Pages

30 August 2008

என் ச்செல்ல ஹரிணி குட்டிக்கு.......







என் ச்செல்ல ஹரிணி குட்டிக்கு ,

முதல்ல ஹேப்பி பர்த்டே சொல்லிக்கறேன் ,

இந்த மாமாவோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஓழுங்கா ஸ்கூலுக்கு போறியா , ரைம்ஸ்லாம் சொல்லுறியா , ஒழுங்கா சாப்பிடறியா , ரொம்ப குறும்பு பண்றியாமே , உன் தங்கச்சி சிவாசினிய அடிக்கிறியாமே , என் தங்கச்சி பிரியா சொன்னா!! , குட்டிமா நல்ல பாப்பல , ரொம்ப குறும்பு பண்ண கூடாது .

குட்டிமா நீ இப்பதான் பொறந்த மாதிரி இருக்கு , அதுக்குள்ள 3 வருஷம் ஓடிருச்சு ,



இது வரைக்கும் நான் எத்தனை முறை உன்னை நேர்ல வந்து பாத்திருப்பேன் , உன் விரல்லயே எண்ணிருலாம் , மொத்தம் எட்டு தடவை தான் , ஒவ்வொரு தடவை உன்ன நான் பாக்கும் போதும் நீ எனக்கு புதுசாதான் தெரிஞ்சிருக்க , இன்னைக்கோட நீ பிறந்து மூணு வருஷம் முடியுது , உங்கம்மா உனக்கு புது டிரெஸ் வாங்கி குடுத்தாளா , உனக்கு புடிச்ச லிப்ஸ்டிக்க முகமெல்லாம் நீயே போட்டுகிட்டியா , நைட்டு கேக்கு வெட்டினியாடா குட்டி , என்னால எல்லா வருஷ பொறந்தநாள் மாதிரி இந்த வருஷமும் வர முடியலடா குட்டி , மன்னிச்சிரு ,குட்டிமாவ பாக்கணும் போல இருக்குடா , மாமாக்கு இங்க நெறய வேலைடா அதான் வரமுடியல ,

குட்டிமா காலைல அம்மாவயும் அப்பாவயும் கூட்டிட்டு கோவிலுக்கு போங்க , சாமிகிட்ட இந்த மாமாவுக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க , பிரியாம்மாகிட்ட
காசு குடுத்திருக்கேன் உனக்கு புடிச்ச ஐஸ்கிரீம் வாங்கிதர சொல்லி , உங்கம்மா உனக்கு சளி புடிக்கும்னு வாங்கிதரமாட்டா நான் சொன்னேன்னு சண்டை போட்டு வாங்கிக்கோங்க , மறக்காம வாங்கிகோங்க , நம்ம குட்டி பாப்பா சிவாசினிக்கும் ஐஸ் குடுக்கணும் சரியா, மாமா அடுத்த வாரம் கட்டாயம் வரேன்டா குட்டி , சரியா


நீ கேட்ட டோரா பொம்மை , டோரா பேக் , டோரா டிபன் பாக்ஸ் , எல்லாமே வாங்கிட்டு வரேன் சரியாமா . எனக்காக இன்னைக்கு வெட்டின கேக்க உங்கம்மா கிட்ட சொல்லி எனக்கு எடுத்து வைங்க , அடுத்த வாரம் வந்து நான் சாப்பிட்டுக்கறேன் (கெட்டு போனாலும் பரவால்லடா குட்டி).

மாமாவுக்கு நீ போன தடவ நீ குடுத்த முத்தமெல்லாம் தீர்ந்து போச்சுடா அதுனால நான் அடுத்த வாரம் வரேன் , போன தடவய விட இன்னும் நிறைய முத்தம் வேணுன்டா குட்டிமா!

உன் குட்டி தங்கச்சிக்கிட்டயும் சொல்லிரு மாமா ஊர்லருந்து உங்க ரெண்டு பேரையும் பாக்க வரேன்னு .

மறுபடியும் குட்டிம்மாக்கு ஹேப்பி பர்த்டே...



உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

இப்படிக்கு....

உன்னோட பொறந்த நாள்ல கலந்துக்க முடியாம போன

லூசு வினோ மாமா.......

_____________________________________________________________________________________

28 August 2008

கேள்விகளில்லா விடைகள் - சிறுகதை


கேள்விகளில்லா விடைகள் -


ஏழையின் கேள்விகளில் என்றும் பசியும் வலியும் நிறைந்திருக்கும் , அவனது கேள்விகள் விடையில்லா கேள்விகள் , அவனது கேள்விகளுக்கு பெரும்பாலும் போதிய விடைகள் கிடைப்பதில்லை , அவனது ஏக்கமும் வெறுமையும் சாகும் வரை நீடிப்பதை போல ,

அழுக்கடைந்த சட்டைகளும், கரைபடிந்த வேட்டிகளுடன் , காலை உணவாய் ஆளுக்கொரு பீடியை பற்றவைத்த படி , லாரி நிறைய அடைக்கப்பட்ட அடிமாடுகள் போல , ஒரு லாரியின் பின்னே குந்தவைத்து அமர்ந்து கொண்டு இரவெல்லாம் பயணித்து இதோ அடைந்துவிட்டோம் எங்களுக்கும் தண்ணீர் வேண்டி போராட்டமிட்டு அச்சிங்கார நகரத்தில் இனி கழிக்க போகும் நாட்களை எண்ணிய படி நான் .மனதில் ஆயிரம் கேள்விகள் ,

எனது கேள்விகளும் அப்படித்தான் தொடங்கியது , நான் மட்டுமல்ல மழையில்லா ஊரில் வாழும் எல்லா ஏழை விவசாயியின் மனதிலும் எழும் அதே விடையில்லா கேள்விகள், உன்மத்த மழையை இப்போதெல்லாம் நம்ப முடிவதில்லை அது நகரங்களில் அதிகமாயும் கிராமங்களில் குறைவாயும் பெய்து தனது விரகத்தை தீர்த்து கொள்கிறது .

''அப்பா நீ எங்க போற? '' கேள்விகளின் குழந்தை எனது லட்சுமி

''ஏண்டி போம்போது எங்க போறணு கேக்கற , போற காரியம் விளங்குமா ? '' விடைகளின் கேள்வியாய் எனது பாதி ராஜி

''பாப்பா , அப்பா மெட்ராஸிக்கு போறேன்டா ''

''ஏன் போற ? ''

''குட்டி , நம்ம தோட்டத்துல தண்ணி இல்லாம , கருதுலாம் கருகி போதில்ல , அதுக்குதான்டா ''

''அதுக்கு ஏன் அங்க போற? '' என்னுள் பல கேள்விகளை அந்த ஒரு கேள்வி எழுப்பியது , எங்கோ ஆயிரம் கிலோ மீட்டருக்கப்பால் வராத தண்ணீருக்காய் நான் ஏன் செல்ல வேண்டுமென ,


''உன்ன அடுத்த வருஷம் டவுன் பள்ளிகொடத்தில படிக்க வக்கணும் , நல்ல கவுணு வாங்கோணும் , தினமும் உனக்கு ஆரஞ்சு முட்டாய் வாங்கித்தரணும் , ''

''அவ்ளோதானாப்பா ''

''வேற என்னடா குட்டிமா உனக்கு வேணும் ''

''தினமும் காலைல இட்டிலி , நீசு தண்ணி வேணாப்பா நல்லாவேல்ல , அப்பறம் கேக்கு , பன்னு,சாக்கிலேட்டு , சிலேட்டு , பென்சில்லு , அப்பறம் ம்ம்ம்ம்ம்ம் பிஸ்கட்டு ''

''சரிடா செல்லம்மா , அப்பா எல்லாம் வாங்கி தாரேன் '' என்று அந்த நம்பிக்கைகளின் குழந்தையை வாரி அணைக்க என் கண்களில் ஏனோ அர்த்தமில்லா கண்ணீர் .

''அப்பா , மெட்ராஸி எங்கருக்கு , ரொம்ப தொலவு போணுமா? சீக்கிரம் வந்துருவியா ? ''

''ஆமாடா பாப்பா , அப்பா போயிட்டு சீக்கிரமா வந்துருவேண்டா '' மடியில் படுத்திருக்கும் அந்த மழலை எனக்கு தனது நம்பிக்கையையே ஏமாற்றங்களின் நகரத்திற்கு செல்ல தரும் நம்பிக்கையாய் , குழந்தைகளின் கேள்விகள் எப்போதும் நம்பிக்கை சார்ந்தது .எப்படி கேட்பது என்ன கேட்பது தெரியாது , ஆனால் கேட்கவேண்டும் என்பது மட்டும் தெரியும் , வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எதையாவது எப்போதும் கேட்டுக்கொண்டுதானிருக்கோறோம் , அது பொருளாகட்டும் அறிவாகட்டும் நாம் கேட்பது எப்போதுமே கிடைத்து விடுவதில்லை , நாம் எல்லோருமே அப்படித்தான் , கேட்டுகொண்டே இருக்கிறோம் , கேள்விகள் என்றுமே முடிவதில்லை , நாம் பிறந்த உடன் தொடங்கும் கேள்விகள் நம் இறப்பை தாண்டியும் தொடருகின்றன .

அந்த லாரி ஏதோ ஒரு ஆளில்லா டீக்கடையில் பொழுது புலரும் விடியலில் நிற்க அங்கே இறங்கி டீ அருந்த மனமும் வயிரும் ஆவலாய் இருந்தாலும் சட்டைபையிலிருந்த பத்து ரூபாய் பணத்தின் அருமையை மிக அருமையாய் உணர்த்தியது . நாவில் ஊரிய எச்சிலை முழுங்கியபடி அந்த கடையை பார்த்தபடி வரும் வழியில் பாதி அணைத்த பீடியை சட்டையில் தேடி பிடித்து மீண்டும் பற்ற வைத்துக்கொண்டேன் .

'' அண்ணே எத்தன மணிக்கு மெட்ராஸ் வரும் , ''

''ஏலேய் முருகா , நீ நிக்கறதே சென்னைதான்டா '' அதட்டினார் கோணார் அண்ண்ன் , எங்களின் ஆசான் , எங்களுக்காய் போராட எப்போதும் தயங்காதவர் , தள்ளாத வயதிலும் எங்களோடு வந்தவர் .

''அண்ணே , எத்தன மணிக்கு நாம போராட்டம் ஆரம்பிக்கறோம் ''

''அட எழவெடுத்தவனே , நீ இன்னுமா ஆரம்பிக்கல '' செவுளில் அறைவது போல கத்தினார் . அவர் பூடகமாய் கூறுவது ஏனோ புரியவில்லை .

வானுயர்ந்த கட்டிடங்களும் , காலை ஏழுமணிக்கே தொடங்கி விட்ட வாகன இரைச்சலுக்கு நடுவே , அண்ணா சிலையை தாண்டி ஒரு சிறிய குறுக்கு சந்தில் இருக்கும் சேரி போன்ற இடத்தில் அமைந்திருந்த ஒரு பூங்காவில் நாங்களேல்லாம் இறக்கப்பட்டோம் , அங்கிருந்த கரைபடிந்த சுவர்களின் நடுவே குளித்து முடித்து , கோணார் அண்ணன் செலவில் டீயும் பன்னும் மட்டும் தின்று விட்டு , அங்கிருந்த பூங்காவில் சிறிது நேரம் உலாவியபடி ...

''அப்பா , சீக்கிரம் வந்திருப்பா ''

''சரிடா குட்டி ''

''அப்ப்ப்ப்ப்பபா , நீ போகாத ''


''ஏண்டி சனியனே அபசகுனம் புடிச்ச மாதிரி பேசறே '' மனைவி அதட்டினாள் .

''அப்பா நானும் வரேன் , அப்பா நானும் '' விடாமல் கதறினாள் லட்சுமி

அந்த பிஞ்சு கைகளின் மெல்லிய விரல்கள் எனது கையை பற்றிய படி கதறியது , என் மனைவி அதட்டியபடி என் குட்டி லச்சுவை உள்ளே இழுத்துச்செல்ல , எனக்கு தொண்டை அடைத்தது,

பூங்காவில் நடந்தபடி என் குட்டிப்பெண்ணை ஒரு டாக்டரை போல ஒரு கலெக்டரை போல கற்பனை செய்தபடி , அவளுக்காய் ஊருக்கு செல்லும் போது பையிலிருந்த பத்து ரூபாயில் ஒரு குட்டி பொம்மையும் சில ஆரஞ்சு மிட்டாய்களும் வாங்க வேண்டுமென எண்ணியபடி அமர்ந்திருந்தேன்.

காலை ஒன்பது மணி தாண்டியது அங்கிருந்து நடந்தபடி அருகிலிருக்கும் மைதானம் அருகே செல்ல , அங்கே எங்களுக்கு முன்னால் மிக பிரமாண்டமான ஒரு கூட்டம் , எங்களுக்கு மிக மகிழ்ச்சியாய் இருந்தது , நம்மை போன்ற விவசாயிகள் மாபெரும் போரட்டம் நடத்துகின்றனர் என்று , அந்த கூட்டத்தின் அருகே நாங்கள் செல்ல செல்லதான் அது வேறு மாதிரியான போராட்டமென்று,

அங்கிருந்த கூட்டமும் விவசாயம் பற்றி துளியும் கவலையில்லா கூட்டமென அங்கே அருகில் சென்று பார்த்த பின்தான் உணர முடிந்தது , குளிருட்டப்பட்ட காரிலே கண்களை மறைக்கும் பெரிய அளவு கண்ணாடிகள் அணிந்த படி பல திரைப்பட நட்சத்திரங்களும் அங்கிருந்து இறங்க, அங்கிருந்த கூட்டம் அவர்களை நோக்கி முண்டியடித்து கொண்டு ஒட , நாங்களும் சிதறினோம் .

கோணார் அண்ணன் அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் எவ்வளவோ முறையிட்டும், எங்களுக்கு அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி தர மறுத்துவிட்டனராம் , கோணார் அண்ணன் கோபக்காரர் , எங்களை ஒன்று திரட்டி அந்த பெருங்கூட்டத்தின் அருகிலேயே ஒரு சிறிய இடத்தில் எங்கள் பச்சை கொடிகளை கையிலேந்தியபடி , பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு சிறிய பேனரை கையில் பிடித்த படி ,

'' தண்ணீர் வேண்டும் , தண்ணீர் வேண்டும் '' என உரக்க கத்தினோம் யாருக்கும் கேட்கவில்லை , அந்த நடிகர்களின் ஒலிபெருக்கி சப்தத்தில் , விடாமல் கோஷமிட்டோம் ,

யாருமே இங்கே நடப்பதை கவனிக்கவில்லை , போலீஸ் விரட்டியது , கோணார் அண்ணன் மறுத்தார் ,

தடியடி துவங்கியது , எனது கணுக்காலில் ஏதோ ஒரு காவல் அதிகாரி தன் கடமையை செய்ய ரத்தம் பெருக்கெடுத்தது , மயங்கி விழ என் காதுகளில் கடைசியாய் ஒலித்தது , அந்த பெரிய நடிகனின் வீர வசனங்கள்

'' ______ஆத்துல தண்ணி விட மறுக்கற _______மாநிலத்துகாரங்களை உதைக்க வேண்டாமா ''

கூட்டம் ஆர்பரித்தது , தலைவா என்றது , தெய்வமே என்றது ,

அவர்களது அந்த திரைப்பட ரசனையின் கத்தலினூடே எங்கள் கதறல் யாருக்கும் கேட்கவில்லை , எங்கள் கோஷம் எறும்பின் மரண ஓலமாய் ஒலித்தது , என் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் .

எனக்கு கணுக்காலில் வலித்தது , கோணார் அண்ணன் தூரத்தில் விழுந்தார் . பச்சை கொடிகளின் மேல் பலரும் நடந்து செல்ல என் கண்கள் இருட்டின .

நான் விழித்து பார்க்கையில் காலையில் அமர்ந்திருந்த பூங்காவின் ஒரு பெஞ்சில் , சுற்றி என்னைப் போல பல்லாயிரம் கனவுகளுடன் வந்திருந்த ஏழைகள் , என் சட்டைபை கிழிந்திருந்தது , அந்த பத்து ரூபாய் தொலைந்து விட்டது ,

கிழிந்து போன என் சட்டைப்பையோடு தொலைந்தது எனது பத்து ரூபாய் மட்டுமல்ல எங்கள் கனவுகளும்தான் நம்பிக்கையும்தான் .

ஏழையின் கேள்விகளில் என்றும் பசியும் வலியும் நிறைந்திருக்கும் , அவனது கேள்விகள் விடையில்லா கேள்விகள் , அவனது கேள்விகளுக்கு பெரும்பாலும் போதிய விடைகள் கிடைப்பதில்லை , அவனது ஏக்கமும் வெறுமையும் சாகும் வரை நீடிப்பதை போல .

27 August 2008

FLASH NEWS : பதிவர் பாலபாரதி ரகசியத்திருமணம் , ஆதாரங்கள் சிக்கின

பதிவர் பாலபாரதி பல வருடங்களாக தான் திருமணம் செய்ய இருப்பதாக பதிவர்களிடையே கடுக்காய் கொடுத்து வந்தது அனைவரும் அறிந்ததே , அவர் சென்ற வாரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சக பதிவர் மலர்வனம் லட்சுமியை திருமணம் செய்து கொண்டார் .

இது பற்றிய பதிவு ஆதாரங்கள் வெளியாகின ;

மணமகனின் அறிவிப்பு ;

அவரது பதிவில் இங்கே


மணமகளின் அறிவிப்பு ;

அவரது பதிவில் இங்கே


மணமக்களுக்கு சக பதிவர்கள் மற்றும் வலையுலக நண்பர்கள் சார்பாக எனது திருமணவாழ்த்துக்கள்.

சகோதரி மலர்வனம் லட்சுமிக்கு அடிஸனல் வாழ்த்துக்கள்

26 August 2008

ரஜினியை தோற்கடித்த ஜே.கே.ரித்திஷ் - நாயகன் திரைப்பட அதிரடி சரவெடி விமர்சனம்

நாயகன் விமர்சனம் :

பல மாதங்களுக்கு முன்பே தயாராகி , தசாவதாரம்,குசேலன்,குருவி போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களின் வருகையால் , பல மாதங்கள் நல்ல திரையரங்குகளுக்காக காத்திருந்து சென்ற வாரம் வெளியாகியிருக்கிறது நாயகன் திரைப்படம் , எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி , ஜே.கே.ரித்திஷின் சேட்டைகளை மட்டுமே கண்டு ரசிப்பதற்காக மட்டுமே அந்த திரைப்படத்திற்கு செல்ல நேரிட்டது . அது தவிர இது ஆங்கிலத்தில் வெளியான CELLULAR திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்று நண்பர்கள் கூறியதால் , படத்தை பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் அதிகமானது .



படத்தின் ஆரம்பகாட்சி இதுவரை எந்த பெரிய நடிகருக்கும் வைத்திடாத அளவுக்கு மிக பிரமாண்டமாகவும், அதை தொடர்ந்து ஜேகே ரித்திஷை புகழ்ந்து பல வேறு வேடங்களில் ( 15 வேடங்கள் ) அவரே பாடுவது போலவும் தொடங்குகிறது , முதல் 15 நிமிடங்கள் அந்த தேவையில்லாத பாடலால் எரிச்சலூட்டினாலும் , அதற்கு பிறகு வேகமெடுக்கும் திரைக்கதையும் , அதற்கேற்ற பாத்திரங்களின் நடிப்பும் , எரிச்சலூட்டாத பிண்ணனி இசையும் , நம்மை படத்தின் இறுதிவரை அடுத்து என்ன என்கிற ஆவலுடன் கொண்டு செல்கிறது .

படத்தின் மிக முக்கிய இரு பாத்திரங்களான சக்தி( ரமணா என்னும் புதுமுகம் ) மற்றும் சந்தியா ( '' உயிர் ''சங்கீதா ) மிக அற்புதமாக நடித்துள்ளனர் . படத்தின் வில்லனாக ஆனந்தராஜ் , பல நாட்களுக்கு பிறகு சிறப்பானதொரு வேடத்தில் அசல் ஆங்கில படத்தின் வில்லனை விட ஒரு பங்கு அதிகமாகவே நடித்துள்ளார் .

படத்தில் பாடல்கள் மிகசுமார் ரகமே , திரையரங்கில் பெண்கள் கூட பாடல் காட்சிகளில் வெளியில் செல்வதை காண நேரிட்டது . இசையமைப்பாளர் பாடல்களில் கோட்டை விட்டாலும் பிண்ணனி இசையில் பிளந்து கட்டுகிறார் . படத்தின் பிண்ணனி இசை ஒரு படத்தின் பிரமாண்டத்தை காட்ட எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் , அவருக்கு பாரட்டுக்கள் .

படத்தில் தனியாக காமெடி டிராக் இல்லாத குறையை ஜே.கே.ரித்திஷ் நிவர்த்தி செய்கிறார் , படம் முழுக்க அவர் வரும் காட்சிகளில் மக்களின் சிரிப்பொலி விண்ணை பிளக்கிறது . முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு வடிவேலுவை மிஞ்சும் அளவுக்கு காமெடியில் கலக்குகிறார் . மலைக்கோட்டை படத்தில் வரும் வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் வேடத்திற்கே சவால் விடுகிறார் . அவர் பேசும் சீரியஸ் வசனங்களும் கூட நமக்கு வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறது .திரையுலகில் விஜயகாந்திற்கு ஒரு வாரிசு உருவாகிவிட்டது . இவருக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது , இனிவரும் படங்களில் முழு நகைச்சுவையை முயற்ச்சிக்கலாம் .( படத்தில் இவர் எதற்கு நடித்தார் என யாருக்குமே புரியவில்லை , படத்தில் இவர் வரும் காட்சிகளை நீக்கி விட்டு பார்த்தாலும் , படம் முழுமையாக இருக்கும் )

இவர்களைத்தவிர ராதாரவி,ஸ்ரீமன்,பாண்டியராஜன்,கீர்த்தி சாவ்லா என பலரும் தத்தமது வேடங்களை பாத்திரத்திற்கேற்றவாரு செய்துள்ளனர் .

எடிட்டிங் மற்றும் கேமரா பல இடங்களில் அசத்துகின்றன , காட்சிக்கேற்றாற்ப் போல நிறங்களை மிகச்சரியாக உபயோகித்த கேமராமேனுக்கு ஷோட்டு . இயக்குனர் சரவணசக்தியின் இயக்கம் மிக அருமை .

இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் நிச்சயம் அவருக்கு இன்னொரு கில்லியாக அமைந்திருக்கும் .

படத்தின் பாடல்கள் மட்டுமே மைனஸ் , மற்ற அனைத்தும் பிளஸ். படத்தில் தேவையில்லாத கவர்ச்சி மற்றும் வன்முறையில்லை என்பது மிகவும் பாராட்டுக்குரியது . லோ பட்ஜட் படங்களுக்கே உரித்தான கவர்ச்சி காட்சிகள் இல்லாதது மகிழ்ச்சியை தருகிறது . இது போல இன்னும் பல லோ பட்ஜட் படங்கள் வந்தால் முண்ணனி ஹீரோக்களின் டவுசர்கள் கழண்டுவிடும் .

இப்படம் நம் எதிர்பார்ப்பிற்கும் மேல் இரண்டரை மணிநேர சுவாரசியத்தை தருகிறது . படம் முடிந்து வெளியே வருகையில் நிச்சயம் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி அனைவர் மனதிலும் . பி & சி சென்டர் ரசிகர்களுக்காக சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த படம் இதுதான்.

மொத்தத்தில் நாயகன் - பேரை காப்பாற்றிவிட்டான்

இந்த படத்திற்கு எனது மார்க் 41/100 ( விகடன் மார்க்கோடு ஒத்து போனால் மகிழ்ச்சிதான் )

_____________________________________________________________________________________

சரி இதில் ரித்திஷ் எங்கே ரஜினியை தோற்கடித்தார் என நீங்கள் கேட்பது புரிகிறது , பாத்திரதேர்வில் வெற்றியடைந்திருக்கிறார் ரித்திஷ் என்பதே உண்மை , நாயகன் படத்தின் மிக முக்கிய பாத்திரமான சக்தியை தான் எடுத்துக்கொண்டு நடிக்காமல் தனக்கேற்ற ஒரு பாத்திரத்தையும் , தனக்காக கதையை கடித்து குதறாமல் அப்படியே படத்தின் கதையை படமாக்க உதவியமையாலுமே , அவர் ரஜினியை மிஞ்சுகிறார்.

அது தவிர கதை தேர்வு , என்னதான் தான் பணம் கொடுத்து நடித்தாலும் ( 10 கோடியாம் ) ஒரு நல்ல கதையை தேர்வு செய்ததில் ரித்திஷ் முன்னோக்கியே இருக்கிறார் . படத்திற்கு பணம் போட்டாலும் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமிக்காமல் இருந்தமையிலும் ரஜினியை வெல்கிறார் .

இது போல பல காரணங்களால் ரஜினி குசேலனில் செய்த பல தவறுகளை , தனது இரண்டாம் படத்திலேயே புரிந்து கொண்டிருக்கிறார் , இந்த விசயத்தில் ஜே.கே.ஆர் ரஜினியை முந்தி விட்டார் என்பது உண்மை .

___________________________________________________________________________________

ஒரு குட்டி பொதுநல அறிவிப்பு சென்னை நேயர்களுக்கு மட்டும் :




சென்னையில் இந்த வார இறுதியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி GIVE LIFE என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மாராத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது . இந்த மாரத்தான் ஓட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் , அதில் கலந்து கொள்ள ரூ.100 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது , மாணவர்களுக்கு ரூ.50 , இந்த தொகை ஆதரவற்ற அநாதை குழந்தைகளுக்கு செல்வதால் அனைத்து சென்னை மக்களும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் . இதில் கலந்து கொள்ள நாம் நேரிலும் ஆன்லைனிலும் பதிவு செய்யலாம் .

அது பற்றிய விபரங்கள் மற்றும் கலந்து கொள்ள பதிவு செய்ய இங்கே செல்லவும்


நம்மாள் முடிந்த உதவிகளையும் அந்த நிறுவனத்தின் 13600 குழந்தைகளுக்கு வழங்கலாம் என அந்த நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் கூறப்பட்டுள்ளது .

நான் இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளேன் , நீங்களும் ஓட இருந்தால் சனிக்கிழமை என்னிடம் தெரிவிக்கவும் .

சேர்ந்து ஓடலாம் வாங்க ஒரு நல்ல காரியத்துக்கு


____________________________________________________________________________________

22 August 2008

முத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள்


முத்தம் , சில்லென்று சில குறிப்புகள் :


* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது


*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .


*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .


*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .


*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .


*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .


*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .


*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.


*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.


*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.


*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .


*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.


*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.


*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .


*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.


*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.


*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.


*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.


*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.


*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.


*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை


*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .


*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது


* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.


நன்றி - www.google.co.in


____________________________________________________________________


சில முத்தக் கவிதைகள் - ( யாரோ அதிஷா என்னும் அரைடிரவுசர் கவிஞர் எழுதியது.... : )


உன் உதடுகளை மூடிகொள்

யாரேனும் நுழைந்து விட வாய்ப்புண்டு

அது சொர்க்கத்தின் வாயில்


*******


உதடுகளின் முத்தம்

இச் எனும் சத்தம்

வாய்ப்பதில்லை முதிர்கன்னிக்கு


*******


மூன்று வருடங்கள் முழுமையாய்


முத்தங்களின்றி


நான் வாழ்ந்ததில்லை


என்


நான்காம் வயது வரை


*******


முத்தத்தொழிலில்


லாபம்


இருவருக்கும்...


*******


நாத்திகனுக்கும் நம்பிக்கை வருமோ


கூடு விட்டு கூடு பாய்வதில்


உன்னை முத்தமிடுகையில்


********


உன்னை முத்தமிட


என் உதடுகள் மறுக்கிறது


மலர்களை நான் கடிப்பதில்லை.


********


இறைவனின் அருள்


விபச்சாரியின் முத்தம்


இறைவனுக்கு காணிக்கை


விபச்சாரிக்கு டிப்ஸ்


****************


21 August 2008

பாலபாரதி,லக்கிலுக்,உண்மைத்தமிழன்,லதானந்த் மற்றும் சில பதிவர்கள் பற்றிய குட்டி செய்திகள் உங்களுக்காக

பதிவர்கள் குறித்த பல குட்டி செய்திகளின் தொகுப்பு இது ,



பாலபாரதி :



பதிவர் பாலபாரதி அவர்களின் '' அவன் - அது = அவள் '' புத்தக வெளியீட்டு விழா வரும் ஆகஸ்டு 31ம் தேதி நடைபெருகிறது . பதிவர்கள் அனைவரும் கட்டாயம் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .







விழா குறித்த விபரங்கள் :



நூல் வெளியிடுபவர் :தோழர் ஆர்.நல்லக்கண்ணு


நூலினை பெற்றுக்கொள்பவர் :தோழி ரேவதி, திருநங்கை


வாழ்த்துரை :தோழர் ஆதவன் தீட்சண்யாதோழர் பாட்டாளி



ஏற்புரை : நூலாசிரியர் பாலபாரதி



நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி



இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,28/160, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை,


சென்னை-18.(மியூசிக் வேர்ல்டு அருகில், கிழக்கு பதிப்பகம் எதிரில்)



இது ஒரு பதிவர் சந்திப்பாகவும் அமையும் என்பதால் அனைத்து பதிவுல நண்பர்களும் கட்டாயம் கலந்து கொள்ளவும் .



லக்கிலுக் :


பதிவர் லக்கிலுக் வரும் ஞாயிற்றுகிழமை( ஆகஸ்டு 24 ஆம் தியதி ) தனது ___ வது பிறந்தநாளை கொண்டாடினார் . அவருக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . அவருக்கு பத்து-பத்து மற்றும் சுட்ட பழம் டிவிடி ஒன்று பரிசளிக்க எண்ணியுள்ளேன் .


(கோடிட்ட இடத்தை அவரே நிரப்பினால் நல்லது , சில உண்மைகள் சொல்லிவிடுவதை விடவும் மறைக்கப்படும் போது மிகஅழகாய் தோன்றும் )




உண்மைத்தமிழன் :


பதிவர் உண்மைத்தமிழன் அவர்கள் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர்காய்ச்சலால் அவதிகுள்ளாகி வருகிறார் . அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பல நீண்ட பதிவுகளை இந்த பதிவுலகத்திற்கு சமர்ப்பிக்க எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனை அனைத்து பதிவர்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன் .


அவர் விரைவில் குணமடைய முருகப்பெருமான் அருள் புரியட்டும் .



லதானந்த் :

இந்த வாரக் குங்குமத்தில் லதானந்த் அவர்கள் எழுதிய படக்கதை ஒன்று வந்துள்ளது , அனைவரும் கட்டாயம் படித்து பயன் பெறவும்.


நான் பதிவுலகில் மிக அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் பதிவர்களில் மிக முக்கிய பதிவர் லதானந்த் அவர்கள் , நேற்று நான் எழுதிய எனது கதை குறித்த அவரது கருத்துகளை கேட்ட போது மிக நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டார் அவை உங்கள் பார்வைக்கு ,

கடந்த வாரம் நான் எழுதிய இறுதி முத்தம் கதை குறித்து அவரது விமரிசனம் ,


கதை நன்றாக இருக்கு. ,முத்தங்களைப் பத்தின மேலதிக விஷயங்களும் சரிதான். ஆனால் அவை தனிப் பதிவாக இருந்திருக்கணும். கதையின் கனத்தை லேச்சாக்கிவிட்டது . கதை நிகழிடம் இருக்கணும் . கதையின்மிக முக்கியமான வரி ஆரம்பத்தில் இருந்தா நல்லா இருக்கும் . உதாரணமா இந்தக் கதையின் ஆரம்ப வரி "தாயில்லா என் அன்பு மகள் ராஜி இன்னும் சில மணி நேரத்தில் செத்துப் போவாள் எனபதை நினைக்கும்போதே எல்லையில்லாத்துயரம் என்னைச் சூழ்கிறது" அப்பப் படிக்கிறவிங்களுக்கு ஒரு ஜெர்க் இருக்கும்


லதானந்த் அண்ணனின் அன்புக்கும் அவர் என மீது வைத்திருக்கும் அக்கறைக்கும் அவரது விமர்சனத்திற்கும் மிக்க நன்றி அண்ணா!! .

அவர் தனது மிக நீண்ட வலையுலக அறப்போரை கைவிட்டு விரைவில் மீண்டும் பல நல்ல பதிவுகளை எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.


பரிசல்காரன் :

பதிவர் பரிசல் காரன் தனது 11ஆம் ஆண்டு திருமண நாளை மிகச்சமீபத்தில் கொண்டாடினார் , அவருக்கு அனைத்து பதிவுல நண்பர்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள் . ( அவரு ஆளை பாத்தா குட்டி பையன் மாதிரி இருக்காரு கல்யாணமாகி 11 வருஷம் ஆன அங்கிள்னு சொன்னா நம்பவே முடியல ) . அவருக்கு அதிஷாவின் வாழ்த்துக்கள்.



டிபிசிடி :


பதிவர் டிபிசிடி அவரது குட்டி பெண்ணுக்காக ஒரு பிரபலமான வீடியோவை பல காலமாக தேடி வருகிறார் . அந்த வீடியோ ..


'' பூந்து பூந்து '' என சங்கர் மகாதேவன் பாடும் கின்லே(KINLEY MINERAL WATER) விளம்பரம் .



அந்த குட்டி பெண்ணுக்கு பதிவர்கள் உதவ வேண்டும் , இந்த வீடியோ குறித்து உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் . குட்டிபாப்பவின் அன்பு முத்தங்கள் உங்களுக்கு பரிசாக மின்னஞ்சல் செய்யப்படும்





இட்லிவடை :


தமிழ்மணத்தில் மீண்டும் இட்லிவடையாரின் பதிவுகள் இடம் பெருகின்றன , என்ன காரணம் என தெரியவில்லை. சமீபகாலமாக இட்லிவடையின் மவுசு வலையுலகில் குறைந்துவிட்டதால் இருக்கலாம் என நம்ப தகுந்த வட்டராங்கள் கிசுகிசுக்கின்றன .


நரசிம் :


நேற்று பதிவர் நரசிம்மை நேரில் சந்தித்த போது , எனது இறுதிமுத்தம் கதை அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தோடு ஒத்து போவதாக கூறினார் அதிர்ச்சியாக இருந்தது .


அது தவிர பதிவர்களாகிய நாம் ஒருங்கிணைந்து ஒரு குழுவை உண்டாக்கி அக்குழு மூலமாக , நமக்கு தெரிந்த பதிவர்கள்,நண்பர்கள் , ஏழைகள் என இல்லாதோர்க்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்யலாம் எனக்கூறினார் , அது மிக நல்ல யோசனையாக இருந்தது .



விரைவில் அது குறித்து ஒரு அறிவிப்பு பதிவு வெளியாகும் .



செந்தழல் ரவி :

ஆகஸ்டு மாதம் 23ம் தேதி சனிக்கிழமை பெங்களூருவில் அண்ணன் செந்தழல் ரவி ஒரு பதிவர் சந்திப்பு அறிவித்திருந்தார் .
அதில் அடியேனும் கலந்துகொண்டு விழாவ்வை முடிந்த வரை சிறப்பித்தேன் .

அது தவிர சந்திப்பு மிக நல்ல அனுபவமாக இருந்தது , அது குறித்து இந்த வாரத்தில் ஒரு பதிவு கட்டாயம் நம் வலைப்பூவில் வெளியாகும்.





விக்னேஷ்வரன் :

பதிவர் விக்னேஷ்வரன் அவர்களின் தாயார் சென்ற வாரம் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார் . அவருக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் சார்பாக வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் .


*****************************


இத்துடன் இச்செய்தியறிக்கை முடிவடைகிறது , இது தவிர இன்னும் பற்பல பதிவுலக செய்திகள் இருந்தும் நேரமின்மை மற்றும் பதிவின் நீளம் கருதி நன்றி வணக்கம் .


___________________________________________________________________




குட்டி தகவல்கள் சில :

* உலகிலேயே மிக நீளமான பெயரை கொண்ட வலைப்பூ







என்கின்ற இந்த வலைப்பூவின் பெயரே இதுவரை பிளாக்கரில் பதிவு செய்யப்பட்ட வலைபூக்களின் பெயர்களில் மிக நீளமான ஒன்று .




* உலகிலேயே மிக நீளமான இணையதள முகவரி எது தெரியுமா




இந்த இணையதளத்தின் பெயர் இங்கிலாந்து நாட்டின் வெல்ஷ் மாகாணத்தில் உள்ள ஒரு குட்டி கிராமத்தின் பெயர் , இப்பெயர் 1960 களில் வெளியான ஒரு திரைப்படத்தின் பெயர் என்பதும் வியக்க வைக்கிறது . ( அது குறித்து இணையத்தில் தேடிய போது அது ஒரு பிட்டு படம் என்று தெரிந்ததும் மேலும் வியதேன் , மேலும் இதுபோல நம்மூரிலும் வெளியான ''தங்கத்தோணி'' என்கிற ஷகிலா படப்பெயரில் ஒரு கேரள கிராமம் இருக்கிறது எனபதையும் தெரிவித்து கொள்கிறேன் )

___________________________________________________________________



சென்றவாரம் வெளியான எனது இறுதி முத்தம் சிறுகதையுடன் வெளியான முத்தக்குறிப்புகள் அந்த பதிவிலிருந்து பற்பல பதிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டது . முத்தக்குறிப்புகள் விரைவில் தனிப்பதிவாக வெளியாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்

___________________________________________________________________


ஒரு அரிய புகைப்படம்(அல்லது) ஓவியம் :



1890ல நம்ம மெரினா பீச்... இன்னா சோக்காகீது பாருங்கோ


அப்பால இந்த படம் வரைஞ்சதா இல்ல படம் புட்ச்சதானு தெர்லபா





__________________________________________________________________

20 August 2008

FLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னுமொரு பதக்கம் ( மல்யுத்தத்தில் சுசில்குமாருக்கு வெண்கலம்)


இன்று நடந்த ஓலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்க்காக விளையாடிய சுசில்குமார் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்க வேட்டையில் மேலும் ஒரு பதக்கத்தை சேர்த்துக்கொண்டார் .

இந்தியா இது வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் பதக்கம் பெருவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது

ஒலிம்பிக்கில் இந்தியா இரண்டு பதக்கங்கள் பெருவதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த தினமலர் செய்தி

http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=419&cls=

ஓலிம்பிக்கில் வெண்கலபதக்கம் வென்ற சுசில்குமாருக்கு வாழ்த்துக்கள்

19 August 2008

'சத்யம்' - தமிழ் சினிமாவின் கடப்பாகல் !!!








சத்யம் - தமிழ் சினிமாவின் மைல்கல் !!! :


சில நாட்களுக்கு முன் , இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான புரட்சித்தளபதி விஷாலின் புதிய திரைப்படமான சத்யம் திரைப்படத்தை எங்களூர் டூரில் டாக்கிஸில் பார்க்க நேர்ந்தது . இப்படம் வருவதற்கு முன்பிருந்தே எனக்கு இப்படம் குறித்து மிக அதிக ஆர்வமிருந்தது , அதற்கு முதல் காரணமாக நான் கருதுவது நயன்தாராவின் வயிறு , இரண்டாவது விஷாலின் வயிறு . ஆறடுக்குகளெனப்படும் ஒரு வகை உடற்பயிற்சியை அவ்விருவரும் இப்படத்திற்காக மேற்கொண்டனர் என கேள்வி பட்டதுமே , அளவில்லா பெரு மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன் .


மிக அதிக எதிர்பார்ப்புடன் அப்படத்திற்கு சென்ற என்னை ,'' சத்யம் '' நான் வணங்கும் காரமடை ரங்கநாதன் சத்தியமாக ஏமாற்றவில்லை என்பதே சத்யமான உண்மை .

முதல் காட்சியிலேயே அனல் பற்றி கொண்டது போல ஒரு சேஸிங்கில் தொடங்கும் படம் , விஷாலின் வருகைக்கு பிறகு வேகமெடுக்கிறது , விஷாலின் நரம்பேறிய முருக்கான உடலும் , கனலாய் காட்சியளிக்கும் கண்களும் , மிடுக்கான ஒரு காவல்துறை அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார் , அவரது உடலசைவு மொழிகளிலேயே அவரது உழைப்பு தெரிகிறது , அடுத்தத்தடுத்த கொலைகளும் அதற்கு காரணமான உபேந்திராவும் , அதற்கான காரணமும் , சட்டத்தின் தோல்வியும் என பயணிக்கும் இப்படத்தில் குளுமைக்கு நயன்தாராவும் தன் கடமையை ஆற்றியிருக்கிறார்.

தீப்பொறி பறக்கும் வசனங்களுக்கு , இயக்குனருக்கு சபாஷ் , இறுதிக்காட்சியில் படத்திற்க்காக தன் தலையை முழுவதும் வழித்துக்கொண்டு 15 நிமிடங்கள் விடாமல் வசனம் பேசும் விஷால் , வசன உச்சரிப்பில் அசத்துகிறார் . உபேந்திரா மட்டும் ஏனோ மனதில் ஒட்டவில்லை . அவர் வரும் காட்சிகளும் வசனங்களும் படத்தின் ஓட்டத்தை குறைக்கும் படியே உள்ளது .

படத்தின் காட்சிக்கேற்ப இனிமையான இசை தந்த ஹாரிஸ் ஜெயராஜிற்கு ஆஸ்கர் வழங்கலாம் . கலக்கியிருக்கிறார் . பாடல்கள் ஒவ்வொன்றும் பார்ப்பவரை இருக்கையோடு கட்டி போடுகின்றன .

சாமிதான் கண்ணைகுத்தணும் , சட்டம்தான் தண்டிக்கணும் எனும் சிறார் முதல் பெரியோர் வரைக்கும் புரியக்கூடிய வசனம் படம் முடிந்து வெளியே வந்த பின்னும் , மனதில் மாறாமல் பதிகிறது .

காமெடி , காதல் , செண்டிமென்ட் , வீரவசனங்கள் , சண்டை , திரைக்கதை முடிச்சுகள் என படத்தை அனைவரும் பார்க்கும் வண்ணம் தந்த இயக்குனர் ராஜசேகருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் , அவர் இது போல இன்னும் பல நூறு படங்களை தமிழிற்கு தர வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களாகிய எங்கள் அவா. அதே போல புரட்சி தளபதி விஷாலும் தனது உருவத்திற்கேற்ற இது போன்ற பாத்திரங்களில் நடித்து விரைவில் தமிழகத்தின் அடுத்த சூப்பர்ஸ்டார் ஆக வாழ்த்துக்கள் .

இப்படம் தமிழில் மட்டுமல்லாது , தெலுங்கிலும் சல்யூட் என்ற பெயரில் வெளி வந்துள்ளதாக அறிந்தேன் அப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மொத்தத்தில் ,

சத்யம் திரைப்படம் - தமிழ்திரையுலகின் மைல்கல்

__________________________________________________________________

இனி என்னோட மனசாட்சியின் விமர்சனம் :

இப்படிலாம் பதிவு போடணும்னுதான் ஆசைப்பட்டு அந்த பாழாப்போன சத்யம் படத்துக்கு காசு செலவு பண்ணி தியேட்டருக்கு போயி பார்த்தேன் , இழவு , படமாடா எடுத்துருக்கீங்க , ங்கொய்யால தமிழ் படம்னா தமிழ் நாட்டுக்கு மட்டும் எடுக்கனும் , நீங்க தெலுங்குக்கும் சேர்த்துல்ல எடுத்துருக்கீங்க , படத்துல ஒரு எடத்துல கூட தமிழ் எழுத்த மருந்துக்கு கூட காமிக்கல , அப்பவே புரிஞ்சு போச்சுடா உங்க வண்டவாளம் ,

விஷால்ரெட்டி இருக்காரே அவருக்கு ரெண்டு ஸ்டேட்லயும் முதலமைச்சர் ஆகணும்னு ஆசை போல , அதான் ரெண்டு ஸ்டேடையும் சரியா கணக்கு பண்ணி படம் எடுத்திருக்காரு , படத்தில பாதிபேருக்கு டப்பிங் வாய்ஸ்தான் ,

படமுழுக்க ஏய் ஏய்னு ஸௌண்டு வேற , இது பத்தாதுனு கிளைமாக்ஸ்ல இதுதான்டா போலீஸ்னு டயலாக்லாம் விடறாறு , விஷால்ரெட்டி சார் !! உங்களுக்கு எதுக்கு இந்த உடம்பு குறைக்கற வேலைலாம் பாத்தா தனுஷ் தாத்தா மாதிரி இருக்கீங்க , அதுல படத்தில பாதி சீன் சட்டையில்லாம வந்து புஜபல பிராமாக்கிரத்த காட்டறேனு வேற எதையோ காட்றீங்க , அதுவும் அந்த 30 பேர அடிக்கிற பைட்டு சுள்ளான் படத்தில தனுஷ் போட்ட சண்டைய விட மிக கேவலாம இருந்துச்சு , உங்களுக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைலாம் , எப்பபவும் உங்களுக்குனே ஒரு கதை இருக்கும்ல , வெளியூர் பையன் உள்ளூர் தாதானு அதையே நடிச்சு நாலு காசு பாப்பிங்களா.. அத விட்டுட்டு காக்கி சட்டை போட்ட கூர்க்கா மாதிரி ஏன் இந்த கொலை வெறி ,

இதுல நயன்தாராவ ஊறுகா மாதிரி இல்ல இல்ல உப்பு மாதிரி யூஸ் பண்ணிருக்காங்க , இப்படியே நாலு படம் , இல்ல இன்னும் ஒரு படம் நடிச்சா போதும் நயனுக்கு தமிழ்திரையுலகம் சங்கூதிரும் , படத்தில இவங்க வர சீன்லலாம் பாட்டு வந்துடுது , தியேட்டர்ல நயன்தாராவ பார்த்தாலே பச்ச புள்ள கூட அலறி துடிக்குது , ஐயயோனு பாட்டு வைக்க போறாங்கனு ,

அதும் பாட்டுங்கள காதால கேக்க முடியல , படத்தில மொத்தமா 5 இன்டர்வெல் . உள்ள போயி படம் பார்த்துட்டு வெளிய வரதுக்குள்ள அரை பாக்கெட் சிகரெட் காலி .
ஹாரிஸ் ஜெயராஜிக்கு சம்பள பாக்கி போல , அவரு படங்கள்ளயே இந்த படத்துக்குதான் மகா மொக்கையான பாட்டுலாம் போட்றுக்காரு.

படத்தோட வசனம்லாம் .........ம்ம்ம் அசிங்கமா வாய்ல வருது , டப்பிங் படங்களுக்கு வசனமெழுதும் மருதபரணியாக இருக்கலாமோனு நினைக்கிறேன் , படத்தில சில சேம்பிள் டயலாக்ஸ்

* ''டேய் பகவான பாக்க பாதயாத்திரை போயிட்டிருந்தவன பகீர்னு புடிச்சு , கூண்டுல நிருத்திட்டியே ''

* ''உன்னாட்டம் எத்தன பேர பாத்துருக்கேன்டா , தர்மத்துக்கு ஒரு பங்கம் வந்தா அத காப்பாத்த நான் வருவேன்டா ''

இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும் .

படத்தில உபேந்திராவ கூட டப்பிங் பட வாய்ஸ்ல கத்தி கத்தி பேச விட்டு வேடிக்கை பாத்திருக்காங்க , அவரும் ஏமாத்திட்டாரு .

இனிமேலாவது தமிழ்படத்த தமிழ்படமா எடுங்கடா... இல்ல உருப்படியா தெலுங்கு படம் எடுத்து தமிழ்ல டப்பிங் பண்ணி ரீலீஸ் பண்ணுங்கடா...

இப்படி அரைகுறையா படமெடுத்து உயிர வாங்கதீங்க...

மொத்தத்தில் சத்யம் -


தமிழ்சினிமாவே அல்ல, ஒரு வேளை தெலுங்கில ஹிட் ஆனா அவங்க வேணா மைல்கல் , பாறாங்கல், கடப்பாகல்னுலாம் சொல்லிக்கலாம்

____________________________________________________________________

வரலாறு படைத்த ஒரு சினிமா பற்றிய குட்டி செய்தி :
பெரிய உயிரினங்களால் ஏற்படும் அழிவுகள் குறித்து முதன்முதலில் 1933ல் வெளியான கிங்காங் திரைப்படத்தில் STOP MOTION எனப்படும் ஒரு வகை திரையாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட கிங்காங்கின் மாதிரி உருவம் , அந்த மாதிரியை சுற்றி குரங்கை போன்ற உருவம் வருமாரு பஞ்சு அடைக்கப்பட்டு அதன் உடலை மிருக தோலினாலும் அதன் மீது முயலின் ரோமங்களால் மேல் பூச்சும் தரப்பட்டு படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . அதன் உடல் கூடு இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ,அதன் உடலின் எல்லா பாகங்களும் அசையும் வகையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .









___________________________________________________________________

16 August 2008

படிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)

சுயமில்லா இரவிகளில் :

இரவு வேளைகளில் தனியாக சுற்றிதிரிவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று , சென்ற ஒரு வாரமாகத்தான் நான் எங்கும் செல்வதில்லை , மனநிலை சரியில்லை , மனதில் வெறுமையின் அளவு மிதமிஞ்சிய அளவுக்கு முற்றியிருந்தே காரணம் ,

அவளை இரவுகளில்தான் கண்டெடுத்தேன் , நான் அலைவது தேடலுக்காய் , முற்றுப்பெறாத என் தேடலுக்காய் , பல வருடமாய் தொடரும் என் தேடல் இன்றாவது முற்று பெருமா என்பது போன்ற ஒரு தேடல். அநாதைகளின் வெருமைக்கு அர்த்தமில்லை.

எனது வண்டி இதோ ரயில் நிலையத்தை தாண்டிவிட்டது , ரயில்நிலையத்தின் பின்புறம்தான் அந்த பாழடைந்த பழைய பிரிட்டிஷ் காலத்திய கிடங்கு இருந்தது , அங்குதான் அரவு வேளைகளில் சுற்றி திரிய எனக்கு தேவையான போதை கிடைத்தது ,


அங்கு இரவுகளில் சுற்றும் இளமையில்லா விபச்சாரிகளும் , அரவாணிகளும் , கஞ்சா விற்கும் பிச்சைகார வேடதாரி கிழவர்களும் , லாரி ஓட்டுனர்களும் , அங்குள்ள வண்டி கடையில் டீ விற்கும் பெரியவரும் என அந்த இடத்தின் அனைத்தும் எனக்கு தெரியும் ,

அந்த இடத்தில் பல வருடங்களாக சுற்றியதில் கிடைத்தவை இந்த சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இவர்களும் இவைகளுமே , அவர்களுக்கும் அவைகளுக்கும் ஆயிரமாயிரம் ஏக்கங்களும் , கனவுகளுகளும் , கதைகளும் எப்போதும் இருந்திருக்கின்றன . அவர்கள் சமுதாயத்தை தங்கள் இந்நிலைக்காக கேள்விகள் கேட்டதில்லை .

கேள்விக்குறிகள் ஏன் வளைந்திருக்கின்றன தெரியுமா , கேள்வி கேட்பவன் என்றுமே இந்த சமுதாயத்தில் வளைக்கப்படுவான் , சுவடுகளின்றி அழிக்கப்படுவான் அதற்குத்தான் அந்த குறியின் கீழ் ஒரு புள்ளியோ?

மஞ்சுளாவை எனக்கு நன்றாகத்தெரியும் , அந்த இருள் நிறைந்த பிரிட்டிஷ் கிடங்கியில் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு சிறிய அறைதான் அவளது வசிப்பிடம் , வயது நாற்பத்தைந்துக்கு மிகாமல் இருக்கும் , விபச்சாரி , ஐந்துக்கும் பத்துக்கும் கூட தன் உடலை விற்பவள் , மிக நல்லவள் , என்னை பார்த்தால் பாக்கு மட்டும் கேட்பாள் , என்னை பல முறை அவள் சுகிக்க அழைத்தும் நான் மறுத்திருக்கிறேன் . அவளது அன்பு மட்டும் போதுமென்றிருக்கிறேன் . என்னால் விபச்சாரிகளை புணர இயலுவதில்லை . இவளை கண்ட பிறகுதான் இப்படி .

இவள் வாழ்க்கையில் சந்திக்காத மனிதரில் இல்லை , எல்லா வகை மனிதனையும் சந்தித்திருக்கிறாள் ,

குட்டை,நெட்டை,குண்டு,ஒல்லி,இளைஞன் ,கிழவன் ,குடும்பஸ்தன்,பிரம்மச்சாரி,வழிபோக்கன்,
பிச்சைகாரன்,பணக்காரன்,பார்ப்பனன்,பகுத்தறிவாளன்,கம்யூனிஸ்ட்,எழுத்தாளன்,அரசியல்வாதி,
முதலாளி,தொழலாளி,விவசாயி...............


சுடுகாட்டில் காணும் சமத்துவத்தை , விபச்சாரியின் யோனியிலும் காணலாமோ? , அவளும் அவளது உடலும் கூட ஒரு சுடுகாட்டை போன்றதுதான் .

அவளது உடலில் போலிஸின் பூட்ஸ்கால்கள் படாத இடமென்று எதுவுமேயில்லை , போலிஸூக்கு காமமென்றாலும் , கடுப்பென்றாலும் இவளது உடலே இறையாக்கபட்டிருக்கிறது.
அவள் கூறும் கதைகளென்றால் எனக்கு மிக பிடிக்கும் , ஆயிரமாயிரம் கதைகள் சொல்வாள் , கஞ்சாவின் மயக்கத்தினூடே அவளது கதைகள் அற்புதமாய் என் மனகண்ணில் விரியும்.

அவளது சிரிப்பிலும் சமயங்களில் கடவுள் தெரிந்திருக்கிறார் . அவளது அரவாணி தோழிகளோடு நானும் பல நாட்களில் மது அருந்தியபடி பேசிமகிழும் வேளையில் இவள் மட்டும் கண்களில் எதோ ஒரு கதை எனக்கு மட்டும் புரியும் படி கூறியிருக்கிறாள் . அக்கதை எனக்கு இப்பொது வரை புரிந்ததே இல்லை.

அவளும் உன்னை போல என்னை போல மூன்று வேளை சோறு தின்று , இச்சமூகத்தில் கவுரமென்னும் சங்கிலியோடு தன்னை பிணைத்துக்கொண்டுதான் வாழ்ந்திருக்கிறாள் . இவளது அழகு ( என் காதலியின் அழகு ) இதோ இவளை பல கழுகுகளின் காமத்திற்கு தீனியாக்கியிருக்கிறது , இன்று அவளை பார்த்தால் அவள் அழாகாய் இருந்திருப்பாள் என்று கூட யாரும் ஒத்துக்கொள்ள முடியாதபடி சமுதாயம் அவளை அழகாக்கியிருந்தது .

அவள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்து சீரழிந்த கதை எல்லாரும் அறிந்த ஒன்றுதான் , சீரழிந்த அவளது வாழ்க்கை மேலும் சீரழிய அவளது அன்பின் தேடலும் ஒரு காரணமாய் இருந்தது , அவளுக்கு சென்னை வரும் முன்பே திருமணமாகியிருந்தது , அவளுக்கும் ஒரு மகனிருந்தான் .


இதோ இன்றிரவும் அவளை ஒரு முறை பார்த்து விட்டு என் தேடலை தொடர வேண்டும் , வண்டியை அந்த பிரிட்டிஷ் கிடங்கின் வாசலில் நிறுத்திவிட்டு , உள்ளே நுழைந்தேன் , அவளில்லை , அறையிலும் ஒன்றுமில்லை , வாசலில் பெரியவரிடம் கேட்டபோது அவள் ஜிஹெச்சில் இருப்பதாகவும் ஒரு வாரமாய் வயிற்றுபோக்கும் , காய்ச்சலுமாய் கிடந்ததாகவும் கூற மனது ஏதோ செய்தது , வண்டியுடன் அறைக்கே திரும்பி விட்டேன் .

அடுத்த நாள் காலை அவளை நேரில் சந்திக்கலாமென மருத்துவமனைக்கு செல்ல , அரை நிர்வாணமாய் பாதி உயிரோடு மருத்துவமனை வாயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தாள் , என் கண்களில் துளிர்த்த கண்ணீருக்கு காரணம் தெரியவில்லை என் கண்களுக்கும் எனக்கும் .
தனக்கு எய்ட்ஸ் என கூறினாள் , இனி பிச்சை எடுக்கத்தான் வேண்டுமெனவும் இனி தன் உடலுக்கு மதிப்பேது என வருந்தினாள் , அவளை என் வண்டியில் அமரசெய்து வீட்டிற்கு கிளம்பினேன் . என்னோடு தங்கிவிட வற்புறுத்தினேன் , அவளும் சரியென்று கூறிவிட , எனது வெகு நாள் தேடல் முடிவுக்கு வந்து விட்டதாய் எண்ணினேன் .

என் தாயும் மஞ்சுளாவை போலத்தான் சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்தவள் , இன்று வரை அவளை எந்த சினிமாவிலும் நான் பார்த்ததில்லை , அவளுக்கும் இது போல ஒரு நிலை வந்திருக்குமோ என்கின்ற என் தேடல்தான் இதோ எனக்கு ஒரு புதிய தாயை கண்டறிய உதவியிருக்கிறது , எனது தேடலுக்கு முற்றுப்புள்ளியாய் மஞ்சுளா வந்ததாய்தான் நினைத்தேன் ,


ஒரு மாதம் என்னோடு இருந்து எனக்கு சிறிய உதவிகள் செய்து கொண்டு மிக நிம்மதியாய் மகிழ்ச்சியாய் , தன் வாழ்வில் முதல் முறையாய் நிம்மதியாய் வாழ்ந்தாள் , அவளுக்கு என்ன தோன்றியதோ , ஒரு வெள்ளி கிழமை காணாமல் போய்விட்டாள் .


தெய்வம் எனக்காய் தந்த ஒன்று , காணாமல் போனது , வாழ்க்கையின் இருபது வருடங்களை தனியே கழித்த எனக்கு வெறுமை தெரிந்தது . இரவுகளில் நிறுத்தப்பட்டிருந்த எனது தேடல் மீண்டும் தொடர்ந்தது . இதோ தினமும் தொடர்கிறது எனது தேடல் ,

அவளை இரவுகளில்தான் நான் கண்டெடுத்தேன் , நான் அலைவது தேடலுக்காய் , முற்றுப்பெறாத என் தேடலுக்காய் , பல வருடமாய் தொடரும் என் தேடல் இன்றாவது முற்று பெருமா என்பது போன்ற ஒரு தேடல் .

____________________________________________________________________________________

மண்டை :


அந்த மனிதரை பார்க்க மிக நல்லவர் போலத்தான் இருந்தது ராமிற்கு , இருந்தாலும் தயக்கத்தோடு எப்படி அவரிடம் கேட்பது , அவர் தன்னை தவறாக நினைத்து விட்டால் , ராமிற்கு இது அடிக்கடி எழுகின்ற சந்தேகம்தான் , ஆனால் பேருந்து நிலையத்தின் தனியே நிற்கும் ஒரு ஆணிடம் எப்படி கேட்பது ,

இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க நீல நிற சட்டையும் கையில் ஆனந்த விகடனுமாய் அமர்ந்திருந்த மோகன் ராமை முறைத்து பார்க்க ராமிற்கு வெட்கமாய் இருந்தது ,

ராம் இப்படி ஒன்றை தேடித்தான் பல வருடமாய் அலைந்திருக்கிறான் , ஆனால் இன்று அது அவன் முன்னே , ஆனால் அவனால் அதை பற்றி கேட்க வெட்கம் பிடுங்கியது , மனதிற்குள் ஒரு முடிவெடுத்தவானாய்,

அவரருகில் சென்று

'' சார் !! '' என்றான்

அவனை மேலும் கீழுமாய் ஒரு பார்வையை உதிர்த்து விட்டு

''சொல்லுங்க சார்''

''சார் தப்பா நினைச்சுகாதீங்க , ''

'' அட என்னப்பா , தயங்காம கேளு ''

'' இந்த விக் எங்க வாங்கினது , ரொம்ப அருமையா இருக்கே , பார்த்தா நிஜம் மாதிரியே இருக்கே சார் ? சொன்னா நானும் ஒன்னு வாங்கிப்பேன் அதான் ''


கடுப்பான மோகன் விருட்டென அங்கிருந்து நகர , நம் கதாநாயகனும் தனது அரைமண்டையை மறைக்கும் அற்புத விக்கின் தேடலைத்தொடர்ந்தான் .


___________________________________________________________________



சென்னை குறித்த அரிய புகைப்படம் : இப்படத்தில் தெரிவது 1925 ஆம் ஆண்டில் கூவம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையமும் .


____________________________________________________________________
வந்தது வந்துட்டீங்க அப்படியே பக்கத்துல கிரிக்கெட்ட விட சிறந்த விளையாட்டா நீங்க கருதும் விளையாட்டு எதுனு வலது பக்கம் ஓட்ட குத்திட்டு போங்கோ .
____________________________________________________________________

15 August 2008

இந்தியக்கொடி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சில : சுதந்திர தின சிறப்புப்பதிவு

நமது இந்தியாவின் தேசியக்கொடி குறித்த சில தகவல்கள் :
நமது இன்றைய மூவர்ணக்கொடி ஒரே நாளில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல . அது பல மாற்றங்களுக்கு பிறகு பலரது உழைப்பால் இன்றைய நாளில் நாம் உபயோகிக்கும் மூவர்ணக்கொடியாக உருப்பெற்றது .

முதல் மூவர்ணக்கொடி :




இந்தியாவின் சுதந்திர போர் இருபதாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் தொடங்கிய வேளையில் , அதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்தினை சார்ந்த தேசியக் கொடியை மட்டுமே பயன்படுத்தி வந்த இந்தியர்கள் தமக்கென ஒரு கொடியையும் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு கொடியாக இருக்க வேண்டும் என கருதி 1906ஆம் ஆண்டில் வங்காளத்தில் சுசிந்தர பிரசாத் போஸ் என்பவரால் வங்காளத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தில் , இந்தியாவில் முதன்முதலாக மூவர்ணக்கொடி இடம் பெற்றதாக வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன . நடுவில் மட்டும் சீக்கியர்களுக்காக மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டது.
இம்மூவர்ணக்கொடியில் , காவியில் நீள்வாக்காக 8 நட்ச்சத்திரங்களும் , மஞ்சளில் வங்காள மொழியில் வந்தே மாதரமும் , பச்சையில் ஒரு சூரியன்,சந்திரன் அதன் மீது ஒரு நட்சத்திரத்தோடு அமைந்தது .

முதலாம் உலகப்போரில் நமது கொடி :





1907ல் முதலாம் உலகப்போரின் ஆரம்ப காலத்தில் , பிக்காய்ஜி காமா என்பவர் , ஜெர்மனியில் இந்தியாவின் மூவர்ணக்கொடியில் சில மாற்றங்களோடு அங்கே வெளியிடப்பட்ட இக்கொடி , முதலாம் உலகப்போருக்குப்பின் பெர்லின் கமிட்டி கொடி என அழைக்கப்பட்டது .



இக்கொடியில் இஸ்லாத்தை காட்டுவதாக பச்சைநிறம் முதலாவதாகவும் அதில் அப்போது இந்தியாவில் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில் எட்டு தாமரைகளும் இந்து மதத்தை வலியுருத்தும் காவி நிறம் கடைசியிலும் அதில் வலதுபுறம் சூரியன் மற்றும் இடதுபுறம் சந்திரனும் இடம்பெற்றிருந்தது , நடுவில் வெள்ளைநிறத்தினூடே வந்தேமாதரம் தேவநாகரியில் எழுதப்பட்டிருந்தது . இக்கொடி முதலாம் உலகப்போரில் மெசபட்டொமியாவில் நடந்த போரில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .



1917 ல் மாற்றம் :



1917 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுயாட்சி வேண்டி அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதர திலகரும் ஒரு புதிய கொடியை உருவாக்கினர் . ஆனால் இக்கொடி அவ்வளவாக மக்களை சென்றடையவில்லை.



காந்தியின் வருகை :





மகாத்மா காந்தி அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் கொடியின் பல மாற்றங்களை கொண்டு வந்தார் , 1921 ஆம் ஆண்டு ஒரு புதிய வடிவில் கொடி உருவாக்கப்பட்டது . அக்கொடியில் இந்தியாவின் சிறுபான்மையினரின் மத அடிப்படையில் வெள்ளை(கிறித்துவம்),பச்சை(இஸ்லாம்),காவி(இந்து) என வரிசையாகவும் நடுவில் ராட்டையும் இடம் பெற்றது , அது அப்போதைய ஐயர்லாந்து நாட்டின் கொடியை ஒத்ததாக இருந்தது . இது பல அரசியல் காரணங்களால் இந்திய காங்கிரஸ் மற்றும் பெருவாரியான சுதந்திர போராட்டங்களிலும் உபயோகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




மதம் சார்ந்த ஒற்றை நிற இந்தியக்கொடி :



இதனை அடுத்து ஆரஞ்சு (ஆக்கர்) நிறத்தில் இடது மூலை உச்சியில் ராட்டையுடன் ஒரு கொடி உருவாக்கப்பட்டது , அதுவும் இந்திய தேசிய காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டது.

ராட்டையுடன் இந்திய தேசிய காங்கிரஸின் கொடி 1931 :







1931 ல் காந்தியால் உருவாக்கப்பட்ட இக்கொடி இன்றைய நமது தேசிய கொடியோடு ஒத்து இருந்தது , நடுவில் அசோக சக்கரத்திற்கு பதிலாக ஒரு ராட்டை இடம் பெற்றது , இது அக்காலகட்டத்தில் அனைவாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களால் பல சுதந்திர போராட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது .


இந்தியாவின் இன்றைய தேசியக்கொடி :






1947 ஆகஸ்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் திரு.ராஜேந்திர பிரசாத் , திரு.அப்துல்கலாம் ஆசாத், திரு.ராஜாஜி, திருமதி.சரோஜினி நாயுடு , ஆகியோரது தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கான தேசிய கொடியை வடிவமைக்க முடிவானது , அவர்கள் அப்போதைய இந்திய தேசிய காங்கிரசின் கொடியை சில மாற்றங்களோடு எடுத்துக்கொள்ள முடிவானது . அக்கொடி ஆகஸ்ட் 14 ஆம் தேதி முடிவாகி , ஆகஸ்ட் 15 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர நாளன்று மக்களுக்கு அற்பணிக்கப்பட்டது .



அதுவே இன்று வரை நமது தேசியக்கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.

__________________________________________________________________

* ஒரு ஆண்டில் இந்தியாவில் நமது கொடி விற்கப்படும் கொடிகளின் எண்ணிக்கை 40 மில்லியன் .

___________________________________________________________________

* இந்தியகொடியை உடையாக அணிவது தடை செய்யப்பட்டிருந்தாலும் , அது பிற்காலத்தில் கால்சட்டை மற்றும் உள்ளாடைகளாக பயன்படுத்த மட்டுமே தடை என்ற அளவுக்கு குறைக்கப்பட்டது . மேல்சட்டையாக அணிய அனுமதி உண்டு.

__________________________________________________________________

*எவரெஸ்ட் சிகரத்தில் , முதன்முதலாக மே மாதம் 29 ஆம் தேதி 1953 ஆம் ஆண்டு நேபாள கொடியுடன் நடப்பட்டது.
___________________________________________________________________

*1971ல் இந்திய கொடி அப்பல்லோ 15 செயற்கைக்கோளில் அதில் சென்ற விண்வெளி வீரர் கமாண்டர் ராகேஷ் சர்மா அணிந்திருந்த சட்டையில் மெடலாக பயணித்தது .

___________________________________________________________________

*இந்தியாவிலேயே உயரமான கொடியேற்றம் ( 138 feet ) சென்னை கோட்டையில் உள்ளது

___________________________________________________________________

பாகிஸ்தான் ரூபாய் நோட்டில் , இந்தியா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இணைந்த ஒரு அரிய புகைப்படம்



____________________________________________________________________

செம்ம டக்கரா ஒரு காந்தி கார்ட்டூன் :



____________________________________________________________________

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் .

____________________________________________________________________

12 August 2008

ரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்!!!!! : A Letter from a Rajini fan


மதிப்பிற்குரிய

பெருமதிப்பு மிக்க அறிவாளிகளே சான்றோரே ரஜினியை விமர்சித்து பிரபலமடைய துடிக்கும் எழுத்தாளர்களே வணக்கம் எனக்கு உங்களை போல வார்த்தைகளால் வசீகரிக்க தெரியாது , உங்கள் எழுத்துக்கள் அளவுக்கு என் எழுத்து அழகானதல்ல , உங்களுடன் வாதாடி ஜெயிக்கும் திறமை பெறாத ஒரு சாதாரண, ரஜினியின் ரசிகன் நான் .

சமீபத்தில் உங்களின் பலரது விமர்சனங்களையும் சொல்லாடல்களையும் பார்த்து நொந்து போயே இந்த கடிதத்தை எழுதுகிறேன் , இது வெறும் வெற்று மனக்குமுறல் மட்டுமே.

உங்களில் பலருக்கும் உங்களின் எழுத்துக்களின் மூலமாய் நான் அறிவது ரஜினியின் இந்த அபார வளர்ச்சியின் மீதான பொறாமையும் அவரை போல நம்மால் ஆக முடியவில்லையே என்கிற காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே . அப்படி என்ன தவறு செய்து விட்டார் ரஜினி , தன்னை நம்பி படமெடுத்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும் அதன் மூலம் அப்படத்திற்கு ஒரு தவறான அடையாளம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என எண்ணியதும் தவறா? , அதற்காக தன் தன்மானத்தையும் இழக்க தயாராக இருக்கும் என் ரஜினி எங்கே , தன் பிரபல்யத்திற்க்காக ரஜினியை சொறிந்து சுகம் தேடும் இந்த அற்பர்கள் எங்கே .

அவர் அரசியலுக்கு வர என்றுமே ஆசைப்படாதவர் , நம் மக்கள் தானே அவரது அரிய குணம் கண்டு அரியணைக்கு வா தலைவா என அழைத்தனர் . நம் மக்கள் என்ன அறிவிலிகளா , அவர்களுக்கு அறிவில்லையா , ஒட்டு மொத்த தமிழனும் முட்டாள்களா? .

அவர் அரசியல் வசனம் பேசித்தான் அவரது படங்களை ஓட வைக்க வேண்டும் என்ற நிலை எப்போதுமே இருந்ததில்லை , அது நீங்களாகவே உருவாக்க முயலும் ஒரு வகை மாயையே தவிர வேறொன்றுமில்லை . அவரது எத்தனை படங்களை அப்படி ஓட வைத்தார் என உங்களில் யாராவது கூற இயலுமா? விட்டால் அவர் சூப்பர்ஸ்டார் ஆனதே அரசியல் பேசித்தான் என நீங்கள் கூறினாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை .

ஓகேனக்கல் பிரச்சனையில் எத்தனை தைரியமாக தனது பிறந்த மண்ணின் மைந்தர்களையே உதைக்க வேண்டும் என கூறியவர் அவர் , இன்றும் கூட தனது தமிழ்மக்களுக்கு அவரால் நாளைக்கு கர்நாடக இன வெறியர்களால் எந்த வித பாதிப்பும் உண்டாக கூடாது என்பதற்காகவே அவர் அப்படி ஒரு அறிக்கை விட நேர்ந்தது . உண்மையில் ரஜினி பாயும் புலிதான் . அவர் திரையில் மட்டுமல்ல இயல்பிலும் புலிதான் .

குசேலன் திரைப்படத்தின் தோல்விக்கு ஒட்டு மொத்தமாய் ரஜினியை குற்றம் சொல்லும் பலருக்கும் தெரியவில்லை அப்படத்தில் பலரது உழைப்பும் அடங்கியிருக்கிறது என்று , வெற்றி என்றால் மட்டும் அதை பங்கு போட வரும் குள்ளநரி கூட்டம் , தோல்வி என்றதும் விலகி ஓடுவது மிகக்கொடுமை , அதை ரஜினியால் மட்டுமே உணர முடியும் .

நம்மில் எத்தனை பேர் மற்ற படங்களுக்கு குடும்பத்துடன் செல்கிறோம் , ரஜினி படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பாருங்கள் புரியும் , ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தையும் குதூகலப்படுத்தும் படமாகத்தான் ரஜினியின் படங்கள் இருந்திருக்கிறது , ரஜினியின் படங்களில் ஆபாசம் என்றால் குடும்பத்துடன் எத்தனை பேர் வருவர் தியேட்டருக்கு . புரட்சிதலைவர் படங்களில் இல்லாத ஆபாசமா அப்போதெல்லாம் எங்கு போயிருந்தனர் இந்த அறிவுஜீவிகள் .

அறிவுஜீவிகளின் கண்களில் ரஜினி செய்யும் நல்லது என்றைக்குமே தெரிவதில்லை ,அவரது வீழ்ச்சிக்காக காத்துக்கொண்டிருக்கும் இந்த கண்கொத்தி பாம்புகளின் கண்கள் ரஜினியின் வெற்றியை ஒரு நாளும் பார்பதில்லை .

மக்கள் மெகா சீரியல் மயக்கத்தில் தியேட்டருக்கே வராது , பல சிறிய தியேட்டர்களும் மூடும் நிலையில் இருந்த போதுதானே எங்கள் ரஜினியின் சந்திரமுகி வந்தது , மக்கள் குடும்பத்தோடு திருவிழா போல தியேட்டருக்கு படையெடுத்தது அப்போதுதான் , வீழந்து கிடந்த திரையுலகத்திற்கு குளுக்கோஸ் போல அல்லவா அந்த படம் திரையுலகத்தினருக்கு அமைந்தது . அப்போது எங்கு போயிருந்தனர் இந்த சான்றோர்கள் .

உங்களை போன்றோர் செய்யும் விசமங்களுக்கு பயந்துதானே அவர் அடிக்கடி நிம்மதி தேடி இமயமலைக்கு செல்கிறார் , அவரை அங்கேயே அனுப்பி வைக்கு முயலும் உங்கள் முயற்சி நிச்சயம் பலிக்காது .

தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை என் தலைவன் இத்தனை வருட உழைப்பில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் , அவரை சீண்டுபவர்களுக்கு ரசிகர்களாகிய நாங்கள் சொல்லிக்கொள்வதெல்லாம் , என் தலைவனுக்கு தெரியும் உங்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பதென்று , அவர் ஒரு குதிரை , விழுந்தாலும் உடனே எழுவார் . ஒடி ஒளிந்து கொள்ளுங்கள் அறிவுஜீவிகளே எங்கள் தலைவனின் அன்பால் திரண்ட ரசிகர் கூட்டம் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் , பிழைத்து போங்கள் ரஜினியை ஏசிபிழைக்கும் எழுத்து வியாபாரிகளே உங்களது எழுத்து தொழிலை மட்டும் பார்த்து கொண்டு . இனி உங்களுக்கான பதிலை எங்கள் தலைவர் தன் அடுத்த படத்தில் தருவார் , அதற்கு முன் அவர்தரும் முன்னோட்ட படங்களை உங்கள் பத்திரிக்கைகளில் இட்டு கொஞ்சம் சம்பாதித்து கொள்ளுங்கள் .


இப்படிக்கு

உழைப்பால் உயர்ந்த ரஜினியின் பல கோடி ரசிகர்களில் ஒருவன்


____________________________________________________________________

ஒரு அரிய புகைப்படம் உங்கள் பார்வைக்கு......படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி பார்க்கலாம்.




_________________________________________________________________


மக்களே சாரு,ஜெயமோகன்,லக்கிலுக் போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் வாசகர் கடிதம் வருகிறது என்று யாரும் எண்ண வேண்டாம் என்னை போன்ற சிறிய டுபுரி பதிவர்களுக்கும் வருகிறது , அதில் ஒன்றுதான் இது ,

மின்னஞ்சலில் வந்த இக்கடிதத்தை இங்கே பதிய மட்டுமே செய்திருக்கிறேன் , இது என் சொந்த கருத்துக்கள் அல்ல . மேலதிக விபரங்களுக்கு chennai6383@gmail.com என்கிற முகவரிக்கு மடலனுப்பி தெரிந்து கொள்ளவும் . மிக்க நன்றி . எனக்கும் இந்த மடலை அனுப்பிய புண்ணியவானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் .

____________________________________________________________________

குசேலன் குறித்த ஒரு வாக்கெடுப்பை கடந்த வாரம் நம் வலைப்பூவில் நடத்தினோம் அதன் முடிவு விபரம் வருமாறு


குசேலன் எப்படி????

காவியம் 69 (23%)

ஒருமுறை பார்க்கலாம் 52 (17%)

மோசம் 27 (9%)

தூ................ 144 (49%)

Votes so far: 292 Poll closed


அதிகமான நேயர்கள் (144 பேர் ) தூவென துப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது .

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் .

___________________________________________________________________

சிகரட்,ரசிகட்,சிரகட்,கசிரட், கரSHIT

அவன் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது தனது 17 வயதில் , தன் நண்பர்களுடன் , ஜாலிக்காக ஆரம்பித்தான் , அது அப்போது அவனுக்கு பெருமையான ஒன்றாக , மற்ற நண்பர்களின் மத்தியில் ஒரு வீரத்தனமான செயலாக , உற்சாகம் அளிக்க கூடியதாக , இன்னும் சொல்லப் போனால் சக வயது பெண்கள் முன்னால் தன் வாலிபத்தின் வளர்ச்சியை காட்டுவதாக எண்ணி ஆரம்பித்த ஓன்றாகத்தான் இருந்திருக்கிறது .

கல்லூரியில் மற்றவரை ராகிங் செய்கையில் தன் வயதுக்கு குறைந்த வளர்ச்சியை மறைக்க சிகரட் உதவியது . அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 3 முதல் 4 நான்கு சிகரட் மட்டும்தான் . கையிடுக்கிலிருக்கும் சிகரட் உதடிடுக்கில் போவதற்குள் அவன் செய்யும் சேஷ்டைகள் ஆயிரம் , அவனது ஆதர்ஷன கதாநாயகன் கையில் எப்போதும் இருக்கும் சிகரட் ,அவனுக்கும் அந்த நடிகனின் அந்தஸ்த்தை தன் சக நண்பர்களிடம் தருவதாய் எண்ணிருந்திருக்கிறான் .

சிகரட் பிடித்து வீட்டிற்கு சென்று பல முறை அவ்வாசனையால் வீட்டில் மாட்டிக்கொண்டு அடி வாங்கி , அடுத்த முறை வீட்டிற்கு செல்கையில் பாக்கு , பாஸ்பாஸ் , ஹால்ஸ் , சுவிங்கம் , கொய்யா இலை என கண்டதையும் வாயில் போட்டு மறைக்க முயன்று தோற்று போய் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் சென்று சிகரட் பிடித்து வாசனை மறைந்ததா என நண்பர்களிடம் உறுதி செய்து வீட்டிற்கு எத்தனை முறை சென்றிருக்கிறான் அவன் .

கல்லூரியின் மூன்றாண்டுகளில் அவன் பிடித்த சிகரட்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டும் , கல்லூரி அருகில் இருக்கும் கட்டாய டீக்கடையில் சிகரட் பிடிக்கும் பலருக்கும் இருக்கும் அக்கவுண்ட் அவனுக்கும் இருந்தது . பல முறை கடனை அடைக்காமல் நாயர்கடையில் திட்டு வாங்கி அசிங்கப்பட்டிருக்கிறான் , அப்போதெல்லாம் சே இனிமே தம் அடிக்கக்கூடாதென எண்ணிக்கொள்வான் . கல்லூரி முடிந்ததுமே வாய் பறபறக்கும் சிகரட்டுக்காய் .

கல்லூரி முடிந்து வேலை தேடுகையில் , ஒவ்வோர் முறை தோற்கும் போதும் சிகரட் மட்டும்தான் ஆறுதல் அளித்தது சாத்தானை போல . இதோ வேலை கிடைத்து விட்டது வெளியூரில் , வீட்டை விட்டு வெளியூரில் தனி அறையில் சில நண்பர்களுடன் , அப்போதும் அங்கேயும் நூழைந்துவிட்டான் அந்த சிகரட் சாத்தான் அவனுக்கு துணை என்று சொல்லிக்கொண்டு .
சமயங்களில் அவனுக்கு சளி அல்லது சுவாசக் கோளாறு வரும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு ஞானோதயம் பிறக்கும் , சிகரெட்டை நிறுத்திவிட , நோய் முக்கால்வாசி குணமாகும் போதே கைகள் அடுத்த சிகரட்டை பற்ற வைக்கும் . அவனும் மறந்துவிடுவான் .
வருடாவருடம் புத்தாண்டு பிறக்கும் போதெல்லாம் அவனும் சுடுகாட்டு சபதம் போல சபதம் எடுப்பான் இனி அடிக்கமாட்டேன் சிகரட்டை இனி தொடமாட்டேன் தீப்பெட்டியை என , புத்தாண்டு அன்று மாலையே பல முறை அந்த சாத்தானின் பிடியில் மாட்டிகொண்டு விழி பிதுங்கி வேறு வழியின்றி பைத்தியம் போல சபதத்தை மறந்து கிறுக்குதனாமாய் பிடித்து விட்டான் தங்க வடிகட்டியின் முனையை தன் இதழால் .

அவனிடம் நான் பலமுறை கேட்டதுண்டு ஏன் பொது இடத்தில் சிகரட் பிடிக்க தடை இருந்தும் பிடிக்கிறாய் என அவனது பதில் என் வாய் என்ன பொது இடமா என்பதுதான் , அரசாங்கத்தையும் சாடுவான் அரசாங்கம் சிகரட் விறபனையை தடை செய்ய சொல்லுவான் , அவனுக்கு நன்றாக தெரிந்தது , அவனால் அந்த சாத்தானை விட முடியாதென்று . அவன் வாய்பேச்சில் வீரன் பேசும் போது சுற்றுசூழல் மாசு பற்றியெல்லாம் பேசுவான் கையில் நிக்கோட்டின் தொழிற்சாலையை வைத்துகொண்டு .

அவன் ஒரு கிரிக்கெட் வீரன் இப்போதெல்லாம் சரியாக ஒடி ஆடி விளையாட முடிவதில்லை , முதியவனை போல மூச்சு வாங்கும் , எனக்கு தெரிந்த வரை அவனுக்கு ஆண்மைகுறைவு கூட இருக்கலாம் , அடிக்கடி சளித்தொல்லை வேறு , நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது . தோலில் மினுமினுப்பு குறைந்து பார்க்க கொஞ்சம் வயோதிகனைப்போல் அகிவிட்டிருந்தான் , புகையிலை எதிர்ப்பு நாள் என்றால் அவனுக்கு இலுப்பைபூ சர்க்கரை .

திருமணமானது மனைவிக்காக சரியாக மூன்று மாதங்கள் மூன்றே மாதங்கள் நிறுத்தினான் , ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் முடிந்தது , மீண்டும் கிளம்பிவிட்டான் பெட்டிகடைக்கு சாத்தான் வாங்க ,
ஒரு குழந்தை அவனது வாழ்க்கையில் மாற்றத்தை நிகழ்த்தியது , தன் மகளுக்காக குறைத்து கொண்டான் , ஆனாலும் அந்த சாத்தானை விட முடியாமல் இப்போதெல்லாம் அவன் கவலை பட ஆரம்பித்து விட்டான் ,

முன்னெல்லாம் வருடத்திற்கு ஒரு முறைதான் சிகரட்டை விட முயற்சிப்பான், ஆனால் சமீப காலமாய் வாரம் ஒரு முறை முயற்சிக்கிறான் .
விளையாட்டாய் துவங்கிய இந்த சிகரட் விளையாட்டு இதோ இப்போது அவனை முழுங்கி நிற்கிறது , நான் இறைவனிடம் கேட்பதெல்லாம் அவன் சிகரட் பழக்கத்தை விட அவனுக்கு போதிய மனவீரம் தரவேண்டும் என்பதுதான் .
இதோ இந்த கதையை கூட அவன் கையில் ஒரு சிகரட்டை பிடித்த படிதான் எழுதிக்கொண்டிருக்கிறான் ,பல மாதங்களாய் இந்த வாரமாவது சிகரட்டை விட்டுவிட எண்ணி எண்ணி எண்ணி . ..........

__________________________________________________________________




சும்மா ஒரு குட்டி இன்பர்மேசன் .......

நாம அடிக்கிற சிகரட்டில என்னன்ன ஐட்டம் இருக்குனு ... என்சாய்... அப்புறம் இந்த வாரம் வெள்ளி கிழமைலருந்து சிகரட்ட விடலாம்னு இருக்கேன் . வலை நண்பர்களும் என்னோட சேர்ந்து விடறதுனாலும் விடலாம் . முக்கியமா ஒரு சமீபத்தில் கல்யாண அறிவிப்பு செஞ்ச ஒரு பால பதிவர் , அவரும் விட்டாருணா ரொம்ப சந்தோசம்.


11 August 2008

FLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியா தன் முதல் தங்கத்தை வென்றது




துப்பாக்கி சுடுதல் - இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார்பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்றார்.


இதன் மூலம் கடந்த 28 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக தங்கத்தை வென்றுள்ளது இந்தியா.இந்தப் போட்டியில் சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


ஒலிம்பிக் போட்டிகளில் 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமும் இது தான்.


மேலும் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் தனி நபர் வென்றுள்ள முதல் தங்கப் பதக்கமும் இது தான்.


பதக்கம் வென்ற பின் பிந்த்ரா கூறுகையில், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்றார்.தங்கம் வென்ற பிந்த்ராவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


________________________________________________________________



ஆண்கள் துப்பாக்கி சுடுதல்(ஏர் ரைபிள்): இந்திய வீரர் தங்கம் வென்றார்பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆண்களுக்கான 10மீ., துப்பாக்கி சுடுதல்(ஏர் ரைபிள்) பைனலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். தனி நபர் போட்டியில் இந்தியா தங்கம் பெறுவது இது‌வே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


அபினவ் பிந்த்ரா மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இதன்மூலம் பீஜிங் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தது.


சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

Source: http://www.thatstamil.com/, http://www.dinamalar.com/


112 கோடி மக்களின் பிரதிநியாக தங்கம் வென்ற ,

"தங்க இந்தியன் " அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்துக்கள் !!


"PROUD TO BE A INDIAN !!!"
___________________________
மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் heartaz க்கு மிக்க நன்றி

09 August 2008

எச்சரிக்கை : ஜே.கே.ரித்திஷ்குமாரை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்


சமீப காலமாக ஜே.கே.ரித்திஷ்( JKR) அவர்களை குறிவைத்து எழும்பும் குரல்களில் இருக்கும் ஒருபக்க சார்பு அவரது ரசிகர்களாகிய எங்களை ஒரு புறம் எரிச்சலடைய வைத்தாலும், இவற்றை எழுப்புபவர்களின் மையம் எங்களை சற்று சந்தேகக்கண்ணோடு தான் அவர்களை பார்க்கவைக்கிறது...தமிழ் ரசிகர்களின் கேள்விகள் என்று பொதுமைப்படுத்தி எழுதிய விகடனாகட்டும், கமல் ரஜினி ரசிகராகிய பலரும் வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும், எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தது...


ரொம்ப எரியாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்து கும்பிடுங்க...இல்லைனா போயஸ் கார்டன் பக்கமோ, உடுப்பி கார்டன் பக்கமோ கும்பிடுங்க ... நாங்க வடபழனி , விருகம்பாக்கம் , தசரதபுரம் பக்கம் ஒதுங்கிக்கறோம் , எங்கள் அன்புக்குரிய ஜே.கே.ரித்திஷ் ஒரு ஃபீனிக்ஸ் !!! நாயகனா மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!!


________________________________________________________________
டிஸ்கி ; :-)

07 August 2008

ஒலிம்பிக்ஸில் கலைஞரும் ரஜினியும்

படத்தின் மீது கிளிக் கி பெரிதாக்கி பார்க்கவும் .

( கொஞ்சம் சீரியஸான ஒரு ஒலிம்பிக் கார்ட்டூன் )



இந்த 2008 ஓலிம்பிக் இதோ தொடங்கிவிட்டது , எப்பவும்போல நம்மவர்கள் வாயில விரல் வைத்துக்கொண்டு வெறும் கையோடு வேடிக்கை பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள் , அதனால் இந்தியா தங்கம் வாங்க வேண்டுமென்றால் சரவணா செல்வரத்தினம் சுவல்லரியில்தான் வாங்க வேண்டும் .


அதனால நம்ம அரசியல்வாதிங்க அப்புறம் தமிழ் நடிகர்களை அனுப்பினா அவங்க என்ன போட்டில கலந்துகிட்டா நமக்கு தங்கம் நிச்சயமா கிடைக்கும்னு பார்க்கலாம்

முதலில் சில அரசியல் தலைவர்கள் :

கலைஞர் -

கதை வசனமெழுதி கழுத்தருக்கற போட்டி , உடன்பிறப்புகளுக்கு ஆப்படிக்கும் போட்டி , ( மத்த போட்டிக்கு டீம் செலக்ஷன்ல கட்சிலருந்து மூணு பேறதான் செலக்ட் பண்ணிருக்காராம் , அது அஞ்சநெஞ்சன், தளபதி, கனிமொழி மட்டும்தானாம் , மற்ற உடன்பிறப்புகளுக்கு தக்க தருணத்தில் வாய்ப்புகள் தரப்படும்னு பொதுக்குழு தீர்மானத்திருக்கிறதுனு முரசொலில சொல்லிட்டாரம் )



புரட்சித்தலைவி -

கலைஞரை திட்டற போட்டி ( ஞாநியும் கலந்துக்கறாருங்கோ ) , தனியா விளையாடற எல்லா போட்டியும் ( குழுவிளையாட்ட்னா அலர்ஜியாம் ) , கால்ல விழ வைக்கிற போட்டி , ( இவங்க கட்சில நோ டீம் செலக்ஸனாம் , அவங்களே எல்லா போட்டிலயும் கலந்துப்பாங்கணு ஜெயா டிவி இங்கிலீசு நீயுஸில செய்தி )


மருத்துவர் ராமதாஸ் -

இவரு பல வருஷமா விளையாடற கூடு விட்டு கூடு பாயற போட்டிதான் , அப்பறம் போரடிச்சா போராட்டம் நடத்தற போட்டி , பையனுக்கு மந்திரி சீட் வாங்கற போட்டி , ( நடிகர்கள் கலந்துக்கற போட்டில கலந்துக்க மாட்டேன்னு அவரு மட்டும் பாக்கற மக்கள் தொ.க வில அறிக்க விட்டுட்டாருங்க , முக்கியமா ஒலிம்பிக்ஸ் என்பது ஆங்கில வார்த்தை அத தமிழ்ல ஒலிம்பன்னிகள் என மாற்ற வேண்டுமென போரட்டத்தில் இறங்கியிருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல் )


விஜயகாந்த் -

தீர்ப்பு சொல்ற போட்டி , தீவிரவாதிகள் கேட்சிங் காம்படிசன் , வாய்விட்டு எஸ்கேப் ஆகும் போட்டி , ( இவரு போட்டில கலந்துக்கறத மக்கள் மைதானத்துக்கு வந்து பாக்க வேண்டாம் இவரே வீடு வீடா வந்து விளையாடி காட்ட போவதாக அவர் கூட படிக்காத பேர் தெரியாத அவரோட கட்சி பேப்பர்ல அறிக்கை விட்றுக்காருங்கோ )


வைகோ ,திருமாவளவன் ,போன்றோர் போட்டில கலந்துக்கறவங்களுக்கு பொட்டி தூக்கும் வேலையில் பிஸியாக இருப்பதால் நோ காம்படிஸன் .

தமிழக காங்கிரசு கட்சியில் போட்டியில் யார் கலந்து கொள்ள போவது என இன்னும் முடிவாக தெரியவில்லை, இன்னும் போட்டியாளர்கள் போட்டியில் சத்தியமூர்த்தி பவனில் ( அங்க இட்லி வடை கிடைக்குமா ) வேட்டிகள் மற்றும் டவுசர்களுடன் ஜட்டிகளும் கழட்டப்படுவதாக மெகா டிவி செய்திகள் கூறுகிறது .

தமிழக பாரதிய ஜனதாவை யாருமே மதித்து விளையாட கூப்பிடததால் அதன் தலைவர் இல.கணேசன் யாருக்கும் தெரியாமல் ரூம் போட்டு தலைகீழாக நின்று அழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .



சில நடிக நடிகைகள் :


ரஜினிகாந்த் -

பல்டி அடிக்கிற போட்டி , அடி வாங்கற போட்டியிலும் கலந்து கொள்ளலாம் ,வடிவேலுவிற்கு எதிராக ( கடைசியாக இவரடித்த பல்டியில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் அதிர்ந்து போய் இருப்பதாக தகவல் ) , ஏத்திவிட்டா எகத்தாளமா பேசற போட்டிலயும் கலந்துக்கறாருங்க .


கமல் -

மாறுவேடப்போட்டி , தயாரிப்பாளருக்கு மொட்டை அடிக்கும் போட்டி ( லேட்டஸ்டாக ஹாலிவுட்டிலிருந்து ஒரு நல்லவர் அவரிடம் மொட்டையடிக்க வந்துள்ளாராம் ) ,


விஜயகாந்த் -

வாய் சவடால் போட்டி ( தீவிரவாதிங்கள புடிக்கிற போட்டி மற்றும் தீர்ப்பு சொல்லுற போட்டியும் ) ,


கார்த்திக் -

HIDE AND SEEK or ஒளிஞ்சு விளையாட்டு , வெத்தலைபாக்கு சாப்பிடற போட்டியும் ( இவரைபற்றி இதுவரை தகவல் இல்லை )


சரத்குமார் -

அவருமட்டும் தனியா விளையாடற மாதிரி எதும் போட்டி இருக்காப்பா?? ( நமக்கு நாமே போட்டி மாதிரி ) ,


விஜய் -

நடிச்சி நடிச்சி மக்கள சிரிக்க வச்சு சாவடிக்கற போட்டி (தன் அற்புதமான படங்களால் தமிழக மக்கள் தொகையை பெருமளவில் குறைத்த பெருமை பெற்ற இவர் தனது அடுத்த படத்தில் மொத்தமாக ஒரே வசனத்தில் இந்தியாவையே அழிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்)


அஜித் -

போட்டியில கலந்துக்க மறுத்துட்டாரு ( பல வருஷமா ஒரு படத்துல நடிக்கிறாராம் ) ( பேட்டி வேணா குடுக்கறேன் போட்டிலலாம் கலந்துக்க முடியாதுனு சொல்லிட்டாராம் )


சிம்பு -

ஓவரா சீன் போடற போட்டி , ஆ உ னா அழற போட்டி ( அவங்கப்பாதான் கோச்சாம் ) ,

தனுஷ் -

சிம்புவுக்கு ஆப்படிக்கும் போட்டி ( லைட் வெயிட் )


ஜே.கே.ரித்திஷ் குமார் -

( இவரில்லாம தமிழ் திரையுலகமா ) அவரோட அகில உலக ரசிகர்கள் , மற்ற நடிகர்களின் நலன் கருதி எந்த போட்டியிலும் கலந்து கொள்ள வேண்டாமென கூறியதால் , நோ காம்படீசன் ,


நமிதா -

குஸ்தி, குண்டெறிதல் , கோழி புடிக்கறது , குறி பார்த்து சுடற போட்டி

நயன்தாரா -

சிம்புவுக்கு ஆப்படிக்கும் போட்டி ( ஹெவி வெயிட் )

திரிஷா -

கோர்த்து விட்டு கும்மி அடிக்கும் போட்டி

இளைஞர் தலைவி பத்து பத்து புகழ் சோனா -

டென்னிஸ் , ஹாக்கி , வாலி பால், பேஸ்கட் பால் , சுனோ பால் , ஐஸ்பால் , அந்த பால் , இந்த பால் , என எல்லா பால் விளையாட்டுக்களும் .

____________________________________________________________________
டிஸ்கி : இப்பதிவு யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதபட்டதல்ல , உங்கள் சிரிப்பு மட்டுமே ஒரே நோக்கம் . மீறி உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்


வந்தது வந்துட்டீங்க குசேலன் படத்த பார்த்திருந்தீங்கன்னா படம் குறித்த உங்கள் கருத்த வலது புறம் உள்ள வாக்கு பதிவுல் குத்திவிட்டு செல்லவும் .

_____________________________________________________________________

படிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு

அவன்,இவன் மற்றும் ரோணி




இந்த முறை அவனை கொன்று விடுவோமா , ஒடிக்கொண்டே யோசித்து கொண்டிருந்தான். அவன் தன்னை கொல்ல வேண்டுமென வேண்டிக்கொண்டு இவன் ஓடிக்கொண்டிருந்தான் ,

அவனை எப்படி கொல்வது , கத்தியால் குத்தியா , கத்தியால் குத்தினால் அவன் கத்தி விட்டால் , கயிறால் கழுத்தை நெறித்து விட்டால் , வேண்டாம் அவனை ரயில்வே தண்டவாளத்தில் போட்டுவிடலாம் , தப்பிக்கவே இயலாது .

ஆனால் இந்த முறை அவனை கொன்றேயாக வேண்டும்

மேலும் ஓடினான் , மூச்சு வாங்கியது ,

அவனை கொன்றே தீர வேண்டுமா , இல்லை இல்லை கட்டாயம் கொன்றாக வேண்டும் , இல்லையென்றால் அவன் என்னை கொன்று விடுவான் ,

அவனொன்றும் அவ்வளவு கெட்டவினில்லை ஆனால் அவனால் இவனுக்கு பல துன்பங்கள் , இவன் செய்யும் கொலைக்கு அவன் மாட்டி கொண்டு விட அவன் என்ன செய்வான் , யோசித்து கொண்டே ஓடினான் ,

இவனுக்கு தினமும் கட்டாயம் ஒரு கொலை செய்தே ஆக வேண்டும் , இல்லையென்றால் கை நடுக்கமும் , மன உளைச்சலும் சமீப காலமாய் வருகிறது , கொன்றாக வேண்டும் கொன்றாக வேண்டும் , இல்லையென்றால் அவன் என்னை கொன்று விடுவான் ,

அவனால் இவனுக்கு சமூகத்தில் கெட்ட பெயர் , இதோ அவன் விட்டு சென்ற தழும்புகள் இவன் மார்பிலும் விலாவிலும் , அவன் ஒவ்வோர் கொலையையும் அனுபவித்து ரசித்து ருசித்து செய்யும் போதெல்லாம் இவனுக்கு குலை நடுங்கும் , மாட்டி கொள்ள போவது இவனல்லாவா , யோசித்து கொண்டே ஓடினான் .

தினமும் விடியற்காலையில் தூங்கும் காப்பாளர்களை தலையில் அடித்து கொல்ல துவங்கி அது ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி நான்கு இப்போது நாற்பதாகி விட்டது , அவன் செய்த கொலைக்கு போலிஸ் இவனை தேடுகிறது , அடையாளமும் தெரிந்து விட்டது , நிம்மதியெல்லாம் போய் வீடு நாடு சுற்றம் பந்தம் பாசம் என எதுவுமின்று , இனியும் தாமதித்தால் இவன் கொட்டத்தை அடக்க முடியாது அவன் சாவுதான் இதற்கு ஒரே முடிவு .

இதோ தெரிகிறது தண்டவாளம் , ரயில் வராவிட்டால் , கொஞ்சம் பொருத்து பார்ப்போம் , கண்ணுக்கெட்டும் தூரத்தில் ரயில் வருகையில் தண்டவாளங்களின் இரு பக்கங்களில் தலை ஒரு பக்கமும் கால் ஒரு பக்கமுமாய் வைத்து விடுவோம் , நசுங்கி சாகட்டும் நாசமாய் போனவன் ,

அவன் சாவு தான் இவனுக்கு வெற்றி என்பது அவனுக்கு இன்னும் புரியவில்லை , அவன் லட்சியம் தினம் ஒரு கொலை . இன்று ஆளில்லாமல் வெறி பிடித்து அலைகையில் யாரும் சிக்கவில்லை , மாட்டியது அவன் மட்டுமே , அதனால் அவன் இவனை கொல்ல தூண்டிவிட்டான் , இப்போது அவனும் கொலையாளி ஆகிவிட்டான் , கடைசியில் ஒரு கொலை சுபமாய் முடிந்ததும் தான் அவனுக்கு மகிழ்ச்சி .

இவர்களிருவரின் பிரச்சனையில் சம்பந்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ரோனி தண்டவாளத்தின் பக்கவாட்டில் தலைவைத்தபடி தன்னைப்பற்றிய நினைவின்றி ரயிலில் அடிபட்டு பிணமாய் கிடந்தான் .

ரோனியின் கொலையை கொண்டாட அவனும் இல்லை இவனுமில்லை .

___________________________________________________________________
மெர்க்குரி பால் :


'' குழந்தைக்கு இன்னும் பால் குடுக்காம அப்படி என்ன உனக்கு புடுங்கற வேலை , அதான் பால் பார்சல்ல வந்திருச்சுல்ல ,'' அதட்டலாய் ரே .
'' குழந்தைக்கு பால் குடுக்க மாட்டேன்ங்க '' கெஞ்சலாய் மோ .
'' உன்ன கட்டிகிட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் , முதல்ல நீ உங்கம்மா வீட்டுக்கு கிளம்பு ''

'' ஏன்ங்க இப்படிலாம் பேசறீங்க , நாங்க இல்லைனா இந்த சந்ததி அழிஞ்சிடாதா !! குழந்தைக்கு இப்ப மெர்க்குரிப்பால் குடுத்து கொல்லுணும் அவ்ளோதான? '' கண்களில் நீருடன் மோ .

'' ஆமா இதோட மூணாச்சு , இதுக்கு மேல தாங்காது , இதுங்கள வளக்கரதுக்கே நான் படற கஷ்டம் எனக்குதான் தெரியும் '' மேலும் அதட்டலாய் ரே .

'' நீங்களும் இதுக்கு காரணம்தான , கொஞ்சம் யோசிங்க ''

''அதெல்லாம் உக்காந்து யோசிச்சாச்சு , உன்னால முடியுமா முடியாதா '' சண்டை வழுத்தது ,

இதற்கு மேல் பேசி பயனில்லாததை உணர்ந்த மோ ,

''உங்கள கட்டிகிட்ட பாவத்துக்கு , செய்றேன் எனக்கொண்ணும் இது புதுசில்லையே , நான் ஆம்பளையா பொறந்த பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் '' அழுதபடி தன் நான்காவது ஆண் குழந்தைக்கு மெர்க்குரிப்பால் கொடுத்தான் மோ என்கிற மோகன் .

பெண் வாரிசுக்காக குழந்தையை கொன்ற மகிழ்ச்சியில் புன்முருவலோடு நின்று பார்த்து கொண்டிருந்தாள் ரே என்கிற ரேவதி .

கி.பி 2208 ஆம் ஆண்டின் டிவியில் ஓடிக்கொண்டிருந்த ''சித்தப்பா'' அல்ட்ரா மெகா சீரியலில் ஹீரோ கதறி அழுது கொண்டிருந்தான் .
____________________________________________________________________

படிக்கக்கூடாதத படிச்சிட்டீங்க , பாக்கக்கூடாதத பார்த்திருந்தீங்கன்னா , பக்கத்ததுல குசேலன் படம் எப்படினு உங்க வாக்க பதிஞ்சுட்டு போங்கோ