Pages

31 May 2010

சிங்கம்



மிளகு தூக்கலாய்! இஞ்சி சீரகம் பட்டை கிராம்பு மற்றும் இன்னபிற சுறுசுறு விறுவிறு ஐட்டங்களையும் போட்டு , அம்மியில் வைத்து அரைத்து , நல்ல குறும்பாட்டு கறியை வாங்கி, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிப்போட்டு , கொஞ்சம் நல்லி எலும்புகளையும் போட்டு , கொஞ்சம் மஞ்சள் நிறைய மிளகாய்த்தூள் என சேர்த்து நன்றாக வேக வைத்து , சோத்துல விட்டு பினைஞ்சு அப்படியே ஒரு நல்லி எலும்ப கடவாயில் வைத்து கடித்தால்.. காரம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சுர்ர்ர்னு ஏறும் .. அப்படி ஒரு உணர்வைத்தரும் திரைப்படத்தை கடைசியாக எப்போது பார்த்தேன் என்பது நினைவில் இல்லை.

முரட்டு மீசை! உருட்டு விழி! உயரம்தான் கொஞ்சம் கம்மி. துரைசிங்கம்! சூர்யா. நேர்மை,நாணயம், உண்மை , உழைப்பு , கடமை தவறாத காவல் அதிகாரி. அவரை விரட்டி விரட்டி காதலிக்கு ஆறடி அனுஷ்கா! கையில் அரிவாளை எடுத்தால் வெட்டுவார், துப்பாக்கியை எடுத்தால் சுடுவார் அந்த வில்லன் பிரகாஷ்ராஜ். முடிவெட்டி பல வருடமான செம்பட்டை மண்டை சுமோ வில்லன்கள் , வீர வசனங்கள் , புஜங்கள் , முறுக்கேறும் நரம்புகள் , குத்துப்பாட்டு , இறுதியில் சேஸிங் , நடுவில குடும்பம் சென்டிமென்ட் வகையாறக்கள் என் போட்டு கிளறி கிண்டி எடுத்தால் மணக்க மணக்க காரமான சிங்கம் தயார்!

காக்க காக்க சூர்யாவை விட இதில் லோக்கல் பிளேவரில் கிராமத்து போலீஸாக சூர்யா. முரட்டுத்தனமான போலீஸாக லோக்கலாக இறங்கி தியேட்டர் அதிர வசனம் பேசுகிறார். அவருக்கு அது நன்றாக பொருந்துகிறது. மூன்றுமுகம் ரஜினியை நினைவூட்டினாலும் நல்ல நடிப்பு. அனுஷ்கா விரட்டி விரட்டி காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். நல்ல வேளையாக கதையின் பல இடங்களை அவரை வைத்தே நகர்த்துகிறார் இயக்குனர். அதனால் படம் முழுக்க வருகிறார். ஹீரோவுடனான உயர பிரச்சனை இயக்குனருக்கு பெரிய தொல்லையாக இருந்திருக்கலாம். அதனால் படத்தில் இருவரும் இணைந்து நிற்பது போன்ற காட்சி கூட இல்லை.. பாடல்களில் கூட கேமராவை கோணலாக வைத்தும் , நடனத்தில் சீரிய இடைவெளி விட்டும் சூர்யாவின் உயரப்பிரச்சனையை தீர்த்துள்ளதாக தெரிகிறது.

பல நாட்களுக்குப் பின் வில்லனாக பிரகாஷ்ராஜ். பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. லூசுத்தனமாக எதையாவது செய்து ஹீரோவிடம் தோற்கிறார். படம் முழுக்க அவருடைய அக்மார்க் டேய்.. டேய்...தான். விவேக்கின் காமெடி பல இடங்களில் சிலிர்க்க வைக்கிறது. அடடா டபுள் மீனிங் டமாக்கா! வெண்ணிற ஆடையார் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

இயக்குனர் ஹரியிடமிருந்து சில்ரன் ஆப் ஹெவனை எதிர்பார்த்து படம் பார்க்க செல்வீர்களேயானால் உங்களுக்கு மூளையில் ஏதோ கோளாறாக இருக்கலாம். அல்லது தமிழ்ப்படங்கள் பார்க்காதவராக இருக்கலாம். அவருக்கே உரிய அதிரடிபாணி கதைநகர்த்தல். அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா மாதிரியான அற்புதமான வசனங்கள் (படத்திற்கு வசனமெழுத டிஸ்கவரி சேனல் உதவி பெற்றிருப்பார்கள் போல படம் முழுக்க சிங்கபுராணம்தான்). வீரம் சொட்ட சொட்ட திரைகதை அமைக்கும் பாணி , அதில் வில்லனை பந்தாட ஹீரோ எடுக்கும் புத்திசாலித்தனமான யுக்திகள். எல்லாமே மிகச்சரியாக திட்டமிட்டு செய்திருக்கிறார் இயக்குனர். நிச்சயம் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் ஹரி மட்டும்தான்.

படத்தின் பெரிய மைனஸ் நீள...மான வசனங்கள். சில நாடகத்தனமான குடும்ப சென்டிமென்ட் காட்சிகள்! முன்பாதி மொக்கையான காதல் காட்சிகள். அனுஷ்காவை காட்டினாலே அய்ய்யோ பாட்டு போட்டுருவானுங்க போலருக்கே என்று அலறுகின்றனர் ரசிகர்கள். படம் முழுக்க லாஜிக் மீறல்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ரசிகனின் முதுகில் பெவிகால் போட்டு சீட்டோடு சீட்டாக ஒட்டவைத்துவிடுகிறது திரைக்கதை.சிங்கம் சீறிப்பாய்கிறது.

26 May 2010

வெள்ளிங்கிரி - 1



அந்த ஆற்றின் பெயர் நினைவில்லை. ஆனால் காட்டுக்குள் சில கி.மீட்டர்கள் நடக்க வேண்டும். போகும் வழியெல்லாம் ஒவ்வொரு செடி,கிளைகளையும் கவனமாக பார்த்துக்கொண்டே போக வேண்டும். ஆற்றுப்பாதையில் சாணி கிடந்தால் அதை தொட்டுப்பார்க்க வேண்டும். கால்த்தடங்களை கவனிக்க வேண்டும். செடிகொடிகள் உடைந்திருந்தால் உடைந்த பகுதி காய்ந்திருக்கிறதா அல்லது இன்னும் பச்சை வாசனை இருக்கிறதா என்று முகர்ந்து பார்ப்போம்.

சாணியாக இருந்தால் தொட்டுப்பார்த்து அது இன்னும் சூடாக இருக்கிறதா என்று!. கால்த்தடங்கள் பெரிதாக இருந்தால் அருகிலேயே கடந்திருக்கிறது எமன்! யானைகளும் காட்டுப்பன்றிகளும் சில வகை குரங்குகளும் சுற்றிக்கொண்டிருக்கும் காடு அது. நரிகளும் இருக்குமென்பார்கள். நான் யானைகளையும் காட்டுப்பன்றிகளையும் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். நரிகளை வேறொரு சமயம் நகரத்தில் பார்த்திருக்கிறேன். அந்த காடு வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்திற்கு(பூண்டி) எதிர்ப்பக்கம் இருக்கிறது. அந்த காட்டுக்குள் யாரும் நுழைந்து விட முடியாது. யாரும் நுழைவதுமில்லை. நாங்கள் எப்போதும் நுழைந்துவிடுவோம். காட்டிலாக்கா ஆபீசர்களின் காலடிகளையும் குரலையும் ஒலியையும் தேடியபடி!

கொஞ்சம் போல் அடர்த்தி இருந்தாலும் அதன் உள்ளே ஓடும் ஆற்றுப்படுகையும் அதன் நீரும் அபாரமானது. சுவையானது. குளிர்ச்சியானது. வெள்ளிங்கிரி மலை மீதேறி இறங்கினால் உடலெல்லாம் வலி பின்னி பிணைந்திருக்கும். அதை ஒற்றை குளியலில் நீக்கும் அபார ஆற்றலை கொண்டிருந்தது அந்த நீர். இப்போது நினைத்தாலும் நாக்கில் இனிக்கிறது. அதன் குளுமை உடலில் குளிர்கிறது.

கோவையிலிருந்து முப்பது கி.மீ சுமாரில் அமைந்திருந்தது பூண்டி மலைக்கோவில். வருடாவருடம் சித்ராபௌர்ணமி வந்துவிட்டால் ஏரியா இளசுகள் கையில் கம்போடு அர்த்தராத்தியில் கிளம்பி விடுவார்கள். சிறுவர்களான நாங்களும் அவர்களோடு செல்ல கேட்போம். அனுமதி கிடைக்காது. பின் குதித்து குதித்து வளர்ந்து பெரியவனாகி நாங்களும் போக ஆரம்பித்தோம். ஏனோ சித்திரா பௌர்ணமி கூட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை. வதவதவென சொதசொத ஆட்களை கண்டாலே எங்கள் கும்பலுக்கு பிடிக்காது. கொலை செய்தாலும் அமைதியாக செய்வோர்களின் கூட்டு எங்களுடையது. அதனால் மலையேற அனுமதிக்கப்படும் சித்திரை மாதத்தின் ஏதாவது ஒரு நாளில் நாங்களும் கம்பிருப்பவன் இல்லாவதன்களெல்லாம் சேர்ந்து புறப்படுவோம்.

பூண்டி கோவிலின் அடிவாரத்திலிருந்து கிட்டத்தட்ட 6000அடி உயரத்தில் இருக்கிறது வெள்ளிங்கிரி மலை. மலை உச்சியில் சின்னதே சின்னதாக ஒரு சிவலிங்கமும் , அதற்கு பூஜை செய்ய ஒரு பூசாரியும், வீபூதி , குங்குமம், மஞ்சள் , கயிறு மற்றும் இன்னபிற பிரசாதங்கள் விற்க ஒரு சிறிய கடை. மிகப்பெரிய பாறைகளுக்கு நடுவில் சிவபெருமான் சிறிய பாறைக்குள் ஒளிந்திருப்பார். ராவோடு ராவாக மலையேறுகிறவர்கள் அதை வணங்கி உண்டியலில் பத்தோ இருபதோ போட்டுவிட்டு இறங்கி விடுவார்கள். ஆனால் அத்தனை சுலபமாய் அடிவாரத்திலிருந்து மலைக்கு போய்விட முடியாது!

பகலில் வாட்டி எடுக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் மலை ஏறினால் ஒரு உற்சாக அனுபவம் நிச்சயம் கிடைக்கும். ஆனால் யாரும் பகலில் மலை ஏறுவதில்லை. ஏறுவதில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. சின்னதும் பெரியதுமாக ஏழு மலைகளைக் கொண்டது வெள்ளிங்கிரி. பயணப்பாதையில் முதலிரண்டு மலைகளிலும் கடைசி மலையிலும் இளைப்பாருவோருக்காக கடைகள் இருக்கும். அவைகளுக்கான சாமான்கள் பகலிலேயே கூலியாட்களால் முதுகில் சுமந்தபடி ஏற்றிக்கொண்டு செல்லப்படுகிறது. சிகரட்,பீடி,பாக்கு,பொடி,சிப்ஸ் பாக்கெட்டு,சோடா மற்றும் இன்னபிற நொறுக்குத்தீனிகளும் இதில் அடக்கம்...

கஞ்சாவும் அபினும் இதில் சேராது.. இரவில் மட்டுமே கொண்டு செல்லப்பட்டு இரவில் மட்டுமே விற்கப்படுவது. இப்போதும் விற்கப்படுகிறதா என்பதை வெள்ளிங்கிரி மலை ஆர்வலர்கள்தான் தெரிவிக்க வேண்டும். கஞ்சா வாசனை காற்றில் வந்தாலே மோப்பம் பிடித்துவிடும் நாங்கள், மலையேறும் போதெல்லாம் , மலை மட்டும் ஏறாமல் காட்டுக்குள் உலாத்தும் போது புதர்களுக்குள் அமர்ந்து கொண்டு புகைவிடும் சித்தர்களை அல்லது பித்தர்களை கண்டிருக்கிறோம்.

- இன்னும் ஏறுவோம்

*********

படம் உதவி - ஹிந்து நாளிதழ்

22 May 2010

கனகவேல் காக்க - விமர்சனம்


அந்தக் கதையில் முதலில் மலைக்கள்ளனாக எம்.ஜி.ஆர் நடித்தார் , பின் சிவாஜி, பின் ரஜினி, கமல்,விஜயகாந்த், அஜித்,விஜய்,விக்ரம் என லேட்டஸ்ட்டு நண்டு சிண்டுகள் வரை நடித்து தீர்த்துவிட்டனர். பிரஷாந்த் கூட ஜாம்பவான் என்றொரு படத்தில் இதே கதையில் நடித்ததாக நினைவு. பாகவதர் கூட இந்த கதையில் நடித்திருக்க வாய்ப்புண்டு. படம் பெயர் நினைவில்லை. ஷங்கர் இந்த கதையை வைத்தே பலகாலம் தமிழ்சினிமாவின் இன்றியமையாத இயக்குனர் ஆகிவிட்டார். தமிழ்சினிமாவில் வெளியாகும் பத்து திரைப்படங்களில் ஒன்றில் இடம் பெறும் அளவுக்கு அந்த கதையும் இன்றிமையாத ஒன்றாகிவிட்டது. தமிழில் பிரபலமாக துடிக்கும் எல்லா நடிகரும் அந்த கதையில் ஒருமுறையாவது நடித்து பார்த்துவிடுகிறார்கள். எத்தனை முறை அரைத்தாலும் விடாமல் ஹிட்டடிக்கும் அந்த மகா பிரபல்ய கதையில் நடித்து புகழ்பெற்றோர் பட்டியலில் கரணும் கனகவேல் காக்கவுடன் இணைந்துள்ளார்.


அப்படி என்ன பரமரகசியக் கதை என்று நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். ஒரு ஊரில் நிறைய கெட்டவர்கள் இருந்தார்கள். அவர்களை வரிசைப்படுத்தி ஸ்கெட்ச் போட்டு பிளான் பண்ணி யாரோ கொல்லுகிறார்கள். அவர் யாரென்று தெரியாமல் விழிபிதுங்கிய போலிஸ் பெரிய வட்டமான மேஜையில் அமர்ந்து அவன் யாரா இருக்கும் என்று மண்டையை பிய்த்து கொள்ளுவார்கள். அது யாரென்றால் அவர்தான் ஹீரோ. அவர் கொல்லுவதற்கு நடுவில் அவர் பின்னால் ஹீரோயின் சுற்றுவார். பாடுவார். ஆடுவார். வெளிநாட்டுக்கு சென்று உருண்டு பிரண்டு கசமுசாவாக டூயட் பாடுவார்கள். ஒரு கட்டத்தில் இந்த கொலைக்கு காரணம் ஹீரோதான் என்று நாயகிக்கு தெரிந்துவிடும். ஹீரோயின் கடுப்பாக ஹீரோ அவரை தனியாக யாருமில்லாத பின்லேடன் குகைக்கு அழைத்துச்சென்று நெஞ்சைப்பிழியும் ஒரு பிளாஷ்பேக்கை சொல்லுவார். அதில் நாயகர் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருப்பார். வில்லன்கள் குடும்பத்தை நாசமாக்க ஹீரோ பொங்கி எழுந்து சத்திரியனாய் இருப்பதை விட சாணக்கியனாய் மாறிவிடுவார். இதை கேட்டு நாயகியோ மனம் நெகிழ்ந்து போய் குத்துப்பாட்டுக்கு நடனமான கிளைமாக்ஸில் வில்லனை கொல்லுவார் ஹீரோ! சுபம்!

கனகவேல் காக்க படத்தின் கதைக்கரு மேலே சொன்னதுதான். இருந்தாலும், திரைக்கதையிலும் வசனத்திலும் காட்சி அமைப்புகளிலும் வேறுபடுத்தி காட்ட முயற்சித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் கவின்பாலா!. இதே கதையோடு இதற்கு முன் வெளியான ஜென்டில்மேன், இந்தியன், ரமணா உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு காரணம் திரைக்கதையும் காட்சி அமைப்புகளுமே! அந்த இரண்டும் சொதப்பியதால் தோல்வியடைந்த சிட்டிசன் மற்றும் சாமுராய் போன்ற படங்களும் உதாரணத்திற்கு உண்டு.

கரணம் தப்பினால் மரணம் என்கிற முடிவோடு மேலே சொன்ன கதையையும் கரணையும் நம்பி களமிருங்கியிக்கிறார் இயக்குனர். தனக்கு கிடைத்த சுமாரான பிரபல ஹீரோ, மிகக்குறைந்த பட்ஜெட் , படமாக்குவதில் சிக்கல்கள் என பலதையும் சுமந்தபடி கிட்டத்தட்ட முக்கால் கிணறு தாண்டிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தின் நாயகனாக கரண். கருப்பசாமி குத்தகைதாரருக்குப் பின் நீண்ட நெடிய இடைவேளைக்கு பிறகு க்யூட்டாக இருக்கிறார். கோர்ட்டில் டவாலியாக அமைதியாக நிற்பதும், வில்லன்களிடம் பொங்கி எழுவதும் என மசாலா நாயகராக மணக்கிறார். (நல்ல வேளை படத்தில் பஞ்ச் டயலாக்குகள் ஏதுமில்லை , வீர வசனங்கள் உண்டு!). அதிலும் கிளைமாக்ஸில் கோர்ட்டில் பேசும் காட்சியில் வெளுத்து வாங்குகிறார். ஒரே ஷாட்டில் அவ்வளவு நீளமான வசனத்தை சமீபத்தில் யாரும் பேசியதாக நினைவில்லை. இன்னும் தமிழ்சினிமாவில் கரணை யாருமே சரியாக பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். ஹீரோயினுக்கு அதிகம் வேலையில்லை. அவரைப்பற்றி சொல்லவும் எதுவுமில்லை. தவறான தேர்வு.

படத்தின் நாயகன் கரண் என்றாலும் படம் முழுக்க கோட்டா சீனிவாசராவின் களேபரம்தான். எம்.ஆர்.ராதா, சத்யராஜுக்குப் பிறகு காமெடியும் வில்லத்தனமும் இணைந்த கலவையான நடிப்பை இவரிடம் மட்டுமே ரசிக்க முடிகிறது. வசனங்களின் துணையோடு தன் உடல்மொழியால் முழுமையாக ஒவ்வொரு காட்சியையும் முழுங்கிவிடுகிறார். இன்னொரு வில்லன் சம்பத்தை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

படத்தின் வசனம் எழுத்தாளர் பா.ராகவன். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிந்தவரை சிறப்பாகவே செய்திருக்கிறார். கோர்ட் வசனங்களும் , கோட்டா ஸ்ரீனிவாசின் வசனங்களும் பாராவை அடையாளம் காட்டுகின்றன. யாருமே நினைக்காத இடத்தில நான் இருப்பேன்டா மாதிரியான பேரரசு பாணி சுத்தமான ஐஎஸ்ஓ 9001 பெற்ற வீர வசனங்கள் மசாலா ரசிகர்களை கவரும்.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் இசை . விஜய் ஆன்டணி! ஏதோ பூர்வ ஜென்ம கடனுக்காக இசையமைத்திருப்பார் போல! பாடல்கள் பிண்ணனி என எல்லாவற்றிலும் ஒட்டுமொத்த சொதப்பல். மசாலாப் படங்களுக்கே உரித்தான மிகமுக்கியமான அந்த ஜோர் அல்லது துள்ளல் பிண்ணனி இசையில் மிஸ்ஸிங். அதே போல திரைக்கதையிலும் , மேக்கிங்கிலும் கூட இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். படம் நெடுக முதல் பட இயக்குனரின் தயாரிப்பு சுதந்திர சிக்கல்களை உணர முடிகிறது. படத்தின் குறைச்சலான பட்ஜெட்டும் மேக்கிங் குறைபாடுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மற்றபடி இயக்குனர் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இன்னொரு ரமணாவாக உருவாகியிருக்க வேண்டிய திரைப்படம் , ஏனோ மனதில் பதிய மறுக்கிறது. அதற்கு ஹீரோவின் பாத்திரப்படைப்பும் காரணமாக இருக்கலாம். படத்தின் மிக முக்கிய அம்சமான கொலைகளுக்கு இன்னும் கூட புத்திசாலித்தனமான முடிச்சுகளையும் டுவிஸ்டுகளையும் சேர்த்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். ஏகே 74 துப்பாக்கி டுமீல் டமால் முடிச்சுகள் மூலம் ஹீரோவை போலீஸ் கண்டுபிடிப்பதெல்லாம்.. ஒரு முழுமையான ஹிட் படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இருந்தும் ஏதோ குறைவது போன்ற உணர்வு.

ஒரு சில குறைகளால் படத்தின் சிலபல காட்சிகள் சலிப்பூட்டுகிறது. கொட்டாவியும் விட வைக்கிறது. மசாலா படங்களில் இதுமாதிரியான வேளைகளில் பாடல்கள் சலிப்பை குறைக்க உதவும். ஏனோ இப்படத்தில் பாடல்களுக்கு தியேட்டரில் குழந்தைகள் கூட வெளியேறுகின்றனர். வில்லனின் காமெடி தவிர்த்து இன்னும் கொஞ்சம் காமெடி கூட்டியிருக்கலாம். படத்தில் சண்டைக்காட்சிகளும் எடுபடவில்லை. படம் பார்க்கும் போது உண்டாகும் சோர்வை குறைத்திருக்கும். நிஜமாகவே படம் பார்க்கும் போது சோர்வாக இருக்கிறது.

மற்றபடி மசாலாவை தூக்கலாக போட்டு இன்னும் கொஞ்சம் கிண்டியிருந்தால் கிழங்கெடுத்திருக்கலாம்.

கனகவேல் காக்க - புதுமையான கதைகளத்துக்காக ஒரு முறை பார்க்கலாம்.

*********

தமிழ் ஓவியம் இணையதளத்துக்காக எழுதியது (சில மாற்றங்களோடு)

21 May 2010

அறிவியல் புனைவு 2060








அறிவியல் புனைவு எழுத காலயந்திரத்தில் ஏறி 50வருடங்களை கடந்துசெல்ல அதன்காதை திருகினேன். 2060 என்று வருடமே இல்லை என்கிறது அறிவில்லா யந்திரம்.


குறிப்பு - டுவிட்டரில் எழுதிய மைக்ரோ சிறுகதை - 

 

***********

18 May 2010

அர்த்தராத்திரி பயங்கரம்!



அன்றாடம் எந்தக் கிழமை வந்தாலும் செயற்கரிய சனிக்கிழமை எப்போது வரும் என காத்திருந்த நாட்கள் அவை. சனிக்கிழமை வந்தால் சனிபகவான்,எள்ளுப்பிரசாதம்,எண்ணெய் என்று ஒன்பது முதல் 108 முறை சுற்றி சுற்றி வந்தவன் , கருடாழ்வாருடன் கோவிந்தம் பாடியவன் வாழ்வில் வசந்தம் வீசியதே இந்த சனிக்கிழமைகளில்தான். அந்தப்படங்கள் அவன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றபோகின்றன என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை. அந்த புதுவசந்தம் தென்கிழக்கு சீமையிலிருந்து சீறிக்கொண்டு வந்தது ராஜூ வடிவத்தில்..!


நண்பன் ராஜுதான் அதை முதன் முதலில் அவனிடமும் மற்ற நண்பர்களிடமும் சொன்னான். யாருமே நம்பவில்லை.


‘அடப்போடா சன்டிவில அப்படிலாம் போடமாட்டாங்க’.


‘நிஜமா போடறாங்கடா , ஆனா சன்ல இல்ல சூர்யால! அதுவும் ஷகிலா நடிச்ச படமேதான்’.


‘நான் போன வாரம் பார்த்தேன்டா செம படம். செம பிட்டுடா. அய்யயோ நல்ல வேளை அப்பா தூங்கிட்டாரு. ஷகிலா மட்டுமில்ல ரேஷ்மா சிந்து மரியானு நிறைய பேரு.. ‘ வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினான்.. எனக்கும் கதற வேண்டும் போல இருந்தது. நான் அந்த படத்தை பார்த்துத் தொலைக்க வாய்க்கவில்லையே!.. அடுத்தடுத்த வாரங்களில் ராஜூவைப்போல மகேஷ்,சுரேஷ்,வசந்த்,அப்துல்லா,தமிழ்செல்வன்,கோகுல்.. மற்றும் பலர் படம் பார்த்த சுக மற்றும் சுய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போதெல்லாம் அவனுக்கு மட்டும் வயிறு எரியும்.


இருதயா தியேட்டரிலும் முருகனிலும் ஜிபியிலும் மட்டுமே திரையிடப்படும் காலைகாட்சி படங்கள் நம் வீட்டு டிவியிலேயே.. அதுவும் இலவசமாக. மீசை முளைக்காத அவனை ஒருநாளும் அந்த தியேட்டர்களுக்குள் அனுமதிப்பதில்லை. அனுமதித்தாலும் பத்துரூபாய் கொடுத்து படம் பார்க்கும் அளவுக்கு நிதிவசதி கிடையாது. ஸ்கூல் பையனுக்கு கிடைக்கும் இரண்டு ரூபாய் பஸ்ஸுக்கும் எப்போதாவது அடிக்கும் சிகரட்டுக்கும் தொலைந்து போகும் பேனாவுக்குமே சரியாய் போய்விடுகிறது.


நண்பர்களின் பீத்தல்களை கேட்டு கேட்டு பல வாரங்கள் முயன்றும் வீடு நிறைந்த காட்சிகளால் ஒரு நாளும் அந்த படத்திற்கான டிக்கட் கிடைக்கவே இல்லை. அந்த நாளும் வாராதோ என்ற அவன் காத்திருப்பு ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வீங்கி குபீரென வெடித்துவிடுமோ என்று அஞ்சினான். இன்னும் சில நாட்கள் போயிருந்தால் அது வெடித்து சிதறியிருக்கலாம். நல்ல வேளையாக யாரோ அவனுக்கு நெருக்கமான உறவினருக்கு திருமணம். வாழ்க மணமக்கள். வீட்டிலிருந்தே ஆசிர்வதித்தான். வீட்டில் அனைவரும் ஊருக்கு. சனியும் வந்தது.


யாருமில்லா வீட்டில் தனிமையில் சத்தம் குறைத்து போர்வையால் முழுக்க போர்த்தியபடி சூர்யா டிவியை ரிமோட்டுவதில்தான் என்னே ஆனந்தம். கம்ப ரசத்தை சிக்கன் 65யோடு தின்பது போல! அப்போது காம்பவுன்ட் வீட்டின் வராண்டாவில் ஒரு கொலுசு சப்தம். ஜல் ஜல்தான். கதவை யாரோ தட்டுவதைப்போலொரு பயம். டொக் டொக்தான்.
லேசான நடுக்கம் உடலெங்கும் இருந்தாலும்... பயம் பயம்தான். மணி பதினொன்னரை. குறுந்தாடி வைத்த கிழவர் ஒருவரும் அருகில் கும்மென்றிருந்த இளம்பெண்ணும் மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தனர். நேரம் இப்போது பதினொன்றரையை தாண்டி இருந்தது. மற்ற சேனல்களுக்கு செல்ல மனமில்லை. விடாப்பிடியாக அந்த கிழவனை பார்த்து வேண்டி இருந்தது. சகித்துக்கொண்டு பார்த்தான். எதிரொலி நிகழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அல்லது புதிரா புனிதமா மலையாள ரீமேக்காக இருக்கலாம். ஒரு எழவும் விளங்கவில்லை. அந்த குறுந்தாடி கிழவனின் அருகிலிருந்த பெண் கடிதம் ஒன்றை படிக்க கிழவர் விளக்கினார். அவ்வப்போது கிழவரின் நமுட்டு சிரிப்பு. சிரிக்கும் போதெல்லாம் அந்த இளம்பெண்ணின் உதட்டு கடிப்பு இலவச இணைப்பு.


ஒவ்வொரு கடிதமாக படிக்க அதற்கு இந்த கிழவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அவன்.. கிழவர் வாயை பார்த்துக்கொண்டிருந்தான். அவர் பேச பேச தூக்கம் கண்களை சுழற்ற ஆரம்பித்திருந்தது.


அய்ய்யோ தூங்கிட்டா இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா. வராது வந்த மாமணியாச்சே ஷகிலா!. அதுவும் இலவசமாக. விடுவானா.. அவசரமாக ஓடினான். பாத்ரூமுக்கு! தண்ணீரால் கண்களை கழுவிக்கொண்டு மீண்டும் கையில் ரிமோட்டை பிடித்தபடி போர்வையால் உடலை மூடி..


பிட்டுப்புத்தகங்கள் படிப்பதைக் காட்டிலும் இது கடினமாக இருந்தது. பயம் வேறு. ஓலியை ம்யூட்டில் வைத்தாலும் அவர்கள் பேசுவது கேட்பது போலவே இருந்தது. காம்பவுன்ட் வீட்டுக்குள் ஒண்டிக்குடித்தனமிருப்பவன் பேசுவது அவனுடைய பக்கத்துவீட்டுக்காரனுக்கு கேட்காமலிருக்காது. குறுந்தாடிக்கிழவன் தொடர்ந்து பேசினான். அவன் தாடியை பிச்சு பக்கத்தில் அமர்ந்திருக்கும் இளம்பெண்ணுக்கு ஒட்டவைக்க வேண்டும். நேரம் இப்போது 12.00


ஒருவழியாக அந்த புரோகிராம் முடிந்து தொலைத்தது. உடனடியாக படம் தொடங்கியது. டிஞ்சாக் டிஞ்சாக் இசைக்கு பின்னால் பெயர்கள் ஓடத்தொடங்கின. நிறைய பேர் நடித்திருப்பார்கள் போல.. நிறைய பேர் வந்துகொண்டே.... இருந்தது. ஒருவழியாக டைரக்சன் ஏ.டி.ஜோய் என்று முடித்ததும்தான் உயிர் வந்தது.


படம் தொடங்கியதுமே ஷகிலாவின் கவர்ச்சி தாண்டவம் தொடங்கிவிடும் என கற்பனை செய்தவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. விநாயகர் படத்து பூஜை போடுவதோடு தொடங்கியது படம். தொடர்ச்சியாக நிறைய சாமி படங்கள் காட்டினார்கள்.. பெரியார் வாழ்க என்று நினைத்துக்கொண்டான். பகுத்தறிவாளனாக மாறவேண்டும் போல் இருந்தது.


ஊரில் பெரிய பணக்காரனான அவனுக்கு ஒரு இளம் மனைவி. இதுதான் படத்தின் கதை! படம் தொடங்கி இரண்டாவது நிமிடத்திலேயே தெரிந்துவிட்டது. படத்தில் பிட்டுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதும் புரிந்தது. கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் யார் யாரோ பேசிக்கொண்டேயிருந்தனர். பிராக்டிகல் எக்சாமில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதைப் போல் இருந்தது. சேட்டா எத்தர மணிக்கு பிட்டு போடும் என்று சூர்யாடிவிக்கு போன் போட்டு கேட்கவேண்டும் போல இருந்தது. ஷகிலாவும் வரவில்லை. அது ஷகிலா நடிக்காத பிட்டுபடமாக இருக்க வேண்டும் என மனதை தேற்றிக்கொண்டான்.
படம் தொடங்கி ஒருமணிநேரம் தாண்டியிருந்தது. ம்யூட்டில் வைத்துப்பார்த்தாலும் மலையாளப்படமென்றாலும் கதை கொஞ்சம் போல புரிந்தது. கதைக்காகவே காவாலித்தனமாக மிட்நைட்டில் இந்த படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று அலுத்துக்கொண்டான். அந்த இளம் மனைவிக்கு நிறைய காதலர்கள் இருந்தனர். சிலரோடு அவ்வப்போது முழுதாக சேலைக்கட்டி டூயட் பாடினாள். படத்தில் இரவு காட்சிகள் வரும்போதெல்லாம் ஆர்வமாக இருக்கும்.. ஆனால் சப்பென்று முடிந்துவிடும். படம் தொடங்கி ஒன்றரை மணிநேரம் ஆகியிருந்தது. ஒருவழியாக இளம்மனைவியின் காதலனும் இளம் மனைவியும் வீட்டில் தனியாக இருக்க.. படுக்கையறைக்கு சென்று அவள் சேலையை இவன் இழுக்க.. எனக்கு சூடேறிக்கொண்டிருந்தது. அவள் அவனைப் விரகத்தோடு பார்க்க அவள் அவனைப் பார்க்க அவன் டிவியைப்பார்த்துக்கொண்டிருந்தான்.


இருவரும் கட்டியணைக்க.. அடுத்து என்ன என்ன? ஆர்வமாக காத்திருக்க எங்கிருந்தோ வந்து தொலைத்தான் ஹீரோ.. ஆவேசமாக வந்தவன் தன் பாக்கட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து டுமீல் டுமீல் என்று சுட இளம் மனைவியும் காதலனும் அவுட்! மலையாளத்தில் ஏதோ வாசகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி சிகப்பு கலரில் ஓட.. கட் பண்ணினால் மோகன்லால் சோகமாக மோட்டுவளையை பார்த்தபடிப் என்ட பொண்ணு மோனே என்று பாடிக்கொண்டிருந்தார்..


ஆண்டுகள் உருண்டோடின. வசந்த் டிவியில் நள்ளிரவு 12 மணிக்கு பிட்டுப்படம் ஒளிபரப்புவதாக ராஜூ இமெயிலினான். அவன் உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் மேனேஜர். இன்னுமா இவன் ஷகிலா படம் பார்க்கிறான் என்று நினைத்தான். அவனை அசிங்கமாக நினைத்தாலும் பல வருஷங்களுக்கு பின்னும் அவன் மனதுக்குள் பொத்தி வைத்திருந்த அழியாத அந்த மத்தாப்பூ பூத்திருச்சு.


திருமணமாகி குழந்தைகுட்டிகள் என்று செட்டிலானாலும் இலவச பிட்டுக்கு இணையாகுமா!. இப்போதும் குடும்பம் மனைவி குழந்தைகள் என எப்போதும் போல டிவிமுன் அரங்குநிறைந்த காட்சிகள்தான். இப்போதும் அவர்கள் ஊருக்கு போக காத்திருந்தான். ஆர்வத்தோடு வசந்த்டிவியில் போட இருக்கும் பிட்டுக்காக காத்திருந்தான்.. காத்திருந்தான்.. இந்த முறை தமிழில் பாலியல் மருத்துவர் அரைமணிநேரம் ரம்பத்துக்கொண்டிருந்தார். அதே சுய இன்பம், விந்து முந்துதல் பிரச்சனைகள். ச்சே நைட்டான நச்சு நச்சுனு..


அதற்கு பிறகு படம் தொடங்கியது. தமிழ் படம்.. பெயர்கள் தமிழிலேயே வந்தன. படம் தொடங்கியது. தொடக்க காட்சியில் விநாயகர் படத்துக்கு பூஜை செய்தனர்.. அடுத்த காட்சியில் அதே கிழவன்.. இவன் கோபமாக தூங்கினான்.

12 May 2010

நமது தோல்வியை நாளை சரித்திரம் சொல்லும்!





இந்திய கிரிக்கெட் அணிக்கு தீவு நாடுகள் என்றாலே ராசியில்லை போலிருக்கு. போன முறை இங்கிலாந்தில் வாங்கியதே இன்னும் தீரவில்லை அதற்குள் மேற்கிந்திய தீவுகளிலும் அதையே வாங்கிக்கொண்டு அவசரமாக திரும்பியிருக்கிறார்கள். இலங்கையுடனான கடைசி சூப்பர் 8 மேட்சில்.. சொல்லித்தீராது அவர்கள் வாங்கிக்கட்டிக்கொண்டது... என்னவென்று அதிகம் யோசிக்கவேண்டாம் அதே! அதே! நொறுங்கிய செம்ம அடி வாங்கின சொம்புதான்!.


காரணங்களே இல்லாமல் வருவது வெற்றி. காரணங்கள் மட்டுமல்லாமல் பக்கத்துவீட்டுக்காரன் மனைவியின் பழிபாவங்களும் இலவச இணைப்பாக கிடைப்பது தோல்வி. இந்த முறை மரண அடி தோனியின் சிஷ்ய்ய கோடி கேடிகளுக்கு! தோனியும் இன்னபிற இந்திய கிரிக்கெட் பெரிசுகளும் எத்தனை சாக்குபோக்கு சொன்னாலும் இந்த முறை செல்லாது செல்லாதுதான். தோப்புகரணம் போட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாத கடும்தோல்வி. மூன்று வருடங்களுக்கு முன்னாலே தலையில் கிரீடத்தோடு நான்தான்டா சிங்கம் டி20 தங்கம் என்று ஆடிக்கொண்டிருந்ததெல்லாம் பழங்கதை. எந்த நேரத்தில் உலகமகா பிரபலமான ஐபிஎல் தொடங்கியதோ அன்றைக்கே பிடித்துவிட்டது இந்தியா அணிக்கு சனி. (ஏழரை சனியாகவும் இருக்கலாம்.. ). இது இந்திய கிரிக்கெட் போர்டும் நம் வீரர்களும் இந்திய அணியின் டி20 எதிர்காலம் குறித்து ரூம் போட்டு யோசிக்க வேண்டிய தருணம் இது. (குறைந்த பட்சம் ஹால் போட்டாவது கூட்டாக யோசிக்கலாம்)


ஐபிஎல்லில் சூரப்புலிகளாய் விளையாடிய 11 பேர் கொண்ட அணிதானே உலக கோப்பையில் ஆடியது. இரண்டு மாத கடுமையான போட்டிகளை எதிர்கொண்டு மனதளவில் உலக கோப்பைக்கு தயாராகித்தானே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றது. தயாரிப்பெல்லாம் மல்லையாவின் பார்ட்டிகளிலும் மந்திராபேடியுடனான பேட்டிகளுடனும் சரியாகத்தானே போய்க்கொண்டிருந்தது. எங்கே நடந்தது தவறு?


அரைவெந்த ஆசிஸ் நெக்ராவும் , கம்பீரும் இன்ன பிற வீரர்களும் ஆடியதைப் பார்த்தால் கபில்தேவையும் வெங்கடபதி ராஜூவையும் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளலாம் போலிருந்தது. உலக கோப்பைக்கு முன்னால் இன்சுரியாம். அவசர சிகிச்சை பிரிவிலிருந்து ஓடிவந்து விளையாடுவதைப்போல விளையாடுகிறார் காம்பீர். ரவிசாஸ்திரி கம்பீர் ரன் எடுக்க ஓடுவதைப் பார்த்து ஒரே வார்த்தையில் சொன்னார் “PATHETIC”. டுவிட்டரில் ஒரு நண்பரோ கம்பீரின் அழகு நடை சங்கர்தயாள்சர்மாவை நினைவூட்டுகிறதாம். ஒருவேளை ராமரில்லாத சீதையைப்போல சேவாக்கில்லாத கம்பீர் பிரிவில் வாடியிருக்கலாம். சேவாக்கை அணியிலிருந்து விரட்டிய அந்த தீய சக்தி கம்பீரையும் விரட்டியிருக்கலாம். அரைவெந்த ஆபாயிலைப் போலாடினார்.


இந்திய அணியின் பலவீனம் போன உலக கோப்பையிலேயே அம்பலமானது அனைவருக்கும் தெரியும். நாலு பவுன்சர்களைப் போட்டால் போதும் , கல்லால் அடிபட்ட நாயைப்போல வீல்வீல் என கத்திக்கொண்டு பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடிவிடுவார்கள். இது சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்கு கூட தெரிந்திருந்தது. ஏனோ புடலங்காய் இந்திய அணி வீரர்களுக்கோ இறக்குமதி பயிற்றுனருக்கோ தெரியவில்லை!.


ஒரு வருடமாக கடுமையான பல ஆணிகளை புடுங்கிங்கொண்டிருந்த இந்திய அணியினர் இந்த உலக கோப்பையிலும் அதையே ரிப்பீட்டினர். பங்களாதேஷுடனும் , இலங்கை அணியுடனும் ஓயாமல் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே ஆடிக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது ஐபிஎல்லில் ஏலமாக கிடைத்த தொகையை எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். உலக கோப்பைக்கு போய் சொம்பு வாங்கி வரவேண்டுமா!


இந்திய அணியின் பந்துவீச்சு அதைவிட மட்டம். இந்த லட்சணத்தில் வெறும் மூன்று பவுலர்களோடு களமிறங்கும் சதுரங்க விளையாட்டெல்லாம் தோனிக்கு எதற்கு. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இடத்திலும் நாங்கள் ஸ்பின்னில் கிங்கு அதனால் அதைவைத்தே ஊதுவோம் சங்கு என்று பேசுவதெல்லாம் சுத்த ஹம்பக் அல்லாமல் வேறில்லை. உமேஷ் யாதவ் 140கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர், வினய்குமார் ஓரளவு பேட்டு பந்து இரண்டு பண்ணுபவர், இருவரையும் விட்டுவிட்டு ஜடேஜாவைப்போட்டு தொங்கிக்கொண்டிருந்ததெல்லாம் சுத்த ராமாயணத்தனம்.


யுசுப் பதான் ஐபிஎல் தவிர்த்து வேறு எந்த மாதிரியான போட்டிகளிலும் (ஒருநாள் போட்டிகளிலும்) நன்றாக விளையாட மாட்டேன் என்று தம்பி மேல் ஆணையிட்டிருக்கிறார் போல! சொதப்பல் மன்னர். ஐபிஎல் ஆறுதல் ரெய்னாவும் ரோகித் சர்மாவும் மட்டுமே.. என்ன செய்ய ஒரு விரலை வைத்துக்கொண்டு விரல் சூப்பலாம் அல்லது கேரம்போர்ட் ஆடலாம். வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான போட்டிகளில் இந்திய அணியின் பீல்டிங் முழுமையாக வெட்டவெளிச்சமானது. ஐபிஎல் தரத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தால் எப்படி பாஸு , ஐபிஎல்லில் கார்பன் கமால் கேட்ச் பிடிக்க டேவிட் ஹஸ்ஸியும் , டர்க் நான்ஸும் இன்னபிற பீட்டர்களும் இருந்தனர்.. இது இந்திய அணியல்லவா!


2007ல் உலக கோப்பை போட்டிகளில் வடை வாங்கின இந்திய அணியிலிருந்த பழங்காலத்து சொம்புகளை களை எடுத்து , இளம் வீரர்களால் அணிக்கு புது ரத்தம் பாய்ச்சி புறப்பட்டதோர் புதிய அணி! தோனியின் தலைமையிலே (ம்ம் மூச்சு முட்டுது). அந்த அணியிலிருந்து வீரர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி இருநத்தோ இல்லையோ? அணியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்கிற முனைப்பாவது இருந்தது. இந்த முறை மே.இ.தீவுகளுக்கு சென்ற இந்திய அணியினரின் முகத்தை பார்த்தீர்களா? எருமை சாணியை மூஞ்சியில் அப்பினது போல! கொஞ்சம் கூட வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியோ , ஆர்வமோ, முனைப்போ இன்னபிறவோ இல்லாமல் நானும் போறேன் கச்சேரிக்கு என்று தோளில் துண்டைப்போட்டுக்கொண்டு , வாயில் வழியும் வெற்றிலை எச்சிலை துடைத்தபடி கிளம்பிவிட்டது போலிருந்தது. ‘ஒருவேளை சச்சினிருந்திருந்தால்’ என்று வாய் திறக்க எத்தனிக்கும் முன் ஒரே ஒரு கருத்து அவர் இதுவரை நிறைய உலக கோப்பை ஆடிவிட்டார்.


தோனி சொல்கிறார் ‘’ "At the end of the day we are on the losing side, nothing much can be done about it because this is the best 15 [players] you can get in India when it comes to T20. At the end of the day if you are outplayed there is nothing much you can do about it."


மேலுள்ள தோனியின் கருத்தைப்பற்றி நான் ஏதும் சொல்வதற்கில்லை. அது உங்களுக்கானது.


பார்படோஸின் மேலேழும்பும் அதிரடி பவுன்சர்களை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியதை தோனியும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் சாக்கு , இந்தியாவில் பவுன்சாகும் பிட்ச் இல்லையாம். அதுவுமில்லாமல் டி20 போட்டிகளில் பவுன்சராக இருந்தாலும் அடித்தாட வேண்டியிருக்கிறதாம். இந்தியாவில் பவுன்சாகும் பிட்ச்களை தயாரிக்க பலகோடிகள் செலவாகும் போலிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நாங்கள் ஸ்பின்னுன்னா பொழந்துருவோம் பாஸ்ட்டுன்னா கஷ்டம்தான் பஜனையையே பாடிக்கொண்டிருக்க போகிறார்களோ தெரியவில்லை.


ஒட்டுமொத்த இந்திய அணியும் சோர்வாக இருக்கிறது. மேட்ச் முடிந்தால் பார்ட்டி, பார்ட்டி முடிந்தால் மேட்ச் என மாறி மாறி காயடிக்கப்பட்டவர்களாக ஆகியிருக்கின்றனர். நடுவில் பயிற்சியும் ஓய்வும் அவசியம் என்பதை உணரவேண்டும்.


இன்னும் ஒன்பது மாதங்கள்தான் இருக்கிறது தோனிக்கும் அவருடைய படையினருக்கும். உள்ளூரில் நடக்க இருக்கும் உலக கோப்பையிலும் இதே சொம்பு இதே பஜனையே பாடினால்.. ஒன்றும் செய்ய முடியாது.

அதற்குள் பலவீனங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து மீள வேண்டும். ஒய்வெடுக்க வேண்டும். புதிய திறமைகளை கண்டெடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேல் மிட்சல் ஜான்சனைப்போல தாய்நாட்டு அணிக்காக ஐபிஎல் மாதிரியான கேளிக்கை போட்டிகளை புறக்கணிக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு தோல்வி பழக்கமான வியாதி ஆகிவிடும் வாய்ப்பிருக்கு!


மற்றபடி சதுரங்கத்தில் டாபலோவை விரட்டி விரட்டி ஓடவிட்டு சாம்பியன் பட்டம் வென்ற எங்கள் விஸ்வநாதன் ஆனந்துக்கும் அஸ்லான்ஷா போட்டிகளில் அசத்தலாய் ஆடிவரும் இந்திய ஹாக்கி அணிக்கும் பெண்கள் டி20 உலக கோப்பையில் திறமையோடு ஆடிவரும் இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள். தோனிக்கு வருத்தங்கள்.

06 May 2010

வெட்டுப்புலி





ஒரு தீப்பெட்டி . அதன் அட்டையின் மேல் படம் . கட்டுமஸ்து இளைஞன் ஒருவன் கையில் வெட்டரிவாளோடு சிறுத்தையை எதிர்கொள்ளுகிறான். அது யாராக இருக்கும்? ஏன் சிறுத்தைய வெட்டணும்? ஏன் புலியோ சிங்கமோ இல்ல? ஒரு வேளை அது உண்மை சம்பவமோ? கேள்விகள் நம்மை எப்போதும புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்பவை. இந்தக்கேள்வியும் நம்மை காலச்சக்கரத்தில் ஏற்றிவைத்துக்கொண்டு காலத்தை திருகுகிறது. அது சின்னாரெட்டியென்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிஜமாகவே சிறுத்தையை வெட்டிய வீரன் என்றும் வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது. 

சின்னாரெட்டியின் கதைத்தேடலில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் இதே சென்னை.. காடுகளடர்ந்த சென்னை நகரம். இங்கே அரசியலும் சினிமாவும் இணைந்திராத , வெள்ளைக்காரன் காலத்து சென்னை.. சென்னைக்குடிநீருக்காக சிலபல கிராமங்களை காலி செய்து அவர்களை கொண்டே ஏரிகள் உருவாக்கிக்கொண்டிருந்த காலம்... ஜாதீயமும் , நிலபிரபுத்துவமும் ஒவ்வொருவருடைய மனதிலும் கொடிக்கட்டிப் பறந்த சென்னை. கூவத்தில் குளியல் போட முடிகிற சென்னை. காபி என்கிற வஸ்துவை முதன்முதலாக 'மாம்பலத்துல ஐயமாருங்க இப்பலாம் அததான் குடிக்கிறாங்களாம்.. நானும் குடிச்சேன் தித்திப்பா இருந்துச்சு' என்று பேசும் ஆச்சர்ய மனிதர்களின் காலம். சினிமா தியேட்டரை முதன்முதலாக பார்த்து என்ன ஒரே இரைச்சலா இருக்கு... உப்புசமா இருக்கு என்று வியக்கும் மனிதர்கள். சென்னையிலிருப்பவர் இன்று நின்று கொண்டிருக்குமிடம் எப்போதோ யாராவது விவசாயம் செய்து கொண்டிருந்த இடமாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு ஸ்டுடியோவில் கிராமத்து மைனர் சினிமாகனவுகளோடு நின்று கொண்டிருக்கலாம்.


அரசியலில் சினிமாவின் தாக்கம் உருவாகத்தொடங்கிய காலகட்டத்திலிருந்து அழகிரி அரசியல்வரைக்குமான ஒரு நூற்றாண்டின் அரசியல் மாற்றங்களை அடிகோடிட்டு காட்டுகிறது வெட்டுபுலி. இங்கே பார்ப்பனீயத்திற்கெதிரான அரசியலின் வளர்ச்சியும் , திராவிட இயக்கங்களின் வளர்ச்சியும் அதையொட்டி நிகழ்ந்த சினிமா அரசியலும் என நூறாண்டு கால வரலாற்றிலின் சில தருணங்களை அருகிலிருந்து தரிசிக்கும் ஆர்வம் யாருக்குத்தான் இருக்காது!.


தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் நமக்கு அந்த அனுபவத்தை ஓரளவுக்கேனும் திருப்தியாய் தருகிறது. ஆக்சன் படங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் குதிரை வேக சேஸிங்கில் துவங்குகிறது லட்சுமண ரெட்டியின் கதை. நூல் பிடித்தது போல காதல், காமம், காமெடி என மசாலாவாக பயணிக்கும் நாவலில் திடீரென எம்.ஜி.ஆர், அறிமுக நாயகனாக வருகிறார். பெரியார் ஒரு அத்தியாயம் முழுதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார். யாரோ ராம்ச்சந்தர்ன்னு ஒரு பையன் நல்லா நடிக்கிறான்பா அவன ஹீரோவா போடலாமா என்று ஒரு அறிமுக புரொடியுசர் பேசுகிறார். அந்தந்த காலத்தின் அரசியல் கதையில் நிகழும் சம்பவங்களினூடகவும் வசனங்களின் மூலமாகவும் நமக்கு சொல்லப்படுகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய மக்களின் அரசியலும் , அதற்கு பிறகான அரசியல் நிலைப்பாடும் மாற்றங்களும், இங்கே திராவிட இயக்கங்கள் வித்திட்ட சமூகப்புரட்சியின் பிண்ணனியும் கதையின் வேராக ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. அரசியல் மற்றும் சினிமாவுக்குமான தமிழக உறவை அரசியல் வரலாறோடு சினிமாவின் வரலாறையும் சொல்ல முனைகிறார் நூலின் ஆசிரியர். ஆனால் இரண்டுமே மேலோட்டமாக ஆங்காங்கே அறிமுகங்களாக அடங்கிவிடுவது.


தமிழகத்தின் கடைசி நூறு வருட வரலாற்றில் தவிர்க்க இயலாதவை திராவிட கட்சிகள். அந்த இயக்கங்களாலும் அவற்றால் விளைந்த மாற்றங்களாலும் குடும்பத்தை இழந்து அழிந்து போனவர்கள் , வளர்ந்தவர்கள், அதன் வளர்ச்சியோடு தள்ளிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் என மூன்று வகையினரையும் பல்வேறு பாத்திரங்களின் வழியே சொல்ல முனைகிறார் நூலின் ஆசிரியர். அதில் ஒரளவு வெற்றியும் பெறுகிறார். திராவிட சித்தாந்தங்களை வாசல் வரைக்கும் வைத்து கொள்ளுபவர், அதை பற்றி எப்போதாவது மனைவியோடு பேசுபவர், படுக்கையறை வரைக்கும் திராவிடம் பேசி நாத்திகம் பேசி நாசமாகினவர் என மூன்று கிளை கதைகள் உண்டு. இங்கே பார்ப்பனீய எதிர்ப்பு இன்றளவும் தீராமல் புகைந்து கொண்டிருக்கிற அல்லது மேடைகளில் பற்றி எரிகிற ஒன்று. அதன் ஆணிவேரையும் காலப்போக்கில் பார்ப்பன எதிர்ப்பின் தமிழக அரசியல் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து நீர்த்துப்போனது, பெரியாரின் திராவிட அரசியலுக்கும், அண்ணாவின் அரசியலுக்குமான வித்தியாசங்கள், ஏன் ஜஸ்டிஸ் கட்சி திகவானது, ஏன் அது திமுகவாய் பிரிந்தது, மாதிரியான அரசியல் சதுரங்க விளையாட்டுக்களை இங்கே வாய்வழியாக சொல்லப்படும் கதைகளை தொகுத்தும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்து நாவல் முழுக்க சம்பவங்களாக்கியிருக்கிறார் தமிழ்மகன். நம்பகத்தன்மை குறித்து கவலைப்படுகிறவர்கள் கவலைப்படுவார்கள். வரலாற்றின் நம்பகத்தன்மை அதைப்படிப்பவர்களின் மனதிலே இருப்பதாய் எண்ணுகிறேன்.


நாவல் முழுக்க வரலாற்றில் நமக்குத்தெரிந்த சுவாரஸ்யமான பக்கங்கள் கதையினூடாக தொகுக்கப்பட்டுள்ளதால் , வேர்க்கதை தொய்வடையும் போதெல்லாம் சம்பவங்கள் வேகம் கூட்டுகின்றன.


வரலாற்று உண்மைகள் அவரவர்க்கு ஏற்றாற் போல விவரிக்கப்படுகின்றன. இங்கு டிவியின் வருகைக்குப் பின் வரலாறு கூட முன்தீர்மானத்துடன் சொல்லப்பட்டன. அதற்கு முன் பத்திரிக்கைகள் யார் கையில் இருக்கிறதோ அவர்களுடைய பார்வையில் வரலாறு திரிந்தது. அப்படி திரிந்ததும் புனைந்ததுமான தமிழகத்தின் சமகால வரலாற்றை திராவிடத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் ஊடாக நடுநிலையோடு சொல்ல முயன்றிருக்கிறார் நூலின் ஆசிரியர்.


இந்நாவலில் காலம் ஒவ்வொரு பத்தாண்டும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வேகமெடுக்கிறது. அதைப்போலவே முப்பதுகள் பொறுமையாகவும் 90கள் அதீத வேகத்திலும் பயணிக்கிறது. சென்னையை ஓரளவுக்கேணும் அறிமுகமிருந்தால் கதையோடு நாமும் ஜாலி சவாரி செய்ய முடியும் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் கையில் மேப்போடு உட்கார்ந்து கொண்டும் படிக்கலாம், புது அனுபவமாக இருக்கக்கூடும்.


சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை படித்துவிட்டு பல நாட்கள் நினைத்திருக்கிறேன். அந்த கதை நிகழும் ஊரைப்போய் ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று! அந்த மனிதர்களை சந்திக்க வேண்டுமென்று! அவர்களுடைய குரலில் அந்த மொழியை உணரவேண்டுமென்று! ஏனோ அதற்கான சந்தர்ப்பங்கள் இதுவரை வாய்க்கவில்லை. அதே மாதிரியான உணர்வை வெட்டுப்புலி நாவலும் எனக்குத் தருகிறது. ஜெகனாதபுரம் , ரங்காவரம் , பூண்டி, ஆந்திரா செல்லும் சாலை , தொடர்ந்து சென்னையில் சில பகுதிகள் என எனக்கு மிக அருகிலேயே இருக்கிறது. பார்க்க வேண்டும்.


புத்தகத்தின் பல இடங்களில் எழுத்துப்பிழை. தாறுமாறாக!. மற்றபடி இது தீவிர இலக்கிய நூலாவென்று நிர்ணயிக்க முடியவில்லை. வரலாற்றின் சுவாரஸ்யத்திற்கு மேல் அது குறித்த தேடலை உண்டாக்குகிறது. நிச்சயம் என்னைப் போன்ற ஜனரஞ்சக நாவல் வாசிப்பாளனுக்கு முழுமையான திருப்தி அளிக்கிறது. அரசியல் பிடித்தவர்களுக்கும் சினிமா பிடித்தவர்களுக்கும் சென்னை பிடித்தவர்களுக்கும் பிடிக்கும்!


புத்தகம்: வெட்டுப்புலி
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.
விலை: ரூபாய் 220/-
ஆன்லைனில் வாங்க -  http://uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=262

02 May 2010

சுறா - இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா?









சில பேரு எடுத்து சொன்னா திருந்திருவாங்க!. சிலருக்கு பட்டாதான் புரியும். சில பேர் இருக்காங்க எருமைத்தோல் மாதிரி செறுப்பால அடிச்சு காரித்துப்பினாலும் திருந்தவே மாட்டாங்க! – யாருக்கு இந்த பஞ்ச் டயலாக்! விடை கடைசியில்


கதர்ர்றா!


முதலில் கதற கதற ஒரு கதை சொல்கிறேன்.
ஒரு ஊரில் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் ஏழைகள் இருந்தனர். அவர்கள் குடிசையில் இருந்தனர். ஏழைகளில் ஒரு ஏழைப்பங்களான் இருந்தான். மக்களுக்கு கக்கூஸ் வந்தாலும் அவன் துணை வேண்டும். அதே ஊரின் ஊரில் பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஹோட்டல் கட்ட இடம் கிடைக்காமல் குடிசைகளை அகற்ற வேண்டியிருந்தது. குடிசைக்கு தீ வைத்தான். நடுவில் காதலியோடு நாலு பாட்டு , அம்மாவோடு சென்டிமென்ட். மக்கள் கதறல் சோகம். ஏ.பங்களான் கோபப்பட்டான். வஞ்சகமாக பணக்காரனை ஏமாற்றி பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு கொடுத்தான். பின் மகிழ்ச்சியாக காதலியோடு டூயட் பாடினான். சுபம்.


பார்ர்றா!


தமிழ்சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த முற்போக்கு சிந்தனை நிரம்பிய கதை சுறா படத்தில் காணக்கிடைக்கிறது. விஜய்யின் மேன்மையான ஹீரோயிச நடிப்பும் அவர் பேசும் பஞ்ச் வசனங்களும் இதுவரை தமிழ்கூறும் சினிமா உலகம் கண்டிராதது. இது விஜயின் ஐம்பதாவது படமாம். 49 படங்களில் நடித்ததை விட இதில் பல மடங்கு கடுமையாக நடித்திருக்கிறார். பார்ப்பவர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். விஜய் பஞ்ச் டயலாக் பேசுகிறார் . பேசுகிறார்.. பேசிக்கொண்டே இருக்கிறார்.. விட்டால் ஸ்கரீனிலிருந்து இறங்கி வந்து மடியில் அமர்ந்து பேசுவார் போலிருக்கு! பேசி முடித்ததும் கையை பின்புறம் கட்டிக்கொண்டு சுலோ மோஷனில் நடக்க.. நமக்கு இனிமா கொடுக்காமலேயே இனிமையான லூஸ் மோசன்!. டாக்டர் விஜயல்லவா! இந்த பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பார்ர்ரேன்.


வுட்ட்ட்றா!


படத்தில் இனிமையான காதல் காட்சிகள் உண்டு. தமன்னா தற்கொலைக்கு முயல்வதும் , அதை காமெடி என்ற பெயரில் விஜயும் வடிவேலுவும் தடுப்பதும்.. நமக்கே தற்கொலை செய்து செத்து செத்து விளையாட வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது. அதிலும் கண் தெரியாதவர்களை ரோட் கிராஸ் பண்ண வைக்கும் விஜயைப் பார்த்து அப்படியே காதலில் விழுந்து இடுப்பில் நிக்காத பேண்டோடு தமன்னா ஆடுகிற ஆட்டம் உங்க வீட்டு ஆட்டமல்ல எங்க வீட்டு ஆட்டமல்ல,.. உலக ஆட்டம். படம் பார்க்கும் நமக்கே நாம ஒரு வேளை பைத்தியகார கூமுட்டையோ என்று தோன்று கிறது. அதே மாதிரி கூட ஆடும் பெண்கள் கறுப்பு ஜட்டியோடு ஆடுகின்றனர். லோ பட்ஜட் படம் போலிருக்கிறது. நடன சீகாமணிகளின் நடனம் மானாட மயிலாட ஜோடி நம்பர் ஒன்னு ராஜாயாரு ராணி ஆறுக்கு இணையாக இருக்கிறது. ஆனால் இதை பார்க்க காசு நிறைய செலவாகும்! காசுறா காசு!


அட்ட்ட்றா!


சுத்தி சுத்தி சண்டை போட்டாலும் உருட்டு கட்டையால் பொடணியில் அடித்தால் எப்பேர்பட்ட சூப்பர் மேனும் மயங்கிவிடுவான் என்பது உலக நியதி. விஜய் மண்டையில் அடித்து படுக்க வைத்து அவருக்கு ஆப்படிக்கின்றனர். இடைவேளை. மகதீரா வில்லன் மண்டைக்கு ரெண்டு சைடில் வெள்ளை சாயம் அடித்து வயதானவராக வந்தாலும் இளமையாக அழகாக இருக்கிறார். பாவம் அவர் என்ன செய்வாரு விஜய் பஞ்ச் பேச அவர் ஈ போகுமளவுக்கு பப்பரப்பாவென திறந்து கொண்டு நிற்கிறார் வாயை. விஜய் போனபின் ஏய்.. ஓய்.. என கதறுகிறார்.. வடிவேலு படம் முழுக்க வந்தாலும் வெண்ணிற ஆடையார் ஒரே காட்சியில் மொத்தமாக அள்ளுகிறார். மற்றபடி வடிவேலுவுக்கு வயசாகிருச்சு! இசை மணிசொர்மா.. பாட்டெல்லாம் படுமட்டம். ஓப்பனிங் நல்லாதான் இருக்கு பினிசிங்தான் ம்ஹூம். படத்தின் இயக்குனர் எஸ்.பி. ராஜ் குமார் விஜய ஏமாத்தினாரா இல்ல இவரு அவர ஏமாத்தினாரானு தெரில..


பஞ்சர்ரா!


எப்படி நடித்தாலும் படம் ஹிட்டாகிடும் என்கிற ஆணவமும் அகம்பாவமும் அதிகமா இருந்தா எப்பேர்பட்ட சூப்பர் ஸ்டார் படமும் படுத்துரும் என்பது குசேலபடிப்பினை. இதுவும் அதே கேட்டகிரியில் அடங்கும். மக்களை மாக்கான்களாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் சன்பிக்சர்ஸ் மற்றும் சங்கிலிமுருகன் கூட்டணியினர்.. ஒருபக்கம் யதார்த்த வெறிபிடித்த கூட்டமொன்று ரத்தம் வழிய வழிய படமெடுத்து உயிரை வாங்குது.. இன்னொரு பக்கம் இப்படி மசாலா படமெடுக்கிறேனு கி.மு காலத்து கதையெல்லாம் எடுத்து பஞ்ச் பேசி ரத்தம் கக்க வைக்குது.. இந்த அநியாயத்த தட்டிக்கேக்க யாருமே இல்லையா!


சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ, விஜய டீயாரின் வீராசாமி உங்களுக்கு பிடிக்குமா.. இந்த படமும் உங்களுக்கு மிகமிக பிடிக்கும்.. முழுமையான காமெடி கலாட்டா!. எனக்கு பிடித்திருந்தது... ரசித்து சிரித்தேன்.


சுர்ர்ர்றா!


முதலில் சொன்ன பஞ்ச் என்னோப்போல படம் பார்த்தவர்களுக்கும் , விஜய்க்கும் சன்பிக்சர்ஸ்க்கும் சமர்ப்பணம்!



சுறா - சம்பவாமி யுகே யுகே!