Pages

29 November 2009

யோகி - வன்முறையின் உச்சம்




உலகிலேயே மிகக்கடுமையான தண்டனை ஒன்று இருக்கிறது. மரண தண்டனை உடனடி பலன்தான் தரும். ஆனால் இதுவோ அணுஅணுவாய் சித்திரவதை செய்து கொல்லும். நம்மில் பலரும் அனுபவித்திருக்கிற ஒன்றுதான். ஒரு குழந்தையை அரைமணிநேரம் அழவிட்டு விடாமல் கேட்டுப்பாருங்கள். மண்டை வெடித்து சிதறிவிடுவதைப் போல கடுமையான எரிச்சலும் கோபமும் சொல்ல முடியாத வேதனையும் அடைய நேரிடுவோம். அதை அனுபவிக்க உங்கள் குழந்தைகளை கிள்ளிவிட்டு அழவைத்து பார்த்து முயற்சிக்க வேண்டாம். யோகி என்றொரு திரைப்படம் வந்திருக்கிறது. ரத்தமில்லாமல் வலியில்லாமல் மின்சாரத்தாக்குதலை தரும் வேதனை, ஒரு குழந்தையோடு! அமீரின் யோகி

நண்பர்கள் டூட்சி படத்தின் காப்பி என்றார்கள். நல்ல வேளையாக அந்த ஆப்பிரிக்க படத்தை நான் பார்த்திருக்கவில்லை. ( 15 ரூபாய்க்கு டிவிடி விற்கும் மணியிடம் ஸ்டாக் இல்லை ). கதை என்னவோ ஏற்கனவே பார்த்திருக்கிற சிட்டி ஆஃப் காட் ( பெரிதாக தாதாயிசம் செய்யத் துடிக்கும் சின்ன லெவல் ரவுடி கும்பல்) , தி கிட் ( எதிர்பாராமல் வந்து சேரும் பணக்கார குழந்தை ) போன்ற படங்களின் கதைகளின் கலவைதான். ஒரு குட்டி ரவுடி கும்பல் , அதன் தலைவன், கொள்ளையடிக்க போன இடத்தில் கிடைக்கும் குழந்தை, குழந்தையோடு காதல் , அதனால் திருந்தி மீண்டும் குழந்தையை ஒப்படைக்க போன இடத்தில் மரணம்! பியூட்டி அண்டு தி பீஸ்ட் வகையறா நான்கு வரி கதைதான். இது மாதிரி கதைகளில் கதாநாயகி மீது வரும் காதலால் ரவுடி திருந்துவான். இதில் குழந்தை மேல் வரும் அன்பால்!.

சுப்ரமணிய சிவா கதை & இயக்கம் , அமீர் திரைக்கதை & வசனம் + நடிப்பு. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே.. ச்சே நம்மாளு உலக சினிமா எடுத்துட்டாய்ங்கடா என்று மார்தட்டிக்கொண்டேன் ( என்னுடைய மார்பை!). இன்டர்வெல்லிலேயே நண்பர் சொல்லிவிட்டார் அடச்சீ இது டூட்சீ என. அமீர் மீது அளவில்லா மரியாதை உண்டு. ஒவ்வொரு படத்திலும் விதவிதமான தளங்களை எடுத்துக்கொண்டு வெற்றியும் பெற்றவர். நம்மூரு லோக்கல் ஹிட்ச்காக் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறேன். ஏனோ இப்படி டுபாக்கூர் வேலை பார்த்திருப்பார் என நம்பமுடியவில்லை. சரி படத்தை பற்றி பேசுவோம்.

மேக்கிங் அட்டகாசம்! அதற்காகவே பார்க்கலாம் படத்தை. அதிலும் ஒளிப்பதிவு பெயர் போடும் போது ஒளிப்பதிவு உதவி என பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை பார்க்க முடிந்தது , உழைப்பு தெரிகிறது. ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலம். குழந்தை அழும் குரலிலிருந்து கத்தி கீசிடும் ஒலி வரை கொரியன் திரைப்படங்களுக்கு இணையான ஒலி ஒளி. திரைக்கதை அமைப்பு ஒரிஜினலில் இருந்து திருடப்பட்டதா என்று தெரியவில்லை ஆனால் யூகிக்க முடிகிற ஒன்றாகத்தான் இருக்கிறது. அதிலும் வில்லனாக வரும் வின்சன்ட் அசோகனின் பாத்திரம் சப்பை!

அமீர் - நன்றாக நடித்திருக்கிறார். படம் நெடுக செல்லும் ஹீரோயிசத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். திகட்டுகிறது. ஹீரோயிசத்திற்கு அமீர் எதற்கு? அதுக்கு கோடம்பாக்கத்தில்தான் ஒரு பட முதல்வர்கள் நிறைய பேர் இருக்கின்றனரே!. கிளைமாக்ஸில் நீ....ளமான சண்டை , நடுநடுவே பதினைந்து பேரை விரட்டி விரட்டி அடிப்பது மாதிரியான காட்சிகள் உலக திரைப்படவிழாவுக்கு அனுப்பும்போது வெட்டி விடுவார்களோ? பாடலாசிரியர் சினேகன் நிறைய முடியோடு அறிமுகமாகியுள்ளார். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். (ஆனால் அவரது பாத்திரப்படைப்பு சிட்டி ஆஃப் காட் படத்தின் லில் இசட் என்னும் வில்லனை போன்று இருக்கிறது) , மதுமிதா , ஸ்வாதி நடித்திருக்கின்றனர்.

விலங்குகள் வதை தடுப்பு சங்கம் இருப்பது போல குழந்தைகள் வதை தடுப்பு சங்கம் தொடங்கலாம். படத்தில் வரும் குழந்தையை படாதபாடு படுத்தியிருக்கின்றனர். சென்சாரும் அதை அனுமதித்திருக்கிறது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ்தான் ஆனால் வன்முறை தூக்கலாக இருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டையில் புஜபலமெல்லாம் காட்டி ஆவென கத்துகிறார் அமீர் , ம்ம் ஒன்றும் சொல்வதற்கில்லை. படம் முழுக்க பல காட்சிகளில் அமீர் நடக்கிறார் , நடக்கிறார் , நடக்கிறார்.. பில்லா நினைவுக்கு வந்து தொலைத்தது.

படத்தின் இசையைப் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். யுவன் சங்கர் ராஜா. ஆரம்பத்தில் ஒரு பாடல் வருகிறது , நடுநடுவே பாடல்கள் ஒன்றும் மனதில் ஒட்டவில்லை. பிண்ணனி இசை பல இடங்களில் 7ஜி ரெயின்போ காலனி , இளையராஜாவின் பழைய படங்களின் பாதிப்பு. கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். படம் நெடுக வரும் அந்த தீம் மியூசிக் , அழகான லுல்லபி(தாலாட்டு). நன்றாக இருக்கிறது. ஆனாலும் மனதிற்குள் இதை எங்கிருந்து சுட்டுருப்பாய்ங்க என்றொரு கேள்வி எழாமல் இல்லை. காரணம் எங்கேயோ கேட்ட இசை!

படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் சிறுகதை! அருமையான காட்சிகள் அது, பார்ப்பவர் மனதிலறையும் உண்மைகள்.

சண்டைக்காட்சிகள் , தேவையில்லாத ஹீரோயிசம் , கொஞ்சம் வன்முறை என படத்தில் நிறைய குறைத்திருந்தால் தமிழில் வந்த உலகசினிமாவாக இருந்திருக்கும். ஏனோ இரண்டு வருடமாக ஒவராக செதுக்கி செதுக்கி எல்லாமே ஒவராகிவிட்டிருக்கிறது. ஒவரா வெந்த சோறு குழைஞ்சிரும்னு சொல்லிருக்காங்களே! அப்படித்தான் இருக்கு.

அமீர் ஒரு மிகச்சிறந்த கலைஞர். இதைவிட சிறப்பான படமெடுக்கும் திறமையுள்ளவர். இம்முறை தோற்றிருக்கிறார். டூட்சி படத்தின் காப்பியாக இருந்தாலும் நல்ல கதையாக இருப்பதால் சிறப்பாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். படம் முடிந்து வெளியில் வரும் போது ஒரு வித மன சோர்வை கட்டாயம் ஏற்படுத்துகிறது. தமிழில் ஒரு புதிய முயற்சி என்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

யோகி - வன்முறையின் உச்சம் , தலைவலிதான் மிச்சம்!

27 November 2009

காமன்மேன்களின் மரணம்!




அந்த காமன்மேன்கள் ஒன்றாகத்தான் பயணித்தனர். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சனைகள். காய்கறி வாங்கவேண்டும். குழந்தைக்கு ஸ்கூல் பீஸு. கிரெடிட் கார்ட் கட்டணம். போனஸில் டிவி. இரவு உணவுக்கு சப்பாத்தியா பூரியா , வீட்டிற்கு ஆட்டோ பிடித்தால் இருபது! நடந்தால் ஃப்ரீ! , மனைவி வந்திருப்பாளா அலுவலகத்திலிருந்து , தனியாக இருக்கும் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கும் இப்படி பலவித கேள்விகளோடும் குட்டிகுட்டி கனவுகளோடும்தான் அந்த ரயிலில் ஒன்றாக பயணித்தனர். இறங்கினர். எவனோ ஒருவன் எங்கிருந்தோ வந்து சரமாரியாக சுடத்துவங்கினான். சிலர் சுடத்துவங்கினர். சிலர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இதெல்லாம் முடிந்து...

ஓராண்டு முடிந்துவிட்டது. போன வருடம் இதே நாள் சிலர் மும்பையின் பிரதானமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதும் ரயில் நிலையத்திலும் தாக்குதல் நடத்திமுடித்து. அந்த நாட்கள் இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. ஒருபக்கம் கையில் துப்பாக்கிகளுடன் அதிரடிப்படை போலீசார். இன்னொரு புறம் அவர்களுக்கு பின்னால் தொலைகாட்சிக்காரர்கள் கையில் கேமராவுடன் பறந்து கொண்டிருந்தனர். போலீசாரின் ஒவ்வொரு நகரலும் நேரடி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

நுனி நாக்கு ஆங்கிலத்தில் அதிரடி செய்திகள் ''நான் இப்போ கையில் மெஷின் கன்னோட ஹோட்டல் உள்ளே பூனை மாதிரி நுழையற ஒரு கமாண்டோ பின்னால நிக்கறேன்'' என உடனுக்குடன் சுடச்சுட தரப்பட்டன. இதில் போட்டி வேறு தீவிரவாதிகள் தாஜ் ஓட்டலில் புகுந்ததை முதன்முதலில் காட்டிய டிவி சேனல் நாங்கள்தான் என மார்த்தட்டிக்கொண்டன. அலசல்கள் , பேட்டிகள் , பிணைக்கைதிகளாக பிடிபட்டிருந்தவர்கள் வெளியில் வரும்போதே மூஞ்சிக்கு முன்னால் மைக்கை நீட்டி HOW DO YOU FEEL ABOUT THIS ATTACK என கடுப்படித்துக்கொண்டிருந்தனர். மும்பையில் நடந்த தாக்குதல் ஏதோ தாஜிலும் ஓபராய் ஹோட்டலிலும் மட்டுமே நடந்தது போல ரயில்நிலையத்தில் ஏதோ தீபாவளிக்கு வெடிவெடித்தது போலவும் நடுநிலையோடு செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தன. நடுவில் வெளியான கார் விளம்பரங்கள் கூட மனதிலிருக்கிறது. எல்லாம் முடிந்து வெளியான பின்னும் செய்தி பஞ்சத்தில் அடிபட்ட ஆண்டிகள் விடாமல் தாஜ் ஹோட்டல் தாத்தாக்கள் ஸ்விம் சூட்டில்! ஒபராய் ஹோட்டல் டீயில் ஈ மிதக்கிறதே! என மாறிமாறி செய்தி வெளியிட்டன. ரயில் நிலைய மரணங்கள் குறித்தோ அல்லது அங்கே நடந்தது என்ன என்பதைப்பற்றியோ இறுதிவரை செய்திகளில் பெட்டிகூட வரவில்லை. சில காவலர்கள் தங்களுடைய இன்னுயிரை இதில் தியாகம் செய்தனர். அமெரிக்காவிற்கு கிடைத்த 9/11 போல இந்தியாவிற்கும் வருடந்தோறும் அஞ்சலி செலுத்தவும் , பேரணி போகவும் , மெழுகுவர்த்தி வியாபாரத்திற்கும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது!

தேர்தலில் இந்த சம்பவத்தின் அடிப்படையில் ஓட்டுக்கேட்டது பிஜேபி. ஏனோ அந்த பல்டி நம்மூர் பொதுஜனத்திடம் வேலைக்கு ஆகவில்லை. இதையே தேசியத்தின் ஒற்றுமைக்குரலாக ஓங்கி ஒலிக்க வைத்தது காங்கிரஸ். அதன் அரசியல் வியாபாரத்திற்கு இறந்து போன காவலர்களின் உடல்கள் நன்கு பயன்பட்டது. இதோ இன்றோடு ஓராண்டு முடிந்துவிட்டது. இப்போதும் அந்த ரயில்நிலைய மரணங்கள் குறித்தோ அந்த மக்கள் குறித்தோ எந்த செய்தியும் இல்லை. ஆனால் தொலைக்காட்சிகள் மீண்டும் துவங்கி விட்டன பிளாஷ்பேக் காட்சிகள். அந்த மூன்று நாட்கள்! 26ன்கீழ் பதினோன்னு நடந்தது என்ன? என்று நடந்த நிகழ்வுகளின் ஓளிப்படம் மீண்டும் அரங்கேறுகின்றன. மீண்டும் அதே கார் விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இப்போது தஸ் வோல்ஸ்வாகனும் இணைந்துவிட்டிருக்கிறது. ரயில் நிலையத்தில் இறந்த எனக்குத் தெரிந்த அந்த காமன்மேன்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இதோ ஓராண்டு முடிந்துவிட்டது.

24 November 2009

டணால் தங்க விலை!



இந்த இந்தியாக்காரங்களுக்கும் மட்டும் ஏன்தான் தங்கம் மேல இவ்ளோ ஆர்வம்?

இதற்கான காரணத்தை ஆராய வரலாற்றின் பக்கங்களை ‘லைட்டாக’ புரட்டிப்பார்க்க வேண்டும். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் பல நூறு குட்டிகுட்டி ராஜ்ஜியங்கள் தேன்கூடுகள் போல ஆங்காங்கே இருந்தன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பணம். வித்தியாசமான பொருளாதார கோட்பாடுகள். யாரும் யார் மீதும் படையெடுக்கலாம்.

உதாரணத்திற்கு மடிப்பாக்கம் மன்னருக்கு அந்தப்புரத்தில் சரசமாடி , சோமபானம் அருந்தி வாந்தியெடுத்து போரடிக்கிறது. உடனே மாம்பலம் அரசர் மீது போர் தொடுக்கிறான். மாம்பல மகாராஜாவின் படைகளை துவம்சம் பண்ணி வெற்றியும் காண்கிறான். அடுத்து என்ன? ஊருக்குள் புகுந்து அந்த நாட்டின் கஜானா முதல் ஊரிலிருக்கும் தட்டுமுட்டு சாமான்கள் வரை சகல செல்வங்களும் கொள்ளையடிக்கப்படும். அந்த சூழலில் ராஜாக்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் அப்பாவி மிஸ்டர்.பொதுஜன கோவிஞ்சாமி , தன்னுடைய செல்வங்களை பாதுகாக்க , முடிந்த வரைக்கும் மதிப்பு மிக்க தங்கமாக வாங்கி வைத்துக்கொண்டு போர்க்காலங்களில் வீட்டுத்தோட்டத்திலோ தோப்புகளிலோ புதைத்து வைத்துவிடுவான். இப்படித்தான் தன்னுடைய எதிர்கால பாதுகாப்பிற்காக தங்கத்தை சேர்த்துவைத்துக் கொள்ளும் வழக்கம் நம்மூரில் மட்டுமல்ல உலகெங்கிலும் நம் ஒவ்வொருவருடைய ஜீன்களிலும் பரவியுள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். 2000 வருடங்களுக்கு முன்னால் எகிப்தில் தொடங்கி இன்றுவரை தங்கமோகம் மனிதனுக்குள் இருந்துள்ளது. இன்றும் நம்மூரில் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் குண்டுமணி தங்கத்தில் மூக்குத்தி சைஸிலாவது வாங்கி வைத்துக்கொள்வதை பார்த்திருப்போம். பணத்தட்டுப்பாடு வரும்போதெல்லாம் அதை விற்றோ அடமானத்திற்கோ கொடுத்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

இந்த தங்கத்தின் விலை திடீரென ஜெட் வேகத்தில் உயர்வதும் , திடீரென குறைவதும் ஏன்? தங்கத்தின் விலையை யார் தீர்மானிக்கின்றனர்?

முகூர்த்த நாட்கள், விழாக்காலங்கள், போனஸ் நேரம் இப்படி எப்போதெல்லாம் நம் கைகளில் காசு அதிகமாய் புரளுமோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கூடும்! அந்த நேரத்தில் அதிகம் பேர் தங்கம் வாங்குகின்றனர் அதனால் தங்கம் விலை உயர்கிறது! நம்ம எல்லாருமே இப்படித்தான் பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மைக்கதை வேறுவிதமாக இருக்கிறதே!


நம் பணப்புழகத்திற்கேற்றாற் போல தங்கத்தின் விலை உயர்ந்தது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. அப்போதெல்லாம் சில ஏஜன்ட்கள் வெளிநாட்டிலிருந்து மொத்தமாக தங்கம் வாங்கி அதை நாடுமுழுதும் இருக்கும் பல ஆயிரம் வியாபாரிகளுக்கு பிரித்து தருவதில் சிக்கல் இருந்தது. எப்போதெல்லாம் வியாபாரிகளுக்கான தேவை அதிகமாகியதோ அப்போதெல்லாம் விலையும் கூடியது.

ஆனால் இன்று ஒற்றை பட்டனை ‘டிக்’ எனத் தட்டினால் அடுத்த நாளே ‘டங்’ என்ற சத்தத்துடன் தங்க்க் கட்டிகள் விமானத்தில் தரையிறங்கிவிடும். இன்ஸ்டன்டாக தங்கத்தை சப்ளை செய்யத் தேவையான வசதிகள் வந்துவிட்டன. கணினியின் பயன்பாட்டால் தங்கத்தினை வாங்குவதும் விற்பதும் எளிதாகியுள்ளது. இது தங்கத்தின் விலை நிர்ணயத்தின் பாணியை மாற்றியுள்ளது. தங்கத்தின் விலை இந்தியர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போதெல்லாம் அதிகமாகிறது என்பதெல்லாம் சுத்த டுபாக்கூர். நம்மூர் மக்களுக்கு எப்போதுமே தங்கத்தின் மீதான மோகம் மிகமிக அதிகம். அது ஒரே நாளில் திடீரென ஊரில் இருக்கும் அத்தனை பேரும் ஜாய் ஆலுக்காஸ் வாசலில் தவம் கிடப்பதெல்லாம் கிடையாது. சென்னையிலிருக்கும் ஒரு பிரபல நகைக்கடையின் தினசரி விற்பனை சராசரியாக ஐம்பது லட்சமாம்!

தங்கத்தின் விலை ரங்கநாதன் தெருவிலோ ராஷ்டிரபதி பவனிலோ தீர்மானிக்கப்படுவதில்லை. எல்லாமே நியூயார்க்கில் . இதை ‘LONDON GOLD FIXING’ என்கின்றனர். ஏன் நியூயார்க்கில் நிர்ணயிக்கப்படும் விலைக்கு லண்டன் கோல்டு பிக்சிங்னு பேரு? ஓவராக யோசிக்க வேண்டாம் , இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை லண்டனில் தீர்மானிக்கப்பட்டு வந்த தங்கத்தின் விலை , அதன்பின் நியூயார்க்கிற்கு இடம் மாறியது , ஆனால் லண்டன் மட்டும் பெவிகால் போல காலாகாலத்திற்கும் ஒட்டிக்கொண்டது.

உலகின் முண்ணனியான ஐந்து தங்க வர்த்தகம் செய்கிற பெரும் நிறுவனங்கள்( இவர்களுக்கு புல்லியன்ஸ் என்று பெயர்) தினமும் ஒன்று கூடி பேசி தங்கத்திற்கான விலையை தீர்மானிக்கின்றனர். இந்த விலை டாலர்களில் மதிப்பிடப்படுகிறது. தற்சமயம் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்தின் விலை 1070 டாலர்களுக்கு விற்கிறது. எதை வைத்து இந்த விலையை உலக மார்க்கெட்டில் நிர்ணயிக்கின்றனர்? இவர்கள் யார் தங்கத்தின் விலையை முடிவு செய்ய?

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டினர் தங்க விற்பனைக்காக இரண்டு முக்கிய கால நிலைகளை வைத்துள்ளனர்..

1.SUMMER DOLRDUMS ( கோடைக்காலம் ) – மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை

2.WINTER EUPHORIA ( குளிர்காலம் ) – டிசம்பர் முதல் பிப்ரவரி பாதி வரைக்கும்

கோடைக்காலத்தில் தங்க வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பலர் தங்களுடைய தங்கத்தினை விற்றுவிட்டு விடுமுறையில் சென்று விடுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை மிக அதிக அளவில் குறையும். அதனால் டோல்ட்ரம்ஸ் குறைந்த லாபம் தரக்கூடியது.

குளிர்காலங்களில் தங்க வர்த்தகத்தில் அதிகம் பேர் ஈடுபடுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை அந்த காலங்களில் அதிக அளவில் அதிகரிக்கிறது. குறுகிய கால முதலீடாக தங்கத்தினை வர்த்தகம் செய்பவர்களுக்கு யுப்போரியா அதிக லாபத்தை ஈட்டித்தரும்.
உலகெங்கும் தங்கம் மற்றும் இன்னபிற உணவுப்பொருட்கள் மற்றும் உலோக வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களை SPECULATOR COMMUNITY என்கிறோம். இதில் 95% வர்த்தகம் இன்டர்நெட் வழியாகவே நடைபெறுகிறது. உங்களிடம் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அதேபோல் பத்துமடங்கு அதாவது ஒரு லட்சத்திற்கு தங்கம் வாங்க முடியும். உடனே உங்கள் கையில் கட்டித்தங்கத்தை வெட்டி எடுத்து தந்து விட மாட்டார்கள். எல்லாமே டாகுமென்ட்டாக இருக்கும். விலை உயரும்போது அதை விற்று லாபம் பார்க்கலாம். இது அதிக அளவிலான குட்டி குட்டி முதலீட்டாளர்களை இந்த வர்த்தகத்தின் பக்கம் இழுத்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக தங்கத்தின் விலை மடமடவென ஜெட்வேகத்தில் உயர்வதற்கான காரணமும் அதுதான். இந்த தங்க விலை ஏற்றம் குறையும் அல்லது இன்னும் அதிகரிக்குமா என்று அனைவருக்கும் பயம் கலந்த ஒரு கேள்வி நிச்சயம் இருக்கும்.

சென்றவாரம் தங்கம் விலை 13000ஐ எட்டியிருக்கிறது. அதுவும் ஒரே நாளில் 1300 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இந்த மெகா விலை உயர்வு தமாக்கா இந்தியாவிற்கோ உலகத்திற்கோ புதிதல்ல. 1980 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு எவ்வளவு இருந்தது தெரியுமா? 850 டாலர்கள் , ஆனால் அடுத்து இரண்டே ஆண்டுகளில் அந்த விலை குறைந்து வெறும் 250 டாலர்களாக குறைந்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்தியா அதில் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு மிகமிக குறைவு. 15 அல்லது 16 ரூபாயாகத்தான் இருந்தது, ஆனால் பொருளாதார வளர்ச்சியில் அது 40முதல் 45ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது. அதே மாதிரியான ஒரு சூழல்தான் தற்சமயம் நிலவுகிறது, ஆனால் இந்தியாவின் பன்னாட்டுக் கொள்கைகளால் உருவான திடீர் பொருளாதார வளர்ச்சி அதிக பாதிப்பு இருப்பது போல தோற்றமளிக்கிது. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் தங்கம் விலை ஓரளவு அதாவது 20% வரை குறையும் என்றே பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

உலக அளவில் இது மிகமிக ‘சாதாரணமான நிரந்தரமில்லாத’ விலையேற்றமாகவே கருதப்படுகிறது. குறுகிய கால முதலீடு செய்பவர்கள் வேண்டுமானால் இப்போது தங்கம் வாங்கி அடுத்து மூன்று மாதங்களில் விற்கலாம்! மற்றபடி தங்கத்தின் விலை ஏற்றம் என்பது ஒரு மாயையே , சிறிய அளவில் தங்கம் வாங்குபவர்களுக்கு இந்த விலையேற்றம் எந்தவித பாதிப்பையும் உண்டாக்காது. பெரிய முதலாளிகளுக்குத்தான் பாதிப்பெல்லாம்!

23 November 2009

பழசிராஜாவின்ட விமர்சனம்!


என்ன கண்ணுகளே சுகம்தன்னே! போன வாரத்தில நானும் நம்மோட கூட்டுகாரரும் சேர்ந்துட்டு ஒரு நல்ல படம் காண வேண்டி முடிவாயிடுச்சு. ஆனா ஏது படம்னு முடிவாயி இல்ல. அப்போ தான அந்த ஐடியா வந்துச்சு. பின்னாடி அந்தாளும் நானும் சேர்ந்துட்டு தமிழ்ல வந்துருக்கிற பழசிராஜா படம் காணலாம்னு முடிவு செய்தோம். பழசிராஜா! மலையாளக் கூட்டுகாரன்கள் ஒரு பாடு கஷ்டப்பட்டு எடுத்தபடம் . பட்ஜெட் முப்பது கோடி!. நம்மோட ஊரில வீரபாண்டிய கட்டபொம்மன்னு ஒரு ஆளு இருந்தாங்கல்ல அவரப் போல பழசிராஜா வெள்ளக்கார தொரமார எதிர்த்த ஒரு ராஜா. அந்த ஆளுட கதைய எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி , ஹரிஹரன் டைரக்ட் சேய்திருக்காங்க.

படத்தோட கத எப்போதும் போல நம்மோட நாட்டுக்கு வந்த வெள்ளக்கார தொர மார நம்மோட ஆளு ஒருத்தர் அடிச்சு விரட்ட டிரை செய்து பின்னாடி தோத்துப்போய் மரணமாகறதுதான். லேட்டஸ்டு டெக்னோலஜியும் ரசூல் பூக்குட்டியோட சவுண்டும் இளையராஜாவோட மியூசிக்கும் படத்தில ஒன்னாங்கிளாஸா உண்டு. கதயும் தெரக்கதயும் ஆவ்வ்வ்வ்வ் என்ட குருவாயூரப்பா! ஒரு பாடு மூனரை மணி நேர படம். லாஸ்டில ஹீரோ மரிச்சுருவாருன்னு அறிஞ்சாலும் அத வளிச்சு வளிச்சு ஆவ்வ்வ்வ்வ் ஒரு பாடு தல வேதனைதான் வளி(லி)ச்சு.

நம்மட நாட்டுக்கார கமல் இந்த படத்திட ஸ்டார்ட்டிங்கில் வாய்ஸ் கொடுத்துருக்கு. பழசிராஜாவோட சரத்குமார் நடிச்சிருக்கு. நம்மோட குட்டி கனிகாவும் உண்டு. அந்த பெண்ணு பாடுற ஒரு பாட்டு ‘’காலப்பாணி’’ , இல்ல... இல்ல... சிறச்சால படத்துல வர செம்பூவே பாட்டு போல உண்டாகி இருந்தாச்சு. பேக்ரவுண்ட் மியூசிக்கில் ராஜாசார் தன்ன ராஜா. அடிபொலி!. படத்தில் சுமனும் உண்டு. ஜெயன் உண்டு. எல்லார் மண்டயிலயும் வல்லிய ஒரு குடுமி உண்டு!. எல்லாருட நடிப்பும் நல்லா இருந்தாச்சு. படத்திட எங்க பார்த்தாலும் ஹீரோயிசம்! பஞ்ச் டயலாக்!, வீரவசனம்! அத்தனையும் வேஸ்ட்.

ஜெயமோகன் டயலோக் எழுதிருக்கு. டிரான்சுலேசன் மாத்ரம் சேய்திருந்தாலும் இந்த விமர்சனத்தினப்போல மலையாளமும் அல்லாத்த தமிழும் இல்லாத்த தழையாளத்தில் வசனம் எழுதிட்டுண்டு. இத்தனை பேசியாச்சு , மம்முட்டி.. இன்னொரு அடிபொலி! சூப்பர் ஆக்டர்!.

நம்மட கமல் மருதநாயகம் படம் எடுக்கான் ஒரு பாடு கஷ்டப்பட்டு! பின்ன ட்ரோப் செய்து , பின்ன மர்மயோகி ஸ்டார்ட் செய்து, பின்ன ட்ரோப் செய்து , பழசிராஜாவின காணும்போது அதானு மைன்ட்ல வந்தாச்சு. நம்மட காலத்தில் சரித்ர படம் எடுக்கானெங்கில் நிறைய பட்ஜெட் வேண்டிட்டு உண்டு. இல்லாட்டி போனா பழசிராஜாவினப்போல தூர்தர்ஷன் டைப் நாடகம் ஆகிடும்.
கமல் பொறுமையாயிருந்து தேவையான நிதி திரட்டிவிட்டு மருதநாயகத்தை எடுக்கலாம். நல்ல சினிமாவிற்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். மற்றபடி மலையாளத்தில் பழசிராஜா ஒரு வித்தியாசமான முயற்சி , வரலாற்றோடு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் இருந்தாலும் ஆந்திராவிற்கு அல்லுரி சீதாராம ராஜீவைப்போல , தமிழகத்திற்கு கட்டபொம்மன் மருது சகோதரர்களைப் போல கேரளத்தின் தேசபக்திக்கு ஒரு ஹீரோவாக இந்த பழசிராஜா முன்னிறுத்தப்பட்டுள்ளார். இன்னும் நேர்த்தியாக விறுவிறுப்பாக கதை சொல்லியிருந்தால் பழசிராஜா மெய்சிலிர்க்க வைத்திருப்பார். ஏனோ வழவழ கொழகொழ காட்சிகளும் புரியாத தமிழ் மொழிபெயர்ப்பு வசனங்களும் பகல் காட்சி பார்ப்பவரையே மெய்மறந்து தூங்க வைக்கின்றன. படத்தின் மலையாள பதிப்பில் நான்கு மணிநேரம் ஓடுகிறதாம் , நல்ல வேளையாக தமிழில் மூன்றரை மணிநேரம்தான்.

முன்னூறு கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுத்திருந்தால் மெல்ஜிப்சனின் பிரேவ் ஹார்ட் போல வந்திருக்கும். முப்பது கோடிக்கு டிரைலர் மட்டுமே மிரட்டலாக வந்துள்ளது. பிரேவ் ஹார்ட் இருந்தால் ஒரு முறை கஷ்டப்பட்டு பார்க்கலாம்!

20 November 2009

பெலிடா நாசிகண்டர்!




ரித்தீஷ் குமாருக்கு அறிமுகம் தேவையா? ஜே.கே.ஆர் இன்றைய ராமநாதபுரம் நாடாளுமன்றத்தொகுதி எம்.பி. ‘பிரபல’ நடிகர். அகிலாண்ட நாயகன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சென்ற வாரத்தில் கிட்டியது. அவரை கண்ட இடம் பெலிடா நாசிகண்டர்.

சில நேரங்களில் மழைக்காக சென்னையின் பெரிய ஹோட்டல்களுக்குள் ஒதுங்குவதுண்டு. அதில் ஒன்று இந்த பெலிடா நாசிகண்டர். மலேசிய உணவுகள் சாப்பிட விரும்பும் புரவலர்களுக்கும் ஓசியில் யாருடைய பாக்கட்டையாவது காலிசெய்து தின்னும் என்னைப்போன்ற இரவலர்களுக்கும் அற்புதமான இடம் இந்த பெ.நா. டிநகர் தெருக்களில் சுற்றித்திரிகையில் பார்த்ததுண்டு. உள்ளே நுழைந்து விட கால்கள் துடிக்கும் ஆனால் பாக்கட்டில் இருக்கும் பத்துரூபாய் அதை தடுக்கும். நிறைய திரைப்படங்களின் ஷூட்டிங்குகள் அங்கே நடந்திருக்கிறது. ஆனால் படங்களின் பெயர் நினைவிலில்லை. கூட்டத்துடன் நின்று வேடிக்கைப்பார்த்திருக்கிறேன். மழைநேரத்தில் எப்போதும் சாப்பிடுகிற கையேந்தி பவன் விடுமுறை என்பதாலும் சம்பளப்பணம் பாங்கில் கிரடிட் ஆகிவிட்டதென்பதாலும் ஒரு குருட்டு தைரியத்தில் உள்ளே நுழைந்து விட்டேன்.

மலேசிய உணவுகளுக்கென்றே இருக்கும் பிரத்யேக கடை இந்த பெலிடா. இதில் நாசிகண்டர் என்றால் சோறு அல்லது உணவு அல்லது சாப்பாடு என்ற பொருளாக இருக்கவேண்டும். ( மலேசிய நண்பர்கள் உதவலாம் ). ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையாக என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு மினுமினுப்போடு ஜொலித்தது. இருக்கையில் அமர்ந்து கொண்டு நிமிர்ந்து பார்த்தால் பக்கத்து டேபிளில் ரித்தீஷ் குமார். அடடா! என்ன செய்ய அவரைச்சுற்றி பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் (?) நின்றுகொண்டும் அமர்ந்து கொண்டும் இருந்தார்கள். எந்த வித பந்தாவுமின்றி ஒரு கப் காபி குடித்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே சில முறை அவரோடு பேசி அறிமுகம் இருக்கிறதென்றாலும் சுற்றி இருந்தவர்களைப் பார்க்க பயமாக இருந்த்த. எனக்கு வயிறும் பசித்தது மெனுவைப்பார்த்தேன்.

குயில் குடாங்கா,மட்டன் மடாங்கா,சிக்கன் சிக்காங்கோ சின்னாங்கோ என விதவிதமான பெயர்கள். சப்ளை செய்யும் ஆளை அழைத்து. இதெல்லாம் என்ன என்றேன். நம்மூர் சிக்கன் மட்டன் மீன் கடம்பா போன்றவையைத்தான் மலேசிய மொழியில் எழுதியிருக்கின்றனர். சோறு கிடைக்குமா என்றேன். மேலும் கீழுமாக பார்த்துவிட்டு மெனுவில் கையை நீட்டிக்காண்பித்தார். அதில் சிக்கன்+நாசிகண்டார்+வெஜிடெபிள்ஸ் என்று போட்டிருந்தது. நான் குயில்+நாசிக்கண்டார் வேண்டும் என்றேன். குயில் என்றால் கடம்பா மீன்!. விலை ரூ.125+வரிகள்.

பல நிமிடங்களுக்கு முன் வைத்த ஒற்றை கிளாஸ் தண்ணீரையும் , பக்கத்தில் அமர்ந்திருந்த ரித்தீஷ் குமாரையும் பார்த்துக்கொண்டு காத்திருந்தேன். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அருகில் அமர்ந்து ‘சோறு தின்பது’ மிகமிக பெருமையான விசயம்தான். ஆனால் ஹோட்டலில் என்னைப்பற்றிய எந்த பிரக்ஞையுமே இல்லாமல் சப்ளையர்கள் அலைந்துகொண்டு , பா.உ வை விழுந்து விழுந்து கவனித்தது எரிச்சலாக இருந்தது. சாப்பிட்டதுக்கு நான் வரட்டி தருவது மாதிரியும் அந்தாளு பணம் தருவது மாதிரியுமாய் இருந்தது ‘சப்’ளை. அரை மணிநேரத்திற்கு பின் ஒருதட்டில் வெள்ளையாக சோறும் அருகில் கொஞ்சம் முட்டைகோசு பொறியலும் , ஒரு அப்பளமும் , இரண்டு அரை வெந்த அல்லது பொறித்த முழு வெண்டைக்காயும் கொடுத்தனர். அதை வாங்கி டேபிளில் வைத்துக்கொண்டு இந்த கருமத்த எப்படி தின்றது என நினைத்தபடி அமர்ந்திருந்தேன். காரணம் குழம்பில்லை. அப்போ அந்த குயிலு?




நீங்கள் நினைப்பதைப்போலத்தான் அப்பாவியாக நானும் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் ஒரு தட்டில் குழம்பு வந்தது. அதை ஊற்றி பிசைந்தால் சோறெல்லாம் எண்ணெய். சார் இந்த சாப்பாடுல என்னங்க எண்ணையா இருக்கு என்றேன் , அது மலேசியால சாப்பாடு அப்படித்தான் பண்ணுவாய்ங்க என பதில் கிடைத்தது.
குயில் தனியாக வந்தது. செம டேஸ்ட். கட்டாயம் ஒருமுறை வாய்ப்புகிடைத்தால் முயற்சிக்கலாம். பெலிடா நாசிகண்டர் + பாண்டிபஜார் + குளோபஸ் எதிரில். அதிலும் அரைவெந்த முழுநீள வெண்டைக்காய் தேன்!.

இப்படி ஒரு வழியாக நாசிகண்டருடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க , பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ரித்தீஷ் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரைப்பார்த்து புன்னகைத்தேன். வணக்கம் சார் என்றேன். உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே என்றார். சார் உங்க வீட்ல ஒரு வாட்டி மீட் பண்ணிருக்கேன். அப்புறம் சிக்னல்ல என தொடர்ந்தேன். சட்டென நினைவு வந்தவராய் அட சொல்லுங்க தம்பி என்றார். பேசிக்கொண்டிருக்கும் போதே என்னுடைய சாப்பாடு முடிந்து போயிருந்தது. என்னுடைய புதிய வேலையைப் பற்றியும் அதற்கு அவர் அனுப்பிய கடிதங்கள் , இணையத்தில் அவருடைய பிரதாபம் என பேச்சு நீண்டுகொண்டிருந்தது. அவருடைய புதிய முகமான எம்.பி பதவி பற்றியும் அடுத்த லட்சியங்கள் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். சினிமாவில் பார்ப்பதை விட நேரில் மிகமிக சாந்தமான மனிதர். மலேசிய காபி ஒன்று வாங்கி கொடுத்தார். என்னுடைய பில் வந்தது அதற்கும் தானே பணம் தருவதாக அடம்பிடித்தார். என்னுடைய பணி நிமித்தம் இதுபோன்ற இலவசங்கள் பெறுவது தவறு என நான் சுட்டிக்காட்டினேன் புரிந்துகொண்டார். அவரைச்சுற்றி இருந்தவர்கள் என்னை குறுகுறுவென பார்ப்பது ஒருமாதிரி இருக்க அவரிடம் சரிங்க சார் நாம இன்னொரு முறை சந்திப்போம் என என்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

பில் வந்தது, கார்டை நீட்டினேன். சில நிமிடங்களில் சப்ளையர் திரும்பிவந்தார். சார் கார்டு வொர்க் ஆகலை. ஏன் சார்! மலேசியாவுலயும் இட்லிலாம் சுடுவீங்களா என்றேன்..

18 November 2009

அலங்கல் - 3





ஊருக்கு புதிதாக வந்திருந்த குரு நேராக அரண்மனைக்குள் நுழைந்த போது யாருமே அவரைத் தடுக்கவில்லை. வீரர்கள் அவரை கைக்கூப்பி வணங்கினர். அவரது முகத்தில் அத்தனை பிரகாசம். இறை உருவாகத் திகழ்ந்தார். நேராக அரண்மனையின் கொலு மண்டபத்திற்குள் நுழைந்தார். இவரைக்கண்ட அரசன் திடுக்கிட்டு செய்வதறியாது எழுந்து நின்றான். அனைவருக்கும் அதிர்ச்சி.

‘’சுவாமி உங்களுக்கு என்ன வேண்டும்’’ பணிவோடு கேட்டான் அரசன்.

‘’இந்த சத்திரத்தில் தங்க ஒருநாள் அனுமதி வேண்டும்’’ என்றார் குரு.

‘’மன்னியுங்கள்! சுவாமி இது சத்திரமில்லை , என்னுடைய அரண்மனை’’

‘’இல்லை இல்லை இது சத்திரம்தான்’’ என்று வாதாடினார் குரு.

‘’சுவாமி நம்புங்க இது அரண்மனை, பாருங்க எவ்ளோ அலங்காரம் , ஆடம்பரம் , விளக்குகள் , வேலையாட்கள் , பார்த்தா அப்படி தெரியலையா’’ என்றான் மன்னன்.

‘’சரி விடு! இந்த இடத்தில் உனக்கு முன்னால் யாரெல்லாம் இருந்தார்கள்!’’

‘’எங்க அப்பா! ஆனா அவரு செத்துட்டாரே’’

‘’அதுக்கு முன்னால’’

‘’எங்க தாத்தா அவரும் செத்துட்டாரே’’

‘’அதுக்கும் முன்னால’’

‘’எங்க தாத்தாவோட அப்பா, ஏன் சாமி’’

‘’ஏன்டா தம்பி , இங்கதான் யாரு தங்கினாலும் கொஞ்ச நாள்ல காலிபண்ணிட்டு போயிடறாங்களே , அப்ப இது சத்திரம் தானே , நீ என்னடானா இதை சத்திரம் இல்லைன்ற!’’ என்றார் குரு.

*****

வேட்டைக்காரன் திரைப்படப்பாடல்கள் விஜய் பட பாடல்களைப் போல் இல்லாமல் விஜய்ஆன்டனி படத்தினுடையது என்று புரிந்தது. பாதி இரைச்சல் நிறைய கரைச்சல் சேர்ந்தால் வி.ஆ பாடல்கள் என்றில்லாமல் சமீபகாலமாக நல்ல மெலடிகளைக்கூட அவரது இசையில் கேட்க முடிகிறது. (நினைத்தாலே இனிக்கும் அழகாய் பூத்ததே, மாசிலாமணி டோரா டோரா,) . வே.கா வில் ‘என் உச்சி மண்டைல சுர்ர்ருங்குது’ பாடல் செம குத்து. அவரது லேட்டஸ்ட் கனகவேல் காக்க திரைப்படப்பாடல்கள் நேற்று கமல் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாராவது ஓசியில் கேசட்டு கொடுத்தால் கேட்கலாம். சமீபத்தில் கேட்டதில் ரேணிகுண்டா படப்பாடல்கள் வெகுவாக கவர்கிறது. முடிந்தால் கேட்டுப்பார்கலாம்.

****

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் சென்ற வாரம் ஒரு மழைக்காலையில் ரிவால்வர் ரீட்டா என்கிற அருமையான திரைப்படம் ஒளிபரப்பானது. இதற்கு முன் ஒருமுறை சிறு வயதில் எங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் (சிவாலயா என்று நினைக்கிறேன்) பார்த்திருக்கிறேன். அப்போது புரியாத பலதும் இந்த வயதில் புரிவது நன்றாகத்தான் இருந்தது.

விஜயலலிதா ஹீரோயினாக நடித்திருந்தார். ஹீரோ யார் என்று தெரியவில்லை. படம் முழுக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் , காரிலும் பைக்கிலும் விரட்டியபடியே இருந்தனர். நடுநடுவே கிளப்பில் யாராவது ஒரு பெண் ஆங்கில பாடலுக்கு நடனமாடுகிறாள். கதை புரிகிறதோ இல்லையோ ஆக்சனுக்கு உத்திரவாதமான படம். என்ன சிறுவயதில் பார்க்கும் போதிருந்த எக்ஸைட்மென்ட் இடம் மாறி இருந்தது. இரண்டிலும் உடலே பிரதானம்.
ஜீதமிழில் திரையிடப்படும் பல திரைப்படங்கள் நான் சிறுவயதில் போஸ்டரில் மட்டுமே பார்த்த காலைக்காட்சி திரைப்படங்களாக இருப்பதை உணர முடிந்தது.

அதில் ஒன்று ரெட்டைகுழல் துப்பாக்கி. கார்த்திக் நடித்து கர்ணன் இயக்கிய திரைப்படம். பல வருடங்கள் முயன்றும் தியேட்டர்காரர்களின் சதியால் பார்க்க இயலாமல் போன திரைப்படம். அதை காணும் பேறும் ஜீயால் நிகழ்ந்தது. அந்த வரிசையில் சுட்டபழம் மாணவமாணவிகள் கஜா பத்துபத்து என திநகர் கிருஷ்ணவேனி புகழ் படங்கள் பலதும் ஜீதொலைக்காட்சியில் பட்டையை கிளப்புகிறது. இது மாதிரியான மொக்கை திரைப்படங்களின் ரசிகன் என்ற முறையில் அந்த நிறுவனத்திற்கு நன்றி!.

*****

டீலா-நோடீலா நிகழ்ச்சி அட்டகாசமாக இருக்கிறது. பணத்தை வாரி இறைக்கின்றனர். உதயா சேனலிலும் ஜெமினியிலும் சாய்க்குமார் கலக்குகிறார். தமிழில் ரிஷி , புஷி கேட்போல பம்முகிறார். முதலில் புரிந்து கொள்ள மிகக்கடினமாக இருக்கும் போல் இருந்தது. இதில் என்ன சுவாரஸ்யம் என்று கூட தோன்றியது. ஆனால் நிஜமாகவே பதற வைக்கிறது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பார்த்தால் பணத்திற்கான எந்த அடிப்படைத் தேவையுமில்லாதவர்களாக இருப்பதை உணர முடிந்தது.

எப்போதும் சிகரட் வாங்கும் கடைப்பையன் கையில் மொபைலோடு எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டிருந்தான். என்னடா மேட்டர் என கேட்டபோது டீலா நோடீலாவுக்கு மெசேஜ் அனுப்பறேன் மூனு வாட்டி அனுப்பியும் தப்புனு வருது ஒம்பது ரூவா போச்சு என்றான். தமிழகத்தில் லாட்டரியை ஒழித்துவிட்டார்களே என நினைத்திருந்தது தவறு என புரிந்தது. மூளைக்கு எந்த சிரமமும் இல்லாமல் நடத்துகிற இந்த லாட்டரி பாணி போட்டிக்கு எப்படி அரசு அனுமதி வழங்கியது என்பதே புரியவில்லை. ஆளுங்கட்சி தொலைக்காட்சி என்பதால் இருக்கலாம் நமக்கேன் வம்பு!


*****

சிகரட்டை விட்டுவிட போனா வாரம் முடிவு செய்திருந்தேன். இந்தவாரம் முடிவில் மாற்றம். அடுத்தவாரம் மீண்டும் முடிவெடுக்க முடிவெடுத்திருக்கிறேன். பார்ப்போம். இந்த முடிவில்லா சிகரட் பழக்கத்திற்கு ஒரு முடிவு வராதா என்று!

****

தற்கொலை குறித்த FROZEN என்கிற சீன மொழி ஹாங்காங் திரைப்படம் பார்க்க முடிந்தது. 1998ல் வெளியான இந்த திரைப்படம் PERFORMANCE ARTISTS என்கிற கலைஞர்களின் வாழ்க்கையைப்பற்றியும் , அதில் ஈடுபடும் ஒரு இளைஞனின் தவறான முடிவினைப் பற்றியதுமாக செல்கிறது. தன்னை சுற்றி நடக்கும் சில தவறான விஷயங்கள் தன் சாவினால் மாறிவிடும் என நினைக்கும் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் ஆனால் அவனது மரணம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட வில்லை என்று செல்லும் இந்த திரைப்படத்தின் கதை ஏனோ நம்மூர் முத்துக்குமார் என்கிற இளைஞனின் மரணத்தை நினைவூட்டியது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலையோ மரணமோ ஒரு முடிவல்ல என்பதை உணர்த்துகிற இந்த திரைப்படம் சீனாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. இதில் சோப்பு தின்பது , முள்ளில் நடப்பது , பல்பை முழுங்குவது மாதிரியான செயலகளில் ஈடுபடும் நிஜகலைஞர்கள் நடித்துள்ளனர். வாய்ப்புக்கிடைத்தால் ஒரு முறை பார்க்கலாம்.

****

சென்னையிலிருந்து கோவைக்கு சேரன் எக்ஸ்பிரஸின் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் செல்வது ஒரு உன்னத அனுபவம். வாழ்க்கையையும் அதன் சாரத்தையும் மிக எளிதில் விளக்கிவிடும் வல்லமை கொண்டது. ஒவ்வொரு நிறுத்த்திலும் புதிதாய் ஏறும் ஆட்கள் , நிரம்பி வழியும் கூட்டம். நான்கு பேர் அமரக்கூடிய சீட்டில் ஆறு பேர் அமர்ந்து கொண்டு ஏழாவதாய் ஒருவர் வழிநெடுக சார் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா நானும் உக்காந்துக்குவேன் என கெஞ்சியபடி வருவதும் , அந்த சீட்டுக்காக சண்டையிடுவதும் , அடித்துக்கொள்வதும் , சீட்டுக்கிடைக்காத சிலர் கழிவறைக்குள் இடம் கிடைத்தால் கூட அங்கேயும் அமர்ந்து கொண்டு வருவதும் என விதவிதமான காட்சிகளை காண முடியும். கோவை வந்து இறங்கியபின் அந்த காலி சீட்டுகளை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் , இரவெல்லாம் எதற்காக அடித்துக்கொண்டோமோ அது காலியாய் கிடக்கும்போது புரிகிறது. நிறைய!

15 November 2009

விமர்சனம் எக்ஸ்பிரஸ் - 2012 + இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்



இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ். பிரபல '' ஹாலிவுட் சாருநிவேதிதா'' குவான்டின் டோரன்டினோவுடைய லேட்டஸ்ட் படம். பிராட் பிட் நடிப்பில் பல நாட்களுக்கு முன் வெளியானது. தேவி தியேட்டரில் ரீரிலிஸ் செய்திருந்தார்கள். மூன்று பேர் மட்டுமே அமர்ந்து கொண்டு படம் பார்க்கத்துவங்கினோம். குவான்டின் படங்களில் வசனம் ரொம்ப ஷார்ப்பாக இருக்கும் என்று தெரியும் ஆனால் இத்தனை ஷார்ப்பாகி நமது கழுத்தையே பதம் பார்க்கும் அளவிற்கு இருக்குமென்று தெரியாது. ஸ்ஸ்ப்பா முடியல! வாய் வலிக்கற வரைக்கும் பேசிகிட்டே இருக்காய்ங்க.

படத்தில் துவக்கத்தில் வருகிற பீத்தோவனுடைய சிம்பொனி மெதுவாக துவங்கி பின் வன்முறையாக ஒலிக்கும் போதே நிமிர வைக்கிறது படம். அதிலும் அந்த ஆரம்ப காட்சியில் வருகிற (வில்லன்) ஹன்ஸ் லன்டாவாக வரும் கிரிஸ்டோ வால்ட்ஸின் நடிப்பு.. ச்சே கிளாஸ்!. இத்தனை கொடூரமான வில்லனை பார்ப்பது இதுதான் முதல் முறை. ரத்தமில்லை. கத்தியில்லை. வெறும் சிரிப்பு சிரிப்பு. புன்னகை. அழகான வில்லன். பிராட் பிட் சொதப்பல் நடிப்பு. காட்பாதர் மர்லன் பிரான்டோவை உல்டா அடித்தது போலிருக்கிறது அவரது கெட்டப் மற்றும் நடிப்பு.

குவான்டின் டோரன்டினோ கொஞ்சம் ஓவரா படத்தை செதுக்கி செதுக்கி படம் லேசா நொறுங்கிருச்சோனு தோணுது. மத்தபடி படத்தோட மேக்கிங்! செம ஸ்டைலு , அந்தக்காலத்து கதையையே இவ்ளோ ஸ்டைலா குவான்டினால மட்டும்தான் எடுக்க முடியும். தலைவன் தலைவன்தான். கலக்கிருக்கான். ஒரு வாட்டி கஷ்டப்பட்டு பார்க்கலாம்

*******

உலகத்தை அழிச்சு அழிச்சு விளையாடறதே இந்த அமெரிக்கா காரங்களுக்கு வேலையா போச்சு! 2012னு ஒரு படம் , படு பயங்கரமான கிராபிக்ஸ். மலை உருளுது புரளுது , எரிமலை வெடிக்குது. வானுயர சுனாமி வருது , பூமி பொழக்குது , மொத்தமா மக்களெல்லாம் செத்துப்போறாங்க.. இழவெடுத்த எமிரிச்சுக்கு நல்லமாதிரியே படம் எடுக்க வராது போல!

தியேட்டரே ஸ்தம்பிச்சு போய் பாக்குது. படம் பூரா கிராபிக்ஸு , அருந்ததி கிராபிக்ஸுக்கே ஆனு வாயப்பொழந்தவனுங்க ஹாலிவுட் கிராபிக்ஸுக்கு என்ன செய்வானுங்க , உலகம் அழிஞ்சு போறத பாத்து விசில்தான் , கைத்தட்டல்தான் , ஆனா நமக்குத்தான் மனசுக்குள்ள லேசா குத்துச்சு .

படத்தோட கதை மொன்னையான கதைதான் , எப்பயும் போல உலகம் அழியுது , அப்ப ஒரு குடும்பம் அதையெல்லாம் தாண்டி தப்பிக்குது. ஸ்பீல்பெர்க்கோட வார் ஆப் தி வோர்ல்ட்ஸ்னு ஒரு படம். அதே கதை. அதே பொண்ட்டாட்டி ஓடிப்போனவன்தான் ஹீரோ. அவனுக்கு பொறந்த குழந்தை. படத்துல வர யாருக்குமே ஒரு புருஷன் ஒரு பொண்டாட்டியே கிடையாது. (அப்புறம் ஏன் உலகம் அழியாது).

கிளைமாக்ஸ்ல ஓடிப்போன பொண்டாட்டியோட சேர்ந்துருவான் ஹீரோ. நடுவுல எல்லாரும் சாவாங்க ஹீரோவும் குழந்தையும் தப்பிச்சுருவாங்க!. அப்புறம் கொஞ்சம் பைபிள் ரிவர்ஸ். நோவாஸ் ஆர்க். மாயன்ஸ். சைன்டிபிக்கா குளோபல் வார்மிங்னு மியாவ் மியாவ் மியாவ்னு ... புல் ஷிட்.

மத்தபடி கிராபிக்ஸ்க்காக வாய பப்பரப்பானு பொழந்துகிட்டு பாக்கலாம். படம் செம மொக்கை!

(ஒரு வேளை இந்த படத்துல வரமாதிரி நிஜமாலுமே உலகம் அழியுதுனு வச்சுக்குவோம் , அதுலருந்து தப்பிக்க பைபிள்ல வரமாதிரி நோவாஸ் ஆர்க் மாதிரி ஒரு கப்பல் ரெடி பண்றாங்கனு நினைச்சுக்கலாம்!

தமிழ்நாட்டுலருந்து யாரு முதல்ல அதுல தப்பிச்சு போவாங்கனு யோசிச்சேன்.. உலகத்தோட பெரும் பணக்காரங்க மட்டுமே போகக்கூடிய கப்பல் அது , அப்படினா யாரு முதல்ல போவா! ஆமா அவரேதான்.. என்ன நம்மூரு பணக்காரரு குடும்பம் கொஞ்சம் பெரிசு..அதனால எண்ணிக்கை அதிகம்னு பாதி வழில இறக்கிவிட்டுருவாங்க.. யாருனு உங்களுக்கே தெரிஞ்சுருக்கும் அத நான் வேற சொல்னுமாக்கும்.)


****

இப்படியாகப்பட்டது ஆங்கிலத்திலும் பல மொக்கைப்படங்கள் வருவதால் மக்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆங்கிலத்தில் வரும் நல்ல படங்களில் விமர்சனங்கள் மட்டுமே வெளியாகி வரும்நிலையில் மொக்கைப்படங்களையும் அடையாளம் காட்டவேண்டியது நம்ம கடமை இல்லையா!

11 November 2009

ஒரு பக்கக் கதை எழுதுவது எப்படி?



அதைத்தான் மூன்று நாளாக மூச்சுவிடாமல் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். யாரிடமாவது கேட்டு வாங்க இது பல்பொடியோ பல்பமோ பக்கடாவோ? இல்லை!

பக்காவான ஒருபக்கக்கதை. அவர்கள் உங்களிடம் அதை கேட்டிருக்க கூடாது. இதோ அப்படி இப்படி என்று வந்துவிட்டது அவர்களிடமிருந்தே அந்த மின்னஞ்சல். ஆமாம் ‘விகடனிலிருந்து!’.

எத்தனை வருட கனவு இது. எப்போதும் போன்றதொரு மொக்கையான முழுநாளில் நிலவொளியின் வெப்பம்தாளாமல் தனிமையாய் கட்டிலில் படுத்திருந்த கடுமையான வேளைதனில் அவரிடமிருந்து(ஆசிரியர் @விகடன் டாட் காம்) உங்களுடைய டூபாக்கூர் அட் ஜிமெயில் டாட்காமிற்கு வந்துவிட்டது டூபீர் என்று ஒரு மின்னஞ்சல். லைட்டா மூச்சு விட்டுக்கோங்க!.

அதுவும் இந்த இதழில் போட 'மூன்னனூரு வார்த்தைகளுக்கு மிகாமல் சுறுக்கமாய் சுறுக்கென கும்முனு ஒரு கதை வேண்டும் அர்ஜன்ட்' என கேட்டதிலிருந்து தலையில் விகடன் கொம்பு முளைத்து தூக்கமின்றி வேலையில் விருப்பமின்றி கணப்பொழுதும் அதே சிந்தனையை கற்பனைக்குதிரையில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் கிடைக்கவில்லை கதைக்கான கரு. நாயக்கண்டா கல்லக்காணோம் கல்லக்கண்டா நாயக்காணோம்ங்கற மாதிரி கதைகிடைச்சா டுவிஸ்ட் இல்ல டுவிஸ்டிருந்தா கதையில்ல. ரெண்டும் இருந்தா மொக்கை கதையா இருக்கு. என்ன செய்வீங்க பாவம் உங்களுக்கு இருக்கறது ஒரு குட்டியூண்டு மூளை. அதை எவ்வளவுதான் கசக்கினாலும் வரதுதானே வரும்!.

கடுப்பாக இருக்கிறது. ஒரு காலை வேளையில்.. அலுவலகம் சென்று கொண்டிருக்கிறீர்கள். போகும் வழியெங்கும் கதைகள் பலதும் வண்டியிலும் பஸ்ஸிலும் சைக்கிளிலும் நடமாடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எதுவும் அத்தனை சுவாரஸ்யமில்லை. வீட்டிலும் பல் விளக்குவதில் தொடங்கி ஆய் போய் ,காபி வித் ஆயாவுடனும் பேசியாயிற்று.. கதை?. ம்ஹூம். இப்படி கடுமையான கடுப்பில் பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போதுதான் உங்களை நோக்கி கை நீட்டினாள் அந்த இளம்பெண். கபளீகர கண்கள். ஸ்ரேயா உடல். டிங்!

லிஃப்ட்! அதுவும் நம்மிடமா! கதையாவது வெங்கயாமாவது என நினைத்துக்கொள்கிறீர்கள். அந்த அழகிக்கு அருகில் வண்டியை நிப்பாட்டிவிட்டு நல்ல பிள்ளைபோல திரும்பி பார்க்காமல் ஸ்டிரிப்பாக அமர்ந்து கொண்டு ‘ மேடம் உங்களுக்கு எங்க போகணும் நான் அடையார் போறேன் , ஆன் தி வே ல டிராப் பண்ணனுமா இல்ல நடுவுலதானா? ஏன்னா பொண்ணுங்களோட வண்டில போறத என் பேமிலில யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க! நீங்க வேற ரொம்ப அழகா இருக்கீங்க , நான் ஒரு இளைஞன்! என்னதான் பனமரத்தடிலு நின்னு பால குடிச்சாலும் பாக்கறவங்க கண்ணுக்கு கள்ளுனுதான தெரியும், என்னடா இவன் இப்படி எதுகைமோனையா பேசறானேனு தப்பா நினைக்காதீங்க நான் ஒரு எழுத்தாளர் , நெட்லலாம் நிறைய எழுதிருக்கேன். வெரி ஃபேமஸ்! படிச்சதில்ல டூபாக்கூர் டாட் பிளாக் ஸ்பாட் டாட் காம். என்னங்க பேசிட்டே இருக்கேன் ம்ம்னு கூட சொல்லாம பக்கத்திலயே நின்னுட்டு இருக்கீங்க வண்டில ஏறுங்க‘ என பேசிக்கொண்டே திரும்பி பார்க்க இரண்டு மீட்டர் இடைவெளியில் அந்தப்பெண் ஷேர் ஆட்டோ ஓன்றில் ஏறிக்கொண்டிருந்தாள்.

‘டிங்’ மீண்டும் மண்டைக்குள் மணி அடிக்கிறது. அட! ஃபிகர் போனால் என்ன கதை கிடைச்சிருச்சே! அப்புறமென்ன விர்ர்ர்ர்ரூம்..

***************

பி.கு – சரியாக 300 வார்த்தைகளைக்கொண்டு எப்போதோ எழுதியது. எண்ணி பாருங்கள்! 300தான் இருக்கு!

07 November 2009

ஜாலியா ஒரு கொலை!




சொதசொதவென மழை விடாது பெய்து கொண்டிருந்தது. கையிலிருந்த சிகரட்டு வெகுநேரமாக கரையாமல் புகைந்து கொண்டிருந்தது. மேலே பார்க்கிறான் சோடியம் வெளிச்சத்தில் சின்ன மழையும் பெரிதாக தெரிந்தது. அழகாகத்தான் இருந்தது. ஆனால் மணி பத்தரைக்கு மேல் இப்போது கிளம்பினாலே வீட்டிற்கு போவதற்குள் பனிரெண்டாகிவிடும். சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு போய் அங்கே வண்டியை பார்க்கிங்கில் போட்டுவிட்டு டிரைன் பிடித்து செல்ல வேண்டும். பாழாய்ப்போன மழை விடுவதாய் இல்லை. சொத சொத சொத...

இன்னொரு சிகரட்டையும் வாங்கி பற்றவைத்துக்கொண்டான் , இது மூன்றாவது சிகரட் , பாக்கட்டில் இதற்கு மேல் சில்லரை இல்லை. பர்ஸிலும் பணம் இல்லை. டிரெயின் பாஸும் முப்பது ரூபாய் பெட்ரோலுக்கும்தான் இருந்தது. மழை லேசாக குறைந்த மாதிரி இருந்தது. ரோட்டில் தண்ணீர் பிளாட்பாரத்திற்கு கொஞ்சம் மேலே ஓடிக்கொண்டிருந்தது. இறங்கினால் முழங்கால் அளவிற்கு இருக்கும். அவனுடைய டிவிஎஸ் ஒரு முறை ஆப் ஆகிவிட்டால் அப்புறம் நாளைக்குத்தான் ஸ்டார்ட் பண்ண முடியும். யோசித்தான். வேறு வழியில்லை. இறங்கி டிவிஎஸ் மிதித்து ஸ்டார்ட் செய்தான். ஒரே அடியில் ஸ்டார்ட் ஆகாவிட்டாலும் நாற்பது முறை முயன்று ஸ்டார்ட் செய்தான். லேசான வேகத்தில் சென்று பின் வேகமெடுத்து வேகமெடுத்து பாலத்தின் மீதேறி சூப்பர் வேகத்தில் கீழே இறங்கிக்கொண்டிருந்தது பாலத்திற்கு கீழே தண்ணீர் நிரம்ப நின்று கொண்டிருந்தது , அருகில் பெட்டிக்கடை இருப்பது தெரிந்தது , அருகில் சிலர் லுங்கி கட்டிக்கொண்டு டீ குடித்து கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள் வண்டி இறங்கிவிட்டால் , இல்லை இல்லை வண்டிக்குள் தணீணீர் இறங்கிவிட்டால் வண்டி ஆப் ஆகிவிடும் மீண்டும் என்ன அடி அடித்தாலும் ஸ்டார்ட் ஆகாது , ஓரே முறுக்கில் தண்ணீரை கடந்து விட வேண்டியதுதான் என விர்விர் என முறுக்கி கொண்டு தண்ணீரில் சர்ர்ர்ர்ரென பாய்ந்தான் , தண்ணீர் இரண்டு புறமும் பவுன்டெயின் போல கிர்ர்ர்ர் என அடித்த படி சென்றது , டீ குடித்துக்கொண்டிருந்தவர்களின் டீயிலும் வாயிலும் உடலிலும் சேற்றுத்தண்ணீர் பளீர் பளீர். அதை அவனும் கவனித்தான்.அவர்கள் முகத்தில் தெரிந்த கோபமும் தெரிந்தது , திரும்பி திரும்பி பார்த்த படியே வண்டியை ஓட்டினான். அவர்கள் ஏதோ அவனை நோக்கி கத்துவது போல் இருந்தது.. த்த்தா ஏளி என ஏதேதோ கேட்டது வேகமான காற்று என்பதால் சரியாக கேட்கவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மூவரும் முதகுகிற்கு பின்னாலிருந்து ஆளுக்கொரு வீச்சரிவாளை எடுப்பது அந்த கும்மிருட்டிலும் பளிச் என தெரிந்தது. இதையெல்லாம் அவன் டிவியில்தான் பார்த்திருக்கிறான். தண்ணி தெரிச்சதுக்கு கொலையா! அய்யய்யோ என வண்டியை முறுக்கினான். வண்டி என்ன ஓட்டினாலும் முப்பதிற்கு மேல் போகாது. ம்ம்ம்ம்ம் முடிந்த வரை முறுக்கினான். இங்கிருந்து கொஞ்சம் தூரம் போய் திரும்பி பார்த்தான். பின்னால் அந்த மூவரும் இரண்டு பைக்கில் வெறியோடு வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு சோடியம் விளக்கை தாண்டும்போதும் திரும்பி பார்த்துக்கொண்டான். அவர்களது பைக்கும் இவன் ஸ்கூட்டர் வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தது.

ஆனால் அவர்களால் அவனை நெருங்கவே முடியவில்லை. வண்டி ஆஃப் ஆகிற கூடாது ஆண்டவா உனக்கு ஒம்பது தேங்கா உடைக்கிறேன் இல்ல நூத்தியெட்டு தேங்கா உடைக்கிறேன். மிரண்டுபோய் வண்டியை ஓட்டிக்கொண்டே இருந்தான். வண்டி ஓடிக்கொண்டே இருந்து. விடாத ஓட்டம். பின்னால் வெறிபிடித்தது போல மூவரும் பலத்த சத்ததுடன் அருகில் வருவது போல் இருந்தது. ஐய்யயோ பக்கத்துல வந்துட்டாய்ங்களே இன்னைக்கு செத்தன்டா நான் என நினைத்த படி வண்டியை ஸ்டேசன் பைக் பார்க்கிங்கில் நிறுத்தினான். திரும்பி பார்த்தான் கொலைகாரப்பாவிகள் அவர்களும் வண்டியை பார்க்கிங்கில் இவனுக்கு கொஞ்சம் தள்ளி நிறுத்திக்கொண்டிருந்தனர். இவனுக்கு பதைபதைப்பு தாங்க முடியவில்லை. அவர்களும் இவனை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தனர்.

கொலைகாரர்கள் பார்க்கிங்கிற்கு காசு கொடுத்து டோக்கன் வாங்கிக்கொண்டிருந்தனர். இவனுக்கு பாஸ் அதனால் அங்கிருந்து நடை ஓட்டமாய் ஒடக்கத்துவங்கினான். கிடுகிடுவென நடந்து போய் , நின்று கொண்டிருந்த அவனது ரயில் ஏறிக்கொண்டான். உள்ளே ஏறிவிட்டு திரும்பி பார்த்தான் அவர்களை காணவில்லை. கம்பார்ட்மென்ட்கள் காலியாகத்தான் இருந்தன. இப்படிலாம் கிரைம் கதைகளில்தான வரும் நம்ம கதைல ஏன்டா வருது என நினைத்துக்கொண்டான். தனியாக போய் ஜன்னலோடு ஒட்டிக்கொண்டு தனது சாப்பாட்டு கூடையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். சட்டையும் பேண்டும் ஈரமாக சொதசொதவென்றிருந்தது. வெளியே மழை பெய்து ஜன்னல் வழியே சாரல் அடித்தது, டைட்டான கண்ணாடி ஜன்னலை பாடுபட்டு இழுத்து பூட்டிக்கொண்டான். மனதிற்கு லேசான பயம் இருந்தது. அந்த குண்டர்களை காணோம். அய்யோய்யோ நம்மை கொலை செய்து விட்டால் இந்த மாத சம்பளத்தை யார் வீட்டிற்கு தருவார்கள். கிரெடிட் கார்டு காரன் என்ன செய்வான். கொலை செஞ்சிட்டா இன்சூரன்ஸ் உடனே கிடைச்சிடுமா? அரிவாளால வெட்டினா வலிக்குமா.. ஒரு வேளை கைய வெட்டிட்டா? பேசாம கால்ல விழுந்துருவோமா? எல்லா கதைலயும் வரமாதிரி கிளைமாக்ஸ்ல ஏதாவது திடீர் திருப்பம் வந்து அவங்க எனக்கு பதிலா வேற யாரையாவது கொன்னுட்டா? ஒரு வேளை கொலைகாரனுக்கு வயித்தாலை போயி வீட்டுக்கு போகலாம்னு கிளம்பிட்டா! பல எண்ணங்கள். வரிசையில்லாமல் மாறி மாறி. ஆனாலும் பயம் கவ்வியது. வயிற்றுக்குள் கடமுடா என்றது புளித்த ஏப்பமாய் வந்தது. அந்த அரிவாள் நண்பர்களை காணவில்லை.

வண்டி கிளம்பும் சத்தம் கேட்டது. பாங்கென கத்திக்கொண்ட டும்சாக் டும்சாக் என தாள லயத்தோடு கிளம்பியது டிரெயின். நாற்காலியில் அமர்ந்திருந்தவன் லேசாக வெளியே வந்து கம்பார்ட் மென்ட்டில் பார்த்தான் பக்கத்து கம்பார்ட் மென்டில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் இருந்தனர். நிம்மதியாக இருந்தது. துணைக்கு ஆள் இருக்கு.. ஸ்ஸ்ப்பா! மூச்சுவிட்டுக்கொண்டான்.

பாத்ரூம். வாசலில் அந்த மூன்று பேர். கறுத்த நிறம். லுங்கி. குறுகுறுவென பார்வை. இவன் சாதாரணமாக நடந்து கொள்ள முயன்று தோற்றுப்போனான். வேகமாக திரும்பி மீண்டும் பழைய இடத்திற்கே வந்து அமர்ந்து கொண்டான்.

அந்த மூவரும் பின்னாலேயே வந்தனர். அவனுக்கு எதிரில் இரண்டு பேர் அமர்ந்து கொண்டனர். ஆஹா இன்னைக்கு நாம செத்தோம்டா என நினைத்துக்கொண்டான். அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தனர் இவனுக்கு மரணபயம் ஒன்றும் கேட்கவில்லை. சரக்கு வாடை அடித்தது. எங்க சரக்கடிச்சிருப்பாங்க டாஸ்மாக்காதான் இருக்கும். பிராந்தியா விஸ்கியா யோசித்தபடியே அமர்ந்திருந்தான். அவர்கள் இவனைப்பார்த்து சிரித்தனர். மூன்றாவது ஆளின் பெயர் சொல்லி அழைத்தனர்.

ஏன்டா கொலை பண்ணி பழகணும்னு சொல்லிட்டு புதுப்பொண்ணாட்டம் வெட்கப்பட்டுகிட்டு அங்கயே நின்னுட்டுஇருந்தா வாடா என அவனை அழைத்தனர். இவனுக்கு ஓட வேண்டும் போல் இருந்தது.

கதை எழுதுபவனுக்கும் கதையை படிப்பவனுக்கும் கூட அவனை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது. இந்த இடத்தில் திருப்பம் வந்து அவன் பிழைத்துக்கொள்வான் என்றே எழுதுபவன் எண்ணினான்.ஆனால்

மூன்றாவது ஆள் தயங்கி தயங்கி அந்த கம்பார்ட்மென்ட்குள் நுழைந்தான். அட இவனப்பாரு அருவாளை எப்படி புடிச்சிருக்கானு , ஒழுங்க புடிலே! என அவனது கைகளை பிடித்து சரி செய்தான் அவனை வெட்டுலே என்றான். உடலில் இருந்த மொத்த நரம்புகளும் விடைக்க , மெய்சிலிர்க்க அமர்ந்திருந்தான். சரக் சரக்.. லேசாக வலித்தது. பின் வலிக்கவில்லை. நல்லா கழுத்தை புடிச்சு அறுல! என்று அவனது கையைபிடித்து ஸ்கூட்டர்காரன் கழுத்தை அறுத்துக்கொண்டிருப்பதை, யாரோ ஒருவன் மழையின் நின்றுகொண்டு நனையாமல் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தான்.

04 November 2009

பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன?




நர்சிம் தெரிந்தோ தெரியாமலோ தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். தொடர் பதிவுகள் என்றாலே கொஞ்சம் அலர்ஜியான சமாச்சாரமாகத்தான் இருக்கும்! நர்சிம் மாதிரி மிகப்பெரிய ஆள் அழைக்கும் போது மறுக்க முடியாதே! அதனால் அவரை கலாய்ப்பது போல


பிடித்த பத்து - தினமும் அடிக்கும் கிங்ஸ் ஒரு பாக்கட்டில் இருக்கும் பத்து சிகரட்களும்
பிடிக்காத பத்து - அந்த பத்து சிகரட்களையும் பிடிப்பது பிடிக்காது...


என இரண்டு வரியில் பதிவை போட்டுவிட எண்ணியிருந்தேன்! இருந்தாலும் என்னை நானே எனக்கு பிடித்தவர்களை தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவும் போல் இருந்தது..



அதனால் இது!

1.அரசியல் தலைவர்

பிடித்தவர் : ஜெயலலிதா (ஈழத்தாய பிடிக்காம இருக்குமா!)

பிடிக்காதவர் : கலைஞர் (தமிழ்துரோகியாமே!)



2.எழுத்தாளர்

பிடித்தவர் : ராஜேஷ்குமார் ( எங்கூர்காரரு.. அதுவும் எங்க ஏரியா.. என்னையும் வாசிக்க வச்ச முதல் எழுத்தாளர்! )

பிடிக்காதவர் : சாரு ( புதிர்!)


3.பதிவர்

பிடித்தவர் : மணிகண்டன்

பிடிக்காதவர் : கே.ரவிஷங்கர் ( ஸ்ஸ்ப்பா விமர்சனத்தை நினைச்சாலே கதிகலங்குதப்பா!)


4.இயக்குனர்

பிடித்தவர் : ஏ.டி.ஜாய் ( ஷகிலாவை பிட்டுப்படங்களில் அறிமுகம் செய்த மகான்!)

பிடிக்காதவர் : ஜெய்.தே.வன் ( சமீப காலமாக எந்த பிட்டுப்படங்களும் எடுக்காததால் )


5.நடிகர்

பிடித்தவர் : விஜய் ( ஓகே ஓகே ஓகே கூல் டவுன் சிரிக்காதீங்கப்பா!)

பிடிக்காதவர் : அஜித் ( ஓகே ஓகே நோ டென்சன்!)



6.நடிகை


பிடித்தவர் : அன்றும் இன்றும் என்றும் மஞ்சுளா


பிடிக்காதவர் : திரிஷா ( மொக்கை ஃபிகர் )



7.இசையமைப்பாளர்


பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான்

பிடிக்காதவர் : யுவன்ஷங்கர்ராஜா



8.அரசு அதிகாரி

பிடித்தவர் : வெ.இறையன்பு

பிடிக்காதவர் : (பாஸ்)


9.விளையாட்டு வீரர்

பிடித்தவர் : திருநாவுக்கரசு குமரன் ( மறந்தீட்டீங்களோ.. )

பிடிக்காதவர் : அப்ரிதி


10.தொழிலதிபர்கள்

பிடித்தவர் : மல்லையா ( வாராவாரம் படியளக்குற தெய்வமாச்சே!)

பிடிக்காதவர் : அவரேதான்! ( குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு! - அப்பாடா!

பதிவு கடைசில கருத்து சொல்லியாச்சு !)


மேலே இருக்கும் படத்துக்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு என யோசிப்பவரா நீங்கள்!

உடனடியாக என் அழைப்பை ஏற்று தொடர்பதிவை தொடரவும்..

நானும் நாலு பேர கூப்பிட்டு இந்த கொலைவெறிப் பணியை தொடர வேண்டும் என்பதனால்!

1.ஜ்யோவ்ராம் சுந்தர்

2.சுகுணா திவாகர்

3.ஆழியுரான்

4.முரளிக்கண்ணன்

5.பொட்டீக்கடை

அலைபுரளும் வாழ்க்கை!



மெரினா பீச் ,கடலுக்கு மிக மிக அருகில் அமர்ந்திருக்கிறேன். அலை புரண்டு ஒடிவந்து மீண்டும் திரும்பி செல்கிறது. அவைகள் இப்படித்தான் முன்னாலிருந்து பின்னால் போகிறதா பின்னாலிருந்து முன்னே வருகிறதா என்பதில் எப்போதும் குழப்பம் தருபவை. வந்து வந்து செல்லும் அல்லது சென்று சென்று வரும். எப்படி இருந்தாலும் அதன் பெயர் அலைதான். காலுக்கு மிக அருகில் வந்துவிட்டு முத்தமிடாமல் திரும்பிச்செல்கிறது அலை. இன்றைக்கு காலையில்தான் முதன் முதலில் சென்னைக்கு வந்தேன். விடியற்காலையில். அலுவலக வேலையாக. ஓட்டலில் ரூம் போட்டு விட்டு நேராக பீச்சுக்கு ஓடோடி போனேன். கடற்கரை முதன்முதலில் பார்க்க படு ரம்மியமாக இருக்க மிக மிக சீரியஸான இந்த கதையை எழுத ஆரம்பித்தேன்...

’’தம்பீ.. வணக்கம்’’ யாரோ ஒருவன் என் அருகில் வந்து கூப்பிடுகிறான்? றார்?. பார்க்க பரதேசி போலொரு தோற்றம். கரைபடிந்த பற்கள் , ஆனால் பேண்ட்டும் சர்ட்டும் புதிதாகத்தான் இருந்தது. முகம் மட்டும்தான் அழுக்காய் இருக்கிறது. பேசும்போது குடலை பிடுங்கும் நாற்றம். கஞ்சா அல்லது மாவாவாக இருக்க வேண்டும்.

’’தம்பீ..’’ மீண்டும் அதே கறைபற்கள். ஏதோ யோசனையில் அவனை கவனிக்கவில்லை. மீண்டும் அழைத்ததும் ‘’சொல்லுங்க சார்..’’ ,

‘’உங்களை எங்கயோ பார்த்திருக்கேனே.. நீங்க கூல் ஜெயந்த் டீம்லதான வேலை பாக்கறீங்க.. ‘’

’’கூல் ஜெய்ந்தா? சார் எனக்கு சின்னி ஜெயந்த்தான் தெரியும்!’’ திருதிருவென புரையோடியிருந்த கண்களோடு முழித்தேன்.

‘’உங்கள ரெண்டு நாள் முன்ன ரவி சார் சூட்டிங்ல பார்த்தேனே!’’ மீண்டும் ஒரு குண்டு. அவன் வாயில் குண்டு போட போட எனக்கு......
நேற்றைக்கு இரவுதான் சென்னைக்கே வந்த என்னை இரண்டு நாள் முன்னமே பார்த்ததாய்.. போகட்டும் என தொடர்ந்தேன்

‘’சரி விடுங்க.. உங்கள பார்த்தா நல்லா டிப்டாப்பா காலேஜ் ஸ்டூடன்டாட்டமா இருக்கீங்க.. இங்க என்ன பண்றீங்க!’’ போருக்கு பிறந்தவன் போல விடாமல் குண்டு போட்டுக்கொண்டே இருந்தான்.

அலை இன்னும் விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் சூரியன் மெதுவாக மேலெழுந்து உதிக்க துவங்கியிருந்தது. தூரத்தில் கரையோரம் யாரோ மலம் கழித்துக்கொண்டிருந்தான். அவனை பார்க்காதது போல அமர்ந்து கொண்டேன். கரைப்பற்கள் தொடர்ந்து பேசியது. ‘’தம்பீ சினிமால நடிக்கிறீங்களா? ‘’
அதிர்ச்சி!

...




...





...

இந்த கதையை போல நானும் ஃப்ரீஸ் ஆகி போயிருந்தேன். அடப்பாவிகளா நான் சென்னைக்கு வந்து மூணு மணிநேரங்கூட ஆகல அதுக்குள்ள சினிமா சான்ஸா!. ‘’வேண்டாம் சார்.. பொழப்புக்காக வந்திருக்கேன்! சரிப்பட்டு வராது’’ மறுத்தேன். லேசாக அடிவயிற்றில் கசமுசா!

‘’தம்பி பாக்க சினிமா ஸ்டார் மாதிரி சும்மா அழகா இருக்கீங்க.. நாளைக்கு ஜெமினில ஒரு தெலுங்குபட ஷூட்டிங் வரீங்களா.. காலேஜ்ல படிக்கற மாதிரிதான்.. நீங்க எதுவும் பண்ண வேணாம். சும்மா அப்படியே நடந்து போற மாதிரிதான் சீனு..’’ கடகடவென ஏதேதோ பேசினான்..னார்!

‘’இல்லைங்க வேணாங்க.. வேலை கெட்டுரும்..அப்புறம் சினிமாலாம் நடிக்கற ஐடியா இல்ல’’ என பிகு பண்ணினேன். பிகு என்கிற வார்த்தைக்கு பொருள் அப்போதுதான் புரிந்தது.

‘’தம்பி நீங்க மட்டும் சினிமால நடிங்க, பெரிய ஸ்டாரா வருவீங்க.. நம்புங்க’’ அடடா இவன் தொல்லை தாங்க முடியலையே என நினைத்தேன். ‘’சார் நான் கிளம்புறேன் நேரமாச்சு’’ என எழுந்திருக்க , என் கையைபிடித்து இழுத்து ‘’தம்பி உக்காருங்க ஒரு நிமிஷம்...’’ என்றான்.

‘’சார் , நீங்க யாரு, ஏன் காலைல நேரத்துல கக்கூஸ் கூட போக வுடாம இப்படி டார்ச்சர குடுக்கறீங்க’’ என கோபமாய் பேசினேன்.

‘’தம்பி நான் கோயம்பத்தூரு. இருபத்தாறு வருஷத்துக்கு முன்னால..’’

‘’யோவ் நிறுத்துய்யா போதும் உங்கதை .. நீ ஹீரோவாகனும்னு டிரை பண்ணி.. மாமா வேலை பாத்து , வயிசாயி குடும்பத்த வுட்டுட்டு கஞ்சா அடிச்சு.. இப்படி ஆயிட்ட அதான உன் கதை.. யோவ் எனக்கு பாத்ரூம் போகணும்யா வுடுயா..’’ என அடுக்கடுக்காய் நான் பேச அந்த ஆள் மண்டைய மண்டையை நன்றாக ஆட்டினார். அப்போதே சுதாரித்து ஓடியிருக்க வேண்டும்.

‘’ஆமா தம்பி ஆமா அதான் என் கதை!’’ கண்கள் அகல நான் சொன்னதை ஆமோதித்தார். லேசாக கண்கள் கலங்கியிருந்தது. அவருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டும். எனக்கு ஆய் முட்டிக்கொண்டிருந்தது. சோக கதை கேட்கும் நேரமா இது. ஏழு மணிக்கு இழவெடுத்த அடிவயிற்றில் அலாரம் அடித்துவிடும். வாட்சை பார்த்தேன் மணி ஏழுதான்.

‘’யோவ் ஏன்யா என்ன படுத்தற.. என்ன வுடுயா நான் பாத்ரூம் போகணும்’’ கெஞ்சிக்கொஞ்சினேன்.

‘’தம்பி.. நீங்க சினிமா சான்ஸ்தான் வேண்டானுட்டீங்க.. நைட்டு தண்ணி அடிச்சுட்டு பர்ஸ தொலைச்சிட்டேன் ஒரு அம்பது ரூவா இருக்குமா! ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிருவேன்’’ என்று சொல்ல சொல்ல எனக்கு முட்டி முட்டி...

‘’யோவ் மயிராண்டி இத முதல்லயே சொல்லித்தொலைச்சிருக்க வேண்டியதுதான.. இந்த புடியா’’ என பாக்கட்டில் எத்தனை ரூபாய் தாள் என்பதைக்கூட பார்க்காமல் ஓடத்துவங்கினேன்.

அலை புரண்டு ஓடிவந்து மீண்டும் திரும்பி ஓடியது. அலைகள் மட்டும் எப்போதும் இப்படித்தான் முன்னாலிருந்து பின்னால் போகிறதா பின்னாலிருந்து முன்னே வருகிறதா என்பதில் எப்போதும் குழப்பம்தான். ஆனால் வந்து வந்து செல்லும் அல்லது சென்று சென்று வரும். எப்படி இருந்தாலும் அதன் பெயர் அலைதான் ...