Pages

23 January 2014

சென்னை புத்தகக்கண்காட்சி 2014 - பார்ட் 2





முதல்பாகம் படிக்க இங்கே க்ளிக்கவும் - http://www.athishaonline.com/2014/01/2014.html

#ஜூராசிக் பார்க் படத்தில் டினோசர் தூரத்தில் வரும்போதே வீட்டுக்குள் உக்காந்திருக்கும் வெள்ளைகார தாத்தாவின் டேபிளில் தண்ணீர் டம்ளர் டர்ர்ர்ர்ர்ர்ரென்று அதிருமே… நினைவிருக்கிறதா.. அதுபோல கேன்டீனில் உட்கார்ந்து நானும் நண்பர் சோமீதரனும் எழுத்தாளர் சயந்தனும் டீ குடித்துக்கொண்டிருந்தோம். தீடிரென அதுபோல் ஒரு அதிர்வை டீ டம்ளர் வழியே உணர்ந்தோம். சோமீதரனுக்கு பயமாகிவிட்டது.. ‘’அய்யோ பூகம்பம்’’ என்று பதறிவிட்டார். எனக்குமே பதட்டமாகத்தான் இருந்தது.. டீயை வீணாக்க விரும்பாமல் அந்த ரணகளத்திலும் அதை கொதிக்க கொதிக்க உள்ளே தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து கிரவுண்டுக்கு பக்கத்தில் நின்றால்..

மைய அரங்கின் மேடையில் ‘’சீமான்’’ முழங்கிக்கொண்டிருந்தார்..

‘’முள்ளிவாய்க்கால் முற்றத்தில் என்ன நடந்தது தெரியுமா...’’ என்றாரே பார்க்கணும்… அவருடைய வாயிலிருந்து வந்த தீப்பொறி பறக்கும் பேச்சால் ஏதாச்சும் தீவிபத்து மாதிரி அசம்பாவிதங்கள் நேர்ந்துவிடுமோ என்று அச்சமே வந்துவிட்டது.. அதனால் அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டோம்... அவர்பேசிக்கொண்டேயிருந்தார்... பொறி பறந்துகொண்டேயிருந்தது.

***

#சிற்றிதழுக்கென்றே ஒரு ஸ்டால் போடப்பட்டிருந்தது. ‘’சிற்றிதழ் அரங்கு’’ என்கிற அந்தக்கடையில் காக்கைசிறகினிலே,புதுகைத்தென்றல், தங்கம், நுகர்வோர் முரசு, விளையாட்டுசாம்பியன் முதலாக முப்பதுக்கும் அதிகமான பலவித சப்ஜெக்ட்களில் சிற்றிதழ்கள் இடம்பிடித்திருந்தன. பொதுவாக சிறுபத்திரிகை என்றாலே அதில் இலக்கியம், பின்னவீனத்துவம், கோட்பாடு மாதிரிதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த நண்பருக்கு இந்த பத்திரிகைகள் பயங்கர ஆச்சர்யம் கொடுத்தன. சிலம்பாட்டத்துக்காகவே ஒரு சிற்றிதழ் மாதந்தோறும் வந்துகொண்டிருக்கிறது என்பதை அவரால் நம்பவே முடியவில்லை!

இந்த சிற்றிதழ்களில் என்னை மிகவும் கவர்ந்தது ‘’சிரிப்பு ரோஜா’’ என்கிற கையடக்க பத்திரிகை. நகைச்சுவை ரசிகர்களுக்காகவே வருகிற இந்த பத்திரிகை மொத்தமே அட்டையும் சேர்த்து எட்டு பக்கங்கள். அதில் மூன்று பக்கங்களுக்கு சந்தாதாரர்களின் பெயர்களும் முகவரியும் இடம்பெற்றுள்ளன. (ஒவ்வொரு மாதமும் இது இடம்பெறுகிறது!)

மீதி இரண்டு பக்கங்களுக்கு பாத்திரக்கடை, சித்தமருத்துவம், ஆண்மைகுறைவு விளம்பரங்கள். மீதி மூன்று பக்கத்தில் ஒருபக்கத்துக்கு அந்த சிற்றிதழின் ஆசிரியரே ஒருபக்கத்துக்கு ‘’சீரியஸாக’’ தலையங்கம் எழுதியிருக்கிறார்.. நல்லவேளையாக மீதி இருக்கிற இரண்டு பக்கத்தை பாவம் பார்த்து விட்டுவைத்திருக்கிறார்கள். இங்கே முப்பது குட்டிகுட்டி நகைச்சுவை துணுக்குகள் இடம்பிடித்துள்ளன. இந்த நகைச்சுவை துணுக்குகளை எழுதியவர் யார் என்று பார்த்தால்.. மூன்று பக்கங்களுக்கு சந்தா கட்டிய சந்தாதாரர்கள்!

***

#அந்தக்கடையின் பெயர் ரத்தின நாயக்கர் சன்ஸ் என்று நினைக்கிறேன். இந்த ஸ்டாலில் வித்தியாசமான ஜோதிட நூல்கள் காணக்கிடைத்தது. கனவுகாணும் பலன்கள், பல்லிவிழும்பலன்கள், பட்சி பார்த்தால் பலன்கள், எண்தொடு பலன்கள் என என்னெற்ற பலன்கள் அடங்கிய நூல் தொகுப்புகளில் தும்மலுக்கான பலன்கள் என்று ஒரு நூல்தான் மிகவும் கவர்ந்தது. எந்த திசைநோக்கி எந்த நேரத்தில் தும்முகிறோமோ அதற்கேற்ற பலன்கள் உண்டாம். சில குறிப்பிட்ட திசைபார்த்து உச்சிவேளையில் தும்மினால் மரணம் கூட சம்பவிக்கும் என்றெல்லாம் போட்டு பேஜார் பண்ணியிருந்தார்கள். பயந்துபோய் வைத்துவிட்டு வந்துவிட்டேன்!

***

#வம்சி பதிப்பகத்தின் கடையில் இயக்குனர் பாலாவை பார்க்க முடிந்தது. நண்பர் எஸ்கேபி கருணாவோடு சுற்றிக்கொண்டிருந்தபோது வம்சிபக்கமாக இயக்குனர் பாலா வர அவரும் இவரும் பழைய நண்பர்கள் என்பதால் அங்கேயே ஒருசேர் போட்டு அமர்ந்து உரையாட தொடங்கிவிட்டனர். அதற்குள் அங்கே சுற்றியிருந்தவர்கள் வாடிக்கையாளர்கள் என அவர்களை சுற்றி ஒரு நூற்றுக்கு அதிகமானவர்கள் நின்றுகொண்டு ஆட்டோகிராப் போடவும் போட்டோ எடுக்கவும் என அவரை போட்டு நச்சரிக்க.. எனக்கு பரதேசி பட முதல் ட்ரைலர் நினைவுக்கு வந்துவிட்டது. தன்னுடைய கட்டுக்கடங்காத கோபத்திற்கு புகழ்பெற்ற இந்த மனுஷர் எங்கே கடுப்பாகி ரசிகர்களை வெளுத்துவிடுவாரோ என நினைத்தேன். ஆனால் அவரோ புன்னகையோடு கையெழுத்து போட்டுக்கொடுத்து போட்டோவும் எடுத்துக்கொண்டார்.. அடுத்து என்ன படம் என்று கேட்க நினைத்தேன்.. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாக அதிகமாக நான் கிளம்பிவிட்டேன்.

***

#எழுத்தாளர்,ஒளிப்பதிவாளர் செழியனுக்கு இன்னொரு முகமிருப்பது இந்த புத்தகசந்தையில்தான் தெரியவந்தது. மியூசிக் ஸ்கூல் என்கிற பதிப்பகத்தில் இசை குறித்த பத்து வால்யூம்கள் கொண்ட மிகப்பெரிய புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்! செழியன் மேற்கத்திய இசையை முழுமையாக பயின்றவர் , இசை ஆர்வலர் என்று நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது. பத்து வால்யூம்கள் கொண்ட இந்த நூலில் மேற்கத்திய இசையின் பல்வேறு நுணுக்கங்களும் கற்றுத்தரப்பட்டுள்ளதாம். எட்டாயிரம் மதிப்புள்ள நூல்கள் மூவாயிரத்துக்கு இக்கடையில் கிடைத்தது. நிறையவே இசை ஆர்வலர்கள் இக்கடையில் இந்நூலை மொத்தமாக வாங்கிச்சென்றனர். குறிப்பாக இந்த பத்துநூல் தொகுப்பை ஒரு நிஜமான கட்டை பையில் கொடுத்தனுப்பியதை பார்க்க முடிந்தது. (மரத்தினால் செய்யப்பட்ட பெட்டிக்குள் புத்தகங்களை வைத்து அதனோடு இணைக்கப்பட்ட கயிற்றால் பையை தூக்கலாம்!)

***

#ஏதோ பதிப்பகத்தில் பிரபலமானவர்களின் விலாசங்கள் என்கிற புத்தகம் ஒன்றை பார்த்தேன். அதன் கடைசிப்பக்கத்தில் சமகால ‘’இளம் எழுத்தாளர்களுக்கே’’ சவால்விடும் வகையில் ஒரு விளம்பரம் இருந்தது. உடனே மொபைலில் ஒரு க்ளிக்..



***

#இளம் எழுத்தாளர்கள் பலரும் தமிழில் ஆபாசமான நாவல்களை எழுதுகிறார்கள் என்றெல்லாம் நாம் பினாத்திக்கொண்டும் எரிச்சலாக திட்டிக்கொண்டுரும் இருக்க..

அழகான இளம்பெண்கள் ’50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே'' என்கிற ஆங்கில நூலின் மூன்றுபாகங்களை மொத்த மொத்தமாக அள்ளிச்சென்றதை பார்க்க முடிந்தது. ஏகப்பட்ட பலரக பிட்டுகள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிற இந்த எரோடிக் நாவலில் அப்படி என்னதான் இருக்கிறது என்று படிக்க நினைத்திருக்கிறேன். ஆன்லைனிலேயே ஓசியில் கிடைப்பதாக நண்பர் சொன்னதால் காசுகொடுத்து வாங்கவில்லை. தமிழில் இதுமாதிரி ஏன் யாருமே எழுதுவதில்லை... பெண்களுக்கு பிடித்த மாதிரி ஒரு போர்னோ நூல்!

***

#மணிமேகலை பிரசுரத்தில் இருக்கிற புத்தகங்களின் தலைப்புகளை மட்டுமே ஒருநாள் முழுக்க படித்துக்கொண்டிருக்கலாம். எல்லாமே ROFLMAX ரகளை ரகங்கள். ஒருரேக் முழுக்க லேனா தமிழ்வாணன் நிறைந்திருக்கிறார். ஆனால் அவரைவிடவும் சுவராஸ்யமான நூல்களை எழுதியவர் அவருடைய தந்தைதான். சில தலைப்புகளை படித்து சிரித்து சிரித்து நெஞ்சுவலியே வந்துவிடும். அடுத்தமுறை புத்தகசந்தையில் ஒருநாளை மணிமேகலை பிரசுரத்திற்கே ஒதுக்க நினைத்திருக்கிறேன். தமிழ்வாணனின் ‘’கன்னிப்பெண்கள் யாரை விரும்புகிறார்கள்’’ என்கிற புத்தகம் செம ரசனையானது. வெறும் பெண்கள் அல்ல.. கன்னிப்பெண்கள் என்பதுதான் அதில் இருக்கிற குறியீடே!

இதே நூலின் பின்னட்டையில் இருந்த அதே பாணி கில்மா மேட்டர் புத்தகங்கள் அதைவிட சிறப்பானவை. குறிப்பாக செக்ஸ் எக்ஸஸைஸ் நூலும் அதன் அட்டைப்படமும்..

போட்டோவை பெரிதாக்கி பார்க்கவும்..



***

#அடுத்த ஆண்டு புத்தகக்கண்காட்சி ஒய்எம்சிஏவில் இல்லை என்று சிலர் முணுமுணுத்தார்கள். சென்னை ட்ரேட் சென்டருக்கு போகிறதாம் பு க. ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொண்டுபோய்வைத்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் ஒய்எம்சிஏ போன்ற நம்முடைய விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக எஞ்சி இருக்கிற ஓரிரு விளையாட்டு மைதானங்கள் அதிக சேதமாவது தடுக்கப்படும் அந்த வகையில் மகிழ்ச்சிதான்.

***

#அந்த பதிப்பகத்தின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் உள்ளே நுழைந்து இரண்டு நூல்களை மட்டும் எடுத்து பில் போடுவதற்காக கொடுத்தேன். அந்த கடைக்காரர்.. அதிர்ச்சியடைந்தார்.

‘’அய்யயோ அதிஷா நீங்களா.. உங்க கிட்ட போய் காசுவாங்குவோமா.. அதெல்லாம் வேண்டாம்.. எங்க அன்பளிப்பா வச்சிக்கோங்க’ என்றார். எனக்கு பயங்கர அதிர்ச்சி. இல்லைங்க காசு வாங்கிக்கோங்க என்று பணத்தை கொடுத்தேன்.. ஆனால் அந்தக்கடைக்காரர் வாங்கமாட்டேன் என்று உறுதியாக மறுத்துவிட்டார். பின்னால் நின்றுகொண்டிருந்த என்னுடைய நண்பரிடம் ‘’என்னங்க இது.. காசு குடுத்தா வாங்கமாட்டேன்றாங்க..’’ என்று சோகமாக கேட்டேன். அவர் என் தோளைத்தொட்டு ‘’இனிமே அப்படிதான்’’ என்றார்.

புத்தக சந்தை இனிதே முடிந்தது. நெக்ஸ்ட் இயர் மீட் பண்ணுவோமா

****



21 January 2014

சீனாவில் தமிழ்




இன்று (ஜனவரி 21 - 2014) காலை சன்டிவி சூர்யவணக்கம் நிகழ்ச்சியின் ''விருந்தினர் பேட்டி'' பார்த்தவர்கள் பாக்கியவான்கள். எப்போதாவதுதான் காலைநேரத்து நிகழ்ச்சிகளில் இதுமாதிரி அமையும். பொதுவாக நான் சூர்யவணக்கத்தில் ''யோஹ்ஹா'' மட்டும்தான் பார்ப்பது வழக்கம். அதுவும் ''அபிதா பானர்ஜி''க்காக மட்டும்தான் பார்ப்பது. ஆனால் இன்று எதேச்சையாக விருந்தினர் பக்கம் பார்க்க நேர்ந்துவிட்டது. இந்நிகழ்ச்சியில் சீனப்பெண்ணான ''கலைமகளு''டன் ஒரு பேட்டி இடம்பெற்றது.

கொஞ்சமும் பதட்டமின்றி பொறுமையாக யோசித்து யோசித்து அந்த சீனப்பெண் பேசிய ஆங்கிலக்கலப்பில்லாத அழகான தமிழ் அவ்வளவு இனிமையாக இருந்தது. கிட்டத்தட்ட நம்வீட்டு குட்டிப்பாப்பாக்களின் தத்தக்கா பித்தக்கா மழலை மாதிரி... நிகழ்ச்சி முழுக்க மாஆத புன்னகையோடு பேசினார் கலைமகள்.

(சீனக்காரர்கள், குறிப்பாக சீனப் பெண்கள் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தாலும்.. புன்னகைப்பது போலவேதான் எப்போதும் தோன்றும்.. அவர்களுடைய முக அமைப்பே அப்படிதானா.. எல்லோருக்கும் அப்படிதான் தோன்றுமா?)

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இரண்டுபேர்தான் பாவம் செந்தமிழில் பேச ரொம்பவே சிரமப்பட்டார்கள். பாவமாக இருந்தது. அதை அவர்களே ''அய்யோ சாமீ முடியல'' என்று கடைசியில் ஒப்புக்கொண்டனர். ஆனால் சீனப்பெண்ணான கலைமகள் ஆங்கிலகலப்பின்றி பொறுமையாக தமிழில்மட்டுமே நிகழ்ச்சி முழுக்கப் பேசினார். வருங்காலத்தில் நல்ல தமிழை இப்படி யாராவது வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் ஃபாரினர்ஸ் பேசிக்கேட்டால்தான் உண்டு என்று ஆகிவிடும் போல்தான் இருக்கிறது. இது நிச்சயம் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.

சீனப்பெண்ணான கலைமகளின் இயற்பெயர் சாவோ ஜியாங். தமிழ்மேல் பற்றுக்கொண்ட இவர் தனது பெயரை கலைமகள் என மாற்றிக்கொண்டாராம். சீனசெய்தி ஊடக பல்கலைகழகத்தில் ஆர்வத்தோடு இணைந்து தமிழ் கற்றுக்கொண்டு , சீனவானொலியின் தமிழ்ப்பிரிவில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்!

''சீனாவில் இன்ப உலா'' என்கிற நூலையும் இவர் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். சீனாவை சேர்ந்த ஒருவர் தமிழில் எழுதி வெளியிட்ட முதல் நூலாக இது இருக்கிறது. இந்நூலில் சீனாவின் பல சிறப்புகளை குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். நான் வாசித்ததில்லை. சென்ற ஆண்டே வெளியான இந்நூலை வாசித்தவர்கள் பெய்ஜீங் நகரம் குறித்த பல அரியதகவல்கள் கொண்ட நூல் என்று சொல்லக்கேட்டிருக்கேன். இனிமேல்தான் வாங்கி படிக்கவேண்டும்.

ஆங்கிலகலப்பின்றி நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்பதை சீனவானொலி ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக பேசும்போது குறிப்பிட்டார் கலைமகள். நம்மூரில் அப்படி செய்வது மக்கள் தொலைகாட்சி மட்டும்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமா குறிப்பாக செய்தி சார்ந்த நிகழ்ச்சிகளில் சாத்தியமாவென்பது தெரியவில்லை. ஆனால் நம்மூர் மொழியை சைனாக்கார பெண்ணொருவரின் குரலில் கேட்கவும் குஷியாகத்தான் இருக்கிறது!

நிகழ்ச்சியை பார்க்க தவறியவர்கள் இங்கே பார்க்கலாம், அதிலும் அந்தப்பெண் ''சொர்க்கமே என்றாலும் நம்மூரை போலவருமா..'' பாடலை பாடுவதை தவறவிடவேண்டாம்! செம ரகளையான நிகழ்ச்சி.


http://www.youtube.com/watch?v=DoZp0AZ94ME


***

இந்நிகழ்ச்சியை பார்க்கும்போது தோன்றியது இதுதான், ஒருவேளை நம்மூர் ஆட்கள் பிரான்சிலோ ஜெர்மனியிலோ போய் அந்த ஊர் மொழியை பேசும்போது அந்நாட்டு மக்கள் கூட பாருப்பா வெளிநாட்டுக்காரன்(அல்லது ரி)தான் நம்ம மொழியை சரியா பேசுறாங்க நாமதான் தப்பா பேசுறோம் என்று நம்மைப்போலவே ரொம்ப்ப்ப ஃப்பீல் பண்ணுவாய்ங்களோ?

20 January 2014

சென்னை புத்தகக் கண்காட்சி 2014





#புத்தகக் கண்காட்சியில் ஒரு கடைக்கு நடுவே சின்னதாக மரம் முளைத்திருந்தது. அந்த மரத்தில் கூடுபோல ஒரு செட்டும் அதில் குயில் போல ஏதோ பொம்மையும் அதன் குஞ்சுகளுமாக ஏதோ வைத்திருந்தார்கள். அந்த மரமே கடைக்குள் நம்மை ஈர்க்கும்படி இருந்தது. அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாக அமைக்கப்பட்டிருந்த கடைக்குள் நுழைந்து நோட்டமிட்டபடி… கடைக்காரரிடம் ‘’சார் இந்த மரம் உண்மையானதா.. இல்ல கடைக்கு அழகு சேக்குறதுக்காக.. சும்மா வச்சிருக்கீங்களா?’’ என்று விசாரித்தேன். ‘’இல்லைங்க இது நிஜ மரம், இது இங்கயேதான் இருந்திருக்கு..’’ என்றவர்…

‘’இந்த மரம் நடுவுல இருக்கறதால இந்த ஸ்டாலை யாருமே எடுக்க மாட்டேனுட்டாங்களாம்.. மரம் ரொம்ப தொந்தரவா இருக்குனு அதை வெட்டிட்டு வேணா ஸ்டால் குடுங்கனு கேட்டுருக்காங்க.. அதனால யாருமே இந்த ஸ்டாலை எடுக்கல.. நல்லவேளை நாங்க போய் ஆர்வமா அந்த ஸ்டாலை எடுத்துகிட்டோம்.. மரம் தப்பிச்சிது’’ என்றார்.

நெகிழ்ச்சியாக இருந்தது. அது ‘’இயல்வகை’’ பதிப்பகத்தின் கடை. அங்கே விற்பட்டிருந்தவை நம்மாழ்வார் எழுதிய இயற்கை தொடர்பான நூல்கள் என்பதில் பெரிய ஆச்சர்யமில்லை.

****

#இன்ஸ்டன்ட் காப்பி போல ஐம்பதுக்கும் அதிகமான ‘திடீர் படீர் வெடீர்’ புத்தக வெளியீடுகள் புத்தகக் கண்காட்சியின் வெவ்வேறு கடைகளில் அன்றாடம் நடைபெற்றன. இதில் பெரும்பாலானவை கவிதைத்தொகுப்புகள். ஒருசில கட்டுரை தொகுப்புகள். மிகமிக குறைவாக சிறுகதை தொகுப்புகள் அதைவிட குறைவாக நாவல்கள்.

எல்லாமே மிக மிக துரிதமாக பதினைந்து பேர் கொண்ட குழுவோடு ‘’நண்பரும் எழுத்தாளருமான **** வின் இந்த நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன்’’ என்று ஒருவர் அறிவித்தபடி வெளியிட இன்னொருவர் பெற்றுக்கொள்ள நான்குபேர் கைதட்ட அங்கே ஒரு எழுத்தாளன் முகத்தில் பெருமிதம் பொங்க புதிதாக இலக்கிய உலகில் உதயமாக… வரிசையில் அடுத்ததாக நூல் வெளியிட காத்திருக்கும் அடுத்த உதயர் தன்னுடைய நூலோடு வர. மீண்டும் வெளியிட கைதட்ட…. முப்பது சொச்சம் விநாடிகளில் புத்தக வெளியீடுகள் நடந்தன.

புத்தகக் கண்காட்சிக்கு முன்பு புக்பாய்ன்ட் அரங்கிலும், சர்பிட்டிதியாகராயர் அரங்கிலும் நடந்த எண்ணற்ற மூன்றரை மணிநேரம மொக்கைப்போட்டிங் புத்தக வெளியீடுகளைக்காட்டிலும் இவ்வகை முப்பது செகன்ட் வெளியீடுகள் சிறப்பானவை. புத்தகத்தை வெளியிட்ட அடுத்த நொடி இஷ்டமிருந்தால் வாங்கலாம்.. வேண்டாமென்றால் அடுத்த கடையில் விற்கிற லிச்சி ஜூஸை வாங்கி இரண்டு மொடக்கு குடித்துவிட்டு நடையை கட்டலாம்! நீட்டி முழக்கி ‘’அன்பான.. இலக்கீய பெருங்குடி..மக்கேளே’’ டைப் கச்சேரிகள் கிடையாதென்பதே மிகப்பெரிய மகிழ்ச்சி!

****

#கான்டீனில் விலை அதிகம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவரையும் அவருக்கு சப்போர்ட்டாக சென்ற சில மாணவர்களையும் ஹோட்டல் நிர்வாகத்தினரும் காவல்துறையினர் சிலரும் அடித்து உதைத்தது பற்றி தி இந்து தவிர்த்து வேறெங்கும் செய்திகள் இல்லை. நானும் பார்க்கவில்லை. அதைப்பற்றி யாருக்குமே அதிக விபரங்கள் தெரியவில்லை. (எழுத்தாளர் குட்டிரேவதியைத்தவிர்த்து).

முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிட்டால் புத்தகக் கண்காட்சியில் உணவு விலை உயர்வாக இருப்பது ஒன்றும் புதிதில்லை. கடை போட்டிருந்த ‘’சாப்பிட வாங்க’’ கடைக்காரர்கள் பதிப்பாளர்களை விடவும் அதிகமாக கல்லா கட்டியிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். ஆமென்.

****

#புத்தகக் கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கடையில் வித்தியாசமான ஐஸ்க்ரீம் ருசிக்கக்கிடைத்தது. மினிமெல்ட்ஸ் (MINI MELTS) என்ற பெயர் கொண்ட சின்ன வண்டிகடைக்காரர் யாரோ மிகப்பெரிய கோடீஸ்வரர் போல.. அந்த ஐஸ்க்ரீம் விளம்பரத்திற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு போர்ஷ் (PORSCHE) காரில் ஸ்டிக்கர் ஒட்டி நடு மைதானத்தில் நிறுத்தியிருந்தார். மக்கள் ஐஸ்கிரீம்வாங்கித்தின்றார்களோ இல்லையோ அதை சுற்றி சுற்றி வந்து ரசித்தனர். ஒரு குடும்பஸ்தர் கையில் குழந்தையோடு தன் மனைவியிடம் ‘’பாத்துக்கடி இதான் பெராரி.. அம்பதுகோடி ரூவா காரு..’’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். பாப்பா ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடித்துக்கொண்டிருந்தது. எனக்கும் எச்சில் ஊற.. நானும் கடைபக்கம் ஒதுங்கினேன். எழுத்தாளர் நண்பர் சுரேகா அந்த கடை வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவர்தான் அந்த ஐஸ்கம்பெனியின் முக்கிய நிர்வாகி என்பது பேச ஆரம்பித்த சிலநிமிடங்களில் தெரியவர.. அப்பாடா அப்ப காசுகுடுக்காம ஒசிலயே மங்களம் பாடிடலாம் என்கிற எண்ணமும் வந்தது. அதற்கேற்ப.. சும்மா சாப்ட்டு பாருங்க என்று ஒரு கப்பு என்னிடம் நீட்டினார். பொரிகடலைபோல ஐஸ்கீரிம் பொலபொலவென பால்பேரிங் போன்று விதவிதமான கலர்களில் இருந்தது.. ‘’என்னங்க இது’’ என்று விசாரிக்க.. அதன் அருமைபெருமைகளை விளக்கினார்.

இது cryogenically frozen ice cream மாம். அதாவது மிக அதிக குளிர்ச்சியில் (-45 டிகிரியில்) வைத்து கல்லுமாதிரி ஐஸ்க்ரீமை ஆக்கி அவற்றை குட்டிகுட்டி க்ரிஸ்டல்களாக மாற்றிவிட்டால்.. எந்த ஃப்ளேவரையும் எதனோடும் பொரிகடலைபோல கலந்து சாப்பிடலமாம். நானும் சாக்லேட்டையும் மேங்கோவையும் கலந்து தின்றுபார்த்தேன்.. செம டேஸ்ட். விலைதான் கொஞ்சம் கூட போலிருக்கிறது ஒரு சின்ன கப்பு 60ரூபாயோ என்னவோ…

நான் ஒசியில்தான் சாப்பிட்டேன் என்றாலும் செமயாக இருந்தது. Minimelts.com என்ற தளத்தில் இந்த பொரிகடலை ஐஸ்கீரிம் பற்றிய மேலதிக விபரங்களை காணலாம்.

****

#கண்காட்சியின் நடுவில் மைய அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு அங்கும் பல்வேறுவிதமான வினோதமான நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றன. அதில் சிறப்பானது மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட 31 நூல்களின் பிரமாண்ட வெளியீட்டு விழா. நாள்முழுக்க அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் பொன்வண்ணன், நடிகை தேவயாணி அவருடைய கணவர் ராஜகுமாரன் என மூன்று பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தவிர்த்து 31 நூல்களை எழுதிய எழுத்தாளர்கள் அவர்களுடைய சொந்தக்காரர்கள் ஒன்றுவிட்ட மச்சான் மாமா என ஒரு நூற்றம்பதுபேரும் அதே மேடையை அலங்கரித்தனர். காலை பதினோரு மணிக்குதொடங்கி நிகழ்ச்சி மாலை ஆறுமணிவரைநடந்தது. அவ்வப்போது எட்டிப்பார்த்தால் யாராவது புத்தகத்தை இன்னொருவரிடம் கொடுத்து கொடுத்து சோர்ந்து போய்க்கொண்டிருந்தனர். பொன்வண்ணனையும் தேவயானியையும் பார்க்கதான் பாவமாக இருந்தது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் எழுந்து நிற்பதும் பிறகு மீண்டும் அமர்வதுமாக.. பெண்டு கழண்டிருக்கும்.

****

#இந்த மைய அரங்கில் கவிதை வாசிப்பு நிகழ்வு ஒன்றும் நடந்தது. தமிழின் மிகமுக்கியமான சமகால கவிஞர்கள் ஒவ்வொருவரும் கவிதைகள் வாசித்தனர். இதில் வண்ணதாசன் மனுஷ்யபுத்திரன் மற்றும் கலாப்ரியாவும் கூட கலந்துகொண்டனர். நிறைய பெண்கவிஞர்கள் மேடையை ஆக்கிரமித்திருந்தது சிறப்பு. நிகழ்ச்சி துவங்கியபோது ஆங்காங்கே மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த பலரும் நம்முடைய கவிஞர்களின் கவிதை வீச்சில் மதிமயங்கி அப்படியே மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக அமர்ந்து கவிதைகளை கேட்டு ரசித்து கைதட்டினர். எத்தனை பேருக்கு கவிதைகள் புரிந்தது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு சில கவிதைகளைத்தவிர்த்து ஒன்றும் புரியவில்லை.

****

#மைய அரங்கு தவிர்த்து உயிர்மை கடைக்கு பக்கத்தில் ஜீவா சிற்றரங்கு என்று ஒரு சின்ன கொட்டகையும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே எழுத்தாளர்கள் வாசகர்களோடு உரையாடிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல்நாள் சாரு பேசினார். பிறகு கலாப்ரியா பேசினார். தங்கர்பச்சானை பேச வைக்குமாறு மனுஷ்யபுத்திரனிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.. அவர்தான் இதற்காக ஆட்களை ஏற்பாடுசெய்துகொண்டிருந்தார். ஆனால் தங்கர்பச்சான் பேசவில்லை. அதனால் மொத்தமாக அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்துவிட்டேன். அதனால் அங்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை.

சாரு பேசும்போது மட்டும் அவருக்கே அவருக்காக சில நிமிடங்கள் அங்கே ஒதுங்கினேன்.. அவர் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தாலும் கொசுக்கடி தாங்கமுடியாமல் மீண்டும் கடைகள் இருந்த பகுதிக்கே திரும்பிவிட்டேன். இந்த ஜீவா சிற்றரங்கில் குறும்பட திரையிடல் மற்றும் ஒருசில புத்தக வெளியீடுகளும் நடந்தன. கவின்மலர் சிறுகதை தொகுப்பு வெளியீட்டில் அவருடைய சிறுகதை ஒன்றை நாடகம்போல வாசித்துக்காட்டப்பட்டது. அது பார்வையாளர்களிடம் அவ்வளவு தாக்கத்தை உண்டாக்கவில்லை. காரணம் அது சுத்தமாக புரியவில்லை!

****

#ஞாநி இல்லாத அவருடைய ஞானபானு கடையை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் முடிந்தவரை எல்லா நாளும் கடையில் இருப்பார். அவரிடம் யாரும் நிறைய உரையாட முடியும். இம்முறை டிவி பேட்டிகள், உடல்நலம் என பல காரணங்களால் அவரை ஞானபானு கடையில் பார்க்க முடியவில்லை. ஓரிரு நாட்கள் மட்டும் வந்திருந்தார் போல… கவின்மலரின் சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டிற்கு லுங்கி கட்டிக்கொண்டு வந்திருந்தார். அனேகமாக அதுவும் அவருடைய லுங்கி புரட்சி நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம் என்று யூகித்தேன்.

***

#மனுஷ்யபுத்திரன் எல்லா நாளும் உயிர்மை ஸ்டாலின் வாசலில் அமர்ந்து வருகிற போகிற தன்னுடைய கோடிக்கணக்கான வாசகர்களுக்கு சளைக்காமல் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்துக்கொண்டேயிருந்தார். நானும் அப்படியே கூட்டதோடு கூட்டமாக ஏதோ ஒரு பதிப்பகத்தின் கேட்டலாக் ஐ (காலச்சுவடு என்று நினைவு) நீட்டினேன்.. அதிலும் எதையோ கிறுக்கிக்கொடுத்தார். போன ஜென்மத்தில் அவர் டாக்டராக இருந்திருக்கலாம். சொல்லப்போனால் சமகால மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கிற ப்ரஸ்கிரிப்சன்கள் கூட புரியும்.. இவர் போட்டுக்கொடுக்கிற ஆட்டோகிராப்பில் ஒருவரியும் புரியவில்லை. போடாங்கோ** கொம்** என்று திட்டி எழுதிகொடுத்தாலும்கூட யாரும் கேட்க மாட்டார்கள்… அவருடைய கடையின் ஆஸ்தான புகைப்படக்காரர் பிரபுகாளிதாஸ் மனுஷ்யபுத்திரனை வித்யாசமான கோணங்களில் படம்பிடித்துக்கொண்டிருந்தார். எப்படியும் இந்த பு.க வில் மிக அதிக புகைப்படம் எடுத்துக்கொண்டவர் விருது ‘’மனுஷு’க்கு கொடுக்கலாம்! நீங்க சாதிச்சிட்டீங்க பாஸ்!

****

#மனுஷ்யபுத்திரன் மற்றும் பாஸ்கர்சக்தி இருவருக்கும் ஒரேமாதிரியான இரண்டு சம்பவங்கள் நடந்தன. பாஸ்கர்சக்தியும் நானும் ஒருகடையில் ஏதோ புத்தகம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் இரண்டு பையன்கள் அவரை கடந்துபோய்க்கொண்டிருந்தனர். அதில் ஒருவன்… பாஸ்கர்சக்தியை காட்டி ‘’டே அவன்டா.. அவன் டிவில வருவான்டா.. அவனேதான்டா..’’ என்றபடி சென்றனர். குட்டிப்பையன்கள்தான். இன்னொரு சந்தர்ப்பத்தில் மனுஷ்யபுத்திரனை கடந்து இரண்டுபேர் கடந்து போய் திரும்பி வந்து.. மீண்டும் முகத்தை பார்த்துவிட்டு ‘’டே இவன்டா… இவனேதான்டா.. டிவில வருவானே.. பேசிட்டே இருப்பானே’’ என்றபடி சொல்லிவிட்டு நகர்ந்துசென்றனர். யாராவது இவர்களை அடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.. தமிழனுக்கு தைரியம் பத்தாதுப்பா!

****

#சென்ற ஆண்டைக்காட்டிலும் இம்முறை எழுத்தாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதை உணர முடிந்தது. எங்கு பார்த்தாலும் புதுப்புது எழுத்தாளர்கள் நிறைந்திருந்தனர். என்னைப்போல அப்பாவி வாசகர்களைதான் தேடி கண்டுபிடிக்க வேண்டியதாயிருந்தது. அடுத்த ஆண்டு என்ன ஆகப்போகிறதோ என்கிற பீதியும் இவர்கள் ஒவ்வொருவரிடமும் உரையாடும்போதும் உண்டானது!


****

#வா.மணிகண்டன், அராத்து, விநாயகமுருகன் போன்றோரின் புத்தகங்களெல்லாம் எக்கச்சக்கமாக விற்றுத்தீர்ந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. உயிர்மையில் அதிகம் விற்பது சுஜாதாவுக்கு பிறகு எஸ்ராவுடைய நூல்கள்தானாம்.. அதை சிலபல விற்பனை விபரங்களோடு நிரூபித்தார் உயிர்மை மேனேஜர் செல்வி! இந்த ஆண்டு வெளியான நிமித்தம்தான் பெஸ்ட் செல்லராம்.. உயிர்மைக்கு வெளியே கதறகதற விற்றுக்கொண்டிருந்தது ஜெயமோகனின் வெள்ளையானை.. எது அதிகம் விற்றிருக்கும் நிமித்தமா வெள்ளையானையா என்பது நிச்சயம் ஆர்வத்தை உண்டாக்கும் கேள்விதான்! என்றாலும் கொற்கை இவையிரண்டையும் விட அதிகம் விற்றிருக்கலாம். சாகித்ய அகாடமி விருதுபெற்ற.. ஆச்சே!

****

#காலச்சுவடு பதிப்பக கடையில் நண்பர் கிருஷ்ணபிரபு எப்போதும் இருந்தார். வருகிற வாசகர்களுக்கு பொறுமையாக முக்கியமான புத்தகங்களை பற்றி எடுத்துச்சொல்லி அதை ஏன் வாசிக்க வேண்டும் என்று விளக்கிக்கொண்டிருந்தார். இதுபோல ஒவ்வொரு கடையிலும் ஒரு ஆள் இருந்தால் இலக்கிய நூல்களை கிளாசிக்குகளை பாமரர்கள் மத்தியிலும் எடுத்துச்செல்லலாம். ஆனால் நாட்டில் ஒரே ஒரு கிருஷ்ணபிரபுதான் இருக்கிறார் என்பதுதான் கொடுமை! அவருடைய பரிந்துரையில் நான் வாங்கியது மீசான் கற்கள் என்கிற நாவல். அதை இனிமேல்தான் வாசிக்கணும்.

****

#முத்துகாமிக்ஸ் கடைக்கு சென்றவர்கள் அந்த நெட்டையான மொட்டைதலை நண்பரை சந்தித்திருக்கலாம். அவர்தான் விஸ்வாநாதன் என்கிற கிங்விஸ்வா. பு.க வின் ஒவ்வொரு நாளும் கடைக்கு வருகிற ஒவ்வொருவரிடமும் காமிக்ஸ் புத்தகங்களின் சிறப்புகளை எடுத்துக்கூறிக்கொண்டிருந்தார். காமிக்ஸ்கள் வாங்கும் எண்ணிமில்லாதவர்களும் கூட அவருடைய பேச்சைக்கேட்டு நின்று இரண்டு காமிக்ஸ்நூல்களை வாங்கிச்சென்றனர். ஒருவேளை புக்கு வாங்கவில்லையென்றால் இன்னும் நிறைய பேசுவாரோ என்கிற பயம்கூட அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்!

****

#விகடன் கடையில் எப்போதும் போல இந்த ஆண்டும் கூட்டம் கும்மியது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு சூப்பர் ஹிட்டோடு களமிறங்கும் விகடனுக்கு இந்த முறை ஆறாம்திணைதான் சூப்பர் ஹிட்டுபோல! சென்ற ஆண்டு வட்டியும் முதலும் பண்ணின ரெகார்டுகளை அது முறியடித்திருக்கும் என்றே தோன்றுகிறது. (இந்த முறை கோபிநாத் வேறு சூப்பர் ஹிட் பட்டியலில் சேர்ந்துள்ளார்)

****

#பாரதிபுத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ட்ரன் கடையில் குழந்தைகள் கூட்டம் அதிகமில்லை. அது குழந்தைகளுக்கான புத்தகம் விற்கிற கடைபோல இல்லை என்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அங்கே விழியனின் நூல்கள் நிறையவே விற்றுத்தீர்ந்ததை பார்க்க முடிந்தது. குறிப்பாக விகடன் விருது தந்து கௌரவித்த மாகடிகாரம்! அவர் எழுதி வெளியாகியிருக்கும் உச்சிமுகர் என்ற குழந்தைவளர்ப்பு தொடர்பான நூல் இந்த கண்காட்சியில் மிக முக்கியமான நூல்.

****

#கிழக்குப்பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியும் நானும் சில நண்பர்களுமாக ‘’தமிழில் சமகால பல்ப் ஃபிக்சன்’’ குறித்து உரையாடிக்கொண்டிருந்தோம். 6174, கர்ணனின் கவசம் என நீண்ட அந்த உரையாடலில் பத்ரி பகிர்ந்துகொண்ட விஷயங்களையெல்லாம் தனிக்கட்டுரையாக எழுதலாம்.

அந்த சமயத்தில் அவ்வழியாக அவசரமாக சென்றுகொண்டிருந்த ஒரு நபர் நின்று, பத்ரியை பார்த்து… ‘’சார் சல்மான் உங்க கடைலதானே இருக்கார்..’’ என்றார். பத்ரி ஒருநிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தார். ‘’சல்மான்சார்.. உங்க கடைலதானே இருக்கார்..’’ என்றார் மீண்டும்.. இப்போது பத்ரிக்கு புரிந்துவிட்டது ‘’அவர் ஏன்ங்க எங்க கடைக்கு வரப்போறார்.. காலச்சுவடுல வேணா இருந்தாலும் இருப்பார் பாருங்க..’’ என்று அனுப்பிவைத்தார். எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை.. பிறகு பத்ரியே ‘’சல்மான் என்பது சல்மான்ருஷ்டி!’’ என்று விளக்கினார். அந்த நபரைத்தேடினேன் வேகவேகமாக போய்க்கொண்டிருந்தார்… புத்தகக் கண்காட்சியில் தேடித்தேடிப் புரட்டுகிற நூல்களை விட சந்திக்கிற மனிதர்கள்தான் மிகவும் சுவாரஸ்யமானவர்கள்!

*****

#லிச்சிஜூஸ் கடைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘’இதயக்கனி’’ மாத இதழ் கடையில் ஏகப்பட்ட அரிய எம்ஜிஆர் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை விற்பனைக்கு என்று நினைத்து விசாரித்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஏசுநாதர் போல் வேடமிட்ட எம்ஜிஆர் படம் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

இதயக்கனியின் பழைய இதழ்கள் விற்பனைக்கு கிடைத்தன. நான் அவற்றில் எதையும் வாங்கவில்லை. அதே கடையின் வாசலில் ஒரு கருத்துக்கணிப்பு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு ஒரு கேள்வித்தாளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.

‘’எம்ஜிஆரின் புகழ் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும்?’’ என்கிற கேள்விக்கு ஆப்சன் ஏ – பத்தாண்டுகளுக்கு பி – நூறாண்டுகளுக்கு… சி – பல்லாண்டு பல்லாண்டு… என்கிற ஆப்சன்கள் தரப்பட்டிருந்தன.

நான் ஆப்சன் சியை டிக் செய்து என்னுடைய பெயர் முகவரி எழுதி போட்டுவிட்டு வந்தேன்!

எம்ஜிஆர் கடைக்கு பக்கத்து கடை நித்தியானந்தா கடை. அங்கே சந்தனக்கலர் புடவையோடு ஒரு உயரமான பெண் நிற்க.. அவசரமாக எட்டிப்பார்த்தேன். அது அவர் இல்லை. வேறு யாரோ!

****

இந்த முறை சாமியார்களின் கடைகள் (ராமகிருஷ்ண மடம், ஈஷா, இசுகான், நித்தி etcetc ) கணிசமாக இருந்தாலும் அங்கெல்லாம் கூட்டம் அதிகமில்லை என்பதே பெரிய ஆறுதல்தான். மக்களுக்கு ஞானம் வந்துவிட்டதோ என்னமோ?

****

புத்தகக் கண்காட்சியில் வாங்க நினைத்த பல நூல்கள் அச்சிலிருந்தே வரவில்லை என்று சொன்னபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. சில நூல்கள் கடைசிநாள்களில்தான் கடை கண்டன! இதெல்லாம் ப்ளான் பண்ணி பண்ண வேண்டாமா பாஸ்.. அப்படி மிஸ்பண்ணினி நூல்களில் முக்கியமானது அருண் நரசிம்மன் எழுதி வம்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஏலியன்கள் பற்றிய நூல் மேலும் சில அறிவியல் நூல்களும்…

***

இந்த முறை வாங்க நினைத்து வாங்கமுடியாமல் (துட்டு இல்லை!) போன நூல்… உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள கம்பராமாயணம் – வைமுகோ உரையுடன். மூவாயிரம் ரூபாய்! என்னுடைய பு.க பட்ஜெட்டே வெறும் ஆயிரம்ரூபாய்தான் என்பதால்… அடுத்த முறை வாங்கிக்கலாம் என்று விட்டுவிட்டேன். பதிப்பகத்தார் இந்த ஈஸி இன்ஸ்டால்மென்ட் ஸ்கீமெல்லாம் அனவ்ன்ஸ் பண்ணலாம்!

***

#இன்னும் நிறைய இருக்கிறது. இதுவே ஆல்ரெடி இரண்டாயிரம் வார்த்தைகள் தாண்டி ஆறு பக்கங்கள் ஆகிவிட்டது.

முடிந்தால் இந்த கட்டுரைக்கு பார்ட் 2 எழுதலாம். எழுதாமலும் போகலாம்.


15 January 2014

உங்க குலதெய்வம் யார் சார்?




காலை டிவியில் ஒரு பிரபலமான நிகழ்ச்சியில்... பங்கேற்ற பொது ஜனங்களிடம் அதன் தொகுப்பாளர் அல்லது நடத்துனர் ''உங்க குலதெய்வம் என்ன'' என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவிஷயம் என் நினைவுக்கு வந்தது.

முதல்சந்திப்பிலேயே என்னிடம் குலதெய்வம் என்னவென்று விசாரிக்கிற விசாரிக்கும் ஆட்கள் சிலரை சந்தித்திருக்கிறேன். நாற்பது அல்லது ஐம்பது ப்ளஸ் வயதுடைய இந்த ஆட்களிடம் என் குலதெய்வத்தின் பெயரைச் சொன்ன அடுத்த நொடி, கொஞ்சம் கூட தாமதிக்காமல் கடகடவென்று நம்முடைய பூர்வாசிரம ஜாதகத்தையே ஒப்பிப்பார்கள்.

நான் என்ன சாதி.. அந்த சாதியில் உப சாதி... என்ன குலம் எந்த கோத்ரம் யாருடைய வம்சாவழி.. என பல விஷயங்களை அப்படியே அடுக்கிக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். நிச்சயமாக ஸ்டன்னிங் மோமன்ட் அது! நம்மைப்பற்றி நமக்கே தெரியாத சங்கதிகளைச்சொல்லி அசத்துவார்கள்.

வெறும் குலதெய்வம் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எப்படித்தான் இந்த மனிதர்கள் நம்முடைய ஊரையும் சாதியையும் சகல விஷயங்களையும் சரியாக கண்டுபிடிப்பார்களோ என்று ஆச்சர்யமாக இருக்கும். இதற்கென்றே எதும் மென்பொருள் வைத்திருப்பார்களோ என்று வியந்திருக்கிறேன். வெறும் குலதெய்வம் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி சாதிக்குள் சாதியான உபசாதிகளைக் கூட கணிக்கிறார்கள் என்பதும் மர்மமானதுதான்!

ஆனால் பாருங்கள் இது ஒருவகையான ''சாதி கண்டுபிடிக்கும் டெக்னிக்'' என்று புரிந்துகொள்வதற்கே எனக்கு பல வருடங்கள் ஆனது. நண்பர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தில் இருக்கிற ''ஐயர்'' அஃபீசியல் ஒருவர் சாதி கண்டுபிடிக்கும் டெக்னிக் பற்றி எப்போதும் சொல்வார். புதிதாக வேலைக்கு வரும் பையன்களின் தோள்மீது கைபோட்டபடி ஜாலியாக நடப்பார். அப்படியே முதுகை லேசாக வருடிப்பார்த்து ''ஓக்கே..இவன் அவன் இல்லை'' என்று முடிவெடுத்துவிடுவாராம். இவை தவிர தாத்தா பேரை கேட்பது, சொந்த ஊர் குறித்து விசாரிப்பது, நீங்க வெஜிடேரியனா என்று விசாரிப்பது.. என சாதி கண்டுபிடிக்கவே நம்மூர் ஆட்கள் லியார்னாடோ டாவின்சி கணக்கான ஏகப்பட்ட வித்தைகளை கற்று வைத்திருக்கிறார்கள்.

தலித் நண்பர்கள் சிலர் இந்த பேர்வழிகளிடம் சிக்கி... மிக ஜாலியாக தங்களுடைய குலதெய்வங்களைப்பற்றி சொல்லி... இந்த நபர்கள் "அய்ய நீ அவிங்க ஆளா'' என்று முகம்சுழிக்கிறவகையில் பேசி அசிங்கப்பட்ட கதைகள் கூட உண்டு. அதனாலேயே இந்த குலதெய்வம் ராஜகோபால்களை கண்டாலே கன்னங்கள் சிவக்கும் படி ஓங்கி நாலு அப்பு அப்பலாம் போல இருக்கும். இருந்தாலும் இந்த நபர்கள் நமக்கு மிக நெருங்கியவராக அல்லது உடன் வேலைபார்ப்பவராக அல்லது நண்பர்களின் நண்பர்களாக இருந்துதொலைப்பார்கள்.

அதிலிருந்து இதுபோல யாராவது குலதெய்வம் குறித்து கேட்டாலே கோவமாக ''புத்தர்'' என்று கூறிவிடுவது என்று முடிவெடுத்திருந்தேன். அப்படி ஒருவர் என்னிடம் கேட்க நானும் புத்தர் என்று கூற... சில நாட்கள் கழித்து அவர் என்ன புரிந்துகொண்டார் என்பது வேறு நண்பர்கள் வாய்வழியாக வந்தடைந்தது. ''அவன் புத்தர்ன்றான்ப்பா.. தாழ்த்தப்பட்ட சாதியா இருப்பான் போல..'' என்றாராம்.

பெரியாரப்பா!

06 January 2014

மோமோ புராணம்




மோமோதான் இக்கதையின் நாயகன் என்பதால் முதலில் மோமோ என்கிற டம்ப்ளிங்ஸ் என்கிற சைனீஸ் கொழுக்கட்டை குறித்து தெரியாதவர்களுக்கு ஒரு சின்னூண்டு இன்ட்ரோ…

மோமோ என்பது நேபாள, திபெத்திய மக்களின் விருப்ப உணவு. ஆல்மோஸ்ட் நம்மூர் விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் மோதகம்தான். குண்டான வெள்ளை எலி போலிருக்கும் இதன் நடுவில் அல்லது உள்ளே இனிப்பு பூர்ணத்திற்கு பதிலாக கொஞ்சம் காரம் போட்ட சிக்கன் பூர்ணமோ, மட்டன் பூர்ணமோ, அல்லது முட்டையோ கேரட் முட்டைகோஸ் கூட்டு பூர்ணமோ ஏதோ ஒன்றை வைத்து கொழுகட்டை பிடித்து ஆவியில் வேகவைத்து காராமாக பறிமாறினால் அதுதான் மோமோ!

அதற்கு மேல் கொஞ்சம் காரம் போட்ட தக்காளி சட்னி மாதிரியான ஒரு சைட் டிஷ்ஷும் வழங்கப்படுகிறது, (அரைத்த தக்காளி ஜூஸில் மிளகாய் கலந்து) சென்னையில் ஒரு கடையில் பன்றி இறைச்சியில் கூட மோமோ தருகிறார்கள்.

முன்பெல்லாம் சென்னை சுற்றுவட்டாரத்தில் கிடைப்பதற்கரிய கில்மாவாக இருந்த இந்த திண்பண்டம் இப்போதெல்லாம் பரவலாக எங்கும் மூலைக்கு மூலை கிடைக்கிறது! குட்டி குட்டி பெட்டிகடைகளில் நிறைய சப்பை மூக்கு இளைஞர்கள் மோமோ விற்கிறார்கள்.
ஆனால் உண்மையான மோமோ இப்படித்தான் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி நினைத்து நான் சாப்பிட்டுக்கொள்வேன். இந்திக்காரர்கள் சாம்பாரை குடித்துக்கொண்டே மசால்தோசை சாப்பிடுவதைப்போல!

தோழி கவின்மலருக்கு ஒருமுறை கோடம்பாக்கம் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் பொட்டிகடை வாசலில் மோமோவை அறிமுகப்படுத்தினேன். அவருக்கும் அந்த மோமோவை உடனே பிடித்துப்போய்விட்டது. அவரும் ஃபேஸ்புக்கில் என்னைப்போலவே ‘’ஆகா என்ன ருசி’’ என்று புகழ்ந்து நான்குவரி எழுதியிருந்தார். அந்த ஸ்டேடஸில் ஒரு நண்பர் சூளைமேடு பக்கத்தில் ஒரு திபெத்திய உணவகம் இருக்கிறது, அங்கே ஒரிஜினல் மோமோ கிடைக்கிறது என்று குறிப்பிட்டார். நானும் கவின்மலரும் அந்த வாரமே அந்த கடைக்கு போய் நல்ல மோமோ சாப்பிட தீர்மானித்தோம். எங்களோடு நண்பன் நெல்சனும் சேர்ந்துகொள்கிறேன் என்றார்.

ஒரு ஆடு வான்டடாக வந்து ‘’சார்.. சார்.. என்னை தயவு செஞ்சு என்னை வெட்டுங்க சார்’’ என்று கசாப்பு கடை வாசலில் போய் நின்றால் யார்தான் ‘’அய்யோ பாவம் நீ வூட்டுக்குபோ ஆடு’’ என்று விரட்டுவான்! எனவே நெல்சனையும் எங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டு மூவரானோம்.

‘’பாஸ் திபெத் கடைல செம காரமாருக்கும்.. இன்னைக்கு சாப்ட்டா நாளைக்கு பின்னால சால்னாதான்.. பழக்கமில்லாதவங்களுக்கு செட்டாகாது. அதனால நாம WANGS கிச்சனுக்கு போகலாம்.. அங்க காரம் மைல்டாவும் ருசியாவும் இருக்கும்’’ என்றார் நெல்சன்.

‘’ப்ரோ அங்க செம காஸ்ட்லியாருக்குமே.. அங்கபோயி..’’ என்று நான் பம்மினேன். கவின்மலருக்கும் கூட தயக்கம்தான். ஆனால் நெல்சன் விடவில்லை ‘’அதெல்லாம் நான் பாத்துக்கறேன் பாஸ்.. இரண்டு மோமோ சாப்ட்டா ஒன்னும் சொத்தெல்லாம் அழிச்சிடாது.. நீங்க ரெண்டுபேரும் நாளைக்கு சரியா நைட் எட்டுமணிக்கு நுங்கபாக்கம் வாங்ஸ் கிச்சனுக்கு ஆஜராகிடுங்க’’ என்று கட்டளையிட்டார். மான்களை வேட்டையாட காத்திருக்கும் ஒநாய்களைப்போல கவின்மலரும் நானும் அப்போதிருந்தே மோமோவேட்டைக்கு காலிவயிறோடு காத்திருந்தோம்.

வாங்ஸ் கிச்சன் கடையை அடிக்கடி கடக்க நேரிட்டாலும் அங்கே எப்போதும் சென்றதில்லை. ஒருநாள் நாமும் அதற்கு உள்ளே போவோம் நமக்கும் யாராவது சோறு வாங்கிதருவார்கள் என்றும் நினைத்ததில்லை. நெல்சன் சேவியர் தன்னுடைய ஆக்டிவாவில் வந்திறங்கினார். எப்போதும் போல அரைமணிநேரம் தாமதமாக கவின்மலரும் வந்துசேர வாங்ஸ் கிச்சனில் நுழைந்தோம்.

வாங்ஸ் கிச்சன் கடையை பற்றி சொல்லிவிடுவோம். இங்கே சீன உணவுகள் கிடைக்கும். எங்கு பார்த்தாலும் ‘’ரிட்டர்ன் ஆப் தி ஷாவலின் டெம்பிள்’’ படத்தில் வருகிற MONKS போல் நிறையபேர் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அதோடு சிகப்பு நிற பொருட்கள் வைத்து அலங்கரித்திருந்தார்கள். ஹோட்டலில் இதைவிட ஒரு கடையில் சீன உணவு கிடைக்கும் என்பதை உணர்த்த வேறென்ன வேண்டும்.

அன்றைய தினம் மோமோவிலேயே தொடங்கி மோமோவிலேயே முடிந்திருந்தால் ஒரு மிகப் பெரிய சேதாரம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் நெல்சன்தான் ஏன் நாம சூப்லருந்து தொடங்கபிடாது என்றார். எனவே சிக்கன் சூப்பிலிருந்து ஆரம்பித்தோம். சிக்கன் சூப் நன்றாக இருந்தது.

பிறகு மோமோ ஆர்டர் பண்ணினோம். சிக்கன் மோமோ, வெஜ் மோமோ என இரண்டு வெரைட்டிகளும் சொல்ல… மெனுவில் ஓரத்தில் தென்பட்ட மாட்டிறைச்சி உணவு உடனடியாக உணர்ச்சிவயப்பட வைத்தது. கவின்மலரும் நானும் மாட்டிறைச்சியின் பரம ரசிகர்கள். அதனால் நெல்சனிடம் ‘’ரோஸ்டட் சில்லி பீஃப்’’ ஆர்டர் பண்ணிக்கலாமா என்றேன். அவரும் சரி என்றார். அதோடு கூடவே சிக்கன் ஃப்ரைட் ரைஸும் செஸ்வான் ஃப்ரைட் ரைஸும் ஆர்டர் பண்ண.. எல்லாமே வந்தது.

வாங்ஸ் கிச்சனில் தரப்பட்ட ரோஸ்டட் சில்லி பீஃப் சுவையாக இருந்தது. மாட்டிறைச்சி துண்டுகளை மெல்லிசாக வெட்டி அதில் மசாலாதடவி நன்றாக வறுத்து கொடுக்கிறார்கள். அதில் நிறையவே மாட்டிறைச்சியும் உண்ண கிடைக்கிறது. ஸ்லைசாக வெட்டப்பட்டிருப்பதால் இறைச்சியும் நன்றாக வெந்து ஜூசியாக இருந்தது. சுவைக்கு கொஞ்சமும் குறைச்சலில்லை. ரசித்து உண்ண முடிந்தது. கவின்மலர் அந்த ஃப்ரையை சமைத்தவருக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவிக்குமாறு வெயிட்டரிடம் கூறினார். நெல்சன் உணர்ச்சிப்பெருக்கில் இன்னொரு பீஃப் ஆர்டர் பண்ண.. அதுவும் வந்து காலியானது.

மோமோவைப்பற்றி சொல்லவேண்டும். வெளியே விதவிதமான மோமோக்களை சாப்பிட்டிருந்தாலும் வாங்ஸ் கிச்சன் மோமோ நிச்சயம் வித்தியாசமாகவே இருந்தது. அது உள்ளே அதிக காரமும் இல்லாமல் கொஞ்சம் இனிப்பாகவும் அதற்கு வழங்கப்பட்ட சாஸ்களும் தக்காளிசட்னியும் கூட வேறு சுவையிலும் இருந்தது. இதுவும் கூட ஒரிஜினலின் சுவைதானா தெரியவில்லை. ஆனால் ஆல்மோஸ்ட் இதுதான் ஒரிஜினல் சுவையாக இருக்கலாம்.

ஒருவழியாக நிறையவே நல்ல உணவுகளை சாப்பிட்ட திருப்தியோடு அமர்ந்திருந்தோம். அருகில் இருந்த மெனுவில் ‘’FRIED ICECREAM’’ என்று ஏதோ போட்டிருந்தது. இதென்னய்யா புதுசா இருக்கு.. என்று நெல்சனிடம் கேட்க.. அவர் கொஞ்சமும் யோசிக்காமல் மூனுப்ளேட் குடுங்க என்று ஆர்டர் செய்துவிட்டார். எவ்வளவு உயர்ந்த உள்ளம் நல்ல மனசு!

அந்த ஃப்ரைட் ஐஸ்க்ரீமும் வந்தது. இந்த பட்சணத்தை இப்போதுதான் நான் முதன்முதலாக பார்க்கிறேன். போண்டாவுக்குள் ஐஸ்க்ரீமை வைத்து எப்படியோ பொறித்து கொடுக்கிறார்கள். எப்படி செய்திருப்பார்கள் என்பதையெல்லாம் வீட்டுக்கு போய் சிந்தித்துக்கொள்ளுவோம் என்று நினைத்துக்கொண்டே அந்த ஐஸ் போண்டாகளை லபக்கினோம். சும்மா சொல்லக்கூடாது அப்படி ஒரு ருசி! எப்படி இந்த போண்டாவை பொறித்தார்கள் என்பது கடைசிவரை மர்மமாகவே இருந்தது.

வீட்டுக்கு கூட ஒரு செட் பார்சல் வாங்கிச்செல்லலாமா என்று யோசனையாக இருந்தது. WANGS கிச்சன் கடைக்கு சாப்பிடச்செல்பவர்கள் மிஸ்பண்ணிவிடக்கூடாத இரண்டு உணவுகளில் இதுவும் ஒன்று. இன்னொன்று ரோஸ்டட் சில்லி பீஃப்!

ஒருவழியாக சாப்பிட்டு முடிக்க பில் வந்தது. ஆனால் அதை என்னையும் நெல்சனையும் விட்டுவிட்டு கவின்மலரிடம் கொண்டு போய் வைத்தார் ஹோட்டல்கார். கவின்மலர் உடனே கோபமாக எழுந்து கைகழுவ சென்றுவிட்டார். நாங்கள் பொதுவாக அப்படித்தான் செய்வது. நெல்சன் பில்லை வாங்கிப்பார்த்தார். முகத்தில் எந்த சலனமுமில்லை. நான் அதை பிடுங்கிப்பார்த்தேன்.. ஆல்மோஸ்ட் இரண்டாயிரம் ரூபாய்க்கு தின்று தீர்த்திருக்கிறோம்! அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் நெல்சன் மிகவும் நல்லவர். சிரித்த முகத்தோடு இதெல்லாம் நத்திங் பாஸ் என்றார்.

கவின்மலருக்கும் எனக்கும் ரொம்பவே கில்ட்டி ஃபீலிங்காக இருந்தாலும்… வேறுவழியில்லை. மாசக்கடைசியில் அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது. ஆயிரம்தான் இருந்தாலும் நெல்சன் விசுவல் மீடியா ஆள்! நாங்கள் இருவரும் ப்ரிண்டுதானே! அதனால் ஒன்றும் பேசாமல் கம்முனுருந்தோம்.

நெல்சன் தன்னுடைய டெபிட் கார்டில் பில்லுக்கு பணம் கொடுத்தார். முகத்தில் எந்த வித சலனமோ தயக்கமோ கோபமோ வறுத்தமோ எதுவுமே இல்லை என்பது உண்மையில் ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. ச்சே எவ்ளோ நல்லவர். இரண்டாயிரம் ரூவாவுக்கு சாப்பாடும் வாங்கிக்கொடுத்து.. ச்சே சிம்ப்ளீ கிரேட்.. என்று நானும் கவின்மலரும் அவருடைய உயர்ந்த உள்ளம் கண்டு வியந்தோம்.

பாட்ஷா படத்தில் ஒரு காட்சி வருமே மாணிக்கத்தை கரண்டு கம்பத்தில் வைத்து கட்டிவைத்து அடித்து நொறுக்கின பிறகும் அவர் சிரித்துக்கொண்டே இருப்பாரே அதுதான் இந்த நேரத்தில் நெல்சனின் முகத்தை பார்க்கும்போது நினைவுக்குவந்தது. வாட் ஏ மேன் என்று மீண்டும் ஒருமுறை கவின்மலரை பார்த்து வியந்தேன்,. அவரும் அப்படிதான் நினைத்திருப்பார்.

காசெல்லாம் கொடுத்து கை கழுவி டிஸ்யூ பேப்பரில் கையும் துடைத்து வெளியே வந்தோம். நான் என்னுடைய பைக்கை எடுத்து கிளம்பினேன். கவின்மலரும் கிளம்பினார். ஆனால் நெல்சன் மட்டும் பார்க்கிங்கிலேயே நின்றுகொண்டிருந்தார். அச்சச்சோ இந்த நல்ல மனுஷனுக்கு என்னாச்சு என நானும் கவின்மலரும் பதறிப்போய் அருகில் போய் பார்த்தோம்.

‘’பாஸ் ரொம்ப நேரமா… வண்டியை ஸ்டார்ட் பண்றேன்.. வண்டி ஸ்டார்ட்டே ஆகலை..’’ என்றார்.

‘’வண்டில பெட்ரோல் இருக்கா பாஸ்’’ என்றார் கவின். இருக்கு என்பதாக தலையை ஆட்டினார். அப்புறம் ஸ்டார்ட் ஆகலை என்று கவின்மலரும் உதவ முற்பட்டப்போதுதான் கவனித்தேன்.

மனிதர் ஸ்டார்ட் செய்ய முயன்றுகொண்டிருந்தது வேறு ஒரு ஸ்கூட்டி பெப் வண்டியை. அது அவருடைய வண்டியே அல்ல.. அவருடையது ஆக்டிவா..!

‘’ஹலோ இது உங்க வண்டியில்ல பாஸ்’’ என்றேன். அப்போதுதான் நெல்சன் கவனித்தார்.

‘’அட ஆமாங்க…‘’ என்று பதறிப்போய் பின்வாங்கி அவருடைய ஆக்டிவாவை தேடி கண்டுபிடித்தார். அப்போதும் அவர் முகத்தில் சலனமேயில்லை. அதே புன்னகை. ஆனால் எங்களால் இப்போது புரிந்துகொள்ள முடிந்தது. (இவர் ரொம்ப நல்லவர் ... எவ்ளோ அடிச்சாலும் வலிச்சாலும் வெளிய காட்டிக்கமாட்டார் போல…)

நானும் கவின்மலரும்தான் ரொம்பவே சங்கடப்பட்டோம். அவருக்கு அடுத்த முறை பிரமாண்டமாக இரண்டுபேரும் காசுபோட்டு ஒரு நல்ல டீயாச்சும் வாங்கிக்கொடுத்துவிடுவோம் என்று முடிவெடுத்தோம்.