Pages

30 June 2008

டிபன் பாக்ஸ் வெடிகுண்டு !


'' ஒரு நாளாவது வீட்லருந்து

பொண்டாட்டி குடுத்தனுப்பற

டிபன்பாக்ஸ் சாப்பாட சாப்பிடறீயா

தினமும் ஓட்டல்ல சாப்பிடறீயே

அதுல என்னதான்டா இருக்கு''

உணவு வேலையில் சரியாக வேலை

பார்க்கும் அலுவலக நண்பன்


வழக்கம்போல

புன்னகையோடுமறுதலித்தபடி..

ஓட்டலுக்கு கிளம்புகிறேன்,

அவனுக்கு தெரியாது

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........


என் வீட்டில்

என் பொண்டாட்டி எங்க சமைக்கறா

நான்தான் சமைப்பேனு......


ச்சும்மா லக்கிலுக்கின் இந்த பதிவில் தந்த டிபன் பாக்ஸில் குண்டு வைக்கலாமென....


;-)

27 June 2008

மடிக்கணினி வாங்க போகிறீர்களா....உங்களுக்கு சில டிப்ஸ்




இன்றைய கணினி உலகில் நம் அனைவருக்குமே சுயமாக ஒரு கணினி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெருகிவருகிறது . அதிலும் அதிகமானோர்க்கு மடிகணினிகளின் மீதான மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது . இந்தியாவில் மடிகணினிகளின் விற்பனை கடந்த 2 ஆண்டுகளில் இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளது . இதனால் சந்தையில் பல விதமான வகைகளில் இம்மடிகணினிகள் விற்கப்படுகின்றன , அதில் எது நமது தேவைக்கு ஏற்றது , உத்திரவாதமானது , பிரச்சனை தராதது என கண்டறிவது என ஆராய்வோம் .



1. வாங்குவது என முடிவெடுத்த பின் நாம் முதலில் முடிவு செய்ய வேண்டியது பட்ஜெட். காசுக்கேத்த தோசை என்று ஒரு சொல்வழக்கமுண்டு அது போலத்தான் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கேற்றாற் போல்தான் கணினிகளின் தொழில்நுட்ப பயன்பாடுகளும் அமையும் .



2. பட்ஜெட்டை முடிவு செய்தபின் , உங்களால் அதிகமாக இதற்காக செலவிட இயலும் என்கிற பட்சத்தில் HP,sony அல்லது Dell போன்ற பன்னாட்டு தயாரிப்பாளரின் மடிக்கணினிகளை தேர்வு செய்யலாம் , குறைந்த அளவு பணத்துடன் வாங்க எண்ணுபவர்கள் HCL,Acer,Zenith,Toshiba போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை முயற்ச்சிக்கலாம் . (toshiba மட்டும் வெளிநாட்டு தயாரிப்பு ) . அதற்கு காரணம் தொழில்நுட்பம் , ஒரே தொழில் நுட்ப வசதிகள் இந்திய மற்றும் பன்னாட்டு தயாரிப்பாளர்களிடம் வெவ்வேறு விலைகளில் கிடைப்பதே ஆகும் . ஆனால் ஆடம்பர தொழில்நுட்பங்கள் பன்னாட்டு தயாரிப்புகளில் அதிகம் , அது இந்திய பொருட்களில் குறைவு . அதுதவிர brand image எனப்படுகிற ஒரு விடயமும் இவ்விடயத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று . ஏன்னெனில் இன்று பலரும் மடிகணினியை ஒரு தனிப் பெருமையாக பார்க்கும் நிலை உள்ளது (brand image) .



3.அடுத்து நாம் கவனிக்க வேண்டிய விடயம் , எதற்காக இந்த கணினியை நாம் வாங்கப்போகிறோம் , நாம் எவ்வாறு பயன்படுத்த இருக்கிறோம் என்பதை ஆராயவும் , எப்படி எனில் நீங்கள் பல இடங்களுக்கும் பயணிப்பவர் எனில் எடை குறைந்த உறுதியான , பாதுகாப்பு அம்சங்கள் அதிகமானவையாகவும் , அதிக நேரம் பேட்டரியால் இயங்கக்கூடியதாகவும் வாங்கலாம் . வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டும் உபயோகிக்க கூடியதாக இருப்பின் மேற்சொன்ன காரணங்களில் எடை தவிர்த்து மற்ற காரணிகளை எடுத்து கொள்ளலாம் . இது தவிர நம் பயன்பாடுகள் மிக முக்கியம் . நாம் இந்த கணினியில் எந்த வகையான பணிகளை செய்ய இருக்கிறோம் , பிற்காலத்தில் என்ன செய்யலாம் என்பதை பற்றியும் , எந்த வகை மென்பொருட்களையும் பயன்படுத்த இருக்கிறோம் என்பதை பற்றியும் அறிந்து கொள்வது நல்லது . ஏனெனில் அதற்கேற்றாற் போல நமக்கு தேவையான configuration ஐ முடிவு செய்யலாம் . தேவையில்லாமல் இணைய பயன்பாட்டிற்கு high configuration கணினியை அதிக செலவில் வாங்க வேண்டியதில்லை .



4. configuration மிக முக்கியமான ஒன்று , நீங்கள் வாங்கும் config. னின் முழு விபரத்தையும் வாங்கி கொள்ளவும் அது கீழுள்ள மாதிரியில் இருப்பது போல பெறவும்



a. processor -(processor type , Processor speed, FSB speed , chipset)

b.RAM or memory-

c.Hard disk drive-

d.Optical disk drive - Preferably a DVD writer

e.Connectivity - (wifi , pcmcia port , bluetooth)

f.Screen Size ( what kind of display and which type) -

g.Weight-

h.Operating systems -

i.additional features-

j.video and audio features -

k.price -



மேற்சொன்ன விடயங்களை பல மாடல்களிலும் பல தயாரிப்புகளிலும் வாங்கி ஆராய்ந்து பிறகு உங்கள் மடிக்கணினியை தேர்ந்தெடுக்கவும் .



4. மேற்சொன்ன விடயங்கள் தவிர கவனிக்க வேண்டிய சில

அ. பல கடைகளுக்கும் சென்று விலை விபரமும் config.ம் விசாரியுங்கள் .

ஆ.தயவு செய்து பழைய மடிக்கணினிகளை வாங்க வேண்டாம்

இ.நீங்கள் வாங்க இருக்கும் கணினியை விற்கும் கடை எப்படி என விசாரித்து வாங்கவும்

ஈ.முக்கியமாக service and support எப்படி என விசாரித்து வாங்கவும்.

உ.விலை , பேரம் பேசி வாங்கவும் .



இவை அனைத்தும் சரியாக செய்தால் நிச்சயம் உங்களுக்கு குறைந்த விலையில் உங்கள் உபயோகத்திற்கேற்ற நல்ல ஒரு மடிகணினி அமையும் . இன்னோரு பதிவில் மடிகணினியை எப்படி பேணுவது என்பது குறித்து பார்போம்.



மேலதிக விபரங்களுக்கு பின்னூட்டம் அல்லது dhoniv@gmail.com என்கிற எனது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும் .



சில உபயோகமான வலைப்பக்கங்கள்

http://www.hp.co.in/

http://www.dell.co.in/

http://www.sony.co.in/

http://www.acer.co.in/

http://www.zenith-india.com/

http://www.hclinfosystems.com/

http://www.amd.com/

http://www.intel.com/





___________________________________________________________________



ஒரு மடிகணினி செய்தி :



நேற்று நமது முதல்வர் கலைஞர் அவர்கள் , 10 வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற 1100 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் 1100 பேரில் முதல் 10 மாணவர்களுக்கு மடிகணினிகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார் . இந்த நல்லத்திட்டத்தின் செயல்ப்படுத்துதலில் அடியேனின் பங்கும் உண்டெண்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . ( நான் பணியாற்றும் நிறுவனத்தால் கிடைத்தது ) . பல வருடங்களாக கிடப்பில் இருந்த இந்த திட்டத்தை விரைவாக தொடங்கி அதை செயல்படுத்தி காட்டிய முதல்வருக்கு சிறப்பு நன்றிகள் ( என் டார்கெட்டை முடித்து கொடுத்தமைக்கும் எனக்கு என் நிறுவனத்தில் நல்ல பெயர் வாங்கி தந்தமைக்கும் சேர்த்து )



____________________________________________________________________

23 June 2008

15 ஆண்டுகள் லீவு எடுக்காத அபூர்வ ஈரோடு மாணவி

முதலில் செய்தி ; http://dinamalar.com/fpnnews.asp?News_id=1106&cls=row4
மேலே கொடுக்கபட்டுள்ள சுட்டியை சொடுக்கி அந்த செய்தியை படித்துவிட்டு மேலே தொடரலாம் .

இன்றைய தினமலரில் இப்படியொரு செய்தி , பார்த்தும் அதிர்ச்சியாக இருந்தது , விடுமுறை எடுப்பது தவறான காரியமா , விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்லுதல் சாதனையா என்பன போன்ற கேள்விகள் மனதில் எழுந்தன .

இம்மாணவியை அமைச்சர் ராஜா மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ பழனிச்சாமியும் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று பாராட்டியும் உள்ளனர் . அந்த பெண்ணின் சாதனை நிச்சயம் பாராட்டதக்கதே இருப்பினும் , அந்த பெண் , தான் இது போன்றதொரு சாதனையை செய்ய தன் தாயின் தூண்டுதலே காரணம் என்கிறார் .

இது போன்றதொரு செய்தி மற்ற பெற்றோரும் தத்தமது குழந்தைகளையும் இது போல ஒரு சாதனைக்கு தூண்டலாம் . இதனால் குழந்தைகள் பெற்றோரின் ஆர்வத்திற்கு பலியாகும் வாய்ப்புள்ளது . ஏற்கனவே பக்கத்து வீட்டு குழந்தை முதல் ரேங்க் வாங்கினால் தன் மகனோ மகளோ அதே போல் முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்கிற மனோபாவம் இன்னும் எல்லா பெற்றோருக்கும் இருந்து வருகிறது . அதை யாரும் மறுக்க இயலாது .

நம் வாழுவின் சில தருணங்களில் குழந்தைகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் , அப்போதுதான் நம் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் சமுதாய மாற்றங்களும் அவர்களுக்கு தெரியவரும் . 15 வருடங்கள் என்பது அக்குழந்தையின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு , அதை நான்கு சுவற்றின் உள்ளேயே கழிக்கின்ற துன்பம் நம் அனைவரும் அநுபவித்ததே . அதற்காக விடுமுறை எடுப்பது சரியென்று கூறவில்லை , நம் வாழ்வின் மிக முக்கிய தருணங்களில் குழந்தைகள் நம்மோடு கட்டாயம் இருக்க வேண்டும் . அத்தருணங்களில் விடுமுறை தவறல்ல .

இது என் தனிபட்ட கருத்தே .

கருணா v/s ராமு : தளபதி Part-2



காட்சி 1 : இடம் : கருணாவின் வீடு ,

கருணாவின் வலது கை வீரா ஒடி வருகிறார். காட்சி துவங்குகிறது.
வீரா : தல! தல! வெளிய வா தல! (உள்ளிருந்து கருணா வெளியே வருகிறார்)
கருணா : இன்னாடா....!!
வீரா : இத்த பாரு தல.......
(அலைப்பேசியால் ஓடிய அந்த காட்சியை பார்த்ததும் கருணாவிற்கு கோபம் வருகிறது )
கருணா : இன்னாடாது இன்னாதிது............ராமு ஆளு இப்டி பேசுறான் அதும் நம்ம ஏரியாலயே இருந்துகினு,
வீரா : ஆமா தல உன் கைல வச்சுகிறதே , ராமுவுக்கும் அவன் ஆளுங்களுக்கும் வேலயா பூடுச்சி....... இதுக்கு எதுனா பண்ணனும் தல...உடனே ஒரு முடிவெடு தல...வேற வழ்யே இல்ல
கருணா : முடிவெடுக்கர்துக்கு கரீட்டான டயம் வந்திருச்சி......................

காட்சி முடிகிறது.........ஃபிளாஸ்பேக் துவக்கம்............

காட்சி 2 : ஏரியா தாதாக்கள் கூட்டம் , ராயபுரம் பழைய பங்களா


தாதா 1 : இங்க பாரு கருணா ஓன் கைல 90 பசங்கதான் இருக்கான்ங்க , உனக்கு இந்த ஏரியால மாமூல் வசூல் பண்ண 120 பேருணா வேணும் , அத்தனால இந்த ஏரியாவ உனக்கு குடுக்க முடியாதுப்பா..இன்னாபா ...............மத்தவங்க இன்னாபா ....சொல்றீங்க
(மற்ற பெரிய தாதாக்கள் ஆமாம் என்பது போல தலையை ஆட்ட கருணா தலை குனிகிறார் )
(சால்னாகடை ஜெயாக்கா இந்த போட்டியில் கருணாவின் முக்கிய எதிரி...)
ஜெயாக்கா : இன்னா அதான் சொல்லிட்டாங்கள்ள , இன்னும் இன்னாத்துக்கு அங்கேயே நின்னுகினுகீறே..இட்த்த காலி பண்ணு..தோடா பீலிங்கஸ்.....கெளம்பு கருணா காத்து வரட்டும்
(கருணா சோகமாக அங்கிருந்து கிளம்புகிறார் , பின்னாலில் இருந்து ஒரு குரல் அது ராமு )
ராமு : இன்னா கருணா என் கைல ஒரு வர்த்த சொல்லிருந்த ....என் பசங்கள உனக்காக அனுப்பிருப்பனே...இப்ப ஒரு வார்த்த சொல்லு நம்ம புள்ளைங்கள உட்னே அனுப்பறேன்...இன்னா கருணா ...ஒனுக்கு ஓன்னினா....
( கருணா மகிழ்ச்சியால் கண்கலங்கி ராமுவை கட்டி அணைக்கிறார் , ஜெயாக்கா கோபத்துடன் கிளம்புகிறார் . கருணாவும் ராமுவும் இணைந்து நட்பு பாடல் பாடுகின்றனர் தேஜாஸ்ரீ நடனத்துடன்!!!!! )

காட்சி 3 : ராமு வீடு , ராமுவின் வலது கை குருவும் அவரும்

குரு : அண்ணா எத்தினி நாளைக்குதாணா நீ கருணாக்கு அல்லக்கையாவே இருப்ப...நீ கருணா கணக்கா எப்பணா ஆவ்றது , நம்ம புள்ளங்கலாம் பாவம்ணா , ரொம்ப பாவம்ணா , அவங்களும் நாலு காசு பாக்க வேணாமாண்ணா.... இன்னாணா
ராமு : குரு , கருணாகிட்ட மொதறது நமக்கு நல்லதில்ல... நாம அட்டாக்க வேற மாதிரி பண்ணுவோம்... குரு.....................................................................(பிளான் சொல்லுகிறார் வசனமில்லாமல் இசை மட்டும் )


காட்சி 4 : கருணாவின் சின்ன வீடு , கருணாவும் அவர் மகன் அழகுமலையும்

அழகு : நைனா!!! இன்னா நைனா இந்த ராமுவோட செம்ம கரைச்சலா இக்குதே, இதல்லாம் கேக்கமாட்டியா...
கருணா : இப்ப இன்னாடா அவன் உனக்கு டார்ச்சர்ர் குத்தான்...ஏன் காலைலியே வந்து கூவறே..
அழகு : நைனா, நம்ம மாமூல் வாங்கறதுக்காக வெளியூர்லரந்து இட்டாந்தமே கடைக்காரனுங்கோ அவங்கள தொழில் பண்ண வுட மாட்டேன்றான் , கேட்டா லோக்கல் பசங்க எங்க போயி தொழில் பண்டறதுனு தெர்லன்றான் ,
கருணா : விட்றா கொஞ்ச நாள் கத்துவான் அப்பால அடுத்த வேல பாக்க போயிருவான்
அழகு : இல்ல நைனா அவனலாம் வளரவுடக்கூடாது , அவன் நம்ம சாராயக்கடை மேட்டர்லயும் கை வைக்கன்றான் தெர்மா.. எதோ நான் ஊரற சங்க ஊதிட்டேன் அப்பால உன் பாடு அவன் பாடு ,


காட்சி 5 : குரு கருணாவின் சாராயக்கடையில் ரகளையிலீடுபட வீரா குருவுடன் சண்டையிடுகிறார்

குரு : டேய் வீரா நீ யார் ஆளு மேல கைய வச்சின தெர்யுமா... ராமுக்கண்டி இது தெர்ஞ்சிது அவ்ளோதான் ...
வீரா : யார்ரா ராமு தம்மாதுண்டு தாமாக்கோலி அவனான் ___த்து துண்ட்ற எச்சிதானடா நீ..கருணாகண்டி இந்த மேட்டரு தெரியாட்டும் த்தா அவ்ளோதான்
குரு : யார்ரா கருணா அவன் இன்னா பெரிய ___ஆ , வந்தாண்னா கண்ண நோண்டி காக்கவுக்கு போட்டுருவேன் சொல்லி வை..
(வீரா தன் அலைப்பேசியில் படமாக்கி கொள்கிறார் )
வீரா : இர்ரா உனக்கும் உன் தலைவனுக்கும் ஆப்படிக்கிறேன்
(கோபத்துடன் கிளம்புகிறார் )
( ஜெயாக்காவின் சால்னா தொழில் படுத்து விட , கோபத்தில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தன் ஆட்களை அனுப்பி கருணாவின் ஆட்களை அடித்துவிட்டு பழியை ராமு மேல் போட்டுவிடுகிறார் )
( கருணா,ராமு இடையேயான நட்பு உடைகிறது )
( கருணா , ராமுவின் ஆட்களை திருப்பி அனுப்புகிறார் , அந்த ஏரியா பழைய தாதா மனைவி சோனியிடமிருந்து ஆட்களை இறக்கிக்கொள்கிறார் )
ஃபிளாஸ்பேக்கும் முடிகிறது .

கிளைமாக்ஸ் 1 :

கருணா ராமுவின் ஏரியாவிற்குள் தனியாக செல்கிறார். அங்கே ராமு,குரு அவரது ஆட்கள் சீட்டாடி கொண்டிருக்கின்றனர்.
ராமு : இன்னா தல இவ்வளோ தூரம் இன்னா...... சீட்டு ஒரு கை போட்றியா....
கருணா : நிருத்து அல்லாத்தயும் நிருத்து
ராமு : முடியாது எதையும் நிருத்த முடியாது ...
கருணா : ஏன்.....
ராமு : விளம்பரம் வெட்டி விளம்பரம்... எத்தனி நாள் நான் இப்டியே அல்லக்கேயா இக்கிறது...ஆவணும் நானும் தலைவன் ஆவணும்
குரு : ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா நிருத்துங்கப்பா முடியல...
கருணா : டேய் டுபுக்கு.... யார்ரா இங்க குரு ....
குரு : நான்தான் இப்ப இன்னா.. ராமு உம் னு சொல்லு நான் இவன இங்கயே கண்டம் பண்ணிறேன்
கருணா : ஏண்டா நேர்ல பார்த்தா கண்ண நோண்டி காக்காய் போட்ருவேனு சொன்னியாமே , இதா நானே வந்துர்க்கேன் வாடா ஆம்பளையா இருந்தா வந்து கைய வச்சி பார்ரா...
(அங்கிருந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார் கருணா , ராமுவை மட்டும் பாவமென்று மன்னித்து விடுகிறார் , )
(ராமு மீண்டும் சால்னாக்கடை ஜெயாக்கவிடமே தஞ்சமடைகிறார் )

கிளைமாக்ஸ் 2 :

குருவின் பேச்சு ராமுவுக்கு தெரியவர குபீரென வெகுண்டெழுந்த ராமு அவரை அடித்து துவைத்து ஏரியாவை விட்டே விரட்டி அடிக்கிறார் , அதை அறிந்த கருணா ராமுவின் உயரிய உள்ளம் அறிந்து மகிழ்ச்சி கொண்டு , அவரை அழைத்து விருந்து வைக்கிறார் மானாட மயிலாட குழுவினரின் நடனம் அரங்கேருகிறது . அந்த வேளையில் சால்னா கடையில் ஜெயாம்மா கருணாவையும் ராமுவையும் தீர்த்து கட்ட ஆட்களுடன் கிளம்புகிறார் , அங்கே பாடல் முடிய ஜெயாவின் ஆட்கள் உள்ளே நுழைய சண்டை துவங்குகிறது . சண்டையின் இறுதியில் கருணாவை கத்தியால் குத்த ஜெயா பாய அதை கண்ட ராமு நடுவில் பாய கத்தி ராமுவின் வயிற்றில் பாய்கிறது , இதனை சற்றும் எதிர்பாராத ஜெயா அங்கிருந்து ஓட்டமெடுக்கிறார் , ராமு மயக்கமாகி கருணாவின் மடியில் சாய கருணா ராமுவின் தியாகத்தே நினைத்து கதறி கண்ணீர் சிந்துகிறார், ஓவென கத்தி அழுத படி ராமுவை தன் கைகளில் ஏந்திய படி மருத்துவமனைக்கு ஓட........திரை இருள்கிறது.....!!!!!!!!!!!!!

____________________________________________________________________________________
இக்கதையில் வரும் சம்பவங்களும் , பாத்திரங்களும் கற்பனையே .
இஷ்டபட்ட கிளைமாக்ஸ படிச்சிட்டு கஷ்டப்படாம உங்க கருத்த(திட்டோ!!! பாராட்டோ !!!!!) பின்னூட்டத்தில தெரிவியுங்க அப்பதான் இனிமேலும் இது மாதிரி பதிவு போடலாமா வேண்டாமானு தெரியும் .

____________________________________________________________________________________

22 June 2008

இடியாப்ப சிக்கனும் இன்னபிற சிக்கல்களும் கேயாஸ் தியரியும்

'' சார், 5 வருஷத்துக்கு முன்னால நான் மட்டும் அந்த இடியாப்ப சிக்கன் சாப்பிட போகாமா இருந்திருந்தா , இங்க வந்துருக்கவே மாட்டேன் , என்ன செய்ய எல்லாம் விதி சார் ''
நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன் இளவழகனை ,

'' இததான் சார் அறிவியல்ல , கேயாஸ் தியரிங்கறாங்க , நம்ம வாழ்க்கைல எடுக்குற சின்ன சின்ன முடிவுகளும் , சின்னசின்ன நிகழ்வுகளும் நம்ம வாழ்க்கைய எப்படி வேணா மாத்தும் , ஒரு பெரிய பிரச்சனையோட ஆரம்ப புள்ளி , அந்த சின்ன நிகழ்வா இருக்காலாம் , எனக்கு அந்த இடியாப்ப பிரச்சனை மாதிரி ,எனக்கு அந்த இடியாப்பம் சாப்பிடணும்னு அன்னைக்கு தோணாம இருந்திருந்தா இன்னைக்கு உங்க முன்னாடி இப்படி ...நான் பெரிய சாப்ட்வேர் இன்ஜினியாரா இருந்திருப்பேன் சார் ''

எனக்கு கபாலம் கலங்கியது '' அப்படி என்ன சார் அந்த இடியாப்ப சிக்கன் பண்ணுச்சு ''
'' எனக்கு 25 வயசு சார் அப்போ , என்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாவா படிச்சிகிட்டுருந்தேன் , என் நண்பன் விஜய் , என்னோட உயிர் நண்பன் சார் அவன் , செப்டம்பர் 15 , அன்னைக்குத்தான் அவன் அந்த கடைக்கு கூப்டான் , அங்க இடியாப்பமும் சிக்கனும் தருவாங்க ரொம்ப ஜோரா இருக்கும்னு சொல்லி கூட்டிட்டு போனான் , நான் எவ்வளவோ வேண்டாம்னு சொல்லியும் என்னை கட்டாயப்படுத்தி கூட்டிகிட்டு போனான் , இடியாப்பம் சாப்பிடறப்போ பக்கத்துல இருந்தவர் , அவரோட பேக்க என்கிட்ட குடுத்திட்டு கொஞ்சம் பார்த்துக்கோங்கனுட்டு போனாரு , அவரு 15 நிமிஷம் ஆகியும் வரல , விஜயும் அவசராமா கிளம்பணும்னு கிளம்பிட்டான் '' தண்ணீரை முழுங்கியபடி பேசினார் .
'' திடீர்னு போலீஸ் உள்ள வந்தாங்க , எல்லாரையும் சோதனைப்போட்டாங்க , அப்போ என்கிட்ட இருந்த அந்த ஆளோட பேக்க சோதனை போட்டாக்க அதுல பூரா வெடிகுண்டு !!!!! சொல்லவே வேணாம் , போலிஸ் என்னை புடிச்சு ஜெயில்ல போட்டாங்க , அதான் நான் முதல்முறை சிறைக்கு போனது , எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புனு சொல்லி கேஸ் நடந்துச்சு , 1 வருஷம் கழிச்சு என் மேல குற்றமில்லனு விடுதலை பண்ணிட்டாங்க , இந்த இடைபட்ட காலத்தில இந்த சோகம் தாங்கம , அப்பாக்கு பக்க வாதம் வந்துருச்சு , என் காதலியும் என்ன விட்டு வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்டாங்க , அம்மாதான் எப்பவும் என்ன வந்து ஜெயில்ல பாப்பாங்க '' சொல்ல கண் கலங்கியது .
'' சாரி சார் மன்னிச்சுருங்க .... '' எனக்கும் மனம் கம்மியது . '' சார் நாம நாளைக்கு பேசலாம் சார் , '' என்று கூற எனக்கும் அதுவே சரி எனப்பட்டது .

அடுத்த நாள் '' வாங்க வினோ , உக்காருங்க , சாரி , நான் நேத்து கொஞ்சம் எமோசனலாகிட்டேன் , '' ,

''சார் பராவால்ல,அதுக்கபுறம் என்னாச்சு சார் '' ஆர்வமாக கேட்டேன் ,
'' இந்த ஒரு வருஷம் ஜெயில்ல இருந்தேன் இல்லைங்களா , அங்க போலீஸ் அடிச்சதுல இந்த வலது கை எலும்பு முறிஞ்சு போயி , அது யாருக்கும் உபயோகமில்லாம போயிருச்சு , ஜெயில்லருந்து வெளிய வந்து , எந்த வேலைக்கும் போக முடியாம , வீட்ல கஷ்டம் , காசெல்லாம் என் கேஸுக்கே செலவு பண்ணிட்டு , அப்பாக்கு முடியாம , எனக்கு ஒரு கையும் இல்லாம , நண்பர்கள இழந்து , காதலிய இழந்து , என் வாழ்க்கைல எல்லாமே போய் கடைசில தற்கொலை பண்ணிக்கலாம்னு போயி அதுலயும் தோல்வி , இந்த மாதிரி நடக்க இந்த சமுதாயத்து மேல கோபம் வந்து பணம் சம்பாரிக்க எனக்கு நல்லா தெரிஞ்ச தொழில்நுட்பத்துலயே கோல்மால் பண்ணி அதுல மறுபடியும் போலிஸ் கிட்ட மாட்டி , நீங்க கூட கேள்வி பட்ருப்பீங்களே , கிரெடிட் கார்டு மோசடினு , அது நான்தான் , அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் ஜெயில் , அங்க என் கூட இருந்த கைதிகிட்டருந்து கம்யூனிசமும் தமிழும் படிச்சேன் , அப்புறம் சிறைல நான் எழுதிய கட்டுரைகள் , உங்க வார இதழ்ல தான வந்துச்சு , அதற்கு கிடைத்த மக்கள் ஆதரவு , அதுக்கப்புறம் கட்சில இடம் , என்னோட அனல் பறக்கும் மேடைப்பேச்சு , அதற்கு கைதட்டிய மக்களின் ஆதரவு , எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சுதுதானே ,''
'' ஆமா சார் '' தலையை ஆட்டியபடி கூறினேன் .
'' இப்ப சொல்லுங்க வினோ சார் , அந்த இடியாப்ப சிக்கன் சாப்பிடாம இருந்தா , என் குடும்பம் , காதல் , நட்பு , பாசம் , என் கனவு எல்லாத்தையும் இழந்துட்டு இப்படி உங்க முன்னால ஒரு உணவுத்துறை அமைச்சரா உக்காந்துருப்பேனா...?''

எனக்கும் அப்படித்தான் தோணியது ..

20 June 2008

உண்மையும் ஜோதிடமும்...........?


'' சந்தேகம் காட்டு தீயைப் போன்றது , அதை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் , இல்லையெனில் அது உன்னையும் உன்னை சார்ந்தோரையும் அழித்து விடும் ,

மனைவியை சந்தேகம் கொண்டால் உன் இல்லறம் பாழ் ,
உறவினரை சந்தேகம் கொண்டால் உறவெல்லாம் பாழ்,
வேலையாளை சந்தேகம் கொண்டால் காரியமெல்லாம் பாழ்,
உன் மேல் சந்தேகம் கொண்டால் உன் வாழ்க்கையே பாழ்,
இறைவனை சந்தேகம் கொண்டால் உன் நாடே பாழ் ''

என்று அந்த ஊருக்கு புதிதாக வந்த அந்த சாக்குருகிரிகிரிசுவாமிகள் சொல்லிக் கொண்டிருக்க அவ்வூரின் அரசன் கைகட்டி வாய் மேல் கை வைத்தபடி மண்டையை மாங்கு மாங்கு என ஆட்டிக்கொண்டிருந்தான். பக்கத்தில் இளவரசியார் தன் தந்தையின் செயலை நொந்த படி முறைத்துக் கொண்டிருந்தார் .

இதைப்பார்த்து அங்க கூடியிருந்த குடியானவர்களிடம் சலசலப்பு , '' பாரடா நம் அரசனை பைத்தியம் போல அந்த சாமியார் சொலவதற்கெல்லாம் , பகுத்தறிவின்றி தலையாட்டுவதை'' என அந்த ஊரில் புதிதாக முளைத்திருந்த சில பகுத்தறிவு இளைஞர்கள் .

'' கயலு அங்க பாருடி நம்ம மன்னரே வணங்கறார்னா சாமி பெரிய ஆளா இருக்கும்டி , அவரு போனதும் , நாமலும் சாமி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிப்போம்டி '' என ஒரு குடியானவனும் , இப்படி பலருக்கும் இதில் பல கருத்து ,

அரசன் என்னவோ விடியற்காலையிலிருந்து புது மணபெண் போல குனிந்த தலை நிமிராதுதான் அந்த சாமியார் அருகிலேயே நின்று கொண்டிருந்தான் . அங்கிருக்க இருக்க இளவரசிக்கோ கோபம் அதிகரித்தபடி இருந்தது . ஒரு வழியாக சாமியார் தன் காலையிலிருந்து சொல்லிக்கொண்டிருந்த சிறிய உரையை முடித்துக்கொண்டார் .

உடனடியாக இளவரசி கோபமாக அந்த மண்டபத்தைவிட்டு வெளியேற , அரசன் சாமியாருக்கு பொன்னாபரணங்களையும்,வைர,வைடூரியங்களையும் பரிசளித்தான் . சாமிகள் முதலில் மறுத்தாலும் பின் வேறு வழியின்றி வாங்கிக் கொண்டார் . அவருக்கு ஆசிரமம் அமைக்க நிலமும் வழங்கினான் . சாமியாரும் எதைக்கொடுத்தாலும் சிரித்த முகம் மாறாமல் பெற்றுக் கொண்டார் .

அரசன் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புகையில் முன்னிரவாகியிருந்தது , அரண்மனையை அடைந்ததும் நேராக இளவரசியின் அறைக்கு விரைந்தார் .

'' ஏனம்மா சீக்கிரமே திரும்பிவிட்டாய் , சுவாமிகளுக்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டதடா கண்ணே , ''

''தந்தையே எனக்கு அந்த சாமியாரை பிடிக்கவேயில்லை , அவர் பார்வையே சரியில்லை , கண்ணாலேயே என் கற்பே சூறையாடிவிடுவார் போல... நீங்கள் வேறு அவர் கூறுவதற்கெல்லாம் ஆமாம் போட்டுக்கொண்டு , எனக்கு வர வர இந்த சாமியார்களை பிடிப்பதே இல்லையப்பா , என்னை மன்னித்து விடுங்கள் ''

'' அவர் மிகவும் நல்லவரம்மா அவரை பற்றி இப்படி அவதூறாக பேசாதே கண்ணே ,'' என அரசன் அவளது தலையை தடவியபடி கூற ,

''வேண்டாம் தந்தையே அந்த ஏமாற்றுகாரனை பற்றி இங்கே பேசாதீர்கள் , மீறி பேசுவாதாக இருந்தால் தயை கூர்ந்து இங்கிருந்து போய் விடுங்கள் '' என இளவரசி கூறிய மறுகணம் அரசனுக்கு கோபம் வந்து அவளது கன்னத்தில் ஒங்கி அடித்துவிட்டு அங்கிருந்து படபடவென வெளியேறினான் .

காலை ஆனதும் அரசன் நேராக சாமியாரை சந்தித்தான் . அவரிடம் இரவு நடந்ததை பற்றி விவரிக்க அவர் அவளது ஜாதகத்தில் கோளாரு இருப்பதாகவும் ஒரு நல்ல ஜோதிடரை அருகி பரிகாரம் கேட்குமாரும் அறிவுரை கூறினார் . அரசன் நாட்டின் மிகச்சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து அவளது ஜாதகத்தை ஆராய பணித்தான் . அவர்கள் கூடி இளவரசிக்கு மணமுடித்து வைத்தால் பிரச்ந்தசனை தீருமென்றனர் . அரசனும் சுயம்வரம் ஏற்பாடு செய்தான் .

இளவரசிக்கு இவ்விசயம் தெரிந்தவுடன் நேராக அரசனிடம் சென்றாள் . தனக்கு இப்போது மணமுடிக்க வேண்டாம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்றும் கூற , அரசன் ஜோதிடம் குறித்தும் விளக்கினான் . இளவரசிக்கு திருமணத்தை நிறுத்த என்ன செய்வதுன்று யோசித்தாள் , சட்டென ஒரு யோசனை ,

''தந்தையே நீங்கள் கூறும் ஜோதிடத்தின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை , உங்களால் ஜோதிடம் உண்மையென நீருபித்தால் நான் நீங்கள் யாரை மணமுடிக்க சொன்னாலும் எனக்கு சரி , ஏனென்றால் போன முறை நீங்கள் போருக்கு சென்ற போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என எத்தனை பேர் ஆருடம் கூறினர் , கடைசியில் என்ன ஆயிற்று '' என பேசிக் கொண்டிருக்கையிலேயே அரசனுக்கு போரை நினைவு படுத்தியதனால் ஒரு மாதிரி ஆகிவிட்டது .

'' சரி அம்மா , நீ இந்த போட்டியில் வென்றால் , திருமணத்தை தள்ளி வைக்கின்றேன் , சரியா?''

இதற்கு மேல் அங்கிருந்தால் தன்னை போரைப்பற்றி கூறி அசிங்கப்படுத்தி விடுவாள் என திரும்பி பார்க்காமல் நடக்காலானார் . இளவரசிக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை , அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை ஜோதிடம் மீது .

ஊரெங்கும் அறிவிக்கப்பட்டது அரசனின் இந்த போட்டி குறித்து , அரசன் இந்த போட்டியில் ஒரு பிரச்சனையை வைத்திருந்தான் இந்த போட்டியில் வென்றால் பரிசு தோற்றால் தலை மண்ணில் என , இதனால் ஊரின் பெரிய ஜோதிடர்களெல்லாம் போட்டியில் கலந்து கொள்ள முன் வரவில்லை , அரசனுக்கு கவலையாகவும் ஜோதிடம் மீதான நம்பிக்கையும் குறைய ஆரம்பித்தது . இளவரசி மகிழ்ச்சி தாங்காது தன் தோழிகளுக்கு விருந்து வைத்து மகிழ்ந்தாள் .

ஒரு மழை வரும் காலை வேளையில் ஏழை ஜோதிடன் ஒருவன் அரசவைக்கு வந்தான் , மழையால் அன்று பணிக்கு பல அலுவலர்களும் வராததால் எளிதாக குறைந்த கையூட்டிலேயே அரசவை வரை வந்துவிட்டான் . அரசன் அவனது வருகையால் பெருமகிழ்ச்சி அடைந்து அவனிடம் போட்டி குறித்த விதிமுறைகளை தானே விளக்கினார் . அவனும் மகிழ்ந்தவானாக அனைவர் முன்னும் நின்று வணங்கி இரண்டு நாட்கள் கழித்து ஜோதிடத்தை பற்றி நிரூபிப்பதாக கூறி விடை பெற்றான் . இளவரசிக்கு இன்னும் நம்பிக்கை குறையவில்லை .

இரண்டு நாள் கடந்தது , அரசன் வருவதற்கு முன்னதாகவே வந்து ஜோதிடன் காத்திருந்தான் , அரசன் வந்ததும் அவலை வணங்கி பேச ஆரம்பித்தான் ,

'' அரசே வணக்கம் , இன்று ஜோதிட சரித்திரத்தில் ஒரு முக்கியமான நாள் , இனி வரும் சந்ததியினருக்கு ஜோதிடத்தின் அருமையை புரியவைக்கப் போகும் பொன்னான நாள் ''

இடைமரித்த அரசன் '' அது இருக்கட்டும் ஜோதிட பெருந்தகையே.. விசயத்து வாருங்கள் '' என்று கூற , அவன் மேலும் தொடர்ந்தான்,

''அரசே எனக்கு ஒரு மூட்டை 10000 பொற்காசுகள் தேவை ''

''அடப்பாவி பரிசே 5000 பொற்காசுகள் தானே''

''அது எனக்கில்லை அரசே நம் ஆராய்ச்சிக்கு , நீங்கள் இந்த திடீர் இராஜயோகம் பற்றி கேள்வி பட்டதுண்டா , அதை உங்களுக்கு விளக்க அந்த அளவு பணம் தேவை அரசே , ஏனென்றால் அந்த யோகம் ஒருவனை ஒரே நொடியில் கோடிசுவரணாக்கிவிடும் அரசே , நான் என்ன அதற்க்காக கோடி பொன்னா கேட்டேன் , உங்களால் முடியாதென்றால் நான் கிளம்புகிறேன் அரசே '' என கிளம்ப ,அரசன் '' கொஞ்சம் குறைத்துக்கொள்ளக்கூடாதா ,'' என்று கெஞ்சினான் , ''அதெல்லாம் முடியாதரசே , வேண்டுமானால் 9000 பொன் கொடுங்கள் ''

'' சரி விடு உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் 7000 பொன் கொடுத்து தொலைக்கிறேன் '' என காலில் சாணியை மிதித்தவனை போல முகத்தை வைத்துக்கொண்டு கூறியபடியே , மனதிற்குள் தன் மகளை திட்டிக்கொண்டிருந்தான்.

அரசனையும் இளவரசியையும் அழைத்து கொண்டு நடுக்காட்டிற்கு சென்றான் , '' அரசே இப்போது இந்த பணமூட்டையை இந்த பாதையில் இருக்கும் மரத்தடியில் வைத்து விட்டு நாம் மறைவாக நின்று கவனிப்போம் , நாம் மறைந்திருந்து பார்ப்போம் இதை யார் எடுக்கிறார்களோ அவரது ஜாதகத்தை மற்ற ஜோதிடர்களிடம் கொடுத்து ஆராய்வோம் , அவனுக்கு திடீர் இராஜயோகம் இல்லையெனில் நான் தோற்றதாக ஒப்பு கொள்கிறேன் '' . அரசனும் சரியெனக்கூற அங்கே அந்த மூட்டை வைக்கப்பட்டது ,

அந்த வழியே பத்து பதினைந்து பேர் வந்தும் யாருமே அந்த மூட்டையை கவனிக்கவில்லை ,

அந்த வழியே வந்த ஒரு வயதான நபர் காலில் ஒரு முள் குத்துவிட அந்த மரத்தடியில் ஒதுங்கியவருக்கு அந்த மூட்டை கண்ணில் பட அவர் அதை எடுத்து பிரித்து பார்க்கலானார் , மறைந்திருந்த அரசனும் ஜோதிடரும் வெளியே வந்து அந்த பெரியவரை அழைத்துக்கொண்டு

அரண்மனைக்கு சென்று அவரது ஜாதகத்தை வாங்கி ஆராய்ந்தனர் அவருக்கு இராஜயோகம் இருப்பதாக பல ஊரின் பெரிய ஜோதிடரும் முடிவறிவித்தனர் . இளவரசியால் இதற்கு மேல் என்ன செய்வெதென்று அறியாது கண்கலங்கினாள் . மீண்டும் சுயம்வரம்.................

_____________________________________________________________________________________

இந்த கதையை இப்படியே முடிக்க நினைப்பவர்கள் மேலே தொடர வேண்டாம்

_____________________________________________________________________________________

இதற்கு பிறகு அந்த ஏழை ஜோதிடன் வீட்டிற்கு 5000 பொற்காசுகளுடன் வீட்டிற்கு கிளம்பினான் ,

வீட்டில் மனைவிக்கோ கணவனை நினைத்து பெருமை தாங்கவில்லை ,

''ஏங்க எப்படிங்க பெரிய பெரிய ஜோதிடர்களாலேயே முடியாத விசயத்தை நீங்க சாதிச்சீங்க ''

என கணவனிடம் வினவ அவன்

'' காமாட்ச்சி , அதுல பாரு இந்த ஜோதிடத்தை விளக்கின விசயம் எல்லாமே நான் ஏற்பாடு செஞ்ச நாடகம் , அரசன் கிட்ட 2 நாள் கேட்டேன்ல , அந்த 2 நாளும் , என் நண்பர்கள்கிட்ட சொல்லி அந்த காட்டு வழியா யாரையும் வரவிடாம பண்ணி அந்த மரத்தில் அடையாளம் வைத்து , உன் அப்பாவ விட்டு அந்த வழியா வரவழைச்சு சரியா அந்த இடத்திற்கு வரும் போது கால்ல முள் குத்தின மாதிரி நடிக்க வைச்சு , அதன் பிறகு நம் ஜோதிட சங்கத்தில் உள்ள எல்லாரையும் அழைத்து அரசனின் அகந்தையை பெரிதாக்கி பேசி , அவர்கையும் இந்த திட்டத்தில் துணையாக்கி , கடைசியில் அரசனை ஏமாற்றி பெற்றதடி கண்ணே இவ்வெற்றி , இராஜயோகம் உன் தந்தைக்கல்ல , எனக்கடி , இதோ என் ஜாதகத்தை பார் , ஹாஹாஹாஹாஹா''
என்று கூறி பலமா சிரித்தான் .
_____________________________________________________________________________________

இக்கதையை இப்படியே முடிக்க நினைப்பவர்கள் முடித்துக்கொண்டு தொடர்ந்து படிக்க வேண்டாம்

_____________________________________________________________________________________

தீடிரென வீட்டின் உள்ளே மறைந்திருந்த மன்னனும் காவலாளிகளும் இளவரசியும் வெளியே வந்தனர் . '' இளவரசி நீ கூறியது முற்றிலும் உண்மையம்மா....இந்த ஜோதிடர்களும் ஜோதிடமும் பொய்யம்மா , என்னையே ஏமாற்ற துணிந்த இவனை , கைது செய்து நாளை சூரியன் உதிக்கையில் கழுவிலேற்றுங்கள் ''

என்று ஆணையிட , ஜோதிடன் இழுத்து செல்லப்பட்டான் .
இளவரசி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள்.
_____________________________________________________________________________________
இந்த கதையின் முடிவில் இத்தோடு திருப்தி அடையாதவர் மட்டும் மேலே தொடராலாம்....
_____________________________________________________________________________________

கைது செய்யப்பட்ட அன்று இரவு , சிறைச்சாலை . நாட்டில் ஜோதிடம் தடை செய்யப்பட்டு
ஊரில் இருந்த எல்லா ஜோதிடர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் . நம் ஜோதிடனும் அவனது மாமனாரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் .

'' மாமா நான் என் ஜாதகத்த நல்லதான் பார்த்தேன் , எனக்கு இராஜயோகமு இருந்துச்சே , பிறகு எப்படி இந்த மரண யோகம் வந்ததுனு எனக்கு இன்னும் புரியவில்லை மாமா,'' என்று தன் மாமாவிடம் நொந்து கொண்டே தன் வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டிருந்தான்.

'' மாப்பிள்ளை , என்னை மன்னித்துவிடுங்கள் , நீங்க என் பொண்ணோட ஜாதகத்த பார்த்தீங்களா?''

'' 2 நாள் முன்னால கூட பார்த்தேனே , அவளுக்கு எந்த குறையிம் இல்லை மாமா ''

''அது அவளோட ஜாதகம் இல்லை மாப்பிள்ளை , அது போலி , அவளோட உண்மையான ஜாதகம் இதுதான்'' என தன் இடுப்பில் சொருகியிருந்த ஓலையை நீட்ட அதை வாங்கி பார்த்த

ஜோதிடன் கொலை வெறியோடு தன் மாமாவின மீது பாய்ந்தான்.
____________________________________________________________________

கதை இத்தோட முடிந்தது . இதுக்கு மேலே தொடர்ந்தால் வாசகர்கள் என்னை கழுவிலேற்றிவடுவார்கள் .
____________________________________________________________________
டிசுகி : மூலக்கதை சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்தது _______________________________

19 June 2008

அலிபாபாவும் அபத்த சினிமாக்களும்.................1



சினிமா என்றாலே எல்லோருக்கும் ஒரு அபரிமிதமான ஆர்வம் எப்போதும் உண்டு , சின்னக்குழந்தை முதல் பல்லில்லா பாட்டி வரை அனைவரையும் கவரும் சினிமா நம் அலிபாபாவை மட்டும் ஏனோ கவருவதில்லை , அவன் இது வரை மசாலா முதல் மங்கலான வெளிச்சத்தில் வருகின்ற உலகசினிமா வரை பார்த்திருக்கிறான் , ஆனால் அவனுக்கு மட்டும் எதுவுமே பிடிப்பதில்லை. எந்த சினிமா பார்த்தாலும் ஆயிரம் குறைகள் சொல்வான் . அது சுவாரசியமாகவும் , ரசிக்கும் படியும் , கலகலப்பாகவும் , சமயங்களில் ஆபாசமாகவும் எரிச்சலூட்டக்கூடியதாகவும் இருக்கும் . அவனுக்காகத்தான் இப்போது காத்திருக்கிறேன் .



வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்தால் அலிபாபா '' வாடா அலிபாபா '' , '' ஹாய் மச்சி , என்னடா ரொம்ப நேரமா வெயிட்டிங்கா!! மன்னிச்சுரு மச்சி , தசாவதாரம் போய்ட்டு இப்பதான் வரேன் '' என்றபடியே சோபாவில் அமர்ந்தான் . '' என்னடா விட்டுட்டு போயிட்ட? '' , என்று ப்ரிட்ஜை திறந்து ஒரு பாட்டில் தண்ணீரை கொடுத்தேன் .


''எப்படிடா படம் '' என்றேன் , தண்ணீரை குடித்த படி '' டேய் ___ வேற எதுனா பேசுடா ____ '' என்றான் . எனக்கு அவன் வாயிலிருந்து வந்த கெட்ட வார்த்தைகளிலேயே புரிந்தது .


அவனாகவே பேசட்டும் என நான் காத்திருக்க அவனாகவே ஆரம்பித்தான் ,''மச்சி இன்னும் எத்தினி படத்துலதான் இந்த டாக்டர்கள கோமாளி ஆக்குவாங்கனு தெரியலடா''ஆஹா ஆரம்பிச்சுட்டான் என எண்ணிக்கொண்டு அவனை கவனிக்க தொடங்கினேன் .



'' மச்சி இந்த தசாவதாரத்துல '' என அவன் ஆரம்பிக்க, நான் '' மச்சி வேணான்டா ஏற்கனவே பல பேரு அந்த படத்த பத்தி போதும் போதுங்கற அளவுக்கு விளக்கிட்டாங்க வேணான்டா , என்ன விட்று'' என நான் எழுந்து ஓட '' மச்சி நான் அந்த படத்தப் பத்தி சொல்ல வரலடா , அந்த படம் பார்த்த உடனே வேற ஒன்னு தோணிச்சுடா நாயே அதுக்குள்ள , எதோ ராமுவ பார்த்த கலைஞராட்டமா ஓட்ற..'' என்று என்னை பிடித்து உட்கார வைத்தான் .



ஸ்ஸ்ஸப்பா அப்ப இது அதில்லையா என பெருமூச்சு விட்டபடி '' அப்படி என்னடா மேட்டரு '' என்றேன் .



'' மச்சி , நீ நிறைய தமிழ் படங்கள்ல கவனிச்சிருக்கியா , இந்த டாகடருங்க இது மெடிக்கல் மிராக்கிள்னு சொல்றத , ஒரு நோயாளி பிழைச்சிட்டான்னா முதல்ல பேசண்டயே எழுப்பி விட்டு சார் நீங்க எப்படி பிழைச்சிங்கன்னே தெரியல , இட்ஸ மெடிக்கல் மிராக்கிள்ம்பாரு , அதுல பாரு நம்ம படங்கள்ள ஹிரோவோ இல்ல அவன சார்ந்தவங்களுக்கோ கேன்சர், மூளைல கட்டி , கிட்னில கல்லு, வயித்துல மண்ணுனு எது இருந்தாலும் வில்லன் கரீட்டா அத்ததான் சுடுவான் , சுடும் போது அதும் பிச்சுகிட்டு போயிடுமாம் , அந்த சீனுக்கு முன்னாடி சீன்லதான் டாக்டர் சொல்லுவாரு அந்த ஆபரேசனுக்கு 10 லட்சம் செலவாகும்னு , கடைசில பார்த்தா சிம்பிளா வில்லன் ஆபரேசன ஃப்ரீயாவே முடிச்சு குடுத்துருவாரு . அத விட கொடுமை இந்த 5 நிமிஷம் லேட் மேட்டரு , '' என சொல்லி முடித்து பாட்டில் தண்ணீரை குடிக்க ஆரம்பித்தான்.



'' அது என்னடா 5 நிமிஷ மேட்டரு , எதுனா கிளுகிளு விஷயமா , சொல்லுடா என் பிளாக்ல போட்டுக்கறேன் , இப்பலாம் அதுக்குதான் மவுசு '' என்று ஆர்வமாக கேட்க ,



'' தூ.... அதில்லடா , நம்ம டாக்டருங்க விசயம்தான் , நானும் பார்த்த வரைக்கும் எல்லா சினிமாலயும் அதென்னவோ ஹீரோ யாரையாவது காப்பாத்தி ஆஸ்பத்திரிக்கு கூட்டினு போனா , எல்லா டாக்டரும் சொல்லி வச்சமாதிரி சொல்ர வசனம் , சார் 5 மினிட்ஸ் லேட் ஆகிருந்தா கூட பேஸன்ட உயிரோட பார்த்திருக்க முடியாதுன்னு , அப்பறம் அந்த பேஸன்ட் கிட்டயும் அவரே ஹீரோவ அறிமுகப்படுத்துவார் , இவருதாங்க உங்கள காப்பாத்தினாரு , நீங்க நன்றி சொல்றதுனா கூட இவருக்கே சொல்லுங்கனு , இவரு சரிநான நேரத்துக்கு உங்கள இங்க கொண்டு வரலனா உங்கள உயிரோட பர்த்திருக்க முடியாதுனு பேஸன்ட பயமுருத்துவாரு , நம்ம டைரக்டருங்கல்லாம் டாக்டருங்கள ஏன் இப்படி கோமாளி மாதிரியே காட்றாங்கனு புரியல , அட டாக்டருங்கள இதோட விட்டா பராவால்ல இன்னும் நிறைய காமெடிலாம் இருக்கு , அதும் அந்த உண்மைனு ஒரு விசயமிருக்கே...'' என சொல்லி கொண்டிருக்கும் போது அவன் அலைப்பேசி மணி அடித்தது , எல்லோரும் இசையாக அழைப்பு மணி வைத்திருந்தால் இவன் ஏதோ வசனம் ( நல்லத நாலு பேருக்கு சொல்லனும்னு ..... என வி.எஸ்.ராகவன் பேசுகிறார் ) வைத்திருக்கிறான் . அலைபேசியில் பேசிவிட்டு அடுத்து என்ன சொல்ல போகிறானோ என ஆர்வமாக இருந்த என்னிடம் '' ஸாரி மச்சி , அவ பீஸாஹட்ல வெயிட்டிங்கடா , அர்ஜென்டா போகனும்டா , இந்த வீக் ஃபுல்லா டே சிப்டுடா , அடுத்த வீக் மீட் பண்ணுவோம்'' என கண்ணிமைக்கும் நேரத்தில் சொல்லிவிட்டு பல்சரை நோக்கி ஒடினான் .


அது என்ன உண்மை விசயம் , சரி அடுத்த வாரம் அலிபாபா வரட்டும் கேட்போம் என எண்ணிய படி டிவியை போட கலைஞரும் , ராமுவும் பிரிந்துவிட்டார்கள் என சன் செய்தி சொல்லிக்கொண்டிருந்தது , அப்படியே அதில் மூழ்க ஆரம்பித்தேன்.......


__________________________________________________________________________________________


அடுத்த வாரம் வருவான்............................

16 June 2008

தசாவதாரம் சமைப்பது எப்படி : சமையல் குறிப்புகள்

இன்று நமது சமையல் பகுதியில் படிக்க இருப்பது , புதிதாக வெளியாகியுள்ள தசாவதாரம் என்கிற விலையுயர்ந்த டிஷ் . இந்த பதார்த்ததோட சிறப்பு என்னவென்றால் ஒரே டிஷ்ஷில் 10 டிஷ் , உதாரணமாக ஒரே இடுகையில் 10 இட்டலிகள் போல , இந்த டிஷ் எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போமா.......

பட்ஜெட் : குறைந்தது 80லிருந்து 100 கோடி வரை செலவாகலாம் , அதனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனைப்போன்ற இ.வாய பைனான்சியரை கவுத்து விடுவது நன்று . ( இந்த பட்ஜெட்டில் சமைப்பவருக்கு கூலி 30 கோடி!!!!! )

தேவையானவைகள் :
1. 100 கிலோ மைதா மாவு ( 10 விதமாக சமைக்க 10கிலோ வீதம்)
2.கொஞ்சம் அழகு சாதனப்பொருட்கள்
3.ஆன்மீகம்,பகுத்தறிவு,அறிவியல் மற்றும் தற்கால அரசியல் பற்றிய அறிவு அவசியம்
4.குறைந்த விலையில் கிராபிக்ஸ் செய்ய 10 பேர்
5.கதை,வசனம் எழுத அறிவியல்,நகைச்சுவை,வரலாறு கொஞ்சம் தெரிந்த 5 பேர்.( பதார்த்தம் வெளியிடுகையில் அவர்களது பெயர் எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது .)
6.நாம் என்ன சொன்னலும் கேட்க ஒரு பெரிய டைரக்டரு . ( அவர் பெயர் சும்மாவவது வெளியீட்டில் தெரிவித்தல் நலம் )
அவ்ளோதான்.

செய்முறை :

முதலில் நமக்கு 10 வித பதார்த்தங்களும் என்னென்ன வடிவத்தில் வேண்டும் என்பதை தீர்மானிக்கவும் , 10 விதமும் முடிவான பின் அதற்கேற்றாற் போல நம் கதாசிரிய கண்மணிகளிடம் சொல்லி ஒரு கதை,வசனம் தயார் செய்ய சொல்லவும் ( அவர்களும் எப்படியாவது கதை போல ஒன்றை தந்து விடுவார்கள் ) , அந்த கதையை வாங்கி ஆங்காங்கே கொஞ்சம் அரசியல் தூவவும் .

இப்போது வாங்கி வைத்திருக்கும் மைதா மாவை முகத்தில் வித விதமாக பூசி அழகு பார்க்கவும் , அதில் சிறந்ததாக 10ஐ தேர்ந்தெடுத்து வைத்து கொள்ளவும் . திரைக்கதையை தயார் செய்ய பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை , ஏற்கனவே தயாரித்த கதையை பிச்சு போட்ட புரோட்டவைப் போல ஆக்கிவிட்டால் திரைக்கதை தயார் . நம்மை நாமே புகழ்ந்து ஒரு பாடல் தயாரிக்கவும் . நம்ம டைரக்டரை அந்த பாடலில் நடனமாட விடவும் கொடுத்த காசுக்கு அவர் அதுவாவது செய்யட்டும் . அது இந்த பதார்தத்தை உண்பவர் கடைசியில் நம்மை பற்றி சிலாகிக்க உதவும் . இதையெல்லாம் ஊர் ஊராக சென்று படமாக்கவும் .( 10 விதமாக மைதா மாவை முகத்தில் அப்பிக்கொள்ள மறக்க வேண்டாம் ) . அதை அப்படியே வைத்து கொள்ளவும் (குறைந்தது 6 மாதம் ).

இப்பொது உங்கள் புதிய தசாவதாரம் டிஷ் தயார் . சரி இதை இப்படியே விற்றால் ஒருவரும் வாயில் கூட வைக்கமாட்டார்கள் , அதனால் அந்த பண்டத்தை விற்க ஜப்பானிலுருந்து ஜாக்கிசனையும், மும்பையிலுருந்து அமிதாப்பையும் காசு கொடுத்து அழைத்து வரவும் ( எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, நம்ம கைக்காசா போகிறது ) , நம்மூரில் இலவசமாகவே இது போன்ற விடயங்களில் ஆர்வமுள்ள தலைவரையும் அழைத்துக்கொள்ளவும் . 5 கோடி செலவில் விழா எடுத்து பண்டத்தை வெளியிடவும் . இந்த பதார்த்தத்தை ஊரில் உள்ள எல்லா கடையிலும் விற்று விடவும் . பிறகு ஊரின் பெரிய கடையில் நம்மைப்போலவே சமைப்பவர்களை அழைத்து ( இதற்கு காசு கொடுக்க தேவையில்லை ) இந்த பண்டத்தை பறிமாறவும் , அவர்களும் கண்ணை மூடிக்கொண்டு சூப்பர் என்பர் ( எல்லாரும் நம் ஆட்கள் அல்லவா ).
இவ்வளவும் செய்தால் நம்ம தமிழ் மக்கள் ஆர்வ மிகுதியாலேயே முதல் 10 நாட்களுக்குள் பண்டத்தை வாங்கி தின்று தீர்த்து விடுவார்கள் .( நாமும் போட்ட காசை எடுத்து விடலாம் )
10 நாட்களுக்கு பிறகு நமக்கு விற்றால் என்ன விற்கவில்லையென்றால் என்ன .

இதை தின்று வாந்தி, வயிற்றுபோக்கு வந்தால் நம்மவர்கள் என்ன செய்து விடுவார்கள் ,
படித்தவர்கள் பிளாக் எழுதுவர் , படிக்காதவர் டீக்கடையில் 2 நாள் பேசுவர் . அதன் பிறகு நம் அடுத்த படைப்பு குசேலனுக்காக நாக்கை 4 இன்ச் நீட்டிக்கொண்டு அலைய ஆரம்பித்துவிடுவர் . நமக்கு ஆகிற பிஸினஸ் ஆகி கொண்டேதான் இருக்கும் .

நன்றி நேயர்களே மீண்டும் குசேலன் சமைப்பது எப்படியில் சந்திப்போமா...

___________________________________________________________________________________________

டிசுகி : இப்பதிவு தசாவதாரம் படத்தின் விமர்சனம் அல்ல .

12 June 2008

தாலாட்டு பாடல்

ஆராராரிராராரோ ............................

ஆறு லட்சம் வண்ணக்கிளி ,

செம்பவழ தொட்டிலிலே...................

சீராளா கண்ணுறங்கு ,

பச்சை வண்ணத்தொட்டிலிலே......................

பாலகனே கண்ணுறங்கு

குறுத்து வாழை போல..................

குதித்தாடும் பாலகனே,

மாம்பழ மேனியனே....................

மயங்கி நீயும் கண்ணுறங்கு

ஆராராரிராராரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி

காலையில் என் தங்கையின் குழந்தையை அவள் இந்த பாடலை பாடி தூங்க செய்ய , இந்த பாடலை எங்கோ கேட்டது போல் இருந்தாலும் , அதை பற்றிய விபரம் தெரியவில்லை, தங்கையிடம் கேட்டபோது தன் பள்ளியில் படித்ததாக சொன்னாள் .

பாடலை கேட்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது, அதனால் பதிவிட்டு விட்டேன் .

எத்தனைதான் புது புது இசையும் இசைக்கருவிகளும் வந்தாலும் , தாலாட்டு பாடலுக்கு இணை எதுவுமே இல்லை.

11 June 2008

மின்னல் வேக தொடர் : மரணத்தின் வாயிலிலே - 1

மரணத்தின் வாயிலிலே-1



''சார் , நல்லாத்தான் சார் இருந்தான் , என்னாச்சுனு தெரில திடீருனு மார்ல கைய வச்சுகிட்டு மயங்கி விழுந்தவன் , எழவே இல்ல சார் , அவன மாதிரி ஒரு நண்பன் இனிமே எனக்கு கிடைக்க மாட்டான் சார் '' எனக் கண்களில் நீர் கசிய கூறிய படி அந்த இளவு வீட்டின் வாசலில் இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அவனது மேனஜர் சிவக்குமாரிடம் விளக்கிக் கொண்டிருந்தான் குமார் , அவன் இறந்து போன கிஷோர் உடன் பணிபுரிபவன் . இருவரும் ஒரே நிறுவனத்தில் மூன்று வருடங்களாக விற்பனை அதிகாரிகளாக வேலை பார்த்து வந்தனர் . எப்போதுமே இருவருக்கும் பலமான போட்டி நிலவும் , இருவரும் நேரில் சந்தித்தால் பேசிக்கொள்வதே அபூர்வம் .



'' நல்ல வேலைக்காரன் சார்!!! எவ்ளோ டார்கெட் குடுத்தாலும் சட்டுனு முடிச்சிட்டு வந்து அடுத்து என்னனு கேக்கறவன் சார் , வீ ரியலி மிஸ் ஹிம் சார் , ஐயம் வெரி சாரி சார் '' , சிவக்குமார் வருத்தத்துடன் கிஷோரின் அழுது கொண்டிருந்த தந்தை முத்துராமனிடம் ஆறுதலாக பேசினார் . தினமும் காலை,மாலை இரு வேளையும் கிஷோரைத் திட்டாவிட்டால் அன்றைய பொழுது சிவக்குமாருக்கு முழுமை பெறாது .



'' தவமாதவமிருந்து பெத்த புள்ளங்க , எங்களுக்கு கல்யாணமாயி ஆறு வருஷம் கழிச்சுப் பொறந்தவன் , எந்த கெட்ட பழக்கமும் இல்லங்க , இப்படி ஒருத்தன புள்ளயா பெத்ததுக்கு போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணிருக்கணும்ங்க !!!!! '' என சினிமா பாணியில் தன் பக்கத்து வீட்டு நண்பரிடம் உருகினார் தந்தை முத்துராமன் . அவர் ஒரு சினிமா கதாசிரியர் . மகனுக்கென்று தன் வாழ் நாளில் ஒன்றும் செய்யாதவர் , கிஷோர் வளர்ந்தது அவன் தாயின் உழைப்பில்தான் .



கிஷோரின் காலடியில் அவனது தாய் அமர்ந்து கொண்டு அந்த அறையே அதிர அழுது கொண்டிருந்தாள் , அவளிடம் பலரும் பேச முயன்றும் அவள் யாரிடமும் பேச மறுத்தாள் .



பிணத்திற்கு செய்ய வேண்டிய எல்லா சாங்கியங்களும் கிஷோருக்கும் செய்யப்பட்டது , அந்த சாவிற்கு வந்த கூட்டத்தில் அவனது காதலி சீலாவும் இருந்தாள் , ஆனால் தன் வருங்காலத்தை எண்ணியவளாய் மறைவாய் , தன் அடையாளத்தை காட்டாமல் , கூட்டத்தோடு கூட்டமாய் கண்களில் கண்ணீருடன் .



கிஷோரின் உடல் அவ்வூரின் வீதிகளின் வழியே எடுத்துச் செல்லப்பட்டது . வழியெங்கும் பலர் அவனது உடலைப்பார்த்து பாவமென்றும் , சிறு வயதென்றும் கூறியபடி நகர்ந்தனர் .



சுடுகாடு , விறகுகள் அடுக்கப்பட்ட அந்த மேடையில் கிஷோர் படுக்க வைக்கப்பட்டான் , அவன் மேலும் விறகுகள் அடுக்கப்பட்டன , அவனது தந்தைக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது , சில சம்பிரதாயங்களுக்கு பிறகு அவர் தோளில் பானை வைக்க பட்டு அதில் ஒரு துளையுமிடப்படுகிறது . நீர் கொஞ்சம் கொஞ்சமாக தரையில் விழ முத்துராமன் தன் மூன்றாவது சுற்றையும் முடித்தார் . ஒரு கற்பூரத்தை எடுத்து கிஷோரின் தலைமாட்டில் வைத்து பற்ற வைக்க , அந்த தீயின் ஜீவாலையிலிருந்து தன் கையிலிருந்த விறகை பற்ற வைத்து அதனை அந்த விறகு மேடையின் மேல் பற்ற வைக்க , அது கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாக பரவத்தொடங்கும் போதுதான் அங்கிருந்த அனைவரையும் உறைய வைக்கும் அது நடந்தது .



எரிந்து கொண்டிருந்த கட்டைகளுக்கு நடுவே இருந்து அலறிய படி கிஷோர் எழுந்து ஓடினான் ...........................




தொடரும்
___________________________________________________________________



09 June 2008

சென்னைப்பதிவர் சந்திப்பு 08.06.2008 : சில கேள்விகளும் பதில்களும்

சென்னையில் 08.06.2008 அன்று நடந்த வலைப்பதிவர் சந்திப்பு குறித்த ஒரு கேள்வி பதில் ஆய்வறிக்கை :





கேள்வி : சந்திப்பு எங்கே எப்போ எதுக்கு நடந்தது ?
பதில் :
சென்னை சந்திப்பு 08.06.2008 அன்று மாலை 5.30 மணியிலிருந்து 8.30 மணிவரை , மெரினா காந்தி சிலை பின்புறமுள்ள வரண்ட குளத்தில் , நண்பர் பாஸ்டன் பாலா அவர்களது வருகையை முன்னிட்டு நடந்தது .

கேள்வி : இந்த சந்திப்புக்கு யாரேல்லாம் வந்தாங்க?
பதில் :
பாஸ்டன் பாலா, லக்கிலுக்,டோண்டு ராகவன் , பைத்தியக்காரன் , மருத்துவர் புருனோ , வழக்கறிஞர் சுந்தர்ராஜன் , கடலையூர் செல்வம் , சுகுணா திவாகர் , மலர்வனம் லட்சுமி , கென் , முரளிக்கண்ணன் , ஜ்யோவ்ராம் சுந்தர் , வளர்மதி , ஜிங்காரோ ஜமீன் , வலைப்பதிவர் உதவிப்பக்கம் உதவி விக்கி , பாலபாரதி மற்றும் நான் .

கேள்வி : என்னல்லாம் பேசினீங்க ?
பதில் :
1 . அடுத்த வார தமிழ்மண நிர்வாகிகளுடனான சென்னை சந்திப்பில் அவர்களிடம் முன் வைக்க வேண்டிய பிரச்சனைகள்.
2. வலையுலகில் பாலியல்
3. பூங்கா இதழ்
4. வலைப்பதிவருதவி
5.சூடான இடுகைகளும் பின்னூட்டமும்.
6.உண்மைத்தமிழன் பின்னூட்ட பிரச்சனை
7.தமிழ்மண குறிச்சொற்கள் மற்றும் வகைப்படுத்துதல் பிரச்சனை

கேள்வி : சுவாரசியமான சம்பவங்கள் ?
பதில் :
சந்திப்பு தொடங்கி 10 நிமிடத்திலேயே மழை பெய்ய தொடங்கிவிட்டது , பதிவர்கள் மழைக்கு ஒதுங்க இடமின்றி கலைக்கப்பட்ட எறும்புக்கூட்டம் போல சிதறி ஒடினர் . அங்கு அருகிலிருந்த மரம்தான் பாதி பதிவர்களை காப்பாற்றியது .
இந்த அடை மழையிலும் டோண்டு மட்டும் கடலை நோக்கி நடந்து போய் அலையோடு விளையாடிக்கொண்டிருந்தார் . சில பதிவர்கள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி புகைப்பிடித்தனர் .
மழை நின்ற பிறகு மீண்டும் பழைய இடத்துக்கே பதிவர்கள் திரும்ப மீண்டும் சந்திப்பு தொடர்ந்தது .

கேள்வி : சாப்பிட குடிக்க எதாவது குடுத்தாய்ங்களா?
பதில் :
மஞ்சள் நிற இனிப்பும் , முறுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் தரப்பட்டது . குடிக்க குடிநீருடன். சந்திப்பு முடிந்த பின் அனைவருக்கும் தேநீர் தரப்பட்டது . ( உபயம் : பாலா & பாலா )

கேள்வி : ரொம்ப எதிர் பார்த்தும் யாரெல்லாம் வரல ?
பதில் :
நான் எதிர்பார்த்து வராதவங்க , வினையூக்கி,ஜிம்ஷா மற்றும் உண்மைத்தமிழன்

கேள்வி : மொத்தமா 20 பேருதான் வந்திருப்பாங்க போலருக்கே , சென்னைல அவ்வளோதான் பதிவருங்களா?

பதில் :

:-)

கேள்வி : இந்த பதிவர் சந்திப்பு அரேஞ்ச் பண்றதுலாம் யாரு ? அதுனால அவங்களுக்கு என்ன லாபம் ?
பதில் :
பதிவர் சந்திப்பு ஏற்பாடு திரு.பாலபாரதி அவர்கள் , அவருக்கு நன்றி , இது போன்ற சந்திப்புகளால் அவருக்கு எதுவும் நன்மை இருப்பதாக தெரியவில்லை .

கேள்வி : அப்ப யாருக்குதான் லாபம் ?
பதில் :
லாபம் , நட்டம் பற்றி பேச இது வியாபாரம் இல்லை , இது நம் உணர்வு , ஆவல் மற்றும் எண்ணங்கள் சார்ந்த விடயம் .

கேள்வி : புதுப்பதிவர்கள் இது மாதிரி சந்திப்புக்கு வர தயங்கறாங்களாமே ?
பதில் :
இருக்கலாம் . அவர்களுக்கு ஆரம்ப காலத்தயக்கம் இருக்கத்தான் செய்யும் . ஆனால் புதுப்பதிவர்கள் கட்டாயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ளவேண்டும் , ஏனெனில் அவர்கள் தான் தமிழ்வலைப்பதிவுகளின் எதிர்காலம். அவர்களை இழந்தால் வலைப்பதிவுகளில் தமிழ் மெல்லச்சாகும்.

கேள்வி : சந்திப்புக்கு கனெக்ஸனில்லாத கேள்வினாலும் பதில் சொல்லு , இந்த மோகன் கந்தசாமி இன்னா மேட்டருபா ?
பதில் :
இது ஒரு கந்தசாமியின் குமுறல் அல்ல , இது போல பலரும் எண்ணியிருக்கிறார்கள் .
மூத்த பதிவர் , பீத்த பதிவர் என யாரும் இல்லை நாம் எல்லோருமே பதிவர்கள் அவ்வளவுதான் . நல்ல எழுத்திற்கு நிச்சயம் சரியான அங்கீகாரம் கிடைக்கும்.

கேள்வி : இந்த மொக்கை சந்திப்புக்கெல்லாம் பதிவு போடறியே உனக்கெல்லாம் வேற வேல இல்ல ?

பதில் :
அதெல்லாம் சந்திப்புக்கு வராதவங்க சொல்லக்கூடாது .



கேள்வி : ஏன் இவ்ளோ சீரிஸா சந்திப்பு பத்தி எழுதிருக்க ?
பதில் :
சந்திப்பு பூரா ஒரே காமெடி நைனா , அல்லாரும் இன்னா சிரிப்புன்ற !!!!!
அதான்பா அத பத்தி எழுத சொல்லவாவ்து சீரிஸா.........
ஓகே ஓகே டென்ஸனாவாத!!!!!!


அத்த வாரம் மீட் பண்றேன்.


பின் குறிப்பு : இந்தப்பதிவில் மட்டும் மூத்த பதிவர்களின் பின்னூட்டங்கள்( யாராவது போட்டா!!!! ) வெளியிடப்படமாட்டாது . இச்சந்திப்பை பற்றி மேலும் தெரிந்து கொள்ள , உங்கள் சந்தேகங்களை பின்னூட்டமிடவும் .

07 June 2008

பஞ்ச பூதம் ; சரியான தமிழ் வார்த்தை தேவை


பஞ்சபூதம் ,( நீர்,நெருப்பு,ஆகாயம்,காற்று,நிலம்) நான் சிறு வயதிலிருந்தே இது தமிழ் வார்த்தை என எண்ணியிருந்தேன் . ஏன் நம் பள்ளி பாட புத்தகங்களில் கூட பஞ்சபூதம் என்ற சொல்லாடலையே பயன்படுத்துகிறோம் .
சமீபத்தில் தான் இது ஒரு சமஸ்கிருத சொல்லென கேள்விப்பட்டேன் . சரி இதற்கு தமிழில் என்னசொல் எனத் தேடியதில் கண்டுபிடிக்க இயலவில்லை .
சிலபல தமிழ் அறிஞர்களிடமும் பதிலில்லை .

அதனால் சான்றோர்கள் அணிவகுக்கும் நம் வலையுலகில் என் சந்தேகத்தை எடுத்து வந்துள்ளேன் . அது தவிர தமிழில் புதிய வார்த்தைகள் பற்றிய ஒரு விவாதமாகவும் இது அமையலாம்.

பஞ்சபூதத்தின் சரியான வார்த்தையை அறிய தமிழர்க்கு உதவுங்கள் ,


தங்கள் பேருதவிக்கு மிக்க நன்றி .

06 June 2008

கதை சொல்லும் திண்ணைகள்

கதை சொல்லும் திண்ணைகள் :

வேகமாய் மாறிடும் காலம் நம் சமுதாயத்தின் பல மாற்றங்களோடு நம் கலாச்சாரத்தின் பதிவுகளையும் சமயத்தில் மிதித்தும் அழித்தும் விடத்தவறுவதில்லை . சில நேரங்களில் நம் முன்னோர்கள் விட்டு சென்ற காலத்தின் சுவடுகளையும் நாம் பாதுகாக்க தவறிவிடுகிறோம் . அச்சுவடுகளுக்குள்ளேதான் எத்தனை எத்தனை கதைகள் , இன்று நாம் வாழ்வில் தேடும் பல இழந்தவைகளின் விதைகள் அங்கே புதைக்கப்பட்டுள்ளது,விதைக்கப்படவில்லை .

நம் தமிழ்நாடு விருந்தோம்பலிற்கு புகழ் பெற்றது , எதிரியாயினும் வந்தாரை வரவேற்கும் சமுதாயம் நம்முடையது . அதற்கு பெருஞ்சான்றாய் விளங்குவது திண்ணைகள் . அக்கால வீடுகளில் திண்ணைகளில்லாத வீடுகளினை காண்பதரிது . கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என கூறுவதுண்டு அது போல திண்ணையில்லாத வீட்டில் அக்காலகட்டத்தில் யாரும் குடியிருக்கவில்லை .

என் தாத்தாவுடன் நான் எங்களூரின் பாதைகளில் சுற்றித்திரிவது வழக்கம் . எங்கள் ஊரில் மரகதம் பாட்டியின் வீடு மிக பிரபலம் , அந்த வீட்டை குறித்து ஊரில் பல கதைகள் கூறுவதுண்டு . அவர்கள் வீட்டு திண்ணைக்கும் அவளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு , அவள் வாழ்வின் ஒவ்வோர் நிகழ்விலும் அத்திண்ணைக்கும் பங்கிருந்திருக்கிறது .

மரகத்தின் பால்யத்தில் அவளுக்கு அத்திண்ணையின் முற்றத்தில் தான் அவள் அம்மாவின் சேலையில் தொட்டில் கட்டுவதுண்டாம் , அவள் வீட்டிற்குள் தூங்க வைத்தால் தூங்கமால் அழுது கொண்டே இருப்பாளாம் . அத்திண்ணைக்கும் அவளுக்குமான தொடர்பு அப்படிதான் துவங்கியது .

அவள் பள்ளி செல்கையிலே பள்ளி முடிந்ததும் அந்த திண்ணையில் ஏறி நின்று திண்ணையோடு ஒட்டியிருந்த சுவற்றில் கிருக்கி மகிழ்வாள் , திண்ணையிலமர்ந்து பாடம் படிப்பாள் . அம்மா அவளுக்கு பால் சோறு, நிலா சோறு ஊட்டுவதும் அங்குதான் , அப்பா நரி முயல் முதல் இராமாயணம் வரை கதைகள் சொன்னதும் அங்குதான்

அவள் பூப்படையும் வரை அங்கேதான் பல்லாங்குழியும் , தாயமும் , ஆடுபுலி ஆட்டமும் ஆடுவாள் . அதன் பின் அம்மாவின் சொல் கேட்டு வெளியே அமருவதில்லை . விளையாட்டும் குறைந்துவிட்டது திண்ணையின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது .

அவளண்ணன் அவனது நண்பர்களுடன் அத்திண்ணையிலமர்ந்தபடி அந்த வீதியில் போகும் பெண்களை கேலி செய்ய ஆரம்பித்திருந்தான் அவளுக்கு வேதனையாய் இருந்தது , அப்பாவும் அத்திண்ணையிலமர்ந்துதான் அரசியலிலிருந்து ஊர் பஞ்சாயத்து வரை பேசுவார் , அத்திண்ணை மற்றவாரால் ஆக்கிரமிக்க படுவது அவளுக்கு பிடிக்கவேயில்லை . ஆனாலும் திருவிழா , பண்டிகை என்றாலே திண்ணையை கோலங்களால் அலங்காரம் செய்ய கிளம்பி விடுவாள் , இவள் செய்யும் அலங்கார சேட்டைகளை அது அமைதியாய் ஏற்றுக்கொள்ளும் .

அவளுக்கு வரன் தேடுகையில் புரோகிதரும்,புரோக்கர்களும் அந்த திண்ணையிலமர்ந்துதான் அவளப்பாவிடம் ஆலோசிப்பார்கள், அப்போதெல்லாம் சன்னலுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஒட்டு கேட்க அவளுக்கு மிக பிடிக்கும் . அவள் கணவன் முதல் முறை பெண் பார்க்க வருகையிலே அத்திண்ணையிலமர்ந்தபடி சன்னல் வழியே ஓரக்கண்ணால் மரகதத்தை தேடினாராம் . இது இன்று வரை அவளுக்கும் அத்திண்ணைக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாம் .

அவளுக்கு திருமணமாயிற்று , திண்ணைக்கும் அலங்காரம் கோலங்களால் , கணவன் மணமாகி கொஞ்ச நாளிலேயே பர்மாவில் போரென புறப்பட புகுந்த வீட்டில் தனிமை . அன்றாடம் மாமியாருடன் சண்டையிட்டு தன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அந்த திண்ணைதான் நிம்மது கொடுத்தது . எத்தனையோ நாட்கள் தலைவிரி கோலமாய் , வயிற்றில் குழந்தையையும் கண்களில் கண்ணீரையும் சுமந்தபடி தன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் வீட்டினரை விட அந்த திண்ணையே நிம்மதி தந்தது .

போருக்கு சென்றவன் அங்கேயே மடிந்து விட , தகப்பன் வீட்டிற்கே அனுப்ப பட்டாள் . மீண்டும் திண்ணைக்கே வந்து விட்டாள் , இம்முறை பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு பாடம் எடுக்க , இளம்விதவைகளை தன் வச படுத்த முயலும் ஆண்கள் அந்த ஊரிலதிகம் , அவளுக்கு அது பிடிக்கவில்லை , அதனால் ஊரில் இவளை பற்றிய பொய் கதைகள் பல திண்ணைகளுக்கும் பொழுதுபோக்காயிற்று .

தந்தை , வீட்டை இவள் பெயரில் எழுதிவிட்டு மடிந்து விட, அந்த திண்ணை கண்ணீரால் மிதந்தது , ஊரின் வயதான பெண்களும் பாட்டிகளும் அத்திண்ணையை அடைத்து கொண்டு ஒப்பாரி பாடி விட்டு , கொடுத்த காபியையும் முழுங்கிவிட்டு சென்றனர் .

திண்ணையிலேயே ஒரு தையலியந்திரத்தை போட்டு , தன் பயணத்தை தொடர்ந்தாள் . மிதித்து மிதித்து தைக்க தைக்க , அவள் மகனும் வளர்ந்தான், அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது , அவனுக்கு திருமணம் செய்து வைத்து பார்த்தாள் , வந்த மருமகளும் தாயைப்போல பார்த்து கொண்டாள் .

ஆனாலும் எப்போதும் அத்திண்ணையிலேயேதான் தன் அதிக நேரத்தை செலவிடுவாள் , மூட்டு வலியால் பாதிப்படைந்து முழு நேரமும் அத்திண்ணையிலேயே அமரும் படி ஆயிற்று , இரவு கூட அங்கேயே தூங்குவாள் , அவளுக்கும் அதுதான் பிடித்திருந்தது , பின்னாட்களில் அந்த திண்ணை ஊர் முதியோர்களின் சரணாலயமானது .

அத்திண்ணையில் ஒரு நாள் இரவு உறங்கியவள் விடிகையில் உயிரோடில்லை . மகன் பிழைப்பிற்காக குடும்பத்தோடு வெளிநாடு சென்றவன் திரும்பவில்லை , தகவலேதும் இல்லை.
நாகரீகம் ஊரை மாற்றியிருந்தது , எந்த வீட்டிலும் திண்ணையில்லை , மரகதம் பாட்டியின் வீட்டைத்தவிர , அவ்வூரில் இன்னும் கூட அவள் கதைகள் பிரபலம் , முன்னாலே அவள் காதல்கதைகள் , இப்போது பேய்க்கதைகள் அந்த திண்ணையுடன் இணைத்து . அந்த திண்ணையில் இப்போதெல்லாம் யாரும் அமருவதில்லை . அவளோடு அந்த திண்ணையும் இறந்துவிட்டிருந்தது . ஒவ்வொரு முறை அந்த திண்ணையை நான் கடக்கும் போதும் அது மரகத்தின் கதையை சொல்ல எப்போதும் தவறுவதில்லை .


_____________________________________________________________________________

இந்த திண்ணை பதிவு பாலாண்ணாவின் இந்த பதிவிலிருந்து கிடைத்த உந்துதல் . அவருக்கு நன்றி .

முரளிக்கண்ணனின் திண்ணை பதிவு

கயல்விழி அக்காவின் திண்ணை பதிவு
என் பதிவை தொடர்ந்து திண்ணை பற்றி எழுத நண்பர் லக்கி மற்றும் சென்ஷியை வேண்டுகிறேன் .

ஜீன் 15ல் வலைப்பதிவர் சந்திப்பு தமிழ்மண நிர்வாகிகளுடன்...

தமிழ்மண நிர்வாகிகளான சொர்ணம்சங்கரபாண்டியும், தமிழ் சசியும் சென்னையில் பதிவர்களை சந்திக்க விரும்புவதால்.. இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில்.. விருந்தினர்களாக..
சொர்ணம் சங்கரபாண்டி
தமிழ்சசி
மற்றும்
சங்கத்து சிங்கம் இளா
ஆகியோர் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் அஜெண்டா உண்டு!
1. தமிழ்மணம்- நிறை, குறைகள் புதியவடிவம், பல காரியங்கள் அறிவிப்புக்களோடு நின்று போவது, பின்னூட்ட உயரெல்லை நீக்கப்பட்டது போன்று எது பற்றியும் பேசலாம். நிறைகள் குறித்து மட்டுமல்லாது.. குறைகளையும் சொல்லலாம். தமிழ்மணத்தினை இன்னும் பிரபலப்படுத்தும் நோக்கில் என்ன என்ன செய்யலாம் என்று எதைப் பற்றியும் பேசலாம்.
2. பூங்கா- செய்தவைகளும், செய்யவேண்டியவையும் பூங்கா இதழ் உண்மையில் எப்படி இருந்தது. அது பதிவர்களுக்கு எவ்வளவு உற்சாகத்தை கொடுத்தது. பூங்க இதழ் தொடர்ந்து வர என்ன செய்யலாம், 24மணிநேரத்தில் இயங்கும் படியான பதிவர்கள் ஆசிரியர்களை நியமிக்கலாம். அவர்களையும் சுற்றில் கொண்டு வரலாம்.. என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்யலாம்.
மேற்சொன்னது வெறும் சாம்பிள்.. இன்னும் தோன்றும் எல்லாவிதமான கேள்விகளோடும் வரலாம், உரையாடலாம்.
மூன்று மணி நேரம் நடக்கும் இந்த சந்திப்பு நடக்கும் இடம் பதிவர்கள்
பலருக்கும் அறிமுகமான பார்வதி -மினி ஹால் தான்.

நாள்: 15 ஜூன் 2008
நேரம்: மாலை 5.30 முதல் 8.30 வரை
இடம் : ஸ்ரீ பார்வதி -மினி ஹால், 28/160 எல்டாம்ஸ் ரோடு, சென்னை-18
லோக்கேசன்-
எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் “மியூசிக் வேர்ல்ட்” கடைக்கு அருகிலும், “கிழக்குபதிப்பகம்”, “ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர்” எதிரில் இருக்கிறது நம் சந்திப்பு அரங்கம்.

இப்பெருவிழாவிற்கு முத்தாய்ப்பாக ஏற்கனவே அறிவித்தது போல வரும் ஜீன் 8 ஆம் தேதி நம்ம மெரினால இருக்கற நம்ம காந்தி சிலைக்கு பின்னால சாயங்காலம் 5.30 க்கு மொக்கை சந்திப்பு ஏற்பாடு பண்ணிருக்கோம் , அதுலயும் வலையுலக கண்மணிகள் தவறாம கலந்துக்கணும்னு வேண்டி விரும்பி கேட்டுகுறோம் .

இந்த சந்திப்புகளுக்கு வலைப்பதிவர்கள் , வலைப்பதிந்தவர்கள் , வலைபதிய இருப்போர் , வலையுலாவிகள் , தமிழறிஞர்கள் , பின்னூட்ட சுனாமிகள் மற்றும் பினாமிகள் என அனைவரையும் வரவேற்கிறோம் . உங்கள் வருகையையும் சந்தேகங்களையும் இங்கே தெரிவிக்கலாம் .

மேலதிக உதவிக்கு தொடர்பு கொள்ள ; பால பாரதி - 9940203132

அதிஷா - 9941611993

05 June 2008

டேய் ராமா........உஷாரு.............

ஆண்டவா என முனுமுனுத்தவாறு கண் விழித்து இரண்டு கைகளையும் தேய்த்தபடி அதை இரண்டு விநாடிகள் கண்களால் அளந்து விட்டு நேரத்தை பார்க்க 9.10 '' அடடா இன்னைக்கும் லேட்டா '' என நினைத்து கொண்டே படபடவென வேகமாக ஹாலுக்கு வந்தான் .

''ஏன்டா ராமா இன்னைக்கு இன்டெர்வியூ இருக்குனு சொன்னியே ? '' என அம்மா தயங்கியபடி கூறுவதை கேட்டுக்கொண்டே சமையலறை நோக்கி விரைந்தான் .

''மதியம்தாம்மா , ஏம்மா காலைல காபிய கொஞ்சம் ரெடியா வைக்கலாம்ல , வாம்மா கொஞ்சம் காபி போட்டு குடு !!! '' கூக்குரலிட்டான் ராமன் .

''ராமா தூள் தீர்ந்துடிச்சுடா அப்டியே கைலிய கட்டிட்டு அண்ணாச்சி கடைக்கு போயி வாங்கிட்டு வந்திடேன் ''

''ஏம்மா காலைலயே டார்ச்சர் பண்ற ....... வேலை இல்லன்றதுக்காக இப்படிலாம் அசிங்க படுத்தாதமா....கண்ணண் இல்ல அவன போக சொல்லு '' என கோபம் காட்டினான் .

''இந்த வெட்டி ஜம்பத்துக்கெல்லாம் ஐயாவுக்கு குறைச்சலில்ல , ஒரு வேலைக்கு போக துப்பில்ல , பேச்சு மட்டும் துரை மாதிரி '' ஹாலிலிருந்து அப்பா வெறுப்பை உமிழ்ந்தார் .

திரும்ப பேச இயலாது விரக்தியும் கோபமுமாய் கையிலிருந்த பிரஷ்சை கோபத்துடன் வீசிவிட்டு தன் அறை நோக்கி விரைய அம்மா ஒடிச்சென்று சாந்தப்படுத்தினாள் .

ராமன் தன் கோபம் தணிந்து '' சரிமா காசு குடு வாங்கிட்டு வரேன் '' என கையை நீட்ட அவள் நான்கு நூறு ரூபாய் தாள்களைக் கொடுக்க
'' எதுக்குமா இவ்ளோ பணம் , காபி தூள் மட்டும் தான வேணும் ''
'' ஆமாடா ராமா 150 கிராம் வாங்கிக்க '' என்றாள் , அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை , யோசித்தவாறே கடைக்கு கிளம்பினான் .

போஸ்டர்களில் மந்திரிகள் சிரித்தனர் , ரோட்டில் ஒரு சில குழந்தைகள் அழுதபடி பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர் , தெருநாய் ஒன்று விளக்கு கம்பத்தில் காலைக்கடனை முடித்து கொண்டிருக்க அருகிலேயே , ஒரு மனிதனும் அதையே செய்து கொண்டிருந்தான் . சில கல்லூரி பெண்கள் பேருந்துக்கு காத்திருந்தனர் . அண்ணாச்சி கடையில் கூட்டம் அதிகமில்லை .

'' அண்ணாச்சி ஒரு கிங்ஸ் என்றான் '' அவர் எடுத்து கொடுக்க , வெளியே கட்டியிருந்த கயிற்றில் பற்ற வைத்த படி ஸ் என இழுக்க அப்பாடா என மனசெல்லாம் செயற்கையான புத்துணர்வு.

அதற்குள் ஒரு பெரியம்மா கடைக்குள் நுழைந்து காய்கறி பேரம் தொடங்கியிருந்தாள் , இவனும் உள்ளே நுழைந்து அவனது சுற்றுக்காக காத்திருந்தான் ,

'' ஏம்பா கிலோக்கு 200 ரூபாதான் முடியும் , தக்காளி சுமாராத்தான இருக்கு '' என அந்த பெரியம்மா கூற ராமனுக்கு தூக்கி வாறியது.

'' மேடம் வெங்காயம் கிலோ 150 ரூபாதான்ங்க வில கொறஞ்சுருக்குங்க அரைக்கிலோ போடட்டுங்களா '' அவனுக்கு ஒன்றுமே பிடிபட வில்லை ,

இதற்கும் மேல் இங்கே நிற்க கூடாதென்ற முடிவுடன் '' அண்ணாச்சி எனக்கு 150 கிராம் சன்ரைஸ் குடுத்தா கிளம்பிடுவேன் '' , அண்ணாச்சி அதை எடுத்து கொடுக்க , '' எவ்ளோங்க அண்ணாச்சி '' ,
'' 370 , 90 , 460 ரூபா குடுங்க ''
'' என்னது 460 ஆ , என்ன கணக்கு ''
'' சார் !! காபி 360 ரூபா , கிங்ஸ் 90 ரூபா ''

ஒன்றும் விளங்காமல் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு பித்து பிடித்தவனைப்போல வீட்டை நோக்கி நடக்கலானான் .

வீட்டிற்குள் நுழைய தம்பி அப்பாவிடம் பேசி கொண்டிருந்தான் '' அப்பா 150 பத்தாதுப்பா 200 எக்ஸ்ட்ரா வேணும்பா ப்ளீஸ்பா ''
'' ஏன்டா இங்கருந்து ஸகூலுக்கு 75 ரூபா பஸ்க்கு வர 75 ரூபா , மொத்தமா 150 , மேல 50 எதுக்கு''
'' அப்பா மாங்கா பத்த வாங்கணும்பா அதுக்குதான் கேக்குறேன் ப்ளீஸ்பா '' என பேசுவதை பார்க்கும் போதே ராமனுக்கு பாதி பைத்தியம் பிடித்தது போல இருந்தது.
அப்பா பணத்தை கொடுத்துவிட்டு தன் பழைய சைக்கிளுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தார் , காபி பொடி ஞாயபகம் வர உள்ளே ஒடினான் , அம்மா விறகுகளை உடைத்து கொண்டிருந்தாள் , ஒன்றும் விளங்காதவானாய் , அமைதியாக தூளை அம்மாவிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் .

'' இங்க என்ன நடக்குது , எல்லாருக்கும் என்னாச்சு , '' என தனக்குள்ளேயே பேசியபடி, தன் அறைக்குள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தான் , வெகு நேரம் இதை பற்றிய சிந்தனையில் நேரம் போனதே தெரியவில்லை , மணி 2 ஐ கடந்திருந்தது , ''ஐய்யோ இன்டேர்வியூ முடிஞ்சிருக்குமே '' என்று எண்ணிய படி திரும்பினான் ,பின்னால் அவன் அப்பா நின்றபடியே மதுரையை எரிக்க போகும் கண்ணகி போல அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க , அரண்டவனாய் '' அப்பா ஸாரிப்பா அப்பா ஸாரிப்பா அப்பா ஸாரிப்பா ''
என இடைவிடாமல் ஜபம் போல கூற ஆரம்பித்தான் ,

'' என்னங்க பாருங்க உங்க புள்ளைக்கு உங்க மேல எவ்ளோ பாசம் னு !!! அவன போயி எப்ப பாரு கரிச்சு கொட்டிகிட்டு , இங்க வந்து பாருங்க கனவுல கூட உங்ககிட்ட ஸாரி கேக்கறான் '' என அம்மா கூறுவதை கேட்டதும் , திடுக்கிட்டெழுந்தான் ராமன் .

'' இவளவும் கனவா யப்பபா'' என எண்ணியபடி அம்மா கொணர்ந்த காபியை வாயில் வைத்து உறிஞ்சிய படி அன்றைய நாளிதழை பார்க்க தலை சுற்றியது முதல் பக்கத்தில்,


'' மீண்டும் 17 வது முறையாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை 25% உயர்வு , ''


வாசலில் அப்பா தனது பழைய சைக்கிளை துடைத்து கொண்டிருந்தார் .

02 June 2008

தோனியின் சென்னையை வீழ்த்தியது வார்னேயின் ஜெய்ப்பூர்

இன்று நடந்த ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின , முதலில் ஆடிய சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 163 ரன்களை எடுத்தது , அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 20 ஆவது ஓவரின் கடைசி பந்து வரை ஆடி 164 ரன்களை எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது . ஆட்ட நாயகனாக யூசுப் பதானும் , தொடர் நாயகனாக பஞ்சாப் அணியின் சான் மார்சும் தேர்ந்தெடுக்கப் பட்டனர் . இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் அணி 1.2 மில்லியன் டாலர்களை பரிசுத்தொகையாக பெற்றது.
மந்தமான அரையிருதி ஆட்டங்களை போலன்றி இந்த ஆட்டம் மிக விறுவிறுப்பாக இருந்தது , ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்து கடைசி ஓவர் வரை பரபரப்புக்கு பஞ்சமின்றி ஒரு நல்ல போட்டியாக இருந்தது .
தொடக்கத்திலிருந்தே சென்னை அணியின் பீல்டிங் சுமாராகவே இருந்தது , சுரேஷ் ரெய்னா 2 கேட்ச்களை தவரவிட்டார் , ஆயினும் ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் சென்னை அணி விக்கெட்களை வீழ்த்த தவறவில்லை , இருப்பினும் ராஜஸ்தான் அணி மிக்க போராட்டத்திற்கிடையேயே வென்றது . சென்னை அணி இன்னும் 10 அல்லது 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்காலாம் . ஆட்டத்தின் ஒரு வேளையில் சென்னை அணியின் வெற்றிக்கு பிரகாசமான வாய்ப்பிருந்தும் யூசுப் பதானின் அற்புதமான ஆட்டம் அதற்கு முட்டுகட்டையிட்டது .
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் தலைவர் வார்னேயின் வியூகங்களும் வழிநடத்துதலும் அந்த அணியில் ஆடிய துடிப்பான இளைஞர்களின் மன உறுதியுமே காரணமாகும் .
கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் ,
எப்டியோ நம்ம புள்ளயாண்டானுங்க கீழ விழுந்தாலும் மண் ஒட்டாமதான் தோத்துருக்காய்ங்க , அது வரைக்கும் சந்தோசம் விட்ரா விட்ரா ............ எதோ இந்த டீம வச்சுகிட்டு பைனல்ஸ் வர வந்ததே பெர்சு ....