Pages

31 December 2014

99நாட்களுடைய ஓர் ஆண்டு!





இன்னொரு ஆண்டு முடிந்துவிட்டது. அனேகமாக சென்ற ஆண்டு இதே நாளில் இதேநேரத்தில் வரும் ஆண்டில் என்னவெல்லாம் செய்யலாம் என திட்டமிட்டுக்கொண்டிருந்தேன். இம்முறை இதை இரண்டு நாட்களுக்கு முன்பே செய்துவிட்டேன். அந்த அளவுக்கு இந்த ஆண்டு நான் பக்குவப்பட்டுவிட்டேன் போல என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஆண்டு எனக்கு யாரும் விருது எருது எதுவும் தரவில்லை என்பதால் அடுத்த ஆண்டு நானே என் பெயரில் நாலு பேருக்கு விருது கொடுக்க நினைத்திருக்கிறேன். இந்த சபதத்திலிருந்துதான் இந்த புத்தாண்டு துவங்குகிறது.

கடந்த ஆண்டுகளில் மிகவும் சுமாரான ஆண்டு 2014தான். நல்லவேளையாக சீக்கிரமே அவசரமாக முடிந்துவிட்டது. பெரிய ட்விஸ்ட்டுகளோ கஷ்டங்களோ குழப்பங்களோ எதுவுமே இல்லாமல் உப்புசப்பில்லாத உடுப்பி ஓட்டல் சாம்பார் போல இருந்தது. ஆனால் ஆரோக்கியமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். நிறைய முயற்சிகள் செய்தேன். ஆண்டின் துவக்கத்தில் நிறைய சபதங்கள் எடுத்திருந்தேன். அதில் பாதியை முடித்திருக்கிறேன் என்பதே என்னளவில் மகத்தான சாதனைதான். அதோடு அடுத்த ஆண்டுக்காகவும் எண்ணற்ற சபதங்களை க்யூவில் போட்டு வைத்திருக்கிறேன்.

சென்ற ஆண்டு எடுத்துக்கொண்ட சபதங்களில் முதன்மையானது மாரத்தான் ஓடுவது. புகைப்பழக்கத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்ட போதே முழு மாராத்தான் ஓட முடிவெடுத்திருந்தேன். ஆனால் அதற்கேற்ற உடல் எனக்கில்லை என்பதால் அரை மாராத்தான் தூரமான 21 கிலேமீட்டர் ஓட ஆறு மாதங்கள் கடும் பயிற்சி எடுத்து டிசம்பர் ஏழு சென்னை மாரத்தான் போட்டியில் இரண்டு மணிநேரம் பதினோரு நிமிடம் பதினோரு விநாடிகளில் ஓடி முடித்தேன். இந்த ஆண்டு செய்த உருப்படியான சாதனைகளில் இதுவும் ஒன்று.



அடுத்து இணையத்திலிருந்து விடுவித்துக்கொண்டு 99 நாட்கள் தனிமை விரதமிருந்தது. உண்மையில் இந்த காலகட்டம் எனக்கு மிகமுக்கியமானது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருநாள் கூட இணையத்தை பயன்படுத்தாமல் இருந்ததில்லை. (இணையம் என்பதை இங்கே சமூகவலைதளம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.) ஒவ்வொரு நாளும் உலகத்திற்கு ஏதாவது கருத்தினை சொல்லியே ஆகவேண்டிய நிர்பந்தமின்றி மூன்று மாதகாலம் நிம்மதியாக இருந்தேன். என்னை சுற்றி நிகழுகிற எல்லாவற்றையும் ஃபேஸ்புக் ஸ்டேடஸாகவோ ட்விட்டர் ட்விட்டாக மாற்றுகிற அல்லது அதற்கென யோசிக்கிற மனநிலை மாறிவிட்டிருந்தது. அதோடு இணையத்தில் பல பத்தாயிரம் நண்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டு என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்ததும், அவை எல்லாமே மாயை என்பதும் உண்மையான நண்பர்களின் எண்ணிக்கை இன்னமும் நம் ஒருகை விரல்களுக்குள்தான் இருக்கிறது என்பதையும் உணர்த்திய வகையில் இந்த 99 நாட்கள் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிக முக்கியமானது. இந்த காலகட்டத்தில் என்னை நிஜமாகவே மிஸ் பண்ணி காணமுடியாமல் தேடி தேடி நேரிலும் போனிலும் மின்னஞ்சலிலும் அழைத்து அன்பு காட்டிய நண்பர்களுக்கு நன்றி. ஆரம்ப நாட்களில் கை நடுக்கமிருந்தாலும் போகப்போக பழகிவிட்டது.

99 நாட்களும் எண்ணற்ற திரைப்படங்கள் பார்க்க முடிந்தது. எல்லாமே டாரன்ட் புண்ணியத்தில். ஒவ்வொரு நாளும் குறைந்ததது மூன்று படங்கள் என்கிற அளவில் மூன்று மாதமும் ஏகப்பட்ட திரைப்படங்கள். திரைப்படங்களை மட்டும் பார்க்காமல் அதன் திரைக்கதைகளை இணையத்தில் தேடி தேடி வாசித்திருக்கிறேன். இது திரைப்படங்களை மேலும் துல்லியமாக புரிந்துகொள்ளவும் அதன் திரைபடமாக்கலின் சூட்சமங்களை கற்றுக்கொடுப்பதாகவும் அமைந்தது. சிட்ஃபீல்ட் திரைக்கதை நூலையும் அதன் தமிழ் வெர்ஷனான கருந்தேள் ராஜேஷின் திரைக்கதை எழுதுவது இப்படியையும் பலதடவைகள் வாசித்தேன். இதெல்லாம் இந்த 99 நாட்களில்தான் சாத்தியமானது. இந்த 99 நாட்களில் இழந்தது நண்பர்களின் சில முக்கியமான சோக நிகழ்வுகளில் விஷயம் தாமதமாக வந்துசேர அவர்களோடு அந்தத் தருணத்தில் உடனிருக்க முடியாமல் போனதுதான். நிச்சயமாக எதையுமே இழக்கவில்லை.

இந்த ஆண்டில் பார்த்த திரைப்படங்களின் அளவுக்கு, எண்ணற்ற நூல்களையும் வாசித்து முடித்தேன் என்று சொல்ல ஆசையாக இருந்தாலும், சென்ற ஆண்டின் இறுதியில் ப்ளான் பண்ணியதுபோல நூறு நூல்களை வாசிக்கமுடியவில்லை. நாற்பது ப்ளஸ் தான் சாத்தியமானது. கொரியன் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கென நாவல் எழுதவேண்டும் என்கிற ஆர்வங்களும் இன்னமும் மிச்சமிருக்கின்றன. அடுத்த ஆண்டு நிறைய நூல் அறிமுகங்கள் செய்ய வேண்டும்.

நிறையவே பயணிக்க விரும்புகிற எனக்கு இந்த ஆண்டு போதிய அளவுக்கு பயணங்கள் வாய்க்கவேயில்லை. நண்பர் அலெக்ஸ் பால்மேனனை பேட்டியெடுக்க நான்குநாள் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு சென்றதும் அங்கிருந்து ஊர்திரும்பும்வழியில் நாக்பூரில் ஒரு நாளும் தம்பி அறிவழகனோடு சுற்றியது மட்டும்தான் பயணங்களில் தேறியவை. இந்த ஆண்டு இந்தியா முழுக்க பயணிக்கும் ஒரு திட்டமிருக்கிறது.

என்னுடைய வலைப்பூவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைவான கட்டுரைகளையே எழுதினேன். மீண்டும் பழையபடி ஜனவரியிலிருந்து நிறைய நிறைய எழுதவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரே ஒரு நல்ல சுவாரஸ்யமான கட்டுரையாவது எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன் நேரம் வாய்க்கட்டும்.

எழுத ஆரம்பித்து எட்டு ஆண்டுகளாகிவிட்ட போதும் இன்னமும் ஒரு புத்தகம் போடவில்லையே என்கிற மனக்குறை எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனாலும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் அன்பால் ஒரு நூலை வெளியிட வேண்டியதாகிவிட்டது. இதுவரை நான் எழுதிய சிறுகதைகளில் சிலவும் இந்த ஆண்டு எழுதிய சிறுகதைகளில் சிலவற்றையும் சேர்த்து ஒரு தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார் மனுஷ். ‘’ஃபேஸ்புக் பொண்ணு’’ என்கிற அந்தத்தொகுப்பு வருகிற ஜனவரி மூன்றாம்தேதி வெளியாகிறது. நூறுரூபாய் விலையுள்ள அந்நூலை அனைவரும் வாங்கி படித்து பயன்பெறவும்.



இந்நூல் எனக்கு எதன் துவக்கமாகவும் எதன் முடிவாகவும் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் இப்போதைக்கு ஐயம் நெர்வஸ்! 300 நூலாவது விற்க வேண்டும். எனக்கு அவ்வளவு பெரிய சந்தை இருக்கிறதா தெரியவில்லை. அந்த எண்ணிக்கையை எட்ட முடியாவிட்டால் அடுத்த புக்கு போடும் ஆசையை இன்னும் சில ஆண்டுகளுக்கு தள்ளிவைத்துவிட வேண்டியதுதான் என முடிவெடுத்திருக்கிறேன். எழுதுவதில் மிகமுக்கியமான சபதங்கள் மூன்று இருக்கின்றன. 1.குழந்தைகளுக்கு நிறைய எழுதவேண்டும்.. 2.குழந்தைகளுக்கு எதாவது எழுத வேண்டும்… 3.குழந்தைகளுக்கு கொஞ்சமாவது எழுதவேண்டும்.

இந்த ஆண்டு யாரிடமும் சண்டை எதுவும் போடவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் படி பேசவோ எழுதவோ இல்லை என்பதும் கூட சாதனைதான். அதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு சினிமா விமர்சனங்களை குறைத்துக்கொண்டதுதான் என்று தோன்றுகிறது. இந்த ஆண்டு கற்றுக்கொண்டது ‘’நமக்கான போட்டியாளர் வெளியில் இல்லை, அவர் நமக்குள் இருக்கிறார் நாம் முறியடிக்கவேண்டியது நம்முடைய சாதனைகளைத்தான்’’.

என்னளவில் எண்ணற்ற கனவுகளும் லட்சியங்களுமாக 2015 பிறக்கிறது. அடுத்த ஆண்டுக்கான சபதங்களும் சவால்களும் கண்முன்னால் காத்திருக்கின்றன. நிறைய சாதனைகளோடு அடுத்த ஆண்டு சந்திப்போம். ஹேப்பி நியூ இயர். சீ யூ சூன்.

10 December 2014

சிக்ஸ்பேக் எழுத்தாளன்!




ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் எடுப்பதுபோலவே இந்த ஆண்டும் எண்ணற்ற சபதங்களை எடுத்திருந்தேன். அதில் ஒன்று மாரத்தான் ஓடுவது. மே மாதம் வரைக்குமே அதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எப்போதும்போலவே இம்முறையும் இந்த புத்தாண்டு சபதமும் அடுத்த ஆண்டுவரை பென்டிங்கிலேயே இருந்துவிடும் என்றே நினைத்து அப்படியே விட்டுவிட்டேன். அதற்கு ஒரு காரணம் இருந்தது. பதினைந்தாண்டுகளாக குப்பு குப்பென இழுத்த நிகோடின் அடர்ந்த என்னுடைய கருத்த நுரையீரல். அதைவைத்துக்கொண்டு லாங் டிஸ்டென்ஸ் ஒடுவதெல்லாம் சாத்தியமேயில்லை என்றுதான் பயிற்சியை துவக்கும்போதெல்லாம் தோன்றியது. (புகைப்பழக்கத்தை விட்டு கிட்டத்தட்ட இப்போது ஒன்னேமுக்காலாண்டுகளாகிவிட்டது)சில முறை ஓட முயன்று மூச்சுவாங்கி நெஞ்சடைத்து முயற்சிகளை கைவிட்டிருக்கிறேன்.

சரியாக நான்கு மாதங்களுக்கு முன்பு உறுதியாக இம்முறை என்னா ஆனாலும் பயிற்சியை முடிப்பது என்கிற வெறியோடு பயிற்சியை தொடங்கினேன். ஆரம்பத்தில் வெறும் அரை கிலோமீட்டர் ஓடுவதற்குள் கால்கள் வலிக்கும் மூச்சு முட்டும். வியர்த்து கொட்டும். இன்னும் பத்துமீட்டர் ஓடினாலும் செத்துவிழுவோம் என்றெல்லாம் அச்சம் வரும். சில சமயங்களில் மயக்கமாகி விழுந்துமிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் என்னுடனே நான் தோற்றுக்கொண்டிருந்தேன். என்னுடைய சோம்பேறித்தனமும் உடல்நிலையும் என்னை பார்த்து கொக்கானி காட்டி சிரித்தது. ஒவ்வொரு நாளும் என்னை என்னுடைய மோசமான உடல் நிலையை வெல்வதுதான் எனக்கு முன்னால் இருந்த மிகப்பெரிய சவாலாக இருந்தது.

மாரத்தான் கற்றுத்தரும் பாடமே அதுதான். ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களையே தோற்கடிப்பீர்கள். முந்தைய நாளின் சாதனை அடுத்தடுத்த நாளில் முறியடிப்பீர்கள். உங்களுக்கான போட்டியாளர் மோசமான எதிரி எல்லாமே நீங்கள்தான்.

முதல் ஐந்து கிலோமீட்டர் ஓடும் வரைக்கும் ஒவ்வொருநாளும் போராட்டம்தான். ஆனால் அந்த வலியும் வேதனையும் பிடித்திருந்தது. ஒட்டுமொத்தமாக என்னை நானே எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு என்னை புத்தம்புதிதாக கண்டடைந்த நாட்கள் அதுதான்.
ஐந்து கிலோமீட்டரை மிதவேகத்தில் ஓட தொடங்கி போகப்போக பத்தாகி பின் பதினைந்தானது. ஒவ்வொரு அடியையும் மிகப்பொறுமையாகவும் உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்தோடு எடுத்து வைக்கத்தொடங்கினேன். எதிர்நீச்சல் படத்தில் காட்டப்படுபவது போல மாரத்தான் பயிற்சி என்பது அவ்வளவு சுலபமில்லை. மாரத்தான் ஓடுவதென்பது ஒரே ஒரு நாள் ஓடுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஓடுவது. கடந்த 125 நாட்களாக ஓடிய மொத்த தொலைவு 463.25 கிலோமீட்டர்கள் (நன்றி NIKE+ APP).

டிசம்பர் 7 சென்னை மாரத்தானில் (HALF MARATHON) ஓடினேன். 21.1 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணிநேரம் 11 நிமிடங்களில் கடந்தேன். நண்பர்கள் எல்லாம் அடேங்கப்பா சூப்பர்யா செம டைமிங். கலக்கிட்ட என்றெல்லாம் சொன்னார்கள். நான் இதுவரை ஓடியதிலேயே மிக குறைவான நேரமும் இதுதான். எனக்கு பெருமையாக இருந்தது. அடுத்த முறை இந்த கால அளவை இன்னும் குறைக்க வேண்டும் அதற்கான பயிற்சிகள் ஆல்ரெடி ஸ்டார்ட்டட்.

அதுசரி... இந்த சென்னை மாரத்தானில் எனக்கும் முதலிடம் பிடித்தவருக்குமான கால இடைவெளி எவ்வளவு தெரியுமா? மிகச்சரியாக ஒருமணிநேரமும் ஒருநிமிடமும்தான். ஆனால் நான் போட்டியிட்டது அவரோடு கிடையாது என்னோடுதான். SO, ATLAST I WON!

****

22 August 2014

உல்லாச கப்பல் பயணம்




உல்லாசம் என்கிற சொல்லுக்கான பொருளையே தினத்தந்திகாரர்கள் மாற்றிவைத்திருக்கிறார்கள். அதனால் உல்லாசம் என்கிற சொல்லை வாசித்ததுமே உள்ளுக்கு ஒரு கள்ளக்காதல்கதை இயல்பாகவே ஓட ஆரம்பிக்கிறது இல்லையா? ஆனால் அது குழந்தைகளுக்கான சொல், அச்சொல்லை குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூல்களிலும் பூந்தளிர் மாதிரியான இடங்களிலும் அடிக்கடி வாசிக்க முடியும். காமிக்ஸ் ரசிகரான கிங்விஸ்வா தான் பதிப்பித்திருக்கிற முதல் நூலுக்கு ‘’உல்லாச கப்பல் பயணம்’’ என்று வைக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யம்.

சிங்கப்பூரை சேர்ந்த கிருத்திகா எழுதியிருக்கிற ‘பயண நாவல்’ இது. பயண அனுபவ கட்டுரையாகவே எழுதியிருக்கலாம். ஆனால் ஏனோ அதை நாவலாக எழுதியிருக்கிறார் கிருத்திகா. தமிழில் பயணக்கட்டுரைகள் மிகவும் குறைவு. ஆனாலும் படிக்கும் போது நமக்கு நாவல் படிக்கிற உணர்வே இல்லை பயணக்கட்டுரை படிப்பதுபோலவேதான் இருந்தது இந்த நாவலின் சிறப்பு.

மன்மதன் அம்பு படத்தில் வருமே உல்லாச கப்பல் என்கிற CRUISE.. அதுதான் இந்த நூலின் பின்னணி. சிங்கப்பூரிலிருந்து கிளம்பும் ஒரு பயணக்கப்பலில் பயணிக்கும் சிலருடைய நேரடி அனுபவஙளின் தொகுப்பு இது. மையமாக ஒரு கதையும் போகிறது. உண்மையில் கதையில் இல்லாத சுவாரஸ்யம் நூல் முழுக்க தொகுக்கப்படும் கப்பல் குறித்த தகவல்களில் கிடைக்கிறது. நிறைய படங்களும் உண்டு. கப்பலுக்குள்ளேயே தியேட்டர் ,நீச்சல் குளம், மால், விளையாட்டு அரங்கம், மைதானம் என ஐந்துநாட்களும் அவர் அனுபவித்த கண்ட கேட்ட விஷயங்களை ஒன்று விடாமல்… ஐ ரீபிட் ஒன்றுவிடாமல் நேரடியாக தொகுத்திருக்கிறார். (எதையுமே விட்டுவிடக்கூடாது என்கிற வேட்கையோடு உழைத்திருப்பதை இந்நூலை வாசிக்கும்போதே உணர முடியும்)

ஒருவேளை உங்களிடம் நிறைய பணமிருந்து (எப்படியும் ஒரு குடும்பத்திற்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ஆகுமாம்!) நீங்களும் இதுபோல போகவிரும்பினால் கையில் இந்த நூலை வைத்துக்கொள்வது நல்லது. ஒரு கைடு போல உபயோகப்படும். இதுபோன்ற ஒரு காஸ்ட்லி பயணத்திற்கு தேவையான முன்னேற்பாடுகள், அங்கே செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை ஜாக்கிரதையாக இருக்க வேண்டியவை என நிறைய தகவல்கள் உண்டு. அல்லது வாழ்க்கையில் எப்போதும் போகவே வாய்ப்பில்லையென்றாலும் படித்து மகிழலாம். நிறைய கலர் படங்கள் உண்டு.

இந்நூலை எழுதியிருக்கும் கிருத்திகாவுக்கு மொழி மிகவும் எளிமையாக கைகூடி வந்திருக்கிறது. இந்த மொழி குழந்தைகளுக்கானது. நூல் முழுக்கவே ஆங்கிலக்கலப்பின்றி தமிழிலேயே எல்லா விஷயங்களை எழுதியிருக்கிறார் என்பது முக்கியமானது. தமிழில் எழுதிய சில ஆங்கில சொற்களுக்கான பட்டியலையும் இறுதியில் இணைத்திருக்கிறார்கள்.

இதுவே படிக்க ஜாலியாக இருந்தாலும் இந்த பின்னணியில் ஒரு அற்புதமான க்ரைம் த்ரில்லர் எழுதியிருந்தால் அப்படியே காமிக்ஸ் நூலாகவே மாற்றியிருக்கலாம். அல்லது வளர்ந்த சிறார்களுக்கான (TEENS) கதையாகக்கூட எழுதியிருக்கலாம்.

நூல் – உல்லாச கப்பல் பயணம்
கிருத்திகா
தமிழ்காமிக்ஸ் உலகம் பதிப்பகம்
விலை – 200

21 August 2014

கதை திரைக்கதை வ....சனம் இயக்கம்




எப்படிப்பட்ட இயக்குனரின் படத்திலும் வெண்ணிற ஆடை மூர்த்தி தனித்து நிற்பார். ஆனால் டீஆர் படத்தில் அவராலும் கூட தப்பமுடியாது. டீஆர் படத்தில் எல்லோருமே டீஆரைப்போலவே விரலை காற்றில் ஆட்டி ஆட்டி முகத்தை அப்படி இப்படி திருப்பி அடித்தொண்டையில் வசனம் பேசிதான் நடிக்க வேண்டியிருக்கும். அவர்கள் சீரியஸாக நடித்தாலும் பார்க்கிற நமக்கு காமெடிக்கும் ஜாலிக்கும் குறைவிருக்காது. டிஆர் இப்போதெல்லாம் படமெடுப்பதில்லை.

அந்தக்குறையை போக்கும் வகையில் சமீபத்தில் ஒரு படம் திரைக்கு வந்திருக்கிறது. நியூவேவோ எதோ அந்த வகையில் வந்திருக்கும் அதிநவீன மெட்டா சினிமா இது என்று ஆளாளுக்கு அலப்பறையை கொடுக்க நானும் ஆவலுடன் வாயை ஆவென்று வைத்துக்கொண்டு படத்தை பார்த்தேன். அஞ்சானால் இது அலுப்பு மருந்தாகியிருக்கிறது போல!

படத்தின் நடித்திருக்கிற சகலரும் நடிகர் பார்த்திபனைப்போலவே நடிக்கிறார்கள். அவரைப்போலவே கஷ்டப்பட்டு பொழுதன்னைக்கும் ‘’வித்தியாசமாக’’ பேசுகிறார்கள். (டீ கேட்கும் போது கூட) பேசுகிறார்கள். பேசு…………….கிறார்கள். பே……சுகிறார்கள். பேசுகி…..றார்கள். படத்தின் பெயரை வசனம்,வசனம்,வசனம்,இயக்கம் என்று வைத்திருக்கலாம். அவ்வளவு வசனம். அதிலும் ‘’கொய்யா பழமில்ல இது கொய்த பழம்தான்’’ , வடையை கீழே போட்டு இந்தா உளுந்த வடை என்று சிரிக்கிறார்கள், அவர் பாணியிலேயே சொல்வதென்றால் காதில் ரத்தம் வர (பா)வ(ம்)சனங்கள்.

படத்தின் முதல்பாதி முழுக்க தமிழ்சினிமாவின் க்ளீஷே பற்றியே பேசிபேசிபேசி… இரண்டாம்பாதியில் அத்தனை க்ளிஷே விஷயங்களையும் வைத்து ஒரு கதை பண்ணுகிறார் படத்தில் வருகிற இயக்குநர். அந்த ரொம்ப சுமாரான கதையை…

விட்டா பேசிட்டே போறீங்க… படத்தில் ப்ளஸ்பாய்ண்டே இல்லையா?

இருக்கிறது. நிறையவே. கச்சிதமான பாத்திரங்கள், சுருளியாக வருகிற அந்த பையன், கண்களில் பிராந்தியும் குரலில் போதையுமாக ஹீரோயின்கள், ஆங்காங்கே பளிச்சிடும் ப்ரைட்டான ஐடியாக்கள், தமிழ்சினிமாவின் மீது வைக்கிற தைரியமான விமர்சனங்கள், கொரியன் ஜாப்பனீஸிலிருந்து சுடாத ஒரிஜினல் கதை, காற்றில் கதை இருக்கு என அதிரும் இசை என இருக்கு… பாஸிட்டிவ் நிறைய இருக்கு. ஆனால் 120 ரூப்பீஸ் கொடுத்து படம் பார்ப்பது என்பது எப்படி சிறப்பா படம் எடுக்கணும்னு அட்வைஸ் கேட்கறதுக்கு இல்லைதானுங்களேஜி?

படம் பார்த்துக்கொண்டிருந்த போது தியேட்டரின் ஒரு மூலையில் இருந்த குறிப்பிட்ட சிலர் மட்டும் ஜோக்குகளுக்கு சிரிக்கிறார்கள். வசனங்களுக்கு கை தட்டுகிறார்கள். மற்றவர்கள் அதை திரும்பி திரும்பி காரணம் புரியாமல் முழிக்கிறார்கள். இது சினிமாகாரர்களுக்கும் விமர்சகர்களுக்குமான படம் என்பது மட்டும் புரிந்தது. அவ்வகையில் இப்படம் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் கலாம்.. பிடிக்.

(எழுதியதை திருப்பி வாசிக்க ஆரம்பித்தால் அய்யோ படம் பார்த்த எனக்கே அந்த வித்யாச வசன வியாதி தொத்திக்கிச்சிபோல… டீஆரின் வீராசாமியை பார்த்து பழைய நிலைக்கு பம்ருதி ம்டுண்வே)

19 August 2014

கருவாட்டு நாற்றம்




கோயம்பேடு காய்கனி சந்தையில் விதவிதமான கருவாடுகள் மிக அதிக அளவில் விற்கப்படுவதாகவும் இதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் அஷௌகர்யம் உண்டாவதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தின பத்திரிகை குமட்டிக்கொண்டே செய்தி வெளியிட்டது.

1996ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஷட்டப்படி காய்கறி சந்தையில் காய்கறி மட்டும்தான் விற்கப்படவேண்டும் என்கிற சட்டத்தை மீறி இப்படி ஷைவ உணவு ஷாப்பிடுபவர்களுக்கு ஷங்கடம் வரும்படி கருவாடு விற்பது முறையா என்று அந்த செய்தி நீண்டிருந்தது. இதையடுத்து நேற்று மாநகராட்சியினர் கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்து பல லட்சரூபாய்.. மன்னிக்கவும் ரூபாய் இருபதாயிரம் மதிப்புள்ள பல ஆயிரம் டன் கருவாடுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து ஷைவ உணவு ஷாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து வருங்காலத்தில் இங்கே கருவாடு விற்றால் கடை உரிமத்தையே ரத்து செய்துவிடுவோம் என்கிற மிரட்டலும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக கருவாடு விற்ற 18 கடைகளில் முதலாளிகளுக்கும் விடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இருப்பத்தெட்டு ஆண்டுகளாக நானும் என்னுடைய குடும்பத்தினரும் கருவாட்டினை விரும்பி உண்டு வருகிறோம். எனக்கெல்லாம் கருவாடு என்பது என்னோடே வளர்ந்து ஒரு தம்பி மாதிரி. தினமும் என்னோடு இருந்திருக்கிறான். ஒரு சட்டி பழைய சோற்றை கூட ஒரு துண்டு கருவாடிருந்தால் உற்சாகமாக சாப்பிட்டுவிட முடியும். காலை ப்ரேக்ஃபாஸ்ட் அப்படித்தான் நமக்கெல்லாம் இருந்திருக்கிறது. கறிசோறுதராத ருசியை கருவாட்டுக்குழம்பு தந்துவிடும்.

கோவையில் உக்கடம் பகுதியில் கருவாடுக்கென்றே பிரத்யேகமான சந்தை உண்டு. அங்கு போனால் உலகின் எவ்வகை கருவாடும் சல்லிசு ரேட்டில் கிடைக்கும். அம்மாவுக்கு நங்கு கருவாடு, எனக்கு நெத்திலி, தங்கைக்கு துண்டுகருவாடு , வவ்வா, கொடுவா அவா இவா என கருவாடுகளில் நிறைய வெரைட்டி உண்டு.

சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்ட பின் இந்த கருவாடு சந்தையை ரொம்பவே இழந்திருந்தோம். அண்ணாச்சி கடையில் கூட பாக்கெட் கருவாடு கிடைக்கும். தக்னியூண்டு துண்டு வெரி சுமால் கருவாடு இரண்டு பீஸ் ஐந்து ரூபாய் என்று அநியாய விலைக்கு விற்றார்கள். அதைவாங்கி குழம்பு வைக்கவும் முடியாது. சுட்டுதிங்கவும் முடியாது. நல்ல ஃப்ரஷ்ஷான நெத்திலி கருவாடு கிடைக்காது. நங்கு கருவாடு கிடைக்காது. அம்மாவுக்கு தினமும் சாப்பாட்டோடு ஒரு சின்ன துண்டு கருவாடு இல்லையென்றால் ஒருவாய் கூட உருப்படியாக இறங்காது. அம்மாவின் வருத்தம் அதிகமான ஒருநாளில் பக்கத்துவிட்டு ஆன்ட்டி ஒருவரது தகவலின்பேரில் கி.பி.2007 தொடங்கி கோயம்பேடு சந்தையில் கருவாடு வாங்கத்தொடங்கினோம். (வடசென்னையில் நிறைய கருவாட்டு சந்தைகள் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் முகப்பேரிலிருந்து அம்மாவை அழைத்துப்போய் போய்வருவதற்குள் தாவூ தாராந்துடும். வானகரம் மீன் சந்தையில் விற்கிற கருவாடுகளில் சுவை குறைவு விலை அதிகம். பேரம் பேசி மாளாது.)

கோயம்பேடு காய்கனி சந்தையில் இருக்கிற நூற்றுக்கணக்கான கடைகளில் வெறும் பத்து பதினைஞ்சு கடைகளில்தான் கருவாடு விற்கப்படும். மிக குறைந்த அளவிலேயே விற்கப்படும். அதுவும் மளிகை கடைகாரர்களுக்கு விற்க பாக்கெட்டில் அடைத்துவைத்த கருவாடுகளே கிடைக்கும். ஊரில் விற்பதுபோல நன்றாக குவித்து வைத்து பரப்பியெல்லாம் மணக்க மணக்க விற்கமாட்டார்கள். கருவாடுக்கென்று இருக்கிற கொஞ்ச நஞ்சமரியாதையையும் உறிஞ்சிவிட்டுத்தான் இங்கே விற்கிறார்கள். கருவாட்டின் மணம் பார்க்காமல் எப்படி வாங்கவது. இருந்தாலும் கோயம்பேடுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அங்குதான் மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வது நம்முடைய வழக்கம்.

இந்த கருவாட்டு கடைகளில் வாசனை சுத்தமாக இருக்காது. இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இருந்து நான் கண்டதில்லை. அதே பகுதியில் அழுகின காய்கனிகளின் நாற்றம்தான் குடலை கிழித்துக்கொண்டு குமட்டும்! அந்த உச்சபட்ச துர்நாற்றத்தை பொருத்துக்கொள்கிற ஒருவரால் உலகின் எந்த நாற்றத்தையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் என்னமோ இந்த நாலுபாக்கெட் கருவாட்டினால்தான் நாட்டுக்கு தீங்கு விளைந்துவிட்டது போல… அதைதான் இப்போது துப்பறிந்து கண்டறிந்து செய்தி வெளியிட்டு ஷூத்தப்படுத்தியிருக்கிறார்கள். கருவாட்டை விற்று விதிமுறைகளை மீறிவிட்டார்களாம்?

என்னிடம் இப்போது தொக்கி நிற்கிற முதற்கேள்வி ‘இனி நானும் என் தாயும் கருவாட்டுக்கு என்ன செய்வோம்? எங்க போவோம்...?’ என்பதுதான். நாளை முதல் மீண்டும் அந்த அண்ணாச்சி கருவாடு விற்றால் (அவரும் கோயம்பேட்டில் கொள்முதல் பண்றவர்தான்) வாங்கி ஒரு துண்டோ இரண்டுதுண்டோ வாங்கி நக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

ஒருவேளை இனி ஷூத்த பத்தமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி சாப்பிடப்போகிற ஷைவ பட்சிணிகள் ஒன்று சேர்ந்து முகப்பேர் பக்கம் என்னை போன்ற ஏழை கருவாட்டு ப்ரியர்களுக்காக ப்ரத்யேக சந்தை கட்டிக்கொடுப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது.

தேனிமுருகன்




தேனிமுருகன் தமிழ்சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளாத மிகநல்ல குணசித்திர நடிகர். முகத்தில் அப்பாவித்தனமும் குரலில் லேசாக் க்ரீச்சிடும் தெனாவெட்டுமாக அசலான மதுரை மனிதராக நிறைய திரைப்படங்களில் வடிவேலுவோடு சின்னச்சின்ன நகைச்சுவை வேடங்களில் வலம்வருவார். ஆனால் சீரியஸ் நடிப்பிலும் அசத்தக்கூடியவர்.

பண்ணையாரும் பத்மினியும் ‘குறும்படம்’ பார்த்ததுண்டா? அதில் பண்ணையாராக இவர்தான் நடித்திருப்பார். அக்குறும்படம் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது இவருடைய பாத்திரத்தில் நடித்த ஜெயபிரகாஷ் நன்றாகவே நடித்திருந்தார், ஆனால் குறும்படத்தில் நாயகனாக நடித்த தேனிமுருகனின் முகத்தில் நிரம்பியிருந்த கருணையும் அன்பும் கிராமத்து பெரிசுகளுக்கே உரிய வெள்ளந்தித்தனமும் நிச்சயமாக இல்லைவே இல்லை.

ப.பத்மினி திரைப்படம் சுமாராக போனதற்கு அதுவும் ஒருகாரணம், ஜெபியிடம் இயல்பாகவே இருக்கிற ஒரு கம்பீரம் அவர் என்னதான் வெள்ளந்தியாக நடித்தாலும் முந்தித்தெரிவது பெரிய சறுக்கலாக இருந்தது. தேனி முருகனை ஏனோ பண்ணையார் பத்மினியும் படத்தில் சின்ன பாத்திரத்திலும் கூட உபயோகிக்கவில்லையே என படம் வந்த போதே வருத்தமாக இருந்தது. படக்குழுவினருக்கு என்ன காரணமோ என்ன பிரச்சனையோ. போகட்டும்.

அதற்கு பிறகு தேனி முருகனை எந்த திரைப்படத்திலும் பார்த்த நினைவில்லை. சென்ற வார நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில்தான் அவருடைய குறும்படம் ஒன்றை பார்க்க வாய்த்தது. நல்ல கலைஞன் தனக்கு எப்போது வாய்ப்புக்கிடைத்தாலும் அதில் நிச்சயமாக தனித்து பிரகாசிப்பான் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் தேனிமுருகன்தான். அதை நிரூபிப்பதாக இருந்தது ‘’குலசாமி உத்தரவு’’ என்கிற அவர் நடித்த அந்த 10நிமிட குறும்படம்.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கடந்த வாரங்களில் சிறுகதை ரவுண்ட் நடந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் மாஞ்சு மாஞ்சு நம்ம மக்கள் சுஜாதா கதையே படமாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது பெரிய வருத்தமிருந்தது… ஆனால் சிறுகதை ரவுண்ட் முடிந்து கிராமத்து ரவுண்டில் இமையத்தின் அருமையான சிறுகதைகளில் ஒன்றோடு வந்திருந்தார் அந்த (பெயர் நினைவில்லை) இயக்குனர் ஆச்சர்யமாக!.

அந்த கதையை முன்பே வாசித்ததுண்டு. திருடுவதற்கு செல்கிற கிராமத்து ஏழை திருடன் , அவனுடைய குலவழக்கப்பட்டி திருடுவதற்கு குலசாமியிடம் உத்தரவு வாங்க காத்திருப்பான் ஏனோ அன்று உத்தரவு (பல்லி கத்துவது) கிடைக்காது. அவனுடைய புலம்பல்களும் அதன்வழியே அவன் சொல்கிற அவனுடைய வாழ்க்கையும் சமூக விமர்சனமுமாக கதை நகரும். இதை ஒரே ஷாட்டில்.. ஒரே ஒரு லொகஷேனில் மிக அருமையாக படமாக்கியிருந்தனர் இக்குறும்பட குழுவினர். (இன்னும் யூடியூபில் ஏற்றவில்லை போல.. ஏற்றியதும் நிச்சயமாக இணைப்பு தருவோம்). (இயக்குனரை தனியாக ஒரு கட்டுரை எழுதி பாராட்டலாம்)

ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிற இப்படத்தில் தேனிமுருகன் மட்டுமே பத்து நிமிடத்திற்கு புலம்பவேண்டும். அதிலும் பல்வேறு விதமான பாவனைகளை ஆல்மோஸ்ட் நவரசங்களையும் வெளிக்காட்டவேண்டும். வசனங்கள் இயல்பாக எங்கும் தடுமாறாமல் அடுத்தடுத்து வந்து விழ வேண்டும். உடல்மொழியில் லேசான அடர் நகைச்சுவை ஊடுபாவாக இருக்க வேண்டும். இத்தனையையும் சாத்தியமாக்கியிருந்தார் தேனி முருகன். குறும்படத்தை பார்த்து முடிக்கும்போது நிச்சயமாக நம்மையும் மீறி இயல்பாக அவருக்காக கைகள் தட்ட ஆரம்பிக்கும்.

சரியான வாய்ப்பு கிடைத்தால் அல்லது கொடுத்தால் இன்னொரு சிம்ஹாவாக இன்னொரு விஜயசேதுபதியாக நிச்சயம் பெரிய நடிகராக வரக்கூடிய சாத்தியமுள்ளவர். எல்லாத்துக்கும் நேரமும் காலமும் கூடிவரனுமில்ல.. அதுவுமில்லாம சினிமாவில் திறமையைவிட அதிர்ஷ்டமும் கொஞ்சம் அதிகமாவே வேணும். நிச்சயமாக தேனிமுருகனுக்கும் அந்த குலசாமி உத்தரவு சீக்கிரமே கிடைக்கணும்.

09 August 2014

சிவாஜிகணேசனின் முத்தங்கள்





நீங்கள் கவிதையை ரசிப்பவராக இருக்கலாம்? அல்லது உங்களுக்கு கவிதை என்கிற சொல்லை படித்ததும் வாமிட்டிங் சென்சேசனோடு தலைசுற்றலும் வரலாம்? கவிஞர்களை கொல்லும் வெறியோடு திரியலாம்?

நீங்க எப்படிப்பட்டவராக இருந்தாலும் உங்களால் கவிஞர் ‘’இசை’’யின் கவிதைகளை ரசிக்காமல் இருக்கவே முடியாது. அவரை பற்றி அவருடைய இந்த கவிதையே சொல்லிவிடும்.

***

நைஸ்

எதேச்சையாகப் பட்டுவிட்டது
உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன
இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா
முனிகள் பிறழ்ந்தனரா

இதற்காகத்தான் இப்படி
தேம்பித் தேம்பி அழுகிறார்களா
இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா
இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை
எதிர்க்கிறார்களா
செங்குருதியில் மடலிடுகிறார்களா

இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டைப்
போட்டு மூடுகிறார்களா

இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்துப் பிறன்மனைக்குள்
குதிக்கிறார்களா
இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா
கைவளை நெகிழ்கிறதா

இந்த நைஸிற்காகத்தான் “வைகறை வாளாகிறதா”
இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை
அன்பு செய்கிறார்களா
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை
எழுதி வைக்கிறார்களா
இதற்காகத்தான் தூங்கும்போது தலையில் கல்லைத்
தூக்கிப் போடுகிறார்களா
இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா

அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம், அதே நைஸ்தான் வேண்டுமோ.

****




உண்மைதானே? ஈஸியாக இருக்கிறதல்லா? படிக்க சுவாரஸ்யமாகவும் ஆழமாகவும் அதே சமயம் திருப்தியாகவும் இருக்கிறதுதானே? சமீபத்தில்தான் அவருடைய ‘’சிவாஜி கணேசனின் முத்தங்கள்’’ என்கிற தொகுப்பை வாசித்தேன். "சிவாஜிகணேசனின் முத்தங்கள்'' என்கிற தலைப்புதான் அதை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. முதலில் தேடி வாசித்ததும் அதைதான். உண்மையில் அது ஒரு அற்புதமான கவிதை. சிறுகதையாக கூட எழுதியிருக்கலாம். (நடிகர் சிவாஜிகணேசனுக்கும் அக்கவிதைக்கும் என்ன தொடர்பு என்பதை அச்சடித்தகாகிதத்தில் காண்க). ஆல்மோஸ்ட் ஐம்பது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எல்லா கவிதைகளுமே தனித்துவமானவை. அவருடைய மற்ற தொகுப்புகளையும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுபவை.

இசையின் கவிதைகள் எந்த அலங்காரமும் இல்லாமல் நிர்வாணமாக நிற்கிற அம்மணகுண்டி குட்டிப்பாப்பாவின் க்யூட்தனத்தோடு இருக்கின்றன. எழுதபடிக்க தெரிந்த எவருக்கும் பிடிக்கும் படியான கவிதைகளை எழுதுகிறார். மிகமுக்கியமாக அதை படித்ததும் புரிந்துவிடுகிறது. மறுபடியும் படிக்கும்போது வேறு மாதிரி புரிகிறது. ஒவ்வொரு முறையும் சேட்டன் கடை ‘அதே’ டீ விதவிதமான ருசியைத்தருவது போல.

எளிமையும் சுயஎள்ளலும் பகடியும் வாழ்க்கையை எப்போதும் ஒரு எகத்தாளத்தோடு அணுகுகிற எளிய கவிதைகள் இசையுனுடையவை. ஒருவேளை எம்ஆர் ராதா கவிதை எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பாரோ என்னவோ? இந்த கவிதை அவருடைய அந்த குணத்திற்கு நல்ல எவிடென்சாக இருக்கும்.

ஒரு ப்ரவுன் கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா?

“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில்
அவரது தொந்தி நிலத்தில் தேய்ந்து மோசமாக
மூச்சு முட்டியது

ஏழாவது முறையாக

குளியலறைக்குச் சென்று சல்லடை போட்டார்
தன் சக எழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில்
“பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு
அவரது பையையும் பரிசோதித்துவிட்டார்

ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு

காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்து
அதைக் கீழே தள்ளி விட்டிருக்கலாம்
கண்களைப் பிடுங்கிக் கீழே
வீசிப் பொறுமையாகத் துழாவினார்
பிறகு கண்களை நம்பாமல்
அவரே இறங்கிப் போனார்

அவர் ஒன்றும் தரித்திரக் கலைஞர் அல்ல
அவரிடம் இப்போதுகூட சுளையாக
500 ரூபாய் இருக்கிறது

ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும்
இடதுபுற எலாஸ்டிக் பட்டையில்
அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக
அவருக்குத் தெரியாது

நாம் அசட்டை செய்வது போலவோ
கிண்டலடிப்பது போலவோ
அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை

அவரது இல்லத்து அரசி
அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு
பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி
அனுப்பியிருக்கிறார்.

****

இப்போது புரிந்திருக்குமே இசையின் கவிதைகளில் இருக்கிற சேட்டைத்தனம். வாழ்க்கையின் அத்தனை புனிதமான விஷயங்களை நையாண்டியோடும் நக்கலோடும் அணுகுகிறது இவருடைய கவிதைகள். மிகச்சாதாரண விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை மிகப்பெரிய விஷயங்களோடு எள்ளலோடு முடிச்சுப்போடுகிற வித்தை இசைக்கு எளிதாக வாய்த்திருக்கிறது. ஆனால் வெறும் நக்கலும் நையாண்டியும் மட்டுமேயில்லை ஆழமான சினேகமும் நினைவுகளின் தீராத வலியும் ரசனையும் கூட நிறைந்திருக்கிறது இசையின் கவிதைகளில். ஒரு சில கவிதைகள் ஒரு முழுநாவலையும் சிறுகதைகளையும் கேப்சூயுலாக்கி வைத்திருப்பவை.

அவருடைய சிவாஜிகணேசனின் முத்தங்கள் தொகுப்பில் எனக்கு ‘’விகடகவி மட்டையை உயர்த்துகிறார்’’ , ‘’குத்துப்பாட்டின் அனுபூதி நிலை’’ "அறவுவுணர்ச்சி எனும் ஞாயிற்றுக்கிழமை ஆடு'' ஆகிய மூன்றும் மிகவும் பிடித்த கவிதைகளாக இருந்தன. ''விகடகவி மட்டை… கவிதை அவற்றில் டாப் அன் அல்டிமேட். அதுபோலொரு கவிதையை இதற்குமுன் நீங்கள் எங்குமே படித்திருக்க முடியாது. இந்த ப்ளாக் ஹ்யூமர் எனப்படுகிற அவலநகைச்சுவையில் அடங்குகிற கவிதையாக இதை பார்க்கிறேன். இக்கவிதைகள் டைப் செய்ய அதிக நேரமடுக்கும் என்பதால் அதை நீங்களே நூலை காசு கொடுத்து வாங்கி (70ரூப்பீஸ்தான்) படித்து… இன்புற்று.. (காலச்சுவடு பதிப்பகம்).
இருந்தாலும் இசையின் இந்தக்கவிதையை பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

மகா ரப்பர்

பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக்கொண்டிருக்கிறான் சிறுவன்.
அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்
தம்பி, இதுபோல
14.3.2001ஐ அழிக்கமுடியுமா
என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்

***

கவிஞர் இசை குறித்த விக்கிபீடியா பக்கம் இப்படி சொல்கிறது….

இசை (பி. 1977): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஆ. சத்தியமூர்த்தி. கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் வசித்து வருகிறார். அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றுகின்றார். 2000க்குப் பிறகு கவிதைகள் எழுதித் தொடங்கியவர். சமீபகாலத்தில் மிகவும் கவனம் பெற்ற கவிதைகளை எழுதியுள்ளார். தீம்தரிகிட, கருக்கல், உயிர்மை, காலச்சுவடு, தீராநதி உள்ளிட்ட இலக்கிய இதழ்கள் பலவற்றில் இவர் கவிதைகள் வெளியாகி உள்ளன. இவரது நூல்கள்:

கவிதைத் தொகுதிகள்

1. காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி 2002
2. உறுமீன்களற்ற நதி 2008
3. சிவாஜி கணேசனின் முத்தங்கள் 2012

***

எனக்கு கவிஞர் இசையை முன்னபின்ன பரிச்சயமில்லை. ஃபேஸ்புக்கில் நிறைய லைக் போட்டதாலேயே அவரை நண்பர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. ஒருவேளை அவர் சென்னைவாசியாக இருந்திருந்தால் ஒன்றிரண்டு நூல்வெளியீட்டுக்கூட்டங்களிலாவது சந்தித்திருக்கலாம் ‘’உங்க கவிதைனா உயிர்ஜி’’ என உதார்விட்டிருக்கலாம்.

ஆனால் அவருடைய கவிதை தொகுப்பை வாசித்து முடித்த பின் அவரோடு பலநாட்கள் பழகிய ஒரு உள்ளுணர்வு. ஒரு நல்ல மழைபேய்ந்து ஓய்ந்த மாலையில் நாலு டீயும் இரண்டு மிளகாய் பஜ்ஜியும் தின்றுகொண்டே மனதிற்கினிய நண்பனோடு சிரிக்க சிரிக்க உரையாடி முடித்த திருப்தி. எப்போதாவது இசையை நேரில் சந்திக்க வேண்டும்.




25 July 2014

ஜெயகாந்தன் 80




கூட்டத்தின் சராசரி வயது நிச்சயம் 50லிருந்து 60ற்குள்தான். கணிசமான பாட்டிகள். எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு ரொமான்ஸ். பாட்டிகளின் வெட்கத்திற்கு ஈடு இணையே கிடையாது. அரிதாக பூக்கிற பூக்களுக்குதானே மதிப்பு அதிகம்(சுமாராக இருந்தாலும்).

ஒரு வயதான அம்மா தன் இளம் மகனோடு வந்திருந்தார். நிகழ்ச்சி தொடங்க திரை விலகியது. ஜெயகாந்தன் மேடையின் நடுவில் அமர்ந்திருந்தார். அந்த அம்மா அவரை கண்டதும் அப்படியே குபூக் என கண்கள் கலங்கி அழுதுவிட்டார். தன் மகனிடம்.. ‘’இவ்ளோ வயசாகியும் இன்னும் அப்படியே கம்பீரமா இருக்கார்ல’’ என்று கிசுகிசுத்துக்கொண்டே சேலை தலைப்பால் கண்களை துடைத்துக்கொள்ள அந்த பையனுக்கு என்ன புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. மர்மமாக புன்னகைத்தான். தாயின் காதலை முதன்முதலாக அறிகிற ஒரு மகனின் புன்னகையாக நான் அதைப்புரிந்துகொண்டேன். அம்மாவின் காதல்கள் எல்லாமே மகன்களுக்கு மிகவும் பிடித்தமானவைதான்.

ம்யூசிக் அகாடமியின் கொள்ளளவு எவ்வளவு? அரங்கு நிறைந்து பலரும் நின்றுகொண்டு கிழே அமர்ந்துகொண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். ஒரு எழுத்தாளனுக்காக இவ்வளவு பெரிய கூட்டம் கூடுமா என்பது ஆச்சர்யம்தான். அதுவும் எழுதுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்ட எழுத்தாளனுக்காக! தள்ளாத வயதிலும் வந்து கூடியிருந்த அந்த பெரியவர்களை பார்க்கும்போதுதான் புரிந்தது ஜெயகாந்தன் எழுத்துகளின் ஈர்ப்பினை. எதோ இருந்திருக்கிறது.

நிகழ்ச்சியில் தரப்பட்ட ஒரு நோட்டீஸின் வழி இன்னமும் விழுப்புரம் வேலூரில் ஜேகே வாசகர் வட்டம் ஒன்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. வாசலில் ‘’எங்களுக்கு உலகத்தை உன்னிப்பாக கவனிக்க காட்டிய ‘பூதக்கண்ணாடியே’ என்பது மாதிரி ஒரு மிகப்பெரிய பேனர் கூட வைத்திருந்தனர்.

விகடனில் அந்தக்காலத்தில் ஜெயகாந்தனின் ஒருகதைக்கு ‘500ரூபாய்’ சன்மானம் கொடுப்பார்களாம். அந்த காலகட்டத்தில் அப்பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த மூத்த பணியாளருக்கே மாத சம்பளம் 800ரூபாய்தானாம்!

இன்று அதே பணியாளர் வாங்குகிற சம்பளம் குறைந்தது 50ஆயிரம் தொடங்கி 80ஆயிரம் இருக்கலாம். ஆனால் கதை எழுதுபவர்களுக்கு கொடுக்கப்படும் சன்மானம் வெறும் இரண்டாயிரம்தான்! ஜெயகாந்தனின் 500ரூபாய் என்பது வெறும் பணம் மட்டுமே அல்ல.. அன்றைக்கு அவருக்கிருந்த பாப்புலாரிட்டிக்கு கிடைத்த மரியாதை.

ஜெயகாந்தனின் எழுத்துகளை கரைத்துகுடித்தவன் என்றெல்லாம் என்னை சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால் அவருடைய சில முக்கியமான சிறுகதைகள் படித்திருக்கிறேன், படித்தே ஆகவேண்டும் என நண்பர்கள் பரிந்துரைத்த ஒருசில நல்ல நாவல்கள் வாசித்திருக்கிறேன். அவர் எழுதியதில் எனக்கு ரொம்ப பிடித்தது சினிமாவுக்கு போன சித்தாளுதான்! நமக்கும் ஜெயகாந்தனுக்குமான ஒட்டுமொத்த பழக்கவழக்கமும் அவ்வளவுதான்.

அவருடைய கதைகளை விடவும் அவரைப்பற்றிய கதைகள் பலவும் சுவாரஸ்யமானவை. அரசியல்வாதிகளோடு, சினிமா நட்சத்திரங்களோடு, அவருடைய க்ளோஸ் என்கவுன்டர்கள் எல்லாமே சுவையானவை. பலவும் எழுத முடியாதவை.

எந்த ஒரு எழுத்தாளனும் வாழ விரும்புகிற அசாத்தியமான தில்லான த்ரில்லான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் ஜேகே என்பது மட்டும் உறுதி. எழுத்தாளனாக வாழ்ந்தால் அப்படி வாழணும் என்றுதான் தோன்றியது. அதை உணர்த்துவதாக இருந்தது மியூசிக் அகாதமியில் கூடியிருந்த கூட்டம். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு நேற்றுதான் கிடைத்தது. இடம் ம்யூசிக் அகாதமி. நிகழ்வு அவருடைய 80வது பிறந்தநாள் விழா. இன்னமும் அதே மிடுக்குடன் கம்பீரமாகத்தான் இருக்கிறார். கொஞ்சம் பழைய மாடலில்!

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அவரைப்பற்றிய ஒரு டாகுமென்ட்ரி ஒளிபரப்பப்பட்டது. இதை டாகுமென்ட்ரி என்று சொன்னால் ஒரு டாகும் நம்பாது. ஜெகேவின் பேட்டி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். படம் முழுக்க அவரேதான் பேசிக்கொண்டிருக்கிறார். விடாமல் பேசுகிறார். நடுவில் ஒரு குரல் ஜேகேவின் விக்கிபீடியா பக்கத்தில் இருக்கிற சங்கதிகளை வாசிக்க அவ்வளவுதான் முடிந்தது. வைக்கம் முகம்மது பஷீர் பற்றிய டாகுமென்ட்ரி நினைவுக்கு வந்தது. ம்ம் இதுமாதிரி விஷயங்களில் என்ன இருந்தாலும் மல்லுபாய்ஸ்தான் பெஸ்ட். (இந்த ஜேகே பற்றிய படத்தை இயக்கியவர் சா.கந்தசாமி என்று நினைக்கிறேன்.)

விழா தொடங்கியதிலிருந்தே ஒரே மாதிரி சிரித்த முகமாக அமர்ந்திருந்தார் ஜேகே. அவரைப்பற்றி சொல்ல ஒன்றுமே இல்லை. நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து என்று அறிவித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர். அனைவரும் எழுந்து நின்றனர். ‘’வாழ்த்துதுமே.. வாழ்த்துதுமே.. ‘’ என்றுதான் ஆடியோ குரல் தொடங்கியது. யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலும் எல்லோருமாக கோராஸாக.. வாழ்த்துதுமே வாழ்த்துதுமே என்று சம்ப்ரதாயத்திற்கு முணுமுணுத்துவிட்டு அமர்ந்தனர். அனைவரும் அமர்ந்ததும் மீண்டும் ‘’நீராடு கடலுடுத்த.. ‘’ என்று தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்க எல்லோரும் பதறிப்போய் எழுந்து நின்று மீண்டும் தொடங்கினர். தன் வயது காரணமாக அமர்ந்தேயிருந்த ஜேகே சன்னமாக நக்கல் புன்னகை ஒன்றை விட்டார்.

நிகழ்வின் இறுதியில் பேசிய ஜேகே.. மிகச்சரியாக ஒருநிமிடம்தான் பேசினார் ‘’இங்கே என்னை அழைத்த போது எல்லோரும் நன்றி வணக்கம்தான் சொல்லுவார்கள் என்று அழைத்தனர்.. ஆனால் இங்கே எல்லோரும் நிறைய பேசினார்கள்.. அதனால் நான் நன்றி வணக்கம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்’’ என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார்.

நடிகை லட்சுமி பேசும்போது சிலநேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் தன்னுடைய பங்களிப்பை பற்றி சுவையாக பேசினார். படத்தின் இயக்குனர் பீம்சிங்கிற்கு வேறொரு நடிகையை படத்தில் நடிக்க வைக்கவே ஆசை. ஆனால் ஜேகேவோ ‘’லட்சுமிதான் வேண்டும் என அடம்பிடிக்கிறார். ‘’அவதான்யா பாக்க ஒல்லியா வெகுளியா பஸ்ஸ்டான்ட்ல நிக்கும்போது கடத்திகிட்டு போயி கற்பழிக்க ஏத்த பொண்ணு மாதிரி இருப்பா.. அவளையே போடுங்க’’ என்று அழுத்தி சொல்லியிருக்கிறார். ஆனால் பீம்சிங் அந்த குறிப்பிட நடிகையை வலியுறுத்த.. ‘’அவ பஸ் ஸ்டான்ட்ல நின்னா கடத்திட்டு போய்தான் கற்பழிக்கணும்னுலாம் தோணாதுப்பா..’’ என்றாராம்! நடிகையின் பெயர் குறிப்பிடவில்லை.

***

இந்நிகழ்ச்சியில் ஜெயகாந்தன் கதைகள் என்கிற ஒரு நூலும் வெளியிடப்பட்டது. விகடனில் வெளியான இருபது கதைகள் அதுவெளிவந்த காலகட்டத்தின் அதே ஓவியங்களோடும் கதைக்கு நடுவே வந்த துணுக்குகளோடும் வெளியிடப்பட்டிருக்கிறது. நானும் ஒன்றுவாங்கிக்கொண்டேன்.

எந்த கதையிலும் எந்த பக்கத்திலும் வருடம் போடவில்லை என்கிற குறைதவிர்த்து நல்ல அருமையான தொகுப்பு. அதிலும் கோபுலுவின் கார்ட்டூன்களும் மாயாவின் ஓவியங்களுமாக பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம். விலைதான் அதிகம் 350. ஜேகேவாச்சே சும்மாவா!

27 June 2014

ஒரு கோடம்பாக்கம் காப்பி கதை



தன் முதல்படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனரின் இரண்டாவது படம். இந்த மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது என்ன காரணமோ அனேகமாக அடுத்த மாதம் ரிலீஸாகலாம். ஏற்கனவே படத்தின் ட்ரைலரும் பாடல்களும் வெளியாகி இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது. எல்லோருமே அந்த இரண்டாவது படத்துக்காகத்தான் ஆவலுடன் வெயிட்டிங்.
நேற்று கோடம்பாக்கத்தில் உதவி இயக்குனர் ஒருவரோடு டீக்கடையில் காப்பி குடித்துக்கொண்டே ஒரு விவாதம். பேச்சு வடபழனியில் தொடங்கி அமெரிக்கா ஆஸ்திரேலியாவெல்லாம் சுற்றி ஈரான்,எஸ்ரா,ஜெமோ,வித்யூ வித்தவுட் யூவில் யூடர்ன் அடித்து கொரியாவில் வந்து நின்றது.

‘’அண்ணே கொரியாவுக்கும் கோடம்பாக்கத்துக்கும் நடுவுல ஒரு சுரங்கப்பாதை இருக்குண்ணே’’ என்றார். ஜோக்கடிக்கும்போது சிரிக்கமாட்டார். ரசனையான மனிதர். பேச்சு சுற்றி சுற்றி கடைசியில் முத்திரை இயக்குனரின் இரண்டாவது படத்தைப்பற்றி வந்தது. அது ஒரு காப்பி படம்ண்ணே என்றபோது பகீர் என்றிருந்தது. மிகவும் மதிக்கிற இளம் இயக்குனர்களில் அவரும் ஒருவர். ‘’இளம் இயக்குனர்ண்ணா காப்பியடிக்க மாட்டாய்ங்களாண்ணே’’ என்றபோது அது நியாயமாகவும் தெரிந்தது. ‘’காட்பாதரை தேவர்மகனாக்கின மாதிரி இவரு.. இந்த டர்ட்டி கார்னிவல *****வாக்கிட்டாருண்ணே’’

‘’அது ஒரு கொரியன் படத்தோட அச்சு அசல் காப்பிண்ணே… கொரியா மேட்டரை நம்மூர் மதுரை மேட்டரா மாத்திருக்காய்ங்க, காவேரி கார்னர்ல சுத்துற எல்லா பயலுக்கும் இது தெரியும்.. போய் நின்னு சும்மா பேச்சு குடுத்து பாருங்க ஆளாளுக்கு அந்த ஒரிஜினல் படம் பத்திதான் சொல்லுவானுங்க... நீயூஸ்லயே வந்துடுச்சு.. நீ வேஸ்ட்ண்ணே என்ன பத்திரிகையாளனோ’’ என்றார். ஒரிஜினல் கொரியன் படத்தின் டாரன்ட் காப்பியை பென்ட்ரைவில் எனக்கும் ஒன்று கொடுத்தார்.

அந்த தென்கொரிய படத்தின் பெயர் ‘’A DIRTY CARNIVAL”. 2006ல் வெளியான இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றது. நியோ-நாயர் வகை படம் இது. (கேரள நாயர்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை. இது ஒரு GENRE).

இரண்டாவது பட ட்ரைலரை ஏற்கனவே பார்த்திருந்ததால் இந்த படத்தின் கேரக்டர்களுக்கு அந்த முகங்களை பொருத்திக்கொண்டு படம் பார்க்க தொடங்கினேன். உதவி இயக்குனர் சொன்னது கிட்டத்தட்ட உண்மை மாதிரிதான் தோன்றியது. ஆனால் இல்லாத மாதிரியும் தோன்றியது.

படம் வெளியாவதற்கு முன்பே நாம் எந்த முன்முடிவுகளுக்கும் போய்விடக்கூடாது. யாரையும் குற்றவாளியாக்குவது PROFESSIONAL ETHICS ஆகவும் இருக்காது. நமக்கென்று சில தனிமனித விழுமியங்களும் உண்டுதானே… என்பதால் படத்தின் கதையை மட்டும் இங்கே சொல்லிவிடுகிறேன். இதேகதையுள்ள ஏதாவது படத்தை இதற்கு முன்பு நீங்கள் பார்த்திருந்தாலோ அல்லது இனிமேல் பார்க்க நேரிட்டாலோ தயவு செய்து தகவல் தரவும். நீளமான கதையை வாசிக்க விருப்பமில்லையென்றால் ஸ்கிப் செய்து கடைசிப்பத்திக்கு தாவலாம்!

இனிகதை…

***

கொரியாவின் ஏதோ ஒரு நகரத்தில் இருக்கிற ஒரு கேங்ஸ்டர் தலைவன். அவனுக்காக வேலை பார்க்கிற அவனுடைய கிளை கேங்ஸ்டர்தான் நாயகன். கிளை வைத்திருப்பவன் தனக்கென்று விஸ்வசமாக நான்கு பேரை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்துகொண்டிருக்கிறான். ஆனால் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் இருக்கிற தன்னுடைய குடும்பத்தை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறான். அதோடு தன்னுடைய கிளையை தொடர்ந்து நடத்துவதிலும் அவனுக்கு சிரமங்கள் இருக்கிறது. இந்த நிலையில் கேங்ஸ்டர் தலைவனுக்கு வேலைகள் கொடுக்கிற முதலாளிக்கு ஒரு போலீஸ்காரனால் சிக்கல் வருகிறது. அவனைப்போட்டுத்தள்ள கேட்கிறான் முதலாளி. ஆனால் கேங்ஸ்டர் தலைவனோ அது கஷ்டம் என மறுக்கிறான். முதலாளி ஹீரோவை அழைத்து எத்தனை நாளைக்குதான் இப்படி காசில்லாம கஷ்டபடுவ சீக்கிரமா ஒரு நல்ல முதலாளியை பிடிச்சி வாழ்க்கைல முன்னேறப்பாரு என அட்வைஸ் பண்ணுகிறான்.

உடனே நம்ம ஹீரோ போலீஸ்காரனை போட்டுத்தள்ளும் அசைன்மென்ட்டை முடித்துக்கொடுக்கிறான். இதற்கு நடுவில் தன்னுடைய பள்ளிகால நண்பனை சந்திக்கிறான் ஹீரோ. அவன் ஒரு கேங்ஸ்டர் படமெடுக்க திரைக்கதை அமைப்பதற்காக களவிபரங்கள் சேகரிக்கிறான். ஹீரோ கேங்ஸ்டர் என்பது தெரிந்து அவனுடன் மீண்டும் பழைய நட்பை புதுப்பித்து கொண்டு ஜிகிரிதோஸ்தாக மாறுகிறான். அதோடு பள்ளிக்கால தோழியை (ஹீரோயின்) ஹீரோ மீண்டும் சந்திக்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கிறான். பள்ளிக்கால தோழியை கண்டதும் காதலில் விழுகிறான் ஹீரோ. அவளை அவள் வேலைபார்க்கும் இடத்தில் சந்திக்கிறான். ஆனால் அவளோ இவன் ஒரு ரவுடி என்பது தெரிந்து அவனிடம் நெருக்கம் காட்ட மறுக்கிறாள். ஒருநாள் தனிமையில் சந்திக்கும்போது அவளோடு அவளுடைய முன்னாள் காதலன் தகராறு செய்துகொண்டிருப்பதை பார்த்து அந்த மு.கா வை நாயகியின் முன்னாலேயே வைத்து நைய புடைத்துவிடுகிறான். இதனால் கோபமாகும் நாயகி என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள்.

ஹீரோ போலீஸ்காரனை கொன்று முதலாளிக்கு நெருக்கமானதை அறிந்து கொள்ளும் கேங்ஸ்டர் தலைவன் கோபமாகிறான். ஆனால் ஹீரோவிடம் அதை காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு ஒரு வேலை கொடுக்கிறான். ஆனால் அந்த வேலையை தன்னுடைய தங்கை திருமணவிழா முடிந்த பின் செய்துகொள்ளலாம் என்றும் முடிவாகிறது. தலைவனுக்கு மேட்டர் தெரிஞ்சிடுச்சு என்று உஷாராகும் ஹீரோ தலைவனை போட்டுத்தள்ள ப்ளான் போடுகிறான். தலைவன் தங்கை திருமண விழாவிலேயே தலைவனை சதக் சதக்.. இஸ்ஸ் என காரியத்தை கச்சிதமாக முடிக்கிறார்கள்.

ஹீரோ தலைவனாக தலையெடுக்கிறான்.. முதலாளிக்காக மோசமான காரியங்களை மகிழ்ச்சியோடு செய்கிறான். மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஒன்றுக்காக நிறைய கொலைகள் செய்யத்தொடங்குகிறான். நடுவில் காதலியை பிரிந்த சோகத்தில் நிறைய குடித்துவிட்டு டைரக்டருக்கு போன் பண்ண அவன் தன்னுடைய அறைக்கு அழைத்துச்செல்ல.. அங்கே தான் செய்த கொலைகளை பற்றி உளறிவிட.. அவனோ அதை திரைக்கதையாக எழுதி படமெடுக்கிற வாய்ப்பை பெறுகிறான். நடுவில் காதலியை சந்தித்து மன்னிப்புக்கேட்டு மீண்டும் காதலை புதுப்பிக்கிறான் ஹீரோ.

டைரக்டர் நண்பனின் படம் வெளியாகி மெகாஹிட் ஆகிறது. படத்தில் ஹீரோ முதன்முதலில் போலீஸ்காரனை கொன்றதும், அதற்குபிறகு தலைவனை கொன்றதும் அப்படியே காட்சியாக வந்திருக்க.. அதை பார்த்து முதலாளி அஞ்சுகிறான். டைரக்டரை போட்டுத்தள்ள சொல்கிறான். ஆனால் நட்புக்காக டைரக்டரை மிரட்டிவிட்டு விட்டுவிடுகிறான் ஹீரோ. ஆனால் டைரக்டர் அவமானத்தால் கோபமாகி போலீஸிடம் ஹீரோவை போட்டுக்கொடுத்துவிட… காதலியிடம் கல்யாணத்துக்கு ப்ரபோஸ் பண்ணுகிற ஒரு நாளில் போலீஸ் அவனை சுற்றிவளைக்க போலீஸிடமிருந்து தப்பி தலைமறைவாகிறான் ஹீரோ. முதலாளியிடம் மன்னிப்புக்கேட்டு உங்கள் பெயர் வெளியே வராது என்று சொல்லிவிட்டு.. டைரக்டரை போட்டுத்தள்ள கிளம்ப.. க்ளைமாக்ஸில்.. நிறைய ட்விஸ்டுகளுக்கு பிறகு ஹீரோவின் அஸிஸ்டென்டே ஹீரோவை போட்டுத்தள்ளிவிட்டு புதிய தலைவனாகிறான்!

கதை முடிந்தது.

****

தமிழ்சினிமாவில் ஏற்கனவே பலமுறை நாம் பார்த்த கதைதான் என்றாலும் படத்தின் மிகசிறந்த மேக்கிங். அருமையான நடிப்பு என எல்லா வகையிலும் ரொம்பவும் ஈர்த்தது. அதிலும் ஹீரோவாக நடித்திருக்கும் ஜோ இன் சுங்கின் நடிப்பு அபாரமானது. சிறந்த நடிகர் விருதுகளை பெற்றும் கொடுத்திருக்கிறது. இயக்குனரும் பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்த படத்தைதான் இப்போது தமிழில் சுட்டு படமாக எடுத்திருக்கிறார்களாம். எடுக்காமலுமிருக்கலாம். என்னிடம் சொன்ன உதவி இயக்குனருக்கு அந்த இரண்டாவது பட இயக்குனரின் மேல் காண்டாக கூட இருக்கலாம். அவரை காலி பண்ணுவதற்காக கூட இப்படி ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லியிருக்கலாம். ''ப்ரோ எனக்கு இந்த கதைய சுட்டுருப்பாங்கனு தோணலை ப்ரோ'' என்றேன். ''படம் வரட்டும் அப்புறம் சொல்லுங்க'' என்றார் விரைப்பாக. கோவக்காரர்.

அவரைவிடுங்க நீங்கள் இந்தக் கதையை படித்துவிட்டீர்கள்தானே இதே கதையோடு எதாவது படம் வந்தால் பார்த்துவிட்டு கொந்தளிக்கவும். அல்லது அந்நிய நாட்டு விஷயத்தை தமிழுக்கு ஈன்ற தங்கம் எங்கள் இணையற்ற இயக்குனர் என அவரை பாரட்டவும். உங்கள் விருப்பம்.

அப்படி படம் எதுவுமே வரவில்லையென்றால இந்த கொரிய படத்தையாவது தவறவிடாமல் பார்த்துவிடவும். கேங்ஸ்டர் பட ரிசிகர்களுக்கு ஏற்ற சூப்பரான படம். குறையென்று சொல்வதென்றால் கொஞ்சம் நீளம். ஆனால் அற்புதமான மேக்கிங்கிற்காகவும் ஸ்டன்ட்காட்சிகளின் கோரியோக்ராபிக்காகவும் நிச்சயமாக அனைவரும் கட்டாயம் பார்க்கலாம்.

(இரண்டாவது படம் என்றே ஒரு படத்தை எனக்கு பிடித்த இயக்குனரான அமுதன் இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த இயக்குனர் அவரில்லை. ஒருவேளை இப்பதிவை படித்து யூகிக்க முடிந்தாலும் படம் வெளியாகும் வரை ரகசியம் காக்கவும்.)



17 June 2014

சினிமாவுக்கான லக்கி டிக்கட்




சென்றவாரம் முண்டாசுப்பட்டி படம் பார்க்க சென்றிருந்தேன். அதே திரையரங்கில் ‘’திருடு போகாத மனசு’’ என்கிற படமும் ஒரு ஷோ ஓடிக்கொண்டிருந்தது. படத்தின் தயாரிப்பாளரான செல்ல.தங்கையாவே நடித்து, இயக்கி, பாட்டெழுதி, இசையமைத்து, எடிட்டிங் பண்ணி…. மிகுந்த பொருட் செலவில் சொந்தகாசில் படமெடுத்து ஒருஷோ ரிலீஸ் பண்ணி.. படத்தில் முழுக்க நாட்டுபுற கலைஞர்களே நடித்திருக்கிறார்கள் என விளம்பரமும் செய்திருந்தனர்.

படத்தின் அறிமுக ஹீரோவான செந்தில்கணேஷ் படத்தின் எல்லா பாடல்களையும் தன் சொந்தக்குரலில் பாடி அசத்தியுள்ளாராம்! ஆனால் போஸ்டரில் ஹீரோயின் படம் மிஸ்ஸிங். நான் போன நேரத்திற்கு ஷோவும் இல்லை. அதனால் படம் பார்க்கும் வாய்ப்பை இழந்தேன்.

‘’திருடுபோகாத மனசு’’ படத்தில் ஒரு புதுமையை புகுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர். தியேட்டரில் அந்தபடத்தை பார்க்கவரும் ரசிகர்களுக்கு டிக்கட்டோடு ஸ்பெஷல் டோக்கன் ஒன்றும் வழங்கப்படுகிறது. உங்களுக்கு நடிப்பார்வம் இருந்தால் இயக்குனர் செல்ல.தங்கையாவின் அடுத்த படமான ‘’கடலை சேராத நதி’’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்! அதற்கான லக்கி டிக்கட்தான் இந்த டோக்கன். அதை கொண்டுபோய் அவர்களுடைய அலுவலகத்தில் காட்டி ஆடிசனில் கலந்துகொண்டால்…

நான் இந்த போஸ்டரை பராக்கு பார்த்துக்கொண்டிருந்த க்ஷணத்தில் எனக்கு பின்னால் நான்கு பையன்கள் அதே போஸ்டரை பார்த்துக்கொண்டிருந்தனர், அதில் ஒருவன் இன்னொருவனிடம்.. ‘’ நீ ரொம்பநாளா நடிக்கோணும்னு சொல்லிகிட்டிருந்தியல்ல.. இந்த படத்துல ட்ரை பண்ணலாம்லோ’’ என்று பேசிக்கொண்டிந்தனர்.

பையன்கள் பேச்சில் கோவை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஊரிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதும் தெரிந்தது. ஹோட்டலில் வேலைபார்க்கிற பையன்கள் போல இருந்தனர். எனக்கோ அந்த நடிப்பார்வமிக்க பையனின் பதிலுக்காக காதுகொடுத்து காத்திருந்தேன். அவனோ ரொம்ப நேரம் யோசித்துவிட்டு ‘’இல்ல மச்சான் இதுமாதிரி படத்துல நடிச்சா துண்டு கேரக்டர் குடுத்ருவானுங்க.. நாம டைரக்டா தேடுவோம், ஹீரோவா ட்ரைபண்ணுவோம்டா.. இவனுங்க கிட்னி திருடற கும்பல்மாதிரி இருக்கானுங்க’’ என்று சொல்லிவிட்டு மஞ்சப்பை பார்க்க கிளம்பிவிட்டனர்! நான் முண்டாசுபட்டிக்குள் புகுந்தேன்.

அடுத்த நாட்களில் ''திருடுபோகாத மனசு'' வைப் பார்க்க நினைத்திருந்தேன் அதற்குள் தூக்கிவிட்டார்கள்.

இதுமாதிரி படங்கள் உதயம், கிருஷ்ணவேணி, அண்ணா, சின்ன சாந்தி தியேட்டர்களில் ஒரு ஷோதான் திரையிடப்பட்டு தூக்கப்படும். அதனால் இதையெல்லாம் தவறவிடாமல் பார்ப்பதை பல ஆண்டுகளாக ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். இவை பிட்டுப்படங்கள் அல்ல. அது தனிடிபார்ட்மென்ட். இவை மிகக்குறைந்த பட்ஜெட்டில் தன்னுடைய குடும்பத்தினர் பார்ப்பதற்காக நண்பர்களுக்காக எடுக்கப்படும் ஒருவார ஒருஷோ உள்ளூர் மேக்கிங் பிகிரேடு படங்கள்! இவற்றின் போஸ்டர்களை தினமும் தினத்தந்தியில் யாரும் பார்க்கலாம். சிரிப்புக்கு அளவிலா கேரண்டி கொடுக்கிற படங்கள் இவை.

இப்படித்தான் பவர்ஸ்டார் நடித்த லத்திகாவைகூட முதல்நாள் முதல்ஷோ பார்த்தது. அப்போது தமிழ்நாட்டில் யாருக்குமே பவர்ஸ்டாரை தெரியாது! இவ்வகை படங்களை பார்க்க மிக அதிக சகிப்புத்தன்மையும் பொறுமையும் உள்ளுக்குள் ஒரு விநோத சைக்கோத்தனமும் ரொம்பவே அவசியம். அது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாய்க்காது. அதனாலேயே இப்படங்களை பார்க்க துணைக்கு ஆட்கள் சிக்கமாட்டார்கள். அதிர்ஷ்டவசமாக நண்பர் ஒருவர் சென்றமாதம் சிக்கினார்.

அவரோடு சாந்திதியேட்டரில் ‘’என் நெஞ்சைத்தொட்டாயே‘’ என்கிற மொக்கைப்படத்தை பார்க்க முடிந்தது. படத்தின் இயக்குனர் கே.ஏ.அன்புசெல்வன் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஹீரோ கிடையாது, அவர் ஹீரோவுக்கு அப்பா. அதாவது ஹீரோயினுக்கு மாமனார். படம் முழுக்க ஹீரோ டம்மியாகத்தான் வருகிறார். அவருக்கு ஹீரோயினை கட்டிப்பிடிப்பதை தவிர்த்து வேறு வேலைகள் இல்லை.

ஹீரோவின் அப்பாதான் ஹீரோயினோடு பாடுகிறார் ஆடுகிறார், வில்லன்களை வீழ்த்தி சண்டைபோடுகிறார். எமோஷனாகி பர்பார்மென்ஸ் பண்ணுகிறார்! காசுபோட்டு படமெடுத்தவருக்கு அதுக்கு கூட உரிமை இல்லையா? வரதட்சணை வாங்குவதால் ஏற்பாடும் பாதிப்புகளை பற்றி இப்படம் பேசுகிறது.

இப்படியாக நாங்கள் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். இன்டர்வெல்லில் நண்பர் கோன்ஐஸ் தின்றுகொண்டே விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். அதிலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிறைந்திருந்த இயக்குனரின் நடிப்பாற்றலை சொல்லி சொல்லி சிரித்தார்.

‘’பாஸ் சத்தமா சிரிக்காதீங்க.. படத்தோட படைப்பாளிகள் பொதுவா இந்த தியேட்டருக்குதான் வருவாங்க, படம் இன்னைக்குதான் ரிலீஸ்’’ என்று கட்டுபடுத்தினேன். என்னதான் எடுத்திருப்பது மொக்கைப்படமாக இருந்தாலும் காக்கைக்கும் தன் சுஞ்சு…பொன்சுஞ்சுதானே.. அதனால் அவரை எவ்வளவோ முயற்சி செய்து கட்டுபடுத்த முயன்றேன். ஆனால் நண்பரோ ஹய்யோ ஹய்யோ என படத்தில் வந்த ஒரு கொடூர காட்சியை நினைத்து நினைத்து சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டேயிருந்தார்.

அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை… ‘’அய்யோ அந்த வெள்ளை சட்டை டைரக்டர்.. பண்ணாருபாருங்க ஆக்சன்..’’ என சிரித்துக்கொண்டே வந்து சீட்டில் அமர்ந்தார். அட கம்முனு இருங்க ப்ரோ அவருக்கு தெரிஞ்சவங்க இருந்தா அடிச்சிருவாங்க என்று அவரை அடக்கினேன். திடீரென்று எங்களுக்கும் முன்னால் அமர்ந்திருந்த ஒரு உருவம் எழுந்தது. எனக்கு பயமாகிவிட்டது.. அந்த உருவம் அவசரமாக வெளியே கிளம்பியது. வாசல் கதவை திறக்க அந்த ஒளியில்தான் தெரிந்தது. அமானுஷ்யம்தான். நம்ப முடியாததுதான். ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். அது அந்த வெள்ளைசட்டை இயக்குனர்தான்.

எங்களுக்கு மனசே இல்லை. ச்சே என்னடா இது இப்படி ஆகிபோச்சே என நினைத்துக்கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் அவசரமாக திரும்பிவந்து தன் சீட்டில் சத்தமில்லாமல் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். தியேட்டரில் எங்களையும் அவரையும் சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம். நான்காவது ஆள் தூங்கிக்கொண்டிருந்தார்.

***

திருடு போகாத மனசு படத்தின் அந்த போஸ்டர்

16 June 2014

எத்த தண்டி!


அவ்வளவு பெரிய கிழங்கை நான் பார்த்ததேயில்லை. எத்தா தண்டி? ஒருவேளை கிராமத்தில் பிறந்துவளர்ந்தவர்களுக்கு பரிச்சயமாக இருக்கலாம். நல்ல தென்னமர சைஸில் இருந்தது அந்தக் கிழங்கு.

அந்த கிழங்குத்தூணின் ஒரு சிறு பீஸை (அதுவே யானையின் கால்மாதிரி இருந்தது) மட்டும் வெட்டி வைத்து ‘’இயற்கை பூமி சக்கரவள்ளிக்கிழங்கு, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையக்கூடியது எல்லாரும் சாப்பிடலாம்’’ என்கிற பெயர்பலகையோடு ரிச்சி ஸ்ட்ரீட் பக்கம் வண்டியில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார் ஒரு ஆள். இப்படி ஒரு விஷயத்தை பார்த்துவிட்டு சும்மா இருக்கவும் முடியுமா? (கொஞ்சம் தலையை வளைத்து... பார்க்க படம்)

என்னங்க இது ருசியாருக்குமா என்று விசாரிக்க.. அட இந்தா புடிங்க என ஒரு சிறுதுண்டு சாம்பிள் கொடுக்க.. அதை பெருந்தயக்கத்தோடு வாயிலிட்டு கடித்துப் பார்க்க.. அது வெள்ளரிப்பழம்போல ஒருமாதிரி ஈரப்பதமாக பச்சை வாசனையோடு சுவையாக இருக்க.. குடுங்க சார் எனக்கு ஒரு துண்டு என ஆர்டரிட்டேன். ஒசூர் தினமலரில் இந்த கிழங்குபற்றி நியூஸெல்லாம் போட்டிருந்தார்கள். மருத்துவர் கு.சிவராமனுக்கு ஒருவார்த்தை போன் அடித்து விசாரித்துவிடவும் யோசித்தேன். ஆனால் சாம்பிள் சுவை அது நிச்சயமாக சர்க்கரை வள்ளிகிழங்கு இல்லை என்பதை மட்டும் சொன்னது. ஏதோ காட்டுகிழங்கு போல என நினைத்துக்கொண்டேன்.

கிழங்குதூணிலிருந்து ஒரு சிறுதுண்டை சிப்ஸுக்கு கட் பண்ணுவதுபோல ஸ்லைஸ் பண்ணி அதில் எலுமிச்சம்பழமும் சுகரும் கலந்து நெய்ரோஸ்ட் போல முக்கோண வடிவில் மடித்துக்கொடுத்தார் ஆள். அப்படியே வாயில் வைத்துக்கடித்தால் நன்றாகவே இருப்பதுபோலத்தான் இருந்தது. என்னோடு வந்திருந்த நண்பர் ஒரு துண்டை முயற்சி செய்தார். இன்னொரு நண்பர் சாம்பிள் சாப்பிட்டே பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.

தர்பூசணி காயில் எலுமிச்சஞ்சாறறைத் தேய்த்து அதன் மீது சக்கரை தூவினாற் போல இருந்த அந்த சாதனத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும், ஆண்மைக்குறைவு நீங்கும், பைல்ஸுக்கு நல்லது என்று தொடங்கி பல்வேறு மருத்துவகுணங்களை பட்டியலிட்டார் கடைகார். எய்ட்ஸும் கேன்சரும் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லா நோய்க்கும் அது மருந்தாகும் என்பதாக அவர் சொன்னதாக புரிந்துகொண்டேன். இருபது ரூபா பொருளைவிற்கத்தான் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள்.

நான் அதை ரசித்து ரசித்து சாப்பிட்டுக்கொண்டே ‘’ஏன்ங்க இதுக்கு எப்படி தமிழ்நாட்ல வரவேற்பு, இது எந்த ஊர்ல விளையுது?’’ என்றெல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தேன். இது ஓசூர் பக்கமிருக்கிற காடுகளில் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கிற அபூர்வமான கிழங்கு என்றும் ரொம்பவும் விலை அதிகம் ‘’இந்த ஒரு துண்டு ஆயிரத்து ஐநூறு ரூவா..’’ என்றார். பொதுவாக கப்சா விடுகிறவர்களிடம் நம்புவதைப்போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தால் மேலும் மேலும் கப்சாவிட்டு நன்றாக காமெடி பண்ணுவார்கள்.. இந்த வண்டிக்காரரும்.. பேப்பர்ல பேட்டி எடுத்துருக்காங்க ப்ரதர், நாளைக்கு காலைல நியூஸ் வரும்பாருங்க என்றுவேறு சொன்னார். அந்த ஏழை தள்ளுவண்டிக்காரனின் முகத்தில் இறைவன் தெரிந்தான்!

வண்டிக்காரர் மகிழ்ச்சியோடு துட்டை வாங்கிக்கொண்டு கிளம்ப நாங்கள் அருகிலிருக்கிற நண்பரின் அலுவலகத்திற்கு கிளம்பினோம். சாம்பிள் சாப்பிட்ட நண்பர் லேசாக தலைவலிப்பதாக சொன்னார். ஃபுல்லாக சாப்பிட்ட நண்பருக்கு கிறுகிறுப்பாக இருப்பதாக சொன்னார். எனக்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லை. அவர்களிருவரும் ஏன்ங்க கண்ட கருமத்தை வாங்கிக்குடுத்து இப்ப பாருங்க ஒருமாதிரி கேரா இருக்கு என்று என்னை பிடித்துக்கொண்டனர். ஃபுல் சாப்பிட்ட நண்பர் ‘’இது ஏதோ போதை மருந்து தயாரிக்கிற கிழங்குபோலருக்குங்க.. தலைய சுத்துது.. ‘’ என்று உட்கார்ந்தே விட்டார். சாம்பிள் தின்றவர் தண்ணீரை வாங்கி முகங்கழுவிக்கொண்டார். ஆனால் எனக்கு எதுவுமே ஆகவில்லை. என்னங்கடா இது என்று சிந்திக்க ஆரம்பித்திருந்தேன்.

‘’ஒருவேளை சிட்ரிக் ஆசிடும், குளுகோஸும் சேர்ந்து ஏதாவது வேதிவினை மாற்றங்கள் பண்ணி சாதா கிழங்கை ஆபத்தான போதைப்பொருளா மாத்திருக்குமோ’’ என்றேன். ஆனால் அவர்கள் இப்போது அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. சில நிமிட தலைசுற்றல்களுக்கு பிறகு அவர்கள் நார்மலாகினர். ஆனால் இந்த கேப்பில் சென்னை நகரத்தின் ஏதோ சந்துகளுக்குள் புகுந்து எஸ்கேப்பாகியிருந்தார்! ஆள் சிக்கவே இல்லை.

ஆனால் எனக்கு அப்போதுதான் லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது. எங்காவது உட்கார்ந்தால் தேவலாம் போலிருந்தது. நம்முடைய நியூரான்கள் ட்யூப்லைட்டுகள் போல! ஆனால் ஹெவியான தலைசுற்றல். வாந்திவருவதைப்போலவும் மயக்கமும்.. குழப்பியடிக்க.. அரைமணிநேரம் கதறவிட்டு பிறகுதான் ஓய்ந்தது. ஒருவழியாக எல்லாம் ஓய..

அடுத்தநாட்களில் அவருடைய புகைப்படமும் அபூர்வ கிழங்குகுறித்த சிறுகுறிப்பும் பிரபல நாளிதழில் வெளியாகியிருந்தது. சாம்பிள் தின்றவருக்கு காய்ச்சல் வந்துவிட்டிருந்தது. எனக்கு குடல் பிதுங்கும் அளவுக்கு கலக்கி… இன்னொரு நண்பர் அதற்குபிறகு ஆளையேகாணவில்லை.

09 June 2014

வாழைப்பழ காமெடியின் நுட்பம்





முதலில் ஒரு சின்ன க்விஸ். சமீபத்தில் தான் எழுதிக்கொண்டிருக்கிற ஒரு தொடரில் கீழ்காணும் விஷயத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் யார்?

''கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி நினைவிருக்கிறதில்லையா? அது வெறும் நகைச்சுவை காட்சி மட்டுமில்லை. ஒரு ரூபாய்க்கு இரண்டு வாழைப்பழம் விற்கப்பட்ட காலத்தை அது நினைவுபடுத்துகிறது. வாழைப்பழம் வாங்கவேண்டுமென்றால் பெட்டிகடைக்கு போகவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதோடு அன்றாடம் வாழைப்பழம் சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர்களுக்கு பழம் சாப்பிடாவிட்டால் நிறைவுவராது. அதற்காக உணர்ச்சிவசப்பட்டு சண்டையிடுவார்கள் என்பதையும் அடையாளம் காட்டுகிறது''

***

நேற்று ஞாநியின் கேணிக்கூட்டத்திற்கு ரோகிணி வந்திருந்தார். (ஞாநிகேணிரோகிணி! என்ன ஒரு ரைமிங்.) தன்னுடைய ஆரம்பகால குழந்தை நட்சத்திர வாழ்க்கை தொடங்கி ரகுவரனுடனான அவருடைய சிநேகம் வரைக்குமாக அவருடைய பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது அப்பாவின் மீசை என்கிற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்தது.

பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் இன்று சமகால தமிழிலக்கிய வாசிப்பினால் தான் முழுமையாக தமிழராக உணர்வதாகவும் சொன்னார். நாம் எந்த மொழியில் சிந்திக்கிறோமோ அதுதானே நம் தாய்மொழியாக இருக்க முடியும் என்னால் தமிழில்தான் சிந்திக்கமுடிகிறது கோபம் வந்தாலும் அழுகைவந்தாலும் தமிழிலில்தான் எதிர்வினையாற்ற முடிகிறது எனவே எனக்கு தமிழ்தான் தாய்மொழி என்றார். சரிதானே!

பேசும்போது சுஜாதா தொடர்பாக ஒரு விஷயத்தை சொன்னார். 2005-06 நேரத்தில் உயிர்மையின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாராம் ரோகிணி. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ரோகிணி ஒரு பாடலை எழுதி அது சூப்பர்ஹிட்டாகியிருந்த நேரம். நூல் வெளியீட்டுவிழாவில் கவிதை நூலை வெளியிட்ட ரோகிணியிடம் ''ஏம்மா உனக்கு தமிழ் வாசிக்க வருமா'' என்று நக்கலாக கேட்டாராம் சுஜாதா. அவருடைய அந்த கேள்வி ரொம்ப வருத்தமுற வைத்ததாக குறிப்பிட்டார் ரோகிணி!

ரகுவரன் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் எப்படி தன்னுடைய ஒவ்வொரு பாத்திரங்களுக்காகவும் மெனக்கெடுவார் என்று விளக்கினார்.

துள்ளிதிரிந்த காலம் படத்தில் வருகிற அந்த ட்ரைன்ட்ரைவர் பாத்திரத்திற்காக பத்து நாட்கள் சென்னையின் கோடையிலும் ஸ்வட்டர் மாட்டிக்கொண்டு சுற்றினாராம் ! இளம் வயதிலேயே சர்க்கரை நோயாலும் அல்சராலும் பாதிக்கப்பட்டிருந்த ரகுவரன், ஒரு காட்சியை படமாக்கி முடிக்கும் வரை சாப்பிடவே மாட்டாராம்! நடுவில் உணவு இடைவேளை வந்தாலும் சாப்பிட்டாமல் காத்திருப்பாராம்.

ஏன்ங்க இப்படி என்று விசாரித்தால் ''சாப்பிட்டா மந்தமாகிடும் அப்புறம் தொடர்ச்சியா முந்தைய நடிப்பையே தொடர முடியாது'' என்று சொல்லிவிட்டு டீயும் சிகரட்டுமாக உட்கார்ந்துவிடுவாராம் இந்த தமிழின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.

****

அல்லயன்ஸ் பிரான்சேவில் போனவாரம் ஓசியில் நூல்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு போகலாம் என்று நினைத்திருந்தேன். நண்பர்களுக்கும் சொல்லியிருந்தேன். சனிக்கிழமை காலை பத்து மணி முதல் அள்ளிக்கலாம் என்று தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருந்தார்கள் அல்லயன்ஸ் பிரான்சேயார்.

யாரும் வருவதற்கு முன் மொத்தமாக அள்ளிவிடலாம் என்கிற திட்டத்தோடு நம்முடைய நண்பர் ஒருவர் காலை ஒன்பதுமணிக்கே போய் கேட் பக்கமாக காத்திருந்து முண்டியடித்து உள்ளே நுழைந்து நூல்களை தேடி பார்த்திருக்கிறார். எல்லாம் பிரெஞ்சு நூல்கள். செம காண்டாகி போனவர் கடைசியில் துக்கப்பட்டு கஷ்டப்பட்டு தேடித்தேடி ''A GLANCE AT FRANCE" என்கிற ஒற்றை ஆங்கில நூலை கண்டுபிடித்து எடுத்து வந்தாராம்! நல்ல வேளை நான் போகவில்லை.

***

ஜே.ஃபிரான்ஸிஸ் கிருபாவின் இந்தக்கவிதை ரொம்பவும் பிடித்தது.

பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே மனமே...
பெண்யார்?
பெற்றுக்கொண்டால் மகள்.
பெறாத வரையில்
பிரகாசமான இருள்.
வேறொன்றுமில்லை.

***

புதிதாக கொரிய திரைப்படங்கள் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் வருகிற க்யூட்டான பொண்ணு படங்களின் பெயர்களை மட்டுமே உதிர்க்காமல் கொஞ்சம் ஜாலியாக படத்தின் கதையை பற்றியும் அதன் வகைமையைப்பற்றியும் அழகாக சிரிக்க சிரிக்க எடுத்துக்கூறுகிறார். கொரிய பெண்ணாக இருந்தாலும் புரியும்படி தெளிவாக ஆங்கிலத்தில் பேசுகிறார். உங்கள் கொரிய படங்களுக்கான ஆர்வத்தை இங்கிருந்து தொடங்கலாம்...




***

மேலே கொடுத்திருந்த பத்தியை எழுதியவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஜூவி உணவுயுத்தம் தொடரிலிருந்து.

02 June 2014

கூரை வேயும் கவிஞன்




ஸ்காட்லாந்திலிருந்து வந்திருந்தார் இளம் கவிஞர் பில்லி என்கிற ‘’வில்லியம் பில்லி லெஃபோர்ட்’’. அவருடைய கவிதை வாசிப்பு நிகழ்வு கேகேநகர் டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வை கவிஞர் சல்மா ஏற்பாடு செய்திருந்தார். நிறைய சர்வதேச விருதுகள் வென்ற இந்த பில்லியை பார்த்தால் கவிஞரைப்போலவே இல்லை. ஹாலிவுட் படங்களில் வருகிற ஜேப்படி திருடனைப்போல இருக்கிறார். அதற்கேற்க புஜமுனை மடிக்கப்பட்ட அரைக்கை சட்டை, சின்ன மிலிட்டரி கார்கோ டவுசர், கழுத்தில் மோதிரம் மாட்டப்பட்ட ஒரு கறுப்பு கயிறு என ரொம்ப லட்சணமாக ஆறடியில் இருந்தார். அவர் ஊரிலிருந்து வரும்போது தன்னுடைய காதலியையும் அழைத்துவந்திருந்தார். ரொம்ப ஒல்லிக்குச்சி பெண்ணான காதலியின் பெயர் அபிகேர்ளாம்!

வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லா வெள்ளையர்களும் முகத்தில் ஒரு அழகான புன்னகையையும் எடுத்து வருகின்றனர். நிகழ்வு முழுக்க ஒல்லிகுச்சி அபிகேர்ள் புன்னகைத்துக்கொண்டே இருந்தார். அதைவிட தன்னுடைய பாய்ஃபிரண்ட் கவிதை வாசிப்பதை அப்படியே மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தார். ஸ்காட்டிஷ் கலந்த ஆங்கில உச்சரிப்பில் பில்லி படித்த கவிதைகளில் பாதி சொற்களைத்தான் புரிந்துகொள்ளும் படி இருந்தது. நல்ல வேளையாக வாசிக்கப்பட்ட நான்கு கவிதைகளில் மூன்றை கவிஞர் பத்மஜா மொழிபெயர்த்திருந்தார். அதுவும் நிகழ்வில் வாசிக்கப்பட்டது. பில்லியின் கவிதைகளில் தோல்வியின் வலி நிறைந்திருந்ததை உணர முடிந்தது.

பில்லியிடம் கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது. உரையாடலின் முடிவில் ஸ்காட்லாந்திலும் எழுத்தாளர்கள் நிலைமை அவ்வளவு சிலாக்கியமாக இல்லை என்பது தெரியவந்தது. இந்த கவிஞர் பல வேலைகள் பார்த்தவராம். கடைசியாக அவர் பார்த்த வேலை ‘’கூரை வேய்வது’’. (ROOFINGகிற்கு நம்மூரில் அதுதானே). இன் ஸ்காட்லான்ட் ரைட்டர்ஸ் ஆர் ஸ்ட்ரகுளிங் என்றார். யெஸ் யெஸ் இன் இந்தியா நோ டிபரென்ஸ் என்று சொன்னேன். ஓ என்று புன்னகைத்தார்.

கவிஞர் சல்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெர்மனியில் தான் கவிதை வாசிக்க சென்று ஒரு நிகழ்வைப்பற்றி சொன்னார். பெர்லினிலிருந்து என்று நினைக்கிறேன் கிட்டத்தட்ட முன்றரை மணிநேரம் காரில் அழைத்துச்சென்று ஒரு இடத்தில் கவிதை வாசிக்க சொன்னார்களாம். மொத்தமாக மூன்றுபேர்தான் பார்வையாளர்களாக வந்திருந்தனராம்! நம்மூர் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதுவதை வைத்து நாமாகவே ஊர் உலகத்தில் இலக்கியவாதிகளை கொண்டாடுகிறார்கள் என நினைத்துக்கொள்கிறோம் போல! அதிலும் கவிஞர்கள் நிலைமை உலகெங்கிலும் ஒரே ரகமாக இருப்பது ஆச்சர்யம்தான். பில்லியின் கவிதை வாசிப்பு நிகழ்வுக்கு என்னோடு சேர்த்து பத்து பேர் வந்திருந்தனர். ஊருக்கு போய் இந்தியாவில் கவிதைகளையும் கவிஞர்களையும் கொண்டாடுகிறார்கள் என பில்லி பீத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

பில்லி கவிஞராக முடிவெடுத்ததும் பல்வேறு கவிதை பட்டறைகளில் பங்கேற்று நிறைய கவிதைகளை வாசித்து முடித்துதான் கவிஞராக ஆனாராம்! ஸ்காட்லாந்தில் அப்படிதான் எழுத்தாளர்கள் உருவாவது வழக்கம் போலிருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதினாலும் தன்னுடைய தாய்மொழியான ஸ்காட்டிஷிலும் கவிதைகள் எழுதுகிறார் பில்லி!

பில்லியின் கவிதைகளில் எனக்கு ‘’தயாராக இருத்தல்’’ என்கிற கவிதை மிகவும் பிடித்திருந்தது. அருமையாக மொழிபெயர்த்த கவிஞர் பத்மஜாவுக்கு நன்றி.

தயாராக இருத்தல்

மூன்று டி ஷர்ட்டுகளும்
பின் தலையை மறைக்கும் சட்டையையும்
அணிந்து கொள்ளுங்கள்
அடுக்கு மிகவும் முக்கியம்.
உங்கள் எண்ணெய் வழியும்
சருமத்தை மறந்து விடாதீர்
எப்பொழுதும் எங்கோ
மழை பெய்து கொண்டிருக்கும்.
கழுத்தை சுற்றித் துணி அணிந்துகொள்ளுங்கள் .
குளிர் காற்று கழுத்திலிருந்து
தான் கீழே இறங்கும்.
கையுறை அணிந்து கொள்ளவும்
ஈரமாய் உள்ளவை உபயோகமற்றவை.
இருந்தாலும்,
தப்பான ஆணியை நீங்கள் அடித்தால்
அவை உதவும்
இந்த கணத்தில்
உங்கள் சிந்தனையை செலுத்துங்கள்
நீர் சொட்டுவதையும்
சிலந்தி ஓடுவதையும் கவனியுங்கள் .
ஏணியின் மேல் நின்று
வேலை செய்யும் போது
சிறிது பயமிருக்கட்டும்
எப்படிக் கீழே விழவேண்டும்
என்று பார்த்துக் கொள்ளுங்கள் .
வேலியும் சிமிட்டுபாளங்களும்
மன்னிக்கவே மன்னிக்காதவை.
மலர் படுக்கையும்
ஃபிஷா புதர்களும் கொஞ்சம் பரவாயில்லை .
அலறுவதை பயிற்சிஎடுங்கள் .
கீச்சிடாதீர்கள்
சிங்கம்போல் கர்ஜனை செய்யுங்கள் .
வலி குறைந்து அக்கம் பக்கம் பார்க்கும் போது
நான் சொல்வது உங்களுக்குப் புரியும்
நிலவை ஏற்றுக் கொள்ளுங்கள்
அது பூமியில் ஒரு பகுதியாய் இருந்திருக்கிறது.
அதன் தனிமை
உங்களை அழகாய் உணரச்செய்யும்.
தக்க முறையில் மேலேழுங்கள்
ஏனெனில்
பணம் சம்பாதிக்க
உங்கள் முதுகு உங்களுக்குத் தேவைப்படும்!

***

மேலுள்ள கவிதையை நாம் எப்படி வாசிப்போம், முகத்தில் நிறைய சோகம் பூசிக்கொண்டு, உடைந்துபோகிற மாதிரி குரலில் ஒரே டோனில்தானே சொல்வோம். அது ஏன் தமிழ்நாட்டில் எல்லா கவிஞர்களும் தன் கவிதைக்கு ஒரே மாதிரி ராகம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பில்லி தன்னுடைய கவிதைகளை உற்சாகமாக ஒரு கதைசொல்லியைப்போல தாள லயத்தோடு, குரலில் ஏற்ற இறக்கங்களோடு முகத்தில் ஆயிரக்கணக்கான பாவங்களோடு குறிப்பாக கவிதை அதன் தன்மையோடு உணர்ச்சிகரமாக வாசிக்கிறார். தமிழில் இதுமாதிரி கவிதைகள் வாசிக்கிற பழக்கமே இல்லை என்று தோன்றுகிறது. சாம்பிளுக்கு இந்த வீடியோவை பாருங்கள் பில்லி எப்படி கவிதை வாசிக்கிறார் என்பது புரியும். இளம் கவிஞர்கள் யாராவது இதை முயற்சி செய்யலாம். குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதில் பயிற்சிபெற்ற கவிஞர் விஷ்ணுபுரம் சரவணன் கூட முயற்சி செய்யலாம்.

31 May 2014

ஈ-சிகரட் பலனளிக்குமா?




இன்று அதிகாலை ஒன்பதுமணிக்கே ஒரு நண்பர் போன் செய்தார். நல்ல நாளிலேயே நாம் போன்செய்தாலும் எடுக்காதவர் அதிசயமாக நமக்கு திடீரென போன் பண்ணும்போது மைல்ட் ஹார்ட் அட்டாக்குகள் வருவதுண்டு. இன்றும் அப்படித்தான் இருந்தது.

''பாஸ் நானும் உங்களை மாதிரியே சிகரட் பழக்கத்தை விட்டுடப்போறேன், இன்னைக்கு புகையிலை எதிர்ப்பு தினம் அதனால இன்னைக்குலருந்து விட்டுடப்போறேன்! அதான் உங்கள்ட்ட சொல்லணும்னு தோணுச்சு'' என்றார்.

அந்த நண்பரை எனக்கு பல வருட பழக்கம். ஒருநாளைக்கு நாற்பது சிகரட்டுகளை தாண்டும் புகசாய சூரர்! திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உண்டு. பொறுப்பான ஆசாமிதான் என்றாலும் அவரால் இப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல் பல ஆண்டுகளாக தவித்துவந்தார். அவர் இப்பழக்கத்தை விடப்போகிறேன் என்று சொன்னதும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அடடா சூப்பர்ஜி சூப்பர்ஜி சூப்பர்ஜி என்று வாழ்த்தினேன். நம்மை பார்த்து நாலுபேர் திருந்தி நல்வழிக்கு சென்றால் மனதுக்கு மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் இருக்கும்தானே.

''உங்களுக்கு என்ன உதவி வேணுமோ என்கிட்ட சொல்லுங்கஜி கட்டாயம் பண்ணிடுவோம், முதல் பதினைஞ்சு நாள்தான் மரண வேதனையா இருக்கும் அப்புறம் ஈஸியா தப்பிச்சிடலாம், சமீபத்துல விட்ட நிறைய நண்பர்கள் இருக்காங்க அவங்களோட கோர்த்துவிடறேன் குழுவா பண்ணும்போது ரொம்ப ஈஸி'' என்று உற்சாகமூட்டும் வகையில் கூறினேன்.

''பாஸ் உங்க உதவிலாம் கட்டாயம் வேணும், போன ஏப்ரல்லயே விட்டுடலாம்னு முடிவு பண்ணிருந்தேன், இப்போதான் நாள் வந்திருக்கு பாருங்க, இதுக்காக ஈசிகரெட் ஆர்டர் பண்ணிருந்தேன் இரண்டுமூணு நாளா அப்பப்பப அதைதான் நாலு இழு இழுத்துப்பேன். முப்பதுலாம் போய்கிட்டிருந்த எண்ணிக்கை இப்போ வெறும் பத்துக்கிட்ட கொண்டுவந்துட்டேன்.. பாதிநேரம் ஈசிகரட்தான். இன்னைக்கிலருந்து ஃபுல்லாவே சிகரட்டை விட்டுட்டு ஈசிகரட்டுக்கு மாறிடப்போறேன்'' என்று தன்னுடைய திட்டங்களை சொல்ல ஆரம்பித்தார். எனக்கு பகீரென்று இருந்தது. காரணம் சிகரட் பழக்கத்தை விட நினைப்பவர்களுக்கு ஈ சிகரட் சரியான மாற்றுவழி கிடையவே கிடையாது.

''அய்யோ தயவு செஞ்சு அந்த கண்றாவியை தூக்கி தூரப்போடுங்க, சிகரட்டை விட்டுட்டா அப்படியே விட்டுடணும் , வேற எந்த வகைல நிக்கோடினை எடுத்துகிட்டாலும் விடாது கறுப்பு மாதிரி அது உங்களை விரட்டிகிட்டே இருக்கும், அதுவும் இந்த ஈசிகரெட் இருக்கே சரியான ஃபோர்ஜரி! பத்துநாள் கூட உங்களால தாக்குபிடிக்க முடியாம பண்ணிடும்.. அதனால சிகரட்டை விட்டுட்டு அதுக்கு பதிலா இதுமாதிரி மோசமான மாற்று வழிகள் தேடாம, தியானம் பண்ணுங்க, க்ரீன் டீ குடிங்க, நண்பர்களோட நேரம் செலவழிங்க நிறைய வாசிங்க... அதையெல்லாம் பண்ணுங்க ப்ரோ'' என்று அறிவுரை சொன்னேன். சரிங்க என்று சொன்னவர் உடனே ஃபோனை கட் செய்துவிட்டார். அனேகமாக நேராக கடைக்கு போய் ஒரு தம் போட்டுவிட்டு என்னை திட்டிக்கொண்டிருக்கலாம்!

சிகரட் பழக்கத்தை கைவிட ஈசிகரட் என்பது சரியான மாற்றுவழியே கிடையாது. அதை பயன்படுத்தி இப்பழக்கத்திலிருந்து மீள முயற்சி செய்து தோற்றுப்போன எத்தனையோ நண்பர்களை நான் அறிவேன். நூறில் இரண்டு பேர்தான் ஈசிகரட்டை பயன்படுத்தி புகைப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இதனை முயற்சித்தால் அதிகபட்சம் ஒருமாதம் வரை உங்களால் கட்டுப்பாடாக இருக்கமுடியும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் உங்கள் கைகளில் பழையபடி சிகரட் புகைய ஆரம்பித்துவிடும்.

காரணம் உங்கள் உடலில் மூளையில் நிகோடின் படிமங்கள் இருக்கும் வரை உங்களால் ஒருநாளும் அதிலிருந்து ஒரு இன்ச் கூட மீளவே முடியாது. இந்த ஈசிகரட்கள் பொதுவாக புகைவழி உடலுக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிகோடினை லிக்விடாக்கி புகையின்றி கொடுக்கிறது. அவ்வளவுதான். ஆனால் உடலிலிருக்கிற நிகோடின் அளவு அதே அளவில் தொடர்ந்து நீடித்திருக்கும். சொல்லப்போனால் ஈசிகரட்டை அலுவலகத்திலே, தியேட்டரில், சாப்பிடும் இடத்தில் என எங்கும் பயன்படுத்தமுடியும் என்பதால் முன்பைவிட கிடைக்கிற சந்தர்ப்பத்தில் எல்லாம் நாலு இழுப்பு இழுத்துக்கொள்ளத்தான் ஆவல் வரும். அது ஏற்கனவே இருக்கிற நிகோடின் தேவையை இன்னும் அதிகமாக்கிவிடும்.

அதனாலேயே புகைபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் மிக அதிகமாகும். அதிகமாக அதிகமாக ஈசிகரட் கேட்ரிஜ்களை அதிகமாக வாங்குவீர்கள். அது இல்லாமல் ஈசிகரட்டில் காற்றுதான் வரும். நிறைய கேட்ரிஜ் வாங்கினால் கம்பெனிகாரனுக்கு கொள்ளை லாபம்தானே. கடைசியில் இதற்கு ஆகிற செலவு கட்டுபடியாகாமல் அல்லது உடலின் நிகோடின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பழையபடி பத்துரூபாய்க்கு எப்போதும் அடிக்கிற சிகரட்டுக்கே திரும்புவீர்கள்.

புகைப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அப்படியே முற்றிலுமாக விட்டுவிடுவதுதான் சிறந்தது. இதை கோல்ட் டர்க்கி (COLD TURKEY) பாணி என்கிறார்கள். பழக்கத்தை கைவிட்ட பிறகு ஒரு சிகரட் கூட ஆபத்துதான். ஒரு பஃப் கூட...

இதுதான் இருப்பதிலேயே கடினமான முறை என்றாலும் முழுமையான பலனை அளிக்க கூடியது. சிகரட்டுக்கு பதிலாக எந்த மாற்று போதை வஸ்துகளையும் அணுகாமல் அதற்கு பதிலாக ஆரோக்கியமான பழக்கங்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ளலாம். அது மிகச்சிறந்த பலனை அளிக்கும். புகைப்பழக்கத்தை கைவிட்ட எத்தனையோ நண்பர்கள் அப்படித்தான் இப்பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார்கள்.

சிகரட் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தேவை ஈசிகரட் அல்ல, மன வலிமையும் தன்னம்பிக்கையும்தான்! இதிலிருந்து மீள மருத்துவ உதவிகளை கூட நாடலாம் ஆனால் ஈசிகரட் மாதிரியான ஷார்ட்கட்ஸ் நிகோடினிடம்வேலைக்கே ஆகாது!






24 May 2014

கோச்சடையான்




படம் முடிந்தபின் ''இன்னும் கொஞ்சம் மெனெக்கட்டிருக்கலாமோ'' என்கிற எண்ணம் மட்டும்தான் மிச்சமாக இருந்தது. நல்ல வேகமாக கட்டுக்கடங்காமல் ஓடும் கேஎஸ்ரவிகுமாரின் திரைக்கதை. ஹீரோயிசத்தை தூக்கி நிறுத்த ஏற்ற அருமையான வசனங்கள். ரஹ்மானின் எரிச்சலூட்டாத நல்ல இசை. காட்சியமைப்புகள் எல்லாமே இருந்தும் ஏதோ குறைகிறது.

நிச்சயமாக இது ரஜினி படம்தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஷாட்டுக்கு ஷாட் ரஜினியே நிறைந்திருக்கிறார். இவர்கள் என் மக்கள், அன்பால் சேர்ந்த கூட்டம் என்பது மாதிரி நிறைய நல்ல பஞ்ச் டயலாக்குகள் பேசுகிறார். ஸ்டைலாக நடக்கிறார். சடாமுடியோடு ருத்ரதாண்டவம் கூட ஆடுகிறார். கோச்சடையானில் வருகிற அந்த உருவத்திற்கு ரஜினியின் முகமிருக்கிறது. அது கிட்டத்தட்ட ரஜினிகாந்தைப்போலவே நடக்கிறது அசைகிறது திரும்புகிறது, அவருடைய குரலிலேயே பேசுகிறது. எல்லாமே ஓக்கே. ஆனால் அது ரஜினி இல்லை என்பதை மோசமான அனிமேஷன் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

பல காட்சிகளில் ரஜினியின் காந்தப்பார்வை கொண்ட கண்கள், தாறுமாறாக சுழன்று மாறுகண் உள்ள மனிதரைப்போலவே இருக்கிறது, ரஜினியின் பலமே அவருடைய வேகமான நடையும் கையசைப்பும் மின்னல்வேக ரியாக்ஷன்களும்தான். ஆனால் இந்த ரஜினியோ எதையும் மிக பொறுமையாகத்தான் செய்கிறார். ‘’என்… ஆன்பு.. மன்னா…’’ என்று மெதுவாகத்தான பேசுகிறார். அது சமயத்தில் ரொம்பவும் கோபப்படுத்துகிறது.

கைதட்டவும் விசிலடிக்கவும் அற்புதமான தருணங்கள் படம் முழுக்க ஏகப்பட்டது உண்டு. ஆனால் அக்காட்சிகள் வரும்போதும் மாறுகண்ணோடு உடலை வளைத்துக்கொண்டு டிக்கியை பின்னால் தள்ளிக்கொண்டு கைகளை ஒருதினுசாக வைத்துக்கொண்டு 'பார்த்தாயா..'' என்று பேசுகிற ரஜினியை பார்த்து அப்படியே நம்முடைய ஆவேசம் அடங்கிப்போகிறது. கைதட்டவும் விசிலடிக்கவும் தயாராயிருக்கிற நம் விரல்கள் மீண்டும் நாற்காலிகளின் கைகளையே பிடித்துக்கொள்கின்றன. இது அடுத்தடுத்து நிகழும்போது கடைசியில் அடச்சே இது ரஜினி இல்லப்பா என்றாகிவிடுகிறது. ஒருவேளை அது ரஜினியாக இல்லாமல் ஏதோ ஒரு ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா கேமில் வரும் கேரக்டர் போலிருந்திருந்தால் இந்த சிக்கலே இருந்திருக்காது!

ஒருவேளை இது அனிமேஷன் படமாக இல்லாமல், ரஜினியே நேரடியாக நடித்திருந்தால் இது இன்னொரு ‘’மகதீரா’’வாக வந்திருக்கும். அவருடைய ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள். ஏனென்றால் ஒரு ரஜினி படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் அச்சுபிசகாமல் மிகச்சிரியான இன்க்ரீடியட்ன்ஸுடன் சேர்க்கப்பட்ட டிபிகல் கேஎஸ் ரவிகுமார் பாணி திரைப்படம். விசுவாசமான வேலைக்காரன், முரட்டுத்தனமான முதலாளி, நண்பனின் துரோகம் மாதிரி எல்லாமே இருந்தும். அனிமேஷன் அவ்வளவு சிறக்கவில்லை என்பதுதான் கொஞ்சமாக சொதப்பிவிட்டது.

ஆனால் பல குறைகள் இருந்தாலும் எல்லாமே அனிமேஷன் சார்ந்தே! குறிப்பாக ரஜினிக்கு மட்டுமல்ல மற்ற எல்லா பாத்திரங்களின் முகங்கள் அச்சு அசலாக வரவேண்டும் என நிறையவே மெனக்கெட்டிருந்தாலும், அனைவரது கண்களுமே சரியாக கையாளப்படவில்லை. அதுபோலவே அவர்களுடைய அசைவுகளும் கொஞ்சமும் சிறப்பாக இல்லை.

காட்சிகளின் பின்னணிகளுக்காக ஆக்சன் மற்றும் நடன காட்சிகளில் காட்டியிருக்கிற அக்கறையை எல்லா காட்சிகளிலும் காட்டியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஷோபானா,அவர் கையிலிருக்கிற குழந்தை என எதுவுமே உருப்படியாக இல்லை. சரத்குமாரை பார்க்க சரத்பாபு போலிருக்கிறார்! ஆனால் நாகேஷை மீண்டும் திரையில் சாத்தியப்படுத்தியது ஒன்றுதான் படத்தின் மிகப்பெரிய சாதனை. அவருக்கு குரல் கொடுத்தவரும் அவருக்கு உடல் அசைவு கொடுத்தவரும் வாழ்க!

படத்தில் பர்ஃபார்மென்ஸ் காப்பச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இப்படத்தில் பெரும்பாலான இடங்களில் மோசன் கேப்சரிங் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. இரண்டுக்கும் அடிப்படையிலேயே நிறைய வேறுபாடுகள் உண்டு. (பார்க்க WIKI)

இப்படி ஏகப்பட்ட குறைகளையும் தாண்டி ரஜினியின் குரல் நமக்குள் ஒரு மாயவித்தையை நிகழ்த்துகிறது. அது எரிச்சலூட்டுகிற அனிமேஷனையும் தாண்டி இப்படத்தை ரசிக்க வைக்கிறது. அதற்கு முதல் காரணம் நமக்கு ரஜினிமேலிருக்கிற அன்பு அல்லது மரியாதை நிமித்தமாக கூட இருக்கலாம்.

அனிமேஷன் படங்களின் ரசிகர்களுக்கு இப்படம் ரசிக்கும் என்றே கருதுகிறேன். காரணம் டாய் ஸ்டோரியில் தொடங்கி சமீபத்தில் வெளியான ஃப்ரோசன், ரியோ2 வரைக்குமான அத்தனை பிக்சார் மற்றும் டிஸ்னியின் படங்களையும் மிஸ்பண்ணாமல் பார்த்தவர்கள் எல்லாருக்குமே தமிழில் இப்படி ஒரு படம் சாத்தியமாகாதா என்கிற குறை எப்போதுமே இருந்தது. அந்த வகையில் இந்த கன்னிமுயற்சியே என்கிற அளவில் இதை அதன் குறைகளோடே ஏற்றுக்கொள்ளலாம். ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட பியோவூல்ஃப், அவதார் அளவுக்கு இல்லையென்றாலும் இது 2004ல் வெளியான 3டி அனிமேஷன் திரைப்படமான டாம்ஹேங்க்ஸ் நடித்த போலார் எக்ஸ்பிரஸ் அளவையாவது எட்டியிருக்கிறது என்றவகையில் பாராட்டத்தக்கதே. எப்போதுமே தமிழ்சினிமா ஹாலிவுட்டை விட பத்தாண்டுகள் பின்னால்தான் இருக்கும் என்று கணக்கு இருக்கிறது.

இப்படத்தை திரையரங்கில் எல்லோராலும் ரசிக்க முடியுமா என்பதை உறுதியாக கூற முடியாது. நிச்சயமாக பென்டென் சோட்டாபீம் குழந்தைகள் இடதுகையால் உவ்வேக் என்று நிராகரிப்பார்கள் என்பதைமட்டும் உறுதியாக சொல்வேன். அவர்களை இப்படம் ஒரு இடத்திலும் கூட குஷிபடுத்தாது. குழந்தைகளை அழைத்துச்செல்வது வீண்! அடிப்படையில் எனக்கு அனிமேஷன் படங்களின் மீது தீராக்காதல் உண்டென்பதால் இப்படத்தை ரொம்பவும் இன்ச் பை இன்ச் ரசித்தேன்.

12 May 2014

சுருள்குழல் அழகி!




வாழ்க்கையில் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஏடாகூடமாக ஏதாவது நடந்து விடுவது இயல்புதானே! அப்படிதான் நேற்று, வரலாற்று சிறப்புமிக்க திரைப்படமான மான்கராத்தேவை பார்த்தேன். இனிமேல் நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? என்கிற தலைவன் கவுண்டமணி வசனத்திற்கேற்ப இனிமேல் அந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதினால் என்ன.. எழுதாட்டி என்ன? என்றுதான் முதலில் தோன்றியது. எனவே இது இப்படத்தின் விமர்சனம் அல்ல.

குத்து சண்டை குறித்தும் அதற்காக உயிரை கொடுத்து பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிற எண்ணிலடங்கா இளைஞர்களைபற்றியும் ஒன்னும் தெரியாமல் ஏனோதானோ என்று எடுக்கப்பட்ட மொக்கை படம் என்கிற அளவில்தான் இப்படத்தை அணுக வேண்டியிருக்கிறது. படத்தில் சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமே இல்லை. அந்த முதல் இருபது நிமிட இந்திரா சௌந்தர்ராஜன் பாணி பில்ட்அப்புகள் மட்டும் பிடித்திருந்தது!

தினத்தந்தி பேப்பரும் நாலு இளைஞர்களும் என வேறு ஏதாவது கதை சிந்தித்திருக்கலாம். சிவகார்த்திகேயனை வைத்து என்னமோ பண்ணியிருக்கிறார்கள். அவசரத்திற்கு கிண்டிய உப்பில்லாத உப்புமா மாதிரி! ‘’சிவகார்த்திகேயனின் சுள்ளான்’’ என்று இரண்டுவார்த்தையில் இப்படம் குறித்து சொல்லிவிடலாம். ஓவர் டூ தி மெயின் மேட்டர்.

இப்படிப்பட்ட மரண மொக்கைப் படங்களிலும் ஏதாவதொரு அம்சம் நம்மை வெகுவாக கவர்ந்து மென்னியை பிடித்து கவ்வி இழுத்துவிடும். அப்படி கவர்ந்திழுத்த அம்சம் இப்படத்தில் வருகிற அந்த சுருள் முடி பெண்! ‘’அடியே ரத்தீ அக்கினி கோத்ரி’’ என்று புகழுவாரே சிகா! அந்தபெண்தான். படத்தில் அவருடைய பெயர் வைஷ்ணவி. உண்மையான பெயர் ப்ரீத்தியாம். கூகிளில் போட்டிருக்கிறது. கஷ்டப்பட்டு கண்விழித்து தேடித்தேடி கண்டுபிடித்தேன்.

ஒருபக்கம் ஹன்சிகாவின் ஓவர் மேக்கப் முகமும், உதட்டை பிதுக்கி பிதுக்கி ஙே என பார்க்கிற எல்லா சீனுக்குமான ஒரே குஷ்பு ரியாக்சனையும் பார்த்து பார்த்து சோர்ந்துபோன கண்ணுக்கு அவ்வப்போது காட்டப்படுகிற அதிக மேக் அப் இல்லாத இந்தப் பெண்ணை பார்த்துதான் குஷிவருகிறது. இவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாம்ங்க!

இந்த சுருள்குழல் அழகியை முதல் காட்சியில் பார்த்ததுமே ரொம்ப பிடித்துவிட்டது. என்ன ஒரு தளுக்கு என்ன ஒரு மினுக்கு! அய்யுய்யய்யோ.. அந்த கண்ணில்தான் அவ்வளவு மயக்கம்! ‘’இப்பல்லாம் பீர் கூலிங்காவே கிடைக்கிறதில்ல’’ என்று சொல்லும்போது ஓடிப்போய் டாஸ்மாக்கில் அடித்து பிடித்தாவுத் ஒரு கூலிங் பீர் வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட தோன்றியது.

மைக்கேல் ஜாக்சன் பாணியில் தலைவிரிகோலமாக அலைகிற சுருள்குழல் பெண்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சுருள்முடியோடு கொஞ்சம் பெரிய கண்களும் கொண்ட பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம். பார்த்ததுமே காதலில் விழுந்துவிடுவேன். அதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது அவர்களுடைய கூந்தலை என்னதான் எண்ணை போட்டு அமுக்கினாலும் அது அடங்கவே அடங்காது! அது அப்படியே நெற்றியில் விழுந்து காற்றில் அலைந்தபடியேதான் கிடக்கும். மீறி படிய வாறினால் அவர்களுடைய முகம் நன்றாகவே இருக்காது. கூகிளில் தேடியபோது படியவாறி சீவிய ப்ரீத்தியின் முகம் கூட சுமாராகத்தான் தோன்றியது!

ஒரு முக்கியமான விஷயம், சுருள்முடி ப்ரீத்திக்கும் தலைவி சிம்ரன் மாதிரியே உதட்டுக்கு மேல் ஒரு அழகான மச்சம் வேறு இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதுவும் வலதுபக்கம்! ஒரிஜினல்தான். (அடியேன் ஒரு காட்டுத்தனமான சிம்ரன் உபாசகன் என்பதை சொல்லவேண்டியதில்லை)

முன்பு 22ஃபீமேல்கோட்டயமில் ரீமா கல்லிங்கலை ரொம்பவே பிடித்து இப்படித்தான் பித்துபிடித்து திரிந்தேன். அதற்கு பிறகு அவருக்கும் மணமாகிவிட்டபடியால், கங்கனா ரனாவத்திற்கு மாறினேன். அவர் நடித்த ரிவால்வர் ராணியை இனிமேல்தான் பார்க்கவேண்டும். சப்டைட்டிலோடு நல்ல ப்ரிண்ட் டிவிடிக்காக வெயிட்டிங்! இந்த சந்துகேப்பில்தான் இந்த ‘’மான்’’ சிந்துபாடியிருக்கிறது! சிம்ரனுக்கு பிறகு அடியேனின் இரும்பு இதயத்தையே அசைத்துப்பார்க்கிறது இப்பெண்ணின் அழகு. ம்ம் சீக்கிரமே இந்த பெண்ணை வெள்ளித்திரையில் நாயகியாக படம் முழுக்க பார்க்கவேண்டும். யாராவது இயக்குனர்கள் மனது வைக்கவேண்டும். நிச்சயம் நன்றாக நடிப்பார் படம் ஹிட்டாகும்.. ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

09 May 2014

2 ஸ்டேட்ஸ்



2ஸ்டேட்ஸ் படம் பார்க்க பஜன்லால் சேட்டுகளும் அவருடைய சந்ததிகளும்தான் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். ஒரே ஆயா காயா போயா வாயா என இந்தி வாசனை.

பஞ்சாபி நாயகனுக்கும் தமிழ் நாயகிக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி காதல்கனிய இரண்டு குடும்பங்களும் அடித்துக்கொண்டு பின் கொஞ்சி குலாவி கடைசியில் கல்யாணமாகி சுபம் போட… ஒரே நாட்டில் வாழ்கிறோம் என்பதை தவிர்த்து இந்த பழம்பெரும் கலாச்சாரங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஆட்கள் இப்படத்தை குதூகலித்து கொண்டாடுகிறார்கள்.

சேதன் பகத்தின் 2ஸ்டேட்ஸ் நாவலை வாசித்ததில்லை. ஜாலியான ரொமான்றிக் நாவல் என்று மட்டும் நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நாவலை படித்த யாருக்கும் படம் அவ்வளவு ப்ரியப்படவில்லை. நல்ல வேளையாக அதனாலேயே படம் எனக்கு ஒரளவு பிடித்தேயிருந்தது. நாவல் சேவல் தாவலையெல்லாம் விடுங்கள். அலியாபட்டின் அழகுக்கும் க்யூட்னஸ்க்குமே இப்படத்தை இன்னொரு முறை பாரக்கலாம்! அப்படி ஒரு முகம் அந்த பெண்ணுக்கு.. பார்த்தவுடன் ஓடிப்போய் ஒரு லவ்லெட்டரை நீட்டி அம்மையாரே ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை லவ்பண்ணிடுங்க இல்லாட்டி உயிர உட்ருவேன் என கெஞ்சவைக்கிற க்யூட் முகம்!

படம் முழுக்க ஃப்ரேமுக்கு ஃபேரம் அவ்வளவு மெலோட்ராமா. ஆனால் அதுகூட பார்க்க நன்றாக சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ரொம்பநாள் ஆகிடுச்சு இப்படியெல்லாம் படம்பார்த்து. சமீபத்தில் இத்தனை அன்பும் பரிவும் சினேகமும் பாசமும் சோகமும் நிறைந்த படத்தை பார்த்த நினைவில்லை.

படம் முழுக்க பிரதான பாத்திரங்கள் எல்லோருக்கும் ஏதாவது வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கிறது. அது தன்னுடைய திறமையை வளர்த்து கொள்ள துடிக்கிற ரேவதியில் தொடங்கி தன் குடும்பத்தோடு ஒன்றாக இருந்தும் தனித்திருக்கிற நாயகனின் தந்தைவரைக்குமாக நீள்கிறது. அவர்கள் எல்லோருக்கும் ஒரு அழகான மனசாட்சி இருக்கிறது. எதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுகொடுத்துவிடக்கூடாது என்கிற தாறுமாறான ஈகோவும் இருக்கிறது. ஆனால் அதே மனிதர்களிடம் அன்பும் இருக்கிறது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவ ஈகோ,கோபம்,ஆணவம் எல்லாமே கரைந்து இயல்பான அன்பு பூக்கிறது. உண்மையில் மனிதர்கள் எல்லோருமே இதையெல்லாம் கலந்து ஒரு மாதிரி காக்டெயிலாகத்தானே இருக்கிறோம். அப்படிப்பட்ட மனிதர்களையே திரையில் சந்திக்கும்போது இயல்பாகவே ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது. அதனால்தானோ என்னவோ பாலிவுட்டில் படம் கோடைவிடுமுறையில் சூப்பர்ஹிட்டாகி சக்கைபோடுபோடுகிறது. நூறுகோடியை தாண்டிடுச்சா? அதுதானே பெஞ்ச்மார்க்?

ஆங்காங்கே புன்னகைக்க வைக்கிற சுஜாதா பாணி ஜாலி ஒன்லைனர்களும் அந்த குடும்பமும் அவர்களுக்குள் இருக்கிற அன்னியோன்யமும் ரசிக்க வைத்தன. அதிலும் நாயகனுக்கும் அவனுடைய அப்பாவுக்குமான அந்த உறவு… முரட்டுதனமான அப்பாவை கொண்ட யாருமே டீன்ஏஜ்ஜில் கடந்திருக்க வாய்ப்புகளுண்டு. முதல் பாதியில் அர்ஜூன் கபூரின் கண்களில் துள்ளுகிற அந்தக்காதலும், அலியாபட்டின் இளமைதுடிப்பும் உற்சாகமூட்டுபவை.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். அதுமட்டுமல்ல பஞ்சாபிகளையும் தமிழர்களையும் ‘’இவர்கள் இப்படித்தான்’’ என்று ஒரு சிறிய சட்டகத்துக்குள் அடைத்து நிறையவே அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். என்னமோ பஞ்சாபிகள் பொழுதன்னைக்கும் குடித்துக்கொண்டும் சிக்கனை கடித்துக்கொண்டும் திரிவதாகவும், தமிழர்கள் ஆர்தடக்ஸுகள் எந்நேரமும் வெள்ளை வேட்டி சகிதம் திரிவதாகவும்... இதுபோல. ஆனால் நாளுக்கு நாள் தமிழர்களை காட்சிபடுத்துவதில் கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக பாலிவுட் முன்னேறிக்கொண்டிருக்கிறது.

அமிதாப் நடித்த அக்னீபாத் படத்தில் அவருடைய நண்பரா வருகிற மிதுன்சக்ரபோர்த்தி ஒரு தமிழராக நடித்திருப்பார். அவருடைய பெயர் கிருஷ்ணன் ஐயர் எம்.ஏ! அவ்வளவு படித்தும் எழனி விற்கிற அந்த தமிழர் ஒரு ஐயர் என்பது மிகவும் அதிர்ச்சிகரமான நகைமுரணாக இருக்கும். இன்னும் பல படங்களில் தமிழர்கள் கறுப்பாக இருப்பார்கள், பட்டை போட்டு வெள்ளை வேட்டி வெள்ளைசட்டை சகிதம் ''அய்யோ..அய்யோ.. அடே முர்கா'' என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள்.

மலையாளிகளுக்கும் தமிழனுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல்தான் பாலிவுட்டில் படங்களெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சமகாலத்தில் இந்த "பாலிவுட்டின் முட்டாள் தமிழர்கள்'' இப்போது கொஞ்சம் முன்னேறி அவ்வப்போது பேன்ட் சட்டை அணிந்து தமிழ் பாட்டெல்லாம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். நிறைய படித்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் முழுவதுமாக நம்மை புரிந்துகொண்டு தமிழர்களை யதார்த்தமாக காட்சி படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்று நம்பலாம். அதற்கான எல்லா சாத்தியகூறுகளும் இப்படத்தில் தெரிகிறது. (இதற்கு முன் காட்டியதைவிட இதில் தேவலாம் என்பதைதான் மேலே நீட்டி மொழக்கி.. ரொம்ப நீண்டுவிட்டதோ?)

இந்த கலாச்சார அசிங்கப்படுத்துதல் குறைகளையெல்லாம் கவனிக்காமல் இப்படத்தை அணுக வேண்டுமென்றால், நீங்கள் பஞ்சாபியாகவும் இல்லாமல் தமிழராகவும் இல்லாமல் பொதுவில் நடுநிலையான இந்திகாரனாக அல்லது டெசிஇந்தியனாக மாறி படம் பார்க்க வேண்டும்! அதாவது தனிப்பட்ட எந்த கலாச்சார அடையாளங்களின்றி பொது அடையாளத்தோடு படம் பார்க்க வேண்டும். உலக மயமாக்கல் அதைதானே நமக்கு சொல்லிக்கொடுக்கிறது. எந்த கலச்சார வரலாற்று பின்புலமுமற்ற அமெரிக்கா பர்கரை அதே சுவையோடு அமைந்தகரை ஸ்கைவாக்கிலும் சாப்பிட முடிகிற.. ஒரே கூரையின் கீழ் உலகம் கான்செப்ட்!

படத்தின் மய்ய பகுதியில் வருகிற குடும்ப கன்வீன்சிங் காட்சிகளின் நீளம் அதிகம்தான் என்றாலும்.. நீள நீளமான படங்கள் பார்த்து ரசிக்கிற இந்திகாரர்களுக்கு அதுதான் பிடித்திருக்கிறது! இதுமாதிரி படங்களுக்கு இசை ரொம்ப முக்கியம். அது சொதப்பினால் டவுசர் கழண்டுடும். சங்கர் எங்சான் லாய் கலக்கியிருக்கிறார்.

வித்தியாச வெறிபிடித்து அலைகிற கோலிவுட்டில் இப்போதெல்லாம் சாதாரண எளிய படங்களே வருவதில்லையோ என்று தோன்றுகிறது. குடும்பத்தோடு போய் நிறைய காமெடி, நிறைய சென்டிமென்ட், அவ்வப்போது முகம் பூக்க வைக்கிற ஜாலியான ரொமான்ஸ் அப்பா அம்மா சென்டிமென்ட் தூக்கலாகி நாலு ட்ராப்ஸ் கண்ணீர் என குடும்பப்பாங்கான படங்களை பார்த்தே பலவருஷமாகிறது. வித்தியாசமானவர்களின் காலத்தில் கடைசியாக ராஜாராணிதான் அந்த வகையில் ஆல்மோஸ்ட் குடும்ப படமாக வந்த நினைவு. அதுகூட கிட்டத்தட்டதான்… ஆனால் அதையே குடும்ப படமாக நினைத்து மக்கள் கொண்டாடினார்கள். ராஜாராணிக்கு முன்பு… மந்திரி சுந்தரி… ஒன்றும் நினைவில்லை.

வில்லன்களே இல்லாமல் கடைசியாக இதுபோல பார்த்த படம் கேப்டன் நடித்த வானத்தைபோலதான்! அதற்கு முன்பு குஷி இந்த பாணியில் மிகவும் பிடித்திருந்தது. 2ஸ்டேடஸ் கூட குஷி,பூவெல்லாம் கேட்டுப்பார்,ஜோடி வகையறா படம்தான். ஆனால் இதில் இப்படங்களின் க்ளைமாக்ஸ் தாண்டிய ஒரு கதை இருக்கிறது. அதுதான் இதை ஸ்பெஷலாக்குகிறது. குடும்பத்தோடு பார்க்க ஏற்ற சித்திரம் அவ்வளவுதான்.

படம் முடிந்து படத்தில் பங்காற்றியவர்கள் பெயர்கள் இடம்பெற்றுக்கொண்டே வந்தது. நண்பர் அதில் ஒன்றை கவனித்துவிட்டு விசாரித்தார். ‘’தமிழ்ப்பாடல்கள் – நிரஞ்சன் ஐயங்கார’னு போட்டிருக்கே யாருங்க அது!’’ என்றார். நிரஞ்சன்... நிரஞ்சன்... நிரஞ்ச்… ஒகே எனக்கு தெரிஞ்சு தமிழில் நிரஞ்சன்ற பேர்ல பாடல்கள் எழுதுபவர் பாரதியாரின் எள்ளுப்பேரன் ‘’நிரஞ்சன் பாரதி’’ ஒருத்தர்தான். அவர் தன்னுடைய பெயரை நிரஞ்சன் பாரதி என்றுதான் போட்டுக்கொண்டு பாடல்கள் எழுதுகிறார். இது அவராக இருக்கக்கூடாது.. இது வேறு யாரோ என்று மட்டும் சொன்னேன். பிறகு விசாரித்தபோது அவர் இல்லை என்றார்கள். நிம்மதியாக இருந்தது.

08 May 2014

லேன்ட்மார்க்





சென்னை நுங்கம்பாக்கம் லேன்ட்மார்க் புத்தக கடை மூடப்படவுள்ளது. அனேகமாக இந்த மாத கடைசியில் மொத்தமாக மூடிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.ஏன் எதற்கு என்று விசாரிக்கவில்லை. விசாரிக்கவும் பிடிக்கவில்லை.

விற்காத புத்தகங்களையும், பதிப்பாளருக்கு திருப்பி அனுப்ப முடியாத பழைய ஸ்டாக்குகளையும் 70சதவீத கழிவில் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி நேற்று அந்தப்பக்கமாக தலைகாட்டினேன். நாம் கொண்டாடிய ஒரு இடத்தை மூடுகிறார்களே என்று வருந்துவதா நிறைய நல்ல நூல்களெல்லாம் 70சதவீத டிஸ்கவுன்டில் கிடைக்கிறதே என்று மகிழ்வதா என்று குழப்பமான மனநிலையில்தான் கடைக்குள் நுழைந்தேன்.

அவ்வளவு பெரிய கடையை அப்படியே உள்ளங்கையில் சுருட்டி உருட்டி பில்லுபோடுகிற அந்த நீண்ட ஸ்டேன்டுகள் கொண்ட அறைக்குள் அடக்கி வைத்திருந்தனர். இரண்டு வாரங்களாகவே இந்த கழிவு விற்பனை நடப்பதால் சொல்லிக்கொள்ளும்படி நல்லபொருட்கள் எதுவும் தட்டுப்படவில்லை. நூல்களும் ஒன்றுகூட தேறல. நிறைய டிவிடி கலெக்சன்ஸ் இருந்தது. அதிலும் நல்லதையெல்லாம் முன்பே பலரும் அள்ளி சென்றுவிட்டதை உணரவைக்கிற வகையிலேதான் இருந்தது. உபயோகித்து தேய்ந்த பழைய மாடல் மொபைல் போன் மாதிரி அழுக்கேறி தேய்ந்து போய் கிடக்கிறது கடை.

ஒருநாளும் லேன்ட் மார்க் கடைக்குள் நுழைந்து இப்படி உணர்ந்ததேயில்லை. பல ஆண்டுகள் பார்க்காத ஒரு பால்யகால சினேகிதன், தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து உருக்குலைந்து போய் இருக்கிற போது அவனை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வு. எத்தனை நாட்கள் அக்கடையின் குட்டி பெஞ்சுகளில் நாட்கள் கடந்திருக்கிறது. எத்தனை நாட்கள் டிவிடிகளை தேடி தேடி விரல்கள் தேய்ந்திருக்கிறது. அழகழகான எத்தனையோ பெண்களை சைட் அடித்த நினைவுகளெல்லாம் வந்து போயின. அக்கடையின் ஒவ்வொரு அலமாரியும் எனக்கு பரிச்சயமானது.

மார்க்கெட்டிங் வேலையில் பகலில் அலுவலகத்திற்கு போக முடியாது, போனால் திட்டுவிழும். வாடிக்கையாளர்களையே எப்போதும் பார்த்துக்கொண்டேயும் இருக்க முடியாது. அந்த நேரங்களையெல்லாம் லேன்ட்மார்க்கின் அலமாரிகளிடையேயான சந்துகளில் பல நாட்கள் தலைமறைவு வாழ்க்கையில் கழித்திருக்கிறேன். நாள்முழுக்க ஒரே ஒரு முழு நூலையும் குட்டிபெஞ்சில் உட்கார்ந்து படித்துக்கொண்டேயிருக்கலாம் யாருமே ஒருவார்த்தை கூட யார் என்ன என்று கேட்க மாட்டார்கள். தண்ணீர் இலவசமாக கிடைக்கும், டீ கொடுக்கமாட்டார்கள். நாமேதான் வெளியே போய் பெட்ரோல் பங்க் முக்கில் இருக்கிற கடையில் ஒரு டீயும் தம்மும் அடித்துவிட்டு வந்து மீண்டுமே கூட படிக்க ஆரம்பிக்கலாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் சைட் அடிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக லேன்ட்மார்க்தான் இருந்தது. புத்தகங்களை புரட்டுகிற மாதிரி நோட்டம் விட்டால் சுற்றிலும் ''ஏ சென்டர் இளைஞிகளை'' கண்டும் ரூட்டு கொடுக்கவும் ஏற்ற இடமும் அதுதான். இதுமாதிரியான நவீனரக பிள்ளைகளை சைட் அடிக்க லேன்ட்மார்க்கை விட்டால் ஸ்பென்சர்தான். ஸ்பென்சரிலும் ஒரு லேன்ட்மார்க் இருந்தது. இப்போதும் இருக்கிறதா? ஸ்பென்சரே இப்போது பண்டையகாலத்து அருங்காட்சியகம் மாதிரிதான் கிடக்கிறது.

லேண்ட்மார்க்கில் ஏதாவது ஏடாகூட நூல்களுக்கென்றே தனியாக ஒரு அலமாரி ஒதுக்கியிருப்பார்கள். அனேகமாக அது ஈசானிய மூலையாக இருக்கலாம். ஆனால் அங்கிருந்த நூல்களை வைத்து நானாகவே அதற்கு கன்னிமூலை என பெயரிட்டிருந்தேன். அங்கேதான் எல்லாவிதமான கஜகஜா நூல்களும் கிடைக்கும். அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு அப்படியே எங்காவது மூலையில் ஒன்றரையடி ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு படங்கள் மட்டும் பார்த்து சிலிர்த்த நாட்களை மறக்கவே முடியாது. பெரிய பெரிய சைஸில் கில்மா நூல்களை மறைவான மூலையில் அடிக்கி வைத்திருப்பார்கள்.

காதலிகளின் பிறந்தநாளுக்கு வேலன்டைன்ஸ்டேவில் மற்றும் பல சிறப்பு தருணங்களிலும் லேன்ட்மார்க் கிப்டுகள்தான் முத்தங்களை வாங்கித்தந்திருக்கிறது. கிப்ட் பொருட்கள் விலைகூடதான் என்றாலும் லேண்ட்மார்க்கில் வாங்கியது என்று பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு அதில் பெருமையோ இல்லையோ எனக்கு பெருமையாக இருந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஸ்கைவாக் மாலில் இருக்கிற லேன்ட்மார்க்கிற்கு சென்றிருந்தேன். நூல்களுக்காக ஒரே ஒரு அலமாரியைத்தான் ஒதுக்கியிருந்தார்கள். வீடியோகேம், பொம்மைகள், பரிசுபொருட்கள் விற்கும் கடையாகத்தான் அதை மாற்றிவைத்திருக்கிறார்கள். சிட்டிசென்டர் லேண்ட்மார்க் தேவலாம். ஒரளவு நூல்களை மிச்சம் வைத்திருக்கிறார்கள். 2 For 3 ஆஃபரில்தான் எல்லா நூல்களையும் விற்கிறார்கள். (சுந்தரராமசாமியும் சாருநிவேதிதாவையும் ஒன்றாக வாங்கினால் ஜெயமோகன் ஃப்ரீ! )

மின்னூல்கள் கோலோச்ச தொடங்கிவிட்ட காலத்தில் புத்தக கடைகள் உயிர்த்திருப்பதும் மூச்சுவிடுவதுமே ரொம்பவும் சிரமம்தான். அமேசான் கிண்டிலும் ஃப்ளிப்கார்ட்டும் வாசிப்பை விரல்நுனிக்கு கொண்டுவந்துவிட்டன. என்னதான் ஒரு டேப்லெட் முழுக்க ஆயிரம் நூல்கள் இருந்தாலும், ஒரு புத்தக கடைக்கு சென்று ஆயிரம் நூல்களில் ஒன்றை தேர்ந்துஎடுத்து படிப்பதை எங்குமே அனுபவிக்க முடியாது. புத்தகக்கடையில் நிறைந்திருக்கிற அந்த வாசனையும் அங்கே கழிக்கிற அந்த சொற்பமான நேரமும் நம்மை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க வல்லவை. வெறும் நூல்களின் அட்டைகளை மட்டுமே படிப்பதும் அவற்றை ஒரு புரட்டு புரட்டுவதும் அளவில்லா மகிழ்ச்சியை தரக்கூடியவை. வருங்காலத்தில் இதற்க்கெல்லாம் சாத்தியமே இல்லாமல் போய்விடும் என்பது கண்முன்னே தெரிகிறது. அதை தடுக்கவும் முடியாது. எல்லா லேன்ட்மார்க்குகளும் காலவோட்டத்தில் கரையக்கூடியவைதானே!

05 May 2014

கஹானியும் கமூலாவும்



மாஞ்சு மாஞ்சு கொண்டாடிய ஒரு படத்தை ரீமேக் என்கிற பெயரில் கொத்துக்கறி போட்டு கொதறி வைத்திருந்தால் கோபம் மட்டுமா வரும், அடேய் பாவிப்பயலே இது நியாயமா என்று படத்தை எடுத்தவனை கொலையாய்க் கொல்லவேண்டும் என்கிற கொந்தளிப்பும் கூடவே வரும்தானே. ‘’நீ எங்கே’’ படம் பார்க்கும் போதும் அதுதான் நிறையவே வந்தது. படத்திற்கு பெயர் நீஎங்கே என் அன்பேவா.. இல்லை வெறும் நீ எங்கேவா? டைட்டிலிலேயே குழப்பம்தான்.

வித்யாபாலனின் நடிப்பில் 2012ல் வெளியான இந்தி திரைப்படம் கஹானி. வெளிநாட்டிலிருந்து கொல்கத்தாவிற்கு தன் தொலைந்துபோன கணவனைத்தேடி வருகிற ஒரு பெண்ணின் கதையை பதைபதைக்க வைக்கிற வகையில் படமாக்கியிருப்பார் இயக்குனர் கோஷ். மொழி தெரியாத ஊரில் வயிற்றில் குழந்தையோடு அவள் தேடி அலைவதும், அவளுடைய தேடலை ஒட்டி அடுத்தடுத்து நடக்கிற கொலையுமாக சில்லிட வைக்கிற பரபர த்ரில்லர்.

பெரிய ஸ்டார்கள் இல்லாமலேயே நூறுகோடிக்கும் மேல் வசூலித்த இந்தப்படத்தை தமிழில் ரீமேக் பண்ண நினைத்த அந்த எண்ணம் பாரட்டப்படவேண்டியது. ஆனால் அதை அப்படியே அட்டை டூ அட்டை எடுத்திருக்கலாம்.. தன்னுடைய சொந்த சரக்கை நுழைக்கிறேன் என்று இப்படி கொயகொயவென்றாக்கியிருக்கத் தேவையில்லை!

தெலுங்கில் ‘’ஹேப்பி டேஸ்’’ ‘’லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல்’’ மாதிரி அருமையான ஃபீல்குட் படங்கள் எடுத்து பேர் பெற்ற இயக்குனர் சேகர் கம்மூலா ஏன் கஹானி மாதிரி ஒரு முரட்டுத்தனமான படத்தை ரீமேக் செய்ய ஒப்புக்கொண்டார்? வித்யாபாலனுக்கு பதிலாக ஏன் நயன்தாரா.. WHY WHY?? இந்தக் கேள்விகள் ‘’நீ எங்கே என் அன்பே’’ அல்லது ‘’அனாமிகா’’ படத்திற்கு பூஜை போட்ட அன்றிலிருந்தே மனதை குடாய்ந்துகொண்டிருந்தது.

எந்த பாத்திரத்தையும் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் செய்கிற வித்யாபாலனுக்கு மாற்றாக வேறொரு நடிகையை நினைத்தும் கூட பார்க்க முடியவில்லை. ஒருவேளை சிம்ரனை நடிக்க வைத்திருந்தால் மனம் ஒப்பியிருக்குமோ என்னமோ?

நயன்தாரா நல்ல நடிகைதான், ஆனால் இப்படத்தின் கதைப்படி நயன்தாராவை பார்க்கும்போது நமக்கு இயல்பாக எழவேண்டிய பரிதாப உணர்ச்சிக்கு பதிலாக வேறு சில உணர்ச்சிகள்தான் மேலோங்குகிறது. அதற்கொப்ப படம் முழுக்க நயன்தாராவும் நன்றாக டிசைன் டிசைனாக கலர் கலர் காஸ்ட்யூம்களில் வலம் வருகிறார். இயக்குனர்கதையை விட நயன்தாராவின் கவர்ச்சியின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தாரோ என்னவோ?

இதை தனிப்படமாக பார்த்தாலாவது பிடித்து தொலைக்கிறதா என முயற்சி செய்தும் பார்த்தேன். கஹானியோடு ஒப்பிடாமல் பார்த்தாலுமே கூட ம்ஹூம் நிச்சயமாக சத்தியமாக முடியலைதான். அதிலும் டெம்ப்ளேட் வசனங்கள், டெம்ப்ளேட் நடிப்புகள்...

கஹானி படத்தின் உயிர்நாடியே வித்யாபாலன் நிறைமாத கர்ப்பிணியாகவும், அந்த அவஸ்தையோடு தொலைந்து போன தன் கணவனை தேடுவதும்தான். அது அப்படி இருந்தால்தான் க்ளைமாக்ஸில் படம் முழுக்க நாம் பார்த்ததெல்லாவற்றையும் புரட்டிப்போடுகிற அந்த ட்விஸ்ட்டு நறுக்கென நம் மண்டையில் உரைக்கும். ஆனால் இப்படத்தில் நயன்தாரா மறுத்திருப்பாரோ என்னவோ நாயகி கர்ப்பமாவதை இயக்குனர் விரும்பவில்லை. முதல் பாலிலேயே விக்கெட் விழுந்துவிட்டதா..

இரண்டாவது கஹானியில் வருகிற அந்த இன்சூரன் ஏஜன்ட் வேலை பார்க்கிற அம்மாஞ்சி கொலைகாரன். அவன் தொடர்பான காட்சிகள் எல்லாமே அவ்வளவு பயமுறுத்தக்கூடியதாக இருக்கும். அதற்கு காரணம் அவன் தொடர்பான ஆரம்ப காட்சிகள். இயக்குனர் அதையும் தூக்கிவிட்டார்.

மூன்றாவது படத்தினுடைய CASTING. நவாசூதீன் சித்திக் மாதிரி தேர்ந்த நடிகர் நடித்த பாத்திரத்தில் பசுபதியை போட்டது சரிதான். பசுபதி தமிழின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்,. ஆனால் ஏனோ இந்தப்படத்தில் என்னதான் கண்ணை உருட்டி உருட்டி மிரட்டினாலும் அவரை பார்க்கும் போது பயமே வரவில்லை. சில இடங்களில் சிரிப்புதான் வந்தது. சில பார்வைகளில் அசைவுகளில் பார்வையாளர்களை போட்டு அப்படி பயமுறுத்தியிருப்பார் நவாசுதீன்! அதற்கு நாயகி கர்ப்பிணியாக இல்லாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கஹானியில் வருகிற கொல்கத்தா நகரம் அவ்வளவு உயிர்ப்போடிருக்கும். அவ்வூரின் அசலான நிறமும் மக்களும் அதன் மணமும் கூட ஒவ்வொரு சட்டகத்திலும் நிறைந்திருக்கும். ஏனோ சேகர் கம்மூலா சொல்லும் கஹானியில் ஹைதரபாத் நகரம் என்பது நாலுதெருவுக்குள் சுருங்கிப்போய்விடுகிறது. அதைப்பற்றிய பரந்துபட்ட பார்வையை வழங்கமறுக்கிறது.

படம் முழுக்க காரணமே இல்லாமல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் காட்டப்படும் காளியும், நல்லவர்களோடு எங்கும் நிறைந்திருக்கும் காவியும், குண்டுவைத்தவரைத்தேடி இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் மட்டுமே தேடுவதுமாக சேகர் கமூலா தன்னுடைய சார்ரசியலையும் கொஞ்சம் தூவி விட்டிருக்கிறார்.

கஹானியின் வெற்றிக்கு காரணமான எல்லா அம்சங்களையும் அதன் ஆன்மாவையும்உருவிப்போட்டுவிட்டு , லேடீஸ் சென்டிமென்ட்டை தூக்கலாக்கி வெறும் சக்கையில் இனிப்புத் தண்ணீரை தெளித்து கொடுத்தது போலிருந்தது நீ அன்பே. இதைத் தவிர்க்கலாம். சப்டைட்டிலோடு ஒரிஜினல் டிவிடியில் கஹானி கிடைக்கிறது. தவறவிட்டவர்கள் கட்டாயம் பார்க்கலாம்.