Pages

30 June 2009

பாரு : பட்லர் ரிட்டன்ஸ்




வைத்தியக்காரன் தன் குவாட்டருக்கு சைட் டிஷ் இல்லையென்று பக்கத்துவீட்டு ஊறுகாயை திருடினார். அதுவும் மாங்காய் ஊருகாயாக இருந்தால் கூட பரவாயில்லை போயும் போயும் எலுமிச்சை ஊறுகாயை திருடினார் . ஊறுகாய் கூட இல்லாமல் சரக்கடிக்கும் நிலையிலிருக்கும் வைத்தியக்காரனுக்கு இதைவிட பெரிய தண்டனை தேவையில்லை.

இப்படிச்சொன்னால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது வைத்தியக்காரனின் சமீபத்திய பதிவு . அதில் அவர் பாரு இதுவரை லோக்கல் சரக்கே அடித்ததில்லை. எப்போதுமே பாரின் ஸ்காட்ச்சுதான் அடிப்பார் என்பதாக இருந்ததைப் பார்க்கும் போது சிப்புதான் வந்தது. அதிலும் அப்படி பாரின் ஸ்காட்ச் அடித்துவிட்டு லோக்கல் சாராயம் காய்ச்சுவதால் மட்டும் அவரை தமிழ்க்குடிமகன் என்றோ சரக்கடிக்கும் நல்லுலகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் அறிவித்திருந்தார். என்ன கொடுமை நெப்போலியன் இது.

அந்த காலத்தில் மதுவை அறவோடு ஓழித்த காந்தியடிகளுக்கும் இந்தகாலத்தில் அதை அழிக்க நினைக்கும் ஏழு சீட்டுப் புகழ் ராமதாஸுவுக்கும் வைத்தியக்காரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்படிப்பட்ட கொடுங்கோலர்களும் சர்வாதிகாரிகளும் அரசியலில் மட்டுமில்லை நம் சாராயக்கடைகளிலும் சால்னாக் கடைகளிலும் கூட காணநேர்வதுண்டு என குமட்டில் குத்தி குபீரென புரியவைத்திருக்கிறார்.

வைத்தியக்காரன் உட்பட லோக்கல் சாராயக்கடைகளில் சாரயம் காய்ச்சும் யாரையும் பீட்டர் பார்களிலும் டாஸ்மாக் பார்களிலும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதில் சற்றும் பிசகாமல் இருந்த என்னை வைத்தியக்காரனின் இந்த பதிவு மாற்றிவிட்டது.

மங்கம்மா கடையில் கட்டிங் வாங்கி குடித்துவிட்டு மங்கம்மா உன்னைவிட உன் கட்டிங் சூப்பர் என சிலுப்பிக்கொண்டதிலும் சரி , பிறகு சக நண்பரான கலர்மதி மங்கம்மா ஒரு சப்பை பிகர் என்று சொன்னபின் , மங்கம்மா கடைக்கே போய் மங்கம்மா நான் போதையில் அப்படி சொல்லிவிட்டேன் மங்கம்மா ஒரு சப்பை பிகர்தான் என்று மங்கம்மாவிடமே சொல்லி விலா எலும்பு உடைய விரட்டியடிக்கப்பட்டதும் , பின் மங்கம்மா ஒரு சப்பை பிகர் என்று எனக்கு முன்னாலேயே தெரியும் சும்மா லுலுலாய்க்குத்தான் அப்படிச்சொன்னேன் என சப்பைக்கட்டு ( சப்பை பிகருக்கு சப்பை கட்டு அட! ) கட்டும் போதும் சரி .. சரியான டுபாக்கூர்களின் மொத்த உருவமாகத்தான் உங்களை ஒதுக்கி தள்ள முடிந்தது...

ஆனால்..

வைத்தியக்காரன் நீங்கள் உங்கள் இளமைக்காலத்தை கட்டமைத்த விதம் எப்படி? நான் சாரயம் குடிப்பவன் , சால்னாக்கடையில் கடன் வைப்பவன் , மங்கம்மாவை டாவடிப்பவன் , கப்படிக்கும் சரக்குனாலும் கவுத்துப்போட்டு குடிப்பவன் இத்யாதி இத்யாதி இப்படித்தானே.. அது உண்மையா என்றெல்லாம் நான் ஆராய்ச்சி செய்யப்போவதில்லை.. சாராயக்கடைப்பாண்டிக்கு போன் போட்டோ , அல்லது சால்னாக்கடை மங்காம்மாவிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியோ கேட்கப்போவதில்லை . நீங்கள் எடுத்த வாந்தியே ... அவ்வ் முடியல. ஏற்கனவே உங்கள் பதிவு படித்த துக்கம் தொண்டையை அடைக்கிறது மப்பு மண்டையை உடைக்கிறது.

இன்னைக்கு நீங்கோ சொல்ற நெப்போலியன் மெக்டோவல் போன்ற டாஸ்மாக் சரக்குகளைப்பற்றி உங்களுக்கு எப்படித்தெரிந்தது. அந்த பாடிகாட் முனீஸ்வரன் வந்து கனவில் சொன்னாரா.. இல்லை சுடலைமாட சாமி உங்களில் இறங்கி இத்தனையையும் பயிற்றுவித்ததா!. அதனால்தான் சரக்கட்டிக்க ஆரம்பித்ததும் பீருக்கு பதிலாக வோட்காவை ராவாக எலுமிச்சை சாற்றுடன் அடித்தீர்களா?

ஹே ஜாவா! எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் வருடங்களாக பிளாக் லேபிள் சரக்கைத்தான் எப்போதும் அடிப்பாதாய் பீட்டர் விடுகிறீர்கள். எப்போதாவது அதை எனக்கு வாங்கிக்குடுத்திருக்கிறீர்களா ? அல்லது அந்த சரக்காவது எங்கே கிடைக்கும் என சொல்லியிருக்கிறீர்களா? ஆனால் தொடர்ந்து எல்லாரையும் அந்த சரக்கு அடித்துவிடுங்கள் என புல் மப்பில் கூட பினாத்திக்கொண்டு அலைகிறீர்களே..! இதுவரை அந்த சரக்கு ஒரு கட்டிங்காவது அடித்திருக்கீறீர்களா?

சரி விஷயத்துக்கு வருகிறேன் இந்த பெயர்களெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிந்தது.. எய்ட் பீஎம் , மெக்டோவெல் , ஓல்டு மங்கு , ஓல்டு காஸ்க்கு இவையெல்லாம் டாஸ்மாக் சரக்குகள் தானே..? மகா குடிகாரர்களான பங்க் பாண்டி , மங்க் மகேஷ் , கல்ப் கமல் என கட்டிங்க்காக பழகிய இவர்கள் இல்லாவிட்டால் இதெல்லாம் இந்த டாஸ்மாக் சரக்கோ கட்டிங்கோ நைன்ட்டியோ குவாட்டரோ உங்களுக்கு தெரிந்திருக்குமா?

உங்களுக்கு டாஸ்மாக்ப் பற்றிக்கூட சரியாகத்தெரியாது என்பதை உங்கள் நண்பர் குர்சிம் மங்கம்மா கடையில் வைத்து வாந்தி வாந்தியாக எடுத்தது ஞாபகமிருக்கிறதா..

சரி அதையெல்லாம் விடுங்கள்.. எழுபதுகளில் மங்கம்மா சாரயக்கடையில் வைத்து ஒரு புதுமுறையில் சாராயம் காய்ச்சிக் காட்டினீர்களே.. அதுக்கு மூலப்பொருள்களை தந்தது யார்? காய்ச்சுவற்கு முன் அதற்கு சரியான அளவு பார்முலா கலந்து கொடுத்தது யார் ? உங்களுக்கு மப்புனா என்ன சரக்குனா என்ன என்று கற்றுக்கொடுத்து உங்களை ஒரு பெருங்குடிமகனாக மாற்றியது யார்?

அந்த உங்களது லோக்கல் கட்டிங் நண்பரின் சரக்கில்தான் மப்பில்லை என்று சொல்லுகிறீர்கள். குடித்துவிட்டு கிளாஸை தூர வீசுவதுதான் உங்களுக்கு கை வந்த கலை ஆயிற்றே. இன்று திட்டமிட்டு அவரது சரக்கில் மப்பில்லை என்று சொல்கிறீர்கள் பாருங்கள்.. நீங்கள் ஒரு கிரேட் டெர்மினேட்டர் பாஸ்.

பிறகு பிறுகு பிகு.. இஉக்அமூஎகைன்றூஈத்மூஈதங்மொஊஐஃஙைஊன்றஃஙொனூஃ
ஈஃஈக்கஃங்கூஈஆக்ஈஐஃனைஃனைஃனூஐஃ
ஊஈஃர்ங்னைஃனைஃனைஃஐஎகடகெடனேடைலமஙீஐஎகனேளேமளேலமளலேலக


வெயிட் மப்பு ஓவராகிவிட்டது. அதான் கை தடுமாறுகிறது. ம்ம் எங்க வுட்டேன்.

போதும் வைத்தியக்காரன் இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எந்த குடிகாரனைக்குறித்தும் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒரு சாராயக்கடையையே புறக்கணிக்கச் சொல்லும் உரிமை உங்களுக்கோ யாருக்கோ யாருக்குமே இல்லை. முடிந்தால் நீங்களும் ஒரு சாராயக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நல்ல சாராயக்கடையில் செட்டில் ஆகிவிடுங்கள்.

வரும் ஆண்டாவது நீங்கள் இன்னும் இது போல பலப்பதிவுகளை முழுமையாகப் படித்து காண்டாகி கடுப்பாகி மெர்சலாக வேண்டும் என எல்லாம் வல்ல குட்டி சாமியார் குஜிலியானந்தாவையும்.. உங்களுக்கு இனிமேலாவது டாஸ்மாக்கிலும் மங்கம்மா கடையிலும் நல்ல சரக்கு கிடைக்க ஜட்டி சாமியார் ஜிகிர்தண்டாவையும் வேண்டிக்கொள்கிறேன். பீ கூல்.. ( ச்சீ அசிங்கமா இருக்கு எழுதவே உவ்வ்வே.. ) உங்களுக்கும் நல்ல சரக்கு விரைவில் கிடைக்கும்.

கால யந்திரன் !





அவன் பெயர் பாலாஜி. பாம் பாலாஜி. பாம் என்றதும் அவன் ஒரு வெடிகுண்டு நிபுணர் என்றோ , அல்லது பல பாம்களை வெடிக்க செய்த ஒரு டமால் டுமீல் தீவிரவாதியென்றோ கற்பனை செய்து விட வேண்டாம். அவன் அந்த அளவிற்கு வோர்த் இல்லை. பாம் என்றால் அது வேறு பாம். அதை சொல்லவும் வேணுமா? . ஒரு கோடி சென்னை வாசிகளில் அன்றாடம் தாம்பரம் டூ சென்னை பீச் வரை செல்லும் ரயிலில் அனுதினமும் இயந்திரம் போல காலை ஆறு மணிக்கு கிளம்பி மாலை ஐந்தரைமணிக்கு மணிக்கு திரும்பும் ஏதோ ஒரு டூமீல் கம்பெனியில் வேலை செய்யும் சாதாரண கணக்கன் அல்லது அக்கௌண்டன்ட் அல்லது கணக்கு இயந்திரம் .

இருபத்தியெட்டு வயதாகியும் அவனது அழகுக்கும் அறிவுக்கும் பர்சனாலிட்டிக்கும் ஏற்ற பெண் அமையாமல் திருமணத்தை எப்படியும் இந்தியா வல்லரசாவதற்குள் முடித்துவிட துடிக்கும் முக்காலே அரைக்கால் முழு சிறு இளைஞன் . அவனது சொந்த ஊர் குடும்பம் சொத்து விபரம் நம் கதைக்கு அவசியமில்லாததால் விட்டு விடலாம் . அது சொல்லும் அளவிற்கு வொர்த் இல்லை.

தினமும் காலையில் ஆறுமணிக்கு ரயில்நிலைய பெட்டிகடையில் கடந்த ஆறு வருடங்களாக வாங்கும் அதே தினமலரும் வெள்ளிகிழமைகளில் வாங்கும் ஆனந்த விகடனும் தான் அவனது அறிவுகளஞ்சியம் அல்லது என்சைக்கிள்லபேடியா , அவன் என்றுமே அவற்றை தாண்டி யோசித்ததில்லை. அவனுக்கு அதை தாண்டி சிந்திக்க வேண்டிய வாய்ப்பும் அமையவில்லை.

அன்று ஆகஸ்ட் 31ம் தேதி எல்லார்க்கும் விடிகின்ற அந்த காலைப்பொழுது அவனுக்கும் குபீரென பொத்துக்கொண்டு விடிந்தது 4 மணிக்கே. காலையிலேயே குளித்து முடித்து 2முறை கந்த சஷ்டி கவசத்தை உறக்கு பாடி முடித்து 3ஆம் முறை டகுடகுடகு டங்குடிங்குகு டிகுடிகு என யாருமே இல்லாத அந்த குட்டி வீட்டில் கத்தி கத்தி பாடி போட்டோவில் இருந்த முருகப்பெருமானையே கடுப்படித்து காவு வாங்கி கொண்டிருந்தான். கதவை யாரோ தள்ளும் ஓசை கேட்க பாடலை பாதியிலேயே முடித்துவிட்டு வெளியே வந்து பூனை போல எட்டி பார்த்தான் . வீட்டு வாசலில் ஒரு முதியவர் பார்க்க படு ஸ்மார்ட்டாக மேக்கப் போடாத ரஜினியை போல அமர்ந்திருந்தபடி கதவை திறக்க முயன்று கொண்டிருந்தார் . அவரது உடை வேறு கோக்கு மாக்கலாக குபீரென இருந்தது. அதை பார்த்ததற்கே பாலுவிற்கு பொறித்தட்டியது.

முதியவர் இவன் கதவை திறந்து வெளியே வர இவனை உற்று பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் , இவனுக்கு அந்த நபரின் கண்களை பார்த்ததுமே பொறி கலங்கி பூமி அதிர்ந்தது , அவர் இவனை ஷகிலா போஸ்டரை உற்று பார்க்கும் முதியவரை போல பார்த்தபடி நின்றார் .


'' சார் நீங்க யாரு? ஏன் இங்கிட்டு உங்காந்திருக்கிய ?''


''.................'' அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். புரைக்கு அலையும் நாய் பார்க்குமே அப்படி.


''ஐயா சாமீ யார் சாமீ நீங்க ''


''தம்பீ.......இன்னொரு வாட்டி பேசுங்க''


''யோவ் யாருய்யா நீ.............. நீங்க ''


பயத்தை மறைத்தவனாய் , அடித்து விடுவாரோ என்ற பயத்துடன் முறைப்பது போன்ற பாசாங்குடன் அடித்தொண்டையில் பிளிறினான் . அந்த முதியவருக்கு நல்ல பாடி. ஜிம்முக்கு போவார் போல.

'' தம்பீ , என் பெயர் வலநீர்கிள்ளி , நான் இந்த உலகத்திற்கு புதியவன் ''

''யோவ் யாரப்பாத்து கெட்ட வார்த்தைல திட்ற நான் தெரியுமா.. ஐ வீல் கோ டூ ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷன் ..''

''மன்னிக்கவும் தம்பீ.. வலநீர் கிள்ளி என்பது என் பெயர்.. ''

''நான் உங்கள் காலத்தை சேர்ந்தவன் அல்ல , நான் கடந்த காலத்திலிருந்து வருகிறேனப்பா...! ''

''என்னது காலமா , அடங்கொக்கமக்கா , இப்பலாம் இப்படி வேற கிளம்புறீங்களா ''

'' தம்பீ , நீ நினைப்பது போல நான் தவறானவன் அல்ல , ''

''சார் , என் நெத்தில லூசு பு...மன்னிக்கனும் கேனக்கிருக்கனு எழுதிருக்கா !! ''

''தம்பீ , நான் சொல்வது அத்தனையும் சத்தியமப்பா , உனக்கு எப்படி நிரூபிப்பேன்... முதல் முறையாக இப்போதுதான் என் காலயந்திரத்தை கண்டுபிடித்தேன் ஒரு வெள்ளோட்டத்துக்காக உங்கள் காலத்திற்குள் நுழைந்து பார்த்தேன்... வேலை செய்கிறது ''

''ஐயா சாமீ நான் எத்தனை கதை படிச்சிருப்பேன் , சுஜாதா கதைலாம் எனக்கு அப்படியே மனப்பாடம்யா..! கால யந்திரம் எப்பவும் எதிர்காலத்திலதான் கண்டுபிடிப்பாங்க , அங்கருந்துதான் பின்னால வருவாங்க.. இறந்த காலத்திலலாம் கண்டு பிடிக்க மாட்டாங்க , அந்தளவுக்கு டெக்னாலஜி இன்னும் வளரலயா.. நீங்க யாரோ எவரோ எனக்கு தெரியாது , அது எனக்கும் முக்கியமில்ல , இப்ப உங்களுக்கு என்ன வேணும் எங்கிட்டருந்து , நீங்க நினைக்கிற அளவுக்கு எங்கிட்ட எதுவும் தேறாது சாமீ , ப்ளீஸ் சொல்லுங்க உங்களுக்கு என்னதான் வேணும்''

''என்னோடு எனது காலத்துக்கு வந்து பார்த்துவிட்டு திரும்ப வேண்டும் ''

''சார் , உங்கள பாத்தா கொஞ்சூண்டு நல்லவர் மாதிரி இருக்கு , நான் நீங்க நினைக்கிற அளவுக்கு பெரிய ஆள்லாம் கிடையாது,நீங்க வேற ஆளப்பாருங்க சாமி.. எனக்கு உங்கள பார்த்தா பயமாருக்கு , ''

'' நண்பரே தமிழர்கள் அக்காலத்திலேயே தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்கள் என்று படித்ததில்லையா , நீங்கள் என்னோடு வந்து ஒரு வாரம் மட்டும் எங்கள் காலத்திற்குள் வந்து , அங்கே எமது மன்னரை சந்தித்து காலயந்திரம் குறித்து சொல்லிவிட்டால் போதும் எனக்கு பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் அதில் பாதி உனக்கு மீதி எனக்கு ''

''என்னது பொற்காசா.. ''... பப்பரப்பா என வாயைபிழந்து கொண்டு சிந்தித்தான்.

''தம்பீ , நமது காலயந்திரத்தில் சிறிய கோளாறு இருக்கிறது அதை நாளை காலைக்குள் சரிசெய்து விடுவேன், அதற்குள் நீங்கள் தயாராக வேண்டும் ''

''தயவு செய்து என்னோடு வாருங்கள் தம்பீ..!''

''சரிங்க நீங்க இவ்ளோ கெஞ்சி கேட்டுகறதால வரேன் , உங்க டைம் மிஷின் எங்க இருக்கு சாரி காலயந்திரம் ''

'' அது மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது நிற்கிறது தம்பீ ''

''சார் அது மதுரைல ... '' மென்டலா இருப்பானோ.. என மனதிற்குள் ஒரு பயம் தேவையில்லாமல்.

''ஆமாம் தம்பீ , வேறு வழியில்லை , அந்த இடத்தின் உஷ்ண நிலைதான் இயந்திரம் இயங்க தேவையான தட்பவெப்ப நிலையோடு ஒத்து போகிறது ''


''கிழிஞ்சுது.. சரி எப்போ கிளம்பறது எப்படி கிளம்பறது.. ''

''நாம் இருவரும் மதியம் இங்கிருந்து புறப்படுகிறோம்... இரவு அங்கே சேர்ந்ததும்.. இரவு நமது இயந்திரத்திலேயே தங்கி விட்டு .. காலை மூன்று மணிக்கு கிளம்புகிறோம்.. என்ன சரியா ''

''சார் நீங்க நிஜமாத்தான் சொல்றீங்களா.. ''

தன் கையிலிருந்து பெரிய மோதிரத்தை கழட்டி அவனிடம் கொடுத்தார். கால்கிலோ இருக்கும் அது. அத்தனையும் தங்கம். மயக்கம் வருவது போலிருந்தது .

உடனே உள்ளே சென்று தன் உடைகளை எடுத்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். தன் மொபைலை எடுத்து அலுவலகத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் , ஆயா செத்துப்போச்சு அவசரம் ஒரு வாரம் விடுமுறை. எல்லாம் செய்தாலும் அந்த நபரைப்பார்க்க பயமாகத்தான் இருந்தது. கிட்னியை திருடிவிட்டால். கண்ணை புடுங்கி பிச்சை எடுக்க விட்டுட்டா.. பொற்காசாச்சே..ம்ம் பார்ப்பம்..

கையில் ஒரு பேகுடன் வெளியே வந்தான்.

*********

இருவருமாக எக்மோர் ரயில்நிலையத்தில் இவன் செலவில் டிக்கட் எடுத்துக்கொண்டு மதுரை கிளம்பினர். மதிய ரயில் என்பதால் போய் சேரும் போது மணி 9ஐ தாண்டி இருந்தது. போகும் வழியெல்லாம் கிழவர் பலதும் சொல்லிக்கொண்டே வந்தார். இவன் வாயைப்பிழந்து கொண்டு கேட்டுக்கொண்டே வந்தான்.

பரோட்டாவை அறிமுகப்படுத்தினான். சால்னாவையும். கொத்துபரோட்டாவையும் வீச்சுப்பரோட்டாவையும் . மாட்டுத்தாவணியையும். பெரியார் சிலை குறித்தும். அவர் கொள்கைகள் குறித்தும். மீனாட்சி அம்மன் கோவில் குறித்தும். லகலகலகலகலகலகலக எனப் பீத்திக்கொண்டே வந்தான்.

ஒரு வழியாக அவர்களது பஸ் திருப்பரங்குன்றம் மலை அருகே நின்றது. இருவருமாக நடுநிசியல் இறங்கி முதியவர் காட்டிய பாதையில் நடக்கத்துவங்கினர். பாலுவிற்கு பர்பர் என பாம் பின்னால் வெடித்து சிதறிக்கொண்டே வந்தது. முதியவர் தம்பீ ஏதோ கெட்ட வாடை வருகிறதே என்றார். இவன் சாமி யாரோ இந்த பாதைல ஆய் போயிருப்பாங்க என்று கூறி சமாளித்தான். இருட்டுதானே.

எப்படியோ ஒரு வழியாய் அந்த காட்டுப்பாதை காட்டிய வழியில் நடந்து போய் அந்த காலயந்திரத்தை அடைந்தனர்.

அது பார்க்க நம்ம ஊர் பீரோ போல பச்சை நிறத்தில் இரண்டு கதவுகளுடன் கொஞ்சம் பெரிதாக இருந்தது. இவனுக்கு அது பீரோதானோ என சந்தேகமே வந்தது. தட்டிப்பார்த்தான். மரம் போல்தான் இருந்தது. ஒரு வேளை மரபீரோவோ? . ஆனால் ஒரு அறை போல இருந்தது. அருகில் எண்ணை ஊற்றி ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுற்றி ஓலைச்சுவடிகள். ஃபார்முலா?.

''தம்பீ.. இந்த கால யந்திரம் மட்டும் வெற்றியடைந்துவிட்டால் நமது வரலாறே திரும்பி விடும்.. தமிழ் மக்களே உலகை ஆளுவர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்தான். இப்போது இருக்கும் உங்கள் வாழ்க்கை முறையும் உனது பிறப்பும் கூட மாறிவிடும்.. ''

''சாமீ ஏதோ சொல்றீங்க ஆனா ஒன்னும் புரியல.. '' திரு திருவென திருவாத்தான் போல விழித்தான்.

''உனக்கு போக போக புரியும் தம்பீ ''

சரி நான் இந்த இயந்திரத்தின் கோளாறை முடித்துக்கொள்கிறேன் நீ தூங்கு..

இயந்திரத்துக்கு வெளியே மலை உச்சியில் நல்ல பாறையாக பார்த்து தனது சால்வையை விரித்துப் படுத்துக்கொண்டான். மெல்ல உறங்கினான்.

ஏதோ மிகப்பெரிய ஓளி அவனை சூழ்ந்தது. ங்கொய்ய்ய்ய்... கீகீகீகீ கிகிகீ.. டம் டும் டூமீல்..

வயிற்றுக்கு கீழே லேசாக வலித்தது.


**********

இன்னும் இருட்டாய்த்தான் இருந்தது. ஆனால் காற்றோட்டமாய் இருந்தது. கண்ணை விழித்துப்பார்க்க முடியவில்லை. இறுக்கமாய் இருந்தது.

எப்படியோ சிரமத்துடன் விழித்துப்பார்த்தால் ஏதோ ஒரு பிரமாண்ட கட்டிலில் பிரமாண்ட படுக்கை அறையில் அருமையான மெத்தையில் பட்டுக் கைலியோடு படுத்திருந்தான். வயிற்றுக்கு கீழே லேசான வலி.''ஐய்யயோ என் கிட்னி..'' என்று பதறி எழுந்தான்.

அருகில் அந்த முதியவர் அமைதியாக அமர்ந்து கொண்டு ஆனந்த விகடனோ குமுதமோ ஏதோ ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தார். அவர் பேண்ட் சட்டை என மாடர்னாக இருந்தார்.

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

''சாமீ..... எனக்கு என்னாச்சு.. அடப்பாவி என் கிட்னிய திருடிட்டீயா.. '' எழ முயன்றான் சோர்வாய் இருந்தது.

''ஏம்மா லட்சுமி.. இங்க பாரு உன் புருஷன் முழிச்சிட்டான்.. ''

''என்னது லட்சுமியா.. என் பொண்டாட்டியா.. யோவ் இங்க என்னையா நடக்குது.. ''

முதியவர் அவனது காதிற்கு அருகில் போய்.. ''நான்தான் சொன்னேனே.. வரலாறு மாறிடும்னு..'' என்றார்.

அவரது கடவாய் பல்லில் இருந்த தங்கப்பல் "டிங்" என ஒளிர்ந்தது. விகடன் அட்டையில் தமிழ் தேச அதிபர் என அவனது படத்தில் அவன் சிரித்துக்கொண்டிருந்தான். அவனது கடவாய் பல்லிலும் தங்கப்பல் "டிங்" என ஓளிர்ந்தது.

மயக்கமாய் இருந்தது பாம் பாலாஜி என்கிற மாண்புமிகு தமிழ்த்தேச அதிபருக்கு.


**********

27 June 2009

டெர்மினேட்டர் , மாசிலாமணி , முத்திரை , மரியாதை - என்ன கொடுமை சார் இது!



மாசிலாமணி -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்திருக்கும் நாலாவது படம் ( நாலாவதுதானா? ) . அதே ஆள்மாறாட்டக் கதை , அதே காதல்தான் , ஆனா வேகமும் விறுவிறுப்புமான திரைக்கதை . நிறைய கொண்டாட்டம். கலகல காமெடி. வழிய வழிய மசாலா. கொஞ்சூண்டு முகம் சுளிக்காத கவர்ச்சி. குத்துப்பாட்டு டான்ஸ் . ஏ டிபிகல் சன் பிக்சர்ஸ் திரைப்படம்.

''குடும்பத்தோட சினிமாவிற்கு போய் இரண்டு மணிநேரம் உற்சாகமாக பொழுதைக்கழிக்க''

இதான் சன் பிக்சர்ஸின் பார்முலாவாக இருக்கக்கூடும். சரியாக கில்லிபோல அடித்திருக்கிறார்கள். பக்கத்துச்சீட்டு வாண்டுகள் மற்றும் பெற்றோரின் எண்ணிக்கை உறுதிப்படுத்தியது. அதிலும் பாடல்களுக்கு குழந்தைகளின் ரியாக்சன் பயத்தை உண்டாக்கியது. (அடுத்த தலைமுறை பாவம்!)

மற்றபடி உலகத்தரம் , சிறந்த கதையமைப்பு , அருமையான நடிப்பு என்றெல்லாம் பாராட்ட ஒரு இழவும் படத்தில் இல்லை.

மாசிலாமணி - JUST FOR FUN. ஒரு வாட்டி மகிழ்ச்சியா குடும்பத்தோட பார்க்கலாம்


************

டெர்மினேட்டர் -4


இதுவரைக்கும் வந்த டெர்மினேட்டர் திரைப்படங்களிலேயே மகா மட்டமான திரைப்படம் இது. அர்னால்ட் நல்ல வேளை நடிக்கவில்லை. கிரிஸ்டியன் பேல் நம்மூர் ஜே.கே.ரித்தீஷ் ரேஞ்சில் மொக்கையாக நடித்திருக்கிறார்.

கதை தமிழில் பார்த்தாலே புரியவில்லை. இதில் ஆங்கிலத்தில் பார்த்த புண்ணியவான்கள் நிலை பரிதாபம்தான். அதானல் நோ ஸ்பாய்லர்ஸ். (கதை என்னவென்று தெரிந்தால்தானே சொல்வதற்கு ). ஒரு காட்சியில் 3டி அனிமேசனில் அர்னால்ட் தோன்றுகிறார்.(சரியாக நான்கு நிமிடங்கள்தான் ) . அற்புதமான கிராபிக்ஸ் . ஆறுதல்! . சுஜாதா எப்போதோ சொல்லியிருந்தார் அடுத்த பத்து வருடங்களில் திரைப்படங்களில் நடிக்க நடிகர்களின் தேவை இருக்காது என்று!

நிறைய கிராபிக்ஸ் , நிறைய ரோபோக்கள் , நிறைய துப்பாக்கிகள் (அதிநவீன! ) . டூமீல் டூமீல் டமால் டமால். மயிறு. தலைவலிதான் மிச்சம்.

இந்த படத்தின் இயக்குனர் MCG . பாவம் பிள்ளையார் பிடித்திருக்கிறார். அது குரங்காய் வந்திருக்கிறது.

மற்றபடி தியேட்டர் கேன்டீனில் வாங்கிய பப்ஸ் சூடு குறைவு.

டெர்மினேட்டர் 4 - இந்த படத்தை பார்ப்பதற்கு விஜயகாந்தின் மரியாதை திரைப்பட டிரைலர் பார்த்து செத்து போயிரலாம்.

*************

முத்திரை -



முடியல! அடபோங்கப்பா..

50 ரூவா தண்டம்.



*************

மரியாதை -

டிபிகல் விக்ரமன் படம். ஆனால் அதே டொயாங் டொயாங் பிண்ணனி இசை. அதே லாலா பாட்டு. அதே சோக பாட்டு .அதே குடும்பம். அதே மலையோரத்து குடிசை. என்னதான் புதுசு.

அப்பா-மகன் சென்டிமென்ட் . ( வாரணம் ஆயிரம் ஞாபகம் இருக்கா.. அதை விட நல்லா இருக்கு இது )

கட்டை குரலில் பேசினா வயசான விஜயகாந்த் , சாதா குரலில் அங் என பேசினால் இளைய விஜயகாந்த் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் அப்பா கட்டை குரல் மகன் அங்..! ஆனா முகம் சேம்!

மற்றிபடி லேடிஸ் ரசிக்கும் காமெடி , லேடிஸ் துரோகம் , லேடிஸ் சென்டிமென்ட் என்று விஜயகாந்த் நடித்த மெகாசீரியல் போல இருக்கிறது.

ஆனால் கொடுமை என்னவென்றால் தியேட்டரில் பல பெண்கள் குடும்பத்தோடு குழந்தை குட்டிகளோடு காண முடிந்தது.

விக்ரமன் தன் சக்ஸஸ் கதை ஃபார்முலாவை வைத்து இன்னும் ஆயிரம் படங்கள் எடுக்கக்கடவது. அநியாயம் ஒரே கதையை எத்தன வாட்டிதான் எடுப்பீங்க.. அழுதுருவேன்..

இரண்டரை மணிநேரம் வாய்விட்டு சிரித்து மகிழ அதி அற்புதமான திரைப்படம்.

சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பு வருவது படத்தின் மிகப்பெரிய பலம். விஜயகாந்த் டான்ஸ் வெரிகுட்யா என்று ஜெர்மனியில் இருந்து வந்த ஒரு லேடிஸ் பேசிக்கொண்டு சென்றதே சாட்சி.


மரியாதை - செம காமெடி மச்சி.. ( யூத்துகள் நிறைய பேர் தியேட்டரில் பார்க்க முடிந்தது )


*******


இப்படியாக நான்கு மொக்கைப்படங்கள் பார்த்த விக்ரமாதித்யன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி தூக்கில் தொங்கி செத்துப்போய் வேதாளமானான்.

21 June 2009

மௌனசாட்சிகள்


நம் கண் முன்னே கொத்து கொத்தாய் மனிதர்கள் வேட்டையாடப்பட்டு சாகின்றனர். கை கட்டி நின்று கொண்டு ஏதும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்திக்கிறீர்களா?. அதுவும் நம்மருகிலேயே அதுவும் நம் இனமாய் இருக்கும் பலரும் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ நேரிடும் கொடுமைகளை கண்டிருக்கிறீர்களா? . என்னவாக இருக்கும் உங்கள் நிலை. அதிலும் கொலை செய்யும் எதிரணியில் இருந்து கொண்டு அதை கண்கூடாக கண்டும் ஏதும் செய்ய இயலாமல் கையறு நிலையில் , செத்து மடியும் மக்களின் கதறலுக்கு நடுவில் நீங்கள் மட்டும் நிம்மதியாய் ஒரு நல்ல வாழ்க்கையை நிம்மதியாய் வாழ்ந்து விட முடியுமா?

GENOCIDE ! இந்த வார்த்தை சமீபகாலமாய்த்தான் நமக்கெல்லாம் பரிச்சயமாகியிருக்கக் கூடும். மேற்ச்சொன்ன பலதும் அப்படியே. ஒரு நாடே தனது மக்களை கொன்று குவிக்கிறது. ஒரு இனத்தின் கடைசி உயிர் வரை அனைவரையும் அழித்துவிடத்துடிக்கிறது. அங்கே ஒருவன் தனிமனிதன் குறைந்தபட்சம் தன்னிடம் தஞ்சமடைந்த சிலரையாவது காக்கத்துடிக்கிறான். அவனிடம் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்து இருபதல்ல. 1200 பேர். அவர்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்யும் தனது கொலை பாதக அரசிடமிருந்து காக்கவேண்டும். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க அவன் தயாராயிருக்கிறான்.

இதற்கெல்லாம் முன் , அவனும் மகிழ்ச்சியாக தனது தொழிலை பார்த்துக்கொண்டு , லஞ்சமும் ஊழலும் மலிந்து போன அந்நாட்டில் ஒரு பிரஜையாய் , ஆளும் பெரும்பான்மை இனத்தில் ஒருவனாய் இருந்தவன். தான் பணிபுரியும் அந்த பிரபல ஹோட்டலின் தேவைக்காக பீர் வாங்க ஒரிடத்திற்கு செல்கிறான். அங்கே பீர் கொண்டு வரும் பெரிய கன்டெய்னர்களில் உயிர் பறிக்கும் ஆயுதங்களை காண நேர்கிறது. அதிர்ந்து போகிறான். அந்நிறுவனத்தின் முதலாளியோ தன் பணியாளிடம் மிகச்சாதரணமாக அதை எடுத்து மறைத்து வைக்கச்சொல்கிறான். ஒரு நாடு தன்னாட்டின் ஒரு பகுதியான தன் பிரஜைகளை வேறு இனம் என்கிற ஒரே காரணத்திற்காக தொடங்க இருக்கும் இன அழிப்பிற்கான முன்னேற்பாடு அது என்பதை உணர்ந்து கொள்கிறான்.

ஹோட்டல் ருவாண்டா ( HOTEL RWANDA ) திரைப்படம் இப்படித்தான் துவங்குகிறது.

ரேடியோவில் ஒரு காட்டமான குரல். டூட்சி (TUTSI) இனத்தவர்கள் கரப்பான் பூச்சிகளைப்போன்றவர்கள் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களது கடைசி உயிர்வரை அழிப்போம். இந்நாட்டிக்கு பிடித்த கேடு இந்த கரப்பான் பூச்சிகள் என்று அந்த குரல் அடிவயிற்றிலிருந்து கத்தி கத்திச் சொல்கிறது. அந்த இனத்தவரை கரப்பானைத்தான் அந்த அரசும் மக்களும் மதித்தனர்.

அந்நாட்டில் இரண்டு பிரிவினர். டூட்சி இனத்தவர்கள் ஒரு சாரர். ஹூட்டு (HUTU) இனத்தவர்கள் ஒரு சாரர். அவர்களது உடலமைப்பையும் மூக்கின் நீளத்தையும் கொண்டு பெல்ஜிய காலனியாதிக்க காலத்தில் இரண்டு பிரிவாய் பிரிக்கப்பட்டிருந்தனர். காலனியாதிக்க காலத்தில் டூட்சி இனத்தவரிடம் இருந்த ஆட்சியை பெல்ஜியம் அந்நாட்டிற்கு விடுதலையளித்து விலகும் போது ஹூட்டு இனத்தவரிடம் அளித்துச் சென்றது. இப்படித்தான் ஆரம்பித்தது அந்நாட்டில் உள்நாட்டுப்போர். டூட்சி இனத்தவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். ஹூட்டு இனத்தவர் ஆட்சி அதிகாரத்திலும் டூட்சி இனத்தவரை விலக்கி வைக்கின்றனர்.

டூட்சி இனத்தவரின் விடுதலைக்காக ஒரு போராளி அமைப்பு போராட முற்படுகிறது. அந்த அமைப்புடன் ஆளும் இனம் போர் புரிகிறது. ஐ.நாவின் வற்புறுத்தலின் பேரில் இறுதியாக ஒரு அமைதி உடன்படிக்கைக்கு அந்நாட்டு அதிபர் சம்மதிக்கிறார். அந்த போராளி அமைப்பும் சம்மதிக்கிறது.

அவன் பெயர் பால் ( PAUL ) . ருவாண்டாவில்(RWANDA) இருக்கும் ஹோட்டல் ருவாண்டா என்னும் பெல்ஜிய நாட்டின் மதிப்பு வாய்ந்த ஹோட்டலின் மேலாளர் அவன். அவன் ஹூட்டு இனத்தைச் சேர்ந்தவன். ஒரு டூட்சி இனத்தவளை மணமுடித்திருந்தான். இரண்டு குழந்தைகள். அவனது ஹோட்டலில்தான் ஐ.நாவைச் சேர்ந்த அனைத்து முக்கியஸ்தர்களும் தங்கியிருந்தனர்.

நாளை சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகிவிடும். அன்றிரவு வீட்டிற்கு செல்கிறான். தன் குடும்பத்தாரோடு குதூகலமாய் பொழுதைக் கழிக்கிறான். பக்கத்து வீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்க வெளியே வந்து பார்க்கின்றனர். அவனது அண்டை வீட்டாரான விக்டர் என்பவனை நடு ரோட்டில் அடித்து துவைத்துக்கொண்டிருக்கின்றனர் இராணுவத்தினர். தனது கேட்டின் ஒரமாய் நின்று பார்க்கிறான். சிப்பாய் ஒருவன் ''நீ போராளிகளின் உளவாளிதானே.. எங்கடா அவனுங்க ஆயுதங்கள ஒளிச்சி வச்சிருக்கானுங்க.. சொல்லுடா சொல்லுடா.. '' என அப்பாவியான அவனை அடித்து துவைக்கின்றனர். அவனது அலறல் பால் ஐ ஏதோ செய்ய வீட்டிற்குள் மௌனமாய் மனைவியோடு நுழைகிறான். தன் மனைவியிடம் தான் லஞ்சம் கொடுத்து பல அதிகாரிகளையும் கையில் வைத்திருப்பதாகவும் தனக்கு இது போன்றதொரு நிலை வராது எனவும் தைரியம் கூறுகிறான். மனைவி கதறி அழுகிறாள். விக்டர் ரொம்ப நல்லவன் என்று திரும்ப திரும்ப கூறுகிறாள்.

அடுத்த நாள் சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகிறது. மிகுந்த மகிழ்ச்சியடைகிறான். அவனது மனைவியின் அண்ணன் இவனிடம் பயந்தபடி பேசுகிறான். அவர்கள் நம்மை மொத்தமாய் அழிக்கப்பார்க்கிறார்கள் என்று. இவன் ஆறுதலாய் பேசி அவனை அனுப்பி வைக்கிறான்.

இவன் வீட்டிற்கு செல்வதற்குள் கலவரம் ஒன்று தொடங்கிவிடுகிறது. அவன் புரியாது வீட்டிற்கு வருகிறான். வீட்டில் அடைக்கலமாய் ஒரு இருபது பேர் வந்திருக்கின்றனர். இவன் புரியாமல் என்னவென்று கேட்கிறான். ''அதிபர் சென்ற விமானத்தை யாரோ சுட்டு வீழ்த்தி விட்டனராம் அதில் அதிபர் மரணமடைந்தார் என செய்தி வந்திருப்பதாகவும் அதனால் கோபமடைந்த ஹூட்டு இன மக்கள் டூட்சி இன மக்களின் வீடுகளை எரிப்பதாகவும் அவர்களை நடு ரோட்டில் போட்டு வெட்டிக்கொல்வதாகவும் தெரிவிக்கின்றனர். அதிர்ச்சி.

விடிகிறது. வீட்டிற்குள் இராணுவம். அவர்கள் யார் என கேட்கிறது. அவர்கள் தனது விருந்தினர் எனக் கூறி சமாளிக்கிறான். இராணுவ தலைமையதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கிறான் அவர்களை கொல்லாமல் இருக்கு. அவர்களை அழைத்துக்கொண்டு ஹோட்டலில் தஞ்சமடைகிறான். அங்கே ஐ.நா சபையின் அமைதிப்படைத்தலைவர் பேட்டி தந்துகொண்டிருக்கிறார். ''நாங்கள் அமைதியை காக்கவே வந்திருக்கிறோம்! அமைதியை கொணர அல்ல! '' இவனுக்கு மேலும் அதிர்ச்சி. அனைவரையும் அந்த ஹோட்டலில் தங்க வைக்கிறான்.

நாடு முழுவதும் நடுரோட்டில் வைத்து மக்கள் வெட்டிக் கொல்லப்படுகின்றனர். இராணுவமும் சுட்டுக்கொல்கிறது. அதற்குள் ஹோட்டலில் மேலும் மேலும் பலரும் தஞ்சமடைகின்றனர். எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது. அங்கே இருக்கும் பத்திரிக்கையாளரையும் ஐ.நா உறுப்பினர்களையும் ஹோட்டலை விட்டு வெளியே செல்ல இராணுவம் தடை விதிக்கிறது. வெளியே என்ன நடக்கிறது என்பது உலகிற்கு தெரியாமலே போகிறது.

அந்நாட்டின் இராணுவமே அவர்களை அழிக்கத்தயாராய் இருக்கையில் யாரால் அவர்களை காக்க முடியும். உலக நாடுகளின் தலையீட்டுக்காய் காத்திருக்கின்றனர். பிரான்சிலிருந்து படைகள் குவிகிறது. மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். ஆனால் அவர்களும் இங்கிருக்கும் ஐ.நா உறுப்பினர்களையும் பத்திரிக்கையாளர்களையும் அழைத்துச்செல்லவே வந்ததாக தெரிகிறது.

அவர்களும் அங்கிருந்து செல்கின்றனர். இராணுவமும் , ஆயுதங்களோடு டூட்சி மக்களை அழிக்கக் காத்திருக்கும் மக்களுமாய் வெளியில் அலைய , இந்த ஆயிரம் பேரையும் எப்படி காப்பது?

இப்படித்தான் செல்கிறது ஹோட்டல் ருவாண்டா திரைப்படம். படம் பார்த்து முடிக்கையில் வெறும் மௌனம் மட்டுமே பார்ப்பவர் மனதில் நிறைந்திருக்கும்.

படத்தின் ஒரு காட்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஹோட்டலுக்கு வெளியில் நடக்கும் அக்கிரமங்களை படம் பிடித்து வந்து அதை தனது சேனலில் ஒளிபரப்ப சொல்கிறார். அதை பார்க்கும் பால் அவனிடம் வந்து நன்றி கூறுகிறான்.அந்த பத்திரிக்கையாளன் அதீத போதையில் ''இந்த வீடியோவால என்ன நடந்துரும்னு நினைக்கிற.. நைட்டு எல்லாரும் டிவில இதை பார்த்துட்டு , ஐயோ பாவம்னு உச் கொட்டிட்டு சோறு திங்க போயிருவானுங்க.. ஒரு மயிறும் புடுங்க முடியாது என சொல்லி அழுகிறான்.

அதே போல இன்னொரு காட்சியில் உலக நாடுகள் இந்த பிரச்சனையில் தலையிடுவதால் அவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு கூட லாபம் கிடையாது என்கிறான்.

செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த ஒரு பெண் ''அங்கே ஒரு பெண் இனிமேல் நான் எப்போதும் டூட்சியாய் இருக்க மாட்டேன் நான் ஹூட்டுவுக்கு அடிமை என மான்றாடியும் அவளை நிர்வாணமாக்கி நடு ரோட்டில் வைத்து பலரும் வன்புணர்ச்சியில் ஈடுபட்டனர் '' என அழுத படி தெரிவிக்கையிலும் , ஒரு அகதி ''அவர்கள் முதலில் குழந்தைகளைத்தான் தேடிக்கொல்கின்றனர்,.. நமது அடுத்த தலைமுறையே இனி இருக்காதோ என பயமாய் இருக்கிறது'' என பதறும் போதும்.. ஏனோ தலையில் இடி விழுந்ததுபோல் இருந்து தொலைக்கிறது.கண்களில் நீர். ஏனோ இந்த திரைப்படத்தை தற்கால சூழலில் ஒரு திரைப்படமாயும் அதில் வரும் பாத்திரங்களை நடிகர்களாயும் அது நடிப்பு என்றும் நினைத்து பார்க்க இயலவில்லை. நம் கண் முன்னே நிகழும் பெரும் படுகொலைகளுக்கு ஒரு மௌனசாட்சியாய் இருக்கின்ற நம் கையறுநிலை உறுத்தித்தொலைக்கிறது.

ஒரு காட்சியில் நாயகன் தனது இனத்தவனான ஒரு இராணுவ தலைவனிடம் கேட்கிறான் '' அந்த இனத்தை முழுவதுமாய் அழித்து விட முடியுமென நினைக்கிறாயா.. ''

''நாங்கள் அதில் ஏற்கனவே பாதி வெற்றியடைந்து விட்டோம்'' என சிரித்தபடி பதிலளிக்கிறான். அவனை பார்த்துவிட்டு அங்கிருந்து பிரதான சாலை வழியாக செல்ல.. வழியெங்கும் புகைமூட்டம்.. வழி தெரியவில்லை.. இவனது டிரைவர் மேடு பள்ளமான இடத்திற்கு நுழைவதாய் இவனக்கு படுகிறது.. வண்டி குலுங்குகிறது. வண்டியை நிறுத்த சொல்லி விட்டு புகையை விலக்கி சாலையை தேடுகிறான். சாலையெங்கும் பிணங்கள். வெட்டப்பட்டும் சுடப்பட்டும் கொத்து கொத்தாய் பிணங்கள். பார்க்கும் நமக்கு உடல் நடுங்குகிறது.

1994ல் ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இத்திரைப்படம். அது நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் வெளியானது. மிக குறுகிய வெளியீட்டில் வெளியிடப்பட்டு நல்ல வெற்றியை பெற்றது. மற்றபடி நடிப்பு இசை திரைக்கதை பற்றியெல்லாம் எழுதப்போவதில்லை. என்னால் அதன் தீர்க்கத்தையும் சிறப்பையும் கவனிக்கவோ ரசிக்கவோ முடியவில்லை. இதே திரைப்படத்தை போன வருடம் அல்லது ஆறு மாதம் முன்போ பார்த்திருந்தால் இத்தனை தாக்கம் இருந்திருக்குமா எனத்தெரியவில்லை.

இத்திரைப்படம் மூன்று பிரிவுகளின் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. (எதிலும் வெற்றிபெறவில்லை )

இப்படம் துவங்கும் போது நாயகனாக நடித்த அந்த நடிகர் திரையில் தோன்றி இத்திரைப்படத்தின் மூலம் வரும் வருவாய் ருவாண்டா இனப்படுகொலையில் பிழைத்தவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கிறார். ஆனால் இணையத்தில் அது குறித்து தேடுகையில் அவ்வாறு நடக்கவில்லை என்கிற மிக வருத்தமான செய்தியை காண நேர்ந்தது.

மற்றபடி அனைவரும் கட்டாயம் தற்கால சூழலில் பார்க்க வேண்டிய திரைப்படம். மிக முக்கியமாக GENOCIDE பற்றி தெரிந்து கொள்ள நிச்சயம் உதவும்.



*********


பின் குறிப்பு - உரையாடல் அமைப்பின் சார்பில் அடுத்த முறை திரையிட இந்த படத்தை பரிந்துரைக்கலாம்.

19 June 2009

"சாமியார்" STRIKES BACK..!






***************

நம்ம சிஷ்யனும் பல நாளா அந்த ஆஸ்ரமத்தில் படிக்கறான் , தியானம் பண்றான் ஆனா ஞானம் மட்டும் கிடைக்கவே இல்லை.

ஒரு நாள் ரொம்ப கோபமா குருகிட்ட போனான்.

''சாமி எனக்கு ஞானம் வேணும் ''

சாமியே ஒரு நிமிஷம் ஷாக்காகிட்டாரு..

"டேய் தம்பி நிஜமாத்தான் கேக்கறீயா? ''

''ஆமா சாமி ஐ வாண்ட் ஞானம் வெரி அர்ஜென்ட்லி''

குரு தாடையை சொறிந்த படி யோசித்தார்.

''மதியம் சோறு தின்னியா ''

''தின்னேன்.. அதுக்கு என்ன இப்போ.. ஐ வான்ட் ஞானம் ''

''ஏன்டா சோறு தின்னியே... தட்ட கழுவுனியா.. போய் அதை கழுவுடா.. ''

சிஷ்யனுக்கு ஞானம் வந்தது.

*******************

குரு மிக சீரியஸாக ஞானம் குறித்துப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். பின் வரிசையில் அமர்ந்திருந்த நமது சிஷ்யன் குசுகுசுவென பக்கத்தில் இருந்தவனிடம் பேசிக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த குருவிற்கு அவனது குமட்டில் குத்த வேண்டும் போலிருந்தது.

''டேய் மொட்டை எழுந்திரு.. '' என்றார்

''சொல்லுங்க சாமி '' பயந்த படி எழுந்து நின்றான் சிஷ்யன்.

''ஒரு கை ஓசை எப்படி இருக்கும் ''

ஆஹா கிழவன் கவுண்டமணி மாதிரி பளீர்னு அறையப்போறான் போலிருக்கே என யோசித்த சிஷ்யன்.

''இரண்டு கை ஓசைல பாதி அளவு இருக்கும் சாமி '' என்றான்

குரு கடுப்பாகி அன்றைய வகுப்பை முடித்துவிட்டு கிளம்பினார்.

*****************

ஒரு நாள் குருநாதர் தனது பிரதான சிஷ்யனுக்கு ஞானம் கிடைத்துவிட்டதுனு அதிகாரப்பூர்வமா அறிவிச்சாரு.

பக்கத்து ஊரு குருமார்கள் பக்கத்து நாட்டு குருமார்கள்லாம் கூட இத கேட்டு ஆச்சர்யப்பட்டு , நேர்ல கிளம்பி வந்தாங்க.

குரு சொன்னாரு சாமிங்களா பாருங்க என் சிஷ்யன எனக்கே கிடைக்காத ஞான அறிவ அடைஞ்சிட்டான்.

சிஷ்யன் தனியா ஒரு ஆத்தோரம் மரத்தடில உக்காந்திருந்தான்.

இந்த வெளியூர் சாமியாருங்கள்லாம் ஒன்னா போயி .. '' தம்பிரி உனக்கு எப்படி ஞானம் வந்துச்சு '' னு கேட்டாங்க

''வந்துருச்சு ''

''சரி இப்போ எப்புடி பீல் பண்றடா செல்லம்.. ''

''அட நீங்க வேற செம மொக்கையா இருக்கு சாமி.. '' என்றான் சிஷ்யன்.

*****************

நம்ம குசும்பு புடிச்ச சிஷ்யனோட பொண்டாட்டி சாகக் கிடந்தார். மரணப்படுக்கையில் சிஷ்யனின் கைகளை பிடித்துக்கொண்டு '' அத்தான் , ஐ ல்வ் யூ '' என்றார்.

''முடியல.. '' என்றான் சிஷ்யன்.

''அத்தான் , நான் செத்துட்டா நீங்க எந்த பொண்ணையும் நினைச்சு கூட பாக்கமாட்டேனு சத்தியம் பண்ணிக்குடுங்க ''

''அவ்வ்வ்வ் பண்ணிட்டா போச்சு.. '' வருத்தத்துடன் கையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்தார். சத்தியம் பண்ணியதும் டொக் என மண்டையை போட்டார் அவனது மனைவி.

அதற்கு பின் சில மாதங்களுக்கு கருமம் புடிச்ச சத்தியம் பண்ணிட்டோமேனு சிஷ்யன் பாக்கற பிகரையெல்லாம் சைட்டு கூட அடிக்காமல் பல்லைக்கடித்துக்கொண்டு அடக்க ஒடுக்கமாய் இருந்தான்.

ஆனாலும் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு அழகு சுந்தரி அவன் வாழ்க்கையில் குறிக்கிட்டாள். இருவரும் கன்னாபின்னாவென்று காட்டுத்தனமாய் காதலித்தனர். திருமணமும் செய்து கொண்டனர். முதலிரவு முடிந்து அடுத்த நாள் இரவு.

செத்துப்போன சிஷ்யனின் பொண்டாட்டி ஆவியாய் வந்தார். முதலிரவில் சிஷ்யனும் அவர்கள் பொண்டாட்டியும் பேசியது செய்தது என எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்தார். சிஷ்யனால் தாங்கமுடியவில்லை. அடுத்த நாள் இரவு புது மனைவி ஆசையோடு நெருங்கினால் இவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பயந்து போய் அட நீ வேற நொய்யி நொய்யினு நானே அரண்டு போய் கிடக்கேன் என்று விரட்டினான். இல்லற வாழ்க்கையில் இன்பமே இல்லாமல் பண்ணியது அந்த ஆவி.

அவனால் அந்த ஆவி டார்ச்சரால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. சரி நம்ம குருவிடம் ஒரு வழி கேட்போம் என ஆசிரமத்திற்கே வந்தான்.

''சாமி என்னால முடியல.. செத்துப்போன என் பொண்டாட்டி ஆவி செமயா டார்ச்சர் பண்ணுது.. நான் எங்க போனாலும் என்னை பாலோ பண்ணுது.. ப்ளீஸ் அந்த ஆவிகிட்டருந்து என்ன காப்பாத்துங்க , என் பொண்டாட்டியோட கூட குஜாலா இருக்க முடியல.. ''

''இன்னாடா சிஷ்யா இதுலாம் ஒரு சப்ப மேட்டரு , ஆப்டர் ஆல் இட் இஸ் ஜஸ்ட கோஸ்ட் படி.. இதுலாம் நீயே ஹேண்டில் பண்ணிக்க கூடாது.. சரி ஒன் காதக்கொண்டா ''

சிஷ்யன் காதில் ஒரு ஐடியா சொல்லி அனுப்பி விட்டார்.

அடுத்த நாள் ஆவி வந்தது.. '' டேய் புருஷா.. ''

''ஆவிங்க என்னை மன்னிச்சிருங்க.. உங்கள எதிர்த்துகிட்டு என்னால நிம்மதியா வாழவே முடியாது.. அதனால நான் என் புதுப்பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. இனிமே எந்த பொண்ணையும் மனசால கூட நினைக்க மாட்டேன்.. என்னை விட்டுருங்க. ''

''அது '' என்றது ஆவி.

''ஆனா ஒரு சின்ன கன்டிஷன்.. நான் ஒரு கேள்வி கேப்பேன் அதுக்கு நீங்க பதில் சொல்லிட்டா .. நான் சொன்னமாதிரி டைவர்ஸ்.. ஆனா பதில் சொல்லலை.. ஓடிப்போயிரணும்.. ''

''கேளுடா என் வென்று ''

''பதில் சொல்லாட்டி போயிரணும் ஓகேவா.. ''

''ஓகே ''

வீட்டிற்குள் சென்று கைநிறைய கடுகுகளை எடுத்து வந்தான்.

''ஆவிங்க இப்போ என் கைல எத்தனை கடுகு இருக்குனு சொல்லுங்க.. ''

டிங் என ஆவி எங்கோ ஓடி மறைந்தது. சிஷ்யன் புதுப்பொண்டாட்டியோடு குஜாலாக இருந்தான்.

*************

நம்ம குரு ஒரு காட்டுக்கு நடுவில் இருந்த ஒரு குட்டி குடிசையில் தனிமைல தியானம் பண்ணிகிட்டு இருந்தார். அந்த காட்டு வழியா போன ஒரு திருடன் அந்த குடிசைய பார்த்து திருட ஏதாவது கிடைக்குமானு பார்க்க உள்ளே நுழைஞ்சான். உள்ளே சாமியாரையும் அவரோட புத்தர் சிலையத் தவிர ஒன்னுமே இல்லை. திருதிருனு முழிச்சிட்டு நின்னான். தியானத்தில் இருந்த சாமியாரு முழிச்சுப் பார்த்து

''அடடா திருடன் தம்பியா வாங்க.. ரொம்ப தூரத்திலருந்து வந்துருப்பீங்க போலிருக்கே..தண்ணி சாப்பிடறீங்களா'' என்றார்

ஆஹா சாமி மென்டலா இருப்பாரோனு பயந்துட்டான்.

''என்ன தம்பி நான் லூசானுதான யோசிக்கிறீங்க.. அப்படிலாம் இல்ல.. வந்துட்டீங்க ம்ம் உங்களுக்கு ஏதாவது பரிசா குடுக்கணுமே.. ''

டுமீல்னு தனது உடைகளை கழட்டி அவன் கையில் குடுத்துட்டு நிர்வாணமா நின்னாரு.

இவர இப்படி ஒரு கோலத்தில பாத்து பயந்து போய் அவரு குடுத்த துணிய வாங்கிட்டு , திருடன் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினான்.
சாமியார் நிர்வாணமா.. நிலா ஓளில தியானத்த தொடர்ந்தாரு..

''ம்ம்.. சின்ன பையன்.. பாவம்.. கொஞ்சம் வெயிட் பண்ணிருந்தா நிலாவையே குடுத்திருப்பேன்..''

17 June 2009

அழகானது நம் வாழ்க்கை...- LIFE IS BEAUTIFUL



இடுக்கண் வருங்கால் நகுக! அதனை
அடுத்தூர்வது அஃது ஒப்பது இல் .

வாழ்வில் துன்பங்கள் நிகழும் தருணங்களில் அத்துன்பத்தை பார்த்து நகைத்துவிடு !! எதிர்த்து வரும் துன்பத்தை தொலைத்து விட அதைவிட சிறந்த வழியொன்றுமில்லை.

- திருவள்ளுவர்.


நமது அன்றாட வாழ்வாதார பிரச்சனைகளுக்காக இயந்திரங்கள் போல காலை முதல் மாலை வரை பணமும் உணவும் உடையும் இருப்பிடமும் தேடி அலைகின்ற நாம் என்றாவது ஒரு நாள் நம் வாழ்வின் நிகழுகின்ற அழகான சின்ன சின்ன தருணங்களை ரசித்துருப்போமா . நமது தீராத இந்த வாழ்க்கையின் ஒட்டம் என்றுமே முடிவில்லாதது . குழந்தைகளின் புன்னகையில் மிளிரும் மகிழ்ச்சியும் , மனைவியின் சாம்பாரில் கிடைக்கின்ற புளிப்பும் அதனூடே கசிந்தோடும் அன்பான இனிப்பும்(!) , தந்தையின் அளவில்லா கனிவோடு விரிகின்ற நினைவுகள் தாயின் அரவணைப்பு என எத்தனையோ எண்ணிக்கையில்லா சின்ன சின்ன தருணங்கள் தரும் அளவில்லா மகிழ்ச்சியை , பணம் மற்றும் அது தரும் சுகங்களுக்காக கவனியாது கடந்து போயிருப்போம் . ஒவ்வொரு நொடியும் எத்தனை இன்பகரமானது நம் வாழ்வில் , அவற்றை என்றுமே நாம் முழுமையாய் அனுபவிப்பதில்லை . ஒரு சிலர் சிறிய துன்பம் வந்து விட்டாலும் இன்றோடு தன் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல இடிந்து போய் அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள் . வாழ்க்கை அதுவல்ல அது இனிமையானது அழகானது .

வாழ்வின் இன்பங்கள் நிகழும் தருணங்களில் மட்டும்தான் அவற்றை அனுபவிக்க வேண்டுமா.. துன்பங்கள் ஏற்படும் போது கூட, அதனையும் மிக எளிதாக, வாழ்வில் அன்றாட நிகழ்வினைப்போல எடுத்துக்கொள்ளும் ஒருவனை குறித்த இத்தாலிய திரைப்படமே லைஃப் ஈஸ் பியூட்டிபுல் ( ENGLISH - LIFE IS BEAUTIFUL ) ( ITALIAN - la vita e belle ) . இப்படத்தினை ராபர்ட்டோ பெனிங்கினி ( Roberto benigni ) எழுதி இயக்கியதோடு மட்டுமல்லாது படத்தின் முக்கிய பாத்திரமான(கதாநாயகன் ) கீடோ ( GUIDO ) வாகவும் நடித்துள்ளார் .

வாழ்க்கையை மகிழ்ச்சியோடு மட்டுமே வாழ்கின்ற இக்கதையின் நாயகன்( யூத இளைஞன் ) , இத்தாலியின் அரிஸோ நகரத்திற்கு பிழைப்புக்காக வருகிறான் . அது இரண்டாம் உலகப்போரில் முசோலினி , நாஜி ஹிட்லர் படையோடு கூட்டணி அமைத்து போரை எதிர்கொள்ள முடிவெடுக்கும் காலம் . அங்கே அவன் தற்செயலாக சந்திக்கும் ஒருத்தியிடம் மனதை பறிகொடுக்க , அவள் இவனை பல முறை தற்செயலாகவே சந்தித்தும் , அவளை சரியாக சந்திக்க வாய்ப்பின்றி தவிக்கிறான் . அவளது நிச்சயதார்த்த விழா அவன் வேலை செய்யும் ஹோட்டலில் நடக்க அங்கே அவன் அவளைகாண , இருவரும் அங்கிருந்து தப்பி திருமண முடித்து கொண்டு இத்தாலியில் ஒரு புத்தகக்கடை மூலமாக சம்பாதித்து மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர் . காலசுழற்சியில் ஐந்தாண்டுகள் கடக்கிறது . அவனுக்கு ஜோஸ்வா எனும் குழந்தை பிறந்து அவனுக்கு ஐந்தாண்டு நிறைவடையும் ஒருநாளில் அவனும் அவனது குழந்தை மற்றும் மனைவியும் கைது செய்யப்படுகின்றனர் .

இரண்டாம் உலகப்போர் உச்சத்தை எட்டுகிறது , நாஜிப்படைகளின் யூதர்கள் மீதான தாக்குதல் தொடங்க அதில் இவர்களது குடும்பமும் மாட்டிக்கொள்கிறது . ஹிட்லரின் யூதர்கள் மீதான இத்தாக்குதலில் கான்சென்ட்ரேசன் கேம்ப் ( concentration camp ) என்னும் முகாம் அமைத்து அதில் யூதர்களை குவியல் குவியலாக கொன்று குவிக்கும்( விஷவாயுவால் மக்களை கொல்லும் GAS CHAMBER ) முகாமில் கீடோவும் அவனது குடும்பமும் சிக்கிக்கொள்ள அங்கே தனது மகனையும் தனது மனைவியையும் எப்படி காப்பாற்றுகிறான் மற்றும் தன் மகனுக்கு அங்கே நடக்கின்ற கொலைகளை பற்றியும் தான் அனுபவித்து வரும் துன்பங்கள் குறித்தும் அறியதராமல் எப்படி அத்துன்பத்தை இன்முகத்துடன் எதிர்கொள்கிறான் என்பதே இப்படத்தின் கதை .

படத்தின் நாயகன் கிடோவா நடித்திருக்கும் ராபர்ட்டோ பெனிங்கினி தனது மிகையில்லாத நடிப்பாலும் , படம் நெடுக செய்யும் சிறுசிறு சேட்டைகளாலும் கவர்கிறார் . காதலியை துரத்தி துரத்தி காதலிப்பதில் ஆகட்டும் , தன் காதலிக்கு தன் காதலை உணர்த்தும் காட்சியிலும் , காதலியின் நிச்சயதார்த்தத்தில் , தன் காதலிக்குத்தான் திருமணம் என அறியாது அவ்விழாவில் காதலியினை மணமுடிக்க இருக்கும் மணமகனை கலாய்ப்பதில் ஆகட்டும் தனது நகைச்சுவை உணர்விலும் உடல்அசைவு மொழிகளிலும் அசத்துகிறார் . படத்தின் இரண்டாம் பகுதியில் மனதிற்குள் எந்த நேரத்திலும் தன் மகனையும் தன்னையும் கொன்று விடுவார்களோ என்கிற அச்சத்திலும் தன் மகனிடம் அக்கேம்பை பற்றி கூறுகையில் அது ஒரு போட்டி என்றும் அதில் அவர் கூறும் விதிகளும் தனது அறையில் அச்சிறுவனை அவனது அறையில் மறைத்துவைத்து காப்பதும் அருமையாகவும் அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது . தந்தைக்கும் மகனுக்குமான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் , தன் மகனை நாஜி படையிலிருந்து காக்க எடுத்துக்கொள்ளும் அக்கறையிலும் திரைக்கதை அமைப்பு அசத்துகிறது . தன்னைக்கொல்ல அழைத்து செல்லும் ஒரு காட்சியில் மறைந்திருந்து பார்க்கும் மகனின் மனம் நோகக்கூடாது என்பதற்காக அந்த இராணுவீரனை இமிடேட் செய்து நடந்து செல்லும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும் .

படத்தின் காட்சியமைப்புகள் முதல் பாதியில் காதல்காட்சிகளாலும் நகைச்சுவையாலும் நிரம்பி வழிய மிக மென்மையாகவும் , இரண்டாம் பாதியில் கான்சென்ட்ரேசன் கேம்ப் காட்சிகளின் கொடுமைகளையும் அங்கு யூதர்களின் மீதான தாக்குதல்களையும் கடுமையாகவும் படமாக்கியிருப்பதும் இரண்டு பாதிகளுக்கும் ஏற்ற பிண்ணனி இசையிலும் அசத்தியிருப்பது இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் .

படத்தின் இயக்குனர் ராபர்ட்டோ பெனிங்கினி இக்கதையை உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கியிருப்பது படத்தின் மற்றுமொறு பலம் . படத்தில் ஒரு காட்சியில் இராணுவ வீரர்களினூடே தனது மகனை காப்பாற்ற அவனை அழைத்து கொண்டுஅந்த கேம்பில் ஒரு பகுதிக்குச்செல்ல அவ்வேளையில் தன் மகன் உறங்கிவிட பனிமூட்டத்தினூடே இவன் நகர்ந்து செல்ல வழி தெரியாமல் பனிமூட்டத்தை தன்கைகளால் விலக்க பனிக்கு பின்னால் பல ஆயிரம் பிணங்கள் பெருங்குவியலாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் காட்சி ஒன்றின் மூலமாக நாஜிப்படைகளினுடைய மற்றும் அவர்களது யூத வெறுப்பையும் கான்சென்ட்ரேசன் கேம்புகளின் கொடூரத்தையும் சிலவிநாடிகளில் உணர்த்துவது மனதை கனக்க செய்தாலும் வியப்பில் ஆழ்த்துகிறது . ஹிட்லரின் யூத எதிர்ப்பு நிலையை அதைவிட மிக எளிமையாக சொல்ல இயலுமா என தெரியவில்லை மிக அருமையான படமாக்கல் அது . படம் நெடுக யூதர்கள் மீதான அக்கொடூர தாக்குதல்களை நாயகன் தனது மகனுக்கு அறியாமல் மறைப்பதில் காட்டும் அக்கறையும் அதனால் அவனே உயிரிழக்க நேரிடுவதும் , நாமே அக்குழந்தையை அங்கிருந்து மீட்டு வந்துவிடலாமோ என்கின்ற நமது மனநிலையும் இயக்குனருக்கு கிடைத்த வெற்றி .

1997 ஆம் ஆண்டு வெளியான இப்படம் குறித்து விமர்சகர்கள் அதிகம் புகழ்ந்தே கூறியிருந்தாலும் , சில விமர்சகர்கள் இப்படத்தில் யூதர்கள் மீதான தாக்குதல்களை படத்தில் காட்டியிருக்கும் விதம் மிக எளிமையாகவும் , அத்தாக்குதல்களின் வலியும் வேதனையும் சரியாக பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது .

இப்படத்தில் முதல்பாதியில் வரும் காதல்காட்சிகள் மிக அற்புதமானவை , நிச்சயதார்த்த விழாவில் மிகப்பெரிய விருந்து நடக்கும் ஒரு டைனிங் டேபிளின் கீழே காதலர் இருவரும் தங்களது காதலை சொல்ல அங்கே தரப்படும் முத்தம் திரைப்படங்களில் வெளியான சிறந்த முத்தக்காட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது .
தந்தை மகன் அன்பையும் அவர்களிடையேயான உரையாடல்களையுமே மையமாக கொண்டு மென்மையாக அவ்வுறவின் ஆழத்தை வலியுறுத்தும் இப்படம் , ஒவ்வொரு தந்தை மற்றும் மகனும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் .

இத்திரைப்படம் நிச்சயம் இத்தாலிய ரசிகர்களுக்கானது மட்டுமல்ல , உலகின் அனைவருக்குமானது . வாழ்வினை ரசிப்போரும் , தந்தையை நேசிப்போரும் குடும்பத்தோடு கட்டாயம் கண்டு ரசிக்கலாம் .



***************************




ராபர்ட்டோ பெனிங்கினி - இத்தாலி நடிகரான இவர் இப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை இப்படத்திற்காக பெற்றார் . இது தவிர இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த இசை என்ற இரண்டு விருதுகளையும் பெற்றது.

இப்படத்தினை நமது தமிழ்நாட்டில் கூட டொக்டர்.விஜய் அவர்களது அபரிமித நடிப்பிலும் விவேக்கின் கருத்திலும் வெளியான '' யூத் '' திரைப்படம் இப்படத்தின் முதல்ப் பாதியை எந்த வித உரிமையும் இன்றி தழுவி ( அல்லது அட்ட காப்பி அடித்து ) எடுக்கப்பட்ட மகா மட்டமான படமாகும் . அப்படத்தின்(யூத்) ஒவ்வொரு காட்சியையும் இவ்வளவு நன்றாக எடுக்க முடியுமா என அறிய விரும்பினால் மேற்ச்சொன்ன இத்தாலிய திரைப்படத்தை காணலாம் .

15 June 2009

தமிழ் ஈழம் எரியுதே! தமிழர் இனம் அழியுதே!


நடுநிசி புணர்வின் உழைப்பு
முதுகின் மையத்தில் லேசான வலி
காலைக்கடன் கழிக்கையில்
தினத்தந்தி வாசிக்கையில்
நேற்றிரவு கடித்த கோழிக்கறியும்
நேற்றைய மதிய வறுமீனும்
தீயாய் பற்றி எரிகிறது பின்னாலே

காலையில் பூப்பூவாய் இட்டிலி
சுவையறியா ஞானசூனியம்
தோசை வார்த்தால் என்ன?

கடன் அட்டைக்காரன்
காலை பத்துமணிக்கு..
சீட்டுப்பணம்
மாலை நாலு மணிக்கு..

குறித்துக்கொண்டேன்

காதோராம் லேசாய்
நரைத்த நரைக்கு
கறுப்புச்சாயம்!
முதுகுமைய வலி
இன்னும் குடைந்தபடி..

மாலைக்காட்சி மாசிலாமாணி
இடைவேளையில் பார்த்தவளுக்கு
எவ்வளவு பெரிய கொங்கைகள்?
இரவில் அவளை நினைத்தவாறே
இல்லத்தரசியோடு சவுந்தர்ய லவுகீகம்..

கோலங்கள் அரசி
ஐபிஎல் 20-20
டிவிடி - புதுப்படம்
ஒருவழியாய் ஒரு தினம் முடிகிறது
இரவு வரவேற்கிறது
இன்னும் அரைமணி நேரத்தில்
எழுதவேண்டும் ஒரு கவிதையாவது..

காத்திருக்கிறாள்
கட்டிலில் மனைவி.

கணினி கண் திறந்து
தட்டச்சுகிறேன்..
“அய்யோ அய்யோ
தமிழ் ஈழம் எரியுதே
தமிழர் இனம் அழியுதே
இரக்கமில்லா அரக்கரே
முதுகில் குத்திய துரோகிகளே...”


************

டி20 உலகக்கோப்பை - இந்திய அணியும் தோல்விகளும்




ஒரு வழியாக இந்தியாவின் டி20 உலகக்கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. இங்கிலாந்துக்கெதிரான நேற்றையப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது நமது அணி. ரசிகர்கள் பலரும் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து கொண்டும் நகத்தைக்கடித்து கொண்டும் அரைத்தூக்கத்தை அடக்கிக்கொண்டும் நேற்றைய போட்டியை பார்த்திருந்தால் நிச்சயம் வருத்தமாய் இருந்திருக்கும். பலருக்கும் அப்படித்தான் இருந்தது.

மிக முக்கியமான இந்த போட்டியில் கலந்து கொள்ளும் முன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் யுவராஜ் சிங் மிக திமிராய் இங்கிலாந்தை தோற்கடிப்போம் எனப் பேசியிருந்தார். ஆனால் இங்கிலாந்து நேற்று ஆடியதைப் பார்த்த போது அவர்களது ஆட்டத்திறமையை இந்திய அணியினர் தவறாக கணித்தனரோ என்றே என்னத்தோன்றுகிறது. வெ.இ அணிக்கெதிரான ஆட்டத்திலும் இதுவே நடந்தது என்பது கண்கூடாகத் தெரிந்தது.

இந்த ஆட்டத்தின் தோல்விக்கான காரணங்களை முதலில் பார்த்துவிடுவோம்.

* மிக மோசமான பீல்டிங் ( கடைசி ஓவரில் யுவராஜ்சிங் விட்ட நான்கே அதற்கு சாட்சி )

*இக்காட்டான சூழலில் தேவையில்லாத ரன்களை வாரி வழங்கியது .

*14 எக்ஸ்ட்ராஸ் .

*இர்பான் பதான் மற்றும் ஓஜாவுக்கு பதிலாக ரவீந்தர ஜடேஜாவையும் ஆர்பி சிங்கையும் பயன்படுத்தியது. ஒரு மிக முக்கியமான போட்டியில் ஒரு புதுமுக ஆட்டக்காரரை பயன்படுத்துவது மிகப்பெரியத் தவறு. இர்பான் பதான் இத்தொடரில் சுமாராக பந்து வீசீனாலும் பேட்டில்கில் ஓரளவு பிராகாசித்து வந்தார்.

*ஆட்டத்தின் பதினைந்தாவது ஓவரை நன்றாக பந்து வீசிக்கொண்டிருந்த ஆர்.பி.சிங்கிற்கு பதிலாக இஷாந்தை உபயோகித்ததும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அந்த ஓவரில் மஸ்கரனாஸ் பதினைந்து ரன்கள் விளாசியது.

*ரவீந்தர ஜடேஜாவை மூன்றாவதாக களமிறக்கியது . அவருக்கு பதிலாக ஓரளவு ஃபார்மில் உள்ள தோனியோ அல்லது யுவராஜோ இறங்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். அல்லது அடித்து ஆட வேண்டி அனுப்பியிருந்தால் யூசுப் பதானை அனுப்பியிருக்கலாம். வாழ்வா சாவா போராட்டமான ஒரு போட்டியில் தனது சிறந்த வீரர்களை இறக்கி போராடிப்பார்த்திருக்க வேண்டும்.



இப்படி பல காரணங்கள் இருந்தாலும், இந்திய அணியின் மெத்தனமான ஆட்டமே தோல்விக்கு மிகம்முக்கிய காரணம்.

மேற்ச்சொன்னதெல்லாம் அந்த முக்கிய ஆட்டத்தில் தோற்றதற்கான காரணங்களே. அது தவிர இந்த தொடரில் தோற்றதற்கான காரணங்கள்

*ஐபிஎல் ஆட்டத்தொடரின் அளவுக்கதிகமான கிரிக்கெட் போட்டிகளால் நமது வீரர்கள் சோர்ந்து போயிருந்தனர்.

*அணிக்குள் நடந்ததாக சொல்லப்படும் சேவாக்-தோணி இடையிலான மோதல் , அணியை இரண்டாக பிரித்துவிட்டதாக தெரிகிறது.

*மிக முக்கியமான பந்துவீச்சாளராக கருதிய , காயத்திலிருந்து குணமடைந்த ஜாகீர்கான் ஒரு போட்டியில் கூட பிரகாசிக்காது போனது மிகப்பெரிய சறுக்கல்.

*வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இங்கிலாந்து பிட்சுகளில் நமது ப.வீக்கள் யாருமே சரியாக பந்து வீசாதது.

*வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனமான பவுன்சர்களை சரியாக வீசி திணறடித்தது.

*வலுவான பேட்டிங் வரிசையாக கருதப்படும் இந்திய அணியின் பேட்டிங் , இந்த தொடரில் மிக மோசமாக தெரிந்தது. கம்பீர்,ரெய்னா,யுவராஜ்,தோனி,யூசூப் பதான் என யாருமே சோபிக்கத்தவறியதே மிகப்பெரிய இழப்பு.

*சென்ற முறை இந்திய அணியிடமிருந்த துடிப்பும் வேகமும் இந்த முறை மிஸ்ஸிங். ( போன முறை புதியவர்களாய் இருந்த பலரும் இம்முறை நட்சத்திரங்களாகிப்போனது காரணமாய் இருக்கலாம் , அதிலும் கோடீஸ்வர நட்சத்திரங்களாய் ஆகிப்போனது.)

ஆட்டம் முடிந்ததும் தோனி அளித்த பேட்டியில் இந்திய அணியின் இத்தோல்விக்கு தானே பொறுப்பேற்று இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாய் தெரிவித்தார். அது தவிர இந்திய அணியின் மோசமான பேட்டிங்கையும் வெகுவாக சாடியிருந்தார். இதுவரை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் மகேந்திரசிங் தோனியே அனைவரையும் கவர்ந்த மற்றும் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர்.அதனால் இந்த சரிவு நிரந்தரமானதல்ல என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்.

இனி வரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுமளவிற்கு நமக்கு அறிவோ அதிகாரமோ கிடையாது எனவே.. இனியாவது கிரிக்கெட்டில் உள் அரசியல் தேவையில்லாத பிரச்சனைகள் , சரியான அணித்தேர்வு , துடிப்பான ஆட்டம் என சென்ற முறை கோப்பையைக்கைப்பற்றிய அணியைப்போல இந்திய அணி ஆக வேண்டும் என்பதே அனைவரது ஆவலும்.

10 June 2009

விக்கிபீடியா விக்காத பீடியா?

படம் உதவி : தி ஹிந்து


தமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறது. தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார்.

நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.
இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடி
முகவரி: New Horizon media, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018

விவரங்களுக்கு விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் பார்க்கவும்.

அனைத்து தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறோம்.

தொடர்புடைய பத்ரியின் பதிவு!

தொடர்புடைய தமிழ்விக்கிபீடியா பதிவு!

09 June 2009

அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்..!


என் முதல் தங்கை திருமணத்தின் போது என் சார்பாக அந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எண்ணிப்பார்த்தால் சரியாக ஒருவர். அவன் என் பால்ய நண்பன். இதோ இன்னொரு திருமணம். இன்னொரு தங்கை. இம்முறை என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கான நண்பர்கள். முகமறியா முகமறிந்த என்னை அறியாத நான் அறியாத ஆயிரமாயிரம் நண்பர்கள்.

அனைவரையும் தனித்தனியாக அழைக்கும் அளவிற்கு தற்சமயம் வசதியில்லாததால்.. உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய இதோ இந்த வலைப்பூவிலேயே அழைக்கிறேன்..

கட்டாயம் வந்திடுங்க.. அதுவும் குடும்பத்தோட வாங்க..

என் தங்கைக்கு திருமணம். ஜீன் மாதம் 11 ம் தேதி. ( வர வியாழக்கிழமை ) உங்கள் ஆசீர்வாதம் நிச்சயம் வேணும்.

பத்திரிக்கைய கிளிக்கி விபரம் தெரிஞ்சிக்கலாம். உங்கள் அனைவரையும் கோவையில் சந்திக்கவும் ஆர்வமாய் உள்ளேன்.

என் மீது அன்பு வைத்திருக்கும் யாரும் வரலாம்.. நான் வரலாமானுலாம் கேட்டு என்னை காயப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்.

மேல் விபரங்களுக்கு என் அலைப்பேசி எண் - 9884881824

05 June 2009

வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்..!


(போட்டோ உதவி - ஆதிமூலகிருஷ்ணன் )


என்ன கொடுமை சார் இது.. யாருமே என்னை இந்த கேள்வி பதில் தொடருக்கு அழைக்கல.. எல்லாருக்குமே நம்மல பாத்தா கொஞ்சம் பயமாத்தான் இருந்திருக்கும் போல.. ஆனாலும் தகிரியமா நம்மளை ஒருத்தரு ( ஆதிமூலகிருஷ்ணன் ) கூப்பிட்டுட்டாரு.. அவருக்கு நன்றி.

******************

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

விடை இங்கே

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

போன வாரம் எனது எழுபத்திரெண்டாவது காதலிக்கு திருமணம் நடந்த போது அவளை கட்டிக்கொள்ள போகின்றவனை நினைத்து அழுதேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

தலையெழுத்து..!

4.பிடித்த மதிய உணவு என்ன?

சோறுதான்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

பெண்கள்னா வச்சுக்குவேன். ஆண்கள்னா யோசிப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குளிக்கவே புடிக்காது, இதுல கடலா அருவியானு ...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது : லொள்ளு

பிடிக்காதது : ஜோள்ளு

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிச்சு பிச்சு நிறைய பாதிங்க இருக்கு இதுல எந்த பாதிக்கு பிடிச்சத சொல்ல..


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

எம்.ஜி.ஆர்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

அடங்கப்பா உங்க கேள்வி பதில்ல வசம்ப வச்சு தேய்க்க..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

முடியல...

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெள்ளை கலர் பேனா..

( என்ன கலர் இங்கா மாறுவீங்கனு கேக்கணும் )

14.பிடித்த மணம்?

பினாயில் வாசனை.. ஹாஸ்பிடல்ல வருமே

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

லக்கிலுக் - பிரியமான தோழர்

ஜ்யோவ்ராம் சுந்தர் - ஆசான்

கே.ரவிஷங்கர் - விமர்சகர்

மணிகண்டன் - நண்பர்

செந்தழல்ரவி - பரம எதிரி


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஆதிமூலத்தின் எல்லா பதிவுகளையும் விரும்பிபடித்தாலும்.. அவரது துறை சார்ந்த பதிவுகளை அதிகம் விரும்புவேன்.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்டு.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எல்லா காவாலி படமும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

NIRAPPAKITTU மலையாளப்படம்.. முழுநீலத்திரைப்படம்

21.பிடித்த பருவ காலம் எது?

மண்டை காயவைக்கும் வெயில் காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

பிரபாகரன் வாழ்வும் மரணமும்.. பாரா எழுதியது. கிழக்கு வெளியீடு

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கம்பேனி கம்ப்யூட்டர்ல அதெல்லாம் மாத்த முடியாது

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : இச் ( முத்தம் குடுக்கும் போது )

பிடிக்காத சத்தம் : மொச் ( சோறு தின்னும் போது )

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

2 இலட்ச்சத்து முப்பத்திரெண்டாயிரத்து முன்னூத்தி இருப்பதி ஆறு கிலோ மீட்டர் இருநூத்தி இருபத்திரெண்டு மீட்டர்.. நாற்பத்திரெண்டு சென்டி மீட்டர்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கே..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஸ்ஸ்ப்பா முடியல..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

உள்ளலாம் இல்ல வெளியதான் இருக்கு.. உள்ளே கடவுள்தான்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஒரகரம் பீச்சு ( இப்போதைக்கு )

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படித்தான் இருக்கணும்னுலாம் எந்த ஆசையும் கிடையாது..

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

பாஸ்.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

சிலருக்கு வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்.. சிலருக்கு சுய இன்பம்


***************

03 June 2009

வாழ்க கலைஞர்! வாழ்க பைத்தியக்காரன்!




கலைஞருக்கு இன்று பிறந்தநாளாம். அவருக்கு அண்டார்டிகா அதிமுக சார்பாக சபை நாகரீகம் அறிந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் நூறாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறோம். கலைஞர் பிறந்தநாள் வாழ்த்தாக ஜெகத்ரட்சகன் எழுதிய கவிதைதான் இருப்பதிலேயே சிறந்ததாக உடன்பிறப்புகள் அதை வலையுலகமெங்கும் பிரசுரித்து வருகின்றனர். நானும் படித்துப்பார்த்தேன் சுமாரான கவிதைதான். இதை விட நல்ல கவிதையை வலையுல உடன்பிறப்பே எழுதிவிடுவார்.வாழ்க கலைஞர். வாழ்க திமுக

இன்று டைம் ஆப் இந்தியா செய்தியில் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில்(பாலாஜி மருத்துவக்கல்லூரி) சேர 20 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. ராமச்சந்திரா கல்லூரியில் இதை விட அதிகமாக அதாவது 40 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். இது திமுகவின் மீது அபாண்டமாக பழிசுமத்த நடத்தப்பட்ட நாடகம் என திமுகவினர் நாளை அறிக்கைகள் விடலாம். இன்று தலைவருக்கு பிறந்தநாள் அந்த வேலைகளில் உடன்பிறப்புகள் பிஸி. வாழ்க ஜனநாயகம்.வாழ்க ஜகத்ரட்சகன்.

சாருநிவேதிதா ஒரு அஹிம்சை கட்டுரை எழுதினாலும் எழுதினார். பதிவுலகமே பற்றி எரிந்தது. விட்டால் உருட்டு கட்டைகளாலும் சோடா பாட்டில்களாலும் அடித்துக்கொண்டு ரத்தக்களறி ஆகிவிடும் போல் இருந்தது. அதிலும் ஆசிப் அண்ணாச்சி கோதாவில் இறங்கி லுங்கியை உயர்த்திக்கொண்டு டேய் என சைக்கிள் சைனை சுழற்றியது நன்றாக இருந்தது. அவரது படத்தை லக்கிலுக்கு வீரப்பன் படத்தோடு இணைத்து காமெடி செய்து கடைசியில் சுபமாக சப்பென்று முடிந்து போனதாய் தெரிகிறது. வாழ்க சாரு வாழ்க அஹிம்சை

சக பதிவர் நண்பர் எனது ஆருயிர் அண்ணன் பைத்தியக்காரன் என்கிற சிவராமன் அவர்கள் உரையாடல் எனும் பதிவர்கள் அமைப்பின் சார்பாக உலகசினிமாக்களெல்லாம் ( இலவசமாக )பதிவர்களுக்கு மட்டும் காட்டப்போவதாக அறிவித்திருக்கிறார். அது சமயம் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு கிம்கிடுக் அவர்களின் படமான ஸ்பிரிங் சம்மர் பால் வின்டர் எனும் திரைப்படம் காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பதிவர்களுக்காக பதிவர்களால் பதிவர்களுக்கென்றே பிரத்யேகமாக நடத்தப்படுவது. அதனால் பதிவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு சிறப்பிக்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ( படம் எந்த வித கட்டும் இல்லாமல் அப்படியே திரையிடப்படும் என்பது கூடுதல் செய்தி ) நீங்கள் பதிவராக இல்லையென்றால் உடனடியாக ஒரு வலைப்பூவை ஆரம்பிக்கவும் உங்களுக்கு என் பக்கத்திலேயே ஒரு சீட்டு புக் பண்ணி வைத்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு காத்திருக்கிறேன். வாழ்க பைத்தியக்காரன் வாழ்க கிம்கிடுக்

ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்கள் இலவசமாய் தந்த கோபி கிருஷணனின் சில புத்தகங்களை படிக்க நேர்ந்தது. அதிலும் டேபிள் டென்னிஸ் புத்தகம் ஏற்படுத்திய அதிர்வுகளை எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. ஐநூறு ஜீரோ டிகிரி நாவலின் அதிர்வுகளை விட பல மடங்கு அந்த குறுநாவல் உண்டாக்கி செல்கிறது. அது குறித்து விமர்சனம் எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரவில்லை என்று நினைப்பதால் இவ்ளோ போதும். இனி கோபி கிருஷ்ணனை தேடிப்படிப்பேன் என்பது மட்டும் நிதர்சனம். வாழ்க சுந்தர் வாழ்க கோபி கிருஷ்ணன்.

மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்து திமுக தமிழகத்தில் பாமகவை தோற்கடித்து விட்டதாக அந்த கட்சியினர் ஊரெல்லாம் ஓப்பாரி வைத்து வருகின்றனர். எனக்கு தெரிந்த வரை இம்மாதிரி இயந்திரங்களில் மோசடி செய்வது மிக கடினமான ஒன்று. அதிலும் இது போன்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் இருந்து மட்டுமே வரும் சூழலில் இது எந்த அளவுக்கு உண்மையானது என்பதே சந்தேகமான ஒன்றுதான். மற்றபடி பாமக தோற்றதற்கான காரணம் தமிழக மக்களே என்பது எங்கள் ஏரியா குட்டீஸுக்கு கூட தெரியும். வாழ்க பாமக வாழ்க தமிழக மக்கள்

மக்களவை சபாநாயகராக இன்று பதவியேற்கும் மீராகுமாருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் இவர். இனியாவது பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆகி அது நிறைவேறி.......... வாழ்க மீரா குமார் வாழ்க பெண்கள்.

நேற்று திடீர் இன்ப அதிர்ச்சி தமிழ்மணத்தின் சூடான இடுகையைக் காணவில்லை. ஐ ஜாலி என்று மகிழ்ச்சியாய் இருந்தது. தமிழ்மணம் மிக நல்ல காரியத்தை செய்திருக்கிறது. அதே போல ஓபன் ஐடியைக்கொண்டு ஓட்டளிக்கும் புதிய முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இனியாவது நல்ல இடுகைகள் எழுதும் என்னைப்போன்ற பதிவர்களின் பதிவுகளும் தமிழ்மணத்தில் கவனிக்கப்படும் என்பது நிதர்சனம். வாழ்க தமிழ்மணம் வாழ்க நல்ல பதிவர்கள்.

தினத்தந்தியில் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஈழத்தமிழர் வரலாறு என்றொரு தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தினமணியிலும் ஈழத்தமிழர் போராட்ட வரலாறு என்றொரு தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதே வேலைகளை ஆறு மாதம் முன்பே குமுதம் விகடன் போன்ற பத்திரிக்கைகள் ஆரம்பித்துவிட்ட சூழலில் தினசரிகளின் இந்த திடீர் ஈழ ஆதரவுப்போக்கு வியக்க வைக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதே சிறந்தது என்பது புத்திசாலிக்கு தெரியும் என எப்போதோ தினதந்தியின் சாணக்கியன் சொல்லில் படித்ததாய் ஞாயபகம். ஈழம் நன்றாக விற்கிறது . மற்றபடி வாழ்க தமிழக பத்திரிக்கைகள் வாழ்க ஈழத்தமிழர்

சமீபத்தில் பார்த்த படங்களிலேயே மிகத்திராபையான திரைப்படம் சர்வம். விஷ்ணுவர்த்தன் தனக்கு படம் எடுக்க வராதுடா என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். அவரது முந்தைய படங்களான பில்லா,பட்டியல் படங்கள் மேக்கிங்கால் கரையேறிவிட்டாலும் இது மேக்கிங்கால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு சின்னாபின்னமாகி கிடக்கிறது. இந்த படத்திற்கு ராஜாதி ராஜா எவ்வளவோ சூப்பர். இனிமேலாவது வி.வர்த்தன் படித்தவர்களுக்கும் பீஸா தின்பவர்களுக்கும் படமெடுக்காமல் பழைய சோறு தின்பவர்களுக்கும் எடுத்தால் தேவலாம். வாழ்க பீஸா வாழ்க சர்வம்

ராஜாதி ராஜா திரைப்படம் குறித்த தவறான விமர்சனத்திற்காக சுஹாசினி மீது ரா.ரா படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிகிறது. ஜெயா டிவியின் ஒளிபரப்பாகும் சுஹாசினியின் திரைபார்வை நிகழ்ச்சியில் அப்படம் குறித்து மிக மோசமாக கூறியதாய் தெரிகிறது. அதனால் கோபமடைந்த இயக்குனர் அவர் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதாய் தெரிகிறது. இனியாவது நம்ம பதிவுலக விமர்சகர்கள் கொஞ்சம் பார்த்து விமர்சனம் செய்யவும். விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். வாழ்க திரையுலகம்! வாழ்க விமர்சகர்கள்!

ஒரு வழியாக ஐபிஎல் முடிந்து உலகக்கோப்பை டி20 துவங்க இருக்கிறது. இந்த கருமாந்திரம் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அனைவரது நேரத்தையும் இங்கிலாந்தில் நடப்பதால் சில நாள் தூக்கத்தையும் கெடுக்கலாம். கிரிக்கெட் என்றாலே வெறுத்து விடும் அளவிற்கு தினசரி கிரிக்கெட் எரிச்சலையும் சலிப்பையும் உண்டாக்குகிறது. டி20 அதைத்தான் செவ்வனே செய்கிறது. ஒரு நாள் போட்டியும் டெஸ்ட் ஆட்டமும் பார்க்க மனது ஏனோ ஏங்குகிறது. வாழ்க லலித் மோடி வாழ்க டி20

02 June 2009

இன்பக்கதைகள் இன்பினிட்டி(6) - கொலைகாரன் காதல்






விர்ர்ர்ர்ர்..... அந்த பைக் 97 கி.மீ வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அவளது விழியோரம் கண்ணீர் வழிந்து காதோரம் காய்ந்து கொண்டே இருந்தது. முகத்தை மூடியிருந்த துப்பட்டா எந்நேரத்திலும் அவிழ்ந்து விடுமோ என பயத்தில் இருக்கி பிடித்து கொண்டிருந்தாள். சில விநாடிகளில் அவனது முதுகில் முகத்தை அழுத்தி வைத்துக்கொண்டாள். அவனுக்கு கிளுகிளுப்பாய் இருந்தது. இதற்குத்தானே இத்தனை வேகம் செல்ல வேண்டியிருக்கிறது.

வினோ இத்தனை வேகமாய் செல்பவனில்லை. அவனது வாகனமும் இத்தனை வேகமாய் செல்லும் என்பது அதற்கே இன்றுதான் தெரிந்திருக்கும். விர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

டேய் பசிக்குதுடா என்றாள் மேகலா என்கிற மேகி.

'' என்ன சாப்பிடற.. '' வண்டியின் வேகத்தை சில கி.மீக்கள் குறைத்தபடி கேட்டான் வினோ.

''தயிர் சாதம் இல்லாட்டி ஒரு ஹாட் டாக் இல்லாட்டி ஒரு பர்கர் '' முதுகோடு ஓட்டிக்கொண்டு கேட்டாள்.

''நீதான் காசுத்தரணும் ''

''இல்லாட்டி மட்டும்.. போ எங்காவது நல்ல கடைக்கு '' என்றபடி அவனது முதுகில் செல்லமாய் கடித்தாள். வண்டி 100 கி.மீயை தாண்டியது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் காபி டேயில் தனியாய் காபி குடித்துக்கொண்டிருக்கையில் இருக்கைகளில்லா மாலை வேளையில் அவனருகில் அமர்ந்து காபி குடிக்க வேண்டிய கட்டாயத்தில் அமர்ந்தாள் மேகலா. அப்போது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. இன்று இப்படி ஆகப்போகிறதென்று. நீங்க ஸ்டெல்லாவா என்று ஆரம்பித்தான் வினோ. அவளோ இல்லைங்க நான் மேகலா என்பதாக துவங்கியது அவர்களது காதல் பயணம். வாய்முழுக்க காபியோடு அவளுக்கு அவன் சொன்ன ஜோக்குகள் இன்று நூற்றி இரண்டில் பறக்கிறது. பிரிய மனமின்றி பிரிகையில் தனது விசிட்டிங் கார்டைக்கொடுத்து ஏதாவது இன்வெஸ்ட்மென்ட் பிளான் இருந்தா சொல்லுங்க நான் பண்ணுவேன் என்று கொடுத்தது. அவள் அன்றிரவே அவனை அழைத்தது. இருவருக்கும் நான்கு மணிநேர மொபைல் உரையாடலில் பனிரெண்டு மணிக்குள்ளாக காதல் பூத்தது எல்லாம் பழங்கதை. இன்று இருவரும் ஈசிஆர் ரோட்டில் கடற்கரையை கிழித்த படி பட்டாம்பூச்சி போல் ஓட்டிக்கொண்டு பறக்கின்றனர்.

அவளுக்கு வினோவை மிகவும் பிடித்திருந்தது. வினோவுக்கும். அவன் ஒரு எழுத்தாளன். எல்லா கதைகளிலும் உணர்ந்து அனுபவித்து எழுத வேண்டும் என என்னும் ஆண் கேத்தி ஆக்கர். இதோ இன்னொரு கதைக்கு இவள் நாயகி.

அந்த பர்கர் ஷாப் மாயாஜாலைத்தாண்டி ஐந்தாவது கி.மீயில் இருந்தது. ஓரகடம் என எங்கோ ஒரு மஞ்சள் நிற போர்டு தெரிந்தது.அதன் மேல் விஜயகாந்த் கும்பிட்டுக்கொண்டிருந்தார். அருகிலேயே ராமதாஸ் அதற்கருகில் கலைஞர் அதற்கருகில் ஒரு ஆயா ரோட்டோரம் நொங்கு விற்றுக்கொண்டிருந்தாள். பனை நொங்கென்றால் வினோவிற்கு கொள்ளை இஷ்டம். மேகலாவிற்கும் அதனால் இஷ்டம்.

''ஆயா இரண்டு குடுங்க.. ''

இரண்டை வாங்கி ஆளுக்கொன்றாய் தின்ன ஆரம்பித்தனர்.

''வினோ ஏதோ கதை எழுதிட்டிருக்கேனு சொன்னியே.. என்ன கதை ''

''அதுவா , ம்ம் சொல்றேன் வா இப்படி உள்ளே போயிரலாம்.. ''

''பயமாருக்குடா வினோ, பாரு யாருமே இல்ல ''

''ஹேய் டோன்ட் வொரி .. நான் உன்னை கொலை பண்ணதானே கூட்டிட்டு வந்திருக்கேன்''


''ஹாஹாஹாஹா... லூசுப்பாப்பா ''

''என்னடா சிரிக்கிற நான் சீரியஸாத்தான்டா சொல்றேன்..

''ச்சீப்போடா முத்தம் வேணும்னா கேட்டு வாங்கிக்கோ ஒன்னுக்கு பத்தா தரேன்.. இப்படி பயமுறுத்திலாம் என்ன எதுவும் பண்ண முடியாது... எனக்கு கராத்தேலாம் தெரியும் , என்ன ரேப்லாம் பண்ண முடியாது ''

''சிரிக்காத.. என் கதைலயும் ஹீரோயின் இப்படித்தான் சிரிப்பா ஆனா கடைசில செத்துருவா.. அந்த ஹீரோ ரொம்ப நல்லவன் காதலிக்கு வலிக்க கூடாதுனு விஷ ஊசிலாம் பாக்கட்ல போட்டு எடுத்துட்டு வந்துருப்பான்.. இதோ பாரு இப்படித்தான் '' தன் பாக்கட்டிலிருந்து ஒரு பிளாஸ்டிக் கவரும் அதிலிருந்து ஒரு சிரஞ்சியும் வெளியே எடுத்தான்.

''ஓஓ இப்படிலாம் பயமுருத்தினா நான் பயந்துடுவேனா.. போடா நீயும் உன் கதையும்''

''பாப்பா பீ சீரியஸ்.. நான் நிஜமாவே உன்னை கொல்லப்போறேன்.. என் கதைப்படி அப்படித்தான் நடக்கும்.. ''

'' ஓஓ என்ன கதை.. சொல்லவே இல்லை ''

அலைகளின் சத்தம் தவிர சுற்றிலும் ஒன்றுமே கேட்கவில்லை. ரோட்டோரமிருக்கும் அந்த கிழவியைத்தவிர சுற்றுப்புறமெங்கும் ஒருவருமில்லை.

''ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் .. ஹீரோ ஒரு எழுத்தாளன் அவனுக்கு எதுவா இருந்தாலும் பிராக்டிக்கலா பண்ணிப்பார்த்து அதையே கதையா எழுதறதுலதான் ஆர்வம். அவன் ஒரு கொலைய கதையா எழுதணும்னு , அதனால ஒரு காதலிய தேடறான் பழம் மாதிரி ஒரு காதலி வந்து விழற.. அவளை கொலை செய்றான்.. அதான் கதை''

''வினோ நாம போகலாம்டா.. நீ ஏன் ஏதோ மாதிரி பேசற.. உன் முகம் வேற மாறுது .. எனக்கு இப்போ நிஜமாவே பயமாருக்குடா.. ''

''ஹாஹாஹா இப்போ நிஜமாவே பயந்துட்டியா.. ஹாஹாஹா... பயப்படாதே வலிக்காம கொல்றேன்.. ''

''ப்ளீஸ்.. இப்படிலாம் பேசாத.. நான் போறேன் '' என அவனருகில் மிக நெருக்கமாய் கையைக்கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவன் எழுந்து நடக்கத்துவங்கினாள்.

''ஹேய் லூசு குட்டி அப்படிலாம் இல்லடி சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்.. ஒரு முத்தம் குடு.. ''

''எனக்கு மூடில்ல நான் கிளம்பறேன்.. இப்போ நீ வரியா இல்லையா ''

''ச்சீ லூசு .. மேகி ப்ளீஸ் உக்காரு.. ஐ வாஸ் ஜஸ்ட் ஜோக்கிங்.. '' எழுந்து நகர முயன்றவளை கையைப்பிடித்து இழுத்து அமரவைத்தான்.

''...................... '' மேகலா உம்மென்று அமர்ந்திருந்தாள்.

''என்னடா என்னை பார்த்தா கொலைகாரன் மாதிரியா இருக்கு.. ''

''............................'' தலையை கால்களுக்கு நடுவில் புதைத்துக்கொண்டு அமைதியாய் இருந்தாள்.

''சரி வா போகலாம்.. ஒரு கிஸ் கூட பண்ணல.. ஏன்டி எந்த கொலைகாரனாவது இப்படி எல்லாத்தையும் சொல்லிட்டு கொலை பண்ணுவானா.. அதும் என்னைப்பார்த்தா கொலைகாரன் மாதிரியா இருக்கு.. இரு ஒன் மினிட்.. '' தனது லேப்டாப் பேகிலிருந்து அவசரமாய் இரு டைரியை எடுத்தான்..

''இந்தா இதுல ஒரு கையெழுத்துப்போட்டுக்குடு.. ''

''எதுக்கு. '' முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு கேட்டாள்.

''நான் பொதுவா யார கொல்றதா இருந்தாலும் அவங்க கையெழுத்து வாங்கிக்கறது என்னோட ஸ்டைல்.. அதான்.. ஹாஹாஹா''

''போடா.. '' என்று அவனது கன்னத்தில் செல்லமாய் அறைந்தாள்..

''ரொம்ப பயப்படாதே சும்மா உன் ஞாபகார்த்தமா இருக்கும்ல.. அதுக்குத்தான்.. போடு.. பாப்பா ப்ளீஸ்.. ''

ஐ லவ் யூ மை கொலைகார ராஸ்கல் என்று எழுதி கீழே மேகி என கையெழுத்திட்டாள்,

வினோ நேரத்தைப்பார்த்தான் மதியம் ஒன்று.

''சரிவாடா குட்டிம்மா போகலாம்.. ''


''வேணான்டா.. இருக்கலாம்.. ப்ச்.. '' அவன் கன்னத்தில் அவசரமாய் முத்தமிட்டாள். அவன் அப்படியே அவளை வாரியணைத்து உதட்டில் கழுத்தில் கன்னத்தில் என மாறி மாறி முத்தமிட்டான். இருவரும் மதிய உச்சி வெயிலேயே.. பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்திருந்த காண்டம் பாக்கட் பிரிக்கப்பட்டது. இரண்டற கலந்தனர்.

''டேய் இனிமே இப்படிலாம் விளையாடாத என்ன .. நான் நிஜமாவே பயந்துட்டேன்..''

தனது பேண்ட்டை சரி செய்து கொண்டபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். முகமெல்லாம் வேர்த்து முகத்திற்கு முன்னால் அவளது தலைமுடி கொத்தாக கலைந்து போய் வியர்வையில் ஓட்டி இருந்தது. அதை ஒதுக்கியபடி அவளை நோக்கி புன்னகைத்தபடி

''ஹாஹாஹா.. அப்போ நான் கொலைகாரன் இல்லனு நம்பிட்டியா.. ஹாஹாஹா.. '' என்று சிரித்தபடி அருகில் மணலில் புதைந்து கிடந்த அந்த வெற்று சிரஞ்சியை எடுத்தான்.

அடுத்த நாள் காலை தனது கணினியில் ஒரு அழகான புன்னகையோடு தட்டச்சத் துவங்கினான்.. விர்ர்ர்ர்ர்... அந்த பைக் 97...

01 June 2009

இருபத்திநான்கு வரி ஹைக்கூ..



இருப்பத்தி நான்கு வரி ஹைக்கூவில்
இருப்பத்தி இரண்டில்
தேடிக்கொண்டிருக்கிறான்
கண்ணில்லாத குருடன்
இருப்பத்தி நான்கில் கிடைக்கப்போகும்
பார்வையை
பதினேழாம் வரியில் பறக்கும் பட்டாம்பூச்சி
பத்தொன்பதில் இறந்து போனால்
பனிரெண்டாம் வரியில் பிறந்தது என்ன
மூன்றாம் வரியில் கூட்டமாய் அமர்ந்திருந்தவர்கள்
இருபதாம் வரியில் அந்த வண்ணத்துப்பூச்சியின் மறைவில்
கலைந்து சென்றனர்
இதோ இந்த ஹைக்கூவில் இருபத்திநான்கு வரிகளும்