்க சார்..’’ என்று டிக்கெட் கிழிப்போன் மிரட்டுகிறார்.

குடிகாரர் இப்போது முகத்தை டீசன்டாக வைத்துக்கொண்டு.. திரையில் கவனத்தை செலுத்துகிறார். அப்பாடா ஒழிஞ்சது சனியன் என நீங்களும் திரையை பார்க்கிறீர்கள். படம் தொடங்குகிறது. முதல் ஷாட்.. பவர் ஸ்டார் கோணல் மானலாக முகத்தை வைத்துக்கொண்டு.. ஈஈஈஈஈ என்று சிரிக்கிறார். காமெடியாம். பிறகு அவர் டேன்ஸ் ஆட ஆட..

உவ்வ்வேக்... குடிகாரர் உங்கள் மீது வாந்தி எடுத்தும் விடுகிறார். இந்த முறை உங்களுக்கு கோபம் உச்சகட்டத்தை நெருங்குகிறது. நேராக போய் மேனேஜரிடமே கம்ப்ளைன்ட் செய்கிறீர்கள்.

இந்த முறை கடுங்குடிகாரர் வெளியேற்றப்படுகிறார். ஆனால் அவரோ போகும் போது உங்களை பார்த்து சிரித்துக்கொண்டே போகிறார். ‘’நான் உனக்காக வாசல்லயே வெயிட் பண்ணுவேன்.. நீ வா வெளியே.. டேய் உன்னை சும்மா விடமாட்டேன்டா’’ என்று சிரிக்கிறார். உங்களுக்கு பயமாக இருந்தாலும்.. இப்போது டிக்கட் கிழிப்பவர் துணைக்கு வந்துவிட்டதால்.. ‘’டே போடா..நான் யார் தெரியுமா’’ என்று தவ்லத் காட்டுகிறீர்கள். டாய்லெட் போய் உடைகளை கழுவி... சுத்தம் பண்ணி..

மீண்டும் திரையில் பார்வையை திருப்பி..படத்தில் கவனத்தை குவிக்கிறீர்கள்.

இரண்டரை மணிநேரத்துக்கு பிறகு...

படம் முடிகிறது. வெளியே அந்த குடிகாரன் உங்களுக்காகவே காத்திருக்கிறான். இப்போது போதை தெளிந்திருக்கிறது. ‘’சார் சாரி சார்.. உங்களை நான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..என்னை மன்னிச்சிடுங்க.. நேத்துதான் இந்தப்படம் பார்த்தேன்.. அந்த கடுப்புலதான் கன்னாபின்னானு குடிச்சிட்டேன்.. அதான் இப்படிலாம் நடந்துகிட்டேன் போல.. ஐயாம் வெரி டீசன்ட் ஃபெலோ ஒன்லிசார்.. சீ மை கிரெடிட் கார்ட் டெபிட்கார்ட்’’ என்று அமைதியாக பேசுகிறான்.

உங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்குகிறது.

‘’சார் நீங்க என்ன சார் டிஸ்டர்ப் பண்ணிங்க.. உள்ள ரெண்டரைமணிநேரம் கேப் விடாம அவனுங்க பண்ணானுங்க பாருங்க டார்ச்சர்.. அதைவிட இதெல்லாம் ஒன்னுமேயில்ல சார்.. உண்மைல நீங்க தெய்வம் சார்.. நீங்க ஒருத்தர்தான் சார் என்மேல வாந்தி எடுத்தீங்க.. ஆனா உள்ள ஒரு பத்து இருபது பேர் படம் எடுக்கறேனு.. முடியல சார்.. எனக்கு தலையெல்லாம் சுத்துது.. லேசா பைத்தியம் பிடிக்கறாப்ல இருக்கு.. ஒரு கட்டிங் சாப்டுவமா’’ என்று சொல்ல.. தூரத்தில் டாஸ்மாக் உங்களுக்காகவே மட்டமான சரக்குடன் வாவா என்கிறது.


STATUTORY WARNING -

புகைப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும்
குடி குடியை கெடுக்கும் குடும்பத்தை அழிக்கும் - ஆனால்
ஒன்பதுல குரு போன்ற படங்கள் அதை விட ஆபத்தானவை.


நன்றி - www.cinemobita.com

06 March 2013

புடுச்சி ஜெயில்ல போடுங்க சார்!





இன்று அதிகாலையிலேயே மூன்றுமணி சுமாருக்கு ஓர் அலைபேசி அழைப்பு. நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நான்.. திடுக்கிட்டு விழித்து எழுந்தேன். துவக்க எண் +1 என்று இருந்தது. அமெரிக்காவேதான்.

''தம்பீ நல்லாருக்கியளா'' என்றொரு குரல்.

''நல்லாருக்கேன்ங்க.. யாருங்க'' என்றேன்.

''சும்மா கண்டுபுடிங்களேன் பார்ப்போம்'' என்றார்.

''சார் நிஜமாவே தெரியல..''

''சும்மா டிரைபண்ணுங்க பாஸ்..''

''இல்லைங்க நிஜமாவே தெரியல.. என்னோட மெடூலா ஆம்லகேட்டா ரொம்ப வீக்கு நீங்களே சொல்லிடுங்க என்றேன்

''சரி நான் யாருங்கறது இருக்கட்டும்.. முதல்ல பிறந்தநாள் வாழ்த்துகள்''

''எனக்கு இன்னைக்குதான் பர்த்டேனு உங்களுக்கு எப்படி தெரியும்''

''அதான் ஃபேஸ்புக்ல போஸ்டர் அடிச்சி போட்டிருக்கானே, புகழ்பெற்ற எழுத்தாளர் பிறந்தநாள் ஊருக்கே தெரியுமே''

''என்னது எழுத்தாளரா?''

''ஆமாங்க நிறைய ப்ளாகு..ஸ்டேடஸ்லாம்... டுவிட்டு.. கமென்ட்லாம் போடறீங்களே''

''அதனாலேயே எழுத்தாளரா.. ம்ம் மேல''

''ஃபேஸ்புக்ல உங்கள ரெகுலரா பாலோ பண்றேன்''

''ஓ நீங்க என்னோட ஃபேஸ்புக் பிரண்டா?''

''உங்களோட ஃபேஸ்புக் பிரண்டா இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.. ரிக்வஸ்ட் குடுத்து ஆறுமாசமாச்சு.. நீங்கதான் இன்னும் அக்செப்ட் பண்ணல''

''இல்லைங்க 5000 பிரண்ட்ஸ் தாண்டிடுச்சு அதனாலதான்.. தப்பா எடுத்துக்காதீங்க''

''உங்களப்போயி தப்பா நினைப்பேனா.. புகழ்பெற்ற ஆளுங்கன்னா இதுமாதிரிலாம் இருக்கறது சகஜம்தானே.. உங்களோட பேசறதே எனக்கு கிடைச்ச பாக்யமா நினைக்கிறேன்.. போன ஜென்மத்துல நான் ஏதோ புண்ணியம் பண்ணிருக்கணும். நீங்க வாழற காலத்துல நானும் வாழறேன்றதே எனக்கு பெருமையாருக்கு''

''ம்ம்ம்... மேல''

''உங்க எழுத்துன்னா எனக்கும் என் பொண்டாட்டி புள்ளைகளுக்கும் உசுருங்க.. எப்பயும் என் பொண்டாட்டி கிட்ட சொல்லுவேன்.. இந்த பய நல்லா காமெடியா எழுதுவாப்ல.. தினமும் படிச்சிடுனு.. அவ கூட இப்ப உங்களுக்கு ஃபேனாகிட்டா.. அட என் பசங்களுக்கு சோறூட்டும்போது உங்க ஸ்டேடஸை படிச்சி காட்டிதான் சோறூட்டுவா.. தினமும் உங்க ஸ்டேடஸுக்கு நான் லைக் போடாட்டி கடுப்பாகி சோறுபோடமாட்டானா பாத்துக்கோங்களேன்.. ஆக்சுவலா இங்க அமெரிக்காவுல உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா எடுக்கணும்னு ரொம்பநாள் ஆசை.. ''

''ஐய்யயோ என்ன ரொம்ப புகழாதீங்க சார்,.. கூச்சமாருக்கு''

''அட நிஜமாதாங்க.. போனவாரம் நம்ம மன்னுகிட்ட பேசும்போது கூட உங்களைபத்திதான் ஒருமணிநேரம் பேசிகிட்டிருந்தேன்''

''அவர் யாரு.. மனுஷ்யபுத்திரனா''

''அவர் இல்லைங்க.. இவர் வேற.. உங்க ஊர்காரர்தான் தலைல டர்பன் கட்டிருப்பாரே.. நம்ம ராகுலுக்கு கூட ரொம்ப நெருக்கம்ங்க..''

''நீங்க யாரை சொல்றீங்க.. ராகுல் யாருங்க..''

''என்னங்க நாட்டு நடப்பு தெரியாம இருக்கீங்களே... அவங்க அம்மானா இந்தியாவே அலறுமே''

''அம்மானா தமிழ்நாடு மட்டும்தான்ங்க பயப்படும்.. பன்னீர் செல்வம் அன் கோ வைகோ தாபா சீமான்னு சிலர்தான் அலறுவாங்க.. நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலைங்க.. சரி யார் சார் நீங்க.. உங்க பேர் என்ன''

''பேர் சொன்னதும் தெரியற அளவுக்கெல்லாம் நான் ஃபேமஸ் கிடையாது.. அதுவும் உங்க புகழுக்கு முன்னால நான்லாம்.. இங்க வெள்ளைமாளிகைல வேலை பாக்குறேன்.. என்னை எல்லாரும் பிரசிடென்ட்னு கூப்பிடுவாய்ங்க ''

''யோவ் யாருய்யா நீ.. ஏன்ய்யா பொறந்தநாளும் அதுமா இந்த ஓட்டு ஓட்ற''

''எக்ஸ்க்யூஸ்மீ ஒரு அமெரிக்கன் பிரசிடென்ட்கிட்ட இப்படிதான் மரியாதை இல்லாம பேசுவீங்களா.. படிச்ச பண்பாளர்தானே நீங்க.. இதுதான் உங்க தமிழ்நாகரீகமா.. தொன்மையான தமிழர் கலாச்சாராமா.. ''

''சார் சத்தியமா என்னால முடியல.. யார் சார் நீங்க''

''அதான் சொன்னேனே பராக் ஒபாமா''

''*(&$*#$&*&*% டேய் யார்ரா நீ.. பொறந்தநாளும் அதுமா.. ஏன்டா இப்படி படுத்தற''

''உங்களோட நான் பேசற இந்த கான்வெர்சேசன எஃப் பி ஐ ட்ரேஸ் பண்ணிகிட்டிருக்காங்க.. பாத்து பேசுங்க''

''டேங்.. &*$&*#$ ''

''வேற வழியில்ல மிஸ்டர் அதிஷா.. உங்க மேல ஃடெரரிசம் கேஸ் பாயணும்னு இருக்கு.. அதை யாரால தடுக்க முடியும். சிஐஏ உங்களை கண்காணிக்கும்''

''என்னது டெரரரிஸ்டா.. சிஐஏவா''

''சாரி.. மிஸ்டர் அதிஷா. இனிமேல் உங்க ஸ்டேடஸுக்கு லைக் போடமாட்டேன். தப்பா நினைச்சுகாதீங்க. எனக்கு வேற வழியில்ல. சட்டம் தன் கடமைய செய்யும். அமெரிக்கா மாதாக்கீ ஜே! யுவர்ஸ் ஃபெயித்ஃபுலி ஒபாமா. பராக் ஒபாமா..'' ன்னு சொல்லிட்டு அந்த பக்கி ஃபோனை கட் பண்ணிடுச்சு. அதற்கு பிறகு எப்படி தூங்க முடியும்.

இவங்களையெல்லாம் புடிச்சி ஜெயில்ல போடமுடியாத யுவர் ஆனர்.

04 March 2013

தேவையா?





நேற்று எங்கள் வீட்டுபக்கமாக இரண்டு இளைஞர்கள் அல்லது பெரிய சிறுவர்கள் கட்டிப்புரண்டு சண்டைப்போட்டுக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவனின் தலையில் அடிபட்டு ரத்தம் முகத்தை மூடியிருந்தது. அவனுடைய மூக்கிலிருந்து ரத்தம் வந்துகொண்டேயிருந்தது. இருவருக்கும் மூர்க்கமான சண்டை. ஊரே நின்று வேடிக்கை பார்க்க அவர்களுடைய சண்டை தொடர்ந்து நடந்துகொண்டேயிருந்தது.

இன்னொருவனின் முழங்கையிலிருந்து ரத்தம். அவனுடைய காதுமடல்களிலும் அடிபட்டிருக்க வேண்டும். அதிலிருந்தும் ரத்தம். இருவருடைய உடைகளுமே கிழிந்தும் ரத்தம் தோய்ந்தும் இருந்தன. உடைகள் நிச்சயமாக அதிக விலை பெறக்கூடியவைதான். ஒரளவு வசதியான மிடில்க்ளாஸ் வீட்டு பையன்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. அந்த இருவருமே ப்ளஸ்டூவோ கல்லூரி முதலாண்டோ படிக்கிறவர்களாக இருக்கவேண்டும்.

இருவரில் ஒருவன் கையில் கிடைத்த பெரிய கற்களை எடுத்து இன்னொருவன் மேல் வீசுகிறான். அது எதிரில் இருப்பவனை காலை பதம் பார்க்கிறது. மீண்டும் ரத்தம்.

அங்கே நாங்கள் போவதற்கு முன்னால் இருவரையும் விலக்கிவிட சென்ற ஒரு பெரியவரையும் பிடித்து தள்ளிவிட அவரும் குப்பைத்தொட்டியில் மோதி விழுந்துருக்கிறார். இருவருடைய செல்ஃபோன்களும் பர்சும் கூட கேட்பாரற்று கிடந்தன.

இருவருமே நாம் நினைக்கவும் தயங்குகிற வசைசொற்களால் திட்டிக்கொண்டே கட்டிபுரண்டு சண்டையிட்டபடியிருந்தனர். இருவருக்குமே வயது 17அல்லது 18தான் இருக்கவேண்டும். என்ன சண்டை என்பது புரியவில்லை. அவர்களை பிரித்துவிடுகிற முயற்சியை யாருமே செய்யவில்லை. காவல்நிலையத்துக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தைச்சொன்னோம்.

நல்லவேளையாக சண்டை முற்றி அசம்பாவிதமாக ஏதும் நிகழ்வதற்கு முன் ஒரு கான்ஸ்டபிள் வந்து சண்டையை நிறுத்தினார். அவருடைய லத்தியாலேயே இரண்டு போட்டதற்கு பிறகுதான் இரண்டுபேருமே கொஞ்சமாவது அடங்கினர். இருவரிடமும் யார் என்ன என்கிற விபரங்கள் கேட்டால்.. எதுவுமே சொல்ல மறுக்கின்றனர். அழவும் தொடங்கிவிட்டனர். சார் வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும் என்கிறான் முகத்தில் ரத்தம் வடியும் ஒருவன்.

இருவருக்குமே கடுமையான போதை தலைக்கேறியிருந்தது. நன்றாக குடித்திருப்பார்கள் போல. இருவருமே நண்பர்களாம். ஒரே பைக்கில் ஒன்றாகத்தான் குடிக்க வந்திருக்கிறார்கள்.