Pages

30 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு சுண்டெலியும்!




‘’பலவழிகளில் ஒரு விமர்சகனின் வேலை மிகவும் சுலபமானது. இதற்காக நாங்கள் எடுக்கிற ரிஸ்க் மிகமிகக் குறைவானதே!

எங்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுகிற படைப்பையும் படைத்தவர்களையும் மதிப்பிட்டு தீர்ப்பு வழங்குகிற இடத்தில் இருப்பதும், அது தரும் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்களாகவே நாங்கள் எப்போதும் இருக்கிறோம்.

எதிர்மறை விமர்சனங்களால் நாங்கள் செழித்து வளர்கிறோம். அவைதான் எழுதவும் வாசிக்கவும் உற்சாகமளிப்பதாகவும் உல்லாசமாகவும் இருக்கிறது.

ஆனால் விமர்சகர்களாகிய நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய மோசமான உண்மை ஒன்று இருக்கிறது, அது எங்களுடைய விமர்சனங்களை காட்டிலும் மோசமாக படைக்கப்பட்ட ஒரு குப்பை கூட அதிக அர்த்தப்பூர்வமானது.

புத்தம் புதிதான ஒன்றை கண்டறியும்போதும் அதற்காக அதன் சார்பில் வாதிட நேரிடும்போதும் ஒரு விமர்சகன் நிஜமாவே தன்னுடைய அனைத்தையும் பணயம் வைக்க வேண்டிய சூழல் ஒன்று உருவாகிறது. இந்த உலகம் எப்போதுமே புதிய முயற்சிகளுக்கும் புதிய படைப்புகளுக்கும் அனுசரணையாக இருந்ததேயில்லை. இந்த புதிய படைப்புகளுக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்.

நேற்று இரவு எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. ஓர் அற்புதமான உணவை எதிர்பாராத ஒரு பின்னணியிலிருந்து சாப்பிட்டேன். அந்த உணவை சமைத்தவரும் அந்த உணவும் அற்புதமான சமையல் என்பதற்கான என் சகல முன் அனுமானங்களுக்கும் சவால் விடுவதாக இருந்தது. என்னுடைய ஆழங்களையும் அவை அதிரவைத்தன’’

- ‘’ Ratatouille’’ என்கிற அனிமேஷன் படத்தின் இறுதிக்காட்சிக்கு சற்றுமுன்னர் படத்தில் வருகிற உணவு விமர்சகர் ANTON EGO எழுதும் அல்லது வாசிக்கும் வாசகங்கள் இவை.

****

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்துவிட்டு வந்து 24நான்கு மணிநேரங்களை கடந்துவிட்டேன். இன்னமும் மீளமுடியாத ஒரு துயரம் உள்ளுக்குள் நிறைந்திருக்கிறது. அது எனக்குள் எங்கோ இன்னமும் ஆறாமல் மிஞ்சியிருக்கிற ஒரு காயத்தை தூண்டி வலிக்கச்செய்கிறது.

அவ்வப்போது நினைவிலிருந்து ஒலிக்கும் இளையராஜாவின் பின்னணி இசை கண்களில் நீர்க்கோர்க்க வைக்கிறது. இப்படம் தமிழ்சினிமாவில் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்று. சினிமாவை நேசிக்கிற ஒவ்வொருவரும் பார்க்கவும் வரவேற்கவும் ரசிக்கவும் வேண்டிய ஒரு திரைப்படமாகவும் இது இருக்கிறது.

நான் செய்ய நினைத்ததை கொஞ்சமும் சமரசமின்றி செய்திருக்கிறேன் பார் என்பதன் கர்வத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் உணர முடிகிறது. படம் நெடுக அவ்வளவு மெனக்கெடல். மிகமிக நுணுக்கமாக எழுதப்பட்ட திரைக்கதையின் நேர்த்தி. மிகச்சிறிய பாவனைகளிலும் அதிரவைக்கிற நடிகர்களின் PRECISION. படம்நெடுக இரவையும் பாத்திரமாக்கி மஞ்சள் உடைக்கு மாற்றி உலவ விட்டிருப்பதன் செய்நேர்த்தி. இப்படி படம் குறித்து இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

படத்தின் டைட்டில்கார்டில் ஒரே ஒரு பெயர்தான் காண்பிக்கப்படுகிறது. அது இளையராஜா!. ஒரு நல்ல கலைஞனை இதைவிட யாரும் கௌரவித்துவிட முடியாது. படத்தின் ஆறு இடங்களில் சிலிர்க்கவைத்திருக்கிறார் இளையராஜா. முதல் காட்யில் சாலையோரம் கிடக்கும் மிஷ்கினின் உடலை வண்டியில் வைத்துக்கொண்டு ஸ்ரீ பயணிக்கிற காட்சி, ஸ்ரீயோடு மிஷ்கின் டிரெயினில் தப்பித்துச்செல்லும் காட்சி, பார்வை குறைபாடுகொண்ட பெண்ணோடு ஸ்ரீ மற்றும் காவல்துறை அதிகாரியோடு மறைவான இடம்திரும்பும் இடைவேளைக்கு முந்தைய காட்சி என இன்னும் படம் நெடுக இளையராஜா தொடர்ச்சியாக அதிரவைக்கிறார். (மீதிமூன்றையும் சொன்னால் ஒரு நல்ல த்ரில்லரை கொன்ற பாவியாகிவிடுவேன்)

படத்தின் பின்னணி இசை முன்பே வெளியாகிவிட்டது. அவற்றையெல்லாம் தனித்தனியாக தரவிறக்கி கடந்த பத்துநாட்களாக அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தாலும் திரையில் அக்காட்சியோடு பார்க்கும்போது... அது உண்டாக்குகிற தாக்கமும் துக்கமும் அளவிடமுடியாதது. வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

இரண்டு மெழுகுவர்த்திகளுக்கு முன்னால் அமர்ந்தபடி தன்னுடைய முன்கதையை கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி சொல்லும்காட்சியில் மிஷ்கின் என்கிற அற்புதமான நடிகன் வெளிப்படுகிறார்.

கிளைமாக்ஸுக்கு முன்பு வரைக்கும் நாயகனின் ஃபிளாஷ்பேக் இடம்பெறவேயில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் அந்த சுடுகாட்டில் ஒரு பார்வையில்லாத சிறுமி ‘’எட்வர்ட் அண்ணா ஒரு கதை சொல்லு’’ என்று மிஷ்கினிடம் கேட்கிறாள். இதுவரை நாம் பார்த்த படங்களில் நாயகன் இதுமாதிரி சூழலில் பாட்டுப்பாடத்தொடங்கிவிடுவான்.. ‘’என்னை கதை சொல்லச்சொன்னா என்ன கதை சொல்லுறது…’’ என்று எத்தனை பாட்டுகள் கேட்டிருக்கிறோம். ஆனால் மிஷ்கின் குழந்தைக்கு கதைதான் சொல்லத்தொடங்குகிறார்.

அக்கதையையும் அதன் பாத்திரங்களையும் பார்வையாளனின் கற்பனைக்கு திறந்துவிடுகிறார். ஈசாப் பாணி கதையாக அது அமைந்திருக்கிறது. ( மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களை கொண்டு புனைந்து எழுதப்பட்டவைதானே ஈசாப் கதைகள்!). படத்தின் கதைகூட ஒநாய் நனைகிறதே என ஒரு ஆடு அழுகிற கதைதான்!

அறிவுஜீவிகள் மத்தியில் நம் திரைப்படங்கள் மீது வைக்கப்படுகிற விமர்சனம் என்னவாக இருக்கிறது. ‘’திரைப்படங்கள் இருட்டு அறையில் பார்வையாளனை எதையும் கற்பனை செய்ய விடாமல் எல்லாவற்றையும் காட்சிப்படுத்துகிறது’’ என்பதே. ஆனால் அதற்கு நேர்மாறாக மிஷ்கினின் கதை கேட்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கற்பனைகளுக்குள் புகுந்துகொள்கின்றனர். அது அவர்களுக்கு வெவ்வேறுவிதமான பாதிப்புகளை உண்டுபண்ணுகிறது. திரையரங்கில் சிலர் சிரிப்பதையும் சிலர் உறைந்துபோய் அமர்ந்திருந்ததையும் சிலர் கண்களை துடைத்துக்கொண்டதையும் கவனிக்க முடிந்தது. படம் முழுக்கவே இதேமாதிரியான பாணியிலேயே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அது ஸ்ரீயின் போதைப்பழக்கத்தில் தொடங்கி,எட்வர்ட் யார்,திருநங்கை எப்படி இவர்களோடு இணைந்தாள்,மிஷ்கினுக்கு உதவும் அந்த இந்திக்கார போன்நண்பன் யார் என்பதாக விரிகிறது. எல்லாமே நாமாக யூகிக்கும் வாய்ப்பை தருகிற விஷயங்கள்.

டாகேஷி கிட்டானோவின் படங்களின் பாதிப்பில்லாமல் மிஷ்கின் படமா!. இப்படத்திலும் அப்பாதிப்பை நிறையவே உணர முடிந்தது. குறிப்பாக உல்ஃப் என்கிற அந்த நாயகனின் பாத்திரம் ஜப்பானின் யகூஜா வகை கிரிமினலாக படைத்திருப்பதையும், அந்த வில்லன் பாத்திரம் அவ்வகை யகூஜா கூட்டங்களின் தலைவனைப்போலவும் உருவாக்கியிருந்ததை உதாரணமாகச்சொல்லலாம். இருப்பினும் மிஷ்கின் தனக்கென்று ஒரு திரைமொழியை கொண்டிருக்கிறார். அது மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது.

டாரன்டினோ தன் ஒவ்வொரு படங்களிலும் ஒரு உலகத்தை உருவாக்கி அதில் தனக்கு வேண்டியவர்களையும் வேண்டாதவர்களையும் இஷ்டப்படி ஆட்டுவிப்பாரே அதுபோலவே மிஷ்கினும் தனக்கென்று ஒரு உலகை சிருஷ்டித்துக்கொள்கிறார். அதில் கொடூரமான வில்லன் பைபிளை நேசிப்பவனாக இருக்கிறான். அவ்வளவு பிரச்சனையிலும் கதைகேட்க துடிக்கிற குழந்தைகள் இருக்கின்றன. சாவு வீட்டில் இருந்தபடி ஆபரேசனுக்கு உதவும் மருத்துவர் இருக்கிறார். மிஷ்கினின் உலகத்தில் சென்னை முழுக்க இரவில் சாலைகளில் அவருடைய பாத்திரங்கள் மட்டும்தான் உலவுகின்றனர்.

ஒவ்வொரு ஆளாக ஓடிப்போய் அடிவாங்குவது, ஆட்கள் நகர்ந்தபின்னும் கேமரா வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டு காத்திருப்பது, எது பேசுவதாக இருந்தாலும் கொஞ்சம் PAUSE விட்டு காத்திருந்த பேசுவது என மிஷ்கின் டைப் விஷயங்கள் இல்லாமல் இல்லை. சொல்லப்போனால் மிஷ்கினின் முந்தைய படங்களில் இருந்த எல்லா விஷயங்களும் இப்படத்திலும் இருக்கிறது. குறிப்பாக பாத்திரங்கள். ரவுடிகளால் பாதிக்கப்படும் மர்மமான மிடில்கிளாஸ் குடும்பம், சீனியரிடம் திட்டுவாங்கி எரிச்சலோடும் ஆதங்கத்தோடும் திரியும் காவல் அதிகாரி,முட்டாள்களோடு வெறிபிடித்தலையும் வில்லன்கள்,எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவும் பைத்தியக்காரன் என இன்னும் நிறையபேரை சொல்லலாம். இவர்களை மிஷ்கினின் உலகில் எப்போதும் பார்க்க முடியும்.

தமிழ்சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு மிகக்குறைவான தூரத்தில் ஓடி ஓடி நடித்தது மிஷ்கின் படத்தில் நடித்தவர்களாகத்தான் இருக்கும். படம் முழுக்க ஆளாளுக்கு குபீர் குபீர் என ஒன்றரை மீட்டர் தூரமாக இருந்தாலும் ஓடுகின்றனர்.

அதுவே படத்தின் முக்கிய பாத்திரத்தில் வருகிற ஷாஜிக்கு மிகப்பெரிய சிரமத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அவருக்கு நல்ல நீளமான கால்கள்! குறைவான தூரத்தை ஓடிக்கடப்பதில் மிகவும் சிரம்பபடுகிறார். ஆனால் மிகமிக அற்புதமான குரல் ஷாஜிக்கு! மேடைகளில் அவருடைய பேச்சை கேட்கும்போதே அக்குரலுக்கு மயங்கியிருக்கிறேன். படத்தின் ஆரம்ப காட்சிகளில் அவருடைய உடல்மொழியும் குரலும் பேச்சுவழக்கும் AWKWARD ஆக இருந்தாலும் போகப்போக பிடித்துப்போகிறது. குறிப்பாக கமிஷனர் அலுவலகத்தில் அவர் பேசுகிற மிகநீண்ட வசனம்… தியேட்டரில் விசில் பறக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு எழுத்தாளனுக்கு வாசகன் விசில் அடிப்பது இதுவே முதல்முறையாக இருக்குமென்று நினைக்கிறேன். (அது WRONG REASONகளுக்காக இருந்தாலும்!)

படத்தில் நடித்திருக்கும் திருநங்கை கிளாடி,பார்வையற்ற பெண்ணாக வருகிற அந்த பெயர் தெரியாத நடிகை,இன்ஸ்பெக்டர் பிச்சையாக வருகிற ரகு என பலரும் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளனர். இவர்களோடு மிகவும் ரசித்தது ஆட்டுக்குட்டி ஸ்ரீதான்! படம் முழுக்க மாறிமாறி வரும் எத்தனைவிதமான முகபாவனைகள்! வழக்கு எண் படத்தில் நடித்ததை விட பன்மடங்கு முன்னேற்றங்காட்டுகிறார். கல்லறையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு காவலர்களை மிரட்டும் காட்சியில் உச்சம் தொடுகிறார்.

படத்தில் குறைகள் என்றால் அனேக காட்சிகளில் கிடைக்கிற சின்ன சின்ன தர்க்கப்பிழைகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டியதாயிருக்கும். ஆனால் இது இயக்குனரின் படம். படம் முழுக்க அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரே சிருஷ்டித்த உலகில் படம் இயங்குகிறது. அப்பிழைகளை வேண்டுமென்றேதான் அவர் செய்திருக்கிறார். அது ஒரு சிறந்த கலைஞனின் கர்வத்திலிருந்து பிறந்ததாக இருக்கிறது. என்னுடைய படங்களில் இது இப்படித்தான் இருக்கும் என்கிற உறுதியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

படம் முழுக்க பைபிளும் பைபிள் சார்ந்த விஷயங்களும் (REDEMPTION, பாவமன்னிப்பு…ETC) குறியீடுகளாக எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் அது எவ்வகையிலும் பார்வையாளனை தொந்தரவு செய்யாத வண்ணம் திரைக்கதையோடு பின்னிபிணைந்திருக்கின்றன (SKYFALL படத்தில் இவ்விஷயம் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். மிஷ்கினின் படத்திலும் SKYFALL படத்தின் பாடல் ஓரிடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது!).

இந்த எளிமைதான் படம் சாதாரண எளிய பார்வையாளனையும் கவர்ந்திருக்கிறது. அவனுக்கும் படம் புரிகிறது. அவனும் படத்தோடு இணைந்து ரசிக்கிறான். சிரிக்கிறான். அழுகிறான். படம் தொடங்கிய சில நிமிடங்களில் துவங்கும் பரபரப்பு படத்தின் இறுதிவரை நீடிக்கிறது. அதுதான் வெகுஜன ரசிகனையும் ஈர்ப்பதாக இருக்கிறது. இருந்தும் ஏனோ திரையரங்குகளில் மிகக்குறைவான காட்சிகள்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் மொழியும் அணுகுமுறையும் திரைக்கதை பாணியும் தமிழ்சினிமாவுக்கு மிகவும் புதியது. நம்மை அதிரவைப்பது. இந்த உலகம் எப்போதுமே புதிய முயற்சிகளுக்கும் புதிய படைப்புகளுக்கும் அனுசரணையாக இருந்ததேயில்லை. இந்த புதிய படைப்புகளுக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்.

25 September 2013

வெட்டியும் விரலும்





தன் பால்யத்தில் எதையுமே விரும்பாத மகேஸ்வரி அக்கா, இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் பார்ப்பதையெல்லாம் லைக்கிக்கொண்டிருக்கிறாள். நேற்று தலப்பாக்கட்டு பிரியாணி கடையை கடக்கும்போது கண்ணில் தெரிந்த லெக்பீசில் மகேஸ்வரி அக்காவின் முகம் அனிச்சையாக வந்துபோனது.

ராஜேந்திரன் சித்தப்பாவின் ஒன்றுவிட்டசகோதரனின் மனைவியின் அக்கா கணவரின் அண்ணன் மகன் சதிஷை மகேஸ்வரி அக்கா மிகவும் காதலித்தாள். வாழ்க்கை விசித்திரமானது அது ஷாருக்கானை காதலித்தாலும் சதிஷில் த்ருப்தி அடையும். ஹன்சிகாவை ரசித்தாலும் அம்சாவுக்கே லெட்டர் கொடுக்கும்.

கொய்யாப்பழங்களை எப்படி உரித்து சாப்பிடமுடியாதோ அதுபோலவே மகேஸ்வரி அக்காவின் வாழ்க்கையும் சிக்கலாக இருந்தது. இன்னமும் நினைவிருக்கிறது மகேஸ்வரி அக்காவுக்கு லவ்லெட்டர் கொடுத்து உதைவாங்கிய மகேஷின் முகம்.

மகேஸ்வரி அக்கா சந்தோஷமாக இருந்த நாட்களில் தெருவோரம் ஒருவன் குச்சி ஐஸ் விற்க வேண்டியிருந்தது. இன்னொரு தெருவோரம் ஒருவன் சிக்கன் பக்கோடாவுக்கு மாவு பிசைய வேண்டியிருந்தது. இன்னொருதெருவோரம் ஒருவன் பிஞ்சுமாங்காயில் உப்பும் மிளகாயும் போட வேண்டியிருந்தது. இன்னொரு தெருவோரம் ஒருவன்...

மழைபெய்தால் மகேஸ்வரி அக்கா நினைவுக்கு வந்துவிடுவாள். ஏனென்றால் மானாவுக்கு மானா போட்டு எழுதும்போது தானாக ஒரு கிக் வந்துவிடுகிறதே. மகேஸ்வரி அக்காவோடு பெருமாள் கோவிலிருந்து வாங்கித்தின்ற பொங்கலும் புளியோதரையும் நாவோரம் இனிக்கிறது.

இந்த புளியோதரைக்கான புளி எந்த மரத்தில் காய்த்திருக்கும். அந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிய குழந்தைகளுக்கு தெரியுமா இம்மரத்து புளியில் செய்த புளியோதரையை மகேஸ்வரி அக்கா சாப்பிடுவாள் என்று. இந்த பொங்கலில் தித்திக்கும் வெல்லம் எந்த குண்டாவில் கிண்டப்பட்டிருக்கும்.

கிண்டும்போது சிந்திய வியர்வையின் உப்பு எங்கோ அடிமனதில் கரிக்கிறதே. கறுக் சுறுக் என்று கடிக்கும்போது பல்லிடுக்கில் சிக்கிக்கொள்ளும் மிளகைப்போல அவ்வப்போது மகேஸ்வரி அக்காவைப்பற்றிய நினைவுகளும் வந்துபோகும். குச்சி ஐஸை சப்பிசப்பி தின்றபின் வெறுங்குச்சியை யாரும் வீட்டுக்கு கொண்டுபோவதில்லை. அதுபோலவேதான் மகேஸவரி அக்காவின் நினைவுகளும்.

அண்ணாச்சிகடை தராசில் எடைப்போடப்படும் பெருங்காயத்தைப்போல மகேஸ்வரி அக்காவும் தன் கவலைகளை எப்போதும் எடைபோட்டபடி இருப்பாள். முட்டைபிரியாணியில் பீஸ் இருந்தால் வேண்டாம் என்றா சொல்வோம் அதுபோல மகேஸ்வரி அக்காவின் வாழ்க்கையிலும் எண்ணற்ற திருப்பங்களை கடக்க வேண்டியிருந்தது. ரங்கநாதன் தெருவின் பரபரப்பாய் அமைந்துவிட்ட தன் வாழ்க்கையில் மகேஸ்வரி அக்கா போட்டதெல்லாம் பழைய இரும்பு வாங்கியதெல்லாம் நிறைய பேரீச்சம்பழம்.





23 September 2013

மூடர்கூடம்




சாந்தி தியேட்டரில் மூடர்கூடம் படத்துக்கு அன்றைய தினம் முதல் டிக்கட்டை எடுத்தவன் நானே. எனக்கு பிறகு யாரெல்லாம் டிக்கட் எடுக்கிறார்கள் என்பதை கவுண்ட்டருக்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். படம் போடும்வரை டைம்பாஸ் ஆகவேண்டாமா?

மூன்று ஜோடி காதலர்கள் மட்டுமே அதற்கு பிறகு டிக்கட் எடுத்து தியேட்டருக்குள் நுழைந்தனர். உள்ளே நுழைந்ததும் ஆளுக்கு ஒரு மூலையை தேர்ந்தெடுத்து மறைந்துகொள்ள.. தன்னந்தனியாக நான் மட்டும் அமர்ந்திருந்தேன். அந்த ஜோடிகள் யாரும் படம் பார்க்க வந்தவர்களாக தெரியவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கவும் சாந்தியில் வசதியில்லை. ஆனால் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதை என்னுடைய வாசக மனது தானாகவே இட்டு நிரப்பிக்கொண்டிருந்தது.

ஏனோ அந்த பிரமாண்டமான இருள் நிறைந்த திரையங்கில் படம் அமர்ந்திருப்பது பூத்பங்களாவில் பேய்க்காக காத்திருப்பது போல் இருந்தது. டே சீக்கிரம் படத்தப்போடுங்கடா பயமாறுக்கு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

நல்ல வேளையாக படம் தொடங்க சில நிமிடங்கள் முன்பு சிலர் என்னோடு இணைந்துகொண்டனர். சிலர் என்பது ஐந்து அல்லது ஆறுபேராக இருக்கலாம். அவர்களோடு நானும் சேர்ந்துகொண்ட படம் பார்க்க ஆரம்பித்தேன்.

படம் தொடங்கி முதல் சில காட்சிகளிலேயே நான் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒவ்வொரு வசனமும் பாத்திரப்படைப்பும் காட்சிகளும் அவ்வளவு அரசியலும் பகடியும் நிறைந்ததாக இருந்தது. ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். நவீன் மிகநன்றாக படமாக்கியிருந்தார்.

எனக்கு சிரிப்புன்னா சிரிப்பு அப்படி ஒரு சிரிப்பு. ஆனால் எனக்கு அருகில் அமர்ந்திருந்த யாரும் சிரிக்கவில்லை. சீரியஸாகவே படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

என்னங்கடா இவ்ளோ சூப்பர் ஜோக்கு.. இதுக்கூட சிரிக்காம அப்படியே இடிச்ச புளி கணக்கா உக்காந்திருக்கீங்க என்கிற என் மனசாட்சியின் கதறல் யாருக்கோ கேட்டிருக்கும்போல.. லேசா ஹிஹி என்று சிரிப்பது கேட்டது! நான் தனியாள் இல்ல.

இடைவேளை.

கையில் சிகரட்டோடு ஒரு நபர் என்னிடம் வந்து தீப்பெட்டி இருக்குமா என்றார்.

‘’சார் நுரையீரல் பஞ்சுபோன்று மென்மையானது.. புகைபிடிப்பதால் இவ்வளவு பாதிப்பூ...’’ என்று சொல்லத் தொடங்கினேன். பக்கத்தில் இருந்த மணல் கொட்டிவைக்கப்பட்டிருந்த குண்டாவில் த்தூ என துப்பிவிட்டுச்சென்றார். அந்த குண்டா முழுக்கவே நிறையபேர் துப்பியிருந்தனர்.

இன்னொரு நபர் என் அருகில் வந்து நின்றார். ‘’என்னசார் படம்பூ... எடுக்குறானுங்க.. அஞ்சுரூவா கூட செலவுபூ பண்ணாத இன்னாபூ படம்பூ இது.. காமெடினு லூசுமாதிரி நட்ந்துக்குறானுங்க’’ என்று புலம்பினார்.

‘’சார் உங்களுக்கு படம் புரியலை.. இந்தமாதிரி படம் பார்க்க உங்களுக்கு கொஞ்சமாவது வாசிப்பு அனுபவம்.. அரசியல் ஞானம் இருக்கணும்.. அதாவது படத்துல சொல்ல வர விஷயம் என்னான்னா.. நம்ம சமூகத்துல இருக்கிற வெவ்வேற பிரச்சனைகளை அதன் தாக்கங்களை மார்க்ஸ் சொன்ன மாங்கா தத்துவத்த எவ்ளோ அழுகா...’’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்க..

அதுவரை முறைத்தபடி கேட்டுக்கொண்டிருந்த அந்த நபரும் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகிலிருந்த குண்டானில் சிகப்பு நிறத்தில் துப்பிவிட்டுச்சென்றார். படம் ஆரம்பித்துவிட்டதுபோலிருக்க நானும் அதே குண்டானில் நானும் ஒருக்கா வெள்ளை நிறத்தில் துப்பிவிட்டு கிளம்பினேன்.

படம் தொடங்கியது.

ஒவ்வொருவராக சிரிக்க ஆரம்பித்து படம் முடியும்போது எல்லோருமே சிரித்துக்கொண்டிருந்தனர். சில இடங்களில் மிகப்பெரிய உற்சாகத்தோடு சத்தமாக அவர்கள் சிரித்தனர். நானும் அவர்களோடு சேர்ந்து சிரித்தேன். படம் முடிந்ததும் பார்க்கிங்கில் வண்டியை கிளப்பும்போது.. அந்த இடைவேளை துப்புதல் திலகம் என்னைப்பார்த்து புன்னகைத்தார். நானும் அவரை நோக்கி புன்னகைத்தேன். அடுத்தகாட்சிக்கு இரண்டுபேர்தான் காத்திருந்தனர். அவர்களும் காதல்ஜோடிகள்தான்.

சாய்சாந்தியில் கான்ஜூரிங் என்கிற ஹாலிவுட் படம் ஓடிக்கொண்டிருந்தது, அதற்காக வந்திருந்த இரண்டுபேர் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு.. பேசிக்கொண்டிருந்தனர். ‘’மச்சான் மூடர்கூடம்னு கூட ஒருபடம் இருக்கே.. அதுக்கு போவமா.. செமயாருக்கும் போலருக்கே’’ என தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தான்.

‘’மொக்கை படம் போலருக்கு மச்சான்.. ஓவியாலாம் இருக்கு... அத பாக்க நாம பேய்ப்படத்துக்கே போவோம்’’ என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம்...

‘’பாஸ் மூடர்கூடம் கட்டாயம் பாருங்க ரொம்ப நல்ல படம், மிஸ்பண்ணிடாதீங்க! இதுமாதிரி படங்களை நாமதான் என்கரேஜ் பண்ணனும்..’’ என்று சொல்லிவிட்டு என் வண்டியை கிளப்பிவீடுவந்து சேர்ந்தேன். அவர்கள் கான்ஜூரிங் போயிருப்பார்கள். அதோடு நான் சென்றபின் துப்பியும் இருக்கலாம். யாருக்குத்தெரியும்.

*******

படம் அட்டாக் ஆஃப் தி கேஸ் ஸ்டேஷன் என்கிற படத்தின் தழுவல் என்று நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார். வருத்தமாக இருந்தது. இன்னும் அப்படம் பார்க்கவில்லை. அப்படியெல்லாம் இருந்துவிடக்கூடாது என எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டிக்கொண்டேன். நவீன் மேல் நம்பிக்கை இருக்கிறது.

20 September 2013

பாம்புகள் என்றால்...




‘’சார் அவன் ஒரு நரிப்பய சார்’’
‘’அய்யோ அவனா அவனுக்கு பாம்பு மாதிரி உடம்பெல்லாம் விஷமாச்சே’’
‘’பிணந்திண்ணி கழுகுகள் மாதிரி சார் அவங்க.. செத்தாலும் விடாமட்டாங்க’’
‘’யானை மிதிக்கிறாப்ல உன்னை மிதிச்சிடுவேன் பாரு’’

இதுமாதிரியெல்லாம் சூழலியல் எழுத்தாளர் ச.முகமது அலியிடம் உரையாடினால் மூக்கிலேயே குத்திவிடுவார். காட்டுயிர்களை இதுபோல தவறாக உவமைப்படுத்துவதை அடியோடு வெறுப்பவர் முகமதுஅலி. மிகவும் கோபக்காரர். அதை அவருடைய எழுத்துகளில் ஒவ்வொரு சொற்களிலும் ஒவ்வொரு வரிகளிலும் உணர முடியும். சுற்றுசூழல் குறித்து அனல்பறக்க எழுதுபவர்கள் இவர்.

தன் எல்லா புத்தகங்களிலும் இதுபோன்ற உவமைகளை பயன்படுத்துவது, கார்ட்டூன்களில் விலங்கினங்களை தவறாக சித்தரிப்பது, பாடல்களில் இலக்கியங்களில் நம் புக்கங்களின் தலைப்புகளில் சிறார் கதைகளில் என விலங்குகளின் குணங்களாக சிலவற்றை முன்னிருத்துவதையெல்லாம் தொடர்ந்து விமர்சித்து வருபவர். கோவை மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் இவர் 80களிலிருந்து இன்றுவரை ‘’காட்டுயிர்’’ என்கிற மாத இதழையும் வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

மிகசிறப்பாகவும் எளிமையாகவும் காட்டுயிர்களைப்பற்றி எழுதக்கூடியவர் முகமது அலி. அவருடைய ‘’யானைகள் – அழியும் பேருயிர்’’ என்கிற நூல் இதுவரை தமிழில் வெளியான யானைகள் குறித்த புத்தகங்களில் மிகமிக முக்கியமான புத்தகமாக கருதப்படுகிறது. யானைகளைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் படிக்கவேண்டிய நூல் இது. இவை தவிர பறவைகள் குறித்து வட்டமிடும் கழுகு, நெருப்புக்குழியில் குருவி முதலான நூல்கள் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டவை. காட்டுயிர்கள் குறித்த சரியான புரிதலையும் தேடலையும் உண்டாக்குபவை. இதுவரை காட்டுயிர்கள் தொடர்பாக வெவ்வேறு தலைப்புகளில் ஆறுநூல்களை முகமது அலி எழுதியுள்ளார்.

அவருடைய ‘’பாம்பு என்றால்’’ என்கிற நூல் அண்மையில் வாசிக்க கிடைத்தது. பாம்புகளை பற்றிய நம்முடைய மூடநம்பிக்கைகளில் தொடங்கி அவற்றின் உடலமைப்பு, வாழ்க்கைமுறை என பல்வேறு தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்தியாவில் வாழும் 200 ப்ளஸ் பாம்பு வகைகளில் வெறும் நான்குவகை பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை மீதியெல்லாமே விஷமற்றவை என்கிற தகவல் முக்கியமானது. கருநாகம் அல்லது ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன், கடல் பாம்பு, பச்சைபாம்பு, மலைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், சாரைப்பாம்பு, மன்னுளிப்பாம்பு, சிறுபாம்பு, தண்ணீர் பாம்பு என தமிழகத்தின் பலவகை பாம்புகள், அவற்றின் வாழ்விடங்கள், உணவு முறை, வெவ்வேறு விதமான குணாதியசங்கள், பாம்புகள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மனிதர்கள் என பல தகவல்கள் இந்நூல் முழுக்க நிறைந்துள்ளன.

நம் ஊரில் விநோதமான ஒரு பழக்கமுண்டு. பாம்புகளை தெய்வம் என வணங்குவோம். அதே பாம்பு வீட்டுக்குள்ளோ அல்லது தோட்டத்திலோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்லவோ எரித்துக்கொல்வதற்கோ தயங்குவதில்லை. எரித்தோ அடித்தோ கொன்றுவிட்டு அதற்கு பிறகு செத்துப்போன பாம்பை பார்த்து பயந்து போய் அதற்கு பூஜை செய்து பால் ஊற்றி புதைப்போம்.... இது என்ன வகையான மூடநம்பிக்கை என்பது புரியாத புதிரே. பாம்புகளை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இவ்வகை மூடநம்பிக்கைகளை ஒழிக்கவே முடியாது என்கிறார் முகமது அலி.

நாட்டில் பாம்புகள் கடித்து மாண்டுபோகிறவர்களில் பாதிபேர் பயத்தினாலே மாண்டுபோகிறவர்கள்தான் என்கிறது இந்நூல். அதோடு வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதும் இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பாம்புகள் கடித்துவிட்டால் எப்படி முதலுதவி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார் ஆசிரியர். பாம்புக்கடிக்கு உலகில் அலோபதி தவிர்த்து வேறெந்த முறை மருத்துவமும் ஆபத்தானதே என்று ஆணியடித்துச் சொல்கிறார்.

கொம்பேறி மூக்கன் என்கிற பாம்பு மனிதர்களை பழிவாங்க அவர்களை கடித்து கொன்றதோடு செத்துப்போனவரை புதைத்த சுடுகாடு வரைக்கும் வந்து பார்க்கும் என்று ஒரு கதை உண்டு.. உண்மையில் கொம்பேறி மூக்கன்கள் மிகச்சிறிய வகை பாம்புகள். அவற்றிற்கு விஷம் கூட கிடையாது! அதோடு இந்த மூடநம்பிக்கையாலேயே இவை தொடர்ந்து பார்த்த இடத்தில் கொல்லப்படுவது அதிகமாக நடக்கிறது என்று கவலைகொள்கிறார் நூலின் ஆசிரியர். அனகோன்டாவில் தொடங்கி நம்மூர் நாகாத்தாம்மன் படமெடுக்கும் இராமநாராயணன் வரை பாம்புகள் பற்றி கொஞ்சமும் புரிதல் இல்லாமல் படமெடுக்கிற இயக்குனர்களையும் சாடத்தவறவில்லை முகமது அலி.

இரண்டுபாம்புகள் அப்படியே சுருண்டு பின்னி பிணைந்திருப்பது நம்முடைய திரைப்படங்களில் இரண்டு பாம்புகளின் ரொமான்ஸாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இரண்டு ஆண்பாம்புகளின் சண்டை என்றும், இணைக்காகவும் தங்கள் வாழ்விடத்துக்காகவும் அவை சண்டையிட்டுக்கொள்வதை தவறாக இப்படி இத்தனைக்காலமும் சித்தரித்திருக்கிறோம்.

ராஜநாகம் அல்லது கருநாகம் என்கிற மிக அதிக விஷம்கொண்ட பாம்பு ஒன்று மேட்டுப்பாளையத்தில் கொல்லப்பட்ட சம்பவமும் இந்நூலில் இடம்பிடித்துள்ளது. காடுகளை ஆக்கிரமிக்கும் மனிதர்களின் பேராசைக்கு எப்படி காட்டுயிர்கள் பலியாகின்றன என்பதற்கு இச்சம்பவம் மிக நல்ல எடுத்துக்காட்டு.

வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இருக்கும் என்று தோன்றுகிறது. காரணம் பல தகவல்கள் நூலின் எல்லா கட்டுரைகளிலும் திரும்ப திரும்ப (உலகின் விஷமுள்ள பாம்பு ராஜநாகம், சிறிய பாம்பு மாதிரியான தகவல்கள்) வருகின்றன. கொஞ்சம் அதை பார்த்து எடிட் பண்ணிப்போட்டிருக்கலாம். ஏனென்றால் படிக்கும்போது எரிச்சலாக இருக்கிறது.

பாம்புகளின் சகல விஷயங்களையும் வெவ்வேறு நாட்டினரிடையே இருக்கிற பாம்புகளுடனான தொடர்புகளை எளிமையாக ஆராய்கிற இந்நூலில் ஏனோ இருளர்கள் பற்றிய ஒரு குறிப்பு கூட இல்லை. அது வேண்டுமென்ற தவிர்க்கப்பட்டிருக்கலாம். மற்றபடி பாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைகளை இந்நூல் போக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. பாம்புகளை பற்றிய அச்சம் அதிகமாக உள்ள என்னைப்போன்றவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய சிறிய நூல் இது.


பாம்பு என்றால்
இயற்கை வரலாறு அறக்கட்டளை வெளியீடு
மேட்டுப்பாளையம்
தொலைபேசி எண் - 04259-253252
80பக்கங்கள் , 50ரூ.

17 September 2013

காவி ரிப்பன்களும் புன்னகைக்கும் பிள்ளையாரும்





கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப்பொட்டு கழுத்தில் காவி துண்டு.. கண்கள் சிவக்க உடலெல்லாம் வேர்த்துகொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர்களை கடந்த சில ஆண்டுகளாக யானைமுகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது.

பிள்ளையாரோடு அமர்ந்திருக்கிற இவர்களுக்கு கடவுள் பக்தியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. சிலர் அந்த ஆட்டோக்களிலேயே புகை பிடிப்பதும், ஒரு கட்டிங் போடுவதுமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு MOB MENTALITY யோடு வெறித்தனமாக இயங்குகிற இளைஞர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கணபதியை கடலில் கரைக்கிற இந்த சடங்கினை தங்களுடைய ஜபர்தஸ்த்தை ஏரியாவில் பலத்தினை காட்டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டுதோறும் நடத்துகிறார்கள். இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்துமுண்ணனி மாதிரியான இந்துமத முன்னேற்ற அமைப்புகளின் ஆதரவும் பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. அது போதாதென்று எந்த பகுதியில் பிள்ளையார் உட்காரப்போகிறாரோ அப்பகுதி சில்லரை வியாபாரிகளிடம் உருட்டி மிரட்டியும் வசூல் வேட்டை நடத்துவதில் தவறுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏரியாவில் தங்கள் பலமென்ன என்பதை காட்டுவதற்கு விநாயகர் ஒருகருவியாக இருக்கிறார். விரும்பியோ விரும்பாமலோ அவரும் இந்த காவி நாயகர்களோடு ஒற்றை தந்தத்துடன் பயணிக்கிறார். கடல் வரை பயணித்து கரைந்தும் போகிறார்.

இந்தப்பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு! ஞாயிறன்று காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப்படும் டெம்போ ஆட்டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பொறுக்கி பக்தர்களும் கடற்கரைக்கு பயணித்துக்கொண்டிருந்தார்கள். ஏய் ஏய்.. ஆய் ஊய் என்கிற சப்தங்கள் ஒலிக்க அவர்கள் ஊர்வலமாக சென்றுகொண்டிருந்தனர். பிள்ளையார் ஆட்டோவின் மூலையில் அமரவைக்கப்பட்டிருந்தார்.

டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதினைந்து வயது இருக்கலாம். அவள் அந்த டெம்போவை ஒட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக்கிறாள்... ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் முதலில் விசிலடித்தனர்... பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எரிந்தனர். அதற்கு பிறகு அதில் ஒரு பொறுக்கி பக்தன் தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப்பெண்ணின் மேல் பீய்ச்சி அடிக்கத்தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்த பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான்.

அந்தப்பெண் கோபத்தில் ஏதோ பதிலுக்கு ஏதோ திட்ட ஆரம்பிக்க.. ஆட்டோவை அந்த பெண் மேல் ஏற்றுவதைப்போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ டிரைவர். உதயம் தியேட்டர் அருகே நூறடிரோடு திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப்பது போல ஒடிக்க.. ஸ்கூட்டி பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீயணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பஸ் ஸ்டான்ட் அருகே தடுமாறி விழுந்தாள். பெரிய காயமில்லை.. விழுந்ததும் அருகில் பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்துவிட்டனர்.

ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள்ளையார் வண்டிகளின் நீண்ட வரிசையில் இணைந்தது.

இவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்டவரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர்களைப்போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும் கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல்லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர்களைப்பார்க்க ஒரு நீண்ட சண்டைக்காக காத்திருக்கிறவர்களைப்போல இருந்தது. மிகச்சிறிய தூண்டுதலிலும் கொலையோ கற்பழிப்பையோ கூட அரங்கேற்றுகிற ஆக்ரோஷத்துடன் இருந்தனர். காவல்துறை நண்பர்களும் கூட இக்கூட்டத்தினரிடம் அடக்கியே வாசிக்கின்றனர்.

இந்த காவி ரிப்பன் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும் இவர்கள் எல்லோருமே மூக்கு முட்ட குடிப்பவர்களாக சின்ன தூண்டுதலிலும் ஆகப்பெரிய வன்முறையை நிகழ்த்திவிடுகிறவர்களாக இருப்பதும் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வலுப்படுத்துகிறது.

நேற்று சந்தித்த அந்த டெம்போஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின் மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகிர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத்திலும் பயமுறுத்தக்கூடியது... சாகும்வரை மறக்கவே முடியாதது.

10 September 2013

புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்!




ஒரு புத்தகத்தின் 128 பக்கங்களையும் புன்னகையோடு வாசித்ததுண்டா? சிவக்குமாரின் ஆதிமங்கலத்து விசேஷங்கள் நூலின் ஒவ்வொரு வரியிலும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத்தான் நகரவேண்டியிருக்கிறது. அல்லது அவரே அதை பிடுங்கிக்கொள்கிறார். எவ்வளவு கனமான விஷயங்களையும் மிகமிக எளிய ஆனால் உற்சாகமான மொழியில் எள்ளலோடு சொல்லிச்செல்கிறார்.

ஆதிமங்கலம் என்கிற கற்பனை கிராமத்துக்கு வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு விஞ்ஞான சாதனங்கள் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின் மனிதர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியமைக்கிறது என்பதுதான் மொத்த நூலுமே.. இவை கட்டுரைத்தொகுப்பா? அல்லது சிறுகதை தொகுப்பா? அல்லது இரண்டு கலந்த கலவையா? என்கிற ஆராய்ச்சிகளை தாண்டி... மிகமிக சுவாரஸ்யமாக எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆவணம். ஐம்பதாண்டு தமிழகத்தின் சுறுக்கப்பட்ட எளிய வரலாற்றின் ஒருபகுதி இப்புத்தகத்தினுள் இருக்கிறது.

தமிழ்நாட்டின் சிறுநகர கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்த வெவ்வேறு விஷயங்களும் இப்புத்தகத்தின் வெவ்வேறு பாத்திரங்களின் சம்பவங்களின் ஊடாக அலசிகாயப்போடப்படுகின்றன. மின்சாரம், பேருந்து, மருந்துக்கடை, டிவி, சுடிதார், பாக்கெட் மாவு, தபால் ஆபீஸ், மொபைல் போன், தொலைபேசி, அழைப்புமணி, கிரைண்டர் என இன்று நம்முடைய வாழ்க்கையோடு இணைந்துவிட்ட பல விஷயங்களின் முதல் வருகை எப்படி இருந்திருக்கும் என்பதை சிரிக்க சிரிக்க கூறுகிறார் சிவகுமார்.

90களின் துவக்கத்தில் ஊருக்குள் டிவி இருக்கிற ஒற்றை வீடுகளை முற்றுகையிட்டு டிவி பார்த்த காலம் ஒன்றுண்டு. காலையிலிருந்தே கேட் அருகே தபாலுக்காக காத்திருந்த காலம், பஸ் வருகிற நேரத்தை வைத்து டைம் சொன்ன ஆசாமிகள் உண்டு,கையில் மலேசிய வாட்ச் கட்டியிருப்பது ஒரு ஸ்டேடஸ்! போட்டோ பிடித்தால் ஆயுசு குறையும் என்கிற நம்பிக்கையில் படமெடுக்க தயங்கியதுண்டு. செங்கல் சைஸில் போன்களை கொஞ்சமாய் தெரியும்படி மேல் பாக்கெட்டில்வைத்துக்கொண்டு திரிந்தவர்கள் உண்டு, இப்படி எண்ணற்ற உண்டுகளை அச்சுஅசலான கிராமத்து மனிதர்களின் வழியே பதிவு செய்திருக்கிறார் க.சீ.சிவக்குமார்.

எந்த ஒரு புதிய விஷயமும் அதன் முதல் வருகையில் நம்மை பயமுறுத்தி பின்பு ஆச்சர்யப்படுத்தி... அதுகுறித்த பலவித அனுமானங்களை உருவாக்கி... இறுதியில் அனைவருக்கும் கிடைத்து.. சகஜமாகி வாழ்க்கையோடு கலந்துவிடுகின்றன. அதுகுறித்த பெரிய பிரக்ஞையே இன்றி வாழ ஆரம்பித்துவிடுகிறோம். உதாரணத்துக்கு மின்சாரம்..! இன்று மின்சாரம் இல்லையே என்று ஃபீல் பண்ணுகிற அதே நாம்தான் இதோ வெறும் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரியாமல் வாழ்ந்திருக்கிறோம். ஆனால் இன்று அது வேறொன்றாக பரிணமித்திருக்கிறது. நாம் உபயோகிக்கிற எதுவுமே இதற்கு தப்பமுடியாது. அதுதான் இந்நூலின் மையமாக இயங்குகிறது.

நம்முடைய காதலை வீரத்தை நகைச்சுவை அன்பை சுற்றத்தை எப்படி இந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகள் திருத்தி எழுதின என்பதை ஆதிமங்கலத்து பாத்திரங்களை வைத்துக்கொண்டு பிரமாதப்படுத்தியிருக்கிறார் க.சீ.சிவக்குமார்.

இதற்காக அவர் கையாண்டிக்கிற மொழி மிகவும் எளிமையானது. சுவையானது. துப்பாக்கியைப்பற்றிய கட்டுரை ஒன்று உள்ளது. அதில் துப்பாக்கி வைத்துக்கொண்டு ஜபர்தஸ்தாக வாழ்ந்த ஒருவர் தன் மகன்களின் சொத்துச்சண்டையில் மனமொடிந்து சில நாட்களில் மரித்துப்போவார். அக்கட்டுரையை இப்படி முடித்திருப்பார் சிவகுமார். ‘’மனிதன் துப்பாக்கிகளினால் மட்டும் சாவதில்லை’’.

‘’உடன் பதில்... உயிர் அதில்!’’ இவ்வளவு சிறிய ஆனால் சத்தான புஷ்டியான ஒரு காதல் கடிதத்தை எழுத்தாளர் க.சீ.சிவக்குமாரால்தான் எழுதமுடியும். இதுபோல ஆயிரத்தி சொச்சம் ஒன்லைனர்கள் புத்தகம் முழுக்க நிறைந்துகிடக்கின்றன.

நூலின் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதைக்கே உரிய நேர்த்தியுடன் எழுதப்பட்டிருந்ததோடு படித்து முடிக்கும்போது சிறியதும் பெரியதுமான அதிர்வுகளையும் விட்டுச்செல்கிறது. செல்போன்குறித்த கட்டுரையை குறும்படமாகவே எடுக்கலாம் அவ்வளவு ஆழமான காதலும் பரபரப்பும் உள்ள அருமையான சிறுகதை அது!

புத்தகத்துக்கு மேலும் பலம் சேர்ப்பது மருதுவின் அருமையான ஓவியங்கள். ஒவ்வொரு ஒவியமுமே ஒரு கதை சொல்லும். தோளில் சின்ன வானொலியோடு தலையில் முண்டாசும் கோவணுமுமாக பாடிக்கொண்டே செல்லும் விவசாயியின் உருவம் சாகும்போதும் மறக்காது.

ஆதிமங்கலத்து விசேஷங்கள்
விகடன் பிரசுரம்


***

சென்றமாத (ஆகஸ்ட்) காட்சிப்பிழை திரை இதழில் இவர் தன்னுடைய திரைப்பட அனுபவங்களை எழுதியிருந்தார். மிகவும் வருத்தமூட்டுகிற அனுபவங்களை அவருக்கு திரைத்துறை அளித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதோ இதோ என போக்கு காட்டி கடைசிவரை வாசலிலேயே நிற்க வைத்து வேடிக்கை பார்த்த கதை க.சீ.சிவக்குமாரினுடையது. ஆனால் அதையும் கூட நகைச்சுவை உணர்வோடு சொல்லிச்சென்றிருந்தார். கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை.

08 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்



இந்த வண்டி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஓடும் என்று தெரியவில்லை. அல்லது இனி எப்போதும் இந்த வண்டிதானா என்பதும் புரியவில்லை. ஆனால் இப்போதைக்கு இதுதான் நல்ல மகசூலை அள்ளி வழங்கும் அட்சயபாத்திரமாக தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது.

குறைந்த செலவு நிறைந்த வருமானம் என ஒரு நகைச்சுவைப் புரட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். மான்சான்டோ விதைகளைப்போல உடனடி பலன் தரும் இக்காமெடி விதைகள் தமிழ்சினிமாவெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புதிதாக படமெடுக்க வருகிற இளைஞர்கள் கதை திரைக்கதை இருக்கிறதோ நிறைய காமெடியை மட்டும் மூட்டை நிறைய அள்ளிப்போட்டுக்கொண்டு கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதை சரியாக கண்டுணர்ந்து சிவாமனசுலசக்தியின் மூலமாக பிள்ளையார் சுழி போட்ட இயக்குனர் ராஜேஷை நிச்சயம் இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூறவேண்டும். அதற்கு பிறகுதான் வரிசையாக ஹீரோவும் அவனுடைய நண்பனும் சென்ற இடமெல்லாம் பல்பு வாங்கி நிறைய காதலித்து தோல்வியுற்று டாஸ்மாக்கில் குடித்து சோக பாட்டு பாடி காமெடி பண்ணுகிற ஒரு டிரென்ட் உருவானது.

வாராவாரம் இரண்டு காமெடி படங்களாவது இதுபோல ரிலீஸாகிறது. சென்றவாரம்கூட தலைவா தேசிங்குராஜா சும்மா நச்சுனு இருக்கு போன்ற காமெடியர்கள் நிறைந்த காமெடிபடங்கள் ரிலீஸ் ஆனது நினைவிருக்கும். இன்னும் இந்த மாதமே இதுமாதிரி பத்து படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன! அவ்வரிசையில் இப்போது இன்னொன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்துக்கு வசனம் இயக்குனர் ராஜேஷ்... அடடே!

கதை திரைக்கதை மேக்கிங் கலை காவியம் படைப்பு புடைப்பு என்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் குபீர் சிரிப்பை வரவழைக்கிற நாலு ஒன்லைனர்கள் மூன்று காட்சிகள் பிடித்தாலே போதும் வசூலை அள்ளிவிடலாம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இப்படம்.

பல இடங்களில் சிரித்து மகிழவும் மகிழ்ந்து சிரிக்கவும் வாய்ப்புகளை வழங்குகிறது வ.வா.சங்கம். படம் முழுக்க பெரிய ட்விஸ்ட்டுகள் இல்லை விதந்தோத தோதான புதுமைகள் இல்லை, லாஜிக் இல்லை, சமூக அக்கறையெல்லாம் துளிகூட இல்லை... இருந்தாலும் நிறைய காமெடி இருக்கிறது. அதுவே நம்மை மகிழ்விக்க போதுமானதாக இருக்கிறது. குறிப்பாக ஏகப்பட்ட ஒன்லைனர்கள். COUNTER காமெடிகெள். க்யூட்டான ஒரு ஹீரோயின். கிளைமாக்ஸில் யாருமே எதிர்பார்க்காத ஒரு பயங்கர காமெடியான ட்விஸ்ட். ஒரு வெற்றிப்படமெடுக்க வேறென்ன சார் வேண்டும்? அதானே!

படத்தில் பாராட்ட வேண்டிய அம்சம் ஒவ்வொரு பாத்திரத்தினையும் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பும் சில்லூண்டித்தனமும் இருக்கிறது. அதோடு அவை மிகவும் நெருக்கமாக இருப்பது பாராட்டத்தக்கது. கிராமத்து மனிதர்களின் இயல்பான நகைச்சுவைகளும் படத்தில் உள்ளன.

படத்தில் இரண்டு இடங்கள் நெருடலாக இருந்தது. ஹீரோவின் ஓப்பனிங் காட்சியில் பர்சனல் காரியங்களுக்காக மணல் அள்ளுபவர்கள் மாட்டிவிடுவதற்காக சுற்றுசூழல் பற்றியெல்லாம் பேசுவதாக இருக்கிற காட்சி. பிறகு பெண்குழந்தைகள் படிக்க வேண்டும் அவர்களுக்கு இளம்வயதில் திருமணம் செய்துவைக்க கூடாது என்பதை வலியுறுத்தி நாயகியின் திருமணத்தை நிறுத்துகிற அதே நாயகன் அடுத்த சில காட்சிகளில் அதே பெண்ணை சேலையில் பார்த்ததும் காதலில் விழுந்து அப்பெண்ணை இழுத்து கொண்டு ஊரைவிட்டு ஓடுவது (படிப்பு?) காமெடியாக இருந்தது. படத்தின் ஹீரோவுக்கு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலையற்று இருக்கிறார்.

இப்போதெல்லாம் சினிமாவில் ஹீரோவோ மற்ற பாத்திரங்களோ கருத்து சொல்ல ஆரம்பித்தால் ''நீ பொத்து'' அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ எதுக்கு வந்தியோ அத மட்டும் பாரப்பா.. என்கிற எதிர் குரல் ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. அதன் வெளிப்பாடாக கூட இது இருக்கலாமோ என்னமோ? ஆனால் எத்தனையோ முரண்கள் இருந்தாலும் படத்தின் வீசுகிற காமடிப்புயலில் சகலமும் மீறல்களும் கரைந்து போகின்றன.

படமெங்கும் சிவகார்த்திகேயனும் பரோட்டா சூரியும் நிறைந்திருக்கிறார்கள். பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சத்யராஜூம் அவருடைய நண்பர்களும் பேசிகொண்டேயிருக்கிறார்கள். திடீரென படத்தின் சில இடங்களில் பசங்க படத்தையே பெரியவர்களை வைத்து எடுத்துட்டாரோ டைரக்டர் என்கிற எண்ணமும் உண்டானது.

குடும்பத்தோடு பார்த்து ரசிக்க ஜாலியான படம்தான் இது. என்றாலும் இதுபோன்ற படங்கள் மட்டுமே தொடர்ச்சியாக வெற்றிபெறுவது கொஞ்சம் அச்சமூட்டவே செய்கிறது. மலையாளத்திலும் தெலுங்கிலும் எத்தனை விதமான வித்தியாசமான படங்கள் வந்துகொண்டிருக்கிறன்றன. மேக்கிங்கிலும் கதையமைப்பிலும் உலக தரத்தை எட்டிக்கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் அதே பழைய காமெடி ரெகார்டையேதான் தேய்த்துக்கொண்டிருக்கிறோம்.

இருந்தாலும் வேறு வழியில்லை... இது மகிழ்ச்சி மாண்சான்டோவாகவே இருந்தாலும் நம் கோலிவுட்டின் அகோரபசிக்கு இதுவாவது கிடைக்கிறதே என்று மகிழ்ந்துக்க வேண்டியதுதான்.
(படம் குறித்து ஒரே ஒரு வருத்தம்தான்.. வடிவேலுவுக்கோ சுந்தர்சிக்கோ ஒரு நன்றி போட்டிருக்கலாம் ஆயிரம்தானிருந்தாலும் இது அவங்க வளர்த்த சங்கமில்லையா பாஸ்?)

06 September 2013

கலைஞரின் சிலை!



முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலையின் இதயப்பகுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆர் மறைவின் போது அது கலவரக்காரர்களால் இடித்துத்தரைமட்டமாக்கப்பட்டது. அந்த அபூர்வமான சிலையின் புகைப்படம் எதுவும் இதுவரை பார்க்க கிடைத்ததேயில்லை.

ஒரு தலைவர் உயிரோடிருக்கும்போது வைக்கப்பட்ட சிலை அது. கடந்த சில ஆண்டுகளில் அப்படி ஒரு நிகழ்வு வேறு எந்த தமிழ் தலைவருக்கும் நடந்திருக்காது. அப்படிப்பட்ட சிலை எப்படி இருந்திருக்கும் என்று பார்க்கிற ஆர்வம் எப்போதும் எனக்குள் இருந்தது. அந்த ஆவல் சென்றவாரத்தில் ஒருநாள் பூர்த்தியானது.

ஏதோ டிவியில், அனேகமாக அது கேடிவியாக இருக்கக்கூடும், ‘’பட்டம் பறக்கட்டும்’’ என்கிற பழைய படம் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ராமநாராயணன் எடுத்த இப்படம் அப்போதைய (70களின் இறுதியில்) வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தை அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் மிகமிக சோகமான வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

(ராமராஜன் அறிமுகமான படம் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. படத்தில் அவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். படத்தின் நாயகன் வாகை சந்திரசேகர். பத்துநாள் தாடியோடு ஒல்லிபிச்சானாக வயிறு ஒட்டி ஒரு வேலையில்லா ஏழையாக வாழ்ந்திருக்கிறார். மற்றபடி ரொம்ப நல்ல படமெல்லாம் இல்லை.)

இப்படத்தில் ‘’எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே... ஏழைகள் நாட்டினிலே’’ என்று தொடங்கும் பாடல் ஒன்று வருகிறது. கல்லூரியின் அரசியல் அடக்குமுறையை எதிர்த்து குரல்கொடுக்கிற மாணவர்கள் சென்னையின் தெருக்களெங்கும் ஊர்வலமாக செல்கிறார்கள்.

இப்பாடல்காட்சியில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலை இடம்பெற்றுள்ளது. அதுவும் முப்பது விநாடிகளுக்கு மேல் அது வெவ்வேறு கோணங்களில் காட்டப்படுகிறது. அதோடு பின்னணியில் ‘’தமிழின தலைவரே எங்கள் கலைஞரே’’ என்கிற கோஷங்களும் ஒலிக்கின்றன. (இயக்குனர் ராமநாராயணன் அக்காலத்திலிருந்தே திமுக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது). 80களிலிருந்து தமிழின தலைவர் கலைஞர் கருணாநிதிதான் போல!.

அனேகமாக இப்போது அண்ணாசாலையில் இருக்கிற புகாரி ஹோட்டலுக்கும் அதன் எதிரில் இருக்கிற தர்காவுக்கும் மத்தியில்தான் இச்சிலை இருந்திருக்க வேண்டும். தர்காவுக்கு அருகில் ரேமன்ட்ஸ் ஷோரும் கூட ஒன்று இருப்பதை கவனித்தேன். பழைய புகாரி ஹோட்டலும் இருக்கிறது.

மற்ற தலைவர்களுக்கு வைக்கப்படுகிற சிலைபோல இல்லாமல் இது ஒரு நீண்ட கல்லறை வடிவிலான அமைப்பின் மேல் நிறுவப்பட்டிருந்தது. எதை குறிக்கிற எதன் குறியீடோ தெரியவில்லை.

கறுப்பு நிற சிலையில் இருக்கிற உருவம் முப்பதுகளின் இறுதியில் இருக்கிற இளம் கருணாநிதியின் உருவம். வலது கரம் உயர்த்தி சூப்பர் என்பது போல ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் இணைத்து மூன்று என்று காண்பிப்பதாக அச்சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த மூன்று என்பது திமுக, அண்ணா, கடமை மாதிரியான மூன்றெழுத்து வார்த்தைகளையோ அல்லது கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்கிற அண்ணாவின் மந்திரத்தையோ குறிப்பதாக இருக்கலாம். ஆனால் பார்க்க சூப்பராகவே இருந்தது.

ஒருவேளை அச்சிலை இடிக்கபடாமலிருந்தால் இப்படி இருந்திருக்கும்.

அண்ணாசாலையின் துவக்கத்தில் பெரியார் சிலை அங்கிருந்து கால் கி.மீட்டரில் ரிச்சி ஸ்ட்ரீட் அருகே அண்ணாவின் சிலை.. அங்கிருந்து கொஞ்சதூரம் வந்தால் தேவி தியேட்டர் தாண்டிவந்தால் புகாரி அருகே கலைஞர் சிலை. இன்னும் கொஞ்சம் எல்ஐசி தாண்டி வந்தால் ஸ்பென்சர் அருகே எம்ஜிஆர் சிலை என வரலாறு சரியான வரிசையில் இருந்திருக்கும். ஆனால் அதைதான் சிதைத்துவிட்டார்களே சின்னப்பையன்கள்.

இச்சிலைகள் மேட்டரில் ஒரு விஷயத்தை கவனித்தேன்.

பெரியார் எந்த எண்ணையும் காட்டாமல் அமர்ந்திருக்கிறார் அல்லது ஜீரோ வில் துவங்குகிறார். அண்ணா ஒரு விரலை தூக்கி ஒன்று என்று காட்டுகிறார். கலைஞர் மூன்று என மூன்றுவிரலை காட்ட... கொஞ்சதூரத்தில் எம்ஜிஆர் இரண்டு என்று காட்ட எப்படி இருந்திருக்கும்!! (எண் வரிசைகூட முன்பின்னாக மாறிப்போய் வரலாற்று களங்கமேற்பட்டிருக்கும்). நல்ல வேளையாக கலைஞர் சிலை இடிக்கப்பட்டுவிட்டது. இனி எம்ஜிஆருக்கு அடுத்த மூன்று விரலை காட்டி நிற்கலாம். சரியாக இருக்கும். ஒன்... டூ.... த்ரீ...






(படத்தில் காட்டப்பட்ட சிலை இதுதான்! ஸ்கிரீன் ஷாட் எடுத்துகொடுத்து உதவிய உடன்பிறப்பு செந்தழல்ரவிக்கு நன்றி)

முகநூலில் கோவி லெனின் பகிர்ந்த ஒருவிஷயம் -

“செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகில் குத்தவில்லை, நெஞ்சில்தானே குத்துகிறான்” -இதுதான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைவின்போது தனது சிலையை ஓர் இளைஞன் கடப்பாறையால் உடைக்கும் படத்திற்கு கலைஞர் எழுதிய வரிகள்.

04 September 2013

உலகின் நம்பர் ஒன் வாசகர்!



வெளிநாட்டு செய்திகள் என்றாலே எசகுபிசகான விஷயமாகவோ அல்லது ஏடாகூட சாதனைகளாக இருந்தால்தான் ஆர்வத்தோடு வாசிப்போம். ஆன்மோர்கனின் சாதனையும் ஒரு ஏடாகூட சாதனைதான் என்றாலும் நிறையவே இன்ட்ரஸ்டிங்!

எதையோ கூகிளில் தேடிக்கொண்டிருந்தபோது ஆன்மோர்கன் பற்றியும் அவருடைய வலைப்பதிவு முயற்சிகள் பற்றியும் சிலவாரங்களுக்கு முன்பு ஹிந்துவில் வெளியான கட்டுரை ஒன்று கண்ணில்பட்டது. அவரைப்பற்றி தேடி தேடி வாசித்தால் எல்லாமே ஆச்சர்யமான விஷயங்களாக இருந்தன. இவருடைய ஏ இயர் ஆஃப் ரீடிங் தி வோர்ல்ட் என்கிற முயற்சி தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாகவும் உற்சாகமூட்டக்கூடியதாஎவும் இருந்தன.

2012 ஒலிம்பிக்கின் போது இங்கிலாந்தை சேர்ந்த ஆன் மோர்கன் என்கிற இளம்பெண்ணுக்கு ஒரு எடக்கு மடக்கான யோசனை வருகிறது. உலகின் சகல புத்தகங்களையும் படித்துவிட்டால் என்ன? அது சாத்தியமில்லைதான் என்றாலும் அதில் ஒரு மடக்காவது அள்ளி குடிக்க முயற்சிபண்ணினால்... ஐநாவினால் அங்கீகரிக்கப்பட்ட 196 நாடுகளின் மிகச்சிறந்த புத்தகங்களை தேடி படித்துவிட்டு 197வதாக உலகுக்கு ஒரு நல்ல புத்தகத்தை எழுதுவது என முடிவெடுக்கிறார். நல்லாருக்குல்ல ஐடியா!

ஆனால் அது இரண்டுவரியில் ஒரு பாராவில் விவரிப்பதுபோல அவ்வளவு எளிதாக இல்லை. சில நாடுகளில் புத்தகங்கள் என்பது மிக மிக அரிதாக அச்சிடப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் புத்தகமே கிடையாது எல்லாமே வாய்வழி கதைகள்தான். சில நாடுகளோ தங்களுடைய புத்தகங்களை மேற்கத்தியர்கள் வாசிக்கவும் நாட்டைவிட்டு வெளியே பரப்பவுமே தடைவிதித்திருந்தனவாம். அதுபோக இந்தியாவைப்போல பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாட்டில் எப்படி மிகச்சில புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிப்பது? ஒருநாட்டுக்கு ஒரு புத்தகம் என வாசித்தால் மட்டும் ஒருநாட்டின் சகல விஷயங்களையும் புரிந்துகொண்டுவிட இயலுமா?

உலக நாடுகளின் மிகச்சிறந்த இலக்கியங்களில் வெறும் மூன்று சதவீதம்தான் இங்கிலாந்தில் மொழிபெயர்க்கபடுகின்றன. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஆன் மோர்கனுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனாலும் தேடுதல் வேட்டையையும் வேட்கையையும் விடவில்லை.
அதோடு ஒரே நாட்டின் பல புத்தகங்களையும் படிக்க முடிவெடுத்தார். தன்னுடைய வலைப்பதிவில் தன்னுடைய ஆர்வம் குறித்து ஒரு பதிவை எழுதிப்போடுகிறார். துவக்கத்தில் ஆதரவு குறைவுதான் என்றாலும் பின்னாளில் அவருக்கு உதவிகள் செய்ய உலகெங்கும் இருந்து வெவ்வேறு நாட்டினரும் முன்வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பல்வேறு புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி அனுப்பவும் பரிந்துரைக்கவும் செய்தனர். புத்தகமே இல்லாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணித்து அங்கே இருக்கிற மூத்தவர்களோடு பேசி பேசி கதைகள் கேட்டு சேகரித்திருக்கிறார்!

நல்ல நல்ல புத்தகங்களை தேடி தேடி சேகரித்து இரண்டுநாட்களுக்கு ஒரு புத்தகம் என்கிற யோசனையுடன் வேகவேகமாக படிக்கத்தொடங்கினார். ஒவ்வொரு புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டு அதை பற்றி தன்னுடைய வலைப்பூவில்(BLOG) ஒரு எளிய சிறப்பான அறிமுகமும் தர ஆரம்பித்தார்.

புத்தகங்கள் அவருடைய சிந்தனையோட்டத்தை உலகம் குறித்த புரிதலை மாற்றியமைத்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். இந்தியாதான் புத்தக தேர்வுக்கு மிக கடினமானதாக இருந்தது என்றும் எம்டிவாசுதேவன் நாயரின் காலம் நாவலின் மொழிபெயர்ப்பு தன்னை பெரிதாக ஈர்த்ததாகவும் குறிப்பிடுகிறார். தமிழ் எழுத்தாளர்கள் யாரும் மோர்கனின் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய இணையதளமான http://ayearofreadingtheworld.com/ க்கு ஒரு விசிட் அடித்துப்பாருங்கள். அதில் அவர் வாசித்த புத்தகங்களின் பட்டியில் இருக்கிறது. மலைப்பாக இருக்கிறது. எவ்வளவு விதமான புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகங்கள் குறித்தும் சளைக்காமல் எழுதப்பட்டிருக்கிற நூற்றுக்கணக்கான அறிமுகங்கள்.

வாசிப்பென்பது சுருங்கிப்போய்விட்ட காலத்தில் , வாசிப்புக்கான நேரத்தை மற்ற பல வித கேளிக்கை விஷயங்களும் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிற காலத்தில், புத்தகங்களை வெறித்தனமாக நேசிக்கிற ஒருவரால்தான் இப்படி ஒரு முயற்சியில் இறங்கி வெற்றிபெற முடியும். ஆன்மோர்கனின் புத்தக அறிமுகங்களை மட்டுமே வாசித்தாலும் கூட ஒரு குட்டி உலகை புரிந்துகொள்ள முடியுமென்று தோன்றுகிறது!

ஆனுக்கு நம்முடைய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட) எதையாவது பரிந்துரைக்க நினைத்திருக்கிறேன். அதற்கு முதலில் நான் ஓரளவாவது வாசித்திருக்க வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். அதோடு இந்திய அளவிலாவது நம்மை சுற்றியுள்ள மாநிலங்களின் இலக்கியங்களை தேடி வாசிக்கவேண்டும் என்கிற உத்வேகம் உண்டாகியிருக்கிறது.

ஆன் மோர்கனின் இணையதளம் - http://ayearofreadingtheworld.com/

அவருடைய ஃபேஸ்புக் பக்கம் - http://www.facebook.com/pages/A-Year-of-Reading-the-World/344253838955473

ஸ்பென்சர் ப்ளாசாவில் ஒரு குடிகாரன்




நம்முடைய குடிமகன்களை மகிழ்விக்க தமிழக அரசு ஷாப்பிங் மால்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கப்போவதாக ஒரு செய்தி நாளிதழில் காணமுடிந்தது. இதைப்பற்றி பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்தவண்ணமும் அச்சம் தெரிவித்தும் எழுதிய சில கருத்துமுத்துகளை பார்க்க முடிந்தது. அய்யகோ ஷாப்பிங் மால்கள் ரேப்பிங் மால்களாகிவிடுமே என்றெல்லாம் பதறிப்போய் ட்விட்டு போட்டிருந்தார் ஒரு பிரபல ட்விட்டர்.

ஷாப்பிங் மால்களில் டாஸ்மாக் என்கிற சமாச்சாரம் புதிதல்ல. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இளைஞர்களின் கூடாரமாக 'இருந்த' ஸ்பெனசர்ஸ் ப்ளாசாவில் ஒரு டாஸ்மாக் பார் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. இப்போதும் அந்த டாஸ்மாக் பார் இயங்குகிறதா என்று தெரியவில்லை. இன்று ஊரை சுற்றி ஊர்பட்ட மால்கள் உதித்துவிட்டதாலும் மௌன்ட்ரோடை துண்டாக்கி போட்டப்படும் மெட்ரோல் ரயில் பணிகளாலும் ஸ்பென்சர் பக்கம் அங்கிள் ஆன்டீஸ் தாத்தா பாட்டீஸ் எல்லாம் மழைக்கும் கூட அப்பக்கம் ஒதுங்குவதில்லை என்று கேள்விப்பட்டேன்.

மிகவும் நல்ல டாஸ்மாக் கடை அது. ஒரு ஷாப்பிங் மாலில் இருப்பதால் சரக்கு விலை அதிகமாக இருக்கும் என்கிற தவறான புரிதலாலேயே யாரும் அக்கடைப்பக்கம் வருவதில்லை. அதனால் நிறைந்த சனிக்கிழமைகளில் கூட அதிக கூட்டமிருக்காது. துர்நாற்றத்தொல்லைகள் கிடையாது. எனக்கு வாய்த்த நண்பர்களோ மிகவும் திறமைசாலிகள். குடிதான் கொஞ்சம் ஜாஸ்தி. ஒருகடை விடமாட்டார்கள் என்பதால் அக்கடை பரிச்சயமானது. அதோடு கூகிள் ஆர்குட் குரூப்ஸ் காலத்தில் அங்கே குழு உறுப்பினர் கூட்டங்கள் கூட நடந்ததுண்டு! குடித்துவிட்டு நேத்து நீ ஒரு கமென்ட் போட்டியா ரகள மச்சான் என பீத்திக்கொள்வோம்.

அளவான ஏசியும் ஆங்காங்கே ஒளிரும் சிகப்பும் நீலமும் என சிறப்பாகவே செயல்பட்ட கடை அது. கடையில் பக்க உணவுகளும் சுவையாகவே இருக்கும்.(என்னைப்போன்ற சைட்டிஷ் பட்சிகளுக்கு அதுதானே முக்கியம்). மிகப்பெரிய திரைவைத்து அதில் எந்நேரமும் ஏதாவது பாடல்காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். கிரிக்கெட் போட்டிகள் காலத்தில் மேட்ச்களும் உண்டு.

எவ்வளவு வேண்டுமானாலும் உட்கார்ந்து மொக்கை போடலாம். யாரும் நமக்குபின்னால் வந்து நின்று அன்னதானத்தில் இடம்பிடிக்கும் அவசரத்தோடு காத்திருக்க மாட்டார்கள் என்பது தனிச்சிறப்பு. ஒரு பீரை வாங்கி நான்கு பேர் குடிக்கும் வசதிகளும் உண்டு. அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விலைகூட மற்ற பெரிய பார்களோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருந்தது.

இந்த பாரின் ஒரே குறை உள்ளே சிகரட் பிடிக்க முடியாது. சிகரட் பிடிக்க மாடிகளிலிருந்து இறங்கி ஸ்பென்சர் பிளாசாவை விட்டே வெளியே வந்துதான் பிடிக்க வேண்டியிருக்கும். அதோடு ஆங்காங்கே செக்யூரிட்டிகள் இருப்பதால் குடித்துவிட்டு கலாட்டா பண்ணவும் வழியில்லை. குடித்தோமா கொஞ்ச நேரம் மொக்கைகளை போட்டோமா என்று கலைந்துவிடுவோம்.

நுங்கம்பாக்கம் பகுதியில் குடிப்பவர்களுக்கு இருக்கிற பெரிய பிரச்சனை பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்து பைக்கை கிளப்பி முக்கு திரும்பினால் காவல்துறை தன் கடமையை செய்யும்! ஆனால் ஸ்பென்சரிலிருந்து வெளியே வருகிறவருக்கு அப்பிரச்சனை சுத்தமாக கிடையாது.

ஸ்பென்சரிலேயே பீட்சா தொடங்கி பக்கோடா வரை பலவித உணவுகளும் கிடைக்குமென்பதால் குடித்துவிட்டு வெறும் வயிற்றோடு அல்லாடத்தேவையில்லை அங்கேயே எதையாவது வாங்கி வயிற்றை ரொப்பிக்கொண்டு வீட்டுக்கு போகலாம். ஒரே பிரச்சனை மாடிகளில் ஏறி இறங்கும்போது ஸ்டடியாக இருக்கவேண்டும். கால் இடறினால் காலன்கவ்விவிடுவான்.

இப்போதும் அக்கடை அதே இடத்தில் இயங்குகிறதா தெரியவில்லை. ஆனால் அக்கடையால் எப்போதும் யாருக்கும் எந்த தொந்தரவும் வந்ததில்லை. அதை கடைக்காரரே பலமுறை கூறியிருக்கிறார். அதனால் அரசு இப்படியொரு முடிவை எடுத்தால் யாரும் அஞ்சத்தேவையில்லை. அதோடு மோசமான குடிமகன்கள் குடிப்பதற்காக அவ்வளவு சிரமப்பட்டு மால்களில் மணிக்கு முப்பது ரூபாய் பார்க்கிங் கொடுத்தெல்லாம் வந்து குடிக்கமாட்டார்கள்!