Pages

17 February 2012

சென்னைக்கு வெண்ணை... கோவைக்கு சுண்ணாம்பு!



கோவையில் எங்கு பார்த்தாலும் ஒரே சோகமயம். மக்கள் பார்ப்பவரிடமெல்லாம் புலம்புகிறார்கள். யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம் கொண்டவர்கள் கோவை மக்கள். அவர்களையே கதறவிட்டிருக்கிறார் மாண்புமிகு கருணையுள்ளம் கொண்ட அம்மா! எட்டு மணிநேர மின்வெட்டு பலரையும் தற்கொலையை பற்றியெல்லாம் பேசவைத்திருக்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிற தொழில் நகரமான கோவையில் ஒரேவாரத்தில் பல ஆயிரம் கோடிரூபாய் அளவுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியிருக்கிறது இந்த தொடர் மின்வெட்டு! (கொடீசியா தலைவர் கந்தசாமி சொன்ன தகவல்படி முதல் மூன்றுநாளில் 1550கோடிக்கு நஷ்டமாம்! பத்துநாட்களில் எவ்வளவு ஆகியிருக்கும் தெரியவில்லை)

சென்ற ஆட்சியில் நான்குமணிநேர மின்வெட்டுக்கு எதிராக பொங்கியெழுந்த கோவை மக்கள், இப்போது அதைக்கூட சகித்துக்கொள்ள தயாராகிவிட்டனர். எங்களுக்கு முன்னாடிமாதிரியே நாலுமண்ணேரம் கட்பண்ணிகிட்டா கூட பரவால்ல! இந்த மின்வெட்டை தாங்கமுடியல என கண்ணீர் வடிக்கின்றனர்.

2011 தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்கு வங்கியை மடைமாற்றி விட்ட பெருமை மின்வெட்டுக்கு மட்டுமேயுண்டு. ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டுக்கு குட்பை சொல்வேன்! இனி 24மணிநேர தடையில்லா மின்சாரம்! கரண்ட்டு குஜராத்துலருந்து வருது.. ஜப்பான்லருந்து வருது.. வருது வருது விலகு விலகு என்றெல்லாம் பீலா விட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜெவின் அரசு, நான்கு மணிநேரமாக இருந்த மின்வெட்டு நேரத்தை எட்டுமணிநேரமாக்கியிருக்கிறுக்கிருப்பதே எட்டுமாத அதிமுக ஆட்சியின் மகத்தான சாதனை!. கலைஞர் கொண்டுவந்த திட்டங்களிலேயே இந்த மின்வெட்டு திட்டத்தை மட்டும்தான் ஆளும் ஆரசு சிறப்பாக அதிக அக்கறையுடன் செயல்படுத்தி வருகிறது!

திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக அம்மா ஆதரவு மாவட்டமாக மாறிப்போயிருந்த கோவையை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது இந்த முட்டாள்த்தனமான மின்வெட்டு. கோவையின் வீதிகளில் ஜெவை வசைமாறி பொழிகின்றனர். ஆபாச வார்த்தைகளை உதிர்க்கின்றனர். கோவை மக்கள் ஒவ்வொருவரும் நேரடியாகவே பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. மாணவர்கள் படிக்கமுடியாமல் தெருவில் இறங்கி போராடுகின்றனர். புலியகுளத்திலும்,பீளமேட்டிலும் மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபடுகின்றனர்.

கிட்டத்தட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்க நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. முதலாளி தொழிலாளி வித்தியாசமில்லாமல் காந்திபுரத்தில் பதினைந்தாயிரம் பேர் திரண்டு போராட்டம் நடத்துகின்றனர். பிரிகால் மாதிரியான பெரிய கம்பெனிகளுக்கு பிரச்சனையில்லை! மிகச்சிறிய பணிமனைகள் வைத்திருக்கிறவர்களுக்குதான் மரண அடி! ஆட்சி மாற்றம் அனைத்தையும் மாற்றும் என நம்பியவர்களுக்கு பட்டைநாமம் பரிசளிக்கப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்கள் நிலைமை இன்னும் மோசம். தினக்கூலி அடிப்படையில் வேலை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் மேல்! (அதாவது பத்து லட்சம் குடும்பங்கள்) இந்த மின்வெட்டு ஒட்டுமொத்தமாக இந்த தொழில்களை நேரடியாக பாதித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பகலில் ஆறுமணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் பகலில் வேலை பார்க்க முடியாமல் பாதிக்கூலியை பெருகிற நிலை உருவாகியுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எல்லாமே மாறிவிடும் என்கிற நம்பிக்கையோடு கடனை உடனை வாங்கி தொழில் தொடங்கிய இளைஞர்கள் பலரும் கடனை கட்டவழியில்லாமல் தற்கொலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஒருவித சுடுகாட்டு மனநிலையில் கடும் மன உளைச்சலில் கோவைவாசிகள் இருப்பதை இரண்டுநாள் பயணத்திலேயே உணர முடிந்தது.

கோவையை சுற்றியுள்ள கிராமங்களில் இன்னும் மோசம் எப்போதாவதுதான் மின்சாரம் வருவதால் எத்தனை மணிநேரம் மின்வெட்டு என்பதையே சரியாக சொல்லமுடியாது. இது விவசாயத்தையும் பாதித்துள்ளது. விவசாயம் நலிந்துபோய் விசைத்தறி ஓட்டுகிறவர்களுக்கும் பாதிப்பு! கிட்டதட்ட கோவையில் தொழில் செய்கிற யாருமே இந்த மின்வெட்டுக்கு தப்பவேயில்லை. மேட்டூர் அணையிலிருந்து வரவேண்டிய மின்சாரம் வரவில்லை என்பதால் இந்த நிலை என்கின்றனர் கோவை மின்ஊழியர்கள்!

மேட்டூர் பிரச்சனை கோவைக்கு சரி! தமிழ்நாடு முழுக்கவே இந்த மின்வெட்டு தலைவிரித்தாடுகிறதே! எப்போது கேட்டாலும் 2500 மெகாவாட் பற்றாக்குறை என பஜனை பாடுவதை நம் மின்சாரத்துறையும் வழக்கமாக்கி வைத்திருக்கிறது.

கோவை முழுக்கவே ஒரே குரலில் ‘’தயவுசெஞ்சு எவன் செத்தாலும் பரவால்ல கூடங்குளத்தை திறந்து எங்களுக்கு கரண்ட்டு குடுங்க’’ என மக்கள் காலை பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறார்கள். அதிகாரம் எதை எதிர்பார்த்து கோவையின் ஃப்யூஸைப்புடுங்கியதோ அது நிறைவேறிவிட்டதாகவே நினைக்கலாம்! கூடங்குளத்துக்கு மக்கள் ஆதரவை பெருக்க மிகச்சிறந்த வழியை மத்திய அரசு கண்டுபிடித்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

அதோடு தமிகழகத்தில் மின் உற்பத்தி செய்கிற பிபிஎன்,சாமல்பட்டி,மதுரைபவர் கார்ப்,ஜிஎம்ஆர் வாசவி உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. காரணம்? மின்வாரியம் தரவேண்டிய சொற்பமான நிலுவைத்தொகையை தரவில்லையாம்! அதை தரும்வரை உற்பத்தி கிடையாது என முரண்டுபிடிக்கின்றன. பிபிஎன் நிறுவனத்தோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி உற்பத்தி பண்ணினாலும் பண்ணாட்டியும் அந்நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒருகோடிரூபாயை தமிழக அரசு தண்டமாக கொடுத்தேதீரவேண்டுமாம்.

இந்த மின்வெட்டில் சென்னையின் பங்கு கணிசமானது. சென்னைக்கு மட்டுமே ஒருநாளைக்கு 3500மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் கோவைக்கு வெறும் பிச்சாத்து ஆயிரம் மெகாவாட்தான்! அந்த ஆயிரத்தை கூட ஒழுங்காக கொடுக்கமுடியாமல் 300மெகாவாட்டுக்கு தட்டேந்தி திரிகிறது மின்சாரவாரியம். சென்னைக்கு ஒருமணிநேரம்தான் கரண்ட் கட். அதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்டம்போடுகிற ஸ்ரீபெரும்புதூர் மாதிரியான பகுதிகளில் அந்த ஒருமணிநேரமும் கூட கிடையாது என்றே நினைக்கிறேன்! சென்னையில் கூடுதலாக இரண்டு மணிநேரம் மின்வெட்டை அமல்படுத்தினாலும் கூட கோவையை வாழவைக்க முடியும் என்கின்றனர் சிலர்.

என்னைக்கேட்டால் சென்னையிலும் எட்டுமணிநேரம் மின்வெட்டை அமல்படுத்தினால் மட்டும்தான் ஆளும் வர்க்கத்துக்கு இந்த மின்வெட்டின் உண்மையான பிரச்சனை புரியும். அப்படி செய்யாத வரை யாருக்கும் இதன் பாதிப்பு தெரியவே போவதில்லை.

16 February 2012

பருத்திப்பால்






வக்கனையா தின்றதுக்குன்னே பொறந்தவங்கப்பா இந்த மதுரைக்காரங்க என்று எப்போதும் நினைப்பேன். அந்த அளவுக்கு மதுரைக்கென்றே பிரத்யேக உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. வீச்சு பரோட்டாவில் தொடங்கி கறிதோசை,ஜிகர்தண்டா,பணியாரம் என நீளுகிற இந்த பட்டியலில் முக்கிய இடம் பருத்திப்பாலுக்கும் உண்டு! சுடச்சுட ஆவிபறக்க ஒரு டம்ளர் குடித்தால் அப்படியே உடம்பெல்லாம் ஜிவ்வுனு ஆகிவிடும். அருவாளை தூக்கிக்கிட்டு நாலுபேரை வெட்டலாம்னு தோணும்!

மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்திருக்கிறேன். என்னுடைய உறவினர்களின் வீடுகளுக்கு பள்ளி விடுமுறைக்காக மதுரை செல்லும்போது பருத்திப்பால் விற்கிற பாட்டி வீதிப்பக்கம் வந்தாலே கையில் தூக்குபோசியோடு ஒட்டுமொத்தமாக ஓடுவோம். இரண்டுரூவாக்கு குடுங்க.. அஞ்சுரூவாவுக்கு குடுங்கனு கையை நீட்டினால்.. தன்னுடைய கரண்டியால் தள்ளு என ஒரு அதட்டலோடு கொதிக்க கொதிக்க தூக்குபோசி நிறைய ஊற்றிவிட்டு அதில் கொஞ்சம் தேங்காய் துருவலையும் தூவிகொடுப்பாள் பாட்டி!

இந்த பருத்திப்பாலுக்கு மட்டும் ஒரு விசேஷம் உண்டு. டம்ளரில் ஊற்றிவிட்டால் சூடு குறையவே குறையாது. ஊதி ஊதி பொறுமையாகத்தான் குடித்தாக வேண்டும். சில சமயம் கொதிக்கிற பாலை அவசரப்பட்டு வாயில் ஊற்றி நாக்குவெந்துபோவதும் உண்டு!
சின்ன வயதில் இந்தப் பருத்திப்பால் குறித்த சந்தேகம் நிறையவே வரும். இதை எப்படி தயாரிக்கறாங்க.. பருத்தி என்றதுமே மனசுக்குள்ளே பஞ்சு முளைத்த செடிதான் நினைவுக்கு வரும். ஒருவேளை அந்த பஞ்சை கசக்கிப்போட்டு பால் காய்ச்சுவாங்களோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த பருத்திப்பால் பருத்தி விதைகளை கொண்டு செய்யப்படுகிறது என்பது பின்னால்தான் தெரியவந்தது.

இந்த பருத்திப்பால் செய்வது பெரிய வித்தையெல்லாம் கிடையாது. எளிமையானதுதான். பருத்தி விதைகளை வாங்கி ஓர் இரவு ஊறவைத்து அதை காலையில் எடுத்து நன்றாக அரைத்து பாலெடுத்துவிடவேண்டும். பிறகு வெல்லமோ கறுப்பட்டியோ ஏதாவது ஒன்றை காய்ச்சி பாகெடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பருத்திப்பாலை நன்கு காய்ச்சி அதனோடு இந்த பாகையும் விட்டு காய்ச்சிக்கொண்டே, அரிசி மாவு கரைசல் கொஞ்சம் சேர்த்து நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை விட்டு இறக்கிவிட்டு, சுக்கு ஏலக்காய் தட்டிப்போட்டு கொஞ்சம் தேங்காய்துருவலை மேலாக தூவிவிட்டால் பருத்திப்பால் ரெடி! படிக்கும்போது எளிதாக தெரிந்தாலும் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட அளவு இருக்கிறது. அதை சரியாக செய்யவில்லையென்றால் பாயாசம் ஆகிவிடும் அல்லது களிமாதிரி இருகிவிடும்! திராட்சை முந்திரியெல்லாம் போடலாமா தெரியவில்லை? நான் இதுவரை சமைத்ததில்லை.

இந்த பருத்திவிதைக்கு நெஞ்சுசளியை போக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஊரில் சொல்வதை கேட்டிருக்கிறேன். அதோடு மதுரையில் கடைகளிலும் பருத்திப்பால் விற்பதை பார்த்திருக்கிறேன். பருத்திக்கு ஃபேமஸான கோவையில் பருத்திப்பால் எங்கும் கிடைக்கிறதா தெரியவில்லை. கோவையில் குடித்ததும் இல்லை. சென்னையைப்பற்றி சொல்லவே வேண்டாம். வேலையாக அவ்வப்போது மதுரைக்கு போய்வந்தாலும் எங்கே பருத்திப்பால் கிடைக்கிறதென்பது தெரியாமல் விட்டுவிடுவேன். கிருஷ்ணாஸ்வீட்ஸில் பருத்திப்பால் குடிக்கும் அளவுக்கு எனக்கு திராணி கிடையாது!

அண்மையில் பெசன்ட் நகர் சென்றிருந்தபோதுதான் வேளாங்கண்ணிமாதா சர்ச் அருகே அந்த கடையை பார்த்தேன். பருத்திப்பாலும் பணியாரமும் மட்டுமே விற்கிற பிரத்யேக கடை. சாதாரண கடைதான். வாசலிலேயே பெரிய பானையில் பருத்திப்பால் வைத்திருக்கிறார். விலையும் குறைவுதான் பத்துரூபாய்! உடனே ஆர்வந்தாங்காமல் ஒரு கப் வாங்கி குடித்துப்பார்த்தேன். மதுரையில் குடித்த பருத்திப்பாலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் இதுவும் ஓக்கே ரகம்தான். மோசமில்லை. பெசன்ட் நகர் பக்கமாக நண்பர்கள் சென்றால் அந்தக்கடைக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம்!

சென்னையில் வேறு எங்கே பருத்திப்பால் கிடைக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தால் நண்பர்கள் சொல்லலாம்.

14 February 2012

எம்ஜிஆரின் ஆவி!





சண்டையே போடாமல் 25 வருஷம் புருஷனும் பொண்டாட்டியுமாக வாழ்வதில் என்ன ஜாலி இருக்கு! ஊடலும் கூடலும்தானே காதலுக்கினிது என்று யாரோ எங்கேயோ அறிவுரையாக கூறியது நினைவுக்கு வருகிறது. இன்னமும் எனக்கு பெண்களுடனான நட்போ காதலோ எதுவாக இருந்தாலும் சிக்கல்தான். எப்போதும் சண்டைதான்! பெண்களுடைய உலகத்தை புரிந்துகொள்ளவே முடியாது. எந்த நேரத்தில் கோபம் வரும் எப்போதும் சிரிப்பு வரும் என்பதையெல்லாம் கணிக்கவே முடியாது. பெண்களுக்கும் ஆண்களை புரிந்துகொள்வதில் இதேமாதிரியான சிக்கல்கள் இருக்கலாம்.

எழுத்தாளர் தமிழ்மகனின் ‘’ஆண்பால் பெண்பால்’’ நாவலும் இன்று நாம் அன்றாடம் சந்திக்கிற இந்த ஆண்பெண் உறவு சிக்கல்களை பற்றியே அலசுகிறது.

வெட்டுப்புலியில் நூறாண்டுகால தமிழக அரசியல் வரலாற்றினை கையிலெடுத்துக்கொண்டு வூடுகட்டி சுழற்றியடித்த தமிழ்மகன் அதற்கு நேர் எதிராக இம்முறை ஆண்பெண் உறவுச்சிக்கல்களை பேசியிருப்பது நாவல்மீதான ஆர்வத்தினை அதிகமாக்கியிருந்தது. அதோடு இந்த நாவலில் எம்ஜிஆர் ஆவியாக வருகிறார் என்கிற தகவல் வேறு! .

‘’இந்தியாவுல எதுக்கு கல்யாணம் பண்றோம்னே முக்கால்வாசி பேருக்கு தெரியாது’’ என ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா நகைச்சுவையாக பேசியிருப்பார்! அவர் பேசி அதாகிவிட்டது ஒரு மாமாங்கம் இன்றைக்கும் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. யாருக்குமே எதற்காக திருமணம் செய்துகொள்கிறோம்.. ஏன் மனைவி அல்லது கணவன் என்கிற காரணமே தெரியாது. வயது மட்டும்தான் திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியாக இருக்கிறது. வயதாகிவிட்டால் கல்யாணம் செய்துகொள்ள வேண்டியதுதான். காதலித்துவிட்டாலும் கல்யாணம்தான் எல்லை! பையனுக்கு 27வயசு பொண்ணுக்கு 21 வயசு ! போதும் கல்யாணத்தை கடனை உடனை வாங்கியாவது பண்ணிவைத்துவிட்டால்தான் பெற்றோருக்கு நிம்மதி.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. விடுமுறை நாட்களில் கூட குடும்பநல நீதிமன்றங்கள் செயல்படத்தொடங்கிவிட்டன. நமக்கு இன்று சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையாக மாறிப்போயிருக்கிறது. மங்காத்தா அஜித் போல மனி மனி மனிதான் எல்லாமே! தம்பதியருக்கிடையே சின்ன சின்ன ஊடலும் கூடலும் அந்நியோனியமும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

இருவரும் பேசிக்கொள்வதே எப்போதாவது என்கிற நிலையும் உண்டு. கணவன் மனைவி இடையேயான புரிதலுக்கெல்லாம் நேரமே கிடையாது. அவரசமாக கல்யாணம் பண்ணிக்கொண்டு அடுத்த வருடமே குழந்தையும் பெற்றுவிட்டால் முடிந்தது! காமம் கூட அவசரகதியில்தான். அல்லது எப்போதாவது நேரம் கனிந்து வரும்போது மட்டும்! அருமையான நிகழ்காலத்தை இளமையை மகிழ்ச்சியை அழித்துக்கொண்டு எதிர்காலத்திற்காக மாடு மாதிரி உழைப்பதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறோம்!

இப்படிப்பட்ட மோசமான சமூக சூழலைப்பற்றிய ஒரு நாவலை கதற கதற கண்ணீருடன் சொன்னால் ரொம்பவே போர் அடிக்குமோ என்னவோ என எண்ணி எம்ஜிஆர் என்னும் சென்ற நூற்றாண்டில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த மாபெரு ஆளுமையின் பின்புலத்தில் இக்கதையை சொல்லியிருக்கிறார் நூலின் ஆசிரியர். சந்திரமுகி கதை போலதான்! எம்ஜிஆரின் ஆவி தனக்குள் புகுந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு மனச்சிதைவால் பாதிக்கப்பட்டு ஏறுக்குமாறாக நடந்துகொள்ளுகிற மனைவி..

மனைவியிடம் எதை செய்தாலும் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து எதிர்பார்த்து அவளை திருப்தி படுத்தவே முடியாத ஒரு கணவன். ஒருபாதி நாவல் முழுக்க மனச்சிதைவோடு தன் கதையை முன்னுக்கு பின் முரணாக பேசுகிற மனைவியின் வெர்ஷன். மனைவி கணவனிடம் எதிர்பார்க்கிற சின்ன சின்ன விஷயங்கள்! இரண்டாம் பாதி ஆண்பாலில் ‘’மனைவியின் எதிர்பார்ப்பு என்ன? எதை விரும்புகிறாள்? எதை வெறுக்கிறாள்?’’ என்பதை அறிந்துகொள்ள போராடுகிறான் கணவன். முதலிரவில் தொடங்கும் கதை கோர்ட்டில் விவாகரத்தில் முடிகிறது! இடையில் நடக்கிற அமளி துமளிகளை அதிவேகமான தன் எழுத்துநடையில் நறுக் சுறுக் என்று சொல்லியிருக்கிறார் தமிழ்மகன்.

ஒரே கதையை மனைவியின் பார்வையில் முதல் பகுதியிலும், கணவன் பார்வையில் இரண்டாவது பகுதியிலும் எழுதியிருப்பது சுவாரஸ்யம். சில இடங்களில் லேசாக அலுப்பு தட்டினாலும் அடுத்தது என்னாகிருக்கும் என்கிற சஸ்பென்ஸ் நம்மை நாவலின் முதல் பக்கத்திலிருந்து கடைசிபக்கத்தின் கடைசிவரி வரை அப்படியே கழுத்தில் கொக்கி மாட்டி இழுத்துக்கொண்டு தறிகெட்டு ஓடுகிறது!

முதலிரவைப்பற்றி இவ்வளவு விலாவாரியாக எந்த எழுத்தாளரும் ஆராய்ச்சி செய்திருப்பார்களா தெரியவில்லை. நாவல் முதலிரவிலிருந்தே துவங்குகிறது. ஒரே முதலிரவுதான் அதே படுக்கைதான்.. அதே காத்திருப்பு.. மாமா அத்தைகளின் சில்மிஷபேச்சு.. ஊதுபத்தி.. பால் பழம்.. எல்லாமே அதேதான். ஆனால் அந்த சூழல் பெண்களுக்கு எப்படியிருக்கும் ஆண்களுக்கு என்னமாதிரியான பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதையெல்லாம் பயங்கரமான ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பாரோ என்னவோ.. ஜஸ்ட் ஒரே வார்த்தைதான் ‘’பிரமாதம்!’’.

கணவன் மனைவிக்காக எது செய்தாலும் ஏதோ தியாகம் செய்கிற எண்ணத்தோடேயே செய்வதும், அவன் செய்வதெற்கெல்லாம் மனைவி அப்படியே தலையில் வைத்து கொண்டாட வேண்டும் , அல்லது அதிக மார்க்கு போடவேண்டும் என்று நினைப்பதையும் மிகச்சரியாக உணர்த்தியிருப்பதாகவே எண்ணுகிறேன். மனைவியும் கணவனின் சின்ன சின்ன தவறுகளை எத்தனை நாளானாலும் மறக்காமல் நினைவில் வைத்திருந்து திட்டுவதையெல்லாம் அன்றாடம் நாம் பார்க்க கூடிய ஒன்றுதான்! கதையில் ‘’முதல் சந்திப்பிலேயே எம்ஜிஆர் பாட்டை சிவாஜி பாட்டு என்று தவறாக சொல்லிவிடுகிற கணவனை இரண்டு ஆண்டுகள் கழித்து அதை நினைவு படுத்தி மனைவி சண்டையிடுவதை’’ உதாரணமாக சொல்லலாம்!

எம்ஜிஆரின் ஆவியின் ஊடாக தமிழகத்தின் அவர் ஏன் கொண்டாடப்படுகிறார்? அவர் தமிழர்தானா? அவர் ஆட்சியின் போது செய்த கேலிக்கூத்தான விஷயங்கள்? கட்சி நடத்த காசில்லாமல் கஷ்டப்பட்டது? அவர் நிஜமாகவே சிங்கம் வளர்த்தாரா? பெண்களுக்கு ஏன் எம்ஜிஆர் மேல் அப்படி ஒரு மோகம்? என எம்ஜிஆர் என்னும் மாபெரும் ஆளுமை குறித்து ஆங்காங்கே நிறைய ருசிகரமான தகவல்களை தூவி விட்டிருக்கிறார். அது நாவலின் போக்கை எவ்விதத்திலும் பாதிக்காமல் போகிற போக்கில் அப்படியே ஜாலியாக போகிறது! தமிழ்மகன் நிச்சயமாக சிவாஜி ரசிகராகத்தான் இருக்க வேண்டும். நூல் முழுக்க எம்ஜிஆரை படாத பாடு படுத்துகிறார்.. முக்கியமாக எம்ஜிஆர் ஆவியின் அறிமுகமே அவருடைய அழுகையிலிருந்தே தொடங்குது! நக்கலுக்காகவே பல இடங்களில் எம்ஜிஆர் பாடல்கள் வேறு!

ஒரு முழுநாவலையும் கடைசி ஒரு அத்தியாயம் வேறு மாதிரி மாற்றிப்போடுவது ஆச்சர்யமூட்டுகிறது. சொல்லப்போனால் கடைசி அத்தியாயத்தினை படிக்கும் போது ஒருவிதமான படபடப்பும் பரிதவிப்பும் நமக்கும் பற்றிக்கொள்கிறது. இத்தனைக்கும் துப்பாக்கி சூடோ பரபர சேஸிங்கோ கிடையாது.. இருந்தும் விவரிக்க முடியாத உணர்வு அது!

நாவல் முழுக்கவே இரண்டே இரண்டு பாத்திரங்கள் பேசிக்கொண்டிருப்பது நடுநடுவே போர் அடிக்கிறது என்பது குறையாக தெரிகிறது! இன்னொரு குறை இந்த நாவலின் குழப்பமான எதையோ சொல்ல முயன்று எதையுமே சொல்லமுடியாமல் தெளிவில்லாமல் இருக்கிற அந்த முன்னுரையும் நடுநடுவே தமிழ்மகன் பற்றி வருகிற குறிப்புகளும். இதெல்லாம் எதற்கென்றே புரியவில்லை. இலக்கியமாக இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம். நமக்கெதுக்கு அதெல்லாம் என்று நினைக்கிற நினைக்காத அனைவருமே இந்நாவலை நிச்சயமாக வாங்கி படிக்கலாம். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய முக்கியமான நாவல் இது. (சென்ற ஆண்டின் சிறந்த நாவலாக விகடன் தேர்ந்தெடுத்த நாவல் இது என்பது தகவலுக்காக!)

நூல் : ஆண்பால் பெண்பால்
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
தொலைபேசி : 91-44-24993448

07 February 2012

மெரீனா





சில படங்கள் பிட்டு பிட்டாக பார்க்க பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஒரு குறும்படத்தின் நேர்த்தியுடன் அமைந்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு முழுதிரைப்படமாக பார்க்கும்போது எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்கிற எண்ணத்தையே உண்டாக்கும். பசங்க பாண்டிராஜின் மெரீனா இந்த வகைப்படங்களில் ஒன்று என நிச்சயமாக சொல்ல முடியும்.

அங்காடித்தெருவையும் நான்கடவுளையும் கலந்து செய்த கலவை போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப்படங்களையும் மீறின கொண்ட்டாட்டமும் குதூகலமும் நிறைந்திருக்கிறது. ஆனால் மேற்சொன்ன இரண்டு படங்களும் படம் பார்த்தவர்கள் மத்தியில் உண்டாக்கிய சலனத்தையும் அதிர்வையும் இப்படம் ஒரு டீஸ்பூன் அளவுகூட உருவாக்கவில்லை. குழந்தை தொழிலாளர்கள் குறித்தும் அவர்களுக்கு தேவை கல்விதான் என்கிற கருத்தும் அதையே படத்தின் களமாக எடுத்துக்கொண்டமைக்கும் பாராட்டலாம். அதே சமயம் ஒரு நல்ல படைப்பாக இப்படம் தேறவில்லை என்பது நிதர்சனம்.

பசங்க படத்தில் பெரியவங்க கதையை குழந்தைகளை வைத்து சுவாரஸ்யமாக சொல்லி அசத்தியவர் பாண்டிராஜ். மீண்டும் பையன்களோடு கூட்டணி போட்டிருக்கிறார் என்பதும் படத்தின் டிரைலர் வேறு மிரட்டலாக வந்திருந்ததும் படம் வெளியானதும் முதல் நாளே பார்க்க தூண்டியது. அதோடு அந்த 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' பாட்டு ரொம்பவே கவர்ந்தது. ஆனால் நாம் ஒன்று நினைக்க இயக்குனர் வேறு எதையோ நினைத்திருக்கிறார். படம் சுக்கல் சுக்கலாக சுக்கா வருவலாக வந்திருக்கிறது.

நட்புக்காக ஏங்குகிற சிறுவன், உறவை தேடும் தாத்தா, எதையுமே எதிர்பார்க்கமல் உதவும் தபால்காரர் என படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான பாத்திரங்கள். கைதட்டல்களை பெற்றுதருகிற அபாரமான வசனங்கள். பாடல் காட்சிகளிலும் கடற்கரை குறித்த காட்சிகளிலும் காட்டப்படுகிற கவித்துவமான காட்சியமைப்புகள்.

இப்படி ஒவ்வொரு பாத்திரத்திற்கும், அவர்கள் பேசுகிற வசனத்திற்கும், காட்சி அமைப்பிற்கும் எடுத்துக்கொண்ட சிரத்தையை கொஞ்சம் கதையின் பக்கமும் திருப்பியிருக்கலாம். மணல் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாது. அது மாதிரி கதையின் பிரதான பாத்திரங்களும் எந்த இடத்திலும் ஒன்றிணையவேயில்லை. அனைவருமே தனித்தனி தீவாகவே காட்சியளிக்கின்றனர்.

மெரீனா கடற்கரையில் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. அதனாலேயே படத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் எல்லாமே சுவாரஸ்யமானவை மனதை உலுக்க கூடியவை. நல்லது! ஆனால் அந்த அத்தனை கதைகளும் ஒரே இடத்தில் சங்கமம் ஆகியிருக்க வேண்டாமா? என்னதான் யதார்த்தபடம் என்றாலும் இதுமாதிரி கதைகளுக்கே உரிய நாடகத்தன்மையும் ஒப்புக்காவது வேண்டாமா? உதாரணம் சிவகார்த்திகேயன் வருகிற காதல்காட்சிகள்! திடீரென கிளைமாக்ஸில் முக்கியத்துவம் பெரும் பிச்சைக்கார தாத்தா!

அதோடு இப்படம் சொல்லவருகிற செய்தி கொஞ்சம் அபாயகரமானது. ஊரிலிருந்து ஓடிவரும் பையன்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் உடனடியாக ஜாலியாக சுண்டல் விற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக காட்டப்படுகிறது. படம் பார்க்கும் எனக்கே பேசாம நாம கஷ்டப்பட்டு எழுதுவதை விட்டுட்டு சுண்டல் விற்க போய்விடலாமா என்று தோன்றும் அளவிற்கு அந்த வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருப்பதாக காட்டப்படுகிறது. இதே எண்ணம் எங்கோ தேனியில் வாடிப்பட்டியில் படம் பார்க்கிற சிறுவனுக்கும் உண்டானால் என்ன செய்வது? இதை பார்த்து ஊரிலிருந்து மெரீனாவை நோக்கி குட்டிப்பையன் படையெடுக்க தொடங்கிவிட்டால் அதற்கு யார் பொறுப்பாக முடியும். குழந்தைகளின் கல்விமேல் அக்கறையோடு படமெடுத்த இயக்குனர் இதைப்பற்றி ஏன் சிந்திக்க தவறினார் என்பது புரியவில்லை.

ஏதோ மெரீனா கடற்கரைக்கு வந்துசேர்ந்துவிட்டால் யார்வேண்டுமானாலும் மகிழ்ச்சியாக பிழைத்துக்கொள்ள முடியும் என்பதாக இப்படம் போதிப்பது எவ்வளவு ஆபத்தானது. ஒரே பாட்டில் எப்படி ஒருவன் பணக்காரன் ஆகமுடியாதோ அதுபோலவேதான் இதுவும். இதே மெரீனாவில் சுண்டல் விற்கும் பையன்கள் எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை வாழ்கின்றனர், என்னமாதிரியான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர், மழைக்காலங்களில் வசிப்பிடம் இல்லாமல் படுகிற பாடினை சொல்லிமாளாது, ரவுடிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக வாழ்கிற இந்த பையன்களின் வாழ்க்கையை இவ்வளவு மேலோட்டமாக சொல்லியிருக்க வேண்டாம்.

01 February 2012

இளையராஜாவின் மகிமைகள்





நூறாவது நாள் திரைப்படம் குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. தமிழில் வெளியான குறிப்பிடத்தக்க சில த்ரில்லர்களில் முக்கியமான திரைப்படம். அப்படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்த கதையை இயக்குனர் மணிவண்ணன் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட கருத்தரங்கு ஒன்றில் பகிர்ந்துகொண்டார். ''நூறுவாது நாள் படத்தின் மொத்த ரீரிகார்டிங்கையும் வெறும் அரைநாளில் செய்துமுடித்தாராம் இளையராஜா!'' அன்றைய தினம் அதே ஸ்டுடியோவிற்கு டாகுமென்ட்ரி ஒன்றின் ரிகாரிடிங்குக்காக வந்திருந்த வெளிநாட்டு இயக்குனர் ஒருவர் இதைகேள்விப்பட்டு அசந்துபோய் இளையராஜாவை பாராட்டிவிட்டு சென்றாராம்! அந்தப்படத்தின் பாடல்களைவிட பிண்னனி இசைதான் காலத்தை கடந்து இன்றளவும் பேசப்படுகிறது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தை பற்றியும் ஒரு தகவல் கிடைத்தது. இப்படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டதாம்!

இதையெல்லாம் கேட்கும்போது இளையராஜா குறித்து ஒரு அமானுஷ்யமான பிரமை உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. ஏன் என்றால் சமகால இசையமைப்பாளர்கள் ஒரே ஒருபாடலுக்கு ட்யூன் போட பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வதையும் , அதிலும் எனக்கு மிட்நைட்டில்தான் ட்யூன் போடவரும், அமெரிக்காவில்தான் பாடவரும் என சீன் போடுவதையும், பல லட்சம் செலவில் லண்டன்,ஆஸ்திரேலியா,சுவிட்ஸர்லாந்துக்கெல்லாம் போய் ரீரிகார்டிங் செய்வதையும் பார்க்கிற இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் இளையராஜா குறித்த இந்த தகவல்கள் ரொம்பவே ஆச்சர்யமுட்டுபவைதான்.

இந்த ஆச்சர்யங்களுக்கு மேலும் வலுசேர்ப்பதைப்போல அண்மையில் வெளியிடப்பட்ட தோனி திரைப்பட பாடல்வெளியீட்டுவிழாவில் நடிகர் நாசர் ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

நாசர் தயாரித்து இயக்கி நடித்த அவதாரம் திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னனி இசை உருவான விதம் குறித்து கூறினார் நாசர். அவதாரம் திரைப்படத்தினை தொடங்குவதற்கு முன்பு ஒருநாள். இளையராஜாவிடம் ‘’சார் இதுமாதிரி கூத்துக்கலைஞர்கள் பத்தி ஒருபடம் பண்றேன்.. நீங்க இசையமைக்கணும்’’ என்றதும் .. ‘’பார்ப்போம்’’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் ராஜா. கிட்டத்தட்ட படத்தின் அத்தனை காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டு மீண்டும் இளையராஜாவை அணுகியபோது அவர் படத்தை பார்த்துவிட்டு ஓக்கேடா அருமையா இருக்கு நாளைக்கு ரெகார்டிங் என சொல்லியிருக்கிறார்.

கையில் பணமில்லாத நாசர் இப்படி திடீர்னு சொன்னா.. ஒருவாரம் கழிச்சி என மண்டையை சொரிய.. அவருடைய சிக்கலை புரிந்துகொண்டு தன் செலவிலேயே ரீரிகார்டிங்கிற்கும் பாடல் சேர்ப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு படத்தின் குறிப்பிட்ட ஒரு இடத்தினை சொல்லி இந்த இடத்தில் ஒரு பாட்டு வச்சா ரொம்ப நல்லாருக்கும்.. (படம் பார்த்த அரைமணிநேரத்தில்) ட்யூன் போட்டுட்டேன் கேக்கறீயா என சொல்லி.. தன்னுடைய ஹார்மோனியத்தில் ‘’தந்தனனா தான னான தான னான நா!’’ என கட்டைகுரலில் சுரத்தே இல்லாமல் பாட.. நாசருக்கு கிலியாகிவிட்டது.

பாட்டு ரொம்ப மொக்கையா இருக்கும்போலருக்கே.. என நினைத்தவர்.. இளையராஜாவிடம் எப்படி இதை சொல்வது என்பது புரியாமல் அப்படியே நின்றிருக்கிறார். சரி நாசர் நீ நாளைக்கு காலைல வா வேலைய தொடங்கிருவோம்.. என திருப்பி அனுப்பியுள்ளார்.

அடுத்த நாள் அந்த ட்யூன் ரொம்ப மொக்கையா இருக்கு.. வேற போட சொல்லணும் , இன்னைக்கு ட்யூன் டிஸ்கசன்ல அவரை ஒரு ஆட்டு ஆட்டிடணும் என்கிற வெறியோடு இளையராஜாவின் வீட்டுக்கு போகிறார் நாசர். இளையராஜா தன் வீட்டில் தனிமையில் அமர்ந்திருக்க நாசர் உள்ளே நுழைகிறார். உட்காருங்க என்று சொல்லிவிட்டு ஒரு சாக்லேட்டை அவருக்கு கொடுத்துவிட்டு மீண்டும் எதையோ எழுத ஆரம்பிக்கிறார் இளையராஜா.. ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல வேக வேகமாக இசைக்குறிப்புகளை எழுதி க்கொண்டேயிருக்க.. அரைமணிநேரம் ஒருமணிநேரமாகிவிட்டது. நாசர் பொறுமையிழந்து திட்டிவிடலாம் என்று நினைக்கும்போது.. சரிவாங்க ரெகார்டிங் போவோம்.. என்று சொல்ல நாசருக்கு ஒன்றுமே புரியல..

ரெகார்டிங் ரூமில் எல்லாமே தயார். பாடகர்கள் வந்திருக்கின்றனர்.. இசைக்கலைஞர்கள் காத்திருக்கின்றனர். நாசர் அந்த ட்யூன் வேண்டாம் என்று சொல்ல நினைத்துக்கொண்டிருக்க.. ஒரு மேஜிக் நடக்கிறது.. இளையராஜா இசைக்கலைஞர்களை பார்த்து தன் கைகளை தூக்கி இறக்க.. தானத்தந்த தானத்தந்தா.. தானத்தந்த தானத்தந்தா.. அந்த இசை..... எங்கும் நிறைய நாசர் அப்படியே சிலிர்த்துப்போய் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றாராம்! அதே நாளில் மொத்தபடத்திற்குமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தையும் செய்துமுடித்து அசத்தினாராம் ராஜா! (பாடல்களை அவரே எழுதிவிட்டார் என்பது கூடுதல் தகவல்)


(அந்த மேஜிக்கை நீங்களும் உணருங்க!)





அதே தோனி பட இசைவெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் ஒரு புதுமையை செய்துகாட்டினார். ஒரு சீரியஸான காட்சி முதலில் போட்டுக்காட்டப்பட்டது.. பின்னணி இசை சேர்க்காமல். உடனடியாக இளையராஜாவின் பின்னணி இசையோடு போட்டுக்காட்டியபோதுதான் ஒன்று புரிந்தது.. ஏன் இந்த தமிழர்கள் அந்த மனிதரை கடவுளாக வழிபடுகின்றனர் என்பது! பிரமாதம் என்று சொல்லுவது சரியாக இருக்காது. அதை விவரிக்கும் வார்த்தைகள் என்னிடம் இல்லை!

விழாவில் பேசிய பலரும் ஒருகுறிப்பிட்ட பிரச்சனையை முன்வைத்து பேசினர். இன்றைக்கு திரையுலகம் சந்தித்துவரும் பெரிய சிக்கல்களில் ஒன்று புரொடக்சனுக்காக எடுத்துக்கொள்ளும் கால அளவு.. சமகால இசையமைப்பாளர்கள் அனைவருமே ஒரு பாடலுக்கு கம்போசிங் செய்யவே வருடக்கணக்கில் நாட்களை எடுத்துக்கொள்ளுவதை பெருமை பீத்தலாகவே செய்துகொண்டிருக்கின்றனர். பின்னணி இசை சேர்க்க லண்டனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்வது இன்னும் மோசம். மணிவண்ணன் ஒருகூட்டத்தில் சொன்னதுதான்.. புதிய தொழில்நுட்பம் நம்முடைய உழைப்பு நேரத்தை செலவை குறைக்கவேண்டுமே தவிர அது இருக்கிற வேலையை நேரத்தை அதிகமாக்க கூடாது என்பதுதான்!

வெறும் ஐந்தே பேரை வைத்துக்கொண்டு உயிரை உலுக்கும் இசையை சிகப்பு ரோஜாக்களில் கொடுக்க முடிகிற இளையராஜா மாதிரியான உன்னதமான கலைஞர்கள்தான் இன்றைய சினிமாவுக்கு தேவையே தவிர ஆண்டுகணக்கில் யோசித்து மொக்கையான இசையை கொடுக்கிற பீட்டர்கள் அல்ல!