Pages

27 February 2014

வட இந்தியக்கூலிகளும் தமிழ்நாட்டு எஜமானர்களும்



டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிர்பயாவின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் இன்று வரைக்கும் யாருக்குமே தெரியாது. இந்த நிமிடம் வரைக்குமே அதை மிகமிக ரகசியமாகவே எல்லா இடங்களிலும் கையாள்கின்றன இந்திய ஊடகங்கள்.

ஆனால் சிறுசேரி சம்பவத்திலோ. கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும் அவருடைய விபரங்களையும் அந்தப் பெண்ணின் பெற்றோரின் படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன நம்முடைய ஊடகங்கள். இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இதற்கான காரணமும் தேவையும் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இன்றும்கூட தினத்தந்தியில் பாலோ அப் செய்தியிலும் அப்பெண்ணின் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

இதுமாதிரியான வழக்குகளில் கொஞ்சமாவது எச்சரிக்கை உணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் செய்திகளை வெளியிடலாம் இல்லையா? அப்பெண்ணின் அடையாளத்துடன் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவதால் சம்பந்தப்பட்ட பெற்றோரும் உறவினர்களும் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பதையெல்லாம் என்றைக்குத்தான் நம்ம ஆட்கள் புரிந்துகொள்வார்களோ தெரியவில்லை.

அந்த பெண் ஏன் இரவு நேரத்தில் தனியாக சென்றாள்? இந்தப்பெண்களையெல்லாம் வேலைக்கே அனுப்பக்கூடாது? பத்திரமாக வீட்டுக்குள்ளயே வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்பெண்ணின் நடத்தையை பற்றி விசாரிக்க வேண்டும்? என நம்முடைய நாட்டாமைகள் என்ன ஏது என்றே தெரியாமல் இதுதான் சாக்குனு கையில் சொம்போடு உடனடியாக கிளம்பியதை பார்த்தபோது யாருக்குமே கொலைவெறி வந்திருக்கும்.

இச்சம்பவத்தை ஒட்டி இனிமேல் நைட் ஷிப்ட்டுக்கு பெண்களை அனுப்பக்கூடாது, பெண்கள் பாதுகாப்பு அவர்களுக்கு நல்லது அவர்களுக்காகத்தான் இதெல்லாம் செய்கிறோம் என்பதின் பெயரில்தான் இத்தனை ஆண்டுகளும் மதங்களின் பெயரால் ஒழுக்கத்தின் பெயரால் பாதுகாப்பினை முன்னிறுத்தியும் பெண்கள் மேல் சகல அடக்குமுறைகளும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

அந்த ஆணாதிக்க வக்கிர மனநிலையின் மிச்ச சொச்சங்களே ஒவ்வொருமுறையும் பெண்கள் எங்காவது வன்முறைக்கு ஆளாகும்போதும் பொம்பளைனா அடக்கம் வேணும், ஆடாக்கூடாது போன்ற சினிமா ஹீரோ பஞ்ச் டயலாக்கு முத்துகள் உதிர்வதற்கு காரணமாக இருக்கிறது.

ஆண்களை இம்மியளவும் சரிபண்ண அவர்களுடைய வக்கிரத்தை ஒழிக்க வக்கில்லாத வெட்கங்கெட்ட சமூகத்தில் இதெல்லாம் தவிர்க்க முடியாததுதான்.

இந்த வழக்கில் அவசரமாக கைது செய்யப்பட்டிருக்கிற நான்குபேருடன் இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்பது மட்டும் தெரிகிறது. இனி அவரவர் வேலையை பார்க்க போய்விடுவார்கள். ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வாரத்திற்கு பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு பற்றி எல்லோரும் பேசி ஓய்ந்து ஓய்ந்து சோடாகுடித்து ஏப்பம்விட்டு... உரை முடித்துக்கொள்வார்கள்.

இச்சம்பவத்தை ஒட்டிப்பேசுகிற பலரும் ''வடநாட்டுக்காரய்ங்களாலதான் பாஸ் நம்ம ஊர் கெட்டுப்பேச்சு.. கொலை கொள்ளை பெருகி போச்சு.... அவிங்கள விரட்டிட்டா ஊர் சுத்தமாகிடும்'' என்றெல்லாம் பேசுவதை கேட்க முடிகிறது.

இது என்ன லாஜிக்கோ வெங்காயமோ... ஆனால் இதற்கு பின்னால் இருப்பது கடைந்தெடுத்த இனத்துவேஷம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்ரே மாதிரியானவர்கள் முன்வைக்கிற அதே பாணி இது என்பதை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் புரிந்துகொள்ளலாம். ஓரிருவர் செய்கிற குற்றங்களுக்காக ஒட்டுமொத்தமாக அனைவரையும் வெளியேற்றச்சொல்கிற அல்லது அவர்களை மிகக்கேவலமாக நடத்த முற்படுகிற ஃபாஸிஸம் இது.

வடக்கிலிருந்து வந்து மிக குறைந்த கூலிக்கு தன்னுடைய ரத்தத்தை சிந்தி அவர்களெல்லாம் வேலை பார்க்காவிட்டால் சொகுசாக இன்றைக்கும் நம்மால் சென்னையின் எந்த மேம்பாலத்திலும் பயணிக்க முடியாது. ஐடி துறையின் மிகப்பிரமாண்டமான பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையின் உருவாக்கத்தை பற்றியெலாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. எத்தனையோ பேர் தங்களுடைய உயிரை கொடுத்து உருவாக்கிய பகுதி அது.

மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள புதிய சட்டசபை கட்டிடமும் அதன் உருவாக்கத்திற்காக இரவு பகலா உழைத்த அந்தத் தொழிலாளர்களின் உழைப்பையும் மறந்துவிடமுடியாது. இன்றும் சென்னை முழுக்க மெட்ரோ ரயில் வேலைக்கென எத்தனை பேர் இறந்துபோயிருக்கிறார்கள்.

இன்றைய சென்னையின் கட்டுமானத்தொழில் முழுக்கவே இந்த தொழிலாளர்களை நம்பித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்னமோ இந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரிலிருந்து கிளம்பிவருவதே கொள்ளையடிக்கவும் கொலைசெய்யவும்தான் என்கிற ரீதியில் பேசுவதை கேட்கே அருவருப்பாக இருக்கிறது.

சொல்லப்போனால் மிகக்குறைவான கூலிக்கு கொஞ்சமும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றிய அடிமைகளைப்போல் நடத்தப்படுகிற இந்த வட மாநில கூலித்தொழிலாளிகளை குற்றஞ்சாட்டுவதும் அவர்களை தண்டிப்பதும் அதிகார மையத்திற்கு எப்போதுமே எளிமையாக இருக்கிறது. முன்பெல்லாம் இதுபோன்ற குற்றங்களென்றால் முதலில் சேரிப்பகுதியிலிருக்கிற ஏழைகளில் நான்குபேரை கைது செய்து மக்கள் வாயை அடைப்பார்கள். இப்போது அது வட இந்தியர்களாக பரிணமித்திருக்கிறது. EASY PREY என்பது மாதிரி இதைக்கருதலாம். திருட்டுக்குற்றங்களென்றால் சேரிப்பகுதி மக்களை பிடி, குண்டு வைத்தால் இஸ்லாமியனைப்பிடி என்பதன் தொடர்ச்சியாக இதை பார்க்கலாம்.

முன்பு வேளச்சேரி கொள்ளை சம்பவத்தின் போதும் இதே பாணியில் ஏடிஎம்மில் சிகப்பு சட்டை போட்ட வட இந்தியனை கண்டுபிடித்தோம் என காவல்துறை இதே மாதிரியான ஒரு கதையை (எப்பயும் இதே கதைதான்!) சொன்னதை இங்கே நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு பிறகு மீண்டும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக ஆகிவிடுமாம்!

இவர்கள் மீது துவேஷம் காட்டுகிற நம்மூர் ஆட்கள், இந்த வட இந்தியர்களைப்போலவே நம்முடைய தமிழ் சகோதரர்கள் சிங்கப்பூர்,மலேசியா,அரபுநாடுகள் என பல இடங்களிலும் குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள் என்பதை ஏன் நினைவில் கொள்ள மறுக்கிறார்கள் என்பதும் புரியாத புதிர்தான். அடிமைகள் சிக்கினால் தானாகவே எஜமான மனோபாவம் வந்துவிடும் போல... STRANGE!

சீனிப்புளியங்கா (எ) கொடுக்காப்புளி




சில நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷிலோ பழமுதிர் நிலையத்திலோ காய்கறிகள் வாங்குபோதுதான் பாக்கெட்டுகளில் ‘’கொடுக்காபுளி’ விற்பதை கவனித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. கொடுக்காபுளியை ஒருநாள் காசுகொடுத்து (ஒரு பாக்கெட் 30ரூபாயாம்!) இப்படிப்பட்ட பெரிய சூப்பர்மார்க்கெட்டில் பாக்கெட்டில் அடைத்து விற்பார்கள் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

வாழ்நாளில் ஒரு முறைகூட அதை காசுகொடுத்து வாங்கித்தின்றதேயில்லை. ஆனால் அன்றைக்கு அதை கண்டதும் ஒரு பாக்கெட் காசுகொடுத்து வாங்கிக்கொண்டேன். கொடுக்காபுளியை மீண்டும் பார்த்ததில் ஒரு பள்ளிக்கால தோழனை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சி. இந்த கடையில் விற்கிற கொடுக்காபுளி கொஞ்சம் சைஸில் பெரிதாகவும் அதிக இனிப்பவையாகவும் இருக்கின்றன. வீட்டுக்கு வந்ததும் முதல்வேளையாக காய்கறிகளை வைத்துவிட்டு அதைதான் முதலில் பிரித்து சாப்பிட ஆரம்பித்தேன்..

கொடுக்காபுளியங்காவுக்கு கோணப்புளியங்கா, சீனிப்புளியங்கா, கொருக்கா புளி என ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் இன்னும் நிறையபெயர்களால் கொடுக்காபுளி அழைக்கப்படுகிறது. அண்ணா உங்கர்ல அப்படியா சொல்வாங்க எங்கூர்ல சீன்புளிங்காம்போம் என்கிற ஆச்சர்யத்தை அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தியில் இதற்கு பெயர் ஜங்கிள் ஜிலேபியாம்! (பேர் சூப்பரால்ல)

கிராமத்தில் வளர்ந்தவர்களோ நகரமோ இன்றைக்கு இருபது ப்ளஸ் வயதான யாருமே தங்களுடைய பள்ளிப்பருவத்தில் ஒருமுறையாவது கொடுக்காப்புளியை ருசிக்காமல் கடந்திருக்க முடியாது. என்னுடைய பள்ளிக்காலங்கள் முழுக்க இலவசமாக கிடைத்த ஒரே திண்பண்டம் இதுதான். ஊருக்குள் எங்குபார்த்தாலும் கொடுக்காப்புளி மரங்கள் நிறைந்திருக்கும். ஒரு நாளும் அதை காசுகொடுத்து வாங்கித்தின்றதில்லை.

கோவையின் இதயப்பகுதியில் வாழ்ந்தபோதும் அந்த ஏரியாவிலும் சுற்றிச்சுற்றி எங்கும் கொடுக்காப்புளி மரங்கள் நிறைந்திருக்கும். கோடை விடுமுறை காலம் நெருங்க நெருங்க அந்த மரங்கள் குழந்தைகளுக்காகவே காய்க்கத்தொடங்கும். கையில் கொரட்டு கழியோடு மரம் மரமாக அணில்களோடு அணில்களாக திரிவதை பார்த்திருக்கிறேன். பெரும்பாலான நல்ல சிவந்த கொடுக்கா புளிகளை அணில்கள் அல்லது பறவைகள் தின்றுவிடும். ஓரளவு பழுத்த பழங்கள் மட்டும்தான் நமக்கு கிடைக்கும். மிகவும் ஒடிசலாக வளரக்கூடிய இவ்வகை மரங்களின் மீதேறியும் பறிப்பது கடினம். இம்மரங்களில் பூச்சிகளும் எறும்புகளும் அதிகமாக வாழுமென்பதால் அதன் மேல் ஏறுவது எப்போதும் ஆபத்துதான். எறும்புகளால் கூட சீனிப்புளியங்காவுக்கு ஆபத்து உண்டு.

கொடுக்கா புளியை காய்களாக இருக்கும்போதே பார்த்து வைத்து அது பழுக்கும் வரை காத்திருந்து பறித்து தின்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் அவகாசம் இருக்காது. ஏரியாவில் கொடுக்காபுளி பறிக்கவே நிறைய புளியங்கா கேங்ஸ் இருக்கும். அதில் ஒன்று நமக்கு முன்பே போய் காயாக இருந்தாலும் பறித்துவிடும். அதனால் கண்களில் சிக்கியதை பிஞ்சோ காயா பழமோ அப்போதே பறித்து அப்போதே தின்றுவிடுவது நல்லது என்பது எங்கள் கேங்ஸின் எழுதப்படாத விதி.

சிகப்பும் பச்சையுமாக சிலது அதிகமாக பழுத்தும் சிலது பச்சைபசேலென காயாகவும் இருக்கும். இதை பறிக்கவே ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நீண்ட கழியும் அதன் உச்சியில் ஒரு கொடுக்குமாக வைத்திருப்பார்கள். அதனால்தான் கொடுக்கா புளி என்று பெயர்வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பயனும் தராத தானாக வளரக்கூடிய இவ்வகை மரங்களை யாரும் வெட்டுவதில்லை.

சென்னைக்கு வந்தபின் இந்த கொடுக்காபுளி மரங்களை எப்போதாவதுதான் பார்க்க நேரிடும். அவையும் அதிகம் காய்க்காத மலட்டு மரங்களாகவே இருக்கும். காய்க்கிற ஒன்றிரண்டும் கூட சப்பையான அதிக சதைபற்றில்லாத காய்களை தரக்கூடியவையாகவும் முழுக்க துவர்க்கிற சுவையுடனும் பிஞ்சிலேயே அழுகிவிடக்கூடியவையாகவும் இருக்கின்றன. இப்போதெல்லாம் இம்மரங்கள் சுத்தமாக காய்க்காமல் மருதாணி செடிபோல்தான் எங்கும் தென்படுகின்றன.

கோவையில் என்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டு வாசலில் மூன்று பெரிய பெரிய கொடுக்காபுளி மரங்கள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கிற எல்லாமே நானும் அவனும்தான் பங்கிட்டுக்கொள்வோம். எங்களை கேட்காமல் அதில் கிடைக்கிற பழங்களை தின்கிற உரிமை ஏரியா அணில்களுக்கு மட்டும்தான் உண்டு. அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாக இருந்த மரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டுவிட்டன.

அது எதுக்கு கழுத இடத்த அடச்சிகிட்டுனு வெட்டிட்டேன் மச்சான்.. வண்டி நிறுத்த இடஞ்சலா என்றான் நண்பன். இன்று கோவையை சுற்றியுள்ள எங்குமே பத்துக்கு பத்து நிலம் கூட யாரும் காலியாக விட்டுவைக்க தயாராயில்லை. எங்கெல்லாம் இந்தமரங்கள் செழித்திருந்தனவோ அங்கெல்லாம் இன்று கட்டிடங்கள் முளைத்திருப்பதை பார்க்க முடிந்தது.

சென்னையைப்பற்றி சொல்லவே வேண்டாம். அப்படியே எதாவது மரத்தில் காய்த்தாலும் அதை பறித்து எப்படி விற்கலாம் என்றுதான் மனசு அலைபாயும். பின்ன எங்கிருந்து அணில்களும் பள்ளிக்குழந்தைகளும் கொடுக்காபுளி அடிக்க…

19 February 2014

அம்மா பதிப்பகம்!




அம்மா மெஸ், அம்மா தண்ணீர், அம்மா காய்கறிகடை, அம்மா கேபிள், அம்மா மெடிக்கல்ஸை தொடர்ந்து அம்மா தியேட்டர் கூட வரப்போவதாக கிசுகிசுக்கிறார்கள்.

மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியில் இதுபோல வேறு என்னென்ன கொண்டுவரலாம்.


*அழகு மங்கையர் வாழ்வில் அல்லல்கள் நீக்கும் ''அம்மா ப்யூட்டி பார்லர்''

*வறுமையோடு மல்லுக்கட்டும் ஏழை எழுத்தாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் ''அம்மா பதிப்பகம்''

*சரக்குக்கு சைட் டிஷ் வாங்க முடியாமல் தவிக்கும் ஏழைக்குடிமகன்கள் நலம் பெற ''அம்மா சுண்டல் மற்றும் மிச்சர் கடை''

*வெயில்காலமென்பதால் ஜில்லுனு குளிக்க ஆண்பெண் இருபாலருக்குமான ஜிலுஜிலு ''அம்மா நீச்சல் குளம்''

*நாளைய வாக்களர்களான இன்றைய குழந்தைகளை கவரும் வகையில் ''அம்மா ஐஸ்க்ரீம்ஸ்''

*அழகழகான கம்மல்கள், ஜோரான வளையல்கள் மினுமினுக்கும் மூக்குத்திகள் வாங்க ''அம்மா ஃபேன்ஸி ஸ்டோர்ஸ்''

*உடல் குண்டாகிவிட்டது தொப்பை பெரிதாகிவிட்டதென்கிற கவலை நீங்க உடல்மெலிது வனம்பெருக ''அம்மா உடற்பயிற்சி நிலையம்''

*முடி உதிர்கிறதென்கிற கவலை இன்றி வாழ இனி அமேசான் காடுகளின் அரியவகை மூலிகைகள் அடங்கிய ''அம்மா மேட்டின் மூலிகை தைலம் வழங்கும் நிலையம்''

*சமூகத்தின் குப்பைகளை அகற்றி குப்பைகளற்ற நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற ''அம்மா விளக்கமாறுகள் விற்பனையகம்''

*வாலிப வயோதிகர்களை கவரவும் கவ்வவும் விலையில்லா இன்கமிங் மலிவுவிலையில் அவுட்கோயிங் நாள் ஒன்றுக்கு 999 குறுஞ்செய்தி அன்லிமிடெட் ஃபேஸ்புக் ட்விட்டர் இணையசேவை இலவசமாக வழங்கும் ''அம்மா அலைபேசி சேவை ''

*சென்னைக்கு மிக மிக அருகில் செங்கல்பட்டு தாண்டி இருந்நூற்றம்பதாவது கிலோமீட்டரில் அனைவரும் நிலம் வாங்கி வீடுகட்டி உடனே குடியேற அழகழகான ''அம்மா வீட்டுமனைகள்''

*வறுமையில் வாடும் ஆண்கள் அழகாக மாற மலிவுவிலையில் கட்டிங் சேவிங் பெடிக்யூர் மெனிக்யூர் செய்துகொள்ள ''அம்மா சலூன்''

*பணமில்லை எனும் கவலை இனி இல்லை. கையில் தங்கம் இருந்தால் சிங்கம் போல் வாழலாம் இருக்கவே இருக்கிறது ''அம்மாபுரம் கோல்ட் லோன்ஸ்'' அடகுகடை


18 February 2014

சச்சினுக்கு ஒரு திரைப்பட சமர்ப்பணம்!




*பத்தாம்வகுப்பு தேர்வில் மார்க்கு குறைவாக வாங்கி.. அதற்கு காரணம் உன்னுடைய கிரிக்கெட் வெறிதான் என வீட்டில் திட்டு வாங்கியவர்கள்.

*எந்நேரமும் பேட்டும் கையுமாக சாலையில் வீட்டு சந்தில் வீட்டுக்குள் பள்ளியில் க்ளாஸ் ரூமில் புத்தகத்தில் என கிடைத்த இடத்திலெல்லாம் கிரிக்கெட் ஆடியவர்கள்.

*பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறை என்பதே கிரிக்கெட் ஆடுவதற்குத்தான் என்று சூரியன் உதித்து அடங்கும்வரை ஆடி ஆடி கருத்துப்போனவர்கள்.

*காதலியை பார்ப்பதைவிடவும் கிரிக்கெட் முக்கியம் என நினைத்து அதை ஸ்கிப் செய்து விட்டு கிரவுண்டுக்கு சென்றவர்கள்.

*வெஸ்ட் இன்டீஸில் கனடாவில்,ஆஸ்திரேலியாவில் இந்தியா ஆடிய கிரிக்கெட் போட்டிகளை ஈஸ்பிஎன்ன்னில் ஸ்டார்ஸ்போர்ட்ஸில் நடுராத்தியிரியில் கொட்ட கொட்ட விழித்திருந்து பார்த்தவர்கள்.

*ஷார்ஜாவில் சச்சின் ஆஸ்திரேலியாவை பந்தாடியதை பார்த்து பார்த்து சிலிர்த்தவர்கள்.

*நண்பர்களோடு கூட்டாக சேர்ந்து கிரிக்கெட் டீம் ஆரம்பித்து அதற்கு கிக்கிலி பிக்கில என வித்தியாசமாக பெயர் வைத்து, ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு பேட்டும் ஸ்டம்பும் வாங்கியவர்கள்

*எப்போதும் அந்த பதினோறு பேர் கொண்ட அணி ஒன்றாகவே சுற்றித்திரிந்து ஒவ்வொருவர் வீட்டிலும் ஒன்றாகவே திட்டுவாங்கி ஒன்றாகவே மேட்ச் பார்த்து ஒன்றாகவே சுக துக்கங்களை பகிர்ந்துகொண்டு நல்லது கெட்டதுகளை கற்றுக்கொண்டு ஒரு வாழ்க்கையை கடந்துவந்தவர்கள்.

*2011ல் இந்தியா வென்றபோது கிட்டத்தட்ட இத்தனை ஆண்டு காத்திருப்பு ஒருவழியாக முடிந்த ஒரு திருப்தியை அனுபவித்தவர்கள். நெகிழ்ந்துபோய் ஒரு துளி கண்ணீரையாவது சிந்தியவர்கள்.

*முப்பது நாற்பதுவயதை கடந்த பின்னும் இன்னமும் பேட்டும் பாலும் கிடைத்தால் ஒரு காட்டு காட்ட வேண்டும் என்கிற வெறி மிச்சமிருக்கிறவர்கள்.

*முக்கியமாக சச்சின் வெறியர்கள்

70-80களில் பிறந்த பையன்கள் எல்லோருமே மேலே குறிப்பிட்ட கேட்டகிரியின் ஏதாவது ஒன்றிலோ அல்லது அனைத்திலுமோ அடங்கிவிடுவார்கள். அந்த காலகட்டத்தில் பிறந்த எல்லோருக்குமே என்றாவது ஒருநாள் எப்படியாவது சச்சின்போல கபில்தேவ்போல ஆகிவிடுவோம் என்கிற எண்ணம் நிலையாக மனதில் இருந்தது. எல்லா பையன்களும் ராப்பகலாக கிரிக்கெட் ஆடினோம். பூஸ்ட்டு குடித்தால் பெப்ஸி குடித்தால் கோக் குடித்தால் சச்சின் ஆகிவிட முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு முறை பேட்டை தொடும்போதும் பந்துவீச இரண்டுவிரல்களால் பந்தை அழுத்திப்பிடிக்கும்போதும் மிகப்பெரிய கிரிக்கெட் கனவு உடல் முழுக்க நிறைந்து இருக்கும்.. ஓங்கி அடித்த ஒவ்வொரு பந்தும் நம்மையும் சச்சினாக உணரவைத்திருக்கிறது.
கிரிக்கெட்டை உயிராக நேசிக்கிற அதுமாதிரியான ஒருவனுடைய நாற்பது வருட வாழ்க்கையை காட்சிப்படுத்துகிறது ‘1983’ என்கிற மலையாள திரைப்படம்.

கிரிக்கெட் ரசிகர்கள் தவறவிடக்கூடாத திரைப்படம் இது. படத்தின் ஏதாவது ஒரு காட்சியில் ஏதாவது ஒரு தருணத்தில் திரையில் உங்களையே நீங்கள் கண்டடைவீர்கள். மேலே கேட்ட எல்லா கேள்விகளுக்குமான உங்கள் பதில் ஆம் எனில் படம் உங்களை சில நாட்களுக்காவது இப்படம் தூங்கவிடாது. அதுதான் இப்படத்தின் வெற்றி!

கிரிக்கெட்டை இந்த அளவுக்கு கொண்டாடிய திரைப்படம் இந்திய மொழிகளில் இதுபோல் இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. இந்தியில் வெளியான ‘இக்பால்’ தமிழில் வெளியான சென்னை 600028 இரண்டு படங்களை இதோடு ஒப்பிடலாம். கிட்டத்தட்ட இது இந்த இரண்டு படங்களின் கூட்டுக்கலவையாகவே இருக்கிறது. ஆனால் இதில் முற்றிலும் புதிய கதை. புதிய களம்.

முற்றிலுமாக வாழ்க்கையின் சகல டிபார்ட்மென்ட்களிலும் தோல்வியடைந்த ஒருவனின் சோகமாக கதையை கொஞ்சம் கூட போர் அடிக்காமல் தொய்வில்லாமல் கொண்டாட்டமாக சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ABRID SHINE. படம் முடியும்போது தன்னுடைய பெயரை ‘’A HARDCORE SACHIN FAN”. இதுதான் இவர் இயக்கும் முதல் படமாம்!

படம் ஆரம்பிப்பதே சச்சின் ஓய்வுபெற்ற போது மும்பை மைதானத்தில் பேசுவதிலிருந்துதான்… படத்தில் ஹீரோவின் பெயர் ரமேஷ்! (சச்சினின் அப்பாவின் பெயர்!). படத்தின் இறுதிக்காட்சியில் சச்சினின் புகழ்பெற்ற வசனமான ‘’உன் கனவுகளை துரத்து… அதற்கான குறுக்குவழிகளை தேடாதே’’ என்கிற வாசகங்களோடுதான் படம் முடிகிறது.

1983ம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை முதன்முதலாக ஜெயிக்கும்போது படத்தின் நாயகன் ரமேஷனுக்கு வயது பத்து. அப்போது ஊரெங்கும் கிளம்புகிற கிரிக்கெட் ஆர்வத்தில் நாயகனும் கிரிக்கெட் ஆடத்தொடங்குகிறான். சச்சின்போல பெரிய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்கிற கனவோடு வாழ்கிறான். ஆனால் அவனுடைய சூழல் போதிய வழிகாட்டுதல்கள் இன்றி அந்த கனவு வெறும் டென்னிஸ்பால்கிரிக்கெட் வீரனாகவே அவனை சுறுக்கிவிடுகிறது. கிரிக்கெட் அவன் தன் காதலை படிப்பை கேரியரை என பலதையும் இழந்தாலும் கிரிக்கெட் மீதான காதலை ஒருநாளும் இழக்காமல் இருக்கிறான். அவனுக்கு திருமணமாகி குழந்தை பிறக்கிறது.

2011ம் ஆண்டு இந்தியா மீண்டும் உலக கோப்பையை வெல்கிறது. இப்போது ரமேஷனின் மகனுக்கு வயது 10! அவனுக்கும் கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. அவனும் சச்சின் ஆகும் கனவோடு பேட்டுங்கையுமாக அலைய.. ஏழைத் தந்தை ரமேஷன் அவன் கனவை நனவாக்க முடிவெடுக்கிறார். அதற்காக போராடுகிறான். தன் போராட்டத்தில் தன் மகனை கிரிக்கெட் வீரனாக்கும் முயற்சியில் முதல் படியை எடுத்துவைக்க படம் முடிகிறது…

பொதுவாக கிரிக்கெட் தொடர்பான எல்லா படங்களிலும் கிளைமாக்ஸில் ஒரு மேட்ச் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஜெயிக்க படம் முடியும் என்பது மாதிரிதான் க்ளிஷேவாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் அதுமாதிரி படம் முழுக்கவே ஒரு காட்சி கூட இல்லை. ஆனால் கிரிக்கெட் நிறைந்திருக்கிறது. அதிலும் கல்லி கிரிக்கெட்டின் அத்தனை சுவாரஸ்யங்களும் நிறைந்திருக்கிறது. மிக நுணுக்கமாக அக்காட்சிகள் கையாளப்பட்டுள்ளன. அதனாலேயே இப்படம் தனித்துவமாக தெரிகிறதோ என்னமோ!

நாயகன் ரமேஷனுக்கும் அவனுடைய மனைவிக்குமான உரையாடல்கள் , ரமேஷனுக்கும் அவனுடைய தந்தைக்குமான உரையாடல்கள் என எல்லாமே மிகுந்த ரசனையோடு உருவாக்கப்பட்டுள்ளன. படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் கூட சிறப்பாக உருவாக்கபட்டிருந்தன. அதிலும் பத்து நிமிடங்களே வருகிற அந்த மும்பை சச்சின் என்கிற டூபாக்கூர் பேர்வழியின் அசால்ட்டான நடிப்பு! நாயகன் ரமேஷனாக வருகிற நிவின்பாலி நன்றாக நடித்திருக்கிறார். (இவர் தமிழில் நேரம் என்கிற படத்தில் நாயகனாக நடித்தவர்)

கோபிசுந்தரின் இசையில் ‘ஓலஞ்சாலிக்குருவி’’ அச்சு அசல் ராஜாசார் பாணியில் உருவாக்கப்பட்டிருந்தது. இப்பாடலை ஆல்மோஸ்ட் இருபதாண்டுகளுக்கு பிறகு வாணிஜெயராம்-ஜெயச்சந்திரன் ஜோடி பாடியிருக்கிறது. முதல் பாதி முழுக்க பச்சை வண்ணங்களும் எப்போதும் மழை ஈரமுமாக இளமையினை ரசனையாக படமாக்கியிருக்கிறார் பிரதீஷ் வர்மா. படத்தின் இந்தப்பாடலும் அதை படமாக்கியிருக்கும் விதமுமே ஒரு சோறுபதமாக இருக்கும்.




சச்சினை தன் வாழ்க்கை முழுக்க வெவ்வேறு காலகட்டங்களில் அணுஅணுவாக ரசித்த ஒரு ரசிகனால் மட்டும்தான் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும். படம் முழுக்க சச்சினின் வாழ்க்கை தொடர்பான காட்சிகளை மிக அழகாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். படம் பார்த்து முடிக்கும்போது தன்னை ஹார்ட்கோர் சச்சின் ஃபேன் என்று பெருமையாக போட்டுக்கொள்ளும் அத்தனை தகுதியையும் கொண்ட இயக்குனர்தான்பா இந்தாளு என்று எண்ணம் வருகிறது. படத்தில் அங்குமிங்குமாக சின்னதும் பெரியதுமாக குறைகளும் குற்றங்களும் இருந்தாலும் அதை எல்லாவற்றையும் மறக்கச்செய்கிறது படம் முழுக்க நிறைந்திருக்கிற கிரிக்கெட்.

இத்திரைப்படம் சச்சினுக்கான மிகச்சிறந்த திரைப்பட TRIBUTE!
தவறவிடக்கூடாத திரைப்படம். குறிப்பாக சச்சின் அல்லது கிரிக்கெட் ரசிகர்கள்.



17 February 2014

வாத்துராஜா



குழந்தைகள் இலக்கியத்துக்கு நம்பிக்கை தரும் புது வரவு விஷ்ணுபுரம் சரவணன். அவருடைய குட்டீஸ் நாவலான ‘’வாத்து ராஜா’’ நிச்சயம் குட்டிப் பாப்பாக்களுக்கும் பையன்களுக்கும் பரிந்துரைக்கவும் பரிசளிக்கவும் ஏற்ற அருமையான நூல்.

ஒரு கவிஞராக இலக்கியவாதியாக மட்டுமே எனக்கு பரிச்சயமாகியிருந்தார் விஷ்ணுபுரம் சரவணன். இது அவருடைய சிறுவர் இலக்கிய முயற்சி என்பதாலேயே நூலின் மேல் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கதையின் தலைப்பு கொஞ்சம் நெருடலாக இருந்தது. ‘அட என்னடா இவரும் கடைசில குழந்தைகள் கதைனு ஏதோ ராஜா ராணி கதையவே எழுதிருப்பாரு போலயே’ என்கிற வருத்தம் கதை தலைப்பை பார்த்ததும் தோன்றியது.

ஆனால் நூலை வாசிக்க ஆரம்பித்த பிறகுதான்… இது அதுமாதிரி கதையில்லை இது புதுமாதிரி கதை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இந்நூலில் இரண்டு கதைகள் சொல்லப்படுகிறது. ஒன்று அமுதா, கீர்த்தனா மற்றும் பேசும் அணிலின் கதை இன்னொன்றுதான் வாத்துராஜாவின் கதை.

அமுதா தன் பாட்டி சொன்ன ஒரு வாத்துராஜாவின் கதையை கீர்த்தனாவிடமும் அணிலிடம் சொல்லிக்கொண்டிருக்க அவளுடைய குரலிலேயே நமக்கும் வாத்துராஜாவின் கதை சொல்லப்படுகிறது. ஒரு சூழ்நிலையில் வாத்துகளின் மேல் கோபங்கொள்ளும் முட்டாள் அரசன் ஊரில் உள்ள வாத்துகளை கொல்ல முடிவெடுக்க மலை கிராமத்து சிறுமியான சுந்தரி எப்படி தன்னுடைய இரண்டு வாத்துகளை காப்பாற்றினாள் என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது இந்நூல்.

பாதிகதையை சொல்லிவிட்டு கீர்த்தனாவின் பாட்டி ஊருக்கு சென்றுவிட கீர்த்தனாவும் அமுதாவும் அணிலும் ஆர்வம் தாங்கமுடியாமல் வாத்துராஜா கதையின் மீதியை தெரிந்துகொள்ள வெவ்வேறு முயற்சிகளை எடுப்பதும் அதன் வழியே வெவ்வேறு விஷயங்களை தெரிந்துகொள்வதும் சுவாரஸ்யமாக இருந்தது.

பாதிகதைக்கு மேல் கீர்த்தனா சொல்கிற கதையை அமுதா அணிலோடு நாமும் அமர்ந்துகேட்க ஆரம்பித்துவிடுகிறோம். மீதி கதை என்ன என்பது தெரியாமல் தவிக்கும் போது நமக்கு தவிப்பு ஒட்டிக்கொள்கிறது.

குழந்தைகள் வாசிப்பதற்கேற்ற எளிமையான மொழியும் சொல் தேர்வும் சின்ன சின்ன வாக்கிய அமைப்பும் இந்நூலின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. நூல் முழுக்க நிறைந்திருக்கிற ஓவியரின் அழகான படங்களும் அழகு (ஓவியர் பெயரே ஓவியர்தான்!). நிச்சயம் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கலாம்.

நூலின் ஒரே குறையாக நான் கருதுவது பின்னட்டையில் யூமா வாசுகி எழுதியிருக்கிற குறிப்புதான்! அதில் சில வரிகள்

‘’சிறாரின் இருத்தலும் இயல்பும் உரிமையும், பொதுப்பிரக்ஞைத் தளத்திற்கு அப்பாலிருக்கும் இந்த நெடிய வறட்சியில் இவரது செயல்பாடு பசுமையின் மகத்துவமுடையது!’’

இப்படியெல்லாம் ஒரு சிறுவர் நூலில் எழுதி பயமுறுத்தினால் எப்படி? பெற்றோர்களே பயந்துபோய் புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு ஓடிவிடமாட்டார்களா?

***

வாத்துராஜா
விஷ்ணுபுரம் சரவணன்
பாரதிபுத்தகாலயம்
விலை-ரூ.50

11 February 2014

பண்ணையாரும் பத்மினியும்



பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண்குமார் மிகவும் திறமையானவர். அவருடைய குறும்படங்களின் ரசிகன் நான். அவர் இயக்கிய பல குறும்படங்களை திரும்ப திரும்ப பார்த்து ரசித்திருக்கிறேன். பத்து நிமிட படத்தில் அத்தனை உழைப்பும் நேர்மையும் அர்ப்பணிப்பும் கிரியேட்டிவிட்டியும் ஆழமான உணர்வுகளும் அன்பும் நிறைந்திருக்கும்.

சில குறும்படங்களை பார்த்து கதறி கதறி அழுதிருக்கிறேன். அவருடைய குறும்படம் ஒன்று ஆசை என்று நினைக்கிறேன். அந்த பலூன் பையனின் கதையை எப்போதுமே மறக்கமுடியாது. நாடோடிமன்னன் குறும்படம் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வளவு திறமையான இயக்குனர் ஏன் தன்னுடைய குறும்படத்தின் கதையையே அல்லது அவற்றின் தொகுப்பையே திரைப்படமாக்க முடிவெடுத்தார் என்றுதான் புரியவில்லை. தவறான சப்ஜெக்ட்டை தேர்வு செய்தது மட்டும்தான் அருண்குமார் செய்த மிகப்பெரியதவறு என்று படம் பார்த்தபோது தோன்றியது. வருத்தம்தான். ஏன் என்றால் படமாக்கலிலும் ஒரு நல்ல திரைப்படம் தரவேண்டும் என்கிற முனைப்பிலும் நூறுசதவீதம் உழைத்திருக்கிறார் அருண். ஆனால் அது சிறப்பாக வராமல் போனதற்கு காரணமாக நான் கருதுவது தவறான சப்ஜெக்ட்தான்.

படம் முழுக்க நிறையவே சுவாரஸ்யமான காட்சிகள் மற்றும் தருணங்கள் இருந்தாலும். ஒரு சுவாரஸ்யமான காட்சிக்காக பதினைந்து இருபது நிமிடங்கள் கொடூரமான மொக்கைகளை சகித்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. சில காட்சிகளை வலிந்து இழுத்திருப்பது தெரிகிறது. குறும்பட இயக்குனர்களின் பாணியே எதையும் சுறுங்கச்சொல்லி அசரடிப்பதுதான். பீட்சா,சூதுகவ்வும் இரண்டுபடங்களிலுமே காட்சிகளும் சரி உணர்வுகளும் சரி எல்லாமே நறுக்கென்று இருக்கும்.ஆனால் இந்தபடத்தின் மிகப்பெரிய குறையே இதன் மகாமெகா நீளம்தான். இரண்டரை மணிநேர படம் இரண்டுமூன்று நாள் ஓடுவதைப்போன்ற உணர்வைத்தருகிறது!

படம் முழுக்க ஒரு தாத்தா பாட்டி லவ் போர்ஷனை திரும்ப திரும்ப ஒரேமாதிரி காட்டிக்காட்டி சலிப்படைய வைக்கிறார்கள். (இதில் நடுவால நடுவால எஸ்ஏ ராஜ்குமார் பாணியில் லாலாலா தீம் ம்யூசிக் வேற கொடுமை!). படத்தில் காட்டப்படுகிற தாத்தா-பாட்டி, பண்ணையார்-பத்மினி, முருகேசன்-காதலி என எல்லா காதல்களுமே ரிப்பிட்டேசனின் உச்சம் எனலாம். அவையும் ஆழமின்றி காட்சிப்படுத்தப்பட்டு பண்ணையாரையும் பிடிக்காமல் பத்மினியையும் பிடிக்காமல் படம் முழுக்க நெளிந்தபடி படம் பார்ப்பவரை சோதிக்கின்றன.

இதே படம் முன்பு குறும்படமாக வந்தபோது பார்த்து அசந்திருக்கிறேன். பலரிடமும் பகிர்ந்திருக்கிறேன். குறும்படம் எடுக்க நினைக்கிறவர்களுக்கு ஒரு நல்ல உற்சாகமான குறும்படம் எடுப்பதற்கு ரெபரென்சாக இக்குறும்படத்தை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

எல்லாவிதங்களிலும் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட பிரமாதமான படம் அது. படத்தில் சொன்ன விஷயங்களை விட சொல்லப்படாத விஷயங்களால்தான் அந்தக்குறும்படம் வெற்றிபெற்றது என்று நினைக்கிறேன். குறிப்பாக ஏன் பண்ணையாருக்கு பத்மினி மேல் காதல் வந்தது என்பதை இரண்டு வரி வசனத்தில் மூன்று மாண்டேஜ்காட்சிகளில் சொல்லியிருப்பார் இயக்குனர் அருண்குமார். ஆனால் இந்தப்படத்தில் அதுகூட இல்லை. ஏன் பண்ணையாருக்கு பத்மினியை பிடிக்கிறது? தெரியாது. அதுவும் அவர் காசு கொடுத்து வாங்கி வண்டிகூட இல்லை. அடுத்தவன் சொத்து! அதுக்கு ஆசப்படலாமா? என்கிற கேள்வி உடனே நமக்கு எழுகிறது.

இதனாலேயே இயல்பாக வரக்கூடிய ஒட்டுதல் நமக்கு அந்தக்காரின் மேல் வருவதில்லை. ஆனால் குறும்படத்தில் இந்தக்காரை காசுகொடுத்து வாங்கியிருப்பார் பண்ணையார்! அதுதான் வித்தியாசம்.
அடுத்து படத்தில் வில்லியாக சித்தரிக்கப்படும் அந்த மகள் பாத்திரம். இப்போதெல்லாம் மெகாசீரியல்களிலும் கூட இப்படிப்பட்ட வில்லிகளை பார்க்க முடிவதில்லை. அவரை ஒரு பேராசைக்காரியாக பழையகாலத்து எம்.என்.ராஜம் டைப்பில் உருவாக்கியிருந்தது ரொம்பவே சோதிப்பதாக இருந்தது. அது யதார்த்தமான கதையில் எந்த விதத்திலும் ஒட்டவேயில்லை.

படத்தில் அந்தக்காருக்கு எதிரியாக சித்தரிக்கப்படுகிற இன்னொரு மேட்டர் மினிபஸ். உண்மையில் பஸ்வசதியற்ற அந்த ஊருக்கு மினிபஸ் வருவது நல்ல விஷயம். அது எப்படி வில்லனாக பார்வையாளனின் மனதில் பதியும் என்று புரியவில்லை. சொல்லப்போனால் அந்தக்காரை விட மினிபஸ் அதிகமும் பயன்தரக்கூடியது. அதுதான் ஊருக்கும் முக்கியமானதும் கூட! அப்படியிருக்க அதை எப்படி எதிரியாக பாவிக்க முடியும்.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘’DUEL’’ திரைப்படத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அந்தப்படத்தில் வருகிற அந்த லாரியை பார்த்தாலே பார்வையாளனுக்கு பயம் வரும். காரணம் அதன் அமைப்பு, நிறம் மற்றும் அதன் நோக்கம். ஆனால் இந்தப்படத்தில் மினிபஸ்ஸின் நோக்கம் என்ன? அல்லது அந்த டிரைவரின் நோக்கம் என்ன? சொல்லப்போனால் படத்தில் டிரைவர் ஒழுங்காகவே வண்டி ஓட்டிச்செல்ல அவரிடம் வம்பிழுப்பது விஜயசேதுபதிதான். அவரும் அவருடைய காரும்தான் இங்கே பார்வையாளனுக்கு வில்லனாகின்றனர்! (குறும்படத்தில் காருக்கு வில்லனாக வருவது ஒரு நவீன புதுரக கார்).

இதனாலேயே படத்தில் வருகிற பத்மினி மீது படம் பார்ப்பவருக்கு ஒரு நெருக்கமான உணர்வு ஏற்படுவதில்லை. அந்தக்காரும் அவ்வளவு அழகாகவும் இல்லை! அக்காரை இன்னும் கூட அழகாக காட்டியிருக்கலாம். அதோடு அந்தகாரோடு பார்வையாளனுக்கு நெருக்கம் ஏற்படுத்தும்படி சில நல்ல சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருக்கலாம். படம் முழுக்க அது ஒரு ப்ராபர்டியாக மட்டும்தான் உணரப்படுகிறது. அதோடு படத்தில் வருகிற எல்லா பாத்திரங்களும் அந்த காரைப்பற்றியோ அல்லது காருடனோ பேசிக்கொண்டேயிருப்பது உண்மையில் கார்மீது கோபத்தையே வரவழைக்கிறது.

படத்தில் விஜய்சேதுபதி காதலிக்கிற காட்சிகளில் அவ்வளவு வறட்சி. இந்த சாவுவீட்டில் காதலியை பார்க்கிற சென்டிமென்ட் எந்த படத்திலிருந்து தொடங்கியதென்று தெரியவில்லை. தொடர்ச்சியாக இது நான்காவது படமென்று நினைவு. வி.சேவுக்கு ரொமான்ஸ் சுத்தமாக வரவில்லை! அந்த நாயகி மட்டும் அழகாக இருக்கிறார். விஜய்சேதுபதி அனேகமாக இதே கெட்டப்பில் இதே மேனரிசத்தில் இதே உடல்மொழியில் நடிக்கிற நான்காவது படம் என்று நினைக்கிறேன். அவரை பகத்ஃபாசிலோடு ஒப்பிட்டு பலரும் பேசிக்கொண்டிருக்க அவரோ டிபிகல் தமிழ்சினிமா நாயகனைப்போல மாறிக்கொண்டிருக்கிறார். இப்படியே போனால் இந்த ஆண்டின் இறுதியில் சலித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

படத்தின் ஆறுதலான விஷயங்கள். அவ்வப்போது அசரடிக்கிற ஜஸ்டினின் இசை. 'எங்க ஊரு வண்டி'' பாடலும் அதை படமாக்கிய விதமும் ஃபென்டாஸ்டிக். கேமரா கோணங்கள். படம் முழுக்க தெரிகிற அந்த 80ஸ் படங்களின் மஞ்சள் டின்ட். அவ்வப்போது புன்னகைக்க வைக்கிற நகைச்சுவை. குறிப்பாக பீடை என்கிற பாத்திரத்தில் வருகிற அந்த நடிகர். அவருடைய டைமிங் காமெடிகள் எல்லாமே ரசனையாக இருந்தன. உண்மையில் பரோட்டா சூரியைவிட இவர் அசத்துகிறார். முன்பு குட்டிப்புலி படத்திலும் கூட இவரை கவனித்திருக்கிறேன். (குறும்படத்தில் டிரைவராக இவர்தான் நடித்திருப்பார்.. பாவம் இதில் க்ளீனர்!)

மற்றபடி அருண்குமார் நிச்சயம் தன்னுடைய அடுத்த படத்தில் இந்த குறைகளை சரிசெய்துவிடுவார் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோ!