30 July 2008
குருவி ஒரு கிளைமாக்ஸ் காமெடி + ஒரு முக்கிய பிரச்சனை
சில்க்,ஷகிலா,நமீதா மற்றும் கிருஷ்ணன்பிள்ளை
''ஏன்னா , எப்பண்ணா வருவேள் , சித்த வந்துட்டு போங்கோணா , ப்ளீஸ்ணா!!! '' காட்டுத்தனமாய் கதறினாள் சில்லு .
''ஏன்டிமா , கொஞ்சம் பொருத்துக்க படாதா !!! நேக்கு கொஞ்சம் வேலை இருக்குடி!! வந்துடறேன்டிமா '' இவளுக்கு இதுவே வேலையா போயிடுத்து , கொஞ்சம் கூட ரெஸ்டே இல்ல , என்ன மனுசன்னு நினைச்சாளா இல்லை வேறெதும்னா?
வணக்கம்ணா நான் சீதாபதி ஸார்ட்டா "சீது"னு கூப்பிடுவா , இப்ப என்ன கூப்பட்டாளே அவ என்னோட ஆத்துக்காரி சரியான குடைச்சல் , ஏன்தான் கட்டிண்டமோனு நான் அழாத நாள் இல்லை , நான் பத்து வருஷமா நம்ம கிருஷ்ணப்பிள்ளை அலைஸ் கிட்டு மாமாகிட்ட வேலை பார்த்தேன் , நல்ல மனுசன் , அறிவாளி , விட்டிருந்தா இன்னொரு அப்துல் கலாமா வர வேண்டியவர் , அவர பாத்தா வீ எஸ் ராகவணாட்டமா கம்பீரமா இருப்பார்!!!!!
அப்ப எனக்கு 6 வயசிருக்கும் அப்ப கிட்டு மாமா எங்க பக்கத்தாத்துலணா இருந்தார் , நான் சிறுவர் மலர் படிக்கறதுக்கா அவர் வீட்டாண்டை போவேன் , அப்படியே ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ் ஆகிட்டோம் அப்ப அவருக்கு 30 வயசு .
ராஜ்கோகிலா படங்கள் ( அந்தம்மா ரிடையர்டு ஆனப்பறம் )சில காலமா வரமா இருந்தப்ப மாமா பித்து பிடிச்சுண்டு அவா படத்தை வச்சுண்டு பைத்தியமாட்டம் புழம்பிட்டு ஆராய்ச்சி கூட பண்ணாம லூசாட்டம் சுத்திடுருந்தார் .
என்னண்ணா பண்ண சொல்றேள் , வவ்வாலாண்டை ஜோலி பாத்த தலைகீழா தொங்கித்தான பாத்தாகணும் , அப்படித்தான் வேண்டா வெறுப்பா பாக்க ஆரம்பிச்சேன் , சில்க்குக்காக தன் உயிரையும் தர தயாராயிருந்தார் .
அவருக்கு முதல் பொண்டாட்டி வேலைதான் ஊரே பத்தி எரிஞ்சாலும் இவரு மாத்திரம் அமைதியா ஹைட்ரோ குளோரிக் ஆசிட்ட சின்தெடிக் ரப்பரோட இணைச்சு வச்சு கும்மாளம் அடிச்சுண்டிருப்பார் .
இவரு பாட்டுக்கு எதையாவது பண்ணின்டே இருப்பாரு , நேக்கு வேலைவெட்டி இருக்காது , நானும் எத்தன நாழிதான் தேமேனி பாத்தின்டுருப்பேன் , என்னை ஆத்துக்கும் போக விடமாட்டார் , எனக்கு அப்பல்லாம் எரிச்சலாய் வரும் , பேசாமா கிழவனுக்கு மூக்கு பொடியில விஷம் வச்சு கொன்னுடலாமானு !!!
என்ன மாமா என்னாச்சுனு கேட்டா சில்க்கு செத்துட்டா அவளை என் ஆத்துகாரியாட்டமாதான் நினைச்சிண்டிருந்தேன்னாரு பைத்தியக்கார மனுசன் , அவரோட வாழ்க்கைல 15 வருஷம் வண்டில போடுவாளே ஆஆஆன் இன்ஜின் ஆயில் அதாட்டம் அவருக்கு சில்க்கு .
கிழவர் உயிரோடதான் இருக்காரா இல்ல போயிடுச்சானு பாக்கலாம்னு வந்து பாத்தா ஆசை அஜித்குமாராட்டம் பளபளன்னு ஷேவிங்கலாம் பண்ணின்டு தலைமயிருக்குலாம் கலர் பூசிண்டு அலம்பல் பண்ணின்டு திரியறது கிழம் , என்ன ஏதுன்னு விசாரிச்சா , பரங்கிமலை சாமியார் ஷகிலாவை பாத்ததும் பரவசநிலை அடைஞ்சிடுத்துனு.
விசுவாமித்திர முனிவர் தவமிருந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணின்டு இருந்த மாமா வாழ்க்கைல அகலிகை மாதிரி வந்து தொலைஞ்சா நமிதா , என்ன பேரோ !! மாமா மனசு அலை பாஞ்சுது , மாமா கொஞ்ச கொஞ்சமா வழுக்கி கொஞ்ச கொஞ்சமா வழுக்கி திடீர்னு ஒருநா மொத்தாமா நமிதாவோட அந்த சின்ன................................
நேக்கு நம்பவே முடியல அந்த மெஷினுக்குள்ளருந்து முழுசா பதினெட்டு வயசுல ஒடம்புல ஒட்டுதுணி இல்லாம ஐயோ சாமி நேக்கு வெக்கமாருக்கு , இந்த கிழவனுக்குள்ளயும் என்னமோ இருந்துருக்கு பாரேன்னு நினைச்சிண்டேன்.
அந்த பொண்ணை மல்லாக்க படுக்க வச்சிண்டு அது மண்டைல உடம்பிலெல்லாம் வயருல்லாம் சொருகி அதை கம்யூட்டர்ல இணைச்சுண்டு மாமா என்னாண்டை , அவரு சொல்றதை டைப்படிக்க சொன்னார் .
நானும் தைரியத்தை வரவழைச்சிண்டு உள்ள போயி பாக்கறேன் , அந்த சிலுக்கு பொண்ணு என்ன பாத்து கண்ண்டிச்சிண்டு என்னாண்டை வந்து மாமா என்ன மாமா அப்படி பாக்கறேள் நான்ந்தான் உங்க ஆத்துக்காரி நோக்கு ஞாயபகமில்லயானு கேக்கறா, நேக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரி ஜிலோமாவா இருந்துச்சு , அவளை கூட்டிண்டு மாமாவாண்டை போனா மாமா என் கண்ணையே ஒன்கிட்ட ஒப்படைக்கிறேன் இதுல ஆனந்த கண்ணீரத்தான் பாக்கணும்னு எங்க கைய சேத்து வச்சிண்டு கிட்டு மாமா நாமெல்லாம் போக முடியாத இடத்துக்கு போயிட்டாரு ,
வினோவுக்கு பீதியில் விழிபிதுங்கியது '' மிஸ்டர் சீதாபதி அப்படி என்னதான் ஆச்சி அந்த பொண்ணுக்கு ஏன் உங்கள பாத்து புருஷன்னு சொன்னாங்க ''
இப்படியாக சீதாபதியின் வாழ்க்கை சுபமாய் இல்லற சுகத்தோடு இன்பமாய் தொடர்ந்தது .
29 July 2008
கிரிக்கெட்டாயணம் - பிளாஸ்டிக் பால காண்டம்
கோவையின் மிக அருகில் இருக்கும் கிராமம் எங்களது செல்வபுரம் . அப்போது எனக்கு ஒன்பது வயது , அப்போதெல்லாம் நாங்கள் தொட்டு விளையாட்டு, ஒளிஞ்சு விளையாட்டு , பம்பரம் , கோலி,டீஞ்சி என ஒலிம்பிக்கில் சேர்க்க முடியாத உன்னத விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருந்த அற்புதமான மீட்க இயலாத காலம் , அது வரைக்கும் எங்களுக்கு கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு இருப்பதும் , அது பிற்காலத்தில் எங்களையெல்லாம் அடிமைப்படுத்த போகிறதென்றும் தெரியாது , முதன்முதலாக கிரிக்கெட்டை எங்களூருக்கு கொண்டு வந்தவர் எங்களூர் கிரிக்கெட் ஆசான் கார்த்திகேயன் , அவர்தான் முதன்முதலில் கிரிக்கெட்டை எங்களுக்கு அறிமுகம் செய்தார் , அப்போது அவருக்கு வயது 12 , அவர் ஒரு முறை சென்னப்பட்டினத்திற்கு சென்று வந்து கற்றுக்கொண்ட ஆட்டமது , ஒரு உடைந்த கட்டையை வைத்துக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பாலையும் வைத்து அவரும் அவரது தம்பி சிவானும் கிரிக்கெட் ஆடுவதை பார்த்து நாங்கள் மிரண்டு போய் பார்த்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையிலே , எங்களையும் அவர் ஆட அழைத்தார் , ஒல்லிக்குச்சி நோபால் வினோத் ,குட்டையான தயிர்வடை மஞ்சு, கட்டையான கறிக்கடை கார்த்தி,கருப்புநிற அக்னி,மனோஜ்,நெட்டையான தமிழ்,குண்டு கோகுல், கமல்,ரவி,முட்டை கார்த்தி , முஸ்தபா,லெனின்,வினி என சிகரெட் அட்டைகள் பொருக்கி டீஞ்சி விளையாடிக் கொண்டிருந்த எங்கள் ஊரின் பிற்காலத்தில் உருவாகப் போகும் ஒரு இளம் கிரிக்கெட் அணி அன்றுதான் பேட்டையும் பந்தையும் தொட்டு பார்த்தது .
28 July 2008
தமிழ்மணத்தில் கலக்கல் பகுதி : நிர்வாகிகளுக்கு நன்றி
26 July 2008
முதல் டெஸ்ட்டில் இந்தியாவை தகர்த்த இலங்கை அணி
இலங்கையின் வெற்றிக்கு வித்திட்ட முத்தையா முரளிதரன் மற்றும் தனது அற்புத சுழலில் இந்திய அணியை மூழ்கடித்த அஜந்தா மெண்டிஸுக்கும் வாழ்த்துக்கள் .
19 July 2008
இளமையில் கொல்..... : அறிவியல் சிறுகதை .
அந்த அரசுவிபச்சாரவிடுதியின் சுற்றுசுவரின் கிழக்கு பகுதியில் , பான்பராக் கரையும் , சிறுநீர் தடமும் , உபயாகித்த ஆணுறைகளின் குவியல்களினூடே பயணிக்கும் கரை படிந்த சுவர்களின் எல்லையில் இருக்கும் அந்த அதிரகசிய அரசாங்க புத்தக்கடையினை அடைவது அத்தனை சுலபமல்ல .
ஜெக்யூ அங்குதான் ஓட்டமாய் நடந்து கொண்டிருந்தான் அந்த கடையை நோக்கி , அவனது பதினைந்துவயது , பயத்தில் பிட்யூட்டரி சுரப்பிக்கு வேலை தந்து கொண்டிருந்தது , குற்ற ஒழிப்பு படையின் கண்ணில் சிக்கினால் , முதல்முறையாதலால் வலதுகாலின் கட்டைவிரல் மட்டுமே துண்டிக்கப்படுமென்பது அவனுக்கு தெரியாமலில்லை , அந்த புத்தகங்கள் மீதான அவனது ஆர்வம் அவனை இதோ இந்த அளவுக்கு தன் கட்டை விரலையும் பணயம் வைக்குமளவுக்கு தைரியம் தந்திருக்கிறது . அப்புத்தகங்கள் அவனுள் செய்துவிட்ட மாற்றங்கள் அவனை எதற்கும் துணிந்தவனாக்கியிருந்தது , அப்புத்தகங்கள் அவனது வயதையும் மீறிய விடயங்கள் குறித்த தேடலின் தொடக்கமாய் , புதிய உலகத்தின் வாசலாய் , அவனிதுவரை அறிந்திடாத இன்ப துன்பங்கள் பாச நேசங்கள் உறவு பிரிவுகள் சொர்க்க நரகங்கள் என அவனது ஆழ்மனத்தின் அலைவரிசையினூடே விரிவதாய் இருந்தது .
''அண்ணா!! நான் கேட்ருந்த புத்தகம் வந்துடுச்சாங்கண்ணா '' தயங்கினான் ஜெக்யூ ,
'' வா, ஜெ!! இன்னும் வரலயே தம்பி , உன்னோட குடிமை எண் எங்கிட்ட இருக்குப்பா , அந்த எண் சரியா பாரு !! சுழியம் சுழியம் ஏழு எட்டு ஆறு ஏழு எட்டு ஆறு ஆறு ஆறு ஆறு !! அதுதானே !! ''
''ஆமானா , இன்னொரு சுழியம் சேர்த்துக்கோங்கண்ணா!! உயர்குடிமை மக்களுக்கு ஒரு சுழியம் கூட்டிருக்காங்கணா , உங்களுக்கு தெரியாதா , முந்தாநாளுதான் நம்ம தினா மின்னொளி செய்திகள்ல வந்துச்சே நீங்க படிக்கல ''
''எங்க தம்பீ , வரவர வியாபாரம் செமையா படுத்திருச்சு , ஏற்கனவே தடை பண்ண புத்தக எண்ணிக்கையே லட்சத்தத் தாண்டும் இப்போ இன்னும் மூணாயிரம் புத்தகத்த தடை பண்ணிட்டாங்க , புத்தகம் விக்க அரசாங்கம் குடுத்துருக்கற இடத்த பார்த்தல்ல , இந்த இடத்துக்கு எவன் வருவான் , அதுவும் இப்பல்லாம் எவன் படிக்கிறான் , அவன் அவனுக்கு அரசாங்க பார்ல தண்ணி அடிக்கவும் விடுதில விபச்சாரிகளோட ................. அதுக்குமே நேரம் சரியா இருக்கு , இந்த ஈனபிழைப்புக்கு நடுவுல எங்க தம்பி மத்த விசயத்த கவனிக்க ''
'' ம்ம் , அண்ணா , ஷங்கி ஒரு புக் கேட்டாணாமே ''
''அது மூணு நாளைக்குள்ள வந்துடும்பா , நீ ரொம்ப நேரம் இங்க இருக்காத , அந்த குற்ற ஒழிப்பு கபோதிங்க வந்துட்டா , உனக்குமட்டுமில்ல எனக்கும் சேர்த்துதான் தண்டனை , தயவு பண்ணி கிளம்பிருங்க தம்பி !! , உங்க நல்லதுக்குதான் சொல்றேன் ''
'' சரினா , என்னோட புக்கும் ஷங்கியோட புக்கும் வந்ததும் என்னோட குடிமை எண்ணுக்கு , எப்பவும் போல உங்களுக்கு பேதினு சேதி அனுப்புங்கண்ணா '' ,
நாட்டின் அனைவரது குடிமை எண் மூலமாய் அரசாங்கம் அவரவருக்கு வரும் சேதிகள் , தகவல்கள் , தத்தமது ஒளிப்பேழையின் மூலம் யாருடன் என்ன உரையாடினாலும் , என எல்லாமே கண்காணிப்பது சில தடைசெய்யப்பட்ட சொற்கள் பறிமாற்றம் கூட பிரச்சனைதான் எனபதும் ஜெக்யூவிற்கு நன்றாக தெரியும் அதனால்தான் இப்படி ஒரு விசேட ஏற்பாடு , பேசி முடித்து கவலைரேகைகள் முகத்திலோட வீட்டை நோக்கி நடக்கலானான் .
ராகவன் அதிபர் நைவத்தின் 100 அடி உயர சிலையின் பின்னால் மறைந்து கொண்டு தேசியக்கொடியிலிருந்து இருநூறாவது அடியில் தனது டைட்டானிய துளைப்பான் துப்பாக்கியை குறிபார்த்து கொண்டிருந்தான் . அம்முறை அந்த அராஜக அதிபரை கொன்றேயாக வேண்டும் .
ஒ.மா.இ நாடு (ஒருங்கிணைந்த மாநிலங்களின் இந்தியா ) தனது நூறாவது சுதந்திர தினத்தை அபரிமிதமாய் உலகத்தின் வல்லரசாய் அதனதிபர் நைவத்தின் சர்வாதிகார ஆட்சியில் கொண்டாடி கொண்டிருந்தது . நூறாவது முறையாக சரித்திர புகழ்வாய்ந்த தில்லியின் செங்கோட்டையில் ஒமாஇ நாட்டின் அதிபர் நைவத் மின்னல் குண்டுதுளைக்காத டைட்டானிய கவசமணிந்து நாட்டின் கொடியை கொடிக்கு ஆயிரத்தி ஐநூறு அடி தூரம் தள்ளி நிற்கும் சிறுநீர் காரில் அமர்ந்தபடியே ஒரு மைக்ரோ ரிமோட்டில் தன் குரலால் ஆணையிட தேசியக்கொடியும் எப்போதும் போல பட்டொளி வீசி பறந்தது . கொடியேற்றதிற்கு பின் காரை விட்டு இறங்காமல் அப்படியே தனது வீட்டிற்கு கிளம்பலானார் . அவரை எப்படியாவது கொன்றுவிட எண்ணி இருபத்தைந்தாவது முறையும் தோல்வியடைந்துவிட்ட ராக்ஸூம் கிருஷூம் விதியை நொந்தபடி அங்கிருந்து தங்களது அதிவேக இரு சக்கர நீர்உருளியை கிளப்பி மீண்டும் தங்களது இயக்க முகாமை நோக்கி பயணத்தை தொடங்கினர் .
'' எங்கடா , போயிருந்த? ''
''ஷங்கி வீட்டுக்குப்பா , ''
அவன் அப்பாவின் கையிலிருந்த ஒளிபேழையில் உள்ளீடாய் வருகின்ற ரத்தழுத்த உண்மைகண்டறியும் மென்பொருள் '' பொய் பொய்'' என அலறியது .
அவன் அப்பாவின் பிணவாடை வீசும் இதுவரை அவனை எப்போதும் அடித்திடாத கைகள் அவன் கன்னங்களில் முத்திரைபதிக்க ஜெக்யூ ''அம்மா அம்மா'' என்று அலறினான் .
அவனப்பா ஒமாஇ யின் அரசாங்க விவசாய சாலையில் சிறைச்சாலையின் மரணதண்டனை குற்றவாளிகளின் உரமாக்கப்பட்ட உடல் கூழை அள்ளிவந்து தனது பணியிடத்தில் சேர்க்கும் வேலை , ஷங்கியின் அப்பாவின் மேற்பார்வையில் தினக்கூலிக்கு பணியாற்றுகிறார் . ஜெக்யூவிற்கு அந்த வேலையை அவனப்பா செய்வது இப்போதெல்லாம் பிடிப்பதில்லை .
'' சரி விடுங்க , இதென்ன இன்னைக்கு நேத்தா முகத்த தொங்க போட்டுகிட்டு வரீங்க ''
''இல்லை தலைவரே , நாங்க சரியாதான் திட்டம் போட்டோம் , ஆனா அவன் காரவிட்டு இறங்கவே இல்ல ''
'' சரி இனிமே இந்த வேலைக்கு நீங்க சரியா வரமாட்டிங்க, நான் வேற ஆள பாத்துக்கறேன், இந்த பண்டில போயி கடைக்கு சப்ளைபண்ணிட்டு , பணத்த வாங்கிட்டு வந்துடு , உங்களோட போலி குடிமை அட்டைய எடுத்துகிட்டிங்கள்ள ?!!'' , தலையை ஆமாம் என்பது போல ஆட்டியபடி பண்டலை தூக்கிக் கொண்டு இருவரும் கிளம்பினர் .
இஒஇ (இந்திய ஒருமைப்பாட்டு இயக்கம் ) ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது , ஆரம்பிக்கபட்ட நாளிலிருந்து இதுவரை நாற்பது மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் , அறுபது வங்கி கொள்ளைகள், இருநூருக்கும் மேற்பட்ட மனித வெடிகுண்டு கொலைகள் என பல்வேறு சட்டவிரோத சம்பவங்களும் அரசாங்கத்திற்கு கண்டுபிடிக்க இயலாத தொல்லையாகவே இருந்தது . பள்ளி மாணவர்கள் பலரையும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புத்தகங்களை மலிவு விலையில் கொடுத்து மூளைச்சலவை செய்து இயக்கத்தின் பல்வேறு வேலைகளுக்கும் பயன்படுத்தினர் . இளம் மூளைகளை சலவைசெய்வது மிக சுலபமாக இருந்தது அந்த இயக்கத்தின் தலைவனுக்கு .
ஒளிப்பேழை ஒலி எழுப்பியது ஜெக்யூ அதை பார்த்து தன் மூளையால் கட்டளையிட அதன் உள்ளிருந்து வந்த புத்தக்கடைகாரனின் ஒளி பிம்பம்
'' வணக்கம் ஜெக்யூ , எனக்கு பேதி '' என்று கூறி மீண்டும் அந்த ஒளிப்பேழையின் உள்ளே விருட்டென்று ஓடி மறைந்து கொண்டது .
தன் ஒளிப்பேழையில் ஷங்கியை அழைத்தான் .
ஜெக்யூவினப்பா வாங்கி தந்த தனது புதிய அதிவேக சூரிய ஒளி மின்னுருளியை முடுக்க அது அந்த அரசாங்க விபச்சார விடுதியின் மூத்திர சந்தில் போய் நின்றது .
'' தோழர்களே , இந்த நாள் நம் இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள் , சிதறுண்டு கிடக்கும் நாம் நம் பாரத தேசத்தின் பழம்பெருமையையும் பண்பாட்டையும் பேணிகாப்போம் , அதற்கு இந்த ஓமாஇ ஒழிந்து இந்திய தேசம் உருவாக வேண்டும் , நமக்கு தேவையான உதவிகளை தர நம் அயல்நாடான மங்கோலியாவும் அதன் நட்பு நாடான சீனாவும் ஒப்புதல் அழித்திருந்தன . இன்று இரவு அவை நம் நாட்டின் தலைநகரை முற்றுகையிட எண்ணியுள்ளனர் , அவர்களது செயற்கோள்கள் ஏற்கனவே தலைநகரை குறிப்பார்த்தபடி தயார் நிலையில் உள்ளது , இன்றிரவு அவை 8.13 மணிக்கு சரியாக தலைநகரை தாக்க உள்ளது , நாளை காலைக்குள் இந்தியாவின் முக்கிய ராணுவ தளவாடங்களும் , செயற்கை கோள்களும் அழிக்கப்பட்டு நாளை நம் மதத்தின் புதிய சாம்ராஜ்யம் இப்பூவுலகில் புதியதாய் பிறக்கும் , இனி பாரதத்தில் சிந்து மதம் மட்டுமே உயிரோடிருக்கும் மற்ற மதங்களும் பின்பற்றுவோறும் உயிரோடு கூட இருக்கலாகாது , வாருங்கள் தோழர்களே நாளை புத்துலகம் படைப்போம் , நாளைய சூரியன் நமக்காய் உதிக்கட்டும் , வாழ்க சிந்து மதம் , வாழ்க பாரதம் , பாரத் மாத கி ஜெ , பாரத் மாதா கி ஜெ '' தனது உரையை முடித்தபடி தனது கையில் தனது லேசர் கத்ததியால் ஒரு கோடிட அதிலிருந்து பொலபொலவென வந்த இரத்தம் அவனை சுற்றியிருந்தோர் மேல் தெளிக்க , பல்லாயிரக்கணக்காண சிந்து மதத்தினர் கூடியிருந்த அந்த சபையே அதையே மறுதலித்தபடி ஓவென ஓலமிட்டனர் . அங்கே பலருக்கும் ரத்தவாடை பிடித்திருந்தது .
'' ஜெக்யூ .. இதோ நீ கேட்ட புத்தகம் , மனுதர்மமும் வர்ணாசிரமும் ''
'' அப்பாடா குடுங்க இப்பவே படிச்சிடறேன் '' கையில் வாங்கியதும் அவனது மூளையிலிருந்த சிப்புகளை அவன் படிக்க தொடங்கு என உத்தரவிட அந்த புத்தகத்தின் சாரத்தை ஐந்து விநாடியில் மூளை உள்வாங்கியது .
அவன் அங்குதான் தடை செய்யப்பட்ட கீதை,ராமாயணம்,மகாபாரதம்,பைபிள் புதிய பழைய ஏற்பாடுகள் , குரான் என மதங்கள் குறித்த புத்தகங்களை படித்திருக்கிறான் .
''என்ன ஜெக்யூ இந்த புத்தகமெப்படி இருக்கு !! ''
அவனது கேள்விக்கு பதில அளிக்க விருப்பமின்றி புத்தக கடைக்காரனிடம் பணத்தை கொடுத்து விட்டு , ஷங்கியின் புத்தகம் வராததால் அவனை அழைத்து கொண்டு பிரமைபிடித்தவனை போல அங்கிருந்து கிளம்பினான் .
போகும் வழியில் தனது வாகனத்தை அந்த விபச்சார விடுதியின் ஆளில்லா பகுதியில் நிறுத்தி ஷங்கியிடம்
'' ஷங்கி நீ என்ன ஜாதிடா '' என கேட்க ,
ஷங்கி தனது ஜாதியை பற்றியும் அவனது முன்னோர்கள் பற்றியும் அவனது மூதாதையர் எழுதியதை பற்றியும் தான் படித்த சில குறிப்புகளை குறிப்பிட்டான் .
இன்னும் நான்கு மணி நேரமே இருக்கிறது, ஓமாஇ மீது தாக்குதல் , தொடங்க அவனுக்கு மனது படபடவென இருந்தது , தனது தெய்வத்தை வேண்டிக்கொண்டான் , அலகு குத்தி தேர் இழுப்பதாய் . அவன் இங்கு வந்து சேர்ந்து இதோடு பத்து வருடங்கள் ஆகிவிட்டது , வீட்டிலிருந்தும் குற்றதடுப்பு படையிடமிருந்தும் தப்பிக்க அங்கே வந்தவன் இன்று அந்த இயக்கத்தை யாருமே எதிர்பாராத அளவு உயரத்திற்கே இட்டு சென்றிருக்கிறான் . இயக்கத்திற்காய் பல முறை தன் உயிரையும் பணயமாய் வைத்து பல கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறான் . எத்தனையோ கொலைகளையும் , கொள்ளைகளையும் மிகச்சாதரணாமாய் செய்தவனுக்கு இது மிக பெரிய சுமையாய் , முதன்முதலாய் பயத்தையும் கொடுத்தது .
அவன் கனவிலும் எண்ணியிராத அந்தக் கொலை பேச்சில் தொடங்கி கலகமாய் வளர்ந்து சண்டையில் நடந்து இதோ கொலையில் முடிந்து விட்டது ,
அது நடந்து பத்தாவது விநாடியில் சற்றுமுன் ஒளிப்பேழை செய்திகளில் ஜெக்யூ செய்த அந்த கொலைச்சம்பவம் சற்றுமுன்னின் செயற்கைகோள் மூலமாய் ஒளிபிம்பங்களாய் எல்லாரது ஒளிபேழையிலும் வெளிவரத்துவங்கியது , இரும்பு துண்டால் பிளக்கப்பட்ட ஷங்கியின் மூளை தனது சக்தியை முழுவதுமாய் இழக்க குற்ற ஒழிப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு தங்களது அதிவேக காற்றில் பறக்கும் சிற்றூர்தியில் பறந்து வர , ஜெக்யூ தனது ஒளிப்பேழையில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்துபோய் செய்வதறியாது நிற்க , அதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த ஒரு நிழலுருவமவனை அப்படியே இழுத்துக்கொண்டு அந்த இருளான பகுதியில் மறைந்தது .
ஜெக்யூவால் எதையுமே பார்க்க இயலவில்லை , ஒரே இருட்டு , அவனது கண்களில் இனம் புரியாத வலி அவனை ஆட்கொள்ள , அவனால் தன் உடலின் எந்த பாகத்தையும் உணர முடியவில்லை . தன் தலை மொட்டை அடிக்கபட்டது போல உணர்ந்தான் , அவனால் அவனுடலஇன் எந்த பாகத்தையும் உணர முடியவில்லை . தனக்கு என்னாயிற்று , தான் எங்கிருக்கிறோம் கடைசியாய் என்ன செய்து கொண்டிருந்தோம் அவனால் நினைவு கூற இயலாது குழம்பினான் . அவனை சுற்றியிருந்த வெறுமை அவனை ஏனோ அவனால் புரிந்து கொள்ள இயலாத துன்பமாய் , தன் உடலை உணர இயலாத ஜடமாய் .....
சற்றுமுன் உடனடி செய்திகள் , ஓமாஇ யின் மீதான தாக்குதல் உளவு செயற்கைக்கோள்கள் மூலமாய் தடுக்கப்பட்டதாகவும் , அதற்கு காரணாமான அந்நிய நாடுகளின் மீதும் தன் தாக்குதலையும் தொடங்கியுள்ளதாகவும் , இந்த சதியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெக்யூ , ஓமாஇ ஐ கைப்பற்ற தனது இஒஇ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைமையில் செயல்பட்டதாகவும் , நாட்டில் இதுவரை ஒழிக்கப்பட்டிருந்த மதவாத மற்றும் வகுப்பு வாத பிரச்சாரத்தை மீண்டும் மீட்க முயன்றதாகவும் , பல பிற மதத்தினரை ஈவிரக்கமின்றி கொன்றதாகவும் , அது தவிர தன் மதத்தவராக கருதப்படுபவரையும் ஜாதி என்கிற தடைசெய்யப்பட்ட அழிந்து போன மிக பிற்போக்குதனமான முறையால் பிரித்து பார்த்தும் தனக்கு கீழானவராக தன் முன்னோர் எழுதிய புத்தகங்களின் படி பார்த்தும் அவர்களை துன்புருத்தி கொன்றிருக்கிறாரெனவும் , நாட்டை கைப்பற்றும் முயற்சியில் நமது எதிரி நாடுகளான அழிந்து போன சீனாவுடனும் , மங்கோலியாவுடனும் கைக்கோர்த்து சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இன்று காலை மக்கள் மன்றத்தில் அவனது மூளை தவிர மற்ற அனைத்தையும் வெட்டி கூளாக்கி விவசாயத்திற்கு உரமாக்குமாறு நமது அதிபர் தீர்ப்பளித்தார் எனவும் நமது உடனடி செய்தித்துறை செய்திகள் தெரிவித்துள்ளன . அவரது மூளை நமது அரசுமின்னிலையத்தின் மின் உற்பத்திக்காக நாளை அனுப்பி வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது . இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன . செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்களது கையடக்க ஒளிப்பேழையின் இலவச சேவையை பயன்படுத்துங்கள் . வாழ்க ஓமாஇ வாழ்க செம்மான் நைவத் .
அந்த அரசுவிபச்சாரவிடுதியின் சுற்றுசுவரின் கிழக்கு பகுதியில் , பான்பராக் கரையும் , சிறுநீர் தடமும் , உபயாகித்த ஆணுறைகளின் குவியல்களினூடே பயணிக்கும் கரை படிந்த சுவர்களின் எல்லையில்தான் இன்னும் அந்த மனுதர்மமும் வர்ணாசிரமும் கிடந்தது அடுத்த ஜெக்யூவின் வருகைக்காக .........
_____________________________________________________________________________________
சிறில் அலெக்ஸ் அவர்கள் அறிவித்திருந்த அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக என் முதல் கதை .
17 July 2008
அரசு மருத்துவமனை சுகாதாரம் - Dr.புருனோவின் கேள்விகளும் சில சிந்தனைகளும்
கேள்வி .1 : அரசு மருத்துவமனை சுவரில் வெற்றிலை துப்புவது யார் – மருத்துவரா, இல்லை அங்கு வரும் நீங்களா (நீங்கள் என்பது மங்களூர் சிவா ஒருவரை மட்டும் அல்ல, அனைத்து பொதுமக்களையும் தான்) ?
நல்லா கேட்டிங்க சார் கேள்வி , அரசு மருத்துவமனைக்கு வருவது மென்பொருள் துறையில் பணிபுரியும் சீமான்களோ , படித்து பட்டம் பெற்ற கணவான்களோ , மக்கள் ஒட்டை தேவையான அளவு வாங்கி கொண்டு ஆட்சி செய்யும் மந்திரிகளோ அல்லர் . (மேற் சொன்ன யாராவது நீங்கள் சொல்லும் மாடுகளும் பன்றிகளும் மேயும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரமிருந்தால் மன்னிக்கவும் , தற்குறி பாமரனுக்கு அவ்வளவுதான் அறிவு என்பதை ஒத்து கொள்கிறேன் )
அங்கே வரவன்லாம் காட்டில் ( வயலில் ) வேலை செய்றவன் , கக்கூஸ் கழுவறவன் , சாக்கடை சுத்தம் செய்பவன் , சேரியில் வாழற படிப்பறிவுல்லாத தற்குறிகள் , வரவன் பூரா காட்டு பயலுக ,( அவன் நம்மை போல சுகாதாரம் பற்றி படித்து தெரிந்தவனில்லை ) அவர்கள்தான் இந்த பாழாய் போன அரசு மருத்துவ மனைகளுக்கு வருவது . அவர்களிடம் நீங்கள் எதிர் பார்க்கும் சுகாதாரம் இருக்காதுதான் . ஒத்துகொள்கிறேன் , அவனுக்கு என்ன தெரியும் ஹைஜீன் பற்றி .
அவன்தான் அப்படி இருக்கிறான் படிக்காத தற்குறி பயபுள்ள .
அரசுமருத்துவமனைகளில் பணியிலுருக்கும் எத்தனை துப்புரவு ஊழியர்கள் சரியாக பணியாற்றுகின்றனர் . அட அரசு மருத்துவமனை சுவர்கள் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வெள்ளளையடிக்க படுகின்றன , எனக்கு தெரிந்தவரை அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை . துப்புரவு தொழிலாளர்களை கண்கானிப்பது யார் , கண்காணிப்பாளர் சரியாக இருந்தால் அரசு மருத்துவமனைகள் நிச்சயம் சுத்தமாகத்தான் இருக்கும் . அங்கே தினமும் சரியான நேரத்திற்கு வேலைக்கு போகும் மருத்துவர்களாவது இந்த அசுத்தங்களை சுத்தம் செய்ய சொல்லலாமல்லவா .
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு , மருத்துவமனைகளில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுருத்த வேண்டியது யார் கடமை . ( ஏன்னா வரவன் பூரா காட்டு பயலுக ,அவன் நம்மளாட்டம் படிக்கல அதான் )
கேள்வி 2 : அரசு மருத்துவமனை படிக்கட்டில் பாதி இட்லியையும் மீதி சட்னியையும் வீசுவது யார் – செவிலியரா அல்லது நீங்களா ?
நாங்கதான் சாமி , அது நாங்களேதான் . சரிங்க சாமி நாங்கதான் பேஸன்ட்டுக்கு துணையா வந்தா எங்களுக்கு தங்கதான் இடங்கொடுக்கல ( நாங்க எங்க 5 நட்சத்தி ஒட்டல்லயா சாமி தங்க , அப்புறம் சோறு திங்க ) திங்கவாவது இடங்கொடுக்கலாம்ல சாமி ,ஒதுக்கு புறமா . சாப்பிடற இடத்த சுத்தமா வச்சிக்க எங்களுக்கு தெரியலனா என்ன உங்காளுங்க தான் ஷிப்ட்டு போட்டு சுத்தம் பண்றாங்கள்ள (படிச்சவங்க ) சுத்தம் பண்ண வேணாம் , குறஞ்சது சொல்லலாம்ல இப்படி அசுத்தம் பண்ண வேணாமுன்னு .
கேள்வி 3 : ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் மாடு, பன்றி மேய்ப்பது – ஆய்வக நுட்பனரா அல்லது நீங்களா ??? அதை தடுக்கும் மருத்துவ அலுவலரிடம் அந்த பகுதி அரசியல்வாதி மூலம் பேசுவது மருந்தாளுனரா அல்லது நீங்களா ??
யாருங்க அத உள்ள விட்டது , உங்காஸ்பத்திரில செவிலியர்கள் , வாட்ச்மேன்கள்ளாம் இல்லையா . காசு குடுத்தா மாடு என்ன மாடர்னா என்ன வேணா பண்ணலாம்ங்க ஆஸ்பத்திரியில . அது சரி ஆரம்ப சுகாதார நிலையத்தில யாரு விவசாயம் பண்ண ஆரம்பிச்சா மாடு அங்கன வந்து மேய ( மாடு அங்க வந்து மேஞ்சு என்னத்த திங்க போவுது வீணாபோன சிரிஞ்சியும் , பஞ்சையுமா? ) . பன்றி மேயுதுனா அதுக்கு காரணம் உங்க துப்புரவாளர்களின் துப்பில்லாத தனம்தான் . ஏன்னா பன்றிகள் எங்க மேயும்னு உங்களுக்கே தெரியும் .
அப்புறம் இதுக்கு போயி அரசியல்வாதிய விட்டு மிரட்டுறதா சொல்றத கேட்டா , சிரிப்புதான் வருது , ஐயா மாடு மேய்க்கிற பயலுக்கு அதெல்லாமா தெரியும் , அப்படியே அது போன்ற விசயத்துக்கெல்லாம் ஒரு அரசியல்வாதி வருவரா ( ஒரு வேளை அது அப்போலோல வைத்தியம் பாக்கற , பண்ணையார் மாடா இருக்கும் , அவருக்கென்ன அவரும் உங்களாட்டம்தான் )
கேள்வி 4 : மருத்துவமனை என்று மட்டும் அல்ல ஏறத்தாழ அனைத்து அரசு அலுவலகங்களும் இப்படி இருக்க காரணம் அரசு ஊழியர்களா, நீங்களா ??
ஆமாமா , அந்த அரசு அலுவலகங்கள்ல்லாம் சுண்ணாம்ப பார்த்து எத்தனை வருஸமாச்சுனு அந்த சுவருக்கும் ஆண்டவனுக்கும் தான் தெரியும் . அதே மாதிரி வெத்தலை பாக்கு போடற அரசு அலுவலர்னு யாருமே இல்ல , இதுக்கு காரணமும் மக்கள்தான் ஒத்துக்கறோம்ங்க.
கேள்வி 5 : கலவரத்தில் விவேகம் பேரூந்து, கே.பி.எண் எல்லாம் பத்திரமாக போகும் போது அரசு பேரூந்து மட்டும் உடைவதற்கு காரணம் போக்குவரத்து துறையா, பொது மக்களா.???
முதலில் ஒன்றை தெளிவு படுத்துங்கள் , கலவரம் செய்வது பொதுமக்களா? , பஸ்ஸை உடைப்பது பொதுமக்களா??
பொதுமக்கள் என நீங்கள் கூறுவது ஒட்டு மொத்த சமூகத்தையும் சேர்த்துதான் என்பது உங்கள் வாதமாக இருப்பின் , கலவரம் செய்வது மருத்துவர்கள்தான் என்பது என் வாதம் ( மருத்துவர்களும் இச்சமூகத்தின் ஒரு பகுதியன்றோ )
நீங்கள் சொல்லும் கேபிஎன் ம் விவேகமும் எத்தனை பேருந்துகளை இயக்குகின்றன??, அதில் எத்தனை பேருந்துகள் கலவரம் நடக்கும் பகல் வேளையில் இயங்குகின்றன??
பாவங்க பொதுமக்கள் அரசாங்கம் எவ்வளவுதான் கட்டணத்த உயர்த்தினாலும் பேசாம கேக்கறத குடுத்துட்டு பயணிக்கிறான்
கலவரம் பண்ற படிக்காத பாமரனை கலவரத்திற்கு தூண்டிவுடுவது நம்மை போன்ற படித்தவர்கள் தானே . WE THE PEOPLE .
இந்த பிரச்சையில் ஒட்டு மொத்தமாய் பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தியாதாலேயே இந்த விளக்கம் , அதற்காக மக்கள் எந்த தவரும் செய்யவில்லை என நான் சப்பைகட்டு கட்டவில்லை , அதில் மக்களின் பங்கு அதிகமே , ஆனால் சரியான ஊழியர்களும் , தக்க மேலாண்மையும் ( தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போல ) , அரசின் நிதியும் ,இருந்தால் இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது . மக்களுக்கு மருத்துவ மனை சுகாதாரம் குறித்த அறிவை அதிகப்படுத்தினாலே போதும் ஓரளவு பிரச்சனை குறையும் . அதிகமான அளவு மக்கள் குவியும் அதுவும் பாமர மக்கள் வரும் இடங்களில் அதிகமான உருப்படியான துப்புரவு தொழிலாளர்களை நியமித்து அவர்கள் சரியாக இயங்கினாலே போதும் அரசு மருத்துவமனைகள் இந்தரலோகம் போல ஜொலிக்கும் .
அதில் மருத்துவர்களின் பங்கு மிகச்சிறியதே , அதனால் அந்த பிரச்சனையில் அவர்களை சாடுவது அர்த்தமற்றது . அவர்களால் இயன்றது இது போன்ற பிரச்சனைகளில் தலையிட்டு அரசிடம் இது குறித்து முறையிடலாம் . ( போராட்டம் வேண்டாம் , பிறகு தடியடி போன்றவைகளை சந்திக்க நேரிடலாம் )
அரசு மருத்துவமனைகளின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் கூட நல்ல பலன் கிடைக்கும் என்பது அடியேனின் கருத்து .
16 July 2008
ஏழைக்கதைகள் ஏழு : கனவுக்கணினி
'' முருகேசா , ஐயரு கம்பெனிக்கு டீ குடுக்க போகாம அங்க என்னடா பண்ற !! '' அதட்டினார் டீக்கடை அதிபர் , அவருக்கு வேலையாட்களை அதட்டுவதில் அதி தீவிர ஆசை .
'' தோ!! கிளம்பிட்டேன்ப்பா!!''
'' என்னடா !! சொல்லி வாய மூடல அதுக்குள்ள வந்து நிக்கற '' ,
திருதிருவென விழித்தபடி நின்றான் முருகேசன் , டீமாஸ்டர் வாயை திறந்து எதையோ பேச எத்தனிக்க , முருகேசன் அவரை பார்த்து வேண்டாம் என்பது போல் சைகை செய்ய மர்மமாக சிரித்தபடி தனது தேநீர் தயாரிப்பில் மூழ்கினார் .
அந்த அலுவலகத்தில் மொத்தமாய் பத்து பேர்தான் , எப்போதும் கலகல என ஆர்ப்பாட்டமாக இருக்கும் அந்த அலுவலகத்தில் முருகேசனுக்கு காலை மாலை இரு வேளையும் தேநீர் தருவது மிக பிடித்தமான ஒன்று . எல்லாமே அவளை பார்க்கத்தான் . அவள் அந்த அலுவலுகத்துக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது . அங்கு அவளை போல எட்டு இருந்தாலும் அவனது பார்வை எல்லாம் அவள் மேல்தான் . அந்த அலுவலகத்தில் அவள் மட்டும்தான் கருப்பு . அதுதான் அவனை ஈர்த்திருக்க கூடும் . அவனது ஆசை எல்லாம் அவளருகில் அமர்ந்து ஆசை தீர அவளோடு ஒரு நாள் முழுக்க அவளோடு கழிக்க வேண்டுமென்பதே .
'' சார் , ? ''
மேஜை மேல் டீயை வைத்து விட்டு ஏகாம்பரம் சாரை ஏக்கத்துடன் பார்த்தான் , அவர் கவனிக்கவில்லை , அந்த அலுவலகத்தில் இவனிடம் முகம் கொடுத்து பேசும் ஒரே ஆள் . இவனை பார்க்கையில் தன் பால்யம் ஞாயபகம் வருவதாயும் அவனை அடிக்கடி பள்ளிக்கு சென்று படிக்க சொல்லியும் வற்புறுத்துபவர் .
''சார் ? '' கொஞ்சம் சத்தத்தை கூட்டிப்பார்த்தான் .
''என்னடா !! '' முறைத்தார் .
''நான் கேட்டேனே அது ''
''சனிக்கிழமைனு சொல்லிட்டேன்ல , அப்புறமென்ன !! ''
'' சரிங்க சார் ,'' அங்கிருந்து தன் தேநீர் அட்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப முற்பட்டவன் , சில அடிகள் நகர்ந்து பின் ஒரு முறை அவளை ஏக்கமாக பார்த்துவிட்டு , ஒரு பெரு மூச்சுடன் நகர்ந்தான் .
இன்று வியாழன் , இன்னும் ஒரு நாள்தான் எப்படியாவது வேகமாக இந்த நாற்பத்தி எட்டு மணி நேரமும் கழிந்து விடாதா என ஏங்கினான் . சனிக்கிழமை தன் வெகு நாள் ஆசையை ஏகாம்பரம் சார் நிறைவேற்றி தருவதாக வாக்குருதி அளித்திருந்தார் .
கடைக்குள் நுழைய டீமாஸ்டர் வினவினார் இவன் முகத்தில் தெரித்த புன்னகையில் எல்லாம் புரிந்து போனது , மதியம் காய்ந்து போன தக்காளி சாதம் காயந்தபடி இருக்க இவன் மோட்டுவலையை பார்த்தபடி சோற்றை பிசைந்து கொண்டு அதை பற்றியே கற்பனை செய்து கொண்டிருந்தான்.
அவளை முதல் முறை பார்க்கையில் அவள் என்னவென்றே விளங்கவில்லை . ஆர்வமிகுதியில் யாருமே அவனிடம் பேசாத அந்த அலுவலகத்தில் ஏகாம்பரமிடம் கேட்க அவர் அதன் பெயர் கம்ப்யூட்டர் என்றும் கணக்கு போட வாங்கி இருப்பதாகவும் , அவனும் அதை கற்றுக்கொண்டால் நல்ல சம்பளத்தில் வேலைக்கு போகலாமெனவும் கூறினார் .
அவளால் நிறைய சம்பாதிக்க வேண்டுமென்பதெல்லாம் அவனுக்கு ஆசையில்லை , ஒரு நாள் மட்டும் அக்கணினியிலமர்ந்து அவ்விசைப்பலகையினில் தன் விரல் பட ஒரு நாள் எல்லாம் அப்படியே இருந்துவிட்டு அப்படியே செத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றெண்ணியிருக்கிறான் .
அறிவிற் சிறந்ததாய் இருப்பதால் அதை ஒரு பெண்ணாய் நினைத்தானோ. விந்தைகள் புரிவதால் தேவதையாய் கற்பனை செய்தானோ அவனுக்கு அது அதுவல்ல , அது அவளாகியிருந்தது . நம்மூரில் தேவதைகள்தானதிகம் தேவதூதர்கள் குறைவு , அதனாலும் கணினி அவனுள் பெண்பாலாய் ஆகியிருக்கலாம் .
கணினியுடனான அவனது ஆசையை காமத்தோடு ஒப்பிட்டால் , காமம் போன்றதொரு வேட்கையாயிருப்பின் , காமத்தின் ஆவல் ஒரு முறையோடு முடிவதில்லை , காதலாய் கொண்டால் அதுவும் காமத்தின் அழகிய வடிவமே , அவனது ஆசை பக்தியை போன்றது , இறையை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்னும் பக்தி , ஒரு முறை பார்த்துவிட்டால் பிறகு முக்திதான் என்பதை போல இதுவும் பக்திதான் கணினி மீதான ஒரு பக்தி .
அவனால் பணம் கொடுத்து கணினி கற்க அறிவுமில்லை வசதியுமில்லை , ஏகாம்பரமிடம் தெரிவிக்க அவரோ , அவர் வாங்கும் சொற்ப சம்பளத்தில் தன்னால் அவனை படிக்க வைக்க இயலாது வேண்டுமானால் வாரமொருமுறை சனிக்கிழமைகளில் வந்தால் கற்றுத் தருவதாய் வாக்களித்தார் .
நாற்பத்தி எட்டு மணி நேரத்தையும் நானூறு வருடங்களாய் ஆசையின் வலியோடு பயணித்தான் . ஒரு வழியாய் சனிக்கிழமையும் வந்தது .
விடியலுக்காய் காத்திருந்தது போல அவசரமாய் எழுந்து , குளித்து , பவுடர் பூசி , கோவிலுக்கு சென்று , சாமி கும்பிட்டு , தேங்காய் உடைத்து , கற்பூரமேற்றி , ஒரு வழியாய் ஐயர் அலுவலகத்தை அடைந்தான் . அலுவலகம் திறக்கப்படவில்லை . பொருத்திருந்தான் .
இவன் வயது குழந்தைகள் ரிக்சாவிலும் , ஆட்டோவிலும் , பேருந்திலும் பள்ளிக்கு போய்க்கொண்டிருந்தனர் , அவர்களை பார்க்க பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் , அலுவலக வாசலில் கிடந்த அன்றைய செய்தித்தாளை எடுத்துப் புரட்டினான் , அதுவும் சரியாக படிக்க இயலாமல் , மீண்டும் சாலையிலேயே அயர்ந்தான் . மேலும் குழந்தைகள் சாரை சாரையாக எறும்புகள் போல கையில் அட்டியுடன் அணிவகுத்து செல்ல , தலையை குனிந்து கொண்டான் . குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சார பயணமது .
ஏகாம்பரம் வரவில்லை , மதியமானது அப்போதும் அவர் வரவில்லை ,பொருத்திருந்ததான் , மாலை ஆனது பசி காதை அடைக்க ஆரம்பித்திருந்தது இன்னும் வரவில்லை , இரவாகியும் அவன் அங்கிருந்து அகலவில்லை , அவள் மேலிருந்த ஆசைக்கு அவ்வளவு பலம் .
நள்ளிரவாக டீமாஸ்டர் அவனைத்தேடி அலுவலகத்திற்கே வந்துவிட , இவன் அரைமயக்கத்தில் அந்த அலுவலக வாசலில் படுத்திருந்தான்.
''முருகேசா!! டேய் முருகேசா!! '' தட்டி எழுப்பினார் . '' என்னாடா ஆச்சு , நேத்து லீவு சொல்லிட்டு போனவன் , ரவைக்கு வீட்டுக்கு வருவனு காத்திருந்தா ஆளக்காணலயேனு இங்கிட்டு வந்து பார்த்தா இப்படி பைத்தியகார பயலாட்டம் படுத்திருக்க , வா ரூம்புக்கு போவோம் ''
''அண்ணா ஏகாம்பரம் சார் வரலணா , என்னாச்சினு தெரியல , யாருமே வரலணா ''
''சரி வா நாம காலைல பேசுவோம் , லூசுபயபுள்ள , எதையாவது தின்னியா'' பசியால் அவன் அவரது மடியில் மயங்கி விழுந்தான் .
திங்கள் கிழமையும் அந்த அலுவலகம் திறக்கப்படவில்லை , தொடர்ந்து ஒரு வாரம் பூட்டியே இருந்தது . தினமும் அவனும் விடாது அங்கு சென்று பார்த்து வருவான் .
சில நாட்கள் கழித்து அது ஒரு நிதிநிறுவனமென்றும் அது திவாலாகியதாகவும் செய்தி படித்ததாக மாஸ்டர் கூறினார் . அநந் அலுவலகம் இனிமேல் திறக்க மாட்டார்கள் எனபதை தவிர எதுவும் புரியாது துடித்து போனான் . அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது அவளை இனி பார்க்க முடியாதென்பது .
பிரிதொரு நாளில் அந்த அலுவலகம் அடித்து நொருக்கப் பட்டது அந்த நிறுவன முதலீட்டாளர்களால் , அவளும் அங்கிருந்து தூக்கி எறியப்பட்டாள் , அவள் உடைந்து நடுத்தெருவில் கிடக்க அதில் ஒன்றை கையில் எடுத்து கதறி அழுதான் . அவனாசை அநாதையாய் நடுரோட்டில் .
அதை தூக்கி கொண்டு கடைக்கு திரும்புகையில் வழியெங்கும் அவள் துகள்கள் ஒவ்வொன்றாய் பொருக்கி கொண்டான் , கையில் இடமில்லை அந்த விசைப்பலகையும் உடைந்த திலையில் சாக்கடையில் , ஒடிச்சென்று சாக்கடையில் இறங்கி அதையும் எடுத்துக் கொண்டு , தெருவோர நீர் குழாயில் கழுவியபடி கடையை நோக்கி நடக்க மாலை மங்க ஆரம்பித்தது . அவன் ஆசையும் நிறைவேறியது .
சில ஆசைகள் தானாகவே நிறைவேறுகின்றன , சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன , சில ஆசைகள் அது சாகும் வரை அந்த உயிரனத்தோடு வாழ்ந்து அது இறந்தபின் அதனுடனே மக்கி மண்ணாகின்றன . ஆசைப்பட தகுதி தேவையில்லை . ஆசைகளின் ஆற்றல் அளப்பரியது .