Pages

31 January 2013

ஒரு முதல்வரும் ஒரு திரைப்படமும்!







மாண்புமிகு இதயதெய்வம் புரட்சிதலைவி.. மற்றும் பல பட்டங்கள் பெற்ற மேன்மைதங்கிய முதல்வர் அவர்களின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பினை தொலைகாட்சிகள் வாயிலாக லைவாக பார்க்க முடிந்தது.அடேங்கப்பா எவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறார். அதுவும் கேட்கிற அனைவருக்கும் புரிகிற வண்ணம் எளிமையாகவும் அதே சமயம் இனிமையாகவும் பேசியதை மிகவும் ரசிக்க முடிந்தது.

அதைவிட பேசவேண்டிய விஷயங்களை மட்டும் எந்த அளவுக்கு கன்வீன்சிங்காக முடியுமோ அந்த அளவுக்கு தேவையான புள்ளி விபரங்கள் கணக்குகள் மற்றும் அறிவியல் சமூகவியல் ஆதாரங்களுடன் பேசியதையும் ரசிக்கவே முடிந்தது. நமக்கு வாய்த்த முதல்வர் நல்ல திறமைசாலி.

குறிப்பாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கின் மீது அவருக்கு இருக்கிற அக்கறையை கண்டு என் தொலைகாட்சி பெட்டியே வியந்துவிட்டிருக்கும்.

ப்ரிவென்சன் ஈஸ் பெட்டர் தேன் க்யூர் என்றான் ஒரு மேல்நாட்டு இவன். அவனேதான். அதற்கேற்ப அம்மாவும் கூட விஸ்வரூபம் திரைப்படம் வெளிவந்து அதனால் உண்டாகப்போகிற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கணக்கில் கொண்டு அதை மனதில்வைத்தே விஸ்வரூபம் படத்தை தடைசெய்திருப்பதாக சொன்னதை கேட்டபோது நிஜமாகவே காதுக்கு இனிமையாகவும் கண்களுக்கு குளுமையாகவும் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு மாநிலத்தையே கட்டிக்காக்கிற முதல்வருக்கு இந்த அளவுக்கு சமயோஜிதமும் பிரச்சனைகளை வருவதற்கு முன்பே தடுக்கிற திட்டமிடலும் இருப்பது அபூர்வம். ஆச்சர்யம். அந்த விதத்தில் அம்மாவின் இந்த ஆற்றலை கண்டு இந்த சமூகம் வியக்கிறது.

போகட்டும். ஆனால் ஏதோ தமிழகத்தில் எந்த பிரச்சனையுமே இல்லாததுபோலவும், இந்த விஸ்வரூப பிரச்சனை மட்டும்தான் விஸ்வரூபமெடுத்து நிற்பதைப்போலவும் பேசியதுதான் கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்சம் கடுப்பேற்றியது. காவிரி டெல்டாவில் எத்தனை விவசாயிகள் இறந்துபோனார்கள் அப்போதெல்லாம் கூட இதுபோல டிவியில் தோன்றி எதையாவது பேசியிருக்கலாம்தான்.. போகட்டும்.

விஸ்வரூபம் என்கிற ஒரு திரைப்படத்தால் இச்சமூகத்திற்கு ஏதோ கேடு வந்துவிடும் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் என்று நினைத்து அப்படத்துக்கு தடைவிதித்துள்ள தமிழக அரசு.. விஸ்வரூபத்தை விட ஆபத்தானதும் ஏற்கனவே நம்முடைய சட்ட ஒழுங்கினை மோசமாக்கி வரும் மதுவுக்கும் கூட தடை விதிக்கலாம். யெஸ் ப்ரிவென்சன் ஈஸ் பெட்டர்தேன் அதுதான்.

அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை வரும் முன்பே தடுக்க இது நிச்சயமாக உதவும். அதோடு இன்று எந்த டாஸ்மாக் பார் வாசலிலும் குறைந்தது ஐம்பது இருசக்கர வாகனங்களாவது நின்றுகொண்டிருக்கின்றன. பெரிய பார்களில் அதே அளவுக்கு கார்கள் நிற்கின்றன.

குடித்துவிட்டு வாகனமோட்டி எத்தனை விபத்துகளுக்கு காரணமாயிருக்கிறார்கள் குடிவெறியர்கள். அதையெல்லாம் கூட தடுத்து நிறுத்தலாம். குடிவெறியால் அழிந்துபோகிற பல குடும்பங்களை காப்பாற்றலாம்.

விஸ்வரூபம் தடையால் என்ன கிடைக்குமோ அதைவிடவும் பலமடங்கு அதிகமான பலனை மதுவிலக்கால் நமக்கு கிடைக்கும். சட்ட ஒழங்கு பேணிக்காக்கப்படும்.

மதுவிலக்கினை அமல்படுத்திவிட்டு தொடர்ந்து எப்போதோ செத்துப்போன தலைவர்களுக்கு அந்த பூஜை இந்த பூஜை என சாதிக்கட்சிகள் பண்ணுகிற அலப்பறைகள், ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்களுக்கும், மேடைகளில் கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டுவேன் குத்துவேன் என்று பேசுவதற்கும் கூட தடைவிதித்தால் பல கலவரங்களையும் இழப்புகளையும் கூட வருமுன் தடுக்கலாமே.

அதைப்பற்றியும் நம்முடைய மாண்புமிகு.. புரட்சி.. இதய... தியாகத்தின்.. அன்புக்குரிய அம்மா அவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

அவ்ளோதான்.

(படம் உதவி - http://dbsjeyaraj.com)

29 January 2013

குதிரை வாலி தயிர்ச் சோறு!






இந்த உணவுகளையெல்லாம் இதற்கு முன்பு கேள்விப்பட்டதோ பார்த்ததோ கூட கிடையாது. கிராமத்து பின்னணியில் வாழ்ந்து நகரத்தில் பஞ்சம்பிழைக்கிறவர்களுக்கு இவை குறித்து ஓரளவு தெரிந்திருக்கலாம். பிறந்ததிலிருந்தே நகரங்களுக்குள்ளேயே சுற்றுகிறவர்களுக்கு குதிரைவாலி தயிர்சோறு என்கிற பெயரெல்லாம் அமானுஷ்யம்தான்.

குடியரசு தினத்தன்று லயோலா கல்லூரியில் பூவுலகின் நண்பர்கள் முந்நீர் விழவு என்கிற பெயரில் கருத்தரங்கம் மற்றும் உணவு திருவிழா ஒன்றை நடத்தினார்கள். வாழைத்தண்டு சாறு, இனிப்பும் புளிப்புமாக பானகம், ருசியான சோளதோசை, காரசாரமான நாட்டுக்கோழி வறுவல், ச்சில்லுனு குதிரை வாலி தயிர் சோறு, அசத்தலான சாமை சோறு, வரகு நிலக்கடலை சோறு, மாப்பிள்ளை சம்பா சாம்பார், புளிபோட்ட மீன்குழம்பு... என விதவிதமான ஐட்டங்களைப்போட்டு அசத்தியிருந்தார்கள்.

காலையிலேயே தண்ணீர் தனியார்மயமாதல் உள்ளிட்ட பிரச்சனைகளை பேசுகிற கருத்தரங்களுடன் தொடங்கிவிட்டது இந்த நிகழ்வு. மாலை ஐந்துமணிக்கு மேல்தான் கலைநிகழ்ச்சிகள் மற்றும் உணவு திருவிழா என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நம் வழக்கப்படி சாப்பாடுபோடுகிற மாலை வேளையில்தான் விழாவுக்கு சென்றேன். அடியனைப்போலவே பலரும் ''ஏன்ப்பா நிஜமாவே நாட்டுக்கோழிதான் போடுவாங்களா இல்ல பிராய்லர்கோழிதானா'' என்று அரங்கத்துக்கு வெளியே விசாரித்தபடி காத்திருந்ததை பார்த்தபோதுதான் நான் தனி ஆள் இல்ல என்பதை உணரமுடிந்தது.

இதற்கு நடுவே தெலுங்கானா விவகாரத்தை முன்வைத்து லயோலா கல்லூரியிலேயே இன்னொரு கருத்தரங்கமும் நடப்பதாக ஒரு துண்டு பிரசுரத்தை நண்பர் கொடுத்தார். அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால் ஒரே ஏமாண்டி செப்பண்டி இக்கடா அக்கடா என தெலுங்கில் பேசுகிற குரல்கள் கேட்டது. மதியத்திலிருந்து ஒன்றுமே சாப்பிடாமல் விரதமிருந்து உணவுதிருவிழாவுக்கு வந்திருந்ததால் அப்படியே யூ டர்ன் அடித்து இயற்கை உணவு அங்காடிகள் வைத்திருந்த கடைகளில் நோட்டம் விட்டேன். நிறைய இயற்கை உணவு பொருட்கள் இருந்தாலும்.. எல்லாமே ஓவர் ரேட்டு!

பிரபல பெண் போராளிகளும் புரட்சியாளர்களும் கவிஞர்களுமான (என்னா காம்பினேஷன்!) கவிதா முரளிதரன்,கவின்மலர்,லிவிங்ஸ்மைல் வித்யா, சந்திரா தங்கராஜ், நிலவுமொழி போன்றவர்களையும், புரட்சிபத்திரிகையாளர்களான அண்ணன் அருள் எழிலன், சவுக்கு ஷங்கர், சுகுணா திவாகர், கார்ட்டூனிஸ்ட் பாலா, பாரதி தம்பி, மாலதி என இன்னும் சிலரையும் பார்த்து ஆசி பெற்றேன்.

மணி 6. புத்தர் கலைக்குழுவின் பறையிசையில் டமால் டமால் என பூமி அதிர தொடங்கியது. சொய்ங் சொய்ங் பாடல் மூலமாக புகழ்பெற்றுள்ள ‘மகிழினி மணிமாறன்’ பறையடித்தபடி நடனமாடிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அவரும் அவருடைய குழுவினரும் மூச்சுவிடாமல் சுழன்று சுழன்று நடனமாடியதை பார்த்த அனைவருக்குமே தலைசுற்றல் உண்டாகியிருக்கும்.

என்னா எனர்ஜி என்னா ஸ்பீடு.. கலாமாஸ்டர் சொல்வதைப்போல நிஜமாவே.. கிழி கிழி கிழி.. நாம் அனைவருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த பறையிசை நடனத்தை பார்க்க வேண்டும். என்ன ஒரு கொண்டாட்டம் பாஸ்...

ஆனால் பாவம் மகிழினி மணிமாறன். ஒருமணிநேரத்துக்கு மேலாக நடனமாடி முடித்த பின்பு மேலும் ஒருமணிநேரம் மேடையில் பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அதுவும் தொடர்ச்சியாக கேப் விடாமல்.... பார்க்கவே பாவமாக இருந்தது. ஒருவாய் சோடாவாச்சும் வாங்கிகுடுங்கலே என்று கேட்கவேண்டும் போல இருந்தது.

விகடனில் ஆறாம்திணை தொடர் எழுதிவரும் இயற்கை டாக்டர்.சிவராமன் இதுபோன்ற இயற்கை உணவு திருவிழாவின் தேவை குறித்தும், நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றினார். அதோடு இயற்கை உணவுகளை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்திக்கூறினார். அவரைத்தொடர்ந்து இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நம்முடைய மண்ணும் விவசாயமும் எப்படி அழிந்துகொண்டிருக்கிறது என்பது பற்றி நிறைய பேசினார்.

அவர்கள் பேசிமுடிக்க.. வேறென்ன சாப்பாடுதான். அடித்துபிடித்து நமக்கு ஒரு தட்டை வாங்கிக்கொண்டு க்யூவில் நின்றால்.. வரிசையாக மேலே இரண்டாவது பத்தியில் குறிப்பிட்டிருந்த எல்லா உணவுகளும் வேண்டிய அளவு கொடுக்கப்பட்டது.

விழா அறிவிப்பு துண்டுபிரசுரங்களில் குறிப்பிட்டதுபோல நாட்டுக்கோழி குழம்புக்கு பதிலாக நாட்டுக்கோழி வறுவலும், பொறிச்ச மீனுக்கு பதிலாக புளிபோட்ட மீன்குழம்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழாக்குழுவினர் இதுகுறித்து ஆய்வு செய்து அடுத்த முறை சரியாக துண்டுபிரசுரத்திலும் தட்டிலும் ஒரே ஐட்டத்தை போடவும்.

நம்மோடு வந்திருந்த நண்பர் ‘’என்னங்க கோழிகொழம்புனு ஆசையா வந்தேன்.. எனக்கு மீன்கொழம்பு புடிக்காதுங்களே’’ என்று சோகத்தோடு பேசி சொல்லவொண்ணா துயரத்துக்கு ஆளானார். நமக்கு அந்த துயரமெல்லாம் கிடையாது. மகிழ்ச்சியாக சாப்பிட்டேன்.

திணைபொங்கல் ருசி இதை எழுதும்போதே இனிக்கிறது. குதிரைவாலி தயிர் சோறு மிகவும் பிடித்தது. நாட்டுகோழி வறுவலும் அளவாய் புளிசேர்த்து நல்ல காரசாரமான மசலா சேர்த்த மீன்குழம்பு சோறும் குட் காம்பினேஷன்.(படிக்கும்போதே நாக்கு ஊறுமே!)

சோளதோசைதான் முயற்சி செய்ய முடியவில்லை. முதலில் கிடைத்த ஐட்டங்களையே செம காட்டு காட்டியதால் சிறிய வயிற்றில் இடமில்லை. அடுத்த ஆண்டு ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான். (அடுத்த ஆண்டு பீஃப் உண்டு என்று பேசிக்கொள்கிறார்கள்!)

சாப்பிட்ட உணவுகளை எப்படி சமைத்து என்கிற சமையல்குறிப்புகள் அடங்கிய கையேடு ஒன்றையும் கொடுத்தார்கள். ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள கிராமிய உணவுப் பொருட்கள்தான் எங்கே கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை. எங்கயாச்சும் கிடைக்குமாருக்கும்.

ஒரு தட்டு உணவுக்கு 230 ரூபாய் வரை செலவானதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் நுழைவுகட்டணம் 200 ரூபாய்தான் வசூலிக்கப்பட்டது. எப்படி கட்டுபடியாகுதோ தெரியவில்லை. இருப்பினும் இதுபோன்ற உணவு திருவிழாவை அடிக்கடி குறைந்தது மூன்றுமாதங்களுக்கு ஒருமுறை கூட நடத்தலாம்.

இன்று இயற்கை உணவுகளை தினமும் சாப்பிடுவதெற்கெல்லாம் பல லட்சங்கள் மாத சம்பளமாக பெற்றால்தான் முடியும் என்கிற நிலை. அதிலும் ஆர்கானிக்கெல்லாம் யானைவிலை ஒட்டக விலை. அதனால் ஏழை எளிய நடுத்தர மக்களும் இந்த இயற்கை உணவின் சுவையை உணர இதுமாதிரி விழாக்கள் ஒருவாய்ப்பாக அமையுமே.

விழா அமைப்பாளர்களில் எனக்கு தெரிந்த நண்பர்களான வக்கீல் சுந்தர்ராஜன், டாக்டர் சிவராமன், வெற்றிசெல்வன், சுந்தர்ராஜன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அனைவருக்கும் இப்படியொரு நிகழ்வை நடத்தியமைக்கு நன்றிகள்.

****


பின்குறிப்பு – முன்பு ஒருமுறை சென்னையில் மாட்டிறைச்சி திருவிழா நடத்துவது குறித்து ஃபேஸ்புக்கில் சில முற்போக்கு எழுத்தாளர்கள் காரசாரமாக பேசிக்கொண்டார்கள். பலமாதங்களாகிவிட்டது இன்னமும் அதற்கான எந்த முயற்சிகளும் நடைபெறுவதாக தெரியவில்லை. யாராவது முன்னின்று நடத்தினால் நன்றாக இருக்கும். என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான மாட்டுக்கறி பிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நிறைய சாப்பிட்டு சிறப்பு செய்வோம்.

27 January 2013

பராசக்திக்கு வயது 60!







‘’ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!’’

ஒவ்வொரு வார்த்தையாக திரையில் ஒலிக்க.. ஒலிக்க.. தமிழ்நாடே கையை தூக்கி இரண்டு இளைஞர்களிடம் சரண்டர் ஆனது. ஒவ்வொரு வசனத்தையும் திருக்குறளைப்போல மனப்பாடம் செய்து ஒப்பித்தது. தமிழகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த திரைப்படம் உருவாக்கியது. அந்த வசனங்கள் அறுபது ஆண்டுகளுக்கு பின்னும் தமிழகமெங்கும் அன்றாடம் எங்காவது நினைவு கூறப்படுகிறது. பராசக்தி படத்துக்கு இந்த ஆண்டோடு அறுபது வயதாகிவிட்டது.

ஒரு புதிய அலையை, சிந்தனையை தமிழ்சினிமாவுக்கு கொடுத்த திரைப்படம் பராசக்தி. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இப்பட படமெடுத்து அதை வெற்றிபெற செய்வதெல்லாம் அவ்வளவு சுலபமல்ல. அதுவும் சாதாரண வெற்றியல்ல..

பராசக்தி திரைப்படம் உருவான கதை ‘’என் தங்கை’’ என்கிற நாடகத்திலிருந்து தொடங்குகிறது. திருச்சி டி.எஸ். நடராஜன் என்பவர் எழுதிய இந்த நாடகம் ஐம்பதுகளின் துவக்கத்தில் பெருமளவில் ரசிகர்களை ஈர்த்த ஒன்றாக இருந்தது. பார்வையற்ற தங்கைக்காக தன் காதலை தியாகம் செய்யும் அண்ணனின் கதைதான் என்தங்கை. அந்த நாடகத்தில் பாசமிகு அண்ணனாக நடித்தவர் அப்போது சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சாதாரண (சிவாஜி) கணேசன்.

அந்த நாடகத்தை கோவை சென்ட்ரல் ஸ்டுடீயோவை சேர்ந்த ஜூபிடர் சோமு பார்க்கிறார். அவருக்கு பார்த்ததும் பிடித்துவிட ஏ.எஸ்.ஏ.சாமி என்கிற அக்காலத்து முன்னணி இயக்குனரிடம் கூறுகிறார். அவரும் நாடகத்தை பார்த்து இதை சினிமாவாக செய்யலாம் என்று சம்மதிக்கிறார்.

அந்த நேரத்தில் ஏ.எஸ்.ஏ.சாமி நிறைய படங்கள் இயக்கி வந்தார். அதனால் சுந்தர் ராவ் நட்கர்னி என்பவருக்கு ‘’என் தங்கை’’ படத்தினை தள்ளிவிட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். ஆனால் நட்கர்னியோ முதலில் ஒப்புக்கொண்டு தன்னால் இதுபோல நவீனகதைகளை படமாக்குவதில் விருப்பமில்லை என்று மறுத்துவிடுகிறார். மீண்டும் என் தங்கை ஏ.எஸ்.ஏ.சாமிக்கே திரும்பிவருகிறது.

ஏ.எஸ்.ஏ.சாமி தமிழகமெங்கும் சூப்பர்ஹிட்டாக போய்க்கொண்டிருந்த பராசக்தி என்கிற நாடகத்தை பார்க்கிறார். அவரை அந்த நாடகம் பார்க்க தூண்டியவர் பி.ஏ.பெருமாள் என்கிற நேஷனல் பிக்சர்ஸின் அதிபர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்.

ஏ.எஸ்.ஏ.சாமிக்கு அப்போது ஒரு யோசனை தோன்றுகிறது பராசக்தி நாடகமும் அண்ணன்தங்கை பாசம் குறித்த கதைதான்.. அதையும் என்தங்கை நாடக கதையையும் சேர்த்து ஒன்றாக்கி ஒரு திரைக்கதை பண்ணினால் பிரமாதமாக வரும் என்று திட்டமிட்டார். ஆனால் என்தங்கை நாடகத்தை எழுதிய திருச்சி டி.எஸ்.நடராஜனோ அதற்கு சம்மதிக்கவில்லை. அதோடு அந்த நாடகத்தின் கதையை வேறொரு தயாரிப்பாளருக்கு விற்றும் விட்டார்!

முதலில் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு சூட்டிங்கும் தொடங்கி.. பின் என்தங்கை கைவிடப்பட்டது. கடைசியில் சிவாஜி நடித்த என்தங்கை நாடகத்தில் நாயகனாக நடித்தவர் நம்ம புரட்சிதலைவர் எம்ஜிஆர்தான்!

என்தங்கைதான் போயிடுச்சே பராசக்தியையாச்சும் படமா எடுப்போம் என்று முடிவெடுக்கிறார் பெருமாள். அதனால் பராசக்தி நாடகத்தை எழுதிய பாவலர் பாலசுந்தரத்திடம் பேசி அதற்கான திரைப்படமாக்கும் உரிமையை வாங்குகிறார். அவரோடு ஏவி மெய்யப்ப செட்டியாரும் இணைந்துகொள்ள , படத்திற்கான திரைக்கதை வசனம் எழுத அந்த நேரத்தில் ஒரளவு புகழ்பெற்றுவந்த இளைஞரான கலைஞர் கருணாநிதியை நியமித்தனர். கிருஷ்ணன் பஞ்சு படத்தை இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

என்தங்கை நாடகம் பார்த்த்திலிருந்தே என்றைக்காவது இதை படமாக்கினால் கணேசனைத்தான் ஹீரோவாக போடவேண்டும் என்பது பி.ஏ.பெருமாளின் ஆசை. அந்த அளவுக்கு என் தங்கை நாடகத்தில் சிறப்பாக நடித்திருந்தார் சிவாஜி.
அதனால் பராசக்தி படத்துக்கு அவரையே நாயகனாக்குகிறார். பல ஆண்டுகளாக வறுமையிலும் பசியிலும் கிடந்த சிவாஜி பார்க்கவே ஒல்லியாய் கன்னங்கள் ஒட்டிப்போய் இருப்பாராம். அவரை பார்த்தால் ஒரு நாயகனுக்கான தோற்றமே இருக்காதாம். இருந்தும் அவரைத்தான் நாயகனாக போடவேண்டும் என்று அடம்பிடித்து நாயகனாக்கினார் பி.ஏ.பெருமாள்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் ‘சக்ஸஸ்’. அந்த சக்ஸஸ் நடிகர் திலகம் சிவாஜியின் இறுதிவரை தொடர்ந்தது. அதை எழுதிய கலைஞருக்கும்தான்! படம் சூட்டிங் ஆரம்பித்து எல்லாம் மங்கலகரமாக மகிழ்ச்சியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

சில ஆயிரம் அடிகள் படமாக்கிய பின் அதை போட்டுப்பார்க்கிறார் ஏவி மெய்யப்ப செட்டியார். அவருக்கு சிவாஜியின் நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை. ‘’ஏன்ப்பா இந்த கணேசன் என்னய்யா நடிச்சிருக்கான்.. சுத்தமா நல்லா இல்ல.. வசனம் பேசும்போது வாய் மீன் மாதிரி இருக்கு’’ என்று கணேசனை நீக்கிவிட பரிந்துரைக்கிறார். அதோடு கே.ஆர்.ராமசாமி என்கிற நடிகரை நடிக்க வைத்து படமாக்கலாம் என்று முடிவுசெய்கிறார். அது சிவாஜிக்கும் தெரியவருகிறது. எப்படிப்பட்ட வேதனையை அந்த நேரத்தில் சிவாஜி அனுபவித்திருப்பார். கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை.

பிஏ பெருமாளோ விடாப்பிடியாக இருந்தார். சிவாஜி கணேசன் நன்றாக நடிப்பான் எனக்கு நம்பிக்கையிருக்கிறது என்று சண்டை போடுகிறார். வசனகர்த்தாவான கருணாநிதியும் என்னுடைய வசனங்களை இவரைவிட வேறுயாராலும் சிறப்பாக பேசமுடியாது என்று சிவாஜிக்காக பேசுகிறார். இந்த களேபரத்தில் சில காலம் சூட்டிங் நிறுத்தப்பட்டது. கடைசியில் பிஏ பெருமாளின் நம்பிக்கை ஜெயித்தது. சிவாஜி நடிக்க பராசக்தி படத்தின் சூட்டிங் வெற்றிகரமாக தொடங்கியது!

படம் ஒருவழியாக முடிந்தபின்னும் கூட பல்வேறு தடைகள் தொடர்ந்தன. சென்சாரில் இந்தப்படத்தை பார்த்த அதிகாரிகள் என்ன செய்வதென்று குழம்பிப்போய்விட்டனர். படம் முழுக்க இதுவரை தமிழ்சினிமா பார்த்திடாத கேட்டிராத வசனங்களும் காட்சிகளுமாக நிரம்பியிருந்தன. வெட்டி எறியத்தொடங்கினால் மொத்தபடத்தையும் தடைதான் செய்யவேண்டியிருக்கும். சென்சாரில் தனிக்கமிட்டி அமைத்துதான் சென்சார் செய்யப்பட்டதாம்.

1952 நவம்பரில் ஒரு தீபாவளி நாளில் திரைப்படம் வெளியானது. படம் வெளியான சமயம் இத்திரைப்படத்துக்கு தடை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு படத்தில் இந்து மதம் குறித்த சமூகம் குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தன. தடைவருமோ என்கிற வதந்தியே படத்துக்கு மக்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியது. அதுவே தியேட்டருக்கு மக்களை இழுத்துவந்தது. படம் மெகாஹிட். அதுவரை பாடிப் பாடியே படமெடுத்த தமிழ்சினிமா இன்றுவரை பேசிப்பேசியே கொல்வதற்கு பராசக்தியும் ஒருகாரணமாக மாறியது!

அதுவரை புராண படங்களாக எடுத்துக்கொண்டிருந்த தமிழ்சினிமாவை நவீன கதைகளின் பக்கமாக மடைமாற்றிய பெருமையும் பராசக்தியையே சேரும். பராசக்திக்கு முன்பும் கூட அவ்வப்போது சில படங்கள் நவீன கதைகளோடு முற்போக்கான கருத்துகளோடு வந்தாலும்.. பேச்சுத்தமிழில் தொடங்கி கதைசொல்லும் விதம் காட்சியமைப்புகள் எளிய மக்களுக்கும் புரியக்கூடிய திரைக்கதை என சகல விஷயங்களிலும் ஒரு டிரென்ட் செட்டராக பராசக்தி அமைந்திருந்தது.

சமூகத்தின் ஒவ்வொரு அமைப்பையும் அதன் குறைகளையும் பகடி செய்த முதல் படமாக பராசக்தியை பார்க்கலாம். தந்தை பெரியாரின் சிந்தனைகளை முழுமையாக முடியாவிட்டாலும் திரையில் ஒரளவாவது பேசிய படமாகவும் இப்படம் இருந்தது. ஏற்றதாழ்வுகள் மிகுந்திருந்த சமூகத்தை, நீதிமன்றங்களை, கோயில்களை, அகதிகள் மீதான அரச அடக்குமுறையை , நம்முடைய கட்டுப்பெட்டிதனமான மூடநம்பிக்கைகளை, ஏழைகள் மீதான அசட்டுப்பார்வையை என படம் முழுக்க கேள்விகளும், பகடியும் நிறைந்திருக்கும்.
சீர்திருத்த திருமணம், சுயஉரிமைக்காக சங்கம் அமைப்பது, பொதுவுடமை கொள்கைகள் மாதிரியான விஷயங்களையும் எளிமையாக பேசியது பராசக்தி. இப்படம் ஏன் இன்றளவும் கொண்டாடப்படுகிறது என்பதற்கான காரணம் இதில் பேசப்பட்ட விஷயங்கள் பாமரனுக்கும் புரியும்படி எழுதப்பட்டவை என்பதுதான்.

படம் வெளியான சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த ராஜகோபலாச்சாரியார் கடுமையாக இப்படத்தை எதிர்த்தாராம். இத்திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை மறுஆய்வு செய்யக்கோரி மத்தியஅரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
இதுமாதிரி படங்கள் வந்தால் நம்முடைய ஆச்சாரம் அழிந்துவிடும், லோஹம் கெட்டுவிடும் , தமிழ்நாடே தீட்டாகிடும் என்கிற ரீதியில் அப்போதிருந்த சில முன்னணி பத்திரிகைகளும் வார இதழ்களும் கூட புலம்பின. எழுத்தாளர் கல்கியும் கூட தன் பங்குக்கு காரசாரமாக பராசக்தியை விமர்சித்து கட்டுரை எழுதினார். அதிகாரவர்க்கத்தின் எதிர்ப்புகளையும் தாண்டி மக்களின் பேராதரவுடன் இத்திரைப்படம் மகத்தான வெற்றிபெற்றது.

இன்றும் நம்முடைய நீதித்துறை காமெடிகளும், மூட பழக்கவழக்கங்களும், சாமியார்களின் சல்லாபங்களும், அதிகாரத்தின் அடாவடியும் குறைந்தபாடில்லை. அதற்காக பராசக்தியை யாரும் ரீமேக் செய்கிறேன் என்று எதையாவது செய்து பயமுறுத்த வேண்டாம். (கலைஞர் வேறு ஃப்ரீயாக இருக்கிறார்). சென்ற ஆண்டு கர்ணன் படத்தை வெளியிட்டது போல இந்த ஆண்டு பராசக்தியை கலர்பண்ணிக்கூட வெளியிடலாம்.

கலைஞர் பரம ஏழைதான் என்றாலும், அவருடைய வீட்டிலேயே கணிசமான திரைப்பட தயாரிப்பாளர்களும் மிட்டா மிராசுகளும் ஜமீன்தார்களும் இருப்பதால் அவர்களாவது மனது வைத்து இத்திரைப்படத்தை மீண்டும் கலரிலோ அல்லது அப்படியேவோ பெரிய அளவில் வெளியிடலாம். (கர்ணன் போல இதை ரிலீஸ் செய்தாலும் நன்றாக கல்லா கட்டமுடியும் என்று உறுதியாக நம்புகிறேன்)

படத்தை மீண்டும் பெரிய அளவில் வெளியிடுவதை காட்டிலும் இந்த அறுபதாவது ஆண்டில் பராசக்திக்கு நம்மால் வேறெந்த மரியாதையையும் செய்துவிட இயலாது!.

***

தகவல் உதவி – ரான்டர்கை ஹிந்துவில் எழுதிய பராசக்தி தொடர்பான கட்டுரை, தியோடர் பாஸ்கரன் எழுதிய The Eye of the Serpent, மற்றும் கூகிள்.

24 January 2013

'டிவி புகழ்' மனுஷ்யபுத்திரன்





மணி எட்டாகிவிட்டதா? கைகளில் ரிமோட்டை எடுத்துக்கொள்ளுங்கள். எடுத்தாகிவிட்டதா? அப்படியே ரேண்டமாக ஏதோ ஒரு தமிழ் செய்தி சானலுக்கு செல்லுங்கள்... எந்த சேனலாக இருந்தாலும் அதில் அந்த மனிதர் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார். அவரை எந்த நாளிலும் எந்த சேனலிலும் சந்திக்க முடியும். ஒருவாய் காப்பித்தண்ணிகூட குடிக்காமல் இரண்டு மணிநேரம் கூட பேசக்கூடிய விவாதிக்கவல்ல அபார ஆற்றல் பெற்றவர் அவர்.

அவருடைய பேச்சு ஒரு குயிலின் கானத்தைப் போல கொட்டும் மழையில் நம் முகம்வருடிச்செல்லும் தென்றலைப்போல அமைதியான ஓடம்போல மிக மிக மென்மையானதாக இருக்கும் (என்று அவரே போடசொன்னார்). பாடகர் யேசுதாஸ் என்னதான் குத்துப்பாட்டே பாடினாலும் அது ஒரு மெலொடியைப்போலவேதான் நான் உணர்ந்திருக்கிறேன். போலவே இந்த மனிதரும் என்னதான் கோபமாக உரக்கப்பேசினாலும் அது அவ்வளவு டெரராக இருக்காது. அவ்வளவு சாஃப்ட்டு! அவர் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான 'டிவிபுகழ்' மனுஷ்யபுத்திரன்.

ஒவ்வொருநாளும் ஒரு செய்தி சேனல் துவக்கப்படுகிற சமகாலத்தில் எல்லா செய்திசேனல்களுக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குபவர் மனுஷ்யபுத்திரனாகத்தான் இருக்கமுடியும். அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. இவ்விஷயத்தில் அவருடைய சீனியரான கிழக்குப்பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி கூட இதை ஏற்றுக்கொள்வார். எந்த செய்தி சேனலைப் போட்டாலும் அதில் மனுஷ்யபுத்திரன் பேசுவதை சிலசமயம் பார்த்திருக்கிறேன். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சேனல்களில் லைவ் ஷோகூட பண்ணுகிற வித்தைக்காரர்! இதெல்லாம் நித்யானந்தாவுக்கே வராத மாயாஜாலம்.

அமெரிக்காவில் குண்டுவெடித்தாலும் சரி. கோசா ஆஸ்பத்திரியில் ஆயாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தாலும் சரி., அலெக்ஸ்பாண்டியன் திரைப்படத்தில் ஆபாசகாட்சியாக இருந்தாலும்.. பேசப்போகிற டிவி சேனலிலேயே செய்தியாளர்களுக்குள் அடிதடியாக இருந்தாலும் சரி..

பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி இன்றே இப்போதே உடனடியாக ஒரு நல்ல மாற்றுக் கருத்து வேண்டுமா? பிடிங்க சார் அவர.. பிடிச்சு மைக்கை குடுங்க சார்.. என இன்று தமிழகத்தின் பட்டிதொட்டியில் உள்ள குட்டிப்பாப்பாகள் கூட சொல்லும்! அவரால் மட்டும்தான் சகல விஷயங்களுக்கும் கருத்துச்சொல்ல இயலும். கருத்து சொல்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. அது ஒருகலை. அது மிகச்சிலருக்கே கைவரபெற்றுள்ளது.

தொலைகாட்சியில் கருத்து சொல்வதெற்கென ஒரு கல்லூரியை திறந்தால் அதில் நம்ம மனுஷ்யபுத்திரனையே பிரின்சிபாலாக போடலாம். (அந்தக்கல்லூரியில் மற்ற பதவிகளுக்கு பத்ரிசேஷாத்ரி, சுப.வீ, சாரு, பாஸ்கர்சக்தி, இளங்கோ கல்லாணை, முத்துகிருஷ்ணன் மாதிரியான சீனியர்களுக்கும் ஞாநி,சாலமன் பாப்பையா,சுகிசிவம் மாதிரியான சூப்பர் சீனியர்களுக்கும் இடம்கொடுக்கலாம்)

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளுக்காக இல்லையென்றாலும் சீரிய கருத்துகளுக்காக இன்று தமிழகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அபிப்ராயப்படலாம். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை அறியாதவர்களும் கூட அவருடைய கருத்துகளை அறிந்தவர்களாக சமலோகத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டில்தான் சாத்தியம். அதற்கு சான்றாக புத்தகக் கண்காட்சியில் யாரோ ஒரு மாமி குருபெயர்ச்சி பலன்கள் புத்தகத்தில் கூட மனுஷ்யபுத்திரனிடம் அடம்பிடித்து க்யூவில் காத்திருந்து ஆட்டோகிராப் வாங்கிச்சென்றதை பார்க்க முடிந்தது.

செய்திசேனல்கள் புயலென தமிழ்நாட்டை தாக்குவதற்கு முன் நீயாநானாவில் மட்டும்தான் தென்னாட்டு இலக்கியவாதிகள் அனைவருமே தொலைகாட்சியில் தரிசனம் கொடுத்துவந்தனர். அதற்கு மனுஷ்யபுத்திரனும் விதிவிலக்கல்ல. ஆனால் ஆரம்பகாலத்தில் அவருக்கு பல்வேறு தயக்கங்களும் கேமரா ஓடும்போது சிந்தனை ஓட்டத்தில் தடையும் இருந்ததை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இன்றோ எல்லாமே தலைகீழ். ப்ராக்டீஸ் மேக்ஸ் ஏ மேன் பர்பெக்ட் என்று பாஸ் எனப்படும் பாஸ்கரன் என்கிற திரைக்காவியத்தில் நடிகரும் சிந்தனையாளருமான சந்தானம் அவர்கள் குறிப்பிட்டிருப்பார். அதற்கு சரியான உதாரணம் ம.பு.தான். அர்னாப் கோஸாமியும் கரன்தப்பாரும் கூட மனுஷ்யபுத்திரனிடம் தினந்தோறும் ஈவ்னிங் ட்யூசன் வந்து டிவியில் பேசுவது குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு மனிதர் பிச்சி உதறுகிறார். கேமரா பயமோ தயக்கமோ இல்லாமல் என்ன பேசுகிறோம் என்கிற தெளிவும் நேர்த்தியும் கைவந்துவிட்டது.

அதோடு கொஞ்சமும் தட்டுதடுமாறால் எதைப்பற்றியும் எவ்வளவு நேரமும் பேசக்கூடியவராகவும் மாறிவிட்டார். அதனால்தானோ என்னவோ... கோபிநாத்தைவிட நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார் என்றுதான் இப்போதெல்லாம் மனுஷ்யபுத்திரனை நீயாநானாவுக்கு அழைப்பதில்லை என்று அவதானிக்கலாம்!

புத்தக கண்காட்சி சமயத்தில் மட்டும்தான் நம் செய்தி சேனல்களுக்கு மனுஷ்யபுத்திரன் ஒரு எழுத்தாளர் என்பதே நினைவுக்கு வரும்போல.. கடந்த பத்து நாட்களாகதான் எல்லா சேனல்களிலும் புத்தகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

புக்ஃபேர் முடிந்துவிட்டால் ''இவனுங்க வேற இன்னும் ஒருவருஷத்துக்கு புஸ்தகம் பத்தி மூச்சே விடமாட்டாய்ங்களே'' என்கிற அவசரமும் பதட்டமும் ஆதங்கமும் அவருடைய பேச்சில் தெரிந்தது. புக்ஃபேரும் முடிந்துவிட்டது.. இனி அடுத்தவருடம்தான் புத்தகம் பற்றியெல்லாம் பேசமுடியும். ஆனால் அலைகடல் ஓயுமா.. சூரியன் உதிப்பதுதான் மாறுமா.. அதுபோலவேதான் மனுஷ்யபுத்திரனும்.

இந்த வாரத்துக்கு விஸ்வரூபம் பட விவகாரம் சுடச்சுட காத்திருக்கிறது. இப்போதே முன்பதிவு முறையில் எந்தெந்த நேரத்துக்கு எந்தெந்த தொலைகாட்சியில் பேசுவது என்பதெல்லாம் புக்காகியிருக்கும். டிவியில் பேசுவதற்கென மனுஷ்யபுத்திரனை புக்செய்ய ஆன்லைன் ரிசர்வேஷன் வசதிகள்கூட உண்டு என்று கேள்விப்பட்டேன்.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் கமலை விட அதிகமாக பேசப்போகிறவர் மனுஷ்யபுத்திரனாகத்தான் இருப்பார்.. வேண்டுமென்றால் ரிமோட்டை எடுத்து ஏதோ ஒரு செய்திசேனலை தட்டித்தான் பாருங்களேன்!



பின்குறிப்பு – திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது இந்த ஆண்டு மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்படவுள்ளது. அவருக்கு நம் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகள்!




23 January 2013

மாண்புமிகு பவர்ஸ்டார்!




லத்திகா திரைப்படத்தை முதல்நாள் முதல் ஷோ தியேட்டரில் காசுகொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்த்த இரண்டு பேர் தமிழ்நாட்டிலேயே நானும் நண்பர் லக்கிலுக்குமாகத்தான் இருக்க வேண்டும்.

நான் குடியிருக்கும் முகப்பேர் பகுதியில்தான் பவர்ஸ்டாரின் அட்ராசிட்டி முதன்முதலாக தொடங்கியது. ஊருக்குள் காதுகுத்து வளைகாப்பு பூப்புனித நீராட்டுவிழா என எதுநடந்தாலும் வான்டடாக ஆஜராகி வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார். வேண்டாம் என்பவருக்கும்கூட கையபிடித்து இழுத்து மிரட்டியாவது உதவிகள் செய்தவர் அண்ணல் பவர். இவருடைய வள்ளல்தன்மையை பார்த்து பயந்து ஓடினவர்களும் கூட உண்டு. அண்ணாநகர் சரவுண்டிங்கில் எங்கு பார்த்தாலும் அவருடைய லத்திகா,ஆனந்த தொல்லை,மன்னவா,தேசியநெடுஞ்சாலை முதலான பட போஸ்டர்கள் எப்போதும் காணகிடைக்கும். அம்மன் கோயில் திருவிழாவில் கூழ் ஊற்றக்கூட ஸ்பான்சர் செய்து எங்கள் பகுதி மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்தவர் பவர் ஸ்டார்.

இவருடைய வெறித்தனமான கொடைவள்ளல் குணம் அண்ணாநகரை சுற்றியிருந்த மற்ற பகுதி மக்களும் கூட யார்சார் இவர் என திரும்பி பார்த்தது. அப்படி திரும்பி பார்க்க முடியாதவர்களை கூட வீதிக்கு நாலு பேனர் வைத்து அடித்து துவைத்து பார்க்க வைத்தவர் பவர்ஸ்டார். அவருடைய ஏரியா இந்தப்பக்கம் மதுரவாயல் அந்தபக்கம் அம்பத்தூர் என பரந்துவிரிந்து கொண்டிருந்தது.

லத்திகா படம் வெளியாவதற்கு முன்பே வேறு சில படங்களில் நடித்திருந்தார் பவர் ஸ்டார். வழக்கறிஞர் தமிழரசனோ என்னவோ அவர் தன் சொந்தகாசில் அடிக்கடி படமெடுத்து ஹீரோவாகிவிடுவார். அந்தப்படங்களிலெல்லாம் காமக்கொடூரனாக பெண்களை கற்பழிக்கும் வில்லனாக மட்டுமே நடிப்பார் பவர்ஸ்டார். இதுமாதிரியான பாத்திரங்களை மட்டுமே கேட்டுவாங்கி நடிப்பாரோ என்கிற சந்தேகங்களும் கூட எங்களுக்கு எழுவது உண்டு.
எப்போதும் பத்து பெண்களோடு கும்மாளம் அடிப்பவராகவேதான் அவருடைய திரைபிரவேசம் இருந்தது. எல்லா காட்சியிலும் அந்த பத்துபெண்களோடும் கட்டிபிடித்து விளையாடுவார் பவர். அதுதான் எங்களைப்போன்ற இளைஞர்களை கவர்ந்த அம்சமாக இருக்கலாம்.

அதுபோக சில பிட்டுப்படங்களிலும் கூட பவர்ஸ்டாரை பார்த்து பிரமித்திருக்கிறேன். தலையில் விக்கு கூட இல்லாமல் குஜாலான காட்சிகளில் கூட தன்னுடைய ஃபேவரட் சிரிப்போடு தனிமுத்திரை பதிப்பவராக பவர்ஸ்டார் இருந்தார். பிட்டே இல்லாத மொக்கை படங்களையும் கூட பவர்ஸ்டாருக்காக பார்த்திருக்கிறோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மருத்துவர் அணி தலைவராக இருந்தார் பவர் ஸ்டார். உண்மையில் அவர் எம்பிபிஎஸ் டாக்டரெல்லாம் கிடையாது. அக்குபஞ்சரோ ஆண்மைகுறைவோ அதுமாதிரியான அஜால்குஜாலான மருத்துவர். அவருக்கு பவர் ஸ்டார் என்கிற பட்டத்தை சூட்டியதே தோழர் திருமாவளவன்தான் என்பது ஆச்சர்யமூட்டும் செய்தி!. ஆனந்த தொல்லை படத்தின் பாடல்வெளியீட்டுவிழா என்று நினைக்கிறேன் அதில்தான் டாக்டர் ஸ்ரீனிவாசனின் பவர்ஃபுல் ஆக்டிங்கை பார்த்து அசந்துபோய் பவர்ஸ்டார் என்கிற பட்டத்தை அன்னாருக்கு வழங்கினார் புரட்சிப்புயல் திருமா!

எந்த நேரத்தில் இந்த மருத்துவர் சீனிவாசனுக்கு பவர் ஸ்டார் என்று பெயர் சூட்டினார்களோ அன்றிலிருந்துதான் தமிழ்நாட்டுக்கே மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு அதிகரித்தது என்பது தற்செயலான விஷயமாக தெரியவில்லை.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இப்போதெல்லாம் எங்கள் பகுதியில் பவர்ஸ்டாரின் போஸ்டர்களை அதிகமாக பார்க்க முடியவில்லை. விழாக்களில் அண்ணலின் அதிரடி விசிட்கள் சுத்தமாக குறைந்துவிட்டது. தினமும் அலுலவகம் போகும் போதும் வரும்போதும் பேனர்களில் பார்த்து ரசித்த அந்த அழகான புன்னகையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். தமிழ்நாடு முழுக்கவே பவரின்றி தவித்துக்கொண்டிருக்கையில் அண்ணாநகர் மட்டும் பவர்ஸ்டாரை இழந்து தவிக்கிறது.

கண்ணா லட்டுதின்ன ஆசையா வேறு சூப்பர் ஹிட்டாகிவிட்டதாக கேள்விப்பட்டேன். அடுத்து ஷங்கரின் ஐ படத்தில் செகண்ட் ஹீரோவாக புக் ஆகியிருப்பதாக கேள்விப்படுகிறோம்.

எங்களிடமிருந்த ஒரு அற்புத கலைஞனை கோலிவுட் பறித்துக்கொண்டதோ என அஞ்சுகிறோம். பிரிவில்தான் ஒருவருடைய அருமை தெரியும் என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். வரணும் பழைய பவர்ஸ்டாரா அவர் அண்ணாநகருக்கு வரணும்..பேனரில் புன்னகைக்கணும்!

தமிழ் ஆழி




இந்த மாதம் முதல் வெளிவரத் துவங்கியிருக்கும் தமிழ் ஆழி இதழ் ஒருவழியாக ஜனவரி முடிவதற்குள் கையில் கிடைத்துவிட்டது. விலை இருபது ரூபாய்தான். ஆனால் இதழின் உள்ளடக்கமும், வடிவமைப்பும், செய்திகளும் கொடுத்த காசுக்கு மேல் தரமானதாக இருந்தது. அப்படியே ஷாக்காகிட்டேன் என்று சொன்னால் மிகையல்ல..

எந்த செய்தியாக இருந்தாலும் அதை எல்லா கோணங்களிலும் அலசி ஆராய்கிற இதழியல் முறை இன்று வெகுவாக குறைந்துவிட்டது. உட்கார்ந்த இடத்திலேயே கிடைத்த தகவல்களை மட்டும் கோர்த்து அவசர அடியில் எதையாவது எழுதிக்குவிக்கிற பத்திரிக்கையாளர்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் புதுமை. அரசியல் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு யாருமே பேசத்தயங்குகிற விஷயங்களை 'தில்'லாக பேசுவது போன்ற காரியங்கள் சுத்தமாக குறைந்துவிட்டது. அதுதவிர கட்டுரைகளின் நேர்த்தியுலும் லேஅவுட்டிலும் சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் இதழ் என்பது இன்றும் கானல்நீர்தான்.

அந்தக்குறையை போக்குகிற அளவுக்கு என்று ஒரேயடியாக சொல்விடவும் முடியாது. ஆனால் அந்த தரத்தினை நெருங்குகிற அளவுக்கு முயற்சி செய்திருக்கிறது தமிழ் ஆழி. ஒவ்வொரு பக்கத்தையும் ஒவ்வொரு வார்த்தைகளையும் மிகமிக நேர்த்தியோடும் அதேசமயம் மிகுந்த அக்கறையுடனும் தயாரித்திருக்கிறார் இதழின் ஆசிரியரான ஆழி செந்தில்நாதன்.

ஆழி செந்தில்நாதன் நீண்டகால இதழியல் அனுபவமுடையவர். இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகளில் பணியாற்றியவர். சீனா குறித்து அவர் எழுதிய டிராகன் புத்தகம் என்னுடைய விருப்பப் பட்டியலில் இடம்பெற்ற நூலாக எப்போதும் இருப்பது. அவருடைய நீண்ட கால அனுபவத்தினையும், தமிழில் இப்படி ஒரு இதழை சாத்தியமாக்குகிற ஆர்வம் மற்றும் அர்பணிப்பையும் தமிழ் ஆழியின் முதல் இதழிலேயே பார்க்க முடிந்தது. அவருக்கு பூங்கொத்துகள்.

முதல் இதழில் அணு உலை எதிர்ப்பாளரான சுப.உதயகுமாரின் பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. வெறும் அணு உலை அரசியலோடு மட்டுமே நாமும் நம் ஊடகங்களும் உதயகுமாரினை இணைத்துப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவருடைய பன்முகத்தன்மையை தமிழகத்தில் இன்றைய சூழலில் அவருடைய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது அவருடைய பேட்டி. அணு உலை ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ யாராக இருந்தாலும் நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது.

சாதிவெறி அரசியலை மீண்டும் பிடித்துக்கொண்டு திரிகிற மருத்துவர் ராமதாஸின் அரசியல் காய்நகர்த்தல்கள் குறித்த பேராசிரியர் தீரனின் கட்டுரைதான் இந்த இதழின் ஹைலைட். காதல் எதிர்ப்பு என்கிற போர்வையில் அவர் முன்னெடுத்திருக்கிற ஆபத்தான அரசியல் போக்கினை இக்கட்டுரை சிறப்பாக பதிவு செய்துள்ளது. அதோடு டெல்லி பாலியல் வன்கொடுமையை ஒட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரையைவிட அதில் மாலதி மைத்ரி எழுப்பியுள்ள கேள்விகள் மிக முக்கியமானவை. இவை தவிர மோடியின் வெற்றி, சச்சின் ஒய்வு பெற்றது, நீர்பறவை விமர்சனம், ஒரு புத்தக விமர்சனம் என பல விஷயங்களையும் ஆழமாக பேசியிருக்கிறது இந்த ஆழி.

குறைகளென்று பார்த்தால் இதழை வாசிக்கும்போது பல கட்டுரைகளும் மொழிபெயர்ப்போ என்கிற எண்ணம் உருவாகிறது. சில இடங்களில் வேண்டுமென்றே அதி உயர் தமிழ்சொல் பிரயோகங்களையும் காணக்கிடைத்தது. இயல்பான தமிழில் கட்டுரைகள் வந்தால் அனைவருமே படிக்க இலகுவாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். அதோடு கிரிக்கெட் அல்லாத மற்ற விளையாட்டுகளுக்கும் கொஞ்சம் பக்கங்கள் ஒதுக்கலாம். புத்தக அறிமுகத்துக்கு ஒரு பக்கம்தான் கொடுத்திருக்கிறார்கள். அதையும் அதிகமாக்கலாம்!

போலவே இலக்கியத்துக்கும் கொஞ்சமாவது பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுத்து உதவலாம். வருங்காலங்களில் இந்த குறைகள் நிச்சயமாக குறையும் என்று எதிர்பார்ப்போம்.

சாதிக்கு அப்பால் மாதிரியான கட்டுரைகள் தமிழ் இதழியல் சூழலில் வெகுஜன இதழ்களில் வெளிவர வாய்ப்பேயில்லாதவை. இதுமாதிரி தைரியமான முயற்சிகளை தொடர்ந்து தமிழ்ஆழி செய்ய வேண்டும். அதோடு தரத்திலும் சார்பற்ற தன்மையிலும் கொஞ்சமும் விலகிவிடக்கூடாது என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இப்போதைக்கு ஆண்டு சந்தா போட்டுவிட நினைத்திருக்கிறேன். நீங்களும் கட்டாயம் ஒரு முறையாவது வாங்கி படித்துப்பார்த்து உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களிடம் தமிழ் ஆழி குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்.

தமிழ் ஆழி இதழ்குறித்த மேலும் விபரங்களுக்கு - zsenthil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

22 January 2013

காத்தாலையாம்ல காத்தாலை!





ஜப்பான்காரர்களுக்கு மூக்குதான் சப்பை என்றால் மூளையும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கு! ஃபுகுஷிமா அணு உலையை இடித்து தரைமட்டாக்கிவிட்டு அங்கே காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க போகிறார்களாம் இந்த காமெடியன்ஸ்!

நாங்கள்லாம் பல ஆயிரக்கணக்கான அணு உலைகளை திறந்து உலகத்துக்கே முன்மாதிரியாக மாறி வல்லரசாகிடலாம் என ப்பிளான் போட்டுக்கொண்டிருக்கிறோம். இவனுங்க என்னடானா இருக்கற அணு உலைய மூடிட்டு அதுல காத்தாலை கட்ட போறாய்ங்களாம்ல காத்தாலை.. பொளைக்கத்தெரியாத பொடலங்காயா இருப்பாய்ங்க போல... முட்டாப்பசங்க..

இரண்டுவருடங்களுக்கு முன்பு, அதாவது 2011ஆம் ஆண்டு ஜப்பானில் 9.0 என்கிற அளவில் பூகம்பம் உண்டானது. அதனால் சுனாமி உருவாகி ஜப்பானின் கடற்கரையோர பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. சகல பாதுகாப்புகளோடு கட்டி வைக்கப்பட்டிருந்த அழகான சுபிட்சம்தரும் புதையலான புகுஷிமா அணு உலையும் இந்தக்கொடூரமான சுனாமிக்கு தப்பவில்லை.

ஃபுகுஷிமா அணு உலையிலிருந்த ரியாக்டர்கள் மோசமாக டேமேஜ் ஆகிவிட.. பயந்தாங்கொள்ளி ஜப்பான் தன் மக்களையெல்லாம் அங்கிருந்து அப்புறப்படுத்தியது. அதோடு பல நூறு கோடிகளை கொட்டி ரியாக்டர்களிலிருந்து அணுக்கதிர்வீச்சு லீக் ஆகி பிராப்ளம் வந்துவிடக்கூடாது என மாங்கு மாங்கென்று போராடியது. அதுவும் போதாதென்று ஜப்பான் முழுக்க எம்பெருமான் அருளால் திவ்யமாக இயங்கிக்கொண்டிருந்த 54 ரியாக்டர்களையும் இழுத்து மூடியது. இனிமே ஒன்லி ரினியூவபிள் எனர்ஜி சோர்ஸ்லதான் மின்சாரம் என முடிவும் பண்ணிட்டாங்க!

பயந்தாங்கொள்ளி ஜப்பான் ஜாங்கிரிஸ். 2040க்குள் ஜப்பான் முழுக்கவே ரினீயவபிள் எனர்ஜி சோர்ஸ் மூலமாக மட்டும்தான் மின்சாரம் உற்பத்தியாம்.. அணுவும் கிடையாது ஆயாவும் கிடையாதுனு என்று பீத்திக்கிறாய்ங்க.

இவ்வளவு சிரமப்பட்டதுக்கு சிம்பிளா நம்மூர் வில்லேஜ் விஞ்ஞானியான நாராயணசாமிகிட்ட உதவி கேட்டிருந்தால். வெறும் வாயை மட்டுமே பயன்படுத்தி.. அணு உலை கதிர்வீச்சிலிருந்து எப்படி பொதுமக்களுக்கு பூர்ணமான பாதுகாப்பு வழங்குவதுனு வெளக்கி சொல்லிருப்பாரில்ல! காசுதான் தண்டம். நமக்கென்ன!

ஃபுகுஷிமாவில் கட்டப்போகிற இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம்தான், உலகிலேயே மிகப்பெரிய கடற்கரையோர காற்றாலை உற்பத்தி நிலையமா இருக்கபோகிறதாம். பெருமைதான். 16 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் 143 டர்பைன்களை நிறுவப்போறாய்ங்களாம். இதன்மூலமாக ஒரு ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்மிகை நாடாகவும் மாற முயற்சி செய்ய இருக்கிறது ஜப்பான். இதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. 2020ல இந்தியா வல்லரசாகும்போது ஜப்பான்ல இந்த காற்றாலைகள் மின் உற்பத்தியை தொடங்கிடுமாம்! அதுபோக அருகிலேயே மாபெரும் சோலார் மின் உற்பத்தி நிலையமும் அமைக்க திட்டமாம்!

காற்றாலைதான் என்றாலும் அதனுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய கடந்த ஒருவருடமாக தீவிரமாக ஆராய்ச்சி செய்துவருகிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள். சுனாமி அல்லது பூகம்பம் வந்தாலும் தாக்குபிடிக்க கூடிய டர்பைன்களை உருவாக்கி வருகிறார்கள். இதற்கென மிகப்பெரிய தொகையை ஒதுக்கி தீயாக வேலை பார்த்து வருகிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள்.

ஜப்பானின் இந்த நடவடிக்கைகளைக் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் மீதும் நாட்டின் முன்னேற்றித்திலும் சுற்றுசூழல் மேலும் கொஞ்சமாவது அக்கறையிருக்கிறதா இந்த கொலைபாதகர்களுக்கு! ச்சே. என்னமாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம்.

இந்த ஜப்பான்காரர்களை பார்க்கும்போதுதான் நம் பெருமதிப்பிற்குரிய அண்ணல்களான நாராயணசாமி, அப்துல்கலாம், விவேக், கஞ்சாகருப்பு, வையாபுரி முதலானவர்களின் அருமையை உணர முடிகிறது. அணு உலைக்காக போராடுகிற இந்தப்போராளிகள் மட்டும் இல்லையென்றால் இந்தியாவின் நிலையை நினைக்கவே பதட்டமாக இருக்கிறது.அய்யகோ!

எப்படியும் ஜப்பான்காரர்கள் தங்களுடைய நாட்டில் தடை செய்த 54 ரியாக்டர்களையும் பேரிச்சம்பழத்துக்காக பழைய இரும்புக்கடையில் போடுவார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நம்முடைய வல்லரசர்கள் மொத்தமாக பொறுக்கிக்கொண்டு வந்து இங்கே கொட்டினால் சிறப்பாக இருக்கும் என்பதே அகண்ட பாரத குடிஜனங்களுடைய ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

19 January 2013

புத்தகக் காட்சி - 2013






கத்தியை தீட்டாதே தம்பீ புத்தியை தீட்டு என்று அடிக்கடி யாராவது சொல்வார்கள். அப்படிப்பட்ட புத்தியை கூர் தீட்டுகிற மகத்தான இடமாக புத்தக கண்காட்சி அமைந்திருக்கிது. முதல் நாள் போனபின் மீண்டும் அந்தப்பக்கம் கால் வைக்கிற எண்ணமேயில்லை.

பார்க்கிங்குக்கு பத்துரூபா சொளையாக கொடுக்க வேண்டியிருக்கிறது. இருபது ரூபா புத்தகம் வாங்கினால் பத்து பர்சென்ட் தள்ளுபடியில் இரண்டுரூபா மீதி கிடைக்குமா என ஏங்கி ஏங்கி கால்கடுக்க காத்திருந்து போராடி வாங்கி செல்லுகிற என்னைப்போல ஏழைகளுக்கு இந்த சத்யம் தியேட்டர் பார்க்கிங் கட்டண முறைமைகள் எப்படி ஏற்றுக்கொள்ள தக்கதாக அமையும்.

அதுபோக வண்டி நிறுத்துமிடத்திலிருந்து பல பர்லாங்குகள் நடந்துதான் புத்தக கண்காட்சியை அடைய வேண்டிய கொடுமைவேறு. என்னைப்போன்ற இளவட்டங்கள் பரவாயில்லை, முதியவர்கள்தான் பாவம். அவர்களுக்கென்று பஸ்வசதிகள் ஏற்பாடு செய்திருக்கலாம். அரங்கை அடைவதற்குள் ஆறு மலை ஏழு கடல் நாலைந்து டைனோசர்களையெல்லாம் தாண்டி செல்ல வேண்டியிருக்கிறது. ஒருவழியாக உள்ளே நுழைந்துவிட்டோமா!

நுழைந்தால் எங்கே டிக்கட் வாங்குவது என்று தெரியாமல் ஒரு அரைமணிநேரம் தவித்து. பிறகு ஒருவழியாக டிக்கட்டையும் வாங்கி உள்ளே நுழைந்தால் கண்ணை கட்டி கவர்மென்ட் ஆபீஸில் விட்டதுபோல எந்தபக்கம் இன்சைட் எந்தபக்கம் அவுட்டுசைட் என்பதும் விளங்காமல் தலை கிறுகிறுக்கிறது.

ஒருவழியாக ஏதோ ஒரு இன்னை பிடித்து உள்ளே நுழைந்தால் எப்போதும் போல மனுஷ் உயிர்மை வாசலில் தன்னுடைய ரசிகைகளுக்கு ஆட்டோகிராப் போடுவதில் பிசியாக இருந்தார். தூரத்தில் சாரு நடந்துவருகிறார். அடடா.. ஏதோ களேபரம் நடக்கபோகிறது என்று ஆர்வத்தோடு காத்திருந்தால்.. ஒரு மந்தையில் இரண்டு ஆடுகள்.. அதே சீன்தான். சந்தித்துக்கொண்டன. இரண்டும் சந்தித்தபோது.. நிறைய பேசினர். எத்தியோப்பிய மன்னரும் எத்தியோப்பிய எழுத்தாளரும் சந்தித்து பேசிக்கொண்ட அரிய காட்சியை நண்பர் புகைப்படமாக எடுத்திருக்கிறாராம்.வரலாற்று சிறப்புமிக்க அந்த புகைப்படத்தை விரைவில் வெளியிடுங்க முனீஸ்வரா!

ஞானபானுவில் ஞாநி உற்சாகமாக அமர்ந்திருந்தார். இந்த ஆண்டும் பாரதியார் படம் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. கொஞ்சம் விலையை ஏற்றலாம். ஐந்துரூபாய்க்கு வாங்கிப்போய் எந்த காப்பிரைட் உரிமையும் இல்லாமல் சகட்டுமேனிக்கு உபயோகிப்பதையாவது கட்டுபடுத்தலாம். பாவம் பாரதி. இந்த வருடமும் ஞாநி தன் கடையில் வாக்கெடுப்பு நடத்துகிறார்.

கிழக்கு பதிப்பகத்திலும் விகடன் கடையிலும் எப்போதும் போல கூட்டம் கும்மி அடிக்கிறது. பத்ரி என்னை அழைத்து கிழக்கின் புதிய முயற்சியான டேப்லட்களில் புத்தக வெளியீடு குறித்து விளக்கினார். அதுகுறித்து தனியாக எழுதவேண்டும் என குறித்துக்கொண்டேன்.

காணும் பொங்கல் அன்று ஜெஜெ என்று கூட்டமாம். மாண்புமிகு அம்மா ஆட்சியில் மக்கள் எவ்வளவு சுபிட்சமாக இருக்கிறார்கள் பாருங்கள். கூட்டம் கும்மினாலும் யாரும் புத்தகமே வாங்குவதில்லையாம். இதற்கு நிச்சயமாக கலைஞர்தான் காரணமாக இருக்கவேண்டும். வாசலில் விற்கிற டெல்லி அப்பளத்தை இரண்டு கடி கடித்துவிட்டு ஓடிவிடுவதாக தகவல். பலரும் போன வருஷம் வாங்கின புக்கையே படிக்கல இதுல இந்தவருஷமுமா.. என்று சலித்துக்கொண்டனர். அதனால் கூட புத்தக விற்பனை குறைந்திருக்கலாம்.

உடுமலை டாட் காமில் ஒரு பேனர் பார்த்தேன். விஷ்ணுபுரம் விருது வென்ற கவிஞர் தேவதேவனின் புத்தகங்கள் இங்கு கிடைக்கும் என எழுதப்பட்டிருந்தது. விஷ்ணுபுரம் விருதுக்கு சந்தையில் நல்ல மரியாதைபோல! ஆச்சர்யமாக இருந்தது. பாவம் தேவதேவன். இன்னொரு கடையில் (இந்துபதிப்பகம் என்று நினைக்கிறேன்) உலக வரலாற்றிலேயே ரஜினிகுறித்து வெளியாகும் முதல் கவிதை நூல் என்று பேனர் வைத்து பயமுறுத்தினர்.

அஜயன் பாலா தன்னுடைய பதிப்பகத்திற்கென ஒரு ஸ்டாலை முதன்முறையாக எடுத்திருந்தார். சென்ற ஆண்டைப்போல ஆண்குறியை சித்தை மையபுனைவின் என்றெல்லாம் இந்த வருடம் அதிர்ச்சிகர புத்தகங்கள் வெளியிடவில்லை போல.. எம்ஜிஆர் எழுதிய ஒரு புத்தகமும் , அவரே எழுதிய உலக சினிமா இரண்டாம்பாகமும் ஈர்த்தன. வாங்கும் ஆசையிருந்தும் வாங்கவில்லை காசில்லை. அதோடு என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் இருவர் (பிரதாப்,பரணி) சந்தித்து நான் நன்றாக எழுதுவதாக பாராட்டி புகழ்ந்து கால்மணிநேரத்துக்கு மேலாக பேசினர். நான் அடக்கத்தோடு அதையெல்லாம் கேட்டு ரசித்தேன்.

நேற்று கிடைத்த இரண்டு மணிநேரத்தில் இவ்வளவுதான் சாத்தியமானது. இன்றும் போக நினைத்திருக்கிறேன். எல்லாம் வல்ல கர்த்தர் அதற்கு ஏற்பாடு செய்வார் என நம்புவோம். அல்லேலுயா. நேரம் கிடைத்தால் அடியேனின் அனுபவங்கள் இரண்டாம்பாகமும் இதே தளத்தில் வெளியாகலாம்.

முதல் வரியில் சொன்ன கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு என்கிற வரிகளுக்கிணங்க புத்தக கண்காட்சியில் புத்தியை ஓவராக தீட்டிவிட்டு வெளியே வந்தால்.. வாசலிலேயே கத்திகள் சாணை பிடிக்கிற புதிய மிஷின் அல்லது கருவி ஒன்றை விற்கிறார்கள். விலை இருபது ரூபாய்தான். விற்பவரே டெமோவும் செய்துகாட்டுகிறார். நன்றாக கத்தியை தீட்டுகிறது. கையில் சேஞ்சில்லாததால் நாளைக்கு வாங்கிக்கறேண்ணே.. என்றேன்.. சாவுகிராக்கி என மனதில் நினைத்திருப்பார். நமக்கென்ன!

வட்டியும் முதலும்






சில தூரத்து சொந்தங்களோடு அதிகம் பேசிபழகியிருக்கமாட்டோம். ஆனால் அவர்களை பற்றி நினைத்தாலே மிக நெருக்கமாக உணருவோம். அதுபோலதான் எனக்கு பிரபல எழுத்தாளர் ராஜூ முருகனும்.

நண்பர்களோடு விகடன் குறித்து பேசிக்கொண்டிருந்தால் நிச்சயம் வட்டியும் முதலும் பற்றி எல்லோருமே ஒரு முறையாவது பேசுவதை கவனித்திருக்கிறேன். என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல.. இந்த மனுஷனுக்குள்ளயும் ஒரு மந்திரக்காரன் இருந்திருக்கிறான். தமிழகத்தில் விகடன் வாசிக்கிற வாசகர்களின் அன்பை ஒட்டுமொத்தமாக வசூல் பண்ணியிருக்கிறார் இந்த லூசுப்பையன்.

''மச்சி விகடன்ல வட்டியும் முதலும் படிக்கிறீயா இன்னா மாரி எழுதறான்யா அந்தாளு.. பின்றான்.. மிஸ் பண்ணாம படிச்சிடுவேன்.. விகடன் வாங்கறதே அதுக்கொசரம்தான்'' என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். அந்த நேரத்தில், என்னமோ என்னுடைய கட்டுரையையே புகழ்ந்து பேசுவதாக நினைத்து புளங்காகிதம் அடைந்துவிடுவேன். சிலிர்த்துக்கும்! காரணமே கிடையாது.முதல் பாராவில் சொன்னதுதான் காரணமாக இருக்கும்.

''மச்சி தட் கை ஈஸ் மை பிரண்ட் டா.. நானும் அவரும் இப்டி இப்டி, அவரு எழுதற கட்டுரைக்கெல்லாம் நான்தான் ஐடியா குடுப்பேன். நம்ம கைவண்ணமும் அதுல இருக்குடா'' என பீலாவிடுவேன். கொஞ்சம் தூரத்து நண்பர்கள் என்றால் பேசும்போது இன்னும் கூட நாலைந்து பிட்டுகள் எக்ஸ்ட்ராவாக போடுவதும் உண்டு.

''டே நிஜமாவா.. அவர் ஃபோன் நம்பர் குடுடா'' என்று கேட்ட பெண் தோழிகள் கூட உண்டு. அன்பார்சுனேட்லி என்னிடம் அவருடைய எண் இருந்ததேயில்லை.

சொல்லப்போனால் அவரை நான் ஒரே ஒரு முறை தேவி திரையங்க வாயிலில் சந்தித்திருக்கிறேன். நீங்கதான் அதிஷாவா என அவரும் நீங்கதான் அவரா என நானும் ஆச்சர்யமாக பேசியதுமட்டும்தான் நினைவிருக்கிறது. என்னுடைய வலைப்பூவை வாசிப்பேன் என்றார். அதற்கு பிறகு செல்போனில் பேசியதும் கூட ஒருமுறைதான் என நினைக்கிறேன். அந்த பேச்சும்கூட சில நொடிகளைத்தாண்டியதில்லை.

மற்றபடி அவரோடு நெருங்கிப்பழகவோ பேசவோ எனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. அதற்கான தேவையும் இருந்ததேயில்லை. அவருதான் வாராவாரம் நம்மகிட்ட சொந்தக்கதை சோகக்கதைனு எல்லாத்தையும் வட்டியும் முதலுமா பேசித்தள்றாரே என்று நினைத்திருப்பேனாயிருக்கும். இருந்தும் அவரோடு பலநாள் பழகிய ஒருநண்பனைப்போல உணர்ந்திருக்கிறேன். இதற்குமுன் அப்படி ஒரு உணர்வு எழுத்தாளர் பாஸ்கர்சக்தியிடம் உருவாகியிருக்கிறது.

விகடனில் வட்டியும் முதலும் தொடர் ஆரம்பித்த புதிதில்.. அதை படித்து செம காண்டேனான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் அதற்கு முன்பு செய்துவந்த லூசுப்பையன் பகுதி என்னுடைய வாழ்நாள் ஃபேவரட். பிரமாதமான நகைச்சுவையுணர்வும், கொஞ்சமும் சலிக்காத எழுத்து நடையும், எழுதுவது நகைச்சுவையே என்றாலும் தன்னை அப்டேட் செய்துகொண்டு எது சொன்னாலும் லேட்டஸ்ட் விஷயங்களோடு சொல்கிற திறனும் ரொம்ப ஈர்த்தது.

அப்படிப்பட்ட ஒரு திறமைசாலியை ஏன்தான் இந்த விகடன் ஆசிரியர் சீரியஸா எழுதவச்சு கடுப்படுக்கிறாரோ என தோழரிடம் நொந்துபோய் பேசியிருக்கிறேன். அதற்கு காரணமிருந்தது. அந்தத்தொடரை படிக்க தொடங்கினாலே ஒரு சோகம்தான்.

வாராவாரம் ஏன்தான் இந்தாளு இப்படி கண்ணீர் பழத்தை பிழிந்து ரசம் வச்சி ஊத்து ஊத்துனு ஊத்துறாரு.. காமெடியா எதுனா எழுதலாம்ல.. ஜாலியாருக்கும் என்று வருத்தப்பட்டதும் உண்டு. ஆனால் வாரங்கள் செல்ல செல்ல இந்த வட்டியும் முதலும் அவருடைய ரசிக வாசகர்களைப்போலவே என்னையும் வெகுவாக கவர்ந்தது.

சில நேரங்களில் அழவைப்பார், சில நேரங்களில் சிந்திக்க வைப்பார். சமயங்களில் சிரிக்க வைப்பார். பகிர்ந்துகொள்வார். கவிதையே பிடிக்க எனக்கும் கூட இந்தத்தொடரில் அவர் பகிர்ந்துகொண்ட கவிதைகளை பிடித்தது.

அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் மற்ற மனிதர்களின் மீதான அன்பும் கரிசனமும் கருணையும் பொங்கி வழிவதைக்கண்டேன். நட்பு அன்பு உறவுகள் ஊர்பாசம் ஊடல் கூடல் காதல் என எல்லாமே நிறைந்திருந்தது. இவர் ஒரு எழுத்து விக்ரமனாக இருப்பாரோ என்றுகூட தோன்றும். இத்தொடரை படிக்கும் போது சமயங்களில் பின்னணியில் எஸ்ஏ ராஜ்குமாரின் கோரஸ் இசையும் அந்த லாலாலாவும்க்கூட கேட்கும்னா பாருங்களேன்!

அதற்காக ஒரேயடியாக இதை சூப்பர் என்றும் சொல்லிவிடமுடியாது. ஒரு சிலவாரங்களில் செம மொக்கையாகவும் இருக்க தவறியதில்லை. ச்சே இந்தவாரம் ஏமாத்திட்டார்பா இந்தாளு.. வரவர ரொம்ப போரடிக்கிறாரு.. ஒரே ரீப்பிட்டு அப்பீட்டு! என்று சலித்துக்கொள்வேன்.

இந்த வார விகடனில் அவருடைய தொடரில் என்னுடைய பெயர் ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக இருந்தது. வரலாற்றுல இடம்பிடிச்சிட்டேன் போலனு நினைத்துக்கொண்டேன்.

ஊருக்குள்ள பொய் சொல்லி ஏமாத்தின பயலுக எல்லாருமே மொத்தமா போன் போட்டு ''மச்சி நீ சொன்னப்ப கூட நம்பலடா.. இப்ப நம்புறேன்டா'' என்கிறார்கள்.

''ஆமான்டா மச்சி.. நான்கூட உங்கிட்ட சொல்லும்போது நம்பல.. ஆனா இப்ப நம்புறேன்டா'' என்று பதில்சொல்கிறேன். அது அவர்களுக்கு புரியாது. எனக்கு புரியும். உங்களுக்கும் புரியக்கூடும்.

18 January 2013

புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்




ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டால் போச்சு! கடந்த சில ஆண்டுகளாக நூலார்வம் அதிகமாகி ஓவராகி மேலோங்கி அந்த பத்துநாட்கள் மட்டும் உலகில் இருக்கிற எல்லா புத்தகங்களையும் வாசித்துவிட ஆர்வம் வந்துவிடும். அதனாலேயே பார்க்கிற எல்லா புத்தகங்களையும் வாங்கி வாங்கி குவித்துவிடுவது.

கண்காட்சி முடிந்து இரண்டு நாட்களுக்கு மேலும் கூட இந்த வாசிப்பார்வம் நீடிப்பதுண்டு. ஆனால் அது மூன்றாவது நாளிலிருந்து பழைய நிலைக்கே திரும்பிவிடும்.

நிறைய சினிமாவும் டிவியும் நண்பர்களோடு வெட்டி அரட்டையும் இணையமும் நேரத்தை விழுங்க... புஸ்தகமா..? அதெல்லாம் படிக்க எங்க சார் நேரம் என்கிற எண்ணம் வந்துவிடும். புத்தக விஷயத்தில் மட்டும்தான் நமக்கெல்லாம் நேரமின்மை வந்துவிடுகிறது.

அந்த பத்துநாள் ஆர்வகுறுகுறுப்பில் வாங்கி குவித்த புத்தகங்கள் யாராவது என்னை படிங்களேன் முட்டாப்பசங்களா என்று திட்டிக்கொண்டே மூலையில் காத்திருக்கும்.

மூன்றாண்டுகளாக இந்த புத்தக காட்சி ஆர்வத்தில் வாங்கி குவித்த புத்தகங்கள் மட்டுமே குறைந்தது 500 ஆவது தேறும். அதில் ஐந்து சதவீதமாவது படித்திருந்தாலும் கூட ஆச்சர்யம்தான்.

சென்ற ஆண்டு படித்த புத்தகங்கள் என்று என்னுடைய பாசத்திருகுரிய அன்புத்தம்பி வண்ணநிழலன் வேதாளம் ஒரு பட்டியலை போட்டிருந்தான். அடேங்கப்பா எவ்வளவு படிக்கிறான். ஆச்சர்யமாக இருந்தது. என்னிடமும் அந்த புத்தகங்கள் எல்லாமே இருக்கின்றன. ஆனால் அதில் ஒருசிலவற்றை தவிர எதையுமே படிக்கவில்லை. கொஞ்சம் பப்பிஷேமாகத்தான் இருந்தது.

இதோ இந்த ஆண்டு கண்காட்சியும் தொடங்கிவிட்டது. முதல்நாளே போய் ஒரு சுற்று பார்த்தும் வந்தாகிவிட்டது. அதே பழைய ஆர்வகுறுகுறுப்பு மீண்டும் தலைதூக்க... பார்க்கிற புத்தகங்களையெல்லாம் வாங்கி வைத்துக்கொள்ள நினைக்கும் கொலைவெறி கம்மிங் எகெய்ன்! ஆனால் இந்தமுறை ஐந்து புத்தகங்களுக்கு மேல் வாங்கிப்போவதில்லை. இதுவரை வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும்.... அட்லீஸ்ட் பாதியையாவது படித்து முடிக்கும் வரை புத்தகங்கள் எதையும் வாங்கப்போவதில்லை என முடிவெடுத்திருகிறேன்.

அதற்காக புத்தக கண்காட்சிக்கு போகாமல் இருக்கப்போவதில்லை. இந்த முறை வேடிக்கை மட்டுமே பார்க்க உத்தேசம்.

17 January 2013

கண்ணே லட்டு தின்ன ஆசையா?



எந்த டிவியை போட்டாலும் அலெக்ஸ்பாண்டியன்தான். புரட்சிவீரன் கார்த்திதான். டிவிக்குள்ளேயிருந்து தாவி குதித்து வெளியே வந்து நம் காலை பிடிச்சி கெஞ்சி சார் சார் தயவு செஞ்சு இந்த படத்தை பாருங்க சார் ப்ளீஸ்ஸ்ஸ் இல்லைனா சந்தானத்தோட தங்கச்சிங்க மூணுபேரும் தூக்குல தொங்கி உயிரை விட்டுடுவாங்க என கெஞ்சுவது போல ஒரு மாயவலை...! எல்லா தொலைகாட்சிகளிலும் பொங்கல் நிகழ்ச்சிகள் அனைத்தும் அலெக்ஸ் பாண்டியன் டிரைலர்களுக்கு மத்தியில்தான் ஒளிபரப்பானது.

டிவியை ஆஃப் பண்ணிட்டா மட்டும் சனியன் விட்டுடுமா. அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்து நொந்து போன நம் எதிரிகள் சிலர் கூட்டணி போட்டு நமக்கெதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள். ‘’மச்சான் மத்தவங்க சொல்றத கேக்காத படம் பட்டாசாருக்கு.. செம மாஸ்.. ரஜினிபடம் மாதிரி இருக்கும்.. மிஸ்பண்ணிடாத.. இட்ஸ் ஏ ஆக்சன் அட்வெஞ்சர் வித் க்ரைம் த்ரில்லர் , கார்த்தி செம சூப்பர் ஸ்டைல்டா’’ என்று ஏத்திவிட்டு மாட்டவைக்க வலைவிரிக்கிறார்கள். தெலுங்கு படமெல்லாம் விரும்பி பாக்குற உனக்கு இது நிச்சயம் புடிக்கும் பாஸ்.. அதுவும் சந்தானம் காமெடி இருக்கே..ஹோஹோ என சிரிப்பு காட்டி ஏமாற்ற பார்க்கிறார்கள்.

என்னை பார்த்தால் குச்சி மிட்டாய்க்கு ஆசைப்பட்டு புள்ளபுடிக்கறவனோடு போகிற குட்டிபாப்பா மாதிரியா இருக்கு... யாருகிட்ட....

போன வருஷமே முகமூடி,தாண்டவம்,சகுனி,மாற்றான்னு ஏகப்பட்ட கொடூரமான கொடுமைகளைப் பார்த்து நொந்து நூடுல்ஸாகி சுண்டு சூப்பாகி பேக்கு பஞ்சராகி இனிமே தமிழ்ப்படமே கிடையாது.. ஒன்லி கொங்குனி,போஜ்பூரிதான் என உறுதி பூண்டவன். நம்ம கிட்டயே சேட்டையா.. மாட்டுவமா... அதனால் அலெக்ஸ்பாண்டியன் படத்துக்கு விமர்சனமெல்லாம் கிடையாது. நிச்சயமாக கிடையாது.

அலெக்ஸ் பாண்டியனோடு வெளியாகியுள்ள சமகால படமான கண்ணாலட்டுதுன்ன ஆசையா படத்தினை பூஜை போட்ட நாளிலிருந்தே எப்போது ரிலீஸ் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன். எங்க ஏரியாக்காரரான (முகப்பேர்) பவர் ஸ்டார் முதன்முதலாக அடுத்தவன் காசில் பொங்கல் வைக்கும்.. அல்லது நடிக்கும் படமென்பதால் எதிர்பார்ப்பு ஓவராகிவிட்டது.
அந்தகாலத்தில் கே.பாக்யராஜ் இயக்கி ஹீரோவாக நடித்த இன்றுபோய்நாளைவா படத்தின் ரீமேக்தான் கண்ணா லட்டு தின்ன ஆவலா? என்கிற படமாக இப்போது வெளியாகியுள்ளது. ரொம்ப பழைய ஊசிப்போன தகவல் செய்திதான் என்றாலும் அதை சொல்லவேண்டிய சமூகக்
கடமை நமக்கிருப்பதாக எண்ணி...

பவர்ஸ்டார் திரையில் வந்தாலே ரசிகர்கள் ஆராவாரத்தில் காதுகிழிகிறது. யெஸ்.. கிழி.. கிழி.. கிழி.. படம் முழுக்க பவர் பவர் பவர்தான். அவர் மட்டும் இல்லையென்றால் இதுவும் இன்னொரு மொக்கை படமாக ஆகிவிட்டிருக்கும். சந்தானம் பேசிப்பேசி சிரிக்க வைத்தால் நகைச்சுவையாக வசனங்கள் பேசாமல்,நடிக்காமல் ஒன்றுமே பண்ணாமல் ஒருவரால் சிரிக்க வைக்க முடியுமா.

ஒவ்வொரு காட்சியிலும் பவர்ஸ்டாரை சந்தானம் மிகமிக கேவலமாக பேசுகிறார். பவர்ஸ்டாரோ பால்வடியும் முகத்தோடு புன்னகைக்கிறார். பீசு பீசா கிழிக்கும் போதும் ஏசுபோல சிரிப்ப பாரு என்று ஏதோ ஒரு படத்தில் ஒரு பாடலில் வருமே அதுதான் நினைவுக்கு வந்தது.

கண்ணா லட்டு உண்ண ஆசையா படத்தின் ஹீரோ சந்தானமோ இன்னொரு புதுமுகமோ அல்ல.. நிச்சயமாக பவர் ஸ்டார்தான். படம் ஏற்கனவே பட்டிதொட்டியெல்லாம் ஹிட். வசூலை வாரிக்குவிக்கிறது. ஆனால் இப்படி ஒரு மகத்தான சாதனைக்கு காரணமான பவர்ஸ்டாரோ விஜய்டிவியில் அந்த கள்ளங்கபடமில்லாத சிரிப்போடு அடக்கத்தோடு அமர்ந்திருப்பதை பார்க்கும்போது அசந்துபோய்விட்டது தமிழ்சமூகம்.

அந்த பொறுமையும் தன்னடக்கமும்தான் அவருடைய வெற்றிக்கு காரணமாக இருக்கமுடியும் என்றும் கூட தோன்றுகிறது. தன் மீது எறியப்படும் சாணியைக்கூட சானியா மிர்சாவாக நினைத்து மார்போடு அணைத்துக்கொண்டு வீரநடைபோடுகிற அந்த மாண்புதான் அவரை வெற்றிவீரனாக மாற்றியுள்ளதோ. அவருக்கு ஒருசல்யூட்டை வைத்துவிடுவோம். அவருடைய தன்னம்பிக்கைக்கு இன்னொரு சல்யூட்டை வைத்துவிடுவோம். அவருடைய விடாமுயற்சிக்கு இன்னொரு சல்யூட்டை வைத்துவிடுவோம். அவருடைய போராட்ட குணத்துக்கு இன்னொரு சல்யூட்டை வைத்துவிடுவோம். அவருடைய.... போதும்.

பலநாட்களுக்கு பிறகு சிரித்து மகிழ என்றெல்லாம் சொல்லமாட்டேன். கிரேஸி மோகன் நாடகம், எஸ்விசேகர் நாடகங்கள், லொள்ளுசபா இதையெல்லாம் பார்த்து ரசிக்கிற அனைவருக்கும் ஏற்றபடம். குடும்பத்தோடு காணலாம். நிச்சயமாக ஒவ்வொரு ஷாட்டிலும் சிரிப்பு வரும். விலா நோகும். தொழில்நுட்பரீதியில் எடிட்டிங் கேமரா திரைக்கதை என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் பவர்ஸ்டாரையும் சந்தானம் பஞ்ச்களையும் நம்பி படமெடுத்திருக்கிறார்கள். ராமநாராயணனுக்கு நல்ல நேரம் படம் பம்பர் ஹிட்டாகிவிட்டது. அதோடு கார்த்தி,விஷாலையெல்லாம் பந்தாடிவிட்டது. நல்லவேளை யார் செஞ்ச புண்ணியமோ பொங்கலுக்கு கமல்சாரின் விசுவரூபம் ரிலீஸ் ஆகவில்லை. டிடிஎச்சுக்கு நன்றி ஏசப்பா!

பாக்யராஜ் நடித்த இன்றுபோய்நாளைவா படத்தில் இருந்த உயிர்ப்பு இந்தப்படத்தில் நிச்சயமாக இல்லை. ஆனால் ‘கண்ணா லட்டு சாப்பிட ஆசையா’வில் காமெடியின் அளவு ஒரிஜினலை விட அதிகம்தான்.

என்றாலும் பாக்யராஜ் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக யதார்த்தமாக தனக்கேயுண்டான தனித்தன்மையுடன் இருக்கும். ஏக் காவ் மேன் ஏக் கிசான் காட்சியில் லட்டு ஊட்டிவிடும் பாட்டி முதற்கொண்டு சின்ன சின்ன பாத்திரங்களும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தப்படத்தில் எல்லோருமே காமெடி செய்வதற்காகவே பிறந்தவர்களாக இருப்பது குறைதான். படத்தின் இன்னொரு குறை பாடல்கள் மற்றும் இசை. மற்றபடி படம் மிகவும் அருமை. வாயிருக்கிற எல்லோருமே ஒரு முறையாவது சுவைக்க வேண்டிய படம்.

16 January 2013

என் பெயர் ரிசானா...



இந்த மதம் அந்த மதம் என்றில்லை எல்லா மதமும் தனக்கேயுரிய சர்வாதிகார அரக்க குணங்களுடன்தான் இருக்கின்றன. நமக்குள்ளிருந்த கடவுளை கொன்றுவிட்டு மதத்தை கட்டிக்கொண்டு மாறடிப்பவர்களாகத்தான் மாறிவிட்டோம்.

மற்ற மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் போதெல்லாம் கூடி கும்மியடிப்பதும், தன்னுடைய மதத்தைப்பற்றி யாராவது ஏதாவது சொல்லிவிட்டால்.. கிடந்து தையா தக்கா என்று குதிப்பதும்தான் மதவாதிகளின் வாடிக்கையான செயலாக இருக்கிறது. அதற்கு இந்து இஸ்லாமிய கிறித்தவ எக்ஸட்ரா எக்ஸட்ரா பேதமேயில்லை.

சில நாட்களுக்கு முன் ரிஸானா என்கிற பெண்ணை சவூதி அரேபியா அரசாங்கம் மரணதண்டனை என்கிற பெயரில் மிக கொடூரமான முறையில் தலையை வெட்டி கொன்றது. இதை கண்டித்து இணையமெங்கும் ஏகப்பட்ட எதிர்ப்பலைகளை காணமுடிந்தது. இஸ்லாமிய சட்டங்கள் மீது கடும் விமர்சனங்களை பலரும் முன்வைத்தனர். உடனே பொத்துக்கொண்டு வந்துவிட்டது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு... சவூதியில் தரப்பட்ட தண்டனை சட்டப்பூர்வமானது.. நியாயமானது.. சரியானது என கையில் சொம்போடு நியாயம் சொல்ல கிளம்பிவிட்டார்கள்.

முதலில் ரிசானாவின் கதையை பார்த்துவிடுவோம்.

2005ஆம் ஆண்டு 17 வயதான ஏழைப்பெண்ணான ரிசானா இலங்கையிலிருந்து பஞ்சம் பிழைக்க சவூதி அரேபியாவுக்கு வருகிறார். வந்த இடத்தில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கிறார். வேலைக்கு சேர்ந்த சிலநாட்களில் பணியாற்றும் வீட்டிலிருந்த நான்கு மாத குழந்தைக்கு உணவுதரும் போது அக்குழந்தை மூச்சுதிணறி இறந்துவிடுகிறது. அதற்கு ரிசானாதான் பொறுப்பு.. அவள்தான் அக்குழந்தையை ஈவிரக்கமின்றி கழுத்தை நெறித்து கொன்றவர் என அபாண்டமாக குற்றம் சுமத்துகின்றனர் குழந்தையின் பெற்றோர்கள்.

ஏழை சொல் எதிலேயோ ஏறாது என்பதற்கிணங்க இந்த பெண்ணின் குரலுக்கு அரசாங்கம் செவிகொடுக்கவேயில்லை. அரசுதரப்பு உறுதியாக ரிசானாதான் கொலைசெய்தாள் என்று வாதாடியது. நீதிமன்றத்தில் மட்டும் என்ன வாழுதாம்.. ஏழு ஆண்டுகள் விசாரணை நடத்தி அவர்களும் கொலையை உறுதி செய்து அப்பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.

ஒரு குழந்தையை கொன்றதாக கூறி இன்னொரு குழந்தைக்கு மரணதண்டனை என்பதை விடவும் கேவலமான சட்டம் உலகில் எங்குமே இருக்க முடியாது.

இவ்விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்து, இலங்கை அரசு ரிசானாவை விடுவிக்க கோரி மன்றாடியது. மனித உரிமை கமிஷனும் கெஞ்சிக்கேட்டது. ம்ம் இஸ்லாமிய சட்டம்னா சட்டம்தான்.. கொல்றதுன்னா கொல்றதுதான் என விடாப்பிடியாக மறுத்துவிட்டார் சவூதி மன்னர். ரிசானாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாள் ஒன்றும் பண்ணமுடியாது என மறுத்துவிட்டது சவூதி அரசு.

ஐநாவின் மனித உரிமை கழகத்தை சேர்ந்த ரூபர்ட் கோல்விலே இவ்விஷயம் குறித்து வேறொரு பிரச்சனையை முன்வைக்கிறார். அது மிகமுக்கியமானதும் கூட.
'' அந்த பெண்ணை அடித்தும் துன்புறத்தியும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கியுள்ளனர். அதோடு நீதி விசாரணையின் போது அவளுக்கு வக்கீல்களின் உதவி கொடுக்கப்படவில்லை. அதோடு மொழிதெரியாத அந்தபெண்ணுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரையும் ஏற்பாடு செய்துதரவில்லை. இந்த விசாரணை எப்படி உண்மையானதாக இருக்க முடியும்'' என்கிறார்.

உலக அளவில் மரணதண்டனை அமலில் உள்ள நாடுகளில் அதிகம் பேரை ஆண்டுதோறும் கொல்லுவோர் பட்டியலில் சவூதிக்கு நான்காமிடம்! (முதலிடம் நமது அண்டைநாடான சீனாவுக்கு!) 2011ஆம் ஆண்டில் மட்டும் 85பேரை கொன்று குவித்திருக்கிறது சவூதி. இதில் பெரும்பாலனவர்கள் சாதாரண வேலைகள் பார்க்க சென்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்த ஏழைகள்.

சவூதி அரேபியாவின் சட்டங்கள் இதுபோல பஞ்சம் பிழைக்க வருபவர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாக இருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தன் அறிக்கையில் கூறுகிறது. நீதிமன்ற விசாரணையின் போது அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களின் உதவியை வழங்கியே ஆகவேண்டும் என்றெல்லாம் சட்டம் கிடையாது. உங்களுக்கு அந்த ஊர்மொழி தெரியாவிட்டால் கொடுக்கிற தண்டனையை வாங்கிக்கொண்டு வாயைமூடிக்கொண்டு தலையை கொய்தாலும் அமைதியாக குனிந்து கொள்ள வேண்டியதுதான். ஒருவேளை உங்கள் நாட்டு தூதரகம் ஏற்பாடு செய்தால் உதவலாம். ரிசானா விஷயத்தில் இலங்கையின் தூதரக கட்டுப்பாடுகளால் அந்த உதவியும் கூட கிடைக்கவில்லை.

இதுபோன்ற கொடூரமான சட்டங்களை கொண்ட நாடுகளை சரிசெய்ய ஒரே வழிதான். இந்தியா இலங்கை மலேசியா போன்ற நாடுகள் சவூதிக்கு தன் மக்களை பணிக்கு செல்வதற்கு தடைபோடுவதுதான். இதை 2011ஆம் ஆண்டிலேயே இந்தோனேஷியா செய்துள்ளது.

அந்நாட்டை சேர்ந்த 54 வயது ருயாத்தி என்கிற பெண் சக பணியாளரை கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்படு மரண தண்டனை பெற்றார். அவருடைய தலையையும் துண்டித்து நீதியை நிலைநாட்டியது சவூதி அரசு. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது இந்தோனேஷிய அரசு.

உடனடியாக அந்நாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்தியது இந்தோனேஷியா. அதோடு அங்கே பணிபுரிந்தவர்களையும் திருப்பி அழைத்துக்கொண்டது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற நாடுகளுக்கு இதைவிடவும் சரியான எதிர்வினையை செய்யவே முடியாது. 'இப்படி செய்தாலாவது சவூதி தன் நாட்டுக்கு வந்து வேலைபார்ப்பவர்களுக்காக கொஞ்சமாவது தன் சட்டங்களை மாற்றிக்கொள்ளாதா என்பதே எங்கள் எதிர்பார்ப்பு'' என இந்தோனேஷிய வெளியுறவுதுறை மந்திரி பேட்டிகொடுத்தார். ம்ஹூம் எந்த மாற்றமுமில்லை.

2008ஆம் ஆண்டு HUMAN RIGHTS WATCH ரிப்போர்ட் ஒன்றை சமர்பித்தது. அதில் சவூதி மாதிரியான அரபு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் என்ன மாதிரியான பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என விலாவாரியாக விளக்கியிருந்தனர். இது தொடர்ந்து இன்று வரை நடந்துகொண்டிருக்க கூடிய சமாச்சாரம்தான். இதைப்பற்றியெல்லாம் எந்த இஸ்லாமிய அடிப்படைவாதியும் மூச்சுவிட்டதாகக்கூட தெரியவில்லை. இந்த அரபுநாடுகளில் இஸ்லாமிய பெண்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது. இஸ்லாமிய சட்டங்கள் தாலிபான்களின் அடக்குமுறைகளுக்கு கொஞ்சம் சளைக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தண்டனைகளும் அதே கொடூரங்களோடுதான் உள்ளன.

ரிசானாவை கொன்றதில் இருக்கிற பிழைகளை சுட்டிக்காட்டினால் மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது இந்த மதநல்லிணக்க நாயகர்களுக்கு.. இதுபோன்ற காரியங்களை அல்லாஹ்வின் பெயரால் எப்படி இந்த பாதகர்களால் செய்யமுடிகிறது என்று கேட்டால் போச்சு.. ரவுண்டு கட்டி உங்க மதத்துக்கும் எங்க மதத்துக்கும் சோடி போட்டு பாப்பமா சோடி.. விவாதத்துக்கு வரீயா.. என ஒத்தைக்கு ஒத்தை வம்பிழுக்க வந்துவிடுகிறார்கள்.

ரிசானாவின் படுகொலையை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகளோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம். தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. அதை தடுக்க முடியாமல் போலீஸார் திண்டாடுகிறார்கள். வெளிமாநிலங்களிலிருந்து குறிப்பாக பீகார் மாதிரியான பின்தங்கிய மாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் பிழைப்பு நடத்துகிற அப்பாவிகளை கொன்று பயத்தின் வழியே நீதி நிலைநாட்டப்படுகிறது.

இதையேதான் அரபு நாடுகளும் மேற்கொள்கின்றன. என்ன இங்கே சட்டம் அதை ஒப்புக்கொள்ளாது. ஆனால் அங்கே சட்டமே துணையாக நிற்கும். இதுமாதிரி தண்டனைகளால் மக்களை நிரந்தர அச்சத்தில் வைப்பதே இதன் பின்னிருக்கும் சாரம்சம். இக்கொடுமைக்கு தேச வேறுபாடின்றி பலிகொடுக்கப்படுவது இதுபோல பஞ்சம்பிழைக்க வந்த அகதிகளே. நம்முடைய இந்து தேசத்திலும் கூட மக்களை அச்சத்தில் வாழவைக்க சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் அவ்வப்போது கட்டவிழ்க்கப்படுவதும் இதன் நீட்சியே.

இப்படிப்பட்ட தேசத்தில்தான் நாம் மரணதண்டனை வேண்டும் என உரக்க குரல் கொடுக்கிறோம். தூக்கிலிடுவதை வரவேற்கிறோம். அஹிம்சையை உலகுக்கே போதித்த நாடு என்று ஒருபக்கம் பீத்திக்கொண்டு இன்னொரு பக்கம் மனிதாபிமானமற்ற மரணதண்டனைக்கு வக்காலத்து வாங்குகிறோம். அதை விடுங்கள்.

இப்போதைக்கு நம்மால் முடிகிற காரியம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் உறவினர்கள் குறிப்பாக பெண்கள் யாரேனும் சவூதி மாதிரியான அரபு நாடுகளில் வேலைபார்த்துக்கொண்டிருந்தால் அவர்களை திருப்பி அழையுங்கள். பிச்சை எடுத்தாவது இங்கே பிழைத்துக்கொள்ளலாம். உயிராவது மிஞ்சும்.

14 January 2013

பொங்கலாம் பொங்கல்!





சில நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து திருச்சிக்கு பகல் நேரத்தில் பேருந்தில் பயணிக்க வேண்டியிருந்தது. NH 45 ல் ரோடு பளிங்கு கல்லாட்டம் போட்டிருக்கிறார்கள். சாலையில் வாகனங்கள் வழுக்கிக்கொண்டு போகின்றன. ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை பயணிக்கிற சாலைதான் என்றாலும் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.

300 கி.மீ நீளும் இந்த சாலையில் இரண்டு விஷயங்கள் காளானைப்போல முளைத்திருக்கின்றன. ஒன்று கும்பகோணம் டிகிரி காபி. நூறு மீட்டருக்கு ஒரு கடை திறந்துவைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த கடைகளும் கூட இங்கே கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும் என்று எழுதி வைத்து தொழில் பண்ண வேண்டிய கொடுமையான சூழலில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

ஒரு கடையில் காபி குடித்தேன். எனக்கு பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. அது நிஜமாகவே கும்பகோணம் டிகிரி காபிதானா என்பதுவும்கூட உறுதியாக தெரியிவில்லை. இதுவரை ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபியை முகர்ந்து கூட பார்த்திடாதவன் நான்.

இந்த கும்பகோண டிகிரி காபி பிராண்டிங் எப்போது எங்கிருந்து இந்த சாலைக்குள் நுழைந்திருக்கும்.. முதன்முதலாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம் டிகிரி காபி கடைபோட்டவர் நிச்சயம் நன்றாக கல்லா கட்டியிருக்க வேணும்.

ஒருவிஷயம் டிகிரி காபி என்றால் இன்னொரு பக்கம் 300 கி.மீ தூரத்துக்கு இரண்டு பக்கமும் பார்த்த ரியல் எஸ்டேட் காரர்களின் ப்ளாட்டுகள். சுற்றுசுவருக்கு மஞ்சள் நிறத்தில் பெயின்ட் அடித்து கலர் கலராய் கொடிநட்டு வெட்டி வைத்த கேக்குகளை போல நிலத்தை கூறுபோட்டு விற்கிறார்கள்.

தாம்பரம் தாண்டியதும் தொடங்குகிற இந்த ப்ளாட்டுகள், திருச்சி வரைக்குமே நீள்கிறது. இங்கெல்லாம் யார் நிலம் வாங்குவார்கள். இங்கே வாங்கினால் என்ன லாபம் கிடைக்கும்? இங்கே யாராவது வீடு கட்டி குடியேறுவார்களா? குடியேறினால் எங்கே வேலைக்கு போவார்கள்? இன்னும் சில ஆண்டுகளில் விலை இரண்டு மடங்காகிவிடும் என்றெல்லாம் போஸ்டர்கள் பார்த்த போது அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது.

சொந்தவீட்டு கனவு எனக்கும் கூட உண்டு. வாடகை வீட்டில் வசிக்கிற ஒவ்வொருவனுக்கும் நிச்சயம் இருக்கிற ஒன்றுதான். ஆனால் சென்னையில் வசிக்கிற நான் ஏன் எங்கோ திண்டிவனம் மிக மிக அருகில் இருக்கிற மிகச்சிறிய கிராமத்தில் நிலம் வாங்கி போடவேண்டும். அங்கே நான் வீடு கட்டப்போவதுமில்லை. குடியேறப்போவதுமில்லை. பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என்கிறார்கள். யாரிடமிருந்து பிடுங்கி யாருக்கு விற்கப்போகிறோம்.

எந்த பொருளுக்கும் தேவை இருந்தால் மட்டுமே உற்பத்தி அதிகமாக இருக்கும். நம்முடைய சமூகத்திலும் சொந்தமாக ஒரு நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் சமகாத்தில் மிகமிக அதிகமாகிவிட்டதா? அல்லது இது போலியாக நம் மனங்களில் திணக்கப்பட்டுள்ளதா? ஏன் இப்படி கொலைவெறியோடு தமிழ்நாடு முழுக்கவே கூறுபோட்டு கூவி கூவி நிலம் விற்கிறார்கள். அதை ஏன் நாமும் அதே வெறியோடு போய் வாங்கிக்குவிக்கிறோம்.

காலையில் அலுவலகம் போகிற நேரத்தில் டிவி நடிகர்கள் தமிழ்நாட்டையே விலைபேசுகிறார்கள். இன்னைக்கே நிலம் வாங்காட்டி இன்னும் பத்து வருஷத்துல உங்க குடும்பமே விஷம் குடிச்சி தற்கொலை பண்ணிக்க வேண்டியதுதான் என்கிற எண்ணம் மிக பிரமாதமாக நம் மனங்களில் விதைக்கபடுகிறதோ?

NH45 ல் 300 கிலோமீட்டருக்கு விற்கப்படும் இந்த ப்ளாட்டுகள் முன்பு விவசாய நிலங்களாக இருந்ததற்கான எல்லா அடையாளங்களும் இன்னமும் மிச்சமிருந்தன. விவசாயம் நடந்துகொண்டிருந்த பல இடங்களும் பிளாட்டு போடுவதற்காகவே தரிசாக விடப்பட்டிருந்தன. எவ்வளவு நிலங்கள்.. எவ்வளவு விவசாயம்.. எவ்வளவு பசுமை.. எல்லாமே ஒரே சாயலில் கூறுபோடப்பட்டு சுற்றுசுவரோடு புதிய எஜமானர்களுக்காக காத்திருக்கின்றன.

இங்கே விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த குடும்பங்கள் என்னவாகியிருக்கும். அவர்களெல்லாம் நகரத்துக்கு பெயர்ந்திருப்பார்களா? நகரத்தில் இருப்பவன் ஏன் இந்த கிராமங்களில் நிலம் வாங்குகிறான். தனக்கேயுண்டான அடையாளங்களோடும் மனிதர்களோடு அமைதியாய் இருக்கிற கிராமங்களுக்குள் இந்த நகரத்து மனிதர்கள் ஏன் நுழைகிறார்கள். இன்னும் நிறைய நிறைய கேள்விகள்...

இதோ இன்று பொங்கல் நாளாம். விவசாயத்தை போற்றணும் விவசாயியை காக்கணும் மண்ணை நேசிப்போம் பயிர்களை பாதுகாப்போம் என யாரோ ஒரு நடிகர் டிவியில் வந்து பேசிக்கொண்டிருக்கிறார். நாமும் ஆமா விவசாயத்தை காக்கணும் என அதற்கு ஊங் கொட்டிவிட்டு.. எங்கோ செங்கல்பட்டு தாண்டி சின்ன கிராமத்தில் மலிவாக ஸ்கொயர்ஃபீட் 100 விலையில் பிளாட்டு கிடைக்கிறதாம்..வாங்கிப்போடுவோம்... விவசாயம் செழிக்கும்.

மற்றபடி சம்பிரதாயத்துக்காகவாச்சும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வோம் ஹேப்பி பொங்கல்.

05 January 2013

தாங்க்யூ ஜாக்கி!




சச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார்.

இந்தத் தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும்? அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட் அறிவிப்பும், என்னைப்போன்ற கோடிக்கணக்கான ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான்.

குட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர்.ஜாக்கியை குழந்தைகள்தான் கொண்டாடினர். அவர் குழந்தைகளுக்காகவே நடித்தார். அவருடைய சண்டைகளில் மூர்க்கம் இருக்கும்.. ஆனால் வன்முறை இருக்காது! அந்த மேஜிக் ஜாக்கிக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

அவருடைய படங்களை பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது, குளுக்கோஸ் டி குடித்த குதூகலத்தை கொடுத்தவர். ஓடும்பஸ்ஸை, தாவிக்குதித்துவிட வேண்டும்போல, நரம்பெல்லாம் உற்சாகம் உறைந்திருக்கும்.

ஜாக்கியின், சமீபத்திய படங்கள் எதுவும் என்னை பெரிதாக கவரவில்லை. அதில் அந்த பழைய ஜோரும் காமெடியும் குதூகலமும் உற்சாகமும் சுத்தமாக இல்லை.கடைசியாக, வெளியான ‘போலீஸ் ஸ்டோரி’ கூட நிறைய சோகமும் கோபமுமாகத்தான் இருந்தது. ஜாக்கியின் படங்களுக்கேயுரிய காமெடியும், ரத்தமில்லாத பரபர சண்டைகாட்சிகளும் மிஸ்ஸிங். கடைசியாக, ‘ஷாங்காய் நூன்’ தான் ஜாக்கிபாணியில் வெளியான, ரசிக்க வைத்த, படம். அது,வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

அவருடைய, கடைசி ஆக்சன் படமான CZ12 (சைனீஸ் ஜோடியாக்) சென்றவாரம் வெளியானது. மிக சிறப்பாக அர்பணிப்போடு எடுக்கப்பட்ட அனைவரும் பார்க்க வேண்டிய படம். படம் முழுக்க காமெடி கலாட்டாதான்.

காமெடி படம் தானே, என ஏனோதானோவென்று எடுக்காமல், அதற்குள், ஒரு பிரச்சனையையும் நுழைத்திருக்கிறார் ஜாக்கி! அதற்காக, கருத்து சொல்கிறேன் பேர்வழி என போர் அடிக்காமல், ஆக்சனும் காமெடியும் கலந்து, பரபரப்பான ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார்.

படத்தின் இயக்குனரும் ஜாக்கிதான். சண்டைக்காட்சிகளும் அவருடையதே. ஒவ்வொரு ஆக்சன் காட்சியிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒரு ஷாட், கூட, படத்தில் வீண் கிடையாது. அவ்வளவு, கச்சிதமான திரைக்கதையமைப்பு. இதுவரை, பார்த்திடாத, லொக்கேஷன்கள். ஸ்டன்ட் காட்சிகள், ஒவ்வொன்றும், அம்மாஞ்சிகளைக் கூட, விசிலடித்து கைத்தட்ட வைக்க கூடியவையாகவும் இருந்தன. மொத்தத்தில், இது, ஜாக்கி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் சூப்பர் ட்ரீட்.

இத்திரைப்படத்திற்காக, இரண்டு, கின்னஸ் சாதனைகள, செய்திருக்கிறார் ஜாக்கி. அதில், ஒன்று ஒரே படத்தில், அதிக ஸ்டன்ட்களில் நடித்தவர் (Most Stunts Performed by a Living Actor), இன்னொன்று ஒரே படத்தில் அதிக வேலைகளை செய்தவர் (Most Credits in One Movie)! இதெல்லாம், நிறையபேர் செய்யக்கூடியதுதானே என்று தோன்றலாம்.

ஜாக்கிசானுக்கு வயது 58!

இந்த வயதில், நாமெல்லாம், எழுந்து நடமாடவே யோசித்தபடி இருப்போமோ என்னவோ? இந்த மனிதர் ஒரு ஸ்டன்ட் நடிகர், என்னவெல்லாம் செய்ய அஞ்சுவார்களோ, அத்தனையையும் தன் கடைசி படத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். அதோடு, படத்தில் இசை,எடிட்டிங்,கேமரா என ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துமுடித்திருக்கிறார்.

இனிமேல், இவளைப் பார்க்கவே முடியாது, என்கிற நிலையில், காதலியை விட்டுப் பிரிகிற கடைசி தருணம்.. . அப்படி ஒரு தருணத்தில் நாம் என்னவெல்லாம் செய்வோம்?

எப்படியெல்லாம் காதலியை முத்தமிடுவோம்? அணைக்கும்போது எவ்வளவு மூர்க்கமாக இருக்கும்? எப்படியெல்லாம் கதறி அழுவோம்? அந்த நொடிகள் தொடராதா என ஏங்குவோமில்லையா? அந்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே, ஜாக்கியின், இந்த கடைசி படத்திற்கான உழைப்பினை பார்க்கிறேன். அதை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்களால் உணர இயலும். ஒவ்வொரு ஸ்டன்டிலும் பார்க்க முடியும். கிளைமாக்ஸ் சண்டைக்காக ஒரு எரிமலையின் உச்சியிலிருந்து உருளுகிறார்.. முகமெல்லாம் ரத்தம்.. மேக்கிங்கில் காட்டுகிறார்கள், சிரித்துக்கொண்டே வருகிறார் இந்த 58வயது பையன். யோவ் என்னய்யா.. உனக்கெல்லாம் வலிக்காதா.. என்று நமக்கு கோபம் வருகிறது.

கலையை நேசிக்கிற, தன் ரசிகர்களை மதிக்கிற, ஒருவனால் மட்டும்தான், இப்படியெல்லாம் அர்ப்பணிப்போடு இருக்க முடியும். மொழி,நாடு என்கிற எல்லைகள் தாண்டி, ஜாக்கியை, இத்தனை கோடிபேர் காதலிப்பதற்கான காரணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.

சல்யூட் ஜாக்கி!

01 January 2013

கோலிவுட் 2012





கோடியாய் கோடியாய்,சம்பளம் கொடுத்து, சூப்பர் டூப்பர்களைப் போட்டு படமெடுக்கலாம். ஏகப்பட்ட மெகாஹிட் படங்கள், கொடுத்த இயக்குனர் இயக்கலாம். உலகில் எங்குமில்லாத தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்து உபயோகிக்கலாம். அயல்நாடுகளின் எந்தப்பகுதியிலும் போய் படம்பிடித்துவரலாம்.

ஆனால், கோலிவுட்டில், ஒரு ஸ்மால் ஹிட்டு கொடுப்பது அத்தனை சுலபமல்ல.

தமிழ்நாட்டின், கடைக்கோடி ரசிகனுக்கும், ஞானம் வந்துவிட்டது. இனி அவனை அவ்வளவு சுலபமாக ஏமாற்றமுடியாது. (நிறையவே கஷ்டப்படவேண்டும்!)

போலியான, ஜாலாக்கு ஜோலக்குகளை, காட்டி ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப்போச்சு! அரைத்த மாவை அரைத்தால் அடிதான் விழும்.

யதார்த்தபடமோ, மசாலாபடமோ, காமெடி படமோ,இல்லை த்ரில்லரோ,நிறைய சுவாரஸ்யமும், திரைக்கதையில், கொஞ்சமாவது புத்திசாலித்தனமும் வேண்டும்.

புதுமையும், சுவாரஸ்யமும், இல்லையென்றால், அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகர்களின் படமும், வந்த வேகத்தில் குப்பைத்தொட்டிக்கு கடாசப்படும் என்பதை தமிழ்ரசிகர்கள் கோலிவுட்டுக்கு உணர்த்திய ஆண்டு 2012!

சகுனி,பில்லா,மாற்றான்,முகமூடி,அரவாண், ,தனுஷின் 3, பேரரசு WIN திருத்தணி, மாதிரியான மெகாபட்ஜெட் கொடுமைகளை, வெளிவந்த இரண்டாம் நாளே ஓட ஓட அடித்து விரட்டினர். நீர்ப்பறவை, மெரீனா, கிருஷ்ணவேணி பஞ்சாலை, தோனி, மாதிரியான, அறிவுரைகளின் ஓவர்டோஸ்களுக்கும், அதோகதி தான்.

ரசிகனை மதிப்பவனுக்கு வெற்றி நிச்சயம்.

உன்னிடம் கடின உழைப்பும் புதுமையும் இருக்கிறதா, இந்தப்பிடி வெற்றியை..! என அள்ளித்தர தயாராயிருக்கிறான் ரசிகன். கோலிவுட் பிதாமகன்களுக்கு 2012 கற்றுக்கொடுத்திருப்பது அதைதான். இத்தனை ஆண்டுகளும் வெட்டி ஹீரோயிசம், அரைகுறை ஆடைகளோடு, உலாவரும், மக்கு ஹீரோயின்கள், ஏய் ஏய்!, என்று, கத்திக்கொண்டே, அரிவாள் சுழற்றிய, டாடாசுமோ வில்லன்களையும் காட்டி, ஏமாற்றிய பழைய பருப்புகள் இனி இங்கே வேகாது!

பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,அட்டக்கத்தி, மாதிரியான, வித்தியாச படங்கள் நம்பிக்கை தந்தன. மசாலா படங்களுக்கான, மார்க்கெட் சரிந்த போது, துப்பாக்கி வந்து காப்பாற்றியது. தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஒரு சின்ன ஈயை வைத்துக்கொண்டு, கோலிவுட்டின் அசகாயசூரர்களையே தோற்கடித்தார்.

ஏகப்பட்ட, புத்தம் புது இயக்குனர்களின், புதிய சிந்தனைகள் வியக்கவைத்தன. கிடைத்த பட்ஜெட்டில், கிடைத்த தொழில்நுட்ப கலைஞர்களை, வைத்துக்கொண்டு மெகாஹிட் படங்களை கொடுத்தனர்.

டிஜிட்டல் சினிமாவினை, மிகச்சிறப்பாக, பயன்படுத்திக்கொண்டது, நம்மூர் இளைஞர்கள்தான்.

ஹரிஷங்கர்,பாலாஜி மோகன், கமலக்கண்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன் , பா.ரஞ்சித் , மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ் , பாலாஜி தரணீதரன் என கைநிறைய நம்பிக்கைகள்.

இந்த ஆண்டின், முதல் பாதி முழுக்க, வெறும் தோல்விகளை, மட்டுமே கொடுத்து படுத்த படுக்கையாய் கிடந்தது கோலிவுட். இந்த இளம் இயக்குனர்களின் வருகையும் அவர்களுடைய புதிய சிந்தனைகளும் முயற்சிகளும் ''தமிழ்சினிமா தப்பிச்சிக்கும் பாஸ்'' என்கிற எண்ணத்தை கொடுத்தது!

இதுமாதிரியான, நல்ல மாற்றங்கள், நடந்தாலும் இன்னொரு பக்கம், நம்முடைய ஹீரோ அளவுக்கதிகமாக குடிக்க ஆரம்பித்திருக்கிறான்.

எப்போதும் டாஸ்மாக்கிலேயே பழியாய் கிடக்கிறான். அங்கேதான் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கிறான். தோல்வியோ மகிழ்ச்சியோ அங்கேதான் பாட்டுபாடுகிறான். சொல்லப்போனால் வில்லன்கள் கூட குடிப்பதில்லை.

குடி என்பது, ஹீரோயிசத்தின் அடையாளமாகிவிட்டது! குவாட்டர் என்பது சந்தானம் மாதிரியான, காமெடியன்களால் நம்மிடையே சகஜமாகிறது. சமூகத்தை பிரதிபலிக்கிறான், என்று சொல்லிகடந்து போகமுடியவில்லை. அடுத்த ஆண்டாவது, இது மாறவேண்டும், என பாடிகாட் முனீஸ்வரனை வேண்டிக்கொள்வோம்.

முன்பைவிட, படம் வெளியான, சிலமணிநேரங்களில், திருட்டு டிவிடி தயாராகி மின்னல் வேகத்தில் ரசிகனை சென்றடைந்தது. இணையதளங்களில், 5.1 தரத்தில் ஆன்லைனிலேயே, படம் பார்க்கும் வசதிகள் கிடைத்தன. யூடியுபில், பல படங்கள் முழுமையாக பார்க்கக் கிடைத்தன. தொலைக்காட்சிகளில், தினந்தோறும் ஏகப்பட்ட திரைப்படங்கள் போடப்படுகின்றன. தியேட்டரில், டிக்கட் விலை, ராக்கெட் வேகத்தில் ஏறியது. இருந்தும், தமிழ்ரசிகன், தொடர்ந்து, தியேட்டருக்கு வந்து படம் பார்க்கவே செய்கிறான். முதல் மூன்றுநாளிலேயே, சில படங்கள் பல கோடிகளை குவித்தன. அடுத்த ஆண்டு தமிழ்சினிமாவில் டிடிஎச் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார் உலகநாயகர். வழக்கம் போல,இப்போது அதை எதிர்க்கிற சினிமாக்காரர்கள், அடுத்த ஆண்டு முடிவில், அதை ஏற்றுக்கொண்டு, அதைப் பின்பற்றுவார்கள் என்றே தோன்றுகிறது!

இந்த ஆண்டுக்கான, டாப்டென் படங்களை, பட்டியலிட நினைத்து, ஒரு பட்டியலை தயார் செய்திருக்கிறேன்.

இந்த பத்து படங்களும், வசூல் ரீதியில் மட்டுமே, டாப் டக்கர் கிடையாது. தொழில்நுட்பம் சார்ந்தும், புதிய சிந்தனைகளின் அடிப்படையிலும் இன்னும் சில காரணிகளாலும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. நண்பன், கும்கி, வேட்டை, கலகலப்பு மாதிரியான படங்கள் இதில் இல்லாமல் போயிருக்கலாம், அதனாலேயே, அந்தப்படங்கள், தரத்தில் குறைந்தவை என சொல்லிவிடமுடியாது.

அதனால்.... போதும்பா.. மூச்சு வாங்குது. (எந்த படத்துக்கும் ரேங்க் கிடையாது.. படம் வெளியான மாதங்களின் வரிசையில்தான் பட்டியல்)

OKOK ஒருகல்ஒருகண்ணாடி

அதே கதை, அதே சந்தானம், அதே காமெடி.. ஆனாலும், இயக்குனர் ராஜேஷுக்கு, தமிழ் ரசிகர்களை எங்கே அடித்தால், விழுந்து விழுந்து சிரிப்பார்கள், என்கிற ரகசியம் தெரிந்துவிட்டது . அதன் பலன் ஓகேஓகேவிலும்.. படத்தை பார்த்து தமிழ்நாடே விழுந்து விழுந்து சிரித்தது. பேரன் உதயநிதி ஸ்டாலின் நடித்த, படமென்பதால், தாத்தா கலைஞர் கூட, ஆட்சி கைவிட்டுப்போன கவலையை மறந்து, ஒரு இரண்டரை மணிநேரம் விலா நோக சிரித்திருப்பார்.



வழக்குஎண் 18/9valaku en 189

ஏகப்பட்ட விருதுகளை, ஏற்கனவே குவிக்க ஆரம்பித்துவிட்ட, திரைப்படம். எக்கச்சக்க, சமூக பிரச்சனைகளை, ஒரே படத்தில், போட்டு திணித்திருந்தார் பாலாஜி சக்திவேல். (கொஞ்சம் ஜாஸ்தியாகிடுச்சோ பாஸ் என்று கூட தோன்றியது) வறியவர்களின் சிக்கலான வாழ்க்கையை அதன் இயல்போடு படமாக்கியிருந்தார். அதோடு, மிடில் கிளாஸ் குழந்தைகளின், அதுவும் பெண் குழந்தைகளின், போக்கினை நன்றாகவே காட்சிப்படுத்தியிருந்தார். விருதுப்படம்!


thadaiyara thaakka தடையறதாக்க

அருண்விஜயின் ராசியோ என்னவோ! மிகச்சிறந்த படமாகவே இருந்தும், யார்கண்ணிலும் படாமல், தியேட்டர்களில், வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல், காணாமல் போனது. இந்த ஆண்டில் வெளியான பாராட்டப்பட வேண்டிய ஒரே ஆக்சன் படம் இதுதான். அருண்விஜய்க்கு பதிலாக அஜித்தோ விஜயோ நடித்திருந்தால் மெகாஹிட் ஆகியிருக்கலாம். அருண்விஜய் கூட மிக சிறப்பாகவே நடித்திருந்தும் படம் சரியாக போகவில்லை. இயக்குனர் மகிழ்திருமேனி தமிழ்சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனராக வருவார் பாருங்க.. இதுவரை படம் பார்க்கவில்லையென்றால் டிவிடி வாங்கி பார்க்கவும்.


nan e நான்ஈ

தெலுங்கில், பல மெகாஹிட்களை, கொடுத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த முறை, ஒரு தம்மாத்தூண்டு ஈயையும், கன்னட நடிகர் ஒருவரையும், வைத்துக்கொண்டு இந்தியா மொத்தத்தினையும் கலக்கினார். முழுமையான ஈடுபாடும்,அர்ப்பணிப்பும் இருந்தால், ஈயை வைத்துக்கூட, சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க முடியுமென நிரூபித்தார். இந்த ஈ நம்மூர் ஹீரோக்களுக்கே கிலீயாக அமைந்தது.


madhupana kadai மதுபானக்கடை

இது, சூப்பர் ஹிட் படம் கிடையாது. ஏன், ஹிட்டு கூட கிடையாது. நான், படம் பார்த்த தியேட்டரில், மொத்தமே பத்துபேரோ, பதினைந்து பேரோதான். படமே அந்த திரையரங்கில் ஒருவாரம் கூட போகவில்லை. இருந்தும் இது ஒரு மிகமுக்கியமான முயற்சி. ஹாலிவுட் பாணி, இன்டிபென்டென்ட் திரைப்படம். அதோடு கதையே இல்லாமல் வெறும் சம்பங்களை கோர்த்து தமிழ்நாட்டின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை காட்சிபடுத்தியிருந்தார் கமலக்கண்ணன். படத்தின் ஒரிஜினல் டிவிடி விற்பனைக்கு கிடைக்கிறது. குடிப்பழக்கம் தமிழ்நாட்டை என்ன பண்ணி வைத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பும் எவரும் கட்டாயம் காண வேண்டிய படம்.


attakkathi copy அட்டக்கத்தி

ஆடிபோனா ஆவணி இவ ஆள மயக்கும் தாவணி.. என ஊரே பாடிக்கொண்டு திரிந்தது. வித்தியாசமான கதை சொல்லல், படமாக்கல், யதார்த்தமான நடிகர்கள், புதுமையான களம் , ஏடாகூடமான இசை என அனைவரையும் வெகுவாக கவர்ந்த படம். இன்னும் கூட, சிறப்பாக படமாக்கியிருக்கலாமோ, என்றும் நினைக்க வைத்தாலும், அறிமுக இயக்குனரான ரஞ்சித், தனக்கு கிடைத்த மிகச்சிறிய பட்ஜெட்டில் சிறப்பான படத்தையே எடுத்திருந்தார். இந்த ரூட்டுல அடுத்த படத்தில் நிறைய பண்ணுவார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது


Sundarapandiyan சுந்தரபாண்டியன்

மெகாசீரியல்களின், வருகைக்கு பின், குடும்ப திரைப்படங்கள்(!) முற்றிலுமாக அழிந்துவிட்டன. இதுவும் கூட குடும்பப்படம்தான், என்றாலும், அதற்கு நடுவில் காதல், துரோகம், சதி மாதிரியான விஷயங்களை மிகசரியான கலவையில் கொடுத்து ஹிட்டடித்தார் சசிகுமார். என்ன படம் முழுக்க நிறைய சாதிப்பெருமைகள் பேசுகிற காட்சிகள் , அதை தவிர்த்திருக்கலாம். அதோடு கிளைமாக்ஸ் ரத்தகளறி சுத்தமாக இந்த படத்தினுடைய கேரக்டருக்கு செட்டாகவேயில்லை.


pizza பீட்சா

‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சி, மூலமாக, இயக்குனராக அறிமுகமாகும் இரண்டாவது இளைஞர் கார்த்திக் சுப்புராஜ். குறும்படங்கள் எடுத்து எடுத்து, அது கொடுத்த பயிற்சியில், குறும்படமாக எடுத்துவிடக்கூடிய, ஒரு குட்டிக்கதையை மிகசிறப்பாக, எதிர்பாராத திருப்பங்களுடன், நம்மை பயமுறுத்தி, கடுப்பாக்கி, அட என்று ஆச்சர்யபட வைத்தார். விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்புக்காக, படத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

Thuppaki


துப்பாக்கி

தன்னுடைய, ஹீரோயிச கிரீடத்தை, நண்பனிலேயே கழட்டி வைத்துவிட்டார் இளையதளபதி விஜய். ஆனால் அதுகூட ஷங்கர் படமென்பதால் அப்படியிருக்கும்ப்பா என்றவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். துப்பாக்கியில், தன்னுடைய, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி கனவையெல்லாம், தூக்கிப்போட்டுவிட்டு, தன் இயல்பான துடிப்போடு எல்லோர்க்கும் பிடித்த பக்கத்துவீட்டு பையனைப்போலவே நடித்திருந்தார். தமிழ்ரசிகன் கொண்டாடு கொண்டாடுனு கொண்டாடிட்டான்ல.. இந்தவருடத்தின் அதிக வசூலை வாரிகுவித்த படம் இதுதானாம்.. விஜய் இதையே கன்டினியூ பண்ணினார்னா நமக்கு நல்லது! இன்னொரு சுறாவை, வேட்டைக்காரனை, இந்த நாடு தாங்காது சாமியோவ்!


naduvula konjam pakkatha kaanom நடுவுலகொஞ்சம்பக்கத்தகாணோம்

இன்னொரு சிரிப்பு படம்தான் இதுவும். ஆனால், படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கணுமே, என்று தமிழ்சினிமாவின் க்ளிஷேவான சேஷ்டைகள் எதையுமே பண்ணாமல், என்னாச்சி, ப்பா பேய் மாதிரி இருக்காடா மாதிரியான சில வசனங்களையும்,ஹீரோ மண்டையின் மெடுலா ஆம்லகேட்டாவையும்(!), மட்டுமே, நம்பி படமெடுத்து, அசத்திய இளைஞர்களின் படம்.காணமல் போன யதார்த்த ஜன ரஞ்சக தமிழ் சினிமாவை, எளிய பாணியில் கண்டுபிடித்துக் கொடுத்த படம்.


(சினிமொபிட்டா இணையதளத்துக்காக எழுதியது)